Category: அறிவியல்

  • பண்டு சமூகத்தில் நிலவிய விந்தை வழக்கம்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    பண்டைக் கால மக்களிடம், குறிப்பாக சில சாதி மக்கள், சில பகுதி மக்களிடம் விந்தையான  வழக்கங்கள் கடைபிடித்து ஒழுகப்பட்டன என்பது கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது. இவற்றை படித்துஅறியும் போது அவர்களின் நம்பிக்கை அதனால் அவர்பெற்ற பயன் ஆகியவை பற்றிய கேள்வி நம் நெஞ்சத்தில் கட்டாயம் எழும்.

    கோவை மாவட்டம் அவினாசி வட்டம் அன்னூர் எனும் ஊரில் கோவில் கொண்ட மன்னீசர் கருவறைத் தெற்கு சுவரில் காணப்படும் 5 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோக்கலிமூர்க்கந் ஸ்ரீ விக்கிரம சோழ தேவற்குத் திருவெழுத்திட்டுச் செல்லாநின்ற யாண்டு இருப்தேத்தேழாவது புரட்டாதி திங்கள் முதல்
    2. கவையன்புத்தூரிலிருந்து வாழும் புள்ளங் _ _ _ _ மன்னியூர் பரதேவரர்க்கு எனக்கு காற்காலத்தில் வண்டு கொட்டி இல்லை வைச்சு என்னடியார் பொ
    3. துவங்கோதையும் மக்களைஉம் கோசநமேயையும் மக்களையும் மன்னியூராழ்வார்க்கு நீரொட்டிக் குடுத்தேன் என்னடியாரை _ _ _ _
    4. என் ஸ்வரூவமாக ஒருபடிமமும் _ _ _ _ பெண்படிமமும் ஸந்தி விளக்கொன்றும் அவ்விளக்குக்குப் பொன் முக்கல முக்கழஞ்சுங் கொண்டு சந்த்ராத்திதவலு மெரிப்பிக்கக் கடவார்
    5. மன்னியூர் ஸபைஓம்.

    திருவெழுத்திட்டு – முடிசூடி; இல்லை வைச்சு – பச்சிலை வைத்து; என்னடியார் – வேலையாள்; படிமம்  – பாவை, பதுமை, பொம்மை; சபையோம் – கருவறை பிராமணர்.

    விளக்கம்: கொங்கு சோழன் கலிமூர்க்கன் விக்கிரம சோழனின் 27 ஆம்ஆண்டு ஆட்சியில் (கி.பி. 1032) புரட்டாசி மாதம் முதல் அன்று கவையன் புத்தூரைச் சேர்ந்த புள்ளன் என்பான் மன்னியூர் ஈசனுக்கு,  “எனக்கு  மழைக் காலத்தில் வண்டு கொட்டி பச்சிலை வைத்து குணமானதால் என் வேலையாள்கள் பொதுவன் கோதை அவன் பிள்ளைகள், கோசன் மேய் அவன் பிள்ளைகள் ஆகியோரை மன்னியூர் ஈசனுக்கு நீரட்டித் தானமாகக் கொடுத்தேன். என்னை ஒத்த வடிவில் ஒரு பாவையும் என் (மனைவி) வடிவில் ஒரு பெண் பாவையும் செய்து கொடுத்தேன், அத்தோடு ஒரு சந்தி விளக்கும் அவ்விளக்கு எரிக்க பொன், முக்கல முக்கழசு (நெல்) கொடுத்தேன்”. இதை சந்திரசூரியர் வரை எரிக்கக் கடவதாக ஒப்புக் கொண்டோம்  மன்னியூர் கருவறை பிராமணர்.

    கோவையில் இன்றும் பதுமைகளைச்  செய்து வழங்கும் வழக்கம் நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. வேலையாள்களை அடிமைகளாகக் கோவில்களுக்கு அன்றைய ஆண்டைகள் கொடுத்துள்ளனர் என்பது தெரிகின்றது. மூன்று இடங்களில் இக்கல்வெட்டு சிதைந்துள்ளதால் செய்தியைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை.

    பார்வை நூல்: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி  I, பக். 75, த.நா.அ. தொல்லியல் துறை, சென்னை – 8.

    பாகூர் திருமூலநாதர் கோவில் கருவறை தென்சுவர் 16 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கன்னர [தேவர்க்கு யாண்]
    2. டு 202 (22) வேசாலிப்பாடி வடகரை வாகூர் நா
    3. ட்டு மன்றாடிகளே வாகூ[ர்] ஸ்ரீ மூலட்டா[ன]த்து
    4. ப் பெருமாளுக்கு நாங்கள் வைய்த்த தந்ம
    5. ங் கட்டிலேறப் போம்போது ஒரு ஆடு கு
    6. டுத்துக் கட்டிலேறுவோமாகவும் [புற]நா
    7. ட்டி நின்று வந்து இஞ்ஞாட்டிற் கட்டி
    8. லேறு மன்றாடி வசமொரு ஆடு குடுப்ப
    9. தாகவும் கூடாது திறம்பி[னோ]மைக் க
    10. ணப் பெருமக்களுந் தேவரடியாரு மிர
    11. ண்டாடு பிடித்துக்கொள்ளப் பெறு
    12. வதாகவும் ஒட்டிக் குடுத்தோ மிஞ்ஞா[ட்]
    13. [டு] மன்றாடிக(ள்)ளோம் இத் தம்மம் ஸ
    14. ந்த்ராதித்தவந் நிற்பதாக நிறுத்திக் குடு
    15. ப் போமானோ [மி]ஞ்ஞா[டு] மதகு செய்கின்
    16. ற மதகரோம் ஸ்ரீ0 0 0

    மூலட்டானத்து – மூலத்தானத்து; கட்டிலேறு – முதலிரவு கூடுகை நிகழ்த்து; மன்றாடி – இடையர், ஆயர்; திறம்பினோமைக்கு – தவறுதல், மாறுதல், பிறழ்தல்; கணப்பெருமக்கள் – சாதிப் பெருமக்கள்; ஒட்டி –  இரட்டித்து; நிற்பதாக நிறுத்தி – இருப்பதாக நடத்தி; இஞ்ஞாட்டு – இந்நாட்டு, இவ்வூர்; மதகு – நீர்பாயும் மடை, குமிழித் தூம்பு, தேவையான நீரைச் சீராக வெளியேற்றுவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக்கூடிய அமைப்பு.

    விளக்கம்: இராட்டிரகூட வேந்தன் மூன்றாம் கிருஷ்ணனான கன்னரதேவனின் 22 ஆம் ஆண்டு ஆட்சியில் (கி.பி. 961) வேசாலிப்பாடி வடகரையில் அமைந்த வாகூர் நாட்டின் இடையர்களோம், “வாகூர் மூலத்தானத்துப் பெருமானுக்கு நாங்கள் வைத்த தர்மமாவது யாதெனில்  கட்டிலேறுதலான முதலிரவுக் கூடுகை நிகழ்த்தப் போகும் போது ஒரு ஆடு கொடுத்துக் கட்டிலேறுவோமாகவும், பிற ஊரில் இருந்து வந்து இங்கு முதலிரவுக் கூடுகை நடத்தும் மன்றாடியிடம் ஒரு ஆடு கொடுப்பதாக ஒப்புக் கொண்டோம். இப்படி ஒப்புக் கொண்டபடி நடக்கத் தவறினால் இடையர் சாதி பெருமக்களும் தேவரடியாரும் இரண்டு ஆடு பிடித்துக் கொள்வார்களாக என்று ஆடுகளை இரட்டித்துக் கொடுத்தோம் இந்தஊர் மன்றாடிகளோம். இத்தர்மம் சந்திரசூரியர்  வரை இருப்பதாக நடத்திக் கொடுப்போமானோம் இவ்வூர் மதகு செய்கின்ற மதகரோம்“

    பண்டு சிறுபிள்ளையின் போதே திருமணம் நடத்திவிடுவர். மணமகள் அதன்பின் தன் தாய்வீடு சென்றுவிடுவாள். அவள் பருவம் எய்திய பின்பு நாள் பார்த்து அவளை கணவனிடத்தில் கொண்டு சேர்க்கும் போது அவ்விணையர் குடும்பம் நன்கு பெருகி வளர வேண்டும் என்ற நோக்கில் அதற்கு அடையாளமாக அவர்கள் இல்லற வாழ்வில் முதன்முதலாக ஈடுபடும் போது ஒரு ஆட்டை கோவிலுக்கு தானமாகக் கொடுப்பதை இடையர் வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். அவ்வூர் பெண்ணை மணந்து அவ்வூரிலேயே வாழவரும் மணமகனுக்கும் ஒரு ஆட்டை வளர்ச்சியின் அடையாளமாக கொடுத்துள்ளனர் போலும். இதைக் கண்காணிக்க மதகு பணிசெய்வோரை அமர்த்தி உள்ளனர். அவர்கள் இதற்கு ஏன் ஏற்படுத்தப்பட்டனர் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருகால் இருசாராரும் ஊருக்கு வெளியே அண்டிய பகுதியில் வீடு அமைத்து வாழ்ந்ததால் ஒருவரை ஒருவர் அறிவர் என்று  ஒரு சான்றுக்காக மதகு செய்வோர் இப்படி ஆக்கப்பட்டனரோ?

    பார்வை நூல்: புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள், பாகூர்  S Kuppusamy & G Vijaya venugopal,  Institute Francais De Pondichéry :  2006.

    Share
  • அமெரிக்காவில் கொலம்பஸ் நாள்

    -நாகேஷ்வரி அண்ணாமலை

    நான் எப்போதுமே கொலம்பஸுக்கு அமெரிக்காவில் அதிக மரியாதை கொடுக்கிறார்கள் என்று நினைத்ததுண்டு. முதல் முதலாக அட்லாண்டிக் கடலை அவர் கடந்தது பெரிய சாதனைதான். கொந்தளிக்கும் அட்லாண்டிக் கடலை அதுவரை யாரும் கடந்ததில்லை; உயிரைத் துச்சமாக நினைத்து அதைக் கடக்கத் துணிந்தது பெரிய காரியம்தான். இருந்தாலும் அவர் ‘புதிய கண்டத்தில்’ என்னென்ன அட்டூழியங்கள் புரிந்தார் என்பதை அறிந்தால் அவரை இப்படிப் புகழ முடியுமா என்று எனக்கு நினைக்கத் தோன்றும்.

    ஐரோப்பியர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரு புதிய பூமியைக் காட்டி அங்குள்ள வளத்தை அவர்கள் அனுபவிக்க வழிகாட்டியது கொலம்பஸ்தான். அதனால் அவர்கள் அவரை மிகவும் போற்றுகிறார்கள் என்று எண்ணிக்கொள்வேன். (கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்று நமக்குப் பள்ளியில் கற்பிக்கப்பட்டாலும் இப்போது அமெரிக்கா என்று அறியப்படும் கண்டத்தில் கொலம்பஸ் கால்வைக்கவில்லை. அருகிலுள்ள பஹாமாத் தீவுகளுக்கு வந்ததோடு சரி. அவருக்குப் பிறகு அமெரிக்கக் கண்டத்திற்கு வந்த அமெரிகோ வெஸ்ஸி புச்சி என்னும் இத்தாலியரின் பெயரைத்தான் அமெரிக்கக் கண்டத்திற்கு வைத்தார்கள். இவர்தான் கொலம்பஸ் வந்தது இந்தியாவுக்கு இல்லை, இன்னொரு கண்டத்திற்கு என்று சொன்னவர். 1497-லும் 1502-லும் அமெரிக்கக் கண்டத்தைற்குத் தான் வந்த அனுபவங்களை எழுதினார். இவர் எழுதியதை வைத்து வரைபடம் வரைபவர்கள் வரைபடம் வரைய ஆரம்பித்தார்கள். அதனால் இவர் பெயரையே அதற்கு வைத்தார்கள்.)

    1934-லிருந்துஅமெரிக்காவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கள்கிழமை கொலம்பஸ் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இது மத்திய அரசால் விடுமுறை நாளாகக் கணிக்கப்பட்டது. இப்போது சில மாநிலங்களில் அந்த நாளை ‘பழங்குடி மக்கள் நாள்’ என்று மாற்றப் போகிறார்களாம். ஏற்கனவே நியூ மெக்ஸிகோ, வட கரோலினா, அலாஸ்கா, தென் டகோட்டா, ஆரகன், மினசோட்டா ஆகிய ஆறு மாநிலங்களிலும் 130 நகரங்களிலும் பெயர் மாற்றம் நடந்திருக்கிறது. (அமெரிக்காவில் மாநிலங்களுக்கென்று சில உரிமைகள் உண்டு.) வெர்மான்ட்டில் பெயர் மாற்றம் செய்வதற்குரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் கையொப்பத்திற்காகக் காத்திருக்கிறது.

    அமெரிக்காவில் நிறைய மாநிலங்களில் கொலம்பஸ் என்ற பெயரில் ஊர்களும் சாலைகளும் உண்டு. அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் இருக்கும் டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியாவின் பெயர்கூட கொலம்பஸ்அமெரிக்கக் கண்டத்தை கண்டுபிடித்ததன் அடையாளமாக வைக்கப்பட்ட பெயர்தான்.

    இப்போது மெயின் மாநில சட்டசபையில் பெயர் மாற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஜேனட் மில்லர் சீக்கிரமே அதில் கையொப்பமிடப் போகிறார். ‘ஒருவரின் பெயரை ஒரு நாளுக்கு வைப்பதால் அவருக்கு நாம் மிகவும் மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறோம். கிறிஸ்டபர் கொலம்பஸ் அட்லாண்டிக் கடலைக் கடந்தார் என்பதைத் தவிர அவர் என்ன பெரியதாகச் சாதித்துவிட்டார்?’ என்று அந்த மசோதா விவாதத்திற்கு வந்தபோது மெயின் சட்டசபை அங்கத்தினர் ஒருவர் கேட்டிருக்கிறார். கொலம்பஸ் நாளை பழங்குடி மக்கள் நாள் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோருபவர்கள் அமெரிக்கக் கண்டங்களில் அப்போது லட்சக் கணக்கான மக்கள் வாழ்ந்து வந்தார்கள் என்றும் கொலம்பஸ் வந்ததால் ஐரோப்பாவிலிருந்து நிறையக் குடியேறிகள் அமெரிக்காவுக்கு வந்து அங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த மக்களைத்தங்கள் நலன்களுக்காகப் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்திக்கொண்டர்கள்என்றும் இவருக்கு இதுவரை கொடுக்கப்பட்டு வந்த மதிப்பையும் மரியாதையையும் இப்போது நிறுத்திவிட்டு அவரால் பல துன்பங்களுக்கு ஆளான பழங்குடி மக்களின் பெயரால் அந்த நாளைக் குறிப்பிடலாம் என்றும் கூறுகிறார்கள். பழங்குடி மக்களின் பிரதிநிதியாக வந்திருந்த பெண்,‘இந்த நிலத்திற்கும் நீருக்கும் சொந்தமான எங்களுக்கு இதுவரை எந்தவித உரிமைகளும் இல்லாமல் இருந்தது. விடுமுறை நாளுக்கு கொலம்பஸ் பெயர் கொடுக்கப்பட்டிருந்ததால் எங்களுக்கு அவர் இழைத்த அநீதி மறைக்கப்பட்டிருந்தது. இப்போது எங்களுக்குரிய அங்கீகாரத்தைக் கொடுத்திருப்பது மனநிறைவைத் தருகிறது’ என்று கூறியிருக்கிறார். இப்படி கொலம்பஸ் நாள் என்று இதுவரைக் குறிப்பிடப்பட்டு வந்த நாளைப் பழங்குடி மக்களின் நாள் என்று பெயர் மாற்றம் செய்வதால் இத்தாலிய-அமெரிக்கர்கள் (இத்தாலியிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து குடியேறியவர்களை இத்தாலிய அமெரிக்கர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்; அதுபோல் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்களை இந்திய-அமெரிக்கர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்; ஒவ்வொரு நாட்டிலிருந்து வந்தவர்களுக்கும் இப்படிப் பெயர்கள் உண்டு.) தங்கள் மரபுப் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக அந்த நாளைக் கொண்டாடுகிறார்கள் என்ற ஒரு விஷயம்தான் கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது என்று பெயர் மாற்றம் செய்யும் விவாதத்தின்போது கூறப்பட்டது.

    கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள பெர்க்லி என்னும் நகரம் 1992-லேயே இந்த விடுமுறை நாளைப் பழங்குடி மக்கள் தினம் என்று பெயர் மாற்றம் செய்துவிட்டது. இன்னும் பிரவுன் பல்கலைக்கழகமும்,மினியாப்பிலஸ், சியாட்டல் ஆகிய நகரங்களும் பெயர் மாற்றம் செய்திருக்கின்றன. அலாஸ்கா 2015-இல் பெயர் மாற்றம் செய்தது; வாஷிங்டன் மாநிலம் அந்த நாளை விடுமுறை நாள் என்ற பட்டியலிலிருந்து நீக்கிவிட்டது. இன்னும் சில மாநிலங்கள் வேறு வகையாக இந்த நாளைக் கையாள்கின்றன. ஓக்லஹோமா மாநிலம் கொலம்பஸ் நாளை கொலம்பஸுக்கும் பழங்குடிகளுக்கும் உரிய நாளாக ஆக்கிப் புதிய சட்டம் இயற்றியிருக்கிறது. ஒஹையோ மாநிலத்தில் உள்ள சாண்டஸ்கி என்னும் நகரம் இந்த நாளுக்குப் பதில் தேர்தல் நாளை விடுமுறை நாளாக அறிவித்திருக்கிறது. தேர்தல் நாள் விடுமுறைநாளாக இருந்தால் வாக்காளர்களுக்கு வசதியாக இருக்குமாம். (அமெரிக்காவில் எல்லாத் தேர்தல்களும் – மிகச் சில விசேஷத் தேர்தல்கள் தவிர– நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும். எல்லாக் கீழவை அங்கத்தினர்களுக்கான தேர்தல்களும் இரண்டு வருஷங்களுக்கு ஒரு முறையும் ஜனாதிபதித் தேர்தல் நான்கு வருஷங்களுக்கு ஒரு முறையும் மேலவை அங்கத்தினர்களுக்கான தேர்தல் ஆறு வருஷங்களுக்கு ஒரு முறையும் நடக்கும்.அமெரிக்காவில் தேர்தல் நாளன்று விடுமுறை இல்லை. எல்லா ஓட்டுச்சாவடிகளும் காலை ஆறு அல்லது ஏழு மணியிலிருந்து இரவு ஏழு அல்லது எட்டு மணி வரைக்கும் திறந்திருக்கும்)

    கொலம்பஸ் நாள் மத்திய அரசின் விடுமுறை நாளாகத் தொடருகிறது. போன ஆண்டு அக்டோபர் மாதம் கொலம்பஸ் நாளன்று ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில்,‘இந்த நாளன்று திறமை வாய்ந்த ஒரு இத்தாலியரின் சாதனைகளை நாம் கொண்டாடுகிறோம். அமெரிக்க மதிப்பீடுகளான குறிக்கோளை அடைய விரும்பும் பேரார்வம், துணிச்சல், மனோதிடம் ஆகிய குணங்கள் அவரிடம் இருந்தன’ என்று கொலம்பஸைப் புகழ்ந்துதள்ளியிருக்கிறார்.

    இந்த ட்ரம்ப் என்னவாவது சொல்லிவிட்டுப் போகட்டும். இப்போதாவது சில அமெரிக்கர்களாவது கொலம்பஸ் பழங்குடி மக்களுக்குச் செய்த அநீதிகளையும் அட்டூழியங்களையும் நினைவுகூர்ந்து அவருக்கு இதுவரை கொடுத்துவந்த மரியாதையையும் மதிப்பையும் திரும்ப வாங்குகிறார்களே என்பதை நினைக்கும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி பிறக்கிறது.

    Share
  • ஜப்பான் ஹயபூசா -2 விண்சிமிழ் தாமிரக் கட்டி முரண்கோளைத் தாக்கிக் குழி பறித்துள்ளது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++

    நிலவினில் முதற்தடம் வைத்து
    நீத்தார் பெருமை யாய்
    நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
    செவ்வாய்க் கோள் ஆய்ந்திடத்
    தவ்விய தளவுளவி களை 
    நாசாவும்
    ஈசாவும் கொண்டு இறக்கின !
    வால்மீன் வயிற்றில் அடித்து
    தூசிகளை ஆராய்ந்தார்
    நாசா விஞ்ஞானிகள் !
    விண்வெளியில் வால்மீன் ஒன்றை
    விரட்டிச் சென்று வால் வீசிய
    தூசியைப் பிடித்து வந்தார்
    காசினிக்கு !
    வக்கிரக் கோள் மாதிரி எடுத்து
    வையத்தில் இறக்கிடும்
    ஜப்பானின்
    ஹயபூசா முதல் விண்ணுளவி
    அயான் எஞ்சனை இயக்கி
    ஆறு பில்லியன் மைல் கடந்து
    சீராய் மாதிரி கொணரும் !
    ஹயபூசா -2 தாமிரக் கட்டி தாக்கி, 
    முரண்கோளில் குழி உண்டாக்கும் !
    பூர்வ உயிரின மூலவி காணப் போகுது. 
    ஜப்பான் தளவுளவி.
    முரண்கோள் குழி மண் எடுத்து
    தரணிக்கு மீளும் ஜப்பான் கழுகு 
    ஆய்வு புரிய
    வரலாற்று முதலாய் !

    ++++++++++++++++

    ஜப்பான் கழுகு ஹயபூசா -2 முதன்முதலாய் முரண் கோளில் குழி பறித்துள்ளது

    2019 ஏப்ரல் 5 ஆம் தேதி ஜப்பான் ஹயபூசா-2 விண்சிமிழ் உலக முதன்மையாய் முரண்கோள் ஒன்றைத், தாமிரக் கட்டியால் ஒரு மைல்  [1.7 கி.மீடர்] உயரத்திலிருந்து தாக்கி சுமார் 30 அடி [10 மீடர்] விட்டக் குழியை உண்டக்கி உள்ளது.  தாமிரக் கட்டியின் எடை ஒரு பவுண்டு [2 கி.கிராம்].   தாமிரக் கட்டி விழுந்த இடம் திட்ட மிட்ட இடத்துக்கு அருகில் குழி  பறித்துள்ளது.  பூமியிலிருந்து 200 மில்லியன் மைல் [340 மில்லியன் கி.மீடர்]  தூரத்தில் சூரியனைச் சுற்றி வரும் முரண்கோளில் நேர்ந்த இந்த நிகழ்ச்சி ஒருபெரும் விண்வெளிச் சாதனையாகக் கருத்தப்படுகிறது.  ரியூகுவில் உண்டான இந்த செயற்கை குழியை,  5500 அடி [1700 மீடர்] உயரத்தில்  பயணம் செய்யும் விண்சிமிழ்க் கருவி படமெடுத்து உறுதி செய்தது.

    குழி உண்டான போது தெறித்த மண் மாதிரிகளை அடுத்து  சேமிக்க , விண்சிமிழ் இனிமேல் முரண்கோளை நெருங்கி வரும்.  எடுத்த  மண் மாதிரிகளை, விண்சிமிழ் 2020 ஆண்டில் பூமிக்குக் கொண்டுவரும்.  இந்த திட்டத்துக்கு  ஆகும் ஜப்பான் நிதிச்செலவு சுமார் 30 பில்லியன் யென். [27 பில்லியன் டாலர்]  [2019 நாணய மதிப்பு] என்று மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது

    ++++++++++++++++++

       [January 16, 2019]
    ++++++++++++++++
    Image result for Japan Hayabusa -2 landed on Ryugu
    ஜப்பான் கழுகு ஹயபூசா -2 விண்கப்பல் புதிய முரண்கோளில் இறங்கியுள்ளது.
    2018 ஆண்டு முதலாய் ஜப்பான் கழுகு என்னும் ஹயபுசா -2 தளவுளவி ரியூகு முரண்கோளை விரட்டிப் பிடிக்க முயன்று, 2019 பிப்ரவரி 22 இல் வெற்றிகரமாய் தகுந்த இடத்தில் இறங்கி யுள்ளது.  அதன் குறிக்கோள் முரண்கோள் ரியூகுவின் தள மாதிரி மண்ணை எடுத்துச் சேகரித்து, புவிக்கு மீளும் சுய இயக்குத் திட்டம்.  சின்னஞ் சிறு மண் மாதிரிகளைச் சேமிக்க தளவுளவி யில் பல்வேறு சுடும் கருவிகள் [Firing Projectiles] அமைக்கப் பட்டுள்ளன.   முரண்கோள் ரியூகு [ C-Type] [கார்பன் மூலக்கூறுகள்] கொண்டது.  அவை 4.5 பில்லியன் ஆண்டு கட்கு முன்பு சூரிய மண்டலம் எப்படி இருந்திருக்கலாம் என்று விளக்கம் அளிக்கும்.  அவற்றில் உயிரின மூலவிகள் தோன்றத் தேவையான  பூர்வ ஆர்கானிக் புரோட்டீன்கள் செழிக்கும் அமினோ ஆசிடுகள் [Amino acids] என்று எதிர்பார்க்கப் படுகிறது.  சூரிய மண்டலத்தில் உள்ள முரண்கோளில் மூன்றில் இருபங்கு [68%] கார்பன் மூலக்கூறுகள் கொண்ட வையாக  [C-TYPE]  கருதப் படுகின்றன.  ஜப்பான் சுய இயக்குத் தளவுளவி ஹயபூசா -2 போல் நாசா விஞ்ஞானி களும்  ஆசிரிஸ் – ரெக்ஸ் விண்ணுளவி  [Osiriis-Rex Spacecraft]  தற்போது “பென்னு” என்னும் C-TYPE முரண்கோளை  [BENNU ASTEROID] ஆராய்ந்து வருகிறது.  1500 அடி அகலம் உடைய “பென்னு ” முரண்கோள் ரியூகுவை விடச் சிறியது.  அதன் மாதிரி மண்ணை 2023 இல் தான் நாசா புவிக்கு மீட்டுக் கொண்டுவரும்.  ஜப்பான் புவிக்குக் கொண்டு வரும் ரியூகு மாதிரி மண் 2020 இல் கிடைக்கும் என்று திட்டமிடப் பட்டுள்ளது.

    Image result for Japan Hayabusa -2 landed on Ryugu

    Image result for Japan Hayabusa -2 landed on Ryugu
     
     
    ஜப்பான் விண்வெளித் தேடலில் முன்னோடி முயற்சிகள்
    சூரிய மண்டல மூலாதாரத் தோற்றத்தை ஆய்வு செய்யும் விண்வெளித் தேடல் பயணங்களில், சூரியனைச் சுற்றும் முரண்கோள்களைச் [Asteroids] சுற்றி, அவற்றில் தடம் வைத்து மாதிரி மண்ணை எடுத்துப் பூமிக்கு மீளும் யந்திர சுய இயக்கப் பொறி நுணுக்கத்தில் ஜப்பானை யாரும் மிஞ்ச முடியாது.  அந்த பயணங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருவது ஜப்பானின் “ஹயபுஸா-2” விண்ணுளவி.   அடுத்து புரியப் போகும் சாதனை பிப்ரவரி 22, 2019 இல் நிகழப் போகிறது.  அதாவது 880.மீடர். [540 அடி] விடமுள்ள “ரியூகு” முரண்கோளில்  ஹயபுஸா -2 இன் தளவுளவி இறங்கப் போகிறது.  முரண்கோளில் தடமிடும் இடம் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது..  2018 ]செப்டம்பரில் ஜப்பான் விண்வெளி ஆணையகம் [JAXA – JAPAN AEROSPACE EXPLORATION AGENCY]  10 கி.கிராம் [22 பவுண்டு] பளு உள்ள மாஸ்காட்   [MASCOT] [MOBILE ASTEROID SURFACE SCOUT] என்னும் தளவுளவியை  ஏவி வெற்றிகரமாக  அங்கே இறக்கியுள்ளது.
    Japan Impact Landers
    மாஸ்காட் தளவுளவியின் கருவிகள் படங்களைப் பல்வேறு அலை நீளங்களில் பதிவு செய்யும்.  நுண்ணோக்கி மூலம் முரண்கோளின் தாதுக்களை ஆய்வு செய்யும்.  தள உஷ்ணத் தையும், காந்த சக்தியையும் அளக்கும்.  ஜப்பானிய  “கழுகு” எனக் கருதப்படும் ஹயபூஸா – 2 ஒரு சமயலறை ரெஃப்ரி ஜெரேட்டர் அளவு கொண்டது.  2014 டிசம்பரில் ஏவப்பட்ட ஹயபுஸா 2 அனுப்ப ஆகும் நிதிச் செலவு சுமார் U$ : 260 மில்லியன்.  அது ரியூகு மாதிரி மண்ணை 2020 ஆண்டில் பூமிக்குத் தானாய்க் கொண்டு வரும்  என்று எதிர்பார்க்கப் படுகிறது.  அவ்விதம் எடுக்கப் பட்ட மண் மாதிரிகள் பிரபஞ்ச உயிரினங்கள் பற்றிய தகவலை  விஞ்ஞானிகளுக்கு கூறும்.  அத்துடன் வேறு எந்த மூலகங்கள் [Elements] சேர்ந்து, பூமியில் உயினங்கள் தோன்றின என்றும் அறிவிக்கும்.
    [Click to Enlarge]

    ஜப்பான் கழுகு -2 முரண்கோள் நோக்கி விண்வெளிப் பயணம்

    +++++++++++++++++

    Information News

    1. https://www.nytimes.com/2019/02/21/science/ryugu-asteroid-hayabusa2.html [February 21, 2019]
    2. https://www.dailymail.co.uk/sciencetech/article-6215311/Japans-hopping-Ryugu-robots-send-video-surface-asteroid-180million-miles-away.html
    3. https://www.breitbart.com/news/touchdown-japan-probe-hayabusa2-lands-on-distant-asteroid/
    4. https://www.express.co.uk/news/science/1090651/Asteroid-landing-live-stream-japan-hayabusa-asteroid-ryugu-landing-watch-online
    5. https://www.express.co.uk/news/science/1090651/Asteroid-landing-live-stream-japan-hayabusa-asteroid-ryugu-landing-watch-online
    6. http://www.the-japan-news.com/news/article/0005561687[February 22, 2019]
    7. http://www.spacedaily.com/reports/Hayabusa2_probes_asteroid_for_secrets_999.html[March 20, 2019]
    8. https://en.wikipedia.org/wiki/Hayabusa2 [February 23, 2019]
    9. https://www.thestar.com/news/world/2019/04/26/japans-hayabusa2-spacecraft-makes-crater-on-asteroid-in-world-first.html [April 26, 2019]
    10. https://www.space.com/japan-blasts-crater-asteroid-ryugu-hayabusa2-photo.html?utm_source=sdc-newsletter&utm_medium=email&utm_campaign=20190426-sdc [April 25, 2019]
    11. https://www.dailymail.co.uk/sciencetech/article-2858828/Japan-s-Hayabusa-2-begins-landmark-mission-hunt-asteroid-hold-clues-Earth-formed.html[April 27, 2019]
    12. https://www.japantimes.co.jp/news/2019/04/26/national/science-health/japans-hayabusa2-probe-succeeds-blasting-first-man-made-crater-asteroid/#.XMSRufmJIkI [April 26, 2019]
    13. https://en.wikipedia.org/wiki/Hayabusa2  [April 25, 2019]
    14. http://global.jaxa.jp/projects/sat/hayabusa2/instruments.html

    ++++++++++++++++++++++++

    S. Jaybarathan  [jayabarathans@gmail.com] [April 27, 2019]  [R-2]

    Share
  • வீரபாண்டியன் மணந்த தேவரடியாள்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    கோவில் இயக்கம் தந்திவர்மன், அவன் மகன் கம்ப வர்மன் காலத்தில் கருங்கல் கட்டடமான கற்றளி இயக்கமாக உருப்பெற்று ஆகமமாக முறைப்படுத்தப்பட்ட போது கோவில்களில் ஆடல், பாடல், பூசனை நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கெனத் தம்மைத் தாமே மனமுவந்து ஒப்புக் கொடுப்போர் கோவில்களில் ஏற்கபட்டு அவர்களுக்கான வாழ்வாதார ஏற்பாடுகளும் ஆட்சியாளர்களால் செய்துதரப்பட்டன. தம்மை இறைவனுக்கு அடியவராக ஒப்புக் கொடுத்ததால் இவர்கள் தேவரடியார் எனப்பட்டனர். இதில் ஆண், பெண் இருபாலரும் அடங்குவர். இவருள் அரசகுலத்தாரும் இருந்தனர். கோவில்களில் பெண்களுக்குத் தரப்பட்ட மிக உயர்ந்த பதவி இது என்பதே உண்மை மற்றபடி பலரும் எண்ணுவது போல இந்த தேவரடியார் பாலியற் பெண்டிர் அல்லர்.

    பல்லவர் காலத்தை அடுத்து வந்த சோழப் பேரரசு காலத்தில் கோவில் கற்றளி இயக்கம் அவர் ஆட்சிப் பரப்பு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இராசராசன் ஆட்சியின் போது தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் உள்ளே மாடித் தளத்தில் தேவரடியார்க்கு என்றே இடம் ஒதுக்கப்பட்டது. இந்த தேவரடியாருக்கு தனி வீடுகள் கட்டித்தரப்பட்டன. இவர்கள் ஆடல், பாடல், கல்வி, கேள்விகளில் சிறந்தோராக இருந்ததால் வேந்தர் முதல் பொதுமக்கள் வரை அனைவராலும் நன்கு மதிக்கப் பட்டனர்.  இவர்கள் சிறந்த கொடையாளிகளாகவும் இருந்துள்ளனர். கோவில்களுக்கு பல நிவந்தங்கள், கொடைகள் வழங்கி உள்ளனர். இவர்களின் சிறந்த குணங்களுக்காக இவருள் சிலரை வேந்தரும், மன்னவரும், அரையரும் மணந்தனர். இதில் குறிப்பிடத்த தக்கவர் மதுரை ஆண்ட  வேந்தர் வீரபாண்டியன் ஆவார். இவர் திருவானைக்காவில் சாந்தி கூத்து ஆடும் சொக்கத்தாண்டாள் என்ற தேவரடியாளை மணந்தார். வேந்தனை மணந்ததால் அவள் உலகமுழுதுடையாள் எனப்பட்டாள். இவளைப் பற்றிய கல்வெட்டுகள் குமரி மாவட்டம் சுசீந்திரம், நெல்லை வள்ளியூர் ஆகிய இடங்களில் காணக் கிடைக்கின்றன. இவற்றை இனி நாமும் காண்போம்.  

    சுசீந்திரம் கோவில் மேற்கு பிரகாரத்தில் உள்ள வாகனப் புரைச் சுவரில் பொறித்த கல்வெட்டு.

    1. கொல்லம் – 432  மாண்டை(த்) தனு ஞாயிறு 19 சென்ற வி(யாழ) வாட்டையும் வி
    2. சாகமும் ஏகாதேசியும் பெற்ற இந்நாளால் நாஞ்சி நாட்டூர் சுவீந்த்ர சுந்தர சோழச் சதுர்வேதி
    3. தி மங்கலமுடையார் சுவீந்தரம் உடைய நயினார் சீ கோயிலில் திருச்சுற்று மண்டபத்திலிருந்து
    4. சபையும் ஸ்ரீகாரியஞ் செய்வாரும் இருந்தெழுதின செய்கட ஓலை(க்) கரணமாவது உடையார் சுவீந்தர
    5. முடையார்க்கு பெருமாள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர் நம்பிராட்டியார் சொக்கத்தாண்டாளான
    6. உலக முழுதுடையார் நித்தல் செல்வதாக திருவமுதுக்கு கற்பிச்ச அரிகுறுணி இருநாழிக்கும் அஞ்சிரண்டால்
    7. நெல் முக்குறுணி ஒரு நாழியும் பூஜாகாலத்து அமுது செய்யும் பிராமணர் மூவர்க்கு வெஞ்ச
    8. நமுட்பட நெல் முக்குறுணியுங்கூட _ _ _ _ க்குங் கல்பிச்ச புதுப்பொன் அச்சு இருநூறு
    9. இவ்வச்சு இருநூற்றிலும் இவ்வூர் தேவரடியாள் குன்றாண்டி திருவாண்டி கைக்கொ
    10. ண்ட அச்சு 155 க்கும் நாளொன்றுக்குச் செலுத்தும் அரிகுறுணி யிதில் பெரிய நாயனார்(க்)கு திரு
    11. வமுதுக்கு அரி அஞ்ஞாழியும் திருவேங்கடத்துக்கு திருவமுது செய்விச்சு சோறுதான் கொண்டுவரும்
    12. அரி முந்நாழியும் பிராமண போஜனத்துக்கு ஓராண்டில் இவள் செலுத்தும் மாசம் ஒன்பது
    13. ம் இப்படி செலுத்துவாளாகவும் செலுத்துமிடத்து முட்டுகில் இவள் கைக்கொண்ட அச்சு 155
    14. க்கும் ஓன்றொன்றே காலாக வரக் கண்ட அச்சு 39 ங்கூட அச்சு 194 க்குஞ் செலுத்தின  நில
    15. ங்கள் வேட்கைக் குளத்தின் கீழ் அமரபுயங்க வாய்க்காலுக்கு வடக்கு _ _ _ _ _ _ _ _
    16. கீழ் மருதுறை தடி 1 நில _ _ _ _ _ _ பள்ள மடை தடி _ _ _ _ _ _ யும் இந்திர வீரவாய்க்காலுக்கு தெற்கு _ _ _ _
    17. _ _ _ _ _ _ யும் ஆகத்தடி மூன்று _ _ _ _ _ _ ன் மேல் அச்சு _ _ _ _ _மேல் அச்சு _ _ _ _ மேல்படியாள்  _ _ _ _ _ _ _
    18. _ _ _ _ _ அமரபுயங்க வாய்க்காலுக்கு தெக்கு _ _ _ _ கேசவநாராய _ _ _ _ _ _
    19. _ _ _ _ _ _ பனையறைதடி ஒன்று நிலம் வாய்க்கால் _ _ _ _ _ கு வடக்கு
    20. றைதடி 1 நில _ _ _ _ _ _ ஆக _ _ _ _ _ யின் மேலும் ஓ _ _ _ _ _ _
    21. _ _ _ _ _ _ _ _ _ யின் மேலும் ஒள்ள _ _ __ _ _ _ __
    22. அச்சு _ _ _ _  பிரம்ம சுவமில் 5 ஆம் கண்ணாற்றில் குளத்தில் பெரு _ _ _ _ _
    23. அச்சு 90 கொடுத்து விலை கொண்டுடைய _ _ _ _ _ றொன்றாலும் ஆன இந்நில _ _ _
    24. தொண்ணூற்று நாலும் மேல்படியில் செல்லாண்டி சேகராண்டாள் கைக் கொண்ட _ _ _

    வியாழவாட்டை – வியாழ ஆழ்ச்சை(கிழமை); செய்கட ஓலை – செய்யக்கடவது பற்றிய ஓலை; சபை – கருவறை பிராமணர்; ஸ்ரீகாரியம் – கோவில் திருப்பணியாளர்; கரணம் –ஆவணம்; நம்பிராட்டி – துணைவி, தேவி, மனைவி;  நித்தல் – எப்பொழுதும்;  கற்பிச்ச – பிடிபாடு, வழிகாட்டுநெறி,  guidelines; வெஞ்சனம் – சமையல்; அச்சு – காசு; முட்டுகில் – நின்றுபோனால். 

    கொல்லம் ஆண்டு 432 (கி.பி. 1257) தனுர் ராசி நேரும் ஞாயிற்றுக்கிழமை 19 நாள் இந்த கல்வெட்டு வெட்டப்பட்டது. கடந்த வியாழக்கிழமை விசாக நட்சத்திரமும் ஏகாதேசியும் கூடிய நாளில் நாஞ்சில் நாட்டூரான சுசீந்திரம் என்னும் சுந்தரச்சோழ சதுர்வேதி மங்கலத்தில் சுசீந்திரமுடைய ஈசனின்  கோவில் திருச்சுற்று மண்டபத்தில் கருவறைப் பிராமணரும் கோவிற் பணியாளர்களும் அமர்ந்து எழுதிய செய்யக்கடவதான ஓலை ஆவணம் யாதெனில் இறைவர் சுசீந்திர ஈசனுக்கு வேந்தன் வீரபாண்டியனின் தேவியான சொக்கத்தாண்டாள் என்னும் உலகமுழுதுடையாள் எப்பொழுதும் இறைவனுக்கு திருவமுது நடந்துவர வேண்டும் என்று வழிகாட்டுநெறி தந்து அரிசிகுறுணி அளவில் இருநாழிக்கும் 10ன் அளவு நெல்லை ஒரு நாழி அளவிற்கு அதற்குத் தரவேண்டும். பூசனை காலத்தில்  சோறு உண்பிக்க மூன்று பிராமணருக்கான சமையல் செலவு உட்பட நெல் முக்குறுணி அளவிற்கு கொடுக்க வழிகாட்டுநெறி தந்து இவற்றுக்கு அவள் தந்த புதுப்பொன்னாலான காசு இருநூறு ஆகும். இந்த இருநூறு பொற்காசில் 155 ஐ சுசீந்திரத்து தேவரடியாள் குன்றாண்டி திருவாண்டி என்பாள் கடனாகப் பெற்றுக் கொண்டாள். இதற்கான வட்டியை  இவள் ஒவ்வொரு நாளும் குறுணி அளவு அரிசி தரவேண்டும். இந்த குறுணி அரிசியில் ஐந்துநாழி ஈசன் திருவமுதுக்கும்  எஞ்சியவற்றில் திருமாலுக்கு திருவமுது சோறும் ஆக்க வேண்டும்.  இவள்  மூன்று நாழி அளவில் கொண்டு வரும் அரிசி பிராமணர் உணவிற்கு ஆகும். ஓராண்டில் இவள் மாதாமாதம் செலுத்த வேண்டிய பணம் ஒன்பது ஆகும். இவற்றை எல்லாம் செய்ய முடியாது நின்று போனால் 155 பொற்காசுகளுக்கு  ஒரு காசிற்கு கால் பொற் காசு என்ற கணக்கில் 39 பொற்காசையும் கூட்டி 155 + 39 = 194 பொற்காசிற்கு செலுத்த வேண்டிய அடமான நிலங்கள் வேட்கைக் குளத்திற்கு கிழக்கே உள்ள அமரபுயங்கன் வாய்க்காலுக்கு வடக்கேயும், இந்திர வீரவாய்க்கால்க்கு தெற்கேயும் உள்ளன என்று நில எல்லைகள் குறிக்கப்படுகின்றன. இவளோடு வேறு ஒரு தேவரடியார் செல்லாண்டி சேகராண்டாள் வாங்கிய பணதிற்கு என்ன செய்யவேண்டும் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இதன் கல்வெட்டு பெரிது என்பதால் இங்கே தரப்படவில்லை. இணைப்பில் அதைக் காணலாம்.

    உலகுமுழுதுடையாள் தந்த காசு உடனடியாக வட்டிக்கு விடப்பட்டு அதன் மூலம் வட்டியாக குன்றாண்டி திருவாண்டியிடம் அரிசி பெறப்பட்டு  உலக முழுதுடையாளின் திருவமுதப்படிக்கான வழிகாட்டுநெறி நிறைவேற்றப்படுகின்றது. இது ஏனெனில் பண்டு காசு புழக்கம் செல்வரிடம் மட்டுமே நிலவியது. பொது மக்கள் பண்டமாற்றில் வாழ்க்கையை நடாத்தினர். அதனால் இப்படி ஒரு மாற்று ஏற்பாடு செய்யவேண்டிய கட்டாயம் கோவில் பணியாளருக்கு ஏற்பட்டது. கோவில் பணியாளருக்கும் குன்றாண்டிக்கும் ஏற்பட்ட உடன்பாடே கல்வெட்டாகக் காட்சிப்படுகின்றது. பிற்பகுதியில் கல்வெட்டு பல்லிடங்களில் சிதைந்துள்ளதால் செய்தியை முழுவதுமாக அறிய முடியவில்லை. கல்வெட்டில் சேரநாட்டு வழக்குச்சொல் ஆங்காங்கே புழங்குகின்றது. கி.பி.

    1257 இல் ஜடவர்ம சுந்தர பாண்டியன் தான் ஆட்சியில் இருந்தான், வீரபாண்டியன் 1309 இல் தான் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறான். ஆண்டுக் கணக்கு வாசிப்பில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது. அல்லது சுந்தர பாண்டியனுக்கு வீரபாண்டியன் என இன்னொரு பெயர் இருந்துள்ளது எனக் கொள்ள வேண்டும்.

    பார்வை நூல்: கல்வெட்டு ஆராய்ச்சி, பக். 45 & 46, ஆசிரியர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. மூல நூல் Travancore archaeological series, Vol 5.  

    இனி, திருநெல்வேலி வள்ளியூரில் உள்ள மூன்றுமுக அம்மன் கோவிலில் பொறித்த கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோசடைய பன்மரான திரி
    2. புவன சக்ரவர்த்திகள் ஸ்ரீ வீர பாண்டிய
    3. தேவர் (க்)கு யாண்டு 4 வது (ராஜகம்பீ)
    4. ர வளநாட்டு திருவானைக்காவில்
    5. திருப்பதியில் சாந்திக் கூத்திகளில்
    6. சொக்கத் தாண்டாரான உலகமு
    7. ழுதுடையார் வள்ளியூர் வடக்கு வா
    8. சலில் தேவி கோயிலுக்கு உபான (ஜெ
    9. கதி குமுதோபரி பட்டிகையந்த மகா) 
    10. தேவியையும் வர்திச்சுத் தங்கள் பேத்தி(யா
    11. ரா) சிறிய பிள்ளை (யை உலகத் தாண்டாளுக்)
    12. கும் _ _ _ _ _ ல அவ _ _ _ _ _ _ _ _ யு
    13. ருளு _ _ _ _ _ _ _ கோயில் _ _ _ _ _ _ _ _
    14. ஞ்செ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _  உலகமுழுதுடையா
    15. த _ _ _ _ _ _ _ _ க்கு _ _ _ _ _

    சாந்தி கூத்தி – சாந்தி கூத்தாடும் ஆட்டத்தி; உபான ஜகதி – கருவறைப் புறச் சுவர் கீழ் பகுதி;  குமுதோபரி – விமான உறுப்புள் ஒன்று; பட்டிகை – கருவறை புறச் சுவர் உறுப்பு; வர்திச்சு – எழுந்துருளவித்து

    வேந்தன் வீரபாண்டியனின் 4 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1313)  ராஜகம்பீர வளநாட்டில் அமைந்த திருவானைக்காவல் கோவிலில் சாந்தி கூத்தாடும் கூத்திகளில் சொக்கத் தாண்டாள் எனும்  உலக முழுதுடையாள் வள்ளியூர் வடக்குவாசலில் அமைந்த அம்மன் கோவில் கருவறை புறச்சுவருக்கு உபான ஜகதி, குமுதம், முப்பட்டை ஆகியவற்றை கட்டிக் கொடுத்து அந்த அம்மனை எழுந்தருளச் செய்தாள். தன் பேத்தியோடு இக்கோவிலுக்கு வந்திருந்தாள். பிற செய்தி கொண்ட கல்வெட்டுப் பகுதி சிதைந்ததால் அச்செய்திகளை அறிய முடியவில்லை.

    வீரபாண்டியனின் 4 ஆம் ஆட்சி ஆண்டில் சொக்கத் தாண்டாள் தன் பேத்தியோடு இக்கோவிலுக்கு வந்திருந்தாள் என்றால் வீரபாண்டியன் முதுமையில் தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான் எனத் தெரிகின்றது. இளமையில் இவன் அவளை மணந்தான் என்பது புலனாகின்றது. சொக்கத் தாண்டாள் ஒரே காலத்தில் சுசீந்திரம் மற்றும் வள்ளியூருக்கு திருச்செலவு சென்றாள் என அறியலாகின்றது.

    பார்வை நூல்: கல்வெட்டு ஆராய்ச்சி, பக்.  48 & 49, ஆசிரியர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. மூல நூல் A.R.E. 1929-30 No 364 P 37.

    Share
  • 20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு

    -சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++++++

    ஊழி முதல்வன் உட்கொளும் மூச்சில்
    உப்பிடும் பிரபஞ்சக் குமிழி
    உடைந்து மீளும்!
    பரிதி விழுங்கிய கருந்துளை
    வயிற்றில் உயிர்த்தெழும் மீன்கள்!
    விண்வெளி விரிய விண்ணோக்கியின்
    கண்ணொளி நீண்டு செல்லும்!
    நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை
    ஊடுருவிக் காமிரா
    கண்வழிப் புகுந்த
    புதிய பூமிகள் இவை!
    பரிதி மண்டலம் போல்
    வெகு தொலைவில் இயங்கி
    சுய ஒளிவீசும்
    விண்மீனைச் சுற்றிவரும்
    மண்ணுலகம் இவை!
    ஈர்ப்பு விண்வெளியில் முதன்முறை
    பூமி போல் வாயு  சூழ்வெளி
    பூண்ட அண்டக்கோள் ஒன்றைக்
    கண்டுள்ளது கெப்ளர் விண்ணோக்கி!
    சில்லியின் வானோக்கி மூலம்
    விண்வெளி நிபுணர்
    கண்ட கோள்கள் பற்பல! ஆயினும்
    இன்னும் சவால் விட்டு
    கண்ணுக்குத் தெரியாது ஒளிந்த வண்ணம்
    தேடிக் கிடைக்காக் கோள்கள்
    கோடிக் கணக்கில்!

    +++++++++++++++

    20 ஆண்டுகள் விண்ணோக்கி ஐந்து புதிய புறக்கோள்கள் கண்டுபிடிப்பு

    2019 ஏப்ரல் வரை அண்டவெளியில் 4000 புறக்கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. முதல் புறக்கோள் 1995 ம்  ஆண்டில் வெளியிடப்பட்டது. அவற்றில் பெரும்பான்மையான புறக்கோள்கள் அவற்றின் பரிதிகளைச் சுற்றிவரும் பாதைகளின் காலங்கள் [Orbital Periods] குன்றியதாக இருந்தன. ஒரு புறக்கோளின் வசிப்பை உறுதியாக்க, அது அதன் பரிதியை ஒரு முறை அல்லது பல முறை சுற்றும் காலத்தை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு வானியலார் சில நாட்கள் முதல், பல பத்தாண்டுகள் வரை காத்துக் கண்காணிக்க வேண்டியுள்ளது. உதாரணமாக நமது பூமி சூரியனை ஒருமுறை சுற்ற ஓராண்டு ஆகும்போது, வியாழக்கோள் ஒருமுறை சுற்ற 12 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும்.

    அண்டவெளியில் புறக்கோள்களின் வசிப்பை நீண்ட காலம் கண்காணித்துக் கண்டுபிடிக்க, தனிப்பட்ட கருவிகள் ஏந்திய விண்ணோக்கிகள் தேவைப்படுகின்றன. தென் அமெரிக்கா சில்லியில் உள்ள, சுவிஸ் ஜெனிவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யூலார் விண்ணோக்கி [Swiss Euler Telescope at La Silla Observatory, Chile] அத்தகைய நெடுங்காலக் கண்காணிப்புக்குப் பயன்படுகிறது. அந்த விண்ணோக்கியில் 20 ஆண்டு காலமாய்ப் பல வானியல் விஞ்ஞானிகள் கூர்ந்து நோக்கி, ஐந்து புறக்கோள்களைக் கண்டுபிடித்துள்ளனர். அவற்றைக் காண இரண்டு முக்கிய மறைமுக முறைப்பாடுகளை  பயன்படுத்தினர்.

    ஆர வேக முறைப்பாடு [Radial Velocity Method]. இம்முறையில் கோளின் ஈர்ப்பு

    • விசைத் தாக்கம் பரிதியைப் பாதிப்பதை அளப்பது.
    • கோளின் குறுக்கீடு, சிறு மறைப்பு [Mini Eclipse] பாதிப்பை அளப்பது.

    அவ்விரு முறைப்படி ஐந்து புறக்கோள்கள் மிகத் தெளிவாகவும், மேலும் நான்கு புறக்கோள்களின் பாதைகள் கண்டறியப்பட்டன. அவற்றின் சுற்றுக் காலங்கள் [Orbital Periods] 15.6 & 40.4 ஆண்டுகட்கு இடைப்பட்டன. அவற்றின் நிறைகள் வியாழக் கோள் போல் சுமார் 3 முதல் 27 மடங்கு இருந்தன. அப்புதிய புறக்கோள்கள் கண்டுபிடிப்பு 15 ஆண்டு சுற்றுக் காலத்துக்கு மேற்பட்ட கோள் எண்ணிக்கையை 26 ஆகப் பெரிதாக்கி யுள்ளது.

    u

    +++++++++++++++
    https://youtu.be/g9pCLcZEJIw

    http://exoplanet.eu/
    http://www.ibtimes.com/gj-1132b-first-astronomers-detect-atmosphere-around-nearby-low-mass-super-earth-2522270
    ++++++++++++

    The rocky exoplanet GJ 1132b was first pinpointed in 2015 (Dana Berry)
    ++++++++

    பூமிபோல் சூழ்வளியுள்ள நீர்க்கோள் முதன்முறைக் கண்டுபிடிப்பு

    2017 ஏப்ரல் 6 ஆம் தேதி ஜெர்மன் மாக்ஸ் பிளாங்க் வானியல் ஆய்வக விஞ்ஞானிகள் பூதப்பூமி [Super-Earth GJ 1132b] ஒன்று சூழ்வெளி வாயு உள்ள நமது பூமிபோல் இருப்பதை முதன்முறை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளார். வாயு உள்ள குன்றிய நிறை கொண்ட அண்டக்கோள் நமது பூமிபோல் வடிவமும், நிறையும் ஒத்திருப்பதை தெரிவித்துள்ளார். அண்டவெளிக் கோளில் உயிரினம் இருப்பதற்கு இந்த புதிய கண்டுபிடிப்பு முக்கிய எட்டடி வைக்கும் என்று தெரிகிறது. மாக்ஸ் பிளாங்க் ஆய்வகத்து ஜெர்மன் விஞ்ஞானிகள் இதன் விண்மீன் [GJ 1132] காண தென்னமெரிக்கா, சில்லியில் உள்ள 2.2 மீட்டர் விண்ணோக்கி [ESO/MPG Telescope] பயன்படுத்தியுள்ளார். புதிய பூதப்பூமியின் நிறை நமது பூமிபோல் 1.6 மடங்கு. அதன் ஆரம் பூமிபோல் 1.4 மடங்கு. விஞ்ஞானிகளின் தற்போதைய குறிக்கோள் : புதிய பூமியில் உயிரின வளர்ச்சிக்கு உகந்த இரசாயனப் பொருள் கலந்த சூழ்வெளிக் காற்றுள்ளதா, போதிய உயிர்வாயு ஆக்சிஜென் உள்ளதா என்று அறிவதே. புதிய கோள் [GJ 1132b] அதன் செங்குள்ளி விண்மீனை [GJ 1132] சுற்றிவரும் பாதை, நமது பூமியிலிருந்து 39 ஒளியாண்டு தூரத்தில், வேலா தென்னக விண்மீன் மந்தையில் [Southern Constellation Vela] உள்ளது.

    Water vapour in Large Planet

    Gliese 1132 b
    EXOPLANET List of exoplanets

    Exoplanet Comparison GJ 1132 b.png
    Size comparison of Gliese 1132 b with Earth.

    PARENT STAR
    Star Gliese 1132
    Right ascension (α) 10h 14m 51.1s
    Declination (δ) −47° 09′ 12″
    Apparent magnitude (mV) 14.7
    Distance 39 ly
    (12 pc)
    Spectral type M3.5D
    ORBITAL ELEMENTS
    Orbital period (P) 1.6 d
    PHYSICAL CHARACTERISTICS
    Mass (m) 1.6 M
    Radius (r) 1.2 R
    Stellar flux (F⊙) 19 
    Temperature (T) 410 K (137 °C; 278 °F) K
    DISCOVERY INFORMATION
    Discovery date May 10, 2015 (announced)[1]November 12, 2015 (confirmed)[2]
    Discoverer(s) MEarth-South Array Team
    Discovery method Transit
    Discovery site Chile
    Discovery status Confirmed
    OTHER DESIGNATIONS
    Gliese 1132 b, Gl 1132 b, GJ 1132 b

    ஒரு கோள் தனது மூலச் சூரியனைக் கடந்து செல்லும் போது, இப்போது பயன்படுத்திய விதிமுறையைப் [Radial Velocity Technique] பின்பற்றி நீர் ஆவி, மற்றும் வேறு சூழ்வெளிக் கலவைகளையும் உளவிக் கண்டுபிடித்து விடலாம். கோளம் விண்மீனுக்கு வெகு தூரத்தில் இருந்தாலும், படமெடுத்துக் கோளின் சூழ்வெளியை அறிந்து விடலாம்.

    அலெக்ஸாண்டிரா லாக்வுட் [விஞ்ஞானத் தகவல் வெளியீட்டு ஆசிரியர்]

    இப்போதைய பொறிநுணுக்கம் பூமியை ஒத்த கோள்களைக் உளவிக் காண இயலாது. எதிர்கால ஜேம்ஸ் வெப் விண்ணோக்கி [James Webb Space Telescope] & 30 மீட்டர் விண்ணோக்கி [Thirty Meter Telescope] குளிர்ந்த கோள்களைக் காணவும், அவற்றில் நீர் உள்ளதா என்று ஆராயவும் உதவும்.

    ஜெஃப்ரி பிளேக் [பேராசிரியர் பிரபஞ்சவியல் இரசாயனம் & அண்டக்கோள் விஞ்ஞானி]

    Water found in exoplanet

    நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி புதிய புதையல் கோள்கள் கண்டுபிடித்தது

    2014 பிப்ரவரி 26 இல் நாசா தனது கெப்ளர் விண்ணோக்கியில் குறுகிய காலத்தில் பூமியைப் போலுள்ள 715 கோள்களை நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால், வேற்று சூரிய மண்டல விண்வெளிப் புதையலாகக் கண்டுபிடித்துள்ளது. அந்த 715 கோள்கள் தமது தனிப்பட்ட 305 வெவ்வேறு விண்மீன்களைச் சுற்றி வருகின்றன. இதுவரை நாசா 1700 [2014 பிப்ரவரி] கோள்களைக் கண்டுபிடித்துள்ளது. புதுக்கோள்களில் உயிரினம் வாழ நீரும், சூழ்வெளியும் உள்ளதா வென்று இப்போது தெரியாது. அவை குளிர்ந்த கோள்களா, சூட்டுக் கோள்களா என்றும் தெரியாது. அவற்றில் நான்கு கோள்கள் பூமியை ஒத்த வடிவமும், விண்மீனுகளுக்கு அருகில் உயிரின வசிப்பு அரங்குகளில் [Habitable Zones] இருந்தன. 2009 ஆண்டில் ஏவப்பட்டு முதலிரண்டு ஆண்டுகளில் கெப்ளர் விண்ணோக்கி உளவிக் கண்டுபிடித்த கோள்களே இந்த 715 புதையல் கோள்கள்.

    Hunt for Earth like planets

    சூடான புதிய பூதக்கோளில் நீர் ஆவி இருப்பு முதன்முறை காணப் பட்டது.

    நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் இயங்கும் பூதக்கோள் வியாழனைப் போன்ற ஒரு பெருங்கோளில் நீர் ஆவி [Water Vapour] இருப்பு முதன்முறை கண்டுபிடிக்கப்பட்டது. காலிஃபோர்னி யாவைச் சேர்ந்த கால்டெக் ஆய்வாளார்கள், ஒரு புதுவித பொறி நுணுக்கத்தைப் பின்பற்றி, புற அண்டங்களின் சூழ்வெளி வாயுக்களை ஆராய்ந்து, நீர் இருப்பதை உளவிக் கண்டுபிடித்துள்ளது. இந்த அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டவர் அலெக்ஸாண்டிரா லாக்வுட் [Alexandra Lockwood] என்று அழைக்கப்படும் ஒரு பட்டப் படிப்பு மாணவி. இம்முறையப் பயன்படுத்தி அண்டக் கோளில் உள்ள மற்ற சூழ்வெளி வாயுக்களையும் அறியமுடியும்.

    CHIO Observatory, Chile

    “இந்த இரண்டு நீர்க்கோள்கள் நமது பரிதி மண்டலக் கோள்களைப் போன்றவை அல்ல. அவை கரையில்லாத, முடிவற்ற கடல்களைக் கொண்டவை. ஆங்கே உயிரினங்கள் இருக்கலாம். ஆனால் அங்கிருப்போர் மனிதர் போல் பொறியியற் திறமை உடையவரா என்பது தெரியாது. இந்த நீர்க்கோள்களில் உயிரின வாழ்வு, உலோகம், மின்சாரம், நெருப்பு போன்றவை இல்லாது, கடலடியில்தான்  நீடிக்க முடியும். ஆயினும் அவ்விரண்டு நீல நிறக் கோள்கள், பொன்னிற விண்மீன் ஒன்றைச் சுற்றி வருவதைக் காண்பது வனப்புடன் இருக்கும். மேலும் அவற்றில் உயிரின இருப்பைக் கண்டுபிடித்த பொறிநுணுக்க அறிவுத்தரம் நம்மை வியக்க வைக்கும்.”

    லீஸா கால்டநேகர் [இயக்குநர் விஞ்ஞானி மாக்ஸ் பிளாங்க் வானியல் ஆய்வுக்கூடம்]

    கண்டுபிடித்த நீர்க்கோள்கள் கெப்ளர் -62e, கெப்ளர்-62f [Kepler -62e & Kepler -62f] எனப் பெயரிடப் பட்டுள்ளன. அவை கெப்ளர் -62 [Kepler -62] என்னும் விண்மீனைச் சுற்றி வருகின்றன. நீர்க்கோள் கெப்ளர் -62e திரண்ட முகில் வானைக் கொண்டது. கணனி மாடலின்படி துருவம் வரை முழுக்கவும் சூடான வெப்ப மயமானது [Warm and Humid]. தூரத்தில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62f கார்பன் டையாக்ஸைடு வாயுவை மிகுதியாகக் கொண்டு “கிரீன்ஹௌவுஸ் விளைவால்” சூடேறி நீர்மயத்தை நீடிக்கச் செய்கிறது. இல்லையென்றால் அதன் நீர்வளம் பனியாகி ஓர் பனிக்கோளாய் மாறிப் போயிருக்கும்.”

    டிமித்தர் ஸஸ்ஸெலாவ் [ஹார்வேர்டு வானியல் வல்லுநர்] [Dimitar Sasselov]

    Two Water Planets“ஆதிகாலத்துப் பூர்வீக உலகங்கள் இன்னும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கின்றன.”

    ரே வில்லார்டு & அடால்ஃப் ஷாலர் (Ray Villard & Adolf Schaller)

    “இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், உயிரினச் சின்னங்கள் இருப்பையும் கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.”

    ரே ஜெயவர்த்தனா (Ray Jayawardhana, Associate Professor of Astronomy, University of Toronto) (2007)

    Kepler -62 System

    நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறை இரண்டு நீர்க்கோள்களைக் கண்டு பிடித்தது

    2013 ஜூலை 6 ஆம் தேதி நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறை இரண்டு நீர்க்கோள்கள் சுற்றிவரும் ஒரு விண்மீனைக் கண்டுபிடித்தது. அந்த விண்மீனின் பெயர் கெப்ளர் -62 [Kepler -62]. விண்மீன் கெப்ளர் -62 நமது சூரியனை விடச் சிறியது. உஷ்ணமும் தணிந்தது. அந்த விண்மீனைச் சுற்றும் நீர்க்கோள்களின் பெயர்கள் : கெப்ளர் -62e, கெப்ளர் -62f [Kepler -62e and Kepler -62f]. நீர்க்கோள் கெப்ளர் -62e, அதன் விண்மீனை ஒருமுறைச் சுற்றும் காலம் 122 நாட்கள்; நீர்க்கோள் கெப்ளர் -62f விண்மீனைச் சுற்றும் காலம் 267 நாட்கள். அவற்றின் விண்மீன் குறுக்கீடு போக்கை நோக்கி அவற்றின் ஒப்புமை அளவுகள் அறிந்து கொள்ளப்படும். நீர்க்கோள் கெப்ளர் -62e, நமது பூமியை விட 60% பெரிதாகவும், நீர்க்கோள் கெப்ளர் -62f 40% பெரிதாகவும் இருப்பதாய்க் கணிக்கப்பட்டுள்ளன. வானியல் விஞ்ஞானிகள் நீர்க்கோள் இரண்டும் சுற்று வாயு மண்டலம் இன்றி பாறையாலும், நீராலும் உருவானவை என்று ஊகிக்கிறார். கெப்ளர் -62 விண்மீனை அருகில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62e, சற்று சூடாகவும், பூமியை விட மேகம் மூடியிருப்பதாகவும் தெரிகிறது. தூரத்தில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62f பேரளவு CO2 கரியமில வாயு மிகுந்து, “கிரீன் ஹவுஸ் விளைவால்” சூடேறி, முன்னதை விடத் தணிந்த உஷ்ண நிலையில் நீர்மயத்தைத் திரவ வடிவில் வைத்துள்ளது. இல்லையென்றால் அந்த அரங்கில் நீர்க்கோள் ஓர் பனிக்கோள் ஆகியிருக்கும்.

    நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி நீலக்கோள் ஒன்றைக் கண்டுபிடித்தது.

    2013 ஜூலை 11 இல் நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி பூமியிலிருந்து 63 ஒளியாண்டு தூரத்தில் உள்ள அண்டவெளி விண்மீனை ஒன்றைச் சுற்றி வரும் நீல நிற வாயுக் கோளைக் கண்டுபிடித்தது. நீலக்கோளின் பெயர் : HD 189733b. 2005 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்ட அந்தக் கோளின் மீது நீல நிறம் சிதறுவதாக முதலில் ஊகிக்கப் பட்டது. 2013 ஜூலையில் அதை ஹப்பிள் தெளிவாக மெய்ப்பித்தது. நீலக் கோள் அதன் தாய்ப் பரிதியிலிருந்து 2.9 மில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வருகிறது. மேலும் தனது ஒரு பாதி வடிவை விண்மீனுக்குக் காட்டி, மறு பாதி முகம் இருளில் தெரியாமல், ஈர்ப்பு விசையில் கட்டப் பட்டு [Gravitationally locked], நமது பூமியைச் சுற்றும் நிலவு போல் காணப்பட்டது. நீலக்கோளின் பகல் நேர உஷ்ணம் பயங்கரமானது : 2000 டிகிரி F. வாயுக்களின் வேகம் : 4500 mph. நீல நிறக் கோளின் [Cobalt Blue Colour] நீல நிறம் பூமியைப் போல் நீர் மீது ஒளிச் சிதறலால் எதிர்ப்படுவதில்லை. அந்தக் கோளின் மேக மண்டலத்தில் கலந்துள்ள சிலிகேட் துகள்களே [Silicate Particles] நீல நிறத்துக்குக் காரணம் என்பது அறிய வருகிறது. 2007 இல் நாசாவின் ஸ்பிட்ஸர் [Spitzer Space Telescope] விண்ணோக்கி அறிவித்தபடி, நீலக்கோளின் இரவு-பகல் உஷ்ணங்கள் வேறுபாடு 500 டிகிரி F என்று கணிக்கப்பட்டது.

    Einstein Planet

    பரிதியைப் போல் தெரியும் விண்மீனான எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் (Epsilon Eridani) வாயுத் தூசித் தட்டு ஒரு கோள் என்பது நிச்சயம். ஹப்பிள் மூலம் கண்டதால் அது தோல்வியான விண்மீனில்லை, ஓர் அண்டக்கோள் என்பது உறுதி! அது பெரிதளவில் இருந்தால், கோளுக்கும் விண்மீன் தூசிக்கும் தொடர்பில்லாத பழுப்புக் குள்ளி (Brown Dwarf) என்று சொல்லி விடலாம்.

    பார்பரா மெக் ஆர்தர் (Barbara McArthur, Project Leader, University of Texas) ”

    பூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்]. அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது. அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது. அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந் திருக்கலாம்.”

    ஸ்டெஃபினி உட்றி [Stephane Udry, Geneva Observatory]

    Hubble Space Telescope

    “மற்ற சுயவொளி வீசும் விண்மீன்களின் கோள்களை விட, கண்டுபிடிக்கப்பட்ட இந்த பூதக்கோள் ஒன்றுதான் உயிரின வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உட்பொருட்களும் கொண்டதாகத் தெரிகிறது. அக்கோள் 20 ஒளியாண்டு தூரத்தில் உள்ளதால், விரைவில் அங்கு செல்லும் திட்டங்களில்லை. ஆனால் புதிய உந்துசக்திப் பொறிநுணுக்கம் விருத்தியானல், எதிர்காலத்தில் அக்கோளுக்குச் செல்லும் முயற்சிகள் திட்டமிடப் படலாம். பேராற்றல் கொண்ட வானோக்கிகளின் மூலமாக அக்கோளைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடியவற்றை நிச்சயம் ஆய்ந்து கொள்ளப் பயிற்சிகள் செய்வோம்.”

    அலிஸன் பாயில் [Alison Boyle, Curator of Astronomy, London’s Science Museum]

    “அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம்.  இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”

    டாக்டர் சார்லஸ் பீச்மென்  [Dr. Charles Beichman, Director Caltech’s Michelson Science Center]

    “பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம்.  ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா?  அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன?  அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா?  அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா?  நிச்சயமாக அந்த கோள் எந்த விதமான சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”

    டாக்டர் விக்டோரியா மீடோஸ் [Member, Terrestrial Planet Finder, NASA]

    “தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது!  சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) விண்மீனைச் சுற்றி வருகிறது!  மிக்க மகத்தானது ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது !  எல்லாவற்றுக்கும் உன்னதமான கோள் இனிமேல்தான் வரப் போகிறது !”

    மிசியோ காக்கு (Michio Kakau, Professor Theoretical Physicist, City College of New York) (2007)

    Share
  • (Peer reviewed) கருந்துளைக்குப் பின்னால் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு

    (Peer reviewed) கருந்துளைக்குப் பின்னால் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு

    நடராஜன் ஸ்ரீதர்                 &         பேராசிரியர் சந்திரமோகன் ரெத்தினம்

    முதுஅறிவியல் மற்றும் இயற்பியல் ஆய்வுத் துறை
    ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரி
    தேவகோட்டை, தமிழ்நாடு

    natarajangravity@gmail.com      |          rathinam.chandramohan@gmail.com

    ========================================================================================

    கருந்துளைக்குப் பின்னால் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு

    முன்னுரை

    இங்கு ஒரு கற்பனையான சூழ்நிலையை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளலாம். ராம் மற்றும் அவனுடைய நண்பர் முகில் இருவரும் தனித் தனி விண்வெளிக் கப்பல்களில் ஏறித் தொலைதூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்திற்குச் செல்வதற்காகப் பயணிக்கின்றனர். அவ்வாறு செல்லும்போது ராம், அவன் நண்பன் முகிலுக்குச் சிறிது கண்ணாமூச்சி விளையாட்டு காட்ட நினைக்கிறார். அதாவது அவர்கள் சென்று கொண்டிருக்கும் போது, சிறிது நேரம் முகிலை விட்டு தள்ளி மாயமாக மறைந்து நிற்க திட்டமிடுகிறார் ராம். இதற்காகத் தேர்ந்தெடுத்தது ஒரு கருந்துளையை.

    ராமின் மனத்தில் உதித்த திட்டம் என்னவென்றால், கருந்துளையானது அதை நோக்கி வரும் அனைத்துப் பொருட்களையும் உள்ளிழுத்துக் கொள்வது போல், அதிலிருந்து எந்த ஒளியையும் வெளியிடாதது போல், தாமும் கருந்துளையின் பின்னால் ஒளிந்து கொண்டால் தன்னில் இருந்து வரும் ஒளியைக் கருந்துளையானது வெளிவிடாது என்பதை ஒரு கணக்கீடாகக் கொண்டு கருந்துளைக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறான். ஆயினும் முகில், ராமின் இருப்பிடத்தை வெகு தொலைவிலிருந்து மிகச் சரியாகக் கணித்து அவனை அடைந்துவிடுகிறான். இதற்கு என்ன காரணம்? எவ்வாறு இது சாத்தியம்? என்பதை இக்கட்டுரை வாயிலாகக் காணலாம். மேலும்

    SageMath என்ற கணினி மென்பொருள் மூலம் வரையப்பட்ட படத்தினையும் மற்றும் சமீபத்தில் படம் பிடிக்கப்பட்ட கருந்துளையின் படத்தினையும்  இக்கட்டுரையின் விளக்கப் பகுதிகளில் காணலாம்.

    கருந்துளைகள்

    கருந்துளைகள் என்பவை சார்பியல் தத்துவத்தின் சமன்பாடுகளின் ஆய்வுக் கூடம் என்றே சொல்லலாம். கருந்துளையானது மிக அதிகமான ஈர்ப்பு வலிமையுடன் இருப்பதாலும், பிரபஞ்சத்தில் மற்றெந்தப் பொருட்களை விடவும் மிக அதிகமாகக் காலவெளியை வளைப்பதாலும், கருந்துளையானது ஆய்வாளர்களுக்கு எப்போதும் புதிராகவும் மற்றும் பல புதிய ஆய்வு முடிவுகளுக்கு வித்தாகவும் அமைகிறது. நியூட்டன் அவரது ஆய்வு முடிவுகளின்படி ஈர்ப்பு விசை என்பது, இரு பொருள்களுக்கு இடையே உள்ள விசை என்று தெரிவித்திருந்தார். பின்னாட்களில் இத்தத்துவத்தை ஐன்ஸ்டைன் தனது மாறுபட்ட ஈர்ப்பு விதிகளால் மாறுதல் செய்தார்.   ஒரு பொருளின் ஈர்ப்பு என்பது, அப்பொருள் அதைச் சுற்றியுள்ள காலவெளியை எவ்வளவு தூரம் வளைக்கும் என்பதைப் பொறுத்து முடிவு செய்யப்படுகிறது. அதிக நிறையுள்ள பொருள் அதைச் சுற்றிய காலவெளியை மிக அதிகமாகவும்,  குறைவான நிறையுள்ள பொருள் அதைச் சுற்றியுள்ள காலவெளியைக் குறைவாகவும் வளைக்கிறது. பொதுவாகக் காலவெளியின் வளைவே ஈர்ப்பின் தத்துவம் என்று புரிந்துகொள்ள முடியும்.

    கருந்துளைகளும் சுவார்ட்ஸ்சைல்டு ஆரமும்

    கருந்துளைகள் பொதுவாக மிகவும் அதிகமான ஈர்ப்பின் வலிமையைக் கொண்டதாக இருக்கும். எரிந்து முடிந்த ஒரு நட்சத்திரத்தின் ஆரமானது சுவார்ட்ஸ்சைல்டு ஆரம் அளவிற்குச் சுருங்கும் போது, அந்நட்சத்திரமானது கருந்துளையாக மாறிவிடுகிறது[1]. சுவார்ட்ஸ்சைல்டு ஆரம் என்பது அந்த நட்சத்திரத்தில் நிறைக்கு நேர்த்தகவில் இருக்கும். இதைக் கீழ்வரும் சமன்பாட்டின் மூலம் பெறலாம்.

            R= 2MG/c²

    சமன்பாட்டில் கண்ட ஆரத்தின் அளவு, வெவ்வேறு நிறை கொண்ட பொருட்களுக்கு வெவ்வேறு அளவில் மாறுபடும். உதாரணமாக [5],

    1. சூரியன்  – 3 கிலோமீட்டர்
    2. பூமி – 8.7 மில்லி மீட்டர்
    3. சந்திரன் – 0.11 மில்லி மீட்டர்
    4. வியாழன் – 2.2  மீட்டர்
    5. நியூட்ரான் நட்சத்திரம் – 4.2 கிலோமீட்டர்

    இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளவை, வெவ்வேறு வானியல் பொருட்களுக்கான சுவார்ட்ஸ்சைல்டு ஆரம் ஆகும். அதாவது இந்த ஆரத்தின் அளவிற்கு அப்பொருட்கள் சுருங்கும் போது அவை கருந்துளைகளாக மாறிவிடும். சுவார்ட்ஸ்சைல்டு ஆரத்திற்குக் கீழ் உருவாகும் கருந்துளை மிக அதிகமான ஈர்ப்பின் வலிமையுடனும், அதில் விழும் எந்த ஒரு பொருளையும் அதிலிருந்து தப்ப விடாத அளவுக்கு ஈர்ப்பின் வலிமையுடன் காணப்படும். மிக வேகமாகச் செல்லும் ஒளி கூட இக்கருந்துளையின் ஈர்ப்பு எல்லைக்குள் சென்று விட்ட பிறகு மறுபடி வெளியே தப்பிச் செல்ல முடியாது.

    ஈர்ப்புகாலவெளியின் வளைவு

    கருந்துளைகள் அதிகமான நிறையினைக் கொண்டிருப்பதனால் இவை காலவெளியை மிக அதிகமாக வளைக்கின்றன. இதைச் சுற்றி வரும் எப்பொருளும் அதிக முடுக்கத்துடன் இருந்தால் மட்டுமே இதன் ஈர்ப்பு விசைக்குள் விழுந்துவிடாமல் தப்பியோட முடியும். நமக்குத் தெரிந்த மிக அதிகமான வேகமுள்ள இயக்கமான ஒளியானது  கருந்துளையைச் சுற்றி வளைந்து செல்கிறது. இவ்வாறு ஒளியானது கருந்துளையைச் சுற்றி வளைந்து செல்வது ஈர்ப்பு ஆடி விளைவு (Gravitational Lensing Effect) என வரையறுக்கப்படுகிறது [2].

    மேலும் ஒளியானது கருந்துளையைச் சுற்றி வரும்போது ஒரு வளையம் போன்ற அமைப்பினை அங்கு உருவாக்குகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் அமைப்பு ஐன்ஸ்டைன் வளையம் எனவும் அழைக்கப்படுகிறது. சுவார்ட்ஸ்சைல்டு ஆரத்திலிருந்து மும்மடங்கு தொலைவு வரையான தொலைவை (3 R_s) மிகக் குறைந்த தொலைவாகக் கொண்டு, கருந்துளையின் அருகில் ஒரு பொருளானது அதன்  ஈர்ப்பினால் பிடிக்கப்படாமல் தப்பிச் செல்ல முடியும். இத்தொலைவுக்குக் குறைவாகச் செல்லும் பொருளானது கருந்துளையின் ஈர்ப்பு விசையினால் பாதிக்கப்பட்டுக் கருந்துளைக்குள் செல்லத் தொடங்கி விடும். ஒளிக்கு  இந்த மிகக் குறைந்த தொலைவானது சுவார்ட்ஸ்சைல்டு ஆரத்தில் ஒன்றரை மடங்குத் (1.5 R_s) தொலைவாக அமையும். ஒன்றுக்கொன்று இணையாகச் செல்லும் ஒளிக்கற்றைகள்  2.6 மடங்கு சுவார்ட்ஸ்சைல்டு ஆரத் தொலைவை (2.6 R_s) அடையும்போது அவை ஐன்ஸ்டீன் வளையங்களை உருவாக்குகின்றன [4].

    படம் : 1 SageMath  என்ற கணினி மென்பொருள் மூலம் உருவாக்கப்பட்ட, கருந்துளையைச் சுற்றி காலை வெளியானது அமைந்திருக்கும் படம்

    இப்படத்தில் கருந்துளையானது ஒளியினை வளைப்பதைக் காட்டுகிறது. அதாவது கருந்துளையை நோக்கி வரும் போட்டான்களானவை கருந்துளையைச்  சுற்றி ஒரு வளைவான பாதையில் பயணிக்கிறது. இவ்வாறாக ஒளி வளைந்து செல்வது கருந்துளையைச் சுற்றி ஒரு வளையம் போன்ற அமைப்பாகக் காணப்படுகிறது. இப்படமானது SageMath[3] என்ற கணினி மென்பொருள் மூலம் உருவாக்கப்பட்டது. இப்படம் உருவாக்குவதற்கு, பின்னணியில் மென்பொருளில் கணக்கீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    சமீபத்தில் வெளியான கருந்துளையின் புகைப்படம்

    சமீபத்தில் வெளியான கருந்துளையில் முதல் புகைப்படமும் இதே போன்றவொரு அமைப்பை வெளிப்படுத்துகிறது. விளம்பி ஆண்டு பங்குனி மாதம் 27ஆம் தேதி (10-4-2019) இந்த அரிய சாதனையானது சாத்தியமானது. இப்படமானது கருந்துளையின் நிழலை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு உருவாக்கியுள்ள  நிழலானது கிட்டத்தட்ட நமது சூரியக் குடும்பத்தை விட மிகப் பெரியதாக இருப்பதாகவும் இப்படம் காட்டுகிறது. M87 நட்சத்திரத் தொகுப்பில் இக்கருந்துளையானது படம் பிடிக்கப்பட்டுள்ளது. கருந்துளை Event Horizon Telescope என்ற தொலைநோக்கி அமைப்பின் கூட்டு முயற்சியால் படம் பிடிக்கப்பட்டுள்ளது. பூமியின் வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 8 பெரிய தொலைநோக்கிகளின் உதவியுடன் இத்தரவுகள் பெறப்பட்டு ஆராய்ச்சியின் முடிவு உருவாக்கப்பட்டுள்ளது.

    உண்மையில் இந்த படமானது கருந்துளையின் நிகழ்வு எல்லையினை வெளிப்படுத்துகிறது. M87 நட்சத்திரக் கூட்டமானது மிகப் பெரியதாக இருப்பதால் அதைத் தொலைநோக்கியில் படம்பிடிப்பது எளிதாக இருக்கும். ஆனால் அதன் மையத்தில் அமைந்துள்ள கருந்துளையானது ஆய்வு செய்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும். காரணம் M87 நட்சத்திரக் கூட்டத்துடன் ஒப்பிடுகையில் கருந்துளையின் பருமனானது மிகவும் சிறியதாக உள்ளது. பொதுவாகக் கருந்துளைக்கு வெகு தொலைவில் இருந்து அதன் நிகழ் வெல்லையை அடையும் ஒரு  பொருள், அக்கருந்துளையை விட்டுத் தப்பிச் செல்ல முடியாத அளவுக்கு அதன் ஈர்ப்பு விசைக்குள் சிக்கிக் கொள்ளும்.

    படம் 2: M87 என்ற நட்சத்திரத் தொகுதியில் நடுவே உள்ள கருந்துளை. இது கருந்துளையின் அமைப்பைப் பற்றிக் கிடைத்துள்ள முதல் புகைப்படம் ஆகும்.

    இக்கருந்துளையானது பூமியிலிருந்து 55 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது கிட்டத்தட்ட 100 மில்லியன் கிலோமீட்டர்கள் குறுக்கும் நெடுக்குமாகப் பரந்து விரிந்துள்ளது. நமது சூரியக் குடும்பத்தின் மொத்த குறுக்களவினை விடவும் இக்கருந்துளை மிகப் பெரியது. 6.5 பில்லியன் மடங்கு சூரியனை விட மிக அதிக நிறை கொண்டதாக இக்கருந்துளை உள்ளது. இவ்வாறு தொலைவுகளைக் கணக்கிடும்போது கருந்துளையைச் சுற்றி வரும் ஒளியானது சார்பியல் தத்துவ விதிகளின்படி சில நுணுக்கமான இயக்க அமைப்புகளுக்குள் சென்றுவிடுகிறது. சுவார்ட்ஸ்சைல்டு ஆரத் தொலைவின்  ஒன்றரை மடங்கு ஆரத்தினை விடச் சற்று அதிகமான தொலைவில் செல்லும்போது, ஒளியானது கருந்துளையை எப்போதும் சுற்றி வர ஆரம்பிக்கிறது.

    கருந்துளைக்குப் பின்னால்கற்பனைச் சூழல்

    இந்தத் தத்துவங்களை நாம் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்த  கற்பனையான  சூழலுக்குப் பயன்படுத்திப் பார்ப்போம். அதாவது வெகு தூரம் காலவெளியில் மேற்கொள்ளும் ஒரு பயணத்தில்,  கருந்துளை ஒன்றினருகில் வரும் இரு நண்பர்களில் ஒருவர் கருந்துளைக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளத் திட்டமிடுகிறார்.  கருந்துளையின் ஈர்ப்பு விசைக்குள் அகப்படாத ஒரு பாதுகாப்பான தொலைவில்  ராம் தனது விண்கலத்தை மாறாத முடுக்கத்துடன் செலுத்துகிறார். இக்கருந்துளையின் எதிர்ப்பக்கத்தில் முகில் மாறாத முடுக்கத்துடன் தனது விண்கலத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறார். இப்போது கேள்வி என்னவெனில் முகிலின் பார்வையிலிருந்து ராம் முற்றிலுமாக மறைக்கப்பட்டு விடுவாரா என்பதே. ஏனெனில் கருந்துளையானது ஒளியை முற்றிலுமாக உள்வாங்கி கொள்ளும். ஆனால் இக்கேள்விக்கு மாறுபட்ட பதில்களைச் சார்பியல் தத்துவம் முன்வைக்கிறது.

    ராம், முகிலின் பார்வையில் இருந்து மறைய, முகிலுக்கு எதிர்ப்பக்கத்தில் கருந்துளைக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார். ராமின் விண்கலத்திலிருந்து வரும் ஒளியானது கருந்துளையின் நிகழ்வெல்லையின் அருகில் குறுகிய தொலைவில் வளைந்து, கருந்துளையின் மறுபக்கத்தை வந்து சேரும். இவ்வாறு வரும் ஒளியானது ராமிற்குக் கிடைத்துவிடும். எனவே கருந்துளையின் பின்னால் ஒளிந்துள்ள முகிலை ராம் எளிதாக அடையாளம் கண்டுகொள்வார். எனவே கருந்துளைக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் திட்டமானது தோல்வியினையே தழுவும்.

    முடிவுரை

    இந்த நிகழ்விற்குக் காரணம் கருந்துளையானது அதைச் சுற்றியுள்ள காலவெளியை மிக அதிகமாக வளைப்பதேயாகும். அதிக நிறை கொண்ட கருந்துளையானது மிக அதிகமாகக் காலவெளியை வளைக்கிறது. இதன் காரணமாக ஒளியானது அக்கருந்துளையைச் சுற்றிச் செல்லும். சமீபத்தில் கிடைத்த கருந்துளையின் முதல் படமும் இவ்வகையான நிகழ்வை உறுதி செய்கிறது. இவற்றின் மூலம் கருந்துளைக்குப் பின்னால் ஒரு கற்பனையான கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் போது விளையாட்டில் உள்ளவர்களுக்குத் தோல்வியே கிடைக்கும் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

    மேற்கோள்கள்

    1. Chandrasekhar, S., & Thorne, K. S. (1985). The mathematical theory of black holes.
    2. Weinberg, S. (1972). Gravitation and cosmology: principles and applications of the general theory of relativity.
    3. Stein, W. A., Abbott, T., & Abshoff, M. (2016). SageMath
    4. Hartle, J. B. (2003). Gravity: An introduction to Einstein’s general relativity.
    5. http://astronomy.swin.edu.au/cosmos/S/Schwarzschild+Radius Accecced 14-04-19
    ——————————————————————————————————————————————————————————
    ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

    ஆய்வாளர்கள் “விஞ்ஞானப் புனைவு” [Science Fiction] முறையில் தொடங்கி, சமீபத்தில் உலக வானியல் விஞ்ஞானிகள் எட்டு ரேடியோ விண்ணோக்கிகள் மூலம், வெகு தூரத்தில் உள்ள M87 ஒளிமந்தையை நோக்கி, அந்தக் காட்சிகளைச் சேமித்து, முதன்முதல்  வெளியிட்ட பூதப்பெரும் “கருந்துளைப்” படப்பிடிப்பைப் பற்றி எழுதி, “விஞ்ஞானப் புனைவு” போல் முடிக்கின்றனர்.

    இதில் புனைந்துள்ள கற்பனைக் காட்சி, மிகச் சவாலானதும் சாகசமானதும் ஆகும். கருந்துளையின் அளவுடன் ஒப்பிட, அதில் சிக்காமல் அதனைச் சுற்றிப் பயணிக்க முடியும் என்ற பார்வை மிகத் துணிச்சலானது. ஆனால், கருந்துளைக்கு முன் எது, பின் எது? நாம் பார்க்கும் கோணம் முன் என்றால், அதற்கு நேர் எதிர்ப் புறத்தில் பின் இருக்க வேண்டும். அப்படி, கருந்துளையின் ஆதி முனையைப் பற்றி இன்னும் மனிதன் கண்டறியவில்லை. உண்மையில் இங்கே கருந்துளையின் பக்கவாட்டில் இருவரும் பயணிக்கின்றனர். இருவருக்கும் இடையில் கருந்துளை இருக்கிறது. இதனைக் கருந்துளைக்குப் பின் எனச் சொல்வதை விட, கருந்துளையின் மற்றொரு புறத்தில் எனலாம். எனினும் இந்த முயற்சிக்குப் பாராட்டுகள்.

    ——————————————————————————————————————————————————————————
    Share
  • முதன்முதல் பூதப்பெரும் கருந்துளைப் படப்பிடிப்பு – விஞ்ஞானிகள் சாதனை

    சி. ஜெயபாரதன், B.E. (HONS), P. Eng. (Nuclear), Canada

    ++++++++++++++++++

    1. https://youtu.be/rcWKKqsCANs
    2. https://youtu.be/vzQT74nNGME
    3. https://www.bbc.co.uk/programmes/m00042l4
    4. https://www.bbc.co.uk/programmes/p0755t2s
    5. https://en.wikipedia.org/wiki/Black_hole
    6. https://youtu.be/OfMExgr_vzY
    7. https://www.bbc.com/news/science-environment-47873592

    +++++++++++++

    M87Image copyright

    DR JEAN LORRE/SCIENCE PHOTO LIBRARY

    Image caption Astronomers have suspected that the M87 galaxy has a supermassive black hole at its heart from false colour images such as this one. The dark centre is not a black hole but indicates that stars are densely packed and fast moving

    +++++++++++++++++++

    அகிலத்தின் மாயக் கருந்துளை
    அசுரத் திமிங்கலம்!
    உறங்கும் பூத உடும்புகள்!
    ஒளி விழுங்கி! விண்மீன் விழுங்கி!
    அண்டக் கல்லறை!
    ஒளிபுகா இருட்டறை!
    கண்ணுக்குத் தெரியாத புள்ளிப்
    பெருநிறை!
    பற்றி ஈர்க்கும் விசை மூலம் 
    பார்க்க முடியும்!
    படைப்பின் அற்புதம் ஒளிமந்தைகள்!
    நடுவில் உள்ள கருந்துளைப்
    படப் பிடிப்பு ஓர் அதிசய நிகழ்ச்சி!
    அபூர்வ நிகழ்ச்சி!
    ஒரு படம்  ஆயிரம் பதங்கட்குச் சமம்!
    எட்டு விண்ணோக்கி 
    கூட்டிணைப்பில்
    எடுத்த அபூர்வப் படப்பிடிப்பு இது!
    இருநூறு வானியல் உலக நிபுணர்
    இருபது ஆண்டுகள் உழைத்து
    இயற்கைப் படைப்பு ஒன்றைக் 
    கண்ணால் காண வைத்தது
    இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின்
    ஒரு பெரும் சாதனை!
    தனிப் பெரும் விஞ்ஞானச் சவால்,
    மனிதரின் மகத்துவம்!

    +++++++++++++++++++++

     

    Drives

    Image caption: KATIE BOUMAN

    Katie Bouman is the MIT student who developed the algorithm that pieced together the data from the Event Horizon Telescopes. Without her contribution the project would not have been possible.

    +++++++++++++++++++++++++

    உலக விஞ்ஞானிகளின் ஒருபெரும் முதன்மைச் சாதனை

    இதுவரை கண்ணுக்குப் புலப்படாமல், பூதப் பெரும் ஈர்ப்பு விசையால் மட்டும் இருப்பதாகக் கருதப்படும்  கருந்துளையின் மெய்யான படத்தைப், பூமியில் தூரத்தில் உள்ள எட்டு ரேடியோ விண்ணோக்கிகள் கூர்ந்து படமெடுத்து, ஈன்ற பேரளவு தகவல் இலக்கத்தைச் [Data] 10 ஆண்டுகளாய்த் திரட்டிச், சுமார் 200 விஞ்ஞானிகள்  உறுதியாக வெளியிட்ட முதல் கருந்துளைப் படம்  இது.  மற்றும் பன்னாட்டு உலக விஞ்ஞானிகளின் உன்னத கூட்டு வெளியீடாக  மதிப்பிடப் படுகிறது.

    அந்த அசுரக் கருந்துளை பேரளவு நிறை கொண்டது.  6.5 பில்லியன் மடங்கு சூரியன் எடைக்குச் சமமானது.  அந்தக் கருந்துளை, பூமியிலிருந்து 55 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில், உள்ள M87 எனப்படும் ஒளிமந்தையின் [Galaxy M87]  மையத்தில் உள்ளது.

    Blackness of space with black marked as center of donut of orange and red gases

    The supermassive black hole at the core of supergiantelliptical galaxyMessier 87, with a mass ~7 billion times the Sun’s, as depicted in the first image released by the Event Horizon Telescope (10 April 2019).Visible are the crescent-shaped emission ring and central shadow, which are gravitationally magnified views of the black hole’s photon ring and the photon capture zone of its event horizon. The crescent shape arises from the black hole’s rotation and relativistic beaming; the shadow is about 2.6 times the diameter of the event horizon.
    ++++++++++++++++

    அந்தக் கருந்துளையைச் சுற்றி வட்டமாய் உள்ளப் பேரொளிமய வளையம், பேரளவு உஷ்ணமுள்ள வாயுப் பிளாஸ்மா [தீ வளையம்]. [Plasma Ring of Fire].  அந்த டோனட் வடிவத் தீவளையம் நிகழ்வுத் தொடுவான்  [Event Horizon] என்று குறிப்பிடப்படுகிறது.  அந்தத் தொடுவான் அகலம் 40 பில்லியன் கி.மீ. [24 பில்லியன் மைல்].  காலக்ஸி ஒளிமந்தையின் கருந்துளை, கண்ணுக்குப் புலப்படாவிட்டாலும்,  அதைச் சுற்றியுள்ள வாயுத் தீவளையத்தை  [நிகழ்வுத் தொடுவான்]  ரேடார் விண்ணோக்கிகள் மூலம் படமெடுக்க முடியும்.  அவ்விதம் உலகின் தூர எல்லைகளில் உள்ள [ஹவாயி, மெக்ஸிகோ, அரிசோனா, ஸ்பெயின், சில்லி, தென் துருவம்] எட்டு  ரேடார் விண்ணோக்கிகளின் கூட்டுப் படப்பிடிப்பே இந்த முதல் கருந்துளைப் படவெளியீடு. இது ஆங்கிலத்தில் “நிகழ்வுத் தொடுவான் விண்ணோக்கி கூட்டுப் படப்பிடிப்பு”   [ EHT – Event Horizon Telescopes Collaboration ]  என்று அழைக்கப்படுகிறது.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், 80 ஆண்டுகட்கு முன்பே  கண்ணுக்குத் தெரியாத இந்தக் கருந்துளை இருப்பைத் தனது “ஈர்ப்பியல் நியதி” அல்லது “பொது ஒப்பியல் நியதி   [Theory of Gravity]  OR [General Relativity] மூலம் முன்னறிவிப்பு செய்துள்ளார்.  இப்போது முதல் கருந்துளைப் படப்பிடிப்பு, படக்காட்சி ஐன்ஸ்டைன் கூற்றை, மீண்டும் மெய்ப்பித்து உள்ளது.

    +++++++++++++++++++++++++

    What is a black hole?

    • A black hole is a region of space from which nothing, not even light, can escape
    • Despite the name, they are not empty but instead consist of a huge amount of matter packed densely into a small area, giving it an immense gravitational pull
    • There is a region of space beyond the black hole called the event horizon. This is a “point of no return”, beyond which it is impossible to escape the gravitational effects of the black hole

    +++++++++++++++++++++++

    South Pole Telescope

    EHT [Event Horizon Telescope]

    EHT array

    Image caption : The eventual EHT [Event Horizon Telescopes]  array will have 12 widely spaced participating radio facilities.

    +++++++++++++++++

    Black Hole Team of Scientists

    Black Hole -2

    எங்கள் விண்ணோக்க ஆய்வுகளில் தீவிர எக்ஸ்-ரே சுரப்பிகள் இருப்பினைக் காட்டுவது, ஒருவேளைக் கருந்துளைகளுக்கு ஊட்டம் அளித்து உருவாக்குவதாகக் கருதப்படலாம். கருந்துளைகள் விண்மீன்களிலிருந்து விடுபடக் கதிர்வீச்சு அயனிகளுக்கு உதவும் புயல்களை உருவாக்கும்.  அதன்படி பிரபஞ்சம் ஒளி ஊடுருவும் தன்மை பெற கருந்துளைகள் உதவி இருக்கலாம்.

    ஒரு கருந்துளைக்குள் பிண்டம் விழும்போது, கருந்துளை சுழலத் துவங்கிறது. விரைவான சுழற்சி ஓரளவு பின்னப் பகுதிப் பிண்டத்தை வெளியேற்றும். கருந்துளைகள் எழுப்பும் காந்தப் புயல்கள் புறவூதா ஒளி வெளியேற விடுவிப்பு வழியை உண்டாக்கலாம்.

    – ஃபிளிப் காரட் [ பேராசிரியர், ஐயோவா பல்கலைக் கழகம், பௌதிக வானியல் துறை, தலைமை ஆய்வாளர்]

    [youtube https://www.youtube.com/watch?v=4Arj1SBpEy0?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    கருந்துளை பற்றிய புதியதோர் கருத்தோட்டம்

    2016 மே மாதத்தில் ஐயோவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வானியல் பௌதிகப் பேராசிரியர் ஃபிளிப் காரட் [Philip Kaaret] மற்றும் அவரது ஆய்வுக் குழுவினர், பூமியைச் சுற்றிவரும் சந்திரா விண்ணோக்கி மூலம், விண்மீன் உருவாக்கும் அரங்கத்தில், [Tol 1247-232] ஒற்றை எக்ஸ்-ரே சுரப்பி ஒளி வீச்சும், ஒளித் தணிப்பும் மாறி, மாறி வரக் கண்டனர். குழுவினர் அது விண்மீன் வடிவாக்கம் இல்லை என்று கருதுகிறார்.  நமது சூரியன் அதற்கு ஓர் உதாரணம்.  ஒளிவீச்சு மாற்றம் ஏற்பட அது கருந்துளை போல், ஓர் சிறு அண்டமாக இருக்க வேண்டும் என்று ஃபிளிப் காரட் கூறுகிறார்.

    [youtube https://www.youtube.com/watch?v=vzQT74nNGME?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    ஆனால் கருந்துளை போல் அசுர ஈர்ப்பு விசையால் அனைத்து அண்டங்களையும் இழுத்து விழுங்கும் போது, அது பிண்டத்தை வெளியாக்குமா என்னும் வினா எழுகிறது. உடன்பதில் அதற்கு, யாருக்கும் தெரியாது என்பதே. காரணம் கருந்துளை பற்றித் தனித்து அறிவது மிகக் கடினம். ஏனெனில் காலக்ஸி ஒளிமந்தையில் நடுவில் ஆழ்ந்து பதிக்கப் பட்டுள்ளது கருந்துளை. நெருங்கிவரும் ஒளி கூடத் தப்ப முடியாது.  சமீபத்தில் வானியல் நிபுணர் கூறும் விளக்கம் :  வெளித்தள்ளும் பிண்டத்தின் உந்துவிசை கருந்துளை சுழற்சி விசைக்கு ஊட்டம் அளிக்கிறது.

    [youtube https://www.youtube.com/watch?v=rcWKKqsCANs?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    பிரபஞ்சப் பெருவெடிப்புக்குப் பிறகு, நமது பிரபஞ்சம் அனைத்திலும் இருட்டடிப்பு நேர்ந்தது.   அந்த தீவிரக் கொந்தளிப்பு நிகழ்ச்சி, அகிலத்தைக் குலுக்கி, கலக்கி, கனல் வாயுப் புகை மூட்டம் ஒளியை மூடிவிட்டது.  அடுத்து ஒரு பில்லியன் ஆண்டுக்குப் பிறகு பிரபஞ்சம் விரிய ஆரம்பித்து ஒளி புகும்படி வசதியானது.  பிறகு விண்மீன்கள் நிறைந்த ஒளிமந்தை காலக்ஸிகள் தோன்றி பிரபஞ்சத்தை நிரப்பின. அதுவே நாமிருக்கும் இப்போதைய பிரபஞ்சம்.

    +++++++++++++++++++++

    A Black Hole

    கடவுள் எப்படி இந்த உலகைப் படைத்தது என்று நான் அறிய விரும்புகிறேன். இந்தக் கோட்பாடு அந்தக் கோட்பாடு என்பதைக் கேட்பதில் எனக்கு இச்சையில்லை. அந்தப் படைப்புக் கடவுளின் உள்ளக் கருத்துகளைத் தேட விழைகிறேன்; மற்றவை எல்லாம் அதன் விளக்கங்கள்தான்.

    -ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (காலவெளிக்கு அப்பால் பிரபஞ்சங்கள்)

    (காலம் என்னும்) நான்காவது பரிமாணம் 1910 ஆண்டுகளில் பெரும்பாலும் புழங்கும் ஒரு வீட்டுச் சொல்லாக ஆகிவிட்டது. பிளாடோ, கந்தின் பூரண மெய்ப்பாடு (An Ideal Platonic or Kantian Reality) முதல் துவங்கி வானுலகும் உட்படத் தற்காலப் புதிரான விஞ்ஞானப் பிரச்சனைகள் அனைத்துக்கும் விடையாக எல்லாராலும் அது ஏற்றுக் கொள்ளப்படும்.

    -பேராசிரியை டாக்டர் லிண்டர் ஹென்டர்ஸன் (கலையியல் விஞ்ஞானம்)

    பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தில் புதிரான விசித்திரங்கள் ! ஆயினும் கருந்துளை கள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன ! எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி வீசும் விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்துபோய் திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் சிதைந்து “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை ஆவது. அப்போது கருந்துளை யின் அழுத்தம், திணிவு கணக்களவில் முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !

    விண்வெளி விடைக் கைநூல் (The Handy Space Answer Book)

     

    Star Blast to form a Black Hole

    பிரபஞ்ச விஞ்ஞான மேதை ஸ்டீஃபென் ஹாக்கிங் 

    இருபது, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுகளின் ஒப்பற்ற பௌதிக மேதையாகக் கடுமையான நோயில் காலந் தள்ளி 2016 இல் 74 வயதான ஸ்டீஃபென் ஹாக்கிங் விஞ்ஞான ஆற்றலில் கலிலியோ, ஐஸக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆகியோ ருக்கு இணையாகக் கருதப்படும் பிரிட்டிஷ் விஞ்ஞானி ! விரிந்து செல்லும் பிரபஞ்சத்தின் தோற்றம், மறைவு [The Origin & Fate of the Universe], ஈர்ப்பியல்பின் கதிர்த்துகள் நியதி [Quantum Theory of Gravity], நிச்சயமற்ற நியதி [The Uncertainty Principle], அடிப்படைத் துகள்கள், [Elementary Particles], இயற்கையின் உந்துவிசை [The Force of Nature], பிரபஞ்சத்தின் கருங்துளைகள் [Black Holes], காலத்தின் ஒருதிசைப் போக்கு [The Arrow of Time], பௌதிகத்தின் ஐக்கியப்பாடு [The Unification of Physics] ஆகியவற்றில் தனது ஆழ்ந்த கருத்துக்களைத் தெளிவாக, எளிதாக எடுத்துக் கூறியவர். பிரமாண்டமான பிரபஞ்ச அண்டங்களின் இயக்க ஒழுக்கங்களையும், கண்ணுக்குப் புலப்படாத அடிப்படைத் துகள்களின் [Fundamental Particles] அமைப்பையும் ஒன்றாக விளக்கக் கூடிய “மகா ஐக்கிய நியதி” [Grand Unified Theory, (GUT)] ஒன்றை விஞ்ஞானிகள் என்றாவது ஒருநாள் உருவாக்க வேண்டும் என்று முற்பட்டு வந்தவரில் ஒருவர், ஸ்டீஃபென் ஹாக்கிங்!

    Computer Simulated Image of A Black Hole

    இங்கிலாந்தில் ஹாக்கிங் லுகாஸியன் கணிதப் பேராசிரியராக [Lucasian Professor of Mathematics] கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்தவர். முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாக அதே பதவியில் அதே இடத்தில் அமர்ந்திருந்தவர், ஈர்ப்பாற்றலைக் கண்டுபிடித்த கணிதப் பௌதிக மேதை, ஸர் ஐஸக் நியூட்டன் (1642-1726), நோபெல் பரிசு பெற்றக் கணித மேதை பால் டிராக் [Paul Dirac (1902-1984)] என்பவரும் அதே இடத்தில் பின்னால் பதவி வகித்தவர்!

    பிரபஞ்சத்தின் கருந்துளை என்றால் என்ன ?

    1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியின் அடிப்படையில் ஜெர்மன் வானியல் விஞ்ஞானி கார்ல் சுவார்ஸ்சைல்டு (Karl Schwarzschild), பிரபஞ்சத்தில் முதன்முதல் கருந்துளைகள் இருப்பதாக ஓரரிய விளக்கவுரையை அறிவித்தார். ஆனால் கருந்துளைகளைப் பற்றிய கொள்கை, அவருக்கும் முன்னால் 1780 ஆண்டுகளில் ஜான் மிச்செல், பியர் சைமன் லாப்பிளாஸ் (John Michell & Pierre Simon Laplace) ஆகியோர் இருவரும் அசுர ஈர்ப்பாற்றல் கொண்ட “கரும் விண்மீன்கள்” (Dark Stars) இருப்பதை எடுத்துரைத்தார்கள். அவற்றின் கவர்ச்சிப் பேராற்றலிலிருந்து ஒளி கூடத் தப்பிச் செல்ல முடியாது என்றும் கண்டறிந்தார்கள் ! ஆயினும் கண்ணுக்குப் புலப்படாத கருந்துளைகள் மெய்யாக உள்ளன என்பதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள நூற்றி முப்பது ஆண்டுகள் கடந்தன !

    Stephen Hawking

    1970-1980 ஆண்டுகளில் பேராற்றல் படைத்த தொலைநோக்கிகள் மூலமாக வானியல் விஞ்ஞானிகள் நூற்றுக் கணக்கான காலாக்ஸிகளை நோக்கியதில், கருந்துளைகள் நிச்சயம் இருக்க வேண்டும் என்னும் கருத்து உறுதியானது. கருந்துளை என்பது ஒரு காலவெளி அரங்கில் திரண்ட ஓர் திணிவான ஈர்ப்பாற்றல் தளம் (A Black Hole is a Region of Space-time affected by such a Dense Gravitational Field that nothing, not even Light, can escape it). பூமியின் விடுதலை வேகம் விநாடிக்கு 7 மைல் (11 கி.மீ./விநாடி). அதாவது ஓர் ஏவுகணை விநாடிக்கு 7 மைல் வீதத்தில் கிளம்பினால், அது புவியீர்ப்பை மீறி விண்வெளியில் ஏறிவிடும்.. அதுபோல் கருந்துளைக்கு விடுதலை வேகம் : ஒளிவேகம் (186000 மைல்/விநாடி). ஆனால் ஒளிவேகத் துக்கு மிஞ்சிய வேகம் அகிலவெளியில் இல்லை யென்று ஐன்ஸ்டைனின் நியதி எடுத்துக் கூறுகிறது. அதாவது அருகில் ஒளிக்கு ஒட்டிய வேகத்திலும் வரும் அண்டங்களையோ, விண்மீன்களையோ கருந்துளைகள் கவ்வி இழுத்துக் கொண்டு போய் விழுங்கிவிடும்.

    Medal of Science to Hawking

    கண்ணுக்குத் தெரியாத அந்த அசுரக் கருந்துளைகளை விஞ்ஞானிகள் எவ்விதம் கண்டுபிடித்தார்கள் ? நேரடியாகக் காணப்படாது, கருந்துளைகள் தனக்கு அருகில் உள்ள விண்மீன்கள், வாயுக்கள், தூசிகள் ஆகியவற்றின் மீது விளைவிக்கும் பாதிப்புகளை விஞ்ஞானிகள் கண்டு ஆராயும் போது அவற்றின் மறைவான இருப்பை அனுமானித்து மெய்ப்பிக்கிறார்கள். நமது சூரிய மண்டலம் சுற்றும் பால்மய வீதியில் பல விண்மீன் கருந்துளைகள் (Stellar Black Holes) குடியேறி உள்ளன ! அவற்றின் திணிவு நிறை (Mass) சூரியனைப் போன்று சுமார் 10 மடங்கு ! பெருத்த நிறையுடைய அவ்வித விண்மீன் ஒன்று வெடிக்கும் போது அது ஓர் சூப்பர்நோவாக (Supernova) மாறுகிறது ! ஆனால் வெடித்த விண்மீனின் உட்கரு ஒரு நியூட்ரான் விண்மீனாகவோ (Neutron Star) அல்லது திணிவு நிறை பெருத்திருந்தால் கருந்துளையாகவோ மாறிப் பின்தங்கி விடுகிறது.

    பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தில் புதிரான விசித்திரங்கள் ! ஆயினும் கருந்துளைகள் தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன ! எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி வீசும் விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்துபோய் திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் சிதைந்து “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை ஆவது. அப்போது கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்களவில் முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !

    Formation of a Black Hole

    அண்டவெளிக் கருந்துளைகள் பற்றி ஸ்டீஃபன் ஹாக்கிங் ஆராய்ச்சிகள்

    1965-1970 இவற்றுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில், பிரபஞ்ச வியலைப் [Cosmology] பற்றி  அறியப் புது கணித முறைகளைக் கையாண்டு, ஸ்டீஃபன் பொது ஒப்பியல் நியதியில்  [General Theory of Relativity] ஒற்றை முறைகேடுகளை [Singularities] ஆராய்ந்து வந்தார்.  அப்பணியில் அவருக்கு விஞ்ஞானி ராஜர் பென்ரோஸ் [Roger Penrose] கூட்டாளியாக  வேலை செய்தார். 1970 முதல் ஸ்டீஃபன் அண்ட வெளிக் கருந்துளைகளைப் [Black Holes] பற்றி  ஆய்வுகள் செய்ய ஆரம்பித்தார்.  அப்போது அவர் கருந்துளை களின் ஓர் மகத்தான  ஒழுக்கப்பாடு குணத்தைக் [Property] கண்டு பிடித்தார்! ஒளி கருந்துளைக் கருகே செல்ல முடியாது! ஒளித் துகளை அவை விழுங்கி விடும்! ஆதலால் அங்கே காலம்  முடிவடைகிறது! கருந்துளையின் வெப்பத்தால் கதிர்வீச்சு எழுகிறது! ஜெர்மன் விஞ்ஞானி  வெர்னர் ஹைஸன்பர்க் ஆக்கிய கதிர்த்துகள் நியதி [Quantum Theory], ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்  படைத்த பொது ஒப்பியல் நியதி இரண்டையும் பயன்படுத்திக் கருந்துளைகள் கதிர்வீச்சை  [Radiation] வெளி யேற்றுகின்றன என்று ஹாக்கிங் நிரூபித்துக் காட்டினார்!

    அந்த வெற்றியின் முடிவில் ஹாக்கிங் பொது ஒப்பியல் நியதியையும், கதிர்த்துகள்  நியதியையும் ஒன்றாக இணைக்க முற்பட்டு, பிரபஞ்ச இயக்கங்களை ஒருங்கே விளக்கக்  கூடிய ‘மகா ஐக்கிய நியதி ‘ [Grand Unified Theory, GUT] ஒன்றை உண்டாக்க முடியுமா என்று  முயன்றார்! மர்மமான கருந்துளைகளைப் பற்றிய விபரங்களை அறிய முடியாத  சமயத்தில், அவற்றைப் பற்றி ஆராய முற்பட்டார். 1971 இல் பிரபஞ்சப் படைப்பை  ஆராய்ந்து, பெரு வெடிப்புக்குப் [Big Bang] பிறகு ஒரு பில்லியன் டன் கனமான, ஆனால்  புரோட்டான் [Proton] அளவு வடிவில் மிகச் சிறிய பல அண்டங்கள், தோன்றி யிருக்க  வேண்டும் என்று எடுத்துக் கூறினார்! அவற்றை ‘மினிக் கருந்துளைகள்’ [Mini Black Holes] என்றார், ஹாக்கிங்! பொது ஒப்பியல் நியதியைப் பின்பற்றும், பிரம்மாண்டமான ஈர்ப்பியல்  கவர்ச்சியைக் கொண்ட இந்த மினிக் கருந்துளைகள் சிறியதாய் இருப்பதால், கதிர்த்துகள்  யந்திரவியல் நியதியும் [Laws of Quantum Mechanics] இவற்றுக்குப் பொருந்தும் என்று  ஹாக்கிங் கூறினார்! கதிர்த்துகள் நியதியின் விதிப்படி, கருந்துளைகள் சேமிப்புத் தீரும்  வரைப் பரமாணுக்களை [Subatomic Particles] வெளியேற்றி, முடிவில் வெடித்துச்  சிதைகின்றன என்று கண்டறிந்தார்! ஸ்டீஃபன் ஹாக்கிங் கண்ட இந்த அரிய விஞ்ஞான  முடிவு, கருந்துளைகளின் ஆயுட் கால வரலாற்றில் பூர்வீக வெப்ப யியக்கவியல் [Classical  Thermodynamics], கதிர்த்துகள் யந்திரவியல் [Quantum Mehanics] இரண்டுக்கும் தொடர்புள்ளது  என்று எடுத்துக் காட்டும் முக்கியத்துவம் பெற்றது!

    மேலும் ஒரு மகத்தான ஹாக்கிங் சாதனை 1983 இல் ஸான்டா பார்பராவைச் சேர்ந்த ஜிம்  ஹார்ட்டிலுடன் [Jim Hartle of Santa Barbara] ஆராய்ந்து அறிவித்த ‘விளிம்பற்ற கூறுபாடு’ [No  Boundary Proposal]! விண்வெளி, காலம் இரண்டும் வரையரை கொண்டவை [Space & Time are  finite]! ஆனால் அவற்றுக்கு எல்லையோ, விளிம்போ இருக்க முடியாது [They do not have any  boundary or edge]!

    ஸ்டீஃபன் ஹாக்கிங் படைத்த நூல்கள், பெற்ற பாராட்டுகள்

    1973 இல் எல்லிஸுடன் [G.R.S Ellis] எழுதிய ‘விண்வெளிக் காலத்தின் பேரளவு அமைப்பு’  [The Large Scale Structure of Space Time], 1981 இல் எழுதிய ‘பிரம்மாண்ட விண்வெளி பெரு ஈர்ப்பியல்’ [Superspace & Supergravity], 1983 இல் எழுதிய ‘மிக இளைய பிரபஞ்சம்’ [The Very  Early Universe]. ஸ்டீஃபன் எழுதி 1988 இல் வெளியிட்ட ‘காலத்தின் ஒரு சுருக்க வரலாறு ‘ [A  Brief History of Time] சிறப்பு விற்பனை நூலாக பல மில்லியன் பிரதிகள் விற்கப் பட்டன! 1993  இல் எழுதிய ‘கருந்துளைகள், குழந்தை அகிலங்கள்’ [Black Holes & Baby Universes]. 1992 இல்  படாதிபதி எர்ரல் மாரிஸ் [Errol Morris] ஸ்டீஃபன் ஹாக்கிங் ‘வாழ்க்கையும் பணியும்’ என்னும்  தலைப்பில் ஒரு திரைப்படம் எடுத்து, அவர் எழுதிய ‘காலத்தின் ஒரு சுருக்க வரலாறு’  என்னும் நூலுக்கு வடிவம் தந்துள்ளார்! மிக இளைய வாலிப வயதிலே ஸ்டீஃபன் F.R.S  [Fellow of Royal Society] பெற்று, 12 கெளரவப் பட்டங்களையும் இதுவரைப் பெற்றுள்ளார்.  அவர் 1989 இல் ‘மதிப்பு மிகு தீரர்’ [Champian of Honour], பெயர் எடுத்து, அமெரிக்காவின்  தேசிய விஞ்ஞானப் பேரவையில் [National Academy of Sciences] உறுப்பினர் ஆனார்!

    1991 மார்ச் 5 ஆம் தேதி இரவு 10:45 மணிக்கு ஹாக்கிங் வீடு திரும்பும் போது, சக்கர  நாற்காலியின் முன்னும் பின்னும் சிவப்பு விளக்குகள் மின்ன, அவர் வீதியைப் பாதி  கடந்து செல்கையில், வேகமாய் எதிர்த்து வந்த கார் வாகனம் ஒன்று எதிர்ப்பட பணிப் பெண் [நர்ஸ்] ‘அங்கே பாருங்கள்’ என்று அலறினாள்! ஆனால் ஸ்டீஃபன் தப்ப முடிய  வில்லை! வாகனம் வேகமாய்ச் சக்கர  நாற்காலியை மோதித் தள்ள, ஹாக்கிங் வீதியில்  குப்புற விழுந்தார்! அந்தக் கோர விபத்து சக்கர நாற்காலியைச் சிதைத்து, மின்கணனியை  உடைத்து, அவரது இடது கையையும் முறித்து விட்டது! தலையில் பல வெட்டுக்  காயங்களுடன் எப்படியோ ஹாக்கிங் உயிர் தப்பினார்! அவருக்குப் பதிமூன்று இடங்களில்  தலையில் தையல் போட வேண்டிய தாயிற்று! பலமுறைக் காப்பாற்றி விட்ட கடவுள்,  இந்த விபத்திலும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கைப் பாதுகாத்து விட்டார்! சரியாக இரண்டு நாள்  கழித்து, ஹாக்கிங் வேலை செய்ய ஆய்வுக் கூடத்திற்குக் கிளம்பினார்!

    2018 ஆம் ஆண்டு மார்சு 13 ஆம் தேதி தனது 76 ஆம் வயதில் ஸ்டீஃபன் ஹாக்கிங் காலமானார்.   ஹாக்கிங் கடும் நோயுடன் துன்புற்றாலும்,  சீக்கிரம் நடுத்தர வயதில் மரிப்பார் என்று எதிர்பார்த்தாலும், அவர் பல்லாண்டு காலம் வீல்சேரில் மௌனமாய் வாழ்ந்து விண்வெளித் தோற்றம், கருந்துளை, பெருவெடிப்பு விளக்க விஞ்ஞானத்தை விருத்தி செய்தார்.  காலவெளிக் கருந்துளை ஆய்வு, பிரபஞ்சத் தோற்ற விளக்கம் போன்ற புதிய விஞ்ஞான  ஆக்கத்திற்கு இதுவரை,  அவருக்கு  நோபெல் பரிசு கிடைக்காமல் போனது விஞ்ஞான உலகின் புறக்கணிப்பைக் காட்டுகிறது !

    ஆதாரங்கள்:

    1. A Brief History of Time, By: Gene Stone & Stephen Hawking [1992]
    2. Scientific Genius, By: Jim Glenn [1996]
    3. Stephen Hawking ‘s Universe, By: John Boslough [1889]
    4. A Brief History of Time, By: Stephen Hawking [1988]
    5.  http://www.vallamai.com/?p=54549 (பிரபஞ்ச விஞ்ஞான  மேதை டாக்டர் ஸ்டீ·பென் ஹாக்கிங்)
    6. https://jayabarathan.wordpress.com/2007/12/07/black-holes/ [பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள்  ! பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes)]

    7.  http://www.biography.com/people/stephen-hawking-9331710
    8. http://en.wikipedia.org/wiki/Stephen_Hawking  (February  12, 2015)

    9. http://www.cbc.ca/news/world/stephen-hawking-dead-obituary-1.4575341 [March 13, 2018]

    10.  http://www.spacedaily.com/reports/Stephen_Hawking_a_brief_history_of_genius_999.html  [March 14, 2018]

    11. http://www.bbc.com/news/uk-43396008  [March 14, 2018]

    12. https://www.livescience.com/65185-what-is-black-hole-event-horizon.html?utm_source=llm-newsletter&utm_medium=email&utm_campaign=20190410-llm [April 9, 2019]

    13. https://www.bbc.com/news/science-environment-47873592 [ April 10, 2019]

    14. https://www.vox.com/science-and-health/2019/4/11/18306110/first-image-black-hole-eht-event-horizon-singularity  [April 11, 2019]

    15. https://www.sciencemag.org/news/2019/04/black-hole?utm_campaign=news_weekly_2019-04-12&et_rid=263416574&et_cid=2765249 [April 11, 2019]

    16 https://en.wikipedia.org/wiki/Black_hole [ April 13, 2019 ]

    17. https://science.nasa.gov/astrophysics/focus-areas/black-holes

    18. https://spaceplace.nasa.gov/black-holes/en/

    19. https://www.bbc.com/news/science-environment-47873592

    ***********************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com

    ***********************

    Share
  • (Peer Reviewed) செவ்வாய் கிரகப் பயணம் – தொலைநோக்குப் பார்வை

    முனைவர் தி.தெய்வசாந்தி,
    சர்வதேச ஆராய்ச்சி மையம்,
    கலசலிங்கம் பல்கலைக்கழகம்,
    கிருஷ்ணன்கோயில், தமிழ்நாடு – 626126.
    மின்னஞ்சல்: ttheivasanthi@gmail.com
    இணையத்தளம்: www.theivasanthi.weebly.com

     செவ்வாய்க் கிரகப் பயணம் – தொலைநோக்குப் பார்வை

    முக்கியக் குறிப்புகள்

    1) பஞ்சபூத சக்திகளின் அடிப்படையில் செவ்வாயில் உயிர் வாழ்க்கைச் சாத்தியம்

    2) இந்திய வானியல் அறிவு – ஹோஹ்மான் ட்ரான்ஸ்ஃபர் ஆர்பிட் – தொடர்பு

    3) விண்கலங்கள் / ஏவுகணைகள் அனுப்ப, புதிய முறை

    செவ்வாய் கிரகத்தின் ஆங்கிலப் பெயரான “மார்ஸ்” என்பது, ரோமன் போர்க் கடவுளைக் குறிக்கிறது. சூரியக் குடும்பத்தில் இரண்டாவது மிகச் சிறிய இக்கிரகம், சூரியனிலிருந்து நான்காவது வட்டத்தில் உள்ளது. இதன் மேற்பரப்பிலுள்ள, இரும்பு ஆக்சைடு (ஹெமட்டைட்), இக்கிரகத்திற்குச் சிவந்த நிறத் தோற்றத்தை அளிப்பதால், “சிவப்பு கிரகம்” எனவும் அழைக்கப்படுகிறது. இக்கிரகமானது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமிக்கு அருகில் வருகிறது. அப்பொழுது, இக்கிரகத்தை வெறுங்கண்ணால் காண முடியும். தெய்மோஸ் (விட்டம் சுமார் 8 மைல்) மற்றும் போபோஸ் (விட்டம் சுமார் 14 மைல்கள்) என்ற சிறிய, ஒழுங்கற்ற வடிவிலான, இரண்டு இயற்கை துணைக்கோள்கள் இதனைச் சுற்றி வருகின்றன. இவற்றின் பெயர்களான போபோஸ் என்றால் பீதி / பயம் மற்றும் தெய்மோஸ் என்றால் பயங்கரவாதம் என்பதும் பொருள். போபோஸ் ஆனது, மேற்கில் உதித்து, கிழக்கில் மறைகிறது.

                  மங்கள்யான் அனுப்பிய செவ்வாயின் படம். நன்றி: இஸ்ரோ. 

    செவ்வாய் கிரகத்தில் மெல்லிய வளிமண்டலம், எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள் மற்றும் பனிப் படலங்கள் உள்ளன. அங்குள்ள, “ஒலிம்பஸ் மோன்ஸ்” என்ற மலை, சூரிய குடும்பத்திலுள்ள இரண்டாவது மிக உயர்ந்த மலை ஆகும். “வாலீஸ் மரிநேரிஸ்” என்பது, அங்கே, காணப்படுகின்ற ஒரு பெரிய பள்ளத்தாக்கு ஆகும். வட துருவத்தின், 40% பரப்பினை, உள்ளடக்கிய, “ஸ்மூத் பொரியலிஸ்” என்ற பெரிய வடிகால் உள்ளது. அக்கிரகத்தின் பாறைகளை ஆரய்ந்ததில், 3.5 – 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று தெரிகிறது. அக்கிரகத்தில், காந்தப் பரப்புகள் / துருவங்கள், சமுத்திரங்கள் மற்றும் கடல் மட்டங்கள் இல்லை.

    செவ்வாயின், வெப்பநிலை குறைந்தபட்சம் -143 °C லிருந்து அதிகபட்சம் 35 °C என்ற அளவில் உள்ளது. அக்கிரகத்தின், பருவ காலநிலைகள் பெரும்பாலும் பூமியைப் போன்று இருந்தாலும், பூமியின் பருவங்களை விட இருமடங்கு என்ற அளவில் உள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தூரத்தை விட, சூரியனுக்கும் செவ்வாய்க்கும் உள்ள தூரம் அதிகம் என்பதுதான், அதற்குக் காரணம். சூரியனில் இருந்து அதன் சராசரி தூரம், சுமார் 230 மில்லியன் கி.மீ., அதாவது, பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை விட 1.52 மடங்கு அதிகம். அது, ஒருமுறை, சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் 687 (பூமி) நாட்கள் ஆகும். அதன் ஒரு நாள், ஒரு புவி நாளை விட சிறிதளவு அதிகம்: 24 மணி நேரம், 39 நிமிடங்கள், மற்றும் 35.244 வினாடிகள். அதன் ஒரு ஆண்டு 1.8809 பூமியின் ஆண்டுக்குச் சமமாகும்.

    செவ்வாய் கிரகத்தின் விட்டமானது,  பூமியின் விட்டத்தில் சுமார் பாதியாகும். அதன் அடர்த்தி, பூமியை விடக் குறைவாகும். அங்கு, சிலிக்கான், ஆக்சிஜன், உலோகங்கள், மற்றும் தாதுக்கள் போன்றவை காணப்படுகின்றன. குறைந்த கொதிநிலை உடைய குளோரின், பாஸ்பரஸ், சல்பர் போன்றவை, பூமியை விட அதிக அளவில் காணப்படுகின்றன; தவிர, இரும்பு, மக்னீசியம், அலுமினியம், கால்சியம், பொட்டாசியம் மிக அதிகமாக உள்ளன. அதன், இரு துருவங்களிலும் பனியடுக்குகள் உள்ளன. அவற்றின் மீது கார்பன்-டை-ஆக்சைடு, ஒரு மெல்லிய படலமாக, உறைந்துள்ளது.

    செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதாக, 1965ஆம் ஆண்டு வரை, நம்பப்பட்டு வந்தது. அண்மையில், அதன் துருவங்களில் பனிக்கட்டிகள் அதிக அளவில் இருப்பது ராடார்கள் மூலம் தெரிய வந்துள்ளது. வெப்பமான மாதங்களில் பாயும் நீர் சாத்தியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மண்ணில் 1.5% முதல் 3% வரை நீர் உள்ளதாக 2013ஆம் ஆண்டில், நாசாவின் ரோவர் கண்டறிந்துள்ளது.

    செவ்வாயைச் சுற்றும் செயற்கைக் கோள்கள், அங்கு 96% கார்பன் டை ஆக்சைடு, சிறிய அளவில் ஆர்கான், நைட்ரஜன், ஆக்ஸிஜன், நீர், அம்மோனியா, மீத்தேன் மற்றும் ஃபார்மல்டிஹைடு இருப்பதாகத் தெரிவித்துள்ளன. இதன் மூலம், உயிரின வாழ்க்கை, அங்கு சாத்தியம் என்பதற்கு உரிய ஆதாரங்கள் தென்படுகின்றன. ஜெர்மன் விண்வெளி மையம், செவ்வாயின் தட்ப வெப்பச் சூழ்நிலை, வளிமண்டல அழுத்தம், கனிமங்கள், ஒளி ஆகியவற்றைக் கணக்கிட்டு, பாசிப் பூஞ்சையானது, அங்கு வாழ முடியும் என்று தெரிவித்துள்ளது.

    மீத்தேன் வாயுவானது, உயிரினக் கழிவுகள் மட்கும் பொழுதும் அல்லது செர்பென்டினைசேஷன் (serpentinization) எனப்படும் உயிரியல் அல்லாத செயல்முறை, (அதாவது, நீர், கார்பன் டை ஆக்சைடு, மற்றும் ஒலிவைன் சம்பந்தப்பட்ட பொருள்களில் நடைபெறும் வேதிவினைகள்) மூலமும் உற்பத்தி செய்யப்படும். எனவே, மீத்தேன் வாயுவை மட்டும் வைத்து, உயிரினங்களின் வாழ்க்கை, அங்கு சாத்தியம் என்று உறுதிபடத் தெரிவிக்க இயலாது.

    பீனிக்ஸ் செயற்கைக் கோளிலிருந்து, பெறப்பட்ட தகவல்களின் மூலம், அக்கிரக மண்ணில் காரத் தன்மையும் (pH 8.3), தாவரங்கள் வளர்ச்சிக்குத் தேவையான மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் மற்றும் குளோரின் போன்ற தனிமங்கள் இருப்பதும் அறியப்பட்டுள்ளது. பஞ்சபூதங்கள் எனப்படும், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி (நிலம்) என்ற ஐந்து அடிப்படை / ஆதாரச் சக்திகள் செவ்வாய் கிரகத்தில் காணப்படுவது, அங்கு உயிரினங்களின் வாழ்க்கை சாத்தியம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

    நான்காவது நூற்றாண்டு சீன வானியல் அறிஞர்கள், செவ்வாய் பற்றி அறிந்து இருந்தார்கள் என்பதைச் சீனாவின் பண்டைய நூல்கள் உறுதிப்படுத்துகின்றன. “சூரிய சித்தாந்தம்” என்ற இந்திய வானியல் நூல், செவ்வாய் கிரகத்தின் விட்டம் மதிப்பிடப்பட்டிருப்பதாக, ஐந்தாவது நூற்றாண்டிலேயே தெரிவிக்கின்றது. கிழக்கு ஆசிய கலாச்சாரங்களில், “பஞ்சபூதம்“ தத்துவங்கள் அடிப்படையில், அக்கிரகம், “தீக்கோள்” எனக் குறிப்பிடப்படுகிறது.

    வேதங்களில், அக்கிரகம், பூமியின் மகன் என்று கூறப்பட்டுள்ளது. அது, ரோமன் நாட்டின் போர் மற்றும் கொலைக் கடவுள் ஆகும். அதற்கு, அடையாளமாக ஈட்டி மற்றும் கேடயம் உள்ளது. அக்கிரகத்தின் மண் மற்றும் மனித இரத்தத்தின் ஹீமோகுளோபின் இரண்டும் இரும்பு செறிந்தவை. இதன் காரணமாக, அவை தனித்துவமான ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் தோற்றமளிக்கின்றன. சோதிடவியலில், சிவப்பு கிரகமான செவ்வாய், மங்கள், அங்காரகன், இரக்த வர்ணன் (இரத்த போன்ற சிவப்பு நிறத்தில் இருப்பது) மற்றும் பூமா(பூமி மகன்) என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேலும் அது, போர்க்கடவுள் என்றும், பிரம்மச்சாரி என்றும் கூறப்பட்டுள்ளது. அது, பிருத்வி, பூமி எனப்படும் பூமாதேவியின் மகன் என்றும், பூமாதேவியினால் வளர்க்கப்பட்டது என்றும் கருதப்படுகிறது. இராசி மண்டலத்தின், 12 இராசிகளில், ஒவ்வொரு இராசியிலும் 57.25 நாட்கள் இருக்கும் செவ்வாயானது, சூரியனைச் சுற்றிவர 687 நாட்கள் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆர்பிட்டர்கள், லேண்டர்கள், ரோவர்கள் உடைய ஆளில்லா விண்கலங்களைச் செவ்வாய்க்கு அனுப்பியுள்ளன. தற்பொழுது, ஏழு செயற்கைக் கோள்கள், அதாவது, மார்ஸ் ஒடிசி, மார்ஸ் எக்ஸ்பிரஸ், மார்ஸ் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர், மாவன் மற்றும் செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன் என்ற ஐந்தும் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையிலும், மார்ஸ் எக்ஸ்புளோரேசன் ரோவர் எனப்படும் ஆப்பர்சூனிட்டி மற்றும் செவ்வாய் அறிவியல் ஆய்வுக் கூடம் எனப்படும் க்யூரியாசிட்டி என்ற இரண்டும் செவ்வாயின் மேற்பரப்பிலும் சுற்றி வருகின்றன. இவற்றின் மூலம், செவ்வாய் பற்றிய வானியல் ஆய்வு எளிதில் சாத்தியமாகிறது.

