-மேகலா இராமமூர்த்தி
உருவமது சிறிதாக இருந்த போதும்
உள்ளத்தால் உயர்ந்தவர்தான் நமது அண்ணா!
அருவியாய்க் கொட்டுகின்ற அவரின் பேச்சு
அருந்திமகிழ்ந் திடத்திகட்டா அமுத ஊற்று!
கருவமே சிறிதுமில்லா எளிமை யோடுக்
கருமமே கண்ணாகக் கொண்ட வாழ்வு!
அரசியல் துறையினிலே இருந்தும் கூட
அவ்வியம் அறியாத குழந்தை அண்ணா!
அன்பாய்த் தான் வளர்த்த திமுகவின்
அவல நிலையை இன்று கண்டிருந்தால்
’என்ன கொடுமையிது!’ என்றே ஏங்கி
இடிந்து போயிருப்பார் இதயம் சோர்ந்து!
ஏழையின் சிரிப்பினிலே இறையைக் கண்ட
ஏந்தலாய்த் திகழ்ந்தவர்நம் அன்பு அண்ணா!
தாழையின் மலர்போலே மணத்தைச் சிந்தி
என்றுமே நிலைத்திருப்பார் அமர ராக!


Leave a Reply