சுதந்திரக் கவிதை

 

சக்தி சக்திதாசன்

flag

அன்னை பாரதத்தின்
அடிமை விலங்கொடிந்த
உன்னதமான நாளதில்
உளமார வாழ்த்துகிறேன்

சுதந்திரக் காற்றைச்
சுவாசிக்கும் இன்பத்தை
சிந்திக்கும் போதெந்தன்
தித்திக்கும் மனமென்பேன்

கருணை மனம் கொண்டு
கடமை தனை எண்ணி
காந்தி எனும் தந்தை
கட்டிய பெருங் கோட்டை

நேற்றைய வியர்வையில்
இன்றைய செடியொன்றில்
நாளை மலரும் ரோஜாவாக
நிமிர்ந்திடும் பாரத தேசம்

கனவுகளில் மட்டும் அந்த
கவியுலக வேந்த பாரதி
கண்டு வந்த சுதந்திரத்தை
கணக்கின்றிச் சுவைக்கின்றோம்

உயர்ந்திடட்டும் இச்சுதந்திரம்
உருவாகட்டும் புதுப் பாரதம்
இல்லையென்போர் இல்லையென
இருப்போர்கள் இயங்கட்டும்

பொருளாதார ஏணியின்
உச்சத்தை நோக்கி வேகமாய்
நடைபோடும் பாரத தேசம்
நிறைகிறது நெஞ்சம் இன்று

உயிர்கொடுத்து மண் காத்த
உத்தமர்கள் நினைவு வாழ
உழைப்போர்கள் உயர்ந்திடும்
உன்னத பூமியாக மாற்றிடுக!

இளையோர்கள் விழித்திடுங்கள்
இதயத்தைத் திறந்திடுங்கள்
நாளை உங்கள் கைகளிலே
நெஞ்சுயர்த்தி நடவுங்கள்!

என்னினிய சொந்தங்களே !
தமிழன்னை பாதம் பணிந்து
தமிழாலே கவி தந்து
வாழ்த்துகின்றேன் அனைவரையும்!

 

Share

Comments

3 responses to “சுதந்திரக் கவிதை”

  1. புவனேஷ்வர்

    எளிய நடையில் இனிய கருத்தேற்றி எங்களுக்கு வாழ்த்துக் கூறிய மேன்மைக்கு அடியேனின் உளமார்ந்த சிரம் தாழ்ந்த நன்றி, ஐயா.
    தங்களுக்கும் அடியேனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    பணிவன்புடன்,
    புவனேஷ்வர்

  2. சச்சிதானந்தம்

    இதந்தரும் எண்ணங்களை உருவாக்கும்,

    உகந்தநாள் சொற்கொண்டு உருவான,

    சுதந்திரக் கவிதை அருமை!

  3. சச்சிதானந்தம்

    இதந்தரும் எண்ணங்களை உருவாக்கும்,

    உகந்தநல் சொற்கொண்டு உருவான,

    சுதந்திரக் கவிதை அருமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *