நயாகரா நதியே!

-ரா. பார்த்தசாரதி 

AmericanFalls

நயாகராவே நீ  ஒரு  அருவியா?! நதியா?! நங்கையா?!

நதியையும் நங்கையையும் பற்றி எழுதாத கவிஞன் இல்லை!
நதியினைக்  காணவரும்  மனிதர்களும் ஜாதி மதம் பார்ப்பதில்லை! 

இறைவன்  படைத்த கவிதை  மனிதன்தானே?
மனிதன் படைத்த  கவிதை…நதியும், நங்கையும் தானே!   

மேகம் போன்ற மேனியும் இளமைகொண்ட  நங்கைபோலே
மலைமேடு பள்ளம்மூடி ஓடுகின்றாய்  நாணத்தினாலே!

நதியே நீயும் ஒரு பெண்தானோ?
அருவி  எனும்  கூந்தலையும் எழிலையும் காட்டுவதும்  ஏனோ?

நதியே!  நீ அருவியாய்  நின்று  புன்முறுவல் பூக்கின்றாய்!
நாடி வரும் மனிதனின்  மனதில் ஓர்  தேனருவியாய்  வீழ்கின்றாய்!

நதியே  நீ  நடந்தால்  நங்கை!  குனிந்தால்  குமரியல்லவா!
எல்லோர்க்கும் என்றும் நீ ஒரு தாய் அல்லவா!

நதியே  நீ  அருவியாய் விழுந்து நதியாய் ஓடிக் கடலில் கலக்கின்றாய்!
நங்கையின்  பிறவியோ என்றும் பாசத்துடன் வாழ்வில்  கலக்கின்றாள்!

நதியே நீ  உன்  ஓட்டத்தால்  ஒளி  தருகின்றாய்!
நங்கையோ வாழ்க்கை எனும் நதியில் ஒளி பெறுகிறாள்!

நதியே நீ உறவை நாடிக் கடலில் கலக்கின்றாய்!
நங்கையோ ஓர்  உறவைத்  தேடி  மனதில் கலக்கின்றாள்!

வெண்ணிற ஆடையணிந்து வானவில்லை  ஏந்தி நின்றாய்!
நீலநிற ஆடை அணிந்த  மனிதர்களுக்கு மட்டற்ற  மகிழ்ச்சி  தந்தாய்!

ஆம்,  நயாகரா  நதியே  என்றும் நீ  ஒரு  நங்கைதான்!       

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *