Month: July 2014

  • குறளின் கதிர்களாய்…(33)

    செண்பக ஜெகதீசன்…

     

    hair-care_24_07_2013

    தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்

    நிலையி னிழிந்தக் கடை.

          -திருக்குறள் -964(மானம்)

     

    புதுக் கவிதையில்…

     

    தலையில் இருக்கும்வரைதான்

    தலைமுடிக்கு மதிப்பு,

    தரையில் வீழ்ந்தால்

    தாழ்ந்திடும் குப்பையாய்..

     

    மண்ணில் மனிதரும் தாழ்ந்தால்

    உயர்நிலையிலிருந்து,

    உதிர்ந்த

    மயிர்போலாவர் மதிப்பில்…!

     

    குறும்பாவில்…

     

    மண்ணில் வீழ்ந்த மயிர்போலாவான்

    மனிதன்,

    தன்நிலை தாழ்ந்திடும் போதில்…!

     

     மரபுக் கவிதையில்…

     

    எண்ணெய் தேய்த்துத் தலைசீவி

         எத்தனை அழகாய் வைத்தாலும்,

    மண்ணில் வீழ்ந்தால் மயிரதற்கு

         மதிப்பு எதுவும் கிடையாதே,

    எண்ணிப் பார்த்திடு இதையேதான்-

         ஏற்றம் வாழ்வில் பெற்றோரும்

    கண்ணியம் தவறித் தாழ்ந்திட்டால்,

         கருதப் படுவரிம் மயிர்போலே…!

     

    லிமரைக்கூ…

     

    முடியின் மதிப்பது இருக்கும்வரை தலையில்,

    மதிப்பிதுதான் மனிதனுக்கும்

    மேலிருந்து கீழே தாழ்துவிட்டால் நிலையில்…!

     

    கிராமிய பாணியில்…

     

    தலமுடி நல்ல தலமுடி

    தலயில அலபோல் தலமுடி,

    எண்ண தேச்சிக் குளிச்சி

    எடுத்துச் சீவுன தலமுடி..

     

    அது

    கீழ உழுந்தா கேப்பாரில்ல

    குனிஞ்சி அதயே பாப்பாரில்ல,

    தலயில இருந்தா மதிப்புத்தான்

    தரையில உழுந்தா குப்பதான்..

     

    மனுசங் கதயும் இப்புடித்தான்,

    நல்ல நெலயில இருந்தவுனும்

    நெலம மாறித் தாந்திட்டா

    எல்லா மதிப்பும் போயிருமே

    உழுந்த முடிகத ஆவிடுமே…!

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 126

    மலர் சபா

     

    மதுரைக் காண்டம் – 02. வேட்டுவ வரி

    ஐயையின் கோட்டத்தில் ஒரு பக்கத்திலே கோவலன் முதலிய மூவரும் இளைப்பாறி இருத்தல்alar

    பலவித நறுமணங்களுடன் முடிக்கப்பட்ட
    கூந்தலையுடைய கண்ணகி,
    கடுங்கதிர் வீசிய சூரிய வெப்பத்தால் உண்டான
    துன்பத்தால் வருந்தினாள்.
    அவள்தம் சிறு பாதங்கள் சிவந்து தளர்ந்ததால்
    அடிக்கடி மூச்சு வாங்கினாள்.
    அத்துன்பத்தைத் தணிக்கும் வண்ணம்
    ஐயைக் கோட்டத்தின் ஒரு புறம்
    யாரும் பார்க்கா வண்ணம்
    சென்று அமர்ந்தனர் அம்மூவரும்.

    சாலினி ஆவேசம் கொண்டு மறக்குடி மக்களுக்கு அறிவுறுத்தல்

    அவர்கள் அமர்ந்த இடத்தின் அருகே
    எயினர்கள் வாழும் பகுதியிருந்தது.
    அம்பினை வழங்குகின்ற வில்லை ஏந்திய,
    பகைவராய் இருந்தாலும்
    வில்லை வழங்குகின்ற கொடைத்தன்மையுடைய,
    பெரிய கையையுடைய
    மறவர் குடியில் பிறந்த உரிமை உடையதால்
    கொற்றவைக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் முகமாய்
    ‘சாலினி’ எனும் பெண்ணொருத்தி,
    தன் மீது தெய்வம் வந்து ஏறப்பெற்றவளாய்,
    காண்பவர் எல்லாம் வியக்கும் வண்ணம்
    உடம்பின் முடிகள் எல்லாம் சிலிர்த்து நிற்க,
    கைகளை உயர்த்தி ஆடியவளாய்
    முள்வேலியால் சூழப்பட்ட அந்த ஊரின் நடுவே
    மறவர்கள் கூடியுண்ணும் ஊர் மன்றத்தில்
    அடியெடுத்து வைத்து
    மிகுந்த ஆவேசத்துடன் ஆடத் தொடங்கினாள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 01 – 19
    *http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html*
    படத்துக்கு நன்றி

    http://dosa365.wordpress.com/2012/10/23/76/kannagi-kovalan-kavunthi-adigal/

    Share
  • மாஇசை கொடுத்து நின்றார்

     
    எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் 

    dr-m-balamuralikrishna-thiruvananthapuram-january-2008
    சுந்தரத் தெலுங்கென்று
    சுவைபடக் கூறிநின்றான்
    செந்தமிழ்ப் புலவனவன்
    சிறப்பான பாரதியும்

    பாரதியின் கூற்றறிந்த
    பாலமுரளி கிருஷ்ணாவும்
    பாட்டாலே எம்மையெலாம்
    பதப்படுத்தி வைத்தாரே

    தெலுங்கோடு பிறந்தாலும்
    தீராத காதலுடன்
    பலமொழிகள் தான்கற்று
    பாட்டிசைத்து நின்றாரே

    இசையோடு தானிணைந்து
    ஈடில்லா முயற்சிசெய்து
    தனியான இசைகண்டு
    தரணிதனில் உயர்ந்தாரே

    புதுராகம் பலகண்டார்
    புத்துணர்வு கொண்டெழுந்தார்
    அதிமேதை என்றவரை
    அனைவருமே போற்றுகின்றார்

    மற்றவரைப் பாராது
    மனத்தோடு ஒன்றிநின்று
    வெற்றிச் சிரிப்புடனே
    விதம்விதமாய்ப் பாடுகிறார்

    பொட்டுவைத்துச் சபையேறி
    புன்சிரிப்புத் தவழஅவர்
    தொட்டுநின்ற ராகமெலாம்
    சுவைததும்பி நிற்கிறதே

    மிருதங்கம் வயலீனை
    விட்டுவிடின் பாட்டில்லை
    என்றெண்ணும் எண்ணத்தை
    இல்லையென ஆக்கியவர்

    தாளத்தை மட்டுமவர்
    தன்கையில் எடுத்தபடி
    சளைக்காமல் கச்சேரி
    சபையதிரச் செய்தாரே

    பிரமித்து நின்றார்கள்
    பெருங்கலைஞ்ஞர் எல்லாரும்
    ஒருமித்த குரலெடுத்து
    உயர்ந்ததெனப் பகர்ந்தார்

    தேசியவிருதை வென்றார்
    திசையெலாம் புகழநின்றார்
    மாஇசை கொடுத்துநின்றார்
    மதுரமாய்க் குரலினாலே

    பாரததத்தின் விருதையெல்லாம்
    பாட்டாலே பெற்றுநின்றார்
    பாரதிரப் பாடிநின்று
    பரிமளிக்கச் செய்கின்றார்

    பாலமுரளி கிருஷ்ணா
    பலவிதமாய்ப் பாடுவதால்
    பாரிலுள்ளோர் மனமெல்லாம்
    பக்குவமாய் நிறைந்துவிட்டார்

    காலமுள்ள வரைக்குமவர்
    கானமழை பொழிந்திடுவார்
    கந்தருவக் குரலோனை
    கண்மணியாய்க் காத்திடுவோம்

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 17

    கே.ரவி

    ஒருநாள், 1969 என்று நினைக்கிறேன், சிவம் வீட்டுக்குப் பரபரப்பாகப் போகிறேன். நம்ம சுகி சிவம்தான்!

    ‘உடனே என்னுடன் வா. பி.எஸ்.ஹைஸ்கூலுக்குப் போகிறோம்” என்று சிவத்தை என் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு மயிலை பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி வளாகத்துக்குப் போகிறேன். அங்கே, . . . !

    அப்போது சிவம், அமிர்தலிங்கம் (அதாங்க, வசந்தப்பிரியன்), சீனி சுந்தரராஜன், சசீந்திரநாதன் என்ற சசி, வள்ளி, நான் ஆகிய ஆறு பேரும் மற்ற சில நண்பர்களோடு சேர்ந்து சிந்தனைக் கோட்டம் என்ற இலக்கிய அமைப்பை நிறுவி, நடத்தி வந்தோம். (இத்தொடரின் 12-ஆவது பகுதியில் உள்ள புகைப்படத்தில் அமிர்தலிங்கம் தவிர மற்ற ஐவரையும் காணலாம். அதில் சிவமும், நானும் இருக்கிறோம் என்று நாங்கள் சத்தியம் செய்தால் கூட நீங்கள் நம்புவது கடினம்தான்!). முதன்முதலாக பாரதியாரின் வரலாற்றை முழுநூலாக எழுதி “பாரதி லீலை” என்ற பெயரில் வெளியிட்ட சக்திதாசன் சுப்பிரமணியத்தின் ஒரே மகன் சசி.

    அந்தச் சமயத்தில் அமராராகியிருந்த டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார் பெயரில் “சிதம்பரநாதனார் சிந்தனைக் கோட்டம்” என்றுதான் முதலில் தொடங்கினோம். அவர் அமிர்தலிங்கத்தின் தாய்மாமன். சில நாட்களுக்குப் பிறகு, அது பொதுப்படையான நிறுவனமாக இருக்க வேண்டும் என்று கருதிச் ‘சிந்தனைக் கோட்டம்’ என்றே தொடர்ந்து நடத்தி வந்தோம். அப்படியோர் இலக்கிய அமைப்பை நிறுவி நடத்த வேண்டும் என்று எங்களைத் தூண்டியவர் எங்கள் தமிழாசான் சிதம்பரம் சுவாமிநாதன்.

    “செந்தமிழ்த் தோட்டம் சிந்தனைக் கோட்டம் சேவையில் நாட்டம் செலுத்துவோர் கூட்டம்” என்று தனக்கே உரிய அடுக்குமொழி வசனத்தில் அந்த மன்றத்தின் கொள்கையை அவரே வரையறை செய்து தந்திருந்தார்.

    விஸ்வம்
    விஸ்வம்

    நான் ஏழாம் வகுப்பில்தான் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். என் தந்தை விஸ்வம்தான் சேர்த்து விட்டார். அவருக்கு என் சரியான பிறந்த தேதி கூட நினைவில்லை. தவறாக, 09-01-1952 என்று தந்து விட்டார், ஓராண்டும் நாலு நாட்களும் கூடுதலாக! அவர் வாழ்நாள் முழுதும் ஆசிரியராகவே பணியாற்றியவர். ஆசிரியர் தொழில், நாடகங்கள் எழுதி நடிப்பது இந்த இரண்டும்தான் அவருடைய வாழ்க்கையே. இவை தவிரக் குடும்ப விவகாரங்களில் எப்பொழுதுமே அதிக ஈடுபாடு செலுத்த மாட்டார். ஆனால் தாம் சிரமப்பட்டு ஈட்டும் பணத்தையெல்லாம் குடும்பத்துக்கே தந்து விடுவார். அவருக்கு நாடகம் தவிர வேறு கெட்ட வழக்கங்கள் கிடையாது,(நாடகக்காரர்கள் மன்னிக்கவும்). நாடகமே வாழ்க்கை என்று இருந்த அவருக்கு வாழ்க்கையில் நாடகமாடத் தெரியவில்லை. மற்றவர்களைப் புகழும் வழக்கம் மட்டும் அவருக்கு இருந்திருந்தால் அவர் சினிமாவில் பெரிய நடிகராகவோ, இயக்குநராகவோ வந்திருக்கக் கூடும். மற்றவர்களைப் புகழ்வதில்லை என்பதை அவர் ஒரு விரதமாகவே பயின்று வந்தார்.

    திருச்சியில், 1940-50 களில் லேடி விஸ்வம் என்றால் எல்லாருக்கும் தெரியும். நாடக

    லேடி விஸ்வம்
    லேடி விஸ்வம்

    மேடைகளில் பெண் பாத்திரத்திலேயே அவர் அதிகம் நடித்திருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பின்னாளில் இருந்த பழனியாண்டி, வீனஸ் ரத்னம் அய்யர் (இயக்குநர் மணிரத்னத்தின் தந்தை) மற்றும் சிலரோடு விஸ்வம் திருச்சியில் விடாமல் நாடகம் நடத்தி வந்ததும், அவர்கள் எல்லாரும் தினமும் நாடக ஒத்திகை முடிந்து இரவு 11 மணிக்கு மேல் எங்கள் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியவுடன் என் அம்மா, அதாவது என் வளர்ப்புத் தாயார் (என் வளர்ப்புத் தந்தை கல்யாணராமனின் இரண்டாவது மனைவி ‘அலங்காரம்’) அவர்களுக்கெல்லாம் உணவு பரிமாற, அவர்கள் உண்டு விட்டுத் திண்ணையில் உறங்கிய கதையும் நூறுமுறை என் வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

    அவருடைய நாடகக் குழுவில் பயின்ற ஒரு நடிகர் கடைசிவரை அவரை ‘வாத்தியார்’ என்றே அழைத்து வந்தார். 1972-ல் ஒருநாள், ஏ.வி.எம். ஸ்டூடியோவில் அந்த நடிகரும், இயக்குநர் ச்ரீதரும் அமர்ந்திருந்த போது நான் அங்கே சென்று என்னைக் கல்யாணராமனின் மகன் என்று அந்த நடிகரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். எங்கள் குடும்ப விவகாரம் முழுதும் தெரிந்து வைத்திருந்த அந்த நடிகர், ” வாத்தியார் செளக்கியமா” என்று கேட்டார். நான் திகைத்த போது, “உன் தந்தை விஸ்வம் சாரைத்தான் குறிப்பிடுகிறேன்” என்று விளக்கினார், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

    சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் நான் சேரும் போது எனக்குத் தமிழ் சரியாக எழுத வராது. முதலில் மந்தைவெளியில் உள்ள ‘பான்செகர்ஸ்’ என்ற கான்வெண்ட் பள்ளியிலும், பிறகு செயிண்ட் பீட்டர்ஸ் என்ற ஆங்கிலோ இந்தியப் பள்ளியிலும் 6-ஆம் வகுப்பு வரை பயின்றதால், தமிழ்ப் பயிற்சி இல்லாமல் இருந்தேன். ஆனால், செயிண்ட் பீட்டர்ஸில் ஜேம்ஸ் மிஸ் என்ற ஆசிரியை ‘மான்விழி’ என்றொரு நாடகம் போட்டபோது, எங்கள் வகுப்பில் எல்லாரையும் தமிழ் படிக்கச் சொல்லிக் கேட்டு, மான்விழி என்ற கதாநாயகியாக நடிக்க என்னைத் தேர்வு செய்தார். ‘உன் தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது’ என்று பாராட்டினார். அதுதான் நான் தமிழ் ஆர்வம் கொள்ள என் நெஞ்சில் தூவப்பட்ட முதல் விதை. அப்போது நான் சுமார் பத்து வயதுச் சிறுவன். சிறுவர் அரங்கில் (பின்னாள் கலைவாணர் அரங்கம்) நடந்த குழந்தைகள் தினவிழா நாடகப் போட்டியில் ‘மான்விழி’ நாடகத்தில் நடித்து நான் முதற் பரிசு பெற்றதும் என் தந்தை விஸ்வம் பூரித்துப் போய்விட்டார், தனக்கு ஒரு கலைவாரிசு வந்து விட்டது என்று.

    ஏழாம் வகுப்பில் சாந்தோம் பள்ளியின் ஆங்கில மீடியத்தில் நான் சேர்ந்த புதிதில், சிதம்பரம் சுவாமிநாதன்தான் எங்கள் தமிழாசிரியர். நான் விடைத்தாளில் கோழி என்பதைக் ‘கேழி’ என்று எழுதியிருந்ததைப் பார்த்துக் கோபத்தோடு அதைக் கசக்கி என் முகத்தின் மீது விட்டெறிந்தார். மற்ற மாணவர்கள் முன்னால் எனக்கு அவமானமாக இருந்தது. ஏழாம் வகுப்பு முடிந்ததும், கோடை விடுமுறையில் நான் தினமும் சென்னை, மவுண்ட் ரோட்டில் இருந்த மத்திய நூலகத்தில் 3, 4 மணிநேரம் செலவிட்டுத் தமிழ் இலக்கிய நூல்களை எடுத்துப் படித்தேன். வாய்விட்டுப் படித்தேன், நூலகப் பணியாளர் ‘உஸ்’ என்று அடக்கும் வரை. நளவெண்பா, கலிங்கத்துப் பரணி, பாரதிதாசன் பாடல்கள், சிலப்பதிகாரம் என்று என் தமிழ் இலக்கியப் பயிற்சி வளர்ந்தது. கூடவே நன்னூல் இலக்கணத்தையும் பயின்றேன். இரண்டு மாதங்களில் எப்படி நான் அவ்வளவு படித்தேன்? இப்பொழுது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு வெறி என் பிடறியைப் பற்றி உந்தியதை உணர முடிந்தது.

    8-ஆம் வகுப்புப் படிக்கும் போது, சிவம், சீனி சுந்தரராஜன், சசி, போன்ற நண்பர்களுக்குக் கலிங்கத்துப் பரணியின் கடைத்திறப்பு அதிகாரத்தைப் படித்துக் காட்டி விளக்கிப் பாடம் எடுத்தது இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளது. அந்த அதிகாரத்தில் உள்ள சிருங்கார ரசப் பாடல்கள் அந்த வயதில் எங்களை ஈர்த்ததில் வியப்பொன்றும் இல்லையே!

    மதுர மானமொழி பதற வாள்விழி சிவப்ப வாயிதழ் வெளுப்பவே

    அதர பானமது பான மாகவறி வழியும் மாதர்கடை திறமினோ

    — — —

    வருவார் கொழுநர் எனத்திறந்தும்

    வாரார் கொழுநர் என அடைத்தும்

    திருகும் குடுமி விடியளவும்

    தேயும் கபாடம் திறமினோ

    இப்படிப் பல பாடல்கள் பல்கி வரும் கடைத்திறப்பு அதிகாரம் முழுவதையும், படித்தோம்.

    நானும் கவிதை எழுதத் தொடங்கினேன். என் வகுப்பு நண்பர்கள் சேர்ந்து, சீனி சுந்தரராஜன் கைவண்ணத்தில், ‘தமிழ்ச்சங்கு’ என்ற கையெழுத்துப் பத்திரிகை தொடங்கினோம். மூன்று, நான்கு இதழ்கள் வந்தன. அதில்தான், என் முதல் கவிதை வெளியானது. அதன் தொடக்க வரிகள் மட்டும் இன்னும் என் நினைவில் இருக்கின்றன:

    அகத்திய முனிவரின் அகத்தினில் உதித்தவள்

    என்ன பொருத்தம் பார்த்தீர்களா?

    “தழல்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான்” என்று கவிச்சக்கரவர்த்தி போற்றிய அகத்திய மாமுனிவரின் அருளோடு என் கவிதைப் பயணம் தொடங்கியது. அந்தக் காலக் கட்டத்தில் எழுதிய கவிதைகள் நிறைய தொலைந்தும், மறந்தும் போய்விட்டன. ஒன்றிரண்டு மட்டும் நினைவுப் பேழையில் நீங்கா இடம் கொண்டன:

    ஒளிதந் தெரியும் விளக்கின் திரியும்

    கரியா கத்தான் திரியும் – நெஞ்சக்

    களிப்பை நல்கும் வெடியின் திரியும்

    கரியா கிப்போய் மறையும் – ஆனால்

    விளக்கில் உள்ள திரியின் நல்ல

    சேவை உலகில் நிறையும் – இந்த

    விளக்கம் தன்னை ஆய்ந்து பார்த்தால்

    விந்தை வாழ்வு புரியும்

    என்றும் வாழும் விளக்கின் திரிகள்

    ஏசு புத்தர் காந்தி

    பொன்றும் வெடியின் திரியே மற்ற

    பொல்லா உயிர்கள் எல்லாம் – இந்த

    உண்மை தன்னை உணர்ந்து நல்ல

    விளக்கின் திரிபோல் நாமே

    வண்மை கொண்டு மனிதராக

    வாழ்வோம் வாழ்விப் போமே

    முதலில் சொன்னேனே, 1969-ல் ஒருநாள் சிவத்தை அழைத்துக் கொண்டு பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி வளாகத்துக்குப் போனேன் என்று; அதற்குக் கொஞ்ச நாட்களுக்கு முன், நான் சைக்கிளில் போய்க்கொண்டிருக்கும் போது, பள்ளி மாணவி ஒருத்தி நடுத்தெருவில் என்னை வழிமறித்தாள். அவள் சொன்னாள்: “என் பெயர் விஜயா. செயிண்ட் ஆண்டனீஸ் உயர்நிலைப் பள்ளி மாணவி. நானும் என் வகுப்புத் தோழிகளும் தமிழில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளோம். நீங்கள் ஏதோ மன்றம் நடத்துவதாகக் கேள்விப் பட்டோம். அதில் சேர விரும்புகிறோம்.”

    “பார்க்கலாம்” என்று சொல்லி விட்டு நான் நகர்ந்து விட்டேன். அவள் மீண்டும் என்னைச் சந்தித்தாள். “நானும் என் தோழியும்shoba1 ஒரு பேச்சுப் போட்டியில் கலந்து கொள்கிறோம். நீங்கள் வந்து பார்க்கலாமே” என்று அழைத்தாள். சரியென்றேன்.

    விஜயா சொன்ன நாளும் வந்தது.

    ஒரே வினாடியில் காலச் சுவடியின் பக்கங்களை வேகமாக ஒரு நொடிக்குள் சுமார் முப்பது ஆண்டுகள் பின்னோக்கிப் புரட்டிப் பார்த்துவிட்டு, மீண்டும் 1969-ஆம் ஆண்டுக்கே மீண்டுவிட்டேன். பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி அரங்கம்; என் அருகில் சிவம். அரங்கத்தில் விஜயா குறிப்பிட்ட அவள் தோழி, குருநானக் தேவரைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருக்கிறாள். அவள் குரலொலி எனக்குக் கேட்கவில்லை, முகவொளி நெஞ்சை நிறைத்திருப்பதால். பிறகு சிவத்துக்கும், எனக்கும் அந்தத் தோழியை விஜயா அறிமுகம் செய்து வைக்கிறாள்: “இவள் பெயர் ஷோபனா!”

    அந்தக் காட்சியின் மின்னல் அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை, நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆகியும்!

    (தொடரும்)

    Share
  • காதல் நாற்பது – 11: துன்ப மயமான இசை !

    –சி. ஜெயபாரதன்.

     

    elizabeth-browning1-150x150

    காதல் நாற்பது 11: துன்ப மயமான இசை !
    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    காதல் வெட்க மறியா தென்றால்
    தகுதி இல்லையென நான்
    ஒதுக்கப்பட மாட்டேன் !
    கன்னங்கள் வெளுப்பது உனது
    கண்ணுக்குத் தெரிகிறது !
    காதல் கனத்த நெஞ்சின் பளுவைத்
    தாங்க முடியாமல் நடுங்கி
    முறிந்து போயின
    முழங் கால்கள் !

    ஒரு காலத்தில் பெருமை தந்து,
    களைத்து விட்ட இந்த
    கவித்துவ வாழ்க்கை எப்படியோ
    கால மேட்டில் ஏறிடும் !
    காட்டு வெளியே
    கோலக் குயில் ஒலிக்கும்
    துன்ப மயமான குழலிசையைக்
    கேளாம லிருப்பது அபூர்வம் !

    எதற்காக நான் இப்படி
    உழல வேண்டும் ?
    அந்தோ என் இனியவனே !
    உந்தன் ஒப்பிலா அறிவுக்கும்,
    உயர்ந்த அரங்குக்கும்,
    நிகரில்லை நான் என்பது
    வெளிப்படை !

    நானுனை இன்னும் நேசிப்பதால்
    நளின முடன் பலிவாங்கும்
    அரிய என் காதலே
    உரிமை ஆக்கிடும் உன்னை !
    அந்தக் காதல் உணர்விலே
    இன்னும் நான் வாழ்வது
    வீண்தான் !
    உனக்கு வெகுமதி வழங்க
    என்னை அர்ப்பணம் செய்வேன்
    நின்னெழில் முகத்துக்கு  !

    ********************

    Poem -11
    Sonnets from the Potuguese
    By: Elizabeth Browing

    And therefore if to love can be desert,
    I am not all unworthy. Cheeks as pale
    As these you see, and trembling knees that fail
    To bear the burden of a heavy heart,–
    This weary minstrel-life that once was girt
    To climb Aornus, and can scarce avail
    To pipe now ‘gainst the valley nightingale
    A melancholy music,–why advert
    To these things? O Beloved, it is plain
    I am not of thy worth nor for thy place!
    And yet, because I love thee, I obtain
    From that same love this vindicating grace,
    To live on still in love, and yet in vain,–
    To bless thee, yet renounce thee to thy face.

    **********

    Share
  • நிரந்தரமானவன் அழிவதில்லை !

    — எஸ் வி வேணுகோபாலன்.

    கண்ணதாசன்

    நிரந்தரமானவன் அழிவதில்லை !

     

    0 R‘முத்து என இட்டபெயர் முத்தாகவிலை என்று முறையீடு செய்யவிலையோ…’ என்ற கவியரசு வரிகளை ஆனைக்கட்டி ரவிதான் எனக்குச் சொன்னது.  முத்தையா என்பதுதான் கண்ணதாசனின் இயற்பெயர். வாலியைப் போலவே கண்ணதாசன் குறித்த சிலாகிப்பும் என் அண்ணனது கல்லூரித் தோழன் ரவி மூலம் தான் தொற்றிக் கொண்டது. பாடலைச் சும்மா கேட்டுக் கொண்டிருந்த காலம்போய் அதன் நுட்பத்தில் உள்ளத்தைப் பறிகொடுக்கத் தொடங்கிய காலம் பள்ளிக்கூடப் படிப்பு நேரம்.  எத்தனை கொடுத்து வைத்த இளமைப் பருவம்! தொலைக்காட்சிக் கருவிகளைக் காலம் கடந்து கண்டுபிடித்த விஞ்ஞானிகள், அவற்றை நிதானமாகத் தமிழகத்திற்குக் கொண்டு சேர்த்தவர்கள் யாவரும் நீடூழி வாழட்டும். வானொலியில் பாடலை ஒலிபரப்பிக் கொண்டிருப்போர் என்றென்றும் அமரத்துவம் எய்தட்டும்.

    கண்ணதாசனைக் கேட்கவும், படிக்கவும் ஒரே நேரத்தில் சாத்தியமாயிற்று. ஒன்று நூலகத்தில் சிக்கிய அவரது கவிதைத் தொகுப்புகள். மற்றொன்று அப்போது வாராவாரம் குமுதம் இதழில் வந்து கொண்டிருந்த அவரது கவிதைகள்.

    ‘பூவினைக் காடுகள் புன்னகைக் கோடுகள் பொன்னிறப் புள்ளிமான் கூட்டம், காவியப் பேடுகள் கண்மயர்க் கூடுகள் காதலே என்மனத் தோட்டம், நாவினால் மென்மொழி நாட்டுவாள் பைங்கிளி நாடுவேன் நாடுவேன் நானே, பாவியேன் நெஞ்சினைப் பற்றுமோர் பெண்மையைப் பார்க்கிலேன் கண்ணபிரானே’ என்ற அவரது வரிகளில் துள்ளிய ஆசிரிய விருத்தம் எல்லா வருத்தங்களையும் தீர்க்கும் ரசமாக என்னுள் இறங்கிய வேட்கைப் பருவமது.

    கண்ணதாசன் கவிதைத் தொகுதிகளை நான் பள்ளிக்கூடப் படிப்பு மேற்கொண்டிருந்த காஞ்சிபுரத்திலும், எனது பெற்றோர் இருந்த வேலூரிலும் நூலகங்களில் தேடித் தேடி வாசித்துக் கொண்டிருப்பேன்.  அவரது அரசியல் உணர்விலும், இறை நம்பிக்கையிலும் ஏற்பட்ட மாற்றங்களின் பிரதிபலிப்புகள் அவரது தொகுதிகளில் பயணம் செய்பவர்களுக்குப் பளிச்சென்று தெரிந்துவிடும்.

    கம்பனில் ஆழ்ந்த ரசனையை அவர் வளர்த்துக் கொண்டதை, அர்த்தமுள்ள இந்து மதம் என்ற தலைப்பில் அவர் பேசி வந்த சொற்பொழிவுகளில் நேரே கேட்கும்போது கிறங்கிப் போகிற அளவு அந்த சந்தங்களை சொல்லிக் காட்டுவார். தனது எந்தப் பாடலை எந்தத் தனிப் பாடலின் தாக்கத்தில், எந்தக் கம்பன் கவியின் வேகத்தில் எழுதினேன் என்று விவித்பாரதி அலைவரிசையில் சிறப்பு தேன்கிண்ணம் பகுதியில் அவரே எடுத்துச் சொல்வதை எழுபதுகளின் பிற்பகுதியில் வானொலி நேயர்களாக இருந்தோர் அறிந்திருப்பர்.

    அகலிகை சாப விமோசனம் நிகழ்ந்த பரவசத்தில், விசுவாமித்திரர் ராமனைப் புகழ்ந்து, தாடகையை எதிர்த்த போரில் உன் கை வண்ணம் கண்டேன், இங்கே கல்லை மிதித்து அதைப் பெண்ணாக மாற்றியதில் உன் கால் வண்ணம் கண்டேன் என்று சொல்வார். ‘பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்’ என்பது கண்ணதாசன் எழுதிய (பாசம்) திரைப்படப் பாடல் வரிகள்!

    சூர்ப்பணகை வருகையைக் கொஞ்சிக் கொஞ்சி கம்பன் வருணித்த, ‘பஞ்சியொளிர் விஞ்சுகுளிர்’ என்ற அருமையான செய்யுள், ‘வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்’ என்று முடிவதைத் தான், ‘வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்..’ என்ற கண்ணதாசனின் அற்புதப் பாடலாக சி எஸ் ஜெயராமன் அவர்களது தனித்துவக் குரலில் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருப்பது.

    ‘கண்வழி சொரியும் உப்பு கடவுளால் வருவதல்ல, மண் வழி வரலாம் பெற்ற மகன் வழி வரலாம் சேர்ந்த பெண் வழி வரலாம் செய்த பிழை வழி வரலாம் ஆனால் நண்பர்கள் வழியிலேதான் நான் கண்ட கண்ணீர் உப்பு’ என்பது அவரது கவிதை! இதே கருத்து, ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா என்ற அவரது திரைப் பாடலிலும் வரும் (அவன்தான் மனிதன்).

