Blog

  • குறளின் கதிர்களாய்…(504)

    குறளின் கதிர்களாய்…(504)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(504)

    பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை
    நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

    -திருக்குறள் – 532 (பொச்சாவாமை)

    புதுக் கவிதையில்…

    நிற்கமல்
    நித்தம்வரும் வறுமை
    ஒருவனது
    அறிவைக் கொல்வதுபோல்,
    ஒருவனது மறதி
    அவனுடைய
    புகழையே கொன்றுவிடும்…!

    குறும்பாவில்…

    நித்த வறுமை ஒருவனின்
    அறிவை அழித்திடுவது போல, மறதி
    அவனது புகழைக் கெடுத்துவிடும்…!

    மரபுக் கவிதையில்…

    நித்தம் வாழ்வில் நிரந்தரமாய்
    நில்லா திடராய் வரும்வறுமை
    சத்த மிலாதே யொருவன்தன்
    சார்ந்த அறிவைக் கெடுத்தேதான்
    சித்தம் மயங்கச் செய்வதுபோல்,
    சிந்தை கொள்ளும் மறதியது
    புத்தி கெடவே வைத்தொருவன்
    புகழை யழித்து விட்டிடுமே…!

    லிமரைக்கூ…

    தினமும் வந்திடும் வறுமை
    ஒருவனின் அறிவை அழித்தல்போல், மறதி
    ஆக்குமவன் புகழை வெறுமை…!

    கிராமிய பாணியில்…

    கொடியது கொடியது
    மகாக் கொடியது,
    மனுசனுக்கு மறதி
    மகாக் கொடியது..

    மனுச வாழ்க்கயில
    மாறாத வறும வந்தா
    ஒருத்தனோட
    அறிவயே அழிச்சிப்புடும்,
    அதுபோல
    மறதி ஒருத்தனுக்கு வந்தா
    அது அவனோட
    பேரு பொகழயெல்லாம்
    போக்கடிச்சிடுமே..

    அதால,
    கொடியது கொடியது
    மகாக் கொடியது,
    மனுசனுக்கு மறதி
    மகாக் கொடியது…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(503)

    குறளின் கதிர்களாய்…(503)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(503)

    பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின்
    மருங்குடைகுடையார் மாநிலத் தில்….!

    -திருக்குறள் -526(சுற்றந்தழால்)

    புதுக் கவிதையில்…

    ஒருவன்
    பெரிய கொடையாளியாகவும்,
    சினத்தைச்
    சிறிதும் விரும்பாத
    சிறந்த குணமுடையவனாகவும்
    இருந்தால்,
    அவனைப்போல் சுற்றத்தாரையுடையவன்
    அவனியில்
    வேறு யாருமில்லை…!

    குறும்பாவில்…

    கொடையாளியாய், கோபம் விரும்பாத
    குணவானாய் ஒருவன் இருந்தால் அவனைப்போல்
    சுற்றமுடையோர் உலகில் வேறில்லை…!

    மரபுக் கவிதையில்…

    இல்லை யெனவே மறைக்காமல்
    இருக்கும் வரையில் கொடுக்கின்ற
    நல்ல குணமாம் கொடைத்தன்மை
    நாளும் இயல்பாய்க் கொண்டவனாய்,
    பொல்லாக் கோபம் கொள்ளாமல்
    பொறுமை பேணும் ஒருவன்போல்
    வல்ல சுற்றம் பெரிதுடையோர்
    வையம் தன்னில் வேறிலரே…!

    லிமரைக்கூ…

    கொடையாளியாய், கொடிய குற்றம்
    கோபம் கொள்ளா ஒருவனுக்குபோல் வேறெவர்க்கும்
    அமையாது பெரிய சுற்றம்…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும்
    ஒறவு வேணும்,
    விட்டு வெலகாத
    குடும்ப ஒறவு வேணும்..

    கொடயாளியாவும்
    கோவப்படாதவனாயும்
    ஒருத்தன் இருந்தா
    அவனப்போல
    குடும்ப ஒறவுகள்
    கூடுதலா உள்ளவனா
    ஒருத்தனுமில்ல..

    அதால
    வேணும் வேணும்
    ஒறவு வேணும்,
    விட்டு வெலகாத
    குடும்ப ஒறவு வேணும்…!

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 30 [கவிக்கோ துரை. வசந்தராசனின் “சுருக்குப்பை”]

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 30 [கவிக்கோ துரை. வசந்தராசனின் “சுருக்குப்பை”]

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    முன்னுரை

    இலக்கணத்திலும் கவிதைகளிலும் பேரார்வம் நிறைந்தது என் வாழ்வு. இந்த எண்பது வயது காலத்தில் கவிதை எனக்கு அமைதியைத் தருகிறது. என்னை நானே புதுப்பித்துக் கொள்வதற்கும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதற்கும் கவிதைகளே தலையாய காரணம். என்னைப் பொருத்தவரையில் அது ஒரு வினைவேக மாற்றியாகவே செயல்படுகிறது. அதனால்தான் கவிதைகளை அடையாளம் காண்பதில் என் மனம் அவ்வளவு எளிதாக அமைதியடைவதில்லை. எந்தக் கவிதையொடும் நான் எளிதாகச் சமரசம் செய்து கொள்வதில்லை.  நூல்களில் படிப்பதைக் காடடிலும் முகநூல் கவிதைகளைக் கண்டு மகிழ்வதில் எளிமையை உணர்கிறேன். அத்தகைய சிறப்பு வாய்ந்த முகநூலில் கவிதைப் பணி செய்துவருவோர் பலர். அவருள் என்னுள்ளம் கவர்ந்த படைப்பாளர் கவிக்கோ துரை வசந்தராசன் அவர்களாவார். படைப்புவழி என்னால் அடையாளம் காணப்பட்டவர். கவிதை மாதிரி எழுதிக் கொண்டு ‘இதுதான் கவிதை’ என்று சாதிப்பவர் அல்லர். கவிஞனாகப் பிறந்ததால் கவிதை எழுதுகிறவர். அண்மையில் முகநூலில் அவர் எழுதி என்னுள்ளம் கவர்ந்த ‘சுருக்குப்பை’ என்னுந் தலைப்பில் அமைந்த கவிதைபற்றிய கலையியல் திறனாய்வாக இக்கட்டுரை அமைகிறது.

    பாடுபொருளால் சிறக்கும் ‘சுருக்குப்பை’

    தற்காலக் கவிதைகளில் பெரும்பாலன காதல் சார்ந்தன அல்லது தங்களுக்குப் பிடித்தமான தலைவர்களைப் பாடித் தீர்ப்பன. கண்ணாகிய உறுப்பின் தொழில் பார்வை. அது மனத்தோடு இயைந்தவழி நோக்காக மாறுகிறது. ‘நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள்’ என்றுதான் வள்ளுவர் பாடுவார். ‘பார்த்தாள் பார்த்து இறைஞ்சினாள்’ என்று எழுதமாட்டார். பார்வையில் இறைஞ்சுவது தெரியாது. நோக்கத்தில் புலப்படும். கவிஞர்கள் நோக்கிற் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். தான் வாழுகிற சமுதாயத்தை உற்று நோக்காத யாரும் கவிதையாக்கத்தில் வெற்றிபெற முடியாது. ‘சந்திர மணடலத்தியல் கண்டு தெளிவோம் தெரு சந்திப் பெருக்கும் நல்ல சாஸ்திரம் கற்போம்’ என்னும பாரதி வரி அவன் தெருப்பெருக்கும் தொழிலாளியைக் கூட நோக்கியிருக்கிறான் என்பதைத் தெளிவு படுத்துகிறது.

    தற்காலக் கவிஞர்களைப்போல் அக்காலக் கவிஞர்களுக்குப் பாடுபொருள் பஞ்சம் வந்ததில்லை. ஐவகைத் திணைகளிலும் உள்ள கருப்பொருள்களை அவர்கள் சிறப்பாகப் பாடியிருக்கிறார்கள். பாரதிதாசன் பூசணிக்காயைப் பாடியிருக்கிறார். சுரதா வாழைத்தண்டைப் பாடியிருக்கிறார். பொன்னடியான் சோப்பைப் பாடியிருக்கிறார். காமராசன் திருநங்கைகளைப் பாடியிருக்கிறார். மேத்தா அரளிப்பூவைப் பாடியிருக்கிறார். சிற்பி கிராமத்து நதியைப் பாடியிருக்கிறார். வைரமுத்து பல்லாங்குழியைப் பாடியிருக்கிறார். கவிமணி சொறிசிரங்கைப் பாடியிருக்கிறார். காளமேகம் நாயைப் பாடியிருக்கிறார். ஔவை எருமை மாட்டைப் பாடியிருக்கிறார். கவித்துவத்தால் பாடுபொருள் சிறப்படைகிறதே தவிர பாடுபொருளால் கவிஞன் சிறப்படைவதில்லை.

    உற்று நோக்குந் திறனை இயல்பாகவே கொண்ட கவிஞர் வசந்தராசன் மூதாட்டியொருத்தியின் சுருக்குப்பையை நோக்கியிருக்கிறார். அவளுக்கும் அந்தப் பைக்குமான உறவை நோக்கியிருக்கிறார். அதற்குள் புதைந்து கிடந்த “புதையலை” நோக்கியிருக்கிறார். அந்த மூதாட்டி கவிஞரின் அப்பத்தாவாக இருக்கலாம். அம்மாச்சியாகவும் இருக்கலாம். உறவுக்காரராகவும் இருக்கலாம். சந்தையில் கண்டிருக்கலாம். சாலையில் சென்றிருக்கலாம். இவரிடத்திலெல்லாம் கவிஞன் அவர்தம் இடுப்பிலிருந்த அந்தச் சுருக்குப் பையைத்தான் நோக்கியிருக்கிறான். இளம்பெண்ணின் இடுப்புச் சுருக்கங்களைப் பாடுகிறவருக்கிடையே இந்தக் கவிஞன்தான் மூதாடடியின் இடுப்பில் செருகியிருக்கும் சுருக்குப்பையைப் பாடியவனாக இருக்க வேண்டும். கவிதையின் வெற்றிக்குப் பாடுபொருள் தேர்வு செம்பாகம் அன்று, பெரிது.

    உத்திகளால் சிறக்கும் சுருக்குப்பை

    இந்தக் கவிதை ‘சுருக்குப்பை தன்வரலாறு எழுதுவதாகப்’ படைக்கப்படவில்லை. மூதாட்டியின் சுயசரிதையாக அமையவில்லை. கவிதைக் களத்தில் படைப்பாளனே முன்னிற்கிறான். இந்தக் கவிதையை வேறு உத்தியில் சொல்லியிருந்தால் ‘இருட்டுக்கடை அல்வா போல் இனிக்கும்’ என்னும் உவமம் பயின்றுவந்திருக்காது. ‘மெல்லவிழ்ந்து சுவாசிக்கும் என்னும் சுருக்குப்பையின் நுரையீரல் வெளிப்பட்டிருக்காது. என்னதான் சுருக்குப்பையும் மூதாட்டியுமே பேசியிருந்தாலும் படைப்பாளனின் கற்பனைகளையும் உத்திகளையும் படிமங்களையும் சொல் நேர்த்தியையும் கவிதையில் கொண்டு வந்திருக்க முடியாது. வடிவமும் ஓர் உத்திதான். வெளிப்பாட்டு முறையும் ஓர் உததிதான். மூதாட்டியின் உள்ளத்திலும் சுருக்குப்பைக்கு உயிரூட்டிய உள்ளத்திலும் புகுந்துகொணடு பேசுவதைவிட தானே கண்டு வியந்த சுருக்குப்பைக் களஞ்சியத்தைக் கவிஞனே நேரடியாகப் பாடியிருப்பது மிகப் பொருத்தமாகும்.

    உணர்ச்சியின் மொழிவடிவமே கவிதை

    கவிதைக் கூறுகள் நான்கனுள் தற்காலக் கவிதைகளில் உணர்ச்சி தலையாயது. சங்கக் காலத்தில் அதனைத் தொடர்ந்து வந்த காலத்திலும் உள்ளடக்கம் தலையானதாகக் கருதப்பட்டது. பக்தி இலக்கியக் காலத்திற்குப் பின் கவிதை இலக்கியங்களில் உணர்ச்சியே கண்காணிக்கப்பட்டது. வியப்பிடைச் சொற்களே கவிதையாகும் விந்தையைக் கம்பன் செய்து காட்டினான். தனிப்பாடல்கள் சிலவும் இயல்பு நவிற்சியணியால் உணர்ச்சியைக் காட்சிப்படுத்தின. கவிதையாக்கின. பின்னாலே வந்த வள்ளற்பெருமானும் மகாகவி பாரதியும் பாரதிதாசனும் கண்ணதாசனும் உணர்ச்சியின் பிழம்பாகவே கவிதையுலகில் அடையாளம் காணப்பட்டனர். இந்தப் பின்புலத்தில் சுருக்குப்பையைக் காணவேண்டியதிருக்கிறது.

    மன்னரின் மணிமகுடத்தைப் பாடுபொருளாக்குவதைவிட ஒரு வீரனின் கைவாளைப் பாடுபொருளாக்குவதில் கவிஞனின் நோக்கு புலப்படும். கவிதையின் வெற்றி உறுதி செய்யப்படும். கலிங்கத்துப் பரணி என்னும் இலக்கியத்துள் இராசபாரம்பரியம் என்னும் மன்னரின் வரலாற்றுப் பகுதியைவிட போர்பாடியது, களம்பாடியது என்னும் பகுதிகளே அந்த இலக்கியத்தைத் தூக்கிப்பிடிக்கின்றன என்பதை அறியலாம்.

    கவிஞன் இந்தக் கவிதையில் நவநாகரிக மங்கையின் கைப்பையைப் பாடாமல் முடிந்துபோன நீண்ட நெடிய மரபின் இறுதி அடையாளமாகிய மூதாட்டியின் சுருக்குப்பையைப் பாடியிருக்கிறான். அதாவது அவன் நோக்கை அந்தச் சுருக்குப்பை ஈர்த்திருக்கிறது. ‘சுருக்குப்பை’ என்னும் சொல்லே நமக்கு அவலத்தைத் தூண்டுவதாக அமைந்துவிடுகிறது. சுருங்கச் சொன்னால் தலைப்பிலேயே அவலச்சுவையை பரிமாறிவிடுகிறார் எனலாம்.

    “அடகுச் சீட்டாய் கல்கம்மல் மாறியதன் அடையா ளங்கள்!”

    சுருவாட்டுக் காசில் வாங்கிய பொடி நகைகளையெல்லாம் அடகு வைக்கும் அவலம். சுருக்குப்பையில் நகையாக இருந்தவை (உண்மையில் அவை நகைகள் அல்ல. மூக்குத்தியைச் சங்கிலிக்கு ஈடாக யாரும் கருதுவதில்லை. பெண்ணுக்குச் சீதனம் கொடுக்கிறபோது கூட கம்மல், மூக்குத்தி, கால்கொலுசு இவைகளைத் தனியாகக் கணக்கிடுகிற பழக்கம் தமிழ்நாட்டில் இல்லை) நகைகள் அடகுச் சீட்டுக்களாக!. அந்த அடகுச்சீட்டுக்களைக் காணுகிறபொழுதெல்லாம் வைத்த நகைகள் அல்லவா நினைவுக்கு வரும்? அவள் எவ்வளவுக்கு வைத்திருப்பாள் சுருக்குப்பைக் காலத்தில்? அதிக பட்சம் ஐம்பது ரூபாய்க்கு வைத்திருப்பாளா? அவ்வளவுதான்! அதனால்தான் கவிஞன் அடகுப் பொருளைக் ‘கல்கம்மல்’ என்கிறான். கல்வைத்த நகைக்கு மதிப்பு குறைவு. கவிஞன் கண்ட கிழவியின் கம்மல் தங்கத்தில் வைக்கப்ட்ட வைரக்கல் நகையன்று. கண்ணாடிக் கல் நகை. எல்லாவற்றையும் தொகுத்து நோக்கினால் ‘அடகுச் சீட்டாய் கல்கம்மல் மாறியதன் அடையாளங்கள்!’ என்னும் வரியில் அடங்கியிருக்கும் வலியை உணர முடியும்.

    சுருக்குப்பை சுவாசிக்கிறதாம்.

    சுருக்குப்பையின் சுவாசத்தை இப்படிப் பாடுகிறார் கவிஞர். .“மெல்லவிழ்ந்து சுவாசிக்கும் சுருக்குப் பைகள்” மூதாட்டி திறந்து மூடும் நொடிக்குள் சுவாசித்துத் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறதாம் சுருக்குப்பை. சுருக்குப்பைக்கு பிராணவாயு தருவதே மூதாட்டியின் விரல்கள்தானாம். “எப்போது திறப்பாள்? என்னும் சுருக்குப்பையின் ஏக்கத்தை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  தனக்கு வாழ்வளிக்கும் சுருக்குப்பைக்குத் தான் வாழ்வளிக்கிறாளாம் மூதாட்டி! அருமையான அழகியல் கற்பனை!

    தன்மை நவிற்சி அணி

    புனைந்துரை ஏதுமின்றி உள்ளதை உள்ளவாறே கவிதையில் பதிவு செய்வதனைத் தன்மை நவிற்சியணி அல்லது இயல்பு நவிற்சியணி என்பார்கள் இலக்கணக்காரர்கள். சிலப்பதிகாரத்தில் உயர்வு நவிற்சியணியும் தன்மை நவிற்சியணியும் ஒரே இடததில  இயல்பாக அமைந்திருக்கும் இலக்கிய அதிசயத்தைக் காணலாம்.

    பாண்டியனின் அரண்மனை வாயிற்காவலன் கண்ணகியைக் காண்கிறான். அவன் பார்வைக்கு அவளுடைய தோற்றம் எப்படி இருந்தது என அவன்  பாண்டியனிடத்தில்  காட்சிப்படுத்தியதை அடிகள் இப்படிப் பதிவு செய்கிறார்.

    “அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந் துணிப்
    பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி,
    வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை அல்லள்;
    அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
    ஆடல் கண்டருளிய அணங்கு, சூர் உடைக்
    கானகம் உகந்த காளி, தாருகன்
    பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்;”

    காளியாகக் காவலனுக்குக் காட்சியளித்த கண்ணகி பாண்டியனுக்கு எப்படித் தோன்றினாள் என்பதை இயல்பு நவிற்சியால் காட்சிப்படுத்துகிறார் அடிகள்.

    மெய்யில் பொடியும் விரித்த கருங்குழலும்
    கையில் தனிச் சிலம்பும் கண்ணீரும் வையைக் கோன்
    கண்டளவே தோற்றான், அக்காரிகைதன் சொற்செவியில்
    உண்டளவே தோற்றான் உயிர் ‘

    பாண்டியன் தோற்றத்தில் காணப்படும் கண்ணகியின் வண்ணனையில் அடிகள் எதனையும் புனைந்துரைக்கவில்லை என்பதை நோக்குதல் வேண்டும். சில நொடிகள் இடைவெளியில் வாயிற்காவலன் பார்வைக்கும் நாட்டு மன்னனுடைய பார்வைக்கும் உள்ள வேறுபாட்டினை அடிகள் புலப்படுத்து:ம் திறன் திறனாய்வுக்கு அப்பாற்பட்டது. சுருக்குப்பையில் புதையுண்ட பொருட்களைக் கவிஞன் காட்சிப்படுத்துகிறான்.

    “பல்குச்சி, வெற்றிலைப்பாக் குச், சுண் ணாம்பு
    புகையிலையின் சிறுதுண்டு, பழைய ஊக்கு
    பல்திறத்துப் பைநிறைந்து வீழ்ந்து விட்ட
    பழங்கலம்போல் உள்ளிருப்பு! அடகுச் சீட்டாய்
    கல்கம்மல் மாறியதன் அடையா ளங்கள்!
    கயிறணிந்து பதுங்கியுள வீட்டுச் சாவி! “

    நோக்கின் சிறப்புப்பற்றி முன்னரே கூறப்பட்டது. இங்கே கவிஞன் சுருக்குப்பையின் அடைக்கலப் பொருள்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அடைச்சொற்களை நோக்கினால் அவனுடைய கவிநோக்கு புலப்படும்.

    பல்குச்சி, வெற்றிலை சுண்ணாம்பு” என்கிறார். வெற்றிலை என்பது வெற்றிலை பாசிலையைக் குறித்ததன்று. வெற்றிலைச் சருகைக் குறித்தது. சுண்ணாம்பு என்பது சுண்ணாம்பு கரண்டவத்தைக் குறித்தது. தகரத்தினால் ஆன மிகச் சிறிய குழல்வடிவத்தில் இருப்பதுதான் சுண்ணாம்பு கரண்டவம். இந்தத் தெளிவு இல்லாமல் போனால் கவிதையை உள்வாங்கிச் சுவைக்க முடியாது. .

    ‘புகையிலையின் சிறுதுண்டு’ என்கிறார். ஒன்றரை அங்குல புகையிலைத் துண்டை ஒருவாரம் வைத்துப் பயன்படுத்துகிறவர்தான் அந்த மூதாட்டி. புகையிலைக்குத் தேய்பிறை உண்டு. வளர்பிறை கிடையாது. அந்தத் தேய்பிறைப் புகையிலையைத்தான் சிறுதுண்டு என்கிறார். ஊக்கைக் கூட ‘பழைய ஊக்கு’ என்கிறார். சுருக்குப்பையின் கயிறு இற்று அறுந்துவிடுமானால் அந்த ஊக்கு கயிறாக அவதாரம் எடுக்கும். கீழே கிடந்த ஊக்காகவும் இருக்கலாம். மூதாட்டி தமிழச்சியாதலாலும் சுருக்குப்பை தமிழ்ப்பண்பாட்டின் அடையாளம் ஆனதாலும் பாடுபொருளோடு அனைவரும் ஒன்ற வேண்டும் என்பதாலும் தாக்குறவுக்கு ஆளாகவேண்டும் என்பதாலும் HOOK  என்னும் ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்தியிருக்கிறார் என்று அமைதியடையலாம். .

    கயிறணிந்து பதுங்கியுள வீட்டுச் சாவி! அந்தச் சுருக்குப்பையில் இருந்ததாம். KEY CHAIN அறிந்த இன்றைய சமுதாயத்திற்குச் சாவிக்குத் தாலிகட்டிய அந்தச் சடங்கு தெரியாது.

    உயிர்பெற்று எழுந்துவரும் இறந்தகாலம்

    இறந்து போன காலத்திற்குத்தான் இறந்தகாலம் என்று பெயர். மூதாட்டியின் உடைமைகளும் அவைசார்ந்த சிந்தனைகளும் வரலாறுகளும் இறந்த காலம். ஆனால் அவை அந்தச் சுருக்குப்பையில் இருப்பதால் நிகழ்காலம்.

    “முடங்கினாலும் தன்னுயிரைப் பூட்டி வைக்கும்
    முந்தானை முடிச்சிடுப்புப் பெட்ட கங்கள்!”

    இடுப்பில் செருகியிருக்கும் சுருக்குப்பையோடு முந்தானை முடிச்சையும் துணையாக்குகிறார் கவிஞர் அந்த முடிச்சில் காசுகள் இருக்கலாம். சாவிகள் தொங்கலாம். சில நேரம் நோட்டுக்களும் இருக்கலாம். அந்தச் சுருக்குப்பையும் இந்த முந்தானை முடிச்சும் மூதாட்டிக்குப் பெடடகங்களாகத் தோன்றுகின்றன. சுருக்குப்பை காணாமல் போனாலோ, முந்தானை முடிச்சவிழ்க்கப்பட்டிருந்தாலோ மூதாட்டியின் உயிர் போய்விடும். அவற்றுக்குள் இருக்கும் பொருள்கள் அவருடைய உயிர். எனவே அந்தப் பெட்டகங்களில்தாம் அவள் உயிர் இருக்கிறது. அவள் உயிரை அந்தப் பெட்டகங்கள் பூட்டிவைத்துக் கொண்டிருக்கிறது.

    கீழடியாய் மாறிய சுருக்குப்பை

    படைப்பாளனுக்குச் சமகாலச் சமுதாயப் பார்வையும் சமுதாயச் சிந்தனையும் வரலாற்று நோக்கும் இயல்பாகவே இருத்தல் வேண்டும். வரலாற்று நோக்கில் இன்று இந்தியாவை அசைத்துக் கொண்டிருப்பது தமிழ்நாடடில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிகள். கீழடி முதலிய இடங்களில் கிடைக்கும் சில பொருள்கள் ஒரு பழைமையான நாகரிகத்தை வரலாற்றின் முன் கிடத்திக்கொண்டிருக்கின்றன. மூதாட்டியின் சுருக்குப்பை இறந்த காலப் பெட்டகம். இறந்த காலச் செல்வங்களைத் தன்னுள் மறைத்துக் கொண்டிருக்கும் கீழடியாய்த் தோன்றுகிறது கவிஞனுக்கு.

    “உடைமைகளின் கீழடிகள்!”

    மூதாட்டியின் சுருக்குப்பையில் கிடக்கும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு கீழடி. அதனால்தான் கவிஞன் கீழடிகள் எனப் பன்மையில் கூறுகிறான்.

    “தோண்டத் தோண்ட
    உயிர்பெற்றே எழுந்துவரும் இறந்த காலம்! “

    இந்தக் கவிதையைக் காலத்துக்கும் தூக்கி நிறுத்தும் தொடர் இது. மிக இலாவகமாகக் கவிஞர் கையாண்டிருக்கிறார். வேறுவகையாகச் சொன்னால் அவரையும் அறியாமல் வந்து விழுந்த சொற்கள்.

    பொதுவாகத் தோண்டுதல் என்ற சொல்லை இரண்டு இடங்களில்தாம் பயன்படுத்துவார்கள். ஒன்று ஏதாவது ஒன்றினைப் புதைக்கத் தோண்டுவார்கள். இரண்டு ஏதாவது ஒன்றினைக் கண்டெடுக்கத் தோண்டுவார்கள்.  தெளிவாகச் சொன்னால் பிணத்தைப் புதைக்கத் தோண்டுவார்கள். புதையல் இருக்குமிடத்தைக் கண்டறியத் தோண்டுவார்கள். கீழடியில் இறந்து போன எச்சங்களைத் தோண்டுகிறார்கள். ஆனால் அங்கே கிடைக்கும் பொருள்கள் உயிருள்ள ஒரு நாகரிகத்தின் அடையாளங்கள். என்ன அதிசயம்? இறந்த காலத்தை அறியத் தோண்டுகிறார்கள். நிகழ்காலமல்லவா கிடடுகிறது? இறந்து போய்த்தான் அவை கிடந்தன. தோண்டுவதனாலே உயிர் பெற்றனவாம். :தோண்டத் தோண்ட உயிர்பெற்று எழுந்தது”! நிலச்சரிவில் சிக்கி மாண்டுபோயிருப்பான் என நம்பப்பட்ட ஒருவன் மண்ணை அப்புறப்படுத்தும்போது உயிரோடு வந்தால் என்ன அனுபவம் கிட்டுமோ அந்த அனுபவமல்லவா நமக்கு? கவிதை இப்படி இருக்க வேண்டும்!

    “படைவரினும் இதுவொன்றே வாளென் றென்னும்
    பாசாங்கே இல்லாத நம்பிக் கைகள்! “

    எல்லாராலும் கைவிடப்பட்ட மூதாட்டி எதிர்காலத்தின் திசையறிய முடியுமா என்ன? நடப்பது நடக்கட்டும் என்னும் நம்பிக்கையோடு நாள்களைக்; கடத்துகிறாள். கடத்துகின்ற நாள்களுக்கு அவளுக்குத் துணையாக வருவது அந்தச் சுருக்குப்பையாம். வாழ்க்கைக் கவலைகளில் அவள் விட்ட பெருமூச்சுக்கள் கடற்கரைக்குப் போயிருந்தால் கப்பல்கள் கவிழ்ந்திருக்கும்!. அந்த வாழ்க்கைக் கவலைகள் எல்லாம் எதிர்நாட்டுப் படைகளாம். இவள் தனனந்தனியே அவற்றை எதர்க்கிறாளாம். கையில் ஆயுதம் வேண்டுமல்லவா? அந்த ஆயுதம்தான் ;இந்தச் சுருக்குப்பையாம்! அதனுள் பள்ளிகொண்டிருக்கும் பொக்கிஷங்களாம். அவை தருகின்ற நம்பிக்கைகளாம்! அச்சுறுத்தும் எதிர்காலமாகிய எதிரியைத் தனியொருத்தியாகக் களம் காண்பதற்கு அவளுக்குத் துணையாக இருப்பது இந்தச் சுருக்குப்பை தரும் நம்பிக்கையாம்! எவ்வளவு அழகான படிமம்?

    “கடந்தகால ஜீபூம்பா பூதம் தன்னைக்
    கட்டிவைத்த சிறைக்கூடம் !

    ஜீபூம்பா என்பது கடந்த கால நினைவுகளுக்கான குறியீடு. அந்நினைவுகள் நேர்முகமாகவோ எதிர்மறையாகவோ மகிழ்ச்சியைத் தருவனவாகவோ வருத்தத்தைத் தருவனவாகவோ அமைந்திருக்கலாம். அத்தனையையும் பூட்டி அந்தப் பைக்குள் கட்டி வைத்திருக்கிறாளாம். மூதாட்டியின் வாழ்நாள் டைரியே அதுதான் என்றும் புரிந்து கொள்ளலாம்.

    அங்கத்தின் உறுப்பில் ஒன்று

    வாழ்க்கையின் அவலப் பகுதிகளைப் பாடுகிறபோது அழகியலும் கற்பனையும் சற்று தூக்கலாக அமையும் அமையவேண்டும். . சிலப்பதிகார மதுரைக்காண்டத்தின் இறுதிப்பகுதியும் கம்பராமாயணத்தின் யுத்தகாண்டமும் இந்தக் கருத்தினை உறுதி செய்யும். விரிப்பின் பெருகும். முதுமை வாழ்க்கையின் இறுதிப் பருவம். சுருக்குப்பை அதன் அடையாளம். இவை அவலப்பகுதிகள். அவலக்கூறுகள். இவற்றைப் பாடுகிறபோது அங்கே கற்பனையும் அழகியலும் கவிஞனுக்குத் தெரியாமலேயே வந்து உட்கார்ந்து கொள்ளும்  அது நல்ல கவிதையாக இருந்தால்!

    கயிறவிழ்க்கும் கைவிரலே கண்ணாய் மாறும்!
    கைநகத்தின் நுனிபுதையல் எடுத்து மீளும்!

    உலகத்தை உறறு நோக்கியிருக்கிறார் வசந்தராசன்! ‘கையறி மடமை’ என்பார்கள். சமையல் செய்யும் போது மற்றவர்களிடம் பேசிக்கொண்டே சமையற் பொருளுக்கான அளவைப் பார்க்காமலேயே எடுத்துப் போடுவதைப் பாரத்திருக்கலாம். கண்ணின் துணையிலலாமலேயே கை செய்யும் பணி அது. ஓட்டுநர் கண் சாலையில் இருக்கும். அவருடைய கால்கள் பிரேக்கில் இருக்கும். அது தானாகச் செயல்படும். தட்டச்சு செய்வர்கள் திரையைத்தான் பார்ப்பார்கள். விசைப் பலகையை விரல்கள்தாம் பார்க்கும். பூக்கடடுகிற பெண்களைப பார்த்திருக்கலாம். விரல்கள தொடுக்கும். விழிகள் அலைபாயும். இவைபோலவேதான் மூதாட்டி சுருக்குப்பையின் திறப்புவிழா நடைபெறுகிறது. ‘கைவிரலே கயிறவிழ்க்கும்! விரல்கள் கண்ணாய் மாறும்! சுருக்குப்பையின் திறப்புவிழாவில் நேரில் கலந்து கொள்ளாதவர்கள இந்த வரியை அவ்வளவாகச சுவைக்க முடியாது.

    உயிரவிழ்த்து பத்திரமாய் அதனுள் பொத்தி
    வைத்ததுபோல் அடிக்கடியே திறந்து மூடும்!

    தேடிவைத்த செல்வங்கள் இருக்கின்ற சுருக்குப்பை அது!. மயிலிறகு குடடிப் போடுகிறதா என்று பார்க்கும் குழந்தைகள் போல அந்தப் பையை அடிக்கடி திறந்து மூடுதற்குக் கவிஞன் ஒரு காரணத்தைச் சொல்கிறான். அவள் உயிர் அதற்குள் இருக்கிறதாம். பைக்குள் இருக்கிற உயிரைப் பாதுகாக்கிறாளாம் மூதாட்டி. உயிர் பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்ப்பதுபோல திறக்கிறாளாம். பாரக்கிறாளாம் மூடுகிறாளாம். தற்குறிப்பேற்ற அணியை விளக்கம் ஆசிரியப் பெருமக்களின் கவனத்திற்கு வரவேண்டிய வரிகள்.

    துயில்நடுவே கைதடவத் தானாய்ப் போகும்!
    துக்கமகிழ் வெல்லாமே அதனுள் வாழும்!

    தூக்கத்தில் கூட தன்னையறியாது தன்னருகில் தன் குழந்தை படுத்திருக்கிறதா என்று கைதடவி அறிந்து கொள்ளும் தாயைப் போலச் சுருக்குப்பையைத் தடவிக்கொண்டு உறங்குகிறாளாம் மூதாட்டி! இறந்தகாலத் துக்கமும் நிகழ்கால் மகிழ்ச்சியும் அந்தப் பைக்குள்ளே வாழுகிறதாம். மூதாட்டியின் துக்கத்தையும் மகிழ்ச்சியையும் சுருக்குப்பையின் புதையல்கள் அடையாளப்படுத்துகின்றனவாம். ‘துக்கமகிழ்வெலலாமே அதனுள் வாழும்!

    அயலல்ல அங்கத்தின் உறுப்பி லொன்று!
    அருங்காட்சி யகம்தோற்க வெல்லும் நின்று!
    என்னும் வரிகளில் சுருக்குப்பையின் உள்ளீட்டை அடிபபடையாகக் கொண்டு அதனை அருங்காட்சியகம் என்கிறார். ‘அருங்காட்சியகம் என்னும் சொல் ஏதோ மோனைக்காககப் போடப்பட்டதன்று. பொருள் பொதிந்த சொல். அருங்காட்சியகம் என்பது கழிந்தவைகளின் மண்டபம். பழைமைப் பெட்டகம். இன்று கரண்டவம் கிடையாது. வெற்றிலைச் சருகு கிடையாது. புகையிலைக் காம்பு கிடையாது. எட்டாக மடிக்கப்பட்ட நோட்டு கிடையாது. சிலலரைக் காசுகள் கிடையாது. ஊக்கு கிடையாது. பல்குச்சி கிடையாது. சுருக்குப் கிடையாது இவ்வளவு ஏன்? மூதாட்டிகளே கிடையாது. இருப்பார்களேயானால் அவர்கள முதியோர் இல்லத்தில் அல்லது காப்பகத்தில்! எனவேதான மேற்கண்டவற்றைப பார்க்க வேண்டுமென்றால் எங்கோ ஓர் மூதாட்டியிடம் தான் காணமுடியும். அதனால் அது அருங்காட்சியகம். கீழடிக்கு நாம் சென்றுதான் பார்க்க வேண்டும் கீழடி நம்மை நோக்கி வராது.

    பெருக்கலுக்கே கூட்டலெனும் குறுக்குப் பாதை
    போடுகிற கிழமுதுமை மாங்கல் யப்பை!

    என்னும் இரண்டு வரிகளும் முதல் விருத்தத்தில் இருந்தாலும் மாலை மாற்று என்பதுபோல இறுதி வரியாகவும் கொள்ளலாம். இங்கே ஒரு வித்தையைச் செய்து காட்டுகிறார் கவிஞர். கூட்டலின் சுருக்கம்தான் பெருக்கல். பெருக்கலின் சுருக்கம் கூட்டல் அன்று. ஆனால் பெருக்கலுக்கே கூட்டலெனும் குறுக்குப் பாதை போடுகிற கிழ முதுமை” என்கிறார்.  இளமை முதுமையாகும். ஆனால் முதுமை இளமையாகாது. சுறுசுறுப்பாகச ;செயல்பட்ட காலம் ஒன்று உண்டு. இன்று அது பின்னமாகி நிற்கிறது. சில நொடிகளில் திறக்க வேண்டிய சுருக்குப்பையைத் திறக்க இரண்டு நிமிடம் தேவைப்படுகிறது. ஒரு வெற்றிலைச் சருகின் காய்ந்து போன காம்பினைக் கிள்ள சில நிமிடம் தேவைப்படுகிறது. கரண்டவத்தைத் திறந்து ஆட்காட்டி விரலால் சுண்ணாம்பு தடவிக்கொள்ள சில நிமிடங்கள். இப்படி முதுமையில் ஒவ்வொரு நொடிச்செயலையும் நிமிடக்கணக்கில் நிகழ்த்துகிறார் மூதாட்டி. இங்கே பெருக்கல் கூட்டலாகிறது. நிமிடங்கள் நொடிகளாவது இளமை. நொடிகள் நிமிடங்களாவது முதுமை. அதனால்தான் பெருக்கலின் சுருக்கம் கூட்டல் ;என்று முரணமைத்துக் காட்டுகிறார் கவிஞர்!. அழகான ஆழமான சிந்தனையல்லவா? எண்ணிப் பார்க்கத் தூண்டும் கற்பனையல்ல்வா? என்னதான் திறனாய்வு என்றாலும் கத்தியால் அறுக்கப்பட்ட மாம்பழத் துண்டைவிட பற்களால் கடித்துத் தின்னும் மாம்பழத்தின சுவையே தனி. வாசகர்கள் சுருக்குப்பை பற்றிய இந்த நான்கு விருத்தங்களையும் படித்து உணர வேண்டும். உணர்ந்து படிக்க வேண்டும். உள்ளத்தில் இருத்த வேண்டும். கவிதையைச் சுவைப்பது பசு அசைபோடுவதைப் போல!

    சுருக்குப்பை வாய்திறந்தால் வேர்வை வாசம்!
    சுண்டுகிற ‘நாணயங்கள்’ நின்று பேசும்!
    கருக்கல்வாய்த் தாம்பூலப் புதையல் கொஞ்சம்
    இருட்டுக்கடை அல்வாபோல் இனிக்கும் நெஞ்சம்!
    சுருக்கிவைத்த செலவினத்தின் எச்சம் மிஞ்சும்!
    சுற்றளவில் இடைசிறுத்து இடுப்பில் தொங்கும்!
    பெருக்கலுக்கே கூட்டலெனும் குறுக்குப் பாதை
    போடுகிற கிழமுதுமை மாங்கல் யப்பை!

    பல்குச்சி வெற்றிலைப்பாக் குச்சுண் ணாம்பு
    புகையிலையின் சிறுதுண்டு பழைய ஊக்கு
    பல்திறத்துப் பைநிறைந்து வீழ்ந்து விட்ட
    பழங்கலம்போல் உள்ளிருப்பு! அடகுச் சீட்டாய்
    கல்கம்மல் மாறியதன் அடையா ளங்கள்!
    கயிறணிந்து பதுங்கியுள வீட்டுச் சாவி!
    மெல்லவிழ்ந்து சுவாசிக்கும் சுருக்குப் பைகள்
    மூவுலகை முடக்குகின்ற திறவு கோல்கள்!

    முடங்கினாலும் தன்னுயிரைப் பூட்டி வைக்கும்
    முந்தானை முடிச்சிடுப்புப் பெட்ட கங்கள்!
    உடைமைகளின் கீழடிகள்!தோண்டத் தோண்ட
    உயிர்பெற்றே எழுந்துவரும் இறந்த காலம்!
    படைவரினும் இதுவொன்றே வாளென் றென்னும்
    பாசாங்கே இல்லாத நம்பிக் கைகள்!
    கடந்தகால ஜீபூம்பா பூதம் தன்னைக்
    கட்டிவைத்த சிறைக்கூடம் ! சுருக்குப் பைகள்!

    கயிறவிழ்க்கும் கைவிரலே கண்ணாய் மாறும்!
    கைநகத்தின் நுனிபுதையல் எடுத்து மீளும்!
    உயிரவிழ்த்து பத்திரமாய் அதனுள் பொத்தி
    வைத்ததுபோல் அடிக்கடியே திறந்து மூடும்!
    துயில்நடுவே கைதடவத் தானாய்ப் போகும்!
    துக்கமகிழ்ச்சி எல்லாமே அதனுள் வாழும்!
    அயலல்ல அங்கத்தின் உறுப்பி லொன்று!
    அருங்காட்சி யகம்தோற்க வெல்லும் நின்று!

    நிறைவுரை

    பாடுபொருளின் தேர்ச்சியும் ஒரு கவிதை வெற்றி பெறுவதற்கான காரணிகளில் ஒன்று என்பதை இந்தக் கவிதை உறுதி செய்திருக்கிறது. அகம் புறம் என்னும் பழந்தமிழ்க் கவிதைப் பாகுபாட்டிலும் முதுமை ஒரு பாடுபொருளாக இருக்கவில்லை. நீதிகளை மையமாக வைத்த காப்பியங்களிலும் முதியவர்கள் பாத்திரங்களாக வந்து போனார்களே தவிர, முதுமையின் அவலம் பாடுபொருளாகவில்லை. இடைக்காலத்திற்குப் பிறகுதான் பருவநிலைகள் பாடுபொருளாக்கப்பட்டன. நல்குரவு என்று ஒற்றைச் சொல்லில் வள்ளுவர் பாடினார். இளமையின் பரப்பினைப் பாடிய அளவுக்கு முதுமையின் சுருக்கங்களைத் தமிழ்க்கவிதையுலகம்  பாடவில்லை.  சிலம்பு, குண்டலகேசி, வளையாபதி, மணிமேகலை, சிந்தாமணி என்று மங்கையின் உறுப்பணிகளைப் பெயர்களாக வைத்த புலவர் பெருமக்கள் பார்வையில் சுருக்குப்பை படவேயில்லை! அவர்களுக்கு இடுப்பின் மேகலை தெரிந்தது. சுருக்குப்பை தெரியவில்லை. அவலம் என்பது இந்தச் சுருக்குப்பையின் படிமம்.  “கிழ முதுமையின் மாங்கல்யப் பை’ என்னும் படிமத்தில் சுருக்குப்பையை மணமகளாகவும் கயிற்றை மாங்கல்யமாகவும் காடடியிருக்கும் கவித்திறன் எண்ணி வியக்கத்தக்கது. கற்பனை, உணர்ச்சி, கருத்து என்னும் கவிதைக் கூறுகள் நான்கனுள் எண்சீர் விருத்தம் என்பது மிகச் சாதாரணமான வடிவம். ஏனைய மூன்று கூறுகளிலும் முழுமை பெற்று நிற்கும் இந்தக் கவிதையில் கவிஞனின் கூரிய நோக்கும் புதுமை பாடும் போக்கும் சமுதாய தாக்குறவும் கலந்த நிலையில் ஓர் அழகியல் தன்னையே ஓவியமாகத் தீட்டி வைத்திருப்பதைக் காணலாம்.

    (தொடரும்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(502)

    குறளின் கதிர்களாய்…(502)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(502)

    செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
    காணிற் கிழக்காந் தலை.

    -திருக்குறள் -488(காலமறிதல்)

    புதுக் கவிதையில்…

    வெல்ல நினைக்கும் வேந்தர்
    தம் பகைவர்
    அழியும் காலம் வரும்வரை
    அவரைக் கண்டால்
    அவரிடம்
    பணிவுடையவராய் செயல்படவேண்டும்,
    காலம் வந்தால்
    அப்பகைவர்
    கட்டாயம் அழிவார்…!

    குறும்பாவில்…

    வெல்ல விரும்பும் அரசர்
    பகைவர்முன் பணிக, காலம் வரும்போது
    நிச்சயமாய்ப் பகைவர் அழிவார்…!

    மரபுக் கவிதையில்…

    வெல்ல விரும்பும் வேந்தரவர்
    வெறுக்கும் பகைவர் அழிந்தொழியும்
    நல்ல காலம் வரும்வரையில்
    நயமாய்ப் பணிக அவர்முன்னே,
    வெல்ல இதுவும் வழிமுறைதான்
    வெற்றி எளிதில் பெற்றிடவே,
    பொல்லாப் பகைவர் அழிந்திடுவார்
    பொருந்திக் காலம் வருகையிலே…!

    லிமரைக்கூ…

    வெல்ல விரும்பும் மன்னர்
    பகைவர்முன் பணிக, காலம் வரும்போதவர்
    நிச்சயமாய் அழிவர் பின்னர்…!

    கிராமிய பாணியில்…

    செயல்படணும் செயல்படணும்
    நல்லா அறிஞ்சி செயல்படணும்,
    செயல்படுறதுக்கு முன்னால
    சரியான காலமறிஞ்சி செயல்படணும்..

    பகயாளிய செயிக்கணுண்ணா
    அவனுக்கு
    அழிவு காலம் வாறவரைக்கும்
    ராசா அவங்கிட்ட
    கொஞ்சம்
    பணிவாத்தான் போகணும்,
    காலம் வரும்போது அவனுக்குக்
    கட்டாயம்
    அழிவு வந்திடும்..

    அதால
    செயல்படணும் செயல்படணும்
    நல்லா அறிஞ்சி செயல்படணும்,
    செயல்படுறதுக்கு முன்னால
    சரியான காலமறிஞ்சி செயல்படணும்…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(501)

    குறளின் கதிர்களாய்…(501)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(501)

    எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
    கொள்ளாத கொள்ளா துலகு.

    -திருக்குறள் -470(தெரிந்து செயல்வகை)

    புதுக் கவிதையில்…

    தமது செயல் நிறைவேறிட
    அரசாள்வோர்
    தமது தகுதிக்குப் பொருந்தாதவற்றைச்
    செய்தால் அதனை
    உலகோர் மதியார்,
    அதனால்
    அவர் இகழாத வழிகளை
    எண்ணிச் செயல்படவேண்டும்…!

    குறும்பாவில்…

    தம்தகுதிக்குப் பொருந்தாதவற்றை அரசர்
    செய்தால் உலகோர் இகழ்வர், அதனாலவர்
    இகழா வகையில் செயல்படவேண்டும்…!

    மரபுக் கவிதையில்…

    மன்னர் தனது தகுதிக்கு
    மாறாய்ச் செயல்கள் செய்கின்ற
    தன்மை தன்னைப் பார்த்தாலே
    தாங்கா உலகோர் மதிக்காமல்
    அன்னார் செயலை இகழ்வாரே,
    அதனைக் கருத்தில் கொண்டேதான்
    என்றும் அவர்கள் இகழாமல்
    ஏற்றும் வகையில் செயல்வேண்டும்…!

    லிமரைக்கூ…

    தகுதிமறந்து செயல்படும் மன்னர்
    இகழப்படுவதால் தவறதைத் தவிர்த்துச் செயல்பட
    வேண்டும் மக்கள் முன்னர்…!

    கிராமிய பாணியில்…

    செயல்படு செயல்படு
    நல்லாத் தெரிஞ்சி
    நல்லமொறயில செயல்படு..

    நாடளுற ராசா
    தனக்க தகுதிய மறந்து
    தாழ்வான செயல்களச் செய்தா
    மக்கள் யாருமே
    மதிக்கமாட்டாங்க,
    அதுனால
    மக்கள் எகழ்ந்து பேசாத வகதெரிஞ்சி
    மன்னரு செயல்படணும்..

    அதால
    செயல்படு செயல்படு
    நல்லாத் தெரிஞ்சி
    நல்லமொறயில செயல்படு…!

    Share
  • ஆடி மாதம் அமங்கலம் அல்ல; அம்மனின் மாதம்

    ஆடி மாதம் அமங்கலம் அல்ல; அம்மனின் மாதம்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா                            
    மெல்பேண். ஆஸ்திரேலியா

    நம்பிக்கையின் அடிப்படையில்தான் நாம் நாளும் பொழுதும் யாவற்றையும் செய்து வருகின்றோம். சமயத்தில் நம்பிக்கை. தத்துவத்தில் நம்பிக்கை. புராண , இதிகாசங்களில் நம்பிக்கை. முன்னோர் மொழிந்த மொழிகளில் நம்பிக்கை. கற்றறிந்தவர் எழுதும் நூல்களில் நம்பிக்கை. அவர்கள் ஆற்றுகின்ற உரைகளில் நம்பிக்கை . இவற்றை எல்லாம் விட சமுகத்தில் நிலவுகின்ற நம்பிக்கை. இப்படியாக நமது வாழ்வில் நம்பி க்கை எனும் பொழுது பல பரிமாணங்களில் அமைந்திருப்பதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இதன் அடிப்படையில் பன்னிரண்டு மாதங்கள் பற்றிய நம்பிக்கை எப்படி இருக்கிறது என்பதை நோக்குவதும் மிகவும் முக்கியமானதாய் இருக்கிறது. 

    ன்னிரண்டு மாதங்களும் வருகின்றன. போகின்றன. சில மாதங்களைச் சிறப்பென்றும் சிலவற்றை ஒதுக்கிப் பார்ப்பதும் இயல்பாகிவிட்டது. ஆனால் அப்படி ஒதுக்க வேண்டியது  – மனத்தில் எழுகின்ற ஒரு வித மயக்கம் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. எல்லா மாதங்களும் ஏதோ ஒரு விதத்தில் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு தான் வருகின்றன. மார்கழியைப் பீடை பிடித்த மாதம் என்கிறோம். புரட்டாசியையும் ஒரு பக்கம் தள்ளியே வைக்கிறோம். ஆடியை மங்கலம் அற்ற மாதம் என்கிறோம். பங்குனியைசித்திரையைதையைஆவணியைக் கொண்டாடி வரவேற்கிறோம். இப்படி நோக்குவது எங்களிடம் இயல்பாகிவிட்ட நிலையில், மங்கலம் இல்லா மாதமாக எடுத்துக்கொள்ளும் ஆடி எங்களை நாடி வருகிறது!

    ஆடி என்றவுடன் – ஆடிச் செவ்வாய்ஆடி வெள்ளிஆடிப்பூரம்ஆடிக்கார்த்திகைஆடித்தபசுஆடிப் பெருக்குஆடி அமாவாசைஆடி பெளர்ணமி என்று இறை வழிபாட்டுடன் இணைந்ததாக ஆடி மாதம் முழுவதும் அமைந்திருப்பதை நாமனைவரும் மனமிருத்த வேண்டியது அவசியம். ஆடி மாதத்தை அம்மனின் மாதம் என்பதையும் அகமிருத்தல் மிகவும் அவசியமேயாகும். அப்படி இருக்க ஆடியை நாடாமல் ஒதுக்கிப் பார்ப்பது முறையா?

    மார்கழியில் திருவெம்பாவை வருகிறது. திருப்பாவையும் மணிவாசகரின் திருவெம்பாவையும் மார்கழியில் கோவில்களில் பக்தி சிரத்தையுடன் பாடப்படுகின்றன. வைணவர்களும் சைவர்களும் கொண்டாடும் மாதமாய் மார்கழி இருக்கிறது. மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணனே சொல்லுவதையும்  கருத்திருத்த வேண்டும். புரட்டாசியில் நவராத்திரி வருகிறது. கலைகளைப் போற்றும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சமயமும் கலைகளும் சங்கமிக்கும் மாதமாய்ப் புரட்டாசி விளங்குகிறது. ஆடிபுரட்டாசிமார்கழி இறை வழிபாட்டுக்கு உரிய மாதங்களாகும். அப்படி என்றால் மற்றைய மாதங்கள் இறை வழிபாட்டுக்கு ஏற்றவை அல்லவா என்று வினா எழுகிறதல்லவா? ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் மங்கலமான நிகழ்வுகளான – வீடு குடிபுகுதல்திருமணம்திருமண நிச்சயார்த்தம்காது குத்தல்எதையும் செய்வதில்லை. காரணம் – இம்மாதங்கள் தேவர்களுக்கு உரிய மாதங்கள். மனிதர்களுக்கும் அவர்களின் இன்பங்களுக்கும் உரிய மாதங்கள் அல்ல என்பதுதான் காரணம்.

    சூரியனை அடிப்படையாகக் கொண்ட மாதங்கள்தான் நம்முடைய தமிழ் மாதங்கள். கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம்தான் ஆடி மாதம். ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரையான ஆறு மாதங்களும் சூரியன் – தன்னுடைய வடக்கு நோக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு தெற்கு நோக்கிப் பயணிக்கிறார்.தெற்கு என்பது பித்ருக்களுக்கு உரிய திசையாகும். இதனால் இம்மாதத்தைப் பித்ருக்களுக்கு வழிபாடாற்றும் மாதமாயும் கொள்ளும் நிலை ஏற்பட்டது.

    மனிதர்களுக்கு ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். ஆடி தொடங்கி மார்கழி வரையான ஆறு மாதங்களும் சூரியனின் தெற்கு நோக்கிய பயணமாகும். தை தொடக்கம் ஆடி வரையான ஆறு மாதங்களும் சூரியனின் வடக்கு நோக்கிய பயணமாகும். வடக்கு நோக்கிய பயணக் காலத்தில் வெப்பம் அதிகமாய் இருக்கும். தெற்கு நோக்கிச் சூரியன் பயணிக்கும் பொழுது வெப்பம் தணிந்து – காற்றுமழைபனி என்னும் காலநிலை வந்து நிற்கும். தெற்கு நோக்கிய சூரியனின் பயணக் காலம் தேவர்களுக்கு இராக் காலமாகும். அதாவது ஆடி என்பது தேவர்களின் இராக்காலத் தொடக்கமாகும். மார்கழி என்பது தேவர்களுக்கு விடியல் காலமாகக் கருதப்படுகிறது. ஆடி, இரவின் தொடக்கம். மார்கழி, விடியலின் தொடக்கம்.

    ஆடியில் சூரியன் கடகராசியில் சஞ்சரிக்கிறார் என்று பார்த்தோம்.கடகராசி என்பது சந்திரனின் ஆட்சி வீடாகும்.சூரியன் சிவனின் அம்சமாகும். அந்தச் சூரியன் சக்தியின் அம்சமான சந்திரனில் சஞ்சாரம் செய்யும் நிலை இக்காலத்தில் அமைகிறது. இதனால் சந்திரனின் ஆளுமை அதிகரிக்கிறது.இப்படி ஆவதால் ஆடி மாதம் என்பது சக்தியின் மாதமாய் விளங்குகின்றது. அக்காரணத்தால்தான் அம்மனின் மாதம் – ஆடி என்று ஆகிவிட்டது. அம்மனுக்கு உகந்த விழாக்கள் இம்மாதத்தில் முக்கியத்துவம் பெறுவது இதனால் தானோ  என்று எண்ணிட  வைக்கிறது.

    அறிவியல் வழியில் சிந்திப்பதும் உகந்ததாகும். ஆடி மாதம் காற்றுக் காலமாகும். காற்றினால்  பரவும் நோய்கள்  அதிகரிக்கும் காலமாகவும் இக்காலம் அமைகிறது. இதனால்வேப்பிலைமஞ்சள் என்பவற்றை வழிபாடு என்ற வகையில் அம்மனுக்கு உரியதாக்கி நிற்பதும் நோக்கத்தக்கது. அத்துடன் கூழ் காய்ச்சுவதும்அம்மனுக்கு வைத்து வழிபடுவதும் கூட அறிவியலை ஆன்மீகத்துடன் இணைக்கும் நிலையினையே காட்டுகிறது அல்லவா !

    ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கமே அமைகிறது என்பதும் நோக்கத்தக்கது. கிராமங்கள் தோறும் அம்மனுக்குரிய விழாக்கள் நடைபெறுவதும் மனமிருத்த வேண்டியதே.அம்மனைப் பல நிலைகளில் வழிபடுவதும் நோக்கத்தக்கது. காவல் தெய்வமாய்க் கருதி, போற்றி வழிபாடுகளில் ஈடுபடுவதையும் ஆடியில் காணக்கூடியதாய் இருக்கிறது.

    ஆடியில் ஆறுகளில் நீர்ப்பெருக்கு வருவதை அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றார்கள். இதனையே ஆடிப்பெருக்கு என்று அகமகிழ அழைக்கின்றார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்களின் தாலிக் கயிற்றை மாற்றுவதும்அம்மனுக்கு படையில் வைத்து ஆராதிப்பதும் இவ்வேளை இடம் பெறுகிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    பெண்கள் விரும்பி அனுட்டிக்கும் விரதமான வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்துக்கு உரியதாய் இருந்தாலும்பெரும்பாலான சமயங்களில் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் வருகிறது. ஆடி வெள்ளியில் மாரியம்மனுக்கு தேர்த் திருவிழாதெப்பத் திருவிழாதீமிதிப்பு எல்லாம் நடக்கும். அருள் மாரியாய்  கருமாரி விளங்கிறாள் அல்லவா?  சின்னக் கோவில்கள்பெரிய கோவில்கள் எல்லாம் இந்த விழாக்கள் நடைபெறுவதும் நோக்கத்தக்கது.

    ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசையும் தையில் வருகின்ற அமாவாசையும் கடலில் நீராட உகந்த தினங்களாகும். தஷிணாயன புண்ணிய காலம்உத்தராயண புண்ணிய காலம் என்று இக்காலங்களைச் சிறப்பித்துச் சொல்லுவார்கள்.

    இறைவனை அடைவதற்கு அன்னை பராசக்தி தவம் செய்ததும் ஆடி மாதத்தில்தான். சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் நாச்சியார் ஆடியில்தான் அவதரிக்கின்றார். சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் அழைத்துக் கொண்டதும் ஆடியில்தான் என்பதும் அகமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    தையினைப் பொங்கல் திருநாளாய்அறுவடைத் திருநாளாய் கொண்டாடுவதற்கு வித்திடப்படுவதே ஆடியில்தான். “ஆடிப்பட்டம் தேடி விதை” என்னும் பழமொழியே ஆடியில் விதைத்தால்தான் தையில் அறுவடை செய்ய முடியும் என்பதைக் காட்டி நிற்கிறதல்லவா ?

    ஆடிச் செவ்வாயினை மையமாய் கொண்டு “ஆடிச்செவ்வாய் தேடிக் குளி – அரைச்ச மஞ்சளைப் பூசிக் குளி” என்னும் முதுமொழி பழக்கத்தில் இருக்கிறது.

    ஆடி தெய்வீக மாதம். அம்மனின் மாதம்என்றெல்லாம் போற்றப்பட்டாலும் புதுமணத் தம்பதிகளுக்கு மட்டும் வெறுப்பான மாதமாய் இருக்கிறது. அவர்களுக்கு மட்டும் ஏன் வெறுப்பாய் இருக்கிறது என்பதையும் அறிவதும் அவசியம் அல்லவா ! மணமான தம்பதிகளைப் பிரித்து விடுவார்கள்.அதாவது பெண்ணைப் பிறந்த வீட்டு அனுப்பி விடுவார்களாம். சாஸ்திரம் என்று சொன்னாலும் – இங்கே எங்களின் முன்னோர்களின் நல்ல சிந்தனையும் கலந்தே இருக்கிறது. ஆடியில் கருவுற்றால் – பத்தாவது மாதமான சித்திரையில் பிரசவம் நடக்கும். சித்திரையில் புத்திரன் பிறந்தால் தந்தைக்கு நல்லதல்ல என்னும் கருத்து சாதாரணமாகச் சமூகத்தில் நிலவுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. சித்திரையில் கத்தரி வெயில் என்பதை அனைவரும் அறிவோம் .வெப்பம் கூடிய காலத்தில் பிரசவம் நடந்தால் கால நிலை காரணமாக, பிரசவிக்கும் பெண் பெரும் வேதனைக்கு ஆளாவாள். பிரசவ வேதனையுடன் வெயிலின் கொடுமையும் பெருவேதனையைத் தந்துவிடும் என்பதால் மணப்பெண்ணை, பிறந்த வீட்டுக்கு ஆடியில் அனுப்பிய எங்களின் முன்னோர்களின் சிந்தனையினைப் பாராட்டாமல் இருக்கத்தான் முடியுமா?

    ஆடி என்றவுடன் எங்கள் தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர் கட்டாயம் வந்து நிற்பார். தாத்தாவின் வரவையும் , அவரின் ஆடிப்பிறப்பு ஆனந்தமான பாடலையும் நினைவுக்குக் கொண்டு வருவதும் நாடிவரும் ஆடி அல்லவா ! 

    ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
    ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே!
    கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
    கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

    பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
    பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
    வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
    மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

    வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
    வேலூரில் சக்கரையுங்கலந்து,
    தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
    சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

    வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
    வெல்லக் கலவையை உள்ளே இட்டு
    பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
    பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

    பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
    போட்டு மாவுருண்டை பயறுமிட்டு
    மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவாள்
    மணக்க மணக்க வாயூறிடுமே

    குங்குமப் பொட்டிட்டு, பூமாலை சூடியே
    குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
    அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
    ஆடிப் படைப்பும் படைப்போமே

    வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
    வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
    அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
    ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

    வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
    மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
    கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
    கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

    நாடிவரும் ஆடி அமங்கலமான மாதம் அல்ல! அது தெய்வீக மாதம் ! கொழுக்கட்டையும் சாப்பிட்டு கூழும் குடித்து மகிழும் காலம். ஆடிப்பட்டம் விட்டு அம்மனைப் போற்றிக் கொண்டாடி, தோழர்களுடன் பாடி மகிழும் காலமாகும். 

    மெய்ஞ்ஞானமும், விஞ்ஞானமும் இணைந்து மேதினியில் சிறந்து விளங்குவதுதான் ஆடி மாதத்தின் சிறப்பு எனலாம். எங்கள் முன்னோர்கள் எதையும் தக்க காரண காரியத்தோடுதான் வகுத்தார்கள். அவர்களின் கணிப்பில் தவறுகளைக் கண்டுபிடிப்பது முறையானதல்ல. தற்காலத்தில் எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் பேசுவது என்பது பெரும் மேதாவித்தனம் ஆகியே விட்டது. ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது. சிறப்புகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதுதான் மிகவும் உகந்த பண்பாடாகும்.

    நம்பிக்கைகள்தான் வாழ்வின் ஆணிவேராகும். எமது முன்னோர் கொண்ட நம்பிக்கைகள், அதற்காக அவர்கள் வகுத்த அற வழிகள், ஆன்மீக வழிகள், அத்தனையும் எம்மை என்றுமே வழிநடத்திச் செல்வதற்கு அருந்துணையாக அமைகின்றன என்பதை அகமிருத்துவது அவசியம் அல்லவா!  

    Share
  • லண்டனில் கம்பன் விழா

    லண்டனில் கம்பன் விழா

    சக்தி சக்திதாசன்
    இங்கிலாந்து

    காரைக்குடியில் 1939ம் ஆண்டு ஏப்பிரல் மாதம்  2,3 ம் நாட்களில் கம்பனின் தமிழ்த்திறனைப் போற்றி சமுதாயத்துக்கு எடுத்துச் சொல்ல சா.கணேசன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதே காரைக்குடி கம்பன் கழகம்.

    கம்பனில் மோகம் கொண்ட அமரர்  சா.கணேசன் தமிழின் மீதும், தமிழின் முன்னோர்கள் மீதும் அளவிலா ஆர்வம் கொண்டவர்.

    இந்திய தேசிய காங்கிரஸ், பின்னர் சுதந்திரா கட்சி எனும் கட்சிகளில் இணைந்து இந்திய விடுதலைப் போரிலும் அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் முன்னேறத்துக்காக அரசியலில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் பின்னர் தமிழக மேலவை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

    கம்பன் கழகத்தை அமைத்து கம்பருக்காக திருநாள் எடுத்தவர் சா. கணேசன். அனைவருக்கும் “கம்பனடிப்பொடி” எனும் கெளரவப் பெயரால் அறியப்படுபவர்.

    காரைக்குடியில் தொடங்கப்பட்ட கம்பன் கழகம் இன்று தமிழகத்தின் பல பாகங்களிலும், சர்வதேச அளவில் தமிழர் செறிந்து வாழும் பல நாடுகளிலும் கிளைகள் பரப்பி கம்பனின் தமிழ்ரசக் கனிகளைத் தாங்கி நிற்கிறது.

    இலங்கையில் கம்பனடிப்பொடியின் நேரடி ஆசியுடன் உலகெங்கும் பறந்து கம்பனையும் தமிழையும் போற்றி வருகிறார் ஐயா இலங்கை ஜெயராஜ்.

    அந்த வழியில் இன்று தமிழர்கள் செறிந்து வாழும் ஐக்கிய இராச்சியத்தில் இலண்டன் மாநகரில் கோலாகலமாக கம்பன் கழக இலண்டன் கிளை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

    கம்பன் தமிழையும், தமிழிலக்கியத்தையும் கண்ணெனப் போற்றும் அன்பர்கள் ஒன்றிணைந்து யாம் பெற்ற இன்பம் பெறுக இங்கிலாந்து வாழ் தமிழர் என்பதற்காக இக்கம்பன் கழகத்தை தோற்றுவித்துள்ளார்கள்.

    இவ்வங்குரார்ப்பன விழாவிற்காக தாய்த்மிழ்ப் பின்புலங்களில் இருந்து பண்பட்ட பேச்சாளர்கள், தமிழறிஞர்கள் வந்திருந்தார்கள்.

    குறிப்பாக ” கம்பவாரிதி ” எனப் பெயர் பெற்ற திரு இலங்கை ஜெயராஜ்.

    தமிழகத்தில் புகழ் பெற்ற பட்டி மன்ற பேச்சாளர், இலக்கிய சொற்பொழிவாளர் திருமதி பாரதி பாஸ்கர்,

    தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளரும், ஆவணப்பட இயக்குனர், தயாரிப்பாளர் தமிழறிஞருமான திரு. பாரதி கிருஷ்ணகுமார்.

    இலங்கை தமிழ் மற்றும் சமயச் சொற்பொழிவாளர் தமிழருவி சிவக்குமார்.

    இலங்கையின் மற்றொரு சிறந்த இலக்கிய, சமயச் சொற்பொழிவாளர் முனைவர்  ஸ்ரீ பிரசாந்தன்.

    முன்னால் மலேசிய துணை அமைச்சரும், தமிழ் ஆர்வலருமான திரு டத்தோ சரவணன்.

    எனப் புகழ்பெற்ற பலரும் கலந்து கொண்ட இரண்டு நாட்கள் நிகழ்வு கடந்த ஜூலை 13,14ம் தேதிகளில் லண்டன் அல்பேர்ட்டன் சமூகக் கூட்டரங்கு மண்டபத்தில் மதியம் 3 மணிக்கு ஆரம்பித்து சுமார் இரவு 10 மணி வரை நடந்தது.

    பட்டிமன்றம் , உரையரங்கம், நாட்டியநாடகம் எனப்பல நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

    துரதிர்ஷ்டவசமாக பல மாதங்களுக்கு முன்னராகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்ததால் முதலாம் நாள் அங்குரார்ப்பன நிகழ்வில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.

    இரண்டாம்நாள் நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு நானும் எனது மனைவியும் நண்பர் ஒருவருடன் மூன்று மணிக்கு முன்னதாகவே மணடபத்தை அடைந்து விட்டோம்.

    மண்டப ஒழுங்கு மிக நேர்த்தியாகவே அமைக்கப்பட்டிருந்தது.

    வாசலிலேயே தமிழ்க் கலாச்சாரப் பிரகாரம் மங்கக விளக்கின் ஒளியுடன் வரவேற்கக் காத்திருந்தார்கள்.

    கையில் லண்டன் கம்பன் கழக  விழா மலர் கையளிப்புடன் மண்டபத்தினில் நுழைந்தோம்.

    மண்டபம் நிறைந்து வழிந்தது அதிர்ஷ்டவசமாக மண்டபத்தின் பின் இருக்கைகளில் சில எமக்குக் கை கொடுத்தன.

    மண்பத்தினுள் இருக்கையில் அமர்ந்திருக்கும் போது அங்கேருக்கும் ஓரிரண்டு இருக்கைகளில் யாராவது இருக்கிறார்களா ? என்று விழா அமைப்பாளர்களில் ஒருவர் வந்து வினவி புதிதாக வருபவர்களை உட்கார வைத்தது மிகவும் பாராட்டப்பட வேண்டியது.

    இருக்கைகள் மண்டபத்தின் உள்ளே நிரம்பியதால் வெளியே வரவேற்புகூடத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சியின் முன்னால் ஒரு ஐம்பது இருக்கைகள் போடப்பட்டிருந்தது.

    நிகழ்ச்சிகள் நேரலையாக அத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது.

    இலவசமாக விருந்தினர்க்கு தேநீர் கூடத்தில் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

    இரண்டாம் நாள் நிகழ்வின் ஆரம்பம் அழகாகத் தொகுப்பாளரினால் விவரிக்கப்பட்டது.

    மங்கல விளக்கேற்றலையும் வரவேற்புரையையும்,தகைமை உரையையும் அடுத்து இங்கிலாந்திலே பிறந்து இங்கு பல்கலைக்கழகத்தில் புகுமுக மாணவர்களாக இருக்கும் ஒரு யுவனும், ஒரு யுவதியும் தமிழில் சிந்தனையரங்கத்தை ஆரம்பித்தார்கள்.

    அது பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமாரின் முன்னிலையில் நடந்தது.

    மிகவும் அருமையாக கம்ப இராமாயணத்தைப் பற்றி அவ்விளைஞனும், வளரும் தலைமுறை மத்தியில் தமிழின் வளர்ச்சி பற்றிய கருத்துரையை அந்த இளம் மாணவியும் உரை நிகழ்த்தினார்கள்.

    அதைத் தொடர்ந்து பேசிய பாரதி கிருஷ்ணகுமார். இளைய பேச்சாளர்களின் திறமையை வெகுவாக பாராட்டி தனக்கெயுரிய நகைச்சுவை கலந்த பேச்சுடன் அரங்கை மகிழ்ச்சியிலாழ்த்தினார்.

    தொடர்ந்த  இளம் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்ட இராமாயண நாட்டிய நாடகம் செவிகளுக்கும், கண்களுக்கும் விருந்தாக அமைந்தது.

    முழு இராமாயணத்தின் சாரத்தையே வெறும் ஒரு மணி நேரத்துக்குள் அதன் மையக் கருத்துக் குன்றாமல் அச்சிறு நடிகர்கள் நிகழ்த்தியமை அரங்கத்தையே மகிழ்வான வியப்புக்குள் ஆழ்த்தியது.

    இடைவெளியின் போது தமிழ் இலக்கிய நயத்தைக் குறிப்பாக கம்பனின் நயத்தை விருந்தாகத் தந்த அமைப்பினர் மிகவும் நியாயமான விலையில் சிற்றுண்டிகளை அளித்து வாய்க்கும் சுவையளித்தார்கள்.

    இடைவேகைக்கு சற்று முன்னதாக மக்கள் பணிக்காகச் சேவையாற்றுபவர்களில் தெரிவு செய்யப்பட்ட சிலர் மாண்பளித்துக் கெகரவிக்கப்பட்டார்கள்.

    இடைவேளையைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த பட்டிமன்றம் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

    தலைப்பு கம்பைராமயணத்தின் வீரம் செறிந்த நிலம் இராமனின் அயோத்தியா ? அன்றி இராவணனின் இலங்கையா ? என்பதுவே அயோத்தியே என்று தமிழருவி சிவக்குமார், பாரதி கிருஷ்ணகுமார், ஆகியோர் வாதிட இலங்கையே என பேச்சாளர் ஸ்ரீ பிரசாந்தன், திருமதி பாரதி பாஸ்கர் ஆகியோர் வாதிட்டனர்.

    மிக நீண்ட ஆய்வுக்குப் பின்னர் அயோத்திதான் வீரம் செறிந்த நிலம் என்று நடுவர் கம்பவாரிதி தீர்ப்பளித்தார்.

    சிறப்புரை மாண்புமிகு முன்னாள் மலேசிய துணையமைச்சர் டத்தோ சரவணன் அவர்களால் வழங்கபட்டது.

    அருமையான நிகழ்வுகளுடன் இனிதே முடிந்த விழாவின் இறுதியில் அனைவருக்கும் அருமையான சாத்வீக விருந்தளித்து விடைதனுப்பி வைத்தார்கள்.

    இவ்விழாவில் நீண்ட நாட்களுக்குப் பின்னால் பல தமிழ் இலக்கிய ஆளுமைகள், இலக்கிய நேசர்கள் எனப் பகரச் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது எனது பாக்கியமே !

    எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்குப் பின்னாலும் பல காரணங்களுக்காகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மனங்களில் கம்பனின் ஆளுமையும், அதனுடன் கலந்த இலக்கிய நேசமும் எத்தகைய ஆழமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது.

    தமிழை நேசிப்பவன், தமிழை வாசிப்பவன், தமிழை யாசிப்பவன் எனும் ஒரு சாதாரண பாமர ரசிகனின் உள்ளக் கிடக்கையை வெளியிட வேண்டியது எனது கடமை என எண்ணுகிறேன்.

    விழா முடிந்த பின்னால் விழா அமைப்பாளர்கள் ஒருவருடன் பேசும் சந்தர்ப்பம் கிட்டியது.

    இலண்டனில் அதுவும் புலம்பெயர் சமூகத்தின் மத்தியில் ஒரு சாதாரண பிறந்தநாள் விழாவிற்கே ஏற்படும் செலவினைப் பற்றி அறிந்தவன்.

    இத்தகைய அளவில் இலக்கிய விழா ஒன்றை அமைப்பதில் உள்ளப் பொருளாதார, நிர்வாகச் சிக்கல்கள் உணரக்கூடியதே.

    இவ்விழாவிற்கான செலவினில் பல நல்ல உள்ளங்கள் விழா அமைப்புக்குழுவிற்கு உதவியதை அவர்களே பிரசுரத்தின் மூலம் தெரியப்படுத்தி உள்ளார்கள்.

    இலவச அனுமதியுடன் தேநீர் இரவு உணவு உபசாரங்களுடன் விழா நடைபெற்றது.

    அங்கே மண்டபத்தின் உள்ளேயும், வெளியேயும் நன்கொடை செய்ய விரும்புவோர்களுக்கான பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.

    இரண்டு நாட்களையும் சேர்த்து அண்ணளவாக ஆயிரம் பார்வையாகர்கள் வந்திருந்ததாக அவ்வமைப்பாளர் சொன்னார்.

    அமைப்பாளர்கள் ஒரு தேநீர் லண்டன் காசில் ஒரு பவுண்டு என்று அறவிட்டிருந்தால் கூட சுமார் 800 பவுண்டுகள் வரை அதவது இந்திய ரூபாய் எட்டு லட்சம் அறவிட்டிருக்கலாம்.

    ஆனால் அங்கிருந்த நன்கொடைப் பெட்டிகளின் மொத்தம் அதன் அரைப்பங்காவது வந்திருக்குமா என்பது சந்தேகமே !

    ஒரு சினிமா பார்ப்பதற்கு 15 பவுண்டுகள் கொடுக்கிறோம்.

    சினிமா நடிகர்கள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு குறைந்தது 30 பவுண்ட்ஸ் கொடுத்துக் கலந்து கொள்கிறோம்.

    அதைப் பார்ப்பது தவறென்பதல்ல எனது வாதம் ஏனெனில் ஒவ்வொருவருடைய மகிழ்ச்சியும் அவர்களது தெரிவு.

    ஆனால் இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து கம்பன் எனும் கவிச்சக்கரவர்த்தியின் தமிழை ரசிக்க வந்த ரசிகர்கள் எத்தனை தூரம் இதைப்பற்றிச் சிந்திக்கிறார்கள் என்பதுவே கேள்வி.

    எமது அடுத்த தலைமுறையை நோக்கி இலக்கிய நகர்வுகளை வெற்றிகரமாக மேற்கொள்ள வேண்டுமானால் அருகி வரும் பார்வையாளர்களின் பங்களிப்பின்றி நிறைவேறாது.

    அடுத்த வருடம் கம்பன் விழாவில் சந்திப்போம்.

    Share
  • வஞ்சியின் நெஞ்சறிய…

    -மேகலா இராமமூர்த்தி

    தலைவியோடு தினைப்புனம் காக்கப் புறப்பட்டாள் அவள் ஆருயிர்த் தோழி. வழியெல்லாம் பேசிக்கொண்டு கலகலப்பாக வரும் தலைவி சில நாட்களாக அதிகம் பேசுவதில்லை; தோழி பேசியவற்றுக்கு மறுமொழியாகச் சில வார்த்தைகளை உதிர்ப்பதோடு சரி! தவிரவும் எதையோ சிந்தித்துக்கொண்டிருப்பதை அவள் முகக்குறிப்புக் காட்டுகின்றது. ஏன்… உணவு உண்பதில்கூட நாட்டம் அதிகமில்லை அவளுக்கு. இதன் காரணம் என்னவாக இருக்கும்? துறுதுறுப்பான பெண் திடீரென்று சோர்வாய்த் தெரிவதும், சிந்தனையில் ஆழ்வதும் புதிராக அல்லவா இருக்கின்றது? என்று சிந்திக்கலானாள் தோழி.

    அப்போது அவளது எண்ணத் திரையில் வண்ண ஓவியமாய்த் தோன்றினான் அந்த எழில்மிகு இளைஞன். தான் தேடிவந்த யானை அந்தப் பக்கமாக வந்ததா என்று தலைவியும் தோழியும் நின்றிருந்த இடத்தருகே வந்து சில நாட்களுக்கு முன்பு கேட்டான் அவன். தலைவியைக் கண்டதும் அவன் பார்வை அவள்மீதே நிலைக்குத்தி நின்றது; தலைவியும் அவனைக் கண்டு நாணத்தோடு தலைகுனிந்தாள். அதன்பிறகு அவன் அடிக்கடி இந்தத் தினைப்புனத்தருகே தென்படுகின்றான். ஒருவேளை நான் தலைவியோடு தினைப்புனக் காவலுக்கு வாராத சமயங்களில் இவர்களுக்குள் காதல் அரும்பத் தொடங்கிவிட்டதோ? எதுவாக இருந்தாலும் இன்றைக்கு அதைக் கண்டுபிடித்துவிடுகின்றேன் என்று தீர்மானித்தாள். அப்போது தினைப்புனக் காவலுக்காக வழக்கமாகத் தலைவியும் தோழியும் அமரும் மரத்தின் பரணருகே அவர்கள் இருவரும் வந்திருந்தனர்.

    பரணில் ஏறி இருவரும் அமர்ந்த சற்றுநேரத்தில் ’கீக்கீ’ என்று கத்திக்கொண்டு கிளிக்கூட்டமொன்று தினைகளைக் கவர்வதற்காகப் பறந்து வந்துகொண்டிருந்தது. தட்டை, குளிர், தழல் ஆகிய கிளி கடியும் கருவிகளை முழக்கிக் கிளிகளை விரட்டினர் இருவரும். வஞ்சியரின் கருவிகள் எழுப்பிய ஒலியால் அஞ்சிப் பறந்தன கிளிகள்.

    தலைவி ஏதாவது பேசுவாள் என்று தோழி எதிர்பார்த்தாள்; ஆனால் அவளோ  பேசாமடந்தையாய் அமர்ந்திருந்தாள். அவளின் அழகிய முகத்தில் அங்குமிங்கும் பிறழும் நீலமலர்போன்ற கண்களின் வனப்பில் இலயித்த தோழி, ஒரு வேடிக்கை செய்து இவள் உள்ளத்தில் உள்ளதை உதட்டில் வரவழைத்துவிடுகின்றேன் என்று நினைத்துக்கொண்டு தலைவியைப் பார்த்து, ”உன்னிடம் ஒரு விசயத்தைச் சொல்லவேண்டும் என்று சில நாட்களாகவே நினைக்கிறேன்; ஆனால் தயக்கத்தின் காரணமாகத் தவிர்த்துவிடுகின்றேன்” என்றாள் பீடிகையோடு.

    ”தன்னைப் பற்றி ஏதேனும் சொல்லப்போகிறாளோ” எனும் பதற்றம் தலைவியைத் தொற்றிக்கொண்டது. அதனை மறைத்தவளாய், “என்னிடம் சொல்ல என்ன தயக்கம்? தயங்காமல் உடனே சொல்!” என்றாள் சிறிது தடுமாற்றத்தோடு.

    ”அதுவந்து…அழகாகத் தொடுக்கப்பட்ட கண்ணியை அணிந்தவனாய்க் கையில் வில்லோடு, வலிமையான விலங்கின் காலடியைத் தேடிக்கொண்டு வருவதுபோல் இப்பக்கமாக இளைய ஆடவன் ஒருவன் வந்துபோகிறான்…” என்று சொல்லி நிறுத்தினாள் தோழி.

    கேட்டுக்கொண்டிருந்த தலைவிக்கு உள்ளூற உதறல் எடுத்தது; அதை மறைத்துக்கொண்டு, ”மேலே சொல்!” என்றாள்.

    ”நான் வரும் வழியில் என்னையே எதிர்நோக்கி நிற்பவன்போல் நிற்கிறான் அவன்; அதை வெளிப்படையாக வாய்விட்டுச் சொல்கிறானா என்றால் இல்லை; அவனுடைய முகக்குறிப்பை வைத்து அவனுக்கு என்னால் ஏற்பட்டிருக்கும் காதல்நோயை அறிந்தேன்; இவ்வாறே பல நாட்களாக ஏதும் சொல்லாமல் வந்துபோகிறான்” என்று சொல்லிவிட்டுத் தலைவியின்மீது பார்வையைச் செலுத்தினாள் தோழி. தலைவி ஏதும் சொல்லாமல் இருந்தாள்.

    விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தவள், ”ம்ம்ம்…எனக்கும் அவன் நினைவால் பாயில் படுத்தால் உறக்கமில்லை; காதல்நோயால் நெஞ்சில் நிம்மதியில்லை. ஆணாக இருந்துகொண்டு அவனே தன் காதலை உரைக்காதபோது பெண்ணான நான் எப்படிச் சொல்வது? எனினும், எனக்கும் அவன்பால் அன்பு உண்டு என்பதை அவன் அறியாமல்போனால் எங்கே என்னைவிட்டு நீங்கிவிடுவானோ என்ற அச்சம் என்னுள் எழுந்தது; அவன் நினைவால் என் தோளும் மெலிந்தது; இதற்கொரு முடிவுகாண வேண்டும் என்று எண்ணினேன்; அதனால் நாணத்துக்கு விடைகொடுத்துவிட்டுத் துணிச்சலாய் ஒரு காரியம் செய்தேன்” என்றாள் தோழி.

    தலைவியின் இதயத்துடிப்பு எகிறியது. அதனை