காவியத் தலைவன் கர்ணன்

 

karna (2)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

Senthil

ஈகரையும் காணாத கங்கையில்
ஈன்றவள் புறக்கணித்து – நெஞ்சில்
ஈரமின்றி மிதக்கவிட!
ஈனவர் கௌரவர்
ஈர்த்தனர் கர்ணனையே!
ஈர்த்தவர் என்றாலும்
ஈரப்பற்று மிகுதியால்
ஈன்றவராய் கொண்டானே!
ஈகையும் வீரமும்
ஈர் கண்னெனக் காத்தானே!

ஈவோன் துரோணரும்
ஈடன் கர்ணனை
ஈடறவு எனப் புறக்கணித்தார் – எனினும்
ஈடிலான் ஆதவனை
ஈவோனாய்க் கொண்டானே!
ஈவோன் பரசுராமர்
ஈகையாளன் மடிதுயில
ஈயின வண்டொன்று
ஈட்டியெனத் துளைத்தபோதும்
ஈட்டி மரமென் றசையாதிருந்தானே!

ஈடர் பாண்டவர் அணிசேர
ஈன்றவள் வந்தழைத்த போதும்
ஈறிய நெஞ்சம் கொண்டான்
ஈர்தாரை விலகேன் என்றான்!
ஈயாடவில்லை குந்தி முகத்தில்!
ஈடினையில்லா குருசேத்திரத்தில்
ஈண்டெனப் போர் மூண்டது!
ஈசுவை கொண்ட கௌரவர்க்கும் 

ஈகையாளர் பாண்டவர்க்கும்!
ஈடற்ற வெற்றி பாண்டவர்க்கு!

ஈ என இரந்தோர்க்கு
ஈயேன் எனச் சொன்னதில்லை!
ஈடிகை மார்பில் தைத்த
ஈரம் கூடக் காயவில்லை!
ஈகையின் துணைக்கொண்டு
ஈத்தக் கொடையனைத்தும் 
ஈ என கண்ணன் கேட்டபோதும் 
ஈண்டெனக் குருதி கொடுத்தானே!
ஈடில்லா இறைவனின்
ஈரடி நிழல் சேர்ந்தானே!

  – ஆ. செந்தில் குமார்.

 

பொருள் :-
ஈகரை – இரண்டு கரைகள்
ஈன்றவள் – தாய்
ஈரம் – இரக்கம்
ஈனவர் – இழிந்தோர்
ஈர்த்தல் – சேர்த்துக்கொள்ளுதல்
ஈரப்பற்று – அன்பு
ஈன்றவர் – பெற்றோர்
ஈகை – கொடை
ஈர் – இரண்டு
ஈவோன் – ஆசிரியர், குரு
ஈடன் – ஆற்றலுடையவன்
ஈடறவு – பெருமைக் கேடு
ஈடிலான் – இறைவன்
ஈரிய நெஞ்சம் – அன்பு நெஞ்சம்
ஈசுவை – பொறாமை
ஈடிகை – அம்பு
ஈ – கொடு
ஈத்த – கொடுத்த
ஈரடி – இரண்டு திருப்பாதங்கள்
ஈண்டென – விரைவாக

Share

Comments

2 responses to “காவியத் தலைவன் கர்ணன்”

  1. R.Sakthivel

    Great!!!

  2. Soundar

    Awesome

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *