ஆங்கிலத்தின் பரிணாம வளர்ச்சி

0

 

தேமொழி

 

னைத்து மொழிகளும் காலப் போக்கில் மாறுதலடையும். அவ்வாறு மாறுதலடையும் பொழுது, ஆதி காலத்தில் பேசப்பட்ட மொழிக்கும் தற்காலத்தில் பேசப்படும் அதே மொழிக்கும் இடையே அதிக வேறுபாடுகள் இருக்கும். இவ்வாறு மிகக் குறைந்த ஒற்றுமை உள்ள, காலத்தால் முந்திய படைப்புகளை அறிஞர்கள் பதம் பிரித்து பொருள் சொன்னால்தான் நமக்கே நம் மொழியைப் புரிந்துகொள்ள முடியும் என்ற நிலை ஏற்படுகிறது. நம் தமிழ் மொழிக்கு மட்டுமல்ல, ஆங்கிலத்திற்கும் இதே விதி பொருந்தும்.

 

English - Evolution

 

ஆங்கிலத்தின் பரிணாம வளர்ச்சியை விளக்க முற்பட்டு, அதற்குதவியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இரு வசனங்களுக்கும் இரண்டு வெவ்வேறு காட்சிகளைக் கற்பனை செய்வோம். அவற்றை கூறுபவர்கள் யாராக இருக்கும், அவர்களுடைய நடை, உடை, பாவனை, கலாச்சாரம் எப்படி இருக்கும் என்று நம் கற்பனையை விரிவாக்குவோம்.

காட்சி ஒன்று:  “They gave us a hearty welcome”

காட்சி இரண்டு:  “They gave us a cordial reception”

அந்த கற்பனையில் எழும் காட்சிகள் எவ்வாறு வேறுபட்டு காண்கிறது என்பதற்கு ஆங்கில மொழியில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி மாறுதல்கள் சான்றாக அமையும். வார்த்தைகளை உபயோகப்படுத்திய விதத்தை வைத்து, அவற்றைப் பேசியவர்களின் சமூக சூழ்நிலையை, உருவத்தை, உடைகளை, உணர்வுகளைப்பற்றி உங்களுக்கு ஓர் கற்பனை உருவாகி இருக்கலாம். அதற்கு அந்த வார்த்தைகள் உதவி செய்திருக்கும். இதை மேலும் ஆங்கிலத்தின் பரிணாம வளர்ச்சியின் மூலம் ஏன் என்று நாம் தெளிவாகப் புரிந்து கொள்வோம்.

 

பொது ஆண்டு 400 இல் (கி.பி. 400) இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளின் பகுதிகள் ரோமானியர்களால் ஆட்சி செய்யப்பட்டது. இதனால் விளைந்த ஒரு நன்மை என்னவெனில்; இந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு ஐரோப்பாவின் வடபகுதியில் வாழ்ந்த, நாகரீகமற்ற இனமாகக் கருதப்பட்ட சாக்ஸ்சன் (Saxons) என்ற இனந்தினரிடம் இருந்து பாதுகாப்பு கிடைத்தது. சாக்ஸ்சன் இனத்தவர் இன்றைய ஜெர்மனி நாட்டுப் பகுதியில் வசித்த பழங்குடி இனத்தவர்.

ரோமானியப் பேரரசு வீழ்ச்சியடைய ஆரம்பித்த பொழுது, அவர்கள் இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் பகுதிகளை ஆள்வதைக் கைவிட்டனர், பின் வாங்கினர். இதன் விளைவாக ஜெர்மானியர், ஆங்கில்ஸ், சாக்ஸ்சன், ஃப்ரீஷியன்(Frisian) போன்ற வட ஐரோப்பிய இனத்தைச் சார்ந்த மக்கள் இங்கிலாந்து தீவுகளை நோக்கிப் படையெடுத்தனர். அங்கிருந்தவர்களை வீழ்த்தி அத்தீவுகளில் தங்கள் அரசை அமைத்தனர்.

பிறகு பலநூற்றாண்டுகளாக இவர்கள் அந்த மண்ணில் ஆட்சி செலுத்தினர். இவர்களது ஜெர்மானிக் மொழியான ‘ஆங்கிலோ-சாக்ஸ்சன்’ (Anglo-Saxon) என அழைக்கப்பட்ட மொழி பரவலாக நடைமுறை வாழ்க்கையில் உபயோகப்படுத்தப்பட்டது. இந்த மொழியை மொழியியல் வல்லுனர்கள் “பழமையான ஆங்கிலம்” (Old English) என்று குறிப்பிடுவார்கள்.

தற்கால ஆங்கிலம் பேசுபவர்களுக்கு ‘ஓல்ட் இங்கிலீஷ்’ என்பது முற்றிலும் வேறுபட்ட மொழியாகத் தோன்றக்கூடும். ஆனால் உன்னிப்பாக ஆராய்ந்தால் நமக்கு நன்கு அறிமுகமான சில வார்த்தைகளும் ஆங்காங்கே புலப்படும். உதாரணமாக, படத்தில் காண்பது போல, ஓல்ட் இங்கிலீஷ்ஷில் சில சொற்களின் எழுத்துக்கோர்வையை தற்கால உச்சரிப்பிற்கு ஏற்றவாறு மாற்றினால் பொதுவான வழக்கத்தில் உள்ள சில ஆங்கில சொற்கள் தெரிய வரும்.

 

Old Engli

 

வ்வாறு சில நூற்றாண்டுகள் அந்நாட்டு மக்கள் பழைய ஆங்கில வழக்கில் பேசி வந்தார்கள். ஏழாம் நூற்றாண்டில் வைக்கிங்களின் (Vikings) படையெடுப்பு நிகழ்ந்தது. இவர்கள் நார்ஸ்மென் (Norsemen) என்றும் அழைக்கப் படுவார்கள். அப்போரின் காரணமாக விளைந்த ஒப்பந்தத்தின்படி போர் ஒரு முடிவக்கு வந்தது. உடன்படிக்கையின் விளைவாக இங்கிலாந்து தீவுகள் இரு சம பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. தென்பகுதி சாக்ஸ்சன்களுக்கும் வடபகுதி டேன்ஸ் (Danes) மக்களுக்கும் என முடிவானது. இந்த டேன்ஸ் இனத்தினர் தற்கால டென்மார்க் (Denmark) பகுதியில் வசித்து வந்த இனத்தவர். இவர்கள் ‘ஓல்ட் நார்ஸ்’ (Old Norse) என்ற மொழியினைப் பேசி வந்தார்கள். ஓல்ட் நார்ஸ் மொழி வடஜெர்மானிய மொழி பிரிவிற்குள் வகைப் படுத்தப்படுகிறது.

சாக்ஸ்சன் இனத்தவரும், டேன்ஸ் இனத்தவரும் காலப்போக்கில் கலந்துறவாடிய பிறகு, அவர்களது ஓல்ட் இங்கிலீஷ் மொழியும் ஓல்ட் நார்ஸ் மொழியும் இணைந்துவிட்டன. பல ஓல்ட் நார்ஸ் வார்த்தைகள், உதாரணமாக, Freckle, Leg, Skin, Root, Want போன்ற வார்த்தைகள் இன்றும் ஆங்கில மொழியின் உபயோகத்தில் இருக்கின்றன.

 

முந்நூறு ஆண்டுகள் கழித்து, பொது ஆண்டு 1066 இல் இங்கிலாந்து தீவுகளில் மீண்டும் போர் நிகழ்ந்தது. இம்முறை ‘நார்மன்’ (Normans) இன மக்கள் போரில் வெற்றி பெற்றார்கள். இந்தப் போர் ‘நார்மன் கான்குவெஸ்ட்’ (Norman conquest of England) என்று வரலாற்றில் குறிப்பிடப் படுகிறது. நார்மண்டியின் இரண்டாம் வில்லியம், இங்கிலாந்தின் இரண்டாம் ஹெரால்ட் மீது நிகழ்த்திய வாரிசுரிமைப் போரில் இங்கிலாந்து மன்னர் வீழ்த்தப் பட்டு ஆட்சி கைமாறியது.

இந்த நார்மன் இனத்தவரும் வைக்கிங் இனத்தவர்கள்தான். ஆனால் காலப்போக்கில் தங்கள் வைக்கிங் அடையாளங்களையும், கலாச்சாரத்தையும், மொழியையும் கைவிட்டு ஃபிரான்ஸ் நாட்டில் வசித்தவர்கள். பின்னர் ஃபிரான்ஸ் மக்களின் கலாச்சாரத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டவர்கள். நார்மன் கான்குவெஸ்ட் போருக்குப் பிறகு மூன்று நூற்றாண்டுகள் இங்கிலாந்து நாடு ஃபிரெஞ்ச் மன்னர்களின் கட்டுபாட்டிற்கு கீழ் வந்தது. ஃபிரெஞ்ச் மொழியும் இங்கிலாந்தின் ஆட்சி மொழி நிலைக்கு உயர்த்தப்பட்டது.

இதனால் இங்கிலாந்தில் சமூக உயர்வு தாழ்வு நிலை ஏற்பட்டது. ஃபிரெஞ்ச் மொழி பேசும் அரசகுலம், பிரபுக்கள் போன்ற உயர்குல ஆட்சியாளர்கள் என்று ஒரு பிரிவும்; ஓல்ட் இங்கிலீஷ் பேசும், உழவுத் தொழில் புரியும் வேளாண் குடிமக்கள் என மற்றொரு பிரிவும் தோன்றியது. ஃபிரெஞ்ச் ஆட்சியில் கத்தோலிக்க குருமார்கள் இங்கிலாந்திற்கு வரவழைக்கப் பட்டு ஆதரிக்கபட்டர்கள். இந்தக் கத்தோலிக்க குருமார்கள் தங்கள் பங்கிற்கு லத்தீன் மொழியை இங்கிலாந்தில் நுழைத்தார்கள்.

இது போன்ற பல மொழிகளின் கலப்பின் காரணமாக ஆங்கிலம் தன் தன்மையை மாற்றி வளைந்து கொடுத்து, பிறமொழிச் சொற்களையும் காலத்திற்கேற்றவாறு தன்னகத்தே இணைத்துக் கொண்டு வளர்ந்து செழித்தது. ஆங்கிலத்தின் ஆயிரக்கணக்கான புதிய சொற்கள்; அரசாங்கம், சட்டம், பெருமை மிகு உயர்குடி மக்களின் பிரபுத்துவம் (aristocracy) போன்றவற்றைக் குறிக்கும் சொற்கள், ஃபிரெஞ்ச் மற்றும் லத்தீன் மொழிகளில் இருந்து எடுத்து கையாளப்பட்டன.

இந்த மொழிக்கலப்பின் காரணமாக ஆங்கிலத்தில் தற்காலத்தில் பயன் படுத்தப்படும் அந்நிய மொழிச் சொற்களுக்கான உதாரணங்கள்: Council, Marriage, Damage, Sovereign, Govern, Parliament ஆகியவை. இவ்வாறு மொழி விரிவடைந்ததும், ஆங்கில மொழி பேசும் மக்கள் தங்களை உயர்நிலையில் உள்ளவர்களாக காட்டிக்கொள்ள விரும்பி ஓல்ட் இங்கிலீஷ் சொற்களைத் தவிர்த்தார்கள். இதனால் உழைக்கும் வர்கத்தில் இருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொண்டார்கள். இவர்கள் பிரபுத்துவ மேல்குடி மக்கள் உபயோகித்த ஃபிரெஞ்ச் மற்றும் லத்தீன் மொழிகளின் சொற்களை ஆங்கிலத்தில் உரையாடும் பொழுது அதிகம் உபயோகித்தார்கள்.

 

ப்பொழுது முதலில் கற்பனை செய்த காட்சிகளை மீள்பார்வை செய்வோம்.

காட்சி ஒன்று:   “They gave us a hearty welcome” – இந்த வாக்கியத்தைக் கேட்கும் பொழுது சாதாரண மக்கள் உங்கள் கற்பனையில் எழுந்திருக்கலாம்.
காட்சி இரண்டு:  “They gave us a cordial reception” – இந்த வாக்கியத்தைக் கேட்கும் பொழுது நாகரீகத்தில் மேம்பட்ட மக்கள் உங்கள் கற்பனையில் எழுந்திருக்கலாம்.

 

 

கராதியின்படி ஒரே பொருள் கொண்ட சொற்கள் இது போன்று மாறுபட்ட உருவகங்களை மனதில் தோற்றுவிக்க என்ன காரணம்?

hearty, welcome போன்ற சொற்கள் ஆங்கிலோ-சாக்ஸ்சன் சொற்களாகும்.
cordial, reception போன்ற சொற்கள் ஃபிரெஞ்ச் மொழியில் இருந்து எடுத்து ஆங்கிலத்தில் உபயோகப் படுத்தப்படும் சொற்களாகும்.

அதிகாரம், உயர் பண்புகள் போன்ற பொருள் தரும் சொற்கள் ஃபிரெஞ்ச் மொழியில் இருந்து தோன்றியவை. உழைப்பாளிகள், சாதாரண மக்கள் போன்றவர்களின் பண்புகளைக் குறிப்பது போன்ற பொருள் தரும் சொற்கள் ஆங்கிலோ-சாக்ஸ்சன் மொழியில் தோன்றியவை.

ஆங்கில மொழியில் நிகழ்ந்த இந்த பரிணாம வளர்ச்சி வரலாற்றை அறியாதவர்களும் கூட, ஆங்கிலச் சொற்கள் உபயோகப்படுத்தப் படும் சூழ்நிலைக்கேற்ப இந்த வேறுபாடை அடிமனதில் அவர்கள் அறியாமல் வளர்த்துக் கொள்வார்கள்.

நாம் சொல்லும், பேசும் சொற்களின் வழியேதான் வரலாறு வாழ்கிறது.

 

சிந்தனைக்கு: இது போன்ற மொழி வளர்ச்சியை தமிழ் மொழி வளர்ச்சியுடன் ஒப்பிட்டாலும் இந்த உண்மை பொருந்தும்.
முன்னர் தமிழும் சமஸ்கிருதமும் கலந்து தமிழ் எழுத்துக்களில் எழுதப்படுவதை ‘மணிப்ரவாளம்’ (தமிழில் ‘மணிமிடை பவளம்’) என்று குறிப்பிடுவார்கள். தற்காலத் தலைமுறையினர் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து ‘தங்லீஷ்’ என்று (அங்கீகரிக்கபடாத ஆனால் வழக்கில் உள்ள ஒரு சொல்) ‘கொலைவெறியுடன்’ பேசி வருகிறோம்.

அக்கால ஆங்கிலேயரைப் போலவே, எக்காலத்திலும் தமிழரிடையே வேற்று மொழி வார்த்தைகளை அதிகம் உபயோகித்தால் நாகரீகத்தில் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணமும் நடைமுறையில் உள்ளது.

 

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித் திரு நாடு.

 

 

ஆதாரம், படங்கள் உதவி: Ted ED: How did English evolve?

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *