Author: editor9

  • பெண்களுக்கெதிரான குற்றங்கள்

    — பி.எஸ்.டி.பிரசாத்.

    women life

    ​மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா ! – என்று கவிமணி பாடிய நம் மண்ணில் சமீப காலமாக பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

    “தாயருகில் சேயாகி, தலைவனிடம் பாயாகி, சேயருகில் தாயாகும் பெண்ணே !” – என்று கவியரசு வைரமுத்து அவர்கள் திரையிசையில், பெண்ணின் வாழ்க்கைச் சக்கரத்து மாற்றங்களை அருமையாகப் பாடியுள்ளார். ஆனால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்று தெரியப்படுகின்ற அந்த நேரம் முதல், எல்லாக் கட்டத்திலும், தன் வாழ்வில் துன்பங்களை சந்திக்க வேண்டியுள்ளது ஒரு பெண்ணால். சேயாக இந்த பூமியில் பிறக்கும் முன்பே கொன்றுவிடும் கூட்டம் – குழந்தை பருவத்திலே சிறுமியாக இருக்கும்போது, பாலியல் உட்பட பல்வேறு வகையான குற்றங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதையும் தாண்டி குமரிப் பருவம் வந்தால் கேட்கவே வேண்டாம். இரைக்கு அலையும் கழுகுகளின் பார்வையிலிருந்து தப்பித்து கற்பைக் காத்து வளர்வது…அம்மம்மா !  Eve teasing, கற்பழிப்பு, கொலை….இன்னும் எத்தனை எத்தனை குற்றங்கள்…

    அலுவல்களுக்குச் செல்லும்போது, வேலை செய்யும் இடத்தில் பெண்கள் நடத்தப்படும் விதம் பல இடங்களில் விவாதிக்கப் படக் காணலாம். இதையும் தாண்டி அடுத்தக் கட்டத்தை அடைந்து வீட்டில் தனியாக இருக்கும் போது பொருளற்ற வாழ்வு வாழும் கொள்ளையர்கள், உயிரை மாய்த்து பொருளை சுருட்டிக் கொண்டு ஓடுகின்றனர். நினைத்துப் பாருங்கள்…என்னதாங்க நடக்குது? !

    தாடகையின் தொல்லை தாங்காது ரிஷிகளும், முனிவர்களும் அவதிப் பட்டுக்கொண்டிருந்த போது விஸ்வாமித்ரர் அவர்கள், ஸ்ரீ ராம பிரானிடம், தாடகையை வதம் செய்யச் சொன்னாராம். அதற்கு, ஸ்ரீராமன், “அவள் ஒரு பெண்…அவளை என்னால் கொல்ல இயலாது” என்று சொல்லி தயங்கியதாகவும், பிறகு விஸ்வாமித்ரர், ஸ்ரீ ராமனுக்கு பல காரணங்களைச் சொல்லி தாடகையை வதம் செய்ய வைக்கப் பெரும் பாடு பட்டார் என்றும் ராமாயணம் சொல்கிறது. இது போன்ற ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளை தொலைக்காட்சியில் ஆர்வமுடன் பார்ப்பவராக இருந்தும், காட்சியில் வரும் தத்துவங்களையும், சொல்லப்படும் கருத்துக்களையும் மனதில் எடுத்துக் கொள்ளதவராய் இருக்கிறோம் என்பது மிகவும் வருந்தத் தக்கது. ஒரு அரக்கி, அழிக்கப் பட வேண்டியவள், அவளை கொல்வதற்கு, ‘அவள் ஒரு பெண்’ என்ற ஒரே காரணத்திற்காக  தயக்கம் காட்டிய ஸ்ரீராமனை முன்னுதாரணமாய் கொள்ள வேண்டாமா?

    காசும், பணமும் பெருகப் பெருக, மேலும் பணம் சம்பாதிப்பதற்கான குறுக்கு வழிகளிலும், பெண் போதையிலும் தான் மனம் அலைகின்றது.”கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்றக் கோட்பாடுகள் எல்லாம் காற்றோடு போய் கட்டுப்பாடற்ற நாகரீகத்தை நோக்கி பயணித்து வருகிறோம் என்பது கசப்பான உண்மையாகும்.

    “மகளிர் தினம்” கொண்டாடுவதால் பெண்களை போற்றுவோர் ஆக மாட்டோம். அந்த நாள் கூட பலருக்கு, வியாபார ரீதியாக “தள்ளுபடி விற்பனை” செய்வதற்கான வாய்ப்பாகத் தான் கருதப்படுகிறது. பெண்களுக்கு நிகழ்த்தப் படும் கொடுமைகளுக்குத் தள்ளுபடி செய்தபாடில்லை ! உண்மையிலேயே, உரத்த சிந்தனை தேவைப்படுகிறது …இந்த பிரச்சனையை எதிர் கொண்டு சமாளிக்க…வாருங்கள்…சிந்திப்போம் !

     

     

    படம் உதவிக்கு நன்றி:   http://eluthu.com/images/poemimages/l/112934.gif

    Share
  • தீராமல் எரிகின்ற தீ – பாடல்

    –பி.எஸ்.டி.பிரசாத்.

    Nithyshree

    கீழ்காணும் ஷீரடி சாய்பாபா மீதான பாடல், சமீபத்தில் வெளியான எனது முதல் ஆடியோ சி.டி. யில் இடம்பெற்றுள்ளது.

    இந்தப் பாடலை மதிப்பிற்குரிய நித்யஸ்ரீ அவர்கள் பாடி பெருமை சேர்த்துள்ளார்கள்.

    பாடலை மெட்டமைத்து, இனிமையான இசை சேர்ப்பு செய்துள்ளவர் திரு.குருபாத் அவர்கள்.

    பாடலைக் கேட்க: https://soundcloud.com/psdp1/theeramal-erigindra

     

    பாடல் வரிகள்:

    தீராமல் எரிகின்ற துனி என்னும் தீயாம் !
    தீராத நோய் தீர்க்க நமக்கருளும் உதியாம் !
    தீராத நோய் தீர்க்க நமக்கருளும் உதியாம் !

    தீன தயாளனாம் சாயி ! தீன தயாளனாம் சாயி !
    தீர்க்கமாய்த் தெரிகின்ற ஜோதி ! தீர்க்கமாய்த் தெரிகின்ற ஜோதி !

    (தீராமல்)

    தித்திக்கும் தீ…தீ….தீவினை எரிக்கும் தீ ! தீ !
    தித்திக்கும் தீ…தீ….தீவினை எரிக்கும் தீ ! தீ !

    எத்திக்கும் பரவும் ஓம்சாயி பக்தி !
    எத்திக்கும் பரவும் ஓம்சாயி பக்தி !

    (தீராமல்)

    திருமூர்த்தி பாதி ! திருமாலும் பாதி !
    குருசாயி சக்தி ! பாடவரும் சித்தி !

    (தீராமல்)

    ஆனந்தத் தீ ! ஆராதனைத் தீ !
    ஆரத்தி பார்க்க ஆகும் மனம் சாந்தி !
    ஆரத்தி பார்க்க ஆகும் மனம் சாந்தி !

    (தீராமல்)

    பி.எஸ்.டி.பிரசாத்.

     

     

     

     

     

     
    வலைத்தளம்: http://psdprasad-tamil.blogspot.com

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி: http://tamil.oneindia.in/art-culture/essays/2012/nithyasri-perform-cincinnati-aid0136.html

    Share
  • ரேவதிக்கு நாய்க் குட்டி வேணுமாம்…

    –தாரமங்கலம் வளவன்.

    பங்களாவின் கேட் அருகே நின்று கொண்டிருந்த அந்த பெண்ணை, மீனாட்சி ஏற்கனவே பார்த்திருக்கிறாள். தங்கள் அரிசி மண்டியில் குமாஸ்தாவாக வேலை செய்யும் சதாசிவத்தின் பெண் தான் அவள்.   பத்து வயது இருக்கும் என்று தோன்றியது.

    தயங்கி தயங்கி நின்று கொண்டிருந்த அந்த பெண்ணைப் பார்த்து,

    “ உள்ளே வா… தெறந்து தான் இருக்குது..” என்றாள் மீனாட்சி.

    வந்த பெண்ணைப் பார்த்து,

    “ நீ சதாசிவத்தின் பொண்ணு தானே.. பேரு என்னா…” மீனாட்சி கேட்டாள்.

    “ ரேவதி..”  என்றாள் அந்த பெண்.

    அந்த பெண் சற்று தயங்கி விட்டு,

    “ உங்க வீட்டு நாய், நாலு குட்டி போட்டு இருக்கிறதா சொன்னாங்க… எனக்கு நாய் வளக்கணும்னு ரொம்ப நாளா ஆசை… எனக்கு ஒரு குட்டி கொடுப்பீங்களா..”

    மீனாட்சிக்கு திகைப்பாய் இருந்தது அவள் கேட்டது.

    Rishikesh Animal Care Community FaceBook Pageசதாசிவம், தன் வீட்டில் நாய் வளர்ப்பதாகச் சொன்னாரே..

    அடிக்கடி, சாப்பாடு ஏதாவது மீதி ஆயிட்டா, வேஸ்ட் பண்ணாதீங்க, எங்க வீட்டு நாய்க்கு சாப்பிடறதுக்கு போடலாம்னு சொல்லி வாங்கிட்டு போவாரே..

    உண்மையில் சதாசிவத்தின் வீட்டில் நாய் ஏதும் இல்லையா.

    அப்படியானால், சதாசிவம் வாங்கிப் போன சாப்பாடு அவர் சாப்பிடத்தானா..

    சதாசிவம் வீட்டில் அவ்வளவு வறுமையா..

    ஐயோ பாவம் என்று மனதில் தோன்றியது.

    “ உங்க வீட்ல நாய் ஏதும் இல்லியா….” மீனாட்சி ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

    “ இல்ல… அப்பாகிட்ட ரொம்ப நாளா கேக்கிறேன்.. அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாரு..”

    கொஞ்சம் இடைவெளி விட்டு,

    “ நான் அந்த குட்டிகளை பாக்கணும்…” என்றாள் ரேவதி.

    “ சரி.. பாரு.. பின்பக்கம் தான் இருக்கு. போய் பாரு..” என்று சொல்லி விட்டு மீனாட்சி சமையல் வேலையை பார்க்க போய் விட்டாள்.

    பார்த்து விட்டு திரும்பி வந்த ரேவதி,

    “ அந்த வெள்ளக் குட்டியை எனக்கு கொடுப்பீங்களா..” என்றாள்.

    “ சரி கொடுக்கிறேன்.. ஆனா நான் கொடுத்ததா வீட்ல யாருகிட்டேயும் சொல்லாதே.. தெருவில அனாதையா இருந்திச்சி.. எடுத்து வந்தேன்னு சொல்லு..”

    சரி என்று தலையாட்டி விட்டு,  நாய்க்குட்டியை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றாள் அந்த பெண் ரேவதி.

    உள்ளே இருந்து வந்த மீனாட்சியின் கணவர்,

    “ அந்த பொண்ணு கிட்ட ஏன் அப்படி பொய் சொல்லச் சொன்னே..” என்று கேட்டார்.

    “ பாவம் நாலு பொண்ணுங்க… கஷ்ட ஜீவனம் போல இருக்கு.. இந்த மாசத்திலே இருந்து அவருக்கு சம்பளம் கொஞ்சம் கூட்டி கொடுங்க.. என்ன புரிஞ்சிதா..” என்று மீனாட்சி சொல்ல, அதற்கு அவள் கணவர் தலையாட்டினார்.

     

     

    ——————————————————————————————————————-
    படம் உதவிக்கு நன்றி:
    Rishikesh Animal Care Community FaceBook Page
    https://www.facebook.com/RishikeshAnimalShelter
    https://www.facebook.com/photo.php?fbid=452591534858573&set=pb.192122577572138.-2207520000.1405897050.&type=3&theater

    Share
  • இசைப்பாடலிலே உன் உயிர்துடிப்பு – பகுதி 2

    –மு. ஜெயலட்சுமி.

     கண்ணதாசன் பிறந்தநாள் நக்கீரன் படம்

    கண்ணதாசனின் கவிதையாளுகை

    “என்றன் பாட்டுத் திறத்தாலே, இவ்வையத்தைப்
    பாலித்திடல் வேண்டும்”
    என்றான் முண்டாசுக் கவிஞன்.  இதற்கு இலக்கணமாக இவ்வுலகம் பயன்பெறக்கூடிய வகையில் தம் பாடல்களால் மக்களை ரசித்து, அவர்கள் நினைவில் நீங்காது இடம் பெற்றவர் கவிஞர் கண்ணதாசன். கவிஞர் கண்ணதாசன் சங்கப்பாடல் முதல் சிற்றிலக்கியம் வரை – தாம் படித்த கவிதைகளின் சாரத்தையெல்லாம் காதல் பாடல்களாகத் திரையில் வடித்துள்ளார்.  இவரது கருத்தாழமிக்க பாடல்கள் ஒலிக்காத விழாக்களே இல்லையென்று சொல்லாம்.  அவற்றை நாம் இங்கு காண்போம்.

    காதல் பெருமை:
    காதல் என்பது “ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மனதளவில் ஒருவரை ஒருவர் விரும்புவது’’ என்று மட்டும் கூறிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், அந்த காதலுக்குப் பல பரிணாமங்களை வடிவமைத்துக் காட்டிய பெருமை கண்ணதாசனுக்கே உண்டு!
    உலகமெங்கும் ஒரே மொழி
    உள்ளம் பேசும் காதல் மொழி
    ஓசையின்றி பேசும் மொழி
    உருவமில்லா தேவன் மொழி !” —————-(நாடோடி)
    காதல் என்பது புனிதமானது; பெருமைக்குரியது; உலகம் முழுவதும் பரவியது என்பது கவிஞர் கண்ணதாசனின் கருத்து.  காதல் சிறப்பை, “உலகெங்கும் நிலவுவது காதல் என்று அதன் பரப்பினைக்’’ கூறுகிறார்.

    மேலும் மக்களால் போற்றப்படும் காதல், நிலையுடையது என்னும் கருத்தில் அதேப் பாடலில்
    “கோடி மனிதர் பேசிய பின்னும்
    குறைவில்லாமல் வளர்வது காதல்” ————–(நாடோடி)
    என்று காதல் தவறு உடையதன்று; அது ஏற்றுக் கொள்ளக் கூடியது.  என்றெல்லாம் எழுதிக் காதல் பெருமையைக் கவிஞர் கண்ணதாசன் வலியுறுத்துகிறார்.

    காதல் தோற்றம்:
    காதல் தோற்றம் சாட்சியினால் நிகழ்கிறது.  சாட்சி காணும் கண்கள், காதலுக்கு அடிப்படை என்பதைக் கவிஞர் கண்ணதாசன் காதல் என்றால் ஆணும் பெண்ணும் வேண்டும்.  அந்தக் காதலின் துவக்கம் கண்கள் மூலமே நிகழ்கின்றது.  கண்கள் என்ற வாசல் வழியே சென்று கருத்தினில் கலந்து இரண்டு மனங்களையும் வயப்படுத்துகின்றது காதல்.  காதலில் மனதுக்கு முன்னால் கண் செயல்படத் துவங்கி விடும், இருவரின் பார்வையும் சந்தித்த உடனேயே மனமும் அங்கே சென்று விட்டது முதலில் பார்த்தவர் யார் என்ற பேச்சுக்கே இடமின்றி `கண்டபோதே சென்றன அங்கே’ என்ற வரிகள் மூலம் இரண்டும் ஒன்றாலையே நிகழ்ந்ததாகக் கூறுகின்றார்கள்.
    “கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே
    கண்ட போதே  சென்றன அங்கே’’ ——————–(கர்ணன்)
    கண்ணுக்கும் மனதுக்கும் உள்ள இந்த உறவையும் அந்த உறவின் மூலமாக வெளிப்படுகின்ற காதல் உணர்வையும் இவ்வரிகள் அழகாக காட்டுகின்றன.

    தலைவன் தலைவியைப் பார்க்கிறான்.  அவள் கனிவு முகம் இவனைக் காதல் வயப்படுத்துகின்றது.  நேற்றுவரை இவள் என் கண்ணுக்குத் தோன்றாமல் இருந்தது எப்படி? நேர் வழியாம் காதல் வழியில் செல்ல என்னை மாற்றிவிட்டாளோ என்று மகிழ்கிறான்.
    “கண்ணெதிரே தோன்றிளாள்
    கனிமுகத்தைக் காட்டினாள்
    நேர்வழியில் மாற்றினாள்
    நேற்றுவரை ஏமாற்றினாள்” ——————-(இருவர் உள்ளம்)
    அவள் கனிவுமுகம், தனியாகச் சென்ற இவள் உள்ளத்தைத் தைத்தது; மனம் மகிழ்ந்தது; இனம் புரியாத மயக்கத்தை ஏற்படுத்தியது.  இங்கே காதலை மென்மையாக காட்டுகிறார்.

    காதலின் உணர்வு:
    “சொல்லித் தெரியாது சொல்ல முடியாது
    உள்ளத்திலிருப்பது எது? – வரும்
    உறக்கத்தைக் கெடுப்பது எது?” ———————(கல்யாணியின் கணவன்)
    என்று காதலின் உணர்வை துல்லியமாகச் சொல்லியுள்ளார்.

    “ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்
    அந்த உறவுக்குப் பெயர் என்ன?
    காதல்” —————————————(சாரதா)
    இப்பாடலில் ஒருவன் ஒருத்தியை நினைத்துவிட்டால் என்று எழுதி இருந்தாலும் இசைக்கு ஒத்து வந்திருக்கும். ஆனால் ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் என்று அவர் எழுதியிருக்கும் காரணம், கதைப்படி காதல் வயப்பட்ட கதாநாயகிதான் காதலை தொடங்குகிறாள் என்பது ஒரு புறம் இருந்தாலும், ஒருத்தி ஒருவனைத்தான் நினைப்பாள், ஆனால் ஒருவனோ பலரை நினைப்பான் என்று, பெண்ணுக்குரிய கண்ணியத்தை உச்சியில் ஏற்றிவைத்து அழகுப் பார்த்தவர்.

    “உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை
    எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும்
    சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல
    இங்கு நீ யொரு பாதி நானொரு பாதி
    இதில் யார்பிரிந்தாலும் வேறென்னமீதி” —————-(இதயக் கமலம்)
    மனிதனில் ஆண்பாதி பெண்பாதி, ஒரு பாதி இன்னொரு பாதியை தேடுவது தானே காதல் !

    சுதந்திர உணர்வு:
    “சிட்டு குருவிக்கென்ன கட்டுப்பாடு
    தென்றலே உனக்கெது சொந்த வீடு
    உலகம் முழுதும் பறந்து பறந்து
    ஊர்வலம் வந்து விளையாடு
    உலகம் முழுதும் பறந்து பறந்து
    ஊர்வலம் வந்து விளையாடு” ————————(சவாலே சமாளி)
    சிட்டுக்குருவியைப் போல சுறுசுறுப்பாகவும், தென்றலைப்போல சுகமாகவும் மனித இனம் உலகம் முழுவதும் பறந்து திரிந்து இயற்கையை அனுபவித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்கிறார்.  இன்பத்தை எப்பொழுதும் அடைய வேண்டும் என்ற எண்ணம் நம் உணர்வுகளில் கலந்த ஒன்று.  அதற்கு கட்டுப்பாடு இல்லாது இருக்க வேண்டும்.  இதில் கவிஞரின் சுதந்திர உணர்வை வலுப்படுத்துகிறது.

    இளமைக் காதல்:
    காதலுக்கு நிலைக்களனாகிய இன்பம் எல்லா உயிர்க்கும் உண்டு.  கீழுள்ள இந்த வரி கவிதை கருத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.  மார்கழி மாதத்தில் பனி இல்லாமலும், மன்னராக இருப்பவன் படைபலம் இல்லாமலும், இனிப்புச் சுவை இல்லாத முக்கனிகளும், இசை இல்லாத முத்தமிழும், கலையில்லாத நாடகமும் எப்படி இருக்க முடியாதோ அப்படித்தான் வாலிபத்திலும் காதல் இல்லாமல் இருக்காது என்று ஒற்றை வரியில் சவால் விடும் அளவிற்கு காதலுக்கு ஆட்படாத வாலிப நெஞ்சமே இல்லை என்று கூறுகிறார்.
    “காதல் இல்லாத வாலிபமா?’’ ————-(ஆனந்த ஜோதி)
    என்றும்,
    உடம்பு தளர்ந்தாலும், தோல் சுருங்கிப் போனாலும், தன் தலைவி மீது அன்பு ஊறிக் கொண்டே இருக்கவேண்டும்.  அதுதான் முழுமையான – செழுமையான காதல் என்கிறார்.  இதையே…

    “இளமையிலே காதல் வரும்
    எதுவரையில் கூட வரும்?
    முழுமைபெற்ற காதலெல்லாம்
    முதுமைவரை ஓடி வரும்” –——————-(திருடாதே)
    என்கிறார். காதல் தலைவி, தன்னுள் காதல் தோன்றிய இரகசியத்தை தன் தலைவனுக்கு உரைக்கிறாள்.  அதில் இளம்பருவத்தை உடைய தலைவனிடம், இளமைப் போய் முதுமை சேர்ந்தாலும், இருவர் காதலும் மாறாது என்று காதல் கோட்பாடுகளை எடுத்துக் காட்டியுள்ளார்.

    “இளமையின் இன்ப ரகசியம்
    இயற்கையில் வந்த அதிசயம்
    இதை வாழ்ந்து பார்த்தவர் ஆயிரம்
    அதில் நாமும் இன்றொரு காவியம்
    இந்த இளமை போகலாம் முதுமை சேரலாம்
    இருவர் காதலும் மாறுமோ?”——-(காதலிக்க நேரமில்லை)
    என்றும்…

    “காதலுக்கு ஜாதி இல்லை மதமும் இல்லையே,
    கண்கள் பேசும் வார்தையிலே பேதமில்லையே
    வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
    மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே?” —-(பாவ மன்னிப்பு)
    என்றும் காதலில் வாய் பேசுவதைவிடக் கண்கள் பேசுவதே அதிகம்.  எந்த ஆணுக்கும் அல்லது பெண்ணுக்கும் இதில் வேறுபாடு இல்லை.  வானில் நீந்திச் செல்லும் மேகங்கள், நம் கற்பனைக்கேற்ற உருவத்தைக் காட்டும்; ஆனால் அந்த உருவங்கள் சற்று நேரத்தில் கலைந்து விடும்.  ஆனால் காதல் அப்படிக் கலைவதில்லை என்கிறார்.

    “இதயம் பொல்லாது
    கண்ணெதிரே பெண்ணழகை
    கண்ட பின்னே இளமைவேகம்
    கொள்ளாமல் நில்லாது”—————————-(இதயம்)
    என்பன போன்று காதல் அற்புதத்தைக் கோடிட்டு; பலவித காதல் கவிதைகளை இயற்றியுள்ள பெருமையும் இவருக்குத்தான் உண்டு.

    கனவாகும் காதல்:
    கவியரசு கண்ணதாசன் 1948-இல் திரையுலக வாழ்க்கைக்கு வந்தார்.  `கன்னியின் காதலி’ என்னும் திரைப்படத்திற்காகத் தம் முதல் பாடலை எழுதினார்.  படத்தின் பெயரிலேயே காதல் அமைந்தக்காரணத்தினால் காதலிலேயேத் தொடங்கினார்.  ஆண் வேடம் தரித்த பெண், மற்றொரு பெண்ணுக்கு ஆறுதல் கூறுவது போல் உள்ள சூழலுக்கு,
    “கலங்காதிரு மனமே – நீ
    கலங்காதிரு மனமே – உன்
    கனவெல்லாம் நனவாகும்
    ஒரு தினமே’’ –——————–(கன்னியின் காதலி)
    என்று எழுதினார்.

    தலைவன் தலைவியின் அழகை வர்ணிக்கும் விதம் மென்மையைக் குறிக்க, `அவள் காற்றினில் பிறந்தவள்’ என்று சொன்னதே கற்பனைதான்.  கற்பனையே கற்பனை செய்து இவளை வடித்தது என்பது ஆதிதமான கற்பனை.  பொதுவாக எந்த பெண்ணும் இன்னொருத்தி தன்னை விட அழகானவள் என்று ஒப்புக்கொள்ளமாட்டாள்.  ஆனால் இவளோ, மற்றொரு பெண்ணே இவள் மீது ஆசை கொள்ளும் அளவிற்கு அழகானவளாம்!

    “காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
    கற்பனை வடித்தவளோ?
    …………………….
    பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
    பேரழகெல்லாம் படைத்தவளோ?” —————- (மாலையிட்டமங்கை)
    என்று காதலன் தலைவியை வர்ணிக்கும் கவித்திறன் அருமையிலும் அருமை.

    காதலியின் கோபமும் காதலனின் கேள்வியும்:
    நிலவையும், காதலையும் சேர்த்துப்பாடாத கவிஞர்களே இல்லையெனலாம்.  காதலன் நேரம் கழித்து வந்து விட்டான்.  வந்தது மட்டுமல்லாமல், காதலியின் மனதுக்கு விருப்பமில்லாத வகையில் நடந்து கொள்கின்றான்.  காதலிக்கு கோபத்தால் முகம் சிவந்து விடுகிறது.  ஆசையாக தொட வந்தவனையும் தவிர்க்கின்றாள்.  நிலவின் குளிர்சியை உடையவளுக்கு, நெருப்பாக எரியும் கோபமும், மலரைப் போன்ற மென்மையானவள் முள்ளாய் மாறியதற்கு என்ன காரணம் என்று கேட்கிறான்.  இதையே
    “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
    நெருப்பாய் எரிகிறது
    இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
    முள்ளாய் மாறியது” ———————- (போலீஸ்காரனின் மகள்)
    என்று வளமான கற்பனை உடையவராக கவிஞர் கண்ணதாசன் மிளிர்கிறார்.  சூழலையும் மனோபாவத்தையும் பொறுத்துதான் காதல் கூட இனிமையாய் இருக்கும் என்று சுட்டுகிறார்.

    பண்பாடு மாறாத காதல்:
    காதல் கொள்கிறாள் காதலி. காதலனோ, ஏற்கனவே திருமணமாகி மனையாளைப் பறிக்கொடுக்கிறான்.  அவனை தன் காதலனாக நினைத்து அவனிடம் அன்பாகப் பேசி நெருங்குகிறாள்.  அவனுக்கோ காதலில் மனம் செல்லவில்லை.  இருப்பினும் அவன், அவள் மனதை புண்படாதவாறு தன் கருத்தை வெளிப்படுத்துகிறான்.  எந்த ஒரு சூழ்நிலையிலும், நம் பக்கத்து நியாயத்தையும் மனநிலையையும் எடுத்து வைக்க முடியும் என்பதை இந்த வரிகள் காட்டுகின்றது.
    “நிலவே என்னிடம் நெருங்காதே
    நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..
    மலரே என்னிடம் மயங்காதே
    நீ மயங்கும் வகையில் நான் இல்லை “—————————-(ராமு)

    நான் நீ யாவது நீ நானாவது:
    காதல் செய்யும் போது கருத்து வேறுபாடுகள் வரலாம்.  அந்த நேரத்தில் நீ நீயாகவும், நான் நானாகவும் இருந்தால் பிரச்சினையை எளிதில் தீர்க்க இயலாது.  அதனால் நான் நீயாகவும், நீ நானாகவும் இருந்தால் பிரச்சினையைப் புரிந்து கொண்டு அதை தீர்க்க முடியும் என்கிறார். கவிஞர் இங்கு “உலகங்கள்” என்று ஏன் சொல்கின்றார் என்றால், சமுதாயத்தில் சொந்தம் பந்தம் போன்று பல்வேறு தளங்களில் மனிதனுக்குக் கடமைகள் உள்ளன.  இப்படி இருவரின் கடமைகளிலும் பொறுப்புகளிலும் ஒன்றாகின்ற நிலைதான் காதலின் உயர்நிலை, நீ எந்த கோணத்தில் புரிந்து கொள்கிறாயோ, அந்தக் கோணத்தில் தான் எனக்கு புரிய வைக்க முடியும்.  நானும் புரிந்துக் கொள்ள முடியும் என்கிறார்.
    “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
    நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
    நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்
    நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் “————(பாலும் பழமும்)

    புதுமையான காதல்:
    அங்கம் சிறிது குறையுடைய ஆடவனை மங்கை ஒருத்தி மணக்க நேரிடுகிறது.  ஆனாலும் அவள் மனம் அதற்காக வருந்தவில்லை, மற்றொருவனை நாடி ஓடவில்லை.  உறுப்புக் குறைந்தவர்களை காதலர்களாகப் பாடப்பெறுவதில்லை.  கண்ணதாசன் இதிலும் புதுமையை காட்டுகிறார்.  மங்கையர் உள்ளம் அங்கம் குறைந்தவனைக் காதலிக்க மறுப்பதில்லை என்று அங்கக் குறைவு அன்புமிகு காதலுக்கு தடையில்லை என்றும், உண்மைக் காதலை சமுதாயத்தின் உச்சியில் ஏற்றி வைத்து அழகுப் பார்த்தவர்.
    “தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
    தரத்தினில் குறைவதுண்டோ? – உங்கள்
    அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
    அன்பு குறைவதுண்டோ?”————————-(பாகப் பிரிவினை)
    என்றும்,

    “கைகால் விளங்காத
    கணவன் குடிசையிலும்
    காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா” ———-(பாகப் பிரிவினை)
    என்று குழந்தையை தாலாட்டும் போதும், தன்னுடைய மகனுக்கு அங்கக் குறைவினை எடுத்துச் சொல்லி காதல் மனத்தையும் தாலாட்டுப் பாடலுடன் சேர்த்து வெளிப்படுத்திய திறன் கவிஞர் கண்ணதாசனுக்கு மட்டுமே உரிய சிறப்பாகும்.

    பெண்மை தாய்மையில் நிறைவுறுகிறது:
    ஒரு மனிதன் பிறக்கும் போது இருந்தே அவனுடைய இன்ப துன்பங்கள் ஆரம்பித்து விடுகின்றன. கவியரசரின் கவிதையில் தத்துவக் கருத்துக்கள், பிறப்பிலிருந்து தொடங்குகிறது.
    “தந்தை தவறு செய்தார்
    தாயும் இடம் கொடுத்தாள்
    வந்து பிறந்து விட்டோம்
    வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்”-———(அவன்தான் மனிதன்)
    என்ற வரிகள் பிறப்பையும், பந்தத்தையும் எடுத்துக்காட்டுகிறது.  இங்கே “தாயும் இடம் கொடுத்தாள்” என்பது, தந்தைக்கு மட்டுமல்ல, நாம் இருந்து வளர்வதற்கும் தாய் கருவரை எனும் இடம் கொடுத்தாள் என்கிறார்.  இதில் பெண்மை தாய்மையில் நிறைவு பெறுவதை குறிப்பால் மிக அழகாக உணர்த்துகின்றார்.

    முடிவுரை:
    ‘காதல்’ என்ற பாடுபொருளை கவிஞர் கண்ணதாசன் எங்கனம் தம்முடைய திரையிசைப் பாடல்களில் மிகவும் திறம்பட நயமுடன் எடுத்தாண்டுள்ளார் என்பது தெரிகிறது.  தாம் கற்றறிந்து போற்றிய, தம் உள்ளம் கவர்ந்த இலக்கியத் தொடர்களை எளிய தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் கவிஞர் கண்ணதாசன் கவின்மிகு பாங்கு எண்ணியெண்ணி மகிழத்தக்கதாகும்.  தமிழ் இலக்கியத்திற்க்குள் புதைந்து கிடந்த காதல் இன்பத்தை பாமர மனிதரின் சிந்தனைக்கு எட்டும் வண்ணம் செதுக்கிய பெருமை கவிஞர் கண்ணதானையே சாரும் என்பதை யாரும் மறுக்கவே முடியாது.

    படம் உதவி நக்கீரன் இணையதளம்: http://www.nakkheeran.in/users/frmGallery.aspx?G=41226&GS=4&GV=1972

    Share
  • மங்காப் புகழோடு வாழும் இறவாக் கவிஞன்!

    –நர்கிஸ் பானு.

    கண்ணதாசன் பிறந்தநாள் நக்கீரன் படம்

    விஞ்சியவர்… மிஞ்சியவர்…
    நம் உள்ளங்களின் உணர்வுகளுக்கு
    தன் சொல்லால் உயிர் தந்த வித்தகர்.
    படைப்பாளி.
    படைத்தவனுக்கே
    பட்டம் தரத் தேடுகிற
    உள்ளப் படைப்பாளி.
    தன்னிகரில்லா தமிழ்க்கவியரசர்.
    கட்டுக்கு அடங்கா காட்டாற்று வெள்ளமென
    கவிஞரின் தமிழ்மொழி ஆற்றல், அளவுகோலுக்கு அடங்காதது.
    அவர்தம் தன்னம்பிக்கையோ மரணத்தையும் வென்றது.

    ‘நான்
    நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த
    நிலையிலும் எனக்கு மரணமில்லை’

    அழியும் மானிடப் பிறவியில் அழியாப் புகழ் பெற்றவர்.

    பல திரைப்படங்களில் ஒலிக்கும் பாடல்கள் கதாநாயகனையும் மீறி, கதையோட்டத்தையும் மீறி, நம் மனதில் சிம்மாசனமிட்டு அமர்வது கவியரசர்தான் என்பது அப்பட்டமான உண்மை. பிறவிக்கவிஞர் அவர். மனிதப் பிறவியில் ஒவ்வொரு தருணத்திலும் ஏற்படும் அனுபவங்களை பாடலாக வடித்து நம் ஆன்மாவில் நமக்கே தெரியாமல் இரண்டறக் கலந்தவர்.

    நமது உணர்வுகள் கவியரசரின் வரிகளில் பளிங்கு மாளிகையாய் மணிமண்டபமாய் உயரத்து கோபுரமாய் நாமே உணர தீர்க்க தரிசியாய் அன்னை மொழிதனில் அற்புதமாய் சொல்லிச் சென்றவர். அவர் பாடலை மேற்கோள் காட்டாத நாளில்லை எனலாம்.

    ‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
    மாலைகள் விழ வேண்டும். ஒரு
    மாற்று குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழ வேண்டும்’.

    என்னவென்று சொல்வது?
    வேள்விகள் வளர்த்து வணங்கினர் அரசர்கள்
    கேள்விகள் கேட்டு அசத்தியவர் கவியரசர் – கடவுளையே
    கேள்விகள் கேட்டு அசத்தியவர் கவியரசர்.

    ‘கண்ணா கருமை நிறக் கண்ணா’ பாடலில்

    ‘நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா! எந்தக்
    கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா?’

    அடுத்து,

    கடவுளை போற்றித் துதிப்போர் மத்தியில்

    ‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் – அவன்
    காதலித்து வேதனையில் வாட வேண்டும்
    பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் – அவன்
    பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்’
    என்று சாபமிட்டுவிட்டு,

    அடுத்து,
    ‘அவனை அழைத்து வந்து
    ஆசையில் மிதக்கவிட்டு
    ஆடடா ஆடு என்று
    ஆடவைத்து பார்த்திருப்பேன்’ என்கிறார் கவிஞர்.

    அடடா, அச்சமின்றி ஆண்டவனையே அசாத்தியமாய்ப் பாட கவியரசரைவிட யாருக்கு வந்துவிடும் இத்தனை உரிமையும் தைரியமும்?

    சுடுகின்ற உண்மையைக்கூட விளம்பும் வித்தியாச குணத்தவர். இம்மேதையை மறப்பார் உண்டா? அவர் சாதனையை மறுப்பார்தான் உண்டா?

    நம் வாழ்க்கை எவ்வளவு தூரம்?

    ‘பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
    சேத்தா விறகுக்காகுமா, ஞானத்தங்கமே?
    தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா, ஞானத்தங்கமே?’ என்று கண்களில் நடிகர் திலகம் நிறைந்திருக்கலாம், கதைப்படி அவரே சிவனாகவும் நடித்திருக்கலாம். ஆனால், நம் கருத்தில் விஞ்சி நிற்பதோ கவிஞரின் விஞ்சிய தத்துவமே! தத்துவம் மட்டுமா? சந்தம் இவர் சிந்தனைக்குச் சொந்தம். இலக்கணம் இவருக்கு இலகுவாய் வரும்.

    அந்தாதியில் இவரின்
    ‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்
    நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்’ என்றும்

    ‘ஆடிவெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்
    கோடி இன்பம் நாடிவந்தேன் காவிரியின் ஓரம்!
    ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன்கவிதைச் சாரம்
    ஓசையின்றிப் பேசுவது ஆசையென்னும் வேதம்’ என்று இன்றும் நம் காதுகளில் ரீங்காரமிட்டு வருகின்றன!

    படித்தவனும் மறந்துபோன,
    பாமரனுக்கு எட்டாக் கனியான
    பல தமிழ் இலக்கியங்களை எளிமையான
    பாடல்களாக்கிய அற்புதச் சிற்பி கண்ணதாசன்.

    ‘மயக்கமா? கலக்கமா?
    மனதிலே குழப்பமா?
    வாழ்க்கையில் நடுக்கமா?’

    இப்பாடல் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் என்றாவது ஒரு சமயம் மௌனகுருவாக, உற்ற தோழனாகத் திகழ்வது சத்தியமே. இவரின் செல்வாக்கு கலையுலகில் மட்டுமா? ஒவ்வொருவர் மனதிலுமல்லவா சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்?

    ஒருசில மாமேதைகளுக்கு மட்டுமே இத்தனை அரிய சிம்மாசனம் காத்திருக்கும். காலத்தைக் கடந்து பல இதயங்களில் வீற்றிருக்கும். சொல்ல சொல்ல இன்னும் சொல்லவே சொற்கள் தவம் கிடக்கின்றன. என் பார்வையில் கண்ணதாசன் நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு என்னும் பஞ்சபூதங்களைப்போல், இவ்வுலகில் மனித இனம் உள்ளவரை மங்காப் புகழோடு வாழும் இறவாக் கவிஞன். அவரின் பாடல்கள் தமிழ்த்தென்றல் வீசும்வரை தாலாட்டிக் கொண்டிருக்கும். தமிழ் வாழும் காலமெல்லாம் அவரின் புகழ் நிலைகொண்டிருக்கும். அதை அவரே தன் பாடல் மூலம் பதிவும் செய்துவிட்டுப் போயிருப்பதுதான் அவரின் தீர்க்க தரிசனம். என் மனம் கவர்ந்த அவ்வரிகளையே இங்கு பார்வையாக்கி கவியரசருக்கு சமர்ப்பணமாக்கி என் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

    ‘கவியரசே!
    நீ
    நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த
    நிலையிலும் உனக்கு மரணமில்லை’

    படம் உதவி நக்கீரன் இணையதளம்: http://www.nakkheeran.in/users/frmGallery.aspx?G=41226&GS=4&GV=1972

    Share
  • ஞாலம் போற்றும் தமிழ்க்காதலன்!

    –ஜியாவுத்தீன்.

    கண்ணதாசன் பிறந்தநாள் நக்கீரன் படம்

    கண்ணதாசன்!

    காலத்தை வென்ற கவிஞன்!
    ஞாலம் போற்றும் தமிழ்க்காதலன்!

    இந்தப் பெயரை உச்சரிக்கும்போதே, எழுதும்போதே உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுவதுதான் நம்மீதான அவரின் தாக்கம் என்றால் மிகையில்லை.

    என் பார்வையில் என்றில்லை, யார் பார்வையிலும் ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள் அடங்காத மகோன்னதக் கவிஞன்தான் கண்ணதாசன். பாரதியின் நாவில் சரஸ்வதி குடிகொண்டிருந்தாள் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். பாரதி மறைந்தபின் குடிகொள்ள இடமின்றித் தள்ளாடிக் கொண்டிருந்த சரஸ்வதி கண்ணதாசன் பிறந்தவுடன் அவரின் நாவில் குடிகொண்டுவிட்டாள் போலும். அதனால்தான் இம்மனிதனின் நா உதிர்த்த வார்த்தைகளெல்லாம் பாடல்களாயின, பாடல்கள் ஒவ்வொன்றும் தமிழ்மகனின் வேதங்களாயின.

    சோழசபையில் அம்பிகாபதியின் புலமையைப் பரிசோதிக்க பக்திப் பாடல்கள் 100ஐ தொடர்ந்து பாடவேண்டும் என்று கட்டளையிடப்பட்ட கதையைக் கேட்டிருக்கிறோம். அது எப்படி 100 பாடல்கள் பாட முடியும் என்று வியந்து நம்பாமல்கூட இருந்திருப்போம். ஆனால், கண்ணதாசனின் கதையைக் கேட்கும்போது, திறமையாளர்களுக்கு அது ஒன்றும் திணறும் காரியமல்ல என்பதை உறுதியாய் நம்பத் துவங்குகிறோம். ஆம்! இவரிடம் எத்தனை பாடல்கள் கேட்டாலும், எத்தனை விதமாய்க் கேட்டாலும், எந்த நிலையில் கேட்டாலும் சரம்சரமாய்க் கொட்டின என்று இவருடன் பழகிய பலரும் கூறக் கேட்கையில், தமிழுலகில் இவரை ‘பாடல்களின் அமுதசுரபி’ என்று சொல்லத் தோன்றுகிறது.

    அரிய விஷயங்களை, அற்புதமான மனிதர்களை, மனிதர்கள் ஏங்குமளவு அவர்களுக்குப் பிடித்தமானவற்றை இறைவன் எதிர்பாரா தருணங்களில், எதிர்பார்க்கும் காலத்துக்கும் முன்பாகவே பறித்துக் கொண்டுவிடுவதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறான். அதன் நிதர்சன உதாரணங்கள், பாரதியும் கண்ணதாசனும். இப்பூவுலகில் பாரமாய், மனிதகுலத்தை மாசுபடுத்தும் நச்சுக்களாய் எத்தனையோ ஜீவன்கள் நீண்ட காலம் வாழும் நிலையில், நம் இதயம் கவர்ந்தவர்களை இறைவன் கவர்ந்துவிடும்போது, அவன்மேல் கோபமாய்த்தான் வருகிறது. என்ன செய்வது? இயற்கையின் திருவிளையாடல், இறைவனின் திருவிளையாடல். ஜீரணிக்கக் கஷ்டமாயினும் ஏற்றுக் கொண்டுவிடுகிறோம்.

    என் பார்வையில் கண்ணதாசனை மனசாட்சியென்றுதான் சொல்லத் தோன்றுகிறது. என் மனசாட்சி மட்டுமில்லை, நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும்தான். ஆம், அவரின் பாடல்களில் ஏதாவதொரு பாடல், நம் ஒவ்வொருவரின் மனநிலைக்கும் சூழ்நிலைக்கும் உணர்வுகளுக்கும் ஏற்ப பொருந்துகின்றன என்பதை வேறு எப்படிச் சொல்வது? நாம் துவளும்போது தத்துவம் சொல்லி உத்வேகம் தரும், நாம் மகிழும்போது நண்பனாய் நமக்கு வாழ்த்துச் சொல்லும், நாம் கோபப்படும்போது, சகோதரனாய் ஆசுவாசப்படுத்தும், நாம் காதல் கொண்டால், நம் உளமறிந்து லாலி பாடும். நமக்கு சோகம் நேர்ந்தால், சுகமாக்கும் மருந்தாய்த் தோன்றும். இப்படி ஒவ்வொரு நிலைக்கும் ஏற்ப கவியரசரின் பாடல்கள் நம்முடன் வரும்போது, அதை ‘மனசாட்சி’ என்று சொல்வதில் தவறில்லை அல்லவா?

    இம்மனிதர் பணத்திலும் திளைத்திருக்கிறார், பணமின்றித் தவித்தும் இருக்கிறார். வெற்றி பெற்ற அரசியலிலும் இருந்திருக்கிறார், தோல்வியுற்ற அரசியல்வாதியுடனும் இருந்திருக்கிறார். கட்சிகள் மாறியிருக்கிறார், மாறியபின் வசை பாடியுமிருக்கிறார். போகுமுன்னே தூது விட்டிருக்கிறார், போனபின்னே வாழ்த்தியுமிருக்கிறார். கட்டிய மனைவியிடம் காதலாய்க் கசிந்திருக்கிறார், கன்னியரிடம் மனதைக் காமுறவும் விட்டிருக்கிறார். குழந்தைகளை நேசித்திருக்கிறார், குழந்தையாகவே மாறி குமரிகளின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டுமிருக்கிறார்.

    அமைதியாய் சலசலப்பின்றி ஓடும் ஆறாய் இருந்ததில்லை இவரின் வாழ்க்கை. ஆரவாரமாய், மேடுபள்ளங்களைக் கடந்து பாயும் அருவியாய் இருந்திருக்கிறது. கள்ளம் கபடமின்றி வாழ்ந்திருக்கின்றார், உள்ளங்களெல்லாம் வெள்ளை என்று எண்ணி ஏமாந்துமிருக்கிறார். வஞ்சகத்தைக் கண்டிருக்கிறார், தன் வார்த்தைகளால் அவற்றை வென்றிருக்கிறார். அன்பிலே மிதந்திருக்கிறார், அதை பாடல்களாய்த் தொடுத்துமிருக்கிறார். வேதனையில் வெந்திருக்கிறார், அதை சாதனைப் பாடலும் ஆக்கியிருக்கிறார். சோகத்தில் புழுங்கியிருக்கிறார், ஆனாலும் சுகமாகப் பாட்டிசைத்திருக்கிறார். அன்புக்கு ஏங்கி தாகத்தில் தவித்திருக்கிறார். அற்புதமான சொற்களால் வேகமாய்ப் பாடியிருக்கிறார். இப்படி கண்ணதாசனைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.

    இந்திய நாட்டைக் குறிப்பிடும்போது, வேற்றுமையில் ஒற்றுமை, வேறுபாடுகள் நிறைந்த நாடு என்று வரலாற்றுப் பாடம் படித்திருக்கிறோம். அதேபோலத்தான், கண்ணதாசனையும் வேற்றுமையில் ஒற்றுமை என்றும், வேறுபாடுகள் நிறைந்த மனிதர் என்றும் மேற்சொன்னவற்றின் மூலம் குறிப்பிடலாம். இத்தனை அறிவார்ந்த மனிதனை, ஆண்டவன் ஏன் சோதனைகளுக்கு உட்படுத்தினான் என்று எண்ணினால், உண்மை விளங்கும். நல்லவர்களைத்தான் ஆண்டவன் சோதிப்பான் என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விட முடியாது.

    ஒருவேளை, ஆண்டவன் கண்ணதாசனை சோதனைகளுக்கு உட்படுத்தாமல் இருந்திருந்தால், நமக்கு கண்ணதாசன் என்னும் மகாக்கவிஞன் கிடைக்காமலே போயிருக்கவும் வாய்ப்புண்டு. ஆம்! இறைவன் ஒவ்வொருமுறையும், ஒவ்வொரு விதமாய் கவிஞரை சோதனைகளுக்கு உள்ளாக்கிய போதெல்லாம், சாதனைகள் படைத்த பல நல்ல பாடல்கள் நமக்குக் கிடைத்தன என்பதுதான் உண்மை. அவர் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஆளான போதெல்லாம் ஒவ்வொரு பாடலும் வீரியமாய் விழுந்தன. அதற்கு அவரின் திரைப்பட இசையமைப்பாளர்களின் மெட்டுக்கள் உரமிட்டன என்பதுதான் உண்மை. இன்னும் சொல்லப் போனால், அவர் பிரச்சினைகளுக்கு உள்ளாகும் போதெல்லாம், உணர்வுபூர்வமாக அழுத்தமாக இன்னும் ஆழமாகப் பாடல்கள் வெளிப்பட்டன. இங்கே அவரின் பாடல்களைத் தனியாகக் குறிப்பிடப் போவதில்லை. அவை இத்தமிழுலகம் அன்றாடம் அள்ளிப் பருகும் தேமதுர கானங்கள். எனவே, அவற்றை எழுதவேண்டிய அவசியமில்லை.

    மேலே குறிப்பிட்டதுபோல், அவர் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஆட்படாமல் போயிருந்தால், அப்போது வெளிப்பட்ட சிறந்த பல பாடல்கள் கிடைக்காமல் போயிருக்குமோ என்னும் அச்சம் ஏற்படுவது இயற்கைதானே? இது என்னுடைய (நம்முடைய?) ஒருவித சுயநலம் என்றுகூட தோன்றுகிறது. ஆனாலும் பாவமில்லை, அவரின் சிரமங்களில் தோன்றிய பாடல்களனைத்தும், நமக்கு பாடம் கற்றுத்தரும் பள்ளிக்கூடங்கள் என்றால் மிகையில்லைதானே?

    பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட பக்தி இலக்கியங்களை, பத்துவரிப் பாடலில் விளங்க வைத்தார். பல ஆண்டுகளில் கிடைக்கும் அனுபவங்களை, நான்கு நிமிடப் பாடலில் சுருங்க வைத்தார். படித்துப் பட்டம் பெற்று உணரும் கல்வியறிவை, கேட்கும் பாடலிலேயே புரிந்துகொள்ளும் எளிமை விதைத்தார். விதைத்தவனாயினும், வதைப்பவன் ஆண்டவன் என்றால், கேள்வி கேட்கத் தயங்காதே என்று தைரியம் வளர்த்தார். நண்பனாயினும், நயவஞ்சகனாய் மாறிவிட்டால், நடித்துக் கொண்டிராதே, நட்பை முடித்துக்கொண்டுவிடு என்று போதனை ஊட்டினார். வஞ்சகியின் வலையில் விழுந்துவிட்டால், வாழ்க்கை நஞ்சாய் மாறிவிடும் என்பதை அறிவுறுத்தினார். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

    இன்னும் சொல்லப் போனால், அவரவர் மதங்கள் சார்ந்த வேதங்களைக் கூட கற்காமல் இருந்திருப்பார்கள், ஆனால் கண்ணதாசனின் பாடல்களைக் கேட்காமல் இருந்திருக்க மாட்டார்கள். கல்விச்சாலைகளுக்குக் கூட செல்லாமல் இருந்திருப்பார்கள், கண்ணதாசனின் பாட்டுச் சோலைகளில் திளைக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். மதுக்கடைகளை நாடாதவர் எத்தனையோ பேர், ஆனால், இவர் பாடல்களைக் கேட்டு மதுவுண்ட வண்டுகளாய் மனம் கிறங்கிப் போவார்கள்.

    இக்கவிஞனின் வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால், அதன்மூலம் அவன் கற்றுணர்ந்து நமக்கு விட்டுப் போயிருப்பது விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள். சாலையில் போகும்போது இடறும் கல்லை எடுத்து தூரப் போட வேண்டும் அல்லது இங்கே உள்ள கல்லில் இடறிவிடாதீர்கள், கவனமாயிருங்கள் என்று ஒரு சிறிய அறிவிப்பையாவது அங்கு வைக்க வேண்டும். கண்ணதாசனை இடறிய எத்தனையோ தடைகளை அவரால் எடுத்துப் போட்டிருக்க முடியாது என்று வைத்துக் கொண்டாலும் ‘இத்தடைகள் என்னை இடறின, அடுத்து வருபவர்கள், எச்சரிக்கையாய் இருங்கள்’ என்று அழுத்தமாக, ஆழமாக அறிவிப்புப் பலகையை அசைக்க முடியாதவாறு அகிலத்தில் நட்டுச் சென்றிருக்கிறார் அம்மகாக் கவிஞர். அதைப் பின்பற்றுவதும், பின்பற்றாமலிருப்பதும் அவரவர் விருப்பம். ஆனாலும் கவிஞர் ஒரு காலக்கண்ணாடியாய் என்றென்றும் இப்பூவுலகில் நீக்கமற நிறைந்திருப்பார் என்பது நிதர்சனமான உண்மை.

    அவரைப்பற்றி ஏதேதோ குறைகள் கூறுபவர்கள்கூட, அவர் யாரையாவது ஏமாற்றினார் என்றோ, யாருக்காவது துரோகமிழைத்தார் என்றோ, புறம் பேசினார் என்றோ, யாருக்காவது வஞ்சகம் நினைத்தார் என்றோ எதையும் கூறியதில்லை. அத்தனையும் அவரின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கை பற்றிய தகவல்கள். அவற்றைப் பற்றி விமர்சிக்க யாருக்கும் உரிமையும் கிடையாது, தகுதியும் கிடையாது என்பது நிச்சயம். அறிஞர்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ரகசியமான எத்தனையோ பக்கங்கள் இருக்கக்கூடும்தான். அவற்றை ஆராய்வது நம் வேலையல்ல, அவர்கள் சமுதாயத்திற்கும் மனித இனத்திற்கும் அறிவிப்பது என்ன? விட்டுப்போனது என்ன? சொல்ல விரும்புவது என்ன? என்பவை பற்றியதாகத்தான் நம் வேட்கை இருக்க வேண்டும்.

    இந்த பூமியிலே எத்தனையோ கவிஞர்கள் வருகிறார்கள் எழுதுகிறார்கள் போகிறார்கள். ஆனால், யாராவது கண்ணதாசனின் உயரத்தைத் தொட்டார்களா? தொடுவார்களா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாம் தமிழர்கள் அனைவரும் தமிழில்தான் படிக்கிறோம், பேசுகிறோம், எழுதுகிறோம், தமிழிலேயே வாழ்வதாகக்கூட சொல்லிக் கொள்கிறோம். ஆனால், அவனுக்கு மட்டும் வாழ்க்கையின் கடினமான விஷயங்களைக்கூட எளிமையான வார்த்தைகளால் கோர்க்கத் தெரிந்த வித்தையெது? சந்தக்களுக்குள் சொந்தம் ஏற்படுத்தும் வண்ணம் சொற்கள் தைத்த மந்திரமெது? வாய் திறந்தால் வார்த்தைகளாய்க் கொட்டிய வசியமென்ன? தமிழன்னை தன் கரம் நிறைய வரங்கள் வைத்துக்கொண்டு, காத்திருக்க, வரமாய் வந்த கண்ணதாசன் அவ்வரங்களைக் கைகொள்ளும் கலனாய் மாறிப்போனார் என்பதுதானே உண்மை? படித்தவனுக்கும் பாமரனுக்கும் சரிசமமாய்ப் புரிந்தன அவரின் பாடல்கள்! ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தும் வண்ணம் ஆயிரமாயிரம் சங்கதிகளைக் கொண்டு படைக்கப்பட்டவை அவரின் நூல்கள்! அவரின் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுப்பாடம்!

    அந்த வகையில், கண்ணதாசன் நமக்காக விட்டுப்போயிருக்கும் பொக்கிஷத்தைப் புரிந்துகொண்டு, அவற்றின் அர்த்தங்களைத் தெரிந்துகொண்டு, அவைதரும் பாடங்களை அறிந்துகொண்டு வாழ்வில் உன்னதமடைவோம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    எனவே, மீண்டுமொருமுறை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்,

    என் பார்வையில் கண்ணதாசன் என்னுள்ளிருக்கும் ‘மனசாட்சி’!
    என்றென்றும் தொடர்ந்துகொண்டேயிருக்கும் அவன் பாடல்களின் அரசாட்சி!
    எவரும் என் கூற்றை ஏற்றுக்கொள்வர் என்பதுவே இதற்கு தெளிவான சாட்சி!

    வாழ்க கண்ணதாசன்! ஓங்குக அவன் புகழ்!

    படம் உதவி நக்கீரன் இணையதளம்: http://www.nakkheeran.in/users/frmGallery.aspx?G=41226&GS=4&GV=1972

    Share
  • இசைப்பாடலிலே உன் உயிர்துடிப்பு – பகுதி 1

    –மு. ஜெயலட்சுமி.

    கண்ணதாசன் பிறந்தநாள் நக்கீரன் படம்

    திரையிசைப் பாடல்களில் திருக்குறள்

     

    முன்னுரை:
    கவியரசு கண்ணதாசன் அவர்கள் திரைப்படங்களுக்குப் பாடல்கள் ஏராளமாகப் புனைந்ததன் மூலம் இன்றும் நிலைத்த புகழ் பெற்றவராய் விளங்குகிறார்.  பாமரரும் புரிந்துக்கொள்ளக் கூடிய எளிய தமிழில் நல்ல கருத்துக்கள் பலவற்றை உள்ளடக்கிப் பாடல்கள் படைத்துள்ளார்.  அவர் எழுதியுள்ள பாடல்கள் பலவும் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் வல்லமைப் பெற்றது.  ஒரு கவிஞன் தன் கவிதையைச் சிறப்படையச் செய்ய எண்ணினால் சொற்களை இடமறிந்து கையாளும் திறம் மிக்கவனாக இருத்தல் வேண்டும்.  கவிஞரவர்கள் சொற்களை இடமறிந்து பொருளோடு பயன்படுத்துவதில் திறமைமிக்கவராய்த் திகழ்கிறார்.  கவிஞர் நல்ல சொல்லாட்சியோடு தகுந்த வடிவில் கற்பனை மிளிர்ந்திடப் பிறந்தமையால் இன்றும் அவர் படைப்புகள் புகழ் ஓங்கி நிற்கின்றன.

    என்னுடைய பேனாவிலிருந்து சிந்தும் மை பணமாகாமற் போனாலும் போகலாம்; சரித்திரமாகாமற் போகாது” என்கின்ற தன்னம்பிக்கை கவிஞருக்கே உரிய தனித்தன்மை.  ஒரு கவிஞனின் சிறப்பை, அவன் வாழ்ந்த காலத்தைக் கொண்டே நிர்ணயிக்க வேண்டும்.  இன்று என் பாடல்களை நான்கு கோடி மக்கள் ரசிக்கின்றார்கள்; பாடுகிறார்கள்.  அதைக் கண்ணால் பார்க்கும் போதும், காதால் கேட்கும் போதும் எனக்கு உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  அதனால் மேலும் மேலும் நான் எழுதுகிறேன் என்று குறிப்பிடுகிறார்.

    பொறுமை:
    காலம் காலமாய் பொறுமையைக் கடைபிடித்து ஒரு தாய் இந்த மண்ணின் பெருமையை காப்பாற்றி வருகின்றாள்.  இந்த பண்பு அவளின் பிறப்பிலேயே வந்தது என்பதைக் கவிஞர்
    “மண் வளர்த்த பொறுமையெல்லாம் மனதில் வளர்த்தவளாய்
    கண்மலர்ந்த பெண்மயிலை நானடைந்தேன்
    நீ வளர்ந்து மரமாகி நிழல்தரும் காலம் வரை
    தாய் மனதைக் காத்திருப்பேன் தங்க மகனே” ……………………………. (பாகப்பிரிவினை)
    என்ற வரிகளின் மூலம் தந்தை தன் மகனுக்கு தாயின் பெருமையைச் சொல்லி அவனுடைய கடமையை உணர்த்துவதை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர்.

    “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை”.……………………………………………………………. (குறள் – 151)
    என்பது வள்ளுவரின் வாக்கு.

    பலவகை கருவிகளைக் கொண்டு தன்னை அகழ்கின்ற மக்களுக்கு, வாழ்க்கைக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருள்களையும் கொடுத்துக் காப்பாற்றுகின்ற நிலத்தைப் போன்று, தன்னை அவமதித்துத் துன்புறுத்துபவர்களையும் பொறுத்துக் கொண்டு அவர்களுக்கு உதவி செய்வதே தலையாய பண்பு.

    காதல்:
    சங்க காலம் முதற்கொண்டு அனைத்து இலக்கியங்களிலும் காதல் வரிகள் இல்லாமலில்லை.  இன்னும் சொல்லப்போனால் காதல் இல்லாத இலக்கிய பக்கங்களே இல்லை என்று கூறுமளவிற்கு “காதலை” அழகுபடக்  கையாண்டிருக்கின்றனர். “உலகப் பொதுமறை” என்று சிறப்பித்து கூறப்படும் வள்ளுவம் கூட தன்னுள் மூன்றில் ஒரு பங்கு இடத்தை காதலுக்கு என்று ஒதுக்கி வைத்து புகழ் சேர்க்கிறது.

    காதல் என்னும் மாளிகைக்கான கதவுகளின் திறவுகோல்தான் கண்கள் என்கிறார் கவிஞர்.  கண்கள் பேசுவதாகவும், அப்படி பேசுவதை மொழியாகவும், கண்களின் அசைவை சிரிப்பாகவும் வர்ணித்தவர் கவிஞர்.
    “நிலவென்ன பேசும், குயிலென்ன பாடும்
    மலரென்ன சொல்லும் மனதிலே!
    கதை பேசுமோ, இன்பக்கவி பாடுமோ இங்கு
    கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே”.……………………………… (ராணி சம்யுக்தா)
    இப்பெருமைமிகு காதலின் துவக்கத்திற்கு, கொடியசைத்து வரவேற்பிதழ் அளிக்கும் கண்கள் எந்த அளவு பெருமை கொண்டதாய் இருக்க வேண்டும் என்று சிந்திக்கிறார் கவிஞர்.

    வள்ளுவரோ,
    “எண்ணெண்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண் என்பவாழும் உயிர்க்கு”.……………………………………………………………….. (குறள் – 392)
    என்று எண் அறிவு, எழுத்தறிவு, அதாவது கணக்கு, இலக்கியம் இரண்டும் மக்களுக்குக் கண்ணெணப் போற்றிப் பாராட்டத் தக்கவையாகும் என்கிறார் அத்துடன் நில்லாது கண் உடையவர் மட்டுமே அறிவிற்சிறந்தவர் என்றும், அறிவு அற்றவர்கள், கண்கள் பெற்றவராயிருந்தும், அக்கண்கள், முகத்தில் தோன்றிய புண்கள் என்றும் சுட்டுகிறார்.  இதிலிருந்து கண்களின் பெருமை தெரிகிறது.
    “கண்ணுடையவர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையவர் கல்லா தவர்”……………………………………………………………. (குறள் – 392)

    காதலே பெருமை கொண்டது.  அப்பெருமை மிகு காதலைக் கொள்வது கண்கள்! அதனால் தலைவன் தலைவியை கீழ்கண்ட பாடல் மூலம் வர்ணிக்கிறார்.
    “பொன்னென்பேன் – சிறு
    பூவென்பேன் – காணும்
    கண்ணென்பேன் – வேறு
    என்னென்பேன்?”…………………………………………………………………. (போலீஸ்காரன் மகள்)
    என்று தன் காதலியை ‘கண்’  என்று வர்ணிக்கிறார்.
    கண்களின் உயிரே பார்வைதானே! பார்வையற்ற கண்கள் இருந்தென்ன பயன் விளையும்?  அந்த பார்வைதானே தலைவனை காதல் கொள்ளவைத்தது.  அதனால் தலைவி பதில் உரைக்கிறார்.
    “………………கண்கள்
    நானென்றால் – பார்வை
    நீயென்பேன்!”………………………………………………………………………….. (போலீஸ்காரன் மகள்)
    அதாவது, நான் கண் என்றால், நீ அதன் பார்வை என்று! இந்த மேன்மைக்கு பதிலைப் பெற்ற தலைவன், தான் அவள் கண்களில் கலந்திருப்பதாக கூறுகிறான்.

    தலைவியிடம் காதல் பிறந்தது என்பதை உணர்ந்த காதலன், அந்த காதலை எப்படி உறுதி செய்வது என்று தலைவியைப் பார்த்து, தான் கொடுத்த பார்வைக் கேள்விகளுக்குப் பதில் கேட்கிறாள்.
    “எந்தன் – பார்வையின் கேள்விக்கு
    பதிலென்ன சொல்லடி ராதா! ……………………………………………………………….. (சுமைதாங்கி)
    என்று கேட்க, அதற்கு தலைவி, என் பார்வையே, உன் பார்வையின் கேள்விக்குப்பதில் என்று, கூறி தலைவனை காதலில் மூழ்கடிக்கிறாள்.
    “உந்தன் – பார்வைக்குப் பார்வை
    பதிலாய் விளைந்தது ராஜா!”  ……………………………………………………………….. (சுமைதாங்கி)
    காதலின் துவக்கமே பார்வையில் தான்.  அதற்கு மாற்றுக்கருத்து இல்லை.

    தலைவி, தன் காதலனைப்பார்க்கும் போது, தன் கண்ணைச் சுருக்கிக் கொண்டு, பார்ப்பதை, கவிஞர் கண்ணதாசன் பாதி கண்மூடி, பின் திறந்து பார்ப்பதாகக் கூறுகிறார்.  அந்த பாதிப்பார்வையே தலைவனுக்குக் காதலை ஏற்படுத்தி விருந்து படைக்கிறது.  அந்த பாதிக்கண் பார்வையிலேயே காதல் வலைவீசி, காதல் சிறையில் தலைவனை அடைத்துவிட்டாளாம் அந்த தலைவி,
    “பாதிக்கண்ணை மூடித்திறந்து
    பார்க்கும் பார்வை காதல்விருந்து !
    …………………………..
    சின்னக் கண்ணில் என்னை அடைத்தாள் !”……………………………….. (இது சத்தியம்)
    மற்றும்,
    “பாதிகண்களை மூடித்திறந்து பார்ப்பதில் இன்பம்” ……………… (எங்கள் தங்கராஜா)
    என்பன போன்ற பல புதுப்புது பரிமாணங்களை, இந்த இருபதாம் நூற்றாண்டில் நம் கண்ணுள்ளே கோடிட்டுக் காட்டியவர் கவியரசு கண்ணதாசன்.

    இக்கருத்தை வள்ளுவபெருமான்,
    “குறிக்கொண்டு நோக்காமை அல்லால், ஒருகண்
    சிறக்கணித்தாள் போல நகும்”………………………………………………………….. (குறள் – 1095)
    என்பதன் மூலம், தலைவன், தன் மீது குறிப்பாய் இருப்பதைப் பிறர் அறியுமாறு பார்க்காமல் விடுத்து, நான் மட்டும் அறிந்து கொள்ளுமாறு கடைக்கண்ணைச் சிறிதே மூடி, இமைகளை படபடவென இமைத்து நகைப்பாள், என்கிறான். இதில் நகும் என்ற வார்த்தை, அவளாக நினைப்பதாகப் பொருள் கூறாது.  ஒரு கண் சிறக்கணி ஆவதால், உதடு நகுகிறது.  அதற்குக் காரணம் தலை சற்றே சாய்ந்துள்ளதாம்.  அது, சரசக்கலையில் ஒரு வகையாம்!

    “பாயுது பாயுது கண்ணம்மா
    பதுங்குது பதுங்குது பொன்னம்மா,
    சாயுது சாயுது தலையம்மா
    சரசத்திலே ஒரு வகையம்மா!
    பொண்ணாப் பொறந்தவ நானம்மா
    ஆசை வராதா சொல்லம்மா?” …………………………………………………………….. (மணியோசை)

    இங்கு தலைவி, நான் பெண் என்பதால், ஆசைவரக் கூடாதா?  என்று வினாவும் எழுப்புகிறாள்.  காதலில் சரசத்தின் விளைவால், தலை “சற்றே” சாய்தலையும் குறிப்பிடுகிறார்.
    “தங்கச்சி சின்னப்பொண்ணு
    தலை என்ன சாயுது!” ………………………………………………………………………….. (கறுப்புப் பணம்)
    என்றும்,
    “காற்று வந்தால் தலை சாயும்?
    நாணல்
    காதல் வந்தால் தலை சாயும்?
    நாணம்!” ……………………………………………………………………………………… (காத்திருந்த கண்கள்)
    இவ்வரிகளிலிருந்து, காதல் வரும்போது, கண்ணியர்க்கு நாணமும் உடன் வந்து விடுகிறதென்றும் நாணம் வருவதென்பது காதலில் தலை சாய்வதின் தொடர்ச்சி என்றும் தலைவியின் தவிப்புகளைப் பல பரிமாணங்களில் காட்டிய கவிஞர் கண்ணதாசன் நாணத்தில் தலை சற்றே சரிவதாகக் காட்டி அது காதலின் வெளிப்பாடு என்கிறார்.

    காதல் என்பதை சரிவரப்புரிந்து கொள்ள முதிர்ச்சி இல்லாத நிலையில்,  இச்சமூகம் இருந்த போதும், உலகம் என்ன சொல்லும் என்பதைப் பற்றி கவலையே படாமல், தன் உள்ளம் சொல்வதையே வெளிப்படுத்திய உண்மைக் கவிஞன் என்பது மறுக்க இயலா உண்மை!

    குடும்பம்:
    ஒரு குடும்பத் தலைவர், குடும்பத் தலைவி என்றால் இருவரும் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து குடும்பம் நடத்தினால் அது ஒரு பல்கலைக்கழகத்திற்கு சமம்.
    “நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
    அன்புமணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க” …………………………….. (தங்கப்பதக்கம்)
    என்று திரையிசைப் பாடலில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.

    இதையே வள்ளுவப் பெருந்தகை,
    “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது”………………………………………………………………………………..(குறள் – 45)
    என்று வலியுறுத்துகிறார்.  இதற்கு மாறாக நடந்தால் குடும்பம் என்பது இன்பத்திலிருந்து மருவி கொடுந்துன்பமாக மாறிவிடும் என்கிறார்.

    மழலைச் செல்வம்:
    “குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
    மழலைச் சொல் கேளாதவர்”…………………………………………………………………….(குறள் – 66)
    தம் குழந்தைகளின் மழலைச் சொல் பெற்றோர்க்கு குழல், யாழ் இரண்டின் இசையை விட மிகுந்த இன்பம் பயப்பதாகும்.  குழந்தைப் பேற்றால் மகிழ்ந்தோர் தன் மனம் மகிழுமாறெல்லாம் உருவகப்படுத்தி மகிழ்வர், அவ்வாறே கவிஞரும் மகிழ்கிறார்.

    கவிஞன் என்பவன் வெள்ளை உள்ளமும் உயரிய பண்புகளும் கொண்டவனாவான்.  மக்களின் கண்களுக்கு தெரிகின்ற பொருள்கள் கவிஞரின் கண்களுக்குப் பாடுபொருளாக மாறி, கண்களுக்குத் தனிப்பட்ட உணர்ச்சியைத் தூண்டிக் கவிபாட வைக்கும்.
    “மீட்டாத வீணை இது வீசிவரும் தென்றல்
    வாடாத முல்லை இது பாடிவரும் தேனீ
    தெவிட்டாத இனிமை இது திகட்டாத புதுமை
    பளிங்கான பதுமை இது பழகாத இளமை”.……………………………. (தென்றல் வீசும்)
    எனக் கவிஞர் பெண் குழந்தையை உருவகித்துள்ள திறம் புலப்படுகிறது.

    “முத்தான முத்தல்லவோ
    முதிர்ந்து வந்து முத்தல்லவோ
    கட்டான மலரல்லவோ
    கடவுள் தந்த பொருளல்லவோ!” ………………………………………..(நெஞ்சில் ஓர் ஆலயம்)
    எனவும் குறிப்பிடுகிறார்.  கவிஞருக்கு தாய்மை என்ற உணர்வில், தாலாட்டு என்ற முத்துப் பிறக்கின்றது.
    கவியரசரின் நல்ல சொல்லாட்சியோடு தகுந்த வடிவில் கற்பனை மிளிர்ந்திடப் பிறந்தமையால் இன்றும் அவர் படைப்புகள் புகழ் பூத்துத் திகழ்கின்றன.

    கவியரசர் கண்ணதாசன் ஒரு மாபெரும் கவிஞன்.  பண்டிதத் தமிழைப் பாமரர்களுக்கும் சாசனம் செய்தவர்.  தற்போது நாம் வாழும் காலத்தில் கம்பனுக்கு அடுத்தபடியாக கவியரசர் கண்ணதாசன் போன்று மக்கள் மனதை ஈர்த்த கவிஞர் பூவுலகில் நாம் கண்டதில்லை.  எமக்குத் தொழில் கவிதையென்று பாடிய பாரதிபோல்
    “இசைப்பாடலிலே என் உயிர்துடிப்பு, நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு”
    என்று கவியரசர் கண்ணதாசன் தன்னைப்பற்றிக் கூறியுள்ளார்.  கண்ணதாசனின் உயிர் துடிப்பையும், அவர் கவிதை அழகின் சிரிப்பையும் நாள்தோறும் தமிழ் கூறும் நல்லுலகெங்கும், பட்டித் தொட்டிகளில், கற்றவர் கல்லாதவர் பேதமின்றி அவர் பாடலை கேட்டு மயங்குவதில் இருந்தே நாம் தெரிந்துக்கொள்ளலாம்.

    (தொடரும் …)

    படம் உதவி நக்கீரன் இணையதளம்: http://www.nakkheeran.in/users/frmGallery.aspx?G=41226&GS=4&GV=1972

    Share
  • வாழ்க்கை நலம் – அணிந்துரை

    சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ. சிவஞானம்

    அணிந்துரை

    தவத்திரு குன்றக்குடி அடிகளார், தாம் கொண்ட கோலத்திற்கேற்ப தலைசிறந்த ஆன்ம ஞானி. தெய்வ பக்தியோடு, தேச பக்தியும் கொண்டவராதலால் ஆன்மிகத்தோடு அறிவியலையும் கலந்து சிந்திக்க அவரால் முடிகிறது. பற்றுக்கள் பலவற்றை விட்டு துறவியான அடிகள், தமிழ்ப்பற்றை மட்டும் துறக்காதவராகி, தமிழர் வாழ்வில் எங்கும் எதிலும் தமிழே தலைமை தாங்க வேண்டுமென்ற கொள்கையுடையவராகி, அதற்காகப் பாடுபட்டும் வருகிறார்.

    அடிகளார் பல்வேறு காலங்களில் பல்வேறு அரங்குகளில் வெளியிட்ட கருத்துக்கள் இந்நூல் வடிவம் பெற்று தமிழர் கைக்கு வருகிறது. அடிகளார் ‘மெய்யறிவு’ நிலையில் மட்டுமல்லாமல், விஞ்ஞான அறிவிலும் தமிழ் தலைசிறந்து விளங்க வேண்டுமென விரும்புகிறார். அதனை பல்வேறு கோணங்களில் நின்று வெளியிட்டு தமிழர்களுக்கு வழிகாட்டுகிறார்.

    அறிவியற் கலைகளைப் பயிற்றுவிக்கும் கோயில்களான பல்கலைக் கழகங்களிலே இன்னமும் தமிழுக்கு இடமில்லை. அதாவது, தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களிலே அனைத்துப் பாடங்களிலும் தமிழில் போதிக்குங்கால், தமிழில் அறிவியல் நூல்கள் பெருகும். இந்தக் கொள்கையிலே நாங்கள் ஒன்றுபட்டவர்கள். இதனைச் சாதிக்க அரசின் துணை தேவைப்படுகிறது.

    அடிகளாரும், நானும் அத்துறையில் ஒன்றபட இறையருள் கூட்டுவிக்குமாக!

    நூலை விரிவாகப் படிக்கப் படிக்க எனது அறிவு விரிவடைகிறது. ஒவ்வொரு தமிழரும் எனது நிலையை அடைய இந்நூல் பயன்படுமாக!

    கலைவாணி புத்தகாலயத்தின் உரிமையாளர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் நன்றாகப் பதிப்பித்துள்ளார்.

    அடிகளாருக்கு என் மனமுவந்த நன்றி. பதிப்பகத்தாருக்கு என் பாராட்டு.

    ம. பொ. சிவஞானம்
    சென்னை – 18

    28-12-1992

     

    “வாழ்க்கை நலம்”
    தவத்திரு குன்றக்குடி அடிகளார்
    கலைவாணி புத்தகாலயம்
    சென்னை -17, முதற்பதிப்பு 1992

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    Project Madurai:  http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0467.html

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • வாழ்க்கை நலம் – 60

    குன்றக்குடி அடிகள்

    60. நலமுற வாழ்வோம்!

    உடல் ஒரு அற்புதமான கருவி. உடம்பில் உயிர் இயங்குகிறது. உடற்கருவி வாய்க்காது போனால் உயிர் இயக்கம் இல்லை. நுகர்வு இல்லை. அறிவு இல்லை. உயிர் வாய்பாக அமையாது போனால் உடல் பயனற்றது. உடல் உயிருடன் இணைந்திருக்கும் பொழுதுதான் பெயர். உடலைவிட்டு உயிர் பிரிந்துவிட்டால் பெயர் போய்விடுகிறது. பிணம் என்ற புதுப்பெயர் வருகிறது.

    வாழ்வதற்கு இந்த வாழ்க்கையை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். வாழ்வாங்கு வாழ வேண்டும். முழுமையாக வாழ்தல் வேண்டும். உடல் – உயிர் சார்ந்த வாழ்க்கைக்குப் புலன்கள் முதன்மையானவை.

    புலன்கள் மூளையின் சார்புடையன. மூளையின் இருப்பு தலை. “எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்” என்பர். உடலுக்கு வாய்த்துள்ள கருவிகள் இரு வகையின. ஒன்று அறிவுகருவிகள். இவை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியன. பிறிதொன்று செய்கருவிகள். இவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன.

    மனம் ஆற்றல் வாய்ந்த கருவி. காற்றைவிட வேகமாகச் செல்லும் தன்மையது. ஆனால், எங்கு, ஏன் போகிறோம் என்று அதற்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆசைப்படுவதில்லை. இந்தப் பணியை புத்திதான் செய்கிறது. மனம் பற்றும் செய்திகளை ஆய்வு செய்து எடுத்துக் கொள்வதுதான் புத்தியின் வேலை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் புத்தி அளவுக்கு வளர்வதில்லை. மனத்தளவிலேயே நின்று விடுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் உணர்ச்சிவசப்படுவார்கள்; வாழத் தெரியாதவர்கள். சித்தம் சிந்திப்பது.

    சிந்தனை மனிதரின் சிறந்த அகநிலைத் தொழிற்பாடு! சித்தம் மிக மிக நுண்மையான பகுதியைக்கூட ஆய்வு செய்து, உண்மைகளைக் கண்டுபிடிக்கும்; ஆழமான உண்மைகளைக் கண்டுபிடிக்கும். அகங்காரம் என்பது முடிவு செய்யும் உறுப்பு. எடுக்கப்பெறும் முடிவுகள் மெய், வாய், கண், மூக்கு, செவிகள் வாயிலாகச் செயற்பாடுறும். இது உடலியக்கம்.

    உடலியக்கத்திற்கு உடலோடு கூடி வாழ்தலுக்கு இயற்கை, கால எல்லை நியதி செய்திருக்கிறது. மிகப்பெரிய சாதனைகள் செய்யக்கூடிய ஆற்றல் உடையது இந்த வாழ்க்கை. இந்த வாழ்கையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். மானுட வாழ்க்கையின் காலம், ஆற்றல் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

    புத்தி, ஆழமான உண்மைகளைக் காணுதல் வேண்டும். கண்கள் அறிவார்ந்த நெடிய தொலைநோக்குப் பார்வை பெற வேண்டும். கைகள் உழைக்கும் கரங்களாக விளங்க வேண்டும். இந்த உடல் நோய்களால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப் பெற வேண்டும். கதிரொளியில் தோய்தலும், காற்றில் உலாவுதலும் உடலுக்கு நல்லது.

    உடல், ஒரு உழைப்புச் சாதனம் – கருவி. இந்த உடலுக்குப் போதிய உழைப்புத் தராது போனாலும் நோய் வரும். உடல், உழைப்பில் ஈடுபடுத்தப் பெறுதல் வேண்டும். உடலுக்கு இசைந்த உழைக்கும் ஆற்றலைத் தரக்கூடிய நல்ல உணவு தேவை. இவையெல்லாவற்றுக்கும் மேலாக நல்ல எண்ணங்கள் வேண்டும். நல்ல எண்ணங்கள் நல்ல நினைவுகள் இல்லாத வாழ்க்கை நச்சுத்தன்மை அடைந்துவிடும்.

    மேலும் சிறப்பாக உயிருக்கு உயிராக விளங்கும் கடவுளிடம் பேசி மகிழ வேண்டும். இவையெல்லாம் அமைந்து நலமுற வாழ்தல் அறிவியல் சார்ந்த வாழ்க்கை. வாழ்வாங்கு வாழ்வோம்! வையத்திற்கு அணியாக வாழ்வோம்!

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • வாழ்க்கை நலம் – 59

    குன்றக்குடி அடிகள்

    59. அறிவு

    அறிவு, மானுட வாழ்க்கையை இயக்கும் ஒரு சிறந்த கருவி. இன்று பலர் கருதுவது போல அறிவு என்பது தகவல்கள் அல்ல. செய்திகள் அல்ல. அறிவு ஒரு கருவி(instrument) துன்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் கருவி. செவி வழிக்கேட்கும் செய்திகளை, அவற்றில் உள்ள நன்மை, தீமைகளை ஆய்வு செய்வது அறிவு. ஏற்றுக் கொள்ளக் கூடிய நன்மைகளை மட்டும் ஏற்பது அறிவுடைமை.

    அதுபோல, இந்த உலகில் உள்ள பொருள்களைச் சார்ந்தது தான் வாழ்க்கை. சில பொருள்கள் நல்லன போலத் தோன்றும்! ஆயினும் தீமையே பயக்கும்!

    காட்சியில் வேறாகவும் அனுபவத்தில் வேறாகவும் காணப்படும் பொருள்களின் தன்மையை ஆராய்ந்து எடுத்துக் கொள்ளுதலே அறிவுடைமை. அறிவு பல்வகைப் பிரிவாக வளர்ந்து இந்த உலகின் துறைகள் அனைத்தையும் செழிக்கச் செய்கின்றது. இது பகுத்தறிவு முதன்மையானது.

    பகுத்தறிவு மாந்தர் அனைவருக்கும் உரியது. ஆனால், பலர் பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை. அறிவு வளர்ந்தே ஞானம் தருகிறது. ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கைக்கு அறிவே மூலதனம். இந்த உலகில் பெறக்கூடிய பேறுகள் யாவற்றிலும் சிறந்தது அறிவுடமையேயாம். அறிவுடையார் எல்லாச் செல்வங்களும் உடையவர்.

    “அறிவுடையார் எல்லாம் உடையார்” என்றது திருக்குறள். அறிவு கல்வியால் பெற இயலும்! ஆனால், கல்வி கற்றவர் எல்லாம் அறிவுடையராவர் என்று எண்ணற்க. கற்றவர்களிலும் அறிவில்லாதவர் உண்டு. கற்ற கல்வி, கருத்து வாழ்க்கையில் சோதனைப்படுத்தப் படும் பொழுது தான் அறிவு உருவாகிறது. அறிவு – பகுத்தறிவே இந்த உலகைப் புரிந்து கொள்ளவும் இந்த உலகில் சிறப்புற வாழ்ந்திடவும் துணை செய்கிறது.

    அறிவு, முற்காப்புக் கருவியாகவும் தொழிற்படுகிறது. அதாவது, துன்பம் வந்து தாக்காமல் நெறியில் உய்த்துச் செலுத்துவது அறிவு. இனி எதிர்வரும் காலத்திலும் துன்பம் வந்தணையாமல் காப்பதும் அறிவுதான்! வாழ்க்கை ஒரு அரியகொடை; வைப்பு; இந்த வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்புற்றிட அறிவு தேவை. அறிவு காட்டும் வழியில் வாழ்தலே வாழ்வு. “மேலான சக்தி” களை நம்புவதில் பயனில்லை.

    அறிவு ஒரு போதும் தீமை செய்யாது. அறிவுக்குக் கொடுக்கும் விலை சிறந்த மூலதனம். அறிவுடையார்கள் பலவீனர்களாக இருக்க மாட்டார்கள். அதனால், சூழ்நிலைகளால் பாதிக்கப்பட மாட்டார்கள். சூழ்நிலைகளைக் கடந்தும் சூழ்நிலைகளை உண்டாக்கிக் கொண்டும் வளரும் தன்மை அறிவுடையவர்களுக்கு உண்டு.

    இயற்கை அறிவுக்கு ஆக்கம் சேர்ப்பது நூலறிவு. நூலறிவுக்கு ஆக்கம் சேர்ப்பது ஆய்வியல் சார்ந்த அறிவு. ஆராய்ந்து அறிந்த, அறிவுக்குப் பெயர் நுண்ணறிவு. நுண்ணறிவுக்கு ஆக்கம் சேர்ப்பது பட்டறிவு. இங்ஙனம் வாழ்க்கையின் வாயில்கள் தோறும் வளர்ந்து செழுமைப்படுவது அறிவு.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • வாழ்க்கை நலம் – 58

    குன்றக்குடி அடிகள்

    58. ஆன்மாவின் உணவு!

    மனிதன் பிறப்பதில்லை; மனிதன் உருவாக்கப்படுகின்றான். இதுவே அறிவியல் உண்மை. மனிதனை உருவாக்குவதில் கல்வி வகிக்கும் பாத்திரம் மிகமிகப்பெரியது. கல்வியின் இலட்சியமே மனிதனை உருவாக்குவதுதான்! அதனால் மனிதனை உருவாக்கும் கல்வியினும் விழுமியது இல்லை.

    மனிதனின் பொறி, புலன்களைப் பயனுடையனவாக்கி வாழ்க்கையை வளர்த்து விளக்கமுறச் செய்வது கல்வியே! மனிதன் அளப்பரிய ஆற்றலுடையவன். மனிதனின் ஆற்றல் கல்வியின் மூலமே இனங்காணப் பெற்றுச் செயலாக்கத்திற்குப் பயன்படு நிலைக்குக் கொணரப்படுகிறது! ஏன் கல்வியே ஆன்மாவின் சிறந்த உணவு.

    திருக்குறள் ‘கற்க’ என்று பேசுகிறது. ஆம்! கல்வி கற்பது மனிதர்களின் பழக்கமும் வழக்கமும் ஆக வேண்டும். கற்றல் பலவகை. அவற்றுள் எளிமையானது, முதன்மையானது தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தைக் கூர்ந்து நோக்குவதன் மூலம் கற்பது.

    “கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆவான்” என்பது பழமொழி. கண்டது = கண்ணால் கண்ட இயற்கைக் காட்சிகளையே கற்பது. இங்ஙனம் கற்ற பாடங்களையே ஐசக் நியூட்டனின் ‘புவி ஈர்ப்பு ஆற்றல்’ கண்டுணரப் பெற்றது என்பதறிக.

    அடுத்து அவரவர் சொந்த வாழ்க்கையின் பட்டறிவு வழி பெறும் கல்வி அறிவு. இந்தக் கல்வி தனி முயற்சியில்லாமல் வாழ்க்கையின் வழியிலேயே கற்கப் பெறுவது வாழ்க்கையில் ஏற்படும் வெற்றிதோல்விகள் நம்பிக்கையுடனும் நல்லெண்ணத்துடனும் ஒட்டி உறவாடி வாழ வேண்டிய இடத்தில் முரண்பாடுகள் தோன்றுதல், நம்பிக்கையின்மை வளர்தல் ஆகியன வாழ்வியலுக்கு நல்லவையல்ல.

    மனிதர்களிடையில் மன முறிவுகள் தோன்றுவதும் அவ்வழி மனித உறவுகள் பாதிக்கப்படுவதும் ஏற்க இயலாத ஒன்று. அன்றாடம் வாழ்ந்த வாழ்க்கைப் பாங்கைத் திறனாய்வு செய்து, திறனாய்வு வழி வாழ்நிலைகளை அறிந்து கடைபிடித்தல் சிறந்த கல்வி.

    மூன்றாவது, நூல்களைக் கற்பதன் மூலம் பெறும் அறிவு. இந்தக் கல்வி முறை தான் இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது. மக்கள் மத்தியில் நடைமுறையில் இருப்பதும் இந்தக் கல்வியே! இந்தக் கல்வியை மக்கள் பெறுவதற்காக நாடு செலவழிக்கும் காலமும் பணமும் அளவிடற்கரியது.

    ஆயினும் போதிய பயன் இல்லை; ஏன்? கல்வி முறையே காரணம். இன்றைய கல்வியில் சிந்தனைக்கு வாய்ப்பில்லை; செயலுக்குரிய வாய்ப்பு மிக மிகக் குறைவு. கல்வி கற்றதனால் எந்த ஒரு தனித்தகுதியும் வந்தடைந்ததாக இல்லை. ஏன்? கற்கும் ஆர்வம் கூட இல்லை.

    திருக்குறள் ‘கற்க’ என்று கூறுகின்றது. ஆம்! கற்பது – இடையீடில்லாது தொடர்ந்து கற்பது மனிதனின் கடமை; ஏன் கற்க வேண்டும்? மனிதன் அளப்பரிய ஆற்றலுடையவன். அவன் எண்ணிய செயல்களைச் செய்ய முடியும். ஆயினும் அவனுடைய அகநிலைக் குற்றங்களாகிய அச்சம்,பயத்திலிருந்து விடுதலை பெற்றால் தான் கற்கும் கல்வி பயன்தரும்.

    “கசடறக் கற்பவை கற்க” என்றது திருக்குறள். “கசடு” – மனக்குற்றங்கள். மனக்குற்றங்களை நீக்கும் மருந்து கருத்துக்கள் தாம். கருத்துக்கள் பெரும்பாலும் நூல்கள் வாயிலாகவே கிடைக்கும். கற்க வேண்டிய நூல்களைத் தேடிக்கற்ற பிறகு அக்கருத்துக்கள் வழி நடந்து அக்கருத்துக்களுக்கு உரிமையுடயராதல் வேண்டும்.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • வாழ்க்கை நலம் – 57

    குன்றக்குடி அடிகள்

    57. “மெய்ப்பொருள் காண்பதறிவு”

    இந்த உலகம் பொருள்களால் ஆயது. பொருள்கள் தம்முள் வேறுபட்ட தனித்தன்மைகள் உடையன. சில பொருள்கள் வேறுபட்டு விளங்கினாலும் பிறிதொரு பொருளுடன் ஒன்றும் இயல்புடையன. சில தனித்தன்மை பெற்றே விளங்குவன.

    மாந்தர் வாழ்க்கை பொருள்களுடன் தொடர்புடையது வாழ்வின் துறைதோறும் வாழ்வு முழுவதும் பொருள்களுடன் யாதானும் ஒரு உறவு இல்லாமால் வாழ்க்கை அமைவதில்லை; அமையாது; அமைதல் முடியாது. அதனால் தான் திருக்குறள், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்றது.

    பொருள்களால் ஆயது வாழ்க்கை. இந்தப் பொருள்களை பொருளின் தன்மைகளை உள்ளவாறறிந்து அப்பொருள் தன்மைக்கு ஏற்பவும் வாழ்க்கைக்குரிய வகையிலும் பயன்படுத்த அறிந்து கொள்ள வேண்டும். பொருள்களின் தன்மையறிதலுக்குத் தனித்திறனும் பயிற்சியும், அறிவும் வேண்டும். பல பொருள்கள் தோற்றமான நிலையிலேயே தொடர்ந்து இருப்பதில்லை. மாறும் தன்மை உடையன உண்டு. சில பொருள்கள் நிலையாயின போலத் தோன்றும்; பெயர் பெற்று விளங்கும்.

    ஆனால் நிலையில்லாதவனாகிப் போதலும் உண்டு. சில நன்மை தருவது போலக் காட்டி துன்பம் தரும், சில துன்பம் தருவது போலக் காட்டி இன்பம் தரும். சான்றாக நமது உடலுக்கு “மெய்” என்று பெயர். அனால், இது உண்மையல்ல. காலத்தால் கேடுறுதலாம். சர்க்கரை இனிமையானது. சர்க்கரையால் விளைவது பெருந்துன்பம். வெந்தயம் கசப்பான பொருள். ஆனால் வாழ்க்கைக்கு நலம் தருவது; இன்பம் தருவது.

    குளிர்ச்சியானவையாக இருப்பவை சூட்டையே தருகின்றன. சூடாக இருப்பவை குளிர்ச்சியையே தருகின்றது. ஆதலால் பொருளின் தோற்றம் பார்க்காமல் பொருளின் தன்மை, அப்பொருளால் விலையும் பயன் ஆகியன தெரிந்து அதற்கேற்பப் பயன்படுத்தல் வேண்டும். இத்தகு அறிவு சராசரி மனிதர்களுக்குக் கிடைப்பதில்லை. ஞானிகளுக்கே உண்டு.

    சாதாரண மக்கள் தோற்றதால் கவர்ச்சிக்கப்படுவர். தற்காலிகமானவையாக இருப்பினும் உடனடியாக பலன்களை எதிர்பார்ப்பர். எப்பொருளையும் ஆழ்ந்து நோக்குவதில்லை. வேளாண்மைக்குப் பயன்படும் இரசாயன உரங்கள் உரமே இல்லை.

    இரசாயன உரங்கள் ஒருவகைத் தூண்டு சக்தியேயாகும். ஆனால் நமது மக்கள் இவைகளை உரம் என்று நம்பினார்கள்; இந்த உரத்தையே நம்பி, குப்பை உரம் தயாரிப்பதை மறந்தார்கள். இதனால் நிலத்தின் பூசாரம் குறைந்ததுதான் மிச்சம். அறியாமை அறிவாக ஏற்றுக் கொள்ளப்படுதல் இன்றைய பெரு வழக்கு. இதற்கு அப்பரடிகள் ஒரு கதை கூறி விளக்கினார்.

    ஆமை சாப்பிடும் மக்கள், ஆமையை உலைப் பானையில் இட்டு வேக வைத்தார்கள். உலைப் பானையில் தண்ணீர் இளஞ்சூடாக இருக்கும் பொழுது ஆமை இன்ப போதையில் துள்ளி விளையாடும். ஆனால் அந்தச் சூடு இன்பமாக இருக்கும் பொழுது நீடிக்கப் போவதில்லை. விரைவில் கொதி நிலை மாறும்; ஆமை அழியும்.; இதனை உணரும் சக்தி ஆமைக்கு இல்லை. ஆமைக்கு மட்டுந்தானா? மனிதர்களில் பலர் இப்படிதான் வாழ்கின்றனர்.

    பெரும்பான்மையான மக்கள் காலப்போக்கில் துன்பம் விளவிப்பனவற்றையே இன்பமெனக் கருதி வாழ்ந்து ஏமாற்றத்திற்கு ஆளாகின்றனர். இதனைத் திருவள்ளுவர்,

    “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” (திருக்குறள் – 355) என்றார்.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • வாழ்க்கை நலம் – 56

    குன்றக்குடி அடிகள்

    56. அன்பு ஈனும் ஆர்வம்

    மானிட வாழ்க்கை நலமாக, இன்பமாக இயங்க அன்பு தேவை. கடவுள் மனிதனுக்கு என்று தனியே அளித்தது அன்பு ஒன்றுதான். அன்பு, உள்ளங்களை இணைக்கும் – ஆற்றலுடையது. “ஆற்றல் மிக்க அன்பு” என்பார் அப்பரடிகள். இந்த அன்பு வளருந்தன்மையுடையது. அன்பின் உணர்ச்சிக்கு எல்லை கிடையாது; நிபந்தனை கிடையாது.

    இந்த அன்பு தம்முடன் பழகுவோரின் இயல்புகளை அறிவது, அவர்தம் இயல்புக்கு ஏற்றவாறு தம் பழக்கங்களை, பழகும் நெறிமுறைகளை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்வதற்காக! தம்முடன் பழகுவோரின் விருப்பங்களை அறிந்து அவர்தம் பாங்குக்கு ஒத்துப் பழகினால்தான் அன்பு வளரும்; உறவு வளரும். “ஒத்தறிவான்” என்று திருக்குறள் கூறும். மற்றவர் தம்முடன் ஒத்துப்போக வேண்டும் என்றே விரும்புவர். இவர்களின் ஆன்மாவின் உயிர்ப்பாகிய அன்பு இல்லை.

    ஆன்மா எப்போதும் மற்றவர்களை நோக்கியே விரியும். உடல் எப்போதும் சுயநலத்தையே நாடும். ஆன்மாவின் ஆதிக்கத்தில் உடல் இயங்கினால் அன்பு, உறவு, தியாகம் எல்லாம் இருக்கும். அப்படி இல்லாது உடலின் ஆத்திக்கத்தில் ஆன்மா அடங்கிக் கிடந்தால் தன்னலம் மிக்கே விளங்கும்.

    தூய அன்பு விரிவடையும். தம்முடன் பழகுவோரின் இயல்பறிந்து பங்கறிந்து பழகுந்திறனில் வளரும். அவர் தம் தேவையறிந்து உதவும். அவர்தம் வாழ்வுக்காகத் தன் வாழ்வு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று கருதும். இந்த நிலை அன்பு முதிர்ந்து ஆர்வம் என்ற நிலைக்கு உயர்ந்த நிலை. “அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி” என்பது சேக்கிழார் திருவாக்கு.

    ஆர்வம் என்பது முறுகி வளர்வது. அன்பு, ஆர்வத்தைத் தருகிறது. ஆர்வம் நட்பைத் தருகிறது. அன்பு நிறைந்த பழக்கத்திலே தோன்றி ஆர்வத்தினால் வளர்க்கப்பெற்று நட்பு என்ற நிலையை அடைகிறது. நட்பு நிலைக்கு இணையான வாழ்க்கை நிலை – உறவு இந்த உலகிலும் இல்லை; வேறு எந்த உலகிலும் இல்லை.

    நட்புக்கு மறுபெயர் தோழமை. நட்பு இதயத் தூய்மையுடையது. நட்பு எல்லையற்றது; அழிவற்றது. அதனால் திருவள்ளுவர் “சிறப்பு” என்று சிறப்பித்துக் கூறுகிறார். “சிறப்பு” என்ற சொல் உயர்வற உயர்ந்த உயர் நலத்தைக் குறிப்பதாகும். அதுவும் எத்தகைய சிறப்பு? எளிதில் நாடிப் பெறுதலுக்கு இயலாத சிறப்பு!

    “அன்புஈனும் ஆர்வ முடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு” (திருக்குறள் – 74)

    இத்திருக்குறள் உளவியல் வாய்ப்பாட்டில் அமைந்தது. உளதாகிய அன்பு வளரும். அன்பு வளர்ந்தால் ஆர்வம் என்ற உள்நெகிழ்வைத் தரும். ஆர்வம் தன்னை மறக்கச் செய்யும். பழகுவோரின் இயல்பறிந்து அவர் தம்முடன் விருப்பத்துடன் பழகி நட்பினை அடைய வளர்த்து உயர்த்தும்.

    அன்புக்கும் நட்புக்கும் இடையில் இணையாக இருப்பது ஆர்வம். ஆர்வத்தினை உளவியலார் Aptitude என்பர். தமிழிலக்கியம், பாங்கு என்று கூறும்.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • வாழ்க்கை நலம் – 55

    குன்றக்குடி அடிகள்

    55. நாள் எனும் வாள்!

    ஒன்றின் தொகுதி தரும் உணர்வினை, படிப்பினைப் பகுதி தருவதில்லை. பகுதிகள் அற்பமாகக் கருதப் பெறுவது இயல்பாக இருக்கிறது. பல பகுதிகள் தொகுதியாகிறது என்ற உண்மையையும், பகுதி தொகுதியிலிருந்து பிரிக்கப்படாதது என்பதையும் நம்மனோர் உணர்வதில்லை. ஏன் தொகுதிகளுக்கு மதிப்புயர்கிறது?

    கடற்பரப்பின் தண்ணீர் கணக்கற்ற தண்ணீர்த் திவலைகளின் தொகுப்பேயாகும். அக்கடற் பரப்பிலிருந்து ஒரு திவலை பிரியுமானால் அந்தத் திவலை தன் வடிவத்தை – தன்னை இழந்து விடுகிறது. அதுபோலத்தான் பகுதிகளுக்கு மதிப்பீடும் மிக மிகக்க குறைவு! ஆயுளும் அற்பமே!

    மானுடத்தின் விலை மதிக்க முடியாத தொகுதி வாழ்க்கை. வாழ்க்கை காலத்தினால் ஆயது. வாழ்க்கையென்பது நூறாண்டாகவும் அமையலாம். கூடுதல் குறைவாகவும் அமையலாம். வயது என்பதும் நம் மீது திணிக்கப்படுகிறது. நாம் விரும்பினாலும் சரி, விரும்பாது போனாலும் சரி வயதுகள் வருதலும் வளர்தலும் தவிர்க்க இயலாதது. ஆனால், வாழ்க்கை என்ற தொகுதிக்குரிய விபத்தாகிய மரணம் வரும்போது எல்லாரும் பயப்படுகின்றனர்; அழுகின்றனர்; புலம்புகின்றனர். சாவிலிருந்து தப்பிக்க முயல்கின்றனர்.

    ஆனால், இந்த வாழ்க்கை என்ற தொகுதியின் பகுதியாகிய ஒரு வினாடி கடந்து செல்லும் போது யாரும் துணுக்குறுவதில்லை. கவலைப்படுவதில்லை. ஏன்? சாவு என்பது ஒருநாளில் வருவதில்லை. நாள்தோறும் சாவு வருகிறது. நொடி தோறும் சாவு வருகிறது. சாவை நோக்கி மெல்ல மெல்ல நகர்கின்றோம்.

    ஆனால், இந்த உணர்வு சாகின்றவர்களுக்கும் வருவதில்லை. சுற்றிலும் இருப்போருக்கும் வருவதில்லை. ஒரு மரம் வாளால் அறுக்கப்படுகிறது. நூல் நூலாகத்தான் அறுக்கப்படுகிறது. அதுபோலத்தான் வாழ்நாளும்! இன்று, நாளை என்று நாள்கள் ஓடுகின்றன. நொடிதோறும் வாழும் பொழுது வாழ்நாள் சுருங்குகிறது. ஆக மொத்தத்தில் சாவு வந்துவிடுகிறது.

    ஆனால், வாழ்க்கைப் பயணத்தில் நொடிப் பொழுதுகள் எல்லாம் வாழ்க்கைக்குரியவை. ஒவ்வொரு நொடியும் வாழ்வே! ஒவ்வொரு நொடியிலும் சாகின்றோம் என்று உணர்ந்தால் வாழ்நாள் வீணாகாது. வாழ்நாள் முழுமையும் பயன்படுத்தலாம். புகழ்பட வாழலாம். ஆனால் உளவியல் நொடிதோறும் சாகும் சாவிற்குக் கவலைப்படுவதில்லை. இஃது ஒரு வினோதமான உளப்போக்கு!

    “நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்” (திருக்குறள் – 334)

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • வாழ்க்கை நலம் – 54

    குன்றக்குடி அடிகள்

    54. எளிய வாழ்வியல் உண்மை!

    ஒருவர் நமக்குத் தீமை செய்தால் நாம் திரும்ப அவருக்குத் தீமை செய்தல் பழி வாங்குதல் ஆகும். இந்த பழிவாங்கும் உணர்வு இயல்பாகவே மாந்தரிடம் அமைந்துள்ளது. ஆயினும், நல்லொழுக்கம், பண்பாடு என்பது பழி வாங்காமையேயாகும். ஏனெனில், உணர்ச்சி வசப்படுதல் என்பது இயல்பு ஆயினும் பழிவாங்குதலிலும், பொறுத்துக் கொள்ளுதல் கடினமான காரியம்.

    பழிவாங்கும் நிகழ்வு சங்கிலித்தொடர் போலத் தொடரும். ஆனால் பொறுத்தாற்றும் பண்பு தீமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடும். அற்ப மனமுடையவர்கள் பழிவாங்குவர்.

    திருக்குறள் பழிவாங்குதலை வெறுக்கிறது; வெறுத்து ஒதுக்குகிறது. ஆயினும் உயர்ந்த பண்புகளை எளிதில் எடுத்துக் கொள்ளும் இயல்பறியா மாந்தரிடத்தில் பழிவாங்குதல் தீது என்ற அறிவு எளிதில் வராது. ஆதலால் திருவள்ளுவர் உளவியல் அறிவியல் நியதியில் பழிவாங்கும் உணர்ச்சிவசப்பட்டு நிற்கும் மனிதனை அணுகுகிறார்.

    ஆம்! எடுத்த எடுப்பில் யாரிடமும் அறிவுரைகள் – உபதேசங்கள் விலைபோகா. முதலில் அவருடைய நம்பிக்கையைப் பெறவேண்டும். உணர்ச்சி வெள்ளம் வடிவதற்குரிய காலம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் உணர்ச்சியிலிருந்து விடுதலை பெற்றுச் சமநிலைக்கு வந்த பின்னரே எத்தகைய அறிவுரையையும் கூறவேண்டும். அப்போதுதான் அறிவுரைகள் எடுக்கும்.

    “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” (திருக்குறள் – 314) என்பது குறள்.

    பழிவாங்கும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நிற்பவன் ஞானம் இல்லாதவன்; அற்ப அறிவு உடையவன். ஆதலால் முதல் நிலையில் பழிவாங்கும் உணர்ச்சியின் உச்சியில் நிற்பவனுக்கு உடன்பட்டே பேசியாக வேண்டும். இல்லையெனில் திருவள்ளுவரையுமே அவன் மறுத்து விடுவான்.

    ஆதலால் திருவள்ளுவர் “இன்னா செய்தாரை ஒறுத்தல்” என்று தொடங்குகின்றார். தமக்குத் துன்பம் செய்தாருக்குத் தாம் ஒறுத்தல் செய்ய வேண்டும்; கட்டாயம் ஒறுத்தல் செய்ய வேண்டும். இந்த அறிவுரை தொடக்க நிலையிலேயே வெகுளியின் உச்சக்கட்டத்தில் நிற்பவனுக்கு ஆறுதலாக இருக்கிறது. அதனால் சினம் தணிகிறது; உணர்ச்சி வடிகிறது. மனிதன் மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு இறங்கி வருகின்றான். தன்னுடைய கொள்கைக்கு உடன்பட்டு நிற்கும் அவனுக்கு திருவள்ளுவர் மீதும் நம்பிக்கை பிறக்கிறது.

    இந்தச் சூழ்நிலையைத் திருவள்ளுவர் பயன்படுத்திக்கொண்டு தம் நிலைக்கு அந்த மனிதனை அழைக்கின்றார்; உயர்த்துகின்றார். ஆம்! பழிவாங்க வேண்டும். ஆனால் எப்படி? “தவறு செய்தவன் வெட்கப்படும்படியாக நன்மை செய்துவிடு!” என்று வள்ளுவர் கூறுகின்றார்.

    “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” (திருக்குறள் – 314) என்பது திருக்குறள்.

    “இன்னா செய்தாரை ஒறுத்தல்” – என்ற சொற்றொடர் உடன்பாட்டுச் சொற்றொடர். “அவர் நாண நன்மை செய்துவிடல் என்பது” பொறுத்தாற்றும் நெறியில் ஆற்றுப்படுத்தலாகும். இந்தக் குறள் சிறந்த உளவியல் அறிவியலைச் சார்ந்த குறள்.

    “எவருடனும் முதல் நிலையில் உடன்பட்டு நில்; அவருடைய நம்பிக்கையைப் பெறு; பின் அவர்களை உன் நெறிக்கு அழைத்துக் கொள்”. இது எளிய வாழ்வியல் உண்மை.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share