Month: February 2016

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    8a8f8c71-e5ca-4f1b-bac9-6caeb6a53d16

    ’’இருக்குமணி  அஞ்ச  இருக்கித்  அணைத்தற்(கு)

      இருக்கோர்  நேசம்  இவர்க்கு, -திருத்துழாயே!

      பாமாக்(கு)  இணங்கா  பகவான் துலாபாரம்

      ஏமாந்(து) இலைக்கு  எழும்’’….கிரேசி  மோகன்….

    பக்தியுடன்  இருக்குமணி  இட்ட  துளசி இலைக்கு பகவான் துலாபாரத்  தட்டைத் தாழவைத்துக்  கைத்தட்டினார்….

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)

    — சக்தி சக்திதாசன்

    daily mail graph.

    அன்பினியவர்களே!
    இனிய வணக்கங்கள்.
    இங்கிலாந்து அரசியல் உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் ஒரு வாரம் இந்தவாரம். இதோ உங்கள் முன்னால் மற்றொரு மடலுடன் நான்.

    1957ம் ஆண்டு ஐரோப்பிய கண்டத்தின் ஆறுநாடுகள் ஒன்றிணைந்து ஒரு பொருளாதாரக் கூட்டு முன்னணியைத் தோற்றுவித்தது. அந்நாடுகள் ஃபிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, லக்ஸம்பேர்க், இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியனவாகும்.

    அந்நாளில் இக்கூட்டு முன்னணியின் முக்கிய நோக்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலானதொரு பொது வியாபாரக் கூட்டுறவை ஏற்படுத்துவதாகும்

    1973ம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கம் கன்சர்வேடிவ் கட்சியின் கையிலிருந்தது. அப்போது இங்கிலாந்தின் பிரதமராக சமீபத்தில் மறைந்த திரு எட்வேர்ட் ஹீத் (Edward Heath) பதவி வகித்தார்.

    இவரது தலைமையின் கீழிருந்த இங்கிலாந்தும் இந்த ஐரோப்பிய பொருளாதார வியாபாரக் கூட்டுறவில் இணைந்து கொண்டது.

    அது “ஐரோப்பிய பொருளாதாரக் கழகம் ” (Europeon Economic Council ) எனும் பெயருடன் ஃபிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, இத்தாலி, கிரீஸ், அயர்லாந்து, லக்ஸம்பேர்க், நெதர்லாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய பன்னிரண்டு நாடுகளாக விரிவு அடைந்தன.

    அதைத் தொடர்ந்து வந்த 1974ம் ஆண்டு தேர்தலில் பிரதானக் கட்சிகள் இரண்டும் தேர்தல் விஞ்ஞாபனமாக இக்கூட்டுறவில் தொடர்ந்து இருப்பதா இல்லையா எனும் தீர்மானத்திற்காக ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்தது.

    தேர்தலில் ஹரால்ட் வில்சன் ( Harold Wilson ) தலைமையிலான லேபர் கட்சி சிறுபான்மை பலத்துடனான அரசமைத்தது. அவ்வரசின் பலவீனத்தின் பொருட்டு அடுத்த வருடமே அரசு கலைக்கப்பட்டு அடுத்தொரு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் அதே லேபர் கட்சி அதே பிரதமருடன் பெரும்பான்மை பலத்துடன் அரசமைத்தது.

    அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் மிகவும் ஒரு குழப்பமான நிலையிலேயே லேபர் கட்சி கலந்து கொண்டது, இருப்பினும் பிரதமர் ஹெரால்ட் வில்சன் ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டுறவுடன் நடத்திய பேச்சுக்களின் பலனாக லேபர் கட்சியும் இக்கூட்டுறவில் தொடர்ந்து நீடிப்பதை ஆதரித்தது. விளைவு இவ்ஐரோப்பிய கூட்டுறவில் இங்கிலாந்தும் தொடர்ந்தும் அங்கம் வகிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக 17,378,581 வாக்குகளும் எதிராக 8,470,073 வாக்குகளும் விழுந்தன.

    விளைவு இங்கிலாந்து அக்கூட்டுறவில் தொடர்ந்து இணைந்திருந்தது. வெறும் பொது வியாபாரநோக்கில் இணைக்கப்பட்டது என்று கூறப்பட்ட இக்கூட்டுறவின் கொள்கை விரிவானது. வியாபாரம் மட்டுமல்லாது நிதி, அரசியல் போன்ற இணைவுகளும் இதன் திட்டத்தில் சேர்க்கப்பட்டன. இவ்வரசியல் விரிவாக்கத்தின் பின்னணியாக 1992ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் உள்ள மாஸ்ட்ரிக் ( Maastricht ) எனும் இடத்தில்; 1958ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஐரோப்பிய கூட்டுறவு ஒப்பந்தம் மீளப் பரிசீலிக்கப்பட்டு பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு “மாஸ்ட்ரிக் ஒப்பந்தம்” எனக் கைச்சாத்திடப்பட்டது.

    இதன்போது இங்கிலாந்தின் பிரதமராக ஜான் மேஜர்(John Major) பதவி வகித்தார். இவ்வொப்பந்தத்தின் பிரகாரமே ஐரோப்பிய ஒன்றியம் ( Europeon Union) எனும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பொது நாணயமாக “யூரோ” வைக் ஒரு குறிப்பிட்ட கால எல்லையில் கடைப்பிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு இதில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கிடையில் பொருட்கள், மனிதர்கள் ஆகியோர் தடையின்றி இடம் பெயரலாம் என்பதுவும் விதியாக அமைக்கப்பட்டது. இவ்விதிக்கு அப்போதே இங்கிலாந்தும் வேறு சில நாடுகளும் தமது ஆட்சேபத்தைத் தெரிவித்திருந்தன.

    இதன்போது இவ்வொன்றியத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் ஜி.டி.பி அதாவது ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களும், அந்நாட்டின் சர்விஸ் நிறுவனங்களினால் ஈட்டப்படும் வருவாயும் ஒன்று சேர்ந்த கூட்டுப் பொருளாதார அளவின் 60% வீதமே கடனாக வைத்திருக்கலாம் என்பதுவும் இந்த ஜி.டி.பியின் 3% லுமே வருடாந்த நிதிநிலையில் துண்டு விழலாம் என்றும் விதி வகுத்துக் கொண்டன. இந்நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இதில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்தும் “எக்ஸ்சேஞ்ச் ரேட் மெக்கானிசம்” எனும் ஒரு நிதிப் பொறிமுறையைக் கடைப்பிடித்து வருவது என்று முடிவெடுக்கப்பட்டது. இப்பொறிமுறையைக் கடைப்பிடிக்கும் அந்தந்த நாடுகள் தமது நாணயங்களைப் பாவிப்பில் வைத்திருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து 1990ம் ஆண்டு அக்டோபர் மாதம் மார்கிரெட் தாட்ச்சர் ( Margret Thatcher) அவர்களின் தலையில் இருந்த கன்சர்வேடிவ் அரசு நிதியமைச்சராக இருந்த ஜான் மேஜரினால் “எக்ஸ்சேஞ்ச் ரேட் மெக்கானிசம்”(இ.ஆர்.எம்) என்றழைக்கப்படும் பொறிமுறையினுள் நுழைந்தது.

    வந்ததே பாருங்கள் பொருளாதார சுனாமி !

    இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடி படிப்படியாக அதிகரித்து அரசாங்க வட்டி வீதம் 15% ஆக உயர்ந்தது. அதிகபட்ச நடவடிக்கையாக இங்கிலாந்து 1992ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ம் திகதி தன்னை “எக்ஸ்சேஞ்ச் ரேட் மெக்கானிசம்”(இ.ஆர்.எம்) என்றழைக்கப்படும் பொறிமுறையினுள் இருந்து விடுவித்துக் கொண்டது. இது நடந்த புதன்கிழமை இன்றும் இங்கிலாந்து அரசியல் உலகில் “கருப்புப் புதன்கிழமை” ( Black Wednesday) என்றழைக்கப்படுகிறது. இங்குக் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால் இந்த இ.ஆர்.எம் எனும் பொறிமுறைக்குள் செல்லக்கூடாது எனும் காரணத்தினால் எழுந்த சர்ச்சையினால் அதற்கு ஆதரவளித்த முந்தைய நிதியமைச்சர் நைஜல் லோசன் (Nigel Lawson) பதவியை இராஜினாமா செய்தார் என்பதுவே.

    இந்தப்பின்னணியில் உருவான ஐரோப்பிய ஒன்றியம் கொஞ்சம் கொஞ்சமாகத் தனது அரசியல் அபிலாஷைகளை அதிகரித்துக் கொண்டது. இவ்வரசியல் அபிலாஷையின் அதிகரிப்பை இங்கிலாந்து மக்கள் விரும்பவில்லை. “யூரோ” நாணயம் 1999ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி சர்வதேச நாணய அரங்கில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கிலாந்து இந்த நாணயத்தைக் கடைப்பிடிக்கவில்லை. தமது பொருளாதார நிலையில் ஜந்து இலக்குகளை நிர்ணயித்து அவ்ஐந்து இலக்குகளையும் அடைந்தால் மட்டுமே தாம் யூரோ நாணயத்திற்கு மாறுவோம் எனும் நிபந்தனையை விதித்தது.

    தமது நாட்டின் இறையாண்மை சூறையாடப்படுகிறது என்பது இவர்களினது அபிப்பிராயம். தமது நாட்டின் சட்ட திட்டங்களை வகுக்கும் உரிமை தமக்கே இருக்க வேண்டுமே அன்றி எங்கோ இயங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பட்டால் தமது தனித்துவத்தை இழப்பதைப் பலர் விரும்பவில்லை. இந்நிலையில் சோவியத் யூனியனின் உடைவிற்குப் பின்னால் தன்னாட்சி அமைத்த பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் இவ்ஐரோப்பிய ஒன்றியத்தில் தம்மை இணைத்துக் கொண்டன.

    இங்கே ஐரோப்பிய ஒன்றியத்தின் சுயபாதுகாப்பு நோக்கம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. முந்தைய சோவியத் யூனியனின் பாகங்களாக இருந்த இக்கிழக்கு ஐரோப்பிய நாடுகளைத் தம்முடன் இணைப்பது தமக்கு பாதுகாப்பானது எனும் காரணம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல முக்கிய நாடுகளின் எண்ணம். ஆனால் இணைந்து கொண்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் ஏனைய பல ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை விடப் பின் தங்கிய நிலையிலே உள்ளது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமது நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்துவார்கள் எனும் எதிர்பார்ப்புக்கு மாறாகப் பல கிழக்கு ஐரோப்பிய மக்கள் இலகுவாக மற்றைய ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணிக்கும் வசதியைப் பயன்படுத்தி மற்றைய நாடுகளுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளார்கள்.

    இதன் விளைவே இன்றைய இங்கிலாந்து அரசின் அரசியல் நெருக்கடி.

    இங்கிலாந்தில் மக்களுக்குக் கொடுக்கப்படும் அடிப்படை வசதிகள் அதாவது வேலையற்றோருக்கு அரசாங்கம் கொடுக்கும் உதவிகளைப் பெறுவது மற்றைய ஐரோப்பிய நாடுகளை விட இலகுவானது என்பதால் இங்கிலாந்துக்குப் படையெடுக்கும் இக்கிழக்கு ஐரோப்பிய மக்களின் தொகை அதிகரித்த வண்ணமே உள்ளது. அதேநேரம் இங்கிலாந்தில் பல பொதுப்பணித்துறை திட்டங்கள் பொருளாதார நெருக்கடியால் கைவிடப்பட்டுள்ளது. மக்களின் உதவிப்பணத்தின் அளவுகள் பலருக்கு மட்டுப்படுத்தப்படுகின்றன. எமது நாட்டில் எமது வாழ்வாதாரத்தில் பல பாதிப்புகள் ஏற்படுத்தப்படும் இந்நிலையில் எப்படி இத்தனை ஐரோப்பியர்கள் தம்நாட்டில் இருந்து இங்கு இடம்பெயர முடியும்? இதற்கொரு முடிவில்லையா ? என்பதே மக்களின் பொது ஆதங்கம்.

    இங்கிலாந்து ஒரு சிறிய தீவு பொருளாதாரத்தில் முன்னணி வகிக்கும் நாடாக இருந்தாலும் மக்களின் தொகை அதிகரிப்பினால் கல்வி, தேசிய சுகாதார சேவை, வேலை வாய்ப்பு என்பன மிகவும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகின்றது. தெரிந்தோ, தெரியாமலோ, சரியாகவோ, தவறாகவோ இதற்கெல்லாம் காரணமாக இவ்ஐரோப்பியர்களின் வரவு பூதாகரமாக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சில பயங்கரவாதச் செயல்களுக்கு ஆதரவளிப்போர் எனக் கருதப்படும் சிலரை அவர்களது சொந்தநாடுகளுக்கு நாடு கடத்தும்படி நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டினால் அவர்களை நாடுகடத்த முடியாத நிலைக்கு இங்கிலாந்து அரசாங்கம் தள்ளப்பட்டது.

    மேலும் இவ்ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் இங்கிலாந்துக்குள் வரும் வெளிநாட்டவரின் வருகையை அவதானிக்க முடியாது அல்லாடும் ஒருநிலையும் காணப்படுகிறது. இவை அனைத்தின் விளைவாகவும் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் எனும் கோஷம் வலுத்தும், இதனை முன்னிலைப் படுத்தும் அரசியல் கட்சிகளுக்கான ஆதரவு வலுத்தும் வருகிறது. அதுமட்டுமின்றி இவ்ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கம் வகித்தல் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்குள் பலவருடங்களாகத் தலையிடியாகவே இருந்திருக்கிறது, இருக்கிறது.

    இதன் காரணமாகவே தற்போதைய பிரதமர் டேவிட் காமரன் அவர்கள் கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் 2017ம் ஆண்டு முடிவடைவதற்குள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து நிலைத்திருப்பதா ? இல்லையா ? எனும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவேன் என்று உறுதியளித்தார். அவர் 2017ம் ஆண்டு வரை காலக்கெடு விதித்த காரணம் ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இங்கிலாந்து தான் தொடர்ந்து அங்கம் வகிக்க வேண்டுமானால் அடிப்படை மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்றும் அதற்கான முயற்சிகளைத் தான் முன்னெடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமையைக் காக்க முயற்சிப்பதற்காகவே .

    சளைக்கவில்லை பிரதமர் தான் வேண்டும் மாற்றங்களை வகைப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களை ஒவ்வொருவராகச் சந்தித்து தமது கோரிக்கைகளின் நியாயத்தைச் சுட்டிக் காட்டினார். புயல் வேகத்தில் சுழன்றடித்து பல சந்திப்புகளைச் சந்தித்து வருகிறார். அதுமட்டுமின்றி தனது அமைச்சரவைக்குள் இருக்கும் அமைச்சர்கள் பலரை தனது பக்க நியாயத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை வேறு ! இன்று அதாவது 18ம் திகதி ஐரோப்பிய தலைவர்கள் ஒன்றுகூடி இங்கிலாந்துப் பிரதமரின் மாற்றங்களை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று முடிவெடுக்கிறார்கள்.

    இம்முடிவு பிரதமருக்குச் சாதகமாக அமைந்தால் அவர் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இருக்க வேண்டும் என்று வாதிட்டு இச்சர்வ ஜனவாக்கெடுப்பை வருகிற ஜூன் மாதம் 24ம் திகதி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முடிவு அவருக்கு எதிராக அமைந்தால் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதைத் தடுக்க முடியாது. இங்கிலாந்து இல்லாத ஐரோப்பிய ஒன்றியத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பான்மை நாடுகள் விரும்பவில்லை என்பது தெரிகிறது. அரசியல் அவதானிகளின் கணிப்பின்படி இம்முடிவு இங்கிலாந்து பிரதமருக்குச் சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது.

    சர்வஜன வாக்கெடுப்புக்குச் சார்பான, எதிரான வாதங்கள் சுறுசுறுப்பாக முன்வைக்கப்படுகின்றன.

    இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதாக அமைந்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது கானகத்தின் நடுவே விடப்பட்ட ஒரு குழந்தையின் நிலை போலத்தான் இருக்கும். ஏனெனில் இதற்கு முன்னால் இப்படிப்பட்ட நிகழ்வு நடந்ததே இல்லை. பல பங்குச் சந்தைகளின் பொருளாதார ஏற்ற, இறக்கங்கள் இன்றைய ஐரோப்பிய தலைவர்களின் முடிவிலேயே தங்கியுள்ளது.

    இதுவே பிரதமராக டேவிட் காமரன் பதவி வகிக்கும் கடைசி முறை. அவரின் சாதனை இங்கிலாந்தை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றுவது என்பதை அவர் விரும்புவாரா என்ன ?

    நாளை விடை பகரும்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    படம் உதவி: http://www.dailymail.co.uk/news/article-2803377/Support-staying-European-Union-surges-23-year-high-thanks-rise-Ukip.html

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    ”ஏன உருவெடுத்து ஈன இரணியாக்ஷன்
    ஊனை ஒழித்து உலகத்தை -கோண
    எயிறேந்தும் பாகவத எம்பிரானை ஏத்த
    உயிரேந்தும் நெஞ்சுக்(கு) உவப்பு….(OR)
    எயிறேந்தும் பாகவத எம்பிரானால் ஞானப்
    பயிரேந்தும் ஆன்ம வயல்’’….கிரேசி மோகன்….

    எயிறு -கொம்பு…..
    ————————————————————————

    திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள்….மூலவர் வராகர்(ஏன வடிவுற்று பூமாதேவியை ஏந்திக் காத்தவர்)….
    ——————————————————————————
    351a4adf-3261-4aad-b73b-9a60a7bd4733

     

    திருமால் திருப்புகழ்….
    ———————————————

    தனனதந்த தான தனனதந்த தான
    தனனதந்த தான -தனதான
    ——————————————————————
    ”புரமெறிந்த நேரம் தொழமறந்த ஈசன்
    ரதமழுந்து மாறு -புரிவேழன்
    வரமிரண்டு ஓடும் குறமடந்தை மேனி
    தழுவுகந்த வேலன் -முறைமாம

    கரமிரண்டு பானை தனிலுகந்த ஈகை
    உணவருந்தி சோணை -அடிவார
    வெளியுகந்து ஆமை வடிவிருந்த பாறை
    அணையமர்ந்து வானம் -குடையாக

    அரையிலொன்று பூண அறையிலொன்று காய
    முழமிரண்டு ஆடை -கவுபீன
    அணியணிந்து நாடும் எளியஅன்பர் தேற
    உரைபுகன்ற ‘’நானார்’(ஞான)-ரமணேசர்

    பறையுமந்த மூல உறையில்தங்கும் வாளாய்
    உடல்மறந்து வாழ -அருள்வாயே
    திருமணந்து நாளும் திருமணங்கள் காணும்
    திருவிடந்தை ஏன -பெருமாளே….கிரேசி மோகன்….

    Share
  • ஓர் அரசியின் கனவில் …

    — தேமொழி.        

       

    The_Dreams_of_Queen_Trishala

    கருவுற்றிருந்த அரசி திரிசலா தேவி (Queen Trishala), நள்ளிரவில் உறங்கும்பொழுது கீழ் காணும் 14 அழகிய மங்களகரமான பொருட்களைத் தனது கனவில் கண்டார், அவை:

    1. வெள்ளையானை
    2. வெண்ணிறக் காளை
    3. சிங்கம்
    4. லக்ஷ்மி தெய்வம்
    5. மலர்மாலைகள்
    6. முழுநிலவு
    7. சூரியன்
    8. பெரிய கொடி
    9. வெள்ளிக்கலசம்
    10. தாமரைத் தடாகம்
    11. பாற்கடல்
    12. வானுலகின் பறக்கும் தேர்
    13. மணிக்கற்களின் குவியல்
    14. புகையற்ற நெருப்பு

    1. வெள்ளையானை:
    பளிங்கையும் தோற்கடிக்கும் வெண்ணிறமான யானையொன்று மிகவும் பெரிய, உயரமான, கம்பீரமான தோற்றத்தையும், நான்கு தந்தங்களைக் கொண்டிருந்தது. சிறந்த பண்புகளைக் கொண்ட யானை பற்றிய இந்தக் கனவு கூறும் நன்னிமித்தச் செய்தி, அரசிக்குப் பிறக்கும் மகன் ஞானத்தேரில் பவனி வந்து, துன்பத்தில் வாடும் உலக மக்களை அவர்களது துயரத்தில் இருந்து நீங்கும் வழியை போதித்தருளுவார் என்பதையும், பேராசைகளை ஒழிக்க உபதேசித்து உலகவாழ்வில் அவர்கள் கொண்டிருக்கும் பற்றினை ஒழிய அருள் புரிவார் என்பதையும் உணர்த்துவதாகும்.

