ராமஸ்வாமி ஸம்பத்
அலெக்சாண்டரின் ஆணைமேல் கூடாரத்திற்கு வந்த ரொக்ஸானா, “மன்னர் மன்னா, தங்களுக்கு என்ன சேவை செய்ய வேண்டும்” என்று இனிமையான குரலில் கேட்டாள்.
“பிரியமானவளே, அந்த மருந்துப் பெட்டியில் உள்ள களிம்பினை இந்த புண்கள்மீது தடவு. மழைத் தண்ணீர் வேறு பலமாகப் பட்டுவிட்ட்து.. வலி பொறுக்க முடியவில்லை.”
”அப்படியே அரசே!” என்று சொல்லிய அவள் அலெக்சாண்டரின் உடலில் உள்ள காயங்களின்மீது தனது மெல்லிய வலதுகை விரல்களால் களிம்பினை தடவிவிட்டாள். அந்த ஸ்பரிசம் இதமாக இருந்தாலும், வலி குறையாத நிலையில் அதனால் அவனுக்கு பூரண நிவாரணம் கிட்டவில்லை.
“ஐயோ, இந்த எரிச்சலில் இருந்து எனக்கு விடுதலை கிடைக்காதா?” என்று அலறினான் அம்மன்னன். வேதனையைப் புரிந்துகொண்ட ரொக்ஸானா மாசிடோனியப் படைகளுடன் வந்திருந்த மருத்துவரை அழைத்துவரச் சென்றாள்.
அச்சமயம் ’மாவீரர் அலெக்சாண்டருக்கு வெற்றி உண்டாவதாக!’ என்று கூறியவாறு அவன் படைத்தலைவர்களில் ஒருவன் கூடாரத்தில் நுழைந்தான். “மன்னர் மன்னரே! தங்களால் தோற்கடிக்கப்பட்ட பவுரவ நாட்டரசரை தங்கள்முன் நிறுத்த அனுமதி தேவை” என்றான். வலி வேதனையாலோ என்னவோ, அலெக்சாண்டர் மவுனமாக இருந்தான். அதையே ஒப்புதலாகக் கருதி புருஷோத்தமனை மாசிடோனிய மன்னனின் முன் நிறுத்தினான்.
விலங்குச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்த புருஷோத்தமனைக் கண்ட அலெக்சாண்டர் ஒரு முனகலோடு, “ஓ நீதான் போரஸோ?” என்று கேட்டான்.
“என் பெயர் புருஷோத்தமன். அதனைக் கொச்சைப்படுத்தி போரஸ் என அழைக்க வேண்டாம்.”
“மன்னிக்க வேண்டும். ஒருவர் பெயரை இன்னொருவர் தன் இச்சைப்படி மாற்றிச் சொல்வது அநாகரீகமே! ஆனால் என் செய்வது? உங்கள் நாட்டுப் பெயர்கள் எங்கள் நாக்கில் சரியாக புரள மாட்டோம் என்கின்றனவே.”
”அப்படியென்றால், எங்களுக்கும் உங்கள் பெயரை உச்சரிப்பது கடினமாக உள்ளது. அதற்காக நாங்கள் உங்களை ‘சிகந்தர்’ என அழைப்பதை ஒப்புவீர்களா?”
”தாராளமாக சிகந்தர் என்றே அழையுங்கள். எனக்கும் அப்பெயர் பிடித்திருக்கிறது.”
அப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே மீண்டும் வலி தாங்காமல், “ரொக்ஸானா, எங்கு சென்றுவிட்டாய்? என்னால் எரிச்சலைப் பொறுக்க முடியவில்லையே. அந்த களிம்பினை இன்னொரு முறை தடவு இப்புண்களின் மேல்” என்று புலம்பினான் அலெக்சாண்டர்.
கூடாரத்திற்கு விரைந்து வந்த ரொக்ஸானா, ஒரு கணம் புருஷோத்தமனைக் கண்டு, “அண்ணா, தாங்களா இந்த நிலையில்?” என்று தழதழக்கும் குரலில் விளித்து, அவன் அடி பணிந்தாள்.
அலெக்சாண்டருக்கு வியப்பு மேலிட்ட்து. “அண்ணாவா, இது என்ன புது உறவு?” என்று அவளை வினவினான்.
ரொக்ஸானா அதற்கு பதில் அளிக்காமல், “அண்ணா, என் வருங்காலக் கணவர் விழுப்புண்களின் வலி தாங்காமல் தவிக்கிறார். எங்கள் மருத்துவர் கொண்டு வந்திருக்கும் களிம்பு பயனில்லாமல் போய்விட்டது. உங்கள் நாட்டு மருந்து ஏதேனும் உள்ளதா இப்பிணியைத் தீர்க்க?” என்று கேட்டாள்.
“தங்காய், என்னுடன் சிறைப்படுத்தப் பட்டிருக்கும் என் மெய்க்காப்பாளனை விடுவித்து இங்கு அழைத்து வந்தால், நான் அவனை ஒரு நல்ல மருந்தினைக் கொண்டுவரச் சொல்கிறேன்.”
ரொக்ஸானா அலெக்சாண்டரை நோக்கிக் கூறினாள், “என் பிராண நாதரே! இவர் என் உடன்பிறவா சகோதரர். அந்த விவரங்களைப் பிறகு சொல்கிறேன். இப்போது இவருடைய மெய்க்காப்பளரை விடுவித்து இங்கு கொணர்ந்தால், உங்கள் தீராத வலிக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.”
வலி நீங்கினால் போதும் என்ற நிலையில் இருந்த யவன மன்னன், அதற்கு ஒப்புதல் அளித்தான்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த மெய்க்காப்பாளன் செவியில் புருஷோத்தமன் ஏதோ கூறினான். அவனும் விரைந்து சென்று ஒரு களிம்பினை எடுத்துவந்து ரொக்ஸானாவிடம் கொடுத்தான்.
அக்களிம்பினைத் தடவ விழைந்த அவளை, “நில், ரொக்ஸானா! முதலில் அம்மருந்தினை போரஸ் தன் புண்களில் தடவிக் காட்டட்டும். ஏனெனில் விரோதிகள் தங்கள் வைரிகளை நஞ்சு கலந்த விருந்தின் மூலமோ மருந்தின் மூலமோ கொல்ல முயற்சிப்பர்” என்று தடுத்தான் அலெக்சாண்டர்.
ரொக்ஸானா அவன் சொன்னதை புருஷோத்தமனிடம் கூறி தன் காதலனின் சந்தேகத்தை நீக்கக் கோரினாள். புன்னகை முகத்தோடு அவனும் அவ்வாறே செய்தாள்.
‘போரஸுக்கு ஒன்றும் நேரவில்லையே. ஒருவேளை இக்களிம்பு உண்மையிலேயே சிறந்தது போலும்’ என நினைத்த அலெக்சாண்டர் அக்களிம்பினை தடவுமாறு அவளைப் பணித்தான்.
ரொக்ஸானா மீண்டும் அந்த சேவையில் ஈடுபட்டாள். சில நொடிகளில் அலெக்சாண்டர் வலி நீங்கி பூரண குணமடைந்தான். மலர்ந்த முகத்தோடு, ‘”போரஸ், மிக்க நன்றி. இக்களிம்பு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?” என்று கேட்டான்.
“சிகந்தர் அவர்களே! இது கத்தாழை எனப்படும் மூலிகைச் செடியிலிருந்து எடுக்கப்பட்ட திரவத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.”
“அப்படியானால், அந்த மூலிகைச் செடியினை எனக்குக் கொடுங்கள். நான் அதனை எங்கள் நாட்டில் விளைவிக்க விரும்புகிறேன்.”
“அது மிகவும் கடினம். எங்கள் பரத கண்டத்தின் தென்புலத்தில் உள்ள ‘திரமிள’ தேசத்தில்தான் இது விளையும். வேறு எங்கும் இதனை விளைவிப்பதற்கானச் சுற்றுச் சூழல் இல்லை. வேண்டுமென்றால் தாங்கள் இந்தக் களிம்பினை பெரிய அளவில் உங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.”
“அப்படியா. ரொக்ஸானா இப்போது சொல். போரஸை எவ்வாறு நீ ‘அண்ணா’ என அழைக்கிறாய்?”
அப்பாரசீகப் பேரழகி மலர்ந்த முகத்தோடு அந்த விருத்தாந்தத்தை சொல்ல ஆரம்பித்தாள்.
‘ திராவிட தேசத்தை’ அக்காலத்தினர் திரமிள தேசம் என்றே அழைத்தனர்.
(தொடரும்)















அந்த சிறிய சாலையின் இருமருங்கிலும் நின்ற மக்களின் கையில் அமெரிக்க தேசியக் கொடிகள் படபடத்துக் கொண்டிருந்தது. வயது வித்யாசமின்றி அனைவரும் கையில் ஆளுக்கொரு வாசகங்கள் எழுதிய அட்டையையோ, தேசியக் கொடியையோ ஆட்டியவண்ணம் இருந்தனர். ‘உன்னை மறக்க மாட்டோம் ரிச்சர்ட்’, ‘உன் ஆன்மா சாந்தி அடையட்டும்’, ‘நீ எங்களை பெருமை அடைய செய்துவிட்டாய், ‘நீ ஒரு சிறந்த வீரன் ரிக்கி’, என தங்கள் மனதில் ரிச்சர்டைப் பற்றி எழுந்த எண்ணங்களுக்கு உருவம் கொடுத்த அட்டையை ஏந்திக்கொண்டு அவன் மறைந்த துக்கத்தை அனுசரித்துக் கொண்டிருந்தார்கள்.