எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் 

dr-m-balamuralikrishna-thiruvananthapuram-january-2008
சுந்தரத் தெலுங்கென்று
சுவைபடக் கூறிநின்றான்
செந்தமிழ்ப் புலவனவன்
சிறப்பான பாரதியும்

பாரதியின் கூற்றறிந்த
பாலமுரளி கிருஷ்ணாவும்
பாட்டாலே எம்மையெலாம்
பதப்படுத்தி வைத்தாரே

தெலுங்கோடு பிறந்தாலும்
தீராத காதலுடன்
பலமொழிகள் தான்கற்று
பாட்டிசைத்து நின்றாரே

இசையோடு தானிணைந்து
ஈடில்லா முயற்சிசெய்து
தனியான இசைகண்டு
தரணிதனில் உயர்ந்தாரே

புதுராகம் பலகண்டார்
புத்துணர்வு கொண்டெழுந்தார்
அதிமேதை என்றவரை
அனைவருமே போற்றுகின்றார்

மற்றவரைப் பாராது
மனத்தோடு ஒன்றிநின்று
வெற்றிச் சிரிப்புடனே
விதம்விதமாய்ப் பாடுகிறார்

பொட்டுவைத்துச் சபையேறி
புன்சிரிப்புத் தவழஅவர்
தொட்டுநின்ற ராகமெலாம்
சுவைததும்பி நிற்கிறதே

மிருதங்கம் வயலீனை
விட்டுவிடின் பாட்டில்லை
என்றெண்ணும் எண்ணத்தை
இல்லையென ஆக்கியவர்

தாளத்தை மட்டுமவர்
தன்கையில் எடுத்தபடி
சளைக்காமல் கச்சேரி
சபையதிரச் செய்தாரே

பிரமித்து நின்றார்கள்
பெருங்கலைஞ்ஞர் எல்லாரும்
ஒருமித்த குரலெடுத்து
உயர்ந்ததெனப் பகர்ந்தார்

தேசியவிருதை வென்றார்
திசையெலாம் புகழநின்றார்
மாஇசை கொடுத்துநின்றார்
மதுரமாய்க் குரலினாலே

பாரததத்தின் விருதையெல்லாம்
பாட்டாலே பெற்றுநின்றார்
பாரதிரப் பாடிநின்று
பரிமளிக்கச் செய்கின்றார்

பாலமுரளி கிருஷ்ணா
பலவிதமாய்ப் பாடுவதால்
பாரிலுள்ளோர் மனமெல்லாம்
பக்குவமாய் நிறைந்துவிட்டார்

காலமுள்ள வரைக்குமவர்
கானமழை பொழிந்திடுவார்
கந்தருவக் குரலோனை
கண்மணியாய்க் காத்திடுவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *