Blog

  • ஒரு மனம் பல முகங்கள்

    இசைக்கவி ரமணன் 

    எத்தனை முகமடியோ?French_mask

    எத்தனை முகமூடியோ??

    அத்தனையும் பாக்கணும்னா

    ஆத்தாடி ஆகாதே!

    பாக்காம விட்டுப்புட்டா

    பானை நல்லா வேகாதே!!

    பாண்டியன் எக்ஸ்பிரஸில் ஏறியாயிற்று. நீங்கள் என்னதான் முன்கூட்டியே ‘ரிசர்வ்’ செய்திருந்தாலும், செங்கல்பட்டு வரை, சீசன் டிக்கெட்டுக்காரர்கள் காட்டுகிற தயவில்தான் நீங்கள் பிழைக்கவேண்டும். அவர்களுடைய வண்டியில் நாம் ஒண்டிக்கொண்டதுபோல இருக்கும் அவர்கள் பார்வை. ‘ரிசர்வ்’ செய்து பயணம் மேற்கொள்பவர்கள் மிகவும் கீழானவர்கள் என்ற நிச்சயம் அவர்கள் பார்வையின் வெப்பத்தில் உணர முடியும். நாம் எட்டுப்பேர் என்றால் அவர்கள் பத்துப்பேர்கள் இருப்பார்கள். எப்போதும் அப்படியில்லை; சில நேரம் பன்னிரெண்டாகவும் இருக்கும்! அடுத்த குடாவில் இடமிருந்தாலும், அலுவலகத்தில் பாதியில் நின்றுபோன பேச்சைத் தொடரும் சாக்கில் சிலர் இங்கு வந்து தொத்திக் கொள்வார்கள். மதுரைவரை செல்பவர்கள் மெளனமாக இருப்பார்கள். எண்ணிக்கைதான் வலு! ஆனால், உள்ளே எள்ளும், கொள்ளும் வெடித்துக்கொண்டிருக்கும். அநத்ச் சினம், குழந்தைகள் மீது அடியாக விழும். பெட்டிகள் தேவையில்லாமல் இரைச்சலோடு இழுக்கப்பட்டு மறுபடியும் தள்ளப்படும். டிக்கெட் பரிசோதகர் வந்தால் இவர்களை ஒரு வழி செய்துவிடலாம் என்று கறுவிக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். செங்கல்பட்டுக்காரர்களோ கண்டுகொள்ளவே மாட்டார்கள். ‘டிக்கெட்ஸ் ப்ளீஸ்’ என்று வருபவரை இவர்கள் பார்க்கின்ற தோரணை இருக்கிறதே! அவர், தான் ஏதோ தவறுசெய்து விட்டதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டு, மதுரைப் பயணிகள் பக்கம் திரும்பி, அவர்களிடம் சற்றுச் சிடுசிடுப்போடு கேள்விகள் கேட்பாரே பார்க்கலாம்! அவர் ரொம்பத் தயங்கி மிகவும் மன்றாடினால், செங்கல்பட்டார் லேசாகச் சட்டைப் பையைத் தொட்டுக்கொள்வார்கள்; அவரைப் பார்க்கவே மாட்டார்கள்; பேச்சை விடவே மாட்டார்கள்.

    செங்கல்பட்டுக்காரர் மதுரைக்குச் செல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் போக்கு, மொத்தமாக மாறிவிடும்! “குடும்பத்தோடு பயணம் செய்யவந்தால் இத்தனை இடைஞ்சலா? நாங்கள் நேரத்துக்குச் சாப்பிட்டுப் படுக்க வேண்டாம்?” என்றெல்லாம் நிறையைக் கேள்விகள் சூடாக எழும்!

    இடம்மாறினாலே தடம்மாறி விடுகிறானே மனிதன்! மனிதன் மாறமாட்டானா என்று சிலர் ஏக்கமாய்க் கேட்கிறார்கள். அவன் மாறாதிருக்க மாட்டானா என்றல்லவா கேட்கவேண்டும்!!

    அரசியல், விலைவாசி, சினிமா, வானிலை, வம்பு, அட எதைப்பற்றி வேண்டுமானாலும், பேப்பர் படிக்காமல், டி.வி. பார்க்காமல், ஓடுகின்ற ரயிலில் உட்கார்ந்தபடியே அக்கு வேறு ஆணி வேறாகத் தெரிந்துகொள்ள வேண்டுமா? செங்கல்பட்டுக்காரர்களிடம் ‘மணி என்ன?’ என்று கேளுங்கள், போதும்! ஆமாம், சீசன் டிக்கெட்காரர்கள் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தாலே நண்பர்களாகி விடுவார்கள். காலையில் வீட்டை விட்டவர்கள், இரவில் திரும்பும்போதுதான் எத்தனை உற்சாகம்! பறவைகள் கூடுதிரும்பும் பரபரப்பு! சண்டை ஏதுமில்லை, சந்தடிதான், சற்றே சச்சரவோடு! கவனமாகக் கேட்ட எனக்கு வேர்க்கடலை, டீ எல்லாம் உண்டு!! நம்மைக் கொடுக்கவிட்டால்தானே! மதுரைப் பயணிகள் பக்கம் நான் திரும்பவே இல்லை!!!

    ஒருமுறை…

    அதிகக் கூட்டமில்லை. எனக்கு அடுத்தபடியாக ஒருமனிதர். ஆறடிக்குக் கொஞ்சம் குறைவு; கோதுமை நிறம்; முன்வழுக்கை; நீலச்சட்டை அவருக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது; இரண்டு கைகளையும் கோத்துக்கொண்டு மடியில் வைத்துக்கொண்டிருக்கிறார்; பார்க்க இனியவராகத் தெரிகிறார். திடீரென்று, நறநறவென்று பல்லைக் கடித்துக்கொண்டு கடுமையாகத் திட்டுகிறார்:

    “அறிவிருக்கறவன் செய்ற வேலயாடா இது? ஒனக்கு அவ்ளவு ஆங்காரம் இருந்தா எனக்கு எவ்ளவு இருக்கணும். ஹூம்..” என்றார்.

    யாரைத் திட்டுகிறார்? யாரையோ! ஆம், எதிரே இல்லாத யாரையோ!! இதைக்கொஞ்சம் துறுவினால் என்னவென்று அவரை, ‘சார், வண்டி இன்னும் கெளம்பலியே..’ என்று முடிப்பதற்குள், என் பக்கம் திரும்பி, மிருதுவான குரலில், மிகப் பணிவாக, “தூத்துக்குடி வண்டி இன்னும் உள்ள வரல. வந்ததும் சிக்னல் கெடச்சிடும்,. ஒரு பத்து நிமிஷம்தான்,’ என்று ரயில்வே சார்பில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுபோல் பதில் சொன்னார். நான், ‘தேங்க்ஸ்’ என்றேன்.

    அடுத்த கணமே, மோட்டு வளைப் பார்வையோடு, “ஏன்? இன்னிக்கு ஏங்கிட்ட ஆட்டற வாலெ அவங்கிட்ட ஆட்டிப் பாரேன்! அறுத்துச் சாக்கடெலெ எறிஞ்சிட மாட்டான்?”

    கூட வந்தவர்களெல்லாம் உறைந்துபோயிருந்தார்கள். எதிரே இருந்தவர், ஒரு தைரியத்திற்காக, ‘மாம்பலத்தில் என்ன அஞ்சு நிமிஷம் நிக்குமா?’ என்று யார்மீதும் குறிவைக்காமல் கேட்டதும், நம் ஆசாமி உடனே அவர்பக்கம் திரும்பி, மிகுந்த நாகரிகமான முறையில், ‘இல்லங்க. இப்பல்லாம் மாம்பலத்தில நிக்கறதில்ல. எக்மோர் விட்டா தாம்பரம்தான். திரும்பி வரப்போ மாம்பலத்லயும் நிக்கும். சும்மாச் சும்மா மாத்தறதுனால ஜனங்களுக்கெல்லாம் பாவம் கஷ்டம்தான்,” என்றார். கேள்வி கேட்டவர் பீதியும், பிரமிப்பும் கலந்து பரிதாபமாகப் புன்னகைக்கத் துவங்கும் போது, அவர், விட்ட இடத்துக்கு அதிவிரைவில் சென்று,

    “டேய்..டேய்..டேய்..எவன்கிட்டடா இதெல்லாம்? ஆங்..எத்தனை நாள் செல்லுண்டா? கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும்னு கேள்விப்பட்டிருக்கியாடா?” என்று உடம்பைக் குலுக்கிக் கத்தி விட்டு, மறுபடி கைகளைக் கோத்துக்கொண்டு அடுத்த கேள்விக்குப் பதில்சொல்லத் தயாராகி விட்டார்!

    செங்கல்பட்டு வரை நிற்கவே இல்லை! இறங்கும்போது மிக அமைதியாகப் பையை எடுத்துக் கொண்டார். தான் இதுவரை தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தோமே, அதுவும் பலர் முன்னிலையில், அதிலும் ஆத்திரமாக என்பதான எண்ணங்களின் சாயை கூட அவர் முகத்தில் இல்லை! சாந்தமாக இறங்கிச் சாவகாசமாக நடந்து போனார்!

    இன்னொரு முறை…

    எதிரே ஒரு தந்தையும், மகளும். மகள், நல்ல உயரம். கஞ்சிபோட்டுத் தேய்த்த பளிச்சென்ற ரோஜா நிறப் புடவையில், அந்தப் பெண், அழகாய், அமைதியாய் இருந்தாள். அவள் பார்வையில் சலனமில்லை. தந்தையோ ஏதோ தத்தளிப்பில் இங்குமங்கும் பார்த்த வண்ணமிருந்தார். கண்ணாடி வழியே, அவரது திராட்சைக் கண்கள் துறுதுறுவென்று துள்ளிக்கொண்டிருந்தன. அழகான மகளுடன் பயணம்செல்லும் தந்தையின் மனநிலை எனக்குப் புரியும். ஊரெங்கும் கொள்ளிக் கண்கள்; தந்தையோ, பற்றத் தயாராயிருக்கும், ஆனால் வெடிக்க முடியாத மருந்து. நேரெதிரே இருந்த என்னைப் பார்த்துச் சிரிக்க முயன்று உதடோரம் கோணிக்கொண்ட போது நான் அவரைப் புரிந்துகொண்டதாக எண்ணி அவரை சமாதானப்படுத்துவோம் என்று லேசாகப் புன்னகைத்தேன். அவரால் சிரிக்க முடியவில்லை. அவரது நெற்றியில் சூடு முத்தாய்த் துளிர்த்தது. சரி, இதைப்போய் யோசிப்பானேன் என்று ஒரு புத்தகத்தைப் பிரிக்க முயன்றேன். அப்போதுதான் அது நடந்தது.

    பொம்மை மாதிரி அசையாமல் உட்கார்ந்திருந்த அந்த அழகுப் பெண் திடீரென்று அட்டகாசமாகச் சிரிக்க ஆரம்பித்தாள். அவளது பற்களின் விகாரமும், காரணமற்ற அந்தச் சத்தமான சிரிப்பும் எங்களைப் பீதியில் ஆழ்த்தியது. கிளம்பத் தயாராயிருந்த வண்டியில் ஒரு மயான ரத்திரிச் சூழல் கப்பிக்கொண்டது. தந்தையோ, அவளது கையைப் பற்றிக்கொண்டு, “வேண்டாம்மா, வேண்டாம்மா, இங்கெல்லாம் சிரிக்கக் கூடாது, சத்தமே போடக் கூடாது,” என்று கெஞ்சிக்கொண்டிருந்தார். உடைத்த எலும்புகளை உண்டியல் குலுக்கிக் கூளி சிரித்தது போலிருந்தது. பேய்ச்சிரிப்புக்கும் ஓர் அளவை உண்டு போலும்! எப்படி திடீரென்று தொடங்கியதோ, அதேபோல் எதிர்பாராமல் தடாலென்று நின்றுவிட்டது அந்தச் சிரிப்பு. எதுவுமே நடக்காததுபோல அந்த முகம் முன்பிருந்த மாதிரியே அமைதியாகி விட்டது. இந்த அழகை வியப்பதா? அந்த விகாரத்தை நினைத்து அதிர்ச்சியுறுவதா? ஒன்றும் புரியவில்லை.

    அந்தத் தந்தை பட்ட பாட்டை எப்படிச் சொல்ல? மீண்டும் திடீரென அவள் சிரிக்கத் துவங்கும்போது அவர் மறுபடியும் அவள் கரத்தைப் பற்றிக் கெஞ்சுவார். நம் முகத்தைப் பரிதாபமாகப் பார்ப்பார். அவளுக்கு உணவு புரிந்தது, ருசி தெரியவில்லை; வாயில் போட்டது போட்டபடியே இருந்தது. மீண்டும் தந்தையின் கெஞ்சல். அவளுக்கு பாத்ரூம் போகவேண்டும். அதற்கும் இவர்தான் துணைசெல்ல வேண்டும். அவளுக்குப் படுக்கை போடவேண்டுமென்றால், பலகையைப் பிரிக்கவேண்டுமல்லவா? அவள் எழுந்தால்தானே? இருந்தது புரிந்தால்தானே எழுவதும் படுப்பதும்? அவளை எப்படியெல்லாமோ கெஞ்சி எதிர்ப்பக்கம் உட்காரவைத்ததும், எங்கள் உதவியுடன் அவசர அவசரமாக அவளுக்குப் படுக்கையை ஏற்பாடு செய்தார். ஏதோவொரு கனவுத் தாயின் மடியில் மிதப்பதுபோல, ‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்.’ தந்தை விட்ட பெருமூச்சில் ஒரு சாம்ராஜ்ஜியத்தின் சோகம் இருந்தது. அவரிடம் பேச்சுக்கொடுக்க யாரும் விரும்பவில்லை. அந்த அளவுக்கு எல்லோருமே இங்கிதமாக இருந்தார்கள். அவர் கழுத்தைச் சாய்த்தபடி ஒருமுறை என்னைத் துயரத்தோடு பார்த்தார். அவரைக் கடந்துசெல்லும் சாக்கில், அவரது தோளை என் இதயத்திலிருந்து அழுத்தினேன்.

    அவர், வாளி வாளியாய்க் கண்ணீரை விழுங்கினார்..

    விதி இரக்கமின்றிக் கிழித்த ஒரு தேவதையின் கவிதையைப்போல் கிடந்தாள் அவள். சித்தம் என்பது நினைவுகளின் தொகுதி. ஒரு கிராமபோன் ரிகார்டு. அதில் கீறல் விழுந்திருக்கிறது. அவளது வாழ்வில் நடந்த ஏதோவொரு சம்பவத்தை அவளால் தாண்ட முடியவில்லை. அவளுக்கு லேசில் முதுமை வராது. மனம் நின்ற தருணம் ஒரு வட்டம். அதை உடல் சுலபத்தில் மீறாது. மிகக் கொடுமையான இளமை, மிகக் கசப்பான அழகு, இருக்க முடியும் என்பதை விக்கித்த தொண்டையில் புரிந்து கொண்டேன்.

    அவளது சித்தத்தின் அமைப்பு ஒருபுறம் இருக்கட்டும். அவளது தந்தையின் மனநிலை? அதில் எங்கோ ஒரு குற்ற உணர்வு அவரது நிம்மதியைப் பருந்தாய்க் கொத்திக் கிழித்துக் கொண்டிருந்திருக்கும். இவர் தந்தை, அவள் மகள், இது உறவு. அட, உறவு இதுதானா? உறவாடல்? அதற்கு வாய்ப்பே இல்லாமல் உறவா?

    மலரைப் பறிக்கும்போது ரத்தம் கசிவதாய், மனிதனின் மனத்தில் எத்தனை முகங்கள்! அதில் எத்தனை பாவங்கள்! அவற்றில் வெளிப்படுபவை எத்தனையோ? இருட்டுத் திருட்டு முகங்கள் எத்தனையோ? தானும் காணாமல், தன்னையும் காணவிடாத குருட்டு முகங்கள் எத்தனையோ?

    கண்ட பின்னும்

    கண்டும் காணாதிருக்க முடியாது!

    (காண்போம்)

    குண(வி)சித்திரங்கள் (2)

    அவரை ஊதுவத்தி மாமா என்றுதான் அழைப்போம். அவருடைய இயற்பெயர் என்னவோ தெரியாது. மாம்பலம் சிவா-விஷ்ணு கோவிலுக்கு வெளியே பிளாட்பாரத்தில் பஞ்சாங்கம், தோத்திரப் புத்தகங்கள் இவற்றை விற்றுக்கொண்டிருந்தாலும், அவருக்கு ஊதுவத்திதான் அடையாளம். அவர் உடலும் கூட அப்படித்தான் இருக்கும். நங்கைநல்லூரில் எங்கள் வீட்டுக்கு அருகில்தான் இருந்தார். அவர் யார், என்ன செய்கிறார் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நான் அவரை எதேச்சையாக வியாபாரக் கோலத்தில் கண்ட பிறகுதான் அவருக்கு மேற்படிப் பெயர் நிலைத்துவிட்டது. அவருக்கு ‘ஹிண்டு பேப்பர்’ படித்தே ஆகவேண்டும். வாங்கமுடியாது. அதனால், தினமும், காலையில் எங்கள் வீட்டுக்கு வந்து எல்லாப் பக்கங்களையும் அவசரமாக ஒரு புரட்டுப் புரட்டி விட்டுத்தான் செல்வார். அப்பாவுக்கு, அவர் படிப்பதற்கு முன் யாரேனும் பேப்பரைத் தொட்டால் தாங்காது. சம்மதிக்க மாட்டார். நேராகச் சொல்லியும் விடுவார். ஆனால், இவரை ஒன்றும் சொல்வதற்கில்லை.

    ஏனாம்?

    ஊதுவத்தி எப்போதும் அதிவேகமாகத்தான் வருவார். அந்த நாலுமுழ வேட்டியில் எப்படித் தடுக்காமல், அது கிழியாமல் அவர் இப்படிப் பறக்கிறார் என்பது வியப்பாகத்தான் இருக்கும். நாம் நடந்துவர ஏழு நிமிடங்கள் ஆகுமென்றால், அந்தத் தொலைவை இவர் நான்கு நிமிடங்களிலேயே கடந்துவிடுவார்! அதெல்லாம் சரிதான். ஆனால், அப்படி அவசரமாய் நடந்து வரும்போது, விடாமல் பேசிக்கொண்டே வருவார். தனக்குத்தானே என்று சொல்வதற்கில்லை; ஏனென்றால், அவரைப் பொறுத்தமட்டில், எதிரே யாரோ ஆளிருந்ததாகத்தான் தோன்றியது. அந்த ஆள்மீது அவருக்கெதனால் கோபம் என்பது தெரியாது. ஆனால், கொலைவெறி! கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தவர் திடீரென்று, “நா..நா..நா.ய்..ய்..யே..யே” என்று இடது கையை நீட்டிக்கொண்டு, திக்கினாலும் பெருங்குரலில் அவனைத் திட்டி, வலது கையால் எம்பி எம்பி அவன் கன்னத்தில் பளார் பளாரென்று அறைவார்! எதிரே வரும் சிறுமி பதறிக்கொண்டு காவாயைத் தாண்டி ஓடுவது இன்னும் கண்முன் நிற்கிறது! “ஏ..ஏ..ஏன்கிட்டயா? பல்லப் பேத்துடுவேன், ஓடிப் பூடு,” என்று சொல்லிக் கொண்டே, எங்கள் கேட்டைச் சத்தமாகத் திறந்து உள்ளே நுழைந்து பேப்பரை ஏறத்தாழப் பிடுங்கும் அவரிடம் என் தந்தை என்ன சொல்லத் துணிவார் பாவம்!! பதறி எழுந்தவர், பேசாமல் கண்ணை மூடிக்கொண்டு ஜபமாலையை உருட்டிக்கொண்டிருப்பார். ஊதுவத்தி வெளியே சென்றபிறகு, கண்கள் அனிச்சையாகத் திறக்கும்! சுவாசம் சீராகும்! பேப்பர் படித்து முடித்த கணமே அம்புபோல் விருட்டென்று கிளம்பி விடுவார். சிலசமயம், அம்மாவிடம் காப்பி கேட்பார். கேட்டு முடிப்பதற்குள் சூடான காப்பி வந்துவிடும். அவள் காப்பிக்கு உலக அளவில் ரசிகர் மன்றம் இருக்கிறது. சமையலோ சொல்லவே வேண்டாம், சத்திரக் கரங்கள் வேறு! (அம்மாவுடைய சாப்பாட்டுக்கும், காப்பிக்காகவும்தான் இவனுடைய கவிதையையெல்லாம் கேட்டாக வேண்டியிருக்கிறது என்ற என் நண்பர்களின் முணுமுணுப்புகளைப் பலவருடங்களுக்குப் பிறகுதான் கேட்டேன்!) எனவே, அம்மாவின் காப்பி, ஊதுவத்தியின் நாக்கையும் தொட்டிருக்கிறது! பட்டென்று டபராவைக் கீழே வைத்துவிட்டுப் புயல்வேகத்தில் கேட்டைத் திறந்து வெளியேறி, தெருவில் கால்வைத்த மறுகணமே, ‘அந்த’ ஆளைச் சாடி அறையத் துவங்கிவிடுவார்! ஆனால், பிளாட்பாரக் கடையில் ஊதுவத்தி விற்கும்போது மட்டும் ரொம்பக் கறார்! சல்லிக் காசு குறைக்க மாட்டார். அதே சமயம், அவர் சரக்கு எவ்வளவு அற்புதமானது என்று பெருமையுடன் சொல்வார்!

    ***********

    இன்னொருவர் இளைஞர். பெயரை மாற்றி ரகு என்று வைத்துக் கொள்வோம்! நல்ல படிப்பு; கட்டான உடல்வாகு; கராத்தே பயிற்சி: கண்ணியமான பேச்சு; புதிது புதிதாய்ப் படித்துத் தெரிந்துகொள்ள ஆவல். இதெல்லாம் சரிதான். ஆனால், ஜெயலஷ்மி தியேட்டரைத் தாண்டி, குடிசைகள் நடுவே புகுந்து, ஏரிக்கரை வழியே இறங்கி, வறண்டிருக்கும் ஏரியில் தன் வீடு நோக்கி நடக்கத் துவங்கும்போது குடையைப் பிரிப்பாரையா! அவ்வளவுதான்! அப்போதிலிருந்து, ஏரி முடிந்து, அவர் தெருவிளிம்பில் கால்வைக்கும் வரை ஓயாத பேச்சடா சாமி! கைமாற்றிக் குடையைப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையை ஓர் அதிகாரிபோல் அசைத்து அசைத்து, அவர் அப்படி என்னதான் விசாரிப்பாரோ, யாரிடம்தான் வாதம் புரிவாரோ! ஊதுவத்தி மாதிரிப் பறக்கமாட்டார். ஏதோ, பழைய ஜமீன் பட்டணப் பிரவேசம் செல்வதுபோல்தான் இருக்கும் தோரணை. இடையிடையே நின்றுவிடுவார்; ஆமாம், நின்று ‘எதிரி’ என்ன சொல்கிறான் என்பதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டு, ‘ஓ! இவ்வளவுதானா!,’ என்று ஒரு மமதைச் சிரிப்பை விடுத்து, அவனுக்குப் பதில்சொல்லிவிட்டுத்தான் மீண்டும் நடக்கத் துவங்குவார்! வெள்ளமாய் வெய்யில் கொளுத்திக் கொட்டுகிற அந்த மத்தியான நேரத்தில், தன் கண்ணுக்கு மட்டுமே தெரியும் ஒருவரோடு ரகு நடந்தபடி நடத்தும் வாதங்களைக் கண்ணிமைக்காமல் கேட்பேன்.

    ******

    எனக்குப் பதினொரு வயதிருக்கும். அப்போது நடந்த சம்பவம் இன்றும் நினைவிருக்கிறது. எங்கள் தெருவில் ராமு என்றொருவன் இருந்தான். அந்த வயதில் இன்னொருவர் வயதை அறிவதற்கில்லை! ‘ராமு பெ..ரீ..ய்..ய ஆள்.’ அவ்வளவுதான்! ரொம்ப உயரம்; பாறையைப் பிளக்கக் கூடிய திடகாத்திரமான உடம்பு; உறுதியான கரங்கள். ஆனால், ராமு அதிர்ந்து பேசவே மாட்டான். மிகப்பெரிய பூனைக்குட்டி போலிருக்கும் அவன் பாவனை! அந்த உடம்புக்குப் பொருந்தாத மழலைச் சிரிப்பு; பணிவு. மிகுந்த கூச்ச சுபாவமுள்ளவன். ஒரு கண், ஏதோ பழுதுபட்டிருக்கும். சிறுவயதில், வில்லம்பு விளையாடும்போது அடிபட்டு அப்படி ஆனதாகப் பாண்டிபஜார் தலபுராணத்தில் காணலாம்!

    ராத்திரி ஒன்பது மணியிருக்கும். வானொலியில் ஆங்கிலச் சேதி முடிந்திருக்கும். திடீரென்று தெருவில் ஒரே அமளிதுமளி. வெளியே வந்து பார்த்தால்:

    “டா..ய்..இன்னா நென்ச்சுக்னுக்றீங்கோ?” என்று ஒரு பெரிய குரல்.

    ‘ஏய், வேணாம்பா, ராமு அல்லாம் பாக்குறாங்கப்பா,” என்று ஒரு பதில் குரல். அட! நம்ம ராமுவா!

    “யார்றாவன் ராமு? நான் செண்டர் மணிடா டே.ய்..” என்று நடுத்தெருவில் தொப்பென்று விழுந்தான் ராமு. கூட இருந்தோர் உறவினர்கள் போலும்; அவர்கள் அவனைப் பலவாறாகக் கெஞ்சிக்கொண்டிருந்தார்கள், “உனுக்கு இன்னா கொறப்பா? இன்னாத்துக்குத்தான் இப்டி கோராமை பண்றெ?’

    “டா….ய்..மூண் ரூபா எட்தாந்து வந்தனா? கருவாட்டுக் கொளம்பு வக்கச் சொன்னனா? வச்சாளாடா அவ? வச்சாளாடா?” என்று ராமு தெருவில் புரண்டு, தார் ரோட்டை அடித்து நொறுக்க முற்பட்டான்.

    மறுபடியும் அவர்கள், ‘ஏய் இன்னாப்பா, கலாட்டா பண்ணாம வூட்டுக்கு வா ராமு,’ என்றதும், மீண்டும், “டேய்! ராமு எவண்டா ராமு? எங்க்குற ஆளு அவன்? நான் செண்டர் மணிடா! செண்டர்!” என்று மார்பில் அடித்துக் கொண்டான்.

    மறுநாள் காலையில் ஒன்றுமே நடக்காதது போல், ‘இன்னா ரம்ணு?’ என்று பணிவாகச் சிரித்தபடிச் செல்வான். ஆனால், வாரத்தில் மூணு ராத்திரியாவது ‘செண்ட’ராகிவிடுவான்!

    இப்படிப் பலரை சந்தித்திருக்கிறேன்; தொடர்ந்து சந்தித்தும் வருகிறேன்! இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று யாரயாவது கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்ற ஆசையில், என் நண்பன் விச்சுவைக் கேட்டேன். ‘அதெல்லாம் நூல் கேசுடா,’ என்றான். அதென்னடா நூல் என்றேன். சிகரெட்டை முழுதாக இழுத்துக்கொண்டு, மேல்வானத்தைப் பார்த்தபடியே பொறுமையாக மூச்சுவிட்டு, குதர்க்கமான சிரிப்புடன் விச்சு சொன்னான்: ‘ஒருநாள் இதே ரெஸ்டாரண்டு. எதிரே நாற்காலி காலி. ‘எக்ஸ்க்யூஸ் மி,’ என்றபடி ஓர் இளைஞன் வந்தான். ‘யாராவது வர்றாங்களா? இங்க ஒக்காரலாமா?’ என்று கேட்டான். ‘ஓ! தாராளமா,’ என்றேன். ‘லைட்டா டீ,’ என்று டேபிளைத் தட்டிச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்து, ‘நூல்,’ என்றான். எனக்குப் புரியவில்லை; என்னது? என்றேன். ஒருமாதிரிச் சிரித்தபடி டேபிளுக்குக் கீழே பார்வையைச் செலுத்தி, மறுபடி உயர்த்தி ‘நூல்’ என்றான். இதென்னடா விபரீதமாகப் போகிறதே என்று நினைத்துக்கொண்டே, என்ன வேணும்? என்று கேட்டேன். இப்போது அவன் விழியும், சிரிப்பும் சற்று விகாரமாகி கொஞ்சம் சிலிர்த்துக் கொண்டே குரலை உயர்த்தி மீண்டும் ‘நூ..ல்..’ என்றான். நான் எழுந்து விட்டேன். அவன் பேண்டில், தொடைப்பகுதியிலிருந்து ஒரு நூலை நீளமாகப் பிய்த்துக் கொண்டிருந்தான். ஆஹா! இன்று நமக்கு நேரம் சரியில்லையே என்று நான் எழுந்து நழுவப்பார்த்தால், அவன் ‘நூல்..நூல்.’ என்று தலையை ஆட்டிக்கொண்டே பெரிதாய்க் கூச்சல் போட்டான். நான் தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓட்டமாக ஓடி எங்கோ ஓரத்திலிருந்து பார்க்கும்போது அவன் சட்டை கிழிந்து போயிருந்தது. ஓட்டல் சிப்பந்திகள் அவனைச் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.”

    எனக்குக் கதிகலங்கியது. அதேசமயம், விச்சுவைப் பொறுத்தமட்டில், கண்டதும் காணவிரும்புவதும் ஒன்றுதான் என்றும் பட்டது. உடனே என் எண்ணத்தை மோப்பம் பிடித்த அவன், ‘என்ன நம்பலியா?’ என்று புருவத்தைச் சுருக்கிக் கேட்டான். ஒருமாதிரியாக சமாளித்துக்கொண்டு அவன் ‘நூலாகி’ விடும்முன் எழுந்து வந்தேன்.

    அப்பாவைக் கேட்டாலோ, வழக்கமான கிண்டல்தான் பதில், “இனம், இனத்தோடுதானேடா சேரும்?!” என்றார். முறைத்தேன்; காரணம் புரிந்து, தலையசைத்துச் சிரித்தார்.

    எதையும் பற்றி எவரையும் கேட்பதைக் காட்டிலும், கவனமாகப் பார்ப்பதே நன்று. இல்லையெனில், வெகுநாட்கள் இன்னொருவரின் அனுபவத்தில் சவாரி செய்ய வேண்டியதாய்ப்போகிறது. சவாரி இலவசம்தான் என்றாலும், கால விரயம் என்பது கடுமையான விலைதானே! அதுபோல, வெளியே பார்ப்பதோடு நிறுத்தாமல், உள்ளேயும் கொஞ்சம் எட்டிப் பார்த்தால், ஆ! எல்லாம் துல்லியமாகவே தெரிகிறது!

    உள்ளே பார்த்ததை ஊருக்குச் சொல்லப் புகுவதும் ‘நூல்’தானோ? பிரித்துப் பார்ப்போம்!

    குண(வி)சித்திரங்கள் (3)

    ஒன்றையே பற்றி ஊசலாடுவாய்

    ஒன்றில் நில்லாமல் அடுத்தடுத்துலாவுவாய்

    (பாரதியார்)

    ஓயாமல் சஞ்சலத்தில் இருப்பதே மனதின் இயல்பு. அசைவு, மனதின் தன்மை. எனவேதான், அதை நிறுத்த முனையும் முயற்சிகள் எல்லாம் தோற்றுப் போகின்றன. சற்றே யோசித்தால், மனம் என்பது எண்ணங்களே! வேறொன்றுமில்லை. ஆயின், எண்ணம் ஏன் நம்மை இந்தப் பாடு படுத்துகிறது? காரணங்களும் தெளிவாகத்தான் இருக்கின்றன! ஒன்று, எண்ணம் நம்வசத்தில் இல்லை. காலையில் நாயுடன் சாலையில் நடைபழகுவோரைக் கவனித்திருப்பீர்கள். வீட்டிலிருந்து இறங்கும் போது, கிரமமாய், செல்ல நாயை அழைத்துக்கொண்டுதான் இறங்குகிறார்கள். தெருவுக்கு வந்ததுமே, அது இவர்களை அங்குமிங்கும் இழுத்துக்கொண்டு போகிறது. கம்ப உந்துதல்கள், தெருக்காதல் இவை வேறு! நாய்படாத பாடு படுகிறார்கள்! நாம் எல்லோருமே இப்படித்தான். உறக்கத்திலிருந்து விழிக்கும் கணத்தில் எல்லாம் நன்றாய்த்தானிருக்கிறது. அடுத்தகணம், யாரோ தேனடையில் கல்லெறிந்தது போல, எண்ணங்களின் களேபரம். பிறகென்ன, நாய் வாக்கிங்தான்!

    எனவே, எண்ணங்களின் பின்னே கதியற்று நாம் செல்வது ஒரு காரணம். எண்ணங்களின் தொகை இன்னொரு காரணம்.

    மாணவ, மாணவியர் சீருடை தரித்து, அப்போதுதான் பூத்த மலர்களைப் போல, இளங்காலை ஒளியில் மின்னிக்கொண்டு, இளஞ்சிரிப்புடன், அணிவகுத்து வரிசையாக நின்றுகொண்டிருக்கிறார்கள்; ஆசிரியரின் கட்டளைகளுக்கு ஏற்ப அசைய, இயங்கக் காத்திருக்கிறார்கள். இது ஞானியின் மனம்.

    ஒரு படை திரண்டு வருகிறது; அது கோட்டையைப் பிடிக்க வேண்டுமானால் ஒரே வழிதான்; அதுவோ ஓர் ஒற்றைப்பாலம்; அங்கே ஒரு மாவீரன் நின்றுகொண்டு வெட்டிச் சாய்க்கிறான்; படை பின் வாங்குகிறது. இது யோகியின் மனம்.

    ஒரு திருமண வரவேற்பு. உற்றார், உறவினர், நண்பர்கள், பிரமுகர்கள், செல்வந்தர்கள், வேலையாட்கள், எளியவர்கள் எல்லோரும் வருகிறார்கள். நல்லவரும் தீயவரும் கூட நன்கு அலங்கரித்துக்கொண்டு வருகிறார்கள். வரவேற்பு வாசலில் நின்றுகொண்டிருக்கும் இளம்பெண், யார் வந்தாலும், அவர்கள் தெரியாதவர்களானாலும், அவர்கள் கவனித்தாலும் கவனிக்காமல் போனாலும், புன்னகை மாறாமல் பன்னீர் தெளிக்கிறாள்; கற்கண்டுத் தட்டுடன் காத்திருக்கிறாள். இது, பக்தனின் மனம்.

    இவையல்லாத எதுவுமே நம்ம மனம்தான்!

    புற்றீசல் போலப் புறப்பட்டு வந்துயிரைப்

    பற்றி வதைக்கின்ற பாழ்மனமே! வெற்றி

    உனக்கென்றால் வெட்கம்! எனக்கென்றால் சொர்க்கம்!

    மனமே! உனக்குண்டோ மாற்று?

    மனம் என்றால் எண்ணம்தான் என்பது புரியாத வரையிலும், எண்ணம் எங்கிருந்து வருகிறது என்று ஆராயாத வரையிலும், இப்படி வெண்பா எழுதிக் கொண்டிருக்க வேண்டியதுதான்! நாம் சோரச் சோர, தன்வலிமை அதிகரிக்கும் விபரீதம்தான் மனம். ‘மனமே தளை, மனமே விடுதலை,’ என்று கண்ணன் பார்த்தனுக்குச் சொல்கிறான். எனில் என்ன பொருள்?

    ஃ மனம் என்பது ஒரு சக்தியின் களம், அது ஒரு பொருள் அல்ல

    ஃ எண்ணமே மனம்; இடைவிடாத எண்ணங்களல்லாமல், மனம் என்று ஒன்று தனியாக இல்லை

    ஃ இயற்கையிலேயே புலன்களெல்லாம் புறம்நோக்கி அமைக்கப்பட்டிருக்கின்றன. புலன்வழியே மனம் சென்று, பொருள்மீது நின்று, அதன்பின்னே நாமும் அலைந்து, போதுமடா சாமி!

    ஃ மனம் அப்படியே இருக்க, நாம் சுதந்திரமாய் இருக்க முடியும். அந்த நிலை, நம் அன்றாட வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காது

    எனவே,

    எண்ணமல்லால் ஏதுமனம்? ஏறி அடக்கவோர்

    திண்ணமல்லார்க் கென்றும் திரை

    சரி, எங்கிருந்து வருகின்றன எண்ணங்கள்?

    புறத்திலிருந்துதான்! ஆமாம், எல்லா எண்ணங்களும் பொருள்சார்ந்தவையே. பொருளே புறம். புலனே அதைத்தொடும் கரம். தொட்டதும் எழுவதே எண்ணம். அதன்பிறகு நாம் இயங்குவதில்லை, எண்ணங்கள் ஓர் இயந்திரத்திலிருந்து வந்துகொண்டே இருக்கின்றன. எனவேதான், மனம் என்பது நுண்மையான பொருளே என்றும் சொல்கிறார்கள். நாம் பொருளன்று! பொருளை ஆண்டு இயக்கும் வல்லமை பெற்றதே மானிடத்தின் சிறப்பு.

    எண்ணம் வெளியிலிருந்து வந்தாலென்ன, வெளியூரிலிருந்து வந்தாலென்ன, நாம் புலிவாலைப் பற்றி மரத்தைச் சுற்றிக்கொண்டே வருகிறோமே அதற்கென்ன செய்ய என்று கேட்கிறீர்களா! எழுந்த எண்ணத்தின் பின்னே எதனால் கதியற்று அலைகிறோம்?

    ஃ எண்ணங்களின் வேகம்

    ஃ எண்ணங்களின் தொகை

    ஃ எண்ணங்களைப் பிடித்துக்கொள்ளுதல்

    ஃ வாசனை

    இவற்றைப் புரிந்துகொள்வது அப்படியொன்றும் கடினமில்லை; வருக!

    அனுமனைப் பற்றிச் சொல்லும்போது, வாயு வேகத்தைவிட மனத்தின் வேகம் பெரிது. அனுமன் அதைவிட வேகமானவன் என்கிறார்கள். என்ன பொருள்? வேகத்தை விவேகம்தான் வெல்லும் என்பதே! ஒன்று, பிள்ளையாராய் உட்கார்ந்துவிட வேண்டும். இல்லையா, ஓடுவதைத் தாண்டி எதிர்நின்று வசக்க வேண்டும். சாலையில், ஒரு மோட்டார் சைக்கிள் போகிறது; இளைஞன்; கொஞ்சம் போதையில் இருக்கிறான்; அவன் அன்றாடம் இரண்டு கைகளையும் விட்டுத் தலைகோதிக் கொண்டு கறுப்புக் கண்ணாடி வழியே காதல் வீசும் மகளிர் பேருந்து போய்விட்டது; அதைப் பிடிக்க வேகமாய்ச் செல்கிறான்; அங்கே 40 கி.மீ. வேகம்தான் அனுமதி; இவன் 70 கி.மீ. வேகத்தில் பறக்கிறான்; இவனைப் போக்குவரத்துப் போலீஸ்காரர் எப்படிப் பிடிப்பார்? விசில் ஊதி நிறுத்த முடியுமா? அவர் ஒரு 80 அல்லது 90 ல் பறந்து, ஒரு வளைவில் பயலை மடக்குகிறார். அனுமனுக்கு, ராமநாமம்தான் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள்.

    இது சரிப்படாது என்கிறீர்களா? அப்படியானால் பிள்ளையார் வழிக்கு வாருங்கள். ஆற்றங்கரை; அரசமரம்; எதிரே ஓயாத சலனம்; மேலே ஒழிவற்ற சலசலப்பு; வெய்யில், மழை, புழுதிக்காற்று; பக்தர்களின் இடைவிடாத கோரிக்கைகள்; திருட்டு; ஆனால், ஐயா அசைவதே இல்லையே! அதுபோல், எண்ணங்களின் தொகை, அவற்றின் வேகம் எப்படி இருந்தால் நமக்கென்ன, நாம் நாமாய் இருப்போமே, என்று இருக்கலாம்.

    இதுவும் ஒத்துவராது என்கிறீர்களா? என்னதான் உங்கள் பிரச்சினை? ‘எண்ணம் தோன்றுவது ஒரு புறம் இருக்கட்டும்; ஏன் விருப்பம், வெறுப்பு, ஆசை, பற்று இவையெல்லாம் தோன்றுகின்றன? இவற்றால்தானே கூச்சலும், குழப்பமும்?’ இருங்கள்! இதற்குமேல் எதுவும் நீங்கள் சொல்லவேண்டியதில்லை. எல்லாவற்றுக்கும் சேர்த்து பதிலைக் காண்போம்!

    விருப்பு என்பது என்ன? ஒரு பொருள், அல்லது ஆள், அல்லது ஒரு சூழ்நிலை மேல் நமக்கு ஏற்படுவது; அது நமக்கு வேண்டும் என்று தோன்றுவது. அவ்வளவுதானே? சாதாரணமாகத் தோன்றி மறையும் எண்ணத்திற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? இது, திரும்பத் திரும்பத் தோன்றும் எண்ணம்; ஒரே எண்ணம். திரைப்படத்தின் ஃப்ரேம்களைப் போல! பல ஃப்ரேம்கள் சேர்ந்ததுதானே ஒரு சின்னக் காட்சி? ஒரு பொருளின் மீது ‘தங்கி’ விடுவதால் எண்ணம் விருப்பமாகிறது. அது நமக்கு வேண்டும் என்னும்போது ஆசையாகிறது. அது நமக்கே வேண்டும் என்னும்போது பற்றாகி விடுகிறது. அதனால் அச்சமுண்டாகிறது. அதிலிருந்து இருமை என்கின்ற கவலை நேர்கிறது. ‘சொந்தம்’ என்கின்ற உணர்வு ‘பந்தம்’ என்கின்ற விளைவை ஏற்படுத்திவிடுகிறது. எதை நாம் பற்றிப் பயன்படுத்திப் பிறகு அதனிடத்தில் மீண்டும் வைத்துவிடவேண்டுமோ, அது நம் பிடரியைப் பற்றிக் கொள்கிறது. ஆழ்ந்து கவனித்தால், விருப்பே வெறுப்புக்குத் தளமாகிறது. அதன்பிறகு, சீற்றம், குழப்பம், புத்தி பேதலித்தல், பிறகு ஆளே தொலைந்து போதல் என்று தொடர்கின்றன தொல்லைகள்.

    நம் எல்லோருக்கும் இதுதான் பழக்கப்பட்டுப் போய்விட்டது. ஒவ்வொரு மனிதனும் ஊமைக் கவிஞனே என்றொரு பழமொழியுண்டு. இங்கே, எந்த மனிதனும், கொஞ்சம் ‘நூல்’ கேசுதான் என்று சேர்க்க வேண்டியிருக்கிறது. எண்ணத்தின் தீவிரம், அது தோன்றும் அந்த மனிதனின் வலுவின் அளவு, இதைப் பொறுத்தே ஒருவன் தெளிவானவனா இல்லை பைத்தியக்காரனா என்பது தீர்மானமாகிறது. கண்ணாடி முன்பு நின்றுகொண்டு நாம்செய்யும் கொனஷ்டைகள், யாருமில்லாதபோது செய்யும் குரங்குச் சேட்டைகள், குளியலறையில் நமது ஆள்மாறாட்டம், படுக்கையில் நாம் தழுவுபவர் – தழுவ விரும்புபவர், அங்குள்ள ரகசிய வித்தியாசம், நடக்கும்போது ஒரு குறிப்பிட்ட சிறுகல்லை விடாப்பிடியாய்க் கடைசிவரைக் காலால் எத்திக்கொண்டே செல்லுதல், பூட்டைப் பிடித்துத் தொங்கிப்பார்த்துத் தெருவைக் கடக்குமுன் எம்பியெம்பிப் பார்த்தல், ஒரு பாட்டைக் கேட்கும்போது நாமே அந்தக் கதாநாயகனாக பாவித்தல், சாதாரணமாய் இருக்கும்நாம் காரில் ஏறியவுடனேயே தோரணை மாறுதல், கையில் சரியான டிக்கெட்டு வைத்திருந்தும் பரிசோதகர் வரும்போது பயந்து முகம்வெளிறிப்போதல் — இப்படி எத்தனை எத்தனை நம்மில் இல்லை? இவையெல்லாம் அந்த ‘நூல்’ கேசுக்கு ஆதாரமேயல்லவா?

    இப்போது பாண்டியன் எக்ஸ்பிரசுக்கு வாருங்கள். அந்தப் பெரியவர் தன்னுடனும் பேசிக்கொண்டு, நமக்கும் முறையாகப் பதில்சொல்லிக்கொண்டு வந்தாரே! அவர் மனத்தில் ஒருவரால் ஏற்பட்ட காயம்; அதை அவர் ஆறவிட்டிருந்தால் அத்தோடு போயிருக்கும். ஈயைப்போல் காயத்தின்மேல் உட்கார்ந்து உட்கார்ந்து அது கசிந்துகொண்டே இருக்கிறது. விபரீதமாகச் சிரிக்கும் அந்தப் பெண்ணை நினைவிருக்கிறதா? அவளுக்கென்ன ஆயிற்று? ஏதோவொரு சம்பவம் உள்ளே ஆழமாகப் பதிந்துவிட்டது. அவளைப் பொறுத்தமட்டில், காலம் அந்தக் கட்டத்தைத் தாண்டிச் செல்லவில்லை. ஏனென்றால், அவள் அந்த சம்பவத்தைக் கடக்கவே இல்லை! அந்த நிகழ்ச்சி அதிர்ச்சிமயமானதாக இருக்கலாம். அதன் விளைவு, சிரிப்பாக இருக்கலாம். நெல், நாற்றாகப் படாதபாடு படுகிறது. வரும்போதே முழுதாக வந்துவிடுகிறது காளான். என்ன சொல்ல? ரகு, நம்மைப் போலத்தான். யாருமில்லாத போது, நம்மில் பலர் எப்படி இருப்போமோ அப்படித்தான் அவனும் இருந்தான். அவன், யாருமில்லை என்ற தைரியத்தில்தானே வறண்ட ஏரியில் பேசிக்கொண்டே வந்தான்? ஊதுவத்தி மாமா? அவர், சரியான ஊசிப் பட்டாசு. யாரும் அவரை எதுவும்சொல்லக் கூடாது. எளியாரை வலியார் மிதிப்பர் என்பது உலக நியதியன்றோ? அலுவலகத்தில் மேலதிகாரி இருக்கிறார். அவர்மேல் பலருக்கும் கோபம் இருக்கிறது. அது மதிய உணவு நேரத்தில் அக்கப்போராகத் துவங்கி வம்பளப்பில் முடிகிறது; வீட்டில் நம்மைத் தழுவவரும் குழந்தை மீது வெடிக்கிறது. அலுவலகத்திற்கு வெளியேயும் பல மேலதிகாரிகள் இருக்கிறார்கள். தபால்காரர், காய்கறி வியாபாரி, பூக்காரம்மா, பால்பையன், பஸ் கண்டக்டர், ஆட்டோக்காரர், சினிமா க்யூவில் முரட்டு ஆசாமிகள், இவர்கள் எல்லோருமே மேலதிகாரிகள்தான்! இவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். இவர்களை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், நினைப்பை நிறுத்த முடியவில்லை. அழுத்தி வைக்கப்பட்ட கோபம், ஆளை லேசில் விடுவதில்லை. அதிகாரி, மறுபடி அழைக்கும்போது, நாம் சிரித்தபடிக் குழைவதும், அந்தக் கோபத்தின் விகாரமான, பரிதாபமான தோற்றமே! ஊதுவத்தி மாமாவுக்கு எப்போதும் கோபம்! தனிமையில் அவர்தானே ராஜா?! அதனால், தன்னைக் காயப்படுத்தியவர்களை வாய்க்கு வந்தபடி வைது, பளார் பளார் என்று கன்னத்தில் அறைகிறார். அதீதமான சினம், அவர் தோலில் வெள்ளைத் திட்டுகளாய்ப் பூத்திருக்கிறது. ரயிலில், நாம் முதலில் சந்தித்த பெரியவரும் அது போலவேதான்! என்ன, ஊதுவத்தி மாமா வெடி; இவர் மத்தாப்பு; ஆனால், பகிரங்கப்படுவதில் இருவரும் ஒன்றுதான். ராத்திரி ராத்திரி செண்டர் மணியாகிவிடும் ராமு? இயல்பில், அவன் மிகவும் கூச்சமுள்ளவன் என்று பார்த்தோம்; அவன் மனது மென்மையானது எனினும் தன்னைப் பற்றிய உயர்வான மதிப்பீடுகள் யாருக்குத்தான் இருக்காது? மது உள்ளே போனதும் அது வெளிப்படுகிறது!

    இந்தக் குண(வி)சித்திரங்களில் ரகு ஆரம்பம்; ‘நூல்’ உச்சம். இதில் இன்னும் எத்தனை எத்தனையோ வகைகள் இருக்கின்றன. அவ்வப்போது அவர்கள் இங்கே தென்படக்கூடும்!

    ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்பதை இன்னும் நுணுக்கமாகப் பார்த்துவைத்துக்கொள்வோம்..

    மனிதனின் அமைப்பில் ஒரு கிரமமான வரிசை உள்ளது. மிகச் சுருக்கமாகவேனும் அதை இங்கே தெரிந்து கொள்வது, அல்லது நின¨வுபடுத்திக்கொள்வது நம் அனைவருக்கும் நன்மை பயக்கும். வாருங்கள்!

    1. தூல உடம்பு

    அதற்கென்று ஓர் அறிவு இருக்கிறது. அது சிந்திக்கும் அறிவில்லை. ஆயினும், சிந்தனையில் வியப்பை ஏற்படுத்தக் கூடிய அறிவு. உதாரணமாக, பசிக்கிறது. பெரும்பாலும், அது உடலிலிருந்து வரும் சிக்னல். சில நேரம், அது வெறும் நினைப்பே! எப்படியோ, பசிக்கிறது. என்ன சாப்பிட வேண்டும் என்பதைச் சிந்தனைதான் நிச்சயிக்கிறது. எதை, எப்படி, எதனுடன் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்பதை நாம் நிச்சயிக்கிறோம். கை, (சிலருக்குக் கைகள்!) சோற்றை வாய்க்குள் சேர்க்கிறது. ருசிபற்றி உள்ளே ஒரு விமர்சனம் நடக்கிறது. சாப்பாடு தொடர்கிறது. இதுவரை நம்செய்கை. பிறகு, உணவு செரிப்பது? சத்து உறிஞ்சப்பட்டு சேருமிடம் சேர்வது? வெளியேற வேண்டியவை பிரிக்கப் படுவது? இவைபோன்ற கணக்கற்ற செயல்கள் நமக்குள்ளே நடக்கின்றன. நாம் செய்வதில்லை. இதை body intelligence உடம்பின் அறிவு எனலாம்.

    2. புலன்கள்

    முன்பே கண்டதுபோல், புலன்கள் வெளிப்புறமாய்ப் பொருத்தப்பட்டிருக்கின்றன. புறம் என்பது, பொருள்மயமான உலகம். புலன்கள் மூலமே உலகத்தின் அனுபவம் ஆதாரப்பட்டிருக்கிறது.

    3. மனம்

    மனம் என்றால் எண்ணங்களே என்று பார்த்துவிட்டோம். புலன்களின் தொடர்பு மனமெனும் தளத்திற்குத் தெரியப்படுத்தப்படுகிறது. இந்தத் தொடர்பும், தெரிவித்தலும், இடைவிடாமல் நடக்கிறது; இரண்டுக்கும் இடையே கால இடைவெளியும் இல்லை. எனவேதான் எண்ணங்கள் ஓய்வதில்லை. கனவும் உறக்கத்தில் எழும் எண்ணக் குமிழ்களே!

    4. புத்தி

    மேல்மனம் எனலாம். முடிவுகள் எடுக்கப்படும் அலுவலகம். பட்டிமன்றம், விவாதம், மனசாட்சி, ரவுடிக் கட்டு உருவத்தின் ‘நல்லவனா வாய்ந்து இன்னாத்தக் கண்ட? வா ஒரு க்வாட்டரு ஏத்திகினு வெளாவரியா பேசிக்கலாம்,’ போன்ற அதிரடி ‘அறிவுரை’களை, தூய வேட்டி, துண்டு அணிந்து இன்னோர் உருவம் நீதி போதனை சொல்லி மாற்றுவது, நாம் சற்று வருத்தத்துடனே அதன்படி நடப்பது, இவையெல்லாம் புத்தி என்னும் மேடையில்தான்.

    கதவு திறந்திருக்கிறது. உள்ளே ஒரு தேள் கொடுக்கைத் தூக்கியபடி நல்ல காலாகப் பார்த்துப் போடலாம் என்று வருகிறது. கண் பார்க்கிறது; மனம், காட்சியைப் பதிந்து கொள்கிறது; இது தேள்; விஷமுள்ளது; விட்டால் கொட்டிவிடும்; அகிம்சையைக் காந்திக்கு விட்டுவிட்டு ஒரேபோடாய்ப் போடு என்ற முடிவை எடுப்பது புத்தி.

    குறுக்கீடு, அலசல், ஆராய்ச்சி எல்லாம் நடந்து முடிவும் எடுக்கப்படும் தளம் புத்தி. அதற்கு ஆதாரம் எது?

    5. சித்தம்

    மனச வாட்டுறது ரோசனதானே?

    மனுசன ஓட்டுறது வாசனதானே?

    விருப்பும் வெறுப்பும் வெறும் ஞாபகம்தானே?

    வேசம் மறந்துபோன வேதனதானே??

    சித்தம் ஞாபகங்களின் நூலகம். அங்கே இல்லாததே கிடையாது. நாம் தொட்டதும் நம்மைத் தொட்டதும், இப்பிறப்பும், முற்பிறப்பும். நம் தொடர்பான நமது அனுபவங்கள் அனைத்தின் பாதிப்பும் பத்திரமாகப் பாதுகாக்கப்படிருக்கும் தளம். காக்காக்கடி மிட்டாயிலிருந்து கடவுள் வரை, எல்லாம், ஓஹோஹோ எல்லாம் பதிவாகி இருக்கின்றன. அந்தப் பதிவுகளுக்கு சம்ஸ்காரங்கள் என்று பெயர்; அவையே குணங்களுக்கு ஊன்றுகோல். பதிவுகளுக்கு ஒரு போக்கு நேர்கிறது; அதை நிர்ணயிப்பதே வாசனைகள்; எளிதாய்ச் சொன்னால் நினைவுகள்.

    பொதுவாக, நம் அன்றாட வாழ்வில் நடக்கும் ஆயிரக் கணக்கான அனுபவங்கள் சித்தத்தை ஊடுருவுவதில்லை. கடவுள் என்று ஒத்துக் கொள்வீர்களோ, இயற்கை என்று வாதாடுவீர்களோ, எதுவானாலும் இங்கே இதற்கு ஒரு கும்பிடு போடுங்கள்! ஏதோ கொஞ்சநஞ்சம் உள்ளே போவதற்கே இந்தப்பாடு படுகிறோமே, எல்லாம் உள்ளே தங்கிவிட்டால்? நிலைத்த நரகமாகிவிடாதோ வாழ்க்கை?

    ஆனால், மிகவும் தீவிரமான ஆசைகள் சித்தத்தில் வேர்பிடித்துத் தங்கிவிடுகின்றன. கொலையுணர்வு, வெறித்தனமான ஆசைகள் இவை உள்ளே நுழைந்துவிட்டால் அவை வெளியே போவது மெத்தக் கடினம். அவை வேரூன்றிக் கொள்வதோடு, மற்ற எண்ணங்களை மங்கச் செய்து, தாமே பிடிவாதமாக நின்று பேயாடும். சென்ற வாரங்களில் நாம் சந்தித்தவர்கள் இந்த ரகம் இல்லை. பெரும்பாலும், அதிர்ச்சி, இயலாமை இவையே அவர்களது விசித்திரமான நடத்தைக்குக் காரணம். ஆனால், சித்த்த்தின் உள்ளே பேராசை, வெறி இவை நுழைந்துவிட்டால், அவர்கள் வெறியர்களாகி விடுகிறார்கள். அவர்களில் எல்லோருமே வெளியே அம்பலப்பட்டுவிடுவதில்லை. பலர், கைதேர்ந்த கிராதகர்களாக இருக்கிறார்கள். இந்தப் பூனையும் பால்குடிக்குமா என்பதுபோலிருக்கும் முகபாவம், பேச்சு. நடத்தை மட்டும் நரபலி கேட்கும் விதமாயிருக்கும்! மொழி, சாதி, பணம், பதவி என்று பலமுகம் பூணும் இந்த வெறியின் ஒரே நோக்கம் அழிப்பதே ஆளுமை என்பதே!

    சித்தம் என்று ஒன்று கிடையாது என்று சொல்வோரும் உண்டு. ஆனால், கடவுளைப் பற்றிப் பேசாத சமயங்கள் கூடச் சித்த சுத்தியே முதன்மையான தேவை என்கின்றன. விளக்கங்களில் சிக்காமல் நேரே வருவோம். சித்தம் என்பது கண்ணாடி மாதிரி. தூசு படியாத கண்ணாடி கிடையாது. துணிபோட்டு மூடிவைத்திருந்தாலும், திறந்தவுடனேயே துடைக்க வேண்டியதாயிருக்கிறது!. சலித்துப்போய் விட்டுவிட்டோமென்றால் அப்புறம் கண்ணாடி பார்க்கவே முடியாது. கண்ணாடி பொய்சொல்லாது. அப்படியே உள்ளது உள்ளபடிக் காட்டிவிடும். கொஞ்சம், கருணை காட்டக் கூடாதோ?! புத்தி எடுத்த முடிவு, உபசாரத்திற்கு ஜனாதிபதி உத்தரவுக்குச் செல்வதுபோல், சித்தத்திடம் காட்டப்பட்டு, செயல் நடந்து விடுகிறது.