    உலகின் சிறந்த கண்டுபிடிப்புகளுள் ஒன்றாக, சமீபத்தில், டைம்ஸ் பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்ட, செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன் (MOM) திட்டம், “மங்கள்யான்” என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது (சமஸ்கிருதத்தில் “மங்களா” என்பது “செவ்வாய்” என்றும், “யானா” என்பது “வாகனம்” என்றும் பொருளாகும்). சதீஷ் தவான் விண்வெளி மையம் (ஸ்ரீஹரிகோட்டா, ஆந்திர பிரதேசம்) இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தால் (ISRO), பிஎஸ்எல்வி (PSLV) ராக்கெட் மூலம், 28 அக்டோபர் 2013-இல் ஏவப்படுவதாக இருந்த மங்கள்யான் வானிலை சரியில்லாததால் 5 நவம்பர் 2013 அன்று, விண்ணில் செலுத்தப்பட்டது. அது, 298 நாட்களில், 780,000,000 கி.மீ.(480,000,000 மைல்) தூரம் பயணம் செய்த பிறகு, செவ்வாய் கிரகத்தில் இருந்து சுமார் 1300 மைல் உயரத்தில், 24 செப்டம்பர் 2014 முதல், செவ்வாயைச் சுற்றி வருகிறது. மேலும், திட்டமிட்ட நேரத்திற்கு 41 மணி நேரம் முன்னதாகவே, அது, செவ்வாயைச் சுற்றுவது குறிப்பிடத்தக்கது. அதன், ஆறு மாத ஆயுட்காலத்திற்கு, குறைந்தபட்சம் 20 கிலோ எரிபொருள் அவசியம். ஆனால், 40 கிலோ எரிபொருள் மீதம் இருப்பதால், ஆறு முதல் பத்து மாதங்கள் வரை அது செவ்வாயைச் சுற்றிவரும் என்று எதிர்பார்க்கலாம். எரிபொருள் சேமிக்க உதவும் “ஹோஹ்மான் ட்ரான்ஸ்ஃபர் ஆர்பிட்” என்ற கொள்கை மங்கள்யான் ஏவும் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    மங்கள்யானின் மொத்த நிறை 1,350 கிகி. அதில் திரவ எரிபொருள்கள் நிறைந்த எஞ்சின் மட்டும் 852 கிகி நிறை ஆகும். இரு திரவ எரிபொருள்கள் கலவையான, மோனோமீத்தைல்ஹைட்ரஸின் மற்றும் டைநைட்ரஜன் டெட்ராக்சைடு என்பவை, பூமியில் இருந்து வெளியேறுவதற்குத் தேவையான உந்துதல் வேகத்தை அடைய உதவுகின்றன (11.2 கிமீ / வினாடி). அதிகபட்சம் 840 வாட் வரை, மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் பேனல்கள் மற்றும் லித்தியம் அயன் பேட்டரிகள் மங்கள்யானில் பொருத்தப்பட்டுள்ளதால், தேவையான மின்சாரம் உருவாக்கப்பட்டு, மீதமுள்ளது சேமிக்கப்படுகிறது. மேலும், மங்கள்யானின் இலக்குகள் மற்றும் செவ்வாய் பற்றிய ஆய்வுக்கு உதவும் 15 கிகி நிறையுள்ள, 5 கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.

    நிலாவிற்கு, 2008ஆம் ஆண்டு, சந்திரயான்-1 செயற்கைக்கோள் ஏவப்பட்ட பிறகு, அதனுடைய வெற்றி, மங்கள்யானின் தோற்றத்திற்கு அடித்தளமிட்டது. மிக மிகக் குறைந்த செலவில் உருவான, இத்திட்டத்தின் மொத்த செலவு ரூ.454 கோடி (US $ 74 மில்லியன்) ஆகும். மங்கள்யான், கிரகங்களுக்கிடையில் செயல்படுத்தப்பட்ட, இந்தியாவின் முதல் திட்டமாகும். மேலும், அது இந்தியாவை, முதல் முயற்சியிலேயே, செவ்வாயின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்த உலகின் முதல் (ஆசிய) நாடு என்று பெருமைப்பட வைத்திருக்கிறது. சோவியத் விண்வெளித் திட்டம், நாசா, மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிக்குப் பிறகு, செவ்வாயை அடைந்த நான்காவது விண்வெளி நிறுவனம் என்ற பெயரை இஸ்ரோ பெற்றுள்ளது.

    கிரகங்களுக்கிடையில் ஏவப்படும் விண்கலங்கள் / செயற்கைக்கோள்களுக்கான தொழில்நுட்பத்தை வடிவமைத்தல், திட்டமிடுதல், மேற்பார்வையிடுதல், இயக்குதல் போன்றவற்றை விரிவாக “எடுத்துச் சொல்லும் தொழில்நுட்பம்” ஒன்றை உருவாக்குவதுதான், இத்திட்டத்தின் அடிப்படைக் கொள்கை. ராக்கெட் ஏவுதல், விண்கலங்கள் / செயற்கைக்கோள்கள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளுதல், அவற்றை இயக்குதல் மற்றும் அவற்றில் பயன்படுத்தப்படும் தானியங்கிச் சாதனங்களைத் தேவைப்படும் சூழல்களில் இயக்குதல் போன்றவற்றை இந்தியா செய்ய இயலும் என்பதை எடுத்துக் காட்டுவது, இத்திட்டத்தின் முக்கியக் கொள்கை. இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டு, செவ்வாய் கிரகத்தின் அமைப்பு, மேற்பரப்பு, கனிம வளங்கள் மற்றும் தட்ப வெப்பச் சூழ்நிலை / வானிலைகளை ஆராய்தல், இரண்டாவது கொள்கையாகும்.

    மங்கள்யான் தற்போது, இந்தியன் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் (IDSN) உதவியுடன், பெங்களூரில் உள்ள இஸ்ரோ தொலைப்பதிவு, கண்காணிப்பு மற்றும் ஆணை வலையமைப்பின் (ISTRAC) விண்கலக் கட்டுப்பாடு மையத்திலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன் தகவல் தொடர்புகள், பெருக்கிகள் மற்றும் ஒத்திசைவு டிரான்ஸ்பாண்டர்கள் மூலம் கையாளப்படுகின்றன. மேலும், அதிலுள்ள குறைந்த, நடுத்தர மற்றும் உயர் சக்திவாய்ந்த ஆண்டெனாக்கள் IDSN-லிருந்து தொலைப்பதிவுகள், கண்காணிப்புகள் மற்றும் புள்ளிவிவரங்கள் தொடர்பான கட்டளைகள் பெறவும், செலுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

    சூரியன், சந்திரன், மற்ற பிற கிரகங்களின் இயக்கங்களைக் கண்காணிக்கவும் கணிக்கவும் டில்லியிலுள்ள ஜந்தர் மந்தர் கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மகரசங்கராந்தி தினத்தன்று, பெங்களூரின் கவிகங்காதரேஸ்வரர் கோவிலுள்ள நந்தியின் கொம்புகள் இடையே ஒரு மணிநேரம் மட்டும் செல்லும் சூரியக் கதிர்கள், சிவலிங்கம் மீது விழுந்து ஒளிர்கிறது. கன்னியாகுமரியின் காந்தி மண்டபத்தில், மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதியன்று, அங்குள்ள அஸ்திக்கலசம் (சாம்பல்) மீது சூரியக் கதிர்கள் விழும்படி உருவாக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் (தமிழ்நாடு) யோகநந்தீஸ்வரர் கோயிலில் உள்ள லிங்கத்தின் மீது, சித்திரை மாதம் 1, 2, மற்றும் 3 தேதிகளில் மட்டும் (ஏப்ரல் மாதம்) சூரியக் கதிர்கள் ஒளிரும்படி அமைத்துள்ளனர். இவை, பழங்காலத்தில், நமது முன்னோர்கள், வானியல் அறிவியல் வல்லுனர்களாகத் திகழ்ந்தார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.

    மேலும் இவை, “ஹோஹ்மான் ட்ரான்ஸ்ஃபர் ஆர்பிட்” கொள்கைக்கு இணையானவையாக உள்ளன. ஆனாலும், அக்கொள்கைக்கு, பல வருடங்களுக்கு முன்பே உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. எரிபொருள் சேமிப்பில் உதவும், இக்கொள்கையின் அடிப்படையில், செவ்வாய்க்கு விண்கலங்கள் ஏவும் சந்தர்ப்பங்கள், ஒவ்வொரு 26 மாதங்களுக்கு ஒருமுறை ஏற்படுகிறது. மங்கள்யான் ஏவுதலில், இக்கொள்கை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின், அந்த வெற்றிகரமான மங்கள்யான் ஏவுதலுக்குப் பிறகு, 28/9/2014-இல் பிரபல பத்திரிகையான, நியூயார்க் டைம்ஸ், பசு மாட்டுடன் ஒரு இந்திய விவசாயி, “எலைட் விண்வெளி கிளப்”-இல் கதவைத் தட்டுவது போன்ற கார்ட்டூன் வெளியிட்டு விமர்சித்து இருந்தது. பண்டைய இந்திய வானியல் அறிவுத் திறமைகள் பற்றி, அப்பத்திரிக்கை சரிவர அறிந்திருந்தால், அவ்வாறு விமர்சனம் செய்திருக்க வாய்ப்பில்லை.

    மங்கள்யானைத் தொடர்ந்து, 2017-2020-இல், செவ்வாய்க்கு, விண்கலங்கள் அனுப்ப, இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.  செவ்வாய் டிரேஸ் வாயு மிஷன் என்ற விண்கலம், அங்குள்ள மீத்தேன் மற்றும் சிதைவுப் பொருட்களான, ஃபார்மால்டிஹைடு, மெத்தனால் போன்றவற்றை ஆய்வு செய்ய, 2016-இல் அனுப்பப்படவுள்ளது. 30 செப்டம்பர் 2014-ல், நடந்த ஒரு கூட்டத்தின் போது, நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் செவ்வாய் பற்றி இணைந்து ஆராய்வதற்கு, ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    எதிர்காலத்தில், செவ்வாய்க்குப் பயணம் செய்வதற்காக, நானோ தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு ரோபோட்கள் மற்றும் விண்வெளி லிஃப்ட் போன்றவை பயன்படுத்தப்படும். நானோ-எரிபொருள்கள் மற்றும் கடினத் தன்மை மிகுந்தவையும், குறைந்த எடையும் கொண்ட கார்பன் நானோ குழாய்கள், கிராபின் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி விண்கலம் தயாரிக்கப்படும் சாத்தியங்கள் இருப்பதால், விண்கலங்களின் எடை குறையும், சக்தி அதிகரிக்கும்.

    ரோபோட் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள், யதார்த்தமான மனித உருவில் செயல்படும் ரோபோட்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. ஆண்ட்ராய்டு ரோபோட்கள் என்பவை, அவ்வாறு மனிதனைப் போல் செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்ட, செயற்கை உயிரின ரோபோட்கள் ஆகும். அவை, விண்கலங்களில் ஏற்படும் தவறுகளையும், பழுதுகளையும் சீர்செய்யப் பயன்படுத்தப்படலாம்.

    விண்வெளி லிஃப்ட் என்பது, பூமியில் ஒரு இடத்திலிருந்து, விண்வெளியை நோக்கி உயர்த்திக் கட்டப்பட்ட கேபிள் மூலம் பயணம் செய்து, விண்வெளியை அடையும் முறை ஆகும். இந்த முறையில், விண்கலங்கள் இல்லாமல், கேபிள் மூலம், விண்வெளிக்கு பொருள்கள் எடுத்துச் செல்லவும், கீழே கொண்டு வரவும் இயலும். வலுவான, குறைந்த எடையுள்ள, கெவ்லர் போன்றவை அத்தகைய லிஃப்ட் உருவாக்குவதில் உதவுகிறது. பூமியை விட, குறைந்த ஈர்ப்புச் சக்தி கொண்ட அனைத்துக் கிரகங்களுக்கும் (நிலா, செவ்வாய் போன்ற), விண்வெளி லிஃப்ட் உருவாக்கலாம். ஒபயாசி என்ற ஜப்பான் கட்டுமான நிறுவனம், 2050 ஆம் ஆண்டுக்குள், 60,000 மைல் உயரத்திற்கு, விண்வெளி லிஃப்ட், செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதுபோன்ற லிஃப்ட்கள் நடைமுறைக்கு வந்தால், விண்கலங்கள் உருவாக்குவதற்கான செலவுகள் பெருமளவு குறையும்.

    விண்கலங்கள் மற்றும் செயற்கைக்கோள்களை, மிகச் சிறிய துகள்களாகச் செய்து, அவற்றை ரேடியோ அலைகள் மூலம் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பி மீண்டும் அவற்றைச் செவ்வாய்க் கிரகத்தில் வைத்து, அதன் உண்மையான உருவிற்கு மாற்றும் முறைதான், மேற்கூறிய, அனைத்தையும் விடச் சிறந்த தொழில்நுட்பம் (தற்பொழுது, செவ்வாய்க் கிரகத்திற்கு கட்டளைகளையும், புகைப்படங்களையும் அனுப்புவது மற்றும் பெறுவது போன்ற முறையில்). இந்தத் தொழில்நுட்பம், எதிர்காலத்தில் வெற்றியுடன் உருவாக்கப்படுமா என்பதைக் காலம்தான் சொல்லும். காத்திருப்போம்!

    References / Sources: Mars Orbiter Mission – Wikipedia. 2018. Mars Orbiter Mission – Wikipedia. [ONLINE] Available at: https://en.wikipedia.org/wiki/Mars_Orbiter_Mission [Accessed 03 Sep 2018]

    ==========================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    கட்டுரை ஆசிரியர், செவ்வாய்க் கோள் பற்றி இதுவரை உலக வானியல் விஞ்ஞானிகள், பொறி நுணுக்க நிபுணர்கள் கண்டுபிடித்த, யூகித்த தகவலை, முற்காலச் சீன, இந்திய வல்லுநர் எழுதி வைத்த தகவலோடு ஒப்பிட்டுக் கட்டுரை வடிக்கிறார்.

    வண்ணத்தில் குறிப்பிட்ட மூன்று கூற்றுகள் [நீர் இருப்பு, இந்திய வல்லுநர் வானியல் விஞ்ஞான அறிவு, முப்பக்க அண்ட மின்தொடர்பு (3D objects Electronic transmission)] தர்க்கத்துக்கு உரியவை. நீர்வள இருப்பு, உயிர் மூலவி இருப்பு இன்னும் உறுதியாக்கப்படவில்லை.

    ஆயினும் செவ்வாய்க் கோள் பயணம் பற்றிக் கடந்த கால, எதிர்காலத் தகவல்கள் பலவற்றைச் சேகரித்து உருவான இக்கட்டுரை, வல்லமையில் வெளியிடத் தகுதியுடையது.

    ==========================================

    Share
  • பெரு விபத்து நேர்ந்த ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையக் கதிரியக்கத் துடைப்பில் எதிர்ப்படும் பல்லடுக்குச் சவால்கள்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    [ கட்டுரை – 3 ]

    +++++++++

    1. https://youtu.be/3AMWU0_MIPQ
    2. https://www.iaea.org/newscenter/focus/fukushima
    3. https://phys.org/news/2017-09-multiple-fukushima-nuclear-cleanup.html
    4. http://afterfukushima.com/tableofcontents
    5. http://www.world-nuclear-news.org/Articles/IAEA-reviews-Fukushima-Daiichi-clean-up-work
    6. https://asia.nikkei.com/Economy/Seven-years-on-no-end-in-sight-for-Fukushima-s-long-recovery
    7. https://www.cnet.com/news/inside-fukushima-daiichi-nuclear-power-station-nuclear-reactor-meltdown/

    ++++++++++++++++++++++

    2018 இல் புகுஷிமா அணுமின் நிலையக் கதிரியக்கத் துடைப்பு வேலைகளில் சிக்கல்கள், சிரமங்கள், செலவுகள்

    2017 ஆண்டில் ஜப்பான் அரசு 2011 மார்ச்சு நேர்ந்த பூகம்பச் சுனாமிப் பேரிழப்பில் புகுஷிமாவின் நான்கு  அணுமின் நிலையங்களில்  பெருஞ்சேதம்  அடைந்து, சூடான யுரேனிய எரிசக்திக் கோல்கள், வெப்பத் தணிப்பு நீரின்றி சூடேறி உருகிக் கீழே கட்டிகளாய்த் திரண்டன.  பாதிக்கட்ட நான்கு அணுமின் உலையின்  சூட்டு  எரிக்கோகளுக்குத் தண்ணீர்  கொடுக்கத் தாமதமதம் ஆனதால் அவை உருகிப் பாறை ஆயின.  உருகிப் போன எரிக்கோள்களைக் கவசச் சாதனங்களில் வெளியே கொண்டு வந்து, பாதுகாப்பாய் கான்கிரீட்  கலன்களில் இட்டு  மூட 30 – 40 ஆண்டுகள் ஆகலாம்.

    Fukushima Reactor Cleanup

    பேரளவு உருகிப் போன மூன்று அணு உலையின் கதிரியக்க எரிக்கோள்கள் எண்ணிக்கை : 1573.  அவற்றைப் பாதுகாப்பாக கவசக் கலன் களில் வெளிக் கொணர்ந்து,  கான்கிரீட  சிலிண்டர் களில் அடைப்பதுதான் சிரமமான வேலை.  அந்த வேலைகளைச் செய்து முடித்து, அணு உலைகளை நிரந்தர நிறுத்த ஓய்வெடுக்க ஆகப் போகும் [Decommissioning] நிதிச் செலவு : 202 பில்லியன் டாலர் [2016 நாணய மதிப்பு].  இந்தச் செலவில், வீடிழந்தோர், பொருள் இழந்தோர், நிலமிழந்தோர், பாதிக்கப் பட்டோர் நட்ட ஈடுபாடுத்  தொகையும் சேர்ந்தது.  உருகிச் சிதைந்த கதிரியக்க எரிக்கோல்கள் நீக்கம் 2021 இல் துவங்கும்.  ஜப்பான்  நிதிவள ஆய்வு மையம்  செலவு 657.7 பில்லியன் டாலர் ஆகலாம் என்று மதிப்பீடு செய்கிறது.

    கதிரியக்கம் தீண்டிய  பேரளவு நிலமண்ணும், துடைப்பு நீர்க் கொள்ளளவு நீக்கமும்.

    புகுஷிமா அணு உலைப் பகுதியைச் சேர்ந்த நிலப் பரப்புகளில் கதிரியக்கம் தீண்டிய நிலமண் கொள்ளளவு : சுமார் 640,000 கியூபிக் மீட்டர்.   இவை 1 கியூபிக் மீட்டர் பெட்டிகளில் இடப்பட்டு இப்போது தற்காலிய  சேமிப்புத் தளத்தில்  வைக்கப்  பட்டுள்ளன.  இன்னும் 22 மில்லியன் கியூபிக் மீட்டர் நிலமண் கொள்ளளவு சுத்தீகரிக்கப் படவேண்டும்.

    டெக்கோ [TEPCO UTILITY OWNER] பேரளவு துடைப்பு கதிரியக்க  நீரைச் சுத்தீகரிக்கச் சேமித்து, நூற்றுக் கணக்கான உலோக டான்குகளில் வைத்துள்ளது.   அதன் கொள்ளளவு சுமார் : 800,000 டன்.   கதிரியக்கத் துடைப்பு நீரில் உள்ள ஸீசியம் போன்ற கதிரியக்க ஏக மூலகங்களை [Radio-Isotopes] இரசாயன வடிகட்டு முறைகளில் நீக்கி, கழுவு நீர் கடலில் சங்கமம் ஆகும்.  அவ்விதம் செய்யப் பல மாதங்கள் ஆகும்.  அந்த வேலைகளைச் செய்ய பணியாட்கள், சைனா, தென்கொரியா போன்ற நாடுகளில்  நூற்றுக் கணக்கில் எடுக்கப் படுகிறார்.

    +++++++++++++++++

    1. http://afterfukushima.com/tableofcontents
    2. http://afterfukushima.com/book-excerpt
    3. https://youtu.be/YBNFvZ6Vr2U
    4. https://youtu.be/HtwNyUZJgw8
    5. https://youtu.be/UFoVUNApOg8
    6. http://www.cornell.edu/video/five-years-after-fukushima-lessons-learned-nuclear-accidents
    7. https://youtu.be/_-dVCIUc25o
    8. https://youtu.be/kBmc8SQMBj8
    9. https://www.statista.com/topics/1087/nuclear-power/
    10. https://www.statista.com/statistics/238610/projected-world-electricity-generation-by-energy-source/
    11. https://youtu.be/ZjRXDp1ubps
    12. https://www.thinkingpower.ca/PDFs/NuclearPower/NP_3_2_Crawford.pdf

    முன்னுரை: 2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற்துறைகள் தகர்ந்து போயின.  சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 17,000 பேர் இன்னும் காணப்பட வில்லை.  சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டுள்ளார். புகுஷிமா வின் நான்கு அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, பேரரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத்தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலை களில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் அணு மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

    உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களை ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடங்கள் என்று கருதியே இயக்கி வருகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை.  ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங் கள் தேவைப்படு கின்றன.  அதுபோல் ஓர் அணுமின்சக்தி நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.

    கட்டுரை ஆசிரியர்

    தற்போது முப்பதுக்கு மேற்பட்ட உலக நாடுகளில் 447 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபில் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) மின்சார ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டு களில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது !  ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.

    உலக அணு மின்சக்தி இயக்கக் கண்காணிப்புக் கூட்டுப் பேரவை [ WANO -World Association of Nuclear Operators ] விதித்த மேம்பாடு நெறி முறைகள்

    2011 புகுஷிமா பெரு விபத்துக்குப் பிறகு, பாடங்கள் கற்று நான்கில் ஒரு தலையகமாக இருக்கும் இங்கிலாந்து லண்டன்  வானோ பேரவையில் வடிக்கப்பட்ட மேம்பாட்டு நெறிப்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன.  அவை சிக்கலானவை, சிரமமானவை, சவாலானவை.  அவற்றை நிறைவேற்ற மிக்க நிதிச் செலவும், நேரச் செலவும் ஏற்படும். அவற்றுக்கு மெய் வருந்திய உழைப்பும், குறிப்பணியும் அவசியம் என்று, அவற்றை வெளியிட்ட வானோ ஆளுநர், பீட்டர் புரோசெஸ்கி சொல்கிறார்.

    1.  புகுஷிமா விபத்தில் கற்றுக் கொண்ட பாதுகாப்புப் பாடப் பணிகள் உலக முழுமையாக சுமார் 6000.
    2. அவற்றுள் முக்கியமானவை :  அபாய நிகழ்ச்சி காப்பு வினைகள்,  அபாய நிகழ்ச்சி உதவிகள், அபாய நிகழ்ச்சி பராமறிப்பு வினைகள், அபாய நிகழ்ச்சி அறிவிப்பு முறைகள், கதிரியக்க திரவம் சேமிப்புக் கலன்கள், பயிற்சி பெற்ற ஏராளமான பணியாளர், தோழ நாடுகள் முதல் உளவு, அடுத்த உளவு, முழு உளவு, ஆய்வு அறிக்கை வெளியீடு. வானோ உலக நாட்டு உளவு & அறிக்கை வெளியீடு.

    As of November 28, 2016 in 31 countries 450 nuclear power plant units with an installed electric net capacity of about 392 GW are in operation and 60 plants with an installed capacity of 60 GW are in 16 countries under construction.

    Country

    IN OPERATION

    UNDER CONSTRUCTION

    Number

    Electr. net output
    MW

    Number

    Electr. net output
    MW
    Argentina

    3

    1.632

    1

    25

    Armenia

    1

    375

    Belarus

    2

    2.218

    Belgium

    7

    5.913

    Brazil

    2

    1.884

    1

    1.245

    Bulgaria

    2

    1.926

    Canada

    19

    13.524

    China

    36

    31.402

    20

    20.500

    Czech Republic

    6

    3.930

    Finland

    4

    2.752

    1

    1.600

    France

    58

    63.130

    1

    1.630

    Germany

    8

    10.799

    Hungary

    4

    1.889

    India

    22

    6.225

    5

    2.990

    Iran

    1

    915

    Japan

    43

    40.290

    2

    2.650

    Korea, Republic

    25

    23.133

    3

    4.020

    Mexico

    2

    1.440

    Netherlands

    1

    482

    Pakistan

    4

    1.005

    3

    2.343

    Romania

    2

    1.300

    Russian Federation

    36

    26.557

    7

    5.468

    Slovakian Republic

    4

    1.814

    2

    880

    Slovenia

    1

    688

    South Africa

    2

    1.860

    Spain

    7

    7.121

    Sweden

    10

    9.651

    Switzerland

    5

    3.333

    Taiwan, China

    6

    5.052

    2

    2.600

    Ukraine

    15

    13.107

    2

    1.900

    United Arab Emirates

    4

    5.380

    United Kingdom

    15

    8.918

    USA

    99

    98.868

    4

    4.468

    Total

    450

    391.915

    60

    59.917

    Nuclear power plants world-wide, in operation and under construction, IAEA as of 27 November 2016

    அணுமின் உலைகள் எதிர்காலம் பற்றி அகில நாடுகளின் தீர்மானங்கள்

    புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு பயந்து போன ஆயிரம் ஆயிரம் பொது மக்களின் வெறுப்பும், எதிர்ப்பும் வேறு.  அணுசக்தி உற்பத்தி மீது அகில நாட்டு அரசுகளின் ஆதரவும், முடிவும் வேறு !  பொது மக்கள் பல்லாண்டுகள் ஒரு மனதாய் அவற்றை எதிர்த்தாலும் இப்போது உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 440 அணுமின் நிலையங்கள் உடனே நிறுத்தம் அடையப் போவ தில்லை.  இப்போது (ஜூன் 14, 2011) கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகளின் எண்ணிக்கை : 60.  அடுத்துத் திட்டமிடப் பட்டவை : 155.  எதிர்கால எதிர்ப்பார்ப்பு அணுமின் உலைகள் : 338.  புகிஷிமா அணு உலை விபத்தில் கற்றுக் கொள்ளும் முதற்பாடம் : 1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்ட முதல் வகுப்புப் பிற்போக்கு அணுமின் உலைகள் விரைவில் நிச்சயம் மூடப்படும் நிரந்தரமாய்.  முப்பது வருடமாய் இயங்கி வரும் அணுமின் உலைகள் சில மீளாய்வு செய்யப் பட்டுப் பழைய சாதனங்கள் புதுப்பிக்கப் பட்டு ஆயுட் காலம் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் நீடிக்கப் படலாம் அல்லது அதற்கு நிதியின்றேல் நிரந்தரமாய் நிறுத்தம் அடையலாம்.

     

     

    1. https://youtu.be/CPeN7GhTpz4
    2. https://www.thegreenage.co.uk/cos/nuclear-power-in-france/
    3. https://youtu.be/4YgmCu7dfS4
    4. https://www.dw.com/en/france-sticking-with-nuclear-power/av-38397323
    5. https://www.businessinsider.com/countries-generating-the-most-nuclear-energy-2014-3
    6. https://www.youtube.com/watch?v=TZV2HRKNvao
    7. https://www.youtube.com/watch?v=HMrQJoN-Ks4
    8. https://www.youtube.com/watch?v=kr4mFLws3BM
    9. https://www.youtube.com/watch?v=YfulqRdDbsg
    10. https://www.youtube.com/watch?v=Hn-P3qnlB10

    ++++++++++++++++++++++++

    பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.  அவை தேர்ந்தெடுக்கப்படும் எட்டுத் தளங்களில் நிறுவப்படும்.  அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி.  எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர்.

    BBC News (June 23, 2011)

    Image result for nuclear power in france

    ஈரோப்பியன் கூட்டுறவு நாடுகளில் உள்ள 143 அணுமின் நிலையங்களில் பிரென்ச் அணுமின் நிலைய எண்ணிக்கை : 53 (40%).  அவற்றின் மின்சக்தி பரிமாற்றம் : 75% பங்கு.  பிரென்ச் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸி “பிரான்சில் உள்ள அணுமின் நிலையங்கள் அனைத்திலும் புகுஷிமா விபத்துக்களை முன்னிட்டு ஆழ்ந்த பாதுகாப்பு இயக்க உளவுகள் செய்யப் படும்.  ஆயினும் ஜெர்மனி, இத்தாலி, சுவிட்ஜர்லாந்து ஆகிய அண்டை நாட்டு அரசாங்கங்கள் போன்று பிரான்ஸ் இயங்கும் அணுமின் நிலையங்களை நிரந்தரமாய் மூடத் தடை விதிக்காது,” என்று அறிவித்தார்.

    BBC News (May 30, 2011)

    Image result for nuclear power in france

    பிரான்ஸ் நாட்டு அணுமின்சக்தி இயக்கத் திட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள்.

    2018 நவம்பர் அறிப்பின்படிக் கடந்த 50 ஆண்டுகளாக

    1. பிரான்ஸ் தேசம் தற்போது தேவையான மின்சக்தி உற்பத்தியில் 75% அணுசக்தி மூலமாக பாதுகாப்பு முறையில் வெற்றிகரமாகப் பெற்று வருகிறது.  2035 ஆண்டுக்குள் அது 50% ஆகக் குறைக்கப்படும்.  அதாவது பிரான்ஸில் 17 பழைய அணுமின்சக்தி நிலையங்கள் 2035 ஆண்டுக்குள் நிறுத்தப் படும்.
    2. உலகத்திலே பேரளவு மின்சக்தி ஏற்றுமதி தொடர்ந்து செய்யும் நாடுகளில் பிரான்ஸ் முன்னணியில் நிற்கிறது. காரணம் மலிவான நிதியில் மின்சக்தி உற்பத்தியை பிரான்ஸ் செய்ய முடிகிறது.  அதலால் ஆண்டுக்கு மூன்று பில்லியன் ஈரோ [ 3.4 பில்லியன் டாலர் : ] பிரான்சுக்கு வருமானம் வருகிறது.
    3. கடந்த 50 ஆண்டுகளாக பிரான்ஸ் அணுவியல் துறை நுணுக்க சாதனங்கள் விருத்தி செய்வதில் வெற்றி பெற்றுள்ளது.  குறிப்பாக அணுவியல் எரிக்கரு உற்பத்தி ஏற்றுமதியில் செல்வாக்கு அடைந்துள்ளது.
    4. அத்துடன் சுமார் 17% பங்கு மின்சக்தி அணுவியல் எரிக்கரு மீள் சுழற்சியில் [Recycled Nuclear Fuel] கிடைக்கிறது.

    +++++++++++++

    Related image

    French nuclear power reactors

    பிரான்ஸ் எரிசக்தி உற்பத்தி மூல எருக்கள் [Energy Sources] 

    2016 ஆண்டில் பிரான்சின் மின்சக்தி ஆற்றல் உற்பத்தி 556 TWh [ terra watt hours [Gross].

    1. அதில் அணுமின்சக்தியின் பங்கு : 72% [403 TWh].
    2. நீரழுத்த மின்னாற்றல் : 12%  [65 TWh],
    3. இயல்வாயு + நிலக்கரி வெப்ப மின்சக்தி 8% [45 TWh];
    4. சூரியக்கதிர் + காற்றாற்றல் :  5% [ 31 TWh ]
    5. அதாவது பிரான்ஸ் மொத்தத் தேவை மின்சக்தி : 442 TWh [6,600 KWh/cappit] : கி.வாட் ஹவர் / காப்பிட்டா.
    6. 2013 இல் வீட்டு மின்சார விலை அளவு : 8 சென்ட்/கிலோவாட் ஹவர்.  [cents/Kwh]

    French nuclear power reactors

    Class Reactor MWe net, each Commercial operation
    900 MWE BLAYAIS 1-4
    910
    12/81, 2/83, 11/83, 10/83
    BUGEY 2-3
    910
    3/79, 3/79
    BUGEY 4-5
    880
    7/79-1/80
    CHINON B 1-4
    905
    2/84, 8/84, 3/87, 4/88
    CRUAS 1-4
    915
    4/84, 4/85, 9/84, 2/85
    DAMPIERRE 1-4
    890
    9/80, 2/81, 5/81, 11/81
    FESSENHEIM 1-2
    880
    12/77, 3/78
    GRAVELINES B 1-4
    910
    11/80, 12/80, 6/81, 10/81
    GRAVELINES C 5-6
    910
    1/85, 10/85
    SAINT-LAURENT B 1-2
    915
    8/83, 8/83
    TRICASTIN 1-4
    915
    12/80, 12/80, 5/81, 11/81
    1300 MWE BELLEVILLE 1 & 2
    1310
    6/88, 1/89
    CATTENOM 1-4
    1300
    4/87, 2/88, 2/91, 1/92
    FLAMANVILLE 1-2
    1330
    12/86, 3/87
    GOLFECH 1-2
    1310
    2/91, 3/94
    NOGENT S/SEINE 1-2
    1310
    2/88, 5/89
    PALUEL 1-4
    1330
    12/85, 12/85, 2/86, 6/86
    PENLY 1-2
    1330
    12/90, 11/92
    SAINT-ALBAN 1-2
    1335
    5/86, 3/87
    N4 – 1450 MWE CHOOZ B 1-2
    1500
    12/96, 1999
    CIVAUX 1-2

    1495

    1999, 2000
    Total (58)
    63,130

    Differences in net power among almost identical reactors is usually due to differences in cold sources for cooling

    “இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”

    பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)     


    “மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும்.  அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து.  அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

    ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

     

    ரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை.

    ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.

    நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமை யாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்தி ருக்கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக் குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.  அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்றவையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.

    லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)

    “விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப் புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.

    விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)

     

     

     

    இயங்கி வரும் 440 அணுமின் உலைகளில் அபாய வெப்பத் தணிப்பு நீரனுப்பி ஏற்பாடுகள் ஒன்றுக்கு மேல் இரட்டிக்கப் படும் அல்லது மூன்றாக்கப் படும்  இரட்டை அல்லது மூவகை அபாய டீசல் எஞ்சின் மின்சாரப் பம்ப்பு இணைப்பு அமைப்போடு, ஈர்ப்பு விசையாலோ, அழுத்த வாயுவாலோ இயங்கும் ஓய்வுத் தணிப்பு ஏற்பாடுகள் (Passive Gravity or Compressed Air Coolant Injection Systems) சேர்க்கப் படும்.  அல்லது இரண்டுக்கு மேல் பெருக்கம் அடையும்.  சேமிப் பாகும் ஹைடிரஜன் வாயுவுக்கு அணு உலை உள்ளே மீள் இணைப்பிகள் சேர்க்கப் படும்.  அபாய வெப்பத் தணிப்பு நீரோட்ட இறுதியில் பேரளவு சேரும் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்புத் தடாகமும், சுத்தீகரிப்பு ஏற்பாடும் (Contaminated Waste Water Treatment Facility) இணைக்கப் படும்.  தற்போது கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகள் தடைப் படாமல் தொடர்ந்து நிறுவப் படும்.  திட்டமிட்ட எதிர்கால அணுமின் உலைகள் மீளாய்வு செய்யப்பட்டுக் கட்டப் படலாம்.  அல்லது புறக்கணிக்கப் படலாம்.

    அணுமின் நிலைய ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுகள் வற்புறுத்தும் புதிய பாதுகாப்பு விதிகள்

    21 நாடுகள் இணைந்த ஈரோப்பியன் அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (European Nuclear Safety Regulatory Group -ENSRG) தனது அழுத்தமான உளவு விதியை வெளியிட்டுள்ளது.  அதன் விதிப்படி நிலநடுக்கம், வெள்ளம், பேரலை அடிப்பு, மூர்க்கர் தாக்குதல், விமான வீழ்ச்சிபோன்ற பயங்கர விளைவுகளைத் தூண்டும் அபாயச் சம்பவங்களையும், பாதிக்கபட்ட பொது மக்களின் புலப் பெயர்ச்சியையும் எப்படிக் கையாளுவது என்பது ஆழ்ந்து தீவிரமாய் ஆராயப்படும்.  புகுஷிமா அணுமின் உலை விபத்துகளை முன்வைத்து 2011 மே 31 ஆம் தேதி வரை உலக நாடுகள் அணுசக்தி நிலையங்கள் இயக்கத்தைப் பற்றிச் செய்துள்ள முடிவுகளைக் கீழே காணலாம் :

    புகுஷிமா அணுமின் உலை விபத்துச் சிக்கல்கள் போல் மீண்டும் நேராதிருக்க ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுத் தலைவர், யுகியா அமானோ (Yukiya Amano, Head of UN Watchdog) அகில உலக அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்புகளை ஆழ்ந்து உளவி 18 மாதங்களுக்குள் முடிவுகளைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.  இந்த அறிவிப்பை முன்னிட்டு 150 உலக நாடுகள் வியன்னா அகில் நாட்டு அணுசக்திப் பேரவை (IAEA) நிறுவகத் தளத்தில் கூடப் போகின்றன. மேலும் அவர் கூறியது: புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்துகள் பொது மக்களைப் பேரளவில் பயமுறுத்தி உள்ளதால், அவருக்கு நேர்மையாய்ப் பதிலளிக்க வேண்டிய கடமையும் IAEA வுக்கு நேர்ந்திருக்கிறது.  அணுமின் நிலையங்களின் அபாயப் பாதுகாப்பு முறைகள் மீது பொது நபருக்கு நம்பிக்கை போய்விட்டது.  ஆதலால் IAEA அணுமின் நிலைய இயக்க அதிகாரிகளுக்குக் கடுகையான கண்காணிப்பு விதிகளை விடுத்து அவற்றை எல்லா அணுமின் நிலையங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளது.

     

    முடிவுரை:   பெரும்பான்மையான உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை.

    (தொடரும்)

    ***************

    தகவல்:

    1.  Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan   (March 11, 2011)

    2. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

    3. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

    4.  Nuclear {Power in Japan (March 30, 2011)

    5. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

    6 Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

    7. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

    8.  Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

    9.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

    10. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

    11. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

    12. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

    13. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)

    14. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)

    15 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant(Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)

    16. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)

    17. BBC News – Japan Nuclear Crisis : Fukushima Cold Shutdown for January 2012 (May 17, 2011)

    18. BBC News : Europe, French Nuclear Policy  (May 31, 2011)

    19 BBC News – Fukushima Lessons may take 10 years to Learn By : Richard Black (June 8, 2011)

    20. Environment News Service – Analysis: Japan Underestimated Fukushima Radiation Releases By Half – Author Charles Diggs (June 8, 2011)

    21. IAEA Briefing on Fukushima Nuclear Accident (June 2, 2011)

    22 Wikipedea http://en.wikipedia.org/wiki/List_of_nuclear_reactors (List of World Nuclear Reactors) (June 8, 2011)

    23 http://www.world-nuclear.org/info/reactors.html (World Nuclear Opeations) (June 14, 2011)

    24. Nuclear Watchdog wants new safety checks after Fukushima (June 20, 2011)

    25. BBC News : New UK Nuclear Plant Sites Named  (June 23, 2011)

    26. https://www.japantimes.co.jp/news/2018/03/09/national/fukushima-no-1-cleanup-continues-radioactive-water-rumors-also-prove-toxic/#.XI0k

    27.  https://www.theguardian.com/environment/2018/jun/03/was-fallout-from-fukushima-exaggerated

    28. https://www.iaea.org/newscenter/focus/fukushima/status-update  [March 14, 2019]

    29. https://www.fairewinds.org/fukushima-latest-updates  [January 18, 2019]

    30. http://www.world-nuclear.org/information-library/country-profiles/countries-a-f/france.aspx  [November 2018]

    31http://www.nuclearpowerdaily.com/reports/Glowing_results_for_nuclear_power_at_Frances_EDF_999.html  [February 15, 2019] 

    32. https://en.wikipedia.org/wiki/Nuclear_power_in_France  [March  10, 2019]

    33. http://www.cornell.edu/video/five-years-after-fukushima-lessons-learned-nuclear-accidents

    34.  https://www.japantimes.co.jp/news/2018/03/29/national/seven-years-radioactive-water-fukushima-plant-still-flowing-ocean-study-finds/#.XJaYFR-JK70  [February 21, 2018]

    35. https://www.statista.com/statistics/268154/number-of-planned-nuclear-reactors-in-various-countries/

    36. https://www.statista.com/topics/1087/nuclear-power/

    37. https://www.statista.com/statistics/238610/projected-world-electricity-generation-by-energy-source/

    38. https://www.iaea.org/newscenter/news/iaea-releases-country-nuclear-power-profiles-2017

    39. https://world-nuclear.org/getmedia/b392d1cd-f7d2-4d54-9355-9a65f71a3419/performance-report.pdf.aspx  [WANO 2018 REPORT]

    40. http://www.world-nuclear-news.org/RS-WANO-reports-on-post-Fukushima-improvements-27061803.html  [June 27, 2018]

    41. https://www.thinkingpower.ca/PDFs/NuclearPower/NP_3_2_Crawford.pdf [WANO – WORLD NUCLEAR POWER WATCH DOG]

    42. https://www.euronuclear.org/info/encyclopedia/n/nuclear-power-plant-world-wide.htm   [March 24, 2019]

    43. http://afterfukushima.com/tableofcontents  

    44. https://phys.org/news/2015-06-japan-fukushima-nuclear.html#nRlv  [June 12, 2015]

    45. https://phys.org/news/2017-09-multiple-fukushima-nuclear-cleanup.html [September 26, 2017]

    46. http://www.world-nuclear-news.org/Articles/IAEA-reviews-Fukushima-Daiichi-clean-up-work [November 14, 2018]

    47. https://physicsworld.com/a/what-next-for-fukushima/  [January 9, 2018]

    48.  https://en.wikipedia.org/wiki/Fukushima_disaster_cleanup  [January 15, 2019]

    49. https://asia.nikkei.com/Economy/Seven-years-on-no-end-in-sight-for-Fukushima-s-long-recovery  [March 11, 2019]

    50. . https://www.washingtonpost.com/world/asia_pacific/eight-years-after-fukushimas-meltdown-the-land-is-recovering-but-public-trust-has-not/2019/02/19/0bb29756-255d-11e9-b5b4-1d18dfb7b084_story.html?noredirect=on&utm_term=.bb53d39bdd10

    51. https://youtu.be/3AMWU0_MIPQ  [ IAEA  REPORT VIDEO] March 10, 2016

    Share
  • ராஜதுரோக தண்டனை குறித்த கல்வெட்டுகள்

    – சேஷாத்ரி ஸ்ரீதரன்


    உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் 

    ராஜதுரோக தண்டனை

    துரோகம் என்றால் நம்பிக்கை குலைய நடத்தல், நம்பினோர்க்கு இரண்டகம் செய்தல் எனப் பொருள்.  இது பல்வேறு வகைத்து. இராஜதுரோகம் என்பது அவற்றில் முகாமையானது. இது பற்றி சில கல்வெட்டுகள் அறியக் கிடக்கின்றன. பொதுவாகப் பகை மன்னன் சதிக்கு உடன்பட்டு அவனுக்கு உத்தாரமாக (supportive) தனது மன்னனை வேவுபார்த்தல், உளவு பார்த்தல், அவன் ஆள்கள் தங்க இடம் அளித்தல், உதவுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவது இராஜதுரோகம் ஆகும். இதற்கு பழங்காலத்தில் பிற குற்றங்களை விட கடுமையான தண்டனை தரப்பட்டது. இராஜதுரோகி ஆக அறிவிக்கப்பட்ட ஒருவர், அவர் சார்ந்தவர் நிலமும், வீடும், உடைமையும் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டு அப்பணம் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. பெரும்பாலும் இராஜ துரோகிகள் கூடா நட்பு, பதவி செல்வத்திற்கு ஆசைப்பட்டும் அவ்வாறு நடந்து கொண்டனர். குறிப்பாக, அதிகமாக வேளான் என்ற அரசகுடியாரும், பிராமணரும் இந்த தண்டனைக்கு ஆட்பட்டது தெரிகின்றது. நான்கு அகவை முதல் இலவச உண்டு உறைவிடமான வேதபாட சாலையில் கல்வி, சரஸ்வதி பண்டாரம் என்ற நூல் நிலையம், கோவிலில் வேலை அதற்கு நிவந்தமாக விளை நிலம், குடியிருக்க இலவச வீடு, கோயிலில் ஆதுர சாலைகள் இப்படி உயிர்த்துள்ள நாள் வரையில் வேறு எவருக்கும் கிட்டாத பல வசதிகளை மன்னரிடம் இருந்து மானியமாகப் பெற்ற போதும் சில பிராமணர்கள் குறுகிய நோக்கில் அரச அதிகாரிப் பதவிகளைப் பெறுவதற்காக இப்படி நரித்தனமாக நடந்துகொண்டது வரலாற்றில் பதிவாகி உள்ளது. அதைப் பதிந்தவரும் பிராமணரே. கீழே இதற்கு சான்றாக மூன்று கல்வெட்டுகளைப் பார்க்கலாம்.

    உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் கருவறை மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 2 ஆம் ஆண்டு கல்வெட்டு.

    “ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்……………………………………….. தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார், பெற்றாளும் இ……………………ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கோட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத் தந்தோம். தாங்களும், இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத்தலத்திடுக. இவை குருகாடிக்கிழான் எழுத்து என்று இப்பரிசுவர இ ஸ்ரீமுகத்தின் மேற்பட்ட மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன்றாய் பெரிய நங்கைச்சாணியும் இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயன சதுர்வேதி மங்கலத்து மிப்பிடாகை தேவமங்கலம் ஆன பட்டில நிலம் ஸ்ரீவீரநாராயண சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையான் நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையனேன். இந்நிலம் பழம்படி இரண்டே முக்காலே ஒருமாவும் அகமனை ஆறும் ஆக இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்தி ருகழஞ்சு பொன் குடுத்து விலைகொண் டிவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷநாயற்று நாயற்றுக்கிழமை பெற்ற புரட்டாசி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் கோயில் முன்பு மூவாயிரத்தரு நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிச தம் படி நாழி நெல்லும் ஆட்டைவட்டம் ஒரு காகம் நிசதம் பதினைவர் பிராமணர் உண்பதற்கு ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன் அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையனேன். இதர்மம் ரஷிகின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலை மேலன”

     பெருங்குறி பெருமக்கள் –   மதிப்புடைய வெகுமக்கள்; ஸ்ரீ முகம் – திருமுகம், அரசாணை;  பிரமாணிமார் – பிராமணர் மனைவியர்; பெற்றாளும் – தாயும், குடியோடு குடிபெறும் விலை – சாதாரண மக்கள் பெறும் விலை; பிடாகை – உள்அமைந்த சிறுகிராமம்; அகமனை – குடியிருக்கும் சொந்தமனை.

    விளக்கம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள உடையார்குடியில் ஆனத்தீஸ்வரர் கோயில் கருவறை மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 2 ஆம் ஆண்டு ஆட்சியில் கி.பி.987 வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையானான நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையன்  6 சொந்த வீடுகளையும், இரண்டுவேலி 16 மா நிலத்தையும் 112 பொற்காசுகளுக்கு வாங்கி கோயிலுக்கு விட்டான். அதைக் கொண்டு வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து திருக்கோயிலில் தண்ணீர் சொரியும் மூவாயிரத்தரு நூற்றுவன் என்ற நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிசதம் படி நாழி நெல்லும் ஆட்டை வட்டம் ஒரு காகம். அதே நேரம் நிசதம் 15 பிராமணர் உண்பதற்கும் ஆக பதினாறு 16 பிராமணர்களுக்கு, இவருள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வேண்டும் என்று கொடுத்தான் அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையன். இத்தர்மம் காக்கின்ற மகாசபையார் திருப்பாதங்கள் என் தலை மேலன என்று குறித்தான்.

    இவன் வாங்கிய 6 வீடும் நிலமும் இரண்டாம் ஆதித்தகரிகாலரை கி.பி. 965 ல் வஞ்சகமாகக் கொன்ற வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பிராமணர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சோமன், இவன் தம்பி இரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன். இவன் தம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழபிரமாதிராஜன். இவர்தம் தம்பி மலையனூரன் பஞ்சவன் பிரமாதிராஜன் ஆகிய நான்கு பேர்களும் சேர்ந்து இரண்டாம் ஆதித்த கரிகாலனை வஞ்சகமாக கொலை செய்த இராசதுரோகிகள் ஆவர். இவர்ளுக்கு தண்டனை வழங்கப்பட்ட செய்தி இராசராசனின் 2 ஆம் ஆண்டு ஆட்சியில் (கி.பி.987) பதிவாகி உள்ளது. தண்டனை வழங்கப்பட்டபோது இராசதுரோகிகள் நால்வரது பிள்ளைகள், மனைவியர், பெற்ற தாய், பேரப்பன்மார் இவர்களுக்கு பெண்கொடுத்த மாமனார்களும், தாயுடன் பிறந்த மாமன்மார்களும், இவருடன் பிறந்த பெண் மக்களும் இனி பிராமணர் அல்லாத வேற்றவர், வேற்று சாதியார். இவர் தம் பிள்ளைகளும் வேற்றுசாதியார் என சமூகம் கருத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இவர்களது உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆணைப்படி கோட்டையூர் பிரம்ம ஸ்ரீராஜன், புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டன் ஆகியோர் பொறுப்பில் விடப்பட்டது. இந்த இருவரும் இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு ஆணைப்படி குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத் கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்று குருகாடிக்கிழான் ஆணைஓலை தந்தான். ஏனென்றால் இந்த ஆணைஓலையில் மேற்படி குறித்த இராஜதுரொகிகளின் தம்பி மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும், இவன் மகனும், இவன் தாய் பெரிய நங்கைச் சாணியும் ஆகிய இம்மூவருடைய நிலம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பிடாகையான தேவமங்கலத்தில் அமைந்த பட்டில நிலம் தான் அந்த இரண்டுவேலி 16 மா நிலம் என்பது.

    இவர்களில் மற்றவர் உடைமைகள் எந்தெந்த ஊர்களில் இருந்தனவோஅங்கும் இதே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்பதுதெளிவு. இந்த கல்வெட்டு வியாழகஜமல்லப் பல்லவரையன்  தொடர்பானது என்பதால் இந்த அளவு செய்தி மட்டுமே கல்வெட்டில் அறியத் தரப்பட்டது. இது இராஜ துரோகிகளின் நேரடியான தண்டனைக் கல்வெட்டு அன்று. அதனால் இரண்டாம் ஆதித்ய சோழன் எங்கு? எவ்வாறு? எப்போது? எப்படிக் கொல்லப்பட்டான் என்ற செய்தி இக்கல்வெட்டில் இடம்பெறவில்லை. இப்படி இராஜதுரோக தண்டணைக்கு உள்ளானவருக்கு ஊரார் உதவிட, ஒத்துழைக்க முன்வரமாட்டார் மாறாக ஒத்துழைக்க அஞ்சுவார். இவர்கள் தம் தண்டனைக் குற்றம் யாது என்று பிறரால் அறியப்படாதவாறு வேற்றூர் சென்று அக்ஞாத வாசம் செய்தால் அன்றி ஊராரால் ஒதுக்கப்பட்டு வாழ்வதற்கே இடர்படுவர், மிடிமைப்படுவர் என்பதை உணரமுடிகின்றது. இதனால் ஒன்றும் அறியாத அப்பாவியான உறவினர் படும் துன்பம் தான் வேதனையானது.

    பார்வை நூல்: EP, IND Vol XXI, PP 165-170

    கொங்கின் கடத்தூர் பகுதியில் உள்ள திருமருதுடையார் கோயில் 17 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீவிக்கிரமசோழ தேவற்கு யாண்டு 29 தாவது விக்கிரம சோழத் திருபுவன சிங்க
    2. னேன் கடற்றூர் ஆளுடையார் திருமருதுடையார் எனக்கு பிரமேகம் தீற்தமையில் இந்நாயனா _ _ _
    3. ரை திருவோத்த சாமத்துக்கு நாள் ஒன்றுக்கு அரிசி குறுணிக்கு நான் நீர்வார்த்து விட்ட நிலமாவ
    4. ன (கரை)வழிநாட்டுக் கண்ணாடிப்பூத்தூர் வடகரையில் உதயாதிச்ச தேவர் துரோகியாய் வடகொங்(கு)
    5. ப் போனமையில் அவர்நிலம் ஆறுகலமும் எனக்கும் என் தம்பி சோழசிங்கதேவற்கும் இவ்விருவ
    6. ற் _ _ _ _ இது காணியாகத் திருவிள்ளம் செய்து திருமுகம் தந்(த)மையில் இதில் என்னொரு பாதி மன்றாட்டு வி
    7. கலமும் இந்நாயனாற்குத் திருவத்த சாமப்படிக்கு நீர்வாத்துக் குடுத்து இந்நில முக்கலத்துக்கும்  _ _ _
    8. வது வடகரையில் பூலுவப்பற்றி விதை ஆறுகலத்தில் என்னொருபாதி விதை முக்கல(த்துக்கெ)
    9. ல்லையாவது இக்கிழைக்கு வடக்கும் உதையாதித்த தேவர் நிலத்துக்கு மேக்கும் அதியமான் _ _ _
    10. சோழீஸ்வரமுடையார் தேவதானத்துக்கு கிழக்கும் அழகாண்டார் செய்க்குத்  தெற்கும் இந்நாள் _ _ _
    11. ட்ட நெல்விதை இரு கலமும் வீரசோழீஸ்வருமுடையார் தேவதானத்துக்கு வடக்கும் மே
    12. னத்துக்குக் கிழக்கும் அழகாண்டார் செய்க்கு மேற்கு இந்நிலத்துக்குப் பாய்கிற கவருக்கு தெற்
    13. ல்லைக்குட்டபட நெல் விதை(க்) கலமும்  முக்குறுணியில் நெல் விதை கலமும் ஆக நெ
    14. ல் விதை முக்கலமும் இறையிலி முற்றூட்டாக எனக்கும என் மக்கள் மக்களுக்கும் விலையொற்றி
    15. ன ஸீதனத்துக்குரித்தாவுதாக நாயனார் திருமகம் திருவிள்ளம் செய்(த)படியே ஆளுடை
    16. மருதுடையாற்கு கல்வெட்டிக் குடுத்தேன் விக்கிரம சோழதிரிபுவன சிங்க தேவனேன்  (தி)
    17. ருபுவன சிங்கதேவன் எழுத்து. இவை கோத்தப்பச் சோழன் எழுத்து. இது பன்மாஹேஸ்வர ரக்ஷை.

    முற்றூட்டு – முழு விளைச்சல்,  முழுவருவாய்; நாயனார் – மன்னர்.

    விளக்கம்: பண்டு கொங்கு வறண்ட பகுதிகளை உடைய பகுதி வட கொங்கு எனவும், வளமையான பகுதிகளை உடைய நாடு தென்கொங்கு எனவும் இரு பகுதிகளாக இருந்தது. அவற்றை இரு வேறு ஆட்சியாளர்கள் ஆண்டுள்ளனர். இக்கல்வெட்டு கடத்தூர் பகுதியில் உள்ள திருமருதுடையார் கோயிலில் மகாமண்டப நுழைவு வாயிலின் கிழக்கு சுவரில் வெட்டப்பட்டு உள்ளது. கொங்கு சோழன் மூன்றாம் விக்கிரம சோழனின் 29 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1302) விக்கிரம சோழ திரிபுவன சிங்கனான எனக்கு திருமருதுடை இறைவர் நோய் தீர்த்து வைத்ததால் இவ்இறைவர்க்கு சாமத்து பூசையின் போது குறுணி அரிசிந் தரத் தீர்மானித்து அதற்கான நிலத்தை நீர்வார்த்து தானமாகக் கொடுத்தேன். நான் தரும் நிலமானது முன்பு கரைவழி நாட்டு கண்ணாடிப்பூத்தூர் வடகரையில் வாழ்ந்திருந்த அரச அதிகாரப் பொறுப்பாளர் உதயாதிச்ச தேவர் அரச துரோகியாகி வடகொங்குப் போனமையால் (அவர் உடைமைகள், சொத்துக்கள், நிலங்கள் மன்னனால் பறிமுதல் செய்யப்பட்டு கோயில் பண்டாரத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. இச்செய்தி இக்கல்வெட்டில் பொறிக்கப்படவில்லை).  அவருடைய ஆறுகல நிலம் எனக்கும் என் தம்பி சோழசிங்க தேவர்க்கும் காணியாக்க மன்னன் ஆணயிட்டுத் திருஉள்ளம் தந்தபடியால் என் பங்கான மூன்று கல நிலத்தையும் அதில் விதைப்பதற்கான நெல் ஆறு கலத்தில் என் பங்கு மூன்று கலமும் இறைவர்க்குத் தந்தேன். இந்த மூன்று கல நிலம் வடக்கில் உதையாதித்த தேவர் நிலத்துக்கும், மேற்கில் அதியமான் நிலத்துக்கும், சோழீஸ்வரமுடையார் தேவதானத்துக்கு கிழக்கும்.  அழகாண்டார் செய்க்குத் தெற்கும் அமைந்துள்ளது.  நெல்விதை இரு கலமும் வீரசோழீஸ்வருமுடையார் தேவதானத்துக்கு வடக்கிலும், மேனத்துக்குக் கிழக்கிலும், அழகாண்டார் செய்க்கு மேற்கிலும் இந்நிலத்துக்குப் பாய்கிற கவருக்கு தெற்கெல்லைக்குட்டபட நெல் விதைக் கலமும் முக்குறுணியில் நெல் விதை ஒரு கலமும் ஆக நெல் விதை முக்கலமும் இறையிலி முற்றூட்டாக கொடுத்தேன். எனக்குப் பின் என் மக்கள் அவர்க்கு பின் அவரது மக்களுக்கும் (பேரர்களுக்கும்) விலையொற்றின சிதனத்துக்குரித்தாவதாக, இதாவது பரிசாவதாக என்று கூறி மன்னர் ஆணையிட்டு திருஉள்ளமும் செய்தபடியே ஆளுடைமருதுடையாக்கு கல்வெட்டிக் கொடுத்தேன் விக்கிரம சோழதிரிபுவன சிங்க தேவனாகிய நான். இது திரிபுவன சிங்கதேவன் எழுத்து. இவை கோத்தப்பச் சோழன் எழுத்து என்று கையொப்பமிட்டு கொடுத்தனர்.

    விக்கிரம சோழசிங்க தேவன் அரச குடியினர் என்பது புலனாகின்றது. இந்நிலத்தை அண்ணன் தம்பிமார் விலைகொடுத்து வாங்காமல் மன்னனிடம்இருந்து நேரடியாக மானியாமாகப் பெற்றுள்ளனர் இல்லாவிட்டால் காணியாக்குவதற்கு மன்னனின் ஆணையைப் பெற வேண்டிய தேவை வந்திருக்காது.  மன்னனுக்கு ஏதோ வகையில் உறவினராக இருத்தல் வேண்டும்.  விக்கிரம சோழதிரிபுவன சிங்கர் தம் பங்கான மூன்று கல நிலத்தையும் அதில் விதைக்க மூன்று கல விதை நெல்லையும் கோயிலுக்குக் காணியாகக் கொடுத்தார்.

    பார்வை நூல்:கொங்குநாட்டுக் கல்வெட்டுக்கள், கோயம்பத்தூர் மாவட்டம், 2001, பக்.131-132, மா.கணேசன் & இரா. ஜெகதீசன்

    திருப்பூர் தாராபுரம் வட்டம் பிரம்மியம் என்ற ஊரின் திருவலஞ்சுழி கோயில் கருவறை தெற்கு சுவர் 9  வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோஇராஜயிராஜ ஸ்ரீவீரசோழ தேவற்குத் திருவெழுத்திட்டுச் செல்லாநின்ற திருநல்லி யாண்டு அஞ்சாவதின் எதிராம் யாண்டு தென்கரை நாட்டு ப்ரஹ்மதேயம் ஸ்ரீ வீரசங்காத சதுர்வேதி மங்கலத்து ப்ரஹ்மணன் காமாக்கா
    2. ணிசோமாசி சோமாசி ராஜத்ரோஹம் பண்ணிப் போனமையில் அவன் பூமியானது பெருமாள் கொண்டருள பொருமாள் சாமந்தரில் பெரியாந் சோழனான வீரசோழ கங்கவன் பெருமாள் பண்டாரத்துக்கு
    3. நகரக்கல் துளை முப்பது பொன் வைச்சுப் பொன்னை குடுத்து நிலமறக் கொண்டு இவ்வூர்த் திருவலஞ்சுழி பரமேஸ்வரர்க்குத் திருப்பதியப்புறமாக வைச்ச நிலம் அன்னசு[ர]ப்போயிற் கிடக்காணியும், பள்ளப்போயிற் கிடகாணியு
    4. ம், பனையோடு செய்யிற் பாதியும், பெரிய செய்பனையோடு செய்யடைய அரைக் காணியும், அதிராத்தி வாக்காலில் வடக்கடையந் காணியும், கொங்க தோட்டத்தில் பாதியும், கோவிலார் தோட்டத்தில் பாதியு
    5. ம், வடவூரந் தோட்டத்திற் பாதியும், திருநாராயண விளாகத்திற் பாதியும், இன்நிலத்தால் வந்த வீடுகூறும் மடுகூறும் ஸ்வத்தியும் பரத்தியும் மற்றுமிப்பேர்பட்டிதும் இத்தேவர்க்குத் திருப்பதியப்புறமாவதாகவும் இ
    6. ன்னிலத்துக்கு அரையே யரைக்காப் பெயரை மாகாணிப் பங்குக்கு இறையிழிச்சு இவ்வூர் ஸபையார் பக்கற் குடுத்தப் பொன் நகரக்கல் துளை பத்து. இப்பொன் பத்துங்கைக் கொண்டு இறைவரி எச்சோறும் ஊர்ப்
    7. படுகுடிமையும் மற்றமெப்பேர்பட்டதும் இறுத்து முன்பு தேவதான முழுகற்படி உழுது ஊர் நஞ்சைமேல் வாரந்தேவர்க்குக் குடுக்கக்கடவோமானோம் ஸபையோம். இப்பரிசு இன்னிலந் திருப்பதியப்புற
    8. மாக சந்திராதித்தவற் செல்லக் கல்வெட்டிக் குடுத்தேன் வீரசோழ காங்கயனேன். இத்தம்மம் ரக்ஷிப்பான் ஸ்ரீபாதமென் தலைமேலின இத்தம்மம் அழிவுநினைப்பான் வழிஏழெச்சமறுவான். இது  பன்மாஹே
    9. ஸ்வர ரக்ஷை.

    திருவெழுத்திட்டு – முடிசூடி; பெருமாள் – மன்னன், சாமந்தர் – படைத்தலைவர் அமைச்சர்; நிலமற – ஒரு நிலம் கூட மிச்சமில்லாமல்; திருப்பதியப்புறம் – திருப்பாடல் பாடுதற்கு கொடையாக; இறையிழிச்சு – வரிநீங்கி; எச்சோறு பொது ஊழியர்க்கு பகலில் தரும் சொறு;  ஊர்ப்படுகுடிமை – ஊர்வரி;  வழிஏழெச்சமறுவான் – ஏழுதலைமுறை அற்றுப்போவான்.

    விளக்கம்: கொங்கு சோழன் இரண்டாம் வீரசோழனின் 6 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1106) தென்கரை நாட்டு பிரமதேயமாம் ஸ்ரீ வீரசங்காத சதுர்வேதி மங்கலத்து பிராமணன் காமாக்காணி சோமாசி சோமாசி இராஜதுரோகம் பண்ணிப் போனமையால் (இன்னது என்று குறிக்கவில்லை) அவனது நிலத்தையும் உடைமையையும் மன்னர் பறிமுதல் செய்தார். அதனை மன்னனின் படைத்தலைவர் சோழனான வீரசோழ காங்கவன் பெருமாள் பண்டாரத்துக்கு நகரக்கல் துளை முப்பது பொன் கொடுத்து நிலம் ஏதும் மிச்சம் விடாமல் பிராமணனின் 10 இடத்தில்அமைந்த நிலம், தோட்டம்,  வீடு ஆகியவற்றை வாங்கி அவற்றை திருவலஞ்சுழி பரமேசுவரர்க்குத் திருப்பதியப்புறமாகக் கொடுத்தான். அதோடு அரையே அரைக்கால் மாகாணிப் பங்குக்கு வரிநீக்கி திருவலஞ்சுழி சபையாரிடம் அவன் கொடுத்தப் பொன் நகரக்கல் துளை பத்து. இப்பரிசு திருப்பதியப்புறமாக சந்திராதித்தவர் வரை செல்லவதாக கல்வெட்டிக் கொடுத்தான் வீரசோழ காங்கயன். இத்தர்மம் காப்பான் திருப்பாதமென் தலைமேல் என்றும், இத்தர்மம் அழியநினைப்பான் ஏழுதலைமுறை அற்றுப்போவான் என்றும் சாவித்தான்.

    சோழனான வீரசோழ காங்கவன் பெருமாள் மன்னனுக்கு அமைச்சராய் படைத்தலைவராய் இருப்பது அவரது உறவினர் என்பதால் ஆகலாம். இதைப் பெயரைக் கொண்டு  அறியமுடிகின்றது. மேலுள்ள மூன்று  கல்வெட்டுகளிலும் பறிமுதல் செய்த இராஜதுரோகிகளின் நில, உடைமைகளை உள்ளூரார் எவருமே வாங்க முன் வராததால் அவற்றை அரசதிகார பொறுப்பில் உள்ளவர்களே வாங்கிக் கொண்டு  கோவிலுக்கு நன்கொடையாகத் தந்து விடுகின்றனர். ஏனெனில் உள்ளூரார்க்கு ஏற்பட்ட அச்சமும், அவரிடம் பெரிதாக பணமும் இல்லாமல் இருக்கலாம் என்ற இரண்டு காரணங்கள் தாம். அதேநேரம் வெளியூரார் வந்து வாங்கிப் போட்டு நிலத்தையும் வீட்டையும் பயன்படுத்த முடியாது ஏனென்றால் அவர்கள் அந்த ஊருக்கே குடிபெயர்ந்தாக வேண்டி நிலை.

    பார்வை நூல்: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை – 8, 2012, பக். 160-161.

    https://veludharan.blogspot.com/2017/09/sri-soundranayaki-samedha-sri.html

    Share
  • கிழக்கு கோதாவரி பீமேசுவரர் கோயில் தமிழ்க் கல்வெட்டுகள்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    ஆந்திர மாநிலம் கோதாவரியின் கிழக்குக் கரையில் அமைந்த திரக்ஷாரமம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் காகிநாடாவிற்கு 28 கி.மீ. தொலைவில்அமைந்துள்ளது. இங்குள்ள பீமேசுவரர் கோயிலில் முதற் குலோத்துங்க சோழன் காலத்தே சிங்கள மன்னர் நல்கிய கொடை பற்றிய இரு தமிழ்க் கல்வெட்டுகள் இங்கு விளக்கப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் தென்சுவரில்  4 & 5 தூண்களுக்கு இடையே கீழிருந்து இடமாக 2 ஆம் கற்பலகையில் பொறிக்கப்பட்டு உள்ளன. இவை(S.I.I. IV ல் எண் 1246) உள்ளன. இக்கோவிலில் 400 மேற்பட்ட கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. இக்கால் இக்கோவில் நடுவண் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன்காரணமாக உள்ளே புல்தரையும் தோட்டமும் அமைந்து நல்ல முறையில் பேணப்பட்டு வருகின்றது.

    கல்வெட்டுப் பாடம்:

    1. ஸ்வஸ்திஸ்ரீ கொலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 43 _ _ _ _
    2. க தேவர்  பொன் கொண்டருளி சிங்களப்பிடாரர்க்கு வலிச _ _ _ _
    3. பரிசாவது இது இறையிலி தவிர்வதாகவும்  அந்தராயம் உட்பட்ட இறை த(விர்)
    4. வ(தா)கவும் மஹேஸ்வர மடத்திலே முப்பது கலம் உண்பதாகவும் தம்முடை
    5. ய திருக்கையாலே எழுத்திட்டுத் தந்தது. இதுக்குப் (பதினைம்ப
    6. தப்) பதினைம் பலத்தால் பதினைஞ்சு கலமும் பத்துப் பசுவும்
    7. இரண்டு அடிமையும் சத்தராயவர்கம் நிற்கக்  கடவதாக. இத்தன்ம
    8. ம் அழிவு பண்ணுவான் தங்கள் அம்மைய்க்கு த் தானே மின்னாளன். இத்த
    9. மம் நட(ப்பி)த்தான் ஸ்ரீபாதம் இரண்டும் சிங்களப்பிடாரனேன் த
    10. லை மேலன லிகிதம். தாகரேமிசுராசாரி அயன வீரராஜேந்த்ர சோழ ஆ
    11. சார்ய:

    சொற்பொருள்: 

    இறையிலி தவிர்வதாக – வரிச்சலுகை நீங்கியதாக; இறை தவிர்வதாக – வரி நீங்குவதாக; நிற்க –இருக்க;  மின்னாளன்- பாலுறவில் துணைவன்; அயன – ஆயினவர், ஆனவர், ஆகியவர்; தெலுங்கில் அய்ன.

    கல்வெட்டு விளக்கம்:

    முதற் குலோத்துங்க சோழனின் 43 ஆம் ஆண்டு ஆட்சியின் (கி.பி. 1113) போது நிலதானம் செய்து (கல்வெட்டு சிதைந்துள்ளதால் தெளிவாக பொருள் கொள்ள இயலவில்லை) சிங்களப்பிடாரர் இறையிலி நீங்குவதாகவும் அந்தராயமான உள்நாட்டு வரி தவிர்வதாகவும் சொல்லியதோடு மகேசுவர மடத்தில் உண்பதற்கு முப்பது கலம் அளவிற்கு நெல்லை அளிக்கத் தம் கையாலே கையொப்பமிட்டுத் தந்தார். பதினைம்பலத்தால் அளந்து பதினைந்து கலம் நெல்லும் 10 பசுவும்  2 அடிமையும் சந்திராதித்தவர் உள்ள வரை செல்வதாக விட்டார். இந்தக் கொடையை அழிப்பவன் தன் அன்னைக்குத் தானே கலவித்துணைவன் ஆகுவன். இந்தக் கொடையைத் தடையின்றி நடப்பிப்பான் கால் இரண்டும் சிங்களப்பிடாரன் தலைமேல் எனக் கூறி மடல் எழுதினான்.  இதை கல்வெட்டாய் பொறித்தவன் அயன வீர்ராஜேந்திர சோழ ஆசாரி எனபவன்.

    பொதுவாக இறையிலி தருவார்கள் ஆனால் இங்கு அது நீங்கப்பட்டு இறை தண்டப்படவேண்டும் என்பது போல் இருப்பது குழப்பம் அளிக்கின்றது. தவறான சொல்லாட்சியாகத் தெரிகின்றது. எழுத்து சிதையாமல் இருந்திருந்தால் தெளிவான விடை கிட்டிருக்கும். இதில் 2 அடிமையும், 10 பசுவும் தரப்பட்டது விளக்கு எரிப்பதற்காகவா? கல்வெட்டில் செய்தி முழுமையாக, சரியாக, தெளிவாக இல்லாமல் உள்ளது.

    கல்வெட்டுப் பாடம்:

    1. (ஸ்வஸ்திஸ்ரீ) கொலோத்துங்க சோழ (தேவர்)கு யாண்டு 4(9 ஆவ)
    2. து நாள் 70 கங்கைகொண்ட சோழ வளநாட்டு குட்டவாடி நாட்டுப் பெரிய
    3. தாக்கரம்பை பீமீஸ்வரம் உடைய ம(ஹாதேவர்க்கு சூர்)(ய்)ய கிராண நிமி(ர்)த்தத்து வீ
    4. ழத்து விக்கிரம (பாஹு)க்கள் பிரதானி உய்யவந்தான் திருவண்ணாமலையன் வி
    5. ஜயபாஹு மாசாத்து
    6. நாயன் _ _ _ _ கோதாவிரிக் கீழ்கரைக் கொண்டிகரு
    7. டு தாக்கரம்பை ந(ரே)ந்த்ர ஈசுரம் உடைய மஹாதேவர் கோயில் சமீபம் தீர்
    8. த்தக் கரையில் மேற்படியான் பிரதிஷ்டித்த பன் மாஹேஸ்வரன் மடத்தில் உ
    9. ண்ணக் கடவ  தபஸ்யர் பதினை(ய்)வரும் இவர்களுக்கு அமுது செய்யக் க
    10. லம் பதினைஞ்சும் சட்டுவம் ஒன்றும் ஆக உருப்பதினாரினால் நிறை நூ
    11. ற்று முப்பத்தேழு பல வரையும் பெண்ணாடினம் ஒன்றும் குட்டாவாடி நா
    12. ட்டு ஊருள்இடப்பள்ளி அளம் வளையிற் சுற்று முப்பது வட்டி நிலமும் நகர
    13. மும் _ _ _ _ தோட்டமும்  _ _ _ _ _ த செல்கையுட்பட அந்தராயமும்
    14. _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

    பகுதி 2

    1. ப் பத்தரத்தத்தம் சந்தித்தவர் செய்யவும் உண்ணவு
    2. ம் மடம் அழிவு செய்யும் திருக்காளத்தி உடையான் ஆன பலவிளக்குப்
    3. பரிசாரர் வசம் இட்டோம்// ஸ _ _ _ அ ஸம் நை பஹுபிர் வஸுதா
    4. தத்தா ப

     சொற்பொருள்:

    தாக்கரம்பை – இடப்பெயரான திரக்ஷாரமம் தமிழில் இப்படி குறிக்கப்பட்டுகின்றது; பிரதானி – முதன்மை அரசலுவலர்; தபஸ்யர் – சிவயோகியர்; சட்டுவம் – கரண்டி; பெண்ணாடினம் – பெண் ஆடு; அளம் – உப்பளம்; வளை – சூழ்ந்த இடம்; பத்திரதத்தம் – ஓலைஆவணம் தருதல்; சந்தித்தவர் – சந்திராதித்தவர் வரை

    கல்வெட்டு விளக்கம்:

    முதற் குலோத்துங்க சோழனின் 49 ஆம் ஆண்டு ஆட்சியின் (கி.பி. 1119) போது கிழக்கு கோதாவரியான கங்கைகொண்ட சோழவளநாட்டில் குட்டவாடி நாட்டில் உள்ள பெரிய தாக்கரம்பை ஊரில் கோயில் கொண்ட பீமேசுவரர்க்கு சூரியகிரகணம் காரணமாக ஈழத்து விக்கிரமபாகுவின் முதன்மை அரசலுவலர் உய்யவந்தான் திருவண்ணாமலையான் விஜயபாகு மாசாத்து நாயன் என்பான் கோதாவரியன் கிழக்குக்கரையில் கொண்டிக்கருடு தாக்கரம்பை நரேந்திரேசுவரம் இறைவர்க்கு அண்மையில் ஆற்றங்கரையில் மேற்படியானவர் நிறுத்திய பன்மாகேசுவரர் மடத்தில் பதினைந்து சிவயோகிகள் உண்பதற்கு பதினைந்து கலம் நெல்லும் கரண்டி ஒன்றும் ஆக பதினாறு பேருக்கு 137 பலம் வரையும், பெண் ஆடு ஒன்றும், குட்டவாடியில் இடப்பள்ளியில் உப்பளம் சூழ்ந்த இடத்தில் சுற்றியுள்ள 30 வடி நிலமும், நகரமும், தோட்டமும் எல்லா வரியும்நீக்கிக் கொடுத்தார். இந்த தருமம் சந்திராதித்தவர் வரை செல்க எனவும் இவற்றையும் மடத்தையும் அழிப்பவன் பாவத்திற்கு உட்படுவான் என்றும் குறிக்கவருவதை புரிந்து கொள்ள முடிகின்றது. பலவிளக்கு பரிசாரகர் வசம் ஒப்படைக்கப்பட்டது.  13 ஆம் வரிக்கு பின் கல்வெட்டு சிதைந்துள்ளது. அதனால் பொருளை சரியாக விளக்க முடியவில்லை. பகுதி இரண்டு வேறு ஒரு கல்வெட்டு செய்தி ஆகலாம். பகுதி 2 முழுமையாக செய்திகளைக் கொண்டிருக்கவில்லை. அது வேறு ஒரு கல்வெட்டுச் செய்தி ஆகலாம்.

    விக்கிரமபாகு ஈழத்தில் பொலன்நறுவையை கி.பி. 1111 – 11132 வரை ஆண்ட சிங்கள மன்னன். இவனது முதன்மை அலுவலர் வழங்கிய கொடைகளைப் பார்க்கும் போது இவன் சார்பாகவே அவன் வழங்கியது என்று தெரிகின்றது. பீமேசுவரமும் நரேந்திரீசுரமும் ஒரே ஊரில் அமைந்த இரு வேறு கோவில்கள் போலும். மேல் இரண்டு கல்வெட்டும் சிங்கள ஆட்சியாளர் தொடர்புடையது என்பது தெளிவு. ஒரு கோவிலுக்கு யார் விரும்பினாலும் பொருளாக எவ்வளவு வேண்டுமானாலும் தானம் செய்யலாம் ஆனால் வேறு ஆட்சியாளர் ஆளும் நிலவரம்பில் சென்று இன்னொரு ஆட்சியாளர் அந்தராயம் உள்ளிட்ட வரிவிலக்கு தரமுடியுமா? அந்த அதிகாரம் எப்படி வந்தது?  என்பதே எனது விளங்காப் புதிராக உள்ளது.

    பார்வை நூல்: Ephigraphica Andhrica Vol I

    https://eastgodavari.nic.in/tourism/temples/lord-bhimeswara-swami-temple-draksharama/

    https://www.google.com/maps/uv?hl=en&pb=!1s0x3a378d12c6558be3:0x8d61e2b9749eca81!2m22!2m2!1i80!2i80!3m1!2i20!16m16!1b1!2m2!1m1!1e1!2m2!1m1!1e3!2m2!1m1!1e5!2m2!1m1!1e4!2m2!1m1!1e6!3m1!7e115!4shttps://lh5.googleusercontent.com/p/AF1QipPqjALou3VymtBTTA38DtNp4ujtaLQzv2UlUBuT%3Dw213-h160-k-no!5sdraksharamam+bhimeswara+photos+-+Google+Search&imagekey=!1e10!2sAF1QipPqjALou3VymtBTTA38DtNp4ujtaLQzv2UlUBuT&sa=X&ved=2ahUKEwiEhqei2JnhAhULuo8KHdVgBIwQoiowFHoECA0QBg

    Share
  • திருவிடைமருதூரில் சோழர் காலத்தில் சாக்கைக் கூத்து நாடகம் பற்றிய கல்வெட்டு

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    முத்தமிழில் ஒன்று நாடகத் தமிழ். இந்த நாடகக் கலை கூத்துவடிவில் சோழர் கால ஆட்சியில் கோவில்களில் நடத்தப்பெறுதற்கு வேண்டிய கொடையை நல்கி நல்லாதரவு தந்து வளர்த்ததற்கு சான்றாக உள்ளவையே கீழ் உள்ள கல்வெட்டுகள். இவை இரண்டும் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேசுவரர் கோவில் மண்டப வடக்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன.

    1. இரண்டாம் ஆதித்ய கரிகாலனின் ஆட்சியில் சாக்கைக் கூத்தனுக்கு பசிக்கு கூலியாக ஒரு வேலி நிலம்.

    கல்வெட்டுப் பாடம்:

    ஸ்வஸ்திஸ்ரீ பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி பந்மற்கு யாண்டு 4 ஆவது திருவிடைமருதில் ஸ்ரீ மூலஸ்தானத்தில் பெருமானடிகளுக்கு ஆரியக் கூத்தாட ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற சிற்றிங்கண் உடையான் கோயில் மயிலை ஆன பராந்தக மூவேந்த வேளாரும் திரைமூர் நாடுடையாரும் திருவிடைமருதில் நகரத்தாரும் தேவகந்மிகளும் நாடக சாலையிலேயிருந்து கித்திமறைக்காடன் ஆன திருவெள்ளறை சாக்கைக்கு நிவந்தஞ் செய்து குடுக்க என்று ஏவலால் இத்தேவர் தேவதானம் விளங்குடி நிலத்தில் பறைச்சேரி பத்து உள்பட நிலம் வேலியும் இவ்வாண்டின் எதிராமாண்டு முதல் இந்நிலங்கொண்டு தைப்பூசத் திருநாளிலே ஒரு கூத்தாடுவதாகவும், திருத்தம் ஆடின பிற்றை நாள் துடங்கி மூன்று கூத்தாடுவதாகவும்,  வைகாசித் திருவாதிரையின் பிற்றைநாள் தொடங்கி மூன்று கூத்தாடுவதாகவும் ஆக இந்தக் கூத்து ஏழு அங்கமும் ஆடுவதாகவும் பண்டாரத்தே பதினாற்கல நெல்லு கொற்றுப் பெறுவதாகவும் இந்நெல்லும் விலை அடைப்படி நெல்லும் கொற்றும் இரட்டி அவ்வவ் வாட்டையாடுகவும். இப்பரிசு கித்திமறைகாடனால் திருவெள்ளறை சாக்கைக்குச் சந்திராதி _ _ _ _ _

    சொற்பொருள்:  
    காரியம் ஆராய்கின்ற – கருத்தாலோசிக்கும், consultant; சிற்றிங்கண் – தணிக்கை செய்கிற. முதுகண் என்பதற்கு எதிர்ச்சொல் ஆகுமோ; கோயில் மயிலை –     ; தேவகன்மிகள் – இறைப்பணியாளர்; நிவந்தம் – கோயிற்பணி செலவு; ஏவல் – மேலிடத்துக் கட்டளை; எதிராமாண்டு – ; திருத்தம் – பத்தாம் நாள் நடைபெறும் தீர்த்தவாரி; கொற்றும் – உணவு; கூத்து – ஆடி நடிப்பது.

    கல்வெட்டு விளக்கம்:  

    இரண்டாம் ஆதித்ய கரிகாலனின் 4 ஆம்ஆண்டு ஆட்சியில் (கி.பி. 968) திருவிடைமருதூர் மூலவருக்கு ஆரியக் கூத்தாடுவற்கான திருப்பணி பற்றி கருத்தாலோசனை செய்கின்ற தணிக்கை செய்கின்ற அதிகாரியான பராந்தக மூவேந்த வேளாரும், திரைமூர் நாட்டவரும், திருவிடைமருதூர் நகரத்தாரும், இறைபணியாளர்களும், நாகடசபையில் கூத்தாடும் திருவெள்ளறை சாக்கையான கித்திமறைக்காடன் என்பானும் இவனுக்கு பணிக்கூலி கொடுக்க மேலிடக் கட்டளையால் ஒன்று கூடி ஆலோசித்து விளங்குடியில் இவ்இறைவர்க்கு உள்ள தேவதான நிலத்தில் பறைச்சேறிபற்று உள்பட ஒரு வேலி நிலத்தை  கோயிற்பணி கூலியாக ஏற்றுக் கொண்டு எதிர்வரும் ஆண்டு முதல், இதாவது, ஐந்தாம் ஆட்சி ஆண்டு முதல் தைப்பூசத்தன்று ஒரு கூத்தாடவும், தீர்த்தவாரி கழிந்து வரும் பின் மூன்று நாளும், வைகாசித் திருவாதிரைக்கு பின் மூன்று நாளும் ஆக இந்தக் கூத்து ஏழு அங்கங்கள் ஆடவேண்டும். கோயில் அலுவலகத்தில் 16 கலம் நெல், உணவு பெற்றுக் கொள்ளவும் இசைவு தரப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கூத்து நடத்த 16 கல நெல்லும், விலை அடைப்படி நெல்லும், உணவும் இரட்டிப்பாக பெற்றுக் கொள்ளலாம். இந்த வெகுமதிப் பரிசு திருவெள்ளறை சாக்கையருக்கு கித்தமறைக்காடனால் சந்திராதித்தர் வரை தொடர்வதாக என்று குறிக்கப்பட்டுள்ளது.

    திருவிடைமருதூர் கோவிலில் நாடகசபை ஒன்று இருந்ததையும் அதில் மூலவருக்காக ஆண்டுதோறும் கூத்து நடைபெற ஏற்பாடு ஆனது பற்றியும் அறியமுடிகின்றது. சாக்கை கூத்து ஆடியவர்கள் பறையர்கள் என்பதால் கித்தமறைக்காடனுக்கு பறைச்சேரியில் உள்ள பற்று ஒதுக்கப்படுகின்றது. அதைக் கொண்டு அவர் பறையர் என்பதையும் அறிய முடிகின்றது. புராணத்தில் பக்த நந்தனார் தீண்டாமைக்கு ஆட்பட்டு கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டார். ஆனால் இங்கோ கித்திமறைக்காடன் என்ற பறையர் கோயிலில் அமைந்த நாடக சபையில் கூத்து நிகழ்த்துகிறார். இவ்விரண்டு செய்திக்கும் எத்தனை முறண். இது சோழர் காலத்தில் தீண்டாமை இல்லை என்பதற்கு சான்று. எவரும் தாழ்த்தி ஒடுக்கப்கவில்லை என்பதற்கு சான்று. இதனால் இரண்டாயிரம் ஆண்டு ஒடுக்குமறை என்பது பொய்யன்றோ?

    2. முதற் பராந்தகன் காலத்தில் உடுக்கை அடிப்போனுக்கு பணிக்கூலியாக நிலம்.

    கல்வெட்டுப் பாடம்:

    ஸ்வஸ்திஸ்ரீ மதுரைகொண்ட கோப்பரகேசரி பந்மற்கு யாண்டு 17 ஆவது திருவிடைமருதூருடையாருக்கு ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற குறும்பில் வாஸுதேவனார் ஆராய்ச்சியில் திரைமூர் ஸபையாரும் _ _ _ _ _ த _ _ _ ரல் நகரத்தாரும் திருக்கோயிலுடையார்களும் பதிபாத மூலத்தாரும் நாடக சாலையிலிருந்து திருவிடைமருதூருடையார்க்குத் திருஓலக்கத்து மூன்றுஸந்தியும் உடுக்கை வாசிப்பான் ஒருவனுக்கு விளங்குடி தேவர் நிலத்தில் நிவந்தமாகச் செய்த நிலம் முக்கால்.

    சொற்பொருள்:  
    ஆராய்ச்சி – கருத்தாலோசனை, consult; பதிபாத –  சிவன்கோயில் பூசகர்; திருஓலக்கம் – நாயனம், நாதஸ்வரம்.

    கல்வெட்டு விளக்கம்:  

    முதற் பராந்தகனின் 17 ஆம் ஆண்டு ஆட்சியின் (கி.பி. 924) போது திருவிடைமருதூர் ஈசன் கோயிலில் கருத்தாலோசனை செய்கின்ற குறும்பில்லைச் சேர்ந்த வாசுதேவன் நடத்தின கருத்தாலோசணை கூட்டத்தில் பங்கெடுத்த திரைமூர் கருவறை பட்டர்களும், நகரத்தவரும், திருக்கோயில் பணியாளர்களும், சிவன்கோயில் பூசகரும் கூடி நாடக சபையில் இருந்து திருவிடைமருதூருடைய ஈசர்க்கு நாதாவரம் வாசிக்கின்ற போது மூன்று கால பூசனையின் போது உடுக்கை அடிப்பவனுக்கு விளங்குடியில் உள்ள தேவதான நிலத்தில் தானமாகக் கொடுத்த நிலம் முக்கால் பங்கு வேலி.

    கூத்து, நாடகம் முதலியவை கோவிலகளில் இராசராசனுக்கு முன்பே பல்லவர் காலத்திலேயே தொடங்கி விட்டன போலும்.  உடுக்கை அடிப்பவர் பறையர் என்பதால் விளங்குடியில் அவருக்கு நிலக் கொடை வழங்கப்பட்டது.

    பார்வை நூல்: திருவிடைமருதூர் கல்வெட்டுகள், வெளியீடு 1960, ஸ்ரீ மகாலிங்க சுவாமி தேவாதானம்.

    இந்த மகாலிங்க சுவாமி தேவஸ்தானம், திருப்பதி தேவஸ்தானம் போல ஆங்காங்கே உள்ள திருக்கோயில் நிருவாகத்தார் தமது கோயில் கல்வெட்டுகளை அச்சில் ஏற்றி இருந்தால் தமக்கு இப்போது எவ்வளவோ கல்வெட்டுகள் ஆராயக்கிட்டி இருக்கும்.

    Share
  • கல்வெட்டுகளில் அணைகள், நீர்நிலைகள்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    1. கல்வெட்டுகளில் அணைகள், நீர்நிலைகள்

    நீர் உயிர்வாழ்க்கைக்கு மட்டுமல்லாது பாசனத்திற்கும் இன்றியமையாததாக இருந்தது. பண்டு ஏரிகள், குளங்கள், அணைகள் கட்டி நீர்த்தேக்கிப் பாசனம் மேற்கொண்டனர். நீர்ப்பாசனத்தால் வேண்டிய உணவுத் தேவைகளை அவ்வவ்வூரிலே நிறைவு செய்து கொண்டனர். நாகரிகம் வளர்த்தனர். இதற்கென்று தனி வரிகளும் தண்டப்பட்டன. நீர்நிலைகளைஅவ்வப்போது செப்பனிட்டுப் பேணியும் வந்தனர். சில கல்வெட்டில் அவை பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. அவற்றில் நான்கனைப் பற்றி கீழே காண்போம்.

    கல்வெட்டுப் பாடம்:

    1. ஸ்வஸ்திஸ்ரீ  திரிபுவனச் சக்கரவத்திகள் கோனேரின்மை
    2. கொண்டான் பேரூர் நாட்டுப் புகலிடங்கொடுத்த சோ
    3. ழச்சதுர்வேதி மங்கலத்துச் சபையார்க்கும்
    4. பேரூர் ஊரார்க்கும் நம்மோலை குடுத்தபடியா
    5. வது, இவர்கள் தங்களுக்கு நீர்தட்டப் பெறவே என
    6. க்கு வந்து அறிவித்தமையில் இவர்கள் தங்களூர் எல்
    7. லையில் தேவிசிறை என்கிற அணையடைத்து வாய்க்காலும்
    8. வெட்டிக் கோளூர்அணைக்குச் சேதம் வாராதபடி  அவ்வணைக்கு
    9. பின்பாக நீர்விட்டுக் கொள்ளப் பெறுபவராகவும் இவர்கள் தங்
    10. கள் ஊர் எல்லையில் மாளிகைப் பழநத்தம் என்கிற நத்தத்திலே
    11. புகலிடங்கொடுத்த சோழநல்லூர் என்று ஊரேற்றிக் கொள்வார்
    12. களாகவும், இவ்வூர்க்கு மன்றாட்டு பேரூர் மன்றாடிகளும்
    13. இவ்வூரில் ஆறில் ஒன்று _ _ _ _ கில் குணியன் புத்தூர்
    14. மன்றாடிகளும் மன்றாட்டாவதாகவும் இப்படிக் கீழ்வேண்
    15. டும் குடியிட்டுக் கொள்வார்களாகவும் இவ்வூர்க்கு இ
    16. றையாவது குடி ஒன்றுக்கு கொங்கு கலக் கண்பாகவும் குடி
    17. ஒன்றுக்குப் பொன் காலாகவும் ஆண்டுவரையும் இறுத்து
    18. வருவார்களாகவும், இறுத்துமிடத்து இவ்வூர் மன்றாடிகளும்
    19. புகலிடங்கொடுத்த சோழ சதுர்வேதி மங்கலத்துச் சபையா
    20. ர் _  _ _ _ _ _ _ _ _ _ _ _
    21. ன்று இவ்வூர் குடியேற்றின ஆண்டுமுதல் மூவாண்டு கழிந்தால்
    22. நாலாமாண்டு முதல் ஆண்டு வரையிலும் இறுப்பார்களாகவும் இவ்வொட்டின
    23. கண்பும் இப்பொன்னுமல்லது எலவை உகவை நம் கன்மிகள்
    24. பேறு சாமந்தப்பேறு மற்றும் எப்பேர்ப்பட்ட அந்தராயங்
    25. களும் இவ்வூர்க்கு இறுக்கக்கடவன அல்லவாகவும் இவ்வூர்க்கும் இவ்வணைக்கும்
    26. காவலாக இரண்டு ஊர்கள் _ _ _ _  வேண்டும் பூலுவன்
    27. _ _ _ _ _  பூலுவற்குக்கா _ _ _ _ _ _ ற்கு
    28. இவ்வூரில் மூன்றத்தொரு புன்செய் பூலுவர் இறையிலி _ _ _  மு
    29. டிவாலேவாகவும் இப்படிசெம்பிலும் சிலையிலும் வெ
    30. ட்டிக் கொள்ளப் பெறுவார்களாக யாண்டு பதினேழாவது
    31. முதல் நம் ஓலை குடுத்தோம். இவை இராசேந்திர
    32. சோழப் பிரமராயன் எழுத்து. யாண்டு 17 நாள் 55.
    33. இவை சீபாதப் பிரியன் எழுத்து.

    சொற்பொருள்: 

    தட்டம் – தட்டுப்பாடு; சிறை – அணைக்கட்டு; நத்தம் –குடிஇருப்பு நிலம்; கண்பு – ஒருவகைக் கூலம், தானியம். கம்பாக இருக்கலாம்; சபையார் – கோயிற் கருவறை பிராமணர்; மன்றாட்டு – மேய்ச்சல் நிலம்; இவ்ஒட்டின  – செலுத்திய; எலவை –  தண்டம்? உகவை – பொன், காசாக தரும் வரி; கன்மிப்பேறு – கோயிற் காணிக்கை வரி; சாமந்தப் பேறு – குறுநில ஆட்சியர்/படைத்தலைவர் வரி; அந்தராயம் – உள்நாட்டு வரி; பிரமராயர் – கோயில், சதுர்வேதி மங்கல செயற்பாட்டை கண்காணிக்கும் பிராமண அரசஅதிகாரி

    கல்வெட்டு விளக்கம்:

    இது கோவை மாவட்டம் பேரூர் வட்டத்தில் உள்ள பட்டீசுவரர் கோவில் மகாமண்டப வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டு.  13 ஆம் நூற்றாண்டில் கொங்கு சோழன் கோனேரின்மை கொண்டான் வீரராஜேந்திரனின் 17 ஆம்ஆண்டு ஆட்சியில் (கி.பி. 1224) வெட்டுவித்த 33 வரிக் கல்வெட்டு.

    இதில் இராசேந்திர சோழப் பிரமராயன் என்ற கோவில் செயற்பாட்டை கண்காணிக்கும் பிராமண அரசஅதிகாரி கோனேரின்மை கொண்டானின் 17 ஆம்ஆண்டு ஆட்சியில் 55 ஆம் நாளில் (மே மாத இறுதி) ஓலைஆணை ஒன்றை சோழச் சதுர்வேதி மங்கலத்து கருவறை பிராமணர்களுக்கும், பேரூர் ஊரவர்க்கும் பிறப்பிக்கின்றான். அதில் பேரூர் ஊரவர் தங்களுக்கு பாசன நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை எனக்கு அறியத் தந்தார்கள். அதனால் இவர்தம் ஊரின் எல்லையில் அமைந்த தேவிசிறை என்ற அணைக்கட்டை அடைத்து வாய்க்கால் வெட்டி அந்நீரை கோளூர் அணைக்கு எந்த சேதமும் ஏற்படாத வகையில் அவ்வணைக்கு பின்புறமாக தேவிசிறை கால்வாய் நீரை எடுத்துச் செல்லவேண்டும் என்று அறிவுறுத்துகின்றான். அதோடு ஊர் எல்லையில் அமைந்து இருந்த மாளிகைப் பழந்நத்தம் என்ற இடத்தை “புகலிடங்கொடுத்த சோழநல்லூர்” எனப் பெயரிட்டு அதில் மக்களை குடியேற்றிக் கொள்ளலாம் என உரிமை தருகின்றான். இவ்வூரின் மேய்ச்சல் நிலத்தில் மேய்குக்கும் பேரூர் மன்றாடிகளான இடையர்கள் அதில் தம் பங்காக ஆறில் ஒரு பகுதியை குணியன் புத்தூர் மன்றாடிகளோடு இணைந்து மேய்க்கப் பெற்றுக்கொள்வார்கள் என்கிறான். இந்தப் புது ஊரார் வரியாக குடும்பம் ஒன்றுக்கு ஒரு கொங்கு கலத்தில் கண்பும், கால் பொன்னும் கட்ட வேண்டும். கட்டும் இடத்து இவ்வூர் மன்றாடிகளும் சோழச் சதுர்வேதி மங்கல சபையோரும் முதல் மூன்று ஆண்டுகள் தவிர்த்து நாலாம் ஆண்டுமுதல் ஒரு முழு ஆண்டிற்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு கொங்கு கலம் கண்பு கூலமும், கால் பொன்னும் வரியாகத் திரட்ட வேண்டும். இவை தவிர வேறு எந்த வகை வரியும் செலுத்த வேண்டாம் என்று வரிவிலக்கு தந்தான். இவ்வூருக்கும் இவ்வணைக்கும் காவலராக பூலுவர் என்ற வேட்டுவர் அமர்த்தப்பட்டனர். இப்புது ஊரில் குடியேற்றிய மக்களில் வேட்டுவரான பூலுவரும் இருந்தனர். இவர்கள் ஆற்றும் காவலுக்குக் கூலியாக அவர்களுக்கு புன்செய் நிலத்தில் மூன்றில் ஒருபகுதி இறையிலியாக ஒதுக்கப்பட்டது.

    இவ்வகையில் அணைகள், கால்வாய்கள் பேணிக் காக்கப்பட்டன என்பது தெரிகின்றது. பிரமராயர் சதுர்வேதி மங்கலம், கோவில் தொடர்பான மேற்பார்வை அதிகாரி என்பதால் அங்கு செய்யப்பட வேண்டிய செயலுக்கு ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் பெற்றிருப்பது இக்கல்வெட்டின் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிகின்றது, அதோடு பூலுவ வேட்டுவர் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகின்றது. இக்கல்வெட்டில் வேட்டுவர் பூலுவர்க்கு இறையிலி நிலம் பற்றிய செய்தி மட்டுமல்லாது அணைக் கால்வாய், புதுஊர் குடியேற்றம், ஊரார்க்கு வரியும் வரிச்சலுகையும், இடையர்க்கு மேய்ச்சல் நில உரிமை ஆகிய செய்திகளும் கூடுதலாக உள்ளன.

    பார்வை நூல்: வேட்டுவர் சமூக ஆவணங்கள், புலவர் செ. ராசு, ஈரோடு, 2008 வெளியீடு. பக். 90

    2. சேலம் வட்டம் மல்லூர் அருகே மூக்குத்தி பாளையம் மோழப்பாறையில் வெட்டப்பட்ட 13 ஆம் நூற்றாண்டு 8 வரிக் கல்வெட்டு.

    கல்வெட்டுப் பாடம்:  

    1. ஸ்வஸ்திஸ்ரீ எழுகரை நாட்டு அக்கை
    2. சாலை கங்கை என்று பேரிட்டு இக்கு
    3. ளம் அட்டினேன் பெரியவிலங்கி
    4. ஊராளியாகிய சுண்டை வேட்டுவன்
    5. சிலம்பன் சிறியர் ஆன எழுக
    6. ரை நாட்டு அக்கசாலைகள் மாத்
    7. த ஆராத பிள்ளையேன் பெருமலை
    8. க்கு எல்லை _ _ _ _ _

    சொற்பொருள்:  

    அட்டினேன் – தானாமாக கொடுத்தேன்; சிறியர் – இறையவர், junior; ஆராத – பொறுக்காத

    கல்வெட்டு விளக்கம்:  

    நான்காம் அதிகார அடுக்கைச் சேர்ந்த பெரியவிலங்கி எனும் ஊரின் ஊராளியான எழுகரை நாட்டின் சுண்டை வேட்டுவர் இனம் சார்ந்த சிலம்பன் இளையவர் என்பார் குளம் ஒன்றை அக்கை சாலை என்னும் இடத்தில் வெட்டி அதற்கு “அக்கைசாலை கங்கை” எனப் பெயரிட்டு தானாமாக வழங்கினார். இவர் தன்னை அக்கசாலைகள் மாற்ற ஆராத பிள்ளை என்கின்றார். இதில் அக்கைசாலைகள் என்பது காசு உருவாக்கும் பொற்கூடத்தை குறிக்கும். இந்தக் குளத்தின் எல்லைகளில் ஒன்றாகப் பெருமலை குறிக்கப்பெறுகின்றது. கல்வெட்டு முற்றாக இல்லை.

    இங்கிருக்கும் அக்கசாலைகள் இடம்மாற்றம் பெறுவதை பொறாத பிள்ளை என்று தம்மை கூறிக் கொள்வதில் இருந்து அங்குள்ள அக்க சாலைகள் நீர்தட்டுப்பாட்டின் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட இருந்ததையும் அவை இடம்மாறினால் தனக்கு வரி வருவாய் குறைந்துவிடும் என்பதையும் உணர்ந்துதான் இவர் ஒரு குளத்தை வெட்டி தானமாக கொடுத்துள்ளார் என்று புரிந்துகொள்ள முடிகின்றது. மேலுள்ள இரு கல்வெட்டுகளும் வேட்டுவர் சமூகங்கள் பற்றி அறிவதற்கு தொகுக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் இருந்து நாம் கூடுதல் செய்திகளையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

    பார்வை நூல்: வேட்டுவர் சமூக ஆவணங்கள், புலவர் செ. ராசு, ஈரோடு, 2008 வெளியீடு.

    கீழே உள்ள கல்வெட்டு திருக்காஞ்சி என்ற ஊரின் கோயிலில் வெட்டப்பட்டுள்ளது.  29 வரிகள் கொண்ட  இக்கல்வெட்டு  முதற் குலோத்துங்கனின் 40 ஆம் ஆண்டு ஆட்சியின் போது (கி.பி.1110) வெட்டப்பட்டது.

    கல்வெட்டுப் பாடம்:  

    1. வ த ஸ்ரீ வீரமேய் துணையாகவு
    2. ம் தியாக மேய் அணியாகவும் செங்
    3. கோலோச்சிக் கருங்கலி கடிந்து
    4. புகழ்மாது விளங்க ஜய மாது விரும்
    5. ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர
    6. உரிமையிற் சிறந்த மணிமுடி சூடி
    7. மீனவர் நிலை கெட வில்லவர் கு
    8. லை தர ஏனை மந்னவர் இரியலுற்
    9. றிழிதர கனைத்தும் தந்சக்கரந
    10. டாத்தி வீரசிம்மாசனத்து அவநி
    11. முழு துடையாளோடும் வீற்றிருந்த
    12. ருளிய கோவிராஜ கேசரி பந்மரான
    13. திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோ
    14. த்துங்க சோழ தேவற்கு யாண்
    15. டு 40 தாவது திரிபுவனமாதே
    16. விச் சருப்பேதி மங்கலத்து ஏரி
    17. நிறை யேரியிலே பெருங்காற்றடி
    18. த்துக் குலையழிந்து கெட்டமையில்
    19. இக்கரையும் அட்டுவித்துக் குலோத்
    20. துங்க சோழநேந்து திருநாமத்தால் க
    21. ற் படையுஞ் செய்து இத்தன்மம் சந்திராதித்த
    22. வற் நிற்கச்  செய்தாந் பூதமங்கலமுடை
    23. யாந் ஒற்றியூரன் பூபாலசுந்திரநான சோழ
    24. கோநார். இவற்க்காக இக்கற்படை செய்வி
    25. தாந் ராஜேந்திர சோழ வளநாட்டு இடை
    26. வள நாட்டுச் சேவகலூருடையாந் அரை
    27. யந் திருமழ பாடியுடையாநான மலைய
    28. ப்பியராஜந். இத்தன்மம் மகாசபையார் ர
    29. ன கூடி

    சொற்பொருள்:  

    நிறைஏரி – பக்கக் கரைகளை கொண்ட ஏரி, பெருங்காற்று – சூராவளி, கடுங்காற்று; குலைஅழிந்து – செய்கரை, artificial bank, பாலம்  ; அட்டுவித்து – கட்டிக் கொடுத்து கற்படை – கருங்கல் சுவர்; மகாசபையார் – கருவறை பிராமணர் உள்ளிட்ட நிர்வாகத்தார்.

    கல்வெட்டு விளக்கம்:  

    11 ஆம் வரி வரை குலோத்துங்கனின் மெய்கீர்த்திகளைச் சொல்லும் இக்கல்வெட்டு திரிபுவன மாதேவிச் சருப்பேதி மங்கலத்து ஏரியின் நிறையேரிக் கரை கடுங்காற்று வீச்சினால் செய்கரை அழிந்து உடைப்பெடுத்து நீரவெளியேறி அழிவை உண்டாக்கியது. அதற்கு வலுவான கரையைகட்டிக் கொடுத்து அதையொட்டி குலோத்துங்க சோழனென்ற பெயரில் கல்சுவரும் எழுப்பி தானமாகக் கொடுத்தான் பூதமங்கலத்தை சேர்ந்த ஒற்றியூரன் பூபாலசுந்தரனான சோழகோனார் என்று உரைக்கின்றது. இந்த கற்சுவர் அமைப்பதில் பூபாலசுந்தரனுக்கு உறுதுணையாக இருந்து அதை கட்டுவித்தவன் இராசேந்திர சோழவளநாட்டின் இடைவளநாடான சேவகலூரின் அரையன் திருமழப்பாடியுடையானான மலையப்பிராஜன். இந்த தானம் கருவறைப் பிராமணர் உள்ளிட்டாரின் காப்பில் விடப்பட்டது.

    பார்வை நூல்: வரலற்றில வில்லியனூர் கல்வெட்டுகள், பக். 67-68, புலவர் ந.வேங்கடேசன், சூன் 1979, சேகர் பதிப்பகம், எம்ஜிஆர் நகர், சென்னை -78

    இக்கல்வெட்டு, திருவக்கரை சந்திரமௌலீசுவரர் கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் வெட்டப்பட்டு உள்ளது (S.I.I. 12:246). 

    கல்வெட்டுப் பாடம்:  

    ஸ்வஸ்திஸ்ரீ சகலபுவன சக்கரவர்த்தி காடவன் அவனி ஆளப்பிறந்தான்  கோப் பெருஞ்சிங்கன்  ஒழுகரை ஏரிக்கு மதகுஞ் செய்வித்து இந்த ஏரிக்கு  நீர்புகிரக் காலும் கல்லுவித்தபடி

    சொற்பொருள்:  

    ஒழுகரை ஏரி – நீர்கசியும் கரை உடைய ஏரி அல்லது பெயர்; மதகு – நீர்பாயும் மடை, sluice; கால் – கால்வாய்; கல்லுவித்து – தோண்டி, வெட்டி.

    கல்வெட்டு விளக்கம்:  

    காடவப் பல்லவன் கோப்பெருஞ் சிங்கன் (1243-1273)  ஒழுகரை ஏரிக்கு மதகு செய்ததோடு இந்த ஏரியின் பிற சுற்றிடங்களில் திரண்டு சேர்ந்த நீரை ஏரியில் சேமிக்க அந்நீர் ஏரிக்குள் புகுவதற்கு கால்வாய் வெட்டினான் என்று கூறுகின்றது.

    பார்வை நூல்: வரலாற்றில் வில்லியனூர் கல்வெட்டுகள், பக். 70, புலவர் ந.வேங்கடேசன், சூன் 1979

    Share
  • 2011 புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, 2018 இல் பிரான்ஸ் நாட்டு அணு மின்சக்தி உற்பத்தி மாற்றங்கள்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    1. https://youtu.be/CPeN7GhTpz4
    2. https://www.thegreenage.co.uk/cos/nuclear-power-in-france/
    3. https://youtu.be/4YgmCu7dfS4
    4. https://www.dw.com/en/france-sticking-with-nuclear-power/av-38397323
    5. https://www.businessinsider.com/countries-generating-the-most-nuclear-energy-2014-3
    6. https://www.youtube.com/watch?v=TZV2HRKNvao
    7. https://www.youtube.com/watch?v=HMrQJoN-Ks4
    8. https://www.youtube.com/watch?v=kr4mFLws3BM
    9. https://www.youtube.com/watch?v=YfulqRdDbsg
    10. https://www.youtube.com/watch?v=Hn-P3qnlB10

    ++++++++++++++++++++++++

    பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.  அவை தேர்ந்தெடுக்கப்படும் எட்டுத் தளங்களில் நிறுவப் படும்.  அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி.  எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர்.

    BBC News (June 23, 2011)

    Image result for nuclear power in france

    ஈரோப்பியன் கூட்டுறவு நாடுகளில் உள்ள 143 அணுமின் நிலையங்களில் பிரென்ச் அணுமின் நிலைய எண்ணிக்கை : 53 (40%). அவற்றின் மின்சக்தி பரிமாற்றம் : 75% பங்கு.  பிரென்ச் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸி “பிரான்சில் உள்ள அணுமின் நிலையங்கள் அனைத்தி லும் புகுஷிமா விபத்துக்களை முன்னிட்டு ஆழ்ந்த பாதுகாப்பு இயக்க உளவுகள் செய்யப் படும்.  ஆயினும் ஜெர்மனி, இத்தாலி, சுவிட்ஜர்லாந்து ஆகிய அண்டை நாட்டு அரசாங்கங்கள் போன்று பிரான்ஸ் இயங்கும் அணுமின் நிலையங்களை நிரந்தரமாய் மூடத் தடை விதிக்காது,” என்று அறிவித்தார்.

    BBC News (May 30, 2011)

    Image result for nuclear power in france

    பிரான்ஸ் நாட்டு அணுமின்சக்தி இயக்கத் திட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள்.

    2018 நவம்பர் அறிப்பின்படிக் கடந்த 50 ஆண்டுகளாக

    1. பிரான்ஸ் தேசம் தற்போது தேவையான மின்சக்தி உற்பத்தியில் 75% அணுசக்தி மூலமாக பாதுகாப்பு முறையில் வெற்றிகரமாகப் பெற்று வருகிறது.  2035 ஆண்டுக்குள் அது 50% ஆகக் குறைக்கப்படும்.  அதாவது பிரான்ஸில் 17 பழைய அணுமின்சக்தி நிலையங்கள் 2035 ஆண்டுக்குள் நிறுத்தப் படும்.
    2. உலகத்திலே பேரளவு மின்சக்தி ஏற்றுமதி தொடர்ந்து செய்யும் நாடுகளில் பிரான்ஸ் முன்னணியில் நிற்கிறது. காரணம் மலிவான நிதியில் மின்சக்தி உற்பத்தியை பிரான்ஸ் செய்ய முடிகிறது.  அதலால் ஆண்டுக்கு மூன்று பில்லியன் ஈரோ [ 3.4 பில்லியன் டாலர் : ] பிரான்சுக்கு வருமானம் வருகிறது.
    3. கடந்த 50 ஆண்டுகளாக பிரான்ஸ் அணுவியல் துறை நுணுக்க சாதனங்கள் விருத்தி செய்வதில் வெற்றி பெற்றுள்ளது.  குறிப்பாக அணுவியல் எரிக்கரு உற்பத்தி ஏற்றுமதியில் செல்வாக்கு அடைந்துள்ளது.
    4. அத்துடன் சுமார் 17% பங்கு மின்சக்தி அணுவியல் எரிக்கரு மீள் சுழற்சியில் [Recycled Nuclear Fuel] கிடைக்கிறது.

    +++++++++++++

     

    French nuclear power reactors

    பிரான்ஸ் எரிசக்தி உற்பத்தி மூல எருக்கள் [Energy Sources] 

    2016 ஆண்டில் பிரான்சின் மின்சக்தி ஆற்றல் உற்பத்தி 556 TWh [ terra watt hours [Gross].

    1. அதில் அணுமின்சக்தியின் பங்கு : 72% [403 TWh].
    2. நீரழுத்த மின்னாற்றல் : 12%  [65 TWh],
    3. இயல்வாயு + நிலக்கரி வெப்ப மின்சக்தி 8% [45 TWh];
    4. சூரியக்கதிர் + காற்றாற்றல் :  5% [ 31 TWh ]
    5. அதாவது பிரான்ஸ் மொத்தத் தேவை மின்சக்தி : 442 TWh [6,600 KWh/cappit] : கி.வாட் ஹவர் / காப்பிட்டா.
    6. 2013 இல் வீட்டு மின்சார விலை அளவு : 8 சென்ட்/கிலோவாட் ஹவர்.  [cents/Kwh]

    French nuclear power reactors

    Class Reactor MWe net, each Commercial operation
    900 MWE BLAYAIS 1-4
    910
    12/81, 2/83, 11/83, 10/83
    BUGEY 2-3
    910
    3/79, 3/79
    BUGEY 4-5
    880
    7/79-1/80
    CHINON B 1-4
    905
    2/84, 8/84, 3/87, 4/88
    CRUAS 1-4
    915
    4/84, 4/85, 9/84, 2/85
    DAMPIERRE 1-4
    890
    9/80, 2/81, 5/81, 11/81
    FESSENHEIM 1-2
    880
    12/77, 3/78
    GRAVELINES B 1-4
    910
    11/80, 12/80, 6/81, 10/81
    GRAVELINES C 5-6
    910
    1/85, 10/85
    SAINT-LAURENT B 1-2
    915
    8/83, 8/83
    TRICASTIN 1-4
    915
    12/80, 12/80, 5/81, 11/81
    1300 MWE BELLEVILLE 1 & 2
    1310
    6/88, 1/89
    CATTENOM 1-4
    1300
    4/87, 2/88, 2/91, 1/92
    FLAMANVILLE 1-2
    1330
    12/86, 3/87
    GOLFECH 1-2
    1310
    2/91, 3/94
    NOGENT S/SEINE 1-2
    1310
    2/88, 5/89
    PALUEL 1-4
    1330
    12/85, 12/85, 2/86, 6/86
    PENLY 1-2
    1330
    12/90, 11/92
    SAINT-ALBAN 1-2
    1335
    5/86, 3/87
    N4 – 1450 MWE CHOOZ B 1-2
    1500
    12/96, 1999
    CIVAUX 1-2

    1495

    1999, 2000
    Total (58)
    63,130

    Differences in net power among almost identical reactors is usually due to differences in cold sources for cooling

    “இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”

    பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)     


    “மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும்.  அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து.  அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங் களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

    ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

    ரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை.

    ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.

    நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவதென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்தி ருக்கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல் களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.  அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப் பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்றவை யும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.

    லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)

    “விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப் புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.

    விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)

    உலக நாடுகளுக்கு 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்கள் ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடம்.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை.  ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.

    கட்டுரை ஆசிரியர்

    முன்னுரை:  2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற்துறைகள் தகர்ந்து போயின.  சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 17,000 பேர் இன்னும் காணப்பட வில்லை.  சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டுள்ளார். புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, ஓரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத்தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலைகளில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

    தற்போது முப்பது உலக நாடுகளில் 440 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபில் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது !  ஜப்பான் புகிஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.

    புகுஷிமா அணுமின் உலைகளின் தற்போதைய நிலை (ஜூன் 20, 2011)

    புகுஷிமா : 1  அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின.  அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது.  கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், டர்பைன் அடித்தள அறையிலும் காணப் பட்டது.

    புகுஷிமா : 2  அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின.  அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது.  கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், டர்பைன் அடித்தள அறையிலும் காணப் பட்டது.  அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கம் பரவி விட்டதாக ஐயப்பாடு.

    புகுஷிமா : 3  அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின.  அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது.  அரணில் பிளவு ஏற்பட்டு உள்ளதாக ஐயப்பாடு.  கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், இணைக்கப் பட்ட குகையிலும் காணப் பட்டது.  தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் (Spent Fuel Storage Pool) நீர் மட்டம் குறைந்து பிறகு நீர் நிரப்பப் பட்டது.

    புகுஷிமா : 4  தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் நீர் மட்டம் குறைந்ததால்,
    தீயும் வெடிப்பும் நேர்ந்தன.

    புகுஷிமா : 5 & 6  அணு உலைகள் சுயமாய் நிறுத்தமாகின.  தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் நீர் மட்டம் குறைந்து எரிக்கோல்களின் உஷ்ணம் ஏறியது.

    மொத்தக் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு 110,000 டன் என்று கணிக்கப் படுகிறது.  அது மீள் சுற்றியக்க வடிகட்டு முறையில் நீண்ட காலம் சுத்திகரிக்கப் பட வேண்டும்.

    அணுமின் உலைகள் எதிர்காலம் பற்றி அகில நாடுகளின் தீர்மானங்கள்

    புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு பயந்து போன ஆயிரம் ஆயிரம் பொது மக்களின் வெறுப்பும், எதிர்ப்பும் வேறு.  அணுசக்தி உற்பத்தி மீது அகில நாட்டு அரசுகளின் ஆதரவும், முடிவும் வேறு !  பொது மக்கள் பல்லாண்டுகள் ஒரு மனதாய் அவற்றை எதிர்த்தாலும் இப்போது உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 440 அணுமின் நிலையங்கள் உடனே நிறுத்தம் அடையப் போவ தில்லை.  இப்போது (ஜூன் 14, 2011) கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகளின் எண்ணிக்கை : 60.  அடுத்துத் திட்டமிடப் பட்டவை : 155.  எதிர்கால எதிர்ப்பார்ப்பு அணுமின் உலைகள் : 338.  புகிஷிமா அணு உலை விபத்தில் கற்றுக் கொள்ளும் முதற்பாடம் : 1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்ட முதல் வகுப்புப் பிற்போக்கு அணுமின் உலைகள் விரைவில் நிச்சயம் மூடப்படும் நிரந்தரமாய்.  முப்பது வருடமாய் இயங்கி வரும் அணுமின் உலைகள் சில மீளாய்வு செய்யப் பட்டுப் பழைய சாதனங்கள் புதுப்பிக்கப் பட்டு ஆயுட் காலம் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் நீடிக்கப் படலாம் அல்லது அதற்கு நிதியின்றேல் நிரந்தரமாய் நிறுத்தம் அடையலாம்.

    இயங்கி வரும் 440 அணுமின் உலைகளில் அபாய வெப்பத் தணிப்பு நீரனுப்பி ஏற்பாடுகள் ஒன்றுக்கு மேல் இரட்டிக்கப் படும் அல்லது மூன்றாக்கப் படும்  இரட்டை அல்லது மூவகை அபாய டீசல் எஞ்சின் மின்சாரப் பம்ப்பு இணைப்பு அமைப்போடு, ஈர்ப்பு விசையாலோ, அழுத்த வாயுவாலோ இயங்கும் ஓய்வுத் தணிப்பு ஏற்பாடுகள் (Passive Gravity or Compressed Air Coolant Injection Systems) சேர்க்கப் படும்.  அல்லது இரண்டுக்கு மேல் பெருக்கம் அடையும்.  சேமிப் பாகும் ஹைடிரஜன் வாயுவுக்கு அணு உலை உள்ளே மீள் இணைப்பிகள் சேர்க்கப் படும்.  அபாய வெப்பத் தணிப்பு நீரோட்ட இறுதியில் பேரளவு சேரும் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்புத் தடாகமும், சுத்தீகரிப்பு ஏற்பாடும் (Contaminated Waste Water Treatment Facility) இணைக்கப் படும்.  தற்போது கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகள் தடைப் படாமல் தொடர்ந்து நிறுவப் படும்.  திட்டமிட்ட எதிர்கால அணுமின் உலைகள் மீளாய்வு செய்யப்பட்டுக் கட்டப் படலாம்.  அல்லது புறக்கணிக்கப் படலாம்.

    அணுமின் நிலைய ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுகள் வற்புறுத்தும் புதிய பாதுகாப்பு விதிகள்

    21 நாடுகள் இணைந்த ஈரோப்பியன் அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (European Nuclear Safety Regulatory Group -ENSRG) தனது அழுத்தமான உளவு விதியை வெளியிட்டுள்ளது.  அதன் விதிப்படி நிலநடுக்கம், வெள்ளம், பேரலை அடிப்பு, மூர்க்கர் தாக்குதல், விமான வீழ்ச்சிபோன்ற பயங்கர விளைவுகளைத் தூண்டும் அபாயச் சம்பவங்களையும், பாதிக்கபட்ட பொது மக்களின் புலப் பெயர்ச்சியையும் எப்படிக் கையாளு வது என்பது ஆழ்ந்து தீவிரமாய் ஆராயப் படும்.  புகுஷிமா அணுமின் உலை விபத்துகளை முன்வைத்து 2011 மே 31 ஆம் தேதி வரை உலக நாடுகள் அணுசக்தி நிலையங்கள் இயக்கத்தைப் பற்றிச் செய்துள்ள முடிவுகளைக் கீழே காணலாம் :

    புகுஷிமா அணுமின் உலை விபத்துச் சிக்கல்கள் போல் மீண்டும் நேராதிருக்க ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுத் தலைவர், யுகியா அமானோ (Yukiya Amano, Head of UN Watchdog) அகில உலக அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்புகளை ஆழ்ந்து உளவி 18 மாதங்களுக்குள் முடிவுகளைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.  இந்த அறிவிப்பை முன்னிட்டு 150 உலக நாடுகள் வியன்னா அகில் நாட்டு அணுசக்திப் பேரவை (IAEA) நிறுவகத் தளத்தில் கூடப் போகின்றன. மேலும் அவர் கூறியது: புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்துகள் பொது மக்களைப் பேரளவில் பயமுறுத்தி உள்ளதால், அவருக்கு நேர்மையாய்ப் பதிலளிக்க வேண்டிய கடமையும் IAEA வுக்கு நேர்ந்திருக்கிறது.  அணுமின் நிலையங்களின் அபாயப் பாதுகாப்பு முறைகள் மீது பொது நபருக்கு நம்பிக்கை போய்விட்டது.  ஆதலால் IAEA அணுமின் நிலைய இயக்க அதிகாரிகளுக்குக் கடுகையான கண்காணிப்பு விதிகளை விடுத்து அவற்றை எல்லா அணுமின் நிலையங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளது.

    சென்ற வாரத்தில் எதிர்கல அணுமின் சக்தி உற்பத்தி பற்றிய 10 உலக நாடுகளின் முடிவுகள் :  (1. அர்ஜென்டைனா, 2. பிரேசில், 3. ஆர்மீனியா 4. கனடா, 5. சைனா, 6 பின்லாந்து, 7. பிரான்ஸ், 8. ஜெர்மனி, 9. இந்தியா, 10 ஜப்பான்) தெரிவிக்கப்பட்டன.  இக்கட்டுரையில் மற்ற 11 உலக நாடுகளின் முடிவுகள் கூறப்படுகின்றன.

    11. மெக்ஸிகோ :  துணை எரிசக்தி அமைச்சர் கார்லோஸ் பீடர்சன் புகுஷிமா அணு உலை விபத்துகள் மெக்ஸிகோ திட்டமிட்டிருக்கும் அணுமின் நிலைய நிறுவ ஆலோசனைகளை நிறுத்த வில்லை என்று அறிவித்துள்ளார்.

    12. நெதர்லாந்து :  டச் அரசாங்கம் திட்டமிட்டுள்ள புதிய அணுமின் நிலைய ஏற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளப் போகிறது.

    13. ருமேனியா :  அணுமின் உலைகள் ஆதரவு பற்றி அரசாங்கக் கொள்கையில் மாறுதல் எதுவும் இல்லை.

    14.  ரஷ்யா :  ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடிவ் அகில நாடுகளில் சுனாமிப் பேரலைத் தாக்க எதிர்பார்ப்பு உள்ள அணுமின் நிலையங்களின் நீண்ட காலப் பாதுகாப்பு நிலை விதிகளின் தேவையை வற்புறுத்தினார்.  நிலநடுக்கப் பழுதுக் கோடுகளுக்கு (Seismic Fault Line) அப்பால் அமைக்கப் பட்டுள்ள ரஷ்ய அணுமின் நிலையங்களில் உடனடிக் கவனம் செலுத்தும் அவசியம் இல்லை என்றும் வலியுறுத்தி னார்.

    15. தென் ஆப்ரிக்கா :  தென் ஆப்ரிக்காவின் அணுசக்திக் கட்டுப்பாடு ஆணையகம் கடற்கரையில் அமைந்துள்ள கோபெர்க் அணுமின் நிலையம் நீண்ட கால அபாய வெப்பத் தணிப்பு நீர் வசதி ஏற்பாடுகளை உடையது என்று அறிவித்தது.  ஒன்றே ஒன்றான இந்த இரட்டை அணுமின் நிலையம் 1800 MWe மின்சார உற்பத்தி செய்யும் ஆற்றல் உள்ளது.  2011 மார்ச் 16 ஆம் தேதி தென் ஆப்ரிக்க அரசு 2030 ஆண்டுக்குள் 13% தகுதி மின்சாரப் பங்கு ஏற்றுக் கொள்ள 9600 MWe ஆற்றல் உள்ள அணுமின் நிலைய திட்டங்களைக் கட்ட அனுமதி அளித்திருக்கிறது.

    16 தென் கொரியா :  2011 மார்ச் 21 ஆம் தேதி தென் கொரியா கல்வி அமைச்சகம் தற்போது இயங்கி வரும் அணுமின் நிலையப் பாதுகாப்பு இயக்கங்களை மீளாய்வு செய்ய ஆணை இட்டது.  இப்போது 21 அணுமின் நிலையங்கள் 40% பங்கு மின்சாரம் அனுப்பி வருகின்றன. 2020 ஆண்டுக்குள் இன்னும் 35 புதிய அணுமின் நிலையங்களைத் தென் கொரியா நிறுவத் திட்ட மிட்டுள்ளது.

    17 சுவீடன் :  2009 ஆம் ஆண்டு செய்த முடிவின்படி தற்போதுள்ள அணுமின் நிலையங்கள் ஆயுட் கால இறுதியில் முற்றிலும் புதுப்பிக்கப் பட்டு மாற்றப் படும்.  2011 ஆண்டு இறுதிக்குள் ஈரோப்பியன் அணுசக்திப் பேரவைக்கு உலோக அழுத்தச் சோதனை விளைவு களை (Stress Tests) அனுப்ப வேண்டும்.

    18. சுவிட்ஜர்லாந்து :  2011 மே மாத இறுதியில் சுவிஸ் அரசாங்கம் ஆயுள் முடியும் அணுமின் நிலையங்கள் மூடப்படும் என்று முடிவு செய்தது.  அதாவது 2034 ஆண்டுக்குள் அனைத்து அணுமின் நிலையங்களும் நிறுத்தம் அடையும் என்றும் அறிவித்தது.

    19. டெய்வான் :  டெய்வான் ஜனாதிபதி தற்போது இயங்கி வரும் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு மீளாய்வு செய்யப்படும் என்று அறிவித்தார்.  அத்துடன் புதிதாய்க் கட்டத் திட்டமிட்ட அணுமின் நிலையங்கள் தாமதப் படாமல் அமைக்கப் படும் என்றும் கூறினார்.

    20. பிரிட்டன் :  பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.  அவை தேர்ந்தெடுக்கப் படும் எட்டுத் தளங்களில் நிறுவப்படும்.  அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி.  எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர்.

    21 அமெரிக்கா :  2011 மே மாதம் 17 ம் தேதி அமெரிக்க அணுசக்தி நெறிப்பாடு ஆணையகம் (US Nuclear Regulatory Commission – NRC) இன்னும் ஆறு மாதங்களுக்குள் அமெரிக்க அணுமின் உலைகளின் அபாயப் பாதுகாப்பு இயக்க முறைகளை மீளாய்வு செய்து தமக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நியமிக்கப் பட்ட ஆய்வு வினைக் குழுவுக்கு (A Task Force) அறிவித்தது.  ஜப்பான் அணு உலை வெடிப்புகள், அவற்றின் நேரடித் தொலைக்காட்சித் தரிசனம், ஜப்பானி யரின் நீண்ட காலத் தவிப்பு, அணு உலை இயக்க நிபுணரின் கட்டுப்படுத்த முடியாத தடுமாற்றம் அமெரிக்கர் உட்பட உலக மக்களின் வயிற்றைப் பெரிதாகக் கலக்கி இருக்கிறது.  1979 இல் திரிமைல் தீவு அணுமின் உலை விபத்துக்குப் பிறகு அமெரிக்காவில் நிறுத்தமான புதிய அணுமின் நிலையத் திட்டங்கள் எல்லாம் மீண்டும் உயிர்தெழும் என்ற நம்பிக்கை மிகவும் தளர்ந்து போயுள்ளது.  அத்தகைய வெறுப்பும், அவநம்பிக்கை யும் இருந்தாலும் அமெரிக்கா வில் (2011) தற்போது அணுமின் உலைகள் அவசியத் தேவை என்பதற்கு 43% மக்கள் ஆதரவு அளிக்கிறார்.  இப்போது அமெரிக்கா வில் 104 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாய் இயங்கி வருகின்றன.  1977 இல் அணுமின் உலை ஆதரவாளர் 77%.  திரிமைல் தீவு, செர்நோபில் விபத்துக்களுக்குப் பிறகு ஆதரவு 59% ஆகக் குறைந்தது.  ஜப்பான் புகுஷிமா விபத்துக்குப் பிறகு அமெரிக்காவில் 2011 இல் அணுமின் நிலைய ஆதரவு 43% ஆகக் குன்றி விட்டது !

    முடிவுரை:   பெரும்பான்மையான உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரிய வில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவ தோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை.

    (தொடரும்)

    ***************

    தகவல்:

    1.  Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan   (March 11, 2011)

    2. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

    3. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

    4.  Nuclear {Power in Japan (March 30, 2011)

    5. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

    6 Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

    7. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

    8.  Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

    9.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

    10. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

    11. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

    12. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

    13. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)

    14. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)

    15 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant(Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)

    16. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)

    17. BBC News – Japan Nuclear Crisis : Fukushima Cold Shutdown for January 2012 (May 17, 2011)

    18. BBC News : Europe, French Nuclear Policy  (May 31, 2011)

    19 BBC News – Fukushima Lessons may take 10 years to Learn By : Richard Black (June 8, 2011)

    20. Environment News Service – Analysis: Japan Underestimated Fukushima Radiation Releases By Half – Author Charles Diggs (June 8, 2011)

    21. IAEA Briefing on Fukushima Nuclear Accident (June 2, 2011)

    22 Wikipedea http://en.wikipedia.org/wiki/List_of_nuclear_reactors (List of World Nuclear Reactors) (June 8, 2011)

    23 http://www.world-nuclear.org/info/reactors.html (World Nuclear Opeations) (June 14, 2011)

    24. Nuclear Watchdog wants new safety checks after Fukushima (June 20, 2011)

    25. BBC News : New UK Nuclear Plant Sites Named  (June 23, 2011)

    26. https://www.japantimes.co.jp/news/2018/03/09/national/fukushima-no-1-cleanup-continues-radioactive-water-rumors-also-prove-toxic/#.XI0k

    27.  https://www.theguardian.com/environment/2018/jun/03/was-fallout-from-fukushima-exaggerated

    28. https://www.iaea.org/newscenter/focus/fukushima/status-update  [March 14, 2019]

    29. https://www.fairewinds.org/fukushima-latest-updates  [January 18, 2019]

    30. http://www.world-nuclear.org/information-library/country-profiles/countries-a-f/france.aspx  [November 2018]

    31http://www.nuclearpowerdaily.com/reports/Glowing_results_for_nuclear_power_at_Frances_EDF_999.html  [February 15, 2019] 

    32. https://en.wikipedia.org/wiki/Nuclear_power_in_France  [March  10, 2019]

    ************************
    S. Jayabarathan  (jayabarathans@gmail.com)  March 16, 2019  [R-1]
    http:jayabarathan.wordpress.com/

    Share
  • அல்லாள இளைய நாயக்கர்

    -M.B. திருநாவுக்கரசு

    மன்னர்களில் பல வகையினர் உண்டு. மக்களை வதைத்து கொடுங்கோல் ஆட்சி நடத்தியவர்கள் சிலர் இருந்திருந்தாலும், மக்களின் நன்மைக்காக, அவர்களது நலன் காககும் திட்டங்களைச் செயல்படுத்தியவர்களும் உண்டு. மக்களுக்காகவே வாழ்ந்து, அவர்களுக்காகவே உயிர்நீத்த மன்னர்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். கல்லணை கட்டிய கரிகாலச் சோழனை 2 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் நாம் நினைவில் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல, கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் நாமக்கல் மாவட்டம் பரமத்தியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த சிற்றரசரான அல்லாள இளைய நாயக்கர், அவரது ஆட்சிக் காலத்தில் மக்கள் நலன் பேணும் பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.

    விவசாயப் பயன்பாட்டுக்காக காவிரி ஆற்றின் அருகே அல்லாள இளைய நாயக்கரால் வெட்டப்பட்ட ராஜவாய்க்கால், இன்றும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி அளிப்பதுடன், ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கி வருகிறது.

    இந்த நிலையில், மன்னரின் சிறப்பைப் போற்றும் வகையில் அவருக்கு ஜேடர்பாளையத்தில் சிலை அமைக்க வேண்டுமென ராஜவாய்க்கால் பாசன விவசாயிகளும், பொதுமக்களும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.

    ராஜவாய்க்கால் வெட்டிய அல்லாள இளைய நாயக்கருக்கு, குவிமாடத்துடன் கூடிய உருவச் சிலை அமைப்படும் என கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக பரமத்திவேலுார் அருகேயுள்ள இருக்கூரைச் சேர்ந்தவரும், அல்லாள இளைய நாயக்கர் வம்சாவளியைச் சேர்ந்தவருமான பி.சோமசுந்தரம் கூறும்போது, “கடந்த 1622 முதல் 1655-ம் ஆண்டு வரை அரைய நாடுகளில் ஒன்றான பரமத்தியை தலைமையிடமாகக் கொண்டு அல்லாள இளைய நாயக்கர் ஆட்சிபுரிந்தார் என கல்வெட்டுச் சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பரமத்தியில் இருந்து திருச்சி கொடுமுடி வரை அல்லாள இளைய நாயக்கர் ஆட்சி செய்துள்ளார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த ஆண்டில், அதாவது 1623-ல் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் அருகே, விவசாயப் பயன்பாட்டுக்காக ராஜவாய்க்கால் வெட்டினார். இந்த வாய்க்கால் 24 அடி அகலமும், 33 கிலோமீட்டர் தொலைவும் கொண்டது.

    இதன்மூலம் நேரடியாக 5,116 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றதாக சான்றுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்ட இந்த வாய்க்கால்தான், தற்போதும் சுற்றுவட்டார விளை நிலங்களுக்கு பாசன ஆதாரமாக உள்ளது.

    இதேபோல, ஏராளமான கோயில் திருப்பணிகளையும் அல்லாள இளையநாயக்கர் மேற்கொண்டுள்ளார். இதற்கான செப்புப் பட்டயம், கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. ராஜவாய்க்கால் வெட்டிய அல்லாள இளைய நாயக்கரைப் பெருமைப்படுத்தும் வகையில், ரூ.30 லட்சம் மதிப்பில் ஜேடர்பாளையத்தில் குவிமாடத்துடன் சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

    இந்த ராஜவாய்க்காலைத் தொடர்ந்து, கொமாரபாளையம் வாய்க்கால், பொய்யேரி வாய்க்கால் மற்றும் மோகனுார் வாய்க்கால்கள் மக்களுக்கு பாசன வசதி அளிக்கின்றன” என்றார்.

    ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயி ஓ.பி.குப்புதுரை கூறும்போது, “எவ்வித வசதிகளும் இல்லாத 1623-ம் ஆண்டில், மனித உழைப்பை மட்டுமே பயன்படுத்தி ராஜ வாய்க்கால் வெட்டியுள்ளார் அல்லாள இளைய நாயக்கர். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. விவசாயிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் பெரிதும் பயனடைந்துள்ளனர். இவ்வாறு, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சிபுரிந்த அல்லாள இளைய நாயக்கருக்கு, தமிழக அரசு மணி மண்டபம் கட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது வரவேற்கத் தக்கது” என்றார்.

    M.B.Thirunavukkarasu M.Sc(Geo).,
    Research Scholar,
    Centre for Water Resources,
    Anna University Chennai,
    Chennai -25
    Mobile +91 9941527517

    Share