குறளின் கதிர்களாய்…(501)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(501)

எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு.

-திருக்குறள் -470(தெரிந்து செயல்வகை)

புதுக் கவிதையில்…

தமது செயல் நிறைவேறிட
அரசாள்வோர்
தமது தகுதிக்குப் பொருந்தாதவற்றைச்
செய்தால் அதனை
உலகோர் மதியார்,
அதனால்
அவர் இகழாத வழிகளை
எண்ணிச் செயல்படவேண்டும்…!

குறும்பாவில்…

தம்தகுதிக்குப் பொருந்தாதவற்றை அரசர்
செய்தால் உலகோர் இகழ்வர், அதனாலவர்
இகழா வகையில் செயல்படவேண்டும்…!

மரபுக் கவிதையில்…

மன்னர் தனது தகுதிக்கு
மாறாய்ச் செயல்கள் செய்கின்ற
தன்மை தன்னைப் பார்த்தாலே
தாங்கா உலகோர் மதிக்காமல்
அன்னார் செயலை இகழ்வாரே,
அதனைக் கருத்தில் கொண்டேதான்
என்றும் அவர்கள் இகழாமல்
ஏற்றும் வகையில் செயல்வேண்டும்…!

லிமரைக்கூ…

தகுதிமறந்து செயல்படும் மன்னர்
இகழப்படுவதால் தவறதைத் தவிர்த்துச் செயல்பட
வேண்டும் மக்கள் முன்னர்…!

கிராமிய பாணியில்…

செயல்படு செயல்படு
நல்லாத் தெரிஞ்சி
நல்லமொறயில செயல்படு..

நாடளுற ராசா
தனக்க தகுதிய மறந்து
தாழ்வான செயல்களச் செய்தா
மக்கள் யாருமே
மதிக்கமாட்டாங்க,
அதுனால
மக்கள் எகழ்ந்து பேசாத வகதெரிஞ்சி
மன்னரு செயல்படணும்..

அதால
செயல்படு செயல்படு
நல்லாத் தெரிஞ்சி
நல்லமொறயில செயல்படு…!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *