Blog

  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 44

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 44

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘கூம்பேறும் பறவை’ குலசேகர ஆழ்வார்

    முன்னுரை

    தமிழில் இலக்கண விளக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் உவமங்களுக்கும் இலக்கியப் பொருண்மை புலப்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் உவமங்களுக்கும்  தனித்தனி இயல்புகள் உண்டு. இது தனி ஆய்வுக்கு உரியது. உயிரோடு மெய் கலப்பதற்கு ‘அப்போடு கலக்கும் உப்பு’ என்பது இலக்கண உவமம். நல்லவரோடு நல்லவர் கலந்துரையாடுவதற்கு ‘நற்றாமரைக் குளத்தில் நல்லன்னம் சேர்வது’ என்பது இலக்கிய உவமம். முன்னது அறிவு சார்ந்தும் பின்னது உணர்வும் அழகியலும் சார்ந்ததுமாகும். ஆனால் பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் உவமங்கள் இவற்றினும் வேறாகி அமைகின்றன. காரணம் பக்தியுணர்வு அகப்புற உணர்வுகளினின்றும் மாறுபட்டு நெகிழ்ச்சியை மட்டுமே மையமாகக் கொண்டிருப்பதே. இது பற்றிய சில கருத்துக்கள் முந்தையக் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருந்தன. வைணவப் பாசுரங்களில் தனித்து விளங்கும் குலசேகர ஆழ்வார் எழுதிய பெருமாள் திருமொழியில் உருக்கும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்வதாக அமைகிறது.

    குலசேகர் ஆழ்வாரின் உள்ளமும் உவமமும்

    ‘அரற்றுதல்’ என்பது ஒன்று. அனுபவித்தல் என்பது மற்றொன்று. சைவத் திருவடியார் நால்வரும் அரற்றியவர்கள். அவ்வரற்றுதலில் இறைவன் மேனியழகைக் கண்டு அனுபவிப்பது என்பது அளவால் குறைவு. குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிழ் சிரிப்பும்’ என்பது போன்ற பாடல்கள் சைவத்தில் குறைவு. ‘ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்’ என்பது போன்ற அரற்றலே மிகுதி. வைணவத்தில் இறைவனின் திருமேனி அழகைப் “பச்சை மா மலைபோல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்” என்று ஒவ்வொரு துளியாகச் சுவைத்து அனுபவித்துப் பாடித் தாமும் மயங்கிக் கற்பாரையும் மயக்குவர்.

    ‘தன்னைக் கைவிடலாகாது காத்தல் வேண்டும்’ என்பதே பொதுவான அடியவர்தம் வேண்டுகோளாயினும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் வேண்டுகிற முறையில் வேறுபாடு உண்டு. குலசேகரர் வித்துவக் கோட்டு அம்மானிடம் வைக்கின்ற வேண்டுகோள் கைவிடலாகாது என்பதேயாயினும் அதற்காக அவர் காட்டுகின்ற உவமங்கள் பல திறத்தன. பாசம் நிறைந்த உறவுகளைக், கடமை தவறாத பணியாளர்களை, முறைதவறா மன்னர்களைச், சிறகடித்துப் பறக்கும் பறவைகளைக், கடலை மறக்காத ஆறுகளை எல்லாம் மையமாக வைத்து உவமம்  சொல்கிறார். இறுதியாகப் பற்றற்ற நிலையில் தான் விரும்பாச்  செல்வம் நிழலைப்போல் தன்னைத் தொடரும் என்று செல்வத்தையும் பெருமாளுக்கு உவமமாக்கியுரைக்கிறார்.

    பெருமாளைத் தாயாக்கிய ஆழ்வார்

    அரசியல் தலைவர்களில் தொடங்கி ஆண்டவன் வரை அனைவராலும் பயன்படுத்தப்படுகிற உவமம் தாயும் சேயும். தாய் அன்பின் வடிவம். தந்தை அறிவின் வடிவம். தாயன்புக்கு வரம்பில்லை. தந்தையின் அன்பின் வரம்பு வெளிப்படத் தெரிவதில்லை. தாய் குழந்தையை மறப்பதில்லை, இயலாது. வள்ளற்பெருமான் தன்னை  மகவாகவும் இறைவனைத் தாயாகவும் வைத்துப் பாடுகிறார்.

    “பெற்றதம் பிள்ளைக் குணங்களையெல்லாம்
    பெற்றவர் அறிவரே அல்லால்
    மற்றவர் அறியார் என்று எனை ஈன்ற வள்ளலே!”

    “பெற்றதாயை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
    …………………………………………………………………
    நற்றவத்தவர் உள் இருந்து ஓங்கும்
    நமசிவாயத்தை நான் மறவேனே!”

    என்றெல்லாம் வள்ளற் பெருமான் தன்னைச் சேயாகவும் இறைவனைத் தாயாகவும் உருவகித்தும் உவமித்தும் பாடுவதைப் போலவே குலசேகரரும் பாடுகிறார்.

    “அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள்தன்
    அருள் நினைந்தே அழுங்குழவி அதுவே போன்றிருந்தேனே” (688)

    ‘அரிசினம்’ என்பது அரிதாக வருகின்ற சினம் என்பது பொருள். ‘அளவுகடந்த சினம்’ என்பது பொருள். ‘பெற்ற தம் பிள்ளை’, ‘ஈன்ற தாய்’ என்னும் பெயரெச்ச அடைகள் எல்லாம்  அவர்தம் அருமை உணர்த்தி நின்றன. அவர் அவ்வாறு செய்யமாட்டார் என்பதாம்! எனவே இறைவனும் தம்மை வெறுக்காது அணைப்பன் என்பது கருத்து. ‘அம்மை நீ! அப்பன் நீ’ எனத் தாய்க்கு முதன்மை தந்து பாடிய அப்பர் நினைவுக்கு வருவார். இந்தப் பாட்டில் ஒரு நுண்ணியம் உணரப்படுகிறது. குழந்தை இரண்டு வகையாக அழுகிறது. அடி தாங்காமல் அழுவது ஒன்று. அடிக்கின்ற தாயின் அருள் வேண்டி மற்றொன்று. ‘அழுகை’ மாறாதது. ஆனால் உனக்கு வேண்டியது என் அழுகைதான் என்றால் நான் உன் அருளுக்காக அழுகிறேன் என்பது கருத்து. ‘மறந்தாலும்’, ‘அகற்றிடினும்’ என்னும் உம்மைகள் எதிர்மறை.

    கொண்டானை அன்றிப் பிறரை அறியாக் குலமகள்

    தமிழிலக்கிய உலகில் சேதாரமில்லாது சிந்தையில் நிற்கும் பாத்திரங்கள் இரண்டு. அவையிரண்டும் ஆண் பாத்திரங்கள். சிந்தையில் நிற்பதற்கு அவர்களின் ஒழுக்கச் சிதைவே காரணம். ஒருவன் இராவணன். இவன் இராமாயணத்தின் எதிர்நிலைப் பாத்திரம். மற்றொருவன் கோவலன். இவன் சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தலைவன். காப்பியத்தில் தலைவிக்கே முதலிடம் ஆதலின் இவனுக்குக் காப்பியத் தலைமையில்லை என்பதும் அறிஞர் சிலருடைய வாதம். இவ்விரண்டு பாத்திரங்களாலும் இவர்தம் மனைவியராகிய மண்டோதரியும் கண்ணகியும் வானுயர்ந்து நிற்கிறார்கள்.

    மண்டோதரியும் கண்ணகியும்

    கம்பன் படைத்த பாத்திரங்களுள் கம்பனையே படைத்த பாத்திரமாகி நிற்பவள் மண்டோதரி. சீதையைத் தேடி இலங்கை செல்லும் அனுமன் இராவணன் அருகில் உறங்கும் மண்டோதரியைச் சீதையென்று கருதி மயங்கினான் என்கிற அளவுக்கு மண்டோதரியின் பாத்திரம் உயர்ந்தது.

    “இன்ன தன்மையின் எரிமணி விளக்கங்கள்
    எழில்கெடப் பொலிகின்ற
    தன்னது இன்னொளி தழைப்புற துயில் உறு
    தையலைத் தகைவு இல்லாள்
    அன்னள் ஆகிய  சானகி இவள் எனஅயிர்த்து,
    அகத்தெழுதீ வெந்தீ துன்னும் ஆருயிர் உடலொடு சுடுவது
    ஓர் துயர் உழந்து”

    என்பது கம்பன் வாக்கு. மண்டோதரி இராவணனை எதிர்த்துத் தன் கருத்துக்களைக் கூறியதாக இராமாயணத்தில் பதிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இராவணனுக்கு வரவிருக்கும் பேரழிவை முன் உணர்ந்தே அவள் நிகழ்வுகள் அமைகின்றன. இந்திரசித்தன் மறைந்தபோது,

    “அஞ்சினேன் அஞ்சினேன் சீதையென்ற  அமிழ்தால் செய்த
    நஞ்சினால் இலங்கைவேந்தன் நாளைஇத் தகையன் அன்றோ?”

    என்று புலம்பிய மண்டோதரியைக் காணமுடிகிறது. மேற்கண்ட தரவுகளால் இராவணனைக் கண்டார்கள்  இகழ்ந்தாரன்றி மண்டோதரி இகழவில்லை. ஆனால் கோவலனைக் கண்டார்  இகழ்ந்தார்கள். கண்ணகியும் இகழ்ந்திருக்கலாம். ஆனால் இல்லற நெறி இழந்ததைத்தான் அவள் பெரிதாகக் கண்டாள் என்பதை அறிந்து கொள்ள முடியும். “போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’  என்னும் தொடரில் அமைந்துள்ள ‘ஒழுக்கம்’ என்னும் சொல் அறவோர்க்கு அளித்தல், அந்தணர் ஓம்புதல், துறவோர்க்கு எதிர்தல், விருந்தெதிர் கோடல் என்னும் இல்லற நெறிகளே.

    காப்பிய மகளிரும் குலசேகர ஆழ்வாரும்

    இராவணனும் கோவலனும் மிக உயர்ந்த பண்புகளைப் பெற்றிருந்தும் ஒழுக்கச் சிதைவு காரணமாக அவர்தம் பெருமையினை இழந்தனர். கண்டவர் இகழ்வது இருக்கட்டும் அவ்விரு காப்பியங்களைப் படிக்கின்றவர் இன்றைக்கும் வேதனைப்படுகிறார்கள் அவர்களை நினைத்து. இருப்பினும் அக்காப்பிய மாதர் இருவரும் தம் கணவன்மாரை வெறுத்தார் இலர். இராவணன் இறந்தவுடனேயே மண்டோதரியும் களத்திலேயே உயிர்விடுகிறாள். கண்ணகியோ கணவன் பழி துடைக்கிறாள். ‘போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’ எனத் தன் மனைவியினாலேயே நோக்கப்பட்டவன் கோவலன். ஆழ்வாரின் ‘கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும்’ என்ற தொடருக்குப் பொருத்தமானவர்களாகவே அவ்விரு பெண்களும் திகழ்கிறார்கள் என்பது கட்டுரையாளர் கருத்து.

    “கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
    கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல்” (689)

    என்னும் உவமத்தில் வரும் ‘குலமகள்’ என்பது நுண்ணியமிக்க சொல்லாட்சி. இந்த இடத்தில் நல்லகுடிப் பிறப்பை மட்டும் அது குறிப்பதாகக் கொள்ளாமல் கணவனையன்றிப் பிற ஆடவர் மனத்திலும் புகாத உயரொழுக்கத்தைக் குறித்ததாகக் கொள்ளலாம். கண்டறிதல், கேட்டறிதல் என்னும் இருவகை அறிவில் எந்த  அறிவாலும் கணவனைத் தவிர பிற ஆடவரை அறியாதார் என்பது கருத்து. இகழ்வன என்னும் பன்மை வினையாலணையும் பெயர் கணவன் செய்த தொடர் நிகழ்வுகளைக் குறித்தது. ‘அத்தனையும் தாங்கி அவனையே கொண்டொழுகும் பத்தினியர் போலத் தானும் திருமாலையன்றி வேறொருவனை எண்ணேன்’ என்பதாம். ‘நீ கொண்டு ஆளாகியிலும்’ என்னுந் தொடர் மனைவியைக் கொண்டு செலுத்த வேண்டிய கணவன் அவ்வாறு செலுத்தாவிடினும் அவனை நம்பி வழிபடும் மனைவியைப்போல் தான் என்பதை உணர்த்தி நின்றது. ‘குலமகள்’ தன் கணவனை மட்டுமே அறிவாள் என்றதால் ஆழ்வார் பெருமாளையன்றிப் பிற தெய்வம் அறியார் என்பது குறிப்பு. இனி, இகழ்வன செய்யும் கணவனுக்குப் பெருமாள் உவமம் ஆனதால் ஆழ்வார் மனைவியாகிறார். எனவே இந்தப் பாட்டில் ‘கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்’ என்னும் துறைக்கருத்து இழைய, நாயக நாயகி பாவம் முன்னெடுக்கப்பட்டது என்க. இது வள்ளற் பெருமான் பாடிய ‘இங்கித  மாலையோடும் மகாகவி பாடிய கண்ணன் பாட்டோடும் ஒக்கும்.

    மன்னனை நோக்கும் மக்கள்  மருத்துவனை நோக்கும் நோயாளி!

    திருக்குறள் பொருட்பாலின் தலையதிகாரமே இறைமாட்சி என்பதாகும். நாட்டை ஆளுவது என்பது அதிகாரப் பீடம் என்பதை விட்டு மக்களுக்குத் தொண்டு செய்வதற்கான வாய்ப்பு என்பதைக் கருத வேண்டும். இது மன்னராட்சிக்கும் பொருந்தும் மக்களாட்சிக்கும் பொருந்தும். ஓச்சுதல் கடிது போலத் தோன்றினாலும் எறிவது மென்மையாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் காட்டும் மாட்சி. இறைமாட்சியுள் அமைந்த பத்து குறட்பாக்களில் முன்னவை ஐந்தும் மன்னனின் தகுதி பற்றியன. பின்னவை ஐந்தும் மன்னனின் பண்பு பற்றியன.

    1. காட்சிக்கு எளியன் கடுஞ்சொல் அல்லன்
    2. இன்சொலால் ஈத்து அளிக்க வல்லான்
    3. முறைசெய்து காப்பாற்றும் மன்னன்
    4. செவிகைப்பச் சொல் பொறுக்கும் வேந்தன்
    5. கொடை, அளி, செங்கோல், குடியோம்புபவன்

    முந்தைய தகுதிகளை அதிகாரத்தை மையமாக்கி ஒரு மன்னன் செயல்படின் மக்கள் துன்புறுவர்.. பிந்தைய பண்புகளை, மக்களை மையமாக்கி ஒரு மன்னன் செயல்படின் மக்கள் இன்புறுவர். முன்னது நடக்கும் காலத்திலும் அம்மக்கள் பிந்தைய காலம் வராதா என ஏங்கி நிற்பர். அதனைத்தான் குலசேகர ஆழ்வார் உவமமாகப் பயன்படுத்துகிறார்.

    “தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
    கோல்நோக்கி வாழும் குடிபோன்றிருந்தேனே” (690)

    மன்னன் மக்களுக்குச் செய்கிற துயர் அதிகாரத்தினால் வருவது. இறைவன் அடியவருக்குத் தரும் துன்பம் அவனைப் பக்குவப்படுத்துவது. அல்லது வினைவழி வருவது. கொடுங்கோல் ஆட்சி செய்யும் மன்னனின் அன்பையே மக்கள் எதிர்நோக்குவர். அதுபோலத் திருவடிப் பேறு வேண்டி நிற்பார் இத்தகைய துன்பங்களையும் இன்னல்களையும் பொருட்படுத்தாது அவற்றின் நோக்கமறிந்து செயல்படுவராதலின் இடர் தரும் இறைவனையே எதிர் நோக்குவர் என்பதாம். துன்பம் தருபவனையே எதிர்நோக்கும் இரண்டு சூழல்களில் ஒன்று நாட்டை ஆளும் மன்னனிடம் அன்பை எதிர்நோக்குவது. இரண்டு சிகிச்சையில் துன்பம் தரும் மருத்துவனையே நம்பி அவனையே எதிர்நோக்குவது.

    “வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
    மாளாத காதல் நோயாளன் போல்” (691)

    எதிர்வினையைக் கருத்திற் கொள்ளாது மக்களை வாட்டும் மன்னனை ஒதுக்காமல் அவனை அவனுடைய செங்கோலையே எதிர்பார்த்து வாழும் மக்களை உவமமாகச் சொன்ன ஆழ்வார் இந்தப்பாட்டிலும் ‘கொடுமை’ செய்யும் மருத்துவனையே நேசிக்கும் நோயாளியை உவமமாக்குகிறார். இந்தப் பாட்டில் ‘அறுப்பது’ ஒரு வினை. ‘சுடுதல்’ மற்றொரு வினை. அறுவைச் சிகிச்சை என்பது இவ்விரண்டும் இணைந்ததே. நோயாளி தன் உடல் அறுக்கப்படும்போதும் அல்லல் உறுகிறான். அறுத்த இடத்தில் சுடப்படுகிறபோதும் அல்லல் படுகிறான். எனவே ‘அறுத்து’ என்பது எச்சமாகாது தனித்த வினையைக் குறித்தது.

    நோய் தீர்ந்தவுடன் மருத்துவனை மறந்துவிடுதல் இயல்பு. ஆனால் இந்தப் பாட்டில் நோய் தீராமலேயே அவன்பால் தீராத காதல் உடைய நோயாளன் என்கிறார். அறுவைச் சிகிச்சை உடலுக்கானது. அதற்குத் தீர்வு காணும்வரை அவன்பால் வைத்திருக்கும் அன்பு குறையாது. எனவே அது நீளும். அதனால் மாளாத அன்பு என்றார். பிறவி நோய் தீர்ந்து திருவடிப்பேற்றுக்காக இறைவன் தரும் சோதனைகள் தாங்கொணாவாக இருப்பினும் அவன் மேல் கொண்டிருக்கும் அன்பு ‘மாளாது’ என்பது பெறப்படும். அடித்து மேய்ப்பவனே அணைத்து மீட்பான் என்பது கருத்து.

    தொடர்ந்து சுட்டெரிக்கும் வேறொரு பொருளையும் சுட்டெரிக்கும் அதனையே விரும்பும் மற்றொரு பொருளையும் இணைத்து உவமம் கூறுகிறார் ஆழ்வார். கதிரவனுக்குத் தாமரை மலரும் என்பது இயற்கையும் கவிமரபும் ஆகும். இந்த மரபுகள் கவியின்பத்திற்காக மாற்றப்படுவது உண்டு. ‘சுடர் மின்னற் கண்டு தாழை மலர்வது போலே உனைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தேனே’ என்பதும் ‘தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க’ என்பதும் மரபு காத்த திரையிசைப்பாடல் வரிகள்.

    “செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம்
    அந்தரஞ்சேர் வெங்கதிரோற்கல்லால் அலராவால்” (693)

    கதிரவன் கனன்றாலும் தாமரை அதற்கே மலர்வது போலத் தானும் பெருமாளுக்கே மகிழ்கிறார் என்பது கருத்து. கொடுங்கோல் மன்னனால் வரும் துன்பத்திற்குக் காரணம் ஏவுதற் கருத்தா. மருத்துவனால் வரும் துன்பத்திற்குக் காரணம் இயற்றுதற் கருத்தா. இவையிரண்டிலிருந்தும் மாறுபட்டுத் துன்பம் தருவது கதிரவன். அது அந்தரத்தில் நிற்கிறதேயன்றிச் சுற்றாது சுழலாது. ஆனால் அதன் ஒளிக்கதிர்கள் சுட்டெரிக்கும். சினைவினை முதல்வினையாகக் கருதப்படும். காணாதார் தரும் துயரமும் கண்டார் தரும் துயரமும் காண இயலாதன தரும் துயரமும் என எதுவாயினும் தாங்கிக் கொள்வது போல இறைவன் எத்தகைய துன்பத்தைக் கொடுத்தாலும் அவனுடைய அருளையே வேண்டுவன் என்பதாம்.

    மழைநோக்கும் பயிர்கள்

    கடவுள் வாழ்த்து என்னும் தலையதிகாரத்தைத் தொடர்ந்து திருவள்ளுவர் எழுதிய அதிகாரத்திற்குப் பெயர் ‘வான் சிறப்பு’. மழையினது சிறப்பு என்பது பொருள். மழை இல்லாவிடின் உலகியல் இல்லை. உலகியல் என்பது மக்களையும் ஞானிகளையும் உள்ளடக்கியது. இவர்களைப் பசியடக்கும். எனவே உலகியல் நடக்க வேண்டுமெனின் பசியடங்க வேண்டும்.  பசியென்னும் நோயைப் பற்றியும் அது தணிக்கும் வாயில் பற்றியும் தணித்தவர் அடையும் பெருமை பற்றியும் பேசாத இலக்கியங்கள் எண்ணிக்கையில் குறைவு. நோய் என்பது உடலுக்கு வருவது. பிணி என்பது உயிருக்கு வருவது. உடலுக்கு வரும் நோயை உயிருக்கு ஆக்கியது அதன் கொடுமை பற்றி. இறுதியாக வள்ளற்பெருமானைத் தொடர்ந்து உணர்ந்து பாடியவர் மகாகவி. ‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்’ என்பது அவர் வாக்கு. அந்தச் சோற்றுக்குக் காரணமானது பயிர். பயிர் தழைக்க நீர் வேண்டும். அந்த நீர் வானின்று வருவது. பயிர் இருவகைப்படும். வான்நீரின் பல்வகைப் பரிமாணங்களாகிய ஏரி, ஆறு, குளம் என்பவற்றால் உயிர்தழைப்பன ஒன்று. வான் மழையை மட்டுமே நம்பியிருப்பன மற்றொன்று. முன்னது நன்செய் என்றும் பின்னது புன் செய் எனவும் வழங்கப்படும். நன்செய்க்கும் மழைதான் மூலமெனினும் ‘வானம் பார்த்த பூமி’ என்னும் சொல்வழக்கு புன்செய்ப் பயிரையே குறிக்கும். வானத்தை நோக்கியே வளரும் புன்செய்ப் பயிரை இறைவனின் அருள் வேண்டி நிற்கும் ஆழ்வார் தனக்கு உவமமாக்கியுரைக்கிறார்.

    “எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
    மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்று அவைபோல” (694)

    இந்தப் பாட்டில் வானம் பயிர்களைக் காக்க வேண்டியது கடமை என்பதுபோலப் பாடுவதைக் காணலாம். வானம் மழைபெய்ய மறந்துவிட்டதாகக் கூறும் நுண்ணியம் உணரத்தக்கது. மழைபெய்யாவிடினும் அம்மழையையே எதிர்நோக்கும் புன்செய்ப் பயிராகத் தன்னை உருவகித்துக் கொள்கிறார். மாமுகில் என்னும் உரிச்சொற்றொடரில் உள்ள மா என்பது முகிலுக்கு அடையாகி நின்று இறைவனின் அளப்பரிய பேரருளைக் குறிப்பாகச் சுட்டியது.  உவமத்திற்கான அடைமொழிகள் பொருளுக்கும் ஆகிவரும் என்னும் உவமக் கொள்கைக்கு அரண் சேர்ப்பது.

    போக்கிடமின்றிப் புலம்பும் குலசேகரர்

    ‘திக்குத் தெரியாத காட்டில் உன்னைத் தேடித் தேடி இளைத்தேனே’ என்பார் பாரதி. உய்யும் வழி ஏதுமின்றி மானுட உயிர்கள் வழி காணாது தவித்து இறுதியாகத்தான் இறைச்சிந்தனை வரப்பெற்று (அதற்கும் ஊழ் இருக்க வேண்டும். அவனருளாலே அவன்தாள் வணங்கி என்பது திருவாசகம்) இறைவனை நோக்கித், தம் வழியில் நடக்கத் தொடங்குகின்றன.

    “தொக்கு இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி தொடுகடலே
    புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவை போல” (695)

    உயிர்கள் ஆறெனின் இறைவனே கடல். ஆறுகள் கடலை நோக்கிச் செல்வது இயல்பு. இந்த இயல்பு மாறினாலோ மாற்றப்பட்டாலோ உட்படுத்தினாலோ உலகியல் வாழ்க்கை தடம் புரளும். நீர்வழித்தடங்களைத் தடுக்கக் கூடாது என்பது நீதிமன்ற ஆணை. உயிர்கள் பிறப்பது இறப்பதற்காக. பிறப்புக்குப் பயணம் கிடையாது. ஆனால் இறப்புக்குப் பயணம் உண்டு. அந்தப் பயணம்தான் மானுட வாழ்வு. இந்த வாழ்வின் குறிக்கோள் பிறந்த இடத்தையே சேர்வது. பிறந்த இடம் என்பது இறைவன் திருவடி. உலகியல் என்னும் மாயை உயிர்களின் வழித்தடத்தை மறைக்கும் திரைகள். உயிர்கள் தோன்றுகிற இடத்தையும் இறைவன் கோயில் கொண்டிருக்கும் இடத்தையும் ‘கருவறை’ என்ற சொல்லாலேயே குறிக்கும் நுண்ணியம் இதுதான். தன்னை ஆறாக உருவகித்துக் கொள்ளும் குலசேகரர்  இறைவனாகிய கடலன்றி வேறு போக்கிடம் காணாது அதனையே தன் உயிர்க்கான புகலிடமாகக் கொள்கிறார் என்பது கருத்து.

    உவமத்தை இன்னும் விரிவுபடுத்துகிறார் ஆழ்வார். ஆறு கடல்வழி தெரிந்து அதனுள் கலக்கும். ஆனால் கடலுக்குள் சென்றுவிடின் கரை தெரியாது. தன்னை ஆறாக உருவகப்படுத்திக் கொண்டவர் தொடர்ந்து கடற்பரப்பில் சென்ற திசைமாறிய பறவையாக உருவகித்துக் கொள்கிறார். பிறவியைப் பெருங்கடல் என்றார் திருவள்ளுவர். ஒரு பிறவி முந்தைய பிறவியின் காரியமாகவும் வர இருக்கும் பிறவிக்குக் காரணமாகவும் கரையின்றி வருதலின் பிறவியைப் பெருங்கடல் என்றார். இதற்குக் கரையில்லை. இதனை உள்வாங்கிய ஆழ்வார் பாடுகிறார்.

    “எங்கும்போய் கரைகாணாது எறிகடல்வாய் மீண்டேகும்
    வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே” (682)

    வங்கம் என்னும் பலபொருள் ஒரு சொல் ஈண்டு நாவாயைக் குறித்தது. நாவாயின் உச்சியில் இருக்கும் ஒரு பகுதிக்குக் கூம்பு என்று பெயர். முக்கோண வடிவில் கொடிமரத்தின் உச்சியில் இருக்கும் அந்தக் கூம்பினைப் பிடித்துக் கொண்டாலேயே கப்பல் பயணம் கைகூடுவதைப் போல இறைவனாகிய கூம்பைப் பிடித்துக் கொள்ளும் புத்திசாலிப் பறவையைத் தனக்கு உவமமாகக் கூறிக் கொள்கிறார் ஆழ்வார்.

    உவமத்தின் உச்சம்

    அருவப்பொருளை அருவப்பொருளுக்கே உவமமாக்கிக் கூறுவது தமிழ்க் கவிதைகளில் காணப்படும் நுண்ணிய உவமக் கொள்கையும் கோட்பாடும் ஆகும். இது முந்தைய கட்டுரைகள் பலவற்றில் சொல்லப்பட்டது. ஒருவனுடைய நிழல் அவனையே தொடர்ந்து சென்று அவன் காலடியிலேயே தங்குவதுபோல அவன் செய்த தீவினைக்கான பயன் அவனையே சென்று அடும் (208) என்பது வள்ளுவம்! இதனை வேறுமாதிரியாகவும் கவிஞர்கள் கற்பனை செய்திருக்கிறார்கள். நிழலை நீ புறந்தள்ளினால் அது உன்னைத் தொடரும் அதுபோலச் செல்வத்தை நீ மனத்தால் புறந்தள்ளினால் அது உன்னைத் தொடரும் என்றும் பாடியிருக்கிறார்கள். கணவனே எல்லாம் என்றிருக்கும் மனைவி தன்னை நிழலாகப் பாவித்து ‘எங்கெங்கே போனாலும் நிழல்போகும் தன்னோட எனக்குள்ள சொந்தமெல்லாம் உன்னோட’ என்னும் திரையிசைப்பாடல் நிழலை உறவுக்கோணத்தில் பார்க்கிறது. இந்தப் பின்புலத்தில் குலசேகர ஆழ்வார் பாடல் நோக்கப்படுகிறது.

    “நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
    தன்னையே தான் வேண்டும் செல்வம்போல்” (696)

    உலகிலேயே அழியாத பொருள் இறைவன். தோற்றம் இல்லாததால் அழிவும் இல்லையாயிற்று. அதனால் அது நிலைபேறுடையதாயிற்று. நில்லாதவற்றை நிலையென்று நம்பும் புல்லறிவுக்கும், பொருள் அல்லவற்றைப் பொருள் என்று நம்பும் அறியாமைக்கும் இது புலப்படுவதில்லை. அப்படியானால் நிலையானது எது? பொருள் எது? நிலைப்பவை மட்டும் நிலைக்கும் என்பதை உணர்வது ஞானம். நிலைப்பது எது? இறைவன் மட்டுமே! எனவே நிலைத்த செல்வமாகிய இறைவனை நினைத்துத் தொடர்ந்தால் நிலையாத செல்வம் இவனைத் தொடருமாம். அந்தச் செல்வத்தைப்போல ஆழ்வார் இறைவனைத் தொடர்கிறாராம். எவ்வளவு ஆழமான சிந்தனை? ஆழமான உவமம்?

    நிறைவுரை

    சைவ நாயன்மார்களின் அரற்றலைப் பாசுரங்களைப் பொருத்தவரையில் பெருமாள் திருமொழியிலேயே செவிமடுக்க முடிகிறது. வித்துவக்கோட்டம்மா என்னும் பகுதியில் அவர் நிரல்படுத்தியிருக்கும் உவமங்கள் குடிமக்கள், நோயாளி, குழந்தை, குலமகள், பயிர், ஆறு, பறவை எனப் பல திறத்தன. இவற்றின் கொடுமுடியாகத் திகழ்வது வேண்டாத  செல்வமாகும். ‘அற்றது பற்றெனில் உற்றது வீடு’ என்பது நம்மாழ்வாரின் கொள்கையாதலின் அதனை வழிமொழிவதைப் போல அமைந்த உவமம் இது. நம்மால் துறக்கப்பட்ட பொருள் நம்மைத் தேடிவரும் என்பது உலகியல் நம்பிக்கை. எல்லாருக்குமாக எழுதப்பட்டது இந்தக் கட்டுரை. இதன் ஆழமான நுண்ணியத்தையும் விரிவான அழகியல் சித்திரிப்பையும் பெரியவாச்சான் பிள்ளையின் பிரபந்த உரை கண்டு தெளியலாம்.

    (தொடரும்…)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 96

    பழகத் தெரிய வேணும் – 96

    நிர்மலா ராகவன்

    தோல்வியா? அப்படியென்றால்?

    பதினேழு முறை இந்தியாவின்மீது படையெடுத்தார் முகம்மது என்ற பெயர்கொண்ட அரசர். அவருடைய நாட்டின் பெயர் கஜினி. ஆப்கானிஸ்தானில் ஒரு பகுதி.

    `முயற்சி திருவினையாக்கும்!’ என்று புரியவைக்கவோ, என்னவோ, கஜினி முகம்மதுவைப்பற்றி சரித்திர பாடத்தில் நுழைத்திருந்தார்கள். ஒரே முறை முயன்றுவிட்டு, பின் அந்த முயற்சியைக் கைவிட்டிருந்தால், ஆயிரம் ஆண்டுகளுக்குமேலும் அவர் பெயர் நிலைத்திருக்காது.

    ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் அனைவருமே வெற்றி பெறுகிறார்களா? இடையில் நின்றுவிடாது, இறுதிவரை போனாலே வெற்றிதான் — முயலை வென்ற ஆமையைப்போல்.

    எந்தக் காரியத்தில் வெற்றி பெற்றவர்களை எடுத்துக்கொண்டாலும், முதல்முறையே வெற்றி கண்டிருக்கமாட்டார்கள். இருப்பினும், தோல்வி என்பதே அவர்கள் வாழ்வில் கிடையாது என்றுதான் கூறுவார்கள்.

    அவர்களைப் பொறுத்தவரை, வெற்றிக்கு எதிர்ப்பதம் அனுபவம். ஏனெனில், அதுதான் இன்னொரு முறை எப்படிச் செய்யக்கூடாது என்பதை உணர்த்தும்.

    கடினமான காரியத்தில் இறங்கினால், பல முறை தவறுகள் நிகழலாம். நீண்டகாலம் பிடிக்கும். அதில் வெற்றி பெற முக்கியமான தன்மை: பொறுமை.

    கதை

    நான் ஒரு குறும்படத்தில் நடித்தேன்.

    மகள் நாட்டியத்தில் முன்னுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படும் ஏழை விதவைத்தாய், தன் வருத்தத்தை வெளிக்காட்டத் தெரியாது, அவளை ஓயாது திட்டி, நல்வழிப்படுத்துகிறாள். இதுதான் கதை.

    தாயாக நான் நடித்தேன். நான் பேசவேண்டிய வசனத்தை என்னிடம் விட்டுவிட்டாள் இயக்குனர்.

    மொழி தமிழ். கரு: பரதநாட்டியம். இயக்குனரோ, மிஸ் ஆங் என்ற சீனப்பெண். மொழி, கரு இரண்டுமே அவளுக்குத் தெரியாது. ஆனால், கதை இப்படித்தான் செல்லவேண்டும் என்று கணித்திருந்தாள்.

    சில காட்சிகளில், அவளுடைய எதிர்பார்ப்பைக் கூறுவாள். முகபாவத்திலும், தலையசைவிலும் காட்ட முயற்சித்தேன்.

    ஒவ்வொரு முறையும், “Again!” (திரும்பவும்) என்பாள்.

    இப்படியே, ஒரு காட்சியில் பன்னிரண்டு முறை, அவளுக்குத் திருப்தி ஏற்படும்வரை மாற்றி மாற்றிக் காட்டினேன்.

    அந்தப் பாத்திரம் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கும் என்று புரிந்துகொண்டு வெளியே கொண்டுவர அவ்வளவு முயற்சி எடுக்க வேண்டியிருந்தது.

    படம் முடிந்ததும், ஒளிப்பதிவாளர், “உங்கள் பர்சனாலிடிக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத, மிக வித்தியாசமான பாத்திரம் அது! நீங்கள் எந்த கல்லூரியில் நடிப்பு பயின்றீர்கள்?” என்று கேட்டார், மிக மரியாதையுடன்!

    நான் என்ன செய்தேன்! அதில் இயக்குனரின் விடாமுயற்சி, என்னால் முடியும் என்ற அவளது நம்பிக்கை இரண்டும் கலந்திருந்தன.

    “நான் இப்படி ஒரு படம் எடுக்கப்போகிறேன் என்று சொன்னதும், எல்லாரும் கேலியாகச் சிரித்தார்கள்!” என்று திரும்பத் திரும்பக் கூறி மகிழ்ந்தாள்.

    ஆரம்ப சூரத்தனம்!

    கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே?

    சிலர் ஒரு காரியத்தை உற்சாகமாக ஆரம்பித்துவிட்டு, விரைவில் ஆர்வம் குறைய, அதை அரைகுறையாகச் செய்வார்கள். அல்லது, கைவிட்டுவிடுவார்கள்.

    கதை

    தொடர்கதை எழுதும் எண்ணத்துடன் ஒரு பத்திரிகை ஆசிரியர் ஒரு கதையை ஆரம்பித்தார். ஒவ்வொரு பாகமும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஓரிரு வரிகளில் குறிப்பும் எழுதி வைத்துக்கொண்டார்.

    ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருக்க, பல வாசகர்கள் புகழ்ந்து எழுதினர். சீக்கிரமே கதையில் தொய்வு ஏற்பட்டது. `போரடிக்கிறது!’ என்ற ரீதியில் விமரிசனங்கள் வந்தன.

    என்னை ஒரு தொடர்கதை எழுதும்படி வேறொரு பத்திரிகை ஆசிரியர் கேட்டார்.

    `ஆகட்டும், பார்க்கலாம்,’ என்று தப்பித்துக்கொள்ளும் ரகமில்லை நான். நேரமின்மையைக் காரணம் காட்டி மறுத்தேன்.

    (தோல்வி கண்டுவிடுவோமோ என்ற அச்சத்தாலோ, அல்லது சோம்பல் ஏற்பட்டதாலோ, `நாளை பண்ணப்போகிறேன்!’ என்கிறார்களே! அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

    `நீங்கள் கூறுவதைப் பண்ணும் உத்தேசம் எனக்கில்லை!’ என்பதுதான்!)

    அவரோ, விடாக்கண்டன். “ப்ளாட் (PLOT) போட்டு வெச்சுக்குங்க,” என்று வற்புறுத்தினார்.

    எனக்கு அம்முறை சிறந்ததாகப் படவில்லை.

    கதாபாத்திரங்கள் நம் மனதில் சுழன்றுகொண்டிருக்கும்போதே கதையை எழுதிவிட வேண்டும். இது புரிந்து, ஒரே மூச்சில் எழுதினேன். வேறு எதிலும் மனதைச் செலுத்தவில்லை.

    ஓயாத உழைப்பால், கண்பார்வைதான் சற்று மங்கலாகப்போயிற்று!

    தன்னிரக்கம்

    ஒரு காரியத்தில் இறங்கிவிட்டபோது, நம்மைச்சுற்றி என்ன நடக்கிறதென்று பார்வையை ஓடவிடலாமா? கவனம் சிதறிவிடுமே!

    கதை

    அரசாங்க முழுப்பரீட்சை என் மாணவன் ஒருவனுக்கு.

    திடீரென்று ஒருவர் வெளியிலிருந்து, “ஷூக்ரி!” என்று அவன் பெயரைக் கூவி, “தாத்தா இறந்துவிட்டார்!” என்று கத்தினார்.

    அவ்வளவுதான்! கையிலிருந்தவற்றை நழுவவிட்டு, பையன் பதட்டத்துடன் எழுந்தான்.

    நான் அவசரமாக வெளியே சென்று, தந்தையிடம், “பாதிப்பரீட்சையில் வெளியில் போனால், தேர்ச்சி எப்படிப் பெறமுடியும்?” என்று பலவாறாக விளக்கினேன். அவர் அரைமனதுடன் திரும்பிச் சென்றார்.

    “நீ பரீட்சைத்தாளில் கவனம் செலுத்து!” என்றபோதும், பையனால் முடியவில்லை.

    அதன்பின், ஷூக்ரி மிகவும் வருந்தினான் — தாத்தாவுக்காக அல்ல. “இந்த வருடம் நான் ஃபெயில்தான்!” என்று.

    தாத்தாவோ இறந்துவிட்டார். அவரைப் பார்க்க பேரன் போனால், என்ன செய்திருக்கமுடியும்?

    அதைவிட அவனுடைய எதிர்காலம் முக்கியமில்லையா?

    அவனுடைய தந்தை இதையெல்லாம் யோசிக்கவில்லை.

    அப்படிப் போடு பழியை!

    “என்னை யாருமே ஊக்குவிப்பதில்லை. அதனால்தான் நான் முன்னுக்கு வரமுடியவில்லை,” என்று கூறி, தம் கையாலாகாத்தனத்திற்குப் பிறர்மீது பழிபோடுவார்கள்.

    ஊக்கம் என்பது நமக்குள்ளிருந்து வருவது. பிறரை எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும்.

    அறிவு, திறமை, கல்வி போன்ற குணங்கள் அமையப் பெற்றிருந்தாலும், பலர் வெற்றி பெற முடிவதில்லையே!

    அவர்களுக்கு ஆர்வம் இருக்கலாம். அது மட்டும் போதுமா?

    நமக்குத் திறமை இருக்கிறது, நிறைய சாதிக்கவேண்டும் என்று துடிப்பாக இருப்பவரிடம், “போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து!” என்று அறிவுரை கூறுவார்கள் உற்றவர்கள்.

    “இதெல்லாம் உன்னைப்போன்றவர்களால் முடியாத காரியம்!” என்று தன்னம்பிக்கையைத் தகர்ப்பார்கள்.

    சொல்கிறவர்கள் எப்போதும் பாதுகாப்பை நாடுகிறவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட மனப்பான்மை இருப்பவர்கள் சாதிக்கமுடியாது.

    `என் குடும்பத்தினருக்கு நான் செய்வது பிடிக்கவில்லை!’ என்று விட்டுக்கொடுக்கும் ஒருவர் பிறகு வருந்த நேரிடும்.

    ஆர்வத்துடன் நாம் ஒரு காரியத்தில் ஈடுபடும்போது, நம் திறமையில் நமக்கே சந்தேகம் எழச்செய்கிறவர்களை அலட்சியம் செய்யவேண்டும்.

    நம் செய்கையால் அவர்கள் ஆத்திரப்படலாம் – தம்மை மதிக்கவில்லையே என்று. பிறருடைய உணர்ச்சிகளுக்கு நாம் பொறுப்பல்ல.

    செய்வதற்குமுன், எந்தப் புதிய காரியமும் கடினமாகத்தான் தென்படும். உழைக்க அஞ்சினால் எப்படி! அதையே சவாலாக எடுத்துக்கொண்டால், உற்சாகமாக இருக்கும்.

    “என்ன செய்வது? அதை எப்படிச் செய்வது?” என்று, நம்முடன் ஒத்துழைக்கும் ஒத்த மனத்தினரை நாடினால் வெற்றி பெறலாம். மனநிறைவு கிட்டும்.

    முன்னுக்கு வந்திருப்பவர்கள் நம்மைவிட எத்தனையோ கஷ்டங்களை, எதிர்ப்புகளை, கேலியைச் சந்தித்திருப்பார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டால், தைரியம் எழும்.

    வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள்

    மொழி, கலாசாரம், பொருளாதாரப் பிரச்னை போன்ற பல இன்னல்களையும் கடந்து, தாய்நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் சில சமயம், உள்நாட்டவர்களைவிட அதிகமாக எப்படி வெற்றி பெறுகிறார்கள்?

    “என்ன ஆனாலும், மனம் தளராதே. விடாமுயற்சியுடன் போராடு!” என்று அவர்களது தாயோ, தந்தையோ அறிவுறுத்தி அனுப்பி வைப்பார்களாம்.

    விடாமுயற்சி உடையவர்களைத் தோற்கடிப்பது கடினம்.

    Share
  • திருப்பாவை – 30 பாசுரங்கள்

    திருப்பாவை – 30 பாசுரங்கள்

    தனித்துவம் மிக்க தமிழ்க்கவி, அமுதெனத் தமிழ்செய்த அருட்கவி, எண்ணமும் வண்ணமும் புதுக்கிய ஏரார்ந்த செல்வி, தமிழ்நிலத்தின் தவப்பயன், ஆயிரம் ஆண்டுகளின் பெருமிதம், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய திருப்பாவை இதோ. 30 பாசுரங்களும் ஒரே பதிவாக. செல்வி ஸ்வேதா பாடுகிறார். பார்த்து மகிழுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள். கோதையின் தமிழைக் கொண்டாடுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • புடலைக்கு ஒரு கல்கட்டு

    புடலைக்கு ஒரு கல்கட்டு

    நம் மாடித் தோட்டத்தில் ஒரு புடலங்காய் (பாம்புப்புடலை) காய்த்துள்ளது. அது நீளமாக வளர்வதற்காகக் கல்கட்டி விட்டிருக்கிறோம். அந்த ருசிகரக் காட்சி இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மாதேவன் புகழ்பாடி மார்கழியில் மகிழ்ந்திருப்போம்!

    மாதேவன் புகழ்பாடி மார்கழியில் மகிழ்ந்திருப்போம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா. 

    மங்கையர்கள் கூடுகிறார் மனமுருகப் பாடுகிறார்
    பொங்கிவரும் பக்தியினால் புலருமுன்னே எழும்புகிறார்
    எழும்பாத மங்கையரை எழுந்துவர வேண்டுகிறார்
    எம்பிரான் திறமுரைத்து எல்லோரும் பாடுகிறார்

    ஆதியொடு அந்தமும் ஆண்டவனே என்கின்றார்
    மாலறியா நான்முகனும் மலைக்கநிற்பா னென்கின்றார்
    பரஞ்சோதி என்கின்றார் பருங்கருணை யென்கின்றார்
    எழுந்திருந்து வந்திடுவீர் ஈசன்புகழ் பாடிடுவோம்

    முத்தன்ன வெண்ணகையீர் முகமகமலர்ந்து வந்திடுவீர்
    அத்தன் ஆனந்தன் அவன்புகழைப் பாடிடுவோம்
    சித்தம் அழகுடையீர் சிவனடியைப் பரவிடுவோம்
    முத்தத்தில் நிற்கின்றோம் முகமலர்ந்து வாருங்கள்

    விண்ணாகி நிற்கின்றான் மண்ணாகி நிற்கின்றான்
    வேதாமாய் நாதமாய் வியாபித்தும் விரிந்துள்ளான்
    கண்ணார் அமுதமுமாய் காணுகிறான் கண்ணுதலான்
    காலையிலே நீராடிக் கழல்பணிவோம் எழுந்திடுவீர்

    சிவன்புகழைப் பாடுகிறோம் செவியதனைக் கேட்கலையோ
    அவன்புகழைக் கேட்காத அச்செவியும் நற்செவியோ
    வன்செவியை வைத்திருக்கும் மாதரசே எழுந்திடுவாய்
    மாதேவன் புகழ்பாடி மார்கழியில் மகிழ்ந்திருப்போம்

    பகலிரவு எல்லாமே பரஞ்சோதி நினைப்பென்பாய்
    படுக்கையினை அணைத்தபடி படுத்திருக்கும் மாயமென்ன
    நேசமென்பாய் பாசமென்பாய் நினைப்பெல்லாம் இறையென்பாய்
    எழுந்தோடு வந்திடுவாய் ஏத்திடுவோம் இறைநாமம்

    தித்திக்கப் பேசினாய் திரும்பவும் உறங்குகின்றாய்
    வண்ணக் கிளிமொழியார் வந்திட்டோம் வாசலுக்கு
    கண்ணைத் துயின்று காலத்தைப் போக்காதே
    கண்ணுக் கினியானைப் பாடிடுவோம் வந்திடுவாய்

    கோழிகூவும் சத்தமும் குருகுகளின் சத்தமும்
    காதினிக்குக் கேட்கலையா காலையென்று தெரியலையா
    ஊழி முதல்வனாய் உயர்ந்துதிருக்கும் பரம்பொருளை
    உணர்வுடனே பாடுகிறோம் உடனெழுந்து வந்திடுவாய்

    பெருந்துயரைத் தீர்க்கும் பரம்பொருளைப் பாடுகிறோம்
    பரம்பொருளே கடைத்தேற்றும் தீர்த்தமாய் ஆகியுள்ளான்
    அவன்புகழைச் சேர்ந்திருந்து அனைவருமே பாடிப்பாடி
    ஆடிடுவோம் நீர்நிலையில் அமைந்திடுமே நல்வாழ்வு

    அப்பனைப் பாடுவோம் அம்மையையைப் பாடுவோம்
    அருந்திறத்தைப் பாடுவோம் அருங்கலைத்தை பாடுவோம்
    அறியாமை போயகல அனைவருமே சேர்ந்தொன்றாய்
    அதிகாலை நீராடி அகமெண்ணிப் பாடிடுவோம்

    ஆணாகிப் பெண்ணாகி அலியாக நிற்கின்றான்
    அனைத்துக்கும் காரணமாய் ஆகியும் இருக்கின்றான்
    அண்ணா மலையான் அருள்சுரக்கும் ஊற்றாவான்
    அவன்புகழைப் பாடிநின்று அனைவரும் நீராடிடுவோம்

    வாதவூர்ப் பிறந்தார் மணிமணியாத் தமிழ்கொண்டு
    பேரறிவாம் பெரும்பொருளை பாடுகிறார் பக்தியுடன்
    மார்கழியில் நீராட மங்கையர்கள் அழைக்கவென
    திருவெம்பாப் பாட்டாக தித்திப்பாய் வழங்கியுள்ளார்

    அதிகாலை வேளையிலே அனைவருமே எழுந்திருந்து
    அரன்நாமம் அகமெண்ணி ஆடிடுவோம் நீர்நிலையில்
    நீர்நிலையில் ஆடுகையில் நினைவெல்லாம் நிமலனிடம்
    நிறைந்திருக்க வேண்டுகிறார் வாதவூர்ப் பெருமகனார்

    மார்கழியை மனமிருத்தி ஆண்டாளும் வேண்டுகிறாள்
    மார்கழியின் மகத்துவத்தை மனமிருத்தப் பாடுகிறாள்
    சைவமும் வைணமும் சங்கமிக்கும் காலமாய்
    மார்கழியை ஆக்கிவிட்டார் அடியார்கள் இருவருமே

    திருப்பாவை திருவெம்பாவை திவ்வியமாய் இருக்கிறது
    திருவருளை மனமிருத்த திருவமுதாய் வாய்த்திருக்கு
    ஏலோரெம் பாவாய் இதயத்தில் அமர்கிறது
    எல்லோரும் இறையெண்ணி இதையோதி இருந்திடுவோம்

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 152 (ஒப்பில்)

    சேக்கிழார் பாடல் நயம் – 152 (ஒப்பில்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    இலை மலிந்த சருக்கம்
    ஆனாய நாயனார் புராணம்

    திருத்தொண்டர் புராணத்தின்  இலைமலிந்த சருக்கத்தின்கண்  அமைந்த ஆனாய நாயனார் புராணம் இனி இப்புராணத்தில் கூறப்பெறும்  முன் வரலாற்றைக் காண்போம்.சோழ நாட்டில் மழநாடு எனப்பெற்ற  நீர்வளம் நிறைந்த நாட்டில், வயலில் கரும்பும் வாழையும் செந்நெல்லும் விளைந்தன. வயல்களை மருங்கில் மான்களும் ஆடுகளும் தாவிக் குதித்தன. இவ்வாறு ஒப்பற்ற வளம் மிகுந்த மழநாட்டைச்  சேர்ந்த  திருமங்கலம் என்ற ஊரில், வயல் வளத்துக்கேற்ற மனவளமும் அறவளமும்  பெற்றோர் நிறைந்த ஆயர் குலத்தில் ஆனாயர் என்ற அடியார் இருந்தார். அவரைப் பற்றிச் சேக்கிழார் கூறுகிறார்,

    பாடல் :

    ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார்
    தூய சுடர்திரு நீறு விரும்பு தொழும்பு உள்ளார்;
    வாயின் இன் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப் பாலின்
    பேய் உடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார்.

    பொருள்:

    (அவர்) ஆயர்குலத்தை விளக்கம் செய்திட இவ்வுலகில் வந்து அவதரித்தவர்; தூயஒளி வீசுகின்ற திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர்; வாக்கினாலும், உண்மைபெற வழுத்தும் மனத்தினாலும் செயல் வகையினாலும் பேயோடாடுகின்ற சிவபெருமான் றிருவடிகளை யல்லது வேறொன்றினையும் பேணாதவர்.

    விளக்கம்:

    குலத்தை விளக்கிடஎன்ற தொடரில்,  குலத்தை விளக்குதலாவது சிவ வழிப்பாட்டில் நிறுத்தி வழிகாட்டுதல். இவர் அவதரித்த குலம் என்று இவரால் குலம் உலகில் விளங்கப் பெறுதல் என்றலுமாம். திருத்தொண்டத் தொகையினுள் திருமூலரும் இந்நாயனாரும் ஆகிய இவரே ஆயர் குலத்தவராவர், அவருள் சிவ யோகியாரான திருமூலர், இறந்துபோய்க்கிடந்த மூலன் என்ற இடையனது உடலினுட் புகுந்து மூலராய் விளங்கியவர். எனவே, இந்நாயனார் ஒருவரே ஆயர் குலத்திற்றோன்றியபடி சிவனடியாராய் விளங்கி அந்நிலையே சிவலோகத்திலும் வாழ்பவர். ஆதலின் இவ்வாறு சிறப்பித்தார்.

    உதயம் செய்தார் – கதிரவன் போலத் தம்மைச்சுற்றிய அனைவருக்கும் ஒளியைச் செய்தார் என்பதைக் காட்டுகிறது.

    தூய சுடர்த்  திருநீறு விரும்பு தொழும்பு  என்ற தொடர் திருநீற்றின் தூய்மையையும்  ஒளியையும்குறித்தது! தொழும்பு என்பது  திருநீறு வீடு தரும் சாதனம் என்று கொண்டு அதற்குத் தொண்டு புரிதல். “நீற்றினை நிறையப் பூசுதலும், நீறு பூசினாரைக் காணில் காதல் கொள்ளுதல் – உள்ள முருகுதல் – போற்றுதல் – அவர் வேண்டுவன செய்தல் முதலியவையும் திருநீற்றுத்தொண்டு எனப்படும். சிவபெருமான்  திருத்தொண்டாவன திருநீற்றுத் தொண்டேயாம் என்றலும் பொருந்தும்.

    வாயினின்மெய்யின்  வழுத்தும்  மனத்தின் வினைப்பாலின்  என்ற  அடி,  வாக்கு, மனம், காயம் என்ற மூன்றையும் குறித்தது. அவற்றின் வழியே செய்யும் திருத்தொண்டையும் குறித்தது.

    மெய்யின் வழுத்தும் மனத்தின் – மெய் – உண்மை. உண்மை கூர்தரச் சிந்திக்கும் மனத்தினால். உண்மை கூர, நினைப்பவர் மனத்தினுள் இறைவர் வெளிப்பட நின்றருளுவர்.

    “நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே, புக்குநிற்கும்
    பொன்னார்சடைப் புண்ணியன்”,

    “கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால், விரவாடும் பெருமானை”,

    “வஞ்சனையா லஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச் சேயானை” ,

    “மெய்மையன் பருள்மெய்மை மேவினார்”

    முதலிய திருவாக்குக்கள் காண்க.

    வினைப்பால் – என்பதற்குச் செயலின் பொதுமை என்றும், மெய் – உடம்பு – காயம் – என்றும் கொண்டு, வாய், மெய், மனம் என்ற மூன்றின் செயலால் எனத் தனித்தனி கூட்டி உரைத்தலுமாம்.

    “மானிடப் பிறவி தானும் வகுத்தது மனவாக்காயத்,
    தானிடத்து  ஐந்தும்  ஆடும்  அரன்பணிக் காக வன்றோ”

    என்று சிவஞான சித்தியார்  கூறும்.

    பேயுடன் ஆடும் பிரான் சிவபெருமான். பேய் – சிவகணமாகிய சுத்த தத்துவ உடம்புடைய நற்கணம். சிவபூதங்கள். பௌதிகமாகிய வாயு சரீரமுடைய பைசாசங்களல்ல .

    “பேயாய நற்கணத்தி லொன்றாய நாம்”

    என்றகாரைக்கால் அம்மையார் திருப்பாட்டும்

    “பாரிடம் பாணி செய்யப் பறை கட்சிறு பல் கணப் பேய்,
    சீரொடும் பாடல்  ஆடல் இலயம்  சிதை யாத கொள்கை”

    என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமும்  கண்டு பொருளுணர்ந்து கொள்க.

    பேயோடாடி என்பது  நிகண்டில் சிவபெருமானது பெயர்களிலொன்றாக ஓதப்படுதலும் காண்க. பேயோடாடுதல் அவரது நித்தியத்துவம் பரத்துவம் முதலிய தன்மைகள் குறிக்கும்.

    அடி அல்லது பேணாதார் – எதிர்மறையாற் கூறினார் நியதி பிழையாமையும் உறுதிப்பாடும் குறித்தற்கு.

    இப்பாட்டால் ஆனாயரது உயிரின் நிலையாகிய அகவாழ்வாகிய சிவச்சார்பு கூறப்பட்டது. வரும்பாட்டில் உடல் பற்றிய புறவாழ்வாகிய உலகநிலை கூறுவார். உயிர்பற்றிய அகவாழ்க்கையின் சிறப்பு நோக்கி அதனை முன்வைத்தோதினார்

    Share
  • The Fountain of Wealth – உலகின் மிகப் பெரிய நீரூற்று

    The Fountain of Wealth – உலகின் மிகப் பெரிய நீரூற்று

    இது, உலகின் மிகப் பெரிய நீரூற்று எனக் கின்னஸ் சாதனை (1998) படைத்தது. செல்வ நீரூற்று (The Fountain of Wealth) எனப் பெயர் பெற்றது. சிங்கப்பூரின் சன்டெக் சிட்டி என்ற வணிக வளாகத்தில் அமைந்துள்ளது. நீரூற்றுடன் வண்ண விளக்குகளும் லேசர் ஒளிக் காட்சிகளும் எழுத்துகளும் அலங்கரிக்கின்றன. இந்த நிகழ்வில், நம் அன்புக்கு உரியவர்களுக்கு லேசர் செய்திகளும் வாழ்த்துகளும் விடுக்கலாம். தொழில்நுட்பத்தில் 2002ஆம் ஆண்டிலேயே சிங்கப்பூர் எந்த அளவுக்கு முன்னேறியிருந்தது என்பதை இந்தக் கோலாகலக் காட்சிகள் காட்டுகின்றன.

    இதில் இன்னொரு சிறப்பும் உண்டு. ஒவ்வொரு நாளும் சில நேரங்களில் பெரிய நீரூற்றை நிறுத்திவைப்பர். அதன் மையப் பகுதியில் உள்ள சிறிய நீரூற்றை இயக்குவர். அதை மூன்று முறை சுற்றி வருபவர்களுக்கு அதிர்ஷ்டம் சேரும் என்பது நம்பிக்கை. இந்தப் பதிவின் தொடக்கத்தில், அந்தச் சிறிய நீரூற்றைப் பலரும் சுற்றி வருவதைப் பார்க்கலாம். அவர்களுடன் என் மனைவி ஹேமமாலினியும் சுற்றி வருகிறார்.

    சத்தியநாராயணனின் படப்பதிவைப் பார்த்து மகிழுங்கள்.

    The Fountain of Wealth is listed by the Guinness Book of Records in 1998 as the largest fountain in the world. It is located in one of Singapore’s largest shopping malls, Suntec City.

    During certain periods of the day, the fountain is turned off and visitors are invited to walk around a mini fountain at the centre of the fountain’s base, three times for good luck. At night, the fountain is the setting for laser performances, as well as live song and laser message dedications between 8 pm to 9 pm daily. It is situated in such a way the fountain is the hub of the shopping mall (Wiki).

    Images courtesy: Wikimedia.org
    Video captured by SathyaNarayanan.L in 2002

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மஞ்சள் அறுவடை

    மஞ்சள் அறுவடை

    எங்கள் மாடித் தோட்டத்தில் இன்று மஞ்சள் அறுவடை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எழுத்தில் மசாலா தேவையா? | எழுத்தாளர் கே.ஜி.ஜவர்லால் நேர்காணல் – 2

    எழுத்தில் மசாலா தேவையா? | எழுத்தாளர் கே.ஜி.ஜவர்லால் நேர்காணல் – 2

    எழுத்தில் மசாலாத் தன்மை இருக்க வேண்டுமா? செக்ஸ் – போர்னோ இரண்டுக்குமான வேறுபாடு என்ன? புகழ்பெற்ற எழுத்தைக் காப்பியடித்து எழுதலாமா? அண்ணாவின் பாணியைக் கருணாநிதி காப்பியடித்தது ஏன்? ரஜினி – கமல் பாணி என்ன வித்தியாசம்? வெகுஜன எழுத்து, இலக்கியம் ஆகுமா? அதிகம் பேர் படிப்பது இலக்கியம் இல்லையா? எழுதும் கலை குறித்து, எழுத்தாளர் கே.ஜி.ஜவர்லாலின் யதார்த்தமான பதில்கள் இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(380)

    செண்பக ஜெகதீசன்

    கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்யும்
    அருவினையும் மாண்ட தமைச்சு.

    – திருக்குறள் – 631 (அமைச்சு)

    புதுக் கவிதையில்

    செயல் செய்யுங்கால்
    அதற்கான கருவிகள்,
    செயல்பட ஏற்ற காலம்,
    செயல்படும் வழிமுறைகள்,
    அருஞ்செயல் ஆகியவற்றைக்
    கண்டறிந்து அதன்படி
    செயலாற்ற வல்லவனே
    சிறந்த அமைச்சன்…!

    குறும்பாவில்

    காலம் கருவி செயல்வகை
    அருஞ்செயல் கண்டறிந்து செயல்பட வல்லவனே
    அரசுக்கு நல்ல அமைச்சனாவான்…!

    மரபுக் கவிதையில்

    செயலைச் செய்ய உரிய கருவி
    செயலுக் கேற்ற கால மறிந்து,
    செயலின் வகையை நன்றா யுணர்ந்தே
    செய்யும்  அரிய செயலின் பெருமை
    நயத்தை நன்றா யாராய்ந் தறிந்தே,
    நாட்டை யாளும் மன்னர்க் குதவிச்
    செயல தாற்ற வல்லா னவனே
    சிறந்த அமைச்சன் என்போம் நாமே…!

    லிமரைக்கூ

    இவையெலா மறிந்தே செய்வான்,
    காலம் கருவி செயல்வகை அருஞ்செயல்
    காண்பவன் நல்லமைச்சனாய் உய்வான்…!

    கிராமிய பாணியில்

    மந்திரி மந்திரி
    தெறமயான மந்திரி,
    மகாராசாவுக்கேத்த மந்திரி..

    எதயும் செய்யுமுன்னே
    அதுக்கேத்த கருவி,
    செய்யிறதுக்கேத்த காலம்,
    எப்புடிச் செய்யிறதுங்கிற மொறயோட
    செயலோட அரும பெரும
    எல்லாத்தயும் நல்லா
    அறிஞ்சி செயல்படுறவந்தான்
    செறப்பான மந்திரி..

    தெரிஞ்சிக்கோ,
    மந்திரி மந்திரி
    தெறமயான மந்திரி,
    மகாராசாவுக்கேத்த மந்திரி…!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 95

    பழகத் தெரிய வேணும் – 95

    நிர்மலா ராகவன்

    சிந்தனையின் விந்தை

    ஒரு மூன்று வயதுக் குழந்தையிடம் கடுமையான வேலையைக் கொடுத்தால், “என்னால் முடியாதே!” என்று தயங்கலாம். தன் ஆற்றல் எவ்வளவு என்று புரிந்ததால் வந்த பதில் அது.

    ஆனால், வயதும் திறமையும் கூடி இருந்தபோதும், அவ்வாறே கூறுவது எதிர்மறைச் சிந்தனை செய்யும் விபரீதம். ஒருவருக்குத் தன் திறமையில் நம்பிக்கை இல்லையென்று காட்டிவிடும்.

    அப்படித் தோன்றும்போது, அதை எதிர்க்க ஓர் உத்தி: `என்னால் முடியும். கண்டிப்பாகச் செய்து முடிப்பேன்!’’ என்று தனக்குத்தானே தைரியம் அளித்துக்கொள்ளலாம்.

    எச்சரிக்கை: இதையே உரக்கக் கூறினால், கர்வம் என்ற பழிக்கு ஆளாக நேரிடும்! தன்னம்பிக்கையை வேறு எப்படித்தான் வளர்த்துக்கொள்வது!

    `முடியாது!’ என்று நினைத்த காரியத்தைச் செவ்வனே செய்து முடித்துவிட்டால், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியே தனி.

    ஒரே நிகழ்வை வெவ்வேறு நபர்கள் பார்க்கும்போது, அவர்களது கணிப்பும் மாறுபட்டிருக்கும்.

    கதை

    அன்று ஒரு பெண்ணிற்குக் கல்யாணம். அவளுக்கும், அவளைப் பெற்றவர்களுக்கும் பெருமகிழ்ச்சி. ஆனால், உறவினர்கள் அந்த சம்பந்தத்தில் எங்கே குறை என்று தேடினார்கள்.

    “வரதட்சணையே வேண்டாம் என்கிறார்களே! மாப்பிள்ளைப் பையனுக்கு ஏதோ கோளாறு இருக்கவேண்டும்!”

    “அவசர அவசரமாகக் கல்யாணத்தை நடத்திவிட வேண்டும் என்றார்களே! ஏன் அப்படி?”

    பெண்ணின் தாய் இதற்குப் பதிலளித்தாள். “மாப்பிள்ளைக்கு லீவு முடிந்து, உடனே வெளிநாடு திரும்பவேண்டுமாம். விசாவும் காலாவதி ஆகிவிடுகிறது”.

    `இன்னும் எங்கு கோளாறு?’ என்று துடித்தார் ஒரு முதியவர். அவர் ஐந்து பெண்களைப் பெற்றுக்கொண்டு, திண்டாடுபவர். “அந்தப் பையன், அம்மாவுக்குப் பயப்படுகிறான். அவனைப் பேசவிடாமல், அந்த அம்மாவே பேசுகிறாள்!”

    பெண்ணின் தாய்க்குச் சந்தேகம் வந்தது. மணப்பெண்ணிடமே போனாள். “என்னென்னவோ சொல்கிறார்களே!” என்றாள் கவலையுடன்.

    மணப்பெண் சிரித்தாள். “நான் சந்தோஷமா இருந்தா, இவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியா இருக்குமான்னு ஒன்னையே கேட்டுக்கோ!”

    அம்மாவுக்கும் சிரிப்பு வந்தது.

    பிரச்னைகள் எதுவும் எழாத திருமணத்தைக் கண்டால் பொறாமைப்படுகிறவர்கள்தாம் அதிகம். `குற்றம் எங்கே?’ என்று தேடிப் பிடிக்கக் காத்திருப்பார்கள்.

    ஏன் சிலர் இப்படி நடக்கிறார்கள்?

    எப்போதோ தவறு நிகழ்ந்துவிட்டால், எத்தனை காலமானாலும் அதை மறக்க முடியாது, அதைப் பற்றியே எண்ணிக் குமைந்துகொண்டிருப்பவர்கள் அவர்கள்.

    செய்ய ஆரம்பித்த எல்லாக் காரியங்களிலும் வெற்றி மட்டுமே கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்த்து, ஏமாந்தவர்கள்.

    கார்டிஸால் (CORTISOL) என்கின்ற வேதியப் பொருள் மூளையில் இருக்கிறதே, அதுதான் அவர்களை அப்படி ஆட்டி வைக்கிறது.

    அதற்கு நேர் எதிரிடை, டோப்அமீன் (DOPAMINE) என்கிற பொருள்.

    நம்மை யாராவது புகழ்ந்தாலோ, நற்செய்தி கிடைத்தாலோ ஏற்படும் இனிய உணர்வு டோப்அமீன் சுரப்பதால் வருவது. போதைபோல் இருக்கும்.

    ஓர் அறுவை சிகிச்சைக்கு முன்னால், மார்ஃபின் என்ற போதைப்பொருளை என் மூக்கில் வைத்தார்கள். அது குறிப்பிட்ட அளவில் மருத்துவர்கள் பயன்படுத்துவது.

    சில வினாடிகளிலேயே, உடலை விட்டுப் பறப்பதுபோன்ற சுகமான உணர்வு ஏற்பட்டது. மயக்க நிலைக்குப் போய்விட்டேன்.

    இதனால்தான், “வாழ்க்கை பொறுக்க முடியாததாக இருக்கிறது!” என்று புலம்புகிறவர்கள் ஏதாவதொரு போதையை நாடுகிறார்கள்.

    துணுக்கு

    “நீ அதிகமாகக் குடித்தால், உன் மனைவி சண்டைபிடிக்க மாட்டாளா?”

    “எனக்குக் கல்யாணமே ஆகவில்லை!”

    “பின் ஏன் குடிக்கிறாய்?”

    தமக்கு ஏன் எதிர்மறைச் சிந்தனைகளே ஓயாமல் எழுந்து வருத்தத்தில் ஆழ்ந்து கிடக்கச் செய்கின்றன என்று புரியாது, பழியை வேறு இடத்தில் போடுகிறவர்கள் இப்படிப்பட்டவர்கள்.

    எதிர்மறைச் சிந்தனை தரும் வேதனையை எப்படி ஒழிப்பது?

    1. அதிகாலையில், முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும்போது, நாக்கை வெளியில் நீட்டி, சிரிப்பதுபோல் செய்யலாம். புன்னகைத்தால், உதிரமும் பிராண வாயுவும் முகத்திற்கு அனுப்பப்படுவதால் உற்சாகம் எழும்.

    2. எந்தச் சூழ்நிலையிலும் வேடிக்கையான அம்சம் ஏதாவது இருக்குமே!

    கதை

    “இந்த விரிவுரையாளர் இன்னிக்குச் சரியான சிடுமூஞ்சி!” பெண்கள் கல்லூரி மாணவிகள் தமக்குள் பேசிக்கொண்டனர்.

