-தனுசு
ப்ரியமான மகளே…
வளர்ச்சி அடைந்தால்
இடைவெளி உண்டாகிவிடுமா?
நீ வளர்ந்ததால்
நமக்குள்ளும் அதுதான் உண்டானதா?
என் சுண்டு விரலின் ஏக்கம்
நீண்டு கொண்டே போகிறது.
அது
உன்னோடு கட்டுண்டு இருந்த காலம் நினைத்து
இன்னும் ஒரு
தாகம் தருகிறது.
படரத் துடிக்கும் கொடிபோல்
முளைக்கத் துடிக்கும் விதை போல்
நீரை விட்ட மீன்போல்
உன் விரல்களின் ஸ்பரிசம் இல்லாததால்
என் சுண்டு விரல் படும் அவஸ்தை
எதை என்று சொல்ல…
என் கட்டை விரலாலேயே
அந்தக் குட்டை விரலுக்கு
ஆறுதல் அளிக்கிறேன்.
அன்பின் உச்சத்தில்
அன்று நீ பெற்ற முத்தங்கள்
இன்று
ஆதங்கத்தில்
அந்த விரலே பெறுகிறது.
அன்றைய
நம் அன்பின் சுவாசத்தை முகர
இன்று
அந்த விரலையே முகர்ந்து பார்க்கிறேன்.
இன்னும்
அன்றைய ஆசையில்
அதனிடம் பேசவும் செய்கிறேன்.
உன்
பஞ்சு போன்ற
அஞ்சு விரலின் நினைவு
என்
நெஞ்சுக் கூட்டை அரிக்குது!
உன்
பிள்ளைப்பருவ
பிஞ்சு விரல்கள்
பிரிஞ்சு போனதால்
எனக்கு
நஞ்சுகூட இனிக்குது!
எனை தாங்க ஒரு கைத்தடி
எனக்காக காத்திருக்கும் மண்ணின் ஆறடி
இவைகளை நான் தொடும் முன்…
மீண்டும் ஒரு வசந்தமோ
அவைகளை தொட்ட பின்…
மீண்டும் ஒரு பிறவியோ
எனக்கு வேண்டாம்
ஒரு நிம்மதி பெருமூச்சு வேண்டும்!
அது
என் சுண்டு விரல் நீ பிடிக்க
நாம் நடக்க
என் இதயம் அடைய வேண்டும்.
படத்துக்கு நன்றி: http://pmbl.deviantart.com/art/Pinky-promise-212631494

Leave a Reply