Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    “தன்னிலே தன்னாலே தன்னிலமர் தன்னைப்போல் –
    கண்ணனும் மாடும் கலந்திருத்தல், -எண்ணிட,
    ஆகுலும் தீர்ந்திடும், ஆரா அமுதனால்
    கோகுல கோலா கலம்’’….கிரேசி மோகன்….

    Share
  • ஆனந்த குமாரசுவாமி

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    கொழும்பில் கிறீன் பாதை என ஆங்கிலேயர் தெருவொன்றுக்குப் பெயரிட்டனர். 1960க்குப்பின்னர் அந்தத் தெருவின் பெயர் ஆனந்த குமாரசுவாமி மாவத்தை. உலகம் போற்றும் தமிழ்ப் பெருமகனாரின் பெயர்.

    anan
    Some years ago an important road in Colombo which the British had named Green Path was renamed Ananda Coomaraswamy Mawatha in honour of the great man.

    ஈராண்டுகளுக்கு முன்னர், இராசபட்ச குடியரசுத் தலைவர் காலத்தில் ஆனந்த குமாரசுவாமி மாவத்தையை நெலும் பொக்குண மாவத்தை என்றாக்கினர்.About two years ago the previous Government changed the name to Nelum Pokuna Mawatha.

    கடந்த 10.02.2015 அன்று இன்றைய அரசின் குடியரசுத் தலைவர் மற்றும் கொழும்பு மாநகர மேயர் முன்னிலையில் ஆனந்த குமாரசுவாமி மாவத்தை எனப் பெயரை மீட்டனர். On 10th Feb 2015 the President of Sri Lanka and the Mayor of Colombo will officially at a ceremony change the name back to Ananda Coomaraswamy Mawatha.

      Some years ago an important road in Colombo which the British had named Green Path was renamed Ananda Coomaraswamy Mawatha in honour of the great man. About two years ago the previous Government changed the name to Nelum Pokuna Mawatha. Today (10th Feb 2015) the President of Sri Lanka and the Mayor of Colombo will officially at a ceremony change the name back to Ananda Coomaraswamy Mawatha. To commemorate the event the Island Newspaper of Colombo has published Thiru Arumugam's article about Ananda Coomaraswamy in today's edition. See link below: http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=119260

    Some years ago an important road in Colombo which the British had named Green Path was renamed Ananda Coomaraswamy Mawatha in honour of the great man. About two years ago the previous Government changed the name to Nelum Pokuna Mawatha. Today (10th Feb 2015) the President of Sri Lanka and the Mayor of Colombo will officially at a ceremony change the name back to Ananda Coomaraswamy Mawatha.
    To commemorate the event the Island Newspaper of Colombo has published Thiru Arumugam’s article about Ananda Coomaraswamy in today’s edition. See link below:
    http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=119260

    இந்த நிகழ்வை நினைவாக்க வந்த கட்டுரை இணைப்பில் பார்க்க.
    To commemorate the event the Island Newspaper of Colombo has published Thiru Arumugam’s article about Ananda Coomaraswamy in today’s edition. See link below:
    http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=119260

    Share
  • வைரமுத்து உணர்த்தும் சுற்றுச்சூழல் சிந்தனைகள்

    — து.மணிதேவன்.

     11_mp_Vairamuthu_J_1390230g               பல மனிதர்கள் சேர்ந்து வாழும் அமைப்பு சமுதாயம் எனப்படும். மனித இனத்தின் அடிப்படைத் தேவைகளான நிலம், நீர், காற்று ஆகியவை தூய்மையாக இருப்பது அவசியம். மனித வாழ்விற்கு ஐம்பூதங்களின் செயல்பாடுகள் சீராக அமைந்திருத்தல் அவசியம். செயற்கைப் பொருட்களினால் நாளுக்கு நாள் இயற்கை வளங்கள் சீரழிந்து வருகின்றன. நிலத்தின் இயல்பிலும் மனித வாழ்வின் மாறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன. வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் புதினத்தில் காணப்படும் சமுதாய மேம்பாட்டுக் கருத்துக்கள் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன.

    இயற்கையைக் காத்தல்:

                     உலகம் தோற்றிய காலம் தொட்டு இயற்கை தன் இயல்பில் திகழ்ந்து கொண்டு இருக்கிறது. அந்த இயற்கைச் சிக்கல் ஏற்படுவது மனித சமூகத்திற்கு தீங்கானது. லூசியானா கடற்கரையில் இருந்து 46வது மையிலில் மெக்சிக்கோ வளைகுடாவில் மீத்தேனும் பெட்ரோலும் கலந்து தீப்பிடித்ததில் கடலில் எண்ணெய் கசிவு ஏற்ப்பட்டது. இயற்கைக்கு மாறான இந்த விபத்துக் குறித்து வைரமுத்து …

                     “என்ன கொடுமை இது! யுகயுகமாய் உயிர்கள் படைத்த இயற்கை ஒரேநாளில் அழிக்கப்பார்க்கிறதா? மிச்சமிருக்கப் போகும் ஒரே பிராணி மனிதன் தானா? மனிதர்கள் இல்லாத உலகத்தில் விலங்குகளும், பறவைகளும் வாழமுடியும். ஆனால் மனிதனால் வாழ முடியுமா? விலங்குகளும், பறவைகளும் அற்ற உலகில்?

    என்று இயற்கையின் அழிவு குறித்து வெளிப்படுத்தியுள்ளார். விலங்குகள், பறவைகள் நிறைந்த உலகம் மனிதர்களுக்கு ஏற்றது என்பதை உணர்த்தியுள்ளார்.

    இயற்கையின் தேவை:

                     காந்தி கிராமம் பல்கலைக்கழகம் எமிலியின் கட்டுரையை மொழி பெயர்த்து வெளியிட்டது. அதில் பூமியின் கடைசி உயிராக வந்த பின்னர் பூமியின் போக்கில் மாற்றம் நிகழ்ந்தது என்று குறிப்பிடப்பட்டள்ளது. கட்டுரையின் பகுதியில் …

                    “பூமிக்கு வந்து போன உயிர்களிலும், வந்து வாழும் உயிர்களிலும் வல்லமையும், வஞ்சமும், உள்ள உயிர் மனிதன் தான். பூமியை மனிதன் தான் செதுக்கினான் என்பது எத்துணை பெரிய உண்மையோ அத்துணை பெரிய உண்மை அவன்தான் சிதைத்தான் என்பது. மனிதன் மாறுதலை உண்டாக்கினான்

    என்று பூமியில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட இயற்கை மாறுபாடு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

    61lPNVMaLmLமரம் நடுதல்:

                     உலகத்தில் மழை  பொழிவதற்கும், உயிரினத்தின் சுவாசம் நடைபெறுவதற்கும் தாவரங்கள் இன்றியமையாதவை. மூன்றாம் உலகப்போரில் கருத்தமாயி சிட்டம்மாவிடம் மரங்களை நடுவதோடு மட்டுமின்றி அவற்றைக் கும்பிட்டு வளர்க்க வேண்டும் என்பதை …

                    “வீட்டுக்கு வெளக்கேத்தி வச்சும் புறச்சேலையும் பூமணமும் மாறாம சிட்டம்மாவை தோட்டத்துக்கு கூட்டிக்கிட்டு போயி நட்டுவச்ச மூணு மரக்கன்னுகளையும் கும்பிடச் சொன்னாரு கருத்தமாயி

    என்று மரம் நடுவதையும் மரத்தை வழிபாட்டுப் பொருளாக மதிக்கப்பட வேண்டும் என்பதையும் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.

    மரத்தை வெட்டுவதை தடுத்தல்:

                    மனிதனின் தேவைக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. வீடு கட்டுவதற்கும், வாகனங்களை உருவாக்குவதற்கும், தொழிற்சாலை பயன்பாட்டிற்கும் மரங்கள் பயன்படுகின்றன. மரங்களை வெட்டி மனிதர்கள் வாழ்க்கை வசதியை மேம்படுத்திக் கொள்கின்றனர். அவற்றை சுட்டிக் காட்டுகின்ற விதத்தில் வைரமுத்து மரம் வெட்டுவதை தடுக்கும் நிலையை விளக்கியுள்ளார் …

                    “ஏலே முத்துமணி வெறிப்புடிச்சி அலையாதேடா! நம்ம வம்சத்தை வெட்டாதேடா! குல சாமியை கொன்னுடாதேடா

    என்று கருத்தமாயி புலம்புவதாக காட்டுவதில் இருந்து மரங்களுக்கு தெய்வத்தன்மை அளித்து அவற்றை வெட்டுவதில் இருந்து தடுப்பதை உணர்த்தியுள்ளார். சமூகத்தில் உள்ள தெய்வ நம்பிக்கையை மரங்களைக் காப்பாற்றுவதற்க பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தினை வைரமுத்து எடுத்துரைத்துள்ளார்.

    உழவரின் அவசியம்:

                     உழவுத்தொழில் முதன்மையான தொழில் என கருதப்பட்ட காலம் மறைந்து வேறு வேலை தெரியாதவர்கள் மட்டும் செய்கின்ற தொழிலாக மாறியிருக்கும் நிலையை  வைரமுத்து சுட்டிக்காட்டியுள்ளார். தற்பொழுது விவசாயக் கூலியாக இருக்கின்றவர்கள் கடைசித் தலைமுறையாக கலப்பை பிடிப்பவன் என்ற கருத்தினை …

                    “ஊரு கூடி பாடுகிற கூட்டுப் பாட்டல்லவோ விவசாயம். ஊருக்குத்தான் சாதி பேதம் உண்டு நிலத்துக்கில்லே, சகல சாதிக்காரர்களும் ஒரே நேரத்திலே உழுது நட்டு கும்மி அடிப்பார்கள். ஊர் நிலத்தில் வெளியூர் ஆட்கள் வேலை செய்யக்கூடாது என்பது எழுதப்படாத விதி. வெளியூர் காரர்களுக்கு அனுமதி இல்லை. இன்று உள்ளுர் ஆட்களே

    என்று மனக்குறையை வெளிப்படுத்தியிருப்பதன் மூலம் உழவுத் தொழிலுக்கு ஆட்கள் கிடைப்பதில் உள்ள சிரமம் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

    பாலித்தீன் கேடு:

                     சமூகத்தின் தேவைக்காகப் பல்வேறு விதமான அறிவியல் கண்டுபிடிப்புகள் நடந்து வருகின்றன. அத்தகைய கண்டுபிடிப்புகளில் பல மனித சமுதாயத்திற்குத் தீங்கானவையாக உள்ளன. அவற்றுள் ‘நெகிழி’ என்று அழைக்கப்பெறும் பிளாஸ்டிக் தவிர்க்க இயலாப்  பொருளாக மாறி வருகிறது. எளிதில் மக்காமல் நெடுநாள் நிலத்தில் புதைந்து கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் என்னும் பாலித்தின் தீமை குறித்து அறிவுறுத்தப் பட்டுள்ளது …

                    “பாலிஸ்டைரினில் உள்ள ஸ்டைரின் என்னும் திரவப் பொருளும் ஏஊயில் உள்ள பிளாஸ்டிக்குகளின் வளையக்கூடிய தன்மையை மேம்படுத்தும் பிளாஸ்டிசைசர் என்னும் பொருளும் பாலிஎத்தினில் உள்ள ஆண்ட்டியாக்சிடண்ட்டுகளும் நுவு-இல் உள்ள அசிட்டால் டிசைடு என்னும் வேதிப் பொருளும் உணவுப் பொருட்களை மாசுப்படுத்தும் தன்மை கொண்டவையாக உள்ளன

    என்று பாலித்தின் கேடு குறித்து வைரமுத்து எடுத்துரைத்துள்ளார்.

                    மண்ணுல பொதச்சா மக்காத பொருளு பாலித்தினும் பிளாஸ்டிக்கும் என்று வைரமுத்து பிளாஸ்டிக்கின் நச்சு தன்மை குறித்து எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

    மண்ணின் பெருமை:

                     இந்தியா பல்வேறு வகையான மண் வளங்களைக் கொண்ட நாடாக விளங்கி வருகிறது. வைரமுத்து மூன்றாம் உலகப்போர் நாவலில் மண்ணின் பெருமையை உணர்த்தியுள்ளார் …

                    “மண்ணைக் கும்பிடும் கலாச்சாரம் கண்ட உங்கள் சமுதாயத்தைத் தான் நான் கும்பிட வேண்டும். இந்த மண்ணை கொன்று போடக்கூடாது பெரியவரே. பனியும், காற்றும், வெயிலும், மழையும் பாறைகளை அறுத்ததில் மண் உண்டானது. இரண்டரை சென்டிமீட்டர் மண் உண்டாக ஆயிரம் ஆண்டுகள் ஆகிறதாம் ஐயா, அந்த மண்ணை விஞ்ஞானம் கொன்று விடக்கூடாது. அதோ தெரிகிறதே அந்த கொடைக்கானல் குன்று அதன்மேல் ஏறி நின்று கூவுங்கள், கூவச்செய்யுங்கள். மனிதா இயற்கைக்கு திரும்பு” 

    என்று குறிப்பிடுவதில் இருந்து மண்ணை வணங்கும் பண்பாட்டை சமூகம் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

    மனிதன் வாழ ஏற்றது பூமி:

                     மனிதன் வாழ்வதற்கு ஏற்றதாக இந்த பூமி உள்ளது. வேற்றுக்கிரங்களில் குடியேறுவதற்கு மனிதன் தயாராவதாகத் தகவல் வருகின்றன. சந்திர மண்டலத்தை சுற்றுலா செல்லவும் செவ்வாய் கிரகத்தில் குடிபுகப்போவதாகவும், அறிவியல் வல்லுநர்கள் அறிக்கை விடுகின்றனர். மனித இனம் வாழ்வதற்கு ஏற்ற இடம் பூமி என்பதை வைரமுத்து சுட்டிக் காட்டுகிறார் …

                    செவ்வாய் கிரகத்தில் மனிதனை குடியேற்றும் முயற்சி நடப்பதாய் செய்தி வருகிறது. அதை நினைத்தால் நான் ஒரு கருப்பு புன்னகை சிந்த வேண்டியவனாய் இருக்கின்றேன். செவ்வாய் கிரகம் என்பது 97 விழுக்காடு கரியமில வாயு கொண்ட வளி மண்டலத்தால் சூழப் பட்டிருப்பது. பூமி என்பது 0.03 விழுக்காடு கொண்ட கரியமில வாயுவும் 79 விழுக்காடு நைட்ரஜனும் 21 விழுக்காடு பிராண வாயுவும் கொண்ட வளி மண்டலத்தால் சூழப்பட்டிருக்கிறது.

    இந்திய மேம்பாடு:

                     இந்திய நாட்டின் சிறப்பு எமிலி வாயிலாக மூன்றாம் உலகப்போர் புதினத்தில்  உணர்த்தப்பட்டுள்ளது. இந்து, பௌத்தம், சமணம் என்ற முப்பெரு மதங்களை ஈன்று கொடுத்த இந்தியா ஒரு மதச் சார்பற்ற தேசம் என்று மார் தட்டுவதிலிருந்தும் …

                    ஒழுக்கம் பற்றி அதிகம் வலியுறுத்தியதும் இந்தியா, எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் இருப்பதும் இந்தியா, காமத்தின் வழி கடவுளைக்கண்டதும் இந்தியா, கடவுளின் வழி காமத்தைக் காண்பதும் இந்தியா

    என்று குறிப்பிடுவதிலிருந்து வைரமுத்து அயல் நாட்டு பெண்மணியின் வாயிலாக இந்தியாவின் பெருமையை உயர்த்திக்காட்டுகிறார். எமிலி இந்தியாவிற்கு வந்ததன் நோக்கத்தைக் குறிப்பிடும் போது …

                    “இந்தியாவிற்கு வந்தது கற்பிப்பதற்கு அல்ல, கற்றுக் கொள்வதற்கு. இந்தியாவின் அறிவுச் செல்வங்களை இன்னும் அழிந்து போகாத கலை மரபுகளை அறுத்து போகாத கலாசாரத் தொடர்ச்சிகளை நிமிர்ந்து  கொண்டிருக்கும் நகரங்களை புதைத்துக் கொண்டிருக்கும் கிராமங்களை விவசாயிகளை சாகவிடும் அலட்சியத்தை விவசாயம் இன்னும் பிழைத்திருக்கும் ஆச்சரியத்தை கற்றுச் செல்லவே வந்தேன்”

    என்று குறிப்பிட்டு இந்தியாவின் பெருமையை உணர்த்திக் காட்டுகிறார்.

    சமூக மாற்றங்கள்:

                     மாசற்ற உலகம் படைப்பதன் மூலம் ஆரோக்கியமான மனித சமூகம் அமையும் என்பதை வைரமுத்து இப்புதினத்தில் எடுத்துரைக்கிறார்.

                     அட்டணப்பட்டியில் பல் துலக்குவதற்கு, முன்னர் பயன்படுத்திய நைலான் பிரஷ் தவிர்க்கப்பட்டது. வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, வேலங்குச்சி ஆகியவற்றை மக்கள் பயன்படுத்தத் தொடங்கியிருந்தனர். பாலித்தீன் பைகள் தவிர்க்கப்பட்டு காகிதப்பை பயன்பாட்டுக்கு வந்திருந்தது. பிள்ளைகள் படிக்கும் நேரத்தில் அனைத்து வீடுகளிலும் தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிடுகின்றனர். மின்சாரமும் மிச்சப்படுத்துகிறார்கள். இத்தகைய சமூக மேம்பாட்டுச் சிந்தனைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

    மனித உறவு:

                     சின்னப்பாண்டி, எமிலியையும் இஷிமுராவையும்  அழைத்து வந்து  அட்டணப்பட்டிக்குள் ஏற்பட்டுள்ள சமூக மாற்றத்தினை காண்பித்தான். அப்பொழுது அவர்களை கடந்து செல்லும் ஒரு இஸ்லாமிய பெண்ணை அழைத்து விசாரிக்கிறார்கள். அவள் இரவில் தங்குவதற்கு ஒரு இந்து சமயத்தவரின் வீட்டிற்குச் செல்வதாகச் சொல்கிறாள். அதைக் கேட்டு வியந்து அவர்கள் விசாரிக்கிறார்கள். அதற்கு அவள், எங்கள் ஊரில் புதிய ஏற்பாடு இது, வாரம் ஒருநாள் ஒவ்வொரு வீட்டிலும் சென்று ஒரு குழந்தை தங்க வேண்டும். பனிரெண்டு வயதுக்குள் இந்த ஊரே எங்களுக்கு உறவாகிவிடும். வருகிறேன் பங்கஜம் அத்தை காத்திருப்பாள் என்று கூறுகிறாள்.

                     இளம் வயதில் சமயப் பொறை ஏற்ப்பட்டால் பிற்காலத்தில் சமயத்தை அடிப்படையாக கொண்டு பகை வளர்வது தடுக்கப்படும் என்ற கருத்தை வைரமுத்து எடுத்துக் காட்டியுள்ளார்.

    முடிவுரை:

                     சமூக மேம்பாட்டிற்கு இயற்கையை காப்பதன் அவசியம் உணர்த்தப் பட்டள்ளது. இயற்கை வளங்களை வேட்டிடையாடி உணவின் தேவையை நிறைவேற்றிய மனித இனத்தின் செயல் விளக்கம் பெறுகிறது. மரம் நடுதலின் அவசியம் சுட்டிக் காட்டப்படுகிறது. மரங்களைக் காப்பதற்கு வழிபாட்டு முறை உகந்தது என்றக் கருத்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சமூகம் மேம்பாடு அடைய உழவுத் தொழில் இன்றியமையாதது என்றக் கருத்து உணர்த்தப்பட்டுள்ளது. மனிதர்கள் வேறுபாடு கடந்த உறவினர்களாக வாழவேண்டும் என்றக் கருத்து இக் கட்டுரையில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

     
     
     

    ஆய்விற்குப் பயன்பட்ட நூல்கள்:

  • வளரும் சிகரம் வைரமுத்துஇ அருணன்இ காவியா பதிப்பகம். மு.ப.2012
  • வைரமுத்துவின் கவிதைகளில் சமூதாயச் சிந்தனைகள்இ முனைவர் நங்கைகுருநாதன்இ சந்திரா பதிப்பகம். மு. ப 2008.
  • தமிழ்க் கவிதை வரலாற்றில் வைரமுத்துஇ முனைவர் வே.அ.பழநியப்பன்இ காவியா பதிப்பகம். மு.ப.2014.
  • வைரமுத்து கவிதைகளில் மார்கிசம் தாக்கம்இ முனைவர் இதயகீதன்இ மு.ப. 2012.
  • என் பழைய பனை ஓலைகள்இ வைரமுத்துஇ சூர்யா வெளியீடுஇ மார்ச் 2011.
  • வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம்இ முனைவர் பே.ஞானசேகரன்இ தொ.பதிப்பு 2014.
  • கவிராஜன் கதைஇ வைரமுத்துஇ சூர்யா வெளியீடுஇ பதிப்பு 2010.
  • இதனால் சகலமானவர்களுக்கும்இ வைரமுத்துஇ சூர்யா வெளியீடுஇ பதிப்பு 2005.
  •  
     
     

    து.மணிதேவன்
    முனைவர் பட்ட ஆய்வாளர்.
    மீனாட்சி இராமசாமி கலை&அறிவியல் கல்லூரி,
    தத்தனூர். அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு.

     
     
     

    படம் உதவி: http://www.thehindu.com/books/books-authors/words-of-angst/article4491595.ece

    Share
  • மங்கையர் திலகம் – பகுதி 2

    -மேகலா இராமமூர்த்தி

    முந்தைய பகுதியின் தொடர்ச்சி…

    போரிலே பகைவர்களையெல்லாம் பந்தாடிக்கொண்டிருந்த கலிப்பகையைப் பகைவர்கள் சிலர் சூழ்ச்சியான முறையில் கொன்றுவிட்டனர் என்ற செய்தி திலகவதியின் காதில் இடியாய் இறங்கியது; உடனே, அடியற்ற மரம்போல் மூர்ச்சையுற்றுத் தரையில் விழுந்தாள். அவள் கட்டிய மனக்கோட்டைகள் அனைத்தும் சரிந்து அவள்மீதே விழுந்திருந்தன. ’பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்’ எனும் பழமொழிக்குத் திலகவதியின் வாழ்க்கையினும் விஞ்சிய சான்றில்லை என்று அனைவரும் வேதனையோடு பேசிக்கொண்டனர்.

    இரண்டு நாட்களாக, மூர்ச்சை தெளிந்து கண்விழிப்பதும், மீண்டும் இத்துயரச் செய்தியின் அதிர்ச்சியால் மூர்ச்சிப்பதுமாகவே இருந்த திலகவதி மூன்றாம் நாள் காலையில் “உங்களைப் பிரிந்து இனிநான் உயிர்வாழப் போவதில்லை; நீங்கள் சென்ற இடத்திற்கே நானும் வருகின்றேன்!” என்று எங்கோ வெறித்தபடி அலறிக்கொண்டு படுக்கையைவிட்டு எழுந்தாள்; உறவினர் அனைவரும் திகைத்துப்போய் அவளைப் பார்த்தனர். தமக்கையின் கூக்குரலில் நடுநடுங்கிப்போன மருள்நீக்கி பாய்ந்துவந்து அவளைக் கட்டிக்கொண்டு, “அக்கா! என்னைவிட்டுப் போய்விடாதே அக்கா! உன்னைவிட்டால் எனக்கு வேறுயார் இருக்கிறார்கள்? நானும் உன்னுடன் வருகிறேன் அக்கா!” என்று கதறியழுதான்.

    தன் வருங்காலக் கணவனின் மரணச்செய்தி கேட்டதிலிருந்து முற்றும் தன்னிலை மறந்திருந்த திலகவதி தன் தம்பியையும் சேர்த்தே மறந்திருந்தாள். இப்போது தம்பியின் அழுகை அவளை இவ்வுலகிற்கு மீட்டுவந்தது. ”அடடா! என்னருமைத் தம்பியை எவ்வாறு மறந்துபோனேன்? என் வாழ்க்கையைப் பற்றியே அல்லவா யோசித்துக் கொண்டிருந்துவிட்டேன்!” என்று தன்னையே நொந்துகொண்டாள். “உன்னைவிட்டு நான் எங்கும் செல்லமாட்டேன் மருள்நீக்கி!” என்று அவனை அணைத்துக்கொண்டு கண்ணீர் பெருக்கினாள். இக்காட்சியைக் கண்ட உறவினர்கள் நெகிழ்ந்துபோய்த் தாமும் அழுதனர்.

    அப்போது படுக்கையைவிட்டு எழுந்தாள் திலகவதி; யாரிடமும் எதுவும் பேசாமல் நேரே உடைமாற்றும் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். அவள் என்ன செய்யப்போகிறாள் என்பது அனைவருக்குமே புரியாத புதிராயிருந்தது. ஆயினும் அப்புதிருக்குச் சிறிது நேரத்திலேயே விடை கிடைத்தது!

    கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்த திலகவதியின் கோலமே மாறியிருந்தது. வெள்ளைச் சேலையை உடுத்திக்கொண்டு, உடலிலுள்ள அணிகலன்கள் அனைத்தையும் களைந்துவிட்டு, நெற்றியில் திருநீறு துலங்க அவள் நின்றிருந்த நிலையைக் கண்ட சுற்றத்தினர் அனைவரும் தீயை மிதித்ததுபோல் திடுக்கிட்டுப் போயினர். “திலகவதி! என்ன கோலம் அம்மா இது?!” என்று ஒரு முதியபெண்மணி வேதனைமேலிட வீறிட்டார்.

    thilakavathiஏனையோரும் அருகில்வந்து, “குழந்தாய்! ஏனம்மா இப்படியோர் முடிவுக்கு வந்தாய்? உனக்கும் கலிப்பகைக்கும் நாங்கள் மணம் பேசியிருந்தோமே தவிர திருமணம் இன்னும் நடந்தேறவில்லையே! அப்படியிருக்க நீ எதற்கம்மா கணவனை இழந்தபெண்போல் வெள்ளுடை உடுத்தவேண்டும்?” என்று ஆதுரத்தோடு வினவ, அனைவரையும் ஒருமுறை ஏறிட்டுப்பார்த்த திலகவதி கணீர்க் குரலில், “உண்மைதான்! எனக்கும் அவருக்கும் திருமணம் இன்னும் நடைபெறவில்லைதான்; ஆயினும் என் தந்தை அவரை என் மணாளனாகத் தேர்ந்தெடுத்தார்; அதனால் நானும் அவரையே என் கணவராக வரித்துவிட்டேன். அக்கணமே எனக்கும் அவருக்கும் திருமணம் (மனத்தளவில்) நடந்துமுடிந்துவிட்டது.

    விடுபட்டுப்போனவை…வெளியுலகிற்கு எங்கள் திருமணத்தை அறியச்செய்வதற்கான ‘வதுவைச் சடங்குகள்’ மட்டுமே! திருமணம் நடக்காவிட்டாலும் இப்பிறவியில் அவரே என் கணவர்! அவரை இழந்த நான் இவ்வாறு தவ வாழ்க்கை வாழவே விரும்புகிறேன்!” எனத் தன் விருப்பத்தைக் கூறி முடித்தாள். அவ்விளம்பெண்ணின் தீர்மானத்தையும், உறுதியையும் கண்ட சுற்றத்தார் பேச்சிழந்து நின்றனர்.

    தன் தீர்மானத்தைத் தெரிவித்துவிட்ட திலகவதி அதன்பின்னர் சுற்றத்தாரின் பாதுகாப்பில் தங்கியிருக்க விரும்பவில்லை. தன் தாய்தந்தையர் வாழ்ந்திருந்த இல்லத்திலேயே வசிக்க விரும்புவதாக அனைவரிடமும் கூறிவிட்டுத் தன் ஒரே துணையான தம்பியையும் அழைத்துக்கொண்டு வெளியேறினாள்.

    தன் முயற்சியாலும், உழைப்பாலும் தம்பியை நன்கு கல்விகற்க வைத்தாள். சிறுவனாக இருந்த மருள்நீக்கி இப்போது வாலிபராக வளர்ந்துவிட்டார். தம் தமக்கையின் அவல வாழ்க்கையைச் சிறுவயது முதலே காணநேர்ந்ததனால் நிலையில்லா இவ்வுலக வாழ்வில் அவருக்குப் பற்றேதும் ஏற்படவில்லை; சிவநெறியிலும் ஏனோ மனம் செல்லவில்லை; எனவே வாழ்வின் நல்லறங்களை உணர்த்தும் சமண சமயத்தில் சேர்ந்துவிட்டார். மருள்நீக்கியின் மனநிலையைப் பின்வரும் பாடலில் அழகாய் விளக்குகின்றார் பெரியபுராண ஆசிரியர்.

    நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை
    அல்லேன் என்று அறத் துறந்து சமயங்கள் ஆன வற்றின்
    நல்லாறு தெரிந்து உணர நம்பர் அருளாமை யினால்
    கொல்லாமை மறைந்துறையும் அமண் சமயம் குறுகுவார்.

    தம் தமக்கையை விட்டு நீங்கி வேற்றூருக்குச் சென்று அங்குள்ள சமணப் பள்ளியில் சேர்ந்தார் அவர். சிறிது காலத்திலேயே அம்மதத்தின் அறநூல்கள், நீதிநெறிகள், கலைகள் என அனைத்தையும் கசடறக் கற்றுத் தேர்ந்து சமணமதத் தலைவராகவே ‘தருமசேனர்’ என்ற பெயரில் பல்லவ அரசாட்சியில் புகழோடு விளங்குவாராயினார்.

    தம் வாழ்வின் அனைத்து சுகங்களையும் துறந்து தம்பிக்காகவே உயிர்வாழ்ந்து கொண்டிருந்த திலகவதியார்க்கு மருள்நீக்கி ‘தருமசேனராக’ மாறியதில் சிறிதும் உடன்பாடில்லை; ஆயினும் அவரால் ஏதும் செய்ய இயலவில்லை. மனவேதனை மிகுந்தவராய்த் திருவாமூரை விட்டு வெளியேறிச் சிவபெருமானின் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான ’திருவதிகை வீரட்டானம்’ எனும் பதியை அடைந்து அங்குள்ள திருமடத்தில் தங்கினார்; செம்பவளக் குன்றுபோன்ற திருமேனியுடன் விளங்கிய வீரட்டானேசுவரரைத் தினமும் தொழுதும், அச்சிவாலயத்தில் திருத்தொண்டுகள் புரிந்தும் காலங்கழித்து வந்தார்.

    ஆயினும், தம் தம்பியை அவர் நினைக்காத நாளில்லை; ”தம்பி மீண்டும் சைவநெறிக்குத் திரும்ப வேண்டும்; சைவத்தைத் தழைத்தோங்கச் செய்யவேண்டும்; அதற்கு வீரட்டானேசுவரர் திருவருள் புரியவேண்டும்” என்று ஒவ்வொரு நாளும் சிவபரம்பொருளிடம் கண்ணீர்மல்க வேண்டிக்கொண்டிருந்தார் திலகவதியார்.

    திலகவதியாரின் விருப்பத்தை நிறைவேற்றச் சிவனார் திருவுளம் கொண்டார். கடுமையான சூலைநோயைத் (வயிற்றுவலி) தருமசேனருக்குத் தந்தார். வலியால் துடிதுடித்தார் தருமசேனர்; அவ்வலியைப் போக்க சமணர்கள் எவ்வளவோ முயன்றும் முடியாமற் போனது. அவ்வேளையில் தருமசேனருக்குத் தம் தமக்கையின் நினைவு வந்தது. இந்நோயைக் குணப்படுத்த அவர் உதவக்கூடும் என்று எண்ணியவராய்த் தாம் தங்கியிருந்த காஞ்சிக்குத் திலகவதியாரை அழைத்துவர ஆளனுப்பினார்.

    சமணர்கள் மத்தியில் வாழ்ந்துவந்த தம்பியைக் காணவிரும்பாத திலகவதியாரோ “தருமசேனரைத் திருவதிகைக்கு அழைத்துவருக!” என்று தம்பி அனுப்பியிருந்த ஆளிடம் சொல்லி அனுப்பினார். தமக்கையின் விருப்பப்படியே அவரைக்காணக் கடுமையான வயிற்றுவலியோடு திருவதிகை வந்தார் தருமசேனர்.

    தம்பியின் நிலைகண்டு கண்ணீர்வடித்த திலகவதியார் உடனேயே அவருடைய நெற்றியில் திருநீற்றைக் குழைத்துப் பூசினார். திருவைந்தெழுத்தை ஓதுமாறு பணித்தார். பின்பு, ”வீரட்டானேசுவரர் திருச்சன்னிதிக்குச் சென்று உன் நோயைக் கூறு!” என்று கூறி அனுப்பினார். தம்பியும் தமக்கையின் சொல்லைத் தட்டாது சிவனாரின் சன்னிதிக்குச் சென்றார். பெம்மானைக் கண்டதுமே அவர் உடலில் ஓர் சிலிர்ப்பு உண்டானது. ”இறைவா! கூற்றுவனைப் போல் என்னை முறுக்கி முடக்கும் இந்நோயின் கொடுமையை என்னால் தாங்கவே இயலவில்லை; இதனை விலக்குவீராக!” என்று மனமுருக வேண்டிப் பின்வருமாறு தொடங்கும் பதிகத்தைப் பாடினார்.

    கூற்றாயினவாறு விலக்ககிலீர்!
         கொடுமை பல செய்தன நானறியேன்,
    ஏற்றாயடிக்கே இரவும் பகலும்
         பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
    தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
         குடரோடு துடக்கி முடக்கியிட
    ஆற்றேன் அடியேன்! அதிகைக் கெடில
         வீரட்டானத்து உறை அம்மானே!

    என்ன அதிசயம்!! அவரைப் பீடித்திருந்த சூலைநோய் சொல்லாமல் கொள்ளாமல் உடனே அவரைவிட்டு அகன்றது. சிவபெருமானின் சிறப்பைக் கண்ணாரக் கண்டுணர்ந்த தருமசேனர் புளகாங்கிதம் அடைந்தார்; அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. பின்பு, தமக்கையின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினார்; இறைவன்மீது அற்புதமான பாக்களைப் பாடியருளினார்; அவருடைய நாவன்மையைக் கண்ட உலகத்தார் அவருக்குத் ’திருநாவுக்கரசர்’’ என்ற திருநாமத்தை அளித்துச் சிறப்பித்தனர்.

    மருள்நீக்கியாகப் பிறந்து தருமசேனராகத் திகழ்ந்து திருநாவுக்கரசராய் – சைவசமயக் குரவருள் ஒருவராய் இன்றளவும் புகழோடு விளங்கிவரும் அப்பெரியாரின் மனமாற்றத்துக்குப் பெரிதும் காரணமாயிருந்தவர் அவருடைய தமக்கை திலகவதியார். தம் சொந்த வாழ்வில் பல்வேறு துயரங்களையும், இழப்புக்களையும் சந்தித்தும் தம்பிக்காகவே வாழ்ந்த உத்தமப் பெண்மணி அவர்!

    ’இந்த இப்பிறவியில் இருமாதரைச் சிந்தையாலும் தொடேன்’ என்ற உயர்ந்த நெறியோடு வாழ்ந்தவன் இராமன். ஆனால் திலகவதியாரோ மனத்தால் வரித்த ஒருவனுக்காகக் கடைசிவரைத் திருமணமே புரிந்துகொள்ளாமல்
    தவ வாழ்க்கை வாழ்ந்து கற்புநெறியில் இராமனையும் விஞ்சிவிட்ட காரிகை! தமிழகம் கண்ட ஒப்புயர்வற்ற ’மங்கையர் திலகம்!’

    சைவமும் தமிழும் உள்ளவரை இம்மாதர்குல மாணிக்கத்தின் புகழும் மங்காமல் ஒளிவீசும்!

    (முற்றும்)

    படத்துக்கு நன்றி: தினமலர்

     

    Share
  • இனியவளே என்று பாடி வந்தேன்…

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    சிவகாமியின் செல்வன்2

     

     

    கடற்கரை… காற்று… காதலி… இவ்வரிசையில் வேறென்ன வேண்டும்? கவிதை!

     

    சிவகாமியின் செல்வன்சொல்லில் ஆயிரம் பொருள்வைத்து சொக்க வைக்க முடியுமென்றால் துள்ளும் வார்த்தைச் சரமெடுத்து தொடுக்கும் கவிஞரின் கைவண்ணம் பாருங்கள்! சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்காக கவியரசு கண்ணதாசன் எழுதிய பல்லவி பாருங்கள்..

    இனியவளே என்று பாடி வந்தேன்
    இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்

    ஆம் இனியவளே.. என்கிற பல்லவியின் முதல் சொல்லை இனி அவளே.. என்று பதம் பிரித்து இனிமை சேர்க்கிற இன்பமிருக்கிறதே.. அது யாருக்கு வரும்? மெல்லிசைமன்னரின் இசையில் விளைந்த கீதம்! டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் பொழியும் நாதம்! அன்பு மன மாளிகையில் இருவர் நடத்தும் ஆனந்தவிழா இப்படித்தான் இருக்குமோ என்று ஏங்க வைக்கிற வரிகள் செவிகளில் வந்து விழுகின்றன!!

    பெண்மையின் நான்கு குணங்களும் ஒன்றெனக் கண்டிடும்போது காதலன் உள்ளத்தில் தோன்றும் இன்ப வெள்ளம் இப்படித்தான் இருக்குமோ? ஆயிரமாயிரம் காலம் இந்த இன்பம் நிலைத்திருக்க இளமை விரும்புவது இயற்கைதானே! மொட்டுவிரிந்திடும் இதழ்களைப்போல் இன்பம் கட்டுக்கடங்காமல் பாய்ந்திடும் வேளை காதலின் லீலை இப்படித்தானிருக்குமோ?

    மோகத்தில் சாய்கின்ற வேளை பெண்மை இன்பத்தில் தாளாமல் இதழ்கள் இங்கே என்ன அளவீட்டுக் கருவி செய்யும் வேலையைச் செய்கின்றனவாம்.. கவிஞரின் கற்பனையில் ஒரு காதல் கீதம் இன்பத்தேன் சொட்டுகிறது!!

    ஓ… ஓ… ஏ… ஆ…
    ஆஹா ஆ… ஹா…
    எஹேஹேஹே அஹஹாஹா ( இசை )
    ஓஹோ… ஓஹொஹோ ஹோ
    ஏஹே ஏஹே ஏஹே ஏஹே
    இனியவளே என்று பாடி வந்தேன்
    ம்… ம்… ஆஹா ஹா ஹா ஹா…

    இனியவளே என்று பாடி வந்தேன்
    இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
    இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
    இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

    ஆஹா ஹா ஹா ஹா…
    இனியவனே என்று பாடி வந்தேன்
    இனி அவன் தான் என்று ஆகி விட்டேன்
    ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன் ஆ…
    ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன்

    ஓராயிரம் காலம் இந்த உள்ளம் ஒன்றாக …
    ஒன்றானவர் வாழ்வே இன்ப வெள்ளம் என்றாக
    துணை தேடி வரும் போது
    கண்ணில் என்ன நாணமோ
    குணம் நான்கில் உருவான
    பெண்மை இன்று போதுமோ
    திரு நாள் வரும் அதோ பார்
    தருவார் சுகம் இதோ பார்
    திரு நாள் வரும் அதோ பார்
    தருவார் சுகம் இதோ பார்
    பொன் மாலையில்
    பூ மாலையாய்
    நெஞ்சில் சூடவோ
    சூடவோ …
    சூடவோ …

    இனியவனே என்று பாடி வந்தேன்
    இனி அவன் தான் என்று ஆகி விட்டேன்

    தாலாட்டிடும் நெஞ்சம் தன்னை தங்கம் என்றாரோ..
    பாராட்டிடும் இன்பம் தன்னை மங்கை கொண்டாளோ
    நினைத்தாலும் சுகம் தானே இந்த நெஞ்சின் காவியம்
    கொடுத்தாலும் நலம் தானே எனை கொஞ்சும் ஓவியம்
    இதழால் உடல் அளந்தான்
    இவளோ தன்னை மறந்தாள்
    இதழால் உடல் அளந்தான்
    இவளோ தன்னை மறந்தாள்
    ஏன் என்பதை
    நான் சொல்வது
    எங்கும் மௌனமே
    மௌனமே …
    மௌனமே …

    இனியவளே என்று பாடி வந்தேன்
    இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
    இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

    ஆ… லாலலலா ஓஹொஹொஹோ
    ஒஹொஹோ ஓஹொஹோ…
    ஒஹொஹோ ஓஹொஹோ…

    _______________________________________________________

    படம்: சிவகாமியின் செல்வன்
    பாடல்: கவியரசு கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    குரல்: டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா
    காணொளி: https://www.youtube.com/watch?v=pmlPL7SMpVM

     

    https://www.youtube.com/watch?v=pmlPL7SMpVM

     

    Share
  • தங்கை நுப்ரா…

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    இன்ஷாத்துக்கு அன்று தூக்கமே வரவில்லை .இப்படியொரு அன்பான அருமையான தங்கை தன் வாழ்வில் குறுக்கிடுவாள் என அவன் கனவு கூட கண்டிருக்கவில்லை .

     

    அப்போதெல்லாம் அவனின் நண்பர்கள் தங்கள் “தங்கைகளை” புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கும் போது இன்ஷாத்தின் மனம் ஊமையாக கண்ணீர்  வடிக்கும். பொறாமையால் அவன் மனம் வெந்து போகும். இப்போது தனக்கு கிடைத்த இந்த தங்கையை அல்லாஹ்வால் தனக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே அவன் மகிழ்ந்துபோவான். அந்தக் கடிதத்தை எத்தனை தடவை பார்த்த போதிலும் அவன் மனம் அலுத்துக்  கொள்ளவில்லை. அவள் அதில் எழுதியிருந்த  அந்த  “நானாவை” மட்டும் தனக்குள் ஆயிரம் தரம் படித்துப் பார்த்து விட்டான் இன்ஷாத். இப்போதும் அந்தக் கடிதம் தான் அவன் கையில் இருந்தது. “அன்புள்ள நானா…! வண்டமிழ் வந்தனங்கள் பல! நான் நலம்! தங்களது நலம் மலராய் செரிந்து மணம் வீச ஏன் பிராத்தனைகள் தென்றலாய்  தடவட்டும்!” “இதுவரை நான் தங்களுக்கு பல கடிதங்கள் அனுப்பியுள்ளேன்.எல்லாவற்றிற்கும் பதில் எழுதி உங்கள் அன்பை வெளிப்படுத்தினீர்கள். நன்றிகள் நிழல்களாக! ” “நானா! நாளை உங்களுக்குத் லீவு நாள். அன்றைய மதிய உணவை தங்களுடன் சேர்ந்து உட்கொள்ள தீர்மானித்திருக்கிறேன். நீங்கள் வராவிட்டால் நான் அன்று முழுவதும் பட்டினியாகவே இருப்பது என முடிவு செய்துள்ளேன். எனவே என் அழைப்பை ஏற்று என் குடிசைக்கு வந்து என்னை  மகிழ்விப்பீர்களென நம்புகிறேன்.

    இப்படிக்கு உங்கள் வரவை எதிர்ப்பார்க்கும் அன்புத் தங்கை நுப்ரா”.

    கடிதத்தை படித்த இன்ஷாத் அப்படியே  தூங்கிப் போய்விட்டான். சகோதரிகள் இன்றிப் பிறந்த இன்ஷாத் எழுத்துத் துறையில் வல்லன். அவன் எழுதும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், இசையும் கதையும்  ஆகியன பத்திரிகையில் பிரசுரிக்கப்படும். வானொலியில் ஒலிபரப்பாக்கியும் வந்தன. இதனால் இன்ஷாத்துக்கு பல ரசிகர்கள், ரசிகைகள் அவனை பாராட்டி பல கடிதங்கள் வரைந்தனர். இந்த ரசிகைகளில் ஒருத்திதான் இந்த நுப்ரா. அவள் எழுதும் கடிதங்களில் கலக்கமில்லாத தூய அன்பு,பாசம் நிறையவே இழையோடுவதை அவனால் நன்கு உணர முடிந்தது. நானா…நானா… என்று எழுதுவதைப் பார்த்து அவன் பூரித்துப் போவான். அந்த தங்கையை  தன் உடன் பிறவாத தங்கையாகவே நினைத்துக் கொண்டான் இன்ஷாத்.

    தங்கையைப் பார்க்கப் போகும் ஆவல் இன்ஷாத்தை அதிகாலையிலேயே எழுந்து உட்கார வைத்து விட்டது. கைகடிகாரம் மணி ஐந்து  என்பதை சரியாக காட்டிய  போது அவன் அதற்கு மேல் தூக்கம் பிடிக்காமல் எழுந்து கொண்டான். தன் காலைக் கடமைகளை உற்சாகமாக  நிறைவேற்றியவன் தாய் கொடுத்த காப்பியையும் காலைச் சாப்பாட்டையும் சாப்பிட்டு விட்டு நன்றாக “ட்ரெஸ்” பண்ணிக் கொண்டு  தன் தங்கையை பார்க்க புறப்பட்டான். அப்போது நேரம் சரியாக காலை எட்டு மணியைத் தாண்டி விட்டிருந்தது. நுப்ராவின் வீட்டை நெருங்கிய போது பயம் அவன் மனதைபிடித்துக் கொண்டது. மெதுவாக வீட்டுக் கதவை தட்டிய போது “வாருங்கள்” என்ற சந்தோசமான வரவேற்பு அவனை மெய் சிலிர்க்க வைத்தது. அவனுக்காகவே காத்திருந்தது போல் அவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள் அவள். அவளது அன்பான வரவேற்பில் அவள் நுப்ராவாகத்தான் இருக்க வேண்டும் என்பதை அவன்  மனம் உறுதியாகக் கற்பனை பண்ணிக் கொண்டது. இரண்டு, மூன்று வருட பேனா சந்திப்பின் பின் இன்று தான் நேரடியாகச் சந்திக்கின்றான். நுப்ரா ரொம்பவும் அழகாக இருந்தாள். அதைப் போல் வீடும் கவர்ச்சியாக, அழகாக காட்சியளித்தது. நுப்ரா, வாய் ஓயாமல் கதைத்துக் கொண்டிருந்தாள். இடையில், தானும் வேலைக்காரக் கிழவியும் தான் வீட்டில் இருப்பதாக கூறினாள். ஒரு உறவினரின் கல்யாண  வீட்டுக்கு போயிருக்கும் பெற்றோர் நாளை தான் வருவார்கள் எனவும் கூறினாள்.

    கடிதத்தில் “நானா…நானா…” என எழுதும் அவள் இன்ஷாத் வந்து ஒரு மணி நேரமாகியும் கூட ஒரு தடவைக் கூட “நானா” எனக்  கூப்பிடாதது அவன் மனதை என்னவோ செய்தது. பாடசாலை ஆசிரியருமான இன்ஷாத்துக்கு அவள் போக்கு அறவே பிடிக்கவில்லை. அவன் அதிகநேரமாக மௌனமாகவே இருந்தான். “ஏன் பேசாமலே இருக்கீங்க… என்னை உங்களுக்கு பிடிக்கவில்லையா…? என்று கெஞ்சும் குரலில் கேட்டாள் நுப்ரா. இன்ஷாத்துக்கு தூக்கி வாரிப் போட்டது. “நீங்க நுப்ராதானே…?ஆச்சரியத்தோடு கேட்டான் இன்ஷாத். “ஆமாம்” என்றவள் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். “நீங்க தனியாகத்தான் இருக்கீறீன்களா…?” என்று படபடப்போடு அவன் கேட்ட போது. “ம்… யாருமே  இல்லை…. உம்மா போகும் போது பக்கத்து வீட்டு தோழிகளை துணைக்கு கூப்பிடச்  சொல்லிட்டுப் போனாங்க… ஆனா… நான் யாரையுமே துணைக்கு கூப்பிடப் போறதில்லை… நீங்க தான் துணைக்கு  வந்திட்டீங்களே… இனி  எதற்கு….”  “உங்கள எனக்கு நல்லாப்  பிடிச்சிருக்கு….உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா…..? இதை சற்றும் எதிர்பார்க்காத இன்ஷாத் அப்படியே  விறைத்துப் போய் விட்டான். எத்தனை தூய மனதோடு  அவளை  பார்க்க வந்தவனுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துக் கொண்டிருந்தாள் அவள்.

    “பெண்களே இப்படித்தானோ”என  எண்ணியவன்  “நீ…..நானா…நானா என்று எழுதியதை நன்றாக  நம்பி நான் இங்கு வந்து விட்டேன்… என்னை மன்னித்துக்கொள்”  “எனக்கு உன்னை  அறவே பிடிக்கவில்லை” என்று கூறியவன்  அவள் பதிலை எதிர்பாராமல்  சட்டென எழுந்து கொண்டான். அப்போது தான் அவள் கண்கள் கலங்கி  இருப்பதை அவனால் காண முடிந்தது. கூடவே அறைக்குள்ளிருந்து  நாலைந்து  பெண்களின் சிரிப்பொலி அவன் காதை துளைத்தது.  அத்தனை பேரும் சேர்ந்து  அவனை “நானா ” என அழைத்து, வெறுப்போடு போக இருந்தவனை திரும்பவும்  உட்காரவைத்தார்கள். கூடவே அவள் பெற்றோரும் சிரித்தபடி இன்ஷாத்தை அன்போடு பார்த்தபடி நின்றிருந்தார்கள். இன்ஷாத்துக்கு எதுவுமே புரியவில்லை. பின்னர் அவன் எப்படிப்பட்டவன் என்று பார்ப்பதற்காக  அவர்கள் வைத்த  சோதனை  என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.

    நானா தங்கை என்று பழகுவார்கள் சந்தர்ப்பத்தில் காதலர்கள் ஆகி விடுவார்கள். ஆண்கள் தனியாக பெண்ணைக் கண்டால் மனம் மாறிவிடுவார்கள். ஆனால் தன் மேல் இன்ஷாத் உண்மையான பாசம் தான் என்பதை  நன்றாக உணர்ந்து கொண்டாள் நுப்ரா. இன்ஷாத்துக்கு அறுசுவை உணவு  அந்த வீட்டில்  அன்போடு வழங்கப்பட்டது. நுப்ரா “நானா…….நானா…..” என  வாய்நிறைய அழைத்து உபசரித்ததனால் இன்ஷாத் மகிழ்ந்து போனான். பின்னர் அந்த அன்புத்  தங்கை  நுப்ராவிடம் விடை பெற்ற போது  அவன் கண்கள்  நீரை நிறைத்துக் கொண்டதை  அவனால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது.

    Share
  • மகா சிவராத்திரி!

    கிரேசி மோகன்

    10991393_409962862505369_7617996230109000024_n

    “இன்றுசிவ ராத்திரி ஈசன் இறைவியை
    மன்றில் கலந்து மகிழும்நாள் -ஒன்றாய் –
    நமச்சிவாய மந்திரத்தை நாளெல்லாம் ஓதி –
    உமைச்சுமையான் தாளிரெண்டை உன்னு “.

    Share
  • உள்ளம் பெருங்கோயில்!

    பவள சங்கரி

    ஓவியம் : ஜீவா
    ஓவியம் : ஜீவா

    பெருங்கோயிலில் மூலவரைத் தியானித்தேன்
    கோபுரவாயில் செப்பியதனைத்தும் வேதங்கள்
    சீவனெல்லாம் சிந்தைநிறை சிற்றம்பலம்
    கள்ளப்புலனைந்தும் கனிவாய் கட்டுக்குள்
    வள்ளற்பிரான் பாதம்பணிந்து நல்லாற்றலும்
    நயந்துபெற்ற தோற்றமும் சொல்லாற்றலும்
    வியந்துபோற்றும் புவியனைத்தும் பெறவே
    தில்லையுட்கூத்தனை தினம் பணிந்தேத்துவனே!!

    Share
  • பழந்தமிழ் எழுத்துகள் உங்கள் கணிணியில்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    வட்டெழுத்து
    2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி எழுத்துரு தரவிறக்க, http://www.virtualvinodh.com/download/Adinatha-Tamil-Brahmi.zip
    இன்றைய தமிழைத் தமிழி எழுத்துருவுக்கு மாற்ற

    http://www.thevaaram.org/sirppi_transliteration.php

    இசுக்கொத்துலாந்தில் மொழிகளின் கணிணியாக்கத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சென்னையைச் சேர்ந்த வினோத்ராசன் அவர்களின் அரிய முயற்சி தமிழி எழுத்துருவாக்கம்.

    தமிழி எழுத்துரு தந்த எனதருமை அன்பர், நண்பர், மொழிகளின் கணிணியாக்கத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சென்னையைச் சேர்ந்த வினோத்ராசன் பாராட்டுக்குரியவர். அவரைச் சில ஆண்டுகளுக்கு முனனர் சென்னைப் பல்கலைக் கழக அரங்கில் பாராட்டும் பேறு என்னுடையதாயிற்று.

    பாண்டியர் சோழர் பயன்படுத்திய வட்டெழுத்தை இப்பொழுது உங்கள் கணிணியில் நீங்களே எழுதலாம். அடுத்துள்ள இணைப்புக்குச் செல்க, எழுத்துருவைத் தரவிறக்குக. தமிழ் ஒருங்குறியில் தட்டச்சிடுக. ஒருங்குறி எழுத்துருவாக e-Vatteluttu OT தேர்க. 35 ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்துருவுக்கு e-Tamil 100 தேர்க.

    Wonderful news for the lovers of all Tamil scripts.
    A new font is available, created by Elmar Kniprath, who lives in Hamburg.
    See: http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html
    Vaṭṭeḻuttu (வட்டெழுத்து) font newly available, thanks to Elmar Kniprath
    Now everyone can write in வட்டெழுத்து என்கிறார் புதுவை வாழ் பேராசிரியர் இழாண் Jean-Luc Chevillard (Pondy) அவர்கள்.

    என்னே… என்னே…. என்னே….
    செய்தி தந்த புதுவைப் பேராசிரியர் இழான் அவர்களுக்கும்
    அரிதின் முயன்று எழுத்துரு உருவாக்கிய ஆம்பேர்க்கு வாழ் பேராசிரியர் எல்மார் இணிப்பிராதருக்கும்
    தமிழ் மக்கள் என்றென்றும கடமைப்பட்டவர்கள்.

    Share
  • மங்கையர் திலகம் – பகுதி 1

    -மேகலா இராமமூர்த்தி

    வயல்களும் வாவிகளும் நிறைந்த திருமுனைப்பாடி நாட்டில் எழில் கொஞ்சும் ஊர் ஒன்று இருந்தது; அதன் பெயர் திருவாமூர். அங்கே வேளாளர் குடியைச் சேர்ந்த, சிவபக்தியிற் சிறந்த புகழனார் மாதினியார் என்ற இணையர் வாழ்ந்து வந்தனர். ’உடம்பொடு உயிரிடையென்ன’ (உடலும் உயிரும் போல) கருத்தொருமித்துக் காதலோடு வாழ்ந்த அவ்விருவரின் இல்லறத்தை மேலும் இனிமையாக்கப் பெண் மகவு ஒன்று பிறந்தது.

    அக்குழந்தையின் தெய்வீக அழகு ’திருமகளே புவிக்கு வந்து பிறந்துவிட்டாளோ!’ எனப் பிரமிக்கும்வண்ணம் இருந்தது. அக்குழந்தையைக் கண்டு உளம்பூரித்த தாய்தந்தையர் பின்னாளில் அது மங்கையர்குலத் திலகமாய் ஒளிவீச வேண்டும் என்று திருவுளம் கொண்டனரோ என்னவோ…அதற்குத் ’திலகவதி’ எனும் பொருத்தமான பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர்.

    இதனைச் சேக்கிழார் பெருமான்,

    ”புகழனார் தமக்கு உரிமைப் பொருவில் குலக்குடியின்கண்
    மகிழவரு மணம்புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில்
    நிகழும்மலர்ச் செங்கமல நிரைஇதழின் அகவயினில்
    திகழவரும் திருஅனைய திலகவதியார் பிறந்தார்” என்று குறிப்பிடுகின்றார்.

    womanjpgகுலம் விளங்கத் தோன்றிய திலகவதி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்ச் சிவபக்தியிலும் அழகிலும் ஈடு, இணையற்றவளாய் வளர்ந்துவந்தாள். இவ்வாறு ஆண்டுகள் சில கழிந்தன. ஆயினும், தம் குடிக்கு ஆதாரமாய் ஓர் ஆண்மகவு இல்லையே எனும் ஏக்கம் திலகவதியின் பெற்றோர்க்கு இருந்துவந்தது. ஆமூரில் கோயில் கொண்டிருந்த பசுபதிநாதரிடம் தங்கள் விருப்பத்தைச் சொல்லி வழிபட்டு வந்ததன் பயனாய்க் கிடைத்தற்கரிய ஆண்மகவு ஒன்று மாதினியாரின் மணிவற்றில் உதித்தது. அக்குழந்தையைக் கண்டதும் புதையல் கண்டதுபோல் மகிழ்ந்த அக்குடும்பம், உலகத்து மருளையும், அறியாமை இருளையும் அக்குழந்தை நீக்கவேண்டும் எனும் பெருவிருப்பு கொண்டு அதற்கு ‘மருள்நீக்கி’ எனும் அற்புதத் திருநாமத்தைச் சூட்டி மகிழ்ந்தனர்.

    ”உலகில்வரும் இருள்நீக்கி ஒளிவிளங்கு கதிர்போல
    மலரும் மருள்நீக்கியார் வந்து அவதாரம் செய்தார்.” என்பது தெய்வச் சேக்கிழார் வாக்கு.

    அன்பும் அருளும் மிகுந்த புகழனாரின் குடும்பம் ஊரில் பெருமதிப்போடு வாழ்ந்துவந்த வேளையில், திலகவதி தன் பன்னிரெண்டாம் அகவையில் அடியெடுத்து வைத்தாள். மகளுக்குத் திருமணப் பருவம் வந்துவிட்டதை உணர்ந்த புகழனார் விரைவில் அவளுக்கு மணம் செய்துவிடவேண்டும் என விரும்பினார். (இக்கதை நடந்த காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு; அப்போது பெண்களின் திருமண வயது 12; ஆண்களின் திருமண வயது 16 ஆகும்.)

    ஒரு நன்னாளில் திருவாமூரில் கோயில் கொண்டிருந்த பசுபதீஸ்வரரைத் தரிசித்துத் தம்மகளுக்கு நன்மணத்தை அவ்வீசன் கூட்டுவிக்கவேண்டும் என்று சிறப்புவழிபாடு செய்யக் குடும்பத்தோடு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தார் புகழனார். அழகரசியாய்த் திலகவதியும் உடன்சென்று கொண்டிருந்தாள்.

    அப்போது புழுதியை வாரியிறைத்தபடி நாலுகால் பாய்ச்சலில் வீதியில் வந்துகொண்டிருந்த குதிரையொன்று இவர்களுக்கு அருகில் வந்ததும் சிறிது வேகம் குறைந்து நின்றது. அதில் அமர்ந்திருந்தான் கட்டிளங்காளை ஒருவன்; அவன் பார்வை ஒரு கணம் திலகவதியை ஏறிட்டுப்பார்த்தது. உடனே மகிழ்ச்சிக்கு அடையாளமாய் முறுவலொன்று விளைந்தது அவன் முகத்தில்! திலகவதியும் அவனைச் சிறக்கணித்துப் (ஓரப்பார்வை) பார்த்தாள்; சட்டென்று நாணத்துடன் தலைகுனிந்தாள். அடுத்த கணம் புழுதிப்படலத்தைக் காற்றில் கிளப்பியபடி அக்குதிரை அவர்கள் காட்சியினின்று மறைந்தது.

    “யார் அந்த இளைஞன்?” என்று தன் தந்தையிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற குறுகுறுப்பு திலகவதிக்கு இருந்தபோதிலும் தானாக அதனைக் கேட்க அவள் நாணம் தடுத்தது. அவள் மனத்தில் ஓடியதைப் படித்துவிட்டவர்போன்று அவள் தந்தையே அதுபற்றிப் பேசினார். “அம்மா திலகம்! அதோ குதிரையில் சென்றுகொண்டிருக்கும் இளைஞனைக் கவனித்தாயா?” என்றார்.

    திலகவதி கூச்சத்தோடு “இல்லையப்பா!” என்றாள்.

    ”நம்மைப் போலவே வேளாளர் குடியைச் சேர்ந்தவன்தானம்மா அவனும்; அவன் தந்தைகூட எனக்கு நன்றாகத் தெரிந்தவர்தான். அவன் பெயர் கலிப்பகை” என்றவர் தொடர்ந்து…”நல்ல சூட்டிகையான பிள்ளையம்மா! பல்லவர் சேனையில் பணிபுரிகின்றான்!” என்று முடித்தார். திலகவதி ஆர்வத்தோடு அவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டாள்.

    கலிப்பகை வீட்டிலும் அவனுக்குத் திருமணம் முடித்துவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் பெற்றோர் பெண் தேடிக்கொண்டிருந்த சமயம் அது… குதிரையை வாசலில் கட்டிவிட்டு வீட்டினுள் நுழைந்த கலிப்பகையின் காதில் தன் பெற்றோர் பேசிக்கொண்டிருந்த திருமணப் பேச்சுக்கள் விழுந்தன. இதுவரையில் அவன் அதைப் பொருட்படுத்தியதில்லை. ஆனால், இன்றோ வீதியில் சென்ற அப்பெண்ணைப் பார்த்தபின்பு அவன் இதயம் அவனிடமிருந்து நழுவி அம்மங்கையிடமல்லவா வசமாகச் சிக்கிக்கொண்டு விட்டது!

    எனவே தன் திருமணம் குறித்து ஒரு முடிவுக்கு வந்த கலிப்பகை தன் தாய் தந்தையர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இடத்துக்குச் சென்று சற்றே தொண்டையைச் செருமினான். ஏறிட்டுப்பார்த்த அவன் தாய் “என்ன தம்பி! என்ன விஷயம்?” என்றாள் அன்போடு. ”ஒன்றுமில்லையம்மா! என் திருமணத்தைப் பற்றி நீங்களும் தந்தையும் வாய்ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்…” என்று இழுத்தான். அவன் தாய் பெருமூச்சுவிட்டு, “ம்..ம்…நாங்கள் வாய்வலிக்கப் பேசி என்ன பயன்? நீதான் பிடிகொடுக்க மாட்டேன் என்கிறாயே?” என்றார் சலிப்புடன்.

    ”அதுபற்றிப் பேசுவதற்குத்தான் இப்போது வந்தேன்!” என்றவனை வியப்புடன் நோக்கிய அவன் தாய் தந்தையர், ”எதுவாயினும் தயங்காமல் சொல் தம்பி!” என்று தூண்டவும், ஒரு நிமிடம் யோசித்த கலிப்பகை துணிச்சலை வரவழைத்துக்கொண்டு, “அம்மா! இன்று நான் வீட்டிற்குவரும் வழியில் ஒரு பெண்ணைப் பார்த்தேன்; தன் குடும்பத்தாருடன் எங்கோ சென்றுகொண்டிருந்தாள்; அவளை எனக்கு மிகப் பிடித்திருக்கிறது; அவளையே மணக்க விரும்புகிறேன்” என்றான்.

    அப்பெண்ணின் தோற்றத்தையும், அவள் குடும்பத்தார் பற்றிய விவரங்களையும் கலிப்பகையிடம் விசாரித்துத் தெரிந்துகொண்ட அவன் பெற்றோர், அவற்றைவைத்து அவன் குறிப்பிடும் அந்த மங்கைநல்லாள் புகழானாரின் திருமகளான ‘திலகவதியே’ என்பதைக் கண்டுபிடித்துவிட்டனர். மிகவும் பொருத்தமான ஒரு பெண்ணையே தம் மகன் தெரிவுசெய்திருப்பதை அறிந்து மகிழ்ந்த அவர்கள் விரைவில் ஒரு நன்னாளைத் தேர்ந்தெடுத்துக் குடும்பத்துப் பெரியோருடனும், ஊர்ப்பெரியோர் சிலருடனும் புகழனார் இல்லத்திற்குச் சென்று திலகவதியைப் பெண் கேட்டனர்.