    உருக்கமான கவிதைக்கு அவரிடம் குறைவு இருக்க இயலுமா, என்ன! உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்து அவர் எழுதிய ஒரு கவிதை மிகவும் பரவலாக அறியப்பட்டது: ‘ அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும் ஆழ்ந்த துயிலினிலே அமைதியினைக் காணட்டும்’ என்று தொடங்கும் அந்தக் கவிதையை அவர் எழுதிய பிறகு, காய்ச்சல் கண்டிருந்த அவரது உறவுக்காரர் ஒருவரின் அந்தக் குழந்தை மரித்துவிட்டது. அதிர்ந்து போனார் கவிஞர். பின்னர், ‘அறம்பாடி விட்டேனோ அறியேன் யான் சிறுகுருவி திறம் பாடமாட்டாமல் செத்த கதை பாடுகிறேன்’ என்று எழுதினார்.

    திருமகள் என்ற இதழில்  வெளியான ‘ காலை குளித்தெழுந்து கருஞ்சாந்துப் பொட்டுமிட்டு’ என்று தொடங்கும் கவிதைதான் கவியரசரின் பிரசுரமான முதல் கவிதை. இந்த சொல்லாட்சி, வேகம், எளிமை அவரது திரைப்படங்களில் ஆட்சி செய்து அசத்தியது.

    ‘நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே’ என்று சவாலே சமாளி படத்தில் வரும் பாடலின் கடைசி சரணம் அதிகம் வானொலியில் ஒலிபரப்பு ஆகாதது: ‘ தங்கம் எடுத்த கை அது தங்கம் பார்த்ததா, தர்மம் காத்த கை சமதர்மம் கண்டதா…’ என்று போகும் அந்த ஆவேச வரிகள், ‘ஆலயம் செய்வோம் அங்கே அனுமதி இல்லை, நீ அந்தக் கூட்டமே இதில் அதிசயமில்லை’ என்று சிகரத்தை எட்டும்.

    கதையின் சுருக்கத்தை மிகத் திறம்பட தனது பாடல் வரிகளில் சொற்செட்டாக வடித்துக் கொடுக்கும் பேராற்றல் அவருக்கிருந்தது. அவர்கள் படத்தில் வரும் ‘இப்படியோர் தாலாட்டு பாடவா’ என்ற பாடலின் சரணம்  ‘அன்றொரு நாள் மீராவும் கண்ணனை நினைந்தாள் ஏனோ அவளுடைய தலையெழுத்து மன்னனை மணந்தாள்’ என்று சொல்லிச் செல்லும் கதாநாயகி, ‘அதுவரைதான் தன்கதையை என்னிடம் சொன்னாள் நான் அப்படியே என் கதையை உன்னிடம் சொன்னேன்’ என்று தனது கதையை அங்கே இணைத்துவிடும் அழகை எப்படி விவரிக்க!

    ராஜபார்ட் ரங்கதுரை படத்தில், ‘அம்மம்மா தம்பி என்று நம்பி’ என்ற பாடலை வேறு யார் எழுதி இருக்க முடியும்? ரோஜாவின் ராஜா படத்தின், ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான் என்ற பாடலில் பி சுசீலாவின் அற்புதக் குரலில், ‘நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை, அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர் மறைத்தும் மறையவில்லை’ என கசியும் தவிப்பு வரிகளை வேறு யார் தொடுத்திருக்கக் கூடும்?

    காவியத் தலைவி படத்தில் வரும் ‘ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்’ என்ற பாடல் யாரைத் தான் உருக வைக்காது! அதுதான் மேதைமை.  காதல் (நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான் – பூவும் போட்டும்), பாசம் (மலர்ந்தும் மலராத – பாச மலர்), சோகம் (கண்கள்   இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ – மன்னாதி மன்னன்), வேதனை (கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் – வானம்பாடி), கழிவிரக்கம்  (உள்ளத்தில் நல்ல உள்ளம் – கர்ணன்), சுய பரிதாபம் (பாலூட்டி வளர்த்த கிளி – கௌரவம், மனிதன் நினைப்பதுண்டு – அவன் தான் மனிதன்), தாபம் (நாலு பக்கம் வேடருண்டு – அண்ணன் ஒரு கோவில்)….எந்த உணர்வைக் கேட்டாலும் அந்த வகைப்பட்ட பாடலை அவரது பேனா எழுதி இருக்கவே செய்யும்.

    தனக்கான இரங்கல் கவிதையைத் தானே யாத்துக் கொண்ட ரசனை மிக்க கவி அவர். வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை நீங்கி வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை (கருப்பு பணம்) என்றெழுதிய அவரது படைப்பில், கவிதைகளாக மலர்ந்த பலவும் அதிகம் பேசப்படாதிருப்பது. சொல்லப் போனால் இணையத்தில் அவரது தனிக் கவிதைகள் ஏற்றப்படாதிருப்பது வியப்புக்குரியது.

    குமுதம் இதழில் வந்த அவரது சிறப்பான கவிதை ஒன்று இப்படி தொடங்குகிறது:

    சாலையிலே ஒரு முடவனைக் கண்டுகைத் தாங்கலில் கொண்டுவிட்டேன்
           தனிமையில் வாடிய குருடனை அணைத்துநற் சாதமும் ஊட்டிவிட்டேன்
    வேலையில்லாதவன் வெம்பசி தீர்ந்திட விருந்தொடு காசுமிட்டேன்
          வேண்டிய கல்வி கொடுத்தொரு பிள்ளையை மேற்படி ஏறவிட்டேன்
    ஓலையில்லாதொரு பாவிகள் குடிசைக்கு ஓலையும் போட்டுவைத்தேன்
          உறவினரற்ற பிணத்தை எடுத்தெரி யூட்டி முடித்துவிட்டேன்
    காலைதொடங்கி நள்ளிரவு வரையில் என் கடமைகள் தொடர்கின்றன
          கண்களை மூடிக் கனிந்ததும் அற்புதக் கனவுகள் வருகின்றன…..

    இந்தப் பொது சிந்தனை, உதவும் உள்ளம், பரந்த பார்வைதான் கண்ணதாசனை இறவாக் கவியாக உயர்த்தியிருப்பது. மறைந்த பிறகும் பிறந்தநாளைக் கொண்டாட வைத்திருப்பது!

    (ஜூன் 24 அன்று அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது)

    ************
    நன்றி:வண்ணக்கதிர்: ஜூலை 6. 2014

    Share
  • எனக்கொரு காதலி இருக்கின்றாள்…

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    enakoru kathali

    ஏதோ ஒரு சில பாடல்களில் மட்டும்தான் இசையும் கவிதையும் தங்களைப்பற்றி சிலாகித்துக்கொள்ளும் இதுபோல! எடுத்த எடுப்பிலேயே.. கவிதையே பல்லவியாகிறது பாருங்கள்!

    எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்.

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து பாடும்நிலா பாலசுப்பிரமணியனுடன் இணைந்து பாடிய பாடல்! இசையமைத்த பின் எழுதப்பட்டதா.. எழுதிய பின் இசையமைத்தார்களோ.. எதுவாயினும் கவிஞர் வாலியின் கற்பனா சக்தியும் மெல்லிசை மன்னரின் இசைப் பிரவாகமும் இங்கே நம்மை ஈர்க்கும் சக்தியைப் பெற்றுவிடுகின்றன!

    அருமையான வயலின் இசைக்கோர்வையோடு தொடங்குகிறது பாடல்!  ஜெய்கணேஷ் மற்றும் தேங்காய் சீனிவாசன் ஆகியோரின் நடிப்பில்.. இசையால் நடத்தப்பட்டுள்ள திருவிழா!  குரல்கள் மென்மையாக ஒன்றும் கம்பீரமாக ஒன்றும்!!

    ராகங்களில் உள்ள பெயர்களையும்கூட பாடலில்கொண்டுவந்து வைக்கிற உக்தி கவிதாஞானம் பெற்றவர்களுக்கே கைவரக்கூடும்!  இசையைப்பற்றியும் அங்கே எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.. அதே நேரம் காதலிக்கும் பொருந்திவருகிறது!  அர்த்தபுஷ்பங்களின் அர்ச்சனையில் ஆலாபனை செய்யப்பட்ட பாடலாக..

    காதல் உணர்வை கவிதையில் பதிக்க கவிஞர்களுக்கா சொல்லிக் கொடுக்க வேண்டும்!  அதுவும் இசையும் அதற்கேற்ப வளைந்துகொடுக்க.. குரல்களின்வழியே இன்பகங்கை வழிகிறது கேளுங்கள்!!

    முத்தான முத்தல்லவோ திரைப்படத்திற்காக விளைந்த முத்தான முத்தல்லவோ இந்தப் பாடல்!

    காணொளி: http://www.youtube.com/watch?v=ILzy6ev7Y4c

    திரைப் படம் : முத்தான முத்தல்லவோ (1976)
    பாடியவர்கள் :S P B , M S  விஸ்வனாதன்
    பாடல்: வாலி
    இசை:M S விஸ்வனாதன்
    நடிப்பு:  ஜெய்கணேஷ், சுஜாதா, தேங்காய் சீனிவாசன்
    இயக்கம்: R விட்டல்

    எனக்கொரு காதலி இருக்கின்றாள்
    அவள் ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்

    காம பத நிஸறிஸ நினி ஸ நித தப மஸ  மக கப

    ஆஹ ஹா ஹோ ஹோ ஹோ

    எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
    ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்
    கீதம் அவளது வளையோசை
    கீதம் அவளது வளையோசை
    நாதம் அவளது தமிழோசை
    தமிழோசை

    எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
    ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்
    கீதம் அவளது வளையோசை
    கீதம் அவளது வளையோசை
    நாதம் அவளது தமிழோசை
    தமிழோசை

    எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
    ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்

    பஞ்சமம் பேசும் பார்வையில் என்றும்
    பஞ்சமம் பேசும் பார்வையில் என்றும்
    பஞ்சணை போடும் எனக்காக
    தெய்வதம் என்னும் திருமகள் மேனி
    கைகளை அணைக்கும் இனிதாக
    இனிதாக

    எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
    ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்

    என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
    என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
    மெல்லிசையாகும் என்னாளும்
    வையகம் யாவும் என் புகழ் பேச
    கைவசம் ஆகும் எதிர் காலம்
    எதிர் காலம்
    எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
    ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்

    தேன் சுவைக் கிண்ணம் ஏந்திய வண்ணம்
    நான் தரும் பாடல் அவள் தந்தாள்
    மோகனம் என்னும் வாகனம் மீது
    தேவதை போலே அவள் வந்தாள்
    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

    எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
    ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்
    கீதம் அவளது வளையோசை
    நாதம் அவளது தமிழோசை
    தமிழோசை

    Share
  • தாம்புக் கட்டு

    கிரேசி மோகன்

    தக்காளி ரசத்தில் கடுகைத் தாளித்துக் கொட்டினா மாதிரி, பகலை இரவு சந்தித்துக் கை குலுக்கும் சாயங்கால நேரத்து வானைப் பார்த்தபடி….ஸாரி பார்க்காதபடி கண்களை
    துணியால் கட்டிக்கொண்டு அண்ணாந்து பார்த்தபடி ” சரியா!….தப்பா!….சரியா!….தப்பா!” சொல்லிக் கொண்டே அந்த சிறுமி நொண்டியபடி பாண்டி ஆட்டம் ஆடிக்
    கொண்டிருந்தாள்….சக சிறுமிகளின் சத்தம் வராது போகவே, அவள் கண்கட்டை அவிழ்க்க….எதிரே தாடகை ராட்சஸி போல அவள் தாயார் சாமி ஆடிக் கொண்டிருந்தாள்….
    ” சரியில்லடி….தப்பு….நான் உன்னை பெத்தது தப்பு….உன்னை ஒங்கப்பன் வளத்த விதம் தப்பு” என்று தப்புக்களை அடுக்கியபடி, நிழலை உருவம் இழுத்துக் கொண்டு
    போல….தாய் மகளை அடித்தபடி தரதரவென்று இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்….

    ” ஏண்டி பொண்ணை போட்டு இந்த அடி அடிக்குற….”காதை மயிலிறகால் குடைந்தபடி கட்டிலில் கரிசன நைனா….
    ” அடிக்காம….மடில போட்டு கொஞ்சவா சொல்றீங்க….அவ செஞ்ச….இல்ல செய்யாத காரியத்துக்கு கொன்னே போட்ருக்கணும்….பால்காரம்மா வூட்டுக்கு போய் தாம்பு
    கயிறு வாங்கிகினு வான்னு காலீலயே சொல்லியாச்சு….இந்த சிறுக்கி இன்னும் வாங்கிகிட்டு வரா…”
    ”ஆத்தா சொன்னத கேக்க வேண்டியதுதானே….ஏம்மா ழாழாத்தி…” குடைச்சல் சிலிர்ப்பில் ”ராசாத்தியை” ழாழாத்தி என்று நைனா….!
    ” அது என்ன எப்பப்பாரு ராசாத்தி ராசாத்தினு கொஞ்சல்….சிறுக்கிக்கு பேர் வச்சிருக்கீங்க இல்ல….அத சொல்லி கூப்பிடறது….”
    ”நாம என்ன பேர் வச்சாலும் அவ என்னிக்குமே ராசாத்திதாண்டி…. போன வருசம் ராமாயணக் கூத்துல எம் பொண்ணுதானே ராசாத்தி….
    ராமன் வில் ஒடைக்க வர சொல்ல ஒரு பாட்டு பாடுவியே…”ஈன்றாத போதும் பெரிதுவந்தார் நைனா….
    ”நீல வண்ண ராமா நில் நில்….நீ ஒடைக்க தோ பார் வில் வில்” கீச்சு மழலையில் சிறுமி கூவினாள்….!
    ”நிறுத்துரி ஒன் ஒப்பாரியை….நீல வண்ணமாம் நீல வண்ணம்….ராமன் கருப்புடி…”
    ” நைனா நைனா ராமனை எனக்கு கட்டி வை நைனா….எனக்கு இந்த சேப்பு புடிக்கல….அவனை கட்டிக்கிட்டு நானும் நீலமாயிடுவேன்” குடையும் மயிலிறகு மறுகாது
    வழியாக வரும் அளவுக்கு சிறுமி தன் தகப்பனை உலுக்கி ஆட்டுகிறாள்….
    ”நீயே நீலம் பாரிச்சுதாண்டி பொறந்த….நல்லவேளை ஒன் சினேகிதி நப்பின்னையோட ஆத்தா உன்னை தலகீளா தொங்கவிட்டு காப்பாத்தினா….எப்பபாரு நீல
    ஆலாபனைதான்….ராமனை கட்டிக்கிட்டா காட்டுக்குத்தான் போவனும்….”
    ”ராமன் இருக்க சொல்ல நான் தெகிரியமா காட்டுக்கு போவேன்….”
    ”காட்டுக்கு அப்பால போவலாம்….இப்ப பால்காரம்மா வூட்டுக்கு போய் தாம்பு கயிறு வாங்கியா…”
    ”தாம்பு கயிறு வாங்கிட்டு வந்தா ராமனை கட்டி வப்பியா….?”
    ” தாம்பு கயிறை வாங்கியா….ஆத்தாளும்,பொண்ணும் தூக்குல தொங்குவோம்….ஏங்க இவ சிறுக்கியா இல்ல கிறுக்கியா….”
    ”அவ ராசாத்திடி….ராமன் மாதிரி அவளுக்குனு ஒத்தன் பொறக்கத்தான் போறான் பாரு….!”என்றார் கிழிஞ்ச கட்டில் சனக மவராசா….!
    ”எப்ப பொறந்து….எப்ப வளந்து….எப்ப கல்யாணம்…. அய்யோ அப்பன் பொண்ணு ரெண்டு பேரும் இப்படி கனாலயே காலத்தை தள்ளறீங்களே….
    பெத்த வயிறு பத்திகிட்டு எரியுது….”
    ”ஏண்டி என்னையும் நீயா பெத்தே….?”
    ”கேலில ஒண்ணும் கொறைச்சலில்ல….தோ பாருங்க நீங்க ஒங்க பொண்ணுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து குட்டிச்சுவராக்கிட்டீங்க….படிப்பு கிடிப்பு ஒண்ணும்
    கிடையாது….எப்பப்பாரு ஆகாசத்தை பாக்கறா….அன்னிக்கு வான வில்ல பாத்துட்டு ”ஆத்தா ராமன் இத ஒடக்க வருவானா” கேக்கறா….பட்டாம் பூச்சிக்கு
    பாட்டு சொல்லித் தரா….மல்லிப் பூவுக்கு, நீல கனகாம்பரத்தை கல்யாணம் பண்ணி வக்கறா….இது எங்க போய் முடியப் போவுதோ…!உங்களுக்கே கண்ணுல
    ஜலம் வருது பாருங்க….”
    ”தோ பார் சொகமா காது குடஞ்சா அப்படித்தான் கண்ணுல ஜலம் வரும், வாய்ல ஜொள்ளு ஒழுகும்….அது ஒரு புல்லரிப்புடி….”சனக மவராசா காது குடைஞ்சு
    குடைஞ்சு கைலாசத்துக்கெ போயிடுவார் போல கிறக்கத்துல இருந்தார்….பிறகு பெண்ணைப் பார்த்து” உங்காத்தா எதான உளறுவா….நீகாதுல போட்டுக்காதே….
    போய் சாப்டு தூங்கு….”
    ”நீங்க காதுல மயிலிறகை போடறதை மொதல்ல நிப்பாட்டுங்க” என்ற தாயார்காரி, சிறுமி உள்ளே செல்வதைப் பார்த்து ” எங்கடி நழுவுற…உன்னை
    வளக்கற விதத்துல வளத்தாத்தான் உருப்புடுவ….மயிலே மயிலேன்னா இறகு போடாது….அப்படியே போட்டாலும் உங்கப்பன் அதுல காது குடைய ஆரம்பிச்சுடுவார்….”
    சிறுமி தாயைப் பார்க்க ”என்னடி பாக்கற….கேட்டா பதில் சொல்ல மாட்டேங்கறே….அடிச்சா அழ மாட்டேங்கறே….மனசுல என்ன மாகாளின்னு நெனப்பா…
    போயி பால்காரம்மா வுட்டுலேந்து தாம்பு கயிறு வாங்கிகினு வா….அத்தாலா தயிரு கடையறது முன்னாடி உன்னை விளாசறேன்….அப்பத்தான் உனக்குப் புரியும்….”
    ”இருட்டிடுச்சு ஆத்தா….நாளைக்கு காலீல….”என்று சிறுமி இழுத்தாள்….”இருட்டினா என்ன….அதான் ஒனக்கு துணைக்கு அந்த நீலப் பய இருக்கானே…போடி”
    என்று மகளை தள்ளி கதவை சாத்துகிறாள்….” என்னம்மா இப்படி கல்நெஞ்சுக்காரியா கீறே….காத்து கருப்பு உலாவுற வேளைல….பச்சை புள்ளையைப் போய்”
    காது சொகம் அலுத்து மயிலிறகால் முதுகை சொரிந்தபடி நைனா செய்த சிபாரிசு எடுபடவில்லை….”உங்க பொண்ணுக்கு காத்தும் புடிக்கும்….கருப்பும் புடிக்கும்…. இவ வயசுல நான் உங்களை கட்டிகிட்டாச்சு….பச்சை புள்ளையாம் பச்ச புள்ள….மொதல்ல அந்த நீலப் புள்ளையை மறக்க சொல்லுங்க….”உள்ளே போகிறாள்….

    அன்று பார்த்து பிரளய கால இருட்டு….இரவு ஆரம்பமே அர்த்த ஜாமம் போல் இருண்டது….வரப்போகும் மழைக்கு பராக் பராக் சொல்வது போல சிலு சிலுவென
    காத்து…..வானத்தில் யாரோ தக்கிளி நூற்பது போல மின்னல் தோன்றி பூமியைத் தொட்டது….இடிச் சத்தம் சிறுமியின் காதில் ராமர் வில்லை உடைத்த சத்தமாகக்
    கேட்டது….சிறுமி பயத்தைப் போக்கிக் கொள்ள ”லட்சுமணா லட்சுமணா” என்று மனசுக்குள் சொல்லியபடி ஆத்தோரமாக பால்காரம்மா வீட்டுக்கு பயணித்தாள்….
    ”வானத்திலிருந்து மழை பெய்கிறதா இல்லை ஆத்துத் தண்ணீர் வானத்துக்குச் செல்கிறதா” என்று குழம்பும் அளவுக்கு வானத்துக்கும் ,பூமிக்கும் தண்ணீரால்
    தறி போட்டது போல மழை பத்தினி சொல்லாமலேயே பெய்யெனப் பெய்தது….துணைக்கு ”ராமனோ,லட்சுமணனோ” வில்லை ஏந்தி வரவில்லை….சிறுமிக்கு
    பயம் பிடித்துக் கொண்டது….

    ஆத்தோரமாக இருந்த அய்யனார் மண்டபத்திற்குள் ஒதுங்கினாள்….அந்த மண்டபத்தில் ஒருவர் படுக்கலாம் ,இருவர் அமரலாம் ,மூவர் நிற்கலாம்….வெளியே
    பேய் இருட்டு ,பொய்கை மழை ,பூதக் காத்து….அச்சத்திலும் , அசதியிலும் சிறுமி மண்டபத்தில் படுக்கிறாள்….அப்போது ஆத்துப் படிதுறையிலிருந்து ஒரு
    மாமா தலையில் துணி மூட்டையோடு மண்டபத்தை நோக்கி வருகிறார்….அவர் உள்ளே நுழைந்தவுடன் ”உஸ்” என்ற சத்தம் ஓய்கிறது….பெருமூச்சு விடுகிறார்
    பெரியவர் என்று சிறுமி நினைத்த வண்ணம், எழுந்து அமர்ந்து அந்த மாமாவுக்கு உட்கார இடம் அளிக்கிறாள்….பெரியவர் தலையிலிருந்த துணி மூட்டையை
    இறக்கி வைக்க இடம் இல்லாததால் சிறுமி எழுந்து நிற்கிறாள்….இப்போது மாமா, சிறுமி இருவரும் நிற்க காலி இடத்தில் துணி மூட்டை….

    ”அந்த மூட்டைல என்ன மாமா ?”….சிறுமிதான் மெளனத்தைக் கலைத்தாள்….!
    ” நான் செஞ்ச புண்ணியத்தை மூட்டையா கட்டிண்டு எடுத்துண்டு போறேன்” மாமா முகத்தில் கலவரம் நிரந்தர நிலவரமாகப் படர்ந்து இருந்தது….
    ” பாவ மூட்டை கேள்விபட்டுருக்கேன்….அது என்ன புண்ணிய மூட்டை ?” சிறுமி விடவில்லை….
    கையை நீட்டி மழை பெய்கிறதா என்று பார்ப்பது போல பெரியவர் சிறுமியின் கேள்வியைத் தவிர்த்தார்….
    சிறுமி விடுவதாக இல்லை ”உங்க பேர் என்ன மாமா ?”
    ”பேர்ல என்னம்மா இருக்கு….பேர் சொல்ல பிள்ளை இருந்தா போறாதா….?”பெரியவர் முகத்தில் பெருமிதம் கொப்பளித்தது…அது சரி உம் பேர் என்ன….?”
    பெரியவர் பேச்சை மாற்றினார்….!
    ”எங்காத்தாக்கு ஒரு அண்ணாத்த இருக்கார்….எனக்கு அவர் மாமா முற….அவுரு பேரையே உங்களுக்கு வக்கறேன்….சர்தானா….”
    ”உன் சவுகரியம் எப்படியோ அப்படியே கூப்பிடுமா….”பெரியவர் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள்….” வாசு மாமா” என்று சிறுமி கூப்பிட
    ”என்ன சொன்ன ?” என்று திகைத்தார்….”என் மாமன் பேரு வாசு மாமா….உங்களுக்கும் என்ன மாதிரி அவரு பேர கேட்டாலே பயமா….?”
    இருவரும் சம்பாஷணையில் திருப்தி இல்லாததால் சிறிது நேரம் மெளனம் காத்தார்கள்….” எம் பேர் ராமி” என்றாள் சிறுமி….
    ” ராமியா….! கேள்விபடாத பேரா இருக்கே….!”
    ”ராமன் சம்சாரம் ராமிதானே….நான் ராமனைத்தான் கட்டிக்கப் போறேன்….ஏன்னு கேளுங்க….”
    வெளி மழையை விட இவள் கேள்வி மழையைத் தாங்க முடியாத பெரியவர் ” ஏன்?” என்று ஏனோ கேட்டு வைத்தார்….!
    ” எனக்கு நீலம் புடிக்கும்….ராமன் நீலமா இருப்பான்” பெரியவர் மூட்டையைப் பார்த்து விட்டு சிறுமியை மோகினிப் பிசாசைப் பார்ப்பது போல பார்த்தார்….
    ”அப்ப நான் கிளம்பறேன் தாயி” என்று பயபக்தியோடு அவளிடம் சொல்லிவிட்டு மூட்டையை எடுக்கக் குனிந்தார்….
    ”துணைக்கு வருவீங்கன்னு பாத்தா இப்படி தனியா வுட்டுட்டு போறீங்களே….பால்காரம்மா வூடு வர கூட வாங்க வாசு மாமா” என்றதும், பெரியவர்
    ஆச்சரியமா , அதிர்ச்சியா தெரியாத பாவத்தைக் காட்டியபடி ”என்ன….நீயும் பால்காரி வீட்டுக்குத்தான் போயிண்டுருக்கியா….?” என்று அவசரமாகக் கேட்டார்….
    ”ஆமாம்….நீங்க….?”
    ”நானும் அங்கதான்….!”
    ”உங்கம்மாவும் தாம்புக் கயிறு வாங்கிக்கிட்டு வர சொன்னாங்களா….?”
    ” நான் அங்க போறது தாம்புக்காக இல்ல தாயி….நோம்புக்காக….!”பெரியவர் பழையபடி தலையில் மூட்டையை சுமந்தபடி செல்ல ,அவர் தலைக்கு மேல்
    ”உஸ் உஸ்” என்ற சத்தம் வருவதைக் கேட்டபடி சிறுமி அவரைத் தொடர்ந்தாள்….” மாமா நீங்களும் எங்க நைனா மாதிரி மயிலிறகால காது குடைவீங்களா….?”
    ” ஏன் கேக்கற….?” என்று அவர் வெலவெலக்க, சிறுமி ”இந்தாங்க உங்க தலைல இருக்குற புண்ணிய மூட்டைலேந்து விழுந்துடிச்சு….” என்று ஒரு மயிலிறகை
    அவரிடம் தந்தாள்….மூட்டை மட்டும் நனையாமல், இருவரும் சொட்ட சொட்ட நனைந்தபடி பால்காரம்மா வீடு நோக்கி செல்ல ஆரம்பித்தனர்….!

    பால்கார அம்மா வசதியானவள்….வீடு தோப்பும் துரவுமாக பிரும்மாண்டமாக இருந்தது….சுற்றிலும் கோட்டை போல மதில் சுவர்….வந்த திருடன்
    வேறு வழியில்லாமல் மனம் திருந்தி நல்லவனாகும் அளவுக்கு வாசல் கதவு வீட்டையே மறைத்தது…..நாதாங்கியில் தொங்கும் பூட்டைத் திறந்து
    விட்டாலும் அதைக் கழட்டுவதற்குள் பொழுது விடிந்து விடும்….”எப்படி உள்ளே நுழைவது ” என்ற கவலையில் கதவையும், பூட்டையும் கவனித்த
    வாசு மாமாவின் முகம் மலர்ந்தது….கதவில் சிறுவர்,சிறுமியர்கள் மட்டும் போய் வருவதற்கு தோதாக ஒரு பொந்து இருந்தது….ஆஜானுபாகுவான
    வாசு மாமா அந்த பொந்தின் வழியாக மானசீகமாக நுழைய முயன்று பாதியில் மாட்டிக் கொண்டு பிதுங்கினார்….

    ”மாமா என்ன இது….உங்க கைல தாம்புக் கவுறு கட்டியிருக்கு….?” சிறுமி சொன்னதும்தான் பெரியவரே தன் பிழையை உணர்ந்தார்….
    அவசரமாகக் கிளம்பியதில் கை,கால்களில் கட்டப்பட்ட தாம்புக் கயிறுகளை அவிழ்க்க மறந்ததை எண்ணி அசடு வழிந்தார்….
    ”பால்காரம்மா தூங்கியிருப்பாங்க….அவங்கள எளுப்பி இந்நேரத்துல கவுறு கேட்டா என்ன கொன்னே போட்ருவாங்க….தாம்பு கவுறு
    இல்லாம போனா எங்காத்தா என்ன அடிச்சே கொன்னுருவா….தயிரு கடைய இந்த அளவு கவுறு போதும்….” என்றவள், அவர் சம்மதத்துக்கு
    காத்திராமல் அவர் கையில் அரைகுறையாக கட்டித் தொங்கிக் கொண்டிருந்த தாம்புக் கயிறை உருவிக் கொண்டாள்….”அப்பால நான்
    வரேன்….பொழுது விடியறதுக்குள்ளே ஊரு போய் சேரணும்” என்று கிளம்பியவளை பெரியவர் பிடித்து நிறுத்தி….” தோ பார்….உனக்கு நான்
    தாம்புக் கயிறு தந்தேன் இல்லையா….பதிலுக்கு நீ எனக்கு ஒரு உபகாரம் செய்யணும்” என்றார்….”என்ன?” என்பது போல பார்த்த சிறுமியடம்
    ”உள்ளே பால்காரம்மா தூங்கிகிடுருப்பாங்கா….அவங்க பக்கத்துல ஒரு பாப்பா தூங்கிகிட்டுருக்கும்” என்றவர் நாக்கைக் கடித்தபடி” அது தூங்கற
    குழந்தையா….!” என்று தனக்குள் முனகிக் கொண்டார்….தொடர்ந்து ”நீ என்ன பண்ணனும்….நான் இந்த மூட்டைல ஒரு பொருள் வச்சிருக்கேன்” என்றவர்
    மறுபடி நாக்கைக் கடித்தபடி….”வெறும் பொருளா அது” என்று முணுமுணுத்துவிட்டு….”நீ அந்த கதுவுல இருக்கற பொந்து வழியா வீட்டுக்குள்ள நுழைஞ்சு
    நான் கொடுக்கற இந்த பொருளை அங்க வச்சிட்டு, அங்க பால்காரம்மா பக்கத்துல தூங்கற பாப்பாவை நைஸா எடுத்திட்டு வந்து என் கைல
    கொடுக்கணும்….புரிஞ்சுதா….”புரியாவிட்டாலும் தாம்பு கயிறு கிடைத்த சந்தோஷத்தில் சிறுமி பலமாக தலையாட்டினாள்….

    பெரியவர் மூட்டையைப் பிரிக்க, உள்ளே எட்டி அந்தப் பொருளைப் பார்த்த சிறுமியின் கண்கள் ஆச்சரியத்தில் ஆகாசமாக விரிந்தது….ஆனந்தத்தில்
    ஆழ்கடலாக கொந்தளித்தது….” இப்ப புரிஞ்சு போச்சு….நீங்க தசரத மகாராசாதானே….?” என்றவள் பெரியவரைப் பேச விடாமல்,மூட்டைக்குள் மறுபடி
    பார்த்து ”அப்பா என்ன ஒரு நீலம்….கைகேசிக்கு பயந்துகினு நீல ராமனை காட்டுல வுட வந்தீங்க….மனசு கேக்கல….பத்திரமா வூட்டுல வுட்டுட்டு அதுக்கு
    பதிலா பால்காரம்மா பாப்பாவை….” என்று ஆரம்பித்தவள் நிறுத்தி….”ஆமாம் பால்காரம்மா பாப்பா உங்களுக்கு எதுக்கு….?”…..இனியும் இவளை பேசவிட்டால்
    ஊரையே எழுப்பிவிடுவாள் என்று பயந்த பெரியவர்….” மொதல்ல நான் சொன்னத செய்….அப்பத்தான் தாம்புக் கயிறு ”என்று அவளை அவசரப்படுத்தினார்….

    ”கஷ்க் முஷ்க் ” என்று கன்னங்கரேல் உருண்டையாய்(சிறுமி காதில் விழுந்தால் கோபிப்பாள்….நீல உருண்டையாய்) இருந்த அந்தப் பொருள் விளங்கா
    உருண்டையை கைகளில் பிரேமையாக ஏந்தியபடி பால்காரம்மா வூட்டுக் கதவை நோக்கி சென்றவள், திடீரென்று திரும்பி வந்து பெரியவரிடம்….”நீங்க எனக்கு ஒரு சத்தியம் செஞ்சு தரணும்….” என்ற அந்த சிறுமி….” இந்த நீல பாப்பா பெரியவன் ஆனப்பாடு இவன எனக்கு நீங்க கட்டி வக்கணும்….என்ன பதில்
    சொல்லாம முளிக்கறீங்க….” சூழ்நிலையின் தீராத விளையாட்டை எண்ணி தனக்குள் வேதாந்தமாக சிரித்துக் கொண்ட அந்தப் பெரியவர்….
    ” தாயி….உனக்கு என்ன வயசாகுது…?” ”மார்கழி பொறந்தா ஆறு….ஏன்….?” என்றவளை பரிவுடன் பார்த்து….”இது இப்பத்தான் பொறந்த பாப்பா….
    இவன் என்னதான் பெரிவனா ஆனாலும் உன்ன விட ஆறு வயசு சின்னவனாச்சே….எப்படி இவன கல்யாணம் பண்ணிப்பே….”என்று கூறி முடிப்பதற்குள்
    அந்த சிறுமி பாய்ந்து….” கவலையே படாதீங்க, இவன் பெரியவனா ஆறவரைக்கும் நான் ஆறுக்கு மேல என் வயசு ஆவாம பாத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் கூட காத்திராமல் அந்த சிறுமி பால்காரம்மா வீட்டுக் கதவை நோக்கி நகர்ந்தாள்….

    தாயிடம் தாம்புக் கயிறை தந்து விட்டு, சிறுமி நடந்ததையெல்லாம் மூச்சு வாங்க சொல்லி முடித்து….” ஆத்தா….நீல பையன எனக்கு கட்டி வக்கறதா
    அவனோட நைனா எனக்கு வாக்கு கொடுத்துட்டார் ”…..மகளை ஏற இறங்கப் பார்த்த தாயார்….” அய்யோ பெருமாளே….ஏன் எனக்கு இப்படி ஒரு
    பைத்தியத்தை மவளா கொடுத்தே….” என்று ஒரு பாடு புலம்பிவிட்டு, அதே தாம்புக் கயிறால் நீலப் பிரேமையில் கட்டுண்ட மகளை தூணில் கட்டிப்
    போட்டு….” இனிமே இப்படீலாம் பேசுவியா….பேசுவியா….” என்று அழுதபடி கேட்டுக்கொண்டே அடிக்க ஆரம்பித்தாள்….அப்போது கட்டிலிலிருந்து
    தாவிக் குதித்து வந்து மனைவியைத் தடுத்த சிறுமியின் நைனா” உனக்கு என்ன புத்தி கித்தி கெட்டுப் போச்சா….எப்பப்பாரு ஏன் இப்படி போட்டு
    அடிச்சே கொல்ற….ராதைய….”என்றார்…..
    ——————————————————————————————————————————————————-

    Share
  • முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 11

    –சி. ஜெயபாரதன்.

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 11

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    ​______________

    Mukkonakkilikal - 41

    Mukkonakkilikal - 42

    Mukkonakkilikal - 43

    Mukkonakkilikal - 44

    தொடரும்…

    Share
  • திருமால் திருப்புகழ் ( 134)

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————–
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    எங்கே இருக்கின்றீர், என்குரு நாதரே,
    இங்கே இருமை இருளிலுள்ளேன், -சங்கே,
    முழங்கு செவிடனென், மூளையில் எட்ட,
    ஒழுங்கு முறையாய் உரத்து….(320)

    சிரிரங்கா, வெண்ணை ,உறிரங்கா, வண்ணக்,
    கரிரங்கா, மாகிரி ரங்கா, -சரிரங்கா,
    இப்படி ஏத்தினால்தான், இல்லம் புகுவாயா,
    அப்படி என்ன அழும்பு’’….(321)

    தந்தம் ஒடித்தனன், தாய்மாமன் யானைக்கு,
    வந்தமா மல்லரை வீழ்த்தினன், -அந்த,
    முகுந்தனோ(டு) ஒன்ற, உகந்தவழி ஒன்று,
    அகந்தை அழித்தலாம் அது….(322)

    கரஞ்சூழ் வாளும், கதிராழி சங்கும்,
    அறஞ்சூழக் கொண்டுலகை ஆளும், -பரஞ்சோதி,
    நாரா யணனே, நலம்செய் மனத்தனே,
    சீராயர் சேயனே சத்து….(323)

    மைகொண்ட கண்ணாளை, மார்கொண்ட கண்ணனை,
    பைகொண்ட பாம்பில் படுத்தவனை, -வைகுண்ட,
    ஏகா தசியில், எழுப்புவோர்(கு) எம்பாவாய்,
    ஆக பரமபதம் ஆம்….(324)

    கையே தலையணையாய், பைந்நாகம் பாய்விரிப்பாய்,
    செய்யும் தொழில்யோக, சிந்தையாய், -செய்ய,
    குமுதத்தாள் தாங்க, குமுதத்தாள் நீட்டி,
    அமுதத்தன் தூங்கும் அழகு….(325)

    ——————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/

     

    Share
  • செவ்வாய்க் கோள் செல்லும் நாசாவின் எதிர்கால மனிதப் பயண தட்டுத் தளவூர்தி மெதுவாய் இறங்குவது நிரூபிக்கப் பட்டது.

    NASA Flying Saucer -1

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    [June 28, 2014]

     

    http://www.space.com/26390-nasa-s-flying-saucer-test-launch-and-powered-flight-video.html

    http://www.space.com/26143-flying-saucer-inflatable-mars-aerobrake-how-to-test-it-video.html

     

     

     

    செவ்வாய்க் கோள் செம்மண்ணில்
    மெதுவாய் இறங்கும் நாசா
    நூதனப் பறக்கும் தட்டு
    மாதிரிச் சோதனை செய்து முடித்தது !
    சாதனை புரிந்தது முதன்முதல்
    சோதனைத் தள இறக்கி !
    ஆறு சக்கர  ஊர்தி  முன்பு
    ஐயப் பாடுடன் இறங்கியது
    அதிர்ச்சி  உண்டாக்கி !
    இறங்காமல் போன ஊர்திகள் பல.
    இதுவரை ஏவப் படாத
    புதுமுறைப் பயணத் தட்டு இது !
    அகிலக் கதிர்ப் பாய்ச்சல்
    பரிதிக் கதிர்த் தாக்கல்
    குறைத்து  விண்வெளி தீரர்
    செவ்வாய்த் தளத்தில்
    மெதுவாய்
    இறங்கும் பறக்கும் மிதப்பிச்
    சோதனை முடிந்தது
    சிறப்பாக !
    இந்திய விண்ணூர்தி  இவ்வாண்டு
    செந்நிறக் கோள்  அண்டிச்
    சுற்றி வரப் போகுது
    வெற்றி கரமாக !

     

    ++++++++

     

    Soft Landing testing

     

    அண்டவெளிப் பயணத்தில் மிகத் தணிவுச் சுற்றுவீதியில் வட்டமிடும்  உலக நாட்டு விண்வெளி நிலையத்தைத் [International Space Station] தாண்டி மனிதர் நீண்ட காலம் பயணம் செய்யப்  பொறி நுணுக்கம் முற்போக்கடைய வேண்டும்.

    மைக்கேல் காஸாரிக் [Head Space Technology, NASA Headquarters]

    செவ்வாய்க் கோள் பயணத்துக்கு முன்பே பறக்கும் தட்டு இறக்கு முறைகளை குறைந்த நிதிச் செலவில் சோதித்து அது இயங்கப் போகிறதா வென்று உறுதியாக்கப் பட வேண்டும்.  நேற்று முடிந்த [ஜூன் 28,2014] சோதனை வெற்றியில் புளாதாங்கிதம் அடைந்தோம்.  பறக்கும் தட்டுச் [LDSD [Low Density Supersonic Decelerator]  சோதனை நாங்கள் முன்பு போட்டத் திட்டக் குறிக்கோளை நிறைவேற்றியது.  நாங்கள் சேமித்த தகவல் எதிர்காலச் செவ்வாய்க் கோள் மனிதப் பயணங்களுக்குப் பயன்படும்.

    மார்க் ஆட்லர்  [NASA Jet Propulsion Laboratory]

     

    Flying Disc Test Profile

     

    சமீபத்தில் நாசா ஏவிய சோதனைப் பறக்கும் தட்டின் சாதனை

    2014 ஜுன் 28 ஆம் தேதி ஹவாயி கௌவாய்த் தீவில், நாசா விஞ்ஞானிகள்,  ஹீலிய பலூனி லிருந்து தூக்கிச் செல்லப் பட்டு ஏவிய பறக்கும் தட்டு ஒலிமிஞ்சிய வேகத்தில் [Supersonic Mach : 4] உந்திச் சென்று 160,000 அடி உயரத்திலிருந்து 110 அடி விட்ட முள்ள [33 மீடர்] பாராசூட் மூலம், மெதுவாய் இறங்கி ஒருபெரும் விண்வெளிச் சாதனை புரிந்துள்ளது.   பறக்கும் தட்டு  20  அடி விட்டமுள்ள [6 மீடர்] காற்று உப்பிய ஓர் வட்ட வளையம் [Inflatable Ring].  ஹீலிய பலூன் வட்ட வளையத்தை முதலில் 120,000 அடி உயரத்தில் தூக்கி பிறகு தனியே விட்டது.  அப்போது   வளையத்தில் இருந்த நான்கு சிறு உந்து கணைகள் [ராக்கெட்டுகள்]  சுடப்பட்டு வளையத்தை ஒலிமிஞ்சிய வேகத்தில் தூக்கி 160,000 அடி உயரத்தில் [Stratosphere] கொண்டுபோய் மிதக்க விட்டது.  அப்போது ஒரு பாராசூட் சுயமாய்த் திறந்து காற்று உப்பிய வளையத்தை மெதுவாக இறக்கி, முடிவில் அது பசிபிக் கடலில் விழுந்து  கைப்பற்றப் பட்டது.

    அதாவது முதன்முதல் மனிதர் செல்லும் செவ்வாய்க் கோள் தளவூர்தி  இவ்விதம் மெதுவாக இறங்க இந்தப் பறக்கும் தட்டுச் சோதனை வெற்றிகரமாகச் செய்யப் பட்டது.  இந்தச் சோதனைத் திட்டத்தின் நிதி மதிப்பீடு 150 மில்லியன் டாலர் [2014 நாணய மதிப்பீடு].  சோதனையில், பாராசூட் திட்டமிட்டபடி  முழுவதும் விரியாமல் பகுதி அளவே திறந்தது.   ஒரு புதுவித நூதன உப்பிய நிறுத்த ஏற்பாடும் [Inflatable Braking System] சரியான நேரத்தில்  இயங்காமல் போனது.  முக்கிய சோதனை மட்டும் நிறைவேறியது.  மேலும் இந்தப் பறக்கும் தட்டு சோதனைகள் மீண்டும் செய்யப் படும்.  இதுவரை செய்த தளவூர்தி ஏற்பாடுகள் இத்தனை மெதுவாக செவ்வாய்க் கோளில் இறங்கியதில்லை.   அத்துடன் பறக்கும் தட்டு  இறக்கும் முறை தயாரிப்பதில் நிதிச் செலவும் சிக்கனம்.

     

     

    தளவூர்தி இறங்கும் கேல் ஆழ்பள்ளத்தின் அடுக்குத் தளப் பாறைகள் (Gale Crater) சூரிய மண்டலத்திலே மிக அடர்த்தியாய்த் திரண்ட படிமானப் பாறைகள்  (Sediment Rocks).   அந்த பாறை அடுக்குகள் 4 பில்லியன் ஆண்டு களுக்கு முன் தோன்றிய பழைய மண் மாதிரிகளைக் கொண்டவையஆய் இருக்கும்.     எப்போது, எத்தனை காலம், செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடும் என்ற வரலாற்றைக் கூறலாம்.

    ஜாய் கிரிஸ்ப் (Mars Science Lab Dy Project Scientist NASA)

    (2012  ஆகஸ்டு முதல் வாரத்தில் )  செவ்வாய்த் தளவுளவி இறங்கப்ப போகும் மையக் கேல் ஆழ்பள்ளப் பீடம்  (Mound at the center of Gale Crater) MFF  உருவாக்கக் காட்சியை   (Medusae Fossae Formation  Exposure) ஒத்தது.   (MFF on Mars is an intensely eroded deposit ..)  அமெரிக்க கிராண்ட் கெனியன் (Grand Canyon) பீடத்தொடர் போன்றவை.   முதலில் தளவாகன உளவி அவை எப்படி தோன்றின என்று ஆராய்வதற்கு விபரங்கள் தரும்.   இதுவரை எந்த விண்ணுள வியும்  MFF உதிரிப் பொருள்களை ஆராய வில்லை.  அவை செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆராய்ந்து செவ்வாய்க் கோளின் தோற்றத்தை விளக்கும்.

    ஜேம்ஸ் ஸிம்பல்மன் (பூதளவியல் நிபுணர்  National Air & Space Museum)

     

     

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BudlaGh1A0o   [Mars Science Laboratory (Curiosity Rover) Mission Animation]

    “உச்சத் தரமான தொலை அளப்பு மூலம் (High Quality Telemetry) தளவூர்தி (செவ்வாய் ஈர்ப்பில்) புகுவது, இறங்குவது, தடம் வைப்பது ஆகிய நிகழ்ச்சிகளை தெளிவாக அறிவது அவசியமானது.  செவ்வாய்க் கோள் விண்வெளித் திட்டத்தில் அதுவே மிக்க சவாலான தீரச்செயல் நுணுக்கம் !  நாங்கள் தேர்ந்தெடுத் திருக்கும் இறங்கு பாதை பிரச்சனைகள் குறைந்த முறையில் தகவலை அனுப்பும் பெரும் தகுதி யுள்ளது.”