    ஒரு பெண் கூறினாள், “இன்று காலை, மனைவியுடன் சண்டை போட்டிருப்பார்!”

    அவள் தோழி, “அவருக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லையே!” என, முதலாமவள் விடாது, “சவரம் பண்ணிக்கொள்ளும்போது கன்னத்தைக் கீறிக்கொண்டிருப்பார். அந்த எரிச்சலை நம்மிடம் காட்டுகிறார்!”

    எல்லாரும் சிரித்தார்கள்.

    நமக்கு எழும் எதிர்மறை எண்ணங்களையும், அவற்றால் விளையும் ஆத்திரம் அல்லது வருத்தத்தையும் வேடிக்கையான கண்ணோட்டத்துடன் பார்த்தால், சிரிப்பு என்றும் மறையாது.

    3. நம் பிரச்னைகள் நம்மோடு இருக்கட்டும். அவை திரும்பத் திரும்ப மேலே எழுகையில், வருத்தமும் நிலைத்துவிடும்.

    “உனக்கு வேலை போய்விட்டதாமே?”

    “உன் மனைவி உன்னைவிட்டுப் போய்விட்டாளாமே?”

    நாம் மறக்க நினைப்பதைத் தூண்டித் துருவி விசாரிப்பவர்களுக்கு, எதற்காகப் பதில் சொல்லிக்கொண்டிருப்பது?

    இவ்வாறு வீண் வம்புக்கு அலையாது, நம் மனநிலையைப் புரிந்து நடக்க ஓரிருவராவது கிடைக்கமாட்டார்களா?

    4. ஒரே சமயத்தில், இயந்திர கதியில் பல வேலைகளைச் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், அது மன உளைச்சலில்தான் கொண்டுவிடும்.

    ஓயாது, ஒரே வேலையைச் செய்துகொண்டிருந்தால் ஏற்படும் சலிப்பு, மன இறுக்கத்தில் கொண்டுவிடும். இயன்றவரை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும்.

    இதைத்தான் பாரதியார் இப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்: `காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு..” என்று.

    எங்கள் வீட்டருகே காலையும் மாலையும் இளைஞர்களும் முதியவர்களும் மூன்று மூன்று பேராக சைக்கிளில் போவார்கள், கலகலவென்று பேசிக்கொண்டு.

    நோய்த்தொற்றால் வெளியே அதிகம் செல்ல அனுமதி கிடையாது என்ற நிலையில், வருந்தி வீட்டிலேயே உட்கார்ந்து விடுவதில்லை இவர்கள். நண்பர்களுடன் – அவ்வப்போது — பொழுதைக் கழிக்கையில், மனமும் உல்லாசமாக ஆகிவிடும்.

    எதையாவது கழற்றி, பழுது பார்ப்பதும் நல்லதொரு பொழுதுபோக்கு.

    எது செய்யவும் தெம்பில்லையா?

    இருக்கவே இருக்கிறது தொலைக்காட்சி!

    இப்போதெல்லாம் பொழுதைப் போக்க, தொலைக்காட்சியில் திரைப்படங்கள் பார்க்கவென NETFLIX, AMAZON போன்றவற்றிற்குப் பலரும் சந்தா கட்டுவது அதிகரித்துவிட்டதாம்

    5. `முடியாது!’, `கஷ்டம்’ போன்ற வார்த்தைகளை உபயோகித்தால், பிறர் நம்மை மட்டம் தட்ட நாமே வழிவகுத்துக் கொடுத்துவிடுகிறோம்.

    எதிர்மறை எண்ணங்களால்தான் மன இறுக்கம் எழும் என்பது புரியாது, அதற்குரிய தீர்வோ, சிகிச்சையோ பெறாதிருக்கிறார்கள் பலர்.

    இவர்கள் தம் ஆற்றாமையை மனைவியை அடிப்பதன் மூலம் வெளிப்படுத்திக்கொள்வதால், வன்முறையும் விவாகரத்துகளும் பெருகிவிட்டன.

    உதவிபுரியும் எதிர்மறை எண்ணங்கள்

    பலத்த மழையால் மழைத்தண்ணீர் வீட்டுக்குள் புக, புகலிடம் தேடிக் கூரைமேல் உட்காரப்போவது வேண்டாத விளைவுகளை எதிர்நோக்குவதால்தான். அந்த எண்ணம் எதிர்மறையாக இருந்தாலும், பாதுகாப்பை விளைவிக்கிறது.

    இன்னொரு உதாரணம்.

    தெருவைக் கடக்க ஆயத்தமாகிறோம். அப்போது, விரைந்து வரும் வாகனத்தைக் கண்டு, `அபாயம்!’ என்று மூளை எச்சரிக்க, நம்மையும் அறியாது, கால்கள் நம்மைப் பின்னால் இழுக்கின்றன.

    மூன்று வயதுக் குழந்தைக்கு இத்திறமை கிடையாது. எது அபாயம் என்று புரிவதில்லை. ஏதாவது `மாலில்’ (MALL) பார்த்தால், தன் கையைப் பிடித்திருந்த தாயின் கையை உதறிவிட்டு, லிஃப்டில் ஏற ஓடுவான்.

    அப்படிச் செய்த ஒரு சிறுவனை அவன் தாய் கண்டபடி திட்டினாள். அடிக்கப் போனாள்.

    நான் குறுக்கிட்டு, “என் பேரனும் அந்த வயதில் அப்படித்தான் செய்தான்,” என்றேன் புன்முறுவலுடன்.

    “எப்படிச் சமாளித்தீர்கள்?” என்றாள், தன் அலுப்பை மறைக்காது.

    “நான் ஒரு பக்கம், அவன் தாய் ஒரு பக்கம் என்று, அவன் கைகளை இறுகப் பிடித்துக்கொள்வோம், அதன் கதவு திறக்குமுன்”.

    ஒரு முறை எங்களை முந்திக்கொண்டு அவன் ஏற, அந்த இயந்திரம் அவனை மட்டும் ஏற்றிக்கொண்டு மேலே போய்விட்டது. சில நிமிடங்கள் கழித்துத் தனியே திரும்புகையில், அளப்பரிய அச்சம் அவன் முகத்தில். ஆனாலும், அந்த அனுபவத்தால் அவன் பாடம் கற்கவில்லை. வயதுக் கோளாறு!

    குழந்தைகளின் இம்மாதிரியான விஷமம்கூட சில ஆண்டுகளுக்குப்பின் ரசித்துச் சிரிக்கும்படி இருக்கும்.

    Share
  • ஓடி விளையாடு பாப்பா | மகாகவி பாரதி

    ஓடி விளையாடு பாப்பா | மகாகவி பாரதி

    மகாகவி சுப்ரமணிய பாரதியின் ‘ஓடி விளையாடு பாப்பா’, இதோ சுதா மாதவன் வாசிப்பில். உங்கள் வீட்டுப் பிள்ளைகளைக் கேட்கச் சொல்லுங்கள். அவர்களையும் உடன் இணைந்து சொல்லச் சொல்லுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி – ஓவியர் ஜீவா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆன்மாவான கணபதியின் | மகாகவி பாரதி

    ஆன்மாவான கணபதியின் | மகாகவி பாரதி

    மகாகவி சுப்ரமணிய பாரதியார் இயற்றிய ‘ஆன்மாவான கணபதியின்’ என்ற பாடலை நாகி நாராயணன் குரலில் கேளுங்கள். இந்தப் பாடல், விநாயகர் நான்மணி மாலையில் இடம் பெற்றுள்ளது. ‘யான் முன்னுரைத்தேன் கோடிமுறை. இன்னுங்கோடி முறைசொல்வேன்’ என அவர் அழுத்தமாகச் சொல்வது எதை என்று கேளுங்கள். பாரதி பிறந்த நாளில் அவரைப் போற்றுவோம். அவரது வாக்கினை நெஞ்சினில் ஏந்துவோம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முன்னதாக ஓய்வுபெற!

    முன்னதாக ஓய்வுபெற!

    அடிப்படைத் தேவைகளுக்கே ஆயுள் முழுவதும் உழைக்க வேண்டுமா? என் விருப்பப்படி என் வாழ்வை அமைக்கும் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெறுவது எப்படி? எப்போது? முன்னதாகவே ஓய்வுபெற்று, வாழ்வை அனுபவிக்க என்ன வழி? பலருக்குள்ளும் இருக்கும் இந்தக் கேள்விகளுக்கு விடை இதோ. முன்னதாக ஓய்வுபெற என்ன செய்ய வேண்டும்? எவ்வாறு திட்டமிட வேண்டும்? எவ்வகையில் முதலீடு செய்ய வேண்டும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 40

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 40

    -மேகலா இராமமூர்த்தி

    அசோகவனத்தில் சீதையைக் கண்டுபேசி இராமனிடம் காட்டுவதற்கு அடையாளமாய் அவளிடம் சூடாமணியைப் பெற்றுக்கொண்ட அனுமன், ”இலங்கைக்கு வந்தோம் திரும்பினோம் என்று வறிதே திரும்புதல் முறையன்று; அரக்கர் சிலரின் கதையையேனும் முடித்துவிட்டு இயன்றால் இராவணனையும் சந்தித்துவிட்டுச் செல்வதே நல்லது” என்று எண்ணமிட்டான். ”அதற்குச் செய்யவேண்டியது யாது?” என்று சிந்தித்தபோது எழிலார் பொழிலான இந்த அசோகவனத்தை அழித்தால் தன் எண்ணம் ஈடேறும் எனும் யோசனை அவன் சிந்தையில் உதித்தது.

    அதன்படித் தன் அழிப்பு வேலையைத் துரிதமாய்த் தொடங்கினான் அவன். அதன் விளைவாய்க் கிளைகளும், மலர்க்கொடிகளும், குயிற்குலம் விரும்பும் தளிர்கள் நிறைந்த இடங்களும், மென்மலர்களைக் கொண்ட நுழைவாயிலும், வாசமிகு புதர்களும், பொன்னிறங்கொண்ட தேன்மழையும், வண்டுகளும் மயில்களும் அழிந்துபோயின.

    குழையும் கொம்பும் கொடியும் குயிற்குலம்
    விழையும் தண்தளிர்ச் சூழலும் மென்மலர்ப்
    புழையும் வாசப்பொதும்பும் பொலன்கொள் தேன்
    மழையும் வண்டும் மயிலும் மடிந்தவே.
    (கம்ப: பொழில் இறுத்த படலம் -5564)

    வனத்திலிருந்த அனைத்து மரங்களையும் முறித்த மாருதி, சீதையின் அருகிலிருந்த மரத்துக்கு ஏதம் ஏதும் செய்யவில்லை. அசோகவனம் முற்றிலும் அழிந்துபோனதையும் மேருமலை போன்ற குரங்கொன்று அந்தக் கோரத் திருவிளையாடலை நிகழ்த்தியிருப்பதையும் கண்டு அஞ்சிய அரக்கியர் சீதையிடம் சென்று, ”நங்கையே! இவன் யாரென்று நீ அறிவாயோ?” என்று வினவினர்.

    அவளோ சாமர்த்தியமாக, “தீயவர்கள் செய்கின்ற தீமைகளெல்லாம் தீயவர்களுக்குத்தான் தெரியும்; என்னைப் போன்ற தூயவர்களுக்குத் தெரியுமா? இங்கு நடப்பவையெல்லாம் அரக்கர்களாகிய உங்களின் சூழ்ச்சியாகும். முன்பு காட்டில் மாரீசன் மாயமான் உருவில்வர, அஃது அரக்கர் செய்த மாயச் செயலால் வந்தது என்று இலக்குவன் எடுத்துச் சொல்லியும் அதனை மெய்யான மானென்று அறிவுமயக்கத்தால் எண்ணி அதன்பால் நான் விருப்பம் கொண்டேன்” என்றாள் சீதை.

    தீயவர் தீயசெய்தல் தீயவர் தெரியின் அல்லால்
    தூயவர் துணிதல்உண்டே நும்முடைச் சூழல்எல்லாம்
    ஆயமான் எய்த அம்மான் இளையவன் அரக்கர்செய்த
    மாயம்என்று உரைக்கவேயும் மெய்என மையல் கொண்டேன்.
    (கம்ப: பொழில் இறுத்த படலம் – 5584)

    தன் துன்பத்திற்கெல்லாம் அந்த மாயமான் மீது கொண்ட மையல் அல்லவா காரணம் என்பதைத் தூயவள் சீதை கணப்போதும் மறக்கவில்லை. சீதையின் பதிலால் குழப்பமடைந்த அரக்கியர் வயிற்றில் அடித்துக்கொண்டு அங்குமிங்கும் தடுமாறி ஓடினார்கள்.

    அனுமனின் அழிப்புப் படலமோ இடையீடின்றித் தொடர்ந்துகொண்டிருந்தது. வனத்தருகே ஓமங்கள் வேள்விகள் செய்வதற்காக, இராவணனது கட்டளையின் பேரில் பிரம்மதேவனால், அமைக்கப்பட்டிருந்த பசும்பொன்னாலான மண்டபத்தைப் பெயர்த்தெடுத்து இலங்கை நகர்மீது வீசினான். அதனால் வானளாவிய மாடங்களும் கூடங்களும் மண்ணோடு மண்ணாயின.

    இந்தச் செய்தியைக் காவலர்கள் இராவணனிடம் உரைத்தனர். அதுகேட்டு, ”குரங்கொன்று நம் சோலையை அழித்தது; சொர்ண மண்டபத்தைச் சிதைத்தது என்றுரைக்கும் உங்கள் வீரம் நன்று” என்று எள்ளி நகையாடினான் அவன். அப்போது அண்டங்களும் அரக்கியர் வயிற்றில் வளரும் கருவாகிய பிண்டங்களும் கலங்கும்படி அனுமன் போ(பே)ராரவாரம் எழுப்பியது இராவணனின் இருபது செவிகளிலும் விழுந்தது.

    அவன் முகத்தில் புன்முறுவலும் மனத்தில் பொறாமையும் ஒருங்கே எழ, ஆற்றல்வாய்ந்த கிங்கரர்களை அழைத்து, ”நீங்கள் வான்வழியையும் தடுத்து அக்குரங்கை அப்புறம் செல்லாதவாறு, கொல்லாது எளிதாகப் பிடித்துக்கொண்டு வாருங்கள்” என்றான்.

    புல்லியமுறுவல் தோன்றப் பொறாமையும் சிறிதுபொங்க
    எல்லைஇல் ஆற்றல் மாக்கள் எண்இறந்தாரை ஏவி
    வல்லையின் அகலாவண்ணம் வானையும் வழியை
     மாற்றிக்
    கொல்லலிர் குரங்கை நொய்தின் பற்றுதிர் கொணர்திர் என்றான்
    . (கம்ப: கிங்கரர் வதைப் படலம் – 5598)

    இராவணனின் ஆணையை ஏற்ற அவர்கள், ”தேவர்களைப் பொருதுவென்ற நாம் கேவலம் ஒரு குரங்கை எதிர்க்கச் செல்வதா?” எனும் அவமானத்தோடும் வெட்கத்தால் வருந்தும் மனத்தோடும், தோமரம், தண்டு, வேல் உள்ளிட்ட பல்வேறு படைக்கலங்களோடு அனுமனைத் தேடிச் சென்றனர்.

    அனுமனைக் கண்டதும் ”இவன்தான்” என்று சுட்டிக் காட்டியவாறு அவன்மீது பல்வேறு ஆயுதங்களையும் எறிந்தனர். ஆயுதங்கள் ஏதுமின்றி இருந்த அனுமனோ தன்னருகில் உயர்ந்து வளர்ந்திருந்த மரத்தை வேரோடு பிடுங்கியெடுத்து அதனால் அந்த அரக்கர்களை ஓங்கி அடித்தான். எதிர்த்தவர்கள் மண்டை உடைந்து மாண்டனர்; இன்னும் சிலரின் கை கால்களைப் பிய்த்து எறிந்தான் அந்த வானர வீரன்.

    அனுமனிடம் போரிட்டுத் தம் உயிரைத் தோற்றனர் கிங்கரர் அனைவரும்; ஆயினும், ஒருவரும் உயிரோடு தோற்றோடவில்லை. அவ்வகையில் அவர்களின் போர்வீரம் பெரிதும் பாராட்டத்தக்கது என்று போற்றுகின்றார் கம்பநாடர்.  

    இவற்றையெல்லாம் ஒருபக்கமாக நின்று கண்டுகொண்டிருந்த பொழிற்காவலர்கள், நடந்ததைச் சொல்லும்பொருட்டு இராவணனிடம் ஓடிச்சென்று நடுக்கத்தோடு நின்றனர். அவர்களின் நடுக்கத்தைக் கண்டபோதே தன்னுடைய வீரர்கள் போரில் தோற்றுவிட்டனர் என்பதை உணர்ந்த இராவணன், தன்னருகில் நின்றிருந்த சம்புமாலி என்ற பெருவீரனை அடுத்து அனுப்பினான் அனுமனைப் பிணித்துப் பிடித்துவர.

    குதிரை யானை தேர் காலாள் எனும் நாற்படைகளும் பின்வரப் போருக்குச் சென்றான் சம்புமாலி. இப்படைகளைக் கண்ட அனுமன் உற்சாகத்தோடு தோள்தட்டி ஆரவாரித்தான்.

    சம்புமாலிக்குத் துணையாகச் சேனைகள் இருந்தன. ஆனால் அனுமனுக்கு, ஆழிப்படை ஏந்திய திருமாலின் திருநாமம் நெய்ஊற்றி எரிக்கின்ற விளக்கின் சுடர்போன்ற, அவனுடைய ஒளிபொருந்திய நெற்றியே முன்னணிச் சேனையாகவும், அவன் உடலில் நெருங்கி வளர்ந்துள்ள மயிர்க்கூட்டங்களே படைவீரர்களாகவும், வலிமையும் கூர்மையும் பொருந்திய நகங்கள் எனும் வாள்கள் கொண்ட கைகளே இருபக்கச் சேனைகளாகவும், தெய்வத்தன்மை பொருந்திய வாலே அணிவகுப்பின் பின்னணிச் சேனையாகவும் அமைய தான் ஒருவனே ஒழு முழுச்சேனையாக (one man army) நின்றான் என்கிறார் கம்பர்.

    ஐயனும் அமைந்து நின்றான் ஆழியான் அளவின் நாமம்
    நெய்சுடர் விளக்கின் தோன்றும் நெற்றியே நெற்றியாக
    மொய்ம் மயிர்ச்சேனை பொங்க முரண்அயில் உகிர்வாள் மொய்த்த
    கைகளே கைகள்ஆக கடைக்கூழை திருவால் ஆக.
    (கம்ப: சம்புமாலி வதைப் படலம் – 5678)

    அனுமனுக்கும் சம்புமாலியின் சேனைகட்கும் கடும்போர் நடந்தது. அச்சேனையைத் துவைத்தழித்த அனுமன், பூத்தமரம்போல் உடலெங்கும் புண்களால் பொலிந்தான். சம்புமாலி மட்டும் தனித்து நிற்பதைக் கண்ட அனுமன் அவன்பால் இரக்கம் கொண்டு, “உன் சேனைகள் அனைத்தையும் தோற்றுவிட்டாய்; என்னோடு நீ போரிட்டால் உன் உயிரையும் தோற்க நேரிடும்; திரும்பிப் போய்விடு!” என்றான்.

    தனித்து நின்ற இராவணனுக்கு, பின்னாளில், ”இன்றுபோய்ப் போர்க்கு நாளை வா!” என்று அருள்செய்த இராமனைப்போல் இராமதூதனான அனுமனும் தனித்து நின்ற சம்புமாலிபால் அருள்நெஞ்சினனாய் நடந்துகொள்வதை ஈண்டுக் காண்கிறோம்.

    மா(ன)வீரனான சம்புமாலி அனுமன் தன்மீது காட்டிய அனுதாபம் கண்டு கோபத்தோடு நகைத்துவிட்டு அவனை எதிர்த்துப் போரிட்டான்.  இறுதியில் சம்புமாலியின் கையிலிருந்த வில்லைப் பிடுங்கி அதனை அவன் கழுத்தில் மாட்டியிழுத்து அவன் தலையை மண்ணில் வீழ்த்தினான் அனுமன்.

    சம்புமாலியும் எமபுரி சென்றதை அறிந்த இராவணன் சினம்பொங்கத் தானே அனுமனை எதிர்க்க ஆயத்தமானான்.

    அப்போது அவனைத் தடுத்த அவனுடைய சேனைத் தலைவர்கள் ஐவர், ”ஐய! சிலந்திப் பூச்சியைப் பிடித்துத் தின்னும் ஒரு குரங்கை எதிர்க்க உம்மைப்போல் ஒரு மாவீரன் செல்வதா? வலிகுன்றியவர்களையே நீர் இதுவரை அனுமனை எதிர்க்க அனுப்பியமையால் அவர்கள் இறந்துபட்டனர்; இப்போது நாங்கள் செல்கிறோம்; வெற்றியோடு திரும்புவோம்” என்று சாற்றியது இராவணனின் மனத்தை மாற்றியது. அவர்கள் போருக்குச் செல்ல இசைந்தான்.

    பெரும்படையுடன் அவ் ஐவரும் போருக்கெழுந்தனர்; அனுமனை அணுகினர். அரக்கர் படையை நோட்டம்விட்ட அனுமன், ” இன்று பகலுக்குள் இவர் கதையை முடிப்பேன்” என்றெண்ணியபடி தன் தோள்களை நோக்கிக்கொண்டான் கம்பீரத்தோடு.

    ”இந்தப் புன்தலைக் குரங்கா விண்ணவர் புகழை வேரோடழித்த வல்அரக்கரை முறுக்கி அழித்தது?” என்று நம்பமுடியாமல் ஐயத்தோடு அனுமனைப் பார்த்தனர் படையிலிருந்த நிருதர் பலர்.

    புன்தலைக் குரங்குஇது போலுமால் அமர்
    வென்றது விண்ணவர் புகழை வேரொடும்
    தின்றவல் அரக்கரைத் திருகித் தின்றதால்
    என்றனர் அயிர்த்தனர் நிருதர் எண்ணிலார்.
    (கம்ப: பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம் – 5736)

    அனுமன் பேருருவம் எடுத்தான்; அடுத்து, அருகிலிருந்த இரும்புத்தூணை பெயர்த்தெடுத்தான். மீண்டும் ஆங்கே ஒரு பெரும்போர் நிகழ்ந்தது. முடிவில் அந்தப் பஞ்சவரையும், காண்போர் நெஞ்சம் பதறும்படி, ஒவ்வொருவராய்த் தாக்கி அழித்தான் குறைவற்ற ஊக்கமுடையவனான அஞ்சனை தோன்றல்.

    சேனைத் தலைவர்கள் மாண்ட செய்தி நிருதர்கோன் இராவணனின் செவிகளை எட்டியது. அவனிடம் மூண்ட சினத்தீயால் பொசுங்கியது அவன் அணிந்திருந்த மணங்கமழ் மலர்மாலை. தானே மீண்டும் போருக்குப் புறப்பட எத்தனித்தவனை இடையிட்டுத் தடுத்துத் தன்னைப் போருக்கு அனுப்பும்படி இறைஞ்சினான் ஒரு வீரன்!

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share