இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(152)

0

–சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்களுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அரசியல் ஒரு சாணக்கிய சூத்திரம் என்பது ஒரு பொதுப்படையான கருத்து. இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். அரசியலில் இரண்டு வார காலமே மிக நீண்ட காலம் என்று முன்னைய இங்கிலாந்துப் பிரதமர் அமரர் ஹரால்ட் வில்சன் அவர்கள் கூறியதுண்டு. அன்றாடம் மாறிக் கொண்டேயிருக்கும் இந்த உலக அரங்கிலே அரசியலும் அதற்கேற்ற வகையில் மாறிக் கொண்டேயிருக்கிறது. எவ்வளவுதான் மாற்றமடைந்தாலும் அரசியலின் முக்கிய நோக்கம் அந்நாட்டு மக்களின் வாழ்வைச் சீரமைப்பதே என்பதே அடிப்படை உண்மையாகிறது. இவ்வுண்மையை மையப்படுத்தியே அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் பொருட்டு அரசியல் கட்சிகள் தமது பிரச்சாரப் பீரங்கிகளை இயக்குக்கிறார்கள்.

மக்களின் நன்மையைக் கருதி அரசியல்வாதிகள் கொள்கையளவில் எடுக்கும் பல தீர்மானங்கள் அவர்கள் பதவிக்கு வந்ததும் பல்வேறு அகப்புறச் சூழல்களினால் நிறைவேற்றப்பட முடியாமல் போவதும் உண்டு. அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து அரசியல்வாதிகளும் மக்களை ஏமாற்றுவதையே தமது நோக்கமாகக் கொண்டு அரசியலில் இறங்குகிறார்கள் என்பது என்றுமே உண்மையாகாது. மக்களின் சேவையை மனதில் கொண்டே பெரும்பான்மையான அரசியல்வாதிகள் அரசியலில் இறங்குகிறார்கள். ஆனால், சிலரை சில சமயங்களில் அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் தவறான பாதைக்கு இட்டுச் சென்றுவிடுகின்றன என்பதுவே உண்மை.

எதற்காக எனது மடலின் ஆரம்பம் அரசியலையும், அரசியல்வாதிகளையும் சிறிது அலசியிருக்கிறது என்ற எண்ணம் ஏற்படலாம். காரணம் இருக்கிறது வருகிறேன்.

ஒவ்வொரு மனிதனும் வாழும் போது அவனைச் சுற்றி இருப்போர் அவன் இருப்பைக் கண்டு கொள்வது போல் காட்டிக் கொள்வதில்லை. அம்மனிதன் தனது இறுதி முடிவைத் தழுவிக் கொள்ளும்போது அவனது இறுதிச் சடங்கில் அவனது புகழாரம் ஓதப்படுக்கிறது. அவர்களது இழப்பின் உண்மை அவனது சரித்திரத்தைப் புரட்டி பார்த்துப் பேசவைக்கிறது.

என்ன இது என்று வியக்காதீர்கள். கடந்த திங்கட்கிழமை (ஜூன் 1, 2015) அன்று தனது மரணத்தைத் தழுவிக் கொண்ட ஸ்கொட்லாந்து நாட்டைச் சேர்ந்த லிபரல் டெமகிரட்ஸ் கட்சியைச் சார்ந்த சார்ல்ஸ் கென்னடி (Charles Kennedy) அவர்களின் மறைவினைத் தழுவிய மடலே இது. இவரை அதிகம் தெரிந்தவர்கள் குறைவு என்றே கூற வேண்டும்.

யார் இந்த சார்ல்ஸ் கென்னடி ?

Charles_Kennedy_2009ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள இன்வேனர்ஸ் எனும் இடத்தில் இயன் கென்னடிக்கும் மேரிக்கும் மகனாக 1959ம் ஆண்டு பிறந்தார் சார்ல்ஸ் கென்னடி. கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் அரசியல், தத்துவம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் வாங்கிய இவர். பட்டம் பெற்றதும் பி.பி.ஸி ஸ்கொட்லாந்து நிறுவனத்தில் ஊடகவியளாலராகப் பணியாற்றினார்.

CK11982ம் ஆண்டு அமெரிக்க இன்டியானா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டார். அப்போது இங்கிலாந்தில் லேபர் கட்சியில் அதிருப்தி அடைந்தவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட சோஸல் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஸ்கொட்லாந்து நாட்டிலுள்ள ஒரு தொகுதியில் போட்டியிடத் தெரிவு செய்யப்பட்டார். 1983ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றியீட்டி 23 வயதில் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் இளைய உறுப்பினர் எனும் பெயர் பெற்றார். 1983ம் ஆண்டு தொடக்கம் சமீபத்தில் நடந்து முடிந்த 2015 தேர்தல் வரை அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற இவரின் முதல் தோல்வி நடந்து முடிந்த இந்தப் பொதுத் தேர்தலிலேயாகும்.

மிகவும் தீவிரமான இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டிருந்த இவர் மிகவும் திறமையான ஒரு இளம் அரசியல்வாதியாகக் கணிக்கப்பட்டார். சோஸல் ஜனநாயகக் கட்சி தன்னை லிபரல் கட்சியுடன் இணைத்துக் கொள்ளும் முடிவை முன்மொழிந்த ஐந்து பேரில் இவரும் ஒருவராவார். அதைத் தொடர்ந்து உருவான லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் மிக முக்கியமான ஒரு உறுப்பினராகத் திகழ்ந்தார். அக்கட்சியின் தலைவர் படி ஆஷ்டவுண் (Paddy Ashdown) தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்த போது இவரே அக்கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1999 ம் ஆண்டிலிருந்து 2006ம் ஆண்டு வரை லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் தலைவராக இவர் பதவி வகித்த காலத்திலேதான் முதன் முறையாக லிபரல் கட்சியின் வெற்றிக்குப் பின்னால் லிபரல் கட்சி உள்ளடங்கிய லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சி 52 இடங்களில் வெற்றியீட்டி சாதனை செய்தது எனலாம்.

இவரது தலைமையின் கீழ் இவரது கட்சி ஈராக் யுத்தத்திற்கு தமது முழுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. இவரது மறைவு குறித்து அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தமது கட்சி பேதங்களை மறந்து இவரின் மீதான தமது மதிப்பை வெளிப்படுத்தினர்.

நேற்று (ஜூன் 3, 2015) தேர்தலுக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற முதலாவது பிரதமர் கேள்வி பதில் நிகழ்ச்சியில் இவருக்கான இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தில் பார்வையாளர்களுடன் இவரது இரண்டே வயது நிரம்பிய மகன் டொனால்ட் டும் அவரது மனைவியும் அமர்ந்திருந்தார்கள்.

பொதுவாக இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசும்போது அவர்கள் பாராளுமன்றத்தில் பார்வையாளர்கள் இருக்கும் இடத்தை நோக்கிப் பேச அனுமதிக்கப் பட மாட்டார்கள். இது அவர்கள் பாராளுமன்றத்தை ஒரு பிரச்சார மேடையாக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே. ஆனால் நேற்றோ சபாநாயகர் இதற்கு விதி விலக்களித்து உறுப்பினர்கள் தமது இரங்கற் செய்தியை அவரது மகன் அமர்ந்திருந்த இடத்தை நோக்கிச் செலுத்த அனுமதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எதற்காக இவர் மீது இத்தனை அபிமானம்?

CK3

பொதுவாக அரசியல்வாதிகள் என்றாலே கொஞ்சம் சந்தேகத்துடன் நோக்கும் மக்கள் இவர் மீது கொண்டிருந்த அபிமானமே இதற்குக் காரணமாகும். நாட்டின் பெரும்பான்மையினர் அன்றைய பிரதமர் டோனி பிளேயரின் விளக்கத்திற்கு ஆதரவளித்து ஈராக் மீதான யுத்தத்தை ஆதரித்தனர். எதிர்க் கட்சிகளும் அதனை ஆதரித்தன. ஆனால் தனியொரு மனிதனாக நட்டிலுள்ள பெரும்பான்மையினருக்கெதிராக தான் கருதப்பட்டாலும் பரவாயில்லை என்று ஈராக் மீது போர் தொடுக்கக்கூடாது எனவும், அதனால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்றும், ஐநா சபை மூலம் நாடுகள் ஒன்றாக எடுக்கும் நடவடிக்கையே வெற்றியளிக்கும் என்று குரல் கொடுத்து இதற்கான வாக்களிப்பில் தனது கட்சியினரை வாக்களிக்காது வழி நடத்தியவர் இத்தலைவர்.

அது தவிர 2010ம் ஆண்டு கன்சர்வேடிவ் கட்சியுடன் லிபரல் டெமகிரட்ஸ் கட்சி கூட்டணி அமைக்கும் போது தமது கட்சிக்கெதிராக குரல் கொடுத்து அதனால் தமது கட்சி அடையப்போகும் பாரதூரமான விளைவுகளை எடுத்துக்கூறியவர் இவர். இவர் தலைவராக இருந்த நேரத்தில் இவர் மதுவுக்கு அடிமையாக இருந்து அதற்கான சிகிச்சையில் ஈடுப்பட்டதை தொலைக்காட்சி ஒன்று வெளிப்படுத்த எண்ணியபோது, தானாகவே தனது பலவீனத்தை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி தனது தலைமைப் பதவியை இராஜினாமச் செய்த துணிச்சல் மிக்கவர் இவராவார்.

CK4

இத்தகைய இவரது தனிப்பட்ட குணங்களினாலேயே இவருக்கு மக்கள் மத்தியிலும் மற்றைய அரசியல்வாதிகள் மத்தியிலும் நல்ல செல்வாக்கு இருந்தது. இத்தகைய ஒரு பண்பட்ட அரசியல்வாதி தனது 55வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தது இங்கிலாந்து ஜனநாயக அரசியலின் இழப்பு என்றே சொல்ல வேண்டும்.

“மக்கள் குரலே மகேசன் குரல் ” இதை மதிப்பவர்களின் தொகை குறைந்து கொண்டே போகிறதோ ?

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *