நான் அறிந்த சிலம்பு – 126
மலர் சபா
மதுரைக் காண்டம் – 02. வேட்டுவ வரி
ஐயையின் கோட்டத்தில் ஒரு பக்கத்திலே கோவலன் முதலிய மூவரும் இளைப்பாறி இருத்தல்
பலவித நறுமணங்களுடன் முடிக்கப்பட்ட
கூந்தலையுடைய கண்ணகி,
கடுங்கதிர் வீசிய சூரிய வெப்பத்தால் உண்டான
துன்பத்தால் வருந்தினாள்.
அவள்தம் சிறு பாதங்கள் சிவந்து தளர்ந்ததால்
அடிக்கடி மூச்சு வாங்கினாள்.
அத்துன்பத்தைத் தணிக்கும் வண்ணம்
ஐயைக் கோட்டத்தின் ஒரு புறம்
யாரும் பார்க்கா வண்ணம்
சென்று அமர்ந்தனர் அம்மூவரும்.
சாலினி ஆவேசம் கொண்டு மறக்குடி மக்களுக்கு அறிவுறுத்தல்
அவர்கள் அமர்ந்த இடத்தின் அருகே
எயினர்கள் வாழும் பகுதியிருந்தது.
அம்பினை வழங்குகின்ற வில்லை ஏந்திய,
பகைவராய் இருந்தாலும்
வில்லை வழங்குகின்ற கொடைத்தன்மையுடைய,
பெரிய கையையுடைய
மறவர் குடியில் பிறந்த உரிமை உடையதால்
கொற்றவைக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் முகமாய்
‘சாலினி’ எனும் பெண்ணொருத்தி,
தன் மீது தெய்வம் வந்து ஏறப்பெற்றவளாய்,
காண்பவர் எல்லாம் வியக்கும் வண்ணம்
உடம்பின் முடிகள் எல்லாம் சிலிர்த்து நிற்க,
கைகளை உயர்த்தி ஆடியவளாய்
முள்வேலியால் சூழப்பட்ட அந்த ஊரின் நடுவே
மறவர்கள் கூடியுண்ணும் ஊர் மன்றத்தில்
அடியெடுத்து வைத்து
மிகுந்த ஆவேசத்துடன் ஆடத் தொடங்கினாள்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 01 – 19
*http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html*
படத்துக்கு நன்றி
http://dosa365.wordpress.com/2012/10/23/76/kannagi-kovalan-kavunthi-adigal/