    ஏற்கனவே கலிப்பகையை நன்கு அறிந்திருந்த புகழனார் தம் மகளை அவனுக்கு மணமுடிக்க மகிழ்வோடு சம்மதித்தார்; பசுபதிநாதன் திலகவதிக்கு நல்லதோர் வழியைக் காட்டிவிட்டான் என்று எண்ணியெண்ணி உளம் பூரித்தார். பெண்கேட்டு வந்தவர்களும் மணமுடிக்க நல்லநாளைக் குறித்துக்கொண்டுவந்து புகழனாரைச் சந்திப்பதாகக் கூறி மகிழ்வோடு விடைபெற்றனர். அவர்கள் சென்றதும் புகழனார் திலகவதியிடம், “அம்மா! உனக்குச் சம்மதம்தானே?” என்று கேட்டுவிட்டு அவள் முகத்தைப் பார்க்க, அவளோ வெட்கத்தோடு அவ்விடம் விட்டு ஓடிப்போனாள்.

    திருமணத்திற்கு வேண்டிய புத்தாடைகள், அணிமணிகள் ஆகியவற்றை ஆசையோடு வாங்கிச் சேர்க்கத் தொடங்கியிருந்தனர் திலகவதியின் குடும்பத்தினர். அத்தருணத்தில் யாரும் எதிர்பாராவண்ணம் பல்லவ அரசனுக்கும் வடநாட்டரசன் ஒருவனுக்கும் திடீரென்று போர்மூண்டது. பல்லவ மன்னனின் படையில் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டிய சூழல் கலிப்பகைக்கு ஏற்பட்டது. இரு குடும்பத்தாரும் செய்வதறியாது திகைத்தனர். ஊர்ப் பெரியோர்களோடு கலந்து ஆலோசித்ததன் பேரில் போர்முடிந்து கலிப்பகை திரும்பியவுடன் திருமணத்தை நிகழ்த்திவிடலாம் எனும் முடிவு எட்டப்பட்டது.

    போருக்குப் புறப்படுவதற்குமுன் திலவதியைச் சந்தித்துவிட்டுச் செல்லவேண்டும் என்று விரும்பிய கலிப்பகை அவள் வீட்டுக்கு வந்தான். புகழனாரும் மாதினியாரும் அவனை அன்போடு வரவேற்றனர். தன்தாயின் பின்னால் தயங்கியபடியே வந்த திலகவதியைக் கண்டான் கலிப்பகை. முகத்தில் குறும்புப் புன்னகை தவழ, “நான் நாளை போருக்குப் புறப்படுகிறேன்; விரைவில் வெற்றியோடு திரும்பிவருவேன்; விடைகொடுங்கள்!” என்று பொதுவாகச் சொல்லிவிட்டு அவள் முகத்தையே ’குறுகுறு’வென்று பார்த்துக்கொண்டிருந்தான்.

    ”நீங்கள் வெற்றிவீரராய்த் திரும்பிவர அந்தப் பசுபதிநாதரை வேண்டிக்கொள்கிறோம்!” என்று பதில்கூறினாள் திலகவதி; அவள் விழிகள் ஏனோ நீரை உகுத்தன!

    நாட்கள் நகர்ந்தன. போர் உடனடியாக முடிவுக்கு வருவதாய்த் தெரியவில்லை. ஒரு நாள் கடப்பது ஒரு யுகம் கடப்பதாகவே தோன்றியது திலகவதிக்கு. களிப்புடன் இருந்த திலகவதியின் குடும்பத்தில் கவலைசூழும் வண்ணம் புகழனார் திடீரென்று நோய்வாய்ப்பட்டார். சில நாட்களிலேயே படுத்த படுக்கையாகிவிட்டார்; செய்த மருத்துவம் எதுவுமே பலிக்கவில்லை. அனைவரும் ஒன்றும்புரியாமல் பரிதவித்துக்கொண்டிருந்த வேளையில் அவர்கள் துயரத்தை மேலும் கூட்டும் வகையில் புகழனார் இறைவனடி சேர்ந்தார்.

    தன்மகளின் திருமணத்தைச் சிறப்பாய் நடத்தவேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்த அவர் அந்த ஆசை நிறைவேறுமுன்னரே எதிர்பாராவகையில் இயற்கை எய்திவிடவே, ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று வாழ்ந்துவந்த மாதினியார் நிலைகுலைந்துபோனார். கணவன் போனபின்பு இவ்வுலக வாழ்வே சுமையாகிப்போனது அவ்வம்மையாருக்கு. கணவனைப் பிரிந்து உயிர்வாழ்வதையே அவர்மனம் ஏற்கவில்லை; தம் குழந்தைகளையோ, சுற்றத்தாரையோ ஒரு பொருட்டாகவே எண்ணாமல் கணவனை நினைந்தே வருந்தியிருந்த மாதினியார் சின்னாட்களிலேயே தாமும் உயிர்நீத்தார்.

    சுற்றமுடன் மக்களையுந் துகளாக வேநீத்துப்
    பெற்றிமையால்
    உடனென்றும் பிரியாத வுலகெய்துங்
    கற்புநெறி
    வழுவாமற் கணவனா ருடன்சென்றார்.” என்ற வரிகளில் மாதினியாரின் கற்புநெறியைப் பாங்காய்ப் படம்பிடித்துள்ளார் சேக்கிழார் பெருமான்.

    சில மாதங்களுக்குள்ளாகவே தந்தை தாய் இருவரையும் அடுத்தடுத்துப் பறிகொடுத்துவிட்டு அநாதைகளாக நின்றனர் திலகவதியும், ஏழுவயதேஆன அவளுடைய அருமைத்தம்பி மருள்நீக்கியும். ’நமசிவாய’ எனும் திருவைந்தெழுத்தை நித்தம் ஓதியபடித் திருநீறு துலங்கும் நெற்றியோடும் அன்பொழுகும் வார்த்தைகளோடும் தம்மீது பேரன்பு பாராட்டிய தந்தையின் மறைவும், அறுசுவை உணவோடு, ஒழுக்கம், அடக்கம், நற்குணங்கள் அனைத்தையும் சேர்த்தே ஊட்டிய அருமைத்தாயின் பிரிவும் தாங்கொணாத் துயரைத் திலகவதிக்கு அளித்தன. மருள்நீக்கியோ இத்துயரத்தின் வீச்சை முழுதும் உணரமுடியாத சிறுவனாயிருந்தான்; தமக்கை அழுதால் தானும் அழுதான். அவள் பட்டினி கிடந்தால் தானும் பட்டினி கிடந்தான்…பாவம்!

    நல்லவேளையாகப் புகழனார் மாதினியாரின் உறவினரில் சிலர் திருவாமூரிலேயே வசித்துவந்தனர். அவர்கள் இக்குழந்தைகளின் நிராதரவான நிலையைக்கண்டு இரங்கித் தம்மில்லத்திற்கு இவர்களை அழைத்துச்சென்று பாதுகாத்து வந்தனர்.

    மேலும் சில மாதங்கள் உருண்டோடின. உறவினர்களின் அன்பான கவனிப்பில் தந்தை தாயை இழந்த துயரத்தைச் சற்றே மறந்த திலகவதி, தன் எதிர்காலம் குறித்துச் சிந்திக்கலானாள். போர்முடிந்து கலிப்பகை விரைவில் திரும்பிவிட்டால் தன் வாழ்க்கையில் ஒளி பிறக்கும்; தம்பியை நன்கு கவனிக்கவும், அவனுக்குத் தேவையான கல்வியை அளிக்கவும் தன்னால் இயலும் என்றெல்லாம் எண்ணமிட்டுக்கொண்டிருந்தாள் அவள்!

    ஆனால்…விதி மீண்டும் தன் கோர விளையாட்டைத் தொடங்கியது. ’போருக்குச் சென்ற கலிப்பகை வெற்றிவீரனாய்த் திரும்பிவருவான்; தன் கழுத்தில் மணமாலை சூட்டுவான்!’ என்ற திலகவதியின் எதிர்பார்ப்பு என்றுமே ஈடேறமுடியாதவண்ணம் ஓர் இடிச்செய்தி அவளைத் தாக்கியது.

    தொடரும்…

     

    Share
  • சிவனை நாம் வணங்கி நிற்போம் !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண் 

    சினமெமைத் தீண்டா நிற்கச்
    சிரமதில் கனதி போகப்
    பரமனின் பாதம் பற்றிப்
    பணிந்துமே நிற்போம் என்றும்!                 Shiva

    மனிதராய் வாழ வேண்டில்
    மனமதில் தூய்மை வேண்டும்
    புனிதராய் இருக்க வேண்டில்
    போற்றுவோம் பரமன் தன்னை!

    ஆணவம் தமக்குள் ஏற
    அனைத்தையும் மறந்தே நின்ற
    மாலொடு பிரமன் தானும்
    மதிகெட்ட செயலைச் செய்தார்!

    கடவுளர் தாமே என்று
    கங்கணம் கட்டி நின்று
    அழிவினைத் தேடும் வண்ணம்
    அவர்நிலை ஆயிற் றன்றோ?

    ஆணவம் அழிக்க அங்கே
    அளவிலா ஜோதி தோன்றிக்
    காணுங்கள் ஆதி அந்தம்
    கடவுளாய் ஆவீர் நீங்கள்

    என்ற அச்சேதி கேட்டு
    இருவரும் முயற்சி செய்துப்
    பன்றியாய் பட்சி ஆகிப்
    பற்பல வித்தை செய்தார்!

    வென்றவர் யாரு மின்றி
    விக்கித்து நின்ற போது
    அங்குமே சிவனும் தோன்றி
    ஆணவம் போக்கி நின்றார்!

    என்றுநாம் அறியும் வண்ணம்
    இயம்பிடும் புராணம் தன்னை
    நன்றுநாம் கற்றோம் ஆனால்
    நாமுமே திருந்தி வாழ்வோம்!

    மனங்களில் அழுக்கு வந்தால்
    மாயையே தோன்றி நிற்கும்
    குணமெலாம் மாறிப் போகும்
    குறைகளே குவிந்து நிற்கும்!

    அறமெலாம் மறந்தே போகும்
    ஆணவம் ஆட்சி செய்யும்
    அரனது நாமம் கூட
    அனைவரும் மறந்தே போவர்!

    சிவனது இரவு தன்னில்
    அவனையே மனதில் எண்ணி
    பவவினை போக்கு என்று
    பணிவுடன் வேண்டி நிற்போம்!

    நீறு அணிந்த நெற்றியொடு
    ஆறு அணிந்த சடையுடையான்
    பேறு தனைப் பெற்றுவிட
    கூறி நிற்போம் அவன்நாமம்!

    சிவனது நோக்குப் பட்டால்
    தெளிவுமே வந்து நிற்கும்
    உளமெலாம் தூய்மை ஆகி
    உமைபாகன் பக்கம் சேரும்!

    தவமுடன் சிவனை எண்ணித்
    தலைமீது கையை வைத்துச்
    சிவனைநாம் வணங்கி நிற்போம்
    சிவனது இரவு தன்னில்!

    Share
  • என்றும் இளமை,இனிமை – எப்படி

    சுந்தரராஜன் ஸ்ரீநிவாசன்

    எந்த வயதினரும் உடலால் மனத்தால் இளமையாக இருக்க முடியும். அதற்க்கு லேகியம் சூரணம் சாப்பிட வேண்டாம்.

    அதற்கான வழி முறைகள்:

    images (2)முதலில் எதற்கும் டென்ஷன் ஆவதை தவிர்க்க வேண்டும்.
    அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட வேலையோ அல்லது குறிப்பிட்ட நேரத்தில் கட்டாயம் முடிக்க வேண்டிய வேலையோ தவிர மருத்துவம் சம்பத்தப்பட்ட வேலையோ தாமதிக்க கூடாது!
    மற்றபடி இன்று நினைத்த காரியம் இன்றே இப்பொழுது நடக்க வில்லையே என்று நினைப்பது, இதை வாங்க முடியவில்லையே, அதை வாங்க முடியவில்லையே என்று நினைப்பதை தவிர்த்தல்!
    தெளிவாக நேரான பாதையில் நாம் செல்லும்போது மற்றவர் அறிவுரையோ குருக்கீடலையோ பொருட்படுத்தாமல் இருத்தல்!
    யாரிடமும் அதிகமாக பேசாதிருத்தல்! சம்பந்தமில்லாதவர்களிடம்
    தானே அறிமுகம் செய்துகொள்வது சம்பந்தமில்லாத விஷயங்கள்
    பேசுவது தவிர்க்கப்படவேண்டியது.
    தேவையற்ற இடத்தில நம்மைபற்றி பெருமை பேசுவது, அடுத்தவரை குறை கூறுவது இவற்றை தவிர்க்க வேண்டும்.
    அதிக சிந்தனையும் கற்பனையும் தவிர்க்க வேண்டும்.
    தேவைக்கு அதிகமான உணவு உண்ணாதிருத்தல் ஆனால் கண்டிப்பாக நேரத்தில் தேவையான உணவு உண்ணுதல்.
    நம்மை நேரில் புகழ்வது பின்னால் இகழ்வது இரண்டையும்பொருட்படுத்தாமல் இருத்தல்.
    வஞ்சனையற்ற உடல் உழைப்பு.
    பிறர் மனம், உடல் நோக காரணமாக நாம் இல்லாதிருத்தல்.
    நமக்கு வாழ்வில் கிடைத்த செல்வங்கள்,புகழ்ச்சி இகழ்ச்சி அனைத்தும் இறைவனுக்கே அர்ப்பணம் என்ற தெளிவு.

    இவை யாவும் கடை பிடித்தால் மட்டுமே நாம் என்றும் இளைமையாக இருப்பது நிச்சயம் முயற்சி திருவினையாக்கும்!

    இன்றுமுதல் முயற்சி செய்வோமே!

    Share
  • திருநடனம் ஆடினது எப்படியோ?

    மீனாட்சி பாலகணேஷ்

    ‘சிவனுக்கு உகந்தது சிவராத்திரி; அவன் தேவிக்கு உகந்தது நவராத்திரி,’ என சீர்காழி கோவிந்தராஜனின் இனிய குரலில் ஒரு அழகான பாடலைக் கேட்டதுண்டு. சிவராத்திரி என்பதற்கு வெவ்வேறு விளக்கங்கள் தரப்படுகின்றன. அவற்றுள் ஒன்று: சிவராத்திரி அன்று சிவபிரான் ‘தாண்டவம்,’ என்ற ஆனந்தமயமான பிரபஞ்ச நடனத்தை ஆடியதாகக் கூறப்படுவது. இன்னொரு விளக்கம்: சிவனும் சக்தியும் இணைந்த நாளே- அவர்கள் திருமணம் நடந்த நாளே சிவராத்திரி என்பது. இது சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகும் என்பது ஆன்றோர் கூறும் அருமையான உயர்ந்த விளக்கம்.

    amain

    சிவபிரானுடைய தாண்டவம் என்பது யாது?

    எப்பொருளின் இயக்கத்திற்கும் அடிநிலையாய் இருப்பவன் இறைவன் ஒருவனே. இறைவனது அசைவு தாண்டவம், கூத்து அல்லது விளையாட்டு எனப்படும். இது இரண்டு இடங்களில் சிறப்பாக நிகழ்வதாகக் கூறப்படுகிறது- ஒன்று, உயிர்களின் அறிவு; மற்றொன்று, தில்லைச் சிற்றம்பலம்.

    தில்லை மூதூர் ஆடிய திருவடி

    பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி’ என மாணிக்கவாசகர் இவ்விரு இடங்களையும் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார்.
    உயிர்களின் அறிவில் பொருந்தி நின்று இடைவிடாது தனது இருப்பிடத்தை அவன் உணர்த்தி வருகிறான். இது அவனை, அவன் திருநட்டத்தை, நாம் அறிவால் உணர்ந்து அவனே அவ்வறிவு எனவும் உணர்ந்து கொள்வது. ஒரு நாமம், ஓர் உருவம் ஒன்றும் இல்லாத இறைவன், நாம் கண்டு உய்யுமாறு தில்லைப்பதியில் ஓர் உருவம் கொண்டு, ஆடவல்லான் எனும் திருநாமமும் கொண்டு ஐந்தொழிலும் புரிந்து நடனமிடுகிறான். நமக்கு பிறப்பு, முத்தி எனும் இரு நிலைகளையும் மாற்றி மாற்றித் தந்த வண்ணம் ஆடுகிறான். இதனைச் சேக்கிழார்,

    ‘ஆயும் நுண்பொரு ளாகியும் வெளியே
    அம்பலத் துள்நின்று ஆடுவார்,’ எனப் போற்றுவார்.

