Blog

  • மங்கலம் ஆக விளங்கிறாள் வரலக்ஷ்மி!

    மங்கலம் ஆக விளங்கிறாள் வரலக்ஷ்மி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மங்கலம் என்பது எங்கும் தங்கிட
    வரமருள் என்றுமே வேண்டுவார் யாவரும்
    தந்திடும் தாயாய் இருப்பாள் வரலக்ஷ்மி
    வரலக்ஷ்மித் தாயைப் போற்றுவோம் வாரீர்

    காத்திடு தாயே என்றுமே வேண்டிக்
    காப்புக் கட்டி வேண்டுவார் பெண்கள்
    மங்கலம் நிறைந்திட மங்கல மாதர்
    வரமருள் என்றுமே வேண்டுவார் உருகி

    குடும்பம் சிறக்க கொண்டவர் சிறக்க
    வைத்திடு என்றுமே வேண்டுவார் மாதர்
    மாங்கல்யம் நிலைக்க வரமருள் என்று
    வேண்டுவார் யாவரும் வரலக்ஷ்மித் தாயை

    அஷ்ட செல்வங்களும் அருள்வாள் வரலக்ஷ்மி
    அவளின் பாதத்தை அனைவரும் பற்றுவோம்
    பற்றுவார் வாழ்வில் மங்கலம் நிறையும்
    மங்கலம் ஆக விளங்கிறாள் வரலக்ஷ்மி !

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார்

     

     

     

    குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்

        கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப்

    பொன்றாழு முடிவேண்டப் புலியூர் வாழும்

        பூசுரர்கள் கொடாதகலப் புனித னீந்த

    மன்றாடுந் திருவடியே முடியாச் சூடி

        மாநிலங்காத் திறைவனுறை மாடக் கோயில்

    சென்றாசை யுடன்வணங்கிப் பணிகள் செய்து

        திருவருளா லமருலகஞ் சேர்ந்து ளாரே.

     

    கூற்றுவ நாயனார் களந்தை என்னும் ஊரில் வாழ்ந்த சிவனடியார். ஒரு சிற்றரசராக இருந்த இவர் தன் தோள் வலிமையாலும், வாள் வலிமையாலும் பகைவர்களை வென்ற மாவீரராகவும் இருந்தார். பல்லவ மன்னரான இவர் பல்வேறு மன்னர்களை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார். தும்பைப் பூ மாலை சூடியவர், சோழ மன்னர்களையும் வென்று சோழ நாட்டையும் தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்தார். யானைப் படைகள், விரைந்து செல்லும் குதிரைகள், வலிமையான தேர்கள் மற்றும் சிறப்புப் படை வீரர்கள் என மிகவும் சக்திவாய்ந்த படைகளுக்குத் தலைவராக விளங்கினார். என்றாலும் இவர் முடி சூடிக்கொண்ட அரசராக இல்லை. அந்நாட்களில் மன்னர்களுக்கு மணிமகுடம் சூட்டுவது ஒரு பெரிய விழா. பண்டைய நாட்களில் சோழர்களின் மணிமுடி தில்லையின் கருவூலத்தில் இருந்தது. உரிய காலத்தில் இதனை சோழ மன்னர்களுக்குச் சூட்ட வேண்டும் என்று தில்லை வாழ் அந்தணரை வேண்டினார்.

     

    • ஆனால் அவர்கள் சோழர் குலத்தில் தோன்றாத மன்னர் எவருக்கும் முடி சூட்டமாட்டோம் என்று கூறிவிட்டனர். தீட்சிதர்கள் தங்கள் மரபில் வந்த ஒருவரிடம் மணிமகுடத்தை ஒப்படைத்துவிட்டு சேர நாடு சென்றுவிட்டனர். ஆனால் கூற்றுவ நாயனார் அவர்களிடம் வாதிட்டு முடி சூட்டிக்கொள்ள விரும்பவில்லை.
    • கூத்தப் பெருமானிடத்தில் கூற்றுவனார், தில்லைவாழ் அந்தணர்கள் தனக்கு முடிசூட்ட ஒப்புதல் அளிக்காவிட்டாலும் பரவாயில்லை ஐயனின் திருவடியையே மணிமுடியாகச் சூட்டி அருள வேண்டும் என வேண்டினார். தன் அடிகளை முடியாகத் தரவேண்டும் என்று சிவனை வேண்டியதால், சிவபெருமானும் அவர் கனவில் தோன்றி அவரது சென்னியின் மீது தம் திருவடிகளைச் சூட்டி அருள் புரிந்தார். கண் விழித்த நாயனார் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார். பேரானந்தம் கொண்ட அந்நாயனார் இறைவனுடைய திருவடியே மணிமுடியாகக் கொண்டு நாடாண்டார். அரசு செல்வத்தைப் பெருமான் அருளால் கிடைத்ததாக எண்ணி மகிழ்ந்து போற்றி இறைப்பணிக்கும், அடியவர் பணிக்கும் அரசு செல்வத்தைப் பயன்படுத்தி இறைவன் திருவடி நிழல் சார்ந்தார்.
    •  கூற்றுவ நாயனார் புராணம் சொல்லும் கருத்து:

     

    பகைவர்களுக்கு எமன் போன்று விளங்கியதால் கூற்றுவர் என்ற பெயர் பெற்றார் இந்நாயனார். கூற்றுவர் என்பதற்குக் கூறுபடுத்துபவர் என்று பொருள். உடம்பையும், உயிரையும் கூறுபடுத்துவதால் எமனுக்குக் கூற்றுவன் என்று பெயர். வெற்றிகளால் இவர் பகைவர்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். அருளிலும் பொருளிலும் சிறந்து விளங்கிய இந்நாயனார் பகைவர் அஞ்சும் நாற்படை கொண்டு பெருமிதத்துடன் பகைவர்க்குக் கூற்றுவன் போல விளங்கினார்.

     

    தம் பூர்வ புண்ணியப் பேறாகக் கூற்றுவ நாயனார் சிவபெருமான் எனும் மெய்யுணர்வும், சிவநாமமும் எம்பெருமான் வழிபாடும் தவறாது புரிந்து சிறந்த சிவனடியாராக விளங்கியுள்ளார். சேக்கிழார் பெருமான் வாக்கில்,

    துன்னார் முனைகள் தோள்வலியால் வென்று

    சூலப்படையார்தம் நன்னா மந்தந் திருநாவில்

    நாளும் நாளும் நவிலும் நலம்மிக்கார்

    பன்னாளீச ரடியார்தம் பாதம்பரவிப் பணிந்தேத்தி

    முன்னா கியநல் திருத்தொண்டின்

    முயன்றார் களந்தை முதல்வனார்”

    என்று போற்றுகின்றார்.

     

    தமக்கு முடிசூட்ட மறுத்த தில்லைவாழ் அந்தணரை வலிந்து உடன்படுத்தவோ அல்லது மாற்று வழி கண்டு முடிசூட்டு விழாவைக் கொள்ளவோ போதிய ஆற்றல் உள்ளவராக இருந்தும் கூற்றுவ நாயனார் அவற்றை நாடாது சிவபெருமான் திருவருளையே வேண்டியவர், அத்திருவடியே தமக்கு மணிமுடியாகப் பெற்று நாடாண்டார். நாடாளும் பணியுடன், இறைப்பணியும், அடியவர் பணியும், சிறக்க வாழ்ந்து இறைவன் திருவடி நிழல் சேர்ந்தார்.

     

    திருச்சிற்றம்பலம்.

     

     

     

     

    Share
  • மார்த்தா (சிறுகதை)

    மார்த்தா (சிறுகதை)

    ஜெயா
    சின்ன காஞ்சிபுரம் 

    மதுரையின் அந்தப் பழமையான ஓட்டு வீட்டில், காலை நேரத்துப் பரபரப்பு நிறைந்திருந்தது. தெருவில் ஒலிக்கும் பால் வண்டி மணியின் சத்தமும், காய்கறிக்காரரின் கூவலும் அந்த நாளின் தொடக்கத்தை அறிவித்தன.

    அறையின் ஒரு ஓரத்தில், பழைய மர முக்காலியில் அமர்ந்து பித்தளைத் தம்பாளத்தில் கத்தரிக்காய் நறுக்கிக் கொண்டிருந்தார் லட்சுமி பாட்டி. அருவாமனையின் ‘கீச் கீச்’ சத்தமும், நறுக்கிய காய்கள் தண்ணீரில் விழும் ‘சொப் சொப்’ சத்தமும் சீராகக் கேட்டுக்கொண்டிருந்தன.

    திடீரென வாசல் கதவு படாடீரெனத் திறந்தது. முதுகில் கனமான பள்ளிப் பையைத் தொங்கவிட்டபடி, முகம் முழுக்கக் கடுப்புடன் உள்ளே நுழைந்தான் 16 வயது மார்த்தாண்டம் (எ) மார்த்தா. சாக்ஸை உருவி வீசிவிட்டு, ஒரு பெருமூச்சோடு பாட்டியின் அருகில் பொத்தெனத் தரையில் உட்கார்ந்தான்.

    “ஹப்பா… இந்த வீட்ல யாருக்குமே என் கஷ்டம் புரியல பாட்டி! உங்க பையன் ஏன் எனக்கு எப்போதுமே ‘ஃபேவரா’வே இருக்க மாட்டேங்குறாரு?” என்று ஆத்திரத்துடன் புலம்பினான்.

    பாட்டி அருவாமனையிலிருந்து பார்வையை எடுக்காமல், மெல்லச் சிரித்தபடி, “என்னாச்சுடா மகராசா? காலையிலேயே சூரியன் உதிக்குறதுக்கு முன்னாடி கோபம் உச்சிக்கு போயிருச்சு?” என்றார்.

    “பின்ன என்ன பாட்டி? ஸ்கூல்ல இருந்து அடுத்த வாரம் கடலூர், பாண்டிச்சேரின்னு ‘சோஷியல் சர்வீஸ்’ டூர் கூட்டிட்டு போறாங்க. புயல்ல பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பண்றது, விழிப்புணர்வு முகாம் நடத்துறதுன்னு எவ்வளவு பெரிய விஷயம்! டூர் ஃபீஸ் கட்டணும்னு சொல்லி ஒரு வாரமாச்சு. ‘நாளைக்கு தர்றேன், நாளை மறுநாள் தர்றேன்’னு சொல்லி உங்க அருமைப் பையன் என்னை அலைய விடுறாரு. இன்னைக்கு ஈவினிங் தான் கடைசி நாள். கிளாஸ்ல ரக்ஷன் என்னை எல்லார் முன்னாடியும் கிண்டல் பண்றான். ‘நோ மணி, ஒன்லி டிப்ரஷன்!’ உண்மையிலேயே அப்பா வேஸ்ட் பாட்டி!”

    ‘வேஸ்ட்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் பாட்டி கையில் இருந்த அருவாமணையை அப்படியே தள்ளிவைத்தார். சேலைத் தலைப்பால் கைகளைத் துடைத்துக்கொண்டு, கண்ணாடியைச் சரிசெய்து மார்த்தாவை நிமிர்ந்து பார்த்தார்.

    “ஏய்… வாய மூடுடா! அப்பாவை பத்தி வார்த்தையை அளந்து பேசு. ‘வேஸ்ட்’கீஸ்ட்னு சொன்னே… அப்புறம் எனக்குக் கோபம் வந்துரும். உனக்கு உன் கஷ்டம் பெருசுடா கண்ணா… ஆனா, குடும்பத்தை நடத்துறவனுக்குத்தானே தெரியும் அவனோட கஷ்டம் என்னன்னு? உன் கஷ்டம் உனக்கு, அவன் கஷ்டம் அவனுக்கு! ஒரு குடும்பத் தலைவனா மாசம் பொறந்தா வீட்டு வாடகை, பால் பில்லு, கரண்ட் பில்லு, உன்னோட ஸ்கூல் ஃபீஸ்னு எல்லாத்தையும் தலையில சுமந்துகிட்டு ஓடுறான்ல… அவன் உனக்குத் தர மாட்டேன்னு சொல்லலையேடா… சூழ்நிலை அப்படி இருக்கு.”

    மார்த்தா சற்றே அமைதியானான். ஆனால், அவனது அவசரம் இன்னும் தீரவில்லை.

    “சரிடா, இப்ப எதுக்கு மூஞ்சியை பூசணிக்காய் மாதிரி வச்சுக்கிட்டு இருக்க? உங்க அப்பா ‘மீனாட்சி டெக்ஸ்டைல்ஸ்’ ஷோரூமுக்கு வேலைக்கு போயிருக்காரு. நீ இப்படியே ஸ்கூலுக்குக் கிளம்பு… வழியில இருக்குற அந்த ஷோரூமுக்கு போ. அப்பா கிட்ட போய் நிதானமா, ‘ப்பா, இன்னைக்குதான் டூர் ஃபீஸுக்கு கடைசி நாள்’னு நியாபகப்படுத்து. அவர் கண்டிப்பா வழி பண்ணுவாரு,” என்று யோசனை கூறினார் பாட்டி.

    மார்த்தா தன் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு, “சரி பாட்டி, நீங்க சொல்றீங்கனு போறேன்!” என்று சொல்லிவிட்டு வேகமாகக் கிளம்பினான்.

    நெரிசல் மிகுந்த மதுரை மேல மாசி வீதியில், ‘கலக் கலக்’ என்ற சத்தத்துடன் மார்த்தாவின் பழைய சைக்கிள் அசைந்து அசைந்து விரைந்தது. மாலை நேரத்து வெயில், வைகை ஆற்றின் ஈரக்காற்றோடு கலந்து மதுரை நகரின் மீது பொன்னிறமாய் படிந்திருந்தது.

    மார்த்தாவின் கால்கள் பெடலை வேகமாக மிதித்துக் கொண்டிருந்தாலும், அவனது மனம் முழுவதும் வகுப்பறையிலேயே லயித்திருந்தது.

    “ஏய் மார்த்தா! உங்க அப்பன் கடையில சுருட்டுற நாலணா காசை வச்சா கடலூருக்கும் பாண்டிச்சேரிக்கும் டூர் போகப்போற? ஒழுங்கா வீட்ல உக்காந்து பழைய சோத்தை தின்னுட்டு போப்பா!” என்ற ரக்ஷனின் ஏளனச் சிரிப்பு அவனது காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.

    “டேய் ரக்ஷன்… உனக்கு இருக்குடா ஆப்பு! என் அப்பா கண்டிப்பா காசு தருவாரு. டூர் போயி போட்டோ எடுத்து உன் மூஞ்சில அடிக்கல… என் பேரு மார்த்தாண்டம் இல்லடா!” என்று மனதுக்குள் சபதம் எடுத்துக்கொண்டான்.

    சைக்கிள் ‘மீனாட்சி பட்டு விழுதுகள்’ என்ற பெரிய ஜவுளிக்கடையின் முன் வந்து நின்றது. பலகட்ட கண்ணாடி கதவுகளும், உள்ளே வீசும் ஏசி காற்றும், ‘வாங்க அம்மா… வாங்க ஐயா…’ என்று கூவி அழைக்கும் விற்பனையாளர்களின் சத்தமும் அந்த வீதியைச் சூழ்ந்திருந்தன.

    கடையின் பிரம்மாண்டம் அவனைச் சற்று தயங்க வைத்தாலும், ரக்ஷனின் முகம் நினைவுக்கு வர, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

    தரைத் தளத்தில் இருந்து தளம் தளமாகத் தேடி, மூன்றாம் தளத்தின் ‘காஞ்சிபுரம் பட்டு’ பிரிவை அடைந்தான். அங்கே அவனது தந்தை வேம்பு (மாணிக்கம்) நின்றுகொண்டிருந்தார். 50 வயதைக் கடந்த அவரது முகம் வேர்வையிலும் சோர்விலும் குழைந்துபோயிருந்தது.

    மார்த்தா மெதுவாக அவர் அருகில் சென்று, “அப்பா…” என்று அழைத்தான்.

    வேம்பு திடுக்கிட்டுத் திரும்பி, “மார்த்தா! நீ எதுக்குடா இந்த நேரத்துல இங்க வந்த? வீட்ல எதுவும் பிரச்சனையாடா?” என்று பதற்றத்துடன் கேட்டார்.

    “இல்லப்பா… நீங்க கடலூர், பாண்டிச்சேரி டூருக்குப் பணம் தரேன்னு சொல்லி ஒரு வாரம் ஆயிடுச்சுப்பா… அதான் உங்களைப் பாத்து பணம் வாங்கிக்கிட்டு போகலாம்னு…” என்று தயங்கியபடியே சொல்லி முடிப்பதற்குள்…

    “ஏய் வேம்பு! இங்க என்னடா மேய்ச்சல்? அங்கே நாலாவது கவுண்டர்ல கஸ்டமர் வந்து பத்து நிமிஷம் ஆச்சு! வந்து சேலையை எடுத்துப் பிரிச்சுக் காட்டுடா சோம்பேறி!” என்று இடிமுழக்கமாய் ஒரு குரல் கேட்டது.

    அது சூப்பர்வைசர் சுந்தரத்தின் குரல். வேம்பு பதறிப்போய், “இதோ வர்றேன் சார்…” என்று சொல்லிவிட்டு, மகனிடம் “இரண்டு நிமிஷம் நில்லுடா” எனக் கூறிவிட்டு ஓடினார்.

    மார்த்தா ஒரு தூணின் மறைவில் நின்று கவனித்தான்.

    அங்கே ஒரு பணக்காரக் குடும்பம் அமர்ந்திருந்தது. “ஏப்பா! நல்ல பட்டுப் புடவையா எடுத்துப் போடு. என்ன பிராண்ட் வச்சிருக்கீங்க? எதைக் காட்டுனாலும் பழசா இருக்கு!” என்று அலட்சியமாக வீசியடித்தார் அந்தப் பெண்மணி.

    வேம்பு மிகத் தாழ்மையுடன் தன் தளர்ந்த உடலை வளைத்து சேலையைப் பிரித்துக் காட்டினார். “சீ! இந்த கலர் எனக்குப் பிடிக்கல! அஞ்சாவது ஃப்ளோர்ல இருந்து அந்த மெரூன் சேலையைக் கொண்டு வா!” என்று அவர் விரட்ட, வேம்பு படிகளில் ஐந்தாம் தளத்திற்கு ஓடினார். மீண்டும் இறங்கிவந்து காட்ட, “இதுவும் நல்லா இல்லை, மூணாவது ஃப்ளோர்ல இருக்குற பிங்க் சேலையைக் கொண்டு வா!” என்று மீண்டும் அலையவிட்டனர்.

    வேம்புவின் நெற்றி வேர்வை சேலையில் விழுந்துவிடக் கூடாது என்று துண்டால் துடைத்தபடியே ஓடினார். முழங்கால் வலி தாங்க முடியாமல் தூணைப் பிடித்து மூச்சு வாங்கியபோது, சூப்பர்வைசர் சுந்தரம் பாய்ந்துவந்து கத்தினார்.

    “ஏய் பரதேசி நாயே! உனக்கு வயசான காலத்துல எதுக்குடா இந்த வேலை? ஒழுங்கா ஓடிப்போய் புடவையை எடுத்துட்டு வரத் தெரியாதா? கடைக்கு வர்ற கஸ்டமரை காக்க வச்சுக்கிட்டு என்னடா பண்ற? உனக்கெல்லாம் சம்பளம் ஒரு கேடா? நாயே… கழுதைப் பயலே… ஒழுங்கா ஓடுடா!”

    வாடிக்கையாளர்கள் அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் சிரித்தனர். வேம்புவோ, “மன்னிச்சுடுங்க சார்…” என்று தன் சுயமரியாதையை அடகுவைத்துவிட்டு மீண்டும் ஓடினார்.

    தூணின் பின்னால் நின்ற மார்த்தாண்டத்தின் இதயம் சுக்குநூறாக உடைந்தது.

    தன் பள்ளிச் சுற்றுலாவுக்காகவும், ரக்ஷனுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்ற சின்னத்தனமான ஆசைக்காகவும் தன் தந்தை தினமும் இப்படிப்பட்ட நரகத்தில் அல்லல்படுகிறாரா?

    சுற்றுலா, கடலூர், பாண்டிச்சேரி, ரக்ஷனின் ஏளனச் சிரிப்பு… இவை அனைத்துமே அவனது கண்ணெதிரே அற்பமாக மாறின. தந்தையின் மானத்தையும் வேர்வையையும் விட இந்த உலகில் எதுவுமே பெரிதில்லை என்று அவன் உணர்ந்தான்.

    கண்களில் கண்ணீர் வழிந்தோட, கடையை விட்டு வெளியே ஓடி வந்தான். சைக்கிளை எடுத்துக்கொண்டு, “இனிமேல் நான் அப்பாக்கிட்ட ஒரு பைசா கூட கேட்க மாட்டேன்! என் அப்பாவோட இந்த அவமானத்துக்கு நான் காரணமா இருக்க மாட்டேன்!” என்று கதறியபடி வீட்டை நோக்கி மிதித்தான்.

    இரவு 9:00 மணி. வீட்டின் முன் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான் மார்த்தா. சமையலறையில் காமாட்சி தோசை சுட்டுக்கொண்டிருக்க, லட்சுமி பாட்டி திண்ணையில் அமர்ந்திருந்தார்.

    “என்னடா மார்த்தா… கடையில அப்பாவைப் பாத்தியா? டூருக்குப் பணம் தர்றேன்னு சொன்னாரா?” என்று பாட்டி ஆசையோடு கேட்டார்.

    மார்த்தா குரல் தழுதழுக்க, “பாட்டி… இனிமே இந்த டூரைப் பத்தியோ, பணத்தைப் பத்தியோ என்கிட்ட பேசாதீங்க. எனக்கு டூரும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம்,” என்றான்.

    “என்னடா சொல்ற? சாயந்தரம் வரைக்கும் ஒத்தக்காலுல நின்ன?”

    “ஆமா பாட்டி… அந்தப் பணத்துக்காக அப்பா படுற கஷ்டத்தையும், கடையில் அவரை நடத்துற விதத்தையும் பாத்த அப்புறம் எனக்கு அந்த டூர் தேவையில்லை. என் சின்னத்தனமான ஆசைக்காக, யாரோ ஒருத்தன் அவரை ‘நாயே பேயே’னு திட்டுறதை என்னால சகிச்சுக்க முடியாது. என் டூருக்காக என் அப்பா தன் சுயமரியாதையை இழக்கக் கூடாது!”

    அப்போது வீட்டின் கதவு மெதுவாகத் திறந்தது. உடம்பெல்லாம் வேர்வையோடு மாணிக்கம் உள்ளே நுழைந்தார். மகனைக் கண்டதும் ஒருவிதக் குற்ற உணர்ச்சியுடன், “மார்த்தா… கடையில அந்தச் சூப்பர்வைசர் கத்துனதுல உன்னைக் கவனிக்க முடியலடா. மன்னிச்சுருடா… உனக்கு டூருக்கு உண்டான பணத்தை நாளைக்கு எப்படியாவது வாங்கித் தர்றேன்டா…” என்றார்.

    தந்தையின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் மார்த்தாவால் தாங்க முடியவில்லை. ஓடிச்சென்று தந்தையைக் கட்டியணைத்துக்கொண்டான்.

    “வேண்டாம்ப்பா! எனக்கு ஒரு ரூபா கூட வேண்டாம்ப்பா! நான் கடையில எல்லாத்தையும் பாத்துட்டேன். அந்த ஆளு உங்களை அசிங்கமா திட்டுனதை என் கண்ணால பாத்தேன். என் டூருக்காக நீங்க யார்கிட்டயும் கையேந்த வேண்டாம்ப்பா!”

    மாணிக்கம் திகைத்துப்போய் தன் மகனைப் பார்த்தார்.

    மார்த்தா கண்ணீரைத் துடைத்துக்கொண்டு உறுதியான குரலில் சொன்னான்: “அப்பா! நான் நல்லா படிப்பேன். உங்களை இந்த மாதிரி வேலைக்கு அனுப்பாம, ஒரு நல்ல நிலமையில வச்சு காப்பாத்துவேன். அந்த ரக்ஷன் முன்னாடி நான் பணத்தால ஜெயிக்கலைனாலும், என் படிப்பாலயும் சுயமரியாதையாலயும் ஜெயிச்சுக் காட்டுவேன்ப்பா!”

    அந்தச் சிறிய ஓட்டு வீட்டிற்குள், வறுமையின் இருளை விட மார்த்தாண்டத்தின் புதிய லட்சிய ஒளி பிரகாசமாக வீசியது.

    எழுத்தாளர் குறிப்பு
    • எழுத்தாளர் புனைபெயர்: ஜெயா
    • இயற்பெயர்: வீரபத்திரன், ஒரு பன்முகத் திறமை கொண்ட கலைஞர். மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிப்பதிவு மற்றும் ஆவணப்படத் தயாரிப்புத் துறையில் தடம் பதித்து வருகிறார். தற்போது காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டு பணியாற்றி வரும் வீரபத்திரன், ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஆவணப்படங்களை உருவாக்கி, சமூகப் பிரச்சனைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளார். அங்குள்ள கலாச்சாரம், மற்றும் மனிதர்களின் வாழ்க்கையைத் தன் லென்ஸ் வழியாகக் காட்சிப்படுத்தி வருகிறார்.

    கதைச் சுருக்கம்: பதின்ம பருவத்து உணர்ச்சிவேகத்தில் தன் விருப்பமே பெரிதென நினைக்கும் ஒரு சராசரி பள்ளி மாணவன், தந்தையின் உழைப்பையும் அவமானத்தையும் நேரில் காணும்போது அடையும் முதிர்ச்சியையும், சுயமரியாதையை உணரும் தருணத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது இச்சிறுகதை.

    Share
  • உணர்ந்தால் சமநிலை ஒழுங்காய் இருக்கும்!

    உணர்ந்தால் சமநிலை ஒழுங்காய் இருக்கும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    சமநிலை சரிந்தால் சகலதும் சரியும்
    சமநிலை வாழ்வின் ஆணிவேர் ஆகும்
    சமநிலை அற்றார் துணிவினை இழப்பார்
    சமநிலை பேணுவோம் சகலதும் சிறக்கும்

    சமயங்கள் அனைத்தும் சமநிலை பேசுது
    சமநிலை என்பதே தத்துவம் ஆகும்
    சமநிலை என்பதே இறையது நிலையே
    இறையது உருவே இயற்கையாய் இருக்கு

    இயற்கை என்பதில் சமநிலை முக்கியம்
    இயற்கை குலைந்தால் எல்லாம் குலையும்
    இயற்கையைக் குலைய வைத்திடும் பாங்கில்
    நடப்பது அனைத்தையும் தடுத்திடல் வேண்டும்

    விஞ்ஞானம் என்பது விந்தைகள் வரவே
    விந்தைகள் பெருகிடச் சமநிலை தளரும்
    மெஞ்ஞானம் என்பது மேலான விந்தையே
    உணர்ந்தால் சமநிலை ஒழுங்காய் இருக்கும் !

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி 3)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி 3)

    நைஜல் ஃபராஜ் மற்றும் Reform UK – பிரிட்டிஷ் அரசியலின் புதிய அதிர்வு.

    பிரிட்டிஷ் அரசியலைப் பற்றி எழுதும்போது, கடந்த இருபது ஆண்டுகளில் மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்திய அரசியல்வாதிகளில் ஒருவராக நைஜல் ஃபராஜை குறிப்பிடாமல் முன்னேற முடியாது.

    ஒரு அரசியல் தலைவர் எப்போதும் ஆட்சியில் இருந்தால்தான் செல்வாக்கு மிக்கவராக இருக்க வேண்டியதில்லை. சிலர் எதிர்க்கட்சியில் இருந்தபடியே நாட்டின் அரசியல் திசையையே மாற்றிவிடுவார்கள். நைஜல் ஃபராஜ் அப்படிப்பட்டவர்.

    அவர் பிரிட்டிஷ் அரசியலின் மையக் கேள்விகளாக மாற்றியவை குடியேற்றம், தேசிய இறையாண்மை மற்றும் பிரிட்டிஷ் அடையாளம்.

    பல ஆண்டுகளாக இந்தக் கருத்துக்கள் அரசியல் மேடைகளில் பேசப்பட்டாலும், அவற்றை பொதுமக்களின் அன்றாட உரையாடலாக மாற்றியவர்களில் ஃபராஜுக்கு முக்கியமான இடமுண்டு.

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை பலர் அரசியல் கனவாகவே கருதினர்.

    ஆனால் அந்தக் கனவு மக்களின் வாக்காக மாறியது.

    பிரெக்சிட் வாக்கெடுப்பின் பின்னணியில் ஃபராஜ் வகித்த பங்கு, பிரிட்டிஷ் அரசியல் வரலாற்றில் தனி அத்தியாயமாகவே இருக்கும்.

    பிரெக்சிட்டிற்குப் பிறகு அவரது அரசியல் முடிந்துவிடும் என்று பலரும் நினைத்தனர்.

    ஆனால் அரசியலில் வெற்றிடங்கள் நீண்ட காலம் காலியாக இருப்பதில்லை.

    மக்களின் புதிய அதிருப்திகளை உணர்ந்த ஃபராஜ், ரீபோர்ம் யூகே என்ற கட்சியை தேசிய அரசியலின் முக்கிய சக்தியாக மாற்றத் தொடங்கினார்.

    ரீபோர்ம் யூகேவின் பலம் என்ன ?

    எனது ஐம்பத்தொரு ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் நான் கவனித்த ஒரு விஷயம் உண்டு.

    மக்கள் எப்போதும் மாற்றத்தை விரும்புவதில்லை.

    ஆனால் அவர்கள் தாங்கள் கேட்கப்படவில்லை என்று உணரும்போது, மாற்றத்தை உருவாக்கும் சக்தியைத் தேடுகிறார்கள்.

    இன்று ரீபோர்ம்ன் வளர்ச்சிக்குப் பின்னால் இருப்பது இதுவே.

    வாழ்க்கைச் செலவு உயர்வு…

    வரி சுமைகள்…

    குடியேற்றம் தொடர்பான கவலைகள்…

    தேசிய சுகாதார சேவையின் நீண்ட காத்திருப்பு…

    அரசியல்வாதிகளின் மீது குறைந்து வரும் நம்பிக்கை…

    பிரிட்டனின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பகுதி மக்களிடையே உருவாகிவரும் அச்சம்…

    இந்த அனைத்தையும் ஒரே அரசியல் மொழியாக மாற்ற முயற்சிக்கிறது Reform UK.

    அவர்கள் பேசும் மொழி மிகவும் நேரடியானது.

    அரசியல் அலங்காரச் சொற்கள் குறைவு.

    அதனால்தான் பாரம்பரிய அரசியலில் விரக்தியடைந்த சில வாக்காளர்களை அவர்கள் ஈர்க்க முடிகிறது.

    2024 பொதுத்தேர்தலில் Clacton தொகுதியில் ஃபராஜ் 21,225 வாக்குகளைப் பெற்று, 46.2% வாக்கு பங்குடன் வெற்றி பெற்றார்.

    அவருக்கு அடுத்ததாக கன்சர்வேடிவ் வேட்பாளர் ஜைல்ஸ் வாட்லிங்ஸ் 12,820 வாக்குகளைப் பெற்றார்.

    அது ஒரு தொகுதி வெற்றி மட்டுமல்ல.

    “ரீபோர்ம் யூகேஐ இனி புறக்கணிக்க முடியாது” என்ற அரசியல் செய்தியாகவும் அது அமைந்தது.

    ரீபோர்ம் யூகேவின் பலவீனம் என்ன ?

    ஆனால் ஒரு அரசியல் ஆய்வாளராக நான் மற்றொரு உண்மையையும் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

    மக்களின் கோபத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு விஷயம்.

    ஒரு நாட்டை நிர்வகிப்பது வேறு விஷயம்.

    எதிர்க்கட்சியாக இருக்கும்போது கொள்கைகளை விமர்சிப்பது எளிது.

    ஆனால் ஆட்சியில் இருக்கும்போது ஒவ்வொரு முடிவும் பொருளாதாரம், வெளிநாட்டு உறவுகள், பாதுகாப்பு, வர்த்தகம், சமூக ஒற்றுமை ஆகிய அனைத்தையும் பாதிக்கும்.

    அங்கேயே எந்த புதிய அரசியல் இயக்கமும் தனது உண்மையான திறமையை நிரூபிக்க வேண்டும்.

    ரீபோர்ம் யூகே இன்னும் அந்தச் சோதனையை முழுமையாக எதிர்கொண்டதாக நான் கருதவில்லை.

    ஒரு அரசியல் கட்சியின் உண்மையான வலிமை, அது எவ்வளவு சத்தமாக எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது என்பதில் மட்டும் இல்லை.

    அதிகாரம் கிடைத்தால் அந்த எதிர்ப்பை நடைமுறை அரசாக மாற்றும் திறன் அதற்கு இருக்கிறதா? என்பதில்தான் உள்ளது.

    £5 மில்லியன் விவகாரம்  ஃபராஜின் அரசியலைச் சூழ்ந்த புதிய கேள்வி

    இங்கேதான் நைஜல் ஃபராஜின் சமீபத்திய அரசியல் பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு திருப்பத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.

    2024ஆம் ஆண்டு, ரீபோர்ம் யூகேக்கு நிதியுதவி செய்த கிரிப்டோ முதலீட்டாளர் கிறிஸ்டோபர் ஹாபோர்ன் என்பவரிடமிருந்து ஃபராஜ் £5 மில்லியன் பெறுமதியான தனிப்பட்ட பரிசைப் பெற்றார்.

    இது சாதாரண அரசியல் நன்கொடை விவகாரம் அல்ல.

    ஏனெனில், அந்தத் தொகை தொடர்பாக நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு பொறுப்பான ஆணையாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    ஃபராஜ் ஆரம்பத்தில், இந்தப் பணம் தனது வாழ்நாள் தனிப்பட்ட பாதுகாப்பு தேவைகளுக்காக வழங்கப்பட்டதாகக் கூறியிருந்தார்.

    பின்னர் அவர் அதனை Brexit-க்காக மேற்கொண்ட தனது அரசியல் முயற்சிகளுக்கான ஒரு வகையான “பரிசு” எனவும் விளக்கியுள்ளார்.

    இங்கு ஒரு முக்கியமான வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    விசாரணை நடைபெறுவது என்பது ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டார் என்பதல்ல.

    ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு வழங்கப்பட்டது, அது ஏன் உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை, நாடாளுமன்ற விதிகளுக்கு அது உட்பட்டதா என்பவை நிச்சயமாக பொதுமக்கள் கேட்க வேண்டிய நியாயமான கேள்விகளாகும்.

    மேலும், இந்த விவகாரம் வெறும் அரசியல் வதந்தியாக இல்லை. நாடாளுமன்ற விதிமுறைகளை கண்காணிக்கும் அமைப்பின் விசாரணைக்குரிய விவகாரமாக மாறியுள்ளது.

    இதன் காரணமாக ஃபராஜின் அரசியல் வாழ்க்கையில் ஒரு புதிய கேள்வி எழுந்தது:

    “அதிகார வர்க்கத்தைஎதிர்த்து பேசும் ஒருவர், தன்னுடைய அரசியல் மற்றும் நிதி வெளிப்படைத்தன்மையை எவ்வாறு நிரூபிக்கிறார்?”

    அதுதான் இன்றைய பிரச்சினையின் அரசியல் மையம்.

    பதவி விலகலும் கிளாக்டன் இடைத்தேர்தலும்

    இந்த நிதி விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்பு தீவிரமடைந்த நிலையில், 2026 ஜூலை 7 அன்று ஃபராஜ் கிளாக்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    ஆனால் அவர் அரசியலை விட்டு விலகவில்லை.

    மாறாக, தனது பதவி விலகலின் மூலம் மீண்டும் அதே தொகுதியில் இடைத்தேர்தலை உருவாக்கி, அதில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தார்.

    அவர் இதனை “மக்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் இடையிலான தேர்தல்” என்ற அரசியல் சவாலாக முன்வைத்தார்.

    அதாவது,

    “என்னைப் பற்றிய தீர்ப்பை நாடாளுமன்ற விசாரணைகள் வழங்க வேண்டாம்; கிளாக்டன் (Clacton) மக்கள் வழங்கட்டும்” என்பதே அவரது அரசியல் நிலைப்பாட்டின் சாரமாக இருந்தது.

    இது ஃபராஜின் அரசியல் பாணியை மிகவும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

    ஒரு பிரச்சினையை அவர் சட்டரீதியான அல்லது நாடாளுமன்ற நடைமுறை விவகாரமாக மட்டும் பார்க்கவில்லை.

    அதை உடனடியாக “மக்கள் எதிர் அதிகார வர்க்கம்” என்ற அரசியல் போராட்டமாக மாற்றுகிறார்.

    இதுதான் அவரது பலமும்.

    அதே நேரத்தில் இதுவே அவரது அரசியல் பலவீனமாகவும் மாறக்கூடும்.

    ஏனெனில், ஒவ்வொரு நிர்வாக அல்லது ஒழுங்குமுறை விசாரணையையும் “அதிகார வர்க்கத்தின் சதி” என்று மாற்றிவிட்டால், உண்மையான கேள்விகளுக்கு பதில் அளிப்பது பின்னுக்குத் தள்ளப்படுவதற்கான அபாயம் உள்ளது.

    ஆனால் நடந்தது என்ன?

    ஃபராஜ் எதிர்பார்த்திருந்தது ஒரு மிகப்பெரிய அரசியல் மோதல்.

    ரீபோர்ம் யூகே  ஒருபுறம்.

    லேபர், கன்சர்வேடிவ், லிபரல் டெமகிரட்ஸ், கிறீன்ஸ் போன்ற பாரம்பரிய அரசியல் சக்திகள் மறுபுறம்.

    ஆனால் நடந்தது முற்றிலும் வேறுபட்டது.

    முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் கிளாக்டன் இடைத்தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்தன.

    லேபர், கன்சர்வேடிவ், லிபரல் டெமகிரட்ஸ், கிறீன்ஸ் ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ரீஸ்டோர் பிரிட்டன் கட்சியும் போட்டியிடவில்லை.

    இதன் அரசியல் காரணம் தெளிவானது.

    அந்தக் கட்சிகளின் பார்வையில், ஃபராஜ் தனது சொந்த நிதி மற்றும் நாடாளுமன்ற விசாரணைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இந்த இடைத்தேர்தலை உருவாக்கியிருந்தார்.

    கன்சர்வேடிவ் தலைவர் கெமி பேடனொக் இதனை “போலி இடைத்தேர்தல்” என்றும் “தன்முனைப்பு போட்டி” என்றும் விமர்சித்தார்.

    லேபர் இதனை ஒரு “சர்க்கஸ்” எனக் கருதி போட்டியிடவில்லை.

    லிபரல் டெமகிரட்ஸ் தலைவர் எட் டேவி, இதனை ஃபராஜின் “அகங்கார அரசியல்” என்று விமர்சித்ததுடன், அதற்கு அரசியல் ஆக்சிஜன் வழங்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.

    கிறீன்ஸ் கட்சியும் இறுதியில் போட்டியிடாமல் விலகியது.

    இதில் ஒரு சுவாரசியமான அரசியல் முரண்பாடு உள்ளது.

    ஃபராஜ் விரும்பியது:

    “அரசியல் வர்க்கத்திற்கெதிரான மக்கள் போராட்டம்”

    முக்கியக் கட்சிகள் உருவாக்கியது:

    “ஃப்ராஜுக்கெதிரான ஃப்ராஜின் போராட்டம்”

    அதாவது, அவர் எதிர்பார்த்த பெரிய அரசியல் போராட்ட மேடை உருவாகவில்லை.

    34 வேட்பாளர்கள்  ஆனால் உண்மையான போட்டியாளர் யார்?

    முக்கியக் கட்சிகள் விலகியதால் கிளாக்டன் தேர்தல் வெறுமையாகிவிடவில்லை.

    மாறாக, வரலாற்றில் மிகவும் விசித்திரமான தேர்தல்களில் ஒன்றாக மாறியது.

    மொத்தம் 34 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இது ஒரு பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான மிகப்பெரிய வேட்பாளர் எண்ணிக்கையாக அமைந்தது.

    அவர்களில் மிகவும் கவனத்தை ஈர்த்தவர் நகைச்சுவை அரசியல்வாதியான கவுண்ட் பின்வேஸ்(Count Binface).

    இது ஒரு சாதாரண தேர்தல் களமாக இல்லாமல், பிரிட்டிஷ் அரசியலின் மீதான மக்களின் விரக்தி, நகைச்சுவை, எதிர்ப்பு மற்றும் அரசியல் நாடகத்தின் கலவையாக மாறியது.

    ஆனால் இதன் அடிப்படை உண்மை ஒன்றுதான்:

    பெரிய கட்சிகள் இல்லாத தேர்தல், உண்மையான தேசிய அரசியல் ஆதரவை அளக்கும் வழக்கமான அளவுகோலாக இருக்க முடியாது.

    ஃபராஜ் மீண்டும் வென்றார் – ஆனால் அதன் அர்த்தம் என்ன?

    2026 ஆகஸ்ட் 13 அன்று நடந்த கிளாக்டன் இடைத்தேர்தலில் நைஜல் ஃபராஜ் மீண்டும் வெற்றி பெற்றார்.

    அவர் 22,239 வாக்குகளையும், சுமார் 62.8% வாக்குகளையும் பெற்றார்.

    அவருக்கு அடுத்ததாக இருந்த கவுண்ட் பின்வேஸ் (Count Binface) சுமார் 9,455 வாக்குகளைப் பெற்று 26.7% பெற்றார். வெற்றி மிகப் பெரியது.

    ஆனால் இங்கே ஒரு அரசியல் நுணுக்கத்தை நாம் மறந்துவிடக் கூடாது.

    2024 பொதுத்தேர்தலில் கன்சர்வேடிவ் மற்றும் ரீபோர்ம் வாக்குகள் சேர்ந்து அந்தத் தொகுதியில் மிகப் பெரிய வாக்குத் தளத்தை வலதுசாரிக் கட்சிகளுக்கு உருவாக்கியிருந்தன.

    2026 இடைத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவே இல்லை.

    எனவே, இந்த வெற்றியை “பிரிட்டன் முழுவதும் ஃபராஜுக்கு மக்கள் அளித்த தீர்ப்பு” என்று எடுத்துக்கொள்வது அரசியல் ரீதியாக மிகைப்படுத்தலாகிவிடும்.

    இது முதன்மையாக கிளாக்டன் தொகுதியில் ஃபராஜின் தனிப்பட்ட அரசியல் ஆதரவையும் ரீபோர்ம் யூகேயின் உள்ளூர் வலிமையையும் காட்டுகிறது.

    ஆனால் அது அவருக்கு ஒரு முக்கியமான அரசியல் மூலதனத்தை மீண்டும் வழங்கியுள்ளது:

    நாடாளுமன்ற இருக்கை.

    ஆனால் £5 மில்லியன் கேள்வி முடிந்துவிட்டதா?

    இல்லை.

    இதுதான் இந்த இடைத்தேர்தலின் மிக முக்கியமான அரசியல் உண்மை.

    ஃபராஜ் மீண்டும் வெற்றி பெற்றாலும், பாராளுமன்ற விதிமுறைகளை மீறிய விசாரணை முடிவடைந்துவிடவில்லை.

    மாறாக, அவர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளதால் அந்த விவகாரம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    விசாரணையில் விதிமீறல் நிரூபிக்கப்பட்டால், நாடாளுமன்ற நடவடிக்கை மற்றும் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் போன்ற சாத்தியக்கூறுகள் உருவாகலாம்.

    இதனால் Clacton மக்கள் அளித்த தீர்ப்பு ஒரு விஷயத்தைச் சொல்கிறது:

    “நாங்கள் ஃபராஜை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புகிறோம்.”

    ஆனால் அது மற்றொரு விஷயத்தைச் சொல்லவில்லை:

    “நாடாளுமன்ற விதிமுறைகள் தொடர்பான விசாரணை தேவையில்லை.”

    இந்த இரண்டையும் ஒன்றாகக் குழப்பக்கூடாது.

    ஜனநாயகத்தில் மக்கள் வாக்கு ஒரு அரசியல் ஆணையை வழங்குகிறது.

    ஆனால் சட்டமும் நாடாளுமன்ற விதிகளும் தங்களுடைய நடைமுறையில் தொடர்கின்றன.

    புலம்பெயர் தமிழனாக என் பார்வை

    இந்த இடத்தில் நான் ஒரு தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர விரும்புகிறேன்.

    நான் இந்த நாட்டிற்கு வந்தபோது, குடியேற்றம் குறித்து பேசப்பட்டது.

    இன்று குடியேற்றமே தேர்தல்களின் மையக் கேள்விகளில் ஒன்றாக மாறியுள்ளது.

    அப்போது விவாதம் வேலை வாய்ப்பைப் பற்றியது.

    இன்று விவாதம் தேசிய அடையாளத்தையும் எல்லைக் கட்டுப்பாட்டையும் பற்றியது.

    அப்போது,

    “எத்தனை பேர் வருகிறார்கள்?”

    என்ற கேள்வி இருந்தது.

    இன்று,

    “பிரிட்டன் எப்படிப்பட்ட நாடாக இருக்க வேண்டும்?” என்ற கேள்வி எழுகிறது.

    இந்த மாற்றத்தை நான் ஐம்பத்தொரு ஆண்டுகளாக நேரில் பார்த்திருக்கிறேன்.

    ஒரு குடியேறிய தமிழனாக, இந்த நாட்டின் சட்டத்தையும், ஜனநாயகத்தையும், வாய்ப்புகளையும் மதிக்கிறேன்.

    அதே நேரத்தில், இந்த நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கும் மக்களின் உணர்வுகளையும் நான் புரிந்துகொள்கிறேன்.

    ஒரு நாட்டிற்கு மனிதநேயமும் தேவை.

    அதே நாட்டிற்கு ஒழுங்கும் தேவை.

    ஒரு நாட்டிற்கு அகதிகளின் துயரத்தைப் புரிந்துகொள்ளும் இதயமும் தேவை.

    அதே நேரத்தில், அதன் குடியேற்றக் கொள்கைக்கு தெளிவான விதிகளும் தேவை.

    இந்த இரண்டிற்கும் இடையே சமநிலையை உருவாக்குவது எந்த அரசுக்கும் மிகவும் கடினமான அரசியல் பணியாகும்.

    ஆனால் அதைவிட முக்கியமானது இன்னொன்று.

    குடியேற்றத்தைப் பற்றிப் பேசும்போது குடியேறியவர்களைப் பற்றிய வெறுப்பையும், குடியேற்றம் குறித்து கவலைப்படுபவர்களைப் பற்றிய அவமதிப்பையும் ஒரே நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

    அரசியல் விவாதம் மனிதர்களை எதிரிகளாக மாற்றாமல், பிரச்சினைகளுக்கான தீர்வைத் தேடும் வழியாக இருக்க வேண்டும்.

    கன்சர்வேடிவ் கட்சிக்கு இது ஒரு எச்சரிக்கை

    எனது பார்வையில் ரீபோர்ம் யூகேயின் மிகப்பெரிய வெற்றி அவர்கள் பெற்றிருக்கும் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை மட்டும் அல்ல.

    கன்சர்வேடிவ் கட்சியின் அரசியல் மொழியையே மாற்றியிருப்பதுதான்.

    ஒரு காலத்தில் வலதுசாரி வாக்காளர்களின் இயல்பான தேர்வாக இருந்த கன்சர்வேடிவ் கட்சி, இன்று தனது பாரம்பரிய ஆதரவாளர்களில் ஒரு பகுதியை ரீபோர்ம் யாகூ நோக்கி இழந்துள்ளது.

    இது சாதாரண வாக்கு மாற்றமல்ல.

    இது அரசியல் நம்பிக்கையின் இடமாற்றம்.

    கிளாக்டன் இதற்கு ஒரு குறியீடு.

    ஆனால் கன்சர்வேடிவ் கட்சிக்கு இங்கே இன்னொரு கேள்வியும் உள்ளது:

    ரீபோர்ம் யூகேவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டுமா?

    அல்லது ரீபோர்ம் யூகே எடுத்துக்காட்டும் மக்களின் உண்மையான கவலைகளுக்கு பதில் அளிக்க வேண்டுமா?**

    இரண்டாவது வழியே நீண்ட காலத்தில் பயனுள்ளதாக இருக்கலாம்.

    லேபர் கட்சிக்கும் இது ஒரு சோதனை

    ரீபோர்ம் யூகேவின் வளர்ச்சியை கன்சர்வேடிவ் கட்சியின் பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது.

    லேபர் கட்சிக்கும் இது ஒரு சவால்.

    ஏனெனில் குடியேற்றம், வாழ்க்கைச் செலவு, என்.எச்.எஸ், வீடமைப்பு, வேலைவாய்ப்பு, பொது சேவைகள் போன்ற கேள்விகள் வலதுசாரிகளின் சொந்த பிரச்சினைகள் அல்ல.

    அவை சாதாரண மக்களின் வாழ்க்கைக் கேள்விகள்.

    Labour அவற்றுக்கு நம்பகமான தீர்வுகளை வழங்கத் தவறினால், அந்த இடத்தை ரீபோர்ம் போன்ற இயக்கங்கள் நிரப்பும்.

    அதேவேளை,ரீபோர்மை எதிர்ப்பதற்காக அதன் கடுமையான மொழியை அப்படியே ஏற்றுக்கொள்வதும் லேபருக்கு தீர்வாக இருக்காது.

    மக்களின் அச்சத்தை மறுப்பதற்குப் பதிலாக, அந்த அச்சம் ஏன் உருவானது என்பதைப் புரிந்துகொள்வதே அரசியலின் முதிர்ச்சி.

    லிபரல் டெமகிரட்ஸ் மற்றும் புதிய அரசியல் இடைவெளி

    Liberal Democrats-க்கு இங்கு வேறொரு வாய்ப்பு உள்ளது.

    கன்சர்வேடிவ் மற்றும் ரீபோர்ம் இடையிலான வலதுசாரி போட்டி தீவிரமடையும் போது, மிதவாத மற்றும் உள்ளூர் பிரச்சினைகளை முன்னிறுத்தும் வாக்காளர்களுக்கு ஒரு அரசியல் இடம் உருவாகிறது.

    ஆனால் அந்த இடத்தை லிபரல் டெமகிரட்ஸ் எவ்வளவு திறமையாக நிரப்புகின்றனர் என்பதுதான் கேள்வி.

    கிளாக்டன் இடைத்தேர்தலைப் புறக்கணித்தது அவர்களுக்கு தேசிய அளவில் ஒரு தெளிவான அரசியல் நிலைப்பாட்டைத் தந்திருக்கலாம்.

    ஆனால் எதிர்காலத்தில் ரீபோர்ம் யூகே வளர்ந்துகொண்டே சென்றால், அதன் எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைக்கக்கூடிய அரசியல் தளத்தை யார் உருவாக்கப் போகிறார்கள்?

    இதுவும் ஒரு முக்கியமான கேள்வி.

    ஃபராஜ் – ஒரு தலைவர் மட்டுமா? அல்லது ஒரு அரசியல் அறிகுறியா?

    நைஜல் ஃபராஜை ஒருவர் விரும்பலாம்.

    வெறுக்கலாம்.

    அவரது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளலாம்.

    மறுக்கலாம்.

    ஆனால் அவரை அரசியல் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பிரிட்டனின் எதிர்காலத்தைப் புரிந்துகொள்ள முடியாது.

    அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல.

    அவர் பிரிட்டிஷ் சமூகத்தின் ஒரு பகுதியின் மனநிலையை வெளிப்படுத்தும் அரசியல் நிகழ்வு.

    அந்த மனநிலை ஏன் உருவானது என்பதைக் கவனிப்பது முக்கியம்.

    அதை வெறுமனே “வலதுசாரி கோபம்” என்று நிராகரித்துவிட்டால், அதன் பின்னால் இருக்கும் சமூக மாற்றங்களைப் புரிந்துகொள்ள முடியாது.

    அதே நேரத்தில், அந்தக் கோபத்தை அரசியல் அதிகாரமாக மாற்றும் ஒவ்வொரு முயற்சியையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

    அதுதான் ஜனநாயகத்தின் சமநிலை.

    கிளாக்டன் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம்

    இந்த இடைத்தேர்தல் எனக்கு ஒரு முக்கியமான அரசியல் உண்மையை நினைவூட்டுகிறது.

    மக்கள் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது, அவருடைய ஒவ்வொரு செயலும் சரி என்று தீர்ப்பு வழங்குவதாக அர்த்தமல்ல.

    அதேபோல்,

    ஒரு அரசியல்வாதி மீது விசாரணை நடைபெறுவது, அவர் அரசியல் ரீதியாக மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டார் என்பதையும் அர்த்தப்படுத்தாது.

    கிளாக்டன் மக்கள் ஃபராஜை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர்.

    இப்போது அவரது பொறுப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.

    அவர் அதிகார வர்க்கத்தை எதிர்ப்பதாகச் சொன்னால், அதனை விமர்சிப்பது மட்டுமல்லாமல், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, நேர்மை ஆகியவற்றிலும் தன்னை நிரூபிக்க வேண்டும்.

    ஏனெனில் அதிகாரத்தை விமர்சிப்பது எளிது.

    அதிகாரத்தின் முன் நின்று தன்னைத் தானே சோதனைக்கு உட்படுத்திக்கொள்வதுதான் கடினம்.

    முடிவாக…

    நைஜல் ஃபராஜின் அரசியல் பயணம் இன்னும் முடிவடையவில்லை.

    மாறாக, அது இன்னொரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

    பிரெக்ஸிட் அவரை வரலாற்றில் பதித்தது.

    ரீபோர்ம் யூகே அவரை மீண்டும் தேசிய அரசியலின் மையத்திற்குக் கொண்டுவந்தது.

    கிளாக்டன் அவருக்கு நாடாளுமன்ற இருக்கையைத் தந்தது.

    ஆனால் £5 மில்லியன் விவகாரம் அவருக்கு ஒரு புதிய சோதனையை உருவாக்கியுள்ளது.

    அந்தச் சோதனை வெறும் ஃபராஜுக்கானது அல்ல.

    அது பிரிட்டிஷ் ஜனநாயகத்திற்கான சோதனையும் கூட.

    ஒரு அரசியல்வாதியின் மக்கள் ஆதரவும், அவரது அரசியல் பொறுப்பும் இரண்டும் ஒன்றாக இருக்க முடியுமா?

    மக்களின் கோபத்தை அரசியல் மாற்றமாக மாற்ற முடியும்; ஆனால் அந்த மாற்றத்தை நல்லாட்சியாக மாற்ற முடியுமா?

    ரீபோர்ம் யூகே எதிர்ப்பின் சக்தியாக மட்டுமே தொடருமா, அல்லது ஒருநாள் ஆட்சிக்குத் தயாரான மாற்று அரசாக உருவெடுக்குமா?

    கன்சர்வேடிவ் கட்சி தனது பாரம்பரிய வாக்குத் தளத்தை மீண்டும் கட்டியெழுப்புமா?

    லேபர் மக்களின் பொருளாதார மற்றும் சமூக அச்சங்களுக்கு நம்பகமான பதிலை வழங்குமா?

    லிபரல் டெமகிரட்ஸ் இந்த புதிய அரசியல் இடைவெளியை நிரப்புவார்களா?

    இவைதான் இனி பிரிட்டிஷ் அரசியலின் முக்கியக் கேள்விகள்.

    நான் இந்த நாட்டில் ஐம்பத்தொரு ஆண்டுகளாக வாழ்ந்த ஒரு புலம்பெயர் தமிழனாக இந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, எனக்கு தோன்றுவது ஒன்றுதான்:

    பிரிட்டன் மாறிக்கொண்டிருக்கிறது.

    ஆனால் மாற்றத்தின் திசையை இன்னும் யாரும் முழுமையாகத் தீர்மானித்துவிடவில்லை.

    அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ளலாம்.

    தலைவர்கள் வரலாம்.

    போகலாம்.

    வாக்காளர்கள் கட்சிகளை மாற்றலாம்.

    ஆனால் இறுதியில் பிரிட்டனின் எதிர்காலத்தை தீர்மானிப்பது, அதன் மக்களின் மனநிலையும் அவர்கள் செலுத்தும் வாக்கும்தான்.

    அந்த மனநிலை எந்தத் திசையில் நகர்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே, பிரிட்டிஷ் அரசியலின் நாளைய முகத்தைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல்.

    நைஜல் ஃபராஜ் அந்த மாற்றத்தின் காரணமா?

    அல்லது ஏற்கனவே மாறிக்கொண்டிருந்த பிரிட்டிஷ் சமூகத்தின் வெளிப்பாடா?

    இதற்கான பதில் இன்னும் வரலாற்றின் கைகளில்தான் உள்ளது.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்பன்

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    (தொடரும் – பகுதி 4: கன்சர்வேடிவ் கட்சியின் வீழ்ச்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் எதிர்காலம், மற்றும் பிரிட்டிஷ் அரசியலின் புதிய சமநிலை.)

    Share
  • இணையிலா ஞானியே இராம கிருஷ்ணராவார்!

    இணையிலா ஞானியே இராம கிருஷ்ணராவார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பள்ளிக்குச் சென்றார் படிப்பிலே நாட்டமில்லை
    துள்ளி விளையாடினார் சோலைகளை நாடினார்
    பாடினார் ஆடினார் பரவசத்தில் மூழ்கினார்
    பக்குவத்தை நோக்கியே பயணத்தைத் தொடங்கினார்

    வித்தியாச விளையாட்டு வித்தியாசச் சிந்தனை
    ஓவியத்தில் நாட்டம் உணர்வெல்லாம் இறையே
    கழிமண்ணை எடுப்பார் கடவுளுரு ஆக்குவார்
    கண்களை மூடுவார் காசினியை மறந்திடுவார்

    அந்தணராய் பிறந்தார் ஆசையின்றி இருந்தார்
    அர்ச்சகராய் அம்பாளை அனுதினமும் சேவித்தார்
    காமமும் அறியார் கசடவர் மனமில்லை
    காளியம்மா நினைப்புடனே ஆலயத்தில் இருந்தார்

    தனைமறந்து தியானத்தில் சலனமின்றி இருப்பார்
    வீடுதனை நாடாமல் காளிகோவில் இருப்பார்
    தேடிவரும் உறவுகள் திகைத்துமே நிற்பார்
    தினந் தினமும் இப்படியே நடந்தபடியிருக்கும்

    தாயார் பயந்தார் தமயனும் பயந்தார்
    மணமுடித்தால் நிலமாறும் எனவவரும் நினைத்தார்
    சரியான தேர்வாகச் சாரதா அமைந்தார்
    சாமியார் மகனுக்குத் தாரமாய் ஆக்கினார்

    கட்டிய மனைவியை காளிமாதாவாய் கண்டார்
    காதலோ காமமோ அவரகம் இல்லை
    எல்லா இடமும் காளியே தெரிந்தாள்
    இறுகப் பற்றினார் காளியின் திருவடி

    பாசம் பந்தம் அனைத்தும் காளியே
    பகலும் இரவும் தியானத்தில் இருந்தார்
    ஞானம் காளியால் அவருளே நிறைந்தது
    ஞானியாய் மலர்ந்தார் ராமகிருஷ்ண பரமஹம்சர்

    அவருடைய வாக்கில் அருள்நிறைந் திருக்கும்
    அவருடைய நோக்கில் அஞ்ஞானம் அகலும்
    அவர்தொட்டு விட்டால் ஆணவமே அகலும்
    அவரருகில் இருப்பார் ஆசியினைப் பெறுவார்

    வந்தாரே ஒருவர் தொட்டாரே அவரை
    வந்தவர் மனத்தில் உருவேறி நின்றது
    உருவேற்றம் பெற்றவர் உண்மையை உணர்ந்தார்
    உத்தம சீடராய் உலகவலம் வந்தார்

    வீரத் துறவியாய் வெளிப்பட்டார் அவரும்
    வேதத்தின் சாரத்தை விளக்கினார் எங்கும்
    குருவினது பெயராலே தொடக்கினார் இயக்கம்
    ராமகிருஷ்ண மிஷனாக விரிந்ததே எங்கும்

    மதங்கள் அனைத்தும் வழியெனச் சொன்னார்
    மதங்களின் நோக்கம் இறையினைக் காண்பதே
    பெண்களை மதிப்பது பெருங்கடன் என்றார்
    அனைத்துப் பெண்களும் அன்னையர் என்றார்

    யாவரும் விளங்கிட போதனை புகன்றார்
    உபதேசம் அனைத்துமே உன்னதம் ஆகும்
    பற்றே இல்லா வாழ்ந்தார் உலகிலே
    பக்குவம் பக்தியைத் தத்துவம் ஆக்கினார்

    சாராதா அம்மையார் சரித்திரம் ஆவார்
    இந்திய தேசத்து இணையிலாப் பெண்ணவர்
    கட்டிய கணவனைத் தெய்வமாய் கண்டவர்
    கற்புத் தெய்வமாய் ஒளிர்கிறார் அம்மையார்

    இணையிலா ஞானியே இராம கிருஷ்ணராவார்
    கலியுகத்தில் ஞானியாய் கால்பதித்து நின்றார்
    அவருடைய வாழ்க்கை அவருடைய சிந்தனை
    அருமருந்தா யனைவருக்கும் அமைந்துமே இருக்கு !

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 42

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 36 ணநாத நாயனார்

     

    கந்தமலி வயற்காழி மறையோ ரேத்துங்

        கணநாதர் திருத்தோணிக் கடவு ளார்க்கு                                  

    நந்தவனம் பலவமைத்து மலருங் கொய்து

        நற்றாமஞ் சொற்றாம நயந்து சாத்தி

    வந்தவரைத் தொண்டாக்கிப் பணிகள் பூட்டி

        வாதுசெய்த வாரணத்தை மகிழ்ந்து வாழ்த்திப்

    புந்திமகிழ்ந் தரனருளாற்கயிலை மேவிப்

        பொருவில்கணத் தவர்காவல் பொருந்தி னாரே

     

    கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் போற்றிப் புகழும் கணநாத நாயனார் சீர்காழியில் ஒரு மறையவர் குலத்தில் அவதரித்தவர். சிவபெருமான் மீது மாறாத அன்பு கொண்டு சட்டைநாதர் கோயிலுக்குத் தவறாமல் சென்று, தோணியப்பர் வடிவில் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அனுதினமும் கோயிலில் பூசைகளை நடத்தி, எம்பெருமானுக்கு நைவேத்தியம் படைத்தார். தனது வீட்டிலும் சிவனடியார்களுக்கும் உணவு அளித்து சேவை புரிந்து வந்தார்.

    அடியார்களைக் கவரும் வண்ணம் சைவம் குறித்த அவருடைய சொற்பொழிவுகள், மக்களிடையே மிகுந்த பக்தி உணர்வைத் தூண்டியது. வேதங்களையும் சிவ மந்திரங்களையும் மிகத் தேர்ச்சியுடன் உச்சரிப்பதோடு நெஞ்சுறுதியோடு திருத்தொண்டுகள் பலவும் இடையறாது செய்து கொண்டிருந்தார். சைவ சமயம் தழைத்தோங்கும் வண்ணம் தொண்டர்களுக்கு உரிய பயிற்சிக் கூடம் அமைத்தார். நல்ல தொண்டர்களை உருவாக்கினார்.

    நந்தவனம் அமைப்பது, மலர் கொய்வது, மலர்மாலை கட்டுவது, பெருமான் திருமஞ்சனத்திற்கு உரியதைச் சேகரிப்பது, காலையும், மாலையும் கோயிலை அலகிடுதல், மெழுகிடுதல், தூயக் கைத்தொண்டு செய்தல், திருமுறைகளை எழுதிப் படியெடுத்தல், திருமுறைகளைப் பயிற்றுவிப்போர் என்ற இத்துறைகளுக்கெல்லாம் தொண்டர்களை உருவாக்கினார்.

    நல்ல நந்தவனப் பணி செய்பவர்

      நறுந்துணர் மலர் கொய்வோர்

    பல் மலர்த் தொடை புனைபவர் கொணர்

      திரு மஞ்சனப் பணிக்கு உள்ளோர்

    அல்லும் நண் பகலும் திரு அலகிட்டுத்

      திரு மெழுக்கு அமைப்போர்கள்

    எல்லையில் விளக்கு எரிப்பவர்

      திரு முறை எழுதுவோர் வாசிப்போர்

    வறுமையில் உழன்ற அடியார்களுக்கு ஆடைகளை வழங்கியவர், அவர்களின் பிள்ளைகளுக்கும் முறையான கல்வியை அளித்தார்.

    ஞானசம்பந்தப் பெருமானைத் தம் குருநாதராக ஏற்றிப் போற்றிய கணநாத நாயனார் அவரிடமிருந்து சைவத் தத்துவங்களைக் கற்றுக்கொண்டார்.

    சிவபெருமான் மீது அவர் கொண்டிருந்த உண்மையான பக்தியினாலும், அடியார்களுக்கு மட்டுமின்றி பொது மக்களுக்கும் அவர் ஆற்றிய பெரும் சேவையினாலும், சிவபெருமானின் திருவடிகளே காப்பு என்று ஏற்றிப் போற்றி வாழ்ந்து இறைவன் திருவடி நிழல் சார்ந்தார். ஆண்டுதோறும் கணநாத நாயனார் முக்தி அடைந்த நாளான, பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் இவரது குருபூசைநாள் சீர்காழியில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

     

    கணநாத நாயனார் புராணம் சொல்லும் கருத்து:

    உலகம் உய்ய நஞ்சுண்டவர் தொண்டினில்

      உறுதி மெய் உணர்வு எய்தி

    அலகில் தொண்டருக்கு அறிவு அளித்தவர்

      திறம் அவனியின் மிசை ஆக்கும்

    மலர் பெரும் புகழ்ப் புகலியில் வரும்

      கண நாதனார் கழல் வாழ்த்திக்

    குலவு நீற்று வண் கூற்றுவனார்

      திறம் கொள்கையின் மொழிகின்றாம்.

    சாதிப் பாகுபாடின்றி அனைவரிடமும் சமமான அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொண்டவரை மக்கள் மனதார நேசித்தனர். அவருடைய கனிவான நடத்தையால், ஏராளமான மக்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டு, சிவபெருமானைப் பற்றிய அவருடைய தெய்வீக சொற்பொழிவுகளையும் ஆர்வமுடன் செவிமடுத்தவர்கள் தங்கள் தேவையற்ற எண்ணங்களை நீக்கி, நல்ல எண்ணங்களை மட்டுமே நிரப்பினார். தன் வாழ்நாளில், கடவுளுக்கும் மக்களுக்கும் சேவை செய்வதன் மூலம் அவர் பல நல்ல கர்ம வினைகளைச் செய்திருந்தார். சிவபெருமான், ஊழிக்காலத்தில் 64 கலைகளையும் ஆடையாகக் கொண்டு பிரணவத் தோணியில் தேவியுடன் வந்து பிரளயத்தில் அழியாது நின்ற இத்தலத்தில் தங்கியதாக தலபுராணம் கூறும், சீர்காழி திருத்தோணியப்பரை சிவாகம விதிப்படி வழிபட்டு வந்தார். சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு புரியும் உயர்ந்த அறத்தை உணர்ந்து வாழ்க்கையை நடத்திய கணநாதர், சிவனடியார்களுக்குச் செய்ய வேண்டிய சிறந்த தொண்டினைப் பற்றிய தத்துவத்தை உலகிற்கு உணர்த்தியதோடு நில்லாமல், தாமும் அதன் வழி நடந்தார். தொண்டர்கள் விரும்பும் சிவாலயப் பணிகளை அவர்களுக்குக் கொடுத்து, அவர்கள் செய்யும் பணியை இறைமனதோடு தூய்மையாகச் செய்யவும் பயிற்றுவித்தார். திருத்தொண்டின் வழி நிற்பதே சிவபெருமானின் திருவடியை அடையும் வழி என்பதை உணர்ந்தவர் அனைவரையும் அரவணைத்து, தானும் பங்கெடுத்து ஆலயப்பணியைக் குறைவின்றி செய்தார்.

     திருச்சிற்றம்பலம்

     

    Share
  • தெளிந்த துணிவே திறந்திடும் அனைத்தையும்!

    தெளிந்த துணிவே திறந்திடும் அனைத்தையும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    எண்ணித் துணிகவென இயம்பினார் வள்ளுவர்
    எண்ணாமல் தொடங்குவார் இருக்கிறார் பலபேர்கள்
    காரியம் முடிந்தபின் கவலையில் மூழ்குவார்
    வள்ளுவரின் உட்கருத்தை மனமேற்றா விட்டவரே

    ஆரம்பம் என்பது அனைவர்க்கும் முக்கியமே
    ஆரம்பம் கோணினால் அனைத்துமே குலைந்துவிடும்
    ஆரம்ப வேளையிலே அலட்சியமாய் இருந்திட்டால்
    அடிபதிக்கும் அத்தனையும் ஆடியே போய்விடுமே

    வாழ்கையில் ஆயிரம் படிகள் உண்டு
    தாவிக் குதித்தால் தடுக்கியே வீழுவோம்
    படிகளைத் தாண்டிடப் பக்குவம் அவசியம்
    பதட்டமாய் தாண்டுவார் தடக்கியே வீழுவார்

    எப்படித் தாண்டலாம் எப்படி ஏறலாம்
    என்பதை எண்ணியே தாண்டிடல் முக்கியம்
    வீழ்ந்து நொந்து வெதும்பிய பின்னால்
    வெந்து நிற்பதில் நியாயந்தான் உண்டா

    எண்ணித் துணிவது என்பது தத்துவம்
    செய்வதைத் சீராய் செய்வதே முக்கியம்
    எண்ணிய முடிக்கும் திண்ணிய மனத்தாய்
    எண்ணிய முடித்தால் எல்லாம் சிறக்கும்

    எண்ணித் துணிவதில் இலக்கே முக்கியம்
    இலக்கை இழந்தால் எண்ணியது குழப்பமே
    துணிவு என்பதில் கலக்கம் வேண்டாம்
    தெளிந்த துணிவே திறந்திடும் அனைத்தையும்!

    Share
  • காத்திடும் தெய்வமாய் விளங்குவார் வாழ்வில்!

    காத்திடும் தெய்வமாய் விளங்குவார் வாழ்வில்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    தாத்தா என்பது தனித்துவம் மிக்கது
    தலைமை தாங்கும் வலிமை கொண்டது
    அன்பொடு அறிவு அனுபவம் நிறைந்த
    பொக்கிஷம் தாத்தா என்பதே சத்தியம்

    பாட்டி என்றால் பரிவு பக்குவம்
    பாட்டி என்றால் பகிர்ந்திடும் தத்துவம்
    பண்பின் வடிவம் பாசத்தின் சிகரம்
    பாட்டி என்னும் பசுந்தமிழ்ப் பதமே

    தாத்தா கடுமை தண்டிப்ப தல்ல
    தடுமாறி விழாமல் தடுத்திடும் காப்பே
    ஒவ்வொரு சொல்லும் உள்ளம் திருந்த
    உரைத்திடும் தாத்தா உயர் பாடமாகும்

    காவல் தெய்வமாய் தாத்தா இருப்பார்
    கண்ணியம் இழக்கா காத்திடும் காவலர்
    மண்ணிலே தாத்தா வரமாய் இருக்கிறார்
    கண்ணெனத் தாத்தாவை எண்ணிடல் வேண்டும்

    வீட்டில் பாட்டி இருப்பது சிறப்பே
    காட்டிக் கொடுக்கா காத்துமே நிற்பார்
    வாட்டும் நோய்க்கு மருத்து கொடுக்கும்
    மருத்துவர் ஆகவும் மாறுவார் பாட்டி

    பற்பல கதைகளைப் பாங்காய் சொல்வார்
    தத்துவம் சத்தியம் நிறைந்துமே இருக்கும்
    விளங்கா அனைத்தும் விளங்கும் வகையில்
    பாட்டியின் கதைகள் பாடம் நடத்தும்

    தாத்தா பாட்டி வீட்டில் இருந்தால்
    காத்திடும் தெய்வமாய் விளங்குவார் வாழ்வில்
    காத்திடும் தெய்வம் வீட்டிலே இருந்தால்
    கவலைகள் அகலும் களிப்பே பெருகும் !

    Share
  • தெய்வச்செயல் (சிறுகதை)

    ஜெ. ஜெயகுமார்
    சென்னை

    கத்தார் நாட்டு தலைநகரான தோஹாவில் ஐம்பது வயது அக்கவுண்டன்ட் அப்துல்லா வழக்கம்போல் அன்று அலுவலகம் நுழைந்தார்.

    லட்சக்கணக்கில் சம்பாதிக்க ஆசைப்பட்டு, கேரளாவிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் மனித வெள்ளத்தின் ஒரு துளியாக, வருடக்கணக்கில் குடும்பம் மறந்து தியாக வாழ்க்கை வாழ்ந்து வரும் அப்துல்லா ஒரே ஒரு நிமிடத்தில் அன்று லட்சக்கணக்கில் கடனாளியாவோம் என்பதை கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

    குடும்பத்தைப் பார்ப்பதற்கு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தரப்படும் ஒரு மாத விடுமுறைக்காக, முதலாளியின் அனுமதி கடைசி நாளில் கிடைத்து, அவசர கதியில் ஏர்போர்ட் வந்து, “டியூட்டி ஃப்ரீ”யில் சாக்லேட், பெர்ஃப்யூம், நெருங்கிய சினேகிதர்களுக்கு ஒரு “ரெட் லேபிள் ஜானி வாக்கர்” வாங்கிக்கொண்டு ஒரு சராசரி மலையாளியாக பட்டணம்திட்டா வந்து குடும்பத்துடன் ஒரு மாத தேனிலவு லௌகீக வாழ்க்கையை வாழ்ந்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து அயலக வாழ்க்கையை ஆரம்பிக்கும் அப்பாவி மனிதர் அப்துல்லா.

    இன்றிரவு கேரளா செல்ல வேண்டும் என்பதால் காலையிலிருந்தே அரக்கப் பரக்க அலைந்து கொண்டிருந்தார் அப்துல்லா. விடுமுறையில் அவருடைய பணியை செய்யப் போகும் பிஜூவையும் பாங்க்கிற்கு அழைத்து சென்றார்.

    அன்று அனைத்து நிறுவனப் பிரிவுகளின் ஊழியர்க்கு சம்பள நாள்.

    ரியால் வெள்ளம்.

    பாங்க் அருகே பார்க்கிங் கிடைக்காததால் பின்புறத்தெருவில் காரை நிறுத்திவிட்டு பாங்க்கில் மூன்று லட்சம் ரியால்களை (இந்திய மதிப்பில் அறுபது லட்சம் ரூபாய்) கட்டுக் கட்டாகப் பெற்றுக்கொண்டு சூட்கேஸ்சில் நேர்த்தியாக அடுக்கிக் கொண்டு சர்வ ஜாக்கிரதையாக இருவரும் காரின் பின்பக்கக் கதவைத் திறந்து சூட்கேஸ்சை வைத்து கதவை சாத்திவிட்டு திருப்தியுடன் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தனர்.

    பாங்க்கிலிருந்து வந்த பத்தான் உடையணிந்த ஒருவர் அப்துல்லாவைப் பார்த்து, “ஜீ! பாங்க் மானேஜர் உங்களை அவசரமாகக் கூப்பிடுகிறார்; ஏதோ “செக்”ல பிரச்சனையாம் ” என்று ஹிந்தியில் சொல்லிக்கொண்டே தன் கார் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தார்.

    “நல்லபடியாக ஊர் செல்லவேண்டும்” என்று நினைத்துக்கொண்டே அப்துல்லா காரைப் பூட்டி விட்டு பிஜுவை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு வங்கிக்கு விரைந்தார்.

    சில நிமிடம் கழித்து வங்கியிலிருந்து வந்த மற்றொரு பத்தான் ஆசாமி, பிஜுவைப் பார்த்து ”யாரோ ஒரு மல்பாரி “டை-வாலா” (டை அணிந்த மனிதன்) பாங்க்கில் மயங்கி விழுந்து விட்டார்; போய்ப் பாருங்கள்; ஹார்ட் அட்டாக் போலிருக்கிறது என்று அனுதாபத்துடன் ஹிந்தியில் சொல்லிக்கொண்டே சென்றார்.

    அப்துல்லா “டை” அணிபவர் என்பதாலும், அவருக்கு “ஹார்ட்” பிரச்சனை உள்ளது என்பதாலும் பூட்டப்பட்ட காரின் சாவி அப்துல்லாவிடம் உள்ளது என்பதாலும் வேலைக்கு புதிது என்பதாலும் “ஒருக்கால் அவர் மயங்கி விழுந்திருந்தால் அவருக்கு உதவி செய்யலாமே” என்ற பதைபதைப்பாலும் படபடப்புடன் பாங்க் விரைந்தார் பிஜு.

    அப்துல்லா பாங்க் மேனேஜருடன் உரையாடிவிட்டு வெளியே வருவதைப் பார்த்துவிட்டு அப்துல்லாவிற்கு ஒன்றுமில்லை என்று அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார் பிஜு.

    “நீ ஏன் இங்கு வந்தாய்?’ என்று அப்துல்லா திடுக்கிட்டு வினவ, வந்த காரணத்தை பிஜு சொல்லிக்கொண்டே இருவரும் வெளியே வந்தனர். “அப்படி யாரும் பாங்க்கில் மயங்கி விழவில்லையே” என்று துணுக்குற்று பதிலுரைத்த அப்துல்லா மனதில் எங்கோ அபாயமணி அடித்தது.

    “என்னை பாங்க் மேனேஜர் கூப்பிடவேயில்லை” என்று பிஜூவிடம் சொல்லிக்கொண்டே வந்தவர் அதிர்ந்து உறைந்து நின்றார்.

    காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு மூன்று லட்சம் ரியால் சூட்கேஸ் களவாடப் பட்டிருந்தது.

    இந்த ஜன்மத்தில் இனிமேல் குடும்பத்தைப் பார்க்கப் போவதில்லை என்ற மின்னல் அப்துல்லாவை வெட்ட கார் பக்கவாட்டில் சரிந்தார்.

    அக்கம்பக்க அனுதாபங்கள், வயிற்றைக் கலக்கும் சைரனுடன் “லாண்ட் க்ரூய்ஸ்சர்” காரில் போலீஸ் வருகை, அவர்களின் அதிகார தோரணை, அரபி மொழி விசாரணை என்று உச்சக்கட்ட யுத்தக்கள களேபரம் அரங்கேறியது அங்கே.

    “இருபத்தி ஐந்து வருட அர்ப்பணிப்பு, உழைப்பு, எல்லாம் இரண்டே நிமிடங்களில் மண்ணோடு மண்ணாயிற்றே” என்று அப்துல்லா கூக்குரலிட்டு குமுறியது முதலாளி “ஷேக்”கையே ஒருகணம் நெகிழச் செய்தது.

    “கம்பெனி சார்பில் இரண்டு பேர் சென்றும் பணம் பறிபோயிற்றே” என்று மன உளைச்சல் அடைந்த ஷேக் சில கணங்களில் தன்னை மீட்டுக் கொண்டார்.

    அப்துல்லாவின் நேர்மையான உழைப்பின் முன்னால் அது பெரிய இழப்பு இல்லை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். மேலும் அவருக்கு தன் நாட்டு காவல் துறையின் மீது அபார நம்பிக்கை, எப்படியும் பணத்தை மீட்டு விடுவார்களென்று.

    அப்துல்லாவை நோக்கி “ நீ ஊர் சென்று வா! அதற்குள் நம் பணம் கிடைத்து விடும்” என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.

    இந்தப் பிறவியில் நாம் இந்தியா திரும்பப் போவதில்லை என்று நினைத்திருந்த அப்துல்லா, ஷேக்கின் பெருந்ததன்மையை நினைத்து கண்ணீர் மல்க நன்றி கூறி ஏர்போர்ட் வந்தடைந்தார்.

    தன் அலுவலக மொபைல் ஃபோனை பிஜூவிடம் ஒப்படைத்துவிட்டு “செக் இன்” செய்ய “புறப்பாடு” உள்ளே நுழைந்தார்.

    அவ்வளவு மன உளைச்சலிலும் தான் வழக்கம்போல் செய்யும் ஒரு காரியத்தை செய்து விட்டு விமானம் ஏறினார்.

    வீடு சேர்ந்த கணவனிடத்தில் இயல்பான உற்சாகம் மிஸ்ஸிங், மாறாக எதையோ பறி கொடுத்தது போல் இருக்கிறாரே என்பதை அறிந்த மனைவி கேள்விகளால் துளைக்க, மனைவியிடம் மெள்ள விஷயத்தை சொல்ல அது இடியாக இறங்கியது அவள் தலையில்.

    கணவனின் தலைக்குள் இருக்கும் சுமையை படுக்கை அறையில் நொடியில் கண்டுபிடித்து விடுவார்கள் பெண்கள். அதுவும் ஒரு வருடமாக தனித்திருந்த, பசித்திருந்த அப்துல்லாவின் ஆக்ரோஷம் கலந்த அபரிமிதமான தாம்பத்திய தாகத்தை வருடா வருடம் அந்த ஒரு மாத தேனிலவு வாழ்க்கையின்போது தணித்துக் கொண்டவள்தானே அவள்.

    “இனி தோஹா போக வேண்டாம்; போனால் அவ்வளவுதான், திரும்ப மாட்டீர்கள்; வேலை போனால் போகிறது, மளிகைக் கடை வைத்து பிழைத்துக் கொள்ளலாம்” என்ற மனைவியின் புலம்பலால் அப்துல்லாவின் மனம் அலைக்கழிந்தது.

    சில நாட்கள் கழித்து, அப்துல்லாவின் கத்தார் மொபைல் ஃபோனிலிருந்து பிஜூவின் குரல் உற்சாக வெள்ளத்தில் ஒலித்தது.

    “சாரே! “டியூட்டி ஃப்ரீ”யில் நீங்கள் வாங்கின லாட்டரி சீட்டிற்கு பத்து லட்சம் ரியால் “ஃபர்ஸ்ட் ப்ரைஸ்” என்றார் பிஜு கும்மாளத்துடன்.

    அப்துல்லாவால் நம்பவே முடியவில்லை.

    “ஒருக்கால் பொய்யோ,” “தன்னை திரும்பவும் கத்தார் கொண்டு வருவதற்கு ஒரு சதியோ” என்று சந்தேகித்த அப்துல்லாவை, தோஹா நண்பர்கள் தொலைப்பேச்சு, “கல்ஃப் டைம்ஸ்” நாளிதழ் செய்தி. ”டியூட்டி ஃப்ரீ அதாரிட்டி”யின் கடிதம், அனைத்தும் பரிசுச் செய்தியை உறுதி செய்தன.

    நாட்கள் பரபரப்புடன் பறந்தன. இந்த இக்கட்டிலிருந்து மீண்டு வரவேண்டும், மீண்டும் கணவர் வீடு திரும்ப வேண்டும் என்று கண் கலங்கிய மனைவியைத் தேற்றிவிட்டு விமானம் ஏறி தோஹா வந்து “டியூட்டி ஃப்ரீ” அலுவலகத்தில் தன் பரிசு சீட்டைக் காண்பித்து அவர்கள் கேட்ட அனைத்து தரவுகளையும் சமர்ப்பித்து பத்து லட்சம் ரியால் பரிசுத் தொகை செக்”கை நடுங்கும் கரங்களில் பெற்றுக் கொண்டார்.

    முதல் வேலையாக ஷேக் ஆபீஸ் சென்று சந்தோஷ செய்தியை பகிர்ந்து கொண்டு அவரிடம் “ஷேக்! அல்லாவின் கருணைக்கு அளவில்லை! மீதி இருக்கும் ஏழு லட்சம் ரியால் (ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய்) எனக்கு போதும்” என்று சொல்லி மூன்று லட்சம் ரியாலுக்கு ஒரு செக்கை எழுதி அவரிடம் கொடுத்தார்.

    அப்துல்லாவை ஷேக் பாராட்டிவிட்டு “என் பணம் போனது போனதுதான்! அதை அல்லா எனக்கு எப்படியும் திருப்பிக் கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

    அப்துல்லாவை நோக்கி “இது உன் பணம்! உனக்கு அல்லா அளித்தது; பணத்தை இழந்தபோது எந்த அளவிற்கு நரக வேதனை அனுபவித்திருப்பாய் என்பதெல்லாம், இறைவனுக்குத்தான் தெரியும்;” என்று கூறி மூன்று லட்சம் ரியால் செக்கை அப்துல்லாவிடமே திருப்பிக் கொடுத்தார்.

    இப்படிப்பட்ட மனிதரிடம் நாம் வேலை செய்ய எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்று எண்ணிய அப்துல்லாவின் “பணியில் தொடர்கிறேன்” என்ற முடிவு அனைவர்க்கும் ஆச்சரியம் அளித்தது.

    நாட்கள் நகர்ந்தன.

    திருட்டு வழக்கில் தீவிரம் காட்டிய போலீஸ் முதற்கண், அனைத்து “மனி எக்ஸ்சேஞ்ச்” எனப்படும் அந்நியச் செலாவணி நிறுவனங்களுக்கு தகவல் அனுப்பி கண்காணிக்க ஆணையிட்டனர்.

    ஒருவரின் மொபைல் எண், “பதாக்கா” எண் போன்ற அத்தியாவசிய தரவுகள் சிறு பணப்பரிவர்த்தனைக்கும்கூட அவசியம் என்பதாலும், ஒரு மனிதனின் அனைத்து பணப்பரிவர்த்தனையும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு விட்டதாலும் ஒற்றர்களின் ஒத்துழைப்பாலும் போலீசின் மதிநுட்பத்தாலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு பெருமளவு பணம் மீட்கப்பட்டு ஷேக்கிடம் ஒப்படைக்கபட்டது.

    அனைத்தும் முடிந்த பின்னரே செய்தி குற்றவாளிகளின் கண்கள் மறைக்கப்பட்ட படங்களுடன் ஊடகங்களில் வெளியாயின.

    செய்தி அறிந்த அப்துல்லா, “ஷேக்! மிக்க மகிழ்ச்சி; இப்போதுதான் என் இதயபாரம் இறங்கியது; “நான் வேலையை ராஜினாமா செய்கிறேன்” என்றார்.

    அதை எதிர்பார்த்த ஷேக் “உனக்கும் வயதாகிறது! இனிமேலாவது வாழ்க்கையை குடும்பத்துடன் அனுபவி” என்று நன்றிப் பெருக்குடன் விடை கொடுத்தார்.

    ஏர்போர்ட்டில் “டியூட்டி ஃப்ரீ”யில் தேவையானதை வாங்கிக்கொண்டு விமானம் ஏறினார்.

    இறுதியாக. ஆனால் இந்த முறை அவர் லாட்டரி டிக்கெட் வாங்கவில்லை.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி 2I)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி 2I)

    ஆண்டி பர்ன்ஹாம் – நாடாளுமன்ற உறுப்பினரிலிருந்து பிரதமர் வரை

    ஒரு ஜனநாயக நாட்டில் தலைவர்கள் உருவாக்கப்படுவதில்லை.

    அவர்கள் மக்களின் நம்பிக்கையால் உருவாகிறார்கள்.

    அந்த நம்பிக்கையை நிலைநிறுத்தும் ஆற்றல் இருந்தால் மட்டுமே அவர்கள் வரலாற்றில் இடம்பிடிக்கிறார்கள்.

    இன்றைய பிரிட்டிஷ் அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் அவர்களின் அரசியல் பயணத்தை ஆராயாமல் முடியாது.

    அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டம்.

    அதில் சிலர் வேகமாக ஓடி ஆரம்பத்திலேயே மறைந்து விடுகிறார்கள்.

    சிலர் மெதுவாக நடந்தாலும், மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்து உச்சத்தை அடைகிறார்கள்.

    ஆண்டி பர்ன்ஹாம் அவர்களின் பயணம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது.

    இங்கிலாந்து அரசியலில் அவர் முதன்முதலில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, திறமையான இளம் தொழிலாளர் கட்சி அரசியல்வாதி என்ற அடையாளமே அவருக்கு இருந்தது.

    பின்னர் பல அமைச்சுப் பொறுப்புகளை வகித்தார். குறிப்பாக தேசிய சுகாதார சேவை (NHS) தொடர்பான அவரது ஈடுபாடு, சாதாரண மக்களின் வாழ்க்கையை நெருக்கமாகப் புரிந்துகொள்ளும் அரசியல்வாதி என்ற பெயரை அவருக்குப் பெற்றுத் தந்தது.

    ஆனால் அரசியலில் ஒவ்வொரு வெற்றிக்கும் முன் தோல்விகள் இருக்கும்.

    கட்சித் தலைமைப் போட்டிகளில் அவர் பின்னடைவைச் சந்தித்தார்.

    பல அரசியல்வாதிகள் அத்தகைய தோல்விக்குப் பிறகு அரசியலிலிருந்து விலகியிருப்பார்கள். ஆனால் பர்ன்ஹாம் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தார்.

    அவர் லண்டன் அரசியலின் மையத்தை விட்டு, கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராகப் பொறுப்பேற்றார்.

    அங்குதான் அவரது அரசியல் முதிர்ச்சி முழுமையாக வெளிப்பட்டது.

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் மத்திய அரசுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோதும், தனது பகுதி மக்களின் நலனுக்காக உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார்.

    அந்தச் செயல்பாடு அவரை ஒரு பிராந்திய அரசியல்வாதியாக அல்ல, தேசிய அளவிலான தலைவராக மக்களிடம் அறிமுகப்படுத்தியது.

    எனது ஐம்பத்தொரு ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் நான் உணர்ந்த ஒரு உண்மை என்னவென்றால், பிரிட்டிஷ் மக்கள் வெறும் பேச்சாளர்களை நீண்ட காலம் ஏற்றுக்கொள்வதில்லை.

    அவர்கள் செயலில் நம்பிக்கை வைப்பவர்களையே இறுதியில் மதிக்கிறார்கள்.

    ஆண்டி பர்ன்ஹாம் மீது உருவான நம்பிக்கையின் அடிப்படையும் அதுவே.

    இன்றைய பிரிட்டனில் மக்களின் முக்கியமான கவலைகள் வாழ்க்கைச் செலவு, சுகாதாரம், வீட்டு வசதி, குடியேற்றம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக ஒற்றுமை.

    இந்த அனைத்திலும் சமநிலையான அணுகுமுறையை முன்வைக்க முயன்றதாலேயே அவர் தேசிய அரசியலின் மையத்திற்கு மீண்டும் அழைக்கப்பட்டார்.

    பிரிட்டனின் அரசியலமைப்பில் பிரதமரை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதில்லை.

    மக்கள் தங்கள் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

    பொதுத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறும் கட்சியின் தலைவரை, நாட்டின் மன்னர் அல்லது மன்னி அரசு அமைக்க அழைக்கிறார்.

    அந்த அழைப்பை ஏற்று அமைச்சரவையை அமைக்கும் நபரே பிரதமராகப் பதவியேற்கிறார்.

    இந்த நடைமுறை உலகின் பல நாடுகளிலிருந்து மாறுபட்டது.

    இங்கு பிரதமரின் அதிகாரம் சட்டத்தில் மட்டுமல்ல.

    நாடாளுமன்றத்தின் நம்பிக்கையிலும் இருக்கிறது. அந்த நம்பிக்கை குறைந்தால், பதவியும் நீடிக்காது. இதுவே பிரிட்டிஷ் ஜனநாயகத்தின் தனித்துவமான வலிமை.

    ஆண்டி பர்ன்ஹாம் பிரதமரானது ஒரே நாளில் நிகழ்ந்த சம்பவமல்ல.

    பல ஆண்டுகளாக உருவான அரசியல் அனுபவம், மக்களிடம் பெற்ற நம்பிக்கை, கட்சிக்குள் பெற்ற ஆதரவு, நாட்டின் அரசியல் சூழல் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்தபோதுதான் அவர் அந்த உயரத்தை அடைந்தார்.

    ஆனால் ஒரு அரசியல் ஆய்வாளராக நான் ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன்.

    பிரதமராக உயர்வது ஒரு தலைவரின் வெற்றி.

    ஆனால் அந்த வெற்றியை வரலாற்று வெற்றியாக மாற்றுவது அவரது ஆட்சிதான்.

    இன்று பிரிட்டன் எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தங்கள், அதிகரித்து வரும் குடியேற்ற விவாதங்கள், தேசிய சுகாதார சேவையின் சவால்கள், உலகளாவிய பாதுகாப்பு நிலைமைகள் ஆகியவற்றை சமாளிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு ஆண்டி பர்ன்ஹாம் அரசின் தோள்களில் உள்ளது.

    அவரது ஆட்சியின் வெற்றியை தீர்மானிப்பது தேர்தல் வெற்றி அல்ல.

    அடுத்த ஐந்து ஆண்டுகளில் சாதாரண பிரிட்டிஷ் குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மாற்றம்தான்.

    அதனால்தான் அரசியலில் வெற்றி என்பது பதவியை அடைவது அல்ல.

    அந்தப் பதவியின் மீது மக்கள் வைத்த நம்பிக்கையைப் பாதுகாப்பதே உண்மையான வெற்றியாகும்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்பன்
    சக்தி சக்திதாசன்
    லண்டன்
    10.08.2026

    (தொடரும் – பகுதி 3 : நைஜல் ஃபராஜ் மற்றும் ரீபோர்ம் UK – பிரிட்டிஷ் அரசியலின் புதிய அதிர்வு.)

    Share
  • மாசகற்றும் மாசக்தி யானவனே இறைவன்!

    மாசகற்றும் மாசக்தி யானவனே இறைவன்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    உள்ளம் பெருங்கோவில்  என்றாரே  திருமூலர்
    ஊனுடம்பு ஆலயம் என்றவரும் சொன்னாரே
    கள்ளமிலா உள்ளமெலாம் கடவுள் வந்தமர்வார்
    கருத்திலே இருத்தினால் சிறப்பாக இருக்கும்

    நம்பிக்கை வைத்தால் நல்லதே நடக்கும்
    நம்பினார் கெடுவதில்லை நான்குமறை வாக்கு
    நால்வேதப் பொருளாக நாதனே இருக்கிறான்
    என்பதை நம்புவார் இவ்வுலகில் இருக்கின்றார்

    நம்புவார் நம்பாதார் யாவர்க்கும் இறைவன்
    நாளுமே படியளந்து கொண்டுமே இருக்கிறான்
    நம்புவார் இறையை  நயந்தேற்றிப் போற்கிறார்
    நம்பாதார் தம்முயற்சி என்றுமே வியக்கிறார்

    வேண்டுவார் வேண்டுவதைக் கொடுப்பவன் இறைவன்
    வேறுபாடு காட்டாத மெய்ப்பொருளே இறைவன்
    மாறுபடு மனத்தாரை மாற்றிடுவான் இறைவன்
    மாசகற்றும் மாசக்தி யானவனே இறைவன் !

    Share
  • போனேன் Phu Quok

    போனேன் Phu Quok

    நிர்மலா ராகவன்

    ‘செழிப்பான நாடு’  என்ற அர்த்தம்கொண்டது Phu Quok. இயற்கை, கடல் என்ற ஆர்வம்கொண்ட உல்லாசப்பயணிகளின் சொர்க்கம் இது.

    கம்போடியா, வியட்நாம் ஆகிய இரு நாடுகளும் ப்ரெஞ்சு நாட்டின் அதிகாரத்தில் இருந்தனவாம். முதலில் கம்போடியா நாட்டுக்குச் சொந்தமாக இருந்த இத்தீவு ஒரு போரின் விளைவாக வியட்நாமின் கைக்கு வந்தது.

    கோலாலம்பூரிலிருந்து ஒன்றரை மணி நேர விமானப்பயணம் என்பதால், பலருக்கும் தெரிந்திராத இத்தீவிற்கு போய்த்தான் பார்ப்போமே என்று நானும் என் மகள் சித்ராவும் திட்டம் போட்டோம்.

    நாங்கள் தங்கிய Ocean Bay Resort என்ற இடத்தை இயற்கையைக் காக்கவேண்டும் என்ற முனைப்புடன் அமைத்திருக்கிறார்கள். தெருவுக்கு இருபுறங்கிலும் காட்டையொத்த அடர்ந்த மரங்கள். மரங்களாலான இருப்பிடங்கள். குளியலறையில் நீர்யானை குளிக்க ஏற்ற, நீளமும் அகலமுமான குளியல் தொட்டி (bath tub). முழுவதும் கருங்கல்லால் ஆனது. எல்லாச் சுவர்களும் மூங்கிலால் அமைக்கப்பட்டிருந்தன.

    இங்கு வந்திருந்தவர்கள் சீனா, ரஷ்ஷியா மற்றும் 1,000 கிலோமீட்டர் தொலைவிலிருந்த வியட்நாமிலிருந்து வந்தவர்கள். ஆங்கிலத்தைத்தவிர, அம்மொழிகளில்தாம் எல்லா இடங்களிலும் அறிவிப்புகள் காணப்பட்டன.

    நாங்கள் கால்வைத்த நேரம் மழை கொட்டொ கொட்டென்று கொட்டியது. `நல்லவர் ஒருவர் உளரேல்,’ என்று நான் பெருமைப்பட முடியவில்லை. இது மழைக்காலம். இடியோ, மின்னலோ இல்லாது, காற்று பலக்க மழை. பேய்க்காற்றில் மரங்களின் கிளைகள் அசைய, அருகிலிருந்த கடல் அலைகள் ஆர்ப்பரிக்க, மிக இனிய அனுபவம். வராந்தாவைத்  தாண்டி, படுக்கையறைக்குள்ளும் சாரல் அடித்து, எங்களைச் சிரிக்கவைத்தது.

    `மழை சற்று விட்டு விட்டதே!’ என்று நாங்கள் தங்கிய இடத்திலிருந்து ஹோட்டலுக்கு நடக்க ஆரம்பித்தவுடன் மழை பலத்துவிடும். முதல்நாள் என் புடவை முழுக்க தொப்பலாக நனைய, மறுநாளிலிருந்து உடையை ஷார்ட்ஸ், முருநீளக் கால்சட்டை என்று மாற்றினேன். எங்கள் அறையிலிருந்து வெளியே பார்த்தால், கூப்பிடு தூரத்தில் கடல். அலையோசையை ரசித்தபடி முதல் நாளைக் கழித்தேன். அவ்வளவு நனைந்தும், உடலுக்கு எந்த பாதிப்பும் நேரவில்லை என்பது விசேஷம். அரிதான, மிகத் தூய்மையான காற்றின் மகிமை.

    மறுநாளிலிருந்து, டுக் டுக் (tuk tuk) என்ற வாகனத்தை வரவழைத்தோம். ஆறுபேர் உட்காரலாம். அதில் ஏறமுடியாது திணற, அதை ஓட்டிய இளம் வாலிபன் என்னைத் துக்கி ஏற்றிவிட்டான்.

    இங்கு என்ன சிறப்பு என்றால், வாடகைக்காரில் எங்காவது போகும்போதும், என் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். `என்னால் நடக்க முடியும்,’ என்று கையை உதறினாலும் விடமாட்டார்கள்.

    சாப்பாட்டுக்கூடத்தில் வேலை பார்த்த இளைஞன், “உங்களுக்கென்று, முட்டை போடாமல் pan cake பண்ணிக்கொண்டு வந்திருக்கிறேன்!’ என்று, தன் வேலையை விட்டுவிட்டு, என் மேசையில் கொண்டுவைத்தான். தோசைக்கல்லில் மாவு ஊற்றி, அதன்மேல் வெண்ணை, பலவித ஜாம், தேன் என்ற இனிப்பு வகை அது.

    தென்கிழக்கு ஆசியாவின் பிரத்தியேகமான குணம் — முதியவர்களுக்கு உதவி செய்வது பெரும்பாக்கியம் என்பதுபோல் புன்னகையுடன் செய்வது.

    பார்க்கவேண்டிய இடங்கள் இரண்டு: Pearl Farm (முத்துப்பண்ணை) மற்றும் பட்டுப்பண்ணை.

    முத்துப்பண்ணை

    ஒரு மீனவர் முத்துக்குளிக்க இப்பகுதிக்கு வந்தபோது, பல நூற்றாண்டுகளுக்குமுன் கடலில் மூழ்கிவிட்ட கப்பலைக் கண்டார். அதில் காணப்பட்ட சாமான்களை எடுத்துவந்தார். பன்முறை இப்படியே செய்து, அவர் சேர்த்துவைத்தவை இங்கு காட்சிப்பொருட்களாக வைக்கப்பட்டிருந்தன. பதினைந்தாம் நூற்றாண்டில் கிடைத்த பீங்கான் சாமான்களோடு, பெரிய பெரிய முத்துச்சிப்பிகளும் இருந்தன. நூற்றுக்கணக்கான கோப்பைகள் உடையாது இருந்தது ஆச்சரியம். கொலுவைப்போல் அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

    கடலிலிருந்து எடுக்கப்படும் முத்து விலை உயர்ந்தது. ஆற்றிலிருந்து மனிதனால் உற்பத்தி செய்யப்படுவது சற்றே மலிவு. பளபளப்பு குறைவு. இரு முத்துக்களை ஒன்றோடொன்று உரசினால் வெள்ளை மாவுபோல் கையில் ஒட்டுகிறது. பிறப்பிடம் ஆறோ, கடலோ, அவைதாம் நல்ல முத்துக்கள்.  எத்தனை காலம் ஆற்றில் விட்டுவைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து நிறம், அளவு ஆகியவை மாறும் என்றெல்லாம் ஒருவர் விளக்கினார் – முத்துச்சிப்பிகளின் உள்ளே கீறி.

    பட்டுப்பண்ணை

    பட்டுப்பூச்சி மற்றும் மூங்கிலால் செய்யப்படும் பட்டு வகைகளை இங்கு பார்க்கலாம். மிக அழகான, மெலிதான பட்டின் விலை அதிகம் என்று, வழவழப்பாக இருக்கும் மூங்கில் பட்டாலான ஆடைகள், காலுறை, மேசையிலும், தரையிலும் படிந்த கறைகளை நன்றாகத் துடைக்க துண்டுகள் ஆகியவற்றை மகிழ்வுடன் வாங்கினோம்.

    `பார்க்க வேறென்ன இருக்கிறது?’ என்று கேட்பவர்களுக்கு: இது ஒரு சிற்றூர். பேரங்காடிகள் கிடையாது. பலரும் ஸ்கூட்டரில்தான் போகிறார்கள். ஆனால், ஏழ்மையான தோற்றமில்லாது, ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

    `நாகரிகம்’ என்ற பெயரில் கரடுமுரடாக நாம் செய்துவிட்ட வாழ்க்கையில் இம்மாதிரியான இயற்கைச்சூழலும், மனிதத்தன்மையுடன் வலம் வரும் மனிதர்களும் அருமருந்து.

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 41

     

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 35 கழறிற்று அறிவார் (சேரமான் பெருமாள்) நாயனார்

    சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருத்தொண்டத் தொகையில் ‘கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்’ என்று போற்றும் பெருமை பெற்றவர் இளவரசர் பெருமாக்கோதையார். சேர நாட்டின் தலைநகரமான மகோதை என்னும் கொடுங்கோளூரில், சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவஞ்சைக்களத்தில் சேரர் குலத்தின் பெரும் புண்ணியங்களின் பயனாய் தோன்றிய இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் பெருமாக்கோதையார். இளம் வயதிலேயே அவர் மனம் நாளும் சிவ சிந்தையிலேயே ஈடுபட்டு வந்தது.  திருஅஞ்சைக்களத்து ஈசன் பால் பேரன்புடையவராய் விளங்கிய இவர், பொழுது புலரும் முன்பே எழுந்து புனித நீராடி ஆலயத்தைத் தூய்மை செய்து திருஅலகிட்டும், திருமெழுக்கிட்டும் பூமாலை புனைந்தும் அயராது பணி செய்து இறைவனை வழிபட்டு வந்தார். இளவரசனாக இருந்தும் அரச போகங்களில் அதிகாரச் செழிப்பில் அவர் மனம் ஈடுபடாமல், திருத்தொண்டு செய்வதே நிலையான பேரின்பம் என்று வாழ்ந்து வந்தார். சுந்தரரது திருத்தொண்டத் தொகை பெரிய புராணத்துக்கு மூலமாக இருந்தது. சுந்தரரின் சமகாலத்தவர் சேரமான் பெருமாள் நாயனார் ஆவார்.

    செங்கொற்பொறையன் என்னும் மன்னன் அப்போது சேர நாட்டை ஆண்டு வந்தான். நிலையற்ற வாழ்வில் இறைவன் திருவடியை அடைவதே உத்தமம் என்று எண்ணிய அவன் தன் அரச வாழ்வைத் துறந்து தவம் மேற்கொள்ள கானகத்தை நோக்கிச் சென்றான். அமைச்சர் முதலானோர் ஆய்வு செய்து சேரர் குடியில் தோன்றி திருஅஞ்சைக்களத்தில் சிவத் தொண்டு புரிந்து வந்த இப்பெருமாக்கோதையாரே அரசு உரிமை புரக்கும் உரிமை உடையார் என்று அறிந்து அவரை அணுகி அரசுரிமை ஏற்று அம்மலை நாட்டு மக்களை காத்தருள வேண்டும் என்று அழைத்தனர்.

    சேர நாட்டு ஆட்சி உரிமையை அவர் ஏற்க வேண்டும் என்பதை அவருக்குத் திருவருள் உணர்த்திற்று. பெருமாக்கோதையார் இறைவனிடத்தில் அனைத்து உயிர்களின் துன்பத்தை நீக்குகின்ற ஆற்றலும் அவற்றை அறிகின்ற திறனும் அருளல் வேண்டுமென வேண்டி நின்றார். அவ்வண்ணமே இறையருளால் மக்களுயிர் மட்டுமன்றி அனைத்துயிர்க்கும் நலம் செய்து ஆட்சி நடத்துமாறு எல்லா உயிரினங்களும் பேசும் மொழிகளை அறியும் அறிவாற்றலைப் பெற்றார். பிற உயிர்கள் பேசும் மொழிகளைஅறியும் அறிவை இவர் பெற்ற காரணத்தால் கழறிற்றறிவார் என்ற சிறப்புப் பெயரும் பெற்றார். சேர நாட்டு மன்னரானதால் சேரமான் பெருமான் என்ற பெயரும் இவருக்கு உரித்தாயிற்று.

    சேரமான் பெருமானுக்கு முடிசூட்டு விழா முடிந்தது. திருவஞ்சைக்களத்து  இறைவனை வழிபட்டு பட்டத்து யானை மீது  அரச மாளிகைக்குச் சென்று கொண்டிருந்தார் அரசர். அப்போது உவர் மண் மூட்டையோடு  ஒரு சலவைத் தொழிலாளி எதிர்ப்பட்டான். அவன் சுமந்து வந்த அந்த உவர் மண் அவன் உடல் முழுவதும் சிதறிப் படர்ந்து முழு நீறு பூசிய முனிவர் போன்று தோற்றமளிக்கச் செய்தது. அவனைக் கண்ட சேரமான் பெருமான் சிவனடியார் என்றே கருதியவர் சற்றும் தயங்காமல் யானையினின்றும் கீழே இறங்கி அந்த ஏழைத் தொழிலாளியின் காலில் விழுந்து வணங்கினார். பதறிப்போன அந்த சலவைத் தொழிலாளி அச்சம் கொண்டு, தான் மன்னருக்கு அடித்தொழில் புரியும் ஒரு சலவைத் தொழிலாளி என்று கூறக்கேட்டு அடியேன் அடிச்சேரன் சிவவேடத்தை நினைப்பித்தீர் வருந்தாது செல்லும்  என்று கூறி வழியனுப்பி வைத்து அரண்மனையை அடைந்தார்.

    மத்த யானை ஏறி மன்னர்

      சூழவரு வீர்காள்

    செத்த போதில் ஆரும் இல்லை

      சிந்தையுள் வைம்மின்கள்

    வைத்த உள்ளம் மாற்ற வேண்டா

      வம்மின் மனத்தீரே

    அத்தர் கோயில் எதிர்கொள் பாடி

      என்ப தடைவோமே. 

    என்று ஆரூரர் தம் பாடலில் அழகாக விளக்குகிறார்.

    கழறிற்றறிவார் மனதில் முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் பிடி சாம்பலாவது நிச்சயம் என்ற உணர்வு, தமது அரச வாழ்வு நிச்சயமல்ல என்பதையும் உணர்த்தியதால் அவ்வேடத்திற்கு உரிய வகையில் வணங்கினார் சேரமான் பெருமான். எல்லா உயிர்களின் துன்பத்தையும் போக்கி மக்கள் வாழ்வில் இன்பம் பெருக அரசு நடத்தினார். மன்னர் நாள்தோறும் தன் ஆன்மார்த்த மூர்த்தியான, ‘திருஅஞ்சைக்களம் சபாபதி’ என்ற கூத்தப் பெருமான் திருமேனியை உள்ளம் நெக்குருக வழிபாடு செய்வார். பெருமானும் இவர்தம் வழிபாட்டினை ஏற்கும் வகையில் பாதச் சிலம்போசை அளிப்பார். ஓசை கேட்ட பின்பு வழிபாட்டினை நிறைவு செய்து அரசுப் பணிகளில் ஈடுபடுவார்.

    ஒரு நாள் சிவபெருமான் கழறிற்றறிவார் நாயனாரைச் சுந்தரமூர்த்தி நாயனாருடன் நட்புக் கொள்ளச் செய்யும் திருவுளக்குறிப்பை மேற்கொண்டார். அன்று நாள்தோறும் அவருடைய பூசை முடிவில் கேட்கும் சிலம்பொலியைக் கேட்கப் பெறாததால் நாயனார் மிக வருந்தி இவ்வாறு நிகழ்தற்குத் தான் செய்த பூசையில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்குமோ என்று எண்ணி உயிர்விடத் துணிந்தார்.

    அப்போது எம்பெருமான், தில்லையம்பதியில் சுந்தரர் தம்மைப் பாடிக் கொண்டிருக்கும் அப்பாடலில் ஒன்றிப்போனதால் சேரமானின் பூசையை ஏற்க சிறிது தாமதம் நேர்ந்தது என்று கூறுகிறார். இறைவனின் அருளை வியந்துப் போற்றியவர்,  தில்லைக் கூத்தப்பெருமானை வணங்கி வென்தொண்டரையும் காண்பேன் என்று சோழ நாடு செல்லத் தயாரானார். தில்லைத் திருக்கோயிலை அடைந்து கூத்தப்பெருமான் திருநடம் பயிலும் பேரம்பலத்தை அடைந்து புலனும் உளமும் ஒன்றாகி வழிபாடு செய்தார். பொன்வண்ணத்தந்தாதி என்ற நூலைப் பாடினார். கூத்தப் பெருமானும் பாடல் கேட்டு மகிழ்ந்து பாதச் சிலம்போசை கேட்பித்தார்.

    வானக் கங்கை நதிபொதிந்த மல்கு சடையார் வழிபாட்டுத்
    தூநற் சிறப்பி னர்ச்சனையாந் தொண்டு புரிவார் தமக்கொருநாள்
    தேனக் கலர்ந்த கொன்றையினா ராடற் சிலம்பி னொலிமுன்போன்
    மானப் பூசை முடிவின்கட் கேளா தொழிய மதிமயங்கி

    சுந்தரரைத் தரிசித்து மகிழ வேண்டித் தில்லையை அடைந்தவர், அவர் திருவாரூர் சென்றதை அறிந்து தாமும் திருவாரூருக்குச் சென்று சுந்தரரைத் தரிசித்து மகிழ்ந்தார். பின் தியாகராசரையும் வணங்கி, “திருமும்மணிக்கோவை” என்னும் பிரபந்தத்தால் சிவபெருமானைப் போற்றினார்.

    ‘என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பு ஒன்னும்’ என்று சேக்கிழார் பெருமான் என் நெகிழ்ந்துரைக்கும் அளவிற்கு, ஆரூரரைக் கண்ட சேரமான் பெருவிருப்புடன் தாழ்ந்தார், விழுந்தார், வணங்கினார். அவரை வாரியெடுத்துத் தழுவினார் நம்பியாரூரர்.

    மதுரையில் வறுமையால் வாடிக்கொண்டிருந்த பாணபத்திரர் எனும் புலவரைக் கண்ட சொக்கநாதர் பாணபத்திரரின் வறுமையைப் போக்க எண்ணம் கொண்டார். ஆதலால் ‘மதிமலி புரிசை’ என்ற பாடலை ஓர் திரைச்சீலையில் எழுதி, ‘இத்திருமுகத்தை சேரமான் பெருமாளிடம் சேர்ப்பித்தால் பரிசில் வழங்குவான்’ என்று குறிப்பித்தார்.

    பின்னர் எம்பெருமானார் சேரமான் பெருமான் நாயனாரின் கனவில் தோன்றித் தம் அடியவனான பாணபத்திரன் அவரைக் கண்டு பொருள் பெறும் நோக்கில் வந்துள்ளதால் அவருக்கு வேண்டும் அளவு பொருள் கொடுத்தனுப்புமாறு திருவாய் மலர்ந்தருளினார்.

    திருமுகத்தைப் படித்துப் பரவசமடைந்த சேரமான் பெருமான் அதனைத் தலையில் வைத்துக் கொண்டு ‘எம்பெருமானின் திருமுகம் பெறும்பேறு எனக்குக் கிடைத்ததே’ என்று ஆனந்தக் கூத்தாடினார். பாணரைப் பணிந்து, தமது அனைத்து சொத்துகள் மட்டுமின்றி அரசாட்சியும் அவருக்கே உரியது என்றார் கழறிற்றறிவார் நாயனார். இவற்றை எல்லாம் கண்டு வியந்த பாணபத்திரரோ நாயனாரின் உயர் குணத்திற்குத் தலை வணங்கியதோடு எல்லையில்லா மகிழ்ச்சியுடன் தமக்கு வேண்டிய பொருள்களை மட்டும் எடுத்துக் கொண்ட பாணரை பரிசுப் பொருட்களுடன் யானைமீது அமர்த்தி  அன்புடன் வழியனுப்பி வைத்தார் கழறிற்றறிவார் நாயனார்.

    சேரமான் பெருமான் நம்பியாரூரரைப் பார்த்து மதுரை சென்று அங்கையற்கண்ணி உடனமர் சொக்கலிங்கப் பெருமானை வணங்க விருப்பம் தெரிவிக்க  இருவரும் பாண்டி நாடு சென்று மதுரை சொக்கலிங்கப் பெருமானை வணங்கி மகிழ்ந்தனர். பாண்டிய மன்னனும் அவர்  மகளை மணந்த சோழ மன்னனும் இரு பெரு மக்களையும் வரவேற்று உபசரித்தனர். சேர, சோழ, பாண்டிய மன்னர்களான மூவேந்தர் புடைசூழச் சுந்தரர் பாண்டித் தலங்கள் பலவற்றைத் தரிசித்தார். பின்னர் சேரமானும் சுந்தரரும் திருவாரூர் மீண்டனர். சேரமான்  சுந்தரரோடு  திருவாரூரில் தங்கியிருந்து அவரைத் தம் நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமெனப் பலமுறையும் விண்ணப்பித்துச் சுந்தரரை அழைத்துக்கொண்டு வழியிடையே பல தலங்களையும் தரிசித்துக்கொண்டு கொடுங்கோளூர் சென்றடைந்தார். சுந்தரரைச் சேரமான் தம் அரியணையில் அமர்த்தி உபசரித்தார். நாள்தோறும் ஆடல் பாடல் முதலிய நிகழ்ச்சிகளால் அவரை மகிழ்வித்தார்.

    அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமென்று

    அமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி

    முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே

    மொழிந்தாறு மோர்நான்கு மோர் ஒன்றினையும்
    படியா இவைகற் றுவல்ல அடியார்

    பரங்குன்ற மேய பரமன் அடிக்கே
    குடியாகி வானோர்க்கு மோர்கோவு மாகிக்

    குலவேந்த ராய்விண் முழுதாள் பவரே.
    என்று ஆரூரர் தம் பாடலில் குறிப்பிடுகிறார்.

    திருவாரூர் வந்தடைந்த சுந்தரர் நீண்ட நாட்களுக்குப் பின் சேரமான் நினைவு வர அடியவர் குழாங்களோடு கொடுங்கோளூர் புறப்பட்டுச் சென்று இருவரும் அரண்மனையில் அளவளாவி மகிழ்ந்திருந்தனர். ஆரூரரும் சேரமானும் ஒன்று சேர்ந்து சென்று ஐயாறப்பரை வழிபட்டப் பின்னர் இருவரும் மலைநாடு நோக்கிச் சென்றனர். இவர்கள் வருகை அறிந்து நாட்டு மக்கள் அனைவரும் திரண்டு வந்து தோரணம் அமைத்துப் பல்வேறு நலன் செய்தனர். நாடே விழாக்கோலம் பூண்டது. சுந்தரர் திருவஞ்சைக்களம் இறைவனை ‘தலைக்குத் தலைமாலை` என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார்.
    சிலநாட்களுக்குப் பிறகு சுந்தரர் ஆரூரானை மறத்தற்கியலா நிலையைச் சேரமானிடம் தெரிவித்து பிரியா விடைப் பெற்றார். சேரமான் பொன்னும், மணியும், பூந்துகிலும் இன்ன பிற பொருட்களையும் வாரி வழங்கி  சுந்தரரை வழியனுப்பினார்.

    எம்பெருமான் ஆரூரரின் பாசத்தளையை நீக்கி அருள் புரிய எண்ணம் கொண்டவர், இந்திரன் முதலிய தேவகணங்களையும் வெள்ளை யானையையும் அனுப்பி அவரைத் திருக்கயிலைக்கு அழைத்து வருமாறு பணித்தார். அக்கணம் வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களம் திருக்கோயிலை அடைந்த தேவர்கள் எம்பெருமானின் அருளிப்பாட்டைத் தெரிவித்தனர். சுந்தரரும் இறையாணையை ஏற்றவர், சேரமானையும் மனத்தில் சிந்தித்துக் கொண்டே வெள்ளை யானையின் மேல் ஏறி

    தானெனை முன்படைத் தானத

      றிந்துதன் பொன்னடிக்கே

    நானென பாடலந் தோநாயி

      னேனைப் பொருட்படுத்து

    வானெனை வந்தெதிர் கொள்ளமத்த

      யானை அருள்புரிந்து

    ஊனுயிர் வேறுசெய் தான்நொடித்

      தான்மலை உத்தமனே

    என்ற திருப்பதிகத்தை ஓதிக்கொண்டே திருக்கயிலாயம் சென்றார்.
    ஆனால் சேரமான் பெருமான் சுந்தரர் திருக்கயிலாயம் செல்வதைத் தம் யோகக் காட்சியால் அறிந்தவர், தன் அருகில் நின்றிருந்த குதிரை மீது ஏறித் திருவஞ்சைக்களம் சென்று ஆரூரர் தேவகணங்களுடன் திருக்கயிலை செல்வதைக் கண்டு களித்துத் தாமும் அவருடன் கயிலை செல்லும் எண்ணம் கொண்டார். வெள்ளை யானையின் மீதமர்ந்து விண்ணிற் செல்லும் தம் தோழரைக் கண்டபோது, தானும் கயிலாயம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் தமது குதிரையின் காதில் ஐந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’ எனும் திருமந்திரத்தைக் கூறியவர், வான வெளியில் சுந்தரர் செல்லும் வெள்ளை யானையை வலம் வந்தவர், அதன் முன்னே சென்றார். இருவரும் தெற்கு வாயில் வழியாகத் திருக்கயிலையை அடைந்தனர்.

    ஆரூரர் திருக்கயிலையினுள் சென்று இறைவனையும் இறைவியையும் வணங்கிப் போற்றியவர், சேரமான் வருகையையும் எம்பெருமானிடம் விண்ணப்பித்தபோது பெருமானும் சேரமான் பெருமானை உள்ளே அழைத்துத் தாம் அழையாமல் எதற்கு வந்தார் எனக் கேட்கிறார். சேரமானும் திருவருள் வெள்ளம் ஆரூரருடன் தன்னையும் ஈர்த்துக் கொணர்ந்து வந்து அங்கே நிறுத்திவிட்டதாகக் கூறுகிறார். சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவராக வைத்து திருஉலா ஒன்று பாடியுள்ளதாகவும், அதனைச் செவிமடுத்து ஏற்றருள வேண்டுமெனவும் வேண்டினார். சிவபெருமான் அதனைச் சொல்லக் கேட்டுத் திருக்கயிலாய ஞான உலாவைத் திருக்கயிலையில் எம்பெருமான் முன்னர் அரங்கேற்றி ஆனந்தமடைந்தார். எம்பெருமான் ஆரூரரோடு சேரமானையும் சிவகணத் தலைவராய் தம்பால் நிலை பெற்றிருக்கப் பணிக்கச் சேரமான் பெருமான் நாயனாரும் திருக்கயிலையில் திருத்தொண்டு புரிந்து மகிழ்ந்து மீப்பெருவாழ்வு அடைந்தார்.

    கழறிற்றறிவார் நாயனார் குருபூசை தினம் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவஞ்சைக்களம் என்ற ஸ்ரீவாஞ்சி குளம் கோயிலில் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஒரு நாள் மட்டும் இங்கு தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூசை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

    சேரமான் நாயனார் புராணம் சொல்லும் கருத்து:

    பெருமாக்கோதையார் இறைவனிடத்தில் அனைத்து உயிர்களின் துன்பத்தை நீக்குகின்ற ஆற்றலும் அவற்றை அறிகின்ற திறனும் அருளல் வேண்டுமென வேண்டி நின்றார். அவ்வண்ணமே இறையருளால் மக்களுயிர் மட்டுமன்றி அனைத்துயிர்க்கும் நலம் செய்து ஆட்சி நடத்துமாறு எல்லா உயிரினங்களும் பேசும் மொழிகளை அறியும் அறிவாற்றலைப் பெற்றார். இறைவனும் அவர்தம் பேரருளால் “யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும் இரக்க உள்ளமும் தண்டாத கொடையும் காவல் மன்னர்க்குரியனவும் எல்லாம் கைவந்துறப் பெற்றார்”.

    பிற உயிர்கள் பேசும் மொழிகளை அறியும் அறிவை இவர் பெற்ற காரணத்தால் கழறிற்றறிவார் என்ற சிறப்புப் பெயரும் பெற்றார். கழறுதல் என்றால் சொல்லுதல் என்று பொருள். எல்லா உயிர்களும் சொல்லுவதனைப் பெருமான் அருளால் அறியப் பெற்றமையால் கழற்றிற்றறிவார் என்ற பெயர் பெற்றார். சேர நாட்டு மன்னரானார். எனவே சேரமான் பெருமான் என்ற பெயரும் இவருக்கு உரித்தாயிற்று.

    சேரமான் பெருமாள் நாயனாரின் படைப்புகள்

    சேரமான் பெருமாள் நாயனார், திருக்கைலாய ஞான உலா, திருவாரூர் மும்மணிக்கோவை, பொன் வண்ணத்து அந்தாதி ஆகிய மூன்று நூல்களை இக்காலக் கட்டத்தில் இயற்றினார்.

    திருக்கைலாய ஞானவுலா, ஆதிஉலா என்றும் வழங்கப்படுகிறது. உலாவில் சிவபெருமான் போற்றப்படுகிறார். திருக்கயிலையில் தேவர்கள் கூடிச் சிவபெருமான் உலா வந்து காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டியதால், எம்பெருமானும் அதற்கிசைவளிக்க, உமையவள் சிவனாருக்கு அனைத்து அணிகலன்களையும் அணிவித்து அழகு பார்க்கிறாள். மன்மதன் மாலை தருகிறான். சந்தனம் பூசிக் கிளம்பும் சிவனைத் தெருக்களில் உள்ள மகளிர் கண்டு காதல் கொள்கின்றனர். முனிவர்கள் பணிந்து வாழ்த்துகின்றனர். தேவர்கள் தொண்டு செய்கின்றனர் என்று அமைந்துள்ள நூல் இது. காண்பவர் நெஞ்சங்களைக் கவரும் ஒப்பற்ற தலைவனாம் சிவனது திருவுலாக் காட்சியை அற்புதமாக விவரிக்கும் நூல் இது.

    ‘உலா’ எனும் இலக்கிய அமைப்பைத் தோற்றுவித்துள்ளது இந்நூல். அந்த வகையில் இதை இலக்கணமாகக் கொண்டு, இதே அமைப்பில் பின்னாளில் உலா நூல்கள் இயற்றப்பட்டன.

    திருவாரூர் மும்மணிக்கோவை என்ற நூல் சிவனடியார்கள் செந்தமிழ் வல்லவர்களாகவும் இருந்தமை அறிய முடிகின்றது. மூன்று வெவ்வேறு மணிகளை மாற்றி மாற்றித் தொடுத்த மாலை போல், வெவ்வேறு மூவகைச் செய்யுள்கள் மாறி மாறி வர முப்பது பாடல்களைக் கொண்ட இந்நூலும் புதிய அமைப்பைக் கொண்டுள்ளது. இதுபோலவே, சிவபெருமானைப் போற்றுவதற்குக் கண்டுபிடித்த புதுப்புது இலக்கிய வடிவங்கள் பின்னாளில் சிற்றிலக்கியங்களாக மலர்ந்தன.

    பொன் வண்ணத்து அந்தாதி எனும் நூல் பதினொராம் திருமுறையில் உள்ளது. சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட இந்நூல் 101 பாடல்களை உடையது. ஒரு செய்யுளின் இறுதிப் பகுதியே அடுத்த செய்யுளின் தொடக்கமாக அமைவது அந்தாதி ஆகும்.

    சேத்திர திருவெண்பா, திருமும்மணிக்கோவை, மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை ஆகிய நூல்களும் தோன்றின.

    திருச்சிற்றம்பலம்

     

     

     

     

     

     

    Share
  • “லிட்டில் பாய்” – சுடோமு யமகுச்சி

    TOKYO, Japan – Photo shows the late Tsutomu Yamaguchi speaking in Nagasaki in June 2009 about his experience of surviving the 1945 atomic bombings of Hiroshima and Nagasaki. The Japanese Embassy in London has sent a written protest against the BBC for introducing him as ”The Unluckiest Man in the World” in its TV program that aired on Dec. 17, 2010, with the show’s personalities and the audience laughing. A producer of the show has apologized via e-mail. (Photo by Kyodo News Stills via Getty Images)

    1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி, இதே நாளில் அமெரிக்கா, ஹிரோஷிமா மீது வீசிய லிட்டில் பாய் என்பதுதான் உலகின் முதல் குண்டு வீச்சு. அதன் கதிர்வீச்சின் தாக்கத்தால் பல்வேறு வகையான புற்றுநோய்களால் பின்னாளிலும் ஏராளமானோர் இறந்தனர். இந்த இரட்டை குண்டுவெடிப்புகளிலும் தப்பிய ஒரே மனிதர் என்று ஜப்பான் அரசு அங்கீகரித்திருந்த, இரண்டையும் நேரடியாகக் கண்ட ஒரே சாட்சி சுடோமு யமகுச்சி. இரண்டு குண்டு வீச்சுகளிலிருந்தும் யமகுச்சி உயிர் தப்பியவர் 2010-ல் தனது 93 வயதுவரை உயிர் வாழ்ந்த மன உறுதியை என்ன சொல்வது.

    தனிமனித வளர்ச்சியே ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி. சமுதாயத்தின் வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சி. ஹிரோஷிமா நாகசாகி என்ற பெயரைக் கேட்டாலே சிறுவர்கள் கூட ஒரு முறை உடல் சிலிர்த்து அதிர்ந்துவிடுவார்கள். 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி, அமெரிக்கா ஹிரோஷிமா மீது வீசிய லிட்டில் பாய் என்பதுதான் உலகின் முதல் குண்டு வீச்சு. 12-15 ஆயிரம் டன் டிஎன்டி வெடிபொருள் சக்தியைக் கொண்ட அந்த அணுகுண்டு 13 சதுர கிலோ மீட்டர் பரப்பை சுடுகாடாக்கியது. குண்டு விழுந்த ஐநூறு அடி சுற்றளவில் இருந்த அனைவரும் நொடியில் எரிந்து சாம்பலானார்கள். 70% கட்டிடங்கள் அழிந்து மண்ணோடு மண்ணாயின. அங்கு வசித்த 3,50,000 மக்களில் 1,50,000 பேர் கொல்லப்பட்டனர்.

    குண்டுவெடித்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கறுப்பாக அமில மழை பெய்தது. விண்ணை முட்டும் மரண ஓலமும், கை, கால், தலையில்லாத குழந்தைகளின் பெற்றோரின் கதறல் என அல்லோகல்லோலப்பட்டது ஹிரோஷிமா.

    அடுத்த மூன்று நாட்களில், நாகசாகி நகரத்தின் மீது, குண்டு மனிதர் (ஃபேட் மேன்) என்ற குண்டு மீண்டும் வீசப்பட்டது. 6.4 கிலோ புளுட்டோனியம் உள்ளிட்ட இதன் எடை 4,670 கிலோ. ‘குட்டிப் பைய’னைவிட திறன்மிகுந்த இதனால் 74,000 பேர் கொல்லப்பட்டனர். 1945 ஆக்ஸட் 8-ம் தேதியன்று ஜப்பான் மீது சோவியத் ரஷ்யா போர்ப் பிரகடனம் செய்ததும் ஜப்பான் வேறு வழியில்லாமல் அதே மாதம் 14-ம் தேதி நேச நாடுகளிடம் சரணடைந்ததும் என தொடர்ந்த பேரிடர்களைச் சந்தித்து வந்தது. நான்கு நாட்களுக்குள் இரண்டு அணுகுண்டு வீச்சினால் நடுங்கிப்போனது ஜப்பான். இச்சம்பவங்கள் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக, கை,கால், கண், மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி குழந்தைகள் பிறக்கின்றன. அணுகுண்டின் தாக்கத்தால் மாதக்கணக்காக, வருடக்கணக்காக குற்றுயிரும் குலையுயிருமாகப் பரிதவித்து கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தவர் பலர். வேதனையில் துடிப்பவர்களுக்கு
    சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளும் மருத்துவர்களும், செவிலியர்களும்கூட மிஞ்சவில்லை. அடுத்தடுத்து மேலும் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர். கதிர்வீச்சின் தாக்கத்தால் பல்வேறு வகையான புற்றுநோய்களால் பின்னாளிலும் ஏராளமானோர் இறந்தனர். இந்த இரட்டை குண்டுவெடிப்புகளிலும் தப்பிய ஒரே மனிதர் என்று ஜப்பான் அரசு அங்கீகரித்திருந்த, இரண்டையும் நேரடியாகக் கண்ட ஒரே சாட்சி சுடோமு யமகுச்சி, ஜப்பானியக் கப்பல் பொறியாளர். இரண்டு குண்டு வீச்சுகளிலிருந்தும் யமகுச்சி உயிர் தப்பியவர் 2010-ல் தனது 93 வயதுவரை உயிர் வாழ்ந்த மன உறுதியை என்ன சொல்வது. தீயில் கருகி சாம்பலான பீனிக்ஸ் பறவை மீண்டும் மீண்டும் எழுந்து வருவதுபோல் உறுதியான சிந்தை கொண்டவர்களே வாழ்க்கையின் எத்தகைய பேரிடரையும் கடந்து வென்று வருபவர்கள். தன் மூலதன பங்குகளில் சுமார் 40% அழிந்துபட்ட நிலையிலும் 1960களின் பிற்பகுதியில், வியக்கத்தக்க வகையில் ஜப்பானிய பொருளாதாரம் வெகு விரைவில் மீண்டதோடு, தொடர்ந்து இலாபங்களைக் குவித்ததுதான் ஆச்சரியமான செய்தி. மேற்கத்திய நாடுகளின் சவால்களை எதிர்கொண்ட ஜப்பானியர்கள் செல்வந்தர்களாக மாறியவர்கள், அவர்களுடைய சமூக, பொருளாதார, கல்வி முறைகளுக்கு ஈடாக, போராடி தங்களை தயார்படுத்திக்கொண்டனர். ஜப்பானை உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாற்றிய மக்களின் கடின உழைப்பும் தியாகமும் அதிசயிக்கத்தக்கது. இரண்டாம் உலகப் போரின் பேரழிவிற்குப் பின்னர் 20-ம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ள ஜப்பான் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. சர்வதேச சமூகத்தில் அதன் பங்கு கணிசமானது. மக்களின் கடுமையான உழைப்பினால் தொழில்துறை உற்பத்தி 1951-ல் மீண்டுவர ஆரம்பித்து 1960-ல் 350 சதவிகிதத்தை எட்டி உலகையே அண்ணாந்து பார்க்க வைத்தது. அரசாங்கத்தின் வெற்றிகரமான பொருளாதார சீர்திருத்தம் ஒரு காரணம் என்றாலும் மக்கள் எஃகு, நிலக்கரி, பருத்தி உள்ளிட்ட மூலப்பொருட்களின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி, ஜவுளி உற்பத்தியிலும் முன்னிலை வகித்து வெற்றிக்கு வித்திட்டனர்.

    #ஹிரோஷிமா #நாகசாகி #லிட்டில்பாய் #ஜப்பான் #உழைப்பு #அனுகுண்டு #அழிவு #hiroshima #nagasaki #japan #Japanhardwork #TsutomuYamaguchi #சுடோமுயமகுச்சி

    Share