    ஃபியூக் லி (Mission Mars Exploration Program at JPL)

    “செவ்வாய்த் தளத்தைத் தொடும் தருணத்துக்கு முன்னும், பின்னும் நேரும் முக்கிய நிகழ்ச்சிகளைத் தகவல் மூலம் அனுப்பும் பல்வேறு தகுதிப்பாடுகளை ஒப்பு நோக்கியே தேர்வு முறைகள் தீர்மானிக்கப் பட்டன.  குறுகிய பாதையில் இறக்கினால் இரண்டு விண்வெளிக் கப்பல்கள் (NASA’s Mars Odyssey & Mars Reconnaissance Orbiter) தொடர்ந்து தளவூர்தியைக் கண்காணிக்க வேண்டும். மாறாக நெடிய பாதையில் இறக்கும் போது தகவல் அனுப்புப் பூமிக்கு நேரடித் தொடர்பு கிடைக்கிறது.”

    மைக்கேல் வாட்கின்ஸ் (Mission Manager, NASA Jet Propulsion Lab).

     

     

     

    “நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

    ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]

    “மனிதன் இதுவரை நுழையாத இடத்துக்கு நாமினித் தைரியமாகப் போக வேண்டும். வால்மீன்கள் ஈர்ப்பு வீச்சைப் பயன்படுத்துவது, வக்கிரக் கோள்களை நெருங்குவது, செவ்வாயின் துணைக்கோளை ஆராய்வது போன்றவை அந்த முயற்சிகள்.  அங்கே ஓரினத்துவம் உள்ள பாறை உள்ளது.  உருளைக் கிழங்கு போல் தாறுமாறாக உள்ள ஃபோபாஸ் துணைக்கோள் செவ்வாய்க் கோளை 7 மணி நேரத்துக்கு ஒருமுறைச் சுற்றுகிறது.  மக்கள் ஃபோபாஸைக் காணும் போது ‘யார் அதை அங்கு வைத்தவர்’ என்று கேட்டால் பிரபஞ்சம் அதை அங்கே விட்டு வைத்தது என்று சொல்லலாம், விரும்பினால் கடவுள் அமைத்து விட்டார் என்றும் கூறலாம்.”

    அமெரிக்க விண்வெளி விமானி பஸ் ஆல்டிரின் (Buzz Aldrin)

    “விஞ்ஞானத் துறையகம் அடுத்த ஆண்டு  (2013) ஆரம்பத் திட்டத்துக்குப் பச்சை விளக்கு  காட்டியதும், எங்கள் செவ்வாய்க் கோள் குறிப்பணியைத் துவக்கி வைப்போம்.  சந்திரனை ஆராய்ந்த பிறகு இப்போது அடுத்து எங்கள் குறி நோக்கம் செவ்வாய்க் கோள் மீது பாய்கிறது.”

    தேவிபிரசாத் கார்னிக்  (Director of Indian Space Research Organization)

     

     

     

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன் தரும் ஒத்தமைப்பு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்புத் தங்குதளம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை [ஜனவரி 26, 2008] (International Conference on Aerospace Science & Technologies)

    “1970 இல் நாசா அனுப்பிய வைக்கிங் விண்ணூர்தி ஏன் செவ்வாய்த் தளத்தில் ஆர்கானிக் மூலக்கூறுகளைக் காணவில்லை என்ற வினா இப்போது எழுந்துள்ளது.  ஆர்கானிக் மூலக்கூறுகளைச் சிதைக்கும் ஓர் இயக்கப்பாடு செவ்வாய்க் கோளில் உள்ளது என்று நாங்கள் எண்ணுகிறோம்.  ஆனால் அந்த இயக்கப்பாடு துருவப் பகுதியில் இருக்காது என்பது எங்கள் யூகம்.  ஏனெனில் நீரும் பனிக்கட்டியும் ஆர்கானி மூலக்கூறுகளைச் சிதைக்கும் “பிரிப்பான்களைத்” (Oxidants) துண்டித்து விடும்.  செவ்வாய்த் தள மண்ணில் உயிர் ஜந்துகள் இருந்தன என்று அறிவது கடினம்.  ஆனால் அந்த மண்ணில் உயிரினம் வாழ முடியுமா என்று விஞ்ஞானிகள் அறியலாம்.”

    வில்லியம் பாயின்டன், [William Boynton] ஃபீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, பேராசிரியர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

     

     

    LDSD TEST PROFILE -1 

     

    நாசா அனுப்பிய செவ்வாய்த் தளவூர்தி 2012 ஆகஸ்டு 6 இல் வெற்றிகரமாய் இறங்கியது !

    2.5 பில்லியன் டாலர் நிதிச் செலவில் (2012 நாணய மதிப்பு) நாசா 2011 நவம்பரில் துவங்கிய செவ்வாய்க் கோள் பயணத்தில் நவீனத் தளவூர்தி ஒன்றைப் புதிய முறையில் இறக்கி விண்வெளிச் சாதனை ஒன்றைப் புரிந்தது.  2009 ஆம் ஆண்டில் முடிவு செய்யப் பட்ட அத்திட்டம் விண்வெளி மீள்கப்பல் (Space Shuttle) பயண நிறுத்த நீடிப்பாலும், தளவூர்திப் பயிற்சிக் காலம் போதான்மை யாலும் தாமதமாகி 2011 ஆண்டு நவம்பரில்தான் நிறைவேற்றியது.  நாசா இதற்கு முன்பு வெற்றிகரமாகச் செவ்வாய்த் தளத்தில் இறக்கிய மூன்று தளவுளவி களின் (Spirit, Opportunity & Phoenix Lander) அனுபவத்தில் இப்போது அவற்றை விட முற்போக்கான “செவ்வாய்க் கோள் விஞ்ஞான ஆய்வு ஊர்தி” (Mars Science Laboratory, MSL)  எனப்படும் “ஆர்வ நோக்கித்” தளவூர்தி (Curiosity Rover) ஒன்றை அனுப்பி வெற்றி பெற்றுள்ளது.  நூதனத்  தளவூர்தி செவ்வாய்க் களத்தில் இரண்டாண்டு காலம் ஆய்வுகள் நடத்தப் போகிறது.  செந்நிறக் கோள்  விண்ணூர்தி 2011 ஆண்டு நவம்பரில் பிளாரிடா கனாவரல் ஏவு முனையிலிருந்து (Cape Canaveral, Florida) ஏவப்பட்டு 9 மாதங்கள் 350 மில்லியன் மைல் பயணம் செய்து,  செவ்வாய்க் கோள் ஈர்ப்பு விசையில் இறங்கி தளவூர்தியை பாராசூட் மூலம் முதலில் இறக்கி, பிறகு எதிர்விசை ராக்கெட்டுகள் கட்டுப்படுத்தி நாண்கள் கட்டிய தூக்கியில் கீழிறக்கித் தளத்தில் மெதுவாக, பாதுகாப்பாக வைத்துள்ளது.    செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் விண்ணூர்தி வேகத்தைத் தணித்து செவ்வாய்க் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் இறக்கிச் சுற்ற வைப்பது, பூமியிலிருந்து சமிக்கை அனுப்பிக் கட்டுப் படுத்தும் மிகவும் சவாலான பொறியியல் நுணுக்க வேலை.   இந்த முயற்சிகளில் வெற்றி / தோல்வி 50% / 50% தான்.    இதுவரை செவ்வாய்க் கோளுக்குப் பயணம் செய்த நாசா, ஈசா, ரஷ்யா ஆகிய நாடுகளின் விண்வெளிப் பயணங்களில் வெற்றி அடைந்தவை  40% எண்ணிக்கைதான்.

    jay

    இந்த விண்வெளி சுய இயக்க யந்திர வேலைகள் யாவும் அசுர வேகத்தில் இறுதி ஏழரை நிமிடங்களில் திட்டமிட்டது போல் அடுத்தடுத்து தானாக நிகழ்ந்து நாசா ஒரு பெரும் விண்வெளி நுணுக்க முறையை முதன்முதல் செய்து காட்டி யுள்ளது.

    தளவூர்தி சுமந்து சென்ற நாசா விண்சிமிழ் ஏவப் பட்ட பிறகு சுமார் 9 மாதங்கள் 350 மில்லியன் மைல் தூரப் பயணம் செய்துள்ளது.   முதன்முதல்  தளவூர்திச் சிமிழ் விடுபட்டு விழும் போது மணிக்கு 8000 மைல் வேகத்தில் (விநாடிக்கு 3600 மீடர்) ஆகஸ்டு 4 ஆம் தேதி செவ்வாயின் மெலிந்த வாயு மண்டல உராய்வில் எரிந்து போகாமல், வெப்பக் கவசப் (Heat Shield) பாதுகாப்போடு இறங்கியது.  இறுதி ஏழு நிமிடங்கள்  செவ்வாய் ஈர்ப்பு விசையால், அந்த வேகம் மணிக்கு 13200 மைல் (விநாடிக்கு  5900 மீடர்) உச்சத்தில் அசுர வேகமானது !    வெப்ப எரிப்பு மட்டம் தாண்டிய பிறகு பாராசூட்  ஒன்று குடை விரித்துச் சிமிழைத் தாங்கி சற்று மெதுவாய் இறக்கியது.   அதற்குப் பிறகு எதிரடி ராக்கெட்டுகள் (Retro-Rockets) சுயமாய் இயங்கிச் சிமிழின் வேகத்தைக் குறைத்தன.  தளவூர்தி பின்பு ஒரு நூதனத்  தூக்கி மூலம் மெதுவாக இறக்கப்பட்டுச் செவ்வாய்த் தளத்தை ஊர்தியின் ஆறு சக்கரங்கள் ஒன்றாய்த் தொட்டன.  பிறகு அது அனுப்பும் தகவல், முன்பு அனுப்பி செவ்வாய்க் கோளைச் சுற்றிக் கொண்டிருக்கும் நாசாவின் மார்ஸ் ஆடிஸ்ஸி, அல்லது அடுத்த ரிக்கானைசென்ஸ் ஆர்பிட்டர் (NASA’s Mars Odyssey and / or Reconnaissance Orbiter) விண்ணுளவிகள் மூலம்  பூமிக்கு  வந்து சேரும்.   ஆர்வ நோக்கித் தளவூர்தி பூமிக்கு அனுப்பிய முதல் மீன்விழிப் படங்கள் கருப்பு நிறத்தில் சிறிதாய் இருந்தன.  தளவூர்தியில் உள்ள பன்னிறப் படக் காமிராக்கள் இனிமேல்தான் இயங்க ஆரம்பிக்கும்.

    2011 நவம்பரில் ஏவப்பட்ட செவ்வாய் விண்ணூர்தி 9 மாதங்கள் பயணம் செய்து 2012 ஆகஸ்டு  5 அல்லது 6 ஆம் தேதி செந்நிறக் கோளை நெருங்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது.  விண்சிமிழின் எடை 900 கி.கிராம் (1980 பவுண்டு). திட்டப் பணி செவ்வாயில் 686 பூமி நாட்கள் நீடிக்கும்.  தளவூர்தியின் முக்கிய ஆய்வு செவ்வாய்ச் சூழ்வெளியானது நுண்ணுயிர் ஜீவன்களை வளர்ப்பிக்கும் தகுதி உடையதா, அவற்றைப் பாதுகாக்கும் தன்மை உள்ளதா என்பதைக் காண்பதே.  அதாவது செவ்வாய்க் கோள் தோன்றிய காலத்தில் வாயுச் சூழ்வெளியும், நீர்மை வளங்களும் வசதி செய்து உயிரினங்கள் வசித்தனவா என்பதை நிரூபித்துக் காட்டுவதே ஆகும்.

    தளவூர்தி இறங்கத் திட்டமிடப் பட்டுள்ள  செவ்வாய்த் தளம் கேல் ஆழ்பள்ளம் (Gale Crater).  அது ஆராயப் போகும்  பரப்பின் நீளம் 16 மைல் நீளம், 12 மைல் அகலம்.   ஆறு சக்கர தளவூர்தி முதன்முதலில் ஒரு ராக்கெட் எஞ்சின் இயக்கும் பளுதூக்கி (Rocket-powered Sky Crane) மூலம் நூதன முறையில் இறக்கப் படும்.

    முக்கியமாக இந்தச் செவ்வாய்க் கோள் திட்டத்தில் நான்கு குறிப்பணிகள் நிறைவேற்றப்படும்.

    1. உயிரினம் எப்போதாவது செவ்வாய்த் தளத்தில் உதித்துள்ளதா ?

    2. செவ்வாய் பருவ நிலைப் (Climate) பண்பாடு எவ்விதம் இருந்து பிறகு மாறி யுள்ளது.

    3. செவ்வாய்க் கோளின் தளவியல் (Geology) பண்பாடுகளை உளவி அறிவது.

    4. செவ்வாய்க் கோள் தேடலில் அடுத்து வரப் போகும் மனிதப் பயணத்துக்குத் தயார் செய்வது.

    நாசா திட்டமிட்டிருக்கும் ஐந்து விண்வெளிக் குறிப்பணிகள்.

    2011 நவம்பரில் நாசா செவ்வாய் விஞ்ஞான ஆய்வகத்தை அட்லாஸ் V- 541 ராக்கெட்டில் பிளாரிடா கனாவரல் ஏவுகணை முனையில் அனுப்பத் திட்டமிட்டது.   இந்த முறை ராக்கெட்டில் செவ்வாயைச் சுற்றும் விண்கப்பல் எதுவும் தனியாக அமைக்கப் படாமல் வெறும் தளவூர்தியைத் தாங்கிச் செல்லும் விண்ணூர்தி மட்டும் ஏற்றிச் செல்லப்படுகிறது.  தளவூர்தி செவ்வாய்த் தளத்தில் இறங்குவதை, ஏற்கனவே பல மாதங்கள் சுற்றிவரும் செவ்வாய்க் கண்காணிப்பு விண்சுற்றி (NASA’s Mars Reconnaissance Orbiter) கவனித்துத் தளவுளவி சேமிக்கும் தகவலைப் பூமிக்கு அனுப்பும்.

     

     

    1.  செவ்வாய்த் தளவூர்தி எவ்வளவு பெரியது ?

    புதிய தளவூர்தி பழைய நான்கு விதமான தளவுளவிகளை (Spirit, Opportunity, Sojouner, Phoenix Lander) விடப் பெரியது, நீளமானது, கனமானது, நூதனமானது.  அதன் நீளம் : 10 அடி (3 மீடர்).  வாகனம் செவ்வாய்த் தளத்தில் எதிர்ப்படும் 2.5 அடி உயரக் கற்களைக் கடந்து செல்லும் திறன் உடையது.  தளத்தில் 600 அடி (200 மீடர்) நீளம் நகரும் ஆற்றல் உள்ளது.  விஞ்ஞான உளவுக் கருவிகள் எடை : 80 கி.கிராம் (176 பவுண்டு). வாகனத்தின் உச்ச வேகம் : மணிக்கு 90 மீடர் (300 அடி) தூரம்.  சராசரி சாதாரண வேகம் : மணிக்கு 30 மீடர் (100 அடி) தூரம்.  2 வருடத்தில் தளவூர்தி சுமார் 20 கி.மீடர் (12 மைல்) தூரம் பயணம் செய்யும் என்று சுமாராகக் கணிக்கப் படுகிறது.

    2.  நூதனத் தளவூர்தி எவ்விதம் செவ்வாயில் இறங்கத் திட்டமிடப் பட்டது ?

