வெ.திவாகர்
“முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே”
என்பார் மாணிக்கவாசகர். இறைவன் என்பான் பழமை நாம் என நினைக்கும் அந்தப் பழமைக்கும் பழமையானவன் என்ற அதே சமயத்தில் புதுமைக்குப் பின் வரும் புதுமைகளையும் புகுத்தி வருவன் அவனே என்பதாகப் பொருள் வரும். இந்தப் பதிவு எழுதும்போது இந்தப் பாடல் ஞாபகம் வந்தது. இருக்கட்டும்.
சென்ற ஞாயிறு, சென்னையில் ஒரு பயிற்சி வகுப்பு. இந்தப் பயிற்சி வகுப்பு என்பது எப்படி ஒரு புத்தகத்தை எளிய முறையில் மின்னாக்கம் செய்வது என்பது. இந்தப் பயிற்சியைக் கொடுத்தவர் கடலூரில் இருந்து இதற்காகவே வந்த டாக்டர் தி.வாசுதேவன் எனும் அரசாங்க மருத்துவர். புத்தகங்கள், அதிலும் மிகப் பழமையான ஆவணங்கள் கொண்ட புத்தகங்களை மின்னாக்கம் செய்து வைத்தால் பிற்காலத்தில் எத்தனை உபயோகப்படும் என்பதற்காக இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இத்தகவலை எனக்குக் கொடுத்து உதவியவர், நண்பர் ரீச் சந்திரா தான்.
டாக்டர் தி. வா.வை மின்னுலகக் குழுமத்தினர் பலர் அறிந்திருக்கலாம். இவருக்கும் எனக்கும் ஏற்பட்ட ஒரு பெயர்க் குழப்பத்தில் எனக்காக தன் பெயரைத் ’தியாகம்’ செய்து, ‘திவாஜி’ என இனி அழைக்கவும் எனப் பிரகடனம் செய்ததோடு அவர் பெயரையும் திவாஜி என்றே கையெழுத்தில் போட்டவர்.
நான் முதலில் ஆரம்பித்த மாணிக்கவாசகர் திருவெம்பாவைப் பாடலுக்கும் இவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. திவாஜி, பழமையைப் போற்றுவதோடு மட்டுமல்லாமல் தன் வாழ்நாளில் அப்படியே கடைப்பிடிப்பவர் கூட. சனாதன தர்மத்தின் ஆணிவேரான வேத தர்மத்தின் அடிச்சுவட்டில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். தொழில் மருத்துவமானாலும் மூன்று வேளையும் அக்னிஹோத்திரம் செய்து வருபவர். வேதத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு சனாதனியின் கடமை என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் கடலூரில் தக்கதொரு வேத பாடசாலை (ஸ்வாமிநாதர் வேத பாடசாலை) அமைத்தவர். இந்த வேத பாடசாலை பற்றி அறிய http://www.swaminathar.org/ என்கிற தளத்திற்குச் சென்றால் எல்லா விவரங்களும் புரியும், இவர் எளிமையும், ஸனாதான தர்மத்தில் இவருக்கு உள்ள இந்தக் கடமையின் நேர்த்தியும் புரியும்.
பழமை என்றில்லாமல் புதுமையான தற்காலத்து கணினி தொழில்நுட்பத்தை இவர் எல்லோரிடமும் எடுத்துச் செல்வது மிகவும் போற்றத்தக்கது . ’தொண்டுகிழங்களுக்குக் கணினி’ எனும் இவரது வலைப்பகுதியில் எளிய வகையில் எல்லோரும் புழங்கக்கூடிய வகையிலே கணினித் திறம் பெறுவது எப்படி என்று விளக்கி வருகிறார். இவரது இந்த வலைப்பகுதியிலே http://techforelders.blogspot.in/ சென்று பார்த்தாலே இவர் எப்படியெல்லாம் ஞானம் என்பது பலருக்கும் சென்று அடைய வேண்டும் என்பதை விரும்புகிறார் என்பது புரியும்.
திவாஜியின் இந்தச் சமூக சேவை, மிகவும் பாராட்டுக்குரியது. எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் இந்தக் கலியுகத்தில் இப்படியும் சிலர் தேர்ந்தெடுத்த சில நல்ல சேவைகளைச் செய்வதால்தான் நாடெங்கும் மழை தவறாமல் பெய்து வருகின்றதோ என்று நினைக்குமளவுக்குத் தொண்டு செய்து வரும் டாக்டர் திவாஜியை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து நாங்கள் கௌரவம் தேடிக்கொள்கிறோம்.
**** **** ****
கடைசி பாரா: அடடா.. இத்தனைப் பூக்களும் (புக்களும்?) ஒரு வாகனத்துக்காகவா தேமொழி?
என்ன ஒரு செக்கச் சிவப்பு
கண்ணைக் கவரும் வாளிப்பு
மதியை மயக்கும் வனப்பு
அழகிய பளபளப்பு மினுமினுப்பு

Leave a Reply