கிரேசி மோகன்

Keshav
Keshav

—————————–
”போலெ’ன்(று) உவமை புகல முடியாது
மாலென் றனரோ மகாகவிகள் -கேளொன்று
சிந்தனை தேவையா சித்திரத்திற்(கு) ஓவியா
எந்தனை வேறுவடி வாக்கு….(1)

அழைக்கும் குரலைக்கேட்(டு) ஆடா(து) அசங்காது
உழைக்கவரு வானவன் ஓடி -மழைக்குக்
குடையாய் மலையேந்தி கோகுலம் காத்த
இடையன் இணைப்பில் இரு….(2)

நாக்கால் நவநீதன் மூக்கால் மணிவண்ணன்
கேட்கும் படிசெவியில் கோவிந்தன் -நோக்கும்
விழியால் வரதன் விரலால் அரியென்(று)
ஒழிந்தபோ(து) எல்லாம் ஒழுகு….(3)

அழகவன் கோலம் அழகவன் ஜாலம்
அழகவன் லீலா அபங்கம் -பழக
அழகனவன் நட்போ அலுக்காத கற்பு
பொழுதுமவன் பொற்பைப் புணர்….(4)

ஆணானாய் பெண்ணானாய் மீனானாய் ஏனமானாய்
தூண்தோறும் சிங்கத் துருவானாய் -கூனானாய்
வானானாய் ராமனாய் மூணானாய் கண்ணனானாய்
நானாவாய் நாராய ணா….(5)

நீயின்றி நானில்லை நானின்றி நீயுண்டு
தீயின்றி தீபம் திரிதானே -வாஇன்றே
வெப்பமாய் வந்தென்னை அப்புவாய் சந்தனமாய்
அப்பனே ஆரா அமுது….(6)

ஆழ்ந்து படித்தென்ன ஆராய்ந்து பார்த்தென்ன
வீழ்ந்து கிடப்போர்க்கே விஷ்ணுபதம் -தாழ்ந்த
சபரியெச்சில் ஏற்ற சமத்துவத்தின் மூலம்
அபரி மிதமான அன்பு….(7)

அன்பே எதுகையாய் ஆர்வமே மோனையாய்
உன்பால் தளையற்ற உந்துதலால் -வெண்பாக்கள்
பாடி அணுகுகிறேன் வேடிக்கைக்(கு) அல்லகண்ணா
வாடிக்கை யாளனாக வா….(8)

மேய்ப்போன் அவனிருக்க மந்தை மனமேனோ
போய்ப்போய்ப் புலனைந்தைப் பேணுகின்றாய் -தாய்போல
சக்திக்(கு) உகந்து சகலர்க்கும் ஊட்டிடுவான்
பக்திகர்ம ஞானவழிப் பேறு…..(9)

நீந்தித் தவழ்ந்து நடந்துவிரைந்(து) ஓடி
ஏந்தினாய் வேடங்கள் எத்தனை -சாந்தி
உனக்களிக்க வெண்பாவில் உட்கார்நீ ஓய்வாய்
எனக்களிப்பாய் வேலை எழுத்து….(10)

————————————————————————————————————————————————

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.