-வேதா. இலங்காதிலகம்
நாலடியார்
அதிகாரம் 25 – அறிவுடைமை
பகைவர் பணிவிட நோக்கித் தகவுடையார்
தாமேயு நாணித் தலைச்செல்லார் காணா
யிளம்பிறை யாயக்காற் றிங்களைச் சேரா
தணங்கருந் துப்பி னரா. (நாலடி: 241)
அணங்கு – வருத்தம் செய்யும், அரு – கொடிய, துப்பின் – வலியுடைய, அரா – பாம்பு, இளம்பிறை – இளையபிறைச் சந்திரனாயிருக்கும் போது, திங்களை – சந்திரனை, சேராது – வருத்துவதற்கு நெருங்காது, (அது போல) தகவு உடையார் – தகுந்த அறிவுடையார், பகைவர் – தம்முடன் மாறுபட்டவர், பணிவு இடம் நோக்கு – தாழ்ந்து இருக்கும் காலத்தைக் கவனித்து, தாமேயும் நாணி – தம்மில் தாமே வெட்கமுற்று, தலைசெல்லார் – அவரை அடக்குதற்கு எதிர்த்துச் செல்லமாட்டார், காணாய் – இதனை அறிக.
எனது வரிகள்:-
முழுமதிச் சந்திரனையே என்றும்
பழுதுடை கிரகணம் பற்றும்
பிறை நிலாவை அதன்
குறையோடு கிரகணம் பற்றா
இவ் விதியாய் எதிராளியின்
திடமற்ற நிலைப்பாடில் பலவீனரை
அடக்கார் எதிர்க்கார் தம்முள்
குறுகும் நிறை மதியாளர்.

Leave a Reply