கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 40

0

-மேகலா இராமமூர்த்தி

அசோகவனத்தில் சீதையைக் கண்டுபேசி இராமனிடம் காட்டுவதற்கு அடையாளமாய் அவளிடம் சூடாமணியைப் பெற்றுக்கொண்ட அனுமன், ”இலங்கைக்கு வந்தோம் திரும்பினோம் என்று வறிதே திரும்புதல் முறையன்று; அரக்கர் சிலரின் கதையையேனும் முடித்துவிட்டு இயன்றால் இராவணனையும் சந்தித்துவிட்டுச் செல்வதே நல்லது” என்று எண்ணமிட்டான். ”அதற்குச் செய்யவேண்டியது யாது?” என்று சிந்தித்தபோது எழிலார் பொழிலான இந்த அசோகவனத்தை அழித்தால் தன் எண்ணம் ஈடேறும் எனும் யோசனை அவன் சிந்தையில் உதித்தது.

அதன்படித் தன் அழிப்பு வேலையைத் துரிதமாய்த் தொடங்கினான் அவன். அதன் விளைவாய்க் கிளைகளும், மலர்க்கொடிகளும், குயிற்குலம் விரும்பும் தளிர்கள் நிறைந்த இடங்களும், மென்மலர்களைக் கொண்ட நுழைவாயிலும், வாசமிகு புதர்களும், பொன்னிறங்கொண்ட தேன்மழையும், வண்டுகளும் மயில்களும் அழிந்துபோயின.

குழையும் கொம்பும் கொடியும் குயிற்குலம்
விழையும் தண்தளிர்ச் சூழலும் மென்மலர்ப்
புழையும் வாசப்பொதும்பும் பொலன்கொள் தேன்
மழையும் வண்டும் மயிலும் மடிந்தவே.
(கம்ப: பொழில் இறுத்த படலம் -5564)

வனத்திலிருந்த அனைத்து மரங்களையும் முறித்த மாருதி, சீதையின் அருகிலிருந்த மரத்துக்கு ஏதம் ஏதும் செய்யவில்லை. அசோகவனம் முற்றிலும் அழிந்துபோனதையும் மேருமலை போன்ற குரங்கொன்று அந்தக் கோரத் திருவிளையாடலை நிகழ்த்தியிருப்பதையும் கண்டு அஞ்சிய அரக்கியர் சீதையிடம் சென்று, ”நங்கையே! இவன் யாரென்று நீ அறிவாயோ?” என்று வினவினர்.

அவளோ சாமர்த்தியமாக, “தீயவர்கள் செய்கின்ற தீமைகளெல்லாம் தீயவர்களுக்குத்தான் தெரியும்; என்னைப் போன்ற தூயவர்களுக்குத் தெரியுமா? இங்கு நடப்பவையெல்லாம் அரக்கர்களாகிய உங்களின் சூழ்ச்சியாகும். முன்பு காட்டில் மாரீசன் மாயமான் உருவில்வர, அஃது அரக்கர் செய்த மாயச் செயலால் வந்தது என்று இலக்குவன் எடுத்துச் சொல்லியும் அதனை மெய்யான மானென்று அறிவுமயக்கத்தால் எண்ணி அதன்பால் நான் விருப்பம் கொண்டேன்” என்றாள் சீதை.

தீயவர் தீயசெய்தல் தீயவர் தெரியின் அல்லால்
தூயவர் துணிதல்உண்டே நும்முடைச் சூழல்எல்லாம்
ஆயமான் எய்த அம்மான் இளையவன் அரக்கர்செய்த
மாயம்என்று உரைக்கவேயும் மெய்என மையல் கொண்டேன்.
(கம்ப: பொழில் இறுத்த படலம் – 5584)

தன் துன்பத்திற்கெல்லாம் அந்த மாயமான் மீது கொண்ட மையல் அல்லவா காரணம் என்பதைத் தூயவள் சீதை கணப்போதும் மறக்கவில்லை. சீதையின் பதிலால் குழப்பமடைந்த அரக்கியர் வயிற்றில் அடித்துக்கொண்டு அங்குமிங்கும் தடுமாறி ஓடினார்கள்.

அனுமனின் அழிப்புப் படலமோ இடையீடின்றித் தொடர்ந்துகொண்டிருந்தது. வனத்தருகே ஓமங்கள் வேள்விகள் செய்வதற்காக, இராவணனது கட்டளையின் பேரில் பிரம்மதேவனால், அமைக்கப்பட்டிருந்த பசும்பொன்னாலான மண்டபத்தைப் பெயர்த்தெடுத்து இலங்கை நகர்மீது வீசினான். அதனால் வானளாவிய மாடங்களும் கூடங்களும் மண்ணோடு மண்ணாயின.

இந்தச் செய்தியைக் காவலர்கள் இராவணனிடம் உரைத்தனர். அதுகேட்டு, ”குரங்கொன்று நம் சோலையை அழித்தது; சொர்ண மண்டபத்தைச் சிதைத்தது என்றுரைக்கும் உங்கள் வீரம் நன்று” என்று எள்ளி நகையாடினான் அவன். அப்போது அண்டங்களும் அரக்கியர் வயிற்றில் வளரும் கருவாகிய பிண்டங்களும் கலங்கும்படி அனுமன் போ(பே)ராரவாரம் எழுப்பியது இராவணனின் இருபது செவிகளிலும் விழுந்தது.

அவன் முகத்தில் புன்முறுவலும் மனத்தில் பொறாமையும் ஒருங்கே எழ, ஆற்றல்வாய்ந்த கிங்கரர்களை அழைத்து, ”நீங்கள் வான்வழியையும் தடுத்து அக்குரங்கை அப்புறம் செல்லாதவாறு, கொல்லாது எளிதாகப் பிடித்துக்கொண்டு வாருங்கள்” என்றான்.

புல்லியமுறுவல் தோன்றப் பொறாமையும் சிறிதுபொங்க
எல்லைஇல் ஆற்றல் மாக்கள் எண்இறந்தாரை ஏவி
வல்லையின் அகலாவண்ணம் வானையும் வழியை
 மாற்றிக்
கொல்லலிர் குரங்கை நொய்தின் பற்றுதிர் கொணர்திர் என்றான்
. (கம்ப: கிங்கரர் வதைப் படலம் – 5598)

இராவணனின் ஆணையை ஏற்ற அவர்கள், ”தேவர்களைப் பொருதுவென்ற நாம் கேவலம் ஒரு குரங்கை எதிர்க்கச் செல்வதா?” எனும் அவமானத்தோடும் வெட்கத்தால் வருந்தும் மனத்தோடும், தோமரம், தண்டு, வேல் உள்ளிட்ட பல்வேறு படைக்கலங்களோடு அனுமனைத் தேடிச் சென்றனர்.

அனுமனைக் கண்டதும் ”இவன்தான்” என்று சுட்டிக் காட்டியவாறு அவன்மீது பல்வேறு ஆயுதங்களையும் எறிந்தனர். ஆயுதங்கள் ஏதுமின்றி இருந்த அனுமனோ தன்னருகில் உயர்ந்து வளர்ந்திருந்த மரத்தை வேரோடு பிடுங்கியெடுத்து அதனால் அந்த அரக்கர்களை ஓங்கி அடித்தான். எதிர்த்தவர்கள் மண்டை உடைந்து மாண்டனர்; இன்னும் சிலரின் கை கால்களைப் பிய்த்து எறிந்தான் அந்த வானர வீரன்.

அனுமனிடம் போரிட்டுத் தம் உயிரைத் தோற்றனர் கிங்கரர் அனைவரும்; ஆயினும், ஒருவரும் உயிரோடு தோற்றோடவில்லை. அவ்வகையில் அவர்களின் போர்வீரம் பெரிதும் பாராட்டத்தக்கது என்று போற்றுகின்றார் கம்பநாடர்.  

இவற்றையெல்லாம் ஒருபக்கமாக நின்று கண்டுகொண்டிருந்த பொழிற்காவலர்கள், நடந்ததைச் சொல்லும்பொருட்டு இராவணனிடம் ஓடிச்சென்று நடுக்கத்தோடு நின்றனர். அவர்களின் நடுக்கத்தைக் கண்டபோதே தன்னுடைய வீரர்கள் போரில் தோற்றுவிட்டனர் என்பதை உணர்ந்த இராவணன், தன்னருகில் நின்றிருந்த சம்புமாலி என்ற பெருவீரனை அடுத்து அனுப்பினான் அனுமனைப் பிணித்துப் பிடித்துவர.

குதிரை யானை தேர் காலாள் எனும் நாற்படைகளும் பின்வரப் போருக்குச் சென்றான் சம்புமாலி. இப்படைகளைக் கண்ட அனுமன் உற்சாகத்தோடு தோள்தட்டி ஆரவாரித்தான்.

சம்புமாலிக்குத் துணையாகச் சேனைகள் இருந்தன. ஆனால் அனுமனுக்கு, ஆழிப்படை ஏந்திய திருமாலின் திருநாமம் நெய்ஊற்றி எரிக்கின்ற விளக்கின் சுடர்போன்ற, அவனுடைய ஒளிபொருந்திய நெற்றியே முன்னணிச் சேனையாகவும், அவன் உடலில் நெருங்கி வளர்ந்துள்ள மயிர்க்கூட்டங்களே படைவீரர்களாகவும், வலிமையும் கூர்மையும் பொருந்திய நகங்கள் எனும் வாள்கள் கொண்ட கைகளே இருபக்கச் சேனைகளாகவும், தெய்வத்தன்மை பொருந்திய வாலே அணிவகுப்பின் பின்னணிச் சேனையாகவும் அமைய தான் ஒருவனே ஒழு முழுச்சேனையாக (one man army) நின்றான் என்கிறார் கம்பர்.

ஐயனும் அமைந்து நின்றான் ஆழியான் அளவின் நாமம்
நெய்சுடர் விளக்கின் தோன்றும் நெற்றியே நெற்றியாக
மொய்ம் மயிர்ச்சேனை பொங்க முரண்அயில் உகிர்வாள் மொய்த்த
கைகளே கைகள்ஆக கடைக்கூழை திருவால் ஆக.
(கம்ப: சம்புமாலி வதைப் படலம் – 5678)

அனுமனுக்கும் சம்புமாலியின் சேனைகட்கும் கடும்போர் நடந்தது. அச்சேனையைத் துவைத்தழித்த அனுமன், பூத்தமரம்போல் உடலெங்கும் புண்களால் பொலிந்தான். சம்புமாலி மட்டும் தனித்து நிற்பதைக் கண்ட அனுமன் அவன்பால் இரக்கம் கொண்டு, “உன் சேனைகள் அனைத்தையும் தோற்றுவிட்டாய்; என்னோடு நீ போரிட்டால் உன் உயிரையும் தோற்க நேரிடும்; திரும்பிப் போய்விடு!” என்றான்.

தனித்து நின்ற இராவணனுக்கு, பின்னாளில், ”இன்றுபோய்ப் போர்க்கு நாளை வா!” என்று அருள்செய்த இராமனைப்போல் இராமதூதனான அனுமனும் தனித்து நின்ற சம்புமாலிபால் அருள்நெஞ்சினனாய் நடந்துகொள்வதை ஈண்டுக் காண்கிறோம்.

மா(ன)வீரனான சம்புமாலி அனுமன் தன்மீது காட்டிய அனுதாபம் கண்டு கோபத்தோடு நகைத்துவிட்டு அவனை எதிர்த்துப் போரிட்டான்.  இறுதியில் சம்புமாலியின் கையிலிருந்த வில்லைப் பிடுங்கி அதனை அவன் கழுத்தில் மாட்டியிழுத்து அவன் தலையை மண்ணில் வீழ்த்தினான் அனுமன்.

சம்புமாலியும் எமபுரி சென்றதை அறிந்த இராவணன் சினம்பொங்கத் தானே அனுமனை எதிர்க்க ஆயத்தமானான்.

அப்போது அவனைத் தடுத்த அவனுடைய சேனைத் தலைவர்கள் ஐவர், ”ஐய! சிலந்திப் பூச்சியைப் பிடித்துத் தின்னும் ஒரு குரங்கை எதிர்க்க உம்மைப்போல் ஒரு மாவீரன் செல்வதா? வலிகுன்றியவர்களையே நீர் இதுவரை அனுமனை எதிர்க்க அனுப்பியமையால் அவர்கள் இறந்துபட்டனர்; இப்போது நாங்கள் செல்கிறோம்; வெற்றியோடு திரும்புவோம்” என்று சாற்றியது இராவணனின் மனத்தை மாற்றியது. அவர்கள் போருக்குச் செல்ல இசைந்தான்.

பெரும்படையுடன் அவ் ஐவரும் போருக்கெழுந்தனர்; அனுமனை அணுகினர். அரக்கர் படையை நோட்டம்விட்ட அனுமன், ” இன்று பகலுக்குள் இவர் கதையை முடிப்பேன்” என்றெண்ணியபடி தன் தோள்களை நோக்கிக்கொண்டான் கம்பீரத்தோடு.

”இந்தப் புன்தலைக் குரங்கா விண்ணவர் புகழை வேரோடழித்த வல்அரக்கரை முறுக்கி அழித்தது?” என்று நம்பமுடியாமல் ஐயத்தோடு அனுமனைப் பார்த்தனர் படையிலிருந்த நிருதர் பலர்.

புன்தலைக் குரங்குஇது போலுமால் அமர்
வென்றது விண்ணவர் புகழை வேரொடும்
தின்றவல் அரக்கரைத் திருகித் தின்றதால்
என்றனர் அயிர்த்தனர் நிருதர் எண்ணிலார்.
(கம்ப: பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம் – 5736)

அனுமன் பேருருவம் எடுத்தான்; அடுத்து, அருகிலிருந்த இரும்புத்தூணை பெயர்த்தெடுத்தான். மீண்டும் ஆங்கே ஒரு பெரும்போர் நிகழ்ந்தது. முடிவில் அந்தப் பஞ்சவரையும், காண்போர் நெஞ்சம் பதறும்படி, ஒவ்வொருவராய்த் தாக்கி அழித்தான் குறைவற்ற ஊக்கமுடையவனான அஞ்சனை தோன்றல்.

சேனைத் தலைவர்கள் மாண்ட செய்தி நிருதர்கோன் இராவணனின் செவிகளை எட்டியது. அவனிடம் மூண்ட சினத்தீயால் பொசுங்கியது அவன் அணிந்திருந்த மணங்கமழ் மலர்மாலை. தானே மீண்டும் போருக்குப் புறப்பட எத்தனித்தவனை இடையிட்டுத் தடுத்துத் தன்னைப் போருக்கு அனுப்பும்படி இறைஞ்சினான் ஒரு வீரன்!

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *