திருமால் திருப்புகழ் (88)
கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————-
’’கண்ணன் அந்தாதி’’
———————————–
தீயிருந்து வேள்வித் தவமியற்றும் ஞானியர்,
வாயிருந்து வந்தநால் வேதங்கள், -போயிருந்த,
ஆழியுள் மச்சமாய், அன்றெடுத்த அச்சுதா,
நாழிகைப் பொழுதென்னுள் நீந்து….(46)
நீந்தித், தவழ்ந்து, நடந்துவிரைந்(து), ஓடி
ஏந்தினாய் வேடங்கள், எத்தனை, -சாந்தி
உனக்களிக்க வெண்பாவில், உட்கார்நீ ஓய்வாய்,
எனக்களிப்பாய் வேலை எழுத்து….(47)
எழுத்தில் பிழையிருந்தும், ஏற்றுக்கொள் கண்ணா,
வழுத்த வழியறியேன் வேறு, -பழுத்த,
கவியாக்கி(டு) என்னை, குறையொன்றும் இல்லாப்,
புவிவாழ்வை கோவிந்தா போடு….(48)
போடும் அவதார வேடங்கள் பத்தையும்,
ஏடு வழியறிந்(து) ஏத்துகிறேன், -பாடிய,
ஆழ்வார்கள் கற்பனையா! அல்ல நிஜம்தானா!
பாழ்வாய் அடைப்பாய் பிறந்து….(49)
பிறந்து புவியில்,பிருந்தா வனத்து,
விருந்தைப் பறிமாற வாராய், -மறந்துபோய்,
எங்குநீ தோன்றினும், ஏழைநான் ஏங்கிடும்,
மந்தை வெளியதற்கு முந்து….(50)
———————————————————————————————————————-
படங்களுக்கு நன்றி :
http://kamadenu.blogspot.in/