அவனை அழைக்காதீர்!…

செண்பக ஜெகதீசன்

 

அவனை அழைக்காதீர்,

அவன்வழியில் செல்லட்டும்…!

அவனொரு வானம்பாடி,
வானிலெங்கும் வட்டமிட்டுப் பறக்கட்டும்..

அவனொரு கவிக்குயில்,
செந்தமிழில் சுதந்திரமாய்க் கூவட்டும்..

அவனொரு வெண்புறா,
சமாதானச் சிறகோசை கேட்கட்டும்..

அவனொரு மடவன்னம்,
நஞ்சொதுக்கி அன்புப்பால் பருகட்டும்..

அவனொரு பொன்வண்டு,
பூக்களிலே தேனருந்திக் களிக்கட்டும்..

அவனொரு புள்ளிமான்,
துள்ளியவன் துணைநாடிச் செல்லட்டும்..

அவனொரு எருமைமாடு,
தூற்றுபவர் தூற்றிக்கொண்டிருக்கட்டும்..

அவனோர் அணிப்பிள்ளை,
அன்புள்ளோர் அவன்முதுகைத் தடவட்டும்..

அவனொரு கருமேகம்,
கவின்மொழியில் கவிமழையாய்ப் பொழியட்டும்..

அவனொரு கோவிற்படி,
கும்பிடுவோர் காலடிகள் மிதிக்கட்டும்..

அவனொரு கைகாட்டி,
நாடுவோர்க்கு நல்லவழி காட்டட்டும்..

அவனொரு சுமைதாங்கி,
அல்லலுற்றோர் மனச்சுமையை இறக்கட்டும்..

அவனொரு நிழற்குடை,
அவதியுற்றோர் இளைப்பாறிச் செல்லட்டும்..

அவனொரு பரம்பொருள்,
எல்லாமாய் எங்கேயும் இருக்கட்டும்..

அதனால்,
அவனை அழைக்காதீர்,
அவன்வழியில் செல்லட்டும்…!

Share

Comments

5 responses to “அவனை அழைக்காதீர்!…”

  1. சச்சிதானந்தம்

    //அவனொரு நிழற்குடை,
    அவதியுற்றோர் இளைப்பாறிச் செல்லட்டும்..//

    உண்மையான அழகான வரிகள். வாழ்த்துக்கள்.

  2. sathiyamani

    அற்புதமானப் படைப்பு.
    அற்புதமானது படைப்பு.
    அர்த்தமானது ஆன்மீகம்

    அதனால்,
    அவனை அழைக்காதீர்,
    அவன்வழியில் செல்லட்டும்…!
    அவன் அடியில் புலனெட்டும்
    அர்ப்பணித்து அருள்பெறட்டும்

  3. -செண்பக ஜெகதீசன்…

    முப்பது வருடங்களுக்குமுன் எழுதியது
    இப்போது வெளி(ச்சத்துக்கு) வந்துள்ள நிலையில்,
    மிகவும் ரசித்துப் பாராட்டிய
    திருவாளர்கள் சச்சிதானந்தம், சத்தியமணி ஆகியோருக்கு
    மிக்க நன்றி…!

  4. அருமையான படைப்பு. மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்.

    கோபாலன்

  5. -செண்பக ஜெகதீசன்…

    திரு. கோபாலன் அவர்களின் கருத்துரைக்கு
    மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *