ரேவதிக்கு நாய்க் குட்டி வேணுமாம்…

0

–தாரமங்கலம் வளவன்.

பங்களாவின் கேட் அருகே நின்று கொண்டிருந்த அந்த பெண்ணை, மீனாட்சி ஏற்கனவே பார்த்திருக்கிறாள். தங்கள் அரிசி மண்டியில் குமாஸ்தாவாக வேலை செய்யும் சதாசிவத்தின் பெண் தான் அவள்.   பத்து வயது இருக்கும் என்று தோன்றியது.

தயங்கி தயங்கி நின்று கொண்டிருந்த அந்த பெண்ணைப் பார்த்து,

“ உள்ளே வா… தெறந்து தான் இருக்குது..” என்றாள் மீனாட்சி.

வந்த பெண்ணைப் பார்த்து,

“ நீ சதாசிவத்தின் பொண்ணு தானே.. பேரு என்னா…” மீனாட்சி கேட்டாள்.

“ ரேவதி..”  என்றாள் அந்த பெண்.

அந்த பெண் சற்று தயங்கி விட்டு,

“ உங்க வீட்டு நாய், நாலு குட்டி போட்டு இருக்கிறதா சொன்னாங்க… எனக்கு நாய் வளக்கணும்னு ரொம்ப நாளா ஆசை… எனக்கு ஒரு குட்டி கொடுப்பீங்களா..”

மீனாட்சிக்கு திகைப்பாய் இருந்தது அவள் கேட்டது.

Rishikesh Animal Care Community FaceBook Pageசதாசிவம், தன் வீட்டில் நாய் வளர்ப்பதாகச் சொன்னாரே..

அடிக்கடி, சாப்பாடு ஏதாவது மீதி ஆயிட்டா, வேஸ்ட் பண்ணாதீங்க, எங்க வீட்டு நாய்க்கு சாப்பிடறதுக்கு போடலாம்னு சொல்லி வாங்கிட்டு போவாரே..

உண்மையில் சதாசிவத்தின் வீட்டில் நாய் ஏதும் இல்லையா.

அப்படியானால், சதாசிவம் வாங்கிப் போன சாப்பாடு அவர் சாப்பிடத்தானா..

சதாசிவம் வீட்டில் அவ்வளவு வறுமையா..

ஐயோ பாவம் என்று மனதில் தோன்றியது.

“ உங்க வீட்ல நாய் ஏதும் இல்லியா….” மீனாட்சி ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

“ இல்ல… அப்பாகிட்ட ரொம்ப நாளா கேக்கிறேன்.. அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாரு..”

கொஞ்சம் இடைவெளி விட்டு,

“ நான் அந்த குட்டிகளை பாக்கணும்…” என்றாள் ரேவதி.

“ சரி.. பாரு.. பின்பக்கம் தான் இருக்கு. போய் பாரு..” என்று சொல்லி விட்டு மீனாட்சி சமையல் வேலையை பார்க்க போய் விட்டாள்.

பார்த்து விட்டு திரும்பி வந்த ரேவதி,

“ அந்த வெள்ளக் குட்டியை எனக்கு கொடுப்பீங்களா..” என்றாள்.

“ சரி கொடுக்கிறேன்.. ஆனா நான் கொடுத்ததா வீட்ல யாருகிட்டேயும் சொல்லாதே.. தெருவில அனாதையா இருந்திச்சி.. எடுத்து வந்தேன்னு சொல்லு..”

சரி என்று தலையாட்டி விட்டு,  நாய்க்குட்டியை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றாள் அந்த பெண் ரேவதி.

உள்ளே இருந்து வந்த மீனாட்சியின் கணவர்,

“ அந்த பொண்ணு கிட்ட ஏன் அப்படி பொய் சொல்லச் சொன்னே..” என்று கேட்டார்.

“ பாவம் நாலு பொண்ணுங்க… கஷ்ட ஜீவனம் போல இருக்கு.. இந்த மாசத்திலே இருந்து அவருக்கு சம்பளம் கொஞ்சம் கூட்டி கொடுங்க.. என்ன புரிஞ்சிதா..” என்று மீனாட்சி சொல்ல, அதற்கு அவள் கணவர் தலையாட்டினார்.

 

 

——————————————————————————————————————-
படம் உதவிக்கு நன்றி:
Rishikesh Animal Care Community FaceBook Page
https://www.facebook.com/RishikeshAnimalShelter

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.