Author: தேமொழி

  • குடதிசை மருங்கில்

    தேமொழி

    ஆசியக்  கலை அருங்காட்சியகம்:

    ஆசிய நாடுகளின் கலைபொருட்களைச் சேகரித்து வைத்திருக்கும் அமெரிக்க அருங்காட்சியகங்கள் பல.  ஒரு சிறிய ஊரின், ஒரு சிறிய நூலகத்திலும் குறைந்தது ஒரு பத்து  ஆசியக் கண்டத்தின் கலைப் பொருட்களாவது பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும்.

    பெருநகர் அருங்காட்சியகங்களில்  ஆசியக் கலைப் பொருட்களுக்கென்றே சிறப்பாகத் தனிப்பட்ட பகுதிகளும் ஒதுக்கப் பெற்றிருக்கும்.  ஆண்டிற்கு ஒரு முறை ஏதாவது ஒரு கருத்தினைத் தேர்வு செய்து, அதற்குப்  பொருத்தமான கலைப் பொருட்களை விளக்கங்களுடன் காட்சிக்கு வைத்து பார்வையாளர்கள் காண இந்த அருங்காட்சியகங்கள் வழி செய்வதும் உண்டு.

    ஆசியக் கலைப்பொருட்களை மட்டுமே கொண்டு தனிச் சிறப்பு மிக்க “ஆசியக் கலை அருங்காட்சியங்கள்” இருப்பது இரு பெரு நகர்களில். அவைகள் அமைந்திருப்பது  வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரிலும், கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலும். இப்பகுதியில் அதிக அளவில் ஆசிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டோர் பலர் வாழ்வது அதற்கு முக்கிய காரணம்.

    சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம்

    பெரும்பான்மையான அருங்காட்சியகங்களில் இருக்கும் ஆசியக் கலைப் பொருட்கள் பெரும்பாலும் தூரக்கிழக்கு நாடுகளான சீனா, ஜப்பான் நாடுகளைச் சார்ந்த கலைப் பொருட்களாகவோ அல்லது தென்கிழக்காசிய நாடுகளைச் சார்ந்தவையாகவே இருக்கும்.  ஆசிய நாடுகளில் இருந்து வந்து குடிபுகுந்தோரில் பெரும்பாலும் இந்நாடுகளைச் சார்ந்தவர்களாகவே அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். தெற்காசிய நாடான இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளான ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் கலைப்பொருட்கள் மற்ற ஆசிய நாட்டு கலைப்பொருட்களை விட குறைவாகவே இடம் பிடித்திருக்கும்.  ஆசியநாட்டு வழி வந்தவர்களில் தெற்காசியப்பகுதியினைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்ற ஆசிய நாட்டினரைவிட எண்ணிக்கையிலும் அமெரிக்காவில் குறைவு.

    இந்த நிலைக்கு மாறாக அதிக  இந்தியக் கலைப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருப்பது சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஆசியக்  கலை அருங்காட்சியகத்தில் மட்டும்தான். இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் 18,000 திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் 6,000 ஆண்டுகள் பழமையான ஆசியக் கலாச்சாரத்தை விளக்கும் கலைப் பொருட்களாகும். இவற்றில் பெரும்பான்மையான கலைப் பொருட்களை நன்கொடையாக கொடுத்து உதவியவர் சிக்காகோவில் வாழ்ந்த தொழிலதிபர் ‘ஆவ்ரி ப்ரெண்டேஜ்’ (Avery Brundage) என்பவர்.

    இவர் 1959 இல் சான்  ஃபிரான்சிஸ்கோ நகருக்கு தன் தனிப்பட்ட கலைபொருட்கள் சேகரிப்பினை நன்கொடையாக வழங்க ஒப்புதல் அளித்தார்.  ஆனால் அதற்கு அவர் விதித்த நிபந்தனை, அக்கலைப் பொருட்களை சிறந்த முறையில் பார்வைக்கு வைக்கும் பொருட்டு சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் ஒரு புதிய அருங்காட்சியகத்தைக் கட்ட வேண்டும் என்பது. அவர் வேண்டுகோளை ஏற்று, புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, ஜூன் 1966 இல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. தன் ஆசியக் கலைப்பொருட்கள் சேகரிப்பை வழங்கிய ஆவ்ரி ப்ரெண்டேஜ், இந்த  ஆசியக்  கலை அருங்காட்சியகம் சான் ஃபிரான்சிஸ்கோ நகரை ஒரு சிறந்த ஆசியக் கலாச்சார மையமாக ஆக்க உதவும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

    தொடர்ந்து ஆசியக் கலைப்பொருட்களை சேகரித்த வண்ணமே இருந்த அவர் மீண்டும் அவற்றையும் நன்கொடையாக வழங்க முன் வந்தார்.  அதற்கு அவர் விதித்த புது நிபந்தனை, சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் அருங்காட்சியகத்தின் நிர்வாகத்தை மேற்பார்வையிட தனி நிர்வாகக் குழுவை அமைத்து, நிர்வாகம் தன்னாட்சி உரிமை அடைந்து நிர்வாகக் கட்டுப்பாட்டைத் தனது குழுவின் பொறுப்பில் வைத்திருக்க வேண்டும், நிர்வாகத்தில் நகரின் தலையீடு இருக்கக் கூடாது என்பது.

    சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் அந்த நிபந்தனையையும் ஏற்று, ஆவன செய்த பின்பு ஆவ்ரி ப்ரெண்டேஜ் 1969 இல் மீண்டும் ஒரு பெரிய ஆசியக் கலைப் பொருட்கள் சேகரிப்பை அருங்காட்சியகத்திற்கு வழங்கினார்.  அருங்காட்சியகத்தின் குறிக்கோள், மேலை நாடுகளிலேயே சிறந்த ஆசியக் கலாச்சார மையமாக அந்நகரின் அருங்காட்சியகத்தை உயர்த்துவதுதான். அதன் பிறகு அதிக கலைப்பொருட்களுடன் பல்கிப் பெருகி விரிவடைந்த வண்ணமே உள்ளது அருங்காட்சியகம். அதன் பராமரிப்பை சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் ஏற்றுக் கொண்டுள்ளது, நிர்வாகம் தனிப்பட்ட குழுவின் மேற்பார்வையில் தொடர்ந்து வருகிறது. தற்பொழுது உலகில் அதிக அளவு ஆசியக் கண்டத்தின் கலைப்பொருட்களைக் கொண்டுள்ளது சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம்.

    மீண்டும் தொடர்ந்து 1975 ஆண்டு, தனது இறுதிக்காலம் வரை ஆசியக் கலைப்பொருட்களை சேகரித்த ஆவ்ரி ப்ரெண்டேஜ், அவை அனைத்தையும் அருங்காட்சியகத்திற்கே நன்கொடையாக அளித்துவிட்டார்.  அருங்காட்சியகத்தில் உள்ள ஏறத்தாழ  பாதி கலைப்பொருட்கள் (7,700) இவர் மனம் உவந்து நன்கொடையாக அளித்ததே. இவற்றில் மிக அரியதாகக் கருதப்படுவது 338 ஆம் அண்டு செய்யப்பட்ட சீன நாட்டின் வெண்கல புத்தர் சிலை.  இவரது முயற்சியால் இன்று அமெரிக்கா மட்டுமல்ல உலகிலேயே  அதிக ஆசிய நாட்டு கலைப்பொருட்களைக் கொண்டு சிறந்துள்ளது  சான் ஃபிரான்சிஸ்கோவின் ஆசியக்  கலை அருங்காட்சியகம்.  இதனால் புதிய கட்டிடம் தேவைப்படும் நிலையும் ஏற்பட்டபொழுது, மக்களின் பெரும் ஆதரவுடன், நகரின் மையத்தில் மற்றொரு கட்டிடத்தில் அருங்காட்சியம் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.

    சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம் வளர்ச்சிக்கு மேலும் பல “சிலிக்கன் பள்ளத்தாக்கு’ (silicon valley) தொழில் நுட்ப தொழிலதிபர்களும் மிகத் தாராளமாக நிதி வழங்கி ஆதரித்து உள்ளார்கள். அவர்களில் ஒருவர் கொரியா நாட்டு  வழி வந்த ‘சாங் மூன் லீ’ (Chong-Moon Lee) ஆவார்.

    இங்கிருக்கும் கலைப்பொருட்கள்;
    (1) சீனா
    (2) ஜப்பான்
    (3) கொரியா
    (4) தென்கிழக்காசிய நாடுகள் (கம்போடியா, தாய்லாந்து, மயன்மார், லாவோஸ், வியட்நாம், பிலிப்பின்ஸ், இந்தோனேஷியா, மலேஷியா)
    (5) தெற்காசியா (இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா)
    (6) இமாலய நாடுகள் மற்றும் திபெத்திய புத்த மத நாடுகள் (திபெத், நேபாள், பூட்டான், மங்கோலியா)
    (7) பாரசீகம் மற்றும் மேற்காசிய நாடுகள் (ஈரான், ஈராக், ஆஃப்கானிஸ்த்தான், டர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான்)
    என்ற ஏழு ஆசியப் பிரிவுகளில் வகைப் படுத்தப் பட்டுள்ளன.

    சிறிய மரகதக் கற்கள் முதற் கொண்டு மிகப் பெரிய சிலைகளையும், ஓவியங்களையும், புகைப்படங்களையும், பீங்கான் மற்றும் மட்பாத்திரங்கள், அரக்கு, துணி, மரத் தளவாடங்கள், போர்க்கருவிகள் மற்றும் கவசங்கள், பொம்மைகள், கூடைகள் எனப் பலவகையான 18,000 பொருட்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கிறது. என்றும் நிரந்தரமாக காட்சிக்கு வைக்கப் பட்டிருப்பவை 2,500 கலைப் பொருட்கள்.

    இவையாவும் மூன்று அடிப்படைக் கருத்துக்களை விளக்கும்  வகையில் இடம் பெற்றுள்ளன. அவை:
    (1) புத்தமதத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
    (2) ஆசிய நாடுகளுக்கிடையே ஆன கலாச்சார மற்றும் வணிக  பரிவர்த்தனைகள்
    (3) ஆசிய நாடுகளில் இடம்பெறும்  நம்பிக்கைகளும், பழக்க வழக்க நடைமுறைகளும் ஆகும்.

    இந்தியாவினைக் குறிக்கும் சிறப்பு கண்காட்சியாக சென்ற ஆண்டுகளில்:
    மேவார் அரச பரம்பரையின் கலைப்பொருட்கள் [Princes, Palaces, and Passion: The Art of India’s Mewar Kingdom (2007)]
    இந்திய அரசர்களும் அவர்களது அரசவையின் சிறப்புகளும் [Maharaja: The Splendor of India’s Royal Courts (2011)]
    ஓவியர் சஞ்சய் பட்டேலின் இந்தியக் தெய்வங்களின் ஓவியங்கள் [Deities, Demons, and Dudes with ‘Staches: Indian Avatars by Sanjay Patel (2011)]

    இந்த ஆண்டில்:
    இந்திய தெய்வங்களின் கற்சிலைகள் [Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum (2012)]
    போன்ற சிறப்பு கலைபொருட்கள் கண்காட்சிகளையும்  சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம் வழங்கியுள்ளது.

    (தொடரும்)

    Source:
    Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
    San Francisco Asian Art Museum
    August 25, 2012–February 25, 2013

    All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
    © Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.

     

     

    << குடதிசை மருங்கில் – 2

    Share
  • கவிஞர் பிறந்தார்!!!

     

    தேமொழி

     

    “போஸ்ட்இட் நோட்பேட்” தாளில்

    அவசரக் குறிப்பொன்று எழுதி

    கொடுக்கிறேன் அதைத் தோழிக்கு

    படித்தபின் அவள் சொன்னது

    சொன்னதே இல்லையே இதுவரை!!!

    குறுங்கவிதையும் எழுதுவாயா நீ?

     

     

    படம் உதவி:

    http://southyourmouth.blogspot.com/2012/08/lunchbox-notes.html

     

     

    Share
  • கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு?

    தேமொழி

    காலை நேரத்தில் பள்ளிக்குக் கிளம்ப வேண்டிய பரபரப்பில், அலுவலத்திற்கு செல்ல வேண்டிய அவசரத்தில் வீடு களேபரமாக இருந்தது.  மேகலையின் தம்பியும், தம்பி மனைவியும் வீடு முழுவதும் ஓடி ஆடிக் கொண்டிருந்தார்கள். அவர்களது  ஐந்து வயது மகள் மஞ்சரி தன் பங்கிற்கு பள்ளி கிளம்ப அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தாள்.

    காலை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்சில் வந்து இறங்கி இருந்தாள் அத்தை மேகலை. அவள் வெளி நாட்டில் இருந்து கொண்டு வந்து பரிசாகக் கொடுத்த ‘ஹாலோ கிட்டி’ பொம்மையுடன் விளையாட வேண்டும், அத்தையுடன் விளையாட வேண்டும்.  இதை எல்லாம் விட்டு விட்டுப் பள்ளிக்குப் போவதா? அவளது நியாயமான கோரிக்கையை யாரும் கண்டு கொள்ளவில்லை. கடைசிக் கணையாக பொம்மையை பள்ளிக்கு எடுத்துச் செல்வேன் என்ற அம்பையும் விட்டு அடம் பிடித்தாள். அவசரத்தில் இருந்த அம்மாவிடம் அநியாயமாக அடி வாங்கி அழுதவாறு தோல்வியைத் தழுவி குளிக்கப் போனாள்.

    தம்பி மனைவிக்கு தன்னால் ஆன உதவி செய்ய எண்ணி சமையலறைக்குப் போனாள் மேகலை.  அவள் அம்மா ஆட்சி செலுத்திய சமயலறையில் தம்பி மனைவி உரிமையுடன் வலம் வருவதைக் காண அவளுக்கு சகிக்க முடியாமல் இருந்தது. பல பொருட்களும் இடம் மாற்றி வைக்கப்பட்டு அவள் வளர்ந்த வீடே மேகலைக்கு அந்நியமாகப் போய்விட்டது வேதனையாக இருக்க ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

    தம்பி மனைவி, “அண்ணி, இந்தாங்க காபி குடிங்க, இதோ இட்லி வெந்துடும்” என்றாள்.

    “நீ வேலைக்கு வேற கிளம்பணுமே மல்லி, நான் ஏதாவது உதவி செய்யவா?” என்றாள் மேகலை.

    “நீங்க டையர்டா இருக்கீங்க, ரெஸ்ட் எடுங்க அண்ணி. எனக்கும் உங்க தம்பிக்கும் வேற இன்னிக்கு லீவு தராம ஆபீசில கழுத்தறுத்திட்டாங்க. உங்கள சரியா கவனிக்க முடியலேன்னு கஷ்டமா இருக்கு. நீங்க உதவி செய்யறேன்னு சொல்றதக் கேட்க வருத்தமா இருக்கு.  இன்னைக்கு அத்தை இருந்தா உங்களுக்கு  நல்லா இருந்திருக்கும்”, என்றவாறு இட்லி குக்கர் விசில் கேட்டு மீண்டும் சமையறைக்கு ஓடினாள் மல்லி.

    மேகலையின் அம்மா இறந்து ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டிருந்தது. அம்மா மறைவுக்கு வந்து போன மேகலை இப்பொழுதான் மீண்டும் இந்தியாவிற்கு வந்திருக்கிறாள். சென்ற முறை வந்த பொழுது தம்பிக்கு திருமணம் ஆன புதிது, குழந்தை பிறந்திருக்கவில்லை. முன்னறை சோபாவில் உட்கார்ந்து காபி குடித்த வண்ணம் தொலைக்காட்சி பார்த்த மேகலை அசதியில் சரிந்து தூங்க ஆரம்பித்தாள்.

    மகளுக்குத் தலை வாரிவிட அங்கு வந்த மல்லி, “அண்ணி, தூங்கிடாதீங்க, சாப்பிட்டுட்டுத் தூங்கலாம், ஏங்க, ஏன் இவ்வளவு நேரம்? இங்க பாருங்க உங்க அக்காவுக்கு தூக்கம் வருது.  பேச்சு கொடுத்திக்கிட்டிருங்க.  இதோ சாப்பாட்ட மேஜை மேல வைக்கிறேன்”, என்று  சொல்லியவாறு மஞ்சரிக்கு சடை பிண்ணத் தொடங்கினாள்.

    அக்கா படிக்க வாரப் பத்திரிக்கைகளை கடையில் இருந்து அள்ளிக்  கொண்டு உள்ளே நுழைந்த தம்பி, “சாப்பிட வா, அக்கா”, என்று சொல்லி, பத்திரிக்கைகளை அவளிடம் கொடுத்தான்.

    “நான் அப்புறமா சாப்பிடறேன் தம்பி, கொஞ்ச நேரம் தூங்கறேன்” என்ற அக்காவை நன்கு புரிந்த தம்பி, “சரி, வா படுக்கையில படுத்துக்கோ” என்று சொல்லி படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றான்.  “அத்தை” என்று கூச்சலிட்டவாறு  ஓடி வந்த மகளை “உஷ், கத்தாதே” என்று அடக்கினான்.

    “ஏசி போடவாக்கா?”

    “வேணாம் ஃ பேன்  போதும்” என்று சொல்லியவாறு தூங்கிவிட்ட அக்காவிற்கு போர்வையைப் போர்த்திவிட்டு, ஜன்னல் கதவைத் திறந்து வைத்துவிட்டு, அறைக்கதவை  சாத்திக்கொண்டு சென்றான் தம்பி.

    மீண்டும் மேகலை கண் விழித்த பொழுது சிறிது நேரம் அவளுக்கு எங்கு இருக்கிறோம் என்று புரியவில்லை.  மின்சாராம் நின்று, மின்விசிறியும் நின்று லேசாக வியர்த்ததில் விழித்துக் கொண்டிருந்தாள்.  வீடே அமைதியாக  இருந்தது.  வெளியில் காகம் கரையும் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது.

    சுற்றும் முற்றும் பார்த்தாள்.  அவளும் அவள் தங்கையும் அங்கு வளர்ந்த பொழுது பகிர்ந்து கொண்ட அதே படுக்கை அறைதான்.  அலமாரியில் அவள் கதைப் புத்தகங்கள், அவள் உபயோகித்த மேஜை, நாற்காலி எல்லாம் அப்படியே இருந்தது. ஆனால் இப்பொழுது அது மஞ்சரியின் அறையாக மாறிவிட்டிருந்த சாயலும் இருந்தது.  பொம்மைகள், சுவரில் கார்ட்டூண் உருவப் படங்கள் என அறையில் புதிய அலங்காரங்கள்.

    படுக்கைக்குப் பக்கத்தில் அவளுடைய கைபேசி, ஹாட்பேக்கில் உணவு, தண்ணீர், டவல், சோப்பு, பேஸ்ட்,  ப்ரஷ் என அவளுக்குத் தேவையானவற்றை கைக்கெட்டும் தூரத்தில் வைத்துவிட்டு, தம்பியும் மல்லியும் வேலைக்குச் சென்றுவிட்டது புரிந்தது.  மஞ்சரியும் பள்ளிக்குச்  சென்றிருப்பாள்.  கை பேசியில் மணி பார்த்தாள்.  காலை மணி பதினொன்றரை.  தெருவில் ஆட்டோ போகும் ஒலி தேய்ந்து மறைந்தது.  யாரோ இருவர் பேசிக்கொண்டே போனார்கள்.  அதைத்தவிர எங்கும் அமைதி.  காகம் மீண்டும் கரைந்தது.

    அம்மா இருக்கும்பொழுது வீடே கலகலப்பாக இருக்கும்.  தெருக்கதவை சாத்தியதே இல்லை. இவ்வளவு நேரம் தூங்கினால் அம்மாவிடம் இருந்து ஏகப்பட்ட திட்டு கிடைக்கும்.  இவளது பொறுப்பில்லாத தன்மையைச் சுட்டிக்காட்டியும், அம்மா வளர்ந்தபொழுது அதே வயதில் அம்மாவிற்கு  என்னென்ன பொறுப்புகள் இருந்தது என்றும் சொல்லிக்காட்டுவார்கள். வழக்கமாக சொல்லும் உன் வயசில எனக்கு ரெண்டு கைகுழந்தைங்க போன்ற வசனங்கள்தான்.  இதுபோல நண்பகலில் விழித்து ஒருமுறை அம்மாவிடம் திட்டு வாங்கியது நினைவில் ஓடியது.

    ஆண்டுத்தேர்வு முடிந்து கோடை விடுமுறைக்கு விடுதியில் இருந்து வீட்டிற்கு வந்திருந்தாள்.  இரயிலில் பயணம் செய்த பொழுது, அவள் தோழி அடைக்கலமேரி ஹிக்கின்பாதம்ஸில் வாங்கிய சிட்னி ஷெல்டனின் ‘ப்ளட் லைன்” புத்தகம் படித்துவிட்டு அதை பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டே வந்தாள்.  மேகலை வீட்டில் ஆங்கில நாவல்கள், திரைப்படங்களுக்குத் தடை.  இப்பொழுதுதான் பல்கலை கழக நூலகத்தில் சில ஆங்கிலப் புதினங்கள் படிக்கிறாள்.  ஆனாலும் பாடங்கள் அதிகமாக இருந்ததால் கதைகளுக்கு அதிகம் நேரம் ஒதுக்க முடிந்ததில்லை.

    அடைகலத்திடம் இருந்து அந்தப் புத்தகத்தை இரவல் வாங்கினாள் மேகலை.  இரயிலில் படித்துக் கொண்டே வந்தாள்.  கதை மிக விறுவிறுப்பாக இருந்ததால் இரவு உணவை அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு, இதே படுக்கையில் குப்புறப் படுத்துக் கொண்டு தொடர்ந்து படித்தாள்.  அம்மா அப்பாவிடம் கூட சரியாகப் பேசவில்லை.  அவர்களும் தொலைகிறது என்று விட்டு விட்டார்கள்.  இரவு மணி இரண்டு, மூன்று என ஓடிக் கொண்டே இருந்தது. கதையின் நாயகி எலிசபெத்தை கொலைகாரன் ஒரு மாளிகையில் கொலை செய்யத் துரத்துகிறான்.  மேகலைக்கோ திகில். அவளால் புத்தகத்தைக் கீழே  வைக்க முடியவில்லை.

    “என்ன இன்னமும் தூங்கலையா?” என்ற குரல் கேட்டு மேகலைக்குத் தூக்கி வாரிப் போட்டது.  நெஞ்சு பட படவென அடித்துக்கொண்டது. திரும்பிப்பார்த்தாள். அப்பா கோபமாக முறைத்துப் பார்த்துவிட்டு விளக்கை அணைத்து விட்டுப் போனார்.  அவர் நகர்ந்ததும் இவள் ஓடி, ஒரு டார்ச் விளக்கைத் தேடி எடுத்து தலை முழுவதும் போர்த்திக் கொண்டு மீண்டும் போர்வைக்குள் தொடர்ந்து படித்தாள்.  மீண்டும் விளக்கைப் போட்டு அப்பாவிடம் திட்டு வாங்க  பயம். கதையை படித்து முடித்த பொழுது விடிந்து விட்டது.   வீட்டு வேலைக்கு வந்த சரோஜா கேட்டைத் திறக்கும் சப்தம் கேட்டு வெளிக்கதவைத் திறந்து விட்டாள்.

    சரோஜா, “எப்பக்கா  வந்தீங்க? என்ன அதுக்குள்ள எந்திரிச்சிட்டீங்க?”  என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

    “ராத்திரி எட்டு மணி வண்டில வந்தேன், படிச்சுக்கிட்டிருந்தேன், இன்னமும் தூங்கப் போகலை சரோஜா” என்று சொல்லிவிட்டு வந்து படுக்கையில் படுத்தவள் மீண்டும் விழித்த பொழுது ஏறத்தாழ இன்று எழுந்த அதே நேரம்தான்.

    வெளியில் அம்மா தரையைத் துடைத்துக் கொண்டிருந்த சரோஜாவிடம் பேசுவது கேட்டது.

    “சரோஜா, இத முடிச்சிட்டு கொஞ்சம் சின்ன வெங்காயம் தோல் உறிச்சுக் கொடுத்துடு”

    “சரிங்கம்மா, அக்காவுக்கு இன்னமும் பரீட்சை முடியலையா?”

    “ஏன் கேக்கிற? நேத்தே முடிஞ்சிடுச்சே”

    “இல்லம்மா,  அக்கா காலையில கதவத் திறந்து விட்டப்போ, ராவு முழுக்க படிச்சேன், இப்பத்தான் தூங்கப் போறேன்னு சொன்னாங்க”

    “ஆமா, நீயும் உன் அருமை அக்காவும், ராத்திரி முழுக்க கதைப்  பொஸ்தம் படிக்க வேண்டியது, விடிஞ்ச பிறகு தூங்க வேண்டியது. வயசுக்கேத்த பொறுப்பில்லை.  சரி, நீ அங்க கொஞ்சம் நல்லாப் பாத்து தரையத் தொட, தம்பி காபியைக் கை தவறி கொட்டிடுச்சி. சக்கரைக்கு எறும்பு மொய்க்கும்.  ஊர்ல இருந்து ஐயாவோட தங்கச்சியும் அவங்க  பேரனும் வருவாங்க. சின்னப்புள்ள ஜட்டி இல்லாம எங்க பாத்தாலும் மண்டி போட்டுப் போவான். எறும்பு கடிச்சிடப்போவுது,” என்று சொன்ன அம்மாவின் குரலில் கடுப்பு அதிகமாக இருந்தது.

    அவர்கள் பேசுவதைக் கேட்டவாறு எழுந்திருக்க மனமில்லாமல் படுத்திருந்த மேகலை, அவள் அறையை நோக்கி வரும் அம்மாவின் காலடி சத்தம் கேட்டவுடன் துண்டையும் மாற்றுடையயையும் அள்ளிக் கொண்டு குளியலறைக்கு ஓடி கதவை சாத்திக் கொண்டாள்.  அம்மாவிடம் “பொறுப்பிருக்கா உனக்கு?” என்று திட்டு வாங்குவதை அப்பொழுதைக்குத் தவிர்த்தாள்.

    இன்றும் அதே போல நண்பகலில் விழிக்கிறாள்.  விட்டத்தைப் வெறித்துப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தவள் மெதுவே எழுந்து முழங்காலைக் கட்டிக்கொண்டு சாத்தியிருந்த அறைக்கதவைப் பார்த்தாள். அம்மா கதவைத் திறந்து கொண்டு வந்து “எழுந்திரிக்கிற நேரத்தைப் பாரு, வயசாச்சே தவிர கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு?” என்று திட்ட மாட்டார்களா என்று ஏக்கமாக இருந்தது.

    அம்மா இனிமேல் வரவே மாட்டார்கள், அவளைத் திட்டவே மாட்டார்கள் என்ற உண்மை புரிந்த பொழுது தலையணையில் முகம் புதைத்து பொங்கிப்  பொங்கி அழ ஆரம்பித்தாள்.

    படம் உதவி: http://media.tumblr.com/tumblr_lnl5n9MQeF1qfhtnu.jpg

    Share
  • காத்திருக்க வேணும்!

     

    தேமொழி

     

    பத்துப் பாத்திரம் கழுவ வேணும்
    அழுக்குத் துணியும் துவைக்க வேணும்
    தோசைக்குச் சட்னி அரைக்க வேணும்
    இட்லிக்கு மாவும் அரைக்க வேணும்
    கம்பளத்து தூசி நீக்க வேணும்

    தொட்டியில் நீர் நிரப்ப வேணும்
    மகன் குளிக்க வெந்நீரும் வேணும்
    மகள் படிக்க விளக்கு வேணும்
    இவை முடிக்க மின்சாரம் வேணும்
    இதற்கு நாளும் காத்திருக்க வேணும்

     

     

    ஓவியர்:
    ஆனந்த விகடன் ஓவியர் இளையராஜா

    படம் உதவி:
    http://3.bp.blogspot.com/-3XGAslQGsiY/TalHLCq0ajI/AAAAAAAAArs/BLUd8sUAcOo/s320/woman2.jpg

     

    Share
  • நூல் மதிப்புரை – சீதாயணம் (நாடகம்)

    முனைவர். தேமொழி
    எழுத்தாளர், முன்னாள் சமூக திட்ட ஆய்வாளர்
    கலிஃபோர்னியா, அமெரிக்கா

    திரு. வையவன் நடத்தும் சென்னை “தாரிணி பதிப்பகம்” திரு. சி. ஜெயபாரதன் அவர்களின் “சீதாயணம் நாடகத்தை” ஒரு நூலாக வெளியிட்டுள்ளது. ஜெயபாரதன் அவர்கள் இணைய தமிழ் வாசகர்களுக்கு மிகவும் அறிமுகமானவர். விண்வெளி ஆய்வுகள், இயற்பியல் விளக்கங்கள் போன்றவற்றைத் தவறாமல் தாங்கி வருபவை அவரது அறிவியல் கட்டுரைகள். சீதாயணம் நாடகமும் முன்பு திண்ணை இணைய இதழில் தொடர்ந்து வெளியானதுதான்.

    “சீதாயணம்” என்னும் ஓரங்க நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற மாந்தர் அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராமபிரானைத் தேவ அவதாரமாகக் கருதாமல் சராசரி நிறைகுறைகளுடன் கூடிய ஒரு மனித குலப் பிரதிநிதியாக அறிமுகப் படுத்துகிறார் நூலாசிரியர் ஜெயபாரதன் அவர்கள். கானக ஆசிரமத்தில் வால்மீகியின் அடைக்கலத்தில் வாழ்ந்த கோசல அரசி சீதை, வால்மீகி முனிவருக்கு தன் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்டது சீதாவின் பரிதாப வரலாறாக சித்தரிக்கப் பட்டுள்ளது இந்த நூலில்.

    நூலாசிரியரின் அறிவியல் பின்புலம் சொல்லப்படுவதை அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வதை விடுத்து, ஆராய்ந்து உண்மையை அறியும் ஆர்வத்தை அவருக்கு வழங்கி இருக்கிறது. அது நம் இலக்கிய உலகத்திற்கு கிடைத்த ஒரு அரிய வரமாகிவிட்டது.

    நம் மூதாதையர், வாழ்வில் யாராக இருந்தாலும் துன்பத்தை தவிர்க்க முடியாது, அதனை ஏற்று வாழ வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை; தந்தை சொல் தட்டாத ஒரு தனயனை, ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த கணவனை வைத்து மக்களுக்கு அறிவுரை சொல்ல கதை புனைந்திருக்கலாம். அதற்கு அக்காலத்தில் வாழ்ந்த அரசனின், அவன் மனைவியின் வாழ்வையும் உதாரணமாகக் காட்ட உத்தேசித்திருக்கலாம். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் போல ஒரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியமே இராமாயணம்.

    கடவுள் சொன்னார் என்று சொன்னால்தான் மக்களைக் கவர முடியும் என்று நினைத்து நாளடைவில் கதாநாயகன் கடவுளாகிப் போனது நிகழ்ந்திருக்கிறது. இந்தக் காலத்தில் நாம் பேட்டை போக்கிரிகளை எதிரிகள் என சித்தரிப்பது போல, தீய செயல் செய்தவனை அரக்கனாக சித்தரிப்பதையும் அக்கால மக்கள் செய்து உண்மைக் கதையை உருமாற்றிக் கொண்டே வந்து விட்டார்கள். அதை நூலாசிரியர் அழகாக விளக்கி, இயற்கையில், வரலாற்றில் எது சாத்தியம், எது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று கொடுத்த விளக்கம் மிக அருமையானது. குரங்குச் சேட்டைகள் நீக்கப்பட்டு, அரக்க உருவங்கள் வேடம் களையப்பட்டு எளிதில் நம்பும் ஒரு நிகழ்ச்சி நூலாசிரியர் ஜெயபாரதன் அவர்களால் முன்னிறுத்தப் பட்டுள்ளது. இம்முயற்சி மகிழ்ச்சியைத் தருகிறது.

    இக்காலம் வரை படைக்கப்படும் இலக்கியங்கள் பெரும்பாலும் ஆண்களினால் இருந்ததால் நிகழ்வுகள் அவர்கள் கண்ணோட்டத்தில் கூறப்பட்டது இதுவரை. எல்லாவற்றிலும் மேலானது, அதனை நீக்கி நூலாசிரியர் புரட்சி செய்து பாதிக்கப் பட்ட பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து கூறும் பொழுது சீதையின் வாழ்க்கையின் வேதனை நிறைந்த வரலாறு மனதை வருத்துகிறது. ஒரு அரசகுமாரிக்கு வாழ்வில் என்ன ஒரு சோதனை. அத்துன்பத்திலும் தன்மானத்தையும் சுயமரியாதையையும் இழக்கவில்லை அவள். தன் தாய்வீடு செல்வதைத் தவிர்த்தும், விரும்பாத கணவனை வெறுத்து ஒதுக்கி குழந்தைகளுக்காக வாழ்வதும் சீதையின் மேல் மதிப்பை பன்மன்டங்கு உயர்த்துகிறது. அந்த சாதனையைப் பார்க்கும் பொழுது தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று வாழ்ந்த இராமனிடம் பரிவு சிறிதும் வரவில்லை. இராமன் ஒரே மனைவியுடன் வாழ்ந்ததும் பெரிய சாதனையாகத் தோன்றவில்லை. மனைவிக்காக இராமன் முடி துறந்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. அக்காலப் பெண்களின் வாழ்க்கை ஆதரவற்று, அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்ததை அனைவரும் அறிந்திருந்தாலும், இக்காலத்திலும் பெண்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஒன்றுமில்லை என்பதே கசப்பான உண்மை.

    நூலாசிரியர் துணிச்சலுடன் இராமன் கடவுளின் அவதாரம் எனக் கருத என்ன ஆதாரம் என்று குறிப்பிடுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. அத்துடன் இராமன் மதத்திற்கு செய்த தொண்டு என்ன என்பதைக் கேள்வியாகக் கேட்பது மேலும் சிந்திக்க வைக்கிறது. அந்தக் கேள்வியின் அடிப்படையில் சிறிதும் யோசனைன்றி கலவரங்களை மதங்களின் பெயரினால் நிகழ்த்திக் குளிர்காயும் சுயநலம் மிகுந்த மதவாதிகளை அடையாளம் காட்டுகிறார். இதுபோன்ற மதத் தீவிரவாதிகளினால் மதசார்பற்ற கொள்கையுடைய இந்தியாவிற்கு ஏற்படும் ஆபத்தை உணர்த்துகிறார். ஜெயபாரதன் அவர்களது இந்த தேசத் தொண்டு போற்றுதலுக்கு உரியது.

    சீதாயணத்தை ‘பெண்ணியக் கல்வி’ (Women’s studies) பாடப் பிரிவின் பாடத் திட்டத்தில் தமிழகம் இணைக்க முற்பட வேண்டும். அரசு கல்லூரிகளின் மாணவியர் கலைநிகழ்சிகளில் இந்த நாடகத்தை நடத்திக் காட்ட வேண்டும் (மதச் சார்புள்ள கல்லூரிகளில் நிகழ்த்தினால் அது வன்முறைக்கு வழி வகுக்கும் என்ற அச்சம்தான் அரசு கல்லூரிகள் எனக் குறிப்பிடச் செய்தது). கலைஞர்களில் துணிச்சலுள்ளவர்கள் (மிகவும் குறைவு என்பது வருந்தத் தக்கது) சீதாயணத்தை தங்கள் கலைநிகழ்சிகளில் மேடையேற்றலாம்.