    இதுவரை செவ்வாய்க் கோளில் இறங்கிய தள வாகனங்கள் அனைத்தும் காற்றடைத்த பந்துக் கொத்தில் (Airbag Cushion Balls) அமைக்கப் பட்டு பாராசூட் இறக்கிக் கீழே விடுவிக்கப் பட்டன.  தரையில் விழுந்த பந்துக் கொத்து தவ்வித் தவ்வி இறுதியில் நின்று வாகனம் வெளிவந்தது.  புதிய நூதனத் தளவூர்தி ஹெலிகாப்டரில் சாதனம் இறக்கும் “வானிறக்கு முறையில்” (Sky Crane Lowering) செவ்வாய்த் தளத்தில் தடம் வைக்கும்.  இந்த முறைக்கு பாராசூட், “எதிரியக்கு ராக்கெட்” (Retro-Rocket), வானிறக்கு வடங்கள் தேவைப்படும்.  வாகனத்தை இறக்கும் விண்சிமிழை முதலில் பாராசூட் சுமந்து கீழிறக்குகிறது.  பிறகு விண்சிமிழின் எதிரியக்கு ராக்கெட்டுகள் இயங்கி செவ்வாய்க் கோள் ஈர்ப்பு விசைக்கு எதிராக மெதுவாக்கி அதன் இழுப்பைக் குறைக்கின்றன. அதன்பின் “வான் கீழிறக்கி” (Sky Crane) வடங்களில் கட்டப்பட்ட தளவூர்தி வாகனம் இறங்கித் தளத்தில் ஆறு சக்கரங்கள் படிய ஏதுவாகிறது.

     

    3. தளவூர்தியில் உள்ள சாதனக் கருவிகள்

    செவ்வாய்த் தளவூர்தியில் 10 கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன.  அவை மண், பாறை, சூழ்வெளியைச் சோதிக்கும் திறமுடையவை.  தொலைவிலிருந்து பாறைப் படிவை வாயுவாக்கும் வல்லமை உடைய ஒரு லேஸர் சாதனம் உள்ளது.  அடுத்தோர் கருவி ஆர்கானிக் கூட்டுகள் உள்ளனவா என்று சோதிக்கும்.  பிறகு தொலைவில் உள்ளவற்றைக் காணவும், படமெடுக்கவும் தேவையான புதுவிதக் காமிராக்கள்,  தளத்தைத் தோண்டும் கருவியும், அள்ளும் ஓர் அகப்பையும் உள்ளன.  எடுத்துப் பொடி செய்த பாறைகளின் உட்பொருளைப் ஆய்வு செய்திட இரசாயனக் கருவிகள்.  உயிரினத்தை வளர்ப்பிக்கும் ஆர்கானிக் கார்பன் கூட்டுகள் (Organic Carbon Compounds – Carbon, Hydrogen, Nitrogen, Oxygen, Sulfur & Phosphorus) இருப்பைக் காணும்,.  உயிரியல் பண்பாடுகளை (Biological Processes) நோக்கும் தளக் கலவைகளை  (Chemical, Isotopic, Minerological Composition of the Martian Surface) தனித்து அறிவது.  4 பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் செவ்வாய்ச் சூழ்வெளி வளர்ச்சி/தளர்ச்சிக் கால நீட்சி வரிசையைக் காண்பது.  செவ்வாய் நீரோட்டத்தின் தற்போதைய நிலை, பரவல் வரலாறு, நீர், கார்பன் டையாக்ஸைடு சுழற்சிப் போக்கை அறிவது. செவ்வாய்த் தளத்தில் தளக் கதிர்வீச்சு, காலாக்ஸி கதிர்வீச்சு, அகிலக் கதிர்வீச்சு, பரிதி புரோட்டான் நிகழ்ச்சிகள், இரண்டாம் பிறப்பு நியூட்ரான்கள் (Surface Radiation, Galactic Radiation, Cosmic Radiation, Solar Proton Events & Secondary Neutrons) ஆகிவற்றின் பண்பாடுகளை அறிவது.

     

    4. தளவூர்தி செவ்வாயில் செய்யப் போகும் சாதனைகள்

    செவ்வாய்த் தளத்தில் உலவும் வாகனத்தின் சக்கரங்கள் பெரியவை. ஒவ்வொரு சக்கரமும் தனித்தியங்க வெவ்வேறு மோட்டர் உள்ளது.  முன்னிரண்டு, பின்னிரண்டு சக்கரங்கள் திரும்ப தனித்தனித் “திருப்பி மோட்டார்” (Steering Motor) உள்ளது.  இம்மாதிரி திருப்பிகள் இருப்பதால் தளவூர்தி நின்ற இடத்திலே 360 டிகிரி கோணத்தில் திரும்ப முடியும்.

    5. தளவூர்தியை இயக்கும் மின்சக்தி ஆற்றல்

    பல்துறைப் பயண கதிரியக்க உலோகத்தின் மின்கலம் (Plutonium-238 Radioactive Decay) (Multi-Mission Radioisotope Thermo-electric Generator -MMRTG) ஆண்டு முழுவதும், இராப் பகலாய் 125 வாட்ஸ் (உச்ச அளவு) மின்னாற்றல் தர வல்லது.  செவ்வாய்க் கோளின் மத்திய ரேகையைத் தாண்டி வாகனம் சென்றாலும் தொடர்ந்து மின்சக்தி கருவிகளுக்குக் கிடைக்கும்.  பரிதியின் எரிசக்தி வாகனம் மத்திய ரேகைப் பகுதிகளில் நடமிடும் போது மின்னாற்றல் அளிக்கும்.  தளவூர்தியின் பரிதி மின்கலம் தினம் 2.5 kwh (Kilo Watt Hour)  வரை உற்பத்தி செய்யும்.  MMRTG கதிரியக்க மின்கலம் 2 ஆண்டுகள் வரைத் தேவைப் பட்டாலும் அதன் ஆயுள் 14 ஆண்டுகள் நீடிக்கும்.

     

     

    2013 செப்டம்பரில் சுற்ற  செந்நிறக் கோள் நோக்கி இந்தியா திட்டமிடும் விண்ணுளவி

     

    2009 செப்டம்பரில் சந்திரனை வெற்றிகரமாய்ச் சுற்றிய இந்தியா 2013 ஆண்டில்  சிரமமான செந்நிறக் கோளைச் சுற்றி வரப் பேராசைத் திட்ட மிட்டுள்ளது.   20/21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா, ரஷ்யா, ஈரோப்பிய நாடுகள், ஜப்பான், சைனா ஆகிய நாடுகள் செவ்வாய்க் கோளில் இறங்கி ஆராய்ந்தும்,இனிமேல்  ஆராய விரும்பியும் வருவது போல் இப்போது இந்தியாவும் இந்தப் பந்தயத்தில் இறங்கியுள்ளது.   அடுத்த ஆண்டு (2013) மனிதரற்ற ஓர் தனி விண்ணுளவியை 320 டன் எடை கொண்ட,  துருவத் துணைக்கோள் அனுப்பும் ராக்கெட்டில் (Indian Polar Satellite Launch Vehicle) (PSLV Rocket)  ஏவப்படும் திட்டம் தயாராகி அரசாங் கத்தின் அனுமதிக்கு இந்திய விண்வெளி ஆய்வகம் காத்திருக்கிறது.  பெயர் குறிப்பிட விரும்பாத வேறோர் அரசாங்க அதிகாரி செவ்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற சுமார்  90 மில்லியன் டாலர் (5 பில்லியன் ரூ) நிதித் தொகை மதிப்பீடு செய்துள்ளதாகக் கூறினார்.   சென்ற ஆண்டில் இந்தத் திட்டத்துக்கு 1.25 பில்லிய ரூ ஒதுக்கி வைத்தாகவும் தெரிகிறது.   ஏவப்படும் துணைக்கோள் பூமியை 500 கி.மீ. குற்றாரம் [300  mile Perigee], 80,000 கி.மீ. நீளாரம் [48000 mile Apogee] உள்ள நீள் வட்டத்தில் சுற்றத் துவங்கும்.   செவ்வாய்க் கோளை நெருங்கியதும் 60 மைல் உயரத்தில் முடிவாக விண்ணுளவி சுற்றி ஆய்வு செய்து வரும் என்று தெரிகிறது.

    +++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL, ESA, Russian Space Exploration & Chinese Websites

     

    1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
    2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
    3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2  [Aug 26, 2003]
    4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
    http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]
    6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
    7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
    8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
    9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
    10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)
    11 The Tech Harold – NASA The Nuclear-Powered Mars Science Lab – Curiosity
    12 NASA Mars Rover (Mars Science Lab – Curiosity) is Halfway to Next Destination (September 9, 2010)
    13 Mars Daily – NASA’s Next Mars Rover Rolls Over Ramps (September 14, 2010)
    14 Mars Smart Lander Mission -A Roving Mobile Science Lab (2009-2011)
    15 NASA Mars Rover Halfway to Next Destination (September 9, 2010)
    16 Press Trust of India – Chain’s Space Programme Gears Up to Moon & Mars (September 21, 2010)
    16  Science Daily : Geometry Drives Selection Date for 2011 Mars Launch (May 24, 2010)
    17  Scientific American : NASA’s Massive Curiosity Rover Nears Launch toward Mars (Nov 24, 2011)
    18 Mars Daily – NASA’s Next Mars Rover Rolls Over Ramps (During Testing) (September 14, 2010)
    19 NASA – Mars Science Laboratory (Curiosity Rover) (Jet Propulsion Lab JPL) (September 2010)
    20 NASA Report : Five things About NASA’s Mars Curiosity Rover (September 16, 2010)
    21 Wikipedia – Mars Science Laboratory (Rover Curiosity) (September 21, 2010)
    22  Mars Daily :  NASA’s Mars Rover Zeroes in On August Landing  (June 11, 2012)
    23  Mars Daily :  NASA Mars Rover Team Aims for Landing Closer to Prime Science Site  (June 12, 2012)
    24  Mars Science Lab Mission Update – NASA Tweaks August Landing Site – Closer to Prerequisites (June 12, 2012)
    25. Wikipedia :  http://en.wikipedia.org/wiki/Mars_Science_Laboratory  (June 12, 2012)
    27.  Daily Galaxy : Early Mars was The Water Planet –  Will NASA’s August 5th,  2012 Mission at Gale Crater Provide Proof ?  (June 13, 2012)
    28.  Mars Daily: NASA Confident Ahead of  Nail-biter Mars Landing (August 2, 2012)
    29.  Countdown to the Search for Life on Mars – One to Mars Curiosity Landing (August 4, 2012)
    30.  Mars Daily: Mars Tugging on Approaching NASA Rover Curiosity (August 6, 2012)
    31.  Mars Daily: Taking a Robotic Geologist to Mars By Daniel Stolte  (August 6, 2012)
    32.  Mars Daily:  Curiosity Ready to Rove Mars  (August 8, 2012)
    33.  Mars Daily : A New Martian Landscape Comes Alive With Curiosity (August 8, 2012)
    34   Astronomy Magazine : Will Curiosity Find Life on Mars ? (August 2012)

     

    36.  http://www.bbc.com/news/science-environment-27799129  [June 28, 2014]

    37.  http://www.space.com/26383-nasa-flying-saucer-test-ldsd.html  [June 28, 2014]

    38.  http://www.telegraph.co.uk/science/space/10933479/Nasas-flying-saucer-splashes-back-down-after-test.html  [June 29, 2014]

    39.   http://www.dailymail.co.uk/sciencetech/article-2675516/The-flying-saucer-man-Mars-Nasa-hails-test-craft-space-truck-missions-red-planet.html  [June 30, 2014]

    40.http://www.thetimes.co.uk/tto/news/world/americas/article4109077.ece [July 4, 2014]

     

    Attachments area
    Preview YouTube video Mars Science Laboratory (Curiosity Rover) Mission Animation

    Mars Science Laboratory (Curiosity Rover) Mission Animation
    Share
  • பொறியினை எழுப்பிவிட்டார் !

     

      எம்.ஜெயராமசர்மா-மெல்பேண்

     poster03

          வீரத்தை விவேகம் ஆக்கி

          வியந்துமே உலகம் பார்க்க

          பாரதம் ஈன்ற மைந்தன்

          பண்பிலே உயர்ந்து நின்றார்

     images (1)

          வேத சாரத்தை விளக்கி

          மக்கள் மனமெலாம் விதைத்து

          போதனை செய்து நின்று

          பொறியினை எழுப்பி விட்டார்

     

          இளமையில் துறவை ஏற்றார்

          பழமையில் புதுமை கண்டார்

          துறவிகள் வாழ்வில் என்றும்

          தூய்மையே வேண்டும் என்றார்

     

          ராம கிருஷ்ண பரம்ஹம்சர்

          நாளும் பாதம் பணிந்துநின்று

          நேரம் ஒன்றும் பார்த்திடாமல்

          யோக நிஷ்டை செய்துநின்றார்

     

          பரம் ஹம்சர் பார்த்தாலே

          பரவசத்தை அடைந்து விட்டார்

          உலகமீது அன்பு கொண்டு

          உழைப்பதற்குத்  தொடங்கி விட்டார்

     

          சித்துக்கள் செய்து அறியார்

          சொத்துக்கள் சேர்த்து அறியார்

          சத்தியத்தை மட்டும் அவர்

          தன்னுடனே சேர்த்து நின்றார்

     

         வேதத்தைக் கற்ற அவர்

         வித்துவச் செருக்கு ஒழித்தார்

         சாதகனாய் மாறி அவர்

         சரிதிரமாய் ஆகி விட்டார்

     

        ஆதரவு வேண்டி நிற்பார்

        அனைவரையும் அணை என்றார்

        போதனைகள் செய்ய முன்னர்

        போக்க வேணும் பசியென்றார்

     

        ஏழ்மையை போக்கி விட்டு

        இறைவனைக் காணு என்றார்

        தோழமை கொண்டு நாளும்

        தொடங்கிவிடு சேவை என்றார்  

     

        பெண்மையில் தாய்மை கண்டார்

        பிதற்றலை வெறுத்து நின்றார்

        மண்ணிலே நல்ல வண்ணம்

        வாழ்ந்திடப் பலவும் சொன்னார்

     

       சமயத்தின் சாரம் சொன்னார்

       இமயமாய் உயர்ந்து நின்றார்

       எமையெலாம் விழிக்கச் செய்தார்

       எழுமின்கள் என்றும் சொன்னார்

     

      வீர விவேகானந்தரை 

           என்றுமே வாழ்த்துவோம்

     விழிப்பினைத் தந்தவரை

             நாளுமே போற்றுவோம்

      நாடு சிறக்கவந்தவரை

            நாமெலாம் வாழ்த்துவோம்

     நம்முடை மனமெல்லாம்

         நல்லெண்ணம் எழுந்திடட்டும் !

     

    Share
  • திருமால் திருப்புகழ் (133)

     

    கிரேசி மோகன்

    Ksheerasagara Shayana, oil on canvas.  Keshav
    Ksheerasagara Shayana, oil on canvas. Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————–
    ”கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————-
    மகாலக்ஷ்மி தாயார் போற்றி….
    ——————————————

     Bhagavatha - Balarama triumphantly diverts Yamuna's course
    Bhagavatha – Balarama triumphantly diverts Yamuna’s course

    வாயார வாழ்த்து, வடவேங் கடன்நெஞ்சத்,
    தாயாரைப், பூவாழ் திருமகளை, -ஓயாமல்,
    அன்னை கடைக்கண், அனுக்கிரகம் கொண்டோர்முன்,
    முன்னை வினைகள் முடம்….(314)

    திருவல்லிக் கேணி வேதவல்லித் தாயார் சன்னிதியில்….
    ———————————————————————————————

    Gajalakshmi. Watercolour. Inspired by Botticelli.
    Gajalakshmi. Watercolour. Inspired by Botticelli.

    வேதவல்லித் தாயே, வினைதீர்க்கும் செங்கமலப்,
    பாதவல்லி, பார்த்தன்தன் சாரதியின், -கீதவல்லி,
    ஏதமில்லா ஞானத்தை, ஏதுமில்லா மோனத்தை,
    சாதகனென் சிந்தையில் சேர்….(315)

    அராப்பள்ளி சாய்ந்து, அரங்கத்தை ஆளும்,
    பராத்பரா, பார்த்தன்தேர் பாகா, -”மரா”சொல்லி,
    கானகத்து வேடன், கவியானான், நின்னருளால்,
    நானதற்(கு) இணையாக நல்கு….(316)

    பீதாம் பரமவிழ, போட்ட நகைசிதற,
    வேதப்புள் வாகனனை தோள்சுமந்து, -பாதாதி,
    கேசம் குலுங்க, களிறுக்கன்(று) ஏகிய,
    நேசனக் கேசவனை நம்பு….(317)

    என்னை அகலாக்கி, எண்ணையாய் அன்பூற்றி,
    உன்னை வளர்த்தேன் ஒளியாகக், -கண்ணனே,
    உன்னொளியில் பாய்ந்து, உறுமாறும் பூச்சியாய்,
    என்நிலையை மாற்றிக்கொள் ஏற்று….(318)

    அண்ணன் பலராமன், பின்னை சுபத்ராவும்,
    உன்னொடு பூரியில் உற்சவராய், -நின்றிட,
    கண்ணா ஜகன்நாதா, கோர்த்தாய் பிறந்தகத்தை,
    என்னேவுன் கோகுல ஈர்ப்பு….(319)

    —————————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/2013_07_01_archive.html

    Share
  • ஒத்தனும் மத்தொருத்தனும்’’

    கிரேசி மோகன்

     

    பிரும்மாண்டமான கல்யாண மண்டபம்….உள்ளே மேடையில் மணமகன் ராமானுஜம்-மணமகள் ஜானகி….ஜானகி செக்கச் செவேலென்று வறுமையின் நிறம் சிவப்பில் ஜொலித்தாள்….ராமானுஜமோ நிறத்தில் வறுமையாக பெருமாள் கோயில் மூலவர் போல் இருந்தான்….இந்த அழகில் ஸிம்ஃபெனி வாசிக்கலாம் அளவுக்கு பியானோ பட்டன் ஸைஸ் பற்கள் தேங்காய் துறுவலாக வாயை விட்டு வெளியே விழாமல் ‘’பேய்ச் சிரிப்பு சிரித்த ‘’ முகமா வந்தவர்களுக்கு அழகு காட்டிக் கொண்டிருந்தது….காதலித்த ஜானகியை கைப்பற்றியதில் ராமானுஜத்திற்கு சந்தோஷம் தாங்காமல் எக்ஸ்ட்ரா ரெண்டு பல் முளைத்தது….காதலுக்கு கண் இல்லை, காதலித்த ஜானகிக்கும் கண்ணில்லை

    அப்போது ஜானகியின் தந்தை ,ராமானுஜத்தின் மாமானுஜம் ஓடிவந்து’’ மாப்ளே….என்பொண்ண கண்கலங்காம பாத்துக்குங்க’’என்றார் கண்கலங்க’’மாமா…நான் ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பனில CEOவா இருக்கேன்….என் சம்பளத்தை சில்லறையா மாத்தினா சத்திரத்துல உள்ளவங்க கைநிறைய இருக்கும்….இதத் தவிர மெட்ராஸ்ல 4 வீடு இருக்கு’’என்று ஆறுதலாக பீத்திக் கொண்டவன் ‘’மாமா….உங்க பொண்ணுக்காக நான் வீட்டைக் கட்டிப் பாத்துட்டேன்….நீங்க உங்க பொண்ணு கல்யாணத்த பாண்ணிப் பாக்கற வழியைப் பாருங்க’’ என்று ‘’எங்கே மனம் மாறி விடுவாரோ’’என்ற அச்சத்தில் அவசரப் படுத்தினான்….

    மண்டபத்தின் வாசலில் கவுண்டமணி -செந்தில் போன்று இருவர் லுங்கியில்….
    மத்தொருத்தன்(செந்தில்)-அண்ணே! இப்ப போய் கேக்கலாம் சந்தோஷத்துல தந்துருவான்….
    ஒத்தன்(கவுண்டமணி)- இல்ல ….இப்ப வாணாம்….வா போவலாம்….செந்தில் சலிப்போடு கவுண்டரை தொடர்கிறான்…

    காட்சி-2
    —————-
    முதலிரவு அறை….ராமானுஜத்தின் எசகேடான பற்களில் டம்பளர் பட்டு ஜலதரங்கம் வாசிக்க, அவன் பாலை அருந்தி….பழங்களை மிக்ஸி போன்ற வாயிலிட்டு ஜூஸாக்கி குடித்து…,நாயகன் ராமானுஜம் நாயகி ஜானகியை வில்லன் போல நெருங்க, ஜானகி’’No நஹி’’ என்று தடுத்து ‘’என்னங்க எங்கப்பா கல்யாணத்துக்கு ஏகமா செலவு பண்ணிட்டார்…நீங்க கடனா….!’’ என்று கவர்ச்சிகரமாக கெஞ்ச’’ அசடே! அசடே!….எதுக்கு கடன் இந்தா ப்ளாங்-செக்….’’என்று தந்து ஸ்விட்சை அணைக்க அறையில் ராமானுஜ இருள் கும்மியது….

    வீட்டு வாசலில் லாம்ப்-போஸ்ட் அருகில் ஒத்தன் -மத்தொருத்தன்….செந்தில்-அண்ணே….நம்பாள் உச்சகட்ட கிக்குல இருக்கான் …..இப்ப போய் கேட்டா நிச்சயமா தந்துருவான்….
    கவுண்டமணி-இல்ல….இப்ப வாணாம்…வா போவலாம்….செந்தில் கவுண்டரை சபித்தபடி தொடர்கிறான்….

    காட்சி-3
    —————-
    நர்சிங்-ஹோம்….நர்ஸ் கையில் ராமானுஜ ஜாடையில் பிறக்கும் போதே பல்லுடன் கருப்பு வெளுப்பில்(கலரில் கொஞ்சம் அம்மாவையும் கொண்டு பிறந்த) குழந்தை….கிருஷ்ண தேவ ராயருக்கு வாரிசு பிறந்தாற் போன்ற பூரிப்பில் ராமானுஜம் நர்ஸின் பர்ஸை நூறு ரூபாய் நோட்டுக்களால் நிரப்புகிறான்….

    நர்சிங்-ஹோம் வாசல் வராண்டாவில் ஒத்தன் -மத்தொருத்தன்…செந்தில்- அண்ணே புள்ள பொறந்த குஷில பய இருக்கான்….இப்ப எத்த கேட்டாலும் தந்துருவான்….அடம் புடிக்காம வாங்கண்ணே’’
    கவுண்டர்-இல்ல இப்ப வாணாம்…வா போவலாம்….தன் தலையில் அடித்துக் கொள்ளப் போன செந்தில் கைதவறுதலாய் கவுண்டர் தலையில் அடித்தபடி பின் தொடர்கிறான்….

    காட்சி-4
    —————-
    பிரும்மாண்டமான கல்யாண மண்டபம்….மேடையில்….ஆறிலேயே பார்க்க சகிக்காத ராமானுஜம் அறுபதில் அடி பிடிச்ச கரிச் சட்டியாய், வாயில் வழுக்கையும் தலையில் பொக்கையுமாக அவதாரம் போல நிற்கிறான்….அருகில், மறுபடி ராமர் பார்த்தால் வில்லை உடைப்பார் என்னும் அளவுக்கு ஜானகி அதே அழகுடன் நிற்கிறாள்….ராமானுஜத்தின் 25 வயது மணமகன் லஷ்மணன்‘’அப்பனுக்கு தப்பாம’’ நிழல் போல(நிறத்தில்) தன்னருகே தேவதை போல நிற்கும் மைதிலிக்கு தாலி காட்டிக் கொண்டிருக்கிறான்(கட்டப் போகும் கட்டம்)….அப்போது ராமானுஜன் சம்பந்தி ஓடிவந்து ராமானுஜத்தின் கைகளைப் பற்றிக் கொண்டு ஏதோ சொல்ல ஆரம்பிக்க, ராமானுஜம்’’நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்….என் சொத்து பூராவையும் உங்க பொண்ணு அதாவது என் மருமக மைதிலி பேர்ல எழுதிட்டேன்’’ என்று வீரவசனமாக பேசி பத்திரங்களை தாரை வார்த்தான்….

    மண்டபத்தின் வாசலில்….ஒத்தன் -மத்தொருத்தன்….
    செந்தில்-எண்ணன்ணே எல்லாத்தையும் கொடுத்துட்டான்….இப்ப நாம போய் கேட்டா….!
    கவுண்டமணி-இப்பவும் இல்ல….எப்ப கேக்கணும்னு எனக்குத் தெரியும்….
    செந்தில்-வா போவலாம் அதானே….நானே சொல்றேன்….வாங்க போவலாம்….

    காட்சி-5
    —————
    மருமகள் மைலி வீட்டு வாசல் திண்ணையில் கிழிந்த பாயாக ராமானுஜம் புரண்டு கொண்டிருக்கிறான்….உள்ளே அறைச் சுவரில் ஊதுபத்தி மாலையோடு ஜானகியின் படம்….வெளியே வந்த மருமகள் மைதிலியிடம், ராமானுஜம் பரிதாபமாக’’அம்மா மைதிலி மணி பத்தாகுது இன்னும் நான் காப்பி சாப்பிடல’’என்று கெஞ்ச, எதையோ மிதித்தவள் போல மைதிலி மாமனாரைப் பார்த்து, சத்தம் கேட்கும் டெஸிபெலில் மோவாய் கட்டையை தோளில் இடித்து’’ஏ! கிழட்டுப் பொணமே….எப்பப்பாரு என்ன காப்பி காப்பினு….பித்தம் தலைக்கேறி பாயைத்தான் நீங்க பிறாண்ட போறீங்க’’என்று நாலு வீடு கேட்கும் அளவுக்கு கூவி விட்டு நகர்கிறாள்….அவளுக்கு பிறகு தயங்கி வந்த மகன் லஷ்மணன் மூணு கண்ணால் தந்தையை(ஏற்கனவே இவனுக்கு ஒன்றரைக் கண்…இப்ப ப்ளஸ் ஒன்றரை….ஆக மூணு)வாத்ஸல்யத்துடன் முறைத்துவிட்டு மைதிலி கிழித்த கோட்டை தாண்டாமல் வந்த நிதானத்தில் வீட்டுக்குள் சென்று மறைகிறான்….அப்பளத்து உருண்டையாய் திண்ணையில் சுருண்டு கிடந்த ராமானுஜம் சிலிர்த்து எழுந்து வானத்தைப் பார்த்து’’தெய்வமே ! பாத்துண்டு சும்மா இருக்கியே….என்ன ஏன் இந்த வயசுல இப்படி அல்லாட விடறே….என்ன அழைச்சிண்டு போக மாட்டியா…இது உனக்கே சரியா’’ என்று விசும்பி விசும்பி அழ….

    தெருக்கோடியில் ஒத்தன் -மத்தொருத்தன்….

    ஒத்தன் -வாடா இப்ப போய் கேக்கலாம்….என்று கூறி எமனுருவில் பாசக் கயிறை உருவ….மத்தொருத்தன் சித்ரகுப்தனாகி-என்ணண்னே….அப்பல்லம் வாணானுட்டு….!
    உங்கள புரிஞ்சுக்கவே முடியல….!

    எமன் -அடேய்….நானா போய் யார் உசுரையும் வாங்கறதில்ல….அவங்களா தர்மமா தந்தா எடுத்துப்பேன்….அதான் எம்பேர் தர்மராஜன்….இது பேர் பாசக் கயிறு….
    சித்ரகுப்தன் -அப்ப எருமை….
    எமன் -உன்ன மாதிரி உசுர வாங்க அவசரப்படாம பொறுமையை ஞாபகப் படுத்த எருமை….வா இப்பத்தான் போகலாம்….அடுத்த தெருல தற்கொலைக்கு பயந்துண்டு ஆக்ஸிடெண்டுக்காக நடுத்தெருல நிக்கறான்’’என்று கூறி திண்ணையை நெருங்க…..ராமானுஜம் மாரடைப்பில் கோமானுஜமாகி சாய்கிறான்….
    —————————————————————————————————————————–

    Share
  • ’’பகல் பத்து’’

     

    கிரேசி மோகன்

    Keshav
    Keshav

    —————————–
    ”போலெ’ன்(று) உவமை புகல முடியாது
    மாலென் றனரோ மகாகவிகள் -கேளொன்று
    சிந்தனை தேவையா சித்திரத்திற்(கு) ஓவியா
    எந்தனை வேறுவடி வாக்கு….(1)

    அழைக்கும் குரலைக்கேட்(டு) ஆடா(து) அசங்காது
    உழைக்கவரு வானவன் ஓடி -மழைக்குக்
    குடையாய் மலையேந்தி கோகுலம் காத்த
    இடையன் இணைப்பில் இரு….(2)

    நாக்கால் நவநீதன் மூக்கால் மணிவண்ணன்
    கேட்கும் படிசெவியில் கோவிந்தன் -நோக்கும்
    விழியால் வரதன் விரலால் அரியென்(று)
    ஒழிந்தபோ(து) எல்லாம் ஒழுகு….(3)

    அழகவன் கோலம் அழகவன் ஜாலம்
    அழகவன் லீலா அபங்கம் -பழக
    அழகனவன் நட்போ அலுக்காத கற்பு
    பொழுதுமவன் பொற்பைப் புணர்….(4)

    ஆணானாய் பெண்ணானாய் மீனானாய் ஏனமானாய்
    தூண்தோறும் சிங்கத் துருவானாய் -கூனானாய்
    வானானாய் ராமனாய் மூணானாய் கண்ணனானாய்
    நானாவாய் நாராய ணா….(5)

    நீயின்றி நானில்லை நானின்றி நீயுண்டு
    தீயின்றி தீபம் திரிதானே -வாஇன்றே
    வெப்பமாய் வந்தென்னை அப்புவாய் சந்தனமாய்
    அப்பனே ஆரா அமுது….(6)

    ஆழ்ந்து படித்தென்ன ஆராய்ந்து பார்த்தென்ன
    வீழ்ந்து கிடப்போர்க்கே விஷ்ணுபதம் -தாழ்ந்த
    சபரியெச்சில் ஏற்ற சமத்துவத்தின் மூலம்
    அபரி மிதமான அன்பு….(7)

    அன்பே எதுகையாய் ஆர்வமே மோனையாய்
    உன்பால் தளையற்ற உந்துதலால் -வெண்பாக்கள்
    பாடி அணுகுகிறேன் வேடிக்கைக்(கு) அல்லகண்ணா
    வாடிக்கை யாளனாக வா….(8)

    மேய்ப்போன் அவனிருக்க மந்தை மனமேனோ
    போய்ப்போய்ப் புலனைந்தைப் பேணுகின்றாய் -தாய்போல
    சக்திக்(கு) உகந்து சகலர்க்கும் ஊட்டிடுவான்
    பக்திகர்ம ஞானவழிப் பேறு…..(9)

    நீந்தித் தவழ்ந்து நடந்துவிரைந்(து) ஓடி
    ஏந்தினாய் வேடங்கள் எத்தனை -சாந்தி
    உனக்களிக்க வெண்பாவில் உட்கார்நீ ஓய்வாய்
    எனக்களிப்பாய் வேலை எழுத்து….(10)

    ————————————————————————————————————————————————

    Share