    ஆதிசங்கரர் இந்தத் தத்துவத்தினை மிகச் சுவைபட ‘அழகின் அலைகள்,’ எனப்படும் ‘சௌந்தர்ய லஹரி’யில் விவரிக்கிறார். மூலாதாரத்தில் அம்மையும் ஐயனும் ஆடும் ஆனந்த நடனத் தைப் பற்றிக் கூறுகிறார். “மூலாதார சக்கரத்தில், லாஸ்யம் என்கிற நடனம் செய்வதில் விருப்பம் உள்ளவளும் ‘ஸமயா’ எனப் பெயர் கொண்டவளுமான உன்னுடன் சேர்ந்து நவரசங்களும் ததும்பும் சிறந்த தாண்டவம் ஆடுகின்ற ஆனந்த பைரவரை தியானம் செய்கிறேன். பிரளய காலத்தில் உலகம் அழிந்து படும்; அதனைத் திரும்பப் படைக்கக் கருணை கொண்டு நீங்கள் இருவரும் இணைந்து இவ்வுலகிற்கே தாய் தந்தையாகி அதனைப் படைத்துக் காக்கின்றீர்கள்,” என்கிறார். ஆகவே ஐயனும் அம்மையும் இணைந்து நடனம் செய்தபடி ஒருவரை ஒருவர் பார்க்கவே உலகம் உற்பத்தியாகின்றது என அற்புதமானதொரு விளக்கத்தைத் தருகிறார் சங்கரர்.

    இந்த நட்டத்தைப் (நடனத்தை) பற்றித் திருமூலரும்,

    ‘எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
    எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
    எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
    தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே!‘ என்கிறார்.

    திருநட்டமாவது முன்பே கூறியது போல அறிவு எனும் ஆகாயத்தில் ஐயன் ஆடுவதாகும். சிவம் அகண்டமாய் வியாபித்துள்ளது போல அதன் சத்தியும் அகண்டமாய் உள்ளதாம். சிவபெருமானுக்குத் திருமேனி சிவசத்தியே ஆவாள். அவனுடைய அருளாற்றல் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது என்கிறார்.

    சிவபிரான் ஆடுவதற்குக் கொள்ளும் உருவம் ‘சிவாயநம, என்னும் ஐந்து திருவெழுத்துக்களே. அன்பர்கள் நாடும் திருவடி ‘ந’காரம் ஆக இருக்கும்; திருவயிறு ‘ம’காரம் ஆகும்; திருத்தோள்கள் ‘சி’காரம் ஆகும்; வேதங்களையும் ஆகமங்களையும் அருளிய திருமுகம் ‘வா’ஆகும்; திருமுடி ‘ய’ ஆகும்.

    ஆடும் படிகேள்நல் அம்பலத்தான் ஐயனே
    நாடும் திருவடியிலே நகரம்- கூடும்
    மகரம் உதரம் வளர்தோள் சிகரம்
    பகரும்முகம் வாமுடியப் பார். (உண்மை விளக்கம்)

    இந்த நடனம் பக்குவமடையாத உயிர்களுக்கு ஊன நடனமாகவும், பக்குவமடைந்த உயிர்களுக்கு ஞான நடனமாகவும், அனைத்துயிர்களும் உய்ய ஆனந்த நடனமாகவும் பரிணமிக்கிறதாம். எவ்வாறு?

    ஐயன் தனது நடனத்தின் மூலமாக நிகழ்த்தும் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும்) ஐந்தொழில்களும் ‘ஊன நடனம்’ எனக் கூறப்படும். இத்தொழில்களால் உயிர்களுக்கு உலக நுகர்ச்சியும் சிற்றறிவும் உண்டாகி, அவை உலக வாழ்வில் மயங்கி நிற்கின்றன. ஆதலால் இது ‘ஊன நடனம்’ எனப்பட்டது.

    துடி எனும் உடுக்கையால் ஒலி ஏற்படுத்தி, படைத்தல் தொழிலை நிகழ்த்துகிறான் இறைவன். அமைத்த திருக்கரத்தால் (அபயக் கரத்தால்) காத்தல் தொழிலைச் செய்கிறான். நெருப்பைக் கையில் ஏந்தி அழித்தல் தொழிலைப் புரிகிறான். முயலகன் மீது ஊன்றியிருக்கும் திருப்பாதம் திரோதம் என்னும் மறைத்தல் தொழிலைக் குறிக்கும். தூக்கிய திருவடி முத்தி அளித்து அருளும் தொழிலையும் குறிக்கும்.

    ‘தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பில்
    சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்- ஊற்றமா
    ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம் முத்தி
    நான்ற மலர்ப்பதத்தே நாடு,’ என்பது ஊன நடனத்தைக் குறித்த உண்மை விளக்கப் பாடல்.

    ஞான நடனமாவது, உயிர்களுக்கு முத்தி எனும் நிலையினைத் தருவதற்காக ஈசன் ஆடும் நடனம்.
    துடி: எனும் உடுக்கையை அசைத்து, பக்குவம் எய்திய உயிர்களின் உணர்விலிருந்து மாயையை உதறி விலக்குகிறான்;
    நெருப்பை எந்திய அவனது கரம்: அடியார்களின் வல்வினையைச் சுட்டெரிக்கும்;
    ஊன்றிய திருவடி: ஆணவ மலத்தை அடக்கி (சாய அமுக்கி) வைக்கும்;
    தூக்கிய திருவடி: பிறப்பு இறப்புகளில் சுழன்று உழலும் உயிர்களை அருளால்
    (நேயத்தால்) எடுத்துச் சுமக்கும்.

    அமைந்த கரம்: ஞானத்தை அளித்து பேரின்பக் கடலில் ஆழ்த்தும்.

    ‘மாயை தனைஉதறி வல்வினையைச் சுட்டுமலம்
    சாய அமுக்கி அருள் தான் எடுத்து- நேயத்தால்
    ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
    தான் எந்தை யார்பரதம் தான்.’ (உண்மை விளக்கம்)

    பக்குவமடைந்த ஆன்மாக்களுக்கு இவ்வுலகில் பேரானந்தத்தை இடையறாது தருகின்ற நடனம் சிவனுடைய ஆனந்தக் கூத்தாகும்.

    இதனைத் திருமூலர் பல மந்திரங்களில் விளக்குகிறார்.
    ‘ஆனந்தம் ஆடரங்கம் ஆனந்தம் பாடல்கள்
    ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்
    ஆனந்தம் ஆக அகில சராசரம்
    ஆனந்தம் ஆனந்தக் கூத்து உகந்தானுக்கே,’ என்பது ஒரு மந்திரம்.

    ஈசன் உயிர்கள் எல்லாம் பேரின்பம் எய்தும் பொருட்டே ஆனந்தக் கூத்தினை நிகழ்த்தியருளுகிறான். தனது திருக்கூத்தின் மூலமாக ஐந்தொழில்களைப் புரிகிறான். அதனால் இறைவனின் இத்திருவருட் செயல்களும் , அவன் ஆடும் போது பாடப்படும் திருமுறைப் பாடல்களும், இசைக்கப்படும் பலவிதமான இசைக்கருவிகளும், வாத்தியங்களும் இன்பமானவை என அறியப்படுகின்றன. உலகிலுள்ள அசையும், அசையாப் பொருட்கள் அனைத்தும் அவனது ஆனந்தக் கூத்தினால் இன்புறுகின்றன.

    இந்த ஆனந்தக் கூத்தின் போது எல்லாமே ஆடுகிறது.

    ‘வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆடக்
    கீதங்கள் ஆடக் கிளர் அண்டம் ஏழ் ஆடப்
    பூதங்கள் ஆடப் புவனம் முழுது ஆட
    நாதம் கொண்டு ஆடினான் ஞானானந்தக் கூத்தே.’

    இந்த மந்திரத்தில் நால் வேதங்களும் ஆடின என்கிறார். அது வேதத்தில் கண்டுள்ளபடி உலகத்தோர் ஒழுகி உய்யத் துணை நின்று அருள் செய்து ஈசன் ஆடியதை விவரிக்கும். அவற்றின் விளைவான ஆகமங்களும் (ஆடின) உலகத்தோர்க்கு வழி காட்டுமாறு ஆடினான் என்பதாம். அடுத்து கீதங்கள் எனப்படும் பண் சிறந்த இசை நூல்கள் சிறக்குமாறு ஆடினான் என்கிறார். ஏழு அண்டங்களும், பஞ்ச பூதங்களும் அசைய (ஆட; இங்கு, தத்தம் இயக்கங்களைச் செய்து ஒழுக எனப் பொருள் கொள்ள வேண்டும்), நாத தத்துவத்தை இடனாகக் கொண்டு ஆனந்தக் கூத்தை ஐயன் நிகழ்த்துகிறான் என்பார்.

    ‘ஆதி பரன்ஆட அங்கைக் கனலாட
    ஓதுஞ் சடையாட உன்மத்த முற்றாடப்
    பாதி மதியாடப் பாரண்ட மீதாட
    நாதமோ டாடினான் நாதாந்த நட்டமே.’

    சிவபிரான் இவ்வாறு நடனமாடிய போது அவன் கையில் ஏந்திய கனல் ஆடிற்று;

    எல்லோரும் போற்றிப் பரவும் சடையும் ஆடிற்று; அதில் சூடிய ஊமத்த மலரும் ஆடிற்று! கீற்றுப் பிறைமதி ஆடிற்று; அண்ட சராசரங்களும் இயைந்து ஆடின. சைவர்கள் உயர்வாகப் போற்றும் முப்பத்து ஆறாம் மெய்யாகிய நாதத்தின் கண் திருவருள் நிரம்ப நாதாந்த நட்டத்தை ஆடுகிறான் ஈசன்.

    சிவப்பரம்பொருளின் இந்த அற்புத நடனத்தில் சத்தியின் பங்கு மிகப்பெரிதானது.

    ‘இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
    நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
    படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்
    அடங்கலுந் தாமாய்நின் றாடுகின் றாரே.’

    சிவனுடைய இடப்பாகம் கொண்டவள் சத்தி. அவளைப் பிரியாது சிவபெருமான் அவளுடன் திருநடம் புரிகின்றான். அதை ஞான ஆன்மாக்கள் உணர்ந்து கொள்வர். திரை போல நின்று மறைக்கும் ஆணவ மலத்தைக் கொண்டுள்ள உயிரினங்கள் அனைத்தும் அதனை நீங்கி உய்யுமாறு சிவபிரான் அடங்கலும் தாமாக நின்று ஆடியருளுகின்றான்.

    இதனால் எல்லாம் எவ்வாறு சிவபெருமானுக்கு சிவராத்திரி உகந்ததாயிற்று என அறிந்து கொள்ளலாம்.

    தத்துவங்களையும், ஆகமங்களையும் கற்றுணர்ந்தோரும், அவர்கள் மூலம் கேட்டு உணர்வோருமே இக்கருத்துக்களையும், சிவப்பரம்பொருள் உயிர்கள் மாட்டுக் கொண்ட அன்பால் நிகழ்த்தும் கூத்தின் தன்மையையும் உணர்ந்து இன்புற முடியும். 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் மூவருள் ஒருவரான முத்துத் தாண்டவர், எளிய இனிய சொற்களைக் கொண்டு தமிழில் ஆடவல்லான் மேல் பல பாடல்களை, இத்தகைய அரிய பெரிய கருத்துக்களைப் பொதிந்து, இயற்றினார். ‘ஆடினதெப்படியோ,’ எனும் கல்யாணி ராகப் பாடலில் ‘ஐயனே, இத்தகைய அரிய திருநடனத்தை நீ எவ்வாறு ஆடினையோ?’ என வியந்து துதித்துப் பாடுகிறார். தத்துவங்களையும், ஆகமங்களையும் கற்றுணராத எளிய மக்களும் இவற்றைக் கேட்டு, பாடி மகிழும் தரத்தில் அமைந்த பாடல் இதுவாகும்.

    ஆடினதெப்படியோ திருநடனம் ஆடினதெப்படியோ
    தேடிய மெய்ப்பொருளே வளமேவுஞ்
    சிதம்பரத் தேயொரு சேவடி தூக்கிநின்(றாடின)

    என ஆடியதை வியந்தவர், “மன்றுள் (அம்பலத்தில்) ஆடுவதற்கு ஒரு உருவம் இருக்க வேண்டும். அது, ஆணாகவோ, பெண்ணாகவோ, ஏதாவது ஒரு வடிவு கொண்டோ இருக்க வேண்டும். நீ ஒன்றாக உள்ள ஆண் உருவம் கொண்டவன் அல்ல; அம்மையும் அப்பனுமான இரண்டு வடிவமும் அல்ல; ஒன்றில் இரண்டான மாதொரு பாக வடிவும் அல்ல.

    ஒன்றல்ல இரண்டல்ல ஒன்றிரண்டு மல்ல
    நன்றல்ல தீதல்ல நாதவிந்து மல்ல
    அன்றல்ல இன்றல்ல ஆதியந்த முமல்ல
    மன்றுள் மரகத வல்லிகொண் டாடநின் (றாடின)

    “கண்ணால் எவரும் காணக் கூடிய உருவம் கொண்டவன் அல்ல. காண இயலாத அருவமானவனும் அல்ல. உன் வடிவின் நீள அகலங்களை அறியக் கிடைக்காது. வாள் நுதல் பச்சை மடந்தை ஆகிய மரகதவல்லி சிவகாமி கொண்டாட நின்று ஆடுகின்றனையே ஐயா!

    ஆணல்ல பெண்ணல்ல அன்றி அலியுமல்ல
    காணும் உருவம் அல்ல காணா அருவமல்ல
    சேண் அல்ல வேயொரு தேவர்க்குள் ளேதேவே
    வாணுதற் பச்சை மடந்தைகொண் டாடநின் (றாடின)

    “பூதங்களாகவும், உள்ளும் புறமுமாயும் உள்ளவன் நீயல்ல! வேதங்கள் விளக்கிக் கூறும் பொருளும் நீ அல்லவே! ஆதவன் கிழக்கே உதித்து மறைவது போலத் தளர்ச்சி உடையவன் அல்ல. (இங்கு ஆதவனை உவமித்தது, உலகத்தோர் அவனை உயர்வும் திண்மையும் பெருமையும் உடையவனாகக் கருதுவதால் தான்!) மாது உமையாள் உன்னைக் கொண்டாடுகின்றனளே அப்பா!” என முத்தான வரிகளில் பரம் பொருளைக் கொண்டாடுகிறார் முத்துத் தாண்டவர்.

    பூதங்கள் அல்ல புறம்பல்ல உள்ளல்ல
    வேதங்க ளாலே விளங்கும் பொருளல்ல
    ஆதவன் போலே அசையும் வடிவல்ல
    மாதுமை யாள்பச்சை வல்லிகொண் டாடநின் (றாடின)

    சைவ சித்தாந்தப் பேரறிவாளர், பேராசிரியர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயாஅவர்கள் சிவப்பரம்பொருளின் தன்மையைப் பின் வருமாறு அருமையாக விளக்குகிறார்:

    ‘சிவப்பரம்பொருளுக்கு இரு நிலைகள் கூறப்படும். ஒன்று- சொரூபநிலை. மற்றொன்று- தடத்தம். (ஸ்வரூபம், தடஸ்தம்) சொரூபநிலை உண்மை என்றும் கூறப்படும். தடத்தம் உயிர்களுக்கு அருளும் பொருட்டுப் பெருமான் எடுக்கும் வடிவம். அது நிஷ்களம், நிஷ்கள சகளம், சகளம் என மூவகைப்படும். நிஷ்களம் அருவம் என்றும் நிஷ்கள சகளம் அருவுருவம் என்றும் சகளம் உருவம் என்றும் கூறப்படும். சகளம் மாகேசுவர வடிவம். சிவனின் மாகேசுவர வடிவம் தட்சிணாமூர்த்தி, பிட்சாடணர், சந்திரசேகரர் முதலிய 25 என்றும் கூறப்படும் சதாசிவ மூர்த்தி, நிஷ்கள சகளம். அது இலிங்க வடிவினதாகும்.
    ‘இலிங்கத்திற்கு ஐந்து முகமும் ஐந்து நிறமும் கூறப்படும். ஈசானமுகம்- உச்சி பளிங்கு நிறமுள்ள பாலர் முகம். தத்புருஷமுகம்- கிழக்கு. பொன்னிறமான அரசர் முகம். தெற்கு- அகோரம்- தாடியுடன் கூடிய கரிய முதியவரின் முகம். வாமதேவம்- வடக்கு. குங்குமம் போன்று சிவந்த மாதர் முகம். சத்யோஜாதம்- மேற்கு. வெள்ளை நிறமுள்ள இளைஞர் முகம். சதாசிவத்தின் ஐந்து முகங்களுள் சத்தியோஜாத முகத்தால் படைப்பும்; வாமதேவமுகத்தால் அளிப்பும்; அகோரமுகத்தால் துடைப்பும்; தத்புருஷ முகத்தால் மறைப்பும்; ஈசான முகத்தால் அருளும் நடைபெறும் என ஆகமங்கள் கூறும்.

    ‘இறைவன் கொள்கின்ற மூர்த்தங்களில் அட்ட மூர்த்தி வடிவங்களும் ஒருவகை. அவையாவன பஞ்சபூதங்கள் ஐந்தும் சூரியன் சந்திரன் ஆன்மா (புருடன்) எனும் மூன்றுமாக எட்டு. இறைவன் பஞ்ச பூதங்களையும் தனக்கு உடைமையாகக் கொண்டுள்ளதால் அவற்றின் நிறங்களும் அவனுக்கு உரியன என்பர்,’ என்கிறார் பேராசிரியர் ஐயா.

    இந்தப் பாடலின் அடுத்த சரணத்தில் கூறப்பட்ட பஞ்சபூதம், பஞ்சவர்ணம், அஞ்சுமுகம், ஆறாதாரம் எல்லாம் இறைவன் ஆன்மாக்களுக்கு அருளும் பொருட்டு எடுத்துக்கொண்ட சகள வடிவங்களே. தடத்தமே; உண்மை வடிவம் அல்ல. அவனுடைய சொரூபநிலை அருவமுமல்ல, அருவுருவமுமல்ல; உருவமுமல்ல. இந்த மூன்றும் தடத்த வடிவங்களே. இந்த தடத்த வடிவங்கள் எல்லாம் அவனது சொரூப நிலை அல்லது உண்மை அல்ல என்று கூறுவது இப்பாடலின் கருத்தாகும்.

    பஞ்ச வர்ணமுமல்ல பஞ்ச பூதமுமல்ல
    நெஞ்சில் நினைவுமல்ல நினைவிற் கனவுமல்ல
    அஞ்சு முகமுமல்ல ஆறாதா ரமுமல்ல
    வஞ்சி மரகத வல்லி கொண்டாடநின் (றாடின)

    ‘இதுவுமல்ல, அதுவுமல்ல; எதுவுமல்ல; எல்லாம் நீயே’ எனப் பொருள் கொள்ள வேண்டும்.
    அடுத்து சமீப காலத்தில் இயற்றப் பட்டு, பாடப்பெறும் ஒரு பாடல்; இதில் பராசத்தியின் நடனம் போற்றப்படுகிறது. இதனை இயற்றியவர் பாபநாசம் சிவன் ஆவார். (சிலர் சுத்தானந்த பாரதியார் எனவும் கூறுகின்றனர்!) இதில் ஆனந்த நடனத்தைப் பராசக்தி ஆடியருளியதாகக் கூறப்படுகிறது. சிறிது உற்று நோக்கின், ‘ன்’ ‘ள்’ எனும் ஒரே ஒரு எழுத்து வேற்றுமையால் ஐயனையும் அன்னையையும் ஒன்றுபடுத்திக் காணலாம்!! இத்தகைய பொருத்தம் தன்னிச்சையாக அமைந்ததா அல்லது கவிஞர் வேண்டுமென்றே அமைத்ததா என அறிய இயலவில்லை! பொருட் செறிவும், இசையழகும் மிகுந்து காம்போதி ராகத்தில் பாடப்படும் இந்தப் பாடல் தனி அழகு வாய்ந்தது. தேடுவோருக்குத் தத்துவப் பொருளையும் தன்னுள் அடக்கியது. சிறிது ஆழ்ந்து நோக்கலாமா?

    ஆனந்த நடனம் ஆடினாள்- சச்சி
    தானந்த நடனம் ஆடினாள்

    வானும் புவியும் வணங்கி மகிழ்ந்திட
    ஞானவெளியினில் வீணை ஓம் ஓம் என (ஆனந்த)

    பஞ்சபூதங்கள் முழங்க- குணங்கள்
    பாய்ந்து தாளம் வழங்க
    அஞ்சு தொழிலும் துலங்க- காலம்
    அதிரப் புவிகள் குலுங்க
    தஞ்சம் தஞ்சம் என்றுள் அன்பர் முறையிடத்
    தம்தாம் தம்தாம் தாகிட தகதீம் என (ஆனந்த)

    வானும் புவியும் வணங்கி மகிழ, ஞான வெளியினில் எழும் வீணையின் இன்னிசையும் அவளுடைய ஆனந்த நடனம் தான்;

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களின் இயக்கமும் இந்த ஆனந்த நடனம் தான்; அவை முழங்குகின்றன; குணங்கள் என்பன பிரகிருதி மாயையுடன் சம்பந்தப்பட்ட சத்துவ ரஜஸ தாமச குணங்கள். இவைதான் ஐம்பூதங்களின் தோற்றத்திற்கும் இயல்புக்கும் காரணம் ஆகும். இந்தப் பிரபஞ்ச ஆட்டமெல்லாம் முக்குணங்களால் நடப்பது தான். இதைத்தான் குணங்கள் தாளம் வழங்குகின்றன எனப் பாடல் உரைக்கின்றது. தனது ஆட்டத்தின் மூலம் அஞ்சு தொழில்களான, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவற்றையும் செய்கிறாள் பராசக்தி! இவளுடைய ஆனந்த நடனத்தில் பிரபஞ்சச் சுழற்சியாகக் காலம் அதிர்கின்றது; அண்ட சராசரமும் இதனால் (புவிகள்) குலுங்குகின்றது. மாயையில் உழலும் மானுட உயிர்களும் மற்றும் பிரபஞ்ச உயிர்களும், ‘நீயே தஞ்சம்,’ என, ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும் ஆட்டுவிப்பானும் அடங்குவிப்பானுமான அம்மையப்பனிடம் சரணமடைகின்றனர். இவையெல்லாம் நடத்திக் கொண்டு, ‘தம் தாம்,’ ‘தம் தாம்’ எனச் சீரான ஒரு அற்புத லயத்துடன் சிவசத்தியின் ஆனந்த நடனம் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருக்கிறது……………………..

    ஆங்கிகம் புவனம் யஸ்ய வாசிகம் சர்வ வாங்மயம்
    ஆஹார்யம் சந்த்ரதாராதி தம் நம ஸாத்விகம் சிவம்.

    அவனது நடனமெல்லாம் உலகின் இயக்கம்
    அவனது வாக்கெல்லாம் உலகத்தின் மொழி
    அவனது அணிகளெல்லாம் சந்திரனும் தாரகைகளுமே
    அவனை, நம் சிவனை, நாயகனை, நாளும் வணங்குவோம்.
    *****************************************************

    Share
  • இனி யார் சிலம்பிசைப்பார்

    –முனைவர் மு.பழனியப்பன்.

     

    குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் பற்றிய ஆவணப்படம் பற்றிய கண்ணோட்டம்

    PANNAARAAICHI VITHTHAKAR  KUDANTHAI PA. SUNDARESANAR3
    ஓடும் காவிரியின் ஒய்யாரத்தை அருகிருந்துப் பார்க்க முடியுமா? காவிரியின் புதுப்புனல் ஓட்டம், அது சுழித்துச் சுழித்துப் பொங்கிச் செல்லும் புதுமை, நாற்றுகளுக்கு இடையில் புகுந்தோடும் வளமை, தமிழ்ப்பாட்டுக்களின் தாளத்தோடு இசைந்தோடும் அதன் கவி வெள்ளம், கொக்குகளின் அணிவகுப்பு, மீன்களின் துள்ளல் என்று காவிரி காட்டும் உயிர்ப்பெருக்கம் என்று பல்வகை நீர்க்கோலம் காட்டும் காவிரியின் பேரழகை தமிழின் இசைப் பின்புலத்தோடு, இசை வரலாறோடு, தமிழிசை வாணரின் வாழ்வோடு கலந்து தருகிறது குடந்தை ப. சுந்தரேசனார் பற்றிய ஆவணப்படம். தமிழிசையாறு குடந்தை ப. சுந்தரேசனார். தமிழ்ப்பண்களை வெளிப்படுத்தும் பேறு அவர் பெற்ற வாழ்க்கைப் பேறு.

    PANNAARAAICHI VITHTHAKAR  KUDANTHAI PA. SUNDARESANAR2மண்சார்ந்த பண் கலைஞர் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு மண்உருவம் சமைத்துத் தொடங்கும் இவ்வாவணப்படம், அவருக்குத் திருத்தவத்துறையில் இராசகோபுரத்தில் இடம் சமைக்கப்பெற்றிருப்பதைக் காட்டி அவர் பொன்னுருவம் பெற்றதோடு நிறைகிறது இவ்வாணப்படம். சீர்காழியில் தொடங்கும் அவரின் வாழ்க்கை கும்பகோணத்தில், ஆடுதுறையில், திருவாரூரில், திருமழபாடியில், திருப்புள்ளம்பாடியில், சிதம்பரத்தில், மதுரையில் தொடர்ந்து இசை முழக்கமாக வெளிப்பட்டுள்ளதை நீரோட்டமாக அளிக்கிறது இப்படம்.

    பண்ணாராய்ச்சி வித்தகரான குடந்தை ப. சுந்தரேசனார் – மனிதநேயம் கொண்டவர், பணத்தைப் பொருளாக எண்ணாதவர், பண் ஆராய்ச்சி வித்தகர், பாடியும் விரிவுரையாற்றியும் பாடும்போதே விளக்கவுரை செய்தும், விளக்கவுரையின்போதே பாடியும் சாதனைகள் பல புரிந்தவர், தமிழிசை வளரப் போராடியவர் என்று அவரின் பண்புகளைப் பாராட்டும் அறிஞர்தம் உரைகள் அவற்றினை முன்னுரையாகக் கொண்டு பண்ணாராய்ச்சி வித்தகவரின் ஒலிவடிவத்தை இயற்கை எழிலோடு கலந்து தருகிறது இக்குறுவட்டு.

    PANNAARAAICHI VITHTHAKAR  KUDANTHAI PA. SUNDARESANAR

    நாடுகாண்குழு என்ற ஒன்றைத் தொடங்கி அதன் வழி தமிழசைப்பயணம் மேற்கொண்டு, தேவாரப் பனுவல்களைக் கல்வெட்டுக்களாக்கி அவர் செய்த அரும்பணி இன்னொரு பக்தி இயக்கம். மற்றுமொரு தமிழியக்கம்.

    குடும்பம் தழைத்தோங்கப் பரம்பரை இல்லையென்றாலும் தன் தமிழிசைக்கானப் பரம்பரையை அவர் துவக்கிச் சென்றுள்ளார். அவர் வழியில் தமிழிசை வளர்ந்து வருகிறது என்பதற்கு இவ்வாவணப்படத்தில் வெளிப்பட்டிருக்கும் இசைவாணர்கள் சான்று.

    மகாவித்வான் மீனாட்சி சுந்தரனாரின் பெருந்திருப்பிராட்டியாரின் பிள்ளைத்தமிழில் வருகைப் பருவத்தில் இருந்துப் பாடப்பெற்ற குடந்தை ப.சுந்தரேசனாரின் தமிழ்ப்பாடல் மையாமன இடத்தில், தேவையான இடத்தில் இவ்வாவணப்படத்தில் இடம்பெறச்செய்யப்பெற்றுள்ளது. அதற்கான நடனவடிவம் தந்தவரின் நடனப்பாங்கு ஒரு முழுமையான இலக்கியத்தை ரசித்த முழுமையைத் தந்துநிற்கிறது. அதுபோல சிலப்பதிகார வாழ்த்துப்பகுதிகளைக் காவிரியாற்றின் ஓட்டத்தில் மர ஓடத்தை நிற்கவைத்து அதன் மீது நடனமாடச் செய்திருப்பதும் மழையைப் போற்றும்போது நடனபெண்ணார் அமர்ந்து காவிரித்தண்ணீரை வணங்கி நிகழ்த்தும் முறையும் கண்களில் அகலாமல் காட்சியாக நிலைக்கின்றன.

    PANNAARAAICHI VITHTHAKAR  KUDANTHAI PA. SUNDARESANAR4

    பண்ணாராய்ச்சி வித்தகரின் உலகத்தமிழ் மாநாட்டு உரை இவ்வாவணப்படத்தின் புதிரொன்றுக்கு நல்ல பதில் தருகின்றது. பெரும்பாணாற்றுப்படையின் இசைவரிகளுக்கு பண்ணாராய்ச்சி வித்தகர் குரல் முழக்கம் செய்கின்றார். ஆயன் ஒருவன் குழல் செய்து இசை ஒலிக்கும் காட்சி காட்சியாக வருகின்றது. இது ஏன் வருகின்றது என்ற புதிருக்குப் பண்ணாராய்ச்சி வித்தகரின் மாநாட்டுப் பேருரையின் சிறுபகுதி பதில் தந்துவிடுகின்றது. குழலிசையை முதன் முதலாக உலகுக்கு அறிமுகம் செய்தவன் தமிழன் என்பதால் அக்காட்சி முன்னிலும் அதற்காக காரணம் பின்னிலும் அமையும்படி இவ்வாவணப்படம் ஆதி அந்தமாக விளங்குவது சிறப்பாக உள்ளது.

    முனைவர் மு. இளங்கோவன்
    முனைவர் மு. இளங்கோவன்

    தமிழிசை உலகில் குடந்தை ப. சுந்தரேசனாரின் பணியை, அவரின் குரலை, அவரின் உருவத்தை நிலைநிறுத்துவதாக இவ்வாவணப்படம் அமைகின்றது. இதனை எழுத்தும் இயக்குமுமாக்கிய முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் தமிழிற்கு காலத்தினால் செய்த உதவி இதுவாகின்றது. தமிழறிந்தோர் தமிழறிந்தோரை விளக்கம் செய்யாவிட்டால் தமிழன் இருந்தென்ன, செத்தென்ன பயன். தயாரித்தளித்த திருமதி பொன்மொழி இளங்கோவன் வெளியிட்ட வயல்வெளித் திரைக்களம், இசை மற்றும் படத்தொகுப்பு செய்த இராஜ்குமார், இராசமாணிக்கம், ஆகியோருக்கு நன்றிகள். இவ்வாவணப்படத்தைப் பெறுவதற்கு வயல்வெளி திரைக்களம் 0442029053 என்ற எண்ணைச் சுழற்றுங்கள். தமிழிசையின் ஆரத்தைச் சுழற்றிய பெருமை உங்களைச் சேரும். இனி யார் சிலம்பிசைப்பார்?

    ஆவணப்படம் முன்னோட்டக் காணொளிகள்:

    காணொளி-1: http://youtu.be/wevQG7e_8f8

    காணொளி-2: http://youtu.be/CFpvBCw1wxQ

     

     

     

    முனைவர் மு.பழனியப்பன்
    இணைப்பேராசிரியர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    திருவாடானை

     

     

    கட்டுரையின் படங்கள்:
    ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் காணப்பட்ட திரைக்காட்சிகள் மற்றும் விக்கிபீடியா

    Share
  • மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்!!!

    — அதிரை இளையசாகுல்.

    mgrநடமாடும் ஒரு மனிதாபிமானம், வறுமைக்கோட்டை அழிக்க இயற்கை எறிந்த அழிரப்பர், வறண்ட தமிழகத்தை வளமாக்க வந்த அடைமழை, வரலாற்றையே வளைத்துப்போட்ட கருணைக் கல்வெட்டு, எளியோர் வாழ்வை பண்படுத்த வந்த இரக்க இதிகாசம், தவறுகளை சரியாக்க இறைவன் எய்த பிரம்மாஸ்திரம், புயலால் பாதித்த பூமிக்கு கிடைத்த மரக்கன்று, சுவையே அறியாத நாவுகளை நனைத்த கற்கண்டு, ஈழ மக்களும் இனிதே பூஜிக்கும் இனிப்புப் புலி, பசித்த வயிறுகளுக்காய் வந்த அட்சய பாத்திரம், அப்பாவி மக்களுக்கு அழகாய் கிடைத்த அன்புப் பரிசு, வட மாநிலங்களே வியந்து நோக்கிய தென்னகத்து ராஜ தந்திரி!

    இந்த அத்தனைக்கும் சொந்தக்காரர் மக்கள் திலகம், மனிதநேய மாமன்றம் எம்.ஜி.ஆர். தவிர வேறு யாராக இருக்க முடியும்?

    குடிசைவாசிகள் அனைவரும் கண்ணீர் யாகம் செய்து மக்கள்திலகத்தைக் கேட்டே மன்றாடினார்களோ?

    அதனால் தமிழ் நாட்டுக்குக் கிடைதத்த கண்கவர் மனிதர்தானோ எம்.ஜி.இராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர்!

    அவர் வந்த பிறகுதான் சுவாசப் பிரச்சினையில் சிக்கித் திணறிக் கொண்டிருந்த தமிழகப் பட்டித் தொட்டிகளுக்கெல்லாம் பிராண வாயு கிடைத்தது எனலாம்!

    அரசியல் உலக வரலாற்றில் தேர்தலில் படுத்துக்கொண்டே வெற்றி வாகை சூடிய ஒரே தலைவர் யாரென்று கேட்டால் அது மக்கள் திலகம் என்றே பதில்வரும்!

    அப்பேற்பட்ட மனிதாபிமானியைப் பற்றிக் கட்டுரை எழுத போட்டி வாயிலாக என்னைப் பணித்ததை நான் பெருமையாகக் கருதுகிறேன்!

    தமிழக அரசியல் சாம்ராஜ்ஜியத்தில் புரட்சித்தலைவர் அவர்களுக்கென்று தவிர்க்க முடியாத ஒரு தனியிடம் உண்டு.

    மலையாள நாட்டுக்கு சொந்தக்கரார் என்றாலும் இலங்கை தேசத்தின் கண்டியில் பிறந்து, தமிழ்நாட்டில் வந்து கோலோச்சியர்வதான் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். அவர் பிறந்த இடம் நமக்கு முக்கியமல்ல.. இங்கே அந்தத் தங்கத் தலைவனின் திறந்த இதயமே முக்கியம். கண்டவரையெல்லாம் வாழ வைக்கும் இந்த தமிழகம், இந்த வானவரை வாழவைக்காதா என்ன?

    இன்றுவரைக்கும்கூட, தமிழ்நாட்டு பாமரர்களின் மனதில் எம்.ஜி.ஆர். அவர்கள் தெய்வமாகவே அமர்ந்திருக்கிறார்கள்.

    இன்றும் ஒரு சில கிராம மக்களால் எம்.ஜி.ஆர் அவர்கள் உயிரோடு இருப்பதாகவே நம்பப்படுகிறார் என்றால் எத்தனை ஆழமாய் தன் சுவட்டை பதித்துச் சென்றிருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்!

    எம்.ஜி.ஆர். அவர்கள் முதன் முதலாய் திரையில் தோன்றியது சதி லீலாவதி என்றொரு திரைப்படத்தில்… அதில் அவர் காவல் அதிகாரி வேடம் ஏற்று நடித்திருப்பார்.

    அந்தப் படத்திற்குப் பிறகு மதிப்பு மிக்க நல்லதொரு வேடத்திற்காய் காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவருடைய எதிர்பார்ப்பு நாளடைவில் பொய்த்துப்போனது.. ஆனாலும் அவர்தம் முயற்சியைக் கைவிடவில்லை…

    அடுத்தடுத்து வந்ததெல்லாம் காவல் அதிகாரி பாத்திரமே என்பதால், தொடர்ந்து அதில் நடிக்கும்பட்சத்தில் எம்.ஜி.ஆர். காவல் அதிகாரி வேடத்திற்கே லாயக்கு என்று முத்திரைக் குத்திடக்கூடும்.. கருவேப்பிலையாய் நம்மைப் பயன்படுத்திக் கொண்டு பின்னர் தூக்கியெறிந்துவிடக்கூடும் என்று பயந்து அதற்குப் பிறகு கிடைத்த ஒரே மாதிரியான பாத்திரங்களையெல்லாம் புறந்தள்ளி நல்ல ஒரு வேடத்தை எதிர்பார்த்து கவலையோடு அமர்ந்திருந்தவர்தான் பின்னர் அந்தத் துறையையே ஆட்டுவித்தார் என்பதை அறிக..

    அதற்காக அவர் எவ்வளவு உழைத்திருப்பார்.. எவ்வளவு இழந்திருப்பார்.. அந்த நிலையை அடைய எத்தனைக் கடின முயற்சிகளை மேற்கொண்டிருப்பார் என்று எண்ணி பார்க்கையில், அவரை உழைப்பின் முன்னோடியாக வைத்து நாமும் நம்மைப் பட்டைத் தீட்டிக் கொள்வதில் எந்தத் தவறுமில்லை என்பதாகவே மனதுக்குப்படுகிறது.

    முதலில் அவர் திரைத்துறையில் புக மேற்கொண்ட கடின முயற்சிகளையும், அதனால் அடைந்த வேதனைகளையும் கஷ்ட நஷ்டங்களையும் என்றுமே மற்ககாதவர்.. ஆகவேதான் அவர் திரைத்துறையில் வளர்ந்த நிலையில் தகுதி வாய்ந்த பல புதிய நபர்களுக்கு வாய்ப்புகளை அள்ளி அள்ளிக் கொடுத்தார். அதன்வழியில் திரைத்துறையில் அறிமுகமானவர்தான் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள்.

    எம்.ஜி.ஆர் அவர்கள் தன் பால்ய காலத்தில் வறுமையென்ற அரக்கனால் அதிகம் பாதிக்கப்பட்டவர். ஆகவே தான் திரைத்துறையின் உச்சத்தில் இருந்த போதும் சரி.. தமிழக ஆட்சி பீடத்தில் அமர்ந்தபோதும் சரி.. ஏழை மக்களுக்கு நிறையவே அள்ளி அள்ளிக் கொடுத்தார். அதனால் தமிழக வரலாற்றில் நல்லதோர் இடத்தையும் பிடித்தார்!

    எம்.ஜி.ஆர் அவர்களை கொடை வள்ளல் என்பதைவிட “கடை”வள்ளல் என்று சொன்னால் மிகவும் பொருத்தமாயிருக்கும்! காரணம், அவருக்குப்பிறகு ஈகைத் தன்மையோடு மக்களுக்காக செல்வங்களை வாரி இறைத்தவர் யாருமே இல்லை எனலாம்!

    இன்னெரு விஷயத்தை இங்கே பதிவு செய்ய வேண்டும்..

    அமைச்சரவை கூடும் இன்றைய நிலையில் பெரும்பாலும் சட்டசபை.. சண்டை சபையாகவே இருந்திருக்கிறது. கற்றோர் கூடும் அவை அது – எதிரில் இருப்பவர் எதிரி என்றாலும் மரியாதை நிமித்தமாக நடந்துக் கொள்வதே மனித மரபு.

    சில நேரங்களில் ஆளுங்கட்சிக்கும், எதிர் கட்சிக்கும் வாக்குவாதம் முற்றி தவறான சொற்பிரயோகத்தைப் பயன்படுத்துவதும், மைக்கைப் பிடுங்கி அடிக்கப்பாய்வதும்..உச்சக் கட்டமாக சேலையை உருவி பெண்ணை அவமானப்படுத்திய நிகழ்வெல்லாம் நடந்திருக்கிறது. இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

    ஆனால் மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர் தமிழகத்தை ஆண்ட காலத்திலெல்லாம் சட்டசபை கெளரவிமிக்க ஒரு சபையாகவே இருந்திருக்கிறது. அனைவரும் உள்ளே சரி சமமாகவே நடத்தப்பட்டார்கள். கண்ணியமாகவே, அழைக்கப்பட்டார்கள்.. அதற்கு உதாரணமாய் கூட ஒரு சம்பவத்தை மேற்கோள் காட்டலாம்.

    எம்.ஜி.ஆர். அவர்கள் முதன்முதலாய் முதலமைச்சர் பதவியில் அமர்ந்த நேரம்.. அப்போது சட்டமன்ற உறுப்பினராயிருந்த கிணத்துக்கடவு கந்தசாமி என்பவர் அன்றைய நாளின் எதிர்கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களை.. அவருடைய பெயரைச்சொல்லி ஏதோ சாடி பேச, அதை செவியுற்ற முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள், மரியாதையின்றி பேரைச் சொன்னதற்காக கந்தசாமியை கலைஞர் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வைக்கிறார்என்றால், எம்.ஜி.ஆர். அவர்களை அவர்தம் ஆட்சியை மெச்சாமல் எப்படி இருக்க முடியும்? எம்.ஜி.ஆர். அவர்கள் உயிரோடு இருக்கும்வரை கலைஞர் அவர்களின் பெயரைச் சொல்லி ஒருமுறைகூட அழைத்ததில்லை என்பதை விளங்கிக் கொள்க!

    சாதி மத விசயங்களில் எம்.ஜி.ஆர். அவர்கள் இன்னொரு பெரியாராகத் திகழ்ந்தார் என்பதற்கு தாழ்த்தப்பட்ட ஏழை சிறுபான்மை, மக்களிடம் அவர் நடந்து கொண்ட விதம் சாட்சி..

    இன்றைய நாளில் சாதி வேற்றுமைகள் சற்று கட்டுக்குள் வந்துவிட்டாலும், கடந்த முப்பது ஆண்டுகளுக்கு இருந்த நிலை கிராமங்கள்தோறும் சாதி சம்பிரதாய பிரச்சினைகள் தலைவிரித்தாடியதை மறுப்பதற்கில்லை.. அது ஆளும் கட்சியாளர்களையும் விட்டுவைக்கவில்லையென்றால் அது உண்மையே..

    ஆனால் அந்த ஒரு விசயத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் சற்று விதி விலக்காகவே இருந்தார்கள். எதையும் முற்போக்குத் தனமாகவே அணுகினார்கள்.

    1978ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருந்த நேரம்.. மதுரையில் பிரபலமான மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரை பார்க்கச் சென்றிருக்கிறார். அப்போது அந்த மருத்துவமனையில் வராண்டா பகுதியில் முதியவர் ஒருவர் வற்றிய உடம்போடு உடல் நலிவுற்ற நிலையில் படுத்திருந்திருக்கிறார். அவரை ஊன்றிக் கவனித்த புரட்சித்தலைவர் அவர்கள் அடையாளம் கண்டுகொண்டவராய் அவரை அலக்காக அப்படியேத் தூக்கி தன் நெஞ்சில்போட்டு அணைத்தவாறு உடனே மருத்துவமனை நிர்வாகத்தை அழைத்து அந்த அன்பரை “சிறப்புப் பகுதிக்கு” சேர்க்கச் சொல்லி அவருக்கான அத்தனைச் செலவுகளையும் தானே ஏற்றுக்கொண்டாரென்றால், எத்தனைப் பெரிய மனிதாபிமானி அவர்!

    அங்கே வராண்டாவில் படுத்திருந்த அந்த முதியவர் வேறு யாருமல்ல.. கர்மவீரர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் காவல் துறை மந்திரியாகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாண்பாளர் கக்கன் அவர்கள்தான்!

    இப்படி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாழ்வில் நடந்த சம்பவங்கள் ஏராளம்!

    எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்தமட்டில்.. அவர் ஏழை மக்களுக்கெல்லாம் கிடைத்த வலி நிவாரணி, எப்போதும் கண் விழித்தே கவனித்துக் கொள்ளும் கலங்கரை விளக்கம், தாகம் தீர்க்க ஓடோடி வந்த மனித ஜீவநதி, மகத்தான மனிதாபிமானத்தின் மறுபக்கம், அரிச்சந்திரனின் அடுத்த வாரிசு.. இப்படி அவரைப் புகழ்ந்துகொண்டே போகலாம்.

    ஒரு சமயம் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ என்கிற பத்திரிக்கையின் சென்னைப் பிரதிநிதியான ராமானுஜம் என்பவர் தன் உறவினரான ஏழைப் பெண் ஒருவருக்கு ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சைக்காக உதவி தேடி ஏ.வி.எம்.சரவணன் அவர்களை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். உடனே விசாரித்த மக்கள் திலகம் அவர்கள் அதற்கு உண்டான மொத்தப் பணத்தையும் தானே அளித்து உவகை கொண்டிருக்கிறார்.

    இப்படி அவருடைய சரித்திரத்தில் உதவி என்று போய் நின்றுவிட்டு வெற்றுக் கையோடு திரும்பியவர்கள் யாரும் இல்லை எனலாம்.

    அன்று எம்.ஜி.ஆர் அவர்கள் அன்பே வா படப்பிடிப்பில் இருந்த போது முதியவர் ஒருவர் அங்கே தரைக்கு வார்னீஷ் போடும் பணியில் மும்முரமாயிருந்திருக்கிறார்.. அந்நேரம் புரட்சித்தலைவரின் பார்வையில் அவர் பட்டுவிட.. உடனே அவரை அழைத்து விசாரித்திருக்கிறார். ரொம்ப காலத்திற்கு முன்பு மேடைதோறும் ராஜபார்ட் வேடத்தில் தோன்றி நடித்தவராம் அவர். அந்நிமிடமே அந்த முதியவரை கட்டித் தழுவி பிரத்யேகமாய் உண்டாக்கி வைத்திருந்த தன் உணவறைக்கு அழைத்துச்சென்று அவரோடு மதிய உணவை பகிர்ந்துண்டு தக்க தொகையும்கொடுத்து அவரை மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தாரென்றால்.. அந்த கொடை வள்ளலை வாழ்த்தாமல் எப்படியிருக்க முடியும்?

    தோழமை வேறு, தொழில் வேறு, பகை வேறு, திறமை வேறு என்று இவ்வுலகில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

    ஒருவர் தம்மை விமர்சிக்கும்பட்சத்தில் அவரை அடிவேரோடு சாய்த்துவிடவே நினைக்கும் மனிதர்களுக்கு நடுவே.. அது மாதிரியான பலஹீனத்தோடுதான் பெரும்பாலான மனிதர்கள் இருக்க.. மக்கள் திலகம் அப்படியல்ல..

    கவியரசு கண்ணதாசன் அவர்களும் எம்.ஜி.ஆர் அவர்களும் ஒரு நேரத்தில் நெருக்கம் கூடிய நண்பர்கள்.. பிறகு இருவருக்கும் கருத்து வேற்றுமை வந்து பிரிவினைக்கு வித்திட்டது. அதனைத் தொடர்ந்து கண்ணதாசன் பாட்டெழுதினால் நான் நடிக்க மாட்டேன் என்று அறிக்கைவிட்ட நிலையிலும் கவியரசின் கவித்திறமையை எம்.ஜி.ஆர் அவர்கள் குறைத்து மதிப்பிடவில்லை.

    ஆகவேதான், கண்ணதாசன் அவர்களை அரசவைக் கவிஞராக்கி அழகு பார்த்தார் என்பதெல்லாம் மறுக்க முடியாத வரலாறு..

    ஆக இத்தனைத் தனித்தன்மையோடு நடந்த, மக்களுக்கு வாரி வாரி வழங்கிய இன்னொரு பாரி, மற்றுமோர் பேகன், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மக்கள் மனதில் இன்றும் வாழ்கிறார்.. என்றென்றும் வாழ்வார் என்றுகூறி இக்கட்டுரையை நிறைவுசெய்கிறேன்!

    Share