    “ஆடவர் மேல் வகுப்பு! பெண்டிர் கீழ் வகுப்பு! குடிமக்களில் பாதித் தொகையான பெண்டிருக்கு வாக்குரிமை யில்லை! நாக்குரிமையும் இல்லை! முதலில் தந்தை சொல்படிந்து என்னைக் கலந்து பேசாமல், அவரே ஒப்புக்கொண்டு வாக்கைக் காப்பாற்றப் பதினாங்கு வருடம் வனவாசத்தில் இன்னல் பட்டோம். நான் காட்டில் தூக்கிச் செல்லப்பட்டு சிறையில் பட்ட துயருக்கும், என் பெயர் கறை பட்டதற்கும் அவரே மூல காரணம். இப்போது குடிமக்கள் சொல்படிந்து என்னைக் கலந்து உரையாடாமல், காட்டுக்குத் துரத்தியதற்கும் அவரே காரண கர்த்தா. தனது பட்டத்து அரசியை இதுவரை அவர் மனிதப் பிறவியாகக் கருதி மதித்தே இல்லை!”

    நூலில் வரும் சீதையின் கூற்று இது. இதுபோல சீதையின் மனநிலையில் இருந்து நூலாசிரியர் ஜெயபாரதன் சிந்தித்ததைப் போல எத்தனை பேரால் சிந்திக்க முடியும்?
    பெண்களின் சார்பில் ஜெயபாரதன் அவர்களது சீதாயணம் படைப்பினைப் பாராட்டி, விழிப்புணர்வு கொண்டு வரும் அவரது இலக்கிய முயற்சிக்கு தலைவணங்கி நன்றி நவில்கிறேன்.

    http://jayabarathan.wordpress.com/seethayanam/ (சீதாயணம் நாடகம்)

    சீதாயணம் (நாடகம்): விலை ரூ: 70, பக்கங்கள் : 76
    கிடைக்குமிடம்:
    Mr. S. P. Murugesan (Vaiyavan)
    vaiyavan.mspm@google.com
    Editor Innaiyaveli
    Dharini Pathippagam
    1. First Street, Chandra Bagh Avenue,
    Mylapore, Chennai : 600004
    Phone: 99401-20341

    Share
  • ஆங்கிலத்தின் பரிணாம வளர்ச்சி

     

    தேமொழி

     

    னைத்து மொழிகளும் காலப் போக்கில் மாறுதலடையும். அவ்வாறு மாறுதலடையும் பொழுது, ஆதி காலத்தில் பேசப்பட்ட மொழிக்கும் தற்காலத்தில் பேசப்படும் அதே மொழிக்கும் இடையே அதிக வேறுபாடுகள் இருக்கும். இவ்வாறு மிகக் குறைந்த ஒற்றுமை உள்ள, காலத்தால் முந்திய படைப்புகளை அறிஞர்கள் பதம் பிரித்து பொருள் சொன்னால்தான் நமக்கே நம் மொழியைப் புரிந்துகொள்ள முடியும் என்ற நிலை ஏற்படுகிறது. நம் தமிழ் மொழிக்கு மட்டுமல்ல, ஆங்கிலத்திற்கும் இதே விதி பொருந்தும்.

     

    English - Evolution

     

    ஆங்கிலத்தின் பரிணாம வளர்ச்சியை விளக்க முற்பட்டு, அதற்குதவியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இரு வசனங்களுக்கும் இரண்டு வெவ்வேறு காட்சிகளைக் கற்பனை செய்வோம். அவற்றை கூறுபவர்கள் யாராக இருக்கும், அவர்களுடைய நடை, உடை, பாவனை, கலாச்சாரம் எப்படி இருக்கும் என்று நம் கற்பனையை விரிவாக்குவோம்.

    காட்சி ஒன்று:  “They gave us a hearty welcome”

    காட்சி இரண்டு:  “They gave us a cordial reception”

    அந்த கற்பனையில் எழும் காட்சிகள் எவ்வாறு வேறுபட்டு காண்கிறது என்பதற்கு ஆங்கில மொழியில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி மாறுதல்கள் சான்றாக அமையும். வார்த்தைகளை உபயோகப்படுத்திய விதத்தை வைத்து, அவற்றைப் பேசியவர்களின் சமூக சூழ்நிலையை, உருவத்தை, உடைகளை, உணர்வுகளைப்பற்றி உங்களுக்கு ஓர் கற்பனை உருவாகி இருக்கலாம். அதற்கு அந்த வார்த்தைகள் உதவி செய்திருக்கும். இதை மேலும் ஆங்கிலத்தின் பரிணாம வளர்ச்சியின் மூலம் ஏன் என்று நாம் தெளிவாகப் புரிந்து கொள்வோம்.

     

    பொது ஆண்டு 400 இல் (கி.பி. 400) இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளின் பகுதிகள் ரோமானியர்களால் ஆட்சி செய்யப்பட்டது. இதனால் விளைந்த ஒரு நன்மை என்னவெனில்; இந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு ஐரோப்பாவின் வடபகுதியில் வாழ்ந்த, நாகரீகமற்ற இனமாகக் கருதப்பட்ட சாக்ஸ்சன் (Saxons) என்ற இனந்தினரிடம் இருந்து பாதுகாப்பு கிடைத்தது. சாக்ஸ்சன் இனத்தவர் இன்றைய ஜெர்மனி நாட்டுப் பகுதியில் வசித்த பழங்குடி இனத்தவர்.

    ரோமானியப் பேரரசு வீழ்ச்சியடைய ஆரம்பித்த பொழுது, அவர்கள் இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் பகுதிகளை ஆள்வதைக் கைவிட்டனர், பின் வாங்கினர். இதன் விளைவாக ஜெர்மானியர், ஆங்கில்ஸ், சாக்ஸ்சன், ஃப்ரீஷியன்(Frisian) போன்ற வட ஐரோப்பிய இனத்தைச் சார்ந்த மக்கள் இங்கிலாந்து தீவுகளை நோக்கிப் படையெடுத்தனர். அங்கிருந்தவர்களை வீழ்த்தி அத்தீவுகளில் தங்கள் அரசை அமைத்தனர்.

    பிறகு பலநூற்றாண்டுகளாக இவர்கள் அந்த மண்ணில் ஆட்சி செலுத்தினர். இவர்களது ஜெர்மானிக் மொழியான ‘ஆங்கிலோ-சாக்ஸ்சன்’ (Anglo-Saxon) என அழைக்கப்பட்ட மொழி பரவலாக நடைமுறை வாழ்க்கையில் உபயோகப்படுத்தப்பட்டது. இந்த மொழியை மொழியியல் வல்லுனர்கள் “பழமையான ஆங்கிலம்” (Old English) என்று குறிப்பிடுவார்கள்.

    தற்கால ஆங்கிலம் பேசுபவர்களுக்கு ‘ஓல்ட் இங்கிலீஷ்’ என்பது முற்றிலும் வேறுபட்ட மொழியாகத் தோன்றக்கூடும். ஆனால் உன்னிப்பாக ஆராய்ந்தால் நமக்கு நன்கு அறிமுகமான சில வார்த்தைகளும் ஆங்காங்கே புலப்படும். உதாரணமாக, படத்தில் காண்பது போல, ஓல்ட் இங்கிலீஷ்ஷில் சில சொற்களின் எழுத்துக்கோர்வையை தற்கால உச்சரிப்பிற்கு ஏற்றவாறு மாற்றினால் பொதுவான வழக்கத்தில் உள்ள சில ஆங்கில சொற்கள் தெரிய வரும்.

     

    Old Engli

     

    வ்வாறு சில நூற்றாண்டுகள் அந்நாட்டு மக்கள் பழைய ஆங்கில வழக்கில் பேசி வந்தார்கள். ஏழாம் நூற்றாண்டில் வைக்கிங்களின் (Vikings) படையெடுப்பு நிகழ்ந்தது. இவர்கள் நார்ஸ்மென் (Norsemen) என்றும் அழைக்கப் படுவார்கள். அப்போரின் காரணமாக விளைந்த ஒப்பந்தத்தின்படி போர் ஒரு முடிவக்கு வந்தது. உடன்படிக்கையின் விளைவாக இங்கிலாந்து தீவுகள் இரு சம பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. தென்பகுதி சாக்ஸ்சன்களுக்கும் வடபகுதி டேன்ஸ் (Danes) மக்களுக்கும் என முடிவானது. இந்த டேன்ஸ் இனத்தினர் தற்கால டென்மார்க் (Denmark) பகுதியில் வசித்து வந்த இனத்தவர். இவர்கள் ‘ஓல்ட் நார்ஸ்’ (Old Norse) என்ற மொழியினைப் பேசி வந்தார்கள். ஓல்ட் நார்ஸ் மொழி வடஜெர்மானிய மொழி பிரிவிற்குள் வகைப் படுத்தப்படுகிறது.

    சாக்ஸ்சன் இனத்தவரும், டேன்ஸ் இனத்தவரும் காலப்போக்கில் கலந்துறவாடிய பிறகு, அவர்களது ஓல்ட் இங்கிலீஷ் மொழியும் ஓல்ட் நார்ஸ் மொழியும் இணைந்துவிட்டன. பல ஓல்ட் நார்ஸ் வார்த்தைகள், உதாரணமாக, Freckle, Leg, Skin, Root, Want போன்ற வார்த்தைகள் இன்றும் ஆங்கில மொழியின் உபயோகத்தில் இருக்கின்றன.

     

    முந்நூறு ஆண்டுகள் கழித்து, பொது ஆண்டு 1066 இல் இங்கிலாந்து தீவுகளில் மீண்டும் போர் நிகழ்ந்தது. இம்முறை ‘நார்மன்’ (Normans) இன மக்கள் போரில் வெற்றி பெற்றார்கள். இந்தப் போர் ‘நார்மன் கான்குவெஸ்ட்’ (Norman conquest of England) என்று வரலாற்றில் குறிப்பிடப் படுகிறது. நார்மண்டியின் இரண்டாம் வில்லியம், இங்கிலாந்தின் இரண்டாம் ஹெரால்ட் மீது நிகழ்த்திய வாரிசுரிமைப் போரில் இங்கிலாந்து மன்னர் வீழ்த்தப் பட்டு ஆட்சி கைமாறியது.

    இந்த நார்மன் இனத்தவரும் வைக்கிங் இனத்தவர்கள்தான். ஆனால் காலப்போக்கில் தங்கள் வைக்கிங் அடையாளங்களையும், கலாச்சாரத்தையும், மொழியையும் கைவிட்டு ஃபிரான்ஸ் நாட்டில் வசித்தவர்கள். பின்னர் ஃபிரான்ஸ் மக்களின் கலாச்சாரத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டவர்கள். நார்மன் கான்குவெஸ்ட் போருக்குப் பிறகு மூன்று நூற்றாண்டுகள் இங்கிலாந்து நாடு ஃபிரெஞ்ச் மன்னர்களின் கட்டுபாட்டிற்கு கீழ் வந்தது. ஃபிரெஞ்ச் மொழியும் இங்கிலாந்தின் ஆட்சி மொழி நிலைக்கு உயர்த்தப்பட்டது.

    இதனால் இங்கிலாந்தில் சமூக உயர்வு தாழ்வு நிலை ஏற்பட்டது. ஃபிரெஞ்ச் மொழி பேசும் அரசகுலம், பிரபுக்கள் போன்ற உயர்குல ஆட்சியாளர்கள் என்று ஒரு பிரிவும்; ஓல்ட் இங்கிலீஷ் பேசும், உழவுத் தொழில் புரியும் வேளாண் குடிமக்கள் என மற்றொரு பிரிவும் தோன்றியது. ஃபிரெஞ்ச் ஆட்சியில் கத்தோலிக்க குருமார்கள் இங்கிலாந்திற்கு வரவழைக்கப் பட்டு ஆதரிக்கபட்டர்கள். இந்தக் கத்தோலிக்க குருமார்கள் தங்கள் பங்கிற்கு லத்தீன் மொழியை இங்கிலாந்தில் நுழைத்தார்கள்.

    இது போன்ற பல மொழிகளின் கலப்பின் காரணமாக ஆங்கிலம் தன் தன்மையை மாற்றி வளைந்து கொடுத்து, பிறமொழிச் சொற்களையும் காலத்திற்கேற்றவாறு தன்னகத்தே இணைத்துக் கொண்டு வளர்ந்து செழித்தது. ஆங்கிலத்தின் ஆயிரக்கணக்கான புதிய சொற்கள்; அரசாங்கம், சட்டம், பெருமை மிகு உயர்குடி மக்களின் பிரபுத்துவம் (aristocracy) போன்றவற்றைக் குறிக்கும் சொற்கள், ஃபிரெஞ்ச் மற்றும் லத்தீன் மொழிகளில் இருந்து எடுத்து கையாளப்பட்டன.

    இந்த மொழிக்கலப்பின் காரணமாக ஆங்கிலத்தில் தற்காலத்தில் பயன் படுத்தப்படும் அந்நிய மொழிச் சொற்களுக்கான உதாரணங்கள்: Council, Marriage, Damage, Sovereign, Govern, Parliament ஆகியவை. இவ்வாறு மொழி விரிவடைந்ததும், ஆங்கில மொழி பேசும் மக்கள் தங்களை உயர்நிலையில் உள்ளவர்களாக காட்டிக்கொள்ள விரும்பி ஓல்ட் இங்கிலீஷ் சொற்களைத் தவிர்த்தார்கள். இதனால் உழைக்கும் வர்கத்தில் இருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொண்டார்கள். இவர்கள் பிரபுத்துவ மேல்குடி மக்கள் உபயோகித்த ஃபிரெஞ்ச் மற்றும் லத்தீன் மொழிகளின் சொற்களை ஆங்கிலத்தில் உரையாடும் பொழுது அதிகம் உபயோகித்தார்கள்.

     

    ப்பொழுது முதலில் கற்பனை செய்த காட்சிகளை மீள்பார்வை செய்வோம்.

    காட்சி ஒன்று:   “They gave us a hearty welcome” – இந்த வாக்கியத்தைக் கேட்கும் பொழுது சாதாரண மக்கள் உங்கள் கற்பனையில் எழுந்திருக்கலாம்.
    காட்சி இரண்டு:  “They gave us a cordial reception” – இந்த வாக்கியத்தைக் கேட்கும் பொழுது நாகரீகத்தில் மேம்பட்ட மக்கள் உங்கள் கற்பனையில் எழுந்திருக்கலாம்.

     

     

    கராதியின்படி ஒரே பொருள் கொண்ட சொற்கள் இது போன்று மாறுபட்ட உருவகங்களை மனதில் தோற்றுவிக்க என்ன காரணம்?

    hearty, welcome போன்ற சொற்கள் ஆங்கிலோ-சாக்ஸ்சன் சொற்களாகும்.
    cordial, reception போன்ற சொற்கள் ஃபிரெஞ்ச் மொழியில் இருந்து எடுத்து ஆங்கிலத்தில் உபயோகப் படுத்தப்படும் சொற்களாகும்.

    அதிகாரம், உயர் பண்புகள் போன்ற பொருள் தரும் சொற்கள் ஃபிரெஞ்ச் மொழியில் இருந்து தோன்றியவை. உழைப்பாளிகள், சாதாரண மக்கள் போன்றவர்களின் பண்புகளைக் குறிப்பது போன்ற பொருள் தரும் சொற்கள் ஆங்கிலோ-சாக்ஸ்சன் மொழியில் தோன்றியவை.

    ஆங்கில மொழியில் நிகழ்ந்த இந்த பரிணாம வளர்ச்சி வரலாற்றை அறியாதவர்களும் கூட, ஆங்கிலச் சொற்கள் உபயோகப்படுத்தப் படும் சூழ்நிலைக்கேற்ப இந்த வேறுபாடை அடிமனதில் அவர்கள் அறியாமல் வளர்த்துக் கொள்வார்கள்.

    நாம் சொல்லும், பேசும் சொற்களின் வழியேதான் வரலாறு வாழ்கிறது.

     

    சிந்தனைக்கு: இது போன்ற மொழி வளர்ச்சியை தமிழ் மொழி வளர்ச்சியுடன் ஒப்பிட்டாலும் இந்த உண்மை பொருந்தும்.
    முன்னர் தமிழும் சமஸ்கிருதமும் கலந்து தமிழ் எழுத்துக்களில் எழுதப்படுவதை ‘மணிப்ரவாளம்’ (தமிழில் ‘மணிமிடை பவளம்’) என்று குறிப்பிடுவார்கள். தற்காலத் தலைமுறையினர் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து ‘தங்லீஷ்’ என்று (அங்கீகரிக்கபடாத ஆனால் வழக்கில் உள்ள ஒரு சொல்) ‘கொலைவெறியுடன்’ பேசி வருகிறோம்.

    அக்கால ஆங்கிலேயரைப் போலவே, எக்காலத்திலும் தமிழரிடையே வேற்று மொழி வார்த்தைகளை அதிகம் உபயோகித்தால் நாகரீகத்தில் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணமும் நடைமுறையில் உள்ளது.

     

    வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித் திரு நாடு.

     

     

    ஆதாரம், படங்கள் உதவி: Ted ED: How did English evolve?

     

    Share
  • உணவு உற்பத்தியில் தன்னிறைவு காணும் வழி

     

    தேமொழி

     

    மனித இனத்தினர் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதைப் பற்றிச் சில தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர் என்கிறார் ஜெர்ட்ஜன் மீயுவ்ஸ். நெதர்லாந்தில் இருக்கும் ‘டச்சு’ ஆராய்ச்சி நிறுவனமான ‘ப்ளாண்ட் லாபில்’ தோட்டயியல் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிகிறார் ஜெர்ட்ஜன் மீயுவ்ஸ் (Gertjan Meeuws, Horticultural Engineer at Dutch based group called PlantLab, Netherlands).

     

    Gertjan Meeuws

     

    பல்கிப் பெருகி வரும் மனித இனத்திற்குத் தேவையான உணவுத் தேவைகளைத் தற்பொழுது இருக்கும் விவசாயத் தொழில் நுட்பத்தை வைத்தே சமாளித்துவிட முடியும் என்பது தவறான கருத்துகளில் முதன்மையானது என்கிறார் இந்த ஆராச்சியாளர்.

    உலக மக்கட்தொகை இப்பொழுது ஏழு பில்லியனில் இருந்து ஒன்பது பில்லியன்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவற்றில் பெரும்பான்மையான மக்கள் நகரங்களில் வசித்து வருகிறார்கள். மக்கள் அனைவர்க்கும் தேவையான உணவை உற்பத்தி செய்ய மிக முக்யமாகத் தேவைப்படுவது நீர். எதிர்காலத்தில் பெட்ரோலை விட நீர்தான் ஒரு நாட்டின் முக்கிய சொத்து எனக் கருதப்படும் நிலை வந்துவிடும்.

    அத்துடன் அனைவரது உணவுத் தேவையையும் நிறைவு செய்வதற்காக விவசாயத்திற்கு பொருத்தமற்ற நிலங்களையும் விளைநிலமாக மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இது போன்ற ஒவ்வாத வளரும் சூழ்நிலைகளில் உள்ள விளைநிலங்களில் வளரும் தாவரங்கள் பூச்சிகளினாலும், நோய்களினாலும் எளிதில் பாதிக்கப்படும். இதனை நிவர்த்தி செய்ய நாமும் வேதிப்பொருட்களில் தயாரிக்கப்பட்ட உரங்களையும், பூச்சிக்கொல்லி இரசாயன மருந்துகளையும் உபயோகிக்க வேண்டிவரும். மேலும், இவ்வாறு பயிர் செய்த உணவை தேவையான இடத்திற்கு கொண்டுசென்று சேர்க்கவும், மீண்டும் விளைநிலங்களுக்கு கொள்முதல் செய்ய வரும் செய்கைகளே 35 சதவிகித போக்குவரத்து ஊர்திகளின் வேலையாகவும் இருக்கும். இவை போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு நாம் உணவு உற்பத்தி முறையில் பலப் புதுமைகள் செய்யவேண்டும்.

     

    விவசாயத்தைப் பற்றிய மற்றொரு தவறான கருத்து: பயிர் வளர்ப்பு இயற்கை முறையைச் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்று கருதுவது. இக்கருத்தும் உணமையல்ல என்பது ஜெர்ட்ஜன் மீயுவ்ஸ் அவர்களின் கருத்து.

    இயற்கையிலோ அல்லது சிறந்த சோதனைக்கூட சூழ்நிலையிலோ தாவரங்கள் தங்களுக்குத் தேவையாக 9% திறனை மட்டுமே உபயோகித்துக் கொள்கின்றன. தாவரங்கள் எந்த சுற்றுப்புற சூழலுக்கும் ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொண்டு உயிர் வாழும் தன்மை வாய்ந்தவை. தாவரங்களின் இந்தப் பண்பினை நமக்கு சாதகமாக்கி விவசாயத்தில் புதுமைகளை நாம் புகுத்தலாம்.

     

    தாவரம் நன்கு வளர நல்ல சூரிய ஒளி தேவை என்பதும் மற்றொரு தவறான கருத்து என்கிறார் ஜெர்ட்ஜன் மீயுவ்ஸ்.

    தாவரங்கள் சூரிய ஒளிக்கற்றையில் உள்ள சிவப்பு, நீலம் மற்றும் ஊதா வண்ண (Purple) ஒளிக்கதிர்களை மட்டுமே உபயோகிக்கின்றன. இதனால் செயற்கைமுறையில் கட்டிடங்களின் உட்புறம் விவசாயம் செய்து உணவு உற்பத்தியைப் பெருக்க நம்மால் முடியும். நகரங்களில் ஊர்திகளை நிறுத்துவதற்கு கட்டப்படும் பல அடுக்குமாடி கட்டிடங்கள் போன்றவற்றில் பயிர் செய்யத் தகுந்த சூழ்நிலையை உருவாக்கி ஊதாக்கதிர்களையும், குறைந்த அளவு நீரையும் பயன்படுத்தி உணவு உற்பத்தியைப் பெருக்க முடியம். பயிர் செய்ய சூரிய ஒளியை உபயோகிக்கத் தேவையில்லை என்ற காரணத்தால் அடுக்குமாடிக் கட்டிடங்களைப் பயன்படுத்துவது ஏதுவாகிறது.

    ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு உணவாக 200 கிராம் காய் மற்றும் பழங்களை உற்பத்தி செய்ய ஒரு சதுரகிலோமீட்டர் பரப்பளவு போதுமானது. எனவே ஒரு லட்சம் மக்களுக்கு தேவையான தாவரங்களைப் பயிரிட நூறு மீட்டர் நீள அகலமுள்ள, பத்து அடுக்குகளைக் கொண்ட அடுக்கு மாடிக்கட்டிடம் போதுமானது.

    plant lab production unit

    indoor farming

    Plant lab product

     

    இந்த முறையைப் பயன்படுத்தினால், தாவரங்களின் மரபணுக்களில் எந்த ஒரு மாற்றமும் செய்யத் தேவையில்லாமலே, சுத்தமான சுகாதாரமான முறையில், ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த தாவரங்களைக் குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி, இரசாயன பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை உபயோகப்படுத்தாமல், குறைந்த செலவில் விளைவிக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த பயிராக வளர்வதால் நோயை எதிர்க்க மருந்துகள் தேவையில்லை. தோட்டங்களில் அல்லது வயல்வெளிகளில் பயிரிடுவதைவிட 40% அதிக மகசூலை 90% குறைந்த அளவு நீரை உபயோகித்துப் பெற முடியும். அதனால், இந்த விவசாய முறை, பயிரிட நிறைய நிலப்பரப்பும், நீரும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் தேவை என்பது எவ்வளவு தவறான கருத்து என்பதையம் புலப்படுத்துகிறது.

     

    indoor farming benefits

     

    எந்த ஒரு தாவரத்தையும் இந்த உட்புறப் பண்ணை முறையைப் பயன்படுத்தி பயிரிட முடியும். தக்காளி, ஸ்டராபெர்ரி, கீரைவகைகள், வெள்ளரிக்காய், அவரை, மருத்துவத்திற்கான மூலிகைகள், என எந்தப் பயிரையும் பயிரிடலாம். இதனால், தாவரங்கள் நன்கு வளரக்கூடிய தட்பவெப்ப நிலை உள்ள இடங்களில் பயிரடப்பட்டு, அதிக தொலைவில் வசிப்பவர்களுக்கு ஊர்திகளில் கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும் என்ற கருத்தும் தவறானக் கருத்தாகிறது. ஆனால் தற்பொழுது அதிக தொலைவு பயணத்திற்கு ஏற்றவாறு காய்கனிகள் அவைகள் பக்குவம் பெரும் முன்னரே பறிக்கப்பட்டு அவை அழுகி வீணாகும் நிலை குறைக்கப்படுகிறது. சரியான தருணத்தில் அறுவடை செய்யாத காய்கனிகள் சுவையற்றும் இருக்கின்றன.

    தட்பவெட்பத்தைக் கட்டுப்படுத்திப் பயிரிடப்படும் உட்புறப் பண்ணை முறை இந்த நிலையை மாற்றியமைக்கும். நுகர்வோர்கள் இருக்கும் இடத்திலேயே பயிரிட்டு, பக்குவமான நேரத்தில் தேவையானவற்றை மட்டும் பறித்துப் பயன்படுத்தலாம், இதனால் வீணாவதும் தவிர்க்கப்படும்.பழங்காலத்தில் மக்கள் எவ்வாறு தங்கள் தேவைக்கேற்ப சுவையான காய்கனிகளை உடனே பறித்துப் பயன்படுத்தினார்களோ, அது போலவே நாமும் பயன் பெறலாம். தட்பவெட்பத்தைக் கட்டுப்படுத்திப் பயிரிடப்படும் உட்புறப் பண்ணை முறையினால் எக்காலத்திலும், இரவோ பகலோ, கோடையோ மழைக்காலமோ எந்தக் காலத்திலும் பயிரிடலாம். அது போலவே எந்த ஒரு இடத்திலும், துருவப் பிரதேசம், பாலைவனம், பெரிய நகரங்கள் என எந்த இடங்களிலும் பண்ணைகள் அமைக்கப்பட்டு பயிரிடமுடியும்.

     

    பொதுவாக விவசாயத்தைப் பொறுத்தவரை உள்ள மற்றொரு தவறான கருத்து பெரிய அளவில் பயிரிடப்பட வேண்டும் என்பது. இந்த உட்புறப் பண்ணை முறையினால் அந்தக்கருத்தும் பொய்யாகிறது.

    உட்புறப் பண்ணை முறையில் பயிரிட சிறிய இடங்கள் கூடப் போதுமானது. எனவே, காய்கறி அங்காடிகளின் ஒரு பகுதியிலோ, உணவகங்களின் ஒரு பகுதிகளிலோ, ஏன் நமது வீட்டின் சிறிய சமயலறைகளிலோக் கூட நம் தேவைக்கேற்ப பயிரிட முடியும். நமக்குத் தேவையான தக்காளிகளை நம் சமயலறையிலேயே அலமாரியைத் திறந்தும் பறித்துக் கொள்ளலாம். உன் சமையலறையில் நான் கீரையா? புதினாவா? என்றும் பாடலாம்.

     

    அனைத்தையும்விடத் பெருந்தவறான கருத்து இதுபோன்ற முறையில் பயிரிடத் தயாராவதற்குப் பல்லாண்டுகள் ஆகும் என்பது. உட்புறப் பண்ணை முறையில் பயிரிடுவதை இன்றே எந்த நாட்டிலும், இந்தியா உட்பட, தொடங்க முடியும். அதிக மூலதனம் தேவை இல்லை.

     

    சிந்தனைக்கு: முதற்படியாக சென்னை மாநகரின் கடற்கரையை ஒட்டி (நீரில்லாவிட்டால் கடற்கரை ஊற்று நீரைக்கொண்டு பயிரிடும் வகையில்) அரசு ஒரு அடுக்கு மாடியைக் கட்டி உட்புறப் பண்ணையை அமைக்கலாம். அதனை ஆர்வமுள்ளவர்களுக்கு குத்தகைக்கு விட்டு வருமானமும் ஈட்டலாம். வெளிப்புறம் காய்கனிகளை விற்க அங்காடியும் துவங்கலாம். அது உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற முதல் கட்டப் பரிசோதனை நடவடிக்கையாக இருக்கும்.

     

    “பண்ணையெல்லாம் பொன் கொழிக்கச் செய்திடுவோம், அதில் பன்மடங்கு உற்பத்தியைப் பெருக்கிடுவோம்”

     

    ஆதாரம்: TEDxBrainport 2012 – Indoor planting
    படங்கள் உதவி: PlantLab, Netherlands
    காணொளி சுட்டி: http://www.youtube.com/watch?v=Ct3dK2_ksvk

     

    Share
  • திருமண வாழ்க்கை ஆண்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்குமா?

     

    தேமொழி

     

    திருமணம் செய்து கொண்ட ஆண்கள் நீண்ட ஆயுளை உடையவர்களாகவும், ஆரோக்கியமான வாழ்க்கையைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்ற ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு ஆதாரமாகப் பல புள்ளிவிவரங்களும்(data) கொடுக்கப்பட்டன. இந்த ஆராய்ச்சி முடிவினைக் கேட்ட சிலர், “என்ன செய்வது? என் வாழ்க்கைத் துணையுடன் ஒரு நாளைக் கழிப்பதே ஒரு மாமாங்கம் போலத் தோன்றுகிறது. இது போன்ற எண்ணம் உள்ள மணமானவர்கள் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்று இருப்பார்கள் போலிருக்கிறது”, என்று கேலி செய்து வேடிக்கை பேச்சும் பேசுவது உண்டு. 

     

     

    தற்கால உலகில், திருமண வாழ்க்கைக்கு மதிப்பு குறைந்து வரும் கால கட்டத்தில், ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை முறையினை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை ஆதாரமாகக் காட்டி, இளைஞர்களுக்கு திருமண வாழ்க்கையின் மேன்மையை எடுத்துச் சொல்லி போதிக்க முற்படுவார்கள்.

    ஆனால், இந்த ஆராய்ச்சியின் முடிவு சரியா? இதை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் புள்ளிவிவரங்களை அலசி சரியான முடிவை எடுத்தார்களா? என்ற சந்தேகக் கேள்விகள் பொதுவாக ஆராய்ச்சி மனப்பான்மை உள்ளவர்களுக்கு எழும். ஏனெனில், சற்று கவனம் இல்லாமல் ஆராய்ந்தால் புள்ளிவிவரங்களைக் கொண்டு தவறான முடிவுகளையும் எடுக்க வாய்ப்புள்ளது.  

    அதற்கு  புள்ளியியல்(statistics) பயில்பவர்களுக்கு உதாரணப் பாடமாக சொல்லிக்கொடுக்கப் படுவதை முதலில் பார்ப்போம். இந்த உதாரணம் மிகவும் பிரபலமான ஒன்று. ஐஸ்க்ரீம் விற்பனை அதிகரிக்கும் நாட்களில் மக்கள் பலர் நீரில் மூழ்கி மரணமடைகிறார்கள் என்பதனைக் குறிக்கும் புள்ளிவிவரங்கள் உள்ளன. இதனை மேலோட்டமாகப்  பார்த்து “அதிக ஐஸ்க்ரீம் சாப்பிடுவது நீரில் மூழ்கி மரணமடைவதற்கு காரணமாகிறது” என்ற கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களைக் கொண்டு முடிவெடுப்பது தவறு.

    இதனை ஆராய்ச்சியாளர்கள் கூறும் மொழியினை உபயோகித்திச் சொல்வோமானால், “ஐஸ்க்ரீம் சாப்பிடுவதற்கும் நீரில் முழுவதற்கும் இடையே தொடர்பு/’இடைத்தொடர்பு’ (correlation) உள்ளது. இதனால் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதுதான் நீரில் மூழ்கி மரணமடைவதற்கு காரணம் என்ற ‘காரண காரியத் தொர்பினை’ (causality) முடிவாகக்  கொள்ளுவது அபத்தமாக முடியும்.”

    இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும்; அதாவது ஐஸ்க்ரீம் விற்பனை மற்றும் நீரில் மூழ்குதல், இவற்றிக்கு வேறு ஒரு ‘பொதுவான காரணம்’ (underlying factor)  உள்ளது.  இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் உள்ள பொதுவான காரணம்; நல்ல தட்பவெட்ப நிலை உள்ள கோடை காலம்.  மாணவர்கள் விடுமுறையில் கடல், ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று உல்லாசமாக நீந்தி விளையாடுவது கோடை காலத்தில்தான். அதுபோன்றே, இந்த இடங்களில் கூடும் கூட்டத்தினரின் தேவைக்கேற்ப வெயில் காலத்தில் ஐஸ்க்ரீம்  விற்பனையும் அதிகரிக்கும். இது இயல்பான ஒன்று.  இந்நாட்களில் அதிக மக்கள் நீரில் விளையாடுவதால் நீரில் மூழ்கி மரணமடையும் நிகழ்வுகளும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இந்தப்  பொதுவான காரணத்தைக் கருத்தில் கொள்ளாமல் முடிவுக்கு வருவது தவறாக அமையும்.

    இரண்டு நிகழ்வுகளுக்கிடையில் தொடர்பு இருப்பதாகத் தெரிந்தால், இது நிகழ இதுதான் காரணம் என்று உடனே அவசர முடிவுக்கு வருவது, ஆராயாமல் கொள்ளும் தவறான முடிவாகும். 

     

    ப்பொழுது நாம் அறிந்து கொள்ள விரும்பும், திருமணத்திற்கும் ஆண்களின்  நீண்ட ஆரோக்கிய வாழ்க்கைக்கும் உள்ளத் தொடர்பைக்  கண்டறிந்த ஆராய்ச்சியின் முடிவைப் பற்றி மேலும் விளக்கமாக அறிந்து கொள்வோம்.  

    உண்மையில் என்ன நிகழ்கிறது என்றால், நல்ல கல்வியும் உடல் ஆரோக்கியமும் உள்ள செல்வந்தர்களால் அதிக நாள் வாழ முடிகிறது.  அவர்களுக்கு வாழ்க்கைத்துணை கிடைப்பதும் இக்காரணங்களால் சுலபமாகிவிடுகிறது. ஆண்களுக்கு மட்டுமின்றி, இதே காரணங்கள் பெண்களுக்குத் திருமண வாழ்க்கை அமைவதிலும் உதவி புரிகின்றன என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.

    இதற்கு மாறாக கல்வித் தகுதி குறைவாகவோ, அதனால் வருமானம் குறைவாகவோ இருப்பவர்களுக்கு இதே காரணங்களால் திருமணம் தள்ளிப் போகிறது.  அத்துடன் நோய் ஏற்படும்பொழுது அதற்கு மருத்துவம் பார்ப்பதோ,ஆரோக்கிய உணவு, வாழ்க்கைமுறைகளைக் கடைபிடித்து உடலைப் பேணிக் காப்பதோ இயலாது போகிறது. இக்காரணங்களினால் அதிக நாட்கள் அவர்களால் உயிர் வாழ முடிவதில்லை. 

    நீண்ட ஆயுளைப் பெறும் வாய்ப்புள்ள சமூக சூழ்நிலை உள்ளவர்களுக்கு விரைவில் திருமண வாழ்க்கை அமைவதும், அத்தகுதி அற்றவர்களுக்கு திருமணம் நிகழ தடைகள் ஏற்படுவதுமே சரியான காரணம் என்று பின்னாளில் மேலும் பல ஆராய்ச்சி முடிவுகள் உணர்த்தின. அதனால் மணவாழ்க்கை நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்பது சரியல்ல.  நிம்மதியற்ற திருமண வாழ்க்கை நேர் மாறான விளைவைத் தருவதையும் நாம் அறிவோம்.  

     

    correlation

     

    து போன்று மேலோட்டமாக உள்ள தொடர்புகளை மட்டும் கவனித்துவிட்டு, முற்றிலும் தவறாக வெளியிடப்படும் ஆராய்ச்சி முடிவுகளுக்கு உதாரணமாக புள்ளியியல் துறையில் இருந்து பல ஆதாரங்களைக் கொடுக்க இயலும்.   சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் வெளியான ஒரு ஆராய்ச்சியானது தன்னம்பிக்கை உள்ள பிள்ளைகளுக்கும் அவர்கள் பள்ளியில் நன்கு பயின்று நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கும் உள்ள தொடர்பினைக் கண்டறிந்தது.  அதனால் பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளைகள் வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கையை  ஊட்டி வளர்க்க அறிவுரைக் கூறப்பட்டது.

    தொடர்ந்து பின்நாளில் நிகழ்த்தப் பட்ட ஆராய்ச்சி, இது தவறு, உண்மையில் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்கள் தங்களால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையைப் பெறுகிறார்கள்.  நல்ல மதிப்பெண்கள் பெறுவதே தன்னம்பிக்கைக்யை அதிகரித்து தொடர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெறக் காரணமாகிறது.  நல்ல மதிப்பெண்கள்தான் தன்னம்பிக்கையைத் தருகிறது, மாறாக தன்னம்பிக்கை நல்ல மதிப்பெண்களைப் பெற வழி செய்வதில்லை என்று கண்டறிந்தார்கள்.

     

    கவே, நிகழ்வுகளுக்கு இடையில் தொடர்பு உள்ளது என்று புள்ளி விபரங்கள் குறிப்பிட்டாலும், அந்த தொடர்புக்கு இதுதான் காரணமா என்ற நாம் கவனமாக ஆராய வேண்டும். இது நிகழ்ந்தால் நிச்சயம் இதுவும் நிகழ்ந்தே தீரும், ஆகவே இது நிகழ இதுவே காரணம் என அவசரப்பட்டு எந்த முடிவெடுக்கக் கூடாது.  காரணம் எதுவாகவும் இருக்க வாய்ப்புள்ளது,

    எனவே, இடையே உள்ளத் தொடர்பு மட்டும் எதனையும் ஆணித்தரமாக சொல்ல உதவாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வேண்டுமானால் அத்தொடர்புகள் சிற்சில குறிப்புகளைக் கொடுத்து யூகிக்க வாய்ப்பளிக்கலாம். அதனை அடிப்படையாகக் கொண்டு இது ஏன் நிகழ்கிறது? எப்படி நிகழ்கிறது? என்ன காரணம்? என்று ஆராய வேண்டியது நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவி.  சந்தேகம் வரும் சமயங்களில் ‘ஐஸ்க்ரீம் விற்பனை ஆராய்ச்சி’ உதாரணத்தையும் நினைவு படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

     

     

    நன்றி: TED X – The danger of mixing up causality and correlation
    படம் உதவி: http://lh5.ggpht.com/_hEtlcZt0xFs/S9Ytx3wPSpI/AAAAAAAAD5Y/P7fE1IYDG54/bengali%20wedding%20doll%5B7%5D.jpg

     

     

    Share
  • வேதியியல் வரலாற்றில் இன்றியமையாத ஒரு முக்கியக் கண்டுபிடிப்பு

     

    தேமொழி

    இதுவரை உலகில் 120  தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இத்தனிமங்கள் அனைத்தையும் தனித்தனியாக அவற்றின் பண்புகளை அறிந்து நினைவில் கொள்வது கடினம்.

    இதற்கு உதவுவது தனிம வரிசை அட்டவணை. தனிம வரிசை அட்டவணையில்,  தனிமங்களை  அதன் பண்புகளின் அடிப்படையில் தொகுதிகளாகப் பிரித்து அட்டவணையாக வரிசைப்படுத்திய விதம் தனிமத்தின் வேதியியல் பண்புகளை நினைவில் நிறுத்திக் கொள்ள உதவுகிறது. தனிம வரிசை அட்டவணையானது மனிதகுலம் உருவாக்கிய, மனித குலத்தின் அறிவாற்றலைக் காட்டும் ஒரு ஈடு இணையற்ற படைப்பாகும்.

     

     

    டோபரின்னர், ஜான் நியூலேண்ட், லோதர் மேயர் போன்ற அறிவியியல் அறிஞர்கள் தனிமங்களின் பண்புகளை அடிப்படையாகக்கொண்டு அவற்றை வரிசைப்படுத்த முயன்றுள்ளனர்.  ஆனால், ரஷ்ய வேதியியல் அறிஞர் ‘டிமிட்ரீ மெண்டலீயா’ (Dmitri Mendeleev) என்பவர் 1871ஆம் ஆண்டில் உருவாக்கிய தனிம வரிசை அட்டவணை அனைத்தையும் விட மிகச் சிறப்பானது.

    மெண்டலீயா தனிமங்களை அவைகளின் அணுநிறைகளின் அடிப்படையில், குறைந்த அணுநிறையிலிருந்து அதிக அணுநிறை உள்ள தனிமங்களை இடமிருந்து வலமாக (நாம் எழுதுவதுபோல) அட்டவணைப்படுதினார். அவர் அவ்வாறு வரிசைப்படுத்தி ஆராய்ந்த பொழுது, வரிசையில் ஒத்த தன்மை இல்லாத தனிமங்களுக்கு இடையில் வெற்றிடம் விட்டு  அங்கு  இடம்பெற வேண்டிய பண்புகளையுடைய  தனிமங்கள் இனிமேல்தான் கண்டறியப்பட வேண்டும் என நிர்ணயித்தார். இதுதான் மிகவும் ஆச்சரியகரமான அறிவியியல் கண்டுபிடிப்பு. 

     

    Mendelejevs_periodiska_system_1871

     

    இவ்வாறு வெற்றிடங்களில் இடம் பெற வேண்டிய தனிமங்கள் என அவர் குறிப்பிட்டவை  அவர் அட்டவணையைத்  தயாரித்த காலத்தில் கண்டறியப் பட்டிருக்கவில்லை. எனினும்,  இன்னமும் கண்டறியப்படாத அந்த தனிமங்களின் பண்புகளை அட்டவணையில் அவை இடம் பெற்ற இடத்தினையும், அருகே சூழ்ந்திருக்கும் மற்ற தனிமங்களின் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்டு யூகிக்க முடியும்.  இதுவே இவரது தனிம அட்டவணையின் சிறப்பிற்குக்  காரணம்.

    அவ்வாறு தனிம அட்டவணையில் இடம் பெற வேண்டிய தனிமங்களின்  இடத்தினை  கருத்தில் கொண்டு, அவற்றின் பண்புகளை யூகித்து  சில தனிமங்களை  ‘எகா  அலுமினியம்’ (அலுமினியத்தின் பண்பினை ஒத்தது), ‘எகா சிலிக்கான்’ (சிலிக்கானின் பண்பினை ஒத்தது)  என்று குறிப்பிட்டார்.  ஆனால் அது போன்ற பண்புகளைக் கொண்ட தனிமங்கள் அப்பொழுது கண்டறியப் பட்டிருக்காவிட்டாலும், பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது மெண்டலீயா யூகித்தது போன்றே அவற்றின் பண்புகளும் இருந்தன.

    மெண்டலீயா 1871 ஆம் ஆண்டு எகா  அலுமினியத்தின் பண்புகளைக் குறிப்பிட்டார். அதன் பிறகு 1875 ஆம் ஆண்டு ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘பால் எமிலி லெகாக் டி பாய்ஸ்பவுட்ரன்’ (Paul Emile Lecoq de Boisbaudran) ‘காலியம்’ (gallium) என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். ஃபிரான்ஸ் நாட்டினைக் குறிக்கும் ‘கால்’ (Gaul) என்ற சொல் இந்தப் பெயரினையிட அடிப்படைக் காரணமானது. இந்த தனிமத்தின் பண்புகள் அலுமினியத்தைப் போன்றே இருக்கிறது.  காலியத்தைத் தவிர ஸ்கேண்டியம், ஜெர்மானியம், ரேனியம் ஆகிய தனிமங்களின் பண்புகளையும் அவைகளைக் கண்டுபிடிக்கப்படும் முன்பே மெண்டலீயா குறிப்பிட்டு விட்டார். 

    மெண்டலீயா ‘எகா மாங்கனீஸ்’ எனக் குறிப்பிட தனிமம் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு ‘டெக்னீடியம்’ என்று பெயரிடப்பட்டது. டெக்னீடியம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1937, அதாவது மெண்டலீயா அத்தனிமத்தின்  பண்புகளை குறிப்பிட்ட பின்பு ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்குப் பிறகே, அவர் இறந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகே கண்டு பிடிக்கப்பட்டது.

    நோபெல் பரிசுகள் கொடுக்க ஆரம்பித்த ஆரம்ப ஆண்டுகளில், 1907 ஆம் ஆண்டு மெண்டலீயா இறந்துவிட்டதால் அவரது கண்டுபிடிப்புக்கு நோபெல் பரிசு கிடைக்காமல் போனது. ஆனால், 1955 ஆம் ஆண்டு கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகம் (University of California, Berkeley) உருவாக்கிய, அணுஎண்  101 ஐக் கொண்ட தனிமத்திற்கு மெண்டலீயாவினைப் போற்றும் விதமாக மெண்டலீயம் (mendelevium) எனப் பெயரிடப்பட்டது. இந்த கெளரவம் நோபெல் பரிசை விட உயர்ந்தது. இதுவரை நோபெல் பரிசை 800 க்கும் அதிகமானவர் பெற்றிருக்கிறார்கள். ஆனால், தனிம வரிசை அட்டவணையில் இடம் பிடித்த அறிவியியல் அறிஞர்கள் 15  பேர்கள் மட்டுமே, அவர்களில் மெண்டலீயாவும்  ஒருவர்.

     

    Periodic_table

     

    mendaleviyam

     

    இவர் பிறந்த ரஷ்யாவில் இவரைப் போற்றும் வண்ணம் பல பல்கலைக் கழகங்களின்  ஆராய்ச்சிக் கூடங்களுக்கு மெண்டலீயாவின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.  ‘மெண்டலீயா தங்கப் பதக்கம்’ என்ற பரிசும் 1962 ஆம் முதல் சிறந்த அறிவியியல் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    ___________________________________________________

    ஆதாரம்: TED Ed – The genius of Mendeleev’s periodic table

    படம் உதவி:
    http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c8/DIMendeleevCab.jpg/427px-DIMendeleevCab.jpg
    http://upload.wikimedia.org/wikipedia/commons/5/55/Mendelejevs_periodiska_system_1871.png
    http://upload.wikimedia.org/wikipedia/commons/8/84/Periodic_table.svg

     

     

    Share
  • வலி நிவாரணி வேலை செய்யும் விதம்

     

    தேமொழி

    நம் காலில் ஒரு முள் குத்தினால் நமக்கு எவ்வாறு  தெரிகிறது?

    நாம்  முள்குத்தியதை அறியும் விதம் வலி என்ற உணர்வு தோன்றும் காரணத்தினால்தான். 

     

     

    வலி ஏன் ஏற்படுகிறது?

    வலி என்ற உணர்வு நம்மை ஆபத்தில் இருந்து காப்பதற்கு உதவுகிறது.  இது உயிர் காக்கும் ஒரு நட்பைப் போன்றது. வலியை நாம் உணராவிட்டால் நம் விரலைத் தவறுதலாக காய் வெட்டும்பொழுது வெட்டிக்கொண்டாலும் நமக்குத் தெரியப்போவதில்லை. நமக்கு நாமே தீங்கு செய்து கொண்டு இழப்பு ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். அல்லது சுற்றுச் சூழலில் உருவாகும் ஆபத்தை உணராமல் நமக்கு தீங்கு நேரும், உயிருக்கும் ஆபத்து நேரும். வலி நமக்கு ஆபத்தைத் தவிர்க்க உடல் ஏற்படுத்தித் தந்த ஒரு முன்னெச்சரிக்கை  ஒலி.

    நாம் வளரும்பொழுது வலியை உணர்த்தும் நரம்பு செல்கள் நம் உடலில் ஆங்காங்கே பல பகுதிகளில் நிறுவப்படுகிறது. வலியை உணரும் நரம்பு செல்கள் சாதாரண நரம்பு செல்களில் இருந்து வேறுபட்டவை, மேம்பட்டவை. இவைகளை “நோசிசெப்டர்ஸ்”(nociceptors) எனக் குறிப்பிடுகிறோம்.

    இந்த நரம்பு செல்கள் தண்டுவடத்தில் இருந்து கிளம்பி தோல், தசை, எலும்பு, மூட்டுகள், உடலின் உள்ளுறுப்புகள் என பலப்  பாகங்களையும் மூளையுடன் இணைக்கிறது. மற்ற நரம்பு செல்களைப்போலவே வேலை செய்து  மின்சமிக்கைகள் மூலம் செய்திகளை மூளைக்கும் உடலுறுப்புகளுக்கும் பரிமாற்றம் செய்கிறது. ஆனால் உடலுக்கு சேதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே இவை இயங்கத் தூண்டப்படும்.

    உதாரணமாக, ஒரு ஊசியின் முனையை மெதுவாகத் தொட்டவுடன் நமக்கு வலி தெரியாது, வழக்கமான உணர்வு அதைத் தொடுகிறோம் என மட்டுமே நமக்கு அறிவுறுத்தும்.  ஆனால் முனையை மேலும் அழுத்தினால் நோசிசெப்டர்ஸ் நரம்பு செல்களின் இயக்கம் தூண்டப்படும். உடலுக்கு சேதம் ஏற்படும் நிலை ஏற்படும் பொழுது அப்பகுதியில் உள்ள செல்கள் அராக்கிடானிக் அமிலம் (arachidonic acid) எனப்படும் வேதிப்பொருட்களை வெளியிட்டு நோசிசெப்டர்ஸ் நரம்பு செல்களை இயங்கத் தூண்டும். அந்த நரம்பு செல்கள் வலியின் தீவிரத்தை நமக்கு தெரியப்படுத்தும்.

    வலியின் தீவிரம் என்பதும்  நிலையான ஒன்றல்ல.  வேதிப்பொருட்களால் அதன் தீவிரத்தை மாறுபடுத்த முடியும்.  வேதிப் பொருட்களிலான மருந்துகளை நாம் வலிநிவாரணிகளாக  உபயோகப்படுத்துவதும்  அதனால்தான். இதனால் வலியின் தீவிரத்தை நாம் குறைக்கிறோம். “ஆஸ்ப்ரின்” மற்றும் “ஐபிப்ரோஃ பின்” மருந்துகள் வலியின் தீவிரத்தைக் குறைக்க உதவுகிறது. 

     

    வலியை உணர்வது எப்படி? 

    உடலுக்கு சேதம் ஏற்படும் நிலை தோன்றினால் அப்பகுதியில் உள்ள செல்கள் அராக்கிடானிக் அமிலத்தினை உற்பத்தி செய்யும். திசுக்களில் உள்ள “காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்கள்” (COX-1 and COX-2 enzymes) இவ்வாறு வெளிக்கிளம்பும் அராக்கிடானிக் அமிலத்தினை “ப்ரோஸ்ட்டாகிலாண்டின்ஸ்” (prostaglandins-H2) எனப்படும் வேதிப்பொருளாக மாற்றும்.  தொடர்ந்து ப்ரோஸ்ட்டாகிலாண்டின்ஸ் வேறு பற்பல வேதிபோருட்களாக தொடர்ந்து மாறுதல்களை  அடைந்து உடலில் சுரம், அழற்சி, வீக்கம் ஏற்படுத்துவது எனப் பல வகையில் செயல் படத் தொடங்கும்.  

    ஒவ்வொரு நொதிப் பொருளுக்கும் வினையூக்கி பகுதி (active site) என்ற ஒரு பகுதி ஒன்று உண்டு. இந்தப் பகுதியில்தான் வேதியியல் வினைமாற்றங்கள் நிகழும்.  காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்களின்  வினைப்பகுதியில், பாதிக்கப்பட்ட செல்கள் வெளியேற்றிய அராக்கிடானிக் அமிலம் கச்சிதமாக வந்து பொருந்தும். இதன் விளைவு, நோசிசெப்டர்ஸ் நரம்பு செல்கள்  இயங்கத் தூண்டப்பட்டு வலியை நாம் உணர்வது.

     

    Pain

    நியூரோபத்திக் வலி (Neuropathic pain) என்பது நரம்பு செல்களே சேதம் அடைந்தால் உண்டாவது. இந்த வலி உண்டாக உடலுக்கு வெளியில் இருந்து தூண்டப்படும் பாதிப்பு தேவையில்லை. 

     

    வலிநிவாரணிகள் எவ்வாறு வேலை செய்கிறது?

    ஆஸ்ப்ரின் மற்றும் ஐபிப்ரோஃ பின் மருந்துகள் உட்கொள்ளப்பட்டபின் அவை இரத்தத்தில் கலந்து உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும், அதுபோல பாதிக்கப்பட்ட உடலுறுப்பினையும் அடையும்.  அங்கு அது காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்களின் வினைப்பகுதியினை அடைந்து அங்கு அராக்கிடானிக் அமிலம் பொருந்த விடாமல் அப்பகுதியை செயலிழக்கச் செய்யும்.

    இவ்வாறு செயலிழக்க செய்வதை ஆஸ்ப்ரின் மற்றும் ஐபிப்ரோஃ பின் மருந்துகள் வேறு வேறு விதமாக நிகழ்த்தும்.  ஆஸ்ப்ரின் வினைப்பகுதியின் இடத்தில் சிதைவடைந்து அந்த வினைப்பகுதியின் இடத்தையும் அடைத்துவிடும், அந்த நொதிகளை நிரந்தராமாக செயலிழக்கச் செய்யும்.

    ஐபிப்ரோஃ பின் அவ்வாறு சிதைவடையாவிட்டலும், காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்களின் வினைப்பகுதியினை அடைந்து அந்த இடத்தில் அது இருக்கும் வரை அராக்கிடானிக் அமிலத்தினைப் பொருந்த விடாது தடை செய்யும். இந்த வினையில் காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்களின் தன்மை மாறுபடாது ஆனால் தற்காலிகமாக செயலிழக்கும்.

    இவ்வாறு வலிநிவாரணிகள் வெவ்வேறு வகையில் செயல் பட்டு  நொதிப்பொருட்களை  வெவ்வேறு வகையில் செயலிழக்க செய்து,  நொதிப்பொருட்களை அராக்கிடானிக் அமிலத்துடன் வினை செய்வதை தடுப்பதன் மூலம் வலியின் தீவிரத்தைக் குறைத்து வலியில்  இருந்து நமக்கு நிவாரணத்தைத் தருகின்றன.

    வலியை உணர்வதிலும் அதைக் கட்டுப்படுத்துவதிலும் நமது மூளையும்  பெரும்பான்மையான பங்கு வகிக்கிறது. உதாரணத்திற்கு  வலியைப்பற்றியே அதே கவனத்தில் இருந்தாலோ அல்லது நாம் மிகவும் சிரமமான சூழ்நிலையில் இருந்தாலோ நாம் வலியின் தீவிரம் அதிகம் இருப்பது போல உணர்வோம் 

    ________________________________________

    நன்றி: TED Ed – How Do Pain Relievers Work?

    படம் உதவி: http://static3.businessinsider.com/image/4f3552766bb3f79b6c000050/headache.jpg

     

     

    Share
  • யாருக்காக அழுதாள்?

    தேமொழி

    இருக்கையை விட்டு எழுந்த வண்ணம் வாயில் பென்சிலைக் கவ்விக் கொண்டு மேஜையில் கிடந்த தாள்களையும், நோட்டுப் புத்தகங்களையும் பையில் திணித்தேன். அவிழ்ந்திருந்த கூந்தலை வாரிக் கொண்டை போட்டு பென்சிலை அதில் செருகினேன். முதுகில் பையை சுமந்து கொண்டு, கைபேசியை ஜீன்ஸ் பேண்ட்டில் உள்ள ஒரு பக்க பையில் செருகிக் கொண்டேன்.  அடுத்த பக்கப் பையில் சில்லறைகள் வைத்திருக்கும் சிறிய பர்ஸும் வீட்டுச் சாவியும் இருக்கிறதா என நிச்சயப் படுத்திக் கொண்டேன். நாற்காலியின் சாயுமிடத்தில் தொங்கிய, பெரிய, மஞ்சள் கரடியின் பாதத்தில் “cal” எனப் படம் போட்ட நீல நிற ஹூடி அங்கியை மாட்டிகொண்டு வகுப்பறைக்கு வெளியே வந்தேன். வகுப்பு முடிந்து இரண்டு நிமிடத்திற்குள் வகுப்பும், நீண்ட தாழ்வாரமும் காலியாகி இருந்தது.

    பல்கலைக்கழகத்தை விட்டு வெளியில் வந்ததும் நவம்பர் மாத முதல் வாரமாக இருந்தாலும் பளீரென அடித்த மதிய வெய்யிலும்,  நீலவானமும், இதமான வெப்பத்துடன் இருந்த சூழ்நிலையும், வரப்போகும் நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களும் மனதுக்கு ஏதோ ஒரு மகிழ்ச்சியைக் கொடுத்தது.  பார்ட் (BART) இரயில் நிலையத்தை நோக்கி நடந்த பொழுது இப்பொழுதே வீட்டிற்கு போய் என்ன செய்வது என்ற எண்ணம் வந்தது.  ரஹீம் ஏதோ ஒரு கருத்தரங்கு என்று சியாட்டில் சென்று இரண்டு நாளாகிவிட்டது.  மீண்டும் திங்களன்றுதான் வீட்டுக்கு வருவார்.

    இம்முறையும் அவர் உருவத்தையும் பெயரையும் பார்த்து, விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்பவர்கள் அவரைத் தனியே அழைத்து தட்டித் தடவி, உடமைகள் மற்றும் பெட்டிகளைக்  கொட்டிப் பார்த்து அலைக் கழித்திருக்கிறார்கள். ஒருமுறை கூட விமான பயணத்தில் அவருக்கு இது நடக்கத் தவறியதில்லை. சியாட்டில் போய் சேர்ந்ததும் தொலை பேசியில் அழைத்து ஆற்றாமை தாங்காமல் அதைப் பொரிந்து தள்ளிய பொழுது அமைதியாகக் கேட்டுக் கொண்டேன். மனக் குமைச்ச்சலை வெளியிட்டால் ஆறுதலாவது கிடைக்கும் அல்லவா? மீண்டும் திரும்பி வரும்பொழுதும் நிச்சயம் இந்தக் கூத்து  நடக்கும்.  இதனை “ராண்டம் செர்ச்” என்று வேறு சொல்லிக் கொள்வார்கள்.  ரஹீம் சொல்வது போல இந்த ராண்டம்னஸ் பரிசுச் சீட்டு வாங்கும்பொழுதும் இருந்தால் அவர்கள் இப்பொழுது மில்லியனர்களாக இருந்திருப்பார்கள். இந்த வெள்ளியன்று குலுக்கும் மெகாமில்லியன் பரிசுத் தொகை இருபத்தியைந்து மில்லியனாக உயர்ந்துள்ளது. ஆனால் அப்பொழுது மட்டும் இந்த ராண்டம்னஸ் வேலை செய்வதில்லையே அது ஏன்?

    யோசித்தவாரே சாலையில் இருந்து படி இறங்கி சுரங்கப் பாதையில் இருக்கும் பார்ட் இரயில் நிலையத்தை அடைந்தேன், பயண அட்டையை கதவு போட்ட வேலியின் இயந்திரத்தில் நுழைத்து அனுமதி பெற்று உள்ளே நுழைந்தேன். ஆரஞ்சு வண்ண வழித்தடத்தில் தெற்கு நோக்கி செல்லும் வண்டி வர எவ்வளவு நேரம் இருக்கிறது என்று அறிவிப்பு பலகையில் மாறி மாறி மின் எழுத்துக்களில் வரும் அறிவிப்பை பார்த்துக்கொண்டே நடந்த பொழுது “ஹாய் மேடி” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். என் வகுப்புத் தோழன் ஸ்டீவ். வாட்டசாட்டமான உருவமும் மொட்டைத் தலையும் உள்ள அவன் கருப்பு இன வழி வந்தவன்.  அவன் மிதிவண்டியைப் பிடித்தவண்ணம் நின்றிருந்தான்.  அந்த சைக்கிள் அவன் உருவத்துடன் ஒப்பிடும் பொழுது ஒரு பொம்மை போல இருந்தது.  பளீர் என்ற வழக்காமான சிரிப்பு அவனிடம்.

    மாதவி என்ற என் பெயரை பலருக்கு இங்கே சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை.  பெரும்பாலும் ‘மதாவி’ என்று நெடிலைத் தூக்கி தேவையட்ற இடத்தில் போட்டு என் பெயரை ‘சதக்’ ‘சதக்’ செய்யும் கொடுமையைத் தாங்காமால் ‘மேடி’ என எல்லோரையும் அழைக்கச் சொல்வேன்.  ‘ஆர்னால்ட் ஷுவிஷனைகர்’ என்ற நீண்ட, கடுமையான அவர்களது மாநில ஆளுநர் பெயரை சரியாக உச்சரிக்கத் தெரிந்தவர்களுக்கு, எனது குட்டிப் பெயரை சரியாக உச்சரிப்பதில் ஏனிந்த சிரமமோ தெரியவில்லை. எம்மிற்கு அடுத்து டபுள் ஏ போட்டால் சரியாக உச்ச்சரிப்பார்களோ என்னமோ?

    அந்தக் கருப்பழகனுடன் அவன் தோழி மஞ்சளழகியும் நின்று கொண்டிருந்தாள்.  எனக்கு இன்னமும் ஒருவரின் முகவெட்டைப் பார்த்து அவர்கள் ஃபிலிப்பைன்ஸ், சீனா, ஜப்பான், வியட்நாம், கொரியா போன்ற கிழக்காசிய நாடுகளில் எந்த நாட்டில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லத் தெரிவதில்லை.  எல்லோருமே சீன நாட்டவர்கள்தான் எனக்கு. அந்த மஞ்சளழகியும் சீன நாட்டவள்தான் என்னைப் பொறுத்தவரை.  அவளுடைய மூதாதையர்கள் அங்கே இருந்து குடி பெயர்ந்திருக்கலாம்.  இவள் பேசும் ஆங்கிலம் அமெரிக்கர்கர்கள் ஆங்கிலம்தான். என்னைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு தன்  காதில் வந்து விழும் ஐ பாட் இசைக்கு தலையைத் தலையை ஆட்டியவாறு இருந்தாள்.  நான் வீட்டுக்குப் போகும் வழியில் வழக்கமாக இருவரும் ஓக்லாண்ட் நிலையத்தில் இறங்கிவிடுவார்கள்.

    நடைபாதையில் போடப்பட்ட கோடுகளுக்கு நேர் எதிரே கதவுகள் சரியாகப் பொருந்துவது போல வண்டி நிறுத்தப்பட்டது. இறங்குபவர்களுக்கு வழி விட்ட பின்பு ஏறுபவர்கள்  ஒழுங்காக வரிசையாக ஏறினார்கள்.  ஸ்டீவ் தன்  தோழியுடனும் சைக்கிளுடனும் இறங்க வசதியாக கதவு பக்கமே உட்கார்ந்து கொண்டான்.  நான் போகும் ஹேவர்ட் நிலையத்திற்கு அரைமணிக்கும் மேல் பயணம்.  உள்ளே தள்ளி வசதியாக ஒரு இருக்கையைப் பிடித்து அமர்ந்து, எனது ஐ பேட் மின்பலகையை எடுத்து, விட்ட இடத்தில் இருந்து படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தைத் தொடர்ந்தேன். ‘டிங் டிங்’ என்று கைபேசி ஒலி எழுப்பியது. அது குறுஞ்செய்தியின் அறிவிப்பு ஒலி. லீலா அனுப்பியிருந்தாள். “என் வீட்டிற்கு உடனே வர முடியுமா?”, “ஒகே” என்று அனுப்பிவிட்டு வெளியே பார்த்தேன். வண்டி ஆஷ்பி நிலையத்தை அடைந்திருந்தது.  அடுத்து வரும் மெக்கார்த்தர் நிலையத்தில் இறங்கி வண்டி மாறினால் லீலாவின் வீட்டிற்குப் போகலாம். எழுந்து கதவருகில் வந்து தயாராக நின்று கொண்டேன்.  ஏன் இங்கேயே இறங்குகிறாய் என்ற கேள்வியை பேசாமல் புருவத்தை மட்டும் உயர்த்தி கண்களால் ஸ்டீவ் கேட்டான். தோழியைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அடுத்த நிலையத்தில் இறங்கிக் கொண்டேன்.  வண்டி நகர்ந்த பொழுது புன்னகையுடன் “ஹாவ் எ நைஸ் வீக்கெண்ட்” என்று அவனும் மஞ்சளழகியும் கையசைக்கவே நானும் வாழ்த்திக் கையசைத்தேன்.

    அறிவிப்புப்  பலகை குறிப்பிட்டபடி வடக்கு நோக்கி செல்லும் மஞ்சள் வழித்தடத்தின் வண்டி வரும் நேரத்தையும், வால்நட்க்ரீக்கில் இருக்கும் லீலாவின் வீட்டிற்கு உள்ள பயண தூரத்தையும் கணக்கிட்டு, அரைமணி நேரத்தில் உன் வீட்டில் இருப்பேன் என்று அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.  வண்டி வந்து ஏறி உட்கார்ந்ததும் லீலாவைப் பற்றிய சிந்தனை ஓடியது.  இம்முறை லீலாவைப் பார்த்து மூன்று நான்கு மாதங்கள்  ஆகியிருக்கலாம் எனத் தோன்றியது. அவள் தாய் மொழி தெலுங்கு, ஒரே நாட்டில் இருந்து வந்திருந்தாலும் ஆங்கிலத்தில் மட்டுமே ஒருவருக்கொருவர் உரையாடிக்கொள்ளும் நிலை.  இருவரும் ஒன்றாகப் படித்து பட்டம் வாங்கினோம். அவள் திருமணம் குழந்தைகள் என்று குடும்ப வாழ்க்கைக்கு மாறிவிட்டாள், மேற்கொண்டு படிக்க சிறிது பணம் சேர்ப்பதற்காக நான் மூன்றாண்டுகள் வேலை செய்த பின்பு மீண்டும் முது நிலை பட்டம் வாங்க பல்கலைக் கழகத்தில் நுழைந்து, வாழ்க்கை இன்னமும் மாணவப் பருவத்திலேயே இருந்தது.  லீலாவிற்கு இரண்டு மகன்கள், மூன்றாவதாக ஒரு பெண் வேண்டும் என்று முயற்சி செய்கிறாளாம்.

    அவள் கணவனுக்கு நல்ல வேலை, நல்ல வருமானம்.  அவளுக்கும் வேலைக்குப் போக விருப்பம்தான், ஆனால் மற்றொரு கார் செலவு, வேலைக்கேற்ற உடை, குழந்தைளைக் காப்பகத்தில் விடும் செலவு என எல்லாமும் சேர்ந்து “தானிக்கு தீனி” என செலவழிந்து கடைசியில் ஒன்றும் மிஞ்சாது.  எனவே பொருளாதார அடிப்படையில் கணக்கிட்டால் வீட்டிலிருப்பதே மேல் என முடிவு செய்திருந்தாள்.  பிள்ளைகள் வளர்ந்த பின்பு வேலைக்குப் போவாளாம். புஷ் ஆட்சி காலத்தில் மட மடவென வீழ்ந்த வீடுகளின் விலை சரிவினால், இப்பொழுது வீடு வாங்கி கையைச் சுட்டுக் கொள்வதைத்  தவிர்க்க ஒரு அப்பார்ட்மெண்ட் தொடர் குடியிருப்பில் வசிக்கிறாள்.

    இரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் வீடு பக்கம்தான். அழைப்பு மணியை அழுத்திய சிறிது நேரத்தில் கதவு திறந்தது.  அழுது சிவந்த கண்களுடன் மூக்கை உறிஞ்சிக்கொண்டு நின்ற லீலாவைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். பேசும் பொழுது புரிவது போல குறுஞ்செய்தி வழியே செய்தி அனுப்புபவரின் உணர்ச்சிகள் அவ்வளவாகப் புரிவதில்லையே.  என்ன ஆச்சு லீலா? என்றேன், என்னையும் அறியாமல் என் குரலில் பதட்டம் வந்துவிட்டது.  “மேடி” என்று கூச்சலிட்ட வண்ணம் அவள் மகன்கள் ஓடி வந்து என் காலைக் கட்டிகொண்டார்கள்.  அவர்களிடம் என்னை ‘ஆண்ட்டி’ என்று அழைக்கக் கூடாது ‘மேடி’ என்றுதான் கூப்பிடவேண்டும் என்று சொல்லிவைத்திருக்கிறேன்.  இன்னொரு இந்திய ஆண்ட்டியாக என்னை அடையாளம் காட்டிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை.

    லீலா சமையலறையை நோக்கி நடந்தாள், நானும் பின் தொடர்ந்தேன்.  அவள் மகன்கள் மீண்டும் தொலைக்காட்சி பார்க்க ஓடி விட்டார்கள்.  இப்பொழுதுதான் பார்த்தேன், அந்த சிறுவர்களின் வயதை ஒத்த இரு சிறுமிகளும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  இவள்தான் எங்கள் மேடி  ‘ஆண்ட்டி’ என்று மூத்தவன் அந்த சிறுமிகளுக்கு என்னைப் பெருமையுடன் அறிமுகப் படுத்தினான். அதில் என்ன பெருமை என்பது எனக்கு விளங்கவில்லை. அந்த இரண்டு சிறுமிகளும் அழகான கொழுக் மொழுக் செல்லுலாயிட் பொம்மைகள்.  புன்னகை உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.  மீண்டும் மழலைப் பட்டாளம் ‘டோரா’ தொலைக் காட்சியில் சொல்லிக்கொடுப்பதை ஆவலுடன் சேர்ந்து கூடவே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  நான் சமையலறைக்குப் போனதும் லீலா எனக்கு விருந்தோம்பலாக கொடுத்த கோக் டப்பாவைத் தள்ளி வைத்துவிட்டு “என்ன ஆச்சு சொல்லு” என்றேன்.

    உணவருந்தும் மேஜையின் நாற்காலில் அமர்ந்த வண்ணம் “அந்த பெண்குழந்தைகளைப் பார்த்தாயா?” என்றாள்.

    “உன் பக்கத்துக்கு வீட்டிற்கு டெக்ஸ்சாசில் இருந்து புதிதாக ஒரு இந்தியக் குடும்பம் வந்திருக்கிறது, அவள் பெயர் நிஷா என்று நீ தொலைபேசியில் சொன்ன ஞாபகம். அவர்களுக்கு இரண்டு பெண்கள் என்று நீ சொன்னதும் நினைவிருக்கிறது, அந்தக் குழந்தைகளா இவர்கள்?”

    “ஆமாம், நீ யூகித்தது சரிதான்”

    “அதற்கும் உன் அழுகைக்கும் என்ன தொடர்பு?”

    “குழந்தைகளுடைய பெற்றோர்கள் நேற்று இரவு சாலை விபத்தில் இறந்து விட்டார்கள், குழந்தைகளுக்கு இன்னமும் அந்த விபரம் தெரியாது, சொன்னாலும் புரியாது” என்று அந்தக் குழந்தைகளைப் பார்த்தவாறே விம்மினாள்.

    லீலா விரிவாக சொல்லத் தொடங்கினாள்.  சமீபத்தில் அங்கு குடி வந்த நிஷாவின் குடும்பம் மிகச் சிறிய மகிழ்ச்சியான குடும்பம். திருநெல்வேலி பக்கம் ஏதோ ஒரு சிறிய கிராமம் நிஷாவின் கணவனுக்கு, நிஷா மும்பையில் வளர்ந்தவள். வந்த சில நாட்களிலேயே குழந்தைகளும் நிஷாவும் லீலா குடும்பத்துடன் நன்கு பழகி விட்டார்கள். சில நாட்களுக்குப் பிறகு  நிஷாவும் வேலைக்குப் போக நினைத்திருக்கிறாள்.  குழந்தைகளை இரவில் கணவனும், பகலில் அவளும் பார்த்துக்கொள்ள வசதியாக ஒரு இரவு நேர வேலை கிடைத்தது. இரவு எட்டு மணிக்கு கிளம்பினால் காலையில் ஆறு மணி போல வீடு திரும்பும் வகையில் ஒரு மருத்துவமனையில் வேலை.

    நேற்று இரவு நிஷாவின் கணவன் லீலா வீட்டின் கதவைத் தட்டியிருக்கிறான்.  நிஷா வேலைக்கு கிளம்பும் முன்பு பார்த்த பொழுது அவள் காரின் சக்கரம் பழுதடைந்திருக்கிறது, காற்று இல்லை.  எனவே தன் காரில் கொண்டு விட்டு வர நினைத்திருக்கிறான்.  அவன் குழந்தைகள் லீலாவின் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.  அவர்களைத் தொந்தரவு செய்ய விருப்பமில்லாமல், ஒரு அரை மணி நேரத்தில் திரும்பி வந்து அழைத்துக் கொள்வதாகக் கூறிவிட்டு மனைவியுடன் சென்றுவிட்டான்.  இரவு மணி பத்திற்கும் மேலாகி குழந்தைகளும் லீலாவின் வீட்டிலேயே தூங்கி விட்டார்கள்.  என்னவோ, எதுவோ சரியில்லை என லீலாவின் கணவன் நிஷாவின் கணவனை அவனது  கைபேசியில் அழைத்திருக்கிறான்.  ஆனால் மறுமுனையில் பேசியதோ போலீஸ்.  குடிகாரன் ஒருவன் தாறுமாறாக வண்டி ஓட்டி இவர்கள் காரில் மோதி பெரிய விபத்து.  வண்டி உருண்டு தீப்பிடித்துவிட, இறுகிப்போன காரின் கதவையும் உடனே திறந்து அவர்களை வெளியே இழுக்க முடியாமல் கால தாமதமாகிப்போன காரணத்தினால் அவர்களது உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. போலீஸ் அந்த கைபேசியின் வழியே உறவினர் யாரையாவது தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

    நாங்கள் பேசிக்கொண்டிருந்த பொழுது இடையில் லீலாவிற்கு தொலைபேசி அழைப்பு வந்தது.  அவளது மொழியில் பேசினாள்.  அவளது கணவன் போலிருக்கிறது.  பேசி முடித்தவுடன் மீண்டும் அழுதாள், அவளைச் சுற்றி மூக்கை சிந்திய டிஷ்யூ காகிதம் குவிந்திருந்தது. கொஞ்ச நாள் பழக்கத்தில் அந்த நிஷா தம்பதியினரின் மறைவுக்கு எப்படி அழுகிறாள், என்ன ஒரு இளகிய மனம் இவளுக்கு என்று லீலா மீது இரக்கமாக இருந்தது.  அவளாகவே மேலும் பேசட்டும் என மெளனமாக திரும்பி அந்த சிறுமிகளைப் பார்த்தேன்.

    இப்பொழுது அவர்கள் சின்னத் திரையில் டோரா விடுத்த வேண்டுகோளின்படி “ஸ்வைப்பர் நோ ஸ்வைப்பிங்”, “ஸ்வைப்பர் நோ ஸ்வைப்பிங்”,  “ஸ்வைப்பர் நோ ஸ்வைப்பிங்” என்று கூச்சலிட்டார்கள்.  அவர்கள் அதை அந்தக் கதையில் வரும் சூழ்ச்சிக்கார நரியிடம் சொல்வதாக எனக்குத் தோன்றவில்லை.  தங்கள் பெற்றோரைக் கொண்டு சென்ற விதியிடம் சொல்வதாகத் தோன்றியது.  பெரும்பாலும் தோல்வியடைந்து “ஓ மேன்” என சலித்துக் கொள்ளும் கார்ட்டூன் நரி இந்த முறை “யு ஆர் டூ லேட்” என்று கூறி “ஹெக் ஹெக் ஹே” என்று சிரித்து டோராவின் பொருளைத் திருடிக் கொண்டு ஓடியது.  அது அந்த சிறுமிகளின் விண்ணப்பத்திற்கு நரியின் வழியாக விதி சொன்ன பதிலாகத் தோன்றியது.  இந்த அழகுக் குழந்தைகளை வளர்க்க முடியாமல் போன, இதுவரைப் பார்த்திராத நிஷா தம்பதியரின் மீது எனக்கும் பரிதாபமாக இருந்தது. எதேச்சையாக திரும்பி என்னைப் பார்த்த சிறுமிகளில் ஒருத்தியிடம் இங்கே வா என சைகை செய்தேன்.  அவள் வந்து என் மடியில் உட்கார்து கொண்டாள்.

    அவளைப் பார்த்தவாறே, “இவர்களை இவளது உறவினர்கள் வந்து பெற்றுக்கொள்ளும் வரை எங்களுடன் வைத்துக்கொள்ள போலீஸ் அனுமதி கொடுத்துள்ளார்கள்” என்றாள் லீலா.

    “இதைத்தான் உன் கணவர் இப்பொழுது சொன்னாரா?”

    ஆமாம் என்று தலையாட்டிய லீலா, “நிஷாவுக்கு உறவுகள் யாரும் இல்லை, அதனால் நிஷாவின் கணவனது தம்பியைத் தொடர்பு கொண்டு செய்தி சொன்னாராம்.  அந்த தம்பி இந்தியாவில் இருந்து உடனே புறப்பட்டு வந்து குழந்தைகளைத் தன்னுடன் அழைத்துச் செல்வதாகச் சொன்னாராம்.  அந்த சின்னக் கிராமத்தில் இவர்கள் எதிகாலம் என்னவாகுமோ தெரியவில்லையே” என்றாள்.

    “என்ன இருந்தாலும் அப்பா அம்மா பார்த்துப் பார்த்து இவர்களை வளர்ப்பது போலாகுமா?” என்று உடைந்த குரலில் சொன்ன லீலா, திடீரென அந்த சிறுமியிடம் கைநீட்டி “பாவி, பாவி,  உங்களை எப்படி எல்லாம் வளர்க்க வேண்டும், படிக்க வைக்க வேண்டும் என்று கனவு கண்டாள் உன் அம்மா, இப்படி நட்டாற்றில் விட்டு விட்டுப் போனாளே அந்தப் பாவி,” என்று தலை தலையாய் அடித்துக் கொண்டு அழுதாள்.  அந்தக் குழந்தைக்கு எதுவும் புரியாமல் திரு திருவென விழித்து அழுது விடுவது போல முகம் மாறியது.

    நான் உடனே சட்டென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு டிவி முன் உட்காரவைத்து அதன் கவனத்தை திசை திருப்பிவிட்டு அங்கிருந்தே லீலாவைத்  திரும்பிப் பார்த்தேன். இப்பொழுது அவள் இந்தக் குழந்தைகளுக்காக, இவர்களது எதிர்காலத்தை எண்ணி அழுவது புரிந்தது.  இது போன்று அடுத்தவர்களின் குழந்தையின் எதிர்காலாத்தை எண்ணித் துடிக்க ஒரு பெண்ணால் அவள் தாயான பின்புதான்  முடியுமோ என்று தோன்றியது. இந்த நிலையில் லீலாவின் உடனிருப்பதுதான் அவளுக்கு நல்லது, இன்றிரவு இங்கேயே தங்கி விடலாம் எனத் தீர்மானித்தேன்.

    லீலாவின் இளைய மகன் சமயலறைக்கு ஓடி மேஜையடியில் உட்கார்ந்திருந்த அம்மாவின் முகத்தைப் பார்த்தான்.  பிறகு சமயலறையில் உள்ள மேடையைப் பார்த்தான், பிறகு மீண்டும் திரும்பி அம்மாவைப் பார்த்தான்.  அவனுக்கு என்னவோ வேண்டும் ஆனால் அழும் அம்மாவிடம் கேட்க தயக்கம் எனப் புலப்பட்டது.  அவனிடம் சென்று தோளைத் தட்டி “ஹாய் ஹாண்ட்ஸம்,  என்ன வேண்டும் உனக்கு?” என்றேன்.

    “மேடி, சாக்லேட் டோநட் கொடு”, என்று ஒரு பெட்டியைக் காட்டிக்  கேட்டான். அதிலிருந்து ஒரு  டோநட்டை அவனிடம் எடுத்துக் கொடுத்துவிட்டு, தொலைக்கட்சியில் மூழ்கிவிட்ட மற்ற குழந்தைகளுக்கும் ஆளுக்கு ஒன்று கொடுத்துவிட்டுத் திரும்பினேன்.  இளையவன் டோநட் சாப்பிட்ட வண்ணம் அம்மாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.  அவனைத் தூக்கி மேஜையில் லீலாவின் அருகில் உட்கார வைத்தேன்.  இவனைப் பார்த்தாவது சமாதானம் அடைவாள் இல்லையா?  சப்புக் கொட்டியவாறு டோநட் சாப்பிட்டுக் கொண்டு, அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டுத் தலையைத் தடவிக் கொடுத்த மகனை அமைதியாக சிறிது நேரம் பார்த்தாள் லீலா. பிறகு மீண்டும் பெரிதாக விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள்.

    இப்பொழுது அந்த அழுகையில் ஒரு அச்சமும் கலந்து இருந்தது.  நிஷாவின் குழந்தைகள் இடத்தில் இப்பொழுது தன் குழந்தைகளை வைத்துப் பார்ப்பாளோ? தானும் தன்  கணவனும் திடீரென ஒருநாள் இதுபோலவே சாலை விபத்தில் இறந்துவிட்டால் தன்  மகன்களின் கதி என்ன ஆகும்? அவர்கள் அனாதைகளானால் அவர்களது எதிர்காலம் என்ன ஆகும்? என்ற அவளது அச்சம் அவள் அழுகையின் ஊடே வெளிப்படுவதாகத் தோன்றியது, அவள் இப்பொழுது அழுவது அவளது மகன்களுக்காகவோ?

    Share
  • நீ என்றுமே என் மகன்தான்

     

    தேமொழி

    மணி மாலை ஐந்து மணியை நெருங்கியது.  நார்மா அன்று வேலை செய்தவரை போதுமென்ற முடிவுடன் அனைத்தையும் ஒழுங்கு செய்துவிட்டு, கணினியை நிறுத்திவிட்டு, கைப்பையை எடுத்துக் கொண்டு அறையை விட்டுக் கிளம்பினாள்.  “பை, பை, நார்மா, நாளை பார்க்கலாம்,” என்று புன்னகைத்தாள் உடன் பணி செய்யும் ரோஸ்.  மெலிதாக வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்  தலையை அசைத்துவிட்டு வெளியே வந்தாள் நார்மா.  குளிரூட்டிய கட்டிடத்தில் இருந்து வெளியே வந்ததும் கோடை வெயில் தகித்தது.  கார் நிறுத்துமிடத்தை நோக்கி நடந்தாள்.  மகளின் கல்விக்காக கடன் வாங்குவதற்கு வங்கியில் அவள் செய்த விண்ணப்பத்திற்கு நாளை முடிவு தெரிந்துவிடும் என நினைத்துக் கொண்டாள்.  அவள் கணவன் கார்லின் நம்பிக்கைத்ரோகம் இந்த இரண்டு மாதங்களில் அவள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது.

    காரை நெருங்கிய நார்மா கதவைத் திறந்தவண்ணம் வழக்கம் போல பிள்ளைகளைப் பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீடு செல்லத் தீர்மானித்தாள்.   அவளது வண்டி கிளம்பிய பொழுது  கைபேசி ஒலித்தது , அவளது வழக்கறிஞர் வில்லியம் அழைக்கிறான் எனத் தெரிந்தது. வண்டியை நிறுத்திவிட்டு, கதவின் கண்ணாடிகளை காற்று நன்கு வரும்படி இறக்கிவிட்டு நார்மா அவனுடன் பேசினாள்.  வில்லியமின் குரலின் தொனியில்  இருந்து அவளால் அவன் உணர்சிகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.  அவன் இயந்திரம் போலப் பேசினான்.

    “நார்மா, டி. என்.ஏ மரபணு சோதனையின் முடிவுகள் வந்துவிட்டன.  அதன்படி உன் மகன் டேனியல் உன் கணவன் கார்லின் மகன் அல்ல.”

    நார்மாவிற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை.  அதைத்தொடர்ந்து வில்லியம் சொன்னதன் பொருள் அவளுக்கு சுத்தமாக விளங்கவே இல்லை.

    “நார்மா, டேனியல் உன் மகனும் அல்ல.”  

    நார்மா பேச்சிழந்தாள், மறுமுனையில் அமைதியைக் கண்டு வில்லியம், “நார்மா, நார்மா” என்று பதறினான்.

    “சொல்லு வில்லியம், நீ என்ன சொல்கிறாய் என்று எனக்குப் புரியவில்லை” என்றாள் நார்மா.

    “நீ எங்கிருக்கிறாய் நார்மா?”

    “வேலையில்தான், இப்பொழுதுதான் காரைக் கிளப்பினேன், பிள்ளைகளைப் பள்ளியில் இருந்து அழைத்து வரப் போகிறேன்.”

    “வேண்டாம், நீ வண்டியை ஒட்டாதே.  அங்கேயே இரு, நான் வந்து உன்னையும் பிள்ளைகளையும்  வீட்டுக்கு அழைத்துப் போகிறேன், உன்னுடன் பேச வேண்டும்.  குழந்தை பிறந்த பொழுது மாறி இருக்க வேண்டும்.  ஒரு கால் மணி நேரத்தில் வந்து விடுகிறேன். அங்கேயே இரு,” என்று அவள் மறுத்துப் பேச வாய்ப்பளிக்காமல் தொலை பேசி இணைப்பைத்  துண்டித்தான் வில்லியம்.

    அவன் கடைசியாகச் சொன்னதன் பொருள் இப்பொழுதுதான் நார்மாவிற்கு புரிந்தது.  டேனியல் அவள் மகன் இல்லை என்றா சொன்னான்?  ஐயோ, அதை நினைத்தால் அவள் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது.  டேனியலின் துறுதுறுப்பான முகம் கண் முன் வந்தது.  கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தும் அதற்கிடையே டேனியலின் புன்னகை நிறைந்த முகம் தெரிந்தது.  இது போன்ற செய்தியைக் கேட்கும் நிலைக்குத் தன்னைத் தள்ளிய கணவன் கார்ல் மீது கோபம் கோபமாக வந்தது.

    கார்ல், நகரில் உள்ள ‘சீமென்ஸ்’ என்னும் ஜெர்மன் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தான். மின்னணுவியல் கருவிகளின் வர்த்தகப் பிரிவில் அவனுக்கு வேலை என்பதால் பெரும்பாலும் ஜெர்மனியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கும் பிற நாடுகளுக்கும் சென்று வருவது கார்லின் பொறுப்பாக இருந்தது.  மாதத்தில் பாதிக்கும் மேலான நாட்கள் வேலை காரணமாக பயணம் செய்வதிலேயே கழிந்துவிடும். அவனது முன்னோர்கள் ஜெர்மனியில் இருந்து வந்து குடியேறியவர்கள்.  அதனால் கார்லுக்கு ஜெர்மன் மொழியில் நன்கு பேசவும் தெரியும் என்பது அவன் வேலையில் அதிவேகமாக வளர உதவியிருந்தது. நார்மா, நகரில் உள்ள கிறிஸ்டோஃபர் நியூ போர்ட் பல்கலைக் கழகத்தில் நிர்வாகப் பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தாள்.

    அவர்களுக்கு திருமணமாகி இருபது ஆண்டுகள் உருண்டோடி விட்டது. பிள்ளைகளில் பெரியவள் மகள் டெப்ரா ஒரு தனியார் பள்ளியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தாள்.  மகன் டேனியல் மகளை விட நான்கு வயது இளையவன்.   அவனும் டெப்ரா படிக்கும் அதே தனியார் பள்ளியில் நடுநிலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.  நார்மாவிற்கு தனது பிள்ளைகளை புகழ் பெற்ற ‘ஐவி லீக்’ கல்லூரிகளில் படிக்க அனுப்ப வேண்டும் என்று விருப்பம்.  கார்லின் ஆண்டு வருமானம் ஆறு இலக்கங்களில் இருந்ததால் அவளது கனவினை செயல்படுத்த முடிந்தது.  புகழ் பெற்ற பல்கலைக் கழங்களில் படிக்க வைப்பதற்கு தயார்ப் படுத்தும் விதமாக பிள்ளைகளை நல்ல தனியார் பள்ளியில் சேர்க்க முடிந்தது. இதோ, அடுத்த ஆண்டு டெப்ராவிற்கு கார்நெல் பல்கலை கழகத்தில் சேர அனுமதி கிடைத்துவிட்டது.  எல்லாம் அவள் நினைத்த வண்ணம், திட்டமிட்ட வண்ணம் வாழ்க்கையில் நடப்பதாக நினைத்த பொழுது எதிர்பாராத அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வும் நடந்தது.

    எதிர்பாராதது என்று சொல்வது சரியாக இருக்காது.  அவளுக்கு கார்லின் நடவடிக்கையில் மாறுதல் தெரிந்தது.  சென்ற ஆண்டு பதவி உயர்விற்குப் பின்பு அவனது வெளிநாட்டுப் பயணங்கள் அதிகரித்தது.  வீட்டிற்கு வருவது குறைந்தது.  இருந்த நாட்களிலும் முன்பு போல பிள்ளைகளை அழைத்துக் கொண்டு புஷ் கார்டன், கொலோனியல் வில்லியம்ஸ்பர்க், விர்ஜீனியா பீச் என ஊர் சுற்றுவதைக் குறைத்துக் கொண்டான்.  திரைப்படம், உறவினர் வீடு, விருந்துகள் எனக் குடும்பத்துடன் எங்கும் செல்வதில் ஆர்வம் காட்டவில்லை.  இதைப்பற்றி நார்மா ஏதேனும் கேட்டால், தனது பதவி உயர்விற்குப் பிறகு பணிச் சுமை அதிகரித்து விட்டது, நிற்கவும் நேரம் இல்லை என்பது போன்ற பதில் வரும்.  அத்துடன் அவள் பொறுப்பாகக் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டு, பிள்ளைகளையும் வளர்த்து வருவது அவனுக்கு வேலையில் கவனம் செலுத்த உதவியாக இருக்கிறது என்று நன்றி சொல்லுவான்.  மேலும் இதுபோன்று கடுமையாக உழைத்தால் விரைவில் ஜெர்மனியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நிர்வாகத் துறையில் பணி செய்ய நல்ல வாய்ப்பும் இருக்கிறது என்பான்.

    அவளுக்கு அதில் அவ்வளவாக விருப்பம் இல்லாவிட்டாலும், அவன் வீட்டில் இருக்கும் ஓரிரு நாட்களில் எப்பொழுதோ நடக்கப் போவதைப் பற்றி விவாதிக்க விரும்பியதில்லை.  அந்த சமயம் வரும் பொழுது அதைப்பற்றி கவலைப் பட்டுக் கொள்ளலாம் என அமைதியாக இருந்து விடுவாள்.  டெப்ராவின் பள்ளி நாட்கள் முடிய இரண்டு மாதங்கள் இருக்கும் பொழுது நார்மாவிடம் இருந்து திருமணமுறிவு கேட்டு கார்ல் நீதிமன்றம் வழியாக அனுப்பிய அறிவிப்பு கிடைத்தது. ‘அவளுடன் இனி வாழ விருப்பம் இல்லை’ என்பது அவன் கூறிய காரணம்.  வாழ்வின் மத்திய வயதில் சிலருக்கு வரும் ‘மிட் லைஃப்  கிரைசிஸ்’ என்னும் பைத்தியக்காரத்தனம் இவனுக்கும் வந்துவிட்டது போலிருக்கிறது என்று நார்மா எண்ணினாள். கடைசியாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கு வீடு வந்து சென்றவன் அதுவரை மீண்டும் வீட்டிற்கு வராத காரணமும் புரிந்தது. இந்த முறை அவன் வீட்டிற்கு வந்து நான்கு மாதங்கள் போலாகிறது.

    முதலில் இதை அவள் பிள்ளைகளிடம் சொல்லி அவர்களது மன அமைதியைக் குலைக்க விரும்பவில்லை. கார்லைத் தொடர்பு கொள்ள அவள் செய்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை.  அவளது தொலை பேசி அழைப்பு, மின்னஞ்சல் என அனைத்தையும் தவிர்த்தான்.  இனி நீதி மன்றம் வழியேதான் அவர்கள் தொடர்பு என்பது போலிருந்தது அவனது நடவடிக்கை.  வேறு வழியின்றி கார்லுடன் பணியாற்றும், அவனுடன் பெரும்பாலான பயணங்களில் துணையிருக்கும் ஆண்ட்ரூவைத் தொடர்பு கொண்டாள்.  அவன் ஒருவாறு மென்று விழுங்கி சொன்ன செய்தி மேலும் அதிர்ச்சி அளித்தது.  கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே கார்லுக்கு ஜெர்மனியில் ஒரு தோழி இருப்பதாகத் தெரிந்தது.  அதை ஆண்ட்ரூ சாதாரண நட்பு என நினைத்ததாகச் சொன்னான்.  ஆனால், கார்ல் இப்பொழுது ஜெர்மனியில் உள்ள தலைமையகத்தில் வேறு வேலை ஒன்றைத் தேடிக்கொண்டு இப்பொழுது அந்தப் பெண்ணுடனேயே வசித்து வருவதாகச் சொன்னான்.  அவனுக்கு மீண்டும் அமெரிக்காவிற்கு வரும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை, திருமண முறிவிற்குப் பிறகு அந்தப் பெண்ணையே மணக்க எண்ணியிருக்கலாம் எனவும் சொன்னான்.

    இந்தப் பிரச்சனைக்கு வேறு முடிவில்லை என்பது நார்மாவிற்கு புரிந்தது. பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு தனது பள்ளிநாட்களில் உடன் படித்த, இப்பொழுது திருமணமுறிவு வழக்குகளை கையாள்வதில் சிறந்தவன் எனப் பெயர் வாங்கிய வில்லியமைத் தொடர்பு கொண்டாள்.  தானும் திருமண முறிவிற்கு சம்மதிப்பதாகவும், குழந்தைகளை வளர்ப்பதற்கு ஆதரவாக தந்தை என்ற முறையில் கார்லிடம் இருந்து மாதா மாதம் பணம் ஒழுங்காக வருவதற்கு ஏற்பாடு செய்வதை மட்டுமே அவள் விரும்புவதாகத் தெரிவித்தாள்.  கார்ல் மீது ஏற்பட்ட வெறுப்பில், அவன் செய்த நம்பிக்கைத் துரோகத்தில் கொதித்துப் போன நார்மாவிற்கு கார்லிடம் உதவித் தொகை எதிர்பார்ப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை.  ஆனால் டெப்ராவின் கல்லூரிக்காகும் கல்விச் செலவையும், டேனியல்லின் தனியார்ப் பள்ளி கல்வியையையும் அவளது வருமானத்தில் மட்டுமே சமாளிக்க முடியாது.  அத்துடன் தந்தையின் கடமையில் இருந்து கார்ல் எளிதாகத் தப்பி விடுவதையும் அவள் விரும்பவில்லை.  பிள்ளைகளின் நல்ல எதிர்காலத்திற்கு அவள் இதைச் செய்தே ஆக வேண்டும்.

    வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது.  நீதிமன்றத்திற்கு வந்த கார்ல் நீதிபதியிடம் மகளுக்கு பதினெட்டு வயது தாண்டிவிட்டதால் அவளது செலவிற்கு இனி தான் பொறுப்பேற்க முடியாது என்று தெரிவித்தான்.  நார்மாவின் வழக்கறிஞர் வில்லியம் நார்மாவின் காதில் மெதுவாக, “இதுதான் கார்லின் திட்டம் போலிருக்கிறது.  இது போன்று தவிர்ப்பதற்காகவே இதுவரைப் பொறுத்திருந்து, மகளுக்கு பதினெட்டு வயது தாண்டியதும் அத்துடன் கையைக் கழுவிக் கொள்வதற்கு திட்டமிட்டு, இப்பொழுது திருமண முறிவிற்கு கார்ல் விண்ணப்பித்திருக்கிறான்,” என்றான்.  நார்மா பல்லைக் கடித்து கோபத்தை அடக்கிக் கொண்டாள். ஆனால் கார்ல் அடுத்து சொன்னதை நார்மாவும் வில்லியமும் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் அதிர்ச்சி அடைந்தார்கள்.

    கார்ல் மிக அமைதியாக நீதிபதியிடம், டேனியல் தனக்குப் பிறந்தவன் இல்லை.  தனது சாயல் அவனிடம் சிறிதும் இல்லை.  டேனியல் தன் மகன்தானா என்றே சந்தேகமாக இருப்பதால் அவனை வளர்ப்பதற்கு தன்னால் உதவித் தொகை தர இயலாது என்றான்.  அத்துடன் நார்மா தனக்கு துரோகம் செய்திருக்கிறாள் என்ற அடிப்படையில்தான் அவனுக்கு திருமணமுறிவு பெறவேண்டும் என்ற எண்ணமே எழுந்ததாகவும் சொன்னான். நார்மா தன் மேல் விழுந்த பழியை எண்ணிக் கொதித்துப் போனாள். சாடாரென இருக்கையை விட்டு எழுந்தவளை வில்லியம் கையைப் பிடித்திழுத்து இருக்கையில் அமர்த்தினான்.  அவள் உதடு துடித்தது.  அவள் கையை அழுத்தி அமைதியாக இரு என்று சைகை செய்தான்.   கார்லின் அவதூறுக்குப் பதறிய நார்மாவை நீதிபதி திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் கார்லைத் திரும்பிப் பார்த்தார்.  சிறிது மௌனத்திற்குப் பிறகு, கார்லிடம் அவன் என்ன சொல்கிறான் என்று புரிந்துதான் பேசுகிறானா என்று கேட்டார்.  கார்ல் அழுத்தம் திருத்தமாக, தெளிவாக தான் புரிந்துதான் பேசுவதாகக் கூறினான். நீதிபதி இப்பொழுது வில்லியமைத் திரும்பிப் பார்த்தார்.  இதற்குள் அடுத்து செய்ய வேண்டியதை முடிவு செய்திருந்த வில்லியம், டி.என்.ஏ. மரபணுச் சோதனை செய்வதற்கு நார்மா தயாராக இருப்பதைத் தெரிந்து கொண்டு நீதிபதியிடம் அவள் விருப்பத்தைத் தெரிவித்தான்.  பரிசோதனை முடிவு வரும் வரை வழக்கும் தள்ளி வைக்கப் பட்டது.

    சோர்ந்து போய் வீடு வந்த நார்மாவிற்கு இதைப் பிள்ளைகளிடம் எப்படி சொல்வது என்றே தெரியவில்லை.  அவள் ஒரு வழியாகச் சொல்லி முடித்ததும், பிள்ளைகள் இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.  டேனியல் கண்கள் கலங்கி அழுதவாறு தன் அறைக்கு ஓடிவிட்டான்.  பதினான்கு வயது சிறுவனுக்கு இதைவிட அதிர்ச்சி இருக்க முடியாது.  பிள்ளைகளைச் சமாதனப் படுத்தவோ, மற்ற வேலைகளைச் செய்வோ திறனின்றி நார்மா படுக்கையில் சாய்ந்தாள்.  அதிர்ச்சியில் அழ முடியாமல் அவள் மனம் வெறுமையாக இருந்தது.  தொடர்ந்து சில நாட்கள் நார்மாவும் பிள்ளைகளும் இயந்திரம் போல இயங்கி வாழ்க்கையை ஓட்டினார்கள்.

    இப்பொழுது வில்லியமின் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு,  அவளுக்குத் தெரியாமலே டேனியல் தனது மகன்தானா என்று சந்தேகப்பட்டு கார்ல் டி.என்.ஏ. மரபணுச் சோதனை செய்திருப்பான் போலிருக்கிறது என்று நார்மாவிற்கு தோன்றியது.  அதுதான் அவ்வளவு ஆணித்திரமாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருக்கிறான் போலிருக்கிறது.  ஆனால் டேனியல் அவள் மகனும் இல்லை என்ற இந்த மரபணுச் சோதனையின் முடிவை அவனும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.  

    கடந்து முடிந்தவைகளைப் பற்றிய சிந்தனையில் இருந்த நார்மாவை கார் ஹாரனின் ஒலி நினைவுலகதிற்கு கொண்டு வந்தது.  அருகில் வந்து நின்ற வில்லியமின் வண்டியின் பின் இருக்கைகளில் டெப்ராவும், டேனியலும் அமர்ந்திருந்தார்கள்.  அவர்களை அவனே அழைத்து வந்துவிட்டான்.  தன் காரின் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு, கதவையும் பூட்டிவிட்டு நார்மா வில்லியமிற்கு அருகில் வந்து உட்கார்ந்தாள்.  பிள்ளைகளைத் திரும்பிப் பார்த்து புன்னகைப்பதைத் தவிர்த்தாள்.  அது அவளது அழுத முகத்தை அவர்களிடம் இருந்து மறைக்க அவள் செய்த முயற்சி.  ஆனால் அவர்கள் அவள் முகத்தையே பார்ப்பது அவளுக்குப் புரிந்தது.  வில்லியமின் காரில் பீட்ஸா  மணம் வந்தது.  அவனே அவளது நிலையை உணர்ந்து கொண்டு, அவர்களுக்கு இரவு உணவும் வழியில் வாங்கி வந்திருந்தான்.  அவனுக்கு எப்படி நன்றி சொல்வதெனப் புரியாமல் கலங்கிய கண்களுடன் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் நார்மா.  அவன் அமைதியாக அவள் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்துவிட்டுக் காரைக் கிளப்பினான்.

    அன்றிரவு பிள்ளைகளின் பொறுமையை சோதிக்காமல், நார்மா ஒரு வழியாக டி.என்.ஏ. மரபணு சோதனை முடிவுகளை  விசும்பிக் கொண்டே மெதுவாகத் தெரிவித்தாள்.  டேனியலின் முகத்தைவிட்டு அவள் கண்களை நார்மாவால் அகற்ற முடியவில்லை.  செய்தியைக் கேட்டதும் அவள் மடியில் முகம் புதைத்து டேனியல் அழுதான்.  நார்மாவும் அவனுடன் சேர்ந்து அழுதாள்.  டெப்ரா அருகில் வந்து அமர்ந்து டேனியலின் முதுகை வருடிக் கொடுத்துக் கொண்டே இறுகிப் போன குரலில், “இப்பொழுது என்ன செய்வது வில்லியம்?” என்றாள்.

    “உன் தந்தையை இனி குழந்தை வளர்ப்பில் பங்கேற்க சொல்லி உதவித் தொகை கேட்டுக் கட்டாயப் படுத்த முடியாது …” என்று தொடங்கிய வில்லியமை டெப்ரா இடைமறித்து, “அவர் பணம் எங்களுக்குத் தேவையில்லை, எங்களால் எங்கள் சக்திக்கு ஏற்றவாறு வாழமுடியும்,” என்று நறுக்கெனப் பதில் சொன்னாள்.

    “டேனியல் என் தம்பி இல்லை என்றால், அவன் யார்? அவன் பெற்றோர்கள் யார்? பிறந்த பொழுது குழந்தை மாறியிருக்கலாம் என்றால் என் தம்பியாக இருப்பவன் எங்கே இருப்பான்?” என்றாள்.

    “அதை டேனியல் பிறந்த மருத்துவ மனையில் இருந்து ஆரம்பித்து துப்பு துலக்க வேண்டும், அந்த சமயம் பிறந்த குழந்தைகளை மரபணு சோதனைக்கு உட்படுத்தி தெரிந்து கொள்ளலாம், நான் ஏற்பாடு செய்கிறேன்,” என்று சொல்லிவிட்டு வில்லியம் விடை பெற்றுக் கொண்டான்.  நார்மாவின் காரையும் தன்  நண்பன் உதவியுடன் அவள் வீட்டிற்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டுப் போனான்.

    அவன் சொன்னபடியே அடுத்த நாளே மருத்துவமனை நிர்வாகத்தினரைச் சந்திக்க ஏற்பாடு செய்தான்.  மருத்துவமனை குழந்தை மாறியிருக்கும் என்ற செய்தியை முதலில் வன்மையாக, ஆணித்திரமாக மறுத்தது.  பின்பு நீதிமன்ற வழக்கின் படி செய்த மரபணு சோதனை என்பதினால் தயக்கத்துடன் தகவல்களை ஆராய அனுமதி அளித்தது.  டேனியல் பிறந்த அன்றே பிறந்த, ராபர்ட் என்ற சிறுவனின் தகவல்கள் மேலும் பொருந்தி அவனைத்  தேடிச் சென்றார்கள்.  ராபர்ட்டின் குடும்பம் அருகில் உள்ள யார்க் டவுனில் தான் வசித்து வந்தனர்.  சந்தேகம் என்ற ஒன்று தோன்றிவிடவே அதைத் தீர்க்க அவர்களும் தயாரானார்கள்.  மீண்டும் மரபணு சோதனைகள், மீண்டும் அவற்றின் முடிவுகள்.  இந்த முறை ராபர்ட்தான் நார்மாவின் குழந்தை என்றும், டேனியல் ராபர்ட் இடத்தில் இருந்திருக்க வேண்டியவன் என்பதும் தெளிவானது.  சிறுவர்கள் இருவருமே முடிவைக் கேட்டு அலறினார்கள்.

    “அம்மா, அம்மா என்னை அனுப்பிவிடாதீர்கள்” என்று ஒருபுறம் அழுதான் டேனியல்.  “அம்மா, நான் உங்களுடன்தான் இருப்பேன், நான் அவர்கள் வீட்டிற்கு போக மாட்டேன்,” என்று ராபர்ட்டும் தன் அம்மாவின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.  இரண்டு குடும்பங்களும் இரண்டு சிறுவர்களையுமே  தங்களுடன் வைத்துக் கொள்ளவே  விரும்பினார்கள். ஆனால் முடிவில் சிறுவர்களின் முடிவுப்படி அவரவர் வளந்த இடத்திலேயே அவர்கள் தொடர்ந்து வளரட்டும், அவ்வபொழுது பெற்றோர்கள் வந்து மற்ற குழந்தையைப் பார்த்து செல்லலாம் என்ற முடிவுக்கு ஒப்புக் கொண்டார்கள்.

    “அம்மா, நீங்கள் என்னை அனுப்பிவிடுவிடுவீர்களோ என்று பயந்தேன்,” என்று நார்மாவைக் கட்டிக் கொண்டான் டேனியல்.  நார்மா அவன் தலையைக் கோதியபடி, “நீ என்றுமே என் மகன்தான் டேனியல், நம்மைப் பொருத்தவரை நான் உன் அம்மா, நீ என்றும் என் அன்பு மகன்தான்” என்றாள்.  “நீ என்றுமே ….என்றுமே என் தம்பிதான் டேனியல், உண்மை என்ன என்று தெரிந்து கொண்டோம், அவ்வளவுதான்” என்று டேனியலை அணைத்துக் கொண்டாள் டெப்ரா.  
    __________________________________

    Share