    செயலின் விளைவு, தேகம், புலன்கள், மனம், புத்தி இவற்றுகில்லை! சித்தத்திற்கே!! எப்படி இருக்கிறது கூத்து! எனவேதான், சித்தத்தைச் சுத்தமாக வைத்திருப்பது மெத்த அவசியம்; சற்றுக் கடினமும் கூட. முன்பெல்லாம், பண்டாரம், காலையில் அன்னக் காவடி தூக்கிவருவார். கழியில் குலுங்கும் மணியொலி கேட்டு வீட்டிலுள்ளோர் வெளியே வருவார்கள். கழியின் இருபுறத்திலும் செம்புப் பாத்திரங்கள் இருக்கும். அரிசி, அச்சு வெல்லம் போன்றவை அவற்றில் போடப்படும். அந்தச் செம்புப் பாத்திரங்கள் தங்கத்தை மிஞ்சும்படியாக மின்னும்! அத்தனைப் பளபளப்பு! அப்படி, தினந்தோறும் அதைத் தேய்த்துத் தேய்த்துப் பளபளக்க வைத்திருப்பதுதான் பண்டாரத்தின் உழைப்பு! அதுதான் சித்த சுத்தி.

    சித்தமும் ஆன்மாவும் ஒன்றா, வெவ்வேறா என்ற கேள்வி இருக்கிறது. சித்தம், ஆன்மாவின் சூழல்; விளக்கைச் சுற்றியிருக்கும் வெளிச்சம் போல! எனவே, அவை இரண்டுபோல் தோன்றும் ஒன்று.

    தேகம், புலன்கள், மனம், புத்தி இவை நமது. சித்தம், ஆன்மா நாம்!

    நாம் பார்க்கும் பொருட்களின் வடிவத்தை மேற்கொள்கிறது சித்தம். அதன்மூலம்தான் நாம், இது நாற்காலி, அது ஆட்டுக்கல் என்றெல்லாம் தெரிந்து கொள்கிறோம். எதை, ஊன்றிப் பதியம் போடுகிறோமோ அதன் தோட்டமாகவே மாறிவிடும் தன்மை வாய்ந்தது சித்தம். அவரை நட்டால் துவரை முளைக்காது. உண்மையை ஊன்றுவோம்; அது ஓங்கி வளர, அதன் நிழலில் அமர்ந்து குழலூதுவோம்! மனித நேயத்தை ஊன்றுவோம்; அதன் மகத்துவத்தில் மனத் தூய்மை பெறுவோம்! சமூக நலனே வாழ்க்கை என்ற கொள்கையை ஊன்றுவோம்; அதுவே கோட்பாடாக விரிந்து நம் அனைத்துச் சிந்தனைகளையும் கொள்ளட்டும்!

    சித்தன் போக்கு சிவன் போக்கு என்கிறார்களே ஏன்? சித்தத்தில் எது தீவிரமாகச் சிந்திக்கப்படுகிறதோ, சித்தம் அதன்மயம் ஆகிவிடுகிறது என்பதைக் காட்டவே!

    அவனிவன் மற்றும் அவையிவை என்னும்

    கவனமே சோற்றினில் கல்

    அவனே இவனே என்னாமல் சிவனே என்றிருந்தால் சித்தமெல்லாம் சிவமயமே! அதன்பிறகே எல்லாம் அவன்செயல் என்று சொல்வது பொருந்தும்!

    அந்தக்கரணம் என்று சொல்லப்படும் இந்த வரிசைக்கிரமம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. நம்மையும் பிறரையும் புரிந்துகொள்ளத் தேவையான அடிப்படைப் பாடமிது. இதைப் புரிந்து கொள்ளாமல், மனித நேயம், உலக சமாதானம் என்பதெல்லாம் வெறும் முழக்கங்களாய் முடிந்துபோகும். விரித்தால் விகாரப்படும் என்பதாலேயே மிகச் சுருக்கமாக இங்கே சொல்லப்பட்டது. இன்னும் சுருக்கமாகச் சொல்வதானால்,

    சித்தரும் பித்தரே பித்தரும் சித்தரே

    தத்தம் குரலளவே தாம்.

     படத்திற்கு நன்றி:

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF

    Share
  • அன்புள்ள இந்தியர்களே!

     

    ஆக்கம் : மேதகு அப்துல் கலாம்

    மொழிபெயர்ப்பு : ரஞ்சனி நாராயணன்

    images (1)

    அன்புள்ள இந்தியர்களே,

    இந்த உரையை நான் ஹைதராபாத் நகரத்தில் ஆற்றிக்கொண்டிருந்தபோது ஒரு 14 வயது பெண் என் கையெழுத்து வேண்டுமென்றாள். நான் அவளிடம் அவளது எதிர்காலக் கனவு என்ன என்று கேட்டேன். அவள் சொன்னாள்: முன்னேறிய இந்தியாவில் நான் வாழ வேண்டும் என்று. அவளுக்காக நீங்களும் நானும் இந்த முன்னேறிய இந்தியாவை உருவாக்க வேண்டாமா? இந்தியா பின்தங்கிய நாடு அல்ல; மிகவும் முன்னேறிய நாடு தான் என்று நாம் பிரகடனப்படுத்த வேண்டும். எப்போது இதைச் செய்யப் போகிறோம்? இதைச் செய்வதை விட்டுவிட்டு  இப்போது  நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

    நமது அரசாங்கம் திறமையானது அல்ல என்கிறோம்;

    நமது சட்டங்கள் மிகப் பழமையானவை என்கிறோம்;

    மாநகராட்சி கழிவுகளை சரிவர அப்புறப்படுத்துவதில்லை என்கிறோம்;

    தொலைபேசிகள் இயங்குவதில்லை; இரயில் நிர்வாகம் ஒரு ஜோக். விமானப் போக்குவரத்து உலகிலேயே படுமட்டமான ஒன்று. தபால்கள் ஆமை வேகத்தில் போய்ச்சேர வேண்டிய இடத்திற்குப் போய் சேருவதே இல்லை. இன்னும் இன்னும் எத்தனையோ குறைகள் இந்த நாட்டைப்பற்றி சொல்லுகிறோம். நாம் என்ன செய்தோம் இவற்றை சரிசெய்ய?

    இந்தியாவிலிருந்து சிங்கபூர் செல்லும் ஒருவரை எடுத்துக்கொள்ளுங்கள். அவருக்கு உங்கள் பெயரைக் கொடுங்கள்; உங்கள் முகத்தைக் கொடுங்கள்; இப்போது அந்த ‘நீங்கள்’ சிங்கபூர் விமான நிலையத்திலிருந்து வெளியே வருகிறீர்கள். நன்னடத்தையின் உருவமாக அங்கு இருக்கிறீர்கள். அங்கு சிகரெட்டை பிடித்துவிட்டு மீதியை தெருவில் போடுவதில்லை நீங்கள். அவர்களது பாதாள இரயில் பற்றி அவர்களைப் போலவே பெருமிதம் அடைகிறீர்கள்; நமது மாஹிம் கடல்வழிப் பாதை போலவே அமைந்திருக்கும் ஆர்செர்ட் சாலையில் மாலை 5 மணியிலிருந்து 8 மணிவரை போக 5 டாலர்கள் (இந்தியப்பணம் சுமார் 60 ரூபாய்) கூசாமல் கொடுக்கிறீர்கள்; மால் அல்லது உணவகத்தின் வெளியில் நிறுத்தியிருக்கும் காரை எடுக்கத் தாமதமானால் அதிகப்படியான பார்க்கிங் பணத்தை பேசாமல் செலுத்துகிறீர்கள்; சிங்கப்பூரில் இதற்கெல்லாம் நீங்கள் எதுவும் சொல்லுவதில்லை.

    ரமதான் சமயத்தில் துபாயில் இருந்தால் வெளியில் சாப்பிட பயப்படுவீர்கள்;

    ஜெட்டாவில் தலையை துணியால் மூடிக்கொள்ளாமல் எங்கும் செல்ல மாட்டீர்கள்;

    ‘என்னுடைய வெளியூர் தொலைபேசிக் கட்டணத்தை இன்னொருவருக்கு அனுப்பிவிடு’ என்று சொல்லி இந்தியாவில் தொலைபேசி ஊழியரை விலைக்கு வாங்கலாம்; லண்டனில் இது நடக்குமா? காரில் அநாயாசமாக வேக அளவை தாண்டி சென்றுவிட்டு, கேள்வி கேட்கும்  காவல்துறை அதிகாரியிடம், ‘நான் யார் தெரியுமா?’ என்று இந்தியாவில் பெருமை பேசலாம்; வாஷிங்கடனில் முடியுமா?

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கடற்கரைகளில் காலி சாக்லேட் பேப்பரை  குப்பைத் தொட்டிகளில் போடுவீர்கள், இங்கு?

    டோக்கியோவின் வீதிகளில் வெற்றிலை சாற்றைத் துப்பத் துணிவீர்களா?

    பாஸ்டனில் உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரை பரீட்சை எழுத வைக்கவோ, பொய் சர்டிபிகேட் வாங்கவோ உங்களால் முடியுமா?

    இப்போதும் ‘உங்களைப்’ பற்றித்தான் பெசிகொண்டிருக்கிறோம். நீங்கள் மற்ற தேசங்களில் உள்ள சட்டதிட்டங்களுக்கு தலை வணங்குவீர்கள் ஆனால் உங்கள் தேசத்தில் இதைச் செய்ய மாட்டீர்கள்.

    இந்திய மண்ணைத் தொட்டவுடன், சிகரெட் துண்டை, கையிலிருக்கும் துண்டுக் காகிதங்களை வீதியில் வீசி எறிவீர்கள். அந்நிய தேசங்களுக்குப் போய் அங்கு நடக்கும் நிகழ்வுகளில் பங்கு கொண்டு அங்குள்ளவர்களை போற்றத் தெரிந்த உங்களால் உங்கள் தேசத்தில் ஏன் அப்படி இருக்க முடியவில்லை? அமெரிக்காவில் ஒவ்வொரு நாய் சொந்தக்காரரும் தெருவில் நாயுடன் நடக்கும்போது, கூடவே கையில் ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்துப் போவார்கள். தங்கள் நாய் கக்கா போனவுடன் அதை எடுத்து பையில் போட்டுக் கொள்வார்கள். நம் நாட்டில்  எந்த இந்தியனாவது செய்வானா?

    தேர்தலில் ஓட்டு போட்டவுடன் நம் கடமைகள் முடிந்துவிட்டதாக நினைத்து, வீட்டில் ஹாயாக உட்கார்ந்து கொள்வோம். அரசு நமக்கு வேண்டியவற்றை எல்லாம் செய்து தரவேண்டும் என்று எதிர்பார்ப்போம். ஆனால் நமது பங்களிப்பு வெறும் பூஜ்யம். மாநகராட்சி தெருக்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்போம், ஆனால் குப்பைகளை தெரு முழுவதும் போடுவது நம் தப்பு என்று உணர மாட்டோம். அல்லது தெருவில் கிடக்கும் ஒரு துண்டு காகிதத்தையாவது எடுத்து குப்பைத் தொட்டியில் போடமாட்டோம்.

    ரயில்வே நிர்வாகம் கழிப்பறைகளை சுத்தமாக வைக்கவேண்டும் என்று நினைப்போம். ஆனால் நாம் அவைகளை சரிவர பயன்படுத்த வேண்டும் என்பது நம் பொறுப்பு என்பதை உணர மாட்டோம். விமானப் பயணங்களில் மிகச்சிறந்த உணவு கொடுக்கப்பட வேண்டும். விலையுயர்ந்த சோப்பு, ஷாம்பூ இவைகளைக் கொடுக்க வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு. ஆனால் ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தால் போதும் இவைகளை திருடக்கூடத் தயங்கமாட்டோம்.

    பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வரதட்சிணை, பெண்சிசு கொலை போன்ற சமூக விரோத செயல்களுக்கு எதிராக நாம் என்ன செய்கிறோம்? வீட்டில் வரவேற்பறையில் உட்கார்ந்து கொண்டு வாய்கிழியப் பேசுவோம். வீட்டில் பெண்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்று சிந்திப்போமா?

    இப்படி நடந்துகொள்ள நாம் சொல்லும் சால்ஜாப்புகள் என்ன?

    ‘அமைப்பு மாறவேண்டும், நான் ஒருவன் மாறி என்ன ஆகப்போகிறது?’

    யார் இந்த மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறார்கள்? இந்த அமைப்பில் அங்கத்தினர்கள் யார்? நம்மைப் பொறுத்தவரை இந்த அமைப்பில் இருப்பவர்கள் நமது அக்கம்பக்கத்தவர்கள், மற்ற வீடுகள், மற்ற நகரங்கள், மற்ற சமூகங்கள் இவை தவிர அரசு. நிச்சயமாக நீங்களும் நானும் இதில் இல்லை.

    உண்மையில் நமக்கு இந்த சமூகத்தை மாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று வைத்துக்கொள்வோம். ஏதாவது நேர்மறையாக நமது பங்களிப்பை கொடுப்போமா? குடும்பத்துடன் பத்திரமான இடத்திற்கு போய், ஒரு கூண்டுக்குள் ஒளிந்துகொண்டு விடுவோம். யாரோ ஒரு திருவாளர் ‘சுத்தம்’ வந்து தனது கையை ‘விஷுக்’ கென்று வீசி ஏதாவது அற்புதங்கள் செய்ய வேண்டும். அல்லது நாம் வேறு ஏதாவது வெளிதேசத்திற்கு கோழைகள் போல ஓடிவிடுவோம். அமெரிக்காவிற்கு சென்று அவர்களது நாட்டின் அமைப்பைப் புகழுவோம் அவர்களது பெருமையில் குளிர் காய்வோம். நியூயார்க் நகரம் பாதுகாப்பானதாக இல்லையா, ஓடு இங்கிலாந்திற்கு; இங்கிலாந்தில் வேலையில்லாத் திண்டாட்டமா, அடுத்த விமானத்தைப் பிடித்து ஓடு வளைகுடா நாட்டிற்கு; வளைகுடா நாடுகளில் போர் அபாயமா? உடனே இந்திய அரசு ஓடிவந்து உங்களை காப்பாற்றவேண்டும்!

    இங்கிருப்பவர்கள் எல்லோரும் இந்த நாட்டை தூற்றவும், மோசமாகப் பேசவும் தான். யாருக்குமே இந்த நாட்டின் அமைப்பின் மீது அக்கறை இல்லை. நமது மனசாட்சியை பணத்திற்கு அடமானம் வைத்துவிட்டோம்.

    அன்புள்ள இந்தியர்களே, இந்த கட்டுரை உங்களை சிந்திக்க வைக்கவும் உங்களை நீங்கள் ஆராய்ந்து கொள்ளவும்தான் எழுதப்படுகிறது. இந்தக் கேள்விகள் உங்கள் மனசாட்சியை கொஞ்சமாவது தட்டி எழுப்பும் என்றுதான்.

    ஜான் எப் கென்னடி சொன்னதை நானும் திரும்பச் சொல்லுகிறேன்: ‘இந்த நாட்டிற்கு நாம் என்ன செய்ய முடியும், என்ன செய்தால் அமெரிக்காவும் பிற நாடுகளும் இன்றிருக்கும் நிலைமைக்கு இந்தியா வரமுடியுமோ அதைச் செய்வோம்.’

    இந்தியாவிற்கு என்ன தேவையோ அதைச் செய்வோம். இந்தக் கடிதத்தை ஒவ்வொரு இந்தியனுக்கும் அனுப்புங்கள் – ஜோக்குகள் அனுப்புவதற்குப் பதிலாக!

    நன்றியுடன்,

    அப்துல் கலாம்.

    Share
  • நாடோடிப் பாடல்

     

    கே. ரவி

    10252036_618978758193600_5068132543127217621_n

    நேத்துரா வேளயிலே நீபாத்த பார்வையிலே
    நெஞ்செல்லாம் சல்லடையாப் போச்சுதடீ பொம்மயிலே ஓ! ஓஓஓ!

    காத்துலே பூவாசங் கலந்துவந்து மயக்குதடீ
    கண்ணுக்குள்ளே ஓன்சலங்க கலகலன்னு சிலும்புதடீ
    ஆத்துமணல் படுகையெல்லாம் அணலாக் கொதிக்குதடீ
    அம்மாடீ ஓம்மொவந்தான் அங்கும் இங்கும் தெரியுதடீ
    (நேத்துரா)

    பூத்தநெல வாமனச நான்தொறந்து வச்சீருக்கேன்
    பூப்போலப் பாதம்வச்சுப் பூமுடிக்க வந்தீருநீ
    காத்திருந்து காத்திருந்து காலம்வீ ணாச்சுதடீ
    கண்ணம்மா ஓன்பெயரக் காட்டுக்குயில் கூவதடீ
    (நேத்துரா)

    நிமுந்தா சூரியனாம் குனிஞ்சாத்தான் கும்மிருட்டாம்
    ஒன்னப்பத்தி ஊர்முழுக்கப் பாட்டுக்கட்டிப் பேசுதடீ
    தெரிஞ்சா ஆசப்பட்டேன் தேகத்தயா காதலிச்சேன்
    புரிஞ்சா போதுமடீ பொய்வேசம் ஏதுக்கடீ
    (நேத்துரா)

    கூட்டுக்குள்ள நானிருந்தா கூடமுடி யாதுனுதான்
    பாட்டுக்குள்ள ஏறிகிட்டுப் பாதிவழி வந்துபுட்டேன்
    மீதிவழி நீயிறங்கி மின்னலா வந்துதொடு
    மீறமுடி யாதபடி வார்த்தகளப் போட்டுவச்சேன்.
    (நேத்துரா)

     

    Share
  • நயாகரா நதியே!

    -ரா. பார்த்தசாரதி 

    AmericanFalls

    நயாகராவே நீ  ஒரு  அருவியா?! நதியா?! நங்கையா?!

    நதியையும் நங்கையையும் பற்றி எழுதாத கவிஞன் இல்லை!
    நதியினைக்  காணவரும்  மனிதர்களும் ஜாதி மதம் பார்ப்பதில்லை! 

    இறைவன்  படைத்த கவிதை  மனிதன்தானே?
    மனிதன் படைத்த  கவிதை…நதியும், நங்கையும் தானே!   

    மேகம் போன்ற மேனியும் இளமைகொண்ட  நங்கைபோலே
    மலைமேடு பள்ளம்மூடி ஓடுகின்றாய்  நாணத்தினாலே!

    நதியே நீயும் ஒரு பெண்தானோ?
    அருவி  எனும்  கூந்தலையும் எழிலையும் காட்டுவதும்  ஏனோ?

    நதியே!  நீ அருவியாய்  நின்று  புன்முறுவல் பூக்கின்றாய்!
    நாடி வரும் மனிதனின்  மனதில் ஓர்  தேனருவியாய்  வீழ்கின்றாய்!

    நதியே  நீ  நடந்தால்  நங்கை!  குனிந்தால்  குமரியல்லவா!
    எல்லோர்க்கும் என்றும் நீ ஒரு தாய் அல்லவா!

    நதியே  நீ  அருவியாய் விழுந்து நதியாய் ஓடிக் கடலில் கலக்கின்றாய்!
    நங்கையின்  பிறவியோ என்றும் பாசத்துடன் வாழ்வில்  கலக்கின்றாள்!

    நதியே நீ  உன்  ஓட்டத்தால்  ஒளி  தருகின்றாய்!
    நங்கையோ வாழ்க்கை எனும் நதியில் ஒளி பெறுகிறாள்!

    நதியே நீ உறவை நாடிக் கடலில் கலக்கின்றாய்!
    நங்கையோ ஓர்  உறவைத்  தேடி  மனதில் கலக்கின்றாள்!

    வெண்ணிற ஆடையணிந்து வானவில்லை  ஏந்தி நின்றாய்!
    நீலநிற ஆடை அணிந்த  மனிதர்களுக்கு மட்டற்ற  மகிழ்ச்சி  தந்தாய்!

    ஆம்,  நயாகரா  நதியே  என்றும் நீ  ஒரு  நங்கைதான்!       

     

    Share
  • உயிரின் இருப்பு!

    -மன்னை சதிரா

    பந்த பாசம்
    சொந்தங்கள்                                                                                            chain-breaking - urin iruppu
    என்று காலம்
    காலமாய்
    இருந்து வந்த
    பாரம்பரியம்
    சிதைந்து போனது!

    இட நெருக்கடி,
    பொருளாதாரச் சூழல்
    மனஸ்தாபங்கள் எனக்
    குடும்பத்தின்
    ஆணிவேர்கள்
    காய்ந்து விட்டது!

    உறவுச் சங்கிலிகளின்
    கண்ணிகள்
    ஒவ்வொன்றாய்
    அறுந்து போனது!

    நீர் நிறைந்து நிறைந்து
    காய்ந்து வற்றிப்போன
    குட்டையில்
    வாழ்ந்ததற்கான
    அடையாளமாய்
    நண்டு ஓட்டின்
    சிதிலங்களும்
    உள்கவியும்
    வாசனையும்
    உயிரின் இருப்பை
    உணர்த்தியது!

    Share
  • நாடு அதை நாடு….

    கவிஞர் காவிரி மைந்தன்

    காட்டில் வாழ்ந்த மனிதனுக்கு வேட்டையில் நாட்டம்! அன்று தொடங்கிய நாட்டம் வேட்டையில் மட்டும்! நாட்டில் வாழும் மனிதர்களுக்கோ ஆயிரம் நாட்டங்கள்! அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாடுதல் தேவையே!

    நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நமக்கெனப் பொதுவான நாட்டம் இருக்க வேண்டும்!

    சுதந்திர வேட்கை உருவானதும் அப்படித்தான்! மொழியின்மீது நாட்டம்.. தாய்மொழியென்றும் தமிழ்வழியென்றும் நாடுதலும் இஃதே!

    நாட்டின் நலனில் அக்கறை செலுத்துவது அத்தியாவசியமான ஒன்று. நாட்டின் பாதுகாப்பென்று வரும்போது நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே உணர்வில்.. உரத்த குரலில் எழுந்து நின்றால்.. பகை திசைமறந்து ஓடும்! எங்கெல்லாம் ஒரு இனம் நசுக்கப்படுகிறதோ.. அங்கெல்லாம் இப்பாடல் தலைமை தாங்கும்!

    வீரம், பண்பாடு, நெறிகள் என அனைத்திலும் தழைத்திடும் நம் பாரத தேசம் – அதன் மாண்புகள் இவையணைத்தையும் ஒற்றைப்பாடலில் கவியரசர் வரைந்துள்ளார் பாருங்கள்!

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அற்புத விளைச்சல்!
    டி.எம்.செளந்திரராஜன் – பி.சுசீலா குரல்களில் நாடோடி படப்பாடல்!

    ”நாடு அதை நாடு”
    நாடு அதை நாடு
    அதை நாடாவிட்டால்
    ஏது வீடு?

    பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
    மானம் பெரிதென்று வாழும் பண் பாடு
    மானம் பெரிதென்று வாழும் பண்பாடு”

    பாலைவனம் என்ற போதும் நம் நாடு
    பாறை மலை கூட நம் எல்லைக் கோடு
    ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
    வீர சமுதாயமே எங்கள் கூட்டம்

    வானம் குலமாந்தர் முகம் பார்த்ததில்லை
    வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
    வீரர் விழிதாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
    வெற்றித் திருமாது நடை போடும் எல்லை

    பசி என்று வருவோர்க்கு விருந்தாக மாறும்
    பகைவர் முகம் பார்த்துப் புலியாகச் சீறும்
    நிலத்தினில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
    எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்

    திரைப்பாடல் என்பது எப்படி மக்கள் மனதில் பதிய வேண்டுமென்பதற்கு இலக்கணமாய் இப்பாடலை வையுங்கள்! ஏதோ எழுதுபவர்களை சற்றே வையுங்கள்! ஒதுக்கி வையுங்கள்!!

    Share
  • திருமால் திருப்புகழ் (89)

     

    கிரேசி மோகன்

    Krishna for today Makhan chor series.  Keshav
    Krishna for today Makhan chor series. Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————
    ’’கண்ணன் அந்தாதி’’
    ————————————

    Kaliyamardhana. Chinese brush. #Krishnafortoday Keshav
    Kaliyamardhana. Chinese brush. #Krishnafortoday
    Keshav

    முந்திவந்து வாய்நிறைய மண்ணினை உண்டபின்,
    அந்தநாள் அன்னை அனுபவித்த, -விந்தையைக்,
    காட்டுவாயா நீயெனக்கு, மாட்டிடையா நானுக்கு,
    ஊட்டிடுவேன் வெண்ணை உவந்து….(51)

    உவந்தன்று பூதனை, ஊட்டிய நஞ்சைக்,
    குவிந்த இதழால் குடித்தோய், -இவன்தன்,
    இதய விஷத்தை, இறக்கி அதனுள்,
    புதிய அமுதாய்ப் புகு….(52)

    புகுந்தன்று, பொய்கை படமெடுத்(த) ஐந்து
    முகம்கொண்ட காளியன் மீது, -வெகுண்டெழுந்(து),
    ஆடிய ஆட்டம், அதற்கீடாய் ஐம்புலன்கள்
    ஆடா(து) அடங்கநீ, ஆடு….(53)

    ஆடிப் பெருக்காகக், கூடிக் குளிக்கு(ம்)ஆயர்,
    பாடி இளம்கோ பியர்கூறை, -வேடிக்கை
    ஆகப் பறித்தவா, மோகத் திரைவிலக்கி,
    யோகநிர்வா ணம்தா எனக்கு….(54)

    ”எனக்கவலைத் தந்தாய் மனக்கவலை தீரும்”
    எனக்குசேலன் நட்புக்(கு) இளகும், -குணக்கடலே,
    மாபாவச் செல்வம் மனதில் சுமக்கின்றேன்,
    கோபாலா, கொள்ளைக்குக் காத்து….(55)
    —————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2014_04_01_archive.html

    Share
  • மதுரையில் நடந்தது (35 ஆண்டுகளுக்கு முன்பு)

    இசைக்கவி ரமணன்

    meenadsi-suntharar

    ( பல வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த ஒரு சம்பவம். இதைப்பற்றி, என் கருத்துக்களோ, விமர்சனங்களோ எதுவும் இடவில்லை. நேரடிப்பதிவு போதும் என்பது என் நம்பிக்கை!)

    மீனாட்சி அம்மன் கோவில். ஆடிவெள்ளிக் கிழமை. அதற்குமேல் வார்த்தைகள் அனாவசியம்!

    நெரிசலில் சிக்கி, எட்டிப்பார்த்து, அத்தனைக் கூச்சல், வியர்வை, அவசரத்தின் நடுவிலும், அந்த இடையொசிந்த அழகியையும், அவள் காலடியில் கிடக்கும் மலரையும், அதில் என்னையும் கண்டு, ஒரு துளி விம்மி, விழிகளின் விளிம்புகள் சூடாகி, காக்கித் தொண்டர்களால் கெளரவமாக விரட்டப்பட்டு, குங்குமத்தை வியர்வை கரைக்க, பிராகாரக் காற்றின் அணைப்பில் வெளிவந்தோம் நானும் நண்பர்களும். ஆசுவாசத்தில்தான் ஆயாசம் தெரிகிறது!

    பொற்றாமரைக் குளத்தின் கரையில் உட்கார்ந்து தேங்காய் மூடியை உடைத்தோம். எதிர்க்கரையில் ஒரு சின்ன கலாட்டா. அத்தனைக் கூட்டத்திலும் தெளிவாய் கவனத்தை ஈர்க்கின்ற அமளி. உடம்பு முழுக்க இறுகிய கோட்டுடன் ஒரு குட்டையான மொட்டை ஆசாமி. பக்கத்தில் ஒரு கிழவி; பல்லில்லை; பிரார்த்தனை மொட்டை. அருகில், சீக்கிரத்தில் இளைஞனாகிவிடப் போகிற ஒரு பயல்.

    கிழவன், தலையிலும் வயிற்றிலும் மாறி மாறி அடித்துக் கொள்கிறான். கிழவி ஓவென்று கத்திக்கத்தி ஒய்கிறாள். பயல் வியர்வையில் விறைத்திருந்தான். அவசரமாய்க் கரையைச் சுற்றிவந்தோம். அதற்குள், அந்த மூவரைச் சுற்றி முளைத்திருந்தது ஒரு சிறு கும்பல். அதையடுத்த விபூதிப் பிள்ளியாரின் மேல், வாரிவாரித் திருநீறைப் போட்டபடிச் சுற்றிவந்த மனிதர்களும், கொஞ்சம் திரும்பிப் பார்த்துக் கொண்டு, தடுமாறிச் சுற்றினார்கள்.

    அந்த மூவரும் ஆந்திராவோ, வங்காளமோ, அசாமோ? இருக்கலாம். பொதுவான பழுப்பேறிய இந்தியக் கருப்பு. போதுமான விவரங்கள் சேகரிக்க முடியாதபடி பாஷை குறுக்கிட்டது. நாட்டில், பசிதான் தேசிய மொழி. அப்படி இப்படி அரைகுறை துபாஜிகளிடம் துருவினால், கொஞ்சம் விவரம் தெரிந்தது.

    images (1)

    மூட்டை முடிச்சுடன் வந்தவர்கள், பயலைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுக் குளத்தில் இறங்கியிருக்கிறார்கள். பயல், பராக்கு மட்டும் பார்த்துக்கொண்டிருந்த போது, மூட்டையிலிருந்த ஆயிரம் ரூபாயையும், ரெயில்வே பாசையும் எந்தக் களவாணியோ தட்டிக்கொண்டு போய் விட்டான். பிரித்த மூட்டையில், பிழிந்து, உலர்த்தாமல் காய்ந்த துணி விறகுகள்; ஊர் ஊராய்ச் சேர்த்த பிரசாத முடிச்சுக்கள்.

    பொங்கிப் பொங்கி அழுதான் கிழவன். கிழவி, திருடனைப் பார்த்ததாக எண்ணிக்கொண்டு, அவன் வேட்டி, அடையாளங்களை அபிநயித்துக்காட்டி, ‘இதோ, இங்குதான் அவன் சாய்ந்திருந்தான்,’ என்று சுவற்றைக் காட்டினாள். அதன் மேலே, ‘தனம் தரும் கல்வி தரும்’ என்று பட்டர் பாடிப் பக்தர் பதித்திருந்தார்கள். ‘உடனே கோவில் அலுவலகத்தில் முறையிட்டுப் போலீசுக்குச் சொல்லவில்லையா?’ என்று கேட்டது ஒரு காவிப்பல். ‘போலீஸ்’ என்பது கிழவனுக்குப் புரிந்தது. கோட்டை விட்ட பயலை அடிக்க முயன்று தோற்று அவனைத் தள்ளிவிட்டு, ஒரு மூட்டை போலத் துவண்டு துவண்டு ஓடினான். கிழவியின் அபிநயம் ஓய்ந்தபாடில்லை. அவளைப் பார்த்தால் அவன் அவ்வளவு கிழவன் போலத் தெரியவில்லை. சம்பாதித்தே தீரவேண்டிய அத்தியாவசியத்தின் திடம், அவன் வயதின்மீது போர்வை போர்த்தியிருந்தது. பயல், மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தான். பணம் பறிபோனதைக் காட்டிலும் அது எப்படிப் போனது என்பதை விளக்குவதிலேயே விடாப்பிடியாய் இருந்தாள் கிழவி. மாறி மாறி அதே காட்சிகள்.

    போனவேகத்தில் திரும்பி வந்துவிட்டான் கிழவன். அதிகாரிகள் கைவிரித்துவிட்டார்கள். லயம் மாறாமல் அவன் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ள, ஸ்ருதி மாறாமல் கிழவி புலம்ப, எதுவும் செய்யாமல் சிலையாயிருந்தான் பயல். ஆயிற்று, கும்பலில் ஆளுக்காள் ஏதேதோ சொல்லத் துவங்கினர். யாரும், பாதிக்கப் பட்டவர்களோடு பேசவில்லை.

    “பாவம் விதி!,” என்றார் ஒரு பெரியவர். அவரிடம் ஒரு தற்காலச் சாமியார்ப் பார்வை இருந்தது.

    “இல்லை ஐயா, இது தெய்வத்தின் சதி!.” என்று குறுக்கிட்டது இன்னொரு குரல். ஓர் அற்பனைப் பார்ப்பதுபோல் திரும்பினார் பெரியவர். அங்கே கைகளைப் பின்னுக்குக் கட்டிக்கொண்டு, மடித்த வேட்டியில், ஒருவர். உள்ளே, துவண்ட கருப்பு மேனி; கத்திக் கண்கள்.

    “தம்பி! கொடுப்பதும் எடுப்பதும் தெய்வத்தின் வேலை!,” என்றார் பெரியவர்.

    “ஆமாம்யா! கூரெயப் பிச்சிகிட்டுத் தெய்வம் கொடுத்ததெப் பாத்தவன் இல்லெ. கோவில்லியே புடுங்கிக்கற தெய்வத்தத்தான் பாக்கோம்,” என்றான் தம்பி.

    இடையே ஒரு பாம்படப் பாட்டி, “ஐயோ! மீனாச்சி! ஒன்னயப் பாக்க வந்தவளுக்கு இந்தக்கதி வேணுமா?” என்று துக்கத்தைப் பங்கிட்டுப் புலம்பினாள். பறிகொடுத்த கிழவி, இவளை அதிசயத்துடன் பார்த்தாள். மொழி புரியாவிட்டாலும், எண்ணம் புரிந்து விட்டது.

    “கர்ம வெனெயப் பத்திப் புரிஞ்சுக்கற அறிவு ஒனக்குக் கெடெயாது தம்பி!,” என்றார் பெரியவர்.

    “என்ன சாமி கெடந்து இளுத்துகிட்டே போறீவ? ஓடா ஒழச்சி வாயக்கட்டி வயித்தக்கட்டி ஒருத்தன் சம்பாதிக்கான். அத ஒரு களவாணிப்பய லவட்டிக்கிட்டுப் போராண். இதென்ன கர்மமா வெனயா?” என்றான் ஆத்திரமாக.

    “கர்மம்,” என்றார் பெரியவர் கம்பீரமாக. தம்பி, தலையில் அடித்துக் கொண்டான். சிலர் இதை ரசித்தனர்; சிலர் முணுமுணுத்தனர். ஆனால், இதில் அடுத்த கட்டம் என்னவென்று பார்ப்பதில் ஆர்வம் மேலிட்டு, நகராமல் நின்றனர்.

    அங்கே கிழவன், “மாயீ! துர்க்கே!” என்று புலம்பியபடி விமானத்தைப் பார்த்துப் பார்த்துக் கும்பிடு போட்டான்; குமுறி அழுதான்; பயலைக் கட்டிகொண்டு தூணோரம் சரிந்தான்.

    இங்கே, பெரியவருக்கு ரத்த அழுத்தம் அவ்வளவு சீராக இல்லை போலும், “ஒனக்கென்னடா தெரியும் தெய்வக் குத்தத்தப் பத்தி,” என்று சீறினார். பதிலுக்குத் தம்பி சொன்ன வார்த்தைகளை இணையத்தில் இடுவதற்கில்லை! கும்பல் மேலும் வம்புக்காகக் காத்திருந்தபோது, அந்தப் பாம்படப் பாட்டி, குரலைத் தூக்கினாள்:

    “என்ன ஆளய்யா நீங்க? ஒடயவன் பறிகொடுத்து நிக்கான்! ஆளுக்காளு ஒங்களுக்குள்ள என்ன அக்கப்போரு? என்ன பஞ்சாயத்து? அஞ்சோ பத்தோ அம்புட்டுப் பேருமாச் சேந்து மனசாரக் கொடுத்தமின்னா அவிக ஊருபோயாச்சம் சேருவாங்க இல்ல? அத விட்டுப்போட்டு இங்கிட்டு என்ன கரச்சல் வேண்டிக் கெடக்கு? இந்தா நான் தாரேன் ரெண்டு ரூவா! ஏதோ அந்தப் பயபுள்ளக்கு மிச்சருக்காவது ஆகும். வெட்டிப் பேச்சுப் பேசாமெ வேட்டியப் பிரிச்சுக் கொடுப்பீயளா..?” என்று பாம்படப் பாட்டி வெற்றிலைச் சுருக்கைப் பிரித்து ரூபாய்த் தாளை எடுத்தாள்.

    “ஈஸ்வரா,” என்று நகர்ந்தார் பெரியவர். பாட்டியை முறைத்தபடிப் பெரியவரை முந்தினான் தம்பி. தோசைக் கல்லில் விழுந்த வெண்ணைத் துளி போலக் கும்பல் பரவி மறைந்தது. பாட்டி எல்லோரையும் பார்வையால் எரித்தாள்.

    சரிந்த கிழவன் திடீரென்று அலையலையாய் அழ, கிழவிக்கு மூச்சுமுட்ட, பயல்முகம் பயங்கரமாகக் கறுக்க, பாம்படப் பாட்டி தழுதழுக்க எல்லாம் ஏதோ கண்ணாடி அறைக்குள் நிகழும் சத்தமற்ற சலனங்களாகத் தொய்ந்துகொண்டே போக..

    ஒரு சின்னக் குழந்தை கை நிறையத் திருநீற்றை வாரி அந்த விபூதிப் பிள்ளையார் மீது போட்டது.

    திறந்திருந்த அவர் கண்கள் முழுதும் திருநீறு மறைத்திருந்தது..

    ரமணன்

     

    Share
  • சிவரமணிக்கு

     

    ரிஷான்

     

    சிவரமணிக்கு…

     

    உன்னிடமொன்றைச் சொல்லும்59255_605371066139667_518905472_n

    தேவை எனக்கிருக்கிறது

    எனினும் நான் வாய் திறக்கும்வரை

    பார்த்திருந்த அவர்கள் எனது நாவைச் சிதைத்தனர்

    உன்னைப் பார்க்கவென

    நான் விழிகளைத் திறக்கையில் அவர்கள்

    அவற்றைப் பிடுங்கி எறிந்தனர்

     

    அச்சமானது தாய்த் தேசத்தைச் சூழ்கையில்

    உனை நான் இதயத்தில் உருவகித்தபடி

    போய்க் கொண்டிருந்தேன்

    எனைப் பிடித்துக் கொண்ட அவர்கள்

    இதயத்தைத் துண்டம் துண்டமாகச் சிதைத்து

    உனை என்னிடமிருந்து பறித்துக் கொண்டனர்

     

    அந்தகாரத்துக்குள் பிறந்த நான்

    அந்தகாரத்துக்குள் பிறந்த நீ

    ஒருவரையொருவர் அறிந்துகொள்வோமென்று ஐயமுற்ற அவர்கள்

    இறுதித் தாரகையையும் தூள்தூளாக்கினர்

    நிரந்தரமான இருளுக்குள்ளேயே

    எங்களைப் பிரித்துக் கொன்றுபோட்டனர்

     

    இப்பொழுது பிணங்கள்

    கரையொதுங்குகையில்

    நீயும் நானும்

    தற்கொலை செய்துகொண்டதாக அறிவிப்பார்கள்

     

    நீ வடக்கிலும், நான் தெற்கிலும்

    இன்னும் நிரப்பப்படாத

    பொதுக் கல்லறைகள் இரண்டினுள்ளே

    வெவ்வேறாக படுத்திருப்போம்

     

    இக் குளிர்ந்த நிலக் கருவறைக்குள்ளே இடைவெளியானது

    பிணங்களாலும் இருளினாலும் நிறைந்திருக்கிறது

     

    சிவரமணி, அன்பிற்குரிய சகோதரி

    வடக்கிலும் தெற்கிலும்

    புதைக்கப்பட்ட அனேகரோடும்

    இன்னும் நிறைய நாட்கள்

    இங்கு நாங்கள் அமைதியாகச் சாய்ந்திருப்போம்

     

    சகோதர விழிகளிலிருந்து உதிரும்

    உஷ்ணக் கண்ணீர்த் துளியொன்று வந்து

    எமது குளிர்ந்த நெற்றியை மெதுவாக முத்தமிட்டு

    இம் மரணத்தின் தொடர்ச்சி

    இத்தோடு முடிந்துவிட்டதென உத்தரவாதமளித்து

    எம்மை மீண்டும்

    வாழ்க்கையை நோக்கி அழைக்கும்வரை

    நாமிங்கு அமைதியாகச் சாய்ந்திருப்போம்

     

    ஏனெனில் மரணத்துக்கு முன்னர்

    நீ இவ்வாறு எழுதியிருக்கிறாய்

     

    “ஆனால்

    நான் வாழ்ந்தேன்

    வாழ்நாளெல்லாம் நானாக

    இருள் நிறைந்த

    பயங்கரங்களின் ஊடாக

    நான் வாழ்ந்தேன்

    இன்னும் வாழ்கிறேன்.”

     

    – அஜித் சி. ஹேரத்

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

     

     

    Share
  • வாழ்க்கையெனும் பள்ளியிலே

    இசைக்கவி ரமணன்

    1, கண்விழிப்பு

    இயற்கை சேதி சொல்லும்

    வாழ்க்கை பாடம் புகட்டும்..

    10312554_10152094623552919_2699388480590915909_n

    உலகம் ஓயாமல் சுழன்றுகொண்டே இருக்கிறது; ஒழியாமல் சுற்றிக் கொண்டே இருக்கிறது. வீதிகளற்ற வானத்தில்தான் எதற்கு இத்தனை இயக்கங்கள்! வெட்டவெளிப் பொட்டலிலே கொட்டிக்கிடக்கும் வைரக்குவைகள்! ஆ! வெட்டவெளி¢, பொட்டலில்லை! ஒரு மகாகவியின் கற்பனைபோல், கணந்தோறும் விரிந்துகொண்டே இருக்கும் அண்டத்தில், வாழ்க்கை என்னும் வீம்பின் முரசம், பொட்டலைப் பூஞ்சோலையாக்கியிருக்கிறது. அதோ, முந்திவந்துவிட்ட அந்தக் குளிர்வீசும் முழுநிலவிலிருந்து, இந்த விரலளவுப் பறவைவரை ஒரே கரம்தான் ஆக்கியிருக்கிறது. இந்த முழுவானத்தின் மூச்சிலிருந்து, அந்தச் சின்னஞ்சிறு பூச்சியின் இதயத் துடிப்பு வரை ஒரே நோக்கம்தான் தொனித்துக் கொண்டிருக்கிறது.

    மொட்டை மாடியில் உள்ளங்கைகளைச் சேர்த்துத் தலையணையாக்கி நீல விதானத்தை மூலைக்கு மூலை பார்த்தாலும் வாழத்தலைப்படும் விசைப்புத்தான் வாசகமாகப் பதிந்திருக்கிறது. ‘சக்திப் பொய்கையிலே ஞாயிறு ஒரு குமிழ்,’ என்பான் பாரதி. பிரபஞ்சத்தின் விரிவைக் கற்பனையில் சுருக்கப் பார்த்தாலும் உலகம் தூசளவு கூட இல்லை. இதில் எத்தனை நான்கள் நீக்கள் அவர்கள் அவைகள்! அண்டத்தின் விரிவும், ‘முடிந்தால் என்னைப் புரிந்துகொள்’ என்ற பாவனையில் ஒரு முழுநேரச் சவாலாய் அது இறைந்து கிடப்பதும் என்னை நிர்மூலமாக்கி விட்டது. இத்தனைப் பெரிய இருப்பில், நான் பரிகசிக்கத்தக்க இன்மையா? இல்லை; அப்படி இருந்தால், இந்தச் சித்தம் போதாத நிம்மதி எனக்கு வாய்த்திருக்குமா? அறிவென்று கொண்ட கயிறுகள் அறுந்தன; கண்ணாடி காட்டும் அம்மணம் போலத் தெரிந்த அறியாமையின் நிதர்சனத்தில் ‘இன்று புதிதாய்ப் பிறந்தேன்.’

    அறிவே சிம்மசொப்பனம்

    அறியாமை சிம்மாசனம்!

    சோறுதின்ன அடம்பிடித்த வேளையில், அம்மா என்னெல்லாம் கதைசொன்னாள்! ‘அதோ பார்! நிலா அந்தத் தென்னங் கீற்றில் வந்து உட்கார்ந்துகொண்டு உன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறது!.’ அட ஆமாம்! அப்படித்தானே இருந்தது, இந்த அறிவு என்னும் காற்றுவந்து அசைக்கும் வரை!

    மறுபடி மறுபடி ஒரே காட்சிதான். பாசையால் கட்டுண்டு அசையாமல் கிடக்கும் குளம். அதன் அடர்த்தியும், நிலைப்பும் ஈர்க்கின்றன. அதில், முகம் தெரிவதற்கில்லை. அதுவே முகமாகத் தெரிகிறது. என் முகம் கரைந்து அதனோடு கலக்கும் தருணம், எங்கிருந்தோ ஒரு கல் வந்து அதன் மையத்தில் விழுந்தது.

    அப்போது துவங்கிய அலைகள் இன்னமும் நிற்கவில்லை. சுருள்சுருளாக, வளையம் வளையமாக அவை தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

    ஆடாத கொளத்துத் தண்ணி

    அறியாம எறிஞ்சகல்லு

    ஆளெத் தொரத்துதம்மா அலையலையாக…

    பூமியில் புதைந்து கிடக்கிறது வித்து. உயிர், அதிலே உறங்கிக்கொண்டிருக்கிறதா, அல்லது ஏதேனும் ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறதா என்று நிர்ணயிக்க முடியாது. விண்ணிலிருந்து வருகிறது மழை. ஏதோ ஒரு துளி உள்ளே நுழைந்து உயிர் விழிக்கிறது, அல்லது சிலிர்க்கிறது.

    வினாக்குறியோடுதான் விதை முளைக்கிறது. ஒரு சித்திரச் சோலையையே உள்ளடக்கி இருக்கும் சிறுவிதையை எப்படிப் புதைத்தாலும், அது விழிப்புற்றதும் தலைதூக்கிப் பார்ப்பது பிரபஞ்சத்தைத்தான். அதன் கேள்வி, வையத்தைக் கண்டபின் எழுந்ததா, இல்லை அதன் விழிப்பு வினாவுக்குப் பின்பே ஏற்பட்டதா தெரியவில்லை. ஆனால், முரட்டு மண் சற்றே வெடிக்குமளவுக்கு ஒரு மூர்க்கம் இந்தச் சின்ன விதையில் எப்படி நேர்ந்தது? இன்று, கேள்வியே தன் வடிவாக அது நிற்பதன் தத்துவம்தான் என்ன? தொடரும் இலைகளும், கிளைகளும், அட ரகசிய வேர்களும் கூட அந்தக் கேள்வியின் விரிவுதானா?

    பல்வேறு கேள்விகள் போல் தோன்றுகிறதேயொழிய, கேள்வி என்பது ஒன்றுதான். அதனால்தான், அது ஆயிரக்கணக்கான பதில்களாலும் திருப்தியுறுவதில்லை. கேள்வி, ஒருபோதும் பதில்களால் தீராது. ஒரு நட்சத்திரம் போலவே, கேள்வியும் வெடித்துத் தோன்றி வெடித்துத்தான் மறையவேண்டும். என்றோ வாழ்ந்து முடிந்துவிட்ட விண்மீனின் ஒளி இன்றும் காணப்படுகிறதல்லவா? கேள்விக்கு இப்படியும் ஒரு பரிமாணம் இருக்கிறது. உள்ளே எழுந்த கேள்விக்கு விடை, வெளியே இருக்க முடியாது. அறவே விடை தெரியாமல் எழுவதில்லை வினா.

    விடை என்பது, வினாவுக்கு வெளியே இருப்பதற்கில்லை.

    இதைத்தான் வாழ்க்கையென்னும் பள்ளியில் கற்க வேண்டும். வாழ்க்கை, விபத்தன்று, ஒப்பற்ற வாய்ப்பு. அதற்கு முன்னும், பின்னும் என்ன என்பது நமக்கு அனுபவத்தில் வரவில்லை, கேள்விப்பட்டதுதான். எனவே, எந்தத் தகவலும் நெய்யாகி கேள்வியென்பது வேள்வித் தீயாய் வளர்கிறது! வாய்விட்டுக் கேட்பதற்கும் கேள்வி என்றுதான் பெயர். காதாரக் கேட்பதற்கும் கேள்வி என்றுதான் பெயர். இதற்கிடையே நெஞ்சில் நிரந்தரமாய் நின்றுவிட்ட நெருடலுக்கும் கூடக் கேள்வியென்றுதான் பெயர்!

    புறவாழ்க்கை என்கின்ற பொன்னான வாய்ப்பு, அகத்தின் கேள்வியைத் தகர்க்கக் கற்றுத் தருகிறது. இந்த வாழ்க்கை என்னும் பள்ளியில் எதை வேண்டுமானாலும் கேட்கலாம்! எந்தப் புறமும், எந்தக் கணமும் சேதிகளும், பாடங்களும் — விழைவுள்ள இதயம் தேடித் ததும்பிக் கொண்டிருக்கும் இந்த அழகான, விசாலமான — வகுப்பு, மதிப்பெண் போன்ற வம்பில்லாத பள்ளியில் நுழைந்து பார்க்கத்தான், இல்லையில்லை, கேட்கத்தான், தடையேது?!

    ***

    2. புலரிச் சேதிகள்

    ஓ! தெய்வீகக் காலையே!

    பறவைகள் கூடுவிட்டுப்

    பறக்கின்ற நேரம்

    உழைக்க விழிக்க வேண்டும் மனிதர்கள்!

    உயிரின் தேவைகள் நிறையவேண்டும்!!

    (ரிக்வேதம்:06:64:06)

    உஷையே! நீ புலர்கின்ற கணத்தை வசப்படுத்த முடியாமல் எங்கள் கவிதைகள் தோற்றன என்று கைவிரிக்கின்றன மறைகள். மையிருட்டிலே நீலச் சாம்பல் பூப்பது எந்தக் கணப்பின் சூட்டினால்? புலர்வு என்பது எந்தக் கணத்தின் நிகழ்வு? வெளியில் மட்டுமல்ல, நம்மிலும்தான் துயில் நீங்கி விழிப்பு நேரும் கணத்தை வகுக்க முடியுமா? வெளியே பூட்டு; உள்ளே சாவி; இதுதானே வைகறையின் நித்தியப் பரிகாசம்?! விழித்தால்தானே உறங்கியது புரிகிறது? அம்பலத்தில் ரகசியத்தை வைத்து வேடிக்கை பார்க்கிறது படைப்பு!

    ஆக, அதிகாலை, எந்தக் கேள்விக்கும் பதிலல்ல, புதிருமல்ல. அது விடிவு. அதைத்தான் தரிசனம் என்று கொண்டாடுகின்றன வையத்து வாழும் உயிர்கள்.

    காலை புலரும் கணம் நமக்குத் தெரியாதுதான். உறங்காமல் விழித்திருந்து பார்த்தாலும் அந்தக் கணம் கண்ணுக்குத் தென்படாதுதான். ஆனால், பறவைகளுக்கு இந்த ரகசியம் தெரிந்திருக்கிறது. கூடுகளில் துவங்கும் சலசலப்பும், புலரியின் முதற்கணமும் பொருந்துகின்றன. ஆனால், காடுகளில் ஒரு பொய்ப்புலரி உண்டு. விடியல் நேராமலேயே வானில் வெளிச்சம்போல் ஒன்று தோன்றுவதைக் கண்டு பறவைகள் குரல்தூக்கும். மீண்டும் இருள் வந்துவிடும். வெட்கிய புள்ளினம் மார்பின் இறகுகளுக்குள் முகத்தை இறுகப் புதைத்துக் கொள்ளும். எது எப்படி இருந்தாலும், பறவைகளுக்குப் பகலவன் வரவு முன்கூட்டியே தெரியும். தங்கள் சின்னஞ்சிறு நெஞ்சங்களிலிருந்து உயிரைக் கானமாய்க் கரைத்துப் பாடும் பறவைகளின் குரல்கேட்கவே கதிரவன் எழுந்து வருகிறான் என்றே சொல்லத் தோன்றும்.

    கதிரவனின் முதற்கிரணங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவை, முதலில் உயிரை வருடிப் பிறகே உடலைத் தொடுகின்றன, மழை போல! கட்டிடங்களும் தூங்குகின்றன என்பது அந்தத் தருணத்தில்தான் தெரிகிறது! மரங்கள், இமையுயர்த்திக் கிழக்கைப் பார்க்கின்றன. மொட்டு, முகையவிழ்ந்த உல்லாசத்திற்குப் பனிமுத்தம் பெற்று, அழகில் ஆயாசம் சேர்த்துக்கொள்கிறது. குடிசையிலிருந்து எழுந்து நிற்கும் புகை, கொடியசைப்பாய்ப் படுகிறது. சேவலின் கூவலில் சேதி தெரிந்த கர்வம் இருக்கிறது. வைகைறை மர்மம் எனக்குத் தெரியும் என்றுதான் அது மார்புயர்த்திச் சிறகுகளை அடித்துக்கொண்டு, சிவந்த கண்களால் பார்க்கிறது. களைத்த அலைகள் கரையில் தொப்பென்று விழுகின்றன. கடலின் நட்ட நடுவில் தங்கப் பாதை தோன்றுகிறது; அது வெள்ளிச் சரிகையாவதற்குள் கட்டு மரங்கள் நெடுந்தூரம் சென்றுவிடுகின்றன. சில, திரும்பி வருகின்றன. மண், சற்றே வியர்த்ததுபோலிருக்கிறது. எருமைகள் வால் விசிறிக் கொண்டிருக்கின்றன. கொசுக்கள் தூங்கப் போயின. ஏதோவொரு சேதியுடன், வீதியில் நுழைகிறது காற்று. நோயாளிக்கு ஒவ்வொரு நாளும் இதுதான் உயிருக்கு ஒத்தடம் தரும் மருந்துக் கணம். இரைதேடப் பறக்கும் முன், எல்லாப் பறவைகளும் உற்றுப் பார்க்கின்றன கிழக்கை. பிறகு, நேற்று மாலை விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடங்குகின்றன. வயசாளி, திண்ணையில் அமர்ந்து வாழ்க்கையைப் பார்க்கிறார். ஓ! நினைவில் நீந்தவும் வெளிச்சம் தேவைப்படுகிறது!

    மேலுலகிற் தான்பிறந்த

    வானுலகின் வண்ணமகள்

    வரும்போதே இருள்விரட்டி

    வருகின்றாள்!

    ஆழ்துயிலில் புதைந்திருக்கும்

    மானுடரை எழுப்புகிறாள்!

    தேசு மிகுந்த தன்

    தெளிவழகால் இவள்

    துன்ப இருளைத்

    தொலைக்கக் காணுகின்றோம்

    உறுத்தும் இருளை

    ஊடுருவி ஊடுருவி..

    (ரிக்வேதம்:07:41:07)

    காலை வரும்போதே, துயிற்சுருளில் தொலைந்துபோன மனம், மறுபடி மேலே வருகிறது. காலை என்ற ஒன்று இல்லையென்றால், உலகத்தில் வேலை இல்லை. ஏன், வாழ்க்கையே இல்லை. உடம்பில் உயிரும், சித்தத்தில் பிரக்ஞையும் காலையின் கொடைகள். அறிவு, கதிரவனின் ஈகை. காலை இல்லாமல் காட்சி எங்கே? காட்சி இல்லாத ஓர் உலகத்தைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. உயிரின் நடப்பே உலகத்தின் நடப்பு. அந்த உயிரின் ஒளி, காலையிலிருந்தே பெறப்படுகிறது.

    நிதானமாய் விரைக! இந்த மர்மம் பொலிந்த திறமை, விடியலுக்கு இயல்பு. அதோ, அந்தப் பட்டிக்காட்டுக் குரலைக் கேளுங்கள்:

    ஓர முள்ளுக் காட்டுக்குள்ள

    ஒத்தக் குயில் கூவையிலே

    நெட்டுக்குக் கெழக்குப்பக்கம் செவக்கும்! பொழுது

    நிமிசம் நிமிசமா விடியும்..

    ஆம், ஒவ்வொரு நிமிடமும் தலைப்பு மாற்றிக் கொள்கிறது வானப் புடவை. மஞ்சள், வெண்மையாய் மாறுவதற்குள் முடிந்து விடுகிறது சூக்குமம். அதன்பிறகு தொடர்ந்த வெள்ளோட்டமே! ஒவ்வொரு நாளும் புதிதாய்த் தெரிவதற்கும், ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையின் வாசகமாய் மானுடம் எதிர்நோக்குவதற்கும், காலையின் உயிரொளியே காரணம். நேற்றைய பிரச்சினைகள் இன்று இல்லாமற் போவதில்லை. ஆனால், நேற்று தோன்றாத தீர்வுகள் இன்று துளிர்க்குமென்ற நம்பிக்கையைக் காலைதானே தருகிறது! நிகழ்ந்த துயரம் அப்படியே இருக்க, நேர்ந்த சுமைமட்டும் விலகிவிடக் காரணம், வைகறையின் ஆதுரக் கரங்கள்தான்! இன்றிலிருந்து எல்லாம் சரியாகி விடும் என்று தினமும் நமக்குத் தோன்றுவது, அறிவாலோ, ஆருடத்தாலோ அல்ல, அனைவருக்கும் பொதுவாய், அனைத்துக்கும் ஏதுவாய், நடுவானில் சுழலும் ஒளித்திகிரியன்றோ காரணம்! புதிய துவக்கம் என்ற எதிர்பார்ப்பை, சாத்தியத்தை ஏற்படுத்துவது கண்வழியே நுழைந்து உயிரில் விளக்கேற்றும் சூரியனின் அருளன்றோ! எத்தனை யுகங்களாய் இந்தக் கதிரவன் கணம்பிசகாமல் கீழைத் திசையிலிருந்து கிரணங்களை விரித்தபடி எழுகிறானே! இது, புதுமையா, பழமையா?