    2. வெண்ணிறக் காளை:
    அரசிக்கு இரண்டாவதாக வந்த கனவில் தோன்றிய வெண்ணிறக்காளை ஒன்று வெண்தாமரையையும் விடச் சிறந்த வெண்மையைக் கொண்டிருந்தது. அழகுடனும் பொலிவுடனும் ஒளி பொருந்தி இருந்த அக்காளை நிமிர்ந்த, பெரிய, கம்பீரமான திமிலையும், மென்மையான முடிகொண்ட தோலையும், கூறிய கொம்புகளையும் கொண்டிருந்தது. இக்கனவு குறிப்பது, அரசிக்குப் பிறக்கப்போகும் மகன் சிறந்த ஆன்மிகத் தலைவராக பெரும் துறவிகளுக்கும், அரசர்களுக்கும், பெரும் அறிவாளிகளும் ஆன்மிக வழிகாட்டுதலைச் செய்பவராக அமைவார் என்பதாகும்.

    3. சிங்கம்:
    அரசியின் மூன்றாவது கனவில் வலிமை மிக்க சிங்கம் ஒன்று தோன்றியது. அது பெரிய வட்டமான தலையையும், சிவந்த முகத்தையும், திருத்தமான உதடு கொண்ட வாய் அமைப்புடன், கூர்மையான பற்களையும், கூரிய பார்வை கொண்ட ஒளிரும் கண்களையும், உறுதியான கால்களில் கூர்மையான பளபளக்கும் நகங்களையும், அழகிய மிக நீண்ட வாலையும் கொண்டிருந்தது. அரசியை நோக்கி மிகக் கம்பீரமாக நடந்து வந்த அந்தச் சிங்கம் அரசியின் வாய்வழியே அரசியின் உடலுக்குள் புகுந்தது. அந்தக் கனவு காட்டும் குறிப்பு, அரசிக்குப் பிறக்கப் போகும் ஆற்றல் மிகுந்த மகன், அச்சமின்றி அனைத்து வல்லமையும் கொண்டவராக உலகையே ஆளும் திறமை கொண்டவராக இருப்பார் என்பதாகும்.

    4. லக்ஷ்மி தெய்வம்
    திருமகள் அரசியின் நான்காவது கனவில் தோன்றினார். செல்வம், செழிப்பு, ஆற்றல் ஆகியவற்றின் இருப்பிடமான லக்ஷ்மி இமயமலையில் அமர்ந்திருக்க, அவரது பொற்பாதங்கள் பொன்னாமை போல ஒளிவீசித் துலங்க, மென்மையான மெல்லிய விரல்களைக் கொண்ட திருக்கரங்களுடன், மென்மையும் நேர்த்தியும் கொண்ட கருங்கூந்தலுடன் அவர் விளங்கினார். சரம் சரமாக நல்முத்தும், மரகதமும் பின்னிப் பிணைந்திருக்கும் அணிகலன்களோடு பல தங்க மாலைகளையும் அணிந்திருந்தார். அவர் தனது காதில் அணிந்திருந்த அழகிய குழைகள் அவரது தோள் வரை தொங்கி ஒளிவீசியது. கரங்களில் ஒளிபொருந்திய இரு தாமரைகளை ஏந்தியிருந்தார். இக்கனவு, அரசியின் மகன் ஒரு தீர்த்தங்கரராக செல்வச் செழிப்புடனும் சிறந்த ஆற்றலையும் கொண்டு மிகச்சிறந்தவராக விளங்குவார் என உணர்த்துவது.

    5. மலர்மாலைகள்:
    அரசி தனது ஐந்தாவது கனவில் வானத்தில் இருந்து தரையிறங்கும் மலர்மாலைகளைக் கண்டார். மிக அருமையான நறுமணம் வீசும் பற்பல மலர்கள் கொண்டு தொடுக்கப்பட்ட மாலைகள் அவை. வெண்ணிற மலர்களால் ஆன அந்த மாலையின் நறுமணம் உலகில் எங்கும் கமழ்ந்தது. வெவ்வேறு பருவ காலங்களில் மலரும் மலர்களைக் கொண்டிருந்த அந்த மாலையைச் சுற்றித் தேனீக்கள் குழுமின, அவை செய்யும் ரீங்கார ஒலி உலகை நிரப்பியது. இந்தக் கனவு அரசியின் மகனின் ஆன