இனியவளே என்று பாடி வந்தேன்…
— கவிஞர் காவிரிமைந்தன்.
கடற்கரை… காற்று… காதலி… இவ்வரிசையில் வேறென்ன வேண்டும்? கவிதை!
சொல்லில் ஆயிரம் பொருள்வைத்து சொக்க வைக்க முடியுமென்றால் துள்ளும் வார்த்தைச் சரமெடுத்து தொடுக்கும் கவிஞரின் கைவண்ணம் பாருங்கள்! சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்காக கவியரசு கண்ணதாசன் எழுதிய பல்லவி பாருங்கள்..
இனியவளே என்று பாடி வந்தேன்
இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
ஆம் இனியவளே.. என்கிற பல்லவியின் முதல் சொல்லை இனி அவளே.. என்று பதம் பிரித்து இனிமை சேர்க்கிற இன்பமிருக்கிறதே.. அது யாருக்கு வரும்? மெல்லிசைமன்னரின் இசையில் விளைந்த கீதம்! டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் பொழியும் நாதம்! அன்பு மன மாளிகையில் இருவர் நடத்தும் ஆனந்தவிழா இப்படித்தான் இருக்குமோ என்று ஏங்க வைக்கிற வரிகள் செவிகளில் வந்து விழுகின்றன!!
பெண்மையின் நான்கு குணங்களும் ஒன்றெனக் கண்டிடும்போது காதலன் உள்ளத்தில் தோன்றும் இன்ப வெள்ளம் இப்படித்தான் இருக்குமோ? ஆயிரமாயிரம் காலம் இந்த இன்பம் நிலைத்திருக்க இளமை விரும்புவது இயற்கைதானே! மொட்டுவிரிந்திடும் இதழ்களைப்போல் இன்பம் கட்டுக்கடங்காமல் பாய்ந்திடும் வேளை காதலின் லீலை இப்படித்தானிருக்குமோ?
மோகத்தில் சாய்கின்ற வேளை பெண்மை இன்பத்தில் தாளாமல் இதழ்கள் இங்கே என்ன அளவீட்டுக் கருவி செய்யும் வேலையைச் செய்கின்றனவாம்.. கவிஞரின் கற்பனையில் ஒரு காதல் கீதம் இன்பத்தேன் சொட்டுகிறது!!
ஓ… ஓ… ஏ… ஆ…
ஆஹா ஆ… ஹா…
எஹேஹேஹே அஹஹாஹா ( இசை )
ஓஹோ… ஓஹொஹோ ஹோ
ஏஹே ஏஹே ஏஹே ஏஹே
இனியவளே என்று பாடி வந்தேன்
ம்… ம்… ஆஹா ஹா ஹா ஹா…
இனியவளே என்று பாடி வந்தேன்
இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
ஆஹா ஹா ஹா ஹா…
இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன் தான் என்று ஆகி விட்டேன்
ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன் ஆ…
ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன்
ஓராயிரம் காலம் இந்த உள்ளம் ஒன்றாக …
ஒன்றானவர் வாழ்வே இன்ப வெள்ளம் என்றாக
துணை தேடி வரும் போது
கண்ணில் என்ன நாணமோ
குணம் நான்கில் உருவான
பெண்மை இன்று போதுமோ
திரு நாள் வரும் அதோ பார்
தருவார் சுகம் இதோ பார்
திரு நாள் வரும் அதோ பார்
தருவார் சுகம் இதோ பார்
பொன் மாலையில்
பூ மாலையாய்
நெஞ்சில் சூடவோ
சூடவோ …
சூடவோ …
இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன் தான் என்று ஆகி விட்டேன்
தாலாட்டிடும் நெஞ்சம் தன்னை தங்கம் என்றாரோ..
பாராட்டிடும் இன்பம் தன்னை மங்கை கொண்டாளோ
நினைத்தாலும் சுகம் தானே இந்த நெஞ்சின் காவியம்
கொடுத்தாலும் நலம் தானே எனை கொஞ்சும் ஓவியம்
இதழால் உடல் அளந்தான்
இவளோ தன்னை மறந்தாள்
இதழால் உடல் அளந்தான்
இவளோ தன்னை மறந்தாள்
ஏன் என்பதை
நான் சொல்வது
எங்கும் மௌனமே
மௌனமே …
மௌனமே …
இனியவளே என்று பாடி வந்தேன்
இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
ஆ… லாலலலா ஓஹொஹொஹோ
ஒஹொஹோ ஓஹொஹோ…
ஒஹொஹோ ஓஹொஹோ…
_______________________________________________________
படம்: சிவகாமியின் செல்வன்
பாடல்: கவியரசு கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
குரல்: டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா
காணொளி: https://www.youtube.com/watch?v=pmlPL7SMpVM
https://www.youtube.com/watch?v=pmlPL7SMpVM