    எது உயிருக்கு விசைப்புத் தருகிறதோ, எது உள்ளத்திற்கு ஊக்கம் வழங்குகிறதோ. எது கண்களுக்கு வெளிச்சம் இடுகிறதோ, எது நம்பிக்கைக்கு ஆதாரமாய் விளங்குகிறதோ அந்தப் பழமைதான் புதுமை! நம்மை எதெல்லாம் பலவீனப்படுத்துமோ, அவையெல்லாம் அப்புறப்படுத்த வேண்டிய பழமை.

    இப்படிப்பட்ட அற்புதக் காலையை, இன்பச் சேதிகளாக அள்ளித்தரும் கோலவெழிலைக் காணாமல் அனாதைப் பிணம்போல் துப்பட்டியில் தலைமூடிக்கொண்டு படுத்திருக்கலாமா? பறவைகளும், பாமரரும் காலை என்னும் எழிலோவியத்தின் அங்கங்களாகவே திகழ்கிறார்கள். இந்த அறைகூவலெல்லாம் ‘அனைத்தும் அறிந்த’ நமக்கே!

    காலைக் கவிதையை

    காக்கை ரசிக்கிறது

    என்று ஊசிகுத்துகிறார் கவிஞர் இலந்தை ராமசாமி.

    எழுக மன்னுலகே! எழுக மானிடமே! கடலில் குளித்தெழுந்த உஷையின் ஒப்பற்ற பேரெழிலைக் காணுமினோ! கண்ணில் தென்பட்ட கிரணங்கள், காலைப் பனியைக் கவர்ந்துகொள்ளும். உயிரில் நுழைந்த கதிர்கள், உள்ளத்தின் இருளை விலக்கும்.

    வாழ்க்கையென்னும் பள்ளியிலே காலைதான் முதல்மணி!

    *************************

    3. காக்கை குருவி

    காவென்று கத்திடுங் காக்கை – எந்தன்

    கண்ணுக் கினிய கருநிறக் காக்கை

    (பாரதியார்)

    கருப்பு கண்ணுக்கினிமையானதற்குக் காரணம் காக்கைதான். கண்ணன் நினைவு பிற்பாடு வந்ததுதான்! ‘காக்கை குருவி எங்கள் சாதி,’ என்று கவிஞர் மார்தட்டுவது சரிதான். இவையிரண்டும்தான் வீட்டுப் பறவைகள். என்றால், இவற்றை நாம் வளர்ப்பதில்லை. மாறாக, நம் வாழ்க்கைக்கு அவை எழில் சேர்க்கின்றன. கோழி, தின்பதற்காகத் தீனிபோட்டு வளர்க்கப் படுவது; மைனாவுக்கோ நமக்கு நாகரிகம் போதாது என்பதாக ஓர் அபிப்பிராயம் இருக்கிறது. அது பலகுரல்களில் நம்மைப் பற்றி வம்பளப்பதை நான் கேட்டிருக்கிறேன். எப்போதோ குறுக்கே கிரீச்சிட்டுப் பறக்கின்ற கிளிகளோ நம்மை ஒரு ஜந்துவாகக் கூட மதிப்பதில்லை. இரட்டைவால் கருங்குருவி மின்சாரக் கம்பத்தை விட்டு இறங்கினால் அது விட்டில் பூச்சியைப் பிடிப்பதற்காகத்தான். எழுத்து மறையும் அந்தி நேரத்தில் வானில் இங்குமங்கும் அது பாய்ந்து பாய்ந்து பறப்பதைப் பார்த்திருக்கிறீர்களோ? நம் கண்ணுக்குப் பறவையே தெரியாது, அது கொத்திக்கொள்ளும் பூச்சியா தென்படப் போகிறது?! இவற்றில் எந்தப் பறவையும் வீட்டுக்குள் நுழைவதில்லை.

    காக்கையும், குருவியும்தான் நம்மோடு வாழ்பவை. காவல் நாயும் சரி, தெருநாயும் சரி, யார் வந்தாலும் குரைப்பது போல், இந்த இரண்டு பறவைகளும் அப்படித்தான். நகரங்களில், நம்மை எழுப்புவது சேவலல்ல, காக்கைதான். எழுந்தவுடனேயே அது காட்டும் பரபரப்பைப் பார்த்தால் இது எப்படித் தூங்கும் என்றே கேள்வி எழுகிறது. எஃகு அலகு; எண்ணெய்ப் பளபளப்பு. நான்கு வயதில், காக்கை-வடைக் கதையை எனக்கும் சொன்னார்கள். வீட்டிலே வடைபோட்டிருந்தார்கள். ஒருகையால் எப்போதும் முரண்டுபிடிக்கும் அரைநிஜாரைப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையில் வடையை ஏந்தி ‘கா..கா..’ என்று கூவியதும் அலகால் அது தோள்பட்டையில் ஒரு கொத்துக் கொத்தி வடையைக் கவ்விக்கொண்டு பறந்தது. வெகுநாட்களுக்கு அந்த விழுப்புண் தோளில் இருந்தது. ஆனால், எனக்குக் காக்கை மீது எந்தக் கோபமும் கிடையாது.

    ஏதாவது கொடுப்பதாயிருந்தால் அதை விட்டுவிட வேண்டும்; கையில் வைத்துக்கொண்டு கூவுவது கொடுத்ததாகாது, அது அநாகரிகம் என்பதுதான் வாழ்க்கை என்னும் பள்ளியில் நான் கற்ற முதற்பாடம். அதைக் காக்காய்தானே சொல்லித் தந்தது!

    இப்போதெல்லாம் அதற்கு வீட்டில் விசேடமான ஏற்பாடு. எவர்சில்வர் தட்டொன்றை இரும்பு வளையத்தில் இறுகச் செருகி வைத்திருக்கிறது; அடுத்தொரு சின்ன வளையம். அதில் ஓர் அகலக் கிண்ணத்தில் தண்ணீர் வைத்திருக்கிறது. கூவவெல்லாம் வேண்டியதில்லை. நாம் தட்டின் அருகே வருவதை ஆயிரம் கண்கள் பார்க்கின்றன. காக்காய்க்கு அரைப்பார்வையா, யார் சொன்னது? ராமாயணத்தில் வரும் அசுரனுக்கும், எம்மோடிருக்கும் வன்னக் காக்கைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. நேரம் தாமதமானால், நேரே வந்து தட்டைத்தட்டும். காலைப் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தோமானால், நம்மை ‘என்ன இன்னும் ஒண்ணும் காணும்? காப்பி மட்டும் சரியாய் நடக்கிறதோ?’ என்பதுபோல் பார்க்கும். உடனே உள்ளே சென்று அதற்கென்றே தினந்தினமும் வாங்கிவைக்கும் ரொட்டியைத் துண்டுதுண்டுகளாகச் செய்து போடுவோம். ஒவ்வொரு காக்கையாய்த்தான் தின்கிறது, நான்கைந்து சேர்ந்து வந்தாலும். இடநெருக்கடி மட்டுமன்று, இதில் அழகான முறைமை ஒன்றிருக்கிறது. சில, ஒரு துண்டோடு ஓடிவிடும். இன்னும் சில, ஒவ்வொன்றாய்ப் பல துண்டுகளை அடுக்கிக்கொள்ளும்! ஆனால், ஒவ்வொரு காக்கையும் ரொட்டித் துண்டை, பக்கத்திலிருக்கும் கிண்ணத்துத் தண்ணீரில் நனைத்து மென்மைப்படுத்திக்கொண்டுதான் பறக்கும்! அவ்வப்போது, தட்டையும், கிண்ணத்தையும் கழுவிப் பளபளவென்று வைத்தால், காக்கைக்கு மகிழ்ச்சியுண்டு.

    மாடத்தில் உட்கார்ந்தபடி, ஏதேனும் கொஞ்சம் கொறித்தபடிக் காப்பி அருந்தும்போது, வந்து கிராதியில் உட்கார்ந்து, கழுத்தைச் சாய்த்து ஏக்கமாய்ப் பார்க்கும். அப்புறம் என்ன? 60% அதற்கு, மிச்சம் நமக்கு! பின்புறச் சுவர் அவை வரிசையாய் உட்கார வாகாயிருக்கிறது. அங்கே சிறப்பு என்னவென்றால், என் மனைவியின் கையிலிருந்து நேரே வாங்கித் தின்னும். அவளிழுக்க, அதுவிழுக்க பார்க்கவே சுவாரசியமாக இருக்கும். சிலநேரம், வெறும் ரொட்டிதானா என்று போராட்டம் நடத்தும். வேறெதாவது கொண்டுவந்தபின்தான், மறுபடி ரொட்டியைத் தொடும். சாதமும், பருப்பும், நெய்யும் கலந்துவைத்தால் காக்கைக்குப் பிடிக்கும். நெய் ரொம்பப் பிடிக்கும். ஆளில்லாத நேரத்தில், உணவு மேசை மீது வைக்கப்பட்டிருக்கும் நெய்ப் பாத்திரத்தை லாகவமாகத் திறந்து நெய்யுண்டு மகிழும்!

    ரொம்ப நாளாக ஒரு நொண்டிக் காகம் வீட்டுக்கு வந்துபோகும். அதற்கு மற்ற காகங்கள் சிரத்தையோடு பணிவிடை செய்வதைப் பலமுறை கண்டு அதிசயித்து நின்றிருக்கிறேன். என்னால் மறக்க முடியாத காட்சியது.

    கூடுகட்டிவிட்டால், காக்கைக்குக் குணம்மாறிவிடுகிறது. நம்மைக் கண்டாலே பிடிக்காமல் போகிறது. உணவெடுக்கும் போதும் முரட்டுத்தனமாகவே இருக்கிறது. நாம் வெளியே வந்தாலே, கூட்டைக் கலைத்து விடுவோம், குஞ்சுகளைக் கொன்றுவிடுவோம் என்று சந்தேகம் கொண்டு, பயங்கரமாகக் கூச்சலிடுகிறது. அலகால், இப்படியும் அப்படியும் மரத்தைக் கொத்திக் கோபத்தை வெளிப்படுத்துகிறது. தாயின் உணர்ச்சிகளை, பரிதவிப்பைக் காக்கை மூலம்தான் புரிந்துகொண்டேன். அந்த நேரங்களில் மொட்டை மாடிக்குப் போவதானால் ஹெல்மெட் அணிந்துகொண்டு செல்வதே நலம்! பருந்துக்கும் பேறுக்காலம் அதுதான் போலும்; அதுவும் தலையில் கொத்தத் தயங்குவதேயில்லை!

    ‘ஏன் இந்தப் பறவைகள் எல்லாம் அழகில்லாமல் இருக்கின்றன?’ என்பது காக்கையிடம் பொதுவாயிருக்கும் கேள்வி. அது எந்தப் பறவையையும் விரட்டுவது, பேட்டைத் தகராற்றினால் இல்லை. அழகுணர்ச்சிப் பிரச்சினைதான்! சும்மா இல்லாமல் கழுகை விரட்டக் கிளம்பிவிடும். கழுகு, உருவத்திலும், வலுவிலும் பெரியது என்றாலும், காக்காயைத் திருப்பித் தாக்காது. ஏனென்றால், காக்கை, கூட்டத்தோடு வரும். ஒரு பெரிய ரெளடிக் கும்பலைச் சமாளிக்கும் வலிமையெல்லாம் கழுகுக்குக் கிடையாது. காகமோ விடாமல் துரத்தும். கழுகென்ன செய்யும்? வட்டமிட்டு வட்டமிட்டுப் பறந்து மெல்ல மெல்ல, ஒவ்வொரு வட்டத்திற்கும் கொஞ்சம் உயரத்தை ஏற்றிக்கொண்டே செல்லும். அவ்வளவுதான்! ஒரு கட்டத்தில், தலைசுற்றிப்போய், உயரத்திலிருந்து காக்கை பறக்க முடியாமல் அந்தரத்தில் பல்டியடித்துக்கொண்டு விழும். கிட்டத்தட்ட மோதிச் சுக்குநூறாகிவிடும் தருணத்தில் எப்படியோ சமாளித்துக்கொண்டு, ஏதாவதொரு மரக்கிளையில் உட்கார்ந்துகொண்டு, மலங்க மலங்க முழித்தபடிக் கொஞ்சநேரம் இருக்கும். இதேபோல், அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு நடுவில், காற்றழுத்த மாற்றங்கள் உள்ள இடங்கள் உள்ளன. பறந்துவரும் காக்கை அங்கே சிக்கிக்கொண்டு தலைகுப்புற விழும்! எப்படியோ சமாளித்து விடுவதுதான் காக்கை கற்றுக் கொடுக்கும் சாமர்த்தியம்.

    காக்கைக்கு இயற்கையில் மரணமில்லை, விபத்தால்தான் சாகும் என்பார்கள். மூக்குச் சளியிலிருந்து முந்திரிப்பருப்புவரை எதையும் தின்னமுடிகிற காக்கை எப்படிச் செத்துப்போகும் என்று யோசனை நமக்கும் வருவதுண்டு. அண்டங் காக்கையைக் காட்டி அதுதான் கிருதயுகத்துக் காக்கை என்பாள் பாட்டி. கதைதான், ஒத்துக்கொள்கிறேன். ஆனால், இந்த வாழ்க்கையில் கதைதானே நம்பும்படியாக இருக்கிறது! பத்ரிநாத் 10,000 அடிவுயுரத்தில் இருக்கிறது. அங்கே காக்கைக்குக் காலும் அலகும் மஞ்சளாக இருக்கிறது. ஏன், கயிலை மலையருகே 16,000 அடிவுயரத்தில், அண்டங்காக்கைகளைக் கண்டிருக்கிறேன். சற்றே குரல் கம்மியிருக்கும் அவற்றின் இறக்கைகள் விசேடமாக இருக்கின்றன.

    ‘கொர்ர்ர்ர்’ என்றவொலி குறட்டைச் சத்தத்திற்கு மட்டுமல்ல, காக்கைக்கும் உண்டு. பள்ளியில் படிக்கும்போது இதை அறிந்தேன். ஓடுபோட்ட வகுப்பு; அதை ஊடுருவித் தாக்கும் உச்சி வெய்யில்; அப்போதுதான் உண்டு முடித்த புளிப்பான மோர்சாதம்; வகுப்போ தமிழிலக்கணம். வாத்தியார் வினையாலணையும் பெயர் என்னும்போது பக்கத்து மரத்திலிருந்து காக்காய் ‘கொர்ர்ர்ர்’ என்று ஒலியெழுப்ப, பெஞ்சே அணையாய் உறக்கம் நம்மை அணைக்கும். தாய்க்காகம் எத்தனை ஊட்டினாலும், போதாது குஞ்சுகளுக்கு. அவை இரைவேண்டிக் கத்தும்போது ஒரு சத்தம்; தாய், இரையை மசித்து வாய்க்குள் திணிக்கும்போது வேறொரு விதமான சத்தம். சில காகங்கள், நாயனக்காரர் சீவாளியைப் பரிசோதிப்பது போலும் சத்தம் எழுப்புவதுண்டு.

    மண்ணகலில் நல்லெண்ணெய் விட்டுத் தீபமேற்றியிருப்பார்கள். திருட்டுக் காக்காய், நனைந்த திரியைத் தூக்கிக்கொண்டு போய்விடும்! அதேபோல் பெரிய வாணலியில், கொதிக்கும் எண்ணெயில் முறுக்கு பொள்ளும்போது கொத்திச் சென்ற அதிசூரக் காக்காய்களையும் கண்டிருக்கிறேன்.

    காக்காய் இருந்தால் என்னைத் தனிமை கொல்லாது. அதற்குத் துக்கம் கிடையாது. எனவேதான் அதன் அணுக்கம் என் அமைதிக்குத் தோதாக இருக்கும். ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்,’ என்னும் தத்துவத்தைக் காகமல்லவா சொல்லித் தருகிறது! காக்காய்ப் பள்ளிக்கூடம் எல்லா ஊரிலும் பார்க்கும் காட்சிதான். ஆனால், பாடம் நமக்குத்தான். ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதுதான் பிரபஞ்சத்தின் பெரிய சேதி என்றாலும் நாம் கூடி வாழ்வதில்லை. காக்கைகளிடம், சின்னச் சச்சரவுகள் உண்டு, சண்டை கிடையாது. அவர்களில் ஒன்றிறந்தால், அவை கூடி எழுப்புகின்ற ஓலம், நம் கண்ணைத் திறக்கவேண்டும். எப்படிப் பதறுகின்றன தெரியுமா?

    தினந்தினமும் எனக்குப் பாடம்சொல்லி என்னைப் பக்குவப்படுத்தும் காகங்களில் ஒன்று மின்சாரம் தாக்கிக் கம்பியில் சிக்குண்டு கிடப்பதுதான் கோரமான காட்சி.

    சிட்டுக் குருவிகளை இப்போது காணவே முடிகிறதில்லை. அடுக்குமாடி, கேபிள் டி.வி. என்று அவை காணாமல் போனதற்குக் காரணங்கள் பல சொல்கிறார்கள். ‘சின்னத் தோகை, துளிக்கால்கள்,’ என்று பரவசம் கொள்ளும் பாரதி, சிட்டுக்குருவிதான் விடுதலையின் சின்னம் என்று கண்டு பாடியிருக்கிறார்.

    சின்ன வயது ஞாபகமொன்று. கிணற்றுச் சுவரில் ஒரு கணம் அமர்ந்திருக்கும்; மறுகணம் ஜிவ்வென்று கிணற்றுக்குள் குதித்துவிடும்; ஐயோ என்று பதறிக் குனிந்து பார்த்தால், தண்ணீரைத் தொடும் கணத்தில் விசுக்கென்று சிறகுகளை விரித்து, பூச்சியைக் கவ்விக்கொண்டு, கணப்பொழுதில் மேலே வந்துவிடும்! காக்கைக் கூட்டில் முள்ளிலிருந்து, சட்டை மாட்டும் ஹேங்கர் வரை எல்லாவற்றையும் பார்க்கலாம். குருவிக்கூடு சொகுசு மெத்தை! வைக்கோல், புல், பஞ்சு என்று ஏதெல்லாம் மென்மையோ அவற்றைக் கொணர்ந்து வனையும். இல்லையில்லை, அது எதைக்கொண்டு வந்தாலும், அதன் அலகு பட்டு மிருதுவாகிவிடும்! ஆண்குருவிக்குக் கண்ணில் மையிட்டது போலிருக்கும். பெண்குருவியின் இறகுகளில் புள்ளிக்கோலமிருக்கும். முன்பெல்லாம் அரிசிமாவால், வாசலில் கோலம் போடுவார்கள். குருவிகள் கூடிவந்து அதைத்தின்னுவதே அழகுக் கோலம்! அரிசி பிடிக்கும்; நெல்பிடிக்கும்; வெந்த சோற்றை விரும்பித் தின்னும். அதன்பின் இருக்கவே இருக்கின்றன புழுக்கள், பூச்சிகள்.

    மின்சார மீட்டருக்கு மேல் செருப்போடு வரும் அட்டைப் பெட்டியில் கதவு செய்து, உள்ளே துணி, பஞ்சு எல்லாம் சேர்த்து அதற்கு வீடு செய்திருப்போம். அதுவும் கச்சிதமாய் வாழும். அது மின்விசிறிக்கு மேலுள்ள கிண்ணத்தில் கூடுகட்டி, விசிறியில் அடிபட்டுச் சாவதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு. குருவிக் குஞ்சை மட்டும் பார்க்கவே சிரமமாக இருக்கும். இந்த ஜீவன் எப்படிப் பிழைக்கும் என்பது போல் தள்ளாடும் சின்னச் சதைத்துண்டாயிருக்கும். கொஞ்சநாள்தான்! பிறகு திடீரென்று பெரிதாகிவிடும். அம்மா, பறக்கக் கற்றுத்தரும் அழகே அழகு. வார்த்தையால் சொல்லும். நாலெட்டு முன்னும் பின்னும் நடந்து காட்டும். சற்றே பறந்து வந்து, இவ்வளவுதான் என்கும். அப்படியும் தயங்கும் குஞ்சைத் தள்ளிவிட்டுவிடும்!

    எனக்கு அணிலிடம் பிடிக்காத ஒரே விஷயம், அது குருவிக் கூட்டுக்குள் புகுந்து முட்டையைத் திருடிக்கொண்டு போய்விடுவதுதான். குருவிகள் பாவம், குய்யோ முறையோ என்று கத்தும். ஆனால், குஞ்சைக் கவ்விக் கொண்டு பறக்கின்ற காக்கையைத் தாயும் தந்தையும் ஆத்திரத்தோடு துரத்துவதைக் கண்டு மலைத்துப் போயிருக்கிறேன். உயரமும் எடையுமா வலிமை? வீரமும், வலிமையும் நெஞ்சில் இருப்பன, எதிர்க்கத் தயங்கவே கூடாது என்பதை எனக்குக் குருவிகளே சொல்லித் தந்தன. நமக்கென்ன ஆகிவிடுமோ என்ற எண்ணம் வந்துவிட்டால், பிறர்க்குத் துணைக்குப் போவது என்பது நடக்கவே நடக்காது.

    பிறக்கும் முன்னிலிருந்தே ஒவ்வொரு கணமும் ஆபத்து மயமாயிருக்கும் அவற்றின் வாழ்க்கை. ஆனால், ‘தின்று விளையாடி இன்புற் றிருந்து வாழ்வீர்,’ என்பதை எனக்குக் காக்கையும் குருவியுமே சொல்லித் தந்தன.

     

    Share
  • திருமால் திருப்புகழ் (88)

     

    கிரேசி மோகன்

    Trivikrama. Thiruvona Aashamsagal. Keshav
    Trivikrama. Thiruvona Aashamsagal. Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————-
    ’’கண்ணன் அந்தாதி’’
    ———————————–

    Gitamrita - the milk of the Upanishads called the Gita churned into Gnana/Bhakti (watercolour) Keshav
    Gitamrita – the milk of the Upanishads called the Gita churned into Gnana/Bhakti (watercolour) Keshav

    தீயிருந்து வேள்வித் தவமியற்றும் ஞானியர்,
    வாயிருந்து வந்தநால் வேதங்கள், -போயிருந்த,
    ஆழியுள் மச்சமாய், அன்றெடுத்த அச்சுதா,
    நாழிகைப் பொழுதென்னுள் நீந்து….(46)

    நீந்தித், தவழ்ந்து, நடந்துவிரைந்(து), ஓடி
    ஏந்தினாய் வேடங்கள், எத்தனை, -சாந்தி
    உனக்களிக்க வெண்பாவில், உட்கார்நீ ஓய்வாய்,
    எனக்களிப்பாய் வேலை எழுத்து….(47)

    எழுத்தில் பிழையிருந்தும், ஏற்றுக்கொள் கண்ணா,
    வழுத்த வழியறியேன் வேறு, -பழுத்த,
    கவியாக்கி(டு) என்னை, குறையொன்றும் இல்லாப்,
    புவிவாழ்வை கோவிந்தா போடு….(48)

    போடும் அவதார வேடங்கள் பத்தையும்,
    ஏடு வழியறிந்(து) ஏத்துகிறேன், -பாடிய,
    ஆழ்வார்கள் கற்பனையா! அல்ல நிஜம்தானா!
    பாழ்வாய் அடைப்பாய் பிறந்து….(49)

    பிறந்து புவியில்,பிருந்தா வனத்து,
    விருந்தைப் பறிமாற வாராய், -மறந்துபோய்,
    எங்குநீ தோன்றினும், ஏழைநான் ஏங்கிடும்,
    மந்தை வெளியதற்கு முந்து….(50)

    ———————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/

    Share
  • பரமகுரு பஞ்சகம்

    இசைக்கவி ரமணன்

     

    600_77363862

     

    சற்றுமெனை விலகாத வெட்டவெளியே! துளியும்
    தன்மை மாறாத களியே!images (2)
    சந்தடிமி குந்தவிடர் த்வந்தமெனும் சந்தையினில்
    தந்தையென வந்த தயவே!
    முற்றுமெனைப் பற்றும்வினைக் கற்றையினை ஒற்றைவிரல்
    இற்றுவிழச் செய்த விடிவே!
    மூலையி லிருந்தவனைச் சாலையினில் நடமாட
    முத்துரதம் தந்த நிதியே!
    அற்றுவிழும் அத்தனையும் வெர்றியெனச் சொல்லிவிழும்
    அற்புதம்நி கழ்த்தும் அருளே!
    அறிவுமறி யாமையென அலைபுரளும் அனுபவத்
    தடிநாத மான அழகே!
    உற்றுற்று நோக்கியே உயிர்மாற்றி உன்னையே
    உயிராக வார்த்த திருவே!
    ஒருநொடியும் உனதுதிரு வடிவழகை மறவாமல்
    உருகமனம் அருள்க குருவே!

    கத்துகட லாம்மனது கைகட்டி வாய்பொத்திக்Tamil-Daily-News-Paper_10747492314
    கண்களால் கவிபாடுதே!
    கசடுமிக வேமண்டி வசைகொண்ட என்சித்தம்
    காளாவி ளக்கானதே!
    புத்திதடு மாறிமலை யேறிமடு வீழ்ந்தகதை
    பொத்திச் சிரிக்கின்றதே
    புனைவான ஆணவமுன் புன்னகையின் சன்னலில்
    புகைந்துமணம் நீள்கின்றதே!
    மத்துகடைந் தேவெண்ணை தத்திவர மறவாமல்
    மொத்தமுமெ டுத்தகரமே!
    மணிவாயில் கொஞ்சமதை அணிபுரள வைத்துப்பின்
    மாந்தாமல் பார்க்குமழகே!
    பித்துக்கும் பக்திக்கும் சித்துக்கும் பேதைக்கும்
    பிரிவின்றிச் செய்தகுறும்பே!
    பின்னல் களைந்துபுதுப் பின்னலிடும் பம்மாத்தில்
    என்னசுகம் என்றன்குருவே!

    ஒருதுளியில் உயிராகி உருவாகி உடலாகிSO_155244000000
    ஓயாத துயரானதே
    ஒளியாகி இருளாகி மருளாகி உயிரெங்கும்
    ஒழியா அயர்வானதே
    கருவிலுயிர் நுழையுமுனர் இருந்தகதை காட்டினாய்
    கண்முன்பு படம்காட்டினாய்
    கதிகலங் கிச்சிதறி சிதிலமென நின்றவனைப்
    பற்றாமல் காத்தருளினாய்
    ஒருவாறு திருவிடியல் ஒழிவற்ற கடல்மீதில்
    புலர்வாகிப் பொழுதானதே
    ஒற்றையிழை யில்மொத்தம் பற்றியொளி யாய்மாறிக்
    கற்றைவி ரிக்கின்றதே
    அருளாளனே அன்பின் திருவாளனே! வேடம்
    அத்தனையும் புனையும் வேளே!
    அடியேனை ஆட்கொள்ளப் படியற்ற மலைநீங்கிப்
    படியேறி வந்தகுருவே!

    ஒருபோதும் மறவாத மனதும், அதன் மலைமடுவில்Om_-_Tamil
    ஒருசிறிதும் குறையாத நினைவும்
    ஒருதுளியும் மிஞ்சாமல் உருகுமுயிரும், கொஞ்சம்
    உருகும்நினை வான உணர்வும்
    இரவுபகல் அல்லாத இகபரமும் இல்லாத
    இடையில்நிலை யான நிலையும்
    இதயமலர் விளிம்பிலெழும் உதயத்தின் தறுவாயில்
    இசையாகும் மெளன நிலையும்
    ஒருநினைவு மறுநினைவு எனும்ஸ்ருதி விகாரங்கள்
    ஒட்டா தொழிந்த பேறும்
    ஒன்றுமே இல்லை நான் ஒன்றுமே இல்லையெனும்
    ஒருவிடிவின் கொடியேற்றமும்
    கருவபங்கங்களின் தலைநகர மானவுன்
    திருவடியில் கூடுமென்றே
    கணநேரம் கொண்டதாய் யுகநேரம் விண்டதாய்க்
    கண்ணீரில் நாணி நின்றேன்…

    தொலைவுநீ என்றெண்ணித் துயர்கொள்ள, தோள்தொட்டுத்
    தூவானத் தென்றலாவாய்
    தொட்டகரம் பற்றத் தொடுங்காலை ஏனோநீphoto
    தொடுவான மாய்ச்சிரிப்பாய்
    அலைகள்நீ என்றெண்ணி அயர்கையில் கால்களை
    அழகாய்ந னைக்கவருவாய்
    அந்தசுகம் மிஞ்சாமல் ஆழத்தைக் காட்டாமல்
    காட்டியெனை அயரவைப்பாய்
    சிலையில்நீ எங்கென்று கல்லாக நான்நிற்கச்
    சித்திரக் கண்சிமிட்டி
    சித்தத்தைச் சிலையாக்கி மொத்தத்தைக் கலையாக்கி
    சிங்கார மாக்கிவிடு வாய்
    மலையாவும் மலராகி மனம்யாவும் புலர்வாகி
    மல்லாந்தி ருக்கிறேன் நான்
    மறுபடியும் வீழுமொரு மழைத்துளியில் சிலிர்க்கவே
    மெளனத்தில் யுகங்கடந் தே!

    கண்டனன் என்றுவாய் கத்தவும் முடியாது
    கண்டிலன் என்பதும் பொய்
    கடல்தாண்டக்கடல்தாண்டக் கடல்மண்டும்பயணத்தில் கலமாக வந்தநீ மெய்
    விண்டனன் என்பதும் வீழ்ந்தனன் என்பதும்16702nk5_med-2
    விண்ணில்நி றம்போலப் பொய்
    வேதனையும்சாதனையும் போதனையும் இன்றியொரு
    வேடிக்கை பார்த்ததே மெய்
    கொண்டவித மறியாமல் கொள்ளைபோ குங்கதையில்
    கொண்டாட்டம் மிகவினிய பொய்
    கோயிலிலும் என்வீட்டுக் கொல்லைப் புறத்தும்நீ
    கூத்தாடி நிற்பதே மெய்
    உண்டவிதம் தெரியாமல் உண்டாலும் அமிழ்தாக
    உயிர்காக்கும் ஒற்றை மெய்யே!
    உண்மையெது பொய்மையெது ஒருசிறிதும் புரியாமல்
    உன்முன்பு நிற்கிறேனே!

    படங்களுக்கு நன்றி

    Share
  • காகுத்தன் கதை

    கிரேசி மோகன்

     

    சுமார் 25, 30 வருடங்களுக்கு முன்பு வாட்டர்-கலரில் வரைந்தது என்று நினைக்கிறேன்….பெரிய படம்….ஏ-4 ஸைஸில் ஸ்கேன் முடிந்தவரை செய்து இரண்டு பகுதிகளாக அனுப்பியுள்ளேன்….

    குறும்பா
    —————–
    மூக்கறுந்த சூர்பணகை ரோஷம்
    நாக்கிருந்தும் தடுக்காதோர் மோசம்
    மானானான் மாரீசன்
    மண்ணானான் லங்கேசன்
    காகுத்தன் கதை இதிகாசம்….கிரேசி மோகன்….

    மாயக்கண்ணன்

    crazy3crazr4

     

     

    Share
  • ’ரஷ்ய ஷேத்ரஸ்ய கம்யூனிஸ கோத்ரஸ்ய புஷ்டி காத்ரஸ்ய’’ நாரீமணிகள்

     

    கிரேசி மோகன்

     

    SUBJECT-ரஷ்ய LOVEத்ரம்
    ——————————————-

    எனது மாமனார் நாசிக் HAL FC ஆக இருந்தபோது….கல்யாணம் ஆன புதுசில்(ஆன வயசுக்கு பழசில்தான் சொல்லவேண்டும்) சென்றபோது அங்கிருந்த ரஷ்யன் -ஆர்ட் -கேலரியில் பேப்பர் பெயிண்ட் சகிதமாகச் சென்று ‘’ரஷ்ய ஷேத்ரஸ்ய கம்யூனிஸ கோத்ரஸ்ய புஷ்டி காத்ரஸ்ய’’ நாரீமணிகளை வரைந்தேன்….

    crazy 1

     

    crazy 2

     

     

    Share
  • மோடியின் வெற்றி!!!

     

    — நாகேஸ்வரி அண்ணாமலை

     

    Lok Sabha elections 2014 resultsதேர்தல் முடிந்து முடிவுகளும் வெளியாகிவிட்டன. பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. தனியாக ஆட்சி அமைக்கும் அளவிற்கு அந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. பா.ஜ.க. தலைவர் அத்வானி கூறியுள்ளது போல் பத்து வருடங்கள் ஆட்சியில் இருந்த காங்கிரஸின் ஊழல்களும் சோனியா-ராகுல் தலைமையில் நடந்த குடும்ப ஆட்சியும் நாட்டின் பொருளாதார மந்தமும் பா.ஜ.க. வெற்றிக்குக் காரணம் என்றே வைத்துக்கொள்வோம். விபரம் போதாத தன் மகனைத் தலைமைப் பீடத்தில் அமர்த்த முயன்ற சோனியாவைப் பதவியிலிருந்து இறக்கிய இந்தத் தேர்தலின் முடிவை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தாலும் மோடியின் வெற்றி இந்தியாவில் என்னென்ன விபரீதங்களை விளைவிக்குமோ என்பதை நினைக்கும்போது பயம் ஏற்படத்தான் செய்கிறது.

    சில நாட்களுக்கு முன் பத்திரிக்கையில் வந்த செய்தியின்படி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் நரேந்திர மோடி பிரதமராக வந்துவிடுவார் என்று நம்பி அவருக்கு மிகுந்த ஆதரவு அளிக்கத் தயாராகி வருகிறார்களாம். மோடிக்கும் அவருடைய சிறு வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்ஸில் அபார ஈடுபாடு உண்டு. அவருடைய இந்த ஈடுபாட்டை முழுவதுமாகப் பயன்படுத்தி நாட்டின் தலையெழுத்தையே மாற்றி எழுதலாம் என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். இத்தனை வருடங்களாக இந்திய முஸ்லீம்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சலுகைகளை நீக்கும் சட்டங்களையும் காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து அளிக்கும் சட்டத்தையும் அரசியல் சாசனத்திலிருந்து நீக்குவதோடு பாடப் புத்தகங்களில் இந்துக் கடவுள்களைப் பற்றி அவர்கள் நினைப்பதற்கு மாறாகக் கூறப்பட்டிருக்கும் விஷயங்களையும் முஸ்லீம் அரசர் அக்பரை அதிகமாகப் புகழ்ந்திருக்கும் பகுதிகளையும் மாற்றி எழுதுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணி அதற்காகத் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

    saiaustralia.orgஅரசியல் அதிகாரம் அவர்களுக்கு முக்கியம் அல்லவென்றும் இந்தியக் கலாச்சாரம்தான் உலகிலேயே சிறந்த கலாச்சாரம் என்றும் ஆரிய இனம்தான் மனித இனங்களிலேயே பெரிய இனம் என்றும் அகில உலகத்தையும் ஆரிய கலாச்சாரத்திற்கு மாற்றுவதே தங்கள் இலக்கு என்ரும் ஆர்.எஸ்.எஸ்சைச் சேர்ந்த ஒரு தலைவர் பேசியிருக்கிறார். இந்த இலக்குகளை அடைய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மோடி உதவுவார் என்றும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சமீபத்தில் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமெரிக்கப் பேராசிரியர் வெண்டி டோனிகெரின் (Wendy Doniger) புத்தகத்தை (The Hindus: An Alternative History) மேலைநாடுகளின் அச்சகங்களிலிருந்தும் தடைசெய்யப் போகிறார்களாம்! என்ன மடமை! எல்லாவற்றுக்கும் மேலாக ராமஜென்ம பூமியில் ராமர் கோவிலைக் கட்டியே தீரப் போகிறார்களாம்.

    பா.ஜ.க.வுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆர்.எஸ்.எஸ். செய்ய விரும்புவதை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததின் மூலம் சாதித்துக்கொள்ளலாம் என்று ஆர்.எஸ்.எஸ். செயற்பாட்டாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பே ஆர்.எஸ்.எஸ். செய்ய விரும்புவதை பா.ஜ.க. செய்யப் போவதாக தேர்தல் அறிக்கையில் கூறினால் தங்கள் வெற்றி வாய்ப்பு குறையலாம் என்று நினைத்த பா.ஜ.க. தலைவர்கள் அந்த மாதிரி விஷயங்களை ஒரு மூலையில் சேர்த்தார்களாம்.

    மோடி தன் தேர்தல் பிரச்சாரங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டங்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. குஜராத்தை எப்படி பொருளாதாரத்தில் முன்னேற்றினார் என்றும் அது மாதிரி இந்தியாவையும் முன்னேற்றிவிடுவார் என்றும் அதற்குரிய தன்னுடைய திட்டங்கள் பற்றியும் மட்டும் கூறியதோடு நிறுத்திக்கொண்டார். ஆனால் போகப் போக இந்திய நாட்டை ஒரு இந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற இவருடைய உள்நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டங்களை நிறைவேற்றத் தயங்க மாட்டர் என்று சிலர் பயப்படுக்கிறார்கள். அதிலும் இப்போது பா.ஜக.வுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைத்திருப்பதால் மோடியால் ஆர்.எஸ்.எஸ்ஸின் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்.

    மோடி தேர்தல் பிரச்சாரங்களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலகில் வளர்ந்துவிட்ட நாடுகளுக்குச் சமமாக உயர்த்தப் போவதாக வாக்களித்திருக்கிறார். அப்படி அவர் முயன்று பொருளாதாரம் முன்னேற்றம் கண்டாலும் அமெரிக்காவில் போல் ஏழை பணக்காரர்களுக்கு இடையே பெரிய பிளவு ஏற்பட்டு சமூகத்தில் சமத்துவமின்மை தோன்றலாம். இதுவும் சமூகத்தின் ஸ்திரத்தன்மையை பாதிக்கலாம். ஆனால் இதை விடப் பெரிய ஆபத்து அவர் ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டங்களை நிறைவேற்றினால் ஏற்படலாம். பெரும்பான்மை இந்துக்கள் வாழும் நாடு என்றாலும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற, பல இனங்கள் வாழும், பல மொழிகள் பேசப்படும், பல கலாச்சாரங்கள் நிறைந்த நாடு என்ற நற்பெயரை இழக்க நேரிடலாம். இந்த நிலை இந்தியாவுக்கு ஏற்படாமல் காக்கும் பொறுப்பு மோடிக்கு இருக்கிறது. இந்தப் பொறுப்பை உணர்ந்து அவர் அதற்கேற்றாற் போல் நாட்டை நடத்திச் செல்வார் என்று நம்புவோம்.

    படம் உதவி:  http://victoria.saiaustralia.org.au/bulletin/samadhi-13.pdf, http://victoria.saiaustralia.org.au/

    Share