–புவனேஷ்வர்
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே – புத்தி
ஆழத்தில் சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று
(ஆடுவோமே)
சரணங்கள்:
எங்கள்ம றைகளைப் போற்றி யறிவோம் – நல்ல
முன்னோரின் சொல்வார்த்தை நம்பிநடப் போம்;
அன்னியர்தம் கட்டுக்கதை தள்ளிடுவோமே – எம
துண்மைவர லாற்றைப்பறைக் கூத்திடு வோமே.
(ஆடுவோமே)
செய்தொழிலை யீசனுக்கு என்றுகொடுப் போம் – அதில்
இந்தத்தொழில் மட்டமென்று சொல்ல லொழிப்போம்;
சொந்தத்தொழில் செய்துநம துள்ளம்நிறைப் போம் – பிறர்
மண்ணுக்கினி ஏவற்ப்பணி செய்து மாயோம்.
(ஆடுவோமே)
நாம்வாழும் தேசம்நம தென்று அறிந்தோம் – இந்த
மண்ணில்விளைப் பண்டமது நம்மதுணர்ந் தோம்;
மேலையவர் சந்தைக் கதை விலைபேசோம் – அவர்
ஆசைவார்த்தை கேட்டுமோசம் போக மாட்டோம்;
(ஆடுவோமே)
ஆறுமலைக் காடுயிங்கு பொதுவினில்வை ப்போம் – அதில்
ஆருக்குமிங் குரிமையுண்டு என்று விதிப்போம்;
வீறுகொண்டே தூய்மை பேணிடுவோமே பண்டை
வீரரைப்போ லேயுறுதி மானம் வளர்ப்போம்.
(ஆடுவோமே)
சேற்றதனில் கால்பதிக்க அஞ்சுதல்செய் யோம் – நல்ல
கொல்லைதனில் காய்கிழங்கு கீரை வளர்ப்போம்;
பாலைத்த ரும்நல்ல பசுவளர்த் தேயவள்
தாயெனவே கும்பிட்டுநாம் கொஞ்சி மகிழ்வோம்;
(ஆடுவோமே)
மேற்கிலவர் சொல்லுவதை யாய்ந்துதெளி வோம் – அதில்
கொள்ளுவன கொண்டுமிச்சம் தள்ளிநடப் போம்;
நம்வேர்கள் நாமறிந்து நலஞ்செய்குவோம் – பிறர்
வஞ்சனைகள் பகுத்தறிந்து வழிகாணு வோம்;
(ஆடுவோமே)
பொருளீட்டல் குடும்பத்துக் கென்று வுணர்வோம் – வெறும்
தொழில்மட்டும் வாழ்க்கையில்லை என்றுதெளி வோம்;
உற்றவு றவுகளை நெஞ்சிற்சுமப் போம் – ஒரு
தீங்குவர மாட்டாது பகிர்ந்துண்ணு வோம்;
(ஆடுவோமே)
மாதர்கு லத்துக்குப் போற்றுதல் செய்வோம் – பிறர்
பெண்டிரும்நம் பெற்றவளும் ஒன்றெனச் சொல்வோம்;
கொண்டவுயிர்க் கோமகளே நிறைகுடமென்னக் – கூடிக்
கற்புநெறி நெஞ்சொழுகத் தோழமைகொள் வோம்;
(ஆடுவோமே)
கொண்டவனை நம்பியுயிர் நட்பாகு வோம் – அவன்
வில்லாக நாணாகி நாம்வாழு வோம்;
தாரமவள் தாயுமென நெஞ்சமுரைப் போம் – அவன்
சக்கரம்நாம் மையத்திலே யச்சாகு வோம்;
(ஆடுவோமே)
காதல் வாழ்கவென்று கூத்திடுவோம் காண் – நல்ல
காதல் நலமெனக ளித்தாடு வோம் ;
காதலது நல்லின்பம் காதலி தெய்வம் – அதில்
ஊறுசுவை யுண்டதுநல் லுயிர்க் கமுதாம்!
(ஆடுவோமே)


Leave a Reply