மனத்தையே உலுக்குதே !

  எம்.ஜெயராமசர்மா images

இந்திய எண்ணமோ இமயத்திற் பெரியது
இந்திய தேசமோ ரிஷிகளைப் பெற்றது
என்றுமே யாவரும் வியத்திடும் வேளையில்
வந்திடும் சேதிகள் மனத்தையே உலுக்குதே

சங்கரர் காலடி சன்மார்க்கம் தந்தது
எங்குமே கோவில்கள் இதயமாய் இருக்குது
சங்கடம் நாளுமே பெருகியே வருகுது
எங்குதான் இந்தியா போகுதோ தெரியலை

மண்ணினை தாயென மதித்த நற்தேசமே
புண்ணிய நதியெலாம் பெண்ணெனப் போற்றினை
கண்ணென மதித்தவுன் பெண்ணினை நாளுமே
மண்ணிலே மிதிப்பதை மனுக்குலம் பொறுக்குமா

உண்ணுகின்ற உணவுக்கு அன்னமெனப் பெயரிட்டு
உணவளிக்கும் போதெல்லாம் அன்னலக்‌‌ஷிமி எனவழைத்து
காணுகின்ற போதெல்லாம் கண்ணியமாய் சொல்லிசொல்லி
காறியே உமிழ்கின்ற காட்டுத்தனம் ஏன்தானோ

வாழுகின்ற மண்ணதனை தாயெனவே அழைத்திட்டு
பேசுகின்ற மொழிதன்னை பெண்மையினால் பெயரிட்டு
வாசமென திகழ்கின்ற மாண்புமிகு பெண்ணினத்தை
நாசமுறச் செய்வதனால் நாடெல்லாம் கலங்குதிப்போ

உதிரத்தை பாலாக்கி உயிரூட்டும் பெண்மைதனை
உலகெங்கும் உயர்வாக மதிக்கின்ற வேளையிலே
ஊர்நடுவே கூடிநின்று உருக்குலைக்கும் உலுத்தர்தமை
ஆருள்ளார் தடுபதற்கும் அக்கூட்டம்  அழிவதற்கும்

பாஞ்சாலி கதறியதும் பார்த்திபனே உதவிநின்றாய்
பலபெண்கள் கதறுவதுன் காதினுக்கு கேட்கலையா
நஞ்சுநிறை வஞ்சகரால் நாசமுறும் பெண்ணினத்தை
நாராயணா நீயும்  பாராதிருப்ப தென்ன

http://www.rebellesociety.com/2013/03/12/crying-yoga/                                                  

Share

Comments

One response to “மனத்தையே உலுக்குதே !”

  1. வருக. வருக. வாழ்த்துகள் ஐயா. தங்களுடைய தொடர்ந்த ஆக்கங்களைத் தருக.

    அன்புடன்
    பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *