Blog

  • மெல்லினமே …

    கவிஜி.

    அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டே இருந்தது.

    அவனால் நன்றாக உணர முடிந்தது. புரண்டு புரண்டு படுத்தான். தூக்கம் கைக்கெட்டும் தூரத்தில் கண்கள் உருட்டிக் கிடந்தது. ஒரு விதமான வியர்வை சட்டென முதுகை நனைத்தது. யாருமற்ற பாதங்களின், தூரமற்ற ஓசைகளின் துகள்களை உன்னிப்பாக சுமக்க முடியும் உத்வேகம் ஒன்றாய், உள்ளுக்குள் போராடும் மிகப் பெரிய வளைவுகளில் வளைந்து கொண்டே இருக்கும் பார்வையில், இல்லாத இருட்டை பகல் மயக்கி சரியும் வானம் கீழிறங்காமலே கூடாரம் ஆவதை அவன் கண்கள் பொத்திக் கேட்டான்.

    அறையின் அரை வெளிச்ச இருட்டில் உடல் முழுக்க போர்த்தியது போல “ஒன்று” அவனின் தலையின் அருகே அமர்ந்து அவனை வெறிக்க பார்த்துக் கொண்டிருந்ததை அவனால் உணர்ந்தும், கண்டும், கடக்க முடியாத கணத்தில், ஒரு கிணறு வெட்டும் பூதத்தின் விரல்களின் நறுமணத்தோடு நுகரும் வாசனையோடு மூச்சு வாங்கத் தொடங்கினான். அது பார்க்கும் கூர்மையில் பசுமரத்தாணி ஒன்றை முதுகில் யாரோ அடித்துக் கொண்டிருக்கும் நேரம் முழுவதும் பச்சை ரத்தம் ஒழுகும், சூடு கொண்ட கரு மயக்கங்கள் கரை தாண்டி மூழ்கும் கண்களைப் போல, உள்ளுக்குள் விழித்துக் கொண்டு கவனித்தான்.

    தூரத்து ரயில் எத்தனை தூரத்தில் வருகிறது என்று விரிந்த கண்கள் காணக் காண, சட்டென வந்து தட தடவெனக் கடந்து போகும் கணத்தை பிடித்தாற்போல சட்டென எழுந்து அமர்ந்தான். எழ எழவே, அவன் முகம் வலது பக்கம் தன்னைப் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் “அதன்” மீது தான் இருந்தது. “அது” அவனைப் பார்த்தது. கண்கள் கொண்டு ஈட்டியாய், தீட்டிய வெற்றிட வண்ணத்தில் குழைந்து குழைந்து நழுவிச் செல்லும் காற்றில் வளைவுகளைக் கண்டு மிரண்டான்.

    “கனவென்றால் கண்கள் விழித்தும் எப்படி அந்த உருவம் காற்றில் அப்படியே இருக்கும்???” அவன் மிரண்டு, எவ்வித முன் யோசனையும் இன்றி, ஸ்தம்பித்தப் பார்வையில் இருக்கும் போதே அந்த உருவம் மெல்ல மறைந்தது. மறையும் நொடியெல்லாம் அவன் மீது எதையோ “அது” பூசியது போல நடுங்கினான். அந்த அறை வெளிகளால் மிதக்கப் படுகிறதோ என்று கூட எண்ணிய பதற்றத்தில் அவன் எடை இழந்தது போல பிரமித்தான். வெள்ளைத் தாளென ஒரு கிழிந்த பக்கத்தில் பெயர் இல்லாத எழுத்துகள் கொண்ட வட்டங்களுக்குள் புள்ளி ஒன்றை விதைக்க விதைக்க விழிப்பு நிலை வீரியம் ஆகி, தலை வெடித்து விடும் நிலையில் மீண்டும் மீண்டும் யோசித்தான்.

    அதன் பிறகு அவன் ஏதேதோ உணர்வுகளுக்கு ஆட்பட்டான். அறை முழுக்க வெப்ப சலனம். உள்ளுக்குள் ஏதோ எரிந்தது. மறைக்க மறைக்க முகத்தை முன் கொண்டு வரும், கண் திறத்தலின் காணாமல் போகும், கண்ணாமூச்சி ஆட்டத்தின் விளிம்பு நிலை பாதரசம் சுரக்கும் கண்ணாடிகளின் நெளிவுகளாகிப் போனது வளையல் கொண்ட கைகளும் கொலுசு கொண்ட கால்களும். பூனை நடை நடக்கும் சப்தமும் அடுத்த அறை முழுக்க நிரம்பிக் கிடத்தலில் நொடிக்கு ஒரு திரை அடிக்கொரு முறை விழுந்து கொண்டே இருந்தது. உடல் முழுக்க வலி. உயிருக்குள் ஓலமிடும் ஊஞ்சலை வெட்ட வெட்ட அது வளர்ந்து கொண்டே இருப்பதாய் உணர்ந்த போது ஓடத் துவங்கினான் எத்தனை தூரம் ஓட முடியும்? ஓர் அறை. அதை தாண்டினால் ஹால் அங்கும் ஓடி முடிந்த பின்னால், சமையல் அறை, பின் குளியலறை. நடுங்கிக் கொண்டே சிறுநீர் கழித்தான்

    ஒரு கதையில் நின்று கொண்டு சிறுநீர் போவது குறித்து சாரு நிவேதிதா சொல்லிய வரிகள் ஞாபகத்துக்கு வர சட்டென அமர்ந்து போகத் தொடங்கினான். அவன் பயம் முழுக்க சிறுநீராய் உருகி ஓடினாற் போல ஒரு பெரு மூச்சு விட்டான். ஏதோ பாரம் இறங்கினாற் போல வந்து அறையில் அமர்ந்தான்

    டிவியை ஆன் செய்தான்.

    “ராத்திரி நேர பூஜைகள் எல்லாம் இப்போ இனி மேல்தான். அருகினில் வருவேண்டி ஆசையில் தொடுவேண்டி.” என்று நாகார்ஜுன் மிரட்டிக் கொண்டிருந்தார்

    திக் … திக் … திக் … அவனால் நன்றாக மீண்டும் உணர முடிந்தது. அவனுக்கு பின்னால் “அது” உட்கார்ந்து கொண்டு தலையை ஆட்டியபடியே டிவி பார்ப்பதை பாப்பாவின் கடைசி சுற்றில் நன்றாகக் கண்டான். காண்பவை எல்லாம் கனவாய் போக கூடாதோ என்று, உணர்வுக்குள் ஓடும் திருப்பத்தில் தத்ரூபமாக, மனதுக்குள் பனி மூட்டம் சூழ, நினைவுக்குள் தீச்சுடர் தலை கீழாய் எரிந்துக் கொண்டிருந்தது. அவன் திரும்பியே பார்க்கவில்லை. செயலற்று தைரியம் வரவழைத்து அடித் தொண்டையில் கேட்டான்.

    “யார் நீ”

    தான் கேட்ட சொல் தனக்கே எதிரொலிக்கும் தனிமையின் சொல்லில், சொல் எதுவோ என்று கடந்து போன ஒலியின் வால் பிடித்து ஒளியின் வேகத்தில் முன்னோக்கி சென்று முகம் பார்க்க முயன்ற பொது சொல் ஒலியாகி ஒன்றுமில்லாமல் போயிருந்தது ஒன்றுமில்லை என்பதால் தான் யூகிக்க, யோசிக்க வேண்டி இருக்கிறது. இல்லாமை, இல்லாமையா?

    மெல்ல மெல்ல அறை நிதானத்துக்கு வந்தது. அவனுக்கும் உள்ளே இருந்த பயம் மெல்ல மறையத் தொடங்கியது. எழுந்து போய் ஜன்னலைத் திறந்தான். கை வளையல் ஓசை இப்போது நன்றாகக் கேட்டது. சட்டெனத் திரும்பினான். முகத்தில் பட்ட காற்றில் பெண்மை மென்மையான சுகந்தத்தில், கீற்றுச் சுவர்கள் ஈர மொழிப் பூக்களை காற்றாக்கி அனுப்பும் தென்மேற்குப் பருவம். தெவிட்டாத இதழுடன் தித்திக்குதே என்று மெய் மறந்தான். மனச்சூடு மெல்ல ஆற ஆற, அது சொல்லிய பதிலை திரும்ப திரும்ப நினைவு படுத்தினான். ஆனால் எதுவும் புரியவில்லை. புரியாத சொல்லில்தானே புரிந்தவைகளின் நிர்வாணம் தலை கவிழ்ந்து கிடக்கிறது. கொலை செய்யும் கொடுவாளின் கூர்முனைக்குள் குருதி தேடும் நாக்கு ஒளிந்து கிடப்பது போல மானுடப் பசியின் தீர்வுக்குள் நாக்குகளாய் சுழன்று கழன்று கிடப்பது எச்சில் வடியும் வேகத்தின் மூச்சு வாங்கல் தானே!

    அவன் குளிக்கத் தொடங்கினான். பின்னிரவு வேளையில் குளிர்ந்த நீரில் குளிப்பது போன்ற இனிமை எதுவும் இல்லை என்று உணர்ந்த போது குளியலறையில் ஒரு பெண் குளித்து விட்டு அப்போது தான் வெளியேறிய வாசம் அலை அலையாய் இல்லாத கூந்தலாய் அங்கு மிதந்தது. மிர்தாத்தின் வரிகளெனக் காலம் மறக்கும் சூழலை மிர்தாத்தின் புத்தகம் விதைக்கும். விதைத்த எல்லாமே எடை இழக்கச் செய்யும் ஆத்மார்த்தம். ஆத்மார்த்தங்களில் தத்துவங்கள் பசி அறியா சிறகுகளை சில்லிட்ட வெளி கொண்டு செதுக்கும். செதுக்கிய சூட்சுமங்களுக்குள் இருந்த வாசனை நுகர்வதும் அல்லாத அதற்கும் மேற்பட்ட புரிதலின் சுவாசம்.

    சுவற்றுப் பொட்டுக்களில் இன்று மஞ்சள் நிறப் பொட்டு எண்ணினான், 38 இருந்தது. பெண் குளிக்கும் குளியலறையிலிருந்து வரும் வாசம் தீரா மோகத்தை விதைக்கிறது. அது ஆரம்பமும் இல்லாத அந்தமும் இல்லாத இடைவேளையில், காய்ந்தும் காயாமல் கிடக்கும் கோடை ஆடை போல, மனதுக்குள் கிடக்கும் மயக்க நிலைக்குள், ஒரு வித பால் மயக்க பூத்தூவல் நீராக்கி விடுகிறது. அவன் குளிக்க குளிக்க அவளின் வாசம். அவன் மீது ஒட்டிக் கொள்ளத் தொடங்கியது. ஒட்டுதலின் உறவுக்குள் உண்மை நிலை கருப் பொருள் கொண்ட தத்துவக் கோட்டுக்குள் இலையுதிர் காலக் கனவுச் சித்திரம் போல வேக சலனம். தேக சலனம் ஆனது ஆகட்டும் என ஆனது ஆனதும்.

    இரவுகள் செல்வதும் இரவுக்குள் செல்வதும் இரவாகவே செல்வதும் கொதி நிலைக்குள் குளிர்ந்த நீரில் குத்துக் காலிட்டு அமர்ந்து கிடந்தது அவளின் நிர்வாணம். குளியலறைக்குள் புறமுதுகிட்டு நிற்கும் போது பின்னால் தலை விரி கோலமாய் நிற்கும் நிர்வாணத்தை அவன் பின்னோக்கி பார்க்கும் தைரியம் அற்றவனாக வெளியே வந்தான். வந்து கொண்டிருந்தான்.வெற்றிடம் அள்ளி பூசத் தோன்றிய மணித் துளியில் மிரண்டு மீண்டும் ஆடை அணிந்தான். அணிதலின் அளவு அது மீறும் அடுத்த நொடிக்கு சொந்தமில்லை முந்தைய எண்ணத்திலும் ஆடை ஒன்றும் பெரியது அல்ல.

    “ஒரு வேளை மோகினி பிசாசாக இருக்குமோ?”

    நாட்கள் நகர நகர இரவுகளுக்கு காத்திருக்கத் தொடங்கினான். “அது” வருவதும் சமையலில் ருசி சேர்ப்பதும் வீடு முழுக்க சுத்தம் செய்வதும் அவன் ஆடைகளை துவைத்து வைக்கவும்என்று ஒரு துணையாகிப் போனது.

    கண்ணாடி பார்த்து தலை சீவும் போது அவன் மேல் படரும் கூந்தல் சிலதுகளில் நீட்டமும் நீர்த்துளியும் அவள் ஒரு கூந்தல்காரி என்பதைக் காட்டியது. பெயர் கேட்டான் பதில் இல்லை. இறந்தவளா? எப்படி இங்கு? கேட்டான். பதில் இல்லை. காற்றை வேகமாக்கிப் பயணிக்கும் வேற்று கிரக பெண்ணா? என்றான். பதில் இல்லை. கேள்வியோடு மௌனம் கொண்டு விசுக்கென அணைத்து சென்றது. மூச்சு முட்டி விழிக்கையில் விசும்பல் சப்தம் வீடெங்கும் சிதறும். அடிக்கடி சிதறியது அது அமானுஷங்களின் கூடாக, சமதளமற்ற மேடு பள்ளமாக, அப்போதைய மனநிலை போலவே வீடும் மாறிப் போவதில்தான். ஓடி ஓடி ஜன்னல் அடைத்து ஒடுங்கி நிற்பான் … நிற்கிறான் தொடர்தலைப் போல நிற்பதும் தொடர்கிறது. தொடர்ந்தது. தொடும் தூரத்தில் நின்று தீர்க்கும் “அது”.

    நள்ளிரவு வேளைகளில் மெல்ல மேலே படருவதை முதலில் ஆட்சேபித்தான். பின் விட்டு விட்டான். அவனுக்கும் மெல்ல பிடிக்கத் தொடங்கியது. இப்போதெல்லாம் மஞ்சள் நிற ஆடைகள் வீட்டுக்குள் ஆங்காங்கே தென்படத் தொடங்கியிருந்தன. அவளின் உள்ளாடைகள் கொடியில் காய்ந்து கொண்டிருப்பதை கண்டு திகைத்து பின் புன்னகைத்த நாட்களும் உண்டு. இருவரும் சேனல் மாற்றி மாற்றி டிவி பார்க்கும் போது கூட அவன் முகம் பார்க்கத் திரும்பினால், அவள் காணாமல் போய் விடுகிறாள். கோபம் கூட வந்தது.

    “பெயர் கூட சொல்லாமல் எப்படி உன்னுடன் வாழ்வது. உருவமே இல்லாமல் எப்படி நான் உன்னோடு சயனிப்பது. காதலும் இல்லை. காமமும் இல்லை. கவிதையும் இல்லை. கற்பனையும் இல்லை. என்னதான் நீ? எது தான் நீ? ஏன் இங்கு நீ? அல்லது நான்?”

    நகப் பூச்சுகளில் நெளி நெளியாய் வளைந்து விடுகின்ற புகைந்து கிடக்கும் வானவில் என்று ஒரு கடிதம், வீட்டுக்குள் காணக் கிடைத்த இடங்களிலெல்லாம்பட்டாம் பூச்சியாய் பறந்து கொண்டிருந்தது. பிடித்து பார்த்தான். படித்தும் பார்த்தான்.

    “என்ன பிரமிள் கவிதையைப் போல காற்றெங்கும் விதைக்கிறதா உன் முத்தங்களை?”இதழ் பதிந்த முத்த சுவட்டில் அவன் இதழ் பதித்தான். அவள் வரும் போதெல்லாம் ஒரு வித மஞ்சள் வண்ணம் வீடெங்கும் நிரம்பத் தொடங்கியதை உணர முடிந்தது. உணருதல் தானே உயிர்ப்பும் கூட . உயிர்ப்பில் தானே உள்ளம் உருளுகிறது உண்மையைப் போல. மஞ்சள் வாசம் நீர் இறைக்கும் சிவந்த உள்ளங்கைகளில் மீசையாகி குத்தும் கயிறின் அழுத்தமாய் ஆடி ஆடி தலை தூக்கும் வாளியின் முகப்பில் அசைந்தாடும். சிறு எறும்பின் மரணம் போல மனமெல்லாம் தளும்புவதை சுமந்து கொண்ட நிலை. சமநிலை அல்லாத சமன் பாட்டு சித்திரம்.

    ஒரு நாள் பாட்டு போட்டு ஆடத் தொடங்கினான், நாணத்துடன் அவளும் ஆடினாள். ஆட ஆட, ஆட்டங்கள் தன் எல்லை விரிக்க, பாட்டுக்குள் புது சொற்கள் பிறக்க வண்ணமற்ற ஓவியங்களுக்குள் புகுந்து வண்ணம் விதைக்கும் உயிர் நிலை மாற்றத்தை வானவில் செய்தே பழக்கப் பட்ட கற்பனை கொண்டு புது பாடல் சமைத்தாள். சிறகு முளைத்த கூட்டுக்குள் தூர தேசம் பொத்தி வைக்கப் படுகின்றனவோ!

    கொலுசொலியில் ஜல் … ஜல்… ஜல் …என்ற இசை கண்டிப்பாக அந்த இரவை மிரளத்தான் செய்திருக்க வேண்டும். எப்படித்தான் நெருங்கிப் பழகினாலும் இல்லாத உருவம் ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்தியது. அவன் கண்கள் சுற்றி, தலை சுற்றி அவளை அத்தனை அருகினில் தெரிந்தும் தெரியாமல் தேடியபடி அங்கே ஒரு சித்து விளையாட்டு. தத்தம் வழியினில் பாதம் விதைக்க, நெளிந்த பாதையின் பின்னோக்கிய பயணமாய் அவன். அறை முழுக்க ஆத்திரம் கொண்டு அமைதியாகி சுற்றினான். சுற்றுதல் ஒன்றும் பெரிதல்ல சுற்றிய பின் மயக்க நிலை மகத்துவம் சொல்லும் சிறு மரணம் என்பது போல வீழ்ந்தான்.

    “வீழ்வது எதுவாக இருப்பினும் அதுவாக வீழ்வதும் அழகே” கருத்து சொல்லி முகம் திருப்பிக்கொண்ட சுவரொட்டியை முறைத்துப் பார்க்க ஒரு காலம் விழித்துக் கிடந்தது.

    எழுகையில் மடி போல ஏதோ தலையில் அழுந்தியது. மார்புகளின் கனத்த வாசம், அவன் நெற்றியில் படிந்தது தீர்க்க தரிசனம் போல. தீர்க்கும் தரிசனம் போல தீர்த்தலே தரிசனம் போல. தவம் கலைந்த போதி மரத்தின் இலைகள் என ஆற்றுப் படுகையில் நீராடி சென்றது அவன் என்ற நிழல்.
    மாறுதலே மாறுதல் ஆகிறது. மற்றது எல்லாமே வேஷங்களின் கரையென மூழ்குவதும் எழுவதும் ஆற்றின் சூட்சம் இல்லை. அது கடந்து விட்ட காலமாகவேதான் இருக்கிறது. யார் என்று யோசித்தலின் கைப் பிடி விரலில், தான் என்று யொசிப்பதுதான் மானுடம் தப்பிப் பிழைக்க நீயாக இரு என்பதாக போராடி சொன்னது அவள் என்ற நிஜம்.

    யாரோ கதவைத் தட்டினார்கள். கதவு திறக்கப் பட்டதும் எதிரேதபால்காரர்.

    “நிரஞ்சன் இருக்காருங்களா? ரிஜிஸ்தர் போஸ்ட் வந்துருக்கு”

    “நோ… நோ… இங்க நிரஞ்சன்னு யாரும் இல்ல. நான்தான் இருக்கேன். பேர் நிவ்யா” என்றாள் அவள்.

    காலையில்தான் மீசை தாடி எடுத்திருக்கும் அச்சு அவளின் முகத்தில் இருப்பதை பார்த்து விட்டு யோசித்துக் கொண்டே சென்றார் தபால்காரர்.

    “போன முறை வரும் போது இதே இதே முகத்தை, நிரஞ்சனாக பார்த்தோமே !!!!!!” என்பது அவரின் முணுமுணுப்பு.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(152)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    அரசியல் ஒரு சாணக்கிய சூத்திரம் என்பது ஒரு பொதுப்படையான கருத்து. இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். அரசியலில் இரண்டு வார காலமே மிக நீண்ட காலம் என்று முன்னைய இங்கிலாந்துப் பிரதமர் அமரர் ஹரால்ட் வில்சன் அவர்கள் கூறியதுண்டு. அன்றாடம் மாறிக் கொண்டேயிருக்கும் இந்த உலக அரங்கிலே அரசியலும் அதற்கேற்ற வகையில் மாறிக் கொண்டேயிருக்கிறது. எவ்வளவுதான் மாற்றமடைந்தாலும் அரசியலின் முக்கிய நோக்கம் அந்நாட்டு மக்களின் வாழ்வைச் சீரமைப்பதே என்பதே அடிப்படை உண்மையாகிறது. இவ்வுண்மையை மையப்படுத்தியே அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் பொருட்டு அரசியல் கட்சிகள் தமது பிரச்சாரப் பீரங்கிகளை இயக்குக்கிறார்கள்.

    மக்களின் நன்மையைக் கருதி அரசியல்வாதிகள் கொள்கையளவில் எடுக்கும் பல தீர்மானங்கள் அவர்கள் பதவிக்கு வந்ததும் பல்வேறு அகப்புறச் சூழல்களினால் நிறைவேற்றப்பட முடியாமல் போவதும் உண்டு. அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து அரசியல்வாதிகளும் மக்களை ஏமாற்றுவதையே தமது நோக்கமாகக் கொண்டு அரசியலில் இறங்குகிறார்கள் என்பது என்றுமே உண்மையாகாது. மக்களின் சேவையை மனதில் கொண்டே பெரும்பான்மையான அரசியல்வாதிகள் அரசியலில் இறங்குகிறார்கள். ஆனால், சிலரை சில சமயங்களில் அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் தவறான பாதைக்கு இட்டுச் சென்றுவிடுகின்றன என்பதுவே உண்மை.

    எதற்காக எனது மடலின் ஆரம்பம் அரசியலையும், அரசியல்வாதிகளையும் சிறிது அலசியிருக்கிறது என்ற எண்ணம் ஏற்படலாம். காரணம் இருக்கிறது வருகிறேன்.

    ஒவ்வொரு மனிதனும் வாழும் போது அவனைச் சுற்றி இருப்போர் அவன் இருப்பைக் கண்டு கொள்வது போல் காட்டிக் கொள்வதில்லை. அம்மனிதன் தனது இறுதி முடிவைத் தழுவிக் கொள்ளும்போது அவனது இறுதிச் சடங்கில் அவனது புகழாரம் ஓதப்படுக்கிறது. அவர்களது இழப்பின் உண்மை அவனது சரித்திரத்தைப் புரட்டி பார்த்துப் பேசவைக்கிறது.

    என்ன இது என்று வியக்காதீர்கள். கடந்த திங்கட்கிழமை (ஜூன் 1, 2015) அன்று தனது மரணத்தைத் தழுவிக் கொண்ட ஸ்கொட்லாந்து நாட்டைச் சேர்ந்த லிபரல் டெமகிரட்ஸ் கட்சியைச் சார்ந்த சார்ல்ஸ் கென்னடி (Charles Kennedy) அவர்களின் மறைவினைத் தழுவிய மடலே இது. இவரை அதிகம் தெரிந்தவர்கள் குறைவு என்றே கூற வேண்டும்.

    யார் இந்த சார்ல்ஸ் கென்னடி ?

    Charles_Kennedy_2009ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள இன்வேனர்ஸ் எனும் இடத்தில் இயன் கென்னடிக்கும் மேரிக்கும் மகனாக 1959ம் ஆண்டு பிறந்தார் சார்ல்ஸ் கென்னடி. கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் அரசியல், தத்துவம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் வாங்கிய இவர். பட்டம் பெற்றதும் பி.பி.ஸி ஸ்கொட்லாந்து நிறுவனத்தில் ஊடகவியளாலராகப் பணியாற்றினார்.

    CK11982ம் ஆண்டு அமெரிக்க இன்டியானா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டார். அப்போது இங்கிலாந்தில் லேபர் கட்சியில் அதிருப்தி அடைந்தவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட சோஸல் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஸ்கொட்லாந்து நாட்டிலுள்ள ஒரு தொகுதியில் போட்டியிடத் தெரிவு செய்யப்பட்டார். 1983ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றியீட்டி 23 வயதில் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் இளைய உறுப்பினர் எனும் பெயர் பெற்றார். 1983ம் ஆண்டு தொடக்கம் சமீபத்தில் நடந்து முடிந்த 2015 தேர்தல் வரை அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற இவரின் முதல் தோல்வி நடந்து முடிந்த இந்தப் பொதுத் தேர்தலிலேயாகும்.

    மிகவும் தீவிரமான இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டிருந்த இவர் மிகவும் திறமையான ஒரு இளம் அரசியல்வாதியாகக் கணிக்கப்பட்டார். சோஸல் ஜனநாயகக் கட்சி தன்னை லிபரல் கட்சியுடன் இணைத்துக் கொள்ளும் முடிவை முன்மொழிந்த ஐந்து பேரில் இவரும் ஒருவராவார். அதைத் தொடர்ந்து உருவான லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் மிக முக்கியமான ஒரு உறுப்பினராகத் திகழ்ந்தார். அக்கட்சியின் தலைவர் படி ஆஷ்டவுண் (Paddy Ashdown) தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்த போது இவரே அக்கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1999 ம் ஆண்டிலிருந்து 2006ம் ஆண்டு வரை லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் தலைவராக இவர் பதவி வகித்த காலத்திலேதான் முதன் முறையாக லிபரல் கட்சியின் வெற்றிக்குப் பின்னால் லிபரல் கட்சி உள்ளடங்கிய லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சி 52 இடங்களில் வெற்றியீட்டி சாதனை செய்தது எனலாம்.

    இவரது தலைமையின் கீழ் இவரது கட்சி ஈராக் யுத்தத்திற்கு தமது முழுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. இவரது மறைவு குறித்து அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தமது கட்சி பேதங்களை மறந்து இவரின் மீதான தமது மதிப்பை வெளிப்படுத்தினர்.

    நேற்று (ஜூன் 3, 2015) தேர்தலுக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற முதலாவது பிரதமர் கேள்வி பதில் நிகழ்ச்சியில் இவருக்கான இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தில் பார்வையாளர்களுடன் இவரது இரண்டே வயது நிரம்பிய மகன் டொனால்ட் டும் அவரது மனைவியும் அமர்ந்திருந்தார்கள்.

    பொதுவாக இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசும்போது அவர்கள் பாராளுமன்றத்தில் பார்வையாளர்கள் இருக்கும் இடத்தை நோக்கிப் பேச அனுமதிக்கப் பட மாட்டார்கள். இது அவர்கள் பாராளுமன்றத்தை ஒரு பிரச்சார மேடையாக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே. ஆனால் நேற்றோ சபாநாயகர் இதற்கு விதி விலக்களித்து உறுப்பினர்கள் தமது இரங்கற் செய்தியை அவரது மகன் அமர்ந்திருந்த இடத்தை நோக்கிச் செலுத்த அனுமதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    எதற்காக இவர் மீது இத்தனை அபிமானம்?

    CK3

    பொதுவாக அரசியல்வாதிகள் என்றாலே கொஞ்சம் சந்தேகத்துடன் நோக்கும் மக்கள் இவர் மீது கொண்டிருந்த அபிமானமே இதற்குக் காரணமாகும். நாட்டின் பெரும்பான்மையினர் அன்றைய பிரதமர் டோனி பிளேயரின் விளக்கத்திற்கு ஆதரவளித்து ஈராக் மீதான யுத்தத்தை ஆதரித்தனர். எதிர்க் கட்சிகளும் அதனை ஆதரித்தன. ஆனால் தனியொரு மனிதனாக நட்டிலுள்ள பெரும்பான்மையினருக்கெதிராக தான் கருதப்பட்டாலும் பரவாயில்லை என்று ஈராக் மீது போர் தொடுக்கக்கூடாது எனவும், அதனால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்றும், ஐநா சபை மூலம் நாடுகள் ஒன்றாக எடுக்கும் நடவடிக்கையே வெற்றியளிக்கும் என்று குரல் கொடுத்து இதற்கான வாக்களிப்பில் தனது கட்சியினரை வாக்களிக்காது வழி நடத்தியவர் இத்தலைவர்.

    அது தவிர 2010ம் ஆண்டு கன்சர்வேடிவ் கட்சியுடன் லிபரல் டெமகிரட்ஸ் கட்சி கூட்டணி அமைக்கும் போது தமது கட்சிக்கெதிராக குரல் கொடுத்து அதனால் தமது கட்சி அடையப்போகும் பாரதூரமான விளைவுகளை எடுத்துக்கூறியவர் இவர். இவர் தலைவராக இருந்த நேரத்தில் இவர் மதுவுக்கு அடிமையாக இருந்து அதற்கான சிகிச்சையில் ஈடுப்பட்டதை தொலைக்காட்சி ஒன்று வெளிப்படுத்த எண்ணியபோது, தானாகவே தனது பலவீனத்தை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி தனது தலைமைப் பதவியை இராஜினாமச் செய்த துணிச்சல் மிக்கவர் இவராவார்.

    CK4

    இத்தகைய இவரது தனிப்பட்ட குணங்களினாலேயே இவருக்கு மக்கள் மத்தியிலும் மற்றைய அரசியல்வாதிகள் மத்தியிலும் நல்ல செல்வாக்கு இருந்தது. இத்தகைய ஒரு பண்பட்ட அரசியல்வாதி தனது 55வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தது இங்கிலாந்து ஜனநாயக அரசியலின் இழப்பு என்றே சொல்ல வேண்டும்.

    “மக்கள் குரலே மகேசன் குரல் ” இதை மதிப்பவர்களின் தொகை குறைந்து கொண்டே போகிறதோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

    Share
  • பொன் அந்தி மாலைப் பொழுது …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

     

    பொன் அந்தி மாலைப் பொழுது …

    mgr - ppபுலவர் புலமைப்பித்தனின் தமிழுக்கென்று தனியோர் சிறப்பு உண்டு. இளமை துள்ளி விளையாடும். இன்பம் வந்து அலை மோதும். கவிதை சொல்லும் அழகில் நாம் காணாமல் போவதுண்டு …

    காதல் சொல்ல வந்தால் கன்னித்தமிழும் அங்கே மணக்கும்!!

    இதய வீணை திரைப்படத்திற்காக சங்கர் கணேஷ் இசையமைப்பில், டி. எம். சௌந்தரராஜன் பி. சுசீலா குரல்களில் வரும் குற்றால அருவி இதோ …

    காஷ்மீரின் எழில் கொஞ்சும் பகுதிகளில் இடம்பெறும் பாடல் என்பதால் அழகைப் பருகி அள்ளி மகிழ நம்மையும் அழைக்கிறார் புலவர் …

    இதமான இசையால் இளங்காற்று வீசுவதுபோல் வரும் இசையும் நம்மை மயக்க, இன்பத் தேரில் உலா வரும் இருவர் எம்.ஜி.ஆர். மஞ்சுளா … திரையில் …

    பாடல் கேட்கும்போது … அந்த நந்தவனத்திற்கு நாமும் கடத்தப்படுகிறோம். பொன் அந்தி மாலைப் பொழுது ….

    பொன் அந்தி மாலைப்பொழுது
    பொங்கட்டும் இன்ப நினவு
    அன்னத்தின் தோகை என்ற மேனியோ
    அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ
    கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய்
    (பொன்)

    மலைமகள் மலருடை அணிந்தாள்
    வெள்ளிப்பனி விழ முழுவதும் நனைந்தாள்

    வருகென அவள் நம்மை அழைத்தாள்
    தன்மடிதனில் துயிலிடம் கொடுத்தாள்

    இதயத்து வீணையில் எழுகின்ற பாடலில்
    இசை நம்மை மயக்கட்டுமே

    உதயத்துக் காலையில் விழித்திடும் வேளையில்
    மலர்களும் விழிக்கட்டுமே
    (பொன்)

    கட்டுக்கூந்தல் தொட்டுத் தாவி
    என்னைத் தேடி ஆடிவர

    கன்னித்தேனை உண்ணும் பார்வை
    வண்ணம் நூறு பாடி வர

    மெல்ல மெல்ல மலரட்டும் கவிதை
    சொல்லிச் சொல்லி மயங்கட்டும் இளமை

    என்னேரமும் உன்னோடு நான்
    ஒன்றாகி வாழும் உறவல்லவோ
    (பொன்)

    ஆடை மூடும் ஜாதிப்பூவில்ஆசை உண்டாக
    ஆசை கொண்டு பார்க்கும் கண்ணில்போதை உண்டாக

    கண்ணோடு கண் பண் பாடுமோ
    பெண் மேனிதான் என்னாகுமோ

    அணைத்திடும் கரங்களில் வளைந்து நின்றாடும்
    ஆனந்த அருவியில் சுகம் பல தேடும்
    (பொன்)

    காணொளி: https://youtu.be/RDn6uKUsaro

    https://youtu.be/RDn6uKUsaro

     

    Share
  • சாக்லேட்

    நிர்மலா ராகவன்

    பெரியநாயகி கொடுத்திருந்த தந்தி வெள்ளிக்கிழமை மத்தியானம் மூன்று மணிக்குத்தான் கிடைத்தது.
    `அப்பாவின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது!’

    எதுவும் செய்ய இயலாதவளாக அந்த எழுத்துகளை வெறித்துப் பார்த்தாள் தேவானை. நினைத்தவுடன் புறப்பட்டுப் போக, இந்தியா என்ன, கூப்பிடு தூரத்திலா இருக்கிறது!

    அத்துடன், காலாவதியாகி இருந்த அவளுடைய மலேசிய கடப்பிதழை அப்படியெல்லாம் அவசரமாக புதுப்பிக்க இயலாது. அது கையில் கிடைப்பதற்குள், அப்பா இந்த உலகத்தைவிட்டே போனாலும் போய்விடுவார்.

    அந்த நினைப்பில் வருத்தமில்லை. விரக்திதான். அம்மா இருக்கும்போதே வந்த யோசனைதானே!

    `என்னை எதுக்கும்மா இவ்வளவு தூரத்திலே கட்டிக் குடுத்தீங்க?’ என்று தேவானை சிணுங்கியபோது, `நல்லாக் கேளு! அப்பவே நான் ஒங்கப்பாகிட்டே தலைபாடா அடிச்சுக்கிட்டேன். பக்கத்து வீட்டுப் பையன்! தெரிஞ்சவன், நல்லவன்! அதுக்காக கண்காணாம மகளை அனுப்பணுமான்னு எவ்வளவு கெஞ்சினேன்! ஹூம்! நான் சொல்றதை எப்போ கேட்டிருக்காங்க, இப்போ கேக்க!’ என்று பெருமூச்சு விட்டபடி தொடர்ந்தாள், ஆற்றாமையுடன். `வரதட்சணை எதுவும் வேண்டாம், மாமான்னு மாப்பிள்ளை சொல்லவும், ஒரே வாரத்திலே ஒன் கல்யாணத்தை நிச்சயம் பண்ணிட்டாங்க!’

    அப்பாவுக்குத் தன்னைவிட பணம்தானே பெரிதாகப் போய்விட்டது என்ற வருத்தம் அப்போது எழுந்தது. ஆனால், பெற்றவளின் எண்ணப்போக்கு வேறுமாதிரி இருந்தது.

    `இப்போ யோசிச்சா, அதுவும் நல்லதுதான்னு படுது. ரெண்டு காரும், பங்களாவுமா ராணி மாதிரியில்லே இருக்கே, நீ!’
    தேவானை மௌனமாக இருந்தாள்.

    கணவர் நல்லவர்தான். ஆனால், உலகத்தில் எல்லாரும் தன்னைப் போலவே இருப்பார்கள் என்று எண்ணி ஏமாந்தவர். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்ட, பங்களாவையும், பவுன் ஐம்பது வெள்ளியாக இருந்த காலத்தில் அவள் வாங்கி வைத்திருந்த நகைகள் பலவற்றையும் விற்க வேண்டியிருந்தது. அம்மாவிடம் இதையெல்லாம் சொல்லி, வீணாக அவளையும் கவலைக்கு உள்ளாக்குவானேன்!

    `அடிக்கடி வரக்கூட முடியாது! ஆயிரக்கணக்கிலே இல்லே, பிளேனுக்கு அழணும்!’ என்று முணுமுணுக்கத்தான் அவளால் முடிந்தது.

    `நாங்க இருக்கிறவரைக்கும்தானே வரப்போறே! போனப்புறம் வந்து என்ன ஆகப்போகுது!’
    அதுதான் அம்மாவைக் கடைசியாகப் பார்த்தது.

    அப்பாவை எப்போது இறுதியாகப் பார்த்தோம் என்று யோசித்தாள். மூன்று வருடங்களுக்கு முன்னர்.

    அதற்கு முன்னால் ஒருமுறை போனபோது, `ஒங்களுக்கு என்ன வாங்கிட்டு வர்றதுன்னு தெரியலேப்பா. பெரியநாயகிக்கு ஜப்பான் நைலக்ஸ் புடவை, அம்மாவுக்கு பாதாம் பருப்பு, கோக்கோ…,’ என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அப்பா குறுக்கிட்டார். ‘கோக்கோ விளையற ஊரா? அப்போ சாக்லேட் மலிவாக் கிடைக்குமே!’
    `நீங்க சாப்பிடுவீங்களாப்பா?’ ஆச்சரியத்துடன் கேட்டாள் மகள்.

    அப்பா ரொம்ப ஆசாரம். மணிக்கணக்காக பூசையறையில் உட்கார்ந்து கந்த புராணம் படிப்பார்.
    அப்பா அலட்சியமாகப் பதிலளித்தார். `கையாலேயா பண்ணறான்! எல்லாமே மெஷின்தானே!’
    அடுத்த முறை, ஞாபகமாக, விமான தளத்தில் ஒன்றரையடி நீள சாக்லேட்டை வாங்கினாள். பாலுடன், பாதாம், முந்திரி எல்லாம் போட்டது. அதைக் கையில் வாங்கிக்கொண்ட அப்பாவின் முகம் பிரகாசிப்பதை மனக்கண்ணால் கண்டு ஆனந்தப்பட்டாள்.

    அவளை வரவேற்க வந்திருந்தாள் பெரியநாயகி.
    `என்னடி, இவ்வளவு குண்டாப் போயிட்டே?’ என்று சிரித்த அக்காளிடம், `ஷூகர்!’ என்று, தனக்கு இனிப்பு வியாதி வந்திருக்கும் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டாள்.

    `அப்பா முந்தி மாதிரி இல்லேக்கா. அம்மா போனதிலேருந்து, ஓயாம கத்திக்கிட்டு இருக்காரு!’ என்றாள் ரகசியக் குரலில் — பெங்களூரில் இவள் பேசுவது கோயம்புத்தூரில் இருந்தவருக்குக் கேட்டு விடுமோ என்று அஞ்சுவதுபோல்.
    தேவானையால் நம்ப முடியவில்லை. சாத்வீகமான அந்த அப்பாவா!
    `ஏன்?’ என்று கேட்டுவைத்தாள்.

    `வயசான காலத்திலே ஒண்டியாத் திண்டாடறாரு. சாவுப் பயம் வேற!’ என்று நொடித்தவள், `நீ மொதல்ல அங்க போகாதே. எங்கூடவே தங்கிக்க. திரும்பிப் போக ஒரு வாரம் இருக்கறப்போ அங்க போனாப் போதும். அப்பாவைத் தாங்கிக்க ஒன்னால முடியாது!’ என்றாள் தங்கை, தேவானை பேசவே இடங்கொடுக்காது.

    வீட்டுக்குப் போனதும், `எனக்குத் தெரியும். நீ எங்களுக்காக அள்ளிக்கிட்டு வந்திருப்பே!’ என்றபடி, உரிமையுடன் அக்காளின் பெட்டியைத் திறந்தாள் பெரியநாயகி.

    மேலாக வைக்கப்பட்டிருந்த ஊதா நிறக் காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த பொருள் கண்ணில் பட, `ஹை! சாக்லேட்!’ என்று தாவி எடுத்தாள்.

    `அது அப்பாவுக்கு!’ என்று தேவானை தர்மசங்கடத்துடன் மறுத்தபோது, பெரியநாயகியின் முகம் இறுகியது.
    அப்போது எழுந்த அவமானத்தை ஒரு சிறு சிரிப்புடன் சமாளித்துக் கொண்டு, `வெளியிலே வாங்கினது எதையும் அப்பா சாப்பிட மாட்டாரே! மறந்துட்டியா?’ என்று கேட்டாள்.

    `போன தடவை அப்பாதான் கேட்டார். மெஷின்ல பண்ணினது பரவாயில்லேன்னு சொன்னார்..!’
    தங்கை முகத்தைச் சுளித்தாள். சாகப்போகிற வயசிலே சாக்லேட் ஒரு கேடா!

    `நீயோ இனிப்பு சாப்பிட முடியாது. அது அப்பாவுக்கு!’ தேவானையின் மறுப்பை அலட்சியம் செய்தாள். `வெளியில் வெச்சா உருகிப் போயிடும்!’

    மனதுக்குள், `வெளிநாட்டில் சீரும் சிறப்புமாக இருக்கிற உனக்கு, தங்கைக்கும் ஒன்றோ, இரண்டோ வாங்கி வர வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை? சரியான கருமி!’ என்று வைதாள்.

    சாயங்காலம், கல்லூரி முடிந்து வந்த மகனிடம், `பெரியம்மா ஒனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்காங்கன்னு பாரு!’ என்று ஒரு பெரிய விள்ளலைக் கொடுத்தாள்.

    அவர்களுக்காக அக்காள் வாங்கி வந்திருந்த துணிமணிகள், கேமரா, ரேடியோ — இவையெல்லாம் இருக்க, அப்பாவுக்காக அவள் ஆசையாகக் கொண்டு வந்திருந்த ஒரே சாமானை அவள் வீட்டுக்கு வந்து விசாரித்தவர்களிடம் எல்லாம் காட்டி, `எவ்வளவு பெரிசு பாத்தீங்களா? ஏர்போர்ட்டிலே வாங்கினாளாம்!’ என்று பீற்றிக் கொண்டாள் பெரியநாயகி. அவர்களுக்கும் சிறிது கொடுக்க வேண்டியதாகப் போயிற்று.

    அங்கிருந்து புறப்படும் நாள் வந்தபோது, ஏதோ விடுதலை கிடைத்ததுபோல் இருந்தது தேவானைக்கு. `சாக்லேட்?’ என்று நினைவுபடுத்தினாள்.

    `இப்பவே எதுக்கு? புறப்படறப்போ எடுத்துக்கிட்டா போதும். உருகிடும்!’ என்று சால்ஜாப்பு சொன்னாள் தங்கை.
    ஞாபகமாக, வாசலில் டாக்ஸி வந்து நின்றதும், மீண்டும் கேட்டாள் தேவானை.

    உதட்டைச் சுழித்தபடி, ஒரு குழந்தையின் உள்ளங்கை அகலத்திற்கு ஒரு துண்டை உடைத்து, ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்தாள் பெரியநாயகி. மீதிப் பங்கு, மீண்டும் ஐஸ் பெட்டிக்குள் சரணடைந்தது.
    அப்போது எழுந்த அதிர்ச்சியை, வருத்தத்தை, கீழுதட்டைக் கடித்தபடி அடக்கிக் கொண்டாள் தேவானை.

    செல்லப் பெண்ணைக் கண்டு மலர்ந்த முதியவரின் முகம் அவள் அளித்ததை ருசித்ததும், இன்னும் விரிந்தது.
    `ரொம்ப நல்லா இருக்கேம்மா! இன்னும் கொஞ்சம் வாங்கிட்டு வந்திருக்கக் கூடாது?’ என்று அவர் உரிமையாகக் கேட்டபோது, தேவானைக்கு அழுகை வந்தது.

    அடுத்த முறை நேராக அப்பாவைப் பார்க்க வரவேண்டும். நிறைய சாக்லேட் வாங்கிக்கொண்டு வந்து, அவர் பூரிப்பதைப் பார்த்துத் தானும் மகிழ வேண்டும் என்று நிச்சயித்துக் கொண்டாள்.
    ஆனால், அதற்கான வேளை வரவேயில்லை.

    மறுநாளே இன்னொரு தந்தி வந்தபோது, அதைப் பிரிக்காமலே அழ ஆரம்பித்தாள்.
    அப்பா.. நான்கு வயதுவரை அவளைத் தோளில் போட்டு `ஆட்டுக்குட்டி’ தூக்கிய அப்பா. அதற்குப்பின், முதுகில் உப்பு மூட்டை. ராத்திரி தூங்குகையில், கெட்ட கனவு கண்டு பயந்த போதெல்லாம் சமாதானப்படுத்தி, தன் பக்கத்தில் படுக்க வைத்துக்கொண்ட அப்பா.

    அவள் பெரியவளானதும், எப்போதும்போல் அப்பா கன்னத்தைத் தொட்டுக் கொஞ்சியபோது, அவள் வெட்கப்பட, `அப்பாதானேம்மா!’ என்று சிறு வருத்தத்துடன் சொன்னவர்.
    பள்ளி நாட்களில், படிப்பிலும் பேச்சுப் போட்டியிலும் அவள் பெற்ற ஒவ்வொரு வெற்றியையும் கோயிலில் விசேட ஆராதனைக்கு ஏற்பாடு செய்து கொண்டாடியவர்.

    அதிகம் யோசியாது அவளுடைய திருமணத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு, அதற்கு முதல்நாள் அவளிடம் தனிமையில், `நான் ராத்திரியெல்லாம் அழுதுக்கிட்டே இருந்தேன். இனிமே ஒன்னை எப்போ பார்ப்பேனோ!’ என்று குழந்தைபோல் ஏங்கியவர்.

    தான் முதன்முறை கருவுற்றபோது, `தேவானை ஒரு நல்ல மகளாகவும், சிறந்த மாணவியாகவும் இருந்தாள். அவள் நல்ல தாயாகவும் இருப்பாள் என்பதில் எனக்குச் சந்தேகமே கிடையாது!’ என்று கணவருக்கு, முதன்முறையாக, கடிதம் எழுதி இருந்த அப்பா.

    அந்த அப்பாவின் ஆசை கடைசியில் நிறைவேறாமலே போய்விட்டது.

    `நாளைக்கு ஒன் பிள்ளைங்க ஒனக்கு எதுவும் செய்ய மாட்டாங்கடி. அவங்க பிள்ளைங்களுக்குத்தான் செய்வாங்க. அப்போ நீ வேதனைப் படறதையும் பாக்கத்தானே போறேன்!’ என்று உரக்கவே அரற்றினாள் தேவானை.

    ஓரிரு வாரங்கள் கடந்ததும், தங்கையிடமிருந்து நீண்ட கடிதம் ஒன்று வந்தது. `அப்பாவின் காரியங்கள் நல்லபடியாக நடந்தன. இருபதாயிரம் செலவழித்தேன்!’ என்று பெருமையாக எழுதியிருந்தாள்.

    வெறி கொண்டவளாக, கடிதத்தைக் கிழித்துப் போட்டாள் தேவானை.

    (தமிழ் நேசன், 2011, வலைத்தமிழ், சிறுகதைகள்.காம்)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy2

    ”வைதீக கோலமும், வேதாந்த ஜாலமும்,
    ஐதீகங் கள்இம்மைக்(கு) ஐயமில்லை: -பொய்தேகம்
    மண்ணுள் புகும்முன் மணிவண்ணன் மையிருளை,
    கண்ணுள் மறு’மை’யாய் கொள்”….கிரேசி மோகன்….

    Share
  • ”வேளுக்குடியார் விஜயம்”….

    அடியேன் அகத்திற்கு வேளுக்குடி கிருஷ்ணன் இன்று விஜயம் செய்தார்….வேளுக்குடியாரை வரவேற்று வெண்பா எழுதி அவர் ஸெல்லுக்கு மெசேஜாய் அனுப்பினேன்….வெண்பா இதோ…

    crazy1

    crazy

    ”தோலுக்(கு) அடிமையாய் , தோற்றம் சதமென்று,
    வாலைப் பிடித்திழுத்தேன் வன்புலியை(புலனை): -வேளுக்,
    குடியாரே வந்தென் குடிபுகுந்(து)அம் மாலுக்(கு),
    அடியாராய் மாற்ற அருள்”….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    ”இல்லா ததைத்துரத்தி செல்லா ததைச்சேர்த்து
    பொல்லா தவனென்ற பேர்வாங்கி -நில்லாது
    விட்டிலென மாயா வெளிச்சத்தில் வீழாது
    விட்டலிருள் வண்ணன்தாள் வீழ்”….கிரேசி மோகன்….

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: வெந்நீரில் தண்ணீர் தெளித்து

     

    செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
    பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
    அந்நீ ரவரவர்க்குத் தக்காங் கொழுகுபவே
    வெந்நீரிற் றண்ணீர் தெளித்து.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
    பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
    அந் நீர் அவரவர்க்கு தக்கு ஆங்கு ஒழுகுபவே
    வெந்நீரில் தண்ணீர் தெளித்து

    பொருள் விளக்கம்:
    செம்மையான பண்பு உள்ளவரைப் போன்று தமது காரியத்தை சிதைக்க எண்ணுபவரிடமும் (அன்பு காட்டியும்), பொய்யாகப் பொருட்படுத்தாத  பண்பு கொண்டவர் போல செயலை தக்கவாறு முடிப்பவரிடமும், அவரவருக்கேற்ற பண்பினை அவரவரது இயல்புக்குத் தக்கவாறு கையாள்வது, வெந்நீரில் குளிர்நீர் கலந்து அளாவி பதமாகப் பயன்படுத்துவதைப் போன்றது.

    பழமொழி சொல்லும் பாடம்: வெந்நீரில் குளிர்நீர் அளாவி பக்குவமாகப் பயன்படுத்துதல் போல, அவரவர் இயல்பிற்குத் தக்கவாறு செயல்பட்டு தனது செயலை நிறைவேற்றிக் கொள்வார் தமது காரியத்திலேயே கண்ணாயிருப்பவர்.

    ஆடிக்கறக்கும் மாட்டை ஆடியும், பாடிக் கறக்கும் மாட்டைப் பாடியும் கறக்க வேண்டும் என்று பரவலாக இக்காலத்தில் வழங்கப்பெறும் பழமொழி கூறுவதும் இக்கருத்தையே வள்ளுவரும் இதனைப் பின்வருமாறு கூறுகிறார்.

    நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
    பண்பறிந் தாற்றாக் கடை. (குறள்: 469)

    அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செயல்படாவிட்டால், நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும் என்று வள்ளுவர் அறிவுறுத்துகிறார். தமது காரியத்தை முடிக்க உதவ இயலாதவரிடம் அக்கறை செலுத்தி அவரை ஊக்கப்படுத்துவது தேவையானது. தனது கடமையை உணர்ந்து செயலாற்றுபவரை தொல்லை செய்யாது அக்கறையின்றி விட்டுவிடுவது அவரது பொறுப்புணர்வை அதிகப்படுத்தும். தன் மேல் வைத்துள்ள நம்பிக்கையை பாழாக்கக் கூடாது என்று அவர் கடினமாகக் காரியமாற்றுவார். அவரவர் செயலாற்றும் இயல்பை உணர்ந்து அதற்கேற்றவாறு நடப்பது அவரவரையும் அவரது பண்பிற்கு ஏற்றவாறு ஊக்கப்படுத்தும் முறையாகும்.

    Share
  • ஒரு பேருந்துப் பயணம்

    நிர்மலா ராகவன்

    “என்னை விட்டுடுங்க! இதுதான் என்னோட கடைசி வெளிநாட்டுப் பயணம்!” முகத்தில் அருவருப்புடன், முணுமுணுப்பான குரலில் கூறிய மனைவியைப் பார்த்தார் அருண். தன்னால்தானே அவளுக்கு இவ்வளவு கஷ்டம் என்ற நினைப்பில் சற்று குற்ற உணர்வு உண்டானது அவருக்கு.

    “கொஞ்ச நேரம்தானே பிரபா? புதுச்சேரியிலிருந்து மூணே மணி நேரம்! கடற்கரைவழியா போய், சென்னையில கொண்டு விட்டுடுவான்!”

    “ஆயிரக்கணக்கா, மலேசிய ரிங்கிட்டில செலவழிச்சுக்கிட்டு பிளேனில வந்திருக்கோம், உல்லாசமா சுத்திப் பாக்க! டாக்ஸிக்கு இரண்டாயிரம், இல்லே மூவாயிரம் ரூபாய் குடுக்க கருமித்தனப்பட்டுக்கிட்டு, யாராவது இப்படி பஸ்ஸில வருவாங்களா!”

    “நம்ப ரெண்டு பேருக்கும் பஸ் டிக்கட் நூறு ரூபாய்கூட ஆகலம்மா. மிச்சம் பிடிக்கிற காசில, நீ இன்னொரு பட்டுப் புடவை வாங்கிட்டுப் போயேன்!”

    அவரது நைச்சியப் பேச்சு பிரபாவின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. முன்னால் அமர்ந்திருந்த பெண்ணிடம் அவள் கவனம் லயித்திருந்தது. எண்ண ஓட்டம் அவளைச் சுற்ற ஆரம்பித்தது.

    ஒல்லியா இருந்தாலும், பொண்ணு நல்ல களை!
    கழுத்தில் முத்து மாலை- – அதில் தோல் உரிந்திருந்தது.
    கல்யாணமாகாத பெண் போலிருக்கு! பாவம், ஏழை!
    நீண்ட ஒற்றைப்பின்னல். அதன் நுனியில் ரிப்பன் வைத்துக் கட்டியிருந்தாள்.

    சரியான பட்டிக்காடு! பெயர் என்னவாக இருக்கும்? சரி, அருக்காணி என்று வைத்துக்கொள்வோம்.
    பொழுதைக் கழிக்க, பிரபாவுக்கு இது ஒரு நல்ல விளையாட்டாகப் போயிற்று.

    பின்னலுக்கு மேலே சாமந்தி, அரளி, `பச்சை’ என்ற வாசனை இலை — எல்லாம் வைத்துக் கட்டிய தலைகொள்ளாத கதம்பம்.

    தலை கனக்காதோ!

    ஏறியதிலிருந்து, தலையைப் பரபரவென்று சொறிந்து கொண்டிருந்தாள் அருக்காணி.

    இப்படியா தலையைப் பிடுங்கிக்கொள்ளும் ஒரு பெண், நாலு பேர் பார்க்கிறார்களே என்ற கூச்சம்கூட இல்லாமல்!
    ஒருவாறாக, இரு விரல்களின் நுனியைச் சேர்த்து, மயிர்க்காலை பாடாய் படுத்திக் கொண்டிருந்த பேனை எடுத்து, இன்னொரு கை கட்டைவிரலால் அவள் சொடுக்கியபோது, பிரபாவுக்குக் குமட்டியது.

    ஒய்யாரக் கொண்டையில தாழம்பூவாம்… நல்லாத்தான் சொல்லி வெச்சிருக்கான், பாட்டிலே!
    `சென்னைக்குப் போனதும், முதல் வேலையா மருந்துக் கடையிலே நல்ல மருந்தாக வாங்கி, தலையில அழுந்தத் தேய்ச்சுக்கணும்! முன் சீட்டிலிருந்து பரவிடாது!’ என்று பிரபாவின் எண்ணம் போயிற்று.

    பஸ் வழியில் எங்கோ நின்றது. கையில் ஒரு குழந்தையுடன் ஒரு மாது ஏறினாள். இன்னொரு தோளில் ஒரு பெரிய பை. வெளிறியிருந்த நீல நிற நைலான் புடவை. பரட்டைத் தலை என்று பிரபா தன் மனதில் குறித்துக் கொண்டாள்.
    “யாரும்மா? கையில பிள்ளையோட எப்படி நிப்பே? அடுத்த பஸ்ஸிலே வா. எறங்கு, எறங்கு!” கண்டக்டரின் அதிகாரக் குரல் சிலரை அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.

    வேறு சிலர், `இதெல்லாம் தினம் தினம் நடக்கிறதுதானே!’ என்று நினைத்தவர்களாக, வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டோ, `இஞ்சி மொரப்பா! அஞ்சே ரூபா! தலை சுத்தலுக்கு வாங்கிக்குங்க!’ என்று கூவியபடி விற்ற பையனை அழைத்துக்கொண்டோ இருந்தனர். இஞ்சியை வேகவைத்து, சீனிப்பாகில் இட்டுக் காய வைத்திருந்த விரல்களை நினைவூட்டும் துண்டங்கள் சிறிய பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டிருந்தன.

    `அநியாயம்! இதுக்கு அஞ்சு ரூபாயா!’ என்று பேரம் பேசிக்கொண்டிருந்தார் ஒருவர்.
    யாரும் அத்தாய்க்குத் தங்கள் இடத்தை விட்டுக் கொடுத்துவிட்டு, நின்றுகொண்டே பயணம் செய்ய ஒப்பவில்லை.
    “ஒனக்கு எத்தனை வாட்டி சொல்றது? எறங்கு!’ கண்டக்டர் ஆக்ரோஷமாகக் கத்தினார். அவள் இறங்க யத்தனித்தாள்.

    “அவங்க எறங்க வேணாம்!” அபயக் குரல் கேட்டது. அருக்காணிதான்.
    “பிள்ளையை இப்படிக் குடுங்க!” என்று தன் கையை நீட்டி, பிடுங்காத குறையாக குழந்தையை வாங்கிக் கொண்டாள்.
    கறுப்புச் சாந்தில் பெரிய பொட்டு, நெற்றியிலும் கன்னத்திலும். அதைவிடப் பெரிய கண்களால் தன்னைத் தோளில் தூக்கிக் கொண்டவளை உற்றுப் பார்த்தது.

    “என்னடா முழிச்சு முழிச்சுப் பாக்கறே?” என்று கொஞ்சியபடி, “அதோ பாத்தியா! எத்தினி பஸ்!” என்று வெளியில் கைகாட்டினாள் அருக்காணி.

    குழந்தைக்கு என்ன, ஆறு மாசமிருக்குமா?
    பிரபா சுவாரசியமாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    பஸ் புறப்பட்டது. வழியில் தெரிந்த காட்சிகளை எல்லாம் அருக்காணி விளக்க, `இதற்குமேல் என் மூளை வேலை செய்யாது!’ என்பதுபோல், குழந்தை கண்களை மூடிக்கொண்டது. அது தூங்க வசதியாக, மடியில் கிடத்திக் கொண்டாள் அப்பெண்.

    பஸ்ஸின் குலுக்கலில் கண்ணயர்ந்த பிரபா இரண்டு மணி பொறுத்துதான் விழித்தாள்.
    “அம்மா எறங்கப் போறாங்கடா!” என்று பிரியாவிடை கொடுத்த அருக்காணி, குழந்தையை அதன் தாயிடம் நீட்டினாள். அவளை விட்டுப் பிரிய மனமில்லாததுபோல், குழந்தை தன் பிஞ்சு விரல்களால் அவளுடைய புடவையை இறுகப் பற்றியிருந்தது.

    “பிள்ளையை நல்லா பாத்துக்கிச்சு!” என்று பொதுவாகச் சொல்லியபடி, அந்த தாய் இறங்கினாள்.
    வாய் உபசாரமாக நன்றி கூறத் தெரியாத பாமரப் பெண்!

    சென்னையும், ஓடும் மாந்தர்களும், மனிதர்கள், வாகனங்களின் இரைச்சலும் சேர்ந்து வந்தன.

    “பஸ்ஸிலே இவ்வளவு பேரை அடைப்பாங்கன்னு தெரியாம போச்சு. என்னென்னமோ எண்ணை நாத்தம்! மூச்சுக்கூட விட முடியல!” கோயம்பேடில் இறங்கி, ஆட்டோவில் இறங்கும்வரை மௌனமாக இருந்த அருண், முதன்முறையாகப் பேசினார். “இனிமே பஸ்ஸே வேண்டாம்பா! டாக்சிதான்!” உடலைக் குலுக்கிக் கொண்டார்.

    “ஒரு புத்தகத்தோட மதிப்பை அதோட அட்டையை வெச்சு எடைபோடக் கூடாதுன்னு சரியாத்தான் சொல்லி வெச்சிருக்காங்க!”
    தான் என்ன சொல்கிறோம், இவள் சம்பந்தா சம்பந்தம் இல்லாது என்ன சொல்கிறாள் என்று, மனைவியைத் திரும்பிப் பார்த்தார் அருண்.

    `பாவம்! ரொம்ப நேரம் பஸ்ஸிலே வந்தது இவளுக்குத் தலை சுத்திப் போயிருக்கு!’ என்று பரிதாபப்பட்டுக் கொண்டவர், `ஹோட்டலிலே ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு குடிச்சா சரியாப் போயிடும்!’ என்று ஒரு முடிவும் எடுத்தார்!

    (மக்கள் ஓசை, 2010, சிறுகதைகள்.காம்)

    Share
  • ஐந்து கை ராந்தல் (16)

    வையவன்
    “எங்கே கூட்டிக்கிட்டுப் போறே?”
    “பேசாம வாயேன்”
    அவர்கள் ராயப்பேட்டையில் பஸ் ஏறி எலியட்ஸ் ரோட் ஸ்டாப்பிங்கில் இறங்கி ஆஸ்பத்திரியை நோக்கி நடந்தனர்.
    குவார்ட்டர்ஸுக்குப் போய்ப் பார்த்தான் சிவா. பிரீதா இல்லை. கதவு பூட்டியிருந்தது. பக்கத்தில் கேட்டான்.
    “டே ஷிப்ட்!”
    “எப்ப முடியும்?”
    “மாலை ஆறு மணி.”
    “அஞ்சு மணிக்குள்ளாரே கொழந்தைங்க எல்லாம் ஸ்கூல்லேருந்து திரும்பி வந்துடும்” என்று கவலையோடு சொன்னாள் திஷ்யா.
    இவள் தான் செத்துப் போவதாகச் சொன்னவள் என்று நினைத்தான் சிவா. அசந்தர்ப்பமாக அவனுக்குச் சிரிப்பு வந்தது. அதை திஷ்யா பார்த்து விட்டாள்.
    நர்ஸிங் ஹோமுக்குப் போகும் பாதையில் அவனை அவள் தொடர்ந்தவாறே கேட்டாள்.
    “என்ன சிரிப்பு?”
    “வீட்டைப் பூட்டினியா?” என்று பேச்சை மாற்றினான்.
    “இந்த ‘டெக்னிக்’ வேண்டாம். நீ எதுக்கு சிரிச்சே?”
    அவன் பதிலளிக்கவில்லை.
    “இவதானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாகப்போறேன்னு சொன்னவண்ணு நெனச்சியாக்கும்?”
    “அபாண்டம்”
    “செத்துட்டா கவலையில்லே. உயிரோட உள்ள வரைக்கும் உண்டு. போகட்டும். அந்த நர்ஸ்கிட்டே நீ என்ன கேக்கப்போறே? ஐடியாவா?”
    “எக்ஸாக்ட்லி”
    “ஒனக்குன்னு ஒரு ஐடியாவும் தோணலியா?”
    “நீ மேஜராயிட்டியா?”
    “ஏன், திருநீர்மலையிலே கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனைக்கறியா?”
    “அதுக்கில்லே; ஒன்னை கடத்திக்கிட்டுப் போனதா ஒங்கப்பா போலீஸ் கம்ப்ளெயிண்ட் குடுத்திடப் போறாரு.”
    “கவலைப்படாதே முந்தா நாளு எனக்கு பதினெட்டு முடிஞ்சு போச்சு. அந்த அளவுக்கு அவர் போகமாட்டார். ஒன் ஐடியா என்ன.. அதைச் சொல்லு.”
    “அதான் யோசிக்கிறேன்.”
    “சிவா, நான் எனக்கு ஒரு பிரச்னையா இருந்தது போயி ஒனக்கு ஒரு பிரச்னையாயிட்டனா?”
    சிவாவுக்கு அந்த நிராதரவில் மனசு விண்டு போயிற்று.
    “இந்த மாதிரி பேசாதே!” என்று வருத்தமாய்ச் சொன்னான். திஷ்யா மௌனமாய் விட்டாள்.
    ரிசப்ஷனில் அவர்களை நிற்க வைத்தாள் ரிசப்ஷனிஸ்ட். ஃபோனை எடுத்து நர்ஸிங்ஹோமின் உள்ளே எங்கோ பேசினாள்.
    “யார் வேணும்?”
    “நர்ஸ் பிரீதா.”
    “ப்ளீஸ் வெய்ட் தேர்” எதிரிலிருந்த பெஞ்சை சுட்டிக்காட்டினாள்.
    லாமினெட் வழவழப்பு மின்னிய அகலமான பெஞ்சில், மின் விசிறியும் சுற்றியிருந்த மர நிழலும் தந்த குளிர்ச்சியில் அவர்கள் உட்கார்ந்தபோது மனசு சற்று ஓய்ந்தது.
    பத்து நிமிஷத்தில் பிரீதா வந்தாள். நர்ஸ் உடையில் தலைக்கு ஹுட் வைத்து மலர்ந்து சிரித்துவரும் அவளைக் கண்டதும் ஒரு தேவதையைக் கண்ட ஆஸ்வாசமாக இருந்தது.
    “ப்ராப்ளமாணோ?”
    காலையில் தானே சொல்லியனுப்பினேன் என்ற தொனியில் சிரித்துக் கொண்டே கேட்டாள்.
    “தனியாப் பேசணும்” என்றான் சிவா.
    பிரீதா ரிஸ்ட்வாட்சைப் பார்த்தாள்.
    பெஞ்சில் உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல் திஷ்யா நெளிந்தாள்.
    பிரீதா ரிஸப்ஷனிஸ்டை நெருங்கி “மேரி வந்நோ?” என்று கேட்டாள்.
    “ஓ… ஷி கேம் ஜஸ்ட் ஹாஃப் அன் அவர் அகோ.”
    “கனெக்ஷன் தரூ.”
    போனில் அந்த மேரி உடனே கிடைத்தாள்.
    “ஞானாணு ப்ரீத. எனிக்கொரு அர்ஜண்ட்ஜோலி. கேட்டோ. ரிலீவ் மீ ஃபர் ஹாஃப் அன் அவர், ஐயே நாட்டி! கஸ்ட் வன்னதா! ஷ்யூர்… இன்ஃபார்ம் தி சீஃப் ஐ’ல் மேனேஜ்.”
    பிரீதா போனை வைத்தாள்.
    “போகாம்.”
    அசோகமர நிழல் படர்ந்த சிமெண்ட் பெஞ்சு ஒன்று வெளியே காலியாக இருந்தது. மூவரும் அதில் போய் உட்கார்ந்தனர்.
    “ஒய் திஷ்யா ஈஸ் டல்?” என்று பிரீதா ஆரம்பித்தாள். திஷ்யா சிரிக்க முயன்றாள். சிவா மளமளவென்று விஷயத்தைச் சொன்னான்.
    “இவளுடைய அப்பா இவ சினிமாவிலே நடிக்கணும்னு கம்பெல் பண்றார். இவளுக்கு இஷ்டமில்லே. இன்னிக்கு ஸ்கிரீன் டெஸ்ட். வீட்டுக்கு வண்டி வர்றதா இருந்தது. இவ ஒர்க்ஷாப்புக்கு என்னை வரச்சொல்லி ஆள் அனுப்பினா. போனேன். அங்கிருந்து நேரா இங்கே வர்றோம்.”
    பிரீதா ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கேட்டாள்.
    “சினிமாவிலே ஆக்ட் பண்ண இஷ்டமில்லே! வாட் எ குட் கர்ல்!” பிரீதா சிலாகித்தாள்.
    “இதைச் சொல்ல ஈ காலத்திலே ஒரு மனோ திடம் வேணும்” என்று மலையாளத் தமிழில் சொன்னாள்.
    “அப்பா ரொம்ப கம்பெல் பண்றார். ஹி ஈஸ் மேட் ஆஃப்டர் மனி.”
    பிரீதா பெருமூச்சு விட்டாள்.
    “அவர்கிட்டே…” என்று அவள் பேச ஆரம்பிக்கும் முன் சிவா குறுக்கிட்டான்.
    “பேசிப் பார்த்துட்டேன். ஷி வில் டைன்னு கூடச் சொன்னேன்.
    அவர் அசையறதா தெரியலே!”
    திஷ்யா உதட்டைக் கடித்துத் தலை குனிந்தாள்.
    “நீ வீட்டை விட்டு வரான் தயாரோ?” என்று தடுமாறும் தமிழில் கேட்டாள். திஷ்யா இந்தக் கேள்வி தனக்கு என்று உணர்ந்து நிமிர்ந்தாள்.
    “எப்படி?”
    “என்னோட வந்து இரு.”
    “தெரியாமயா… திருட்டுத் தனமாவா…”
    “நோ. நீ வந்துடு. நான் அவர்கிட்டே போய்ப் பேசிக்கறேன்.”
    திஷ்யா தயங்கினாள்.
    “நாட் ஃபர் எவர். அவருடைய தவறு அவருக்குப் புரியற வரை.”
    “கொழந்தைகளுக்கெல்லாம் யார் சமைப்பாங்க? வீட்டை யார் கவனிச்சுக்குவாங்க? சிவா அவளுக்குப் பிரதிநிதியாகக் கேட்டான்.
    “இவ சினிமாவிலே ஆக்ட் பண்ண சம்மதிச்சிருந்தா வீட்டை யார் கவனிச்சுக்குவாங்க?”
    திஷ்யா அந்தக் கேள்வியில் இருந்த நியாயத்தை உணர்ந்தாள்.
    “இவ இல்லேன்னா அந்த வீடு என்னவாகும்னு அவருக்குத் தெரியணும். லெட்ஸ் டு ஒன் திங். இவங்க ரிலேடிவ்ஸ் யாரும் கிட்டே இல்லியா?”
    “வியாசர்பாடியிலே சித்தி இருக்காங்க. அவங்க ரொம்ப கஷ்டப்படறாங்க. பெங்களூர்லே அத்தை இருக்காங்க. அங்கே வீடு சின்னது. எல்லாரும் அங்கே போக முடியாது” என்றாள் திஷ்யா.
    “நான் சொல்ல வந்தது அது இல்லே. அவங்க எல்லோரும் என் க்வார்ட்டர்ஸுக்கு வரட்டுமே!”
    சிவா திஷ்யாவைப் பார்த்தான்.
    “இட்ஸ் டூ மச் ஃபர் யூ” என்று திஷ்யா சொன்னாள். அப்படி வரட்டுமே என்று சொன்ன வார்த்தைக்கே அவள் மனசிலவ் நன்றி நிரம்பிவிட்டது. பிரீதா மீது வைத்திருந்த ஓரிரு தப்பபிப்ராயங்களும் அதில் மூழ்கிப் போயின.
    ‘பட் திஸ் ஈஸ் மோர் தான் டூ மச் ஃபர் எ கர்ல்M!”
    சிவாவைப் பார்த்து சிரித்து கொண்டே பிரீதா தொடர்ந்தாள்.
    “இந்த ஆண்களுக்கு விக்கிறதுக்கு பெண்ணைத் தவிர இப்ப வேற எதுவும் கெடைக்கலே.”
    “எல்லா ஆண்களுக்குமல்ல” என்று உஷ்ணமாக மறுத்தான் சிவா.
    “ஆல் அஃப் யூ அட்மிட் இட்! ஒய் காண்ட் சம் ஒன் ஃபைட் இட்? ஏன் ஒர்த்தர் கூட இதுக்குப் போராடலே.”
    “அதான் வந்திருக்கேன்.”
    “இன்னிக்கு சாயங்காலமா நான் வீட்டுக்கு வர்றேன். நீயும் நானும் அவர்கிட்டே பேசுவோம். இப்ப இவ நம்ம க்வார்ட்டஸ்ல இருக்கட்டும். அவர் பிடிவாதம் பிடிச்சா கொழந்தைகளை இவ போயி அழைச்சிட்டு வரட்டும்.”
    திஷ்யா குறுக்கிட்டாள்.
    “இல்லே. நான் வீட்டுக்குப் போறேன். நீங்க ரெண்டு பேரும் சாயங்காலம் வாங்க. பேசிப்பாருங்க. ஒத்துக்கலேன்னா கௌம்பி வர்றேன்” என்று நிறுத்தினாள் சிவாவைப் பார்த்து.
    “நல்லது” என்றான் சிவா.
    “ஐ அக்சப்ட். நானும் சிவாவும் சாயங்காலம் வர்றோம்.”
    சிவா எழுந்தான்.
    “நானும் வர்றேன். லெட்ஸ் ஹாவ் எ கூல்டிரிங்க்” என்று அவர்களை வழியனுப்ப வந்தாள் பிரீதா.
    பஸ்ஸில் வரும்போது திஷ்யா கேட்டாள்.
    “ஏன் நீ இங்கே போகப் போறோம்னு மொதல்லே சொல்லலே?”
    “சொல்லியிருந்தா ஒனக்குப் பிடிச்சிருக்காது. நீ அந்த பிரீதாவை அநாவசியமா வெறுத்தே!”
    “சீச்சீ… அவ நல்லவள்.”
    தொடரும்
    Share
  • ரவி வர்மாவின் ஓவியம்

    கவிஜி.

    “இது ஒரு வகை மன நோயா..?” என்றெல்லாம் யோசிக்க நேரமில்லை.

    ரவி வர்மா வேக வேகமாக கிளம்பிக் கொண்டிருந்தான். தோள் வரை புரண்டு நீண்ட தலை முடியை காற்றின் விரல்களில் தவழ விட்டு, இளைஞர்களுக்கே உண்டான மோட்டார் பைக்கில் அதிவேகமாய் போகத் தொடங்கினான்.

    “பகலில் காணும் இடங்களை இரவில் கண்டால் எப்படி இருக்கும்?” என்பது ரவி வர்மாவின் ஆர்வம்… ஆசை… திரில்…

    வெறும் ஆர்வத்தோடு ஒரு போதும் அவன் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்வதில்லை. இன்பம் பேரின்பமாக ஆகும் வரை, துன்பம் பேரிடர் தந்து புரட்டும் வரை, எதையும் அவன் விடுவதில்லை. விடிய விடிய வானம் நோக்கி விழி விரித்துக் கிடக்கும் தொடுவானத்துக்காரன். வண்ணத்துப் பூச்சியின் வாசலெங்கும் தானே ஒரு ‘வெளி’ யாக கிடக்கும் வகையின் வேற்று உருவம். மழை வரும் நாளில் மனம் திறந்து கிடப்பவன். மழை வராத நாளிலும் மனம் திறந்தே கிடப்பதுதான் ரவி வர்மாவின் வேண்டுதல்.

    பகலில் தேடிக் கண்டுபிடித்த ஒன்றோ? அல்லது பகலே தேடிக் கண்டு பிடித்த ஒன்றோ?

    விட்ட இடத்தில் வந்து நிற்கும் வேகம் கொண்டவன். இரவின் மடியில் ஈரம் சுமப்பவன். ஈரம் சொட்டச் சொட்ட, துளிகளின் வழிகளை உயிர் தீண்டத் தீண்ட, உரக்க கத்தி சாகவே வேண்டும் என தற்கொலைகளின் தொடர்பற்று, மீண்டும் பகலில் தொலைந்த இடத்திற்கே சென்று தன் உயிர் காத்துக் கொள்ள துடிக்கும் இரவின் மௌனம், அவனது பயணம்….

    அந்த வகையில் இன்று பகலில் சென்று வந்த கோவை குற்றாலத்திற்குத்தான், உயிர் தேடி இந்த இரவில் சென்று கொண்டிருக்கிறான். கோடையின் பின்புறம் செல்வது போல, வியர்வையும் வெப்பமும் தன்னை உலர்த்திக் கொண்டேயிருக்க, எதிர்க்காற்றில் ஏகாந்தம் தேடி இலை மறை காயாய் புன்னகைத்தே பயணிக்கிறான்…

    “சாலையின் பயணங்கள் தீர்வதேயில்லை… சாலை முடிந்த பின்னும்”

    திடும்மென உதிர்ந்த வரிகளை ஆல்கஹால் பதியாத மூளை ஒன்றில் பதிந்து கொண்டான். பேரூர் சாலை. எதிரே இருக்கும் மலை குடைந்து போவது போலொரு காட்சி. பாரதியின் பார்வையில் காட்சிப்பிழை. அதற்குள்ளும் துளிர்க்கும் நம்பிக்கை என்று திறந்து கிடந்த பட்டன்களை தாண்டி கழுத்தின் வழியே முதுகு தொட்ட தென்றல் கழுத்தைப் பிடித்து, வயிறு கிள்ளி, கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருந்தது.

    ரவி வர்மாவின் கூர் பார்வையும், பார் கூர்மையும்…. காடும் மழையும், காட்சிப் பொருளல்ல, ஆட்சி பொருள். திமிர்களின் தேவலோகம். பசுமைகளின் பெருத்த உடலில் பேரின்பம் தீண்டத் தீண்ட திகட்டுவதேயில்லை. உலகம் மெல்ல மெல்ல தனது கடைசி பெட்டியை கழற்றி விட்டுக் கொள்வது போல, நாகரீக நகர சாலை, அவனை உதிர்த்துக் கொண்டேயிருக்க, உள்ளுக்குள் உருளும் காட்டாற்றின் நிர்வாணத்தை கறுமையாக்கி, அவன் மட்டும் காணும் கண்கள் பெற்றவனாய், அதிசயக் கூட்டு முயற்சியின் புதிய சிறகோடு, செக் போஸ்ட்க்கு பின்னால் இருந்த ஒற்றையடிப் பாதையில் காட்டின் கற்பில் பாதங்களைப் பதிக்கத் தொடங்கினான்.
    பிடித்தவன் பதித்தால் வளரும் கற்பாய், இலை அசைத்து தலையாட்டியது மரம், ஆம், ரவி வர்மா மரங்களின் காதலன்.

    தூரத்தில் தன்னை குறுக்கி, கற்பு காக்க சுவரோடு ஒட்டி உட்காரும் கதாநாயகி போல, மரத்தடியில் பதுங்கி கிடந்தது ரவி வர்மாவின் மோட்டார் பைக்.

    ஹோ ……வென இரையும் வெள்ளிக் கம்பிகளின் தொடர்ச்சி, அருவியாய் முத்துப் பற்கள் சிரிக்க, வெண்ணிலவின் ஒற்றைக் கால் தவம், காதலின் பெருங்கோபம் அல்லது பெருங்காட்டின் முகப்பு வெளிச்சமென தாறுமாறான சிந்தனைகளை சிக்கி முக்கி இரவின் விரல்களில் சொடுக்கெடுத்துக் கொண்டிருப்பதாக முகம் மலர்ந்தான்.

    “இரவு சும்மா வருமா?”…….

    அவன் கண்கள் சிரித்தது. இதோ மலையேறி, எட்டி குதித்தால் பிடித்து விடலாம் போல இந்த வானம். பகல் என்ற ஆடை துறந்து இரவென்னும் நிர்வாணம் பூட்டிக் கொள்ளும் வானம் வெட்கம் துறந்த விழிகளை தன்னெங்கிலும் வாழ விடுகிறது. வாழ்ந்தும் விடுகிறது. கோடை மழை போல வாடைக் காற்று ஜாடையின் அர்த்தம் உயிர் கரையும் நொடிகளில் ஆடை கனமானது அவனுக்கு.

    அந்த வானமும் இந்த பூமியும் அற்புதங்களின் சாட்சி. சாட்சிகளின் நீள்வட்டப் பாதையிலிருந்து ஒரு பெண்ணின் முணங்கல் சத்தம் வர, முகத்தில் கிடந்த முடிக் கற்றைகளை லாவகமாகக் கோர்த்து பின்னோக்கி சரித்தான். அருவியின் இரைச்சலை ‘ம்யுட்’ செய்தான். அவன் சொன்னால் அது கேட்கும். இரவுக் காதலன் இணுங்கினாலும் இலைகளில் கவிதை உதிரும் என்பது அருவியின் போதனை.

    இப்போது நன்றாகக் கேட்டது. ஆம்… அது ஒரு பெண்ணின் அழும் குரல். முணங்களாக மட்டுமே வெளி வர முடிந்த சிறகுகளின் ரத்தக் கசிவு என்பதை உணர்ந்த நொடியில், யானையின் பதிப்பாக ஓசையின்றி, சருகு தீண்டா சபலம் தாண்டி முன்னோக்கி கடந்தான். நடந்தான் என்பது சரியில்லை என்பதால் கடந்தான்.

    கை கால் கட்டப்பட்டு, உடல் முழுக்க நடுக்கம் சுமந்து, வெள்ளுடையில் ஒருத்தி வியர்க்க விறுவிறுக்க அந்த மரத்தடியில் கிடந்த காட்சி ரவி வர்மாவின் மூளைக்குள் மின்னலை வெட்டச் செய்தது. ஓடியவன் அருகில் அமர்ந்து அவளைத் தட்டி எழுப்பினான்.

    அரை மயக்கத்தில் கிடந்த அவள் இன்னும் வேகமாக உடல் உதறி, தலை ஆட்டி, வாய்க்குள் இருந்த துணியுடன் கட்டப்பட்ட கட்டோடு புரண்டு மயங்கினாள். பக்கத்தில் அமர்ந்தவாறே, சுற்றும் முற்றும் பார்த்தான். ஒன்றுமே புரியவில்லை. மனதுக்குள் பல கேள்விகள் இரவுகளை திறந்து விட்டுக் கொண்டேயிருந்தது. அருவியின் இரைச்சல் மீண்டும் கேட்கத் தொடங்கியது.

    “யாரிவள்? யார் இப்படி கட்டிப் போட்டிருப்பார்கள்? யாருக்காவது தெரிந்தால் தன்னையல்லவா மாட்டி விடுவார்கள். காப்பாற்றலாமா? இப்படி இத்தனைக் கொடூரமாகக் கட்டிப் போட்டிருக்கிறார்களே, யாராக இருக்கும், என்னவாக இருக்கும்?” அவன் மனதுக்குள் போராட்டம்.

    “அடக் கடவுளே, இரவைத் தேடி வந்ததிற்கு இது என்ன புது தண்டனை? என்ன செய்ய? விட்டுப் போகவும் மனம் வரவில்லை….” யோசித்துக் கொண்டே அவளின் கட்டுகளையெல்லாம் கலைந்தான். முகத்தில் முத்து முத்தாய் வியர்த்திருந்த துளிகளை உள்ளங்கையால் துடைத்தான்.

    பளிசென்ற முகம், அங்கு இரு நிலவு இருப்பதாக கற்பனை விதைத்தது.

    “பெண்களே அழகுதான். அதுவும் இந்த பெண் கொள்ளை அழகாக இருக்கிறாள். ஒரு வேளை, பேயாக இருப்பாளோ…..?” கண்கள் மிரண்டது.

    கால்களில் கொலுசு மின்னியது,கண்கள் வரை வந்த கவிதை வெற்றுப் பார்வையானது.

    “இவள் ஒரு யட்சியைப் போல இருக்கிறாளே?” மனம் தடம் புரண்ட இறகுகளால் வானம் பார்த்தது. சட்டென ஒரு வானம் விளக்கிய முகம் தெளிவாக பாதையும் விதைத்தது.

    “இவள் ஒரு மோகினியாகவே இருந்தாலும் இவளைக் காப்பாற்றியே ஆக வேண்டும்….”. முடிவெடுத்த மணித் துளியில் மயங்கி கிடந்த யட்சியை தூக்கி தோளில் போட்டான். யாரோ பின்னாலிருந்து அவன் முதுகில் ஓங்கி உதைத்தார்கள்.

    தோளில் கிடந்தவளின் கனமும் சேர, கண நேர தடுமாற்றத்தில் அவளோடு முன்னோக்கி சென்று செடிகளூடே விழுந்தான். சற்று சுதாரித்துக் கொண்டு எழுந்தவனின் முன்னால் நான்கு பேர் கோபங்களின் உச்சமாய் பற்கள் கடித்து நிற்க, ரத்தம் வரும் வரை காத்திருந்து தொட்டுப் பார்த்துப் பின் அடிக்கும் அளவிற்கு பொறுமை இல்லை.

    சில பேரை பார்த்து, நிதானமாக அடிக்கவெல்லாம் முடியாது. பார்க்க பார்க்க அடிப்பதை விட, பார்த்தவுடன் அடித்து துவைப்பது, மூன்று வரியில் முழுதும் புரிந்துவிடும் ஹைக்கூ….

    மூன்று மூன்று வரியாக நால்வரையும் மாற்றி மாற்றி வெளுத்தெடுத்தான். அடிக்க அடிக்க கோபம் குறையவேயில்லை. எப்படி குறைப்பது? கோபத்தை குறைத்தே ஆக வேண்டும். சட்டென முடிவெடுத்தவனாய் நிலாவின் சாட்சியாய், ஒவ்வொருவனின் காலையும் பற்றி இழுத்து, விழுந்து கொண்டிருக்கும் அருவியில் மலை மேலிருந்து …..தூக்கி… தூக்கி… தூக்கி… தூக்கி வீசினான்.

    இரவு மிரண்டது. உடல் சுருண்டு கிடந்த யட்சியை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு, காட்டை விட்டு வேக வேகமாக வெளியேறியவன், நடந்து கொண்டேயிருந்தான்.

    “அவனுங்கள புடிச்சு, யாரு என்னன்னு கேட்ருக்கலாமோ?

    ச்சே…… ச்சே ….. கோபம் இப்பிடியா உடம்பை மறைக்கும். சரி சரி, சீக்கிரம் காட்டை விட்டு வெளியே போய்டணும்…..”

    ரவி வர்மாவின் மனம் அதுவாகவே பேசிக் கொண்டிருக்க, கால்களே சுமையாக, அவளை தூக்கிக் கொண்டே தூங்கிய மௌனத்தோடு விழித்தவன், பாதை மாறி, மலை உச்சியில் போய் திக்கு முக்காடி நின்றான். என்ன ஏது என்று குழம்பிய பார்வையோடு, மயங்கி கிடந்தவளை மெல்ல இறக்கி மலை உச்சி சமவெளியின் சரித்தான், மனதுக்குள் விழுந்த அருவியை அடக்க முடியாமல் தவித்த படியே.

    காத்திருந்த கண்கள் திறந்து கொண்டது. முகம் திறந்த சாவிகளாய், உச்சி மலைக் காற்றும், பிச்சிப் பூ வாசமும், உள்ளூர கிறங்கி தவித்த உணர்வுகளை கிள்ளி வைக்கத் தொடங்கியது.

    “யாரிவன்?” என்று கூர்ந்து கவனித்து பின் கத்தினாள். காடு முழுக்க எதிரொலித்த யட்சியின் குரலில் சங்கீதம் தேங்கி கிடப்பதாக சட்டென கல் விழுந்த குளமாய், சலனப்பட்ட ரவியின் பார்வையில் வளையம் விரிந்தது. அவள் மீண்டும்… மீண்டும்… மீண்டும்… மீண்டும் கத்தினாள். காற்றின் விரலுக்கு கற்றைக் கூந்தலை தந்தவன், வானம் நுகர்ந்து நின்றான்.

    யட்சி மிரட்சியோடு கத்திக் கொண்டே அங்கும் இங்கும் ஓடி, பின் மீண்டும் கத்திக் கூச்சலிட்டு மனம் நடுங்கி, திகைத்து, பயந்து, கீழே விழுந்து, உருண்டு, பின் நிதானிப்பது போல நிதானம் இழந்தவளாய் பரபரத்து, என்ன செய்கிறோம் என்று எதுவும் தெரியாதது போல, அவனை நோக்கியே ஓடி… அவனை பின் புறத்திலிருந்து இறுக கட்டி அணைத்துக் கொண்டாள். அவளின் மார்புக்குள் மாட்டிக் கொண்ட விழிகளின் சிமிட்டலாய் அவளின் இதயத் துடிப்பு. அது தீரா தாகத்தின் ஓடையை வியர்வையாக்கிக் கொண்டே இருந்தது. நெஞ்சைத் துளைத்து வெளியேறும் வித்தை கற்றவளோ! கைகளின் பிடியை மெல்ல தளர்த்தி, மெல்ல மெல்ல திரும்பியவன், விழி நோக்க, இதழ் நோக்க, விரல் கொண்டு கழுத்தெங்கும் உயிர் காக்க, யட்சி நடுங்கிக் கொண்டே இன்னும் இன்னும் நெருங்கி அவன் நெடி நுகர்ந்தாள்.

    இரவின் வேலைப்பாடு கசகசத்து நிற்க, செய்வதறியாமல் இருவரும் நேருக்கு நேர் நின்று, விழி மாற்றி தின்று, வானம் பூமி இடம் மாறி வித்தை கற்பதாக விரல் கோர்த்து நிற்கையில், அருவியின் அலறல் அவர்களை கலைத்து விடும் ஓவியமாகவே விழுந்து கொண்டிருந்தது.

    எது கனவு… அவளே கனவா…..
    எது நிஜம்… அவளே நிஜமா?

    கண்களுக்குள் நெல்லிக்கனி சாத்தியமா? நிலவொளியின் இரவில் அவள் புது வண்ணம் பூசி நிற்கிறாள். பூங்காற்றில் ஒரு தேகம் விளைந்தது எப்படி? மெல்லிடை மௌனங்களில் மெய்ம் மறக்க செய்யும், இலைகளில் தங்கிவிட்ட மழைத் துளியென சிலிர்ப்பை உதிர்ப்பவளா? விழி நோக்கின் கூர் வாள். இதழ் நோக்கின் மழை தூறும்.

    வேகத் தடைகளில் சிக்கிய வாகனம் ஆடி அசைந்து நின்று நிதானிக்கும் தருணத்தின் நுனி பிடித்து, பட்டமாக பறக்கும் மனதை சற்று நேரம் கடந்தவனோ! அவன் பெருமூச்சில் காடெரிக்கும் மூங்கில் வாசம் கொண்டவனோ…..?

    காதலின் உச்சம் மரணம். மரணத்தின் மிச்சம் இந்தக் காதல். தான் யார், நான் யார், யார் யார், யார் யார்? தெரியவில்லை. தெரிய வேண்டாம். பூலோகம் மறைந்து ஒரு புள்ளியாகி நிற்கையில் அதை பொட்டாக்கி வைத்துக் கொள்ள, நெற்றியில் வாழும் காதல். உடலற்று போகும் உயிர் பற்ற, யுத்த கதறல். யுத்தம் நெஞ்சோடு மார் நிற்கும் வித்தை, வித்தை துளைத்து வெளியேறும் சப்தம்.

    மூங்கில் வாசிக்கும் காற்றில் புல்லாங்குழல், அவள் குழலானது. பட்டு பட்டு, தொட்டு தொட்டு, உயிர் வாசம் கலந்து, உணர்வாகி நெருங்கி, இமை மூடும் கணத்தில் செத்தாலும் சுகமே. அவன் கொன்றாலும் தகுமே. அவள் என்ற அவனும், அவன் என்ற அவளும், எதுவென்ற எதுவாகவோ, எது வென்ற எதுவாகவோ மறதிகளின் பிரபஞ்சம் போல, பால்வெளி தேசத்து கடுங்குளிராகி, பழங்கதை மறந்த பருவங்களின் பதியலை, தேகம் கலந்த போது, தேகமில்லை அங்கே, தேநீர் சூட்டின் கதகதப்பில், காடெங்கும் சிறகடித்த பறவைகளின் நகல்களாய் இறக்கை முளைத்தார்கள்.

    விரல் கோர்த்து விழி கடக்க, விடியல் வந்து இசை வார்த்தது.

    கதவு தட்டப்படும் சத்தம் ஆழ் கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பது போல, மூளையைத் தொட்டு தொட்டு ஒளிந்து கொண்டிருந்தது. கிடைத்து விட்ட இரவென சூடேறிக் கிடக்கும் மணல் குன்றுகளிலிருந்து ஒரு யட்சி மேலெழும்பி வந்து காது கடித்த உணர்வில் திடுக்கிட்டு விழித்தெழுந்தான் ரவி வர்மா.

    அவனின் கண்கள் சிவந்து கிடந்தன. காடுகளின் வாசம், சுவாசமாகிக் கிடப்பதாக நினைத்துக் கொண்டே கண்கள் கசக்கி, தலை முடி சரி செய்து கொண்டே கதவு திறந்தான்.

    காற்றில்லா தேசமோ இது? வெயில் மட்டும் வெள்ளிகளை உதிர்த்துக் கொண்டிருக்க, வியர்த்த முகத்துடன், சிவந்த தேகத்துடன், சிறு புன்னகை இதழில் அடக்கி, குறு நாணம் கண்கள் சுமக்க, கிறுகிறுக்கும் மேடுபள்ள வளைவுகளுடன் வாசல் கொண்ட புது கோலமாய் நின்று கொண்டிருந்தாள் தேவதை போலொரு பெண்ணொருத்தி….

    அறைத் தோழன் வெற்றுக் காகிதமாக வெறித்திருக்க, கொட்ட கொட்ட விழிப்பதற்கே, கொக்கின் கால்களின் தவங்களை கருவாக்கிக் கொண்ட கண்கள் கொண்ட அவள், என்ன வீட்டுக்கு வந்தவங்கள, உள்ள கூப்ட மாட்டீங்களா?” என்றாள். குரலில் குறும்பு மிதந்தது. அரும்பு முடிகளில் மேலுதடு, மெல்லிசை மீட்டியது.

    “ம்……. கூப்டலாம்…….. ஆனா நீங்க……. ” என்று முணங்கிய ரவிவர்மாவின் மனதுக்குள் மலையளவு தடுமாற்றம்.

    சட்டென இனம் கண்டு கொண்ட நினைவுகளில் “இவள் எப்படி இங்கே?” கேள்வி வானம் கொத்திய பறவையின் அழகுகளாகி கீறிட்டது.

    “என்னங்க, ஏதோ பேயப் பார்க்கற மாதிரி, பாக்கறீங்க?” என்றாள் அவள். இன்னும் வெட்கச் சிரிப்பை அடக்கவே முயன்று கொண்டிருந்தாள்.

    ரவி வர்மா, செய்வதறியாத முகம் ஒன்றை மாட்டிக் கொண்டிருந்தான். அவன் உடல் நடுங்கியது. நடுக்கமே வியர்வையை பிடுங்கியது.

    அறைத் தோழன், அருகே வந்தான். “என்னடா? புதுசா பொண்ணு! அதும் வீட்டுக்கே? ம்ம்ம்…… நடத்து நடத்து……..” என்றான் சன்னமான குரலில்.

    “யாரடா… இவன் வேற…….” என்று நண்பனை முறைத்து விட்டு, “ஏங்க, உங்கள எனக்கு தெரியல, ஏதாவது அட்ரஸ் மாறி வந்திட்டீங்களா?” என்றான் ரவி வர்மா அப்பாவியாக.

    அவன் மனதுக்குள் ஒரு கூடை யோசனை…”இவள் எப்படி நேராக?”

    “அடப்பாவி, நைட் முழுக்க காட்டுக்குள்ள கூட இருந்துட்டு இப்போ யார்னா கேக்கற?” அவள் கண்களில் கொப்பளித்த கோபம், நண்பனையும் சேர்த்து எரிக்க முயற்சித்தது.

    தலையை பிடித்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். தலைக்குள் அருவியின் பேயாட்டமும், உச்சி மலைக் காற்றின் பதட்டமும், முற்களை பதிப்பதாக தடுமாறினான்.

    சுவற்றில் சாய்ந்து, நிலை தடுமாறியவனை சட்டென எட்டிப் பிடித்து அமர வைத்தான் நண்பன்.

    “என்னடா நடக்குது? இந்தப் பொண்ணு யார்.? எந்த காட்டுக்குள்ளடா போன? ஒரு நைட் உன்னத் தனியா விட்டுட்டு எங்கயும் போக முடியல. இந்த பகல்ல பாக்கற மேட்டர, நைட்டிலயும் பாக்கற உன் பாழாப் போன பைத்தியகாரத்தனத்த எப்பதான் நிறுத்தப் போறாயோ?

    ………………………………………………………………………………………

    “சொல்லுடா, டென்சன் பண்ணாத, நைட் எங்க போன? இந்தப் பொண்ணு யாரு? சொல்லுடா….”

    சரி சரி என்பது போல் பார்த்த ரவி வர்மா தன் நண்பனை அருகில் வருமாறு ஜாடை செய்தான். ஒரு கண்ணில் அந்த பெண்ணும் இருக்கத்தான் செய்தாள். இருந்தும் ஏதோ ரகசியம் பேசுபவன் போல அவன் காதில் பேசத் தொடங்கினான்.

    “மச்சான், நைட் நான் எங்கயும் போகலடா… ஆனா……” என இழுத்தான்.

    “என்ன ஆனா? அதான் சொல்ல வந்துட்டீல்ல, சொல்லிடு. அப்பத்தான் ஏதாவது முடிவுக்கு வர முடியுண்டா…..” நண்பன் கண்கள் சிவந்தான்.

    “சரி, நான் காட்டுக்குள்ள போகல. ஆனா நைட் முழுக்கக் காட்டுக்குள்ள இருந்த மாதிரியும், இந்த பொண்ணக் காப்பாத்தின மாதிரியும் ஒரு கற்பனை எனக்கு வந்துச்சு…..” என்றான் படு சீரியஸாக.

    “என்னது கற்பனையா…..? லூசாடா நீ? நைட் முழுக்க கூட இருந்துட்டு, இப்ப கதை, கற்பனை, கனவுன்னு உளர்ற…” என்ற அவள் தலை சுற்றி விழாதது தான் பாக்கி. பூமி தன்னை சுற்றாமல் சூரியனை சுற்றுவது போல் உணர்ந்தாள்.

    தலையில் கை வைத்து அமர்ந்தான் தோழன்.

    “இதுல யார் லூசு? அனேகமா நாந்தான்னு நினைக்கறேன்…” என அவனாகவே புலம்பினான். அந்த அறையே ஆகாயத்தில் மிதப்பதாக உணர்ந்தான். உணர்வை கலைத்தது ரவியின் சொற்கள்.

    “கதையோ கனவோ இல்ல. அது முழுக்க முழுக்க என் கற்பனை. தூங்கும் பொது வருவது கனவு. தூங்குவதற்கு முன் வருவது கற்பனை. கதையில் இரண்டும் வரும்”

    “அடிங்……. வாய மூடு வெளக்கெண்ண…. விளக்கம் குடுக்கறாரு” நண்பனை அடக்கிய நண்பன், திரும்பி அந்தப் பெண்ணை சந்தேகத்தோடு பார்த்தான்.

    “சத்தியமா நான் சொல்றது உண்மை. இல்லேன்னா இந்த அட்ரெஸ் எனக்கெப்பிடி தெரியும்? எப்படி காட்டுக்குள்ள போனேனே தெரியாத என்னை இவர் காப்பாத்தினது உண்மை. கண்டதும் காதல் வயப்பட்டது உண்மை. இரவோட கவிதையா நாங்க மனம் மாத்திக்கிட்டது உண்மை. பகல்ல பாக்கற இடத்தை நைட்டிலயும் பாக்கற வினோதமான ரசனை அவருக்கு இருக்குனு என்கிட்டே சொன்னது உண்மை. என்னை ஹாஸ்பிட்டல்ல விட்டுட்டு அவசர வேலை இருக்கு வந்தர்ரேன்னு சொல்லிட்டு, ஒரு வேளை லேட் ஆனா வீட்டுக்கு வந்துடுன்னு சொல்லி இந்த வீட்டு முகவரியை இவர் சொன்னது உண்மை. ஆனா, இப்போ கனவு கற்பனைன்னு இவர் ஏன் மாத்தி பேசறார்னு எனக்கு புரியல….”, கிட்டத்தட்ட அழும் முகம் வாய்க்கத் தொடங்கியிருந்தது அவளுக்கு.

    ரவி வர்மா புன்னகைத்தான். புன்னகை சிரிப்பானது. சிரிப்பு வெடிச் சத்தமானது.

    நண்பன் செய்வதறியாமல் திகைத்தான். இதோ இருக்கிறேன் என்பது போல, வீதி நிறைந்த காற்று வீடெங்கும் விருட்சமானது. உயிர் பிரியும் வழிகளால் இரையத் துவங்கியதாக அவர்களை சுழன்றது.

    இருவரையும் மாறி மாறி பார்த்தான் தோழன் .

    “ஒரே சம்பவம். இவள் நிஜம் என்கிறாள். இவன் கற்பனை என்கிறான். யாரை நம்புவது? இவள் ஏமாற்று வேலையில் தகவல் திரட்டி வீடு வரை வந்து ஏமாற்றுகிறாளா ? இவன் நிஜங்களையும் கற்பனை என்று நம்பும் மன நிலைக்காரனா?

    எது நிஜம்.. எது பொய்…..” தலை சுற்றி விழி பிதுங்கி நின்ற தோழனை, ரவி வர்மாவின் குரல் இன்னும் அதல பாதாளத்திற்கு அருவியாய் அழைத்து செல்லத் தொடங்கியது.

    “டேய்….. சத்தியமா இது கற்பனைதான். ஏன்னா, கற்பனைல நடந்த ஒரு விஷயத்தை இந்த பொண்ணு சொல்லல. அதாவது நிஜமா நடந்திருந்தா அதையும் சொல்லிருக்கனணுமில்ல. என் கற்பனை அவளுக்கு தெரியாதுங்கறது தான் உண்மை. அதான் அந்த ஒரு விஷயத்தை இவ சொல்லல. சொல்லவும் முடியாது….”எப்படியும் தான் ஜெயித்து விடப் போகிறோம் என்பதாக சட்டென ஒரு உற்சாக வெளிப்பாடு ரவி வர்மாவிடம் வெளிப்பட்டது.

    “மறுபடியும் என்ன சொல்லிக் குழப்ப போறானோ….?” என்பது போல நண்பன் பார்க்க, அவள் மூளை செயல் இழந்தவள் போல ரவி வர்மாவை மலங்க மலங்க விழித்தாள்.

    “என்னோட கற்பனையில, நான்தான் இவள கடத்திட்டு போய், காட்டுக்குள்ள கட்டிப் போட்டேன். அப்புறம் நானேதான் இவள காப்பாத்தினேன். காப்பாத்தின பின்னால வழி மாறிப் போறது போல மலை உச்சி போனது உண்மை. அங்க கண நேரத்துல நாங்க காதல்ல விழுந்தது உண்மை. காதலும் இரவும், இவ கடத்தபட்டு கட்டிப் போடப்பட்ட கொடூரத்த கூட மறக்க வைச்சுது. இவ மறந்திட்டா, அது காதலோட சாபக் கேடு. நான் கூட காதல்ல எல்லாம் மறந்தேன். எல்லை கூட மறந்தேன். காதலின் உச்சம் மரணம்னு இவ முனங்கிணப்போதான் என் இலக்கு நியாபகம் வந்துச்சு. இவள மலை உச்சிலிருந்து தூக்கி கீழே வீசி கொன்னேன்.”

    ……………………………………………………………………………………………….

    ஆமா….. கொன்னேன். ஆனா, இவள கொன்னுட்ட மேட்டர இவ இங்க சொல்லவே இல்ல. இதுலேர்ந்தே தெரியல, இது முழுக்க முழுக்க கற்பனைன்னு. ஆனா நிஜம்னு இவ ஏன் குழப்பறாரான்னுதான் தெரியல. யார் என்னனு விசாரிடா. இல்ல போலிஸ்…………….”, புன்னகை மாறாமல் ரவி வர்மா பேசிக் கொண்டே இருக்க…

    விரல் சுட்ட நெருப்பாய், செயல்படத் தொடங்கிய மூளை கொண்டவள், விரிந்த கண்களோடு, விபரீதம் உணரத் தொடங்கினாள். உயிரின் கனம் சுமந்து நின்றவள், இப்போதுதான் புரியத் தொடங்கினாள். உடல் என்ற ஒன்றை தான் சுமக்காமல் நிற்பதை. உடல் தழுவிய கைகளில் ஒன்றும் கிடைக்காமல் தடுமாறியவள், தன்னை தூசுகளின் மொத்தம் கடந்து போவதை மிரட்சியோடு கவனித்தாள்.

    நண்பன் மயங்கிச் சரிந்தான்.

    காதலின் கண்களில் தன் மரணத்தை, தவணை முறையில் நினைவு படுத்தினாள். மரணமே காதில் கிசுகிசுத்தது அவளை. அவள் நேற்றிரவே இல்லாமல் போனதை உணர்ந்த நொடியில், கண்கள் மூடி அமர்ந்திருந்த ரவி வர்மாவின் தலைக்கு மேல், சுவற்றில் காற்றோடு பட படத்துக் கொண்டிருந்த காலண்டர் 2017 என்று வருடத்தை காட்டிக் கொண்டிருந்தது.

    அழுது கொண்டும், அரற்றிக் கொண்டும் எதற்காக இந்த மரணம் என்று புலம்பிக் கொண்டும் தூசுகளிடம் ஊர்ந்து கொண்டு திரிந்தவள், மெல்ல கண்கள் அற்று போனாள்.

    காலண்டர் பின்னோக்கி படபடக்க 2015- ஜூன் மாதத்தில் ஒரு நாள்…….

    அவள், அவனை செருப்பால் அடித்தாள். கல்லூரியே திரண்டு நின்று வேடிக்கை பார்க்க, இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி செருப்பால் அடித்தாள்.

    “உன் மூஞ்சியக் கண்ணாடில பாத்திருக்கியா…..யூ….. பா…………. ஆளும், தலயும், ட்ரசும்…… பட்டிக்காட்டுப் பரதேசி….”

    திட்டிக் கொண்டே கடந்து விட்டிருந்தாள் அந்த அழகிய அல்ட்ரா மாடர்ன் பெண்.

    ஓடி வந்த நண்பன் அவனைத் தூக்கி விட்டு, சமாதானம் செய்து அவள் சுருட்டி வீசிய கடிதத்தில் பதிந்து கிடந்த ஆங்கில வரிகளைப் படித்தான்.

    அத்தனை வரிகளின் ஒட்டு மொத்த நோக்கமும் கலவியாகவே இருந்தது.

    அடிவாங்கி, அவமானத்தில், கூனி குறுகி, நடுங்கிக் கொண்டே அமர்ந்திருந்த ரவிச்சந்திர மூர்த்தி, தன் நண்பனின் அர்த்தமுள்ள கேள்வியின் பார்வைக்கு கண்கள் கலங்க பதிலலித்தான்.

    “நம்ம சீனியர் யட்சிகாதான் லவ் லட்டெர இங்லீஸ்ல எழுதி குடு, அப்பத்தான் சிட்டி புள்ளைங்களுக்கு பிடிக்கும்ணு எழுதி குடுத்தாங்க…..”

    குறிப்பு: தன்னை ஒரு கதாநாயகனாக நினைக்கும் போது, யாரிடமாவது சண்டை போடுவது போல நடிப்பது வெற்றி பெற்றவனாக நினைப்பது அவனின் கற்பனையின் மைல் கல்.

    Share
  • மாண்டூக்கிய உபநிஷத்து — எளிய விளக்கம் – 2

    ஒரு அரிசோனன்

    ஆத்மன் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறான், எல்லாமே ஆத்மா ஆத்மன்தான் என்பது —  வேதங்களில் குறிப்படப்படும் “அஹம் ஏவ ப்ரஹ்மன் [நானே பரம்பொருள்]” என்பதை அடிப்படையாகக் கொள்கிறது.

    அனைத்தையும் தன்னிலிருந்து நீக்கிப் பார்க்கும் உணர்வு விழித்திருக்கும் நிலைக்கே உரித்தானது என்று நிறுவுகிறது.

    இனி அது எவ்வாறு கூறப்படுகிறது என்பதைக்கண்ணுறுவோம்…

    MMU 4

    ஸ்வப்னஸ்தா4னோ அந்தப்ப்ரக்ஞ: ஸப்தாங்க ஏகோநவிம்சதிமுக2: ப்ரவிவிக்தபு4க் தைஜஸோ த்3விதீய: பாத3:                                                                                                           — 4

     கனவுநிலையில் உள்ளறிவானவன், ஏழுறுப்புகளும், பத்தொன்பது வாய்களுமுள்ளவனும்.  நுட்பப்பொருள்களை விரும்பும் தைஜஸன் இரண்டாம் பகுதியாகிறான்.                          — 4

    பதவுரை: தைஜஸ: – தைஜஸன் [என்ற]; த்3விதீய: பாத3: –  இரண்டாம் பகுதியானவன்; ஸ்வப்னஸ்தான: – கனவில் நிலைபெற்றவன்; அந்த: ப்ரக்ஞ: – உள்ளுணர்வானவன்; ஸப்தாங்க: – ஏழு உறுப்புகளால் ஆனவன்; ஏகோநவிம்ஸதிமுக2: – பத்தொன்பது வாய்கள் படைத்தவன்; ப்ரவிவிக்தபு4க் – நுண்ணுணர்வால் அறியப்படும் பொருள்களை அனுபவிப்பவன்.

    விளக்கம்:  ஆத்மனின் இரண்டாம் பகுதிக்கு தைஜஸன், அதாவது ஒளிமயமானவன் என்ற பெயர் இடப்பட்டுள்ளது. ஏன் என்னும் கேள்வி எழுமுன்னரே அவன் உள்ளுணர்வானவன் என்று விடையும் கொடுக்கப்படுகிறது

    Vaiswanaran

    விழித்துக்கொண்டிருக்கும்போது நாம் வெளி உறுப்புக்களான கண், காது, மூக்கு போன்றவாய்களால் பார்த்து, கேட்டு, நுகர்ந்து அறிகிறோம் —  நமக்குள் இருக்கும் ஆத்மன் அறிகிறான்.  உறங்கும்போது, வெளியுறுப்புக்கள் வேலை செய்வதில்லை.  வெளியுறுப்புக்கள் மூலம் அறிந்துகொண்ட விஷயங்கள் நுண்ணறிவாகக் கனவுலகில் காணப்படுகின்றன.

    எனவே, கனவுலகில் ஆத்மன் அனுபவிப்பது எல்லாமே நுண்ணறிவால்தான்.

    உதாரணமாக, கனவில் ஒருவன் பயணிக்கலாம்.  ஒரு வினாடிக்குள் அவன் உலகத்தின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்குச் சென்றுவிடலாம்.  நனவுலகில் கற்பனையாக இருக்கும் அது, கனவுகில் ஒரு நிஜம்போலத் தோற்றமளிக்கிறது.

    நனவுலகில் வெளி உறுப்புகள் மூலம் உள்ளப்படும் அனைத்தும் கனவுலகில் நுண்ணுர்வாக உள்ளப்படுகின்றன.  ஆயினும் உடல் எந்த மாற்றத்திற்கோ உட்படுவதில்லை.  கனவில் நம்மை ஒரு மிருகம் கடித்துக் குதறலாம், ஆனால் உடலில் எந்த வலியும் ஏற்படுவதில்லை.  வெளியுலகில் நடக்கும் அனைத்தையும் ஆத்மன் கனவுலகிலும் அனுபவிக்க இயலுவதால், நனவுலகில் சொல்லப்பட்ட அத்தனை உறுப்புகளும், வாய்களும் தைஜஸனுக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

    கனவில் காண்பது அனைத்தும் மனத்திலாயே காணப்படுகிறது, கேட்கப்படுகிறது, உணரப்படுகிறது.  அவை வெளி உலகத்தின் பதிவுகளே!

    தைஜஸன் —  அதாவது, ஒளிமயமானவன் என்று ஏன் அழைக்கப்படுகிறான்?

    அவன் சாட்சியாக அனைத்தையும் அறிதல் திடப்பொருள்களாக அல்ல – ஒளிரும் வடிவங்களாகவே.  வைஸ்வாநரன் வெளியில் காணும் திடப்பொருள்களால் அறிந்தால், தைஜஸன் எண்ணங்களாகவும், பதிவுகளாகவுமே அறிகிறான்.

    ஆதலால் அவனது அனுபவங்கள் நுட்பமாக, சூட்சுமமாகவே இருக்கின்றன.

    ஆத்மனின் மற்ற இரண்டு நிலைகள் என்ன?  அவன் எப்படி அறிகிறான்?  எப்படி உணர்கிறான், எதை, எப்படி அனுபவிக்கிறான்?

    அதை அடுத்த சுலோகம் சொல்கிறது…

    MMU 5

    யத்ர ஸுப்தோ ந கஞ்சன காமம் காம்யதே ந கஞ்சன ஸ்வபனம் பஸ்யதி  தத்ஸுஷுப்தம் ஸுஷுப்தஸ்தா2ன ஏகீபூ4த: ப்ரக்ஞானக4ன ஏவாநந்த3மயோ ஹ்யானன்த3பு4க் சேதோமுக2: ப்ராக்ஞஸ்த்ரீதீய: பாத3:                                                                                                     — 5

    எங்கு தன்னறிவில்லாதவன் [உறங்குபவன்] ஒரு விருப்பத்தையும் விரும்புவதில்லையோ, ஒரு கனவையும் காண்பதில்லையோ, அது ஆழ்ந்த உறக்கநிலை [சுஷுப்தி ஆகிறது].  ஆழ்உறக்கநிலையில் [இருக்கும் ஆத்மன்] ஒன்றாகவே ஆனவனாகவும், அறிவின் குவியலாகவும், ஆனந்தமே உருவாகவும், ஆனந்தத்தை அனுபவிப்பவனாகவும், அறிவே முகமாவும் [கனவுக்கும் நினைவுக்கும் பாலமாக], அறிவாளியாகவும் மூன்றாம் பகுதியாகவும் இருக்கிறான்.                                                               — 5

    பதவுரை: யத்ர – எங்கு;  ஸுப்த:[ஆழ்ந்து உறங்கும்] தன் நினைவு இல்லாதவன்;  காமம் கஞ்சன ந காமயதே – ஆசைப்படு[ம் பொருள்களில்]தலில் சிறிதும் விருப்பபடுவதில்லையோ;  ஸ்வபனம் கஞ்சன ந பஸ்யதி – கனவுகள் சிறிதும் காண்பதில்லையோ;  தது – அது;  ஸுஷுப்தம் – ஆழ்உறக்கநிலை [ஸுஷுப்தம் ஆகிறது];  ப்ராக்ஞ: – அறிவாளியான [ஆத்மன்];  ஸுஷுப்தஸ்தா2ன – ஆழ்உறக்கநிலையில்;  ஏகீபூ4த: – ஒன்றாகவே [எதிலிருந்தும் வேறுபடாமல்] இருக்கிறான்;  ப்ரக்ஞானக4ன ஏவ; – [அனைத்து] அறிவின் குவியலாகவே;  ஆநந்த3மய: ஹி – ஆனந்தத்தின் உருவமாகவே;  ஆனன்த3பு4க் – மகிழ்ச்சியைத் துய்ப்பவனாக;: சேதோமுக2: – அறிவையையே முகமாகவும்கொண்டு [கனவுக்கும் நினைவுக்கும் பாலமாக/கதவாக]; த்ரீதீய பாத3 மூன்றாம் பகுதியாகிறான்.

    விளக்கம்:  இந்தச் செய்யுளில் ஆழ்உறக்கநிலை, அல்லது ஸுஷுப்தி விவரிக்கப்படுகிறது.  மனிதன் உறங்கும்போது இருவிதமான உறக்கநிலைகளில் இருக்கிறானென்று அறிவியல் சொல்லுகிறது. கனவுகளுடன் கூடிய உறக்கத்தை REM (Rapid Eye Movement) sleep என்றும், கனவுகளில்லா உறக்கத்தை NREM (Non-Rapid Eye Movement) sleep என்றும் உறக்க வல்லுனர்கள் பிரித்திருக்கிறார்கள்.

    மேலும், கனவில்லா உறக்கத்தில் எண்ணங்கள், நினைவுகள் இருக்கின்றன, ஆனால் அவை சிதறல்களாக இருக்கின்றன என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  இதையே மாண்டூக்ய உபநிஷத்து அறிவின் குவியல் என்று குறிப்பிடுகிறது.

    அதுமட்டுமா, ஆழ்ந்த உறக்கத்தில் உடல் தன்னை பண்டை நிலைமைக்குத் திரும்பக்கொணர்கிறது என்றும் அறிவியல் கூறுகிறது.  கட்டற்ற மகிழ்ச்சி நிலையில் இருக்கும்போது உடல்நலம் தேறுகிறது என்பதை நாம் அறிவோம்.  ஆகவே, ஆழ்ந்த உறக்கத்தில் ஆனந்தமாக இருக்கும்பொது உடல் அன்றாடம் ஏற்படும் தேய்மானத்தைச் சரிசெய்கிறது.

    இன்னும் ஒன்று —  ஆழ்உறக்க நிலையிலிருக்கும்போது ஆணவம் [ego] மறைகிறது.  அங்கு ஐம்புலன்களின், ஐயுறுப்புகளின் தொடர்பும் தாற்காலிகமாக விட்டுபோகிறது.  அங்கு நாம் மறைந்துவிடுகிறோம் — நமது பெயர், நமது உள்ளறிவு, நமது விருப்புவெறுப்புகள், பகை, நட்பு, உறவுகள், சமயம், சாதி, மொழி, நாடு ஏழை செல்வந்தர் என்ற நினைப்பு, வலிந்தவர், மெலிந்தவர் என்ற இறுமாப்பு, ஆண், பெண் என்ற உணர்வு, — இவை எல்லாமே மறைந்துதான்போய்விடுகின்றன.  அப்படிப்பட்ட நிலையில் ஏகீபூ4த”மாக, ஒன்றிப்போன நிலையில் இருக்கிறோம் என்பதே உண்மை.

    நமது துயர்கள், இடுக்கண்கள், தேவையற்ற பூசல்கள் நாம் விழித்திருக்கும்போதும், கனவுகாணும்போதும்தானே உண்டாகின்றன!  தூங்குபவருக்கு அது ஏது!

    அந்தநிலையில் நாம் துய்ப்பது ஆனந்த – மட்டற்ற மகிழ்ச்சி நிலைதானே!

    dreamless sleep

    ஆத்மனின் மூன்றாம் பகுதி சேதோமுகன் என்றும் சொல்லப்படுகிறது. ஆத்மனின் இப்பகுதியை நம் மனத்தின் விழிப்புநிலை — விழித்திருக்கும்போது நாம் பெறும் பட்டறிவாகத் தோன்றும் அனுபவங்கள் – இவைதான் விழிப்புக்கும் கனவுநிலைக்கும் இடையே உள்ள கதவு என்றும் அறியலாம்.

    மேலும் இந்நிலையில் இருக்கும் ஆத்மனை ஏன் சிறந்த அறிவாளி என்று கூறவேண்டும்?

    விழித்திருக்கும் நிலையிலும், கனவுலகில் இருக்கும் நிலையிலும் ஆத்மனின் அறிவு மாறுபாட்டை உடையதாகவே இருக்கிறது.  அதாவது விருப்பு-வெறுப்புகள், பகை, நட்பு, உறவுகள், சமயம், சாதி, மொழி, நாடு, ஏழை-செல்வந்தர், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற நினைப்பு, வலிந்தவர், மெலிந்தவர் என்ற இறுமாப்பு, ஆண், பெண் என்ற உணர்வு, இவை எல்லாமே இருக்கின்றன.

    ஸுஷுப்தி [ஆழ்உறக்க] நிலையில் இருக்கும்போது இந்த அறிவுக்கு எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லை.  எல்லாமே ஒன்றுதான். ஆக அறிவு அறிவாகவே, மாறுபாடுகள் இன்றி, வெளிஉலக அனுபவங்களால் ஏற்பட கலப்பு இல்லாமல் தூய அறிவாகவே உள்ளது. இப்படி இருக்கும் ஆத்மனை அறிவாளி என்றே மாண்டூக்ய உபநிஷத்து அறிவிக்கிறது.

    இப்படி ஆழ்உறக்க நிலையில் இருக்கும் இந்த ஆத்மன் யார்?

    அடுத்த செய்யுளில் விளக்கம் கிடைக்கிறது…

     MU 6

    ஏஷ ஸர்வேஸ்வர: ஏஷ ஸர்வக்ஞ எஷோஅந்தர்யாம்யேஷ யோனி: ஸர்வஸ்ய பிரப4வாப்யயௌ ஹி பூ4தானாம்.                                                                                               — 6

    இவர் எல்லாவற்றிற்கும் இறைவன், இவர் அனைத்தையும் அறிந்தவர், அனைத்துக்கும் இவர் உள்ளில் இருப்பவர், உண்டானது, உண்டானவைக்கும், அழிபவைக்கும்   இவரே மூலத்தானம் – 6

    பதவுரை: ஏஷ – இவரே;  ஸர்வேஸ்வர:அனைத்துக்கும் இறைவன்;  ஏஷ – இவரே;  ஸர்வக்ஞ: – அனைத்தும் அறிந்தவர்;  ஏஷ – இவரே;  அந்தர்யாமி – உள்ளே இருந்து இயக்குபவர்;  ஏஷ – இவரே;  ஸர்வஸ்ய யோனி: – அனைத்துக்கும் உற்பத்தித்தானம்;  பூ4தானாம் – உயிரினங்களுக்கேல்லாமே பிரபவ அப்யயௌ ஹி – தோற்றமும் முடிவுமாகவே [இருக்கிறார்].

    விளக்கம்:  ஆழ்உறக்கநிலையில் இருக்கும் ஆத்மனின் சிறப்பியல்புகள் இச்செய்யுளில் விளக்கப்படுகின்றன.  இவர் அனைத்துக்கும் இறைவன், இவர் அனைத்தையும் அறிந்தவர், அனைத்துக்கும் பிறப்பிடமாக இருக்கிறார், அதுபட்டுமன்றி, அனைத்துயிர்களின் தோற்றமும், முடிவுமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

    ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும் ஆத்மன் — அசைவின்றி, , தூய அறிவாக, எண்ணங்களின் குவியலாக இருக்கும் ஆத்மன், மேற்சொன்ன தொழில்களை எப்படிச் செய்ய இயலும் என்ற கேள்வி பிறப்பது நியாயம்தானே!

    நமக்குத் தெரிந்தவரை, ஜீவாத்மாவும் – உயிர்களுக்குள், உடலுக்குள் இருந்து நம்மை ஆட்டிவைக்கும் ஆத்மா என்று நம்மால் உணரப்படும் ஒன்றும் — இறைவனும் [பரமாத்வாவும்] வெவ்வேறு என்றே எண்ணுகிறோம்.  இந்த உபநிஷத்தைப் பொறுத்தவரை யாவும் ஒன்றே!  ஒரே சத்தியமான ஒன்றேதான் இறைவன்.  அந்த இறைவனின் ஒரு பகுதியே ஆத்மன்.  அந்த ஆத்மனின் ஒரு பகுதியே —  மூன்றாம் நிலையில் இருக்கும் ப்ராக்ஞனே பரம்பொருளான இறைவனின் ஒரு பகுதி என்று மாண்டூக்ய உபநிஷத்து உரைக்கிறது. ஏனெனில் அனைத்துமே பரம்பொருள் என்று இரண்டாம் செய்யுளில் சொல்லப்பட்டது.

    அப்படியானால், உயிர்கள் [ஜீவாத்மா] அனைத்துமே இறைவனிடமிருந்து பிரித்தறிய இயலாதவை ஆகின்றன

    அது எப்படி இயலும்?

    கடலில் இருக்கும் நீரில் ஒரு திவளையைத் தனியாகப் பிரித்தேடுத்தாலும், அதைக்கூறுபோட்டு ஒரு நீரணுவாகப் பிரித்தாலும், அது அக்கடலின் ஒரு பகுதியே!

    எனவே, மாபெரும் கடலை இறைவன் என்றால், அக்கடலான இறைவனின் [பரம்பொருள் – பரப்பிரம்மம்] பிரிவுகளே ஹிரண்யகர்ப்பன் என்று அழைக்கப்படும் கனவு நிலையில் இருக்கும் அத்மனின் ஒரு பகுதியும், விராட் என்று சொல்லப்படும் நனவு நிலையில் இயங்கும் ஆத்மனின் ஒரு கூறும் ஆவார்கள்.

    இந்த ஈசனே அனைத்துக்கும் முதன்மையானவன்.  இவன் எங்கும் எதிலும் நிறைந்திருக்கிறான்.  இவன் அறியாததொன்றும் இல்லை;  இவன் எல்லா உணர்வும்களையும் கடந்து —  இருமை நிலைகளைக் கடந்து [இன்பம்-துன்பம்; மகிழ்வு-துயரம்; இனிமை-கடுமை] ஆனந்தநிலையில் லயித்திருக்கிறான்.

    இதிலிருந்து  நாம் இன்னொன்றையும் அறிந்துகொள்ளவேண்டி இருக்கிறது.  இறையறிவு பொருள்களை அறிவதால் ஏற்படுவதல்ல;  உணர்ந்து அறிவதால் ஏற்படுவதல்ல;  எந்தவொரு அறிவும், உணர்வும் அனைத்தறிவு ஆகாது.

    நாம் வெளியுலகில் இருக்கும் எதை அறிந்து உணர்ந்தாலும், அவற்றின் தன்மையை அறிந்துகொண்டாலும், அவற்றின் மீது எப்பொழுதும் முழுக்க முழுக்க கட்டுப்பாட்டைச் செலுத்த இயலாது.

    “அறிவு சக்தி” என்று சொல்லப்பட்டாலும், அது சக்தி ஆகாது.   வெளி அறிவு – நமது ஐம்புலன்களினாலும் அறியப்படும் அறிவு —  நமது ஐயுணர்வுகளினாலும் அறியப்படும் அறிவு முழுச் சக்தியையும் நமக்கு வழங்குவதே இல்லை.

    உயிர்கள் விழித்திருக்கும் நிலையில் இருக்கும்போது அதன் அறிவு ஐம்புலன்களினால் கிடைக்கும் ஒன்றே!  இறைவனின் அறிவு உள்ளுணர்வாகும்.   எனவேதான் அவர் கடவுள் —  உள்ளத்தைக் கடந்தவர் என்று உள்ளப்படுகிறார்.

    இறைவனிடமிருந்துதான் அனைத்தும் தோன்றுகின்றன;  அவனுல்லேதான் அனைத்தும் அடங்குகின்றன.

    அவனின் சக்தியில் ஒருசிறு பங்கே நமக்குக் கிடைக்கிறது.  அதைத்தான் நாம் நனவுலகிலும், கனவுலகிலும் கையாளுகிறோம்.

    ஆழ்உறக்கநிலையில் அப்பரம்பொருளுடன் ஒன்றிவிடுகிறோம்.

    அப்பொழுது நமக்கு எதுவும் தேவைப்படுவது இல்லை.  அளவிட இயலாத ஆனந்த நிலையில் இருக்கிறோம்.

    அந்த ஆழ்ந்த உறக்க நிலையில் கிடைக்கும் ஆனந்தத்தை ஆயிரம்கோடி பொற்காசுகளாலும் அடைய இயலாது.  உறக்கம் வராமல் விழித்திருக்க நம்மால் இயலுமா?  ஆயிரம் கோடி பொற்காசுகள் தருகிறேன், ஒரு ஆண்டு உறங்காமல் இரு என்றால் இருக்க இயலுமா?  அந்த ஆழ் உறக்க நிலையில் நாம் இறைவனுடன் ஒன்றுகிறோம்.  இறைவனாகவே ஆகிவிடுகிறோம்…

    [வளரும்]

    Share
  • வள்ளுவ மாலை

    சுரேஜமீ​​

    நெறிவழி வாழ்தல் கடினமெனக் கைவிட்டால்
    நேரும்பெருந் துன்பம் அறிவீர்காள் – வந்தவர்
    வாழ்வின் நிலைசாற்றிக் காக்கும் திருக்குறள்
    போற்றிடச் செய்தல் நலம்!                                                     valluvar

    நலம்பல வேண்டியெங்கும் தேடாதீர் சொல்லிற்
    பயன்தரும் வள்ளுவம் வழியாகக் காணும்
    இலக்கினிலே இன்பம் திளைத்திருக்க – மாற்றதும்
    இங்கில்லை என்ப குறள்!

    குறள்சொல் செய்திட வாழ்வு எளிதாகிச்
    செல்வழி யாவும் வந்திடும் ஏற்றமும்
    சேராப் பழியென்றும்; வானொத்த பேரொடு
    வையம் புகழக் காண்!

    காண்நிறைக் காட்சியெலாம் இன்பமே உய்யக்
    கருப்பொருள் சிந்தையில் வள்ளுவமாக – தீதொரு
    பண்புடை மாந்தரும் மண்ணில் இலையென்று
    பாரினில் வாழுயிர் வெல்!

    வெல்கநாளும் விண்மண் துணையொடு வேண்டும்
    வரம்நல்கும் வள்ளுவம்  யாவர்க்கும் – போற்றிடப்
    புல்முதல் பல்லுயிர்ப் பண்பினை வாய்க்கும்
    புனிதமே வாழ்வின் சுவை!

     

    Share
  • உடல் ஓர் ஆலயம்!

    -துஷ்யந்தி

    இன்பத்தையும் துன்பத்தையும்
    தாங்கிக் கொள்ளும்
    சுமைதாங்கி!

    என்புகளே அத்திவாரம்
    சதையெனும் சீமெந்து பூசப்பட்ட
    கட்டடம்!

    இதயமெனும் கிரீடம்
    இணைக்கப்பட்ட நாடி நாளங்கள்
    வர்ண ஒளிவிளக்காய்
    இரத்தவோட்டம்!

    தலைமைப் பீடமாய் மூளை
    எண்ணிலடங்கா மடிப்புக்கள்
    கணனியையும் மிஞ்சிடும்
    அற்புதச் சேமிப்பகம்!

    கண்களெனும் காட்சிப் பீடம்
    காதுகளெனும் கேள்விப் பீடம்
    வாயெனும் வாக்குப் பீடம்
    கை கால்களாய் செய்கைப் பீடம்
    அங்கங்களால் ஆன
    பல்கலைக்கழகம்!

    உள்வாங்கும் உணவுகளை
    இயந்திரமின்றி உடைத்தெறிந்து
    அகத்துறிஞ்சும் களஞ்சியம்!

    பல்வேறு தொகுதிகளைத்
    தொடராய்க் கொண்ட
    தொழிற்சாலை!

    ஆன்மா ஒளிந்திருக்கும்
    இருள் சூழ்ந்த மண்டபம்
    பக்தி எனும் தீபம், பாதை காட்ட
    நவீன உலகுடன் போட்டியிடும்
    அங்கீகாரமில்லாச்  சாதகன்
    இறைவனால் ஆக்கப்பட்ட
    அற்புதக் கலையகம்!

    உடலுக்கு நன்மை செய்
    உனக்கு நன்மை செய்திடும்!
    தூய்மை காத்திடு
    அது உன் சிந்தையைத்
    தூய்மையாக்கிடும்!
    காரணம் உடல் ஓர் ஆலயம்!!

     

    Share
  • கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான சவால்கள்

    எஸ் வி வேணுகோபாலன்

    சென்னையின் கல்வி வளாகங்களில் அந்த இடம் எப்போதுமே பசுமைச் சூழல் நிரம்பியதாக இருக்கும். ஒரு பத்தாண்டுக்குமுன்பு அங்கே குடியிருந்த உயர் நிர்வாகி ஒருவருக்கு திடீரென்று ஒரு சத்தம் ஆகவில்லை. மிகப் பெரிய சிந்தனையாளரைத் தூங்கவிடாத சக்திகளை அவரால் எப்படி மன்னிக்க முடியும்?. மறுநாள் நரிக்குறவர்களை வரவழைத்து அந்த சத்தத்தை அவர்களது வெடி சத்தத்தால் முடித்து வைக்க வேண்டினார். சுட்டு வீழ்த்தப்பட்ட சிட்டுக் குருவிகளை அந்தப் பாமர மனிதர்கள் மூட்டை மூட்டையாகச் சுமந்து கொண்டு வெளியேறினர்.

    பேரா. வசந்தா கந்தசாமி அவர்களை பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிடி இதழுக்காக நேர்காணல் செய்கையில், அவரது கணவர் சொன்ன தகவல் இது. ஐ ஐ டி வளாகத்தில் பறவைகளின் அற்புதமான மொழியைக் கேட்கப் பிடிக்காத மேதாவி ஒருவர் இருந்தார் என்பதும், தனக்கு ஒவ்வாத ஒலிகளை எழுப்பிய பாவத்திற்காக சிறகடித்த பறவைகளை அவர் சிதறடிக்கவும் தயங்கவில்லை என்பது எத்தனை வேதனையான செய்தி.

    இதோ, ஐ ஐ டி மீண்டும் செய்திகளில் வந்திருக்கிறது. அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்தை தடை செய்திருக்கின்றது ஐ ஐ டி நிர்வாகம். பிரதமரை விமர்சித்தார்களாம், அடடா, ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா….இந்து மதத்திற்கு எதிராக துண்டறிக்கை வெளியிட்டார்களாம். ஓஹோ, இது இந்து நாடு என்ற முடிவுக்கு வந்து விட்டு, அதை சர்வாதிகார அமைப்பாகவும் அறிவிக்கத் துடிக்கின்றனரா…யாரோ மத்திய அரசுக்கு புகார் எழுதிப் போட்டனராம். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு ஐ ஐ டி நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. அடுத்த நிமிடம், இந்த அமைப்பையே தடை செய்துவிட்டது விசுவாசமிக்க நிர்வாகம்.

    மத்திய ஆட்சியாளர்களின் அதிகார வெறி, தத்துவார்த்தத் திமிர் மீண்டுமொரு முறை அராஜகத்தின் உச்சத்தைத் தொடுகிறது. இதை சாதாரண நிகழ்வாக, ஒரு நிறுவனத்தின் உள்ளரங்க விஷயமாக, ஏதோ புரிதலில் உள்ள சிக்கலாக மட்டும் பார்த்துவிட்டுப் போக முடியாது. ஏனெனில், அரசின் அத்துமீறிய இந்தத் தலையீட்டை எதிர்த்துப் பேசுபவர்களை சங் பரிவார பக்கத்திலிருந்து பாய்ந்து வந்து குதறுவோர் எழுப்பும் கேள்விகள், பிரச்சனை இதோடு முடியாது என்று தெரிவிக்கின்றன.

    படிக்க வந்த இடத்தில் அதென்ன அரசியல் என்று ஓர் அறிவுஜீவி, இணையதளத்தில் அப்பாவி போல் எழுதுகிறார். அம்பேத்கர் பெரியார் வட்டத்தின் சுவர் அறிக்கையை கேள்விக்கு உட்படுத்துகின்றவர்கள் அதன் உள்ளே எழுதப்பட்டிருக்கும் செய்திக்கு பதில் சொல்லத் தயாராயில்லை.

    ஐ ஐ டி நிறுவனத்தில் இயங்கும் துறைகளின் பெயர்களை இந்தியில் மாற்றி எழுதுகின்றனர். எழுதிவிட்டுப் போகட்டும். அதில் படியும் சமஸ்கிருத சாயலை, அது பிரதிபலிக்கும் அவர்களது வேத காலத்து அறிவியல் தடாலடியை மாணவர்கள் விமர்சித்துள்ளனர். நரேந்திர மோடியின் அரசியல் பொருளாதார பண்பாட்டுக் கொள்கைகளை மாணவர்கள் விவாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது? அரசியல் பேசாதே என்கிறது இந்துத்வா கும்பல். அம்பேத்கர், பெரியார் என்ற பெயர்களைக் கேட்கவே கூசுகிறது அதன் காது.

    இட ஒதுக்கீடு தொடர்பான மண்டல் அறிக்கை பரிந்துரைகளுக்கு எதிராக, தலைநகர் தில்லியில் மருத்துவ மாணவர்களைப் போராட்டத்தில் இறங்கவைத்து அவர்களைத் தவறான முறையில் வழி நடத்திய இந்த பாசிச கும்பலுக்கு, மாணவர்களுக்கு எதற்கு அரசியல் என்று அப்போது சொல்லத் தெரியவில்லையா?

    கல்வி வளாகங்களில் சாதிய, மத வெறி முழக்கங்களை எழுப்பி வன்முறையைத் தூண்டும் வித்யார்த்தி பரிஷத் அமைப்பை அழைத்து உங்களுக்கு ஏனிந்த அரசியல் என்று சொல்லத் தெரியவில்லையா?

    உலகில் எங்கெல்லாம் நவீன தாராளமய கொள்கைகள் நடைமுறைக்கு வருகிறதோ, அதன் தாக்குதல்கள் மெல்ல மெல்ல பல்வேறு பகுதியினரை அலைக்கழிக்கத் தொடங்குகிறதோ அங்கெல்லாம் ஏதேனும் ஒரு வடிவில் மக்களைக் கூறுபோடும் சக்திகள் வேகம் பெறுவதை அண்மைக்கால உலக நடப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. ஜனநாயக உரிமைகள் நுட்பமான முறையில் மறுக்கப்படுவதும், ஒரு சாரார் அதை நியாயப்படுத்துவதும், ஏற்றத் தாழ்வுகளின் இடைவெளி பெரிதாக பெரிதாக பரஸ்பர மோதல்களை உருவாக்குவதும் இப்போது இங்கும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

    நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஓராண்டை எடை போட்டுக் கொண்டிருப்போர் பலரும், அரசின் கீழ் இயங்கும் கல்வி, ஆராய்ச்சி, பண்பாட்டு வெளி தொடர்பான பல்வேறு அமைப்புகளின் தலைமைப் பொறுப்புக்கு சங் பரிவாரத்தின் தீவிர கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டுவதில்லை. இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனத்திற்கு மிக மோசமான பிற்போக்குக் கருத்தியலை ஓயாது எழுதியும் பேசியும் வந்த ஆர் எஸ் எஸ் விசுவாசி ஒய்.சுதர்சன ராவ் என்பவரை மோடி அரசு நியமித்தது. திரைத் தணிக்கைக் குழுவைத் தங்களுக்கு வசதிப்பட்டவர்களைக் கொண்டு நிரப்பிவிட்டது. இந்த ஆக்டோபஸ் இப்படியே ஒவ்வோர் அமைப்பிலும் தனது ஆதிக்கக் கரங்களை செலுத்திப் பற்றிக் கொண்டுவருகிறது.

    இன்னொரு புறம், நவீன தாராளமயத்தின் தலைமை உபாசகர்களாகத் தங்களை நியமித்துக் கொண்டிருக்கும் இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தேசத்தின் சொத்துக்களை பன்னாட்டு நிதி மூலதனத்தின் பசிக்குத் திறந்து கொடுக்க ஆவன செய்வதில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. வங்கிகள், காப்பீட்டுத் துறை ஒன்றும் மிஞ்சாதபடி அந்நிய ஏகபோக நிறுவனங்களின் தேவையை நிறைவேற்ற ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறது. தொழிலாளர் நல சட்டங்கள் உள்ளிட்டு பலவற்றிலும் திருத்தங்கள் கொண்டுவந்து உழைப்பாளி மக்களுக்கு எதிரான தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே மக்களுக்கு இந்தக் காட்சிகளின் கோரம் புரிபட்டுவிடக் கூடாதென்று திசை திருப்பல் நாடகங்களையும், புதிய புதிய பிரச்சனைகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

    சாதிய சக்திகளோடு கூட்டணி வைத்துக் கொண்டிருக்கும் பா ஜ க, ஏற்கெனவே பெருமாள் முருகன் நாவல் விஷயத்தில் குறுக்கிட்டது. வாய்ப்புள்ள ஒவ்வோர் இடத்திலும் தனது அதிகாரத் தொண்டையைக் கனைத்துக் காட்டுகிறது. மாற்று சிந்தனைகள், சுதந்திர எண்ணங்கள், மாற்றுக் கொள்கைகள் என்று இளைய தலைமுறை தயாராகிவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக உள்ளது. அதனால்தான், இடதுசாரி கருத்தியல், முற்போக்கு முழக்கம் இவை எதையும் பாசிச சக்திகளால் செரித்துக் கொள்ள இயலவில்லை.

    இளைய தலைமுறையினரிடமும் மதவெறி நஞ்சை ஊட்டிக் கொண்டிருக்கும் இந்த ஃபாசிச கும்பலுக்கு, தத்துவார்த்த அடிப்படையில் விளக்கங்கள் சொல்ல இயலாதபோது கருத்துரிமைக்கே வேட்டு வைக்கும் அளவு ஆத்திரம் மூள்கிறது. அதிகாரம் கையில் இருக்கும் ஆணவம் அவர்களது அராஜகத்தை மேலும் கூர் தீட்டிக் கொடுக்கிறது.

    விவேகானந்தரை நேர்காணல் செய்த பிராம்மணர் ஒருவர், அசைவ உணவு புசிப்பது பற்றிக் கேட்கிறார். எந்த உணவைத் தின்றால் வலு ஏற்படுமோ அதைச் சாப்பிடுங்கள் என்றுதான் இளைஞர்களுக்குச் சொல்கிறேன் என்று பதில் சொன்னார் விவேகானந்தர். ஆனால், மாட்டுக் கறியை வைத்து மதவெறி அரசியலை நடத்துகிறது சங் பரிவாரம். விவேகானந்தர் சொன்ன எத்தனையோ கருத்துக்களைப் புறம்தள்ளும் இந்தக் கும்பல், அவரை முன்வைத்தே தேசம் முழுமையும் ஊர்திகளை அனுப்புவது, கண்காட்சி நடத்துவது, கல்லூரி வளாகங்களை காவி மயமாக்குவது போன்றவற்றை ஓயாது செய்து கொண்டிருக்கிறது. ஆனால், அறிவார்ந்த விவாதங்களை உருவாக்கும் ஒரு வாசக வட்டத்தைக் கண்டு மிரள்கிறது காவிக் கும்பல்.

    வளர்ச்சி, வளர்ச்சி என்று எழுப்பப்படும் வெற்று ஆரவாரங்களுக்கிடையே மறைக்கப்படும் தேசத்தின் அதிர்ச்சியான பட்டினிக் குறியீட்டு எண்ணை, கீழிறங்கிக் கொண்டிருக்கும் மனித வளர்ச்சி அளவீட்டு இலக்கத்தை, உலக நாடுகள் வரிசையில் ஊழலில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நம் வரிசை எண்ணை தொழில்நுட்ப வளாகத்திற்குள் விவாதிக்காமல் வேறெங்கு பேச?

    ஐ ஐ டி வளாகத்திற்குள் பேசத் தகாத விஷயங்களைப் பேசியதால்தான் தடை செய்திருக்கின்றனர் என்று தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், வாசிப்பு வட்டத்தில் என்ன தகாத விஷயம் விவாதிக்கப்பட்டது என்பதைக் கடைசிவரையில் சொல்ல முடியவில்லை. ஆட்சியை விமர்சிக்க உரிமை கிடையாது என்று பேசும் இவர்கள், அயல்நாட்டுப் பயணத்தில் எதிர்க்கட்சிகளை மட்டம் தட்டிப் பேசும் பிரதமரை, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இத்தனை ஆண்டுகளாக அவமானத்தோடு வாழ்ந்தார்கள் என்று மிகவும் கீழ்த்தரமான கருத்தை வெளியிட்ட நரேந்திர மோடியை என்ன செய்யலாம் என்று சொல்வார்களா?

    அறிவை விரிவு செய், அகண்டமாக்கு என்றார் பாவேந்தர். எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்து என்றனர் மேதைகள். அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுவது, அதன்மூலம் அதிகாரத்தை உண்மைவயமாக்குவதும், உண்மையை அதிகாரமிக்கதாக ஆக்குவதுமே ஜனநாயகத்தின் உட்பொருள் என்றனர் சமூக விஞ்ஞானிகள்.

    சுதந்திர போராட்டத்தின் ஆவேச முழக்கங்களை எழுப்புகையில் புச்சலபள்ளி சுந்தரையா, ஒரு கல்லூரி மாணவர்தான். அண்ணாமலை பல்கலையில் இருந்தபடிதான் கே முத்தையாவும், ஆர் உமாநாத்தும் ஏகாதிபத்திய எதிர்ப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். விடுதலை வீரர் என் சங்கரய்யா அவர்களது மாணவப் பருவத்து தேச பக்த ஆவேசத் துணிச்சலின் பதிவு, இன்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரிக் கோப்புகளில் வாழ்கிறது.

    மூட நம்பிக்கைகளைத் தகர்த்தெறியும் குரல்களும், பழமைவாதப் புரட்டுக்களை சவாலுக்கு அழைக்கும் குரல்களும் கலகக் குரல்களாகவே இருக்கும் என்பதில் அய்யமில்லை. தேடலில் இருப்போரை ஊக்குவிக்காத கல்வி, உருப்படியான எதிர்காலத் தலைமுறையைத் தரப்போவதுமில்லை. காற்றும், வெளிச்சமும் நுழையாத வகுப்பறைகள் இருண்ட காலத்தையே எதிரொலிக்கும்.

    பறவைகளின் சுதந்திரத் திரிதலை, உற்சாகக் கொண்டாட்ட ஒலிகளை நாராசம் என்று நினைத்து அவற்றைச் சுட்டுப் பொசுக்கும் அதே வேலையை இன்றைய ஐ ஐ டி நிர்வாகமும் செய்யத் துணிகிறது. மத்தியில் உள்ள சகிப்புத் தன்மை அற்ற ஜனநாயக உணர்வற்ற ஆட்சி அப்படி செய்யத் தூண்டுகிறது. இந்த முறை குருவிகள் வெளியேறாது. மேலும் கூட்டம் கூட்டமாய் வட்டமிட்டுப் பறக்கும். குறிபார்க்கும் துப்பாக்கிகளை அவை தமது வலிமையால் கீழே வைத்துவிடச் செய்யும். வளாகத்தின் கருத்துச் சுதந்திர வெளியைத் தற்காத்து விரிவடைய வைக்கும் போராட்டத்தில் அவை நிச்சயம் வெற்றி பெறும்.

    ***************

    நன்றி: தீக்கதிர் (ஜூன் 3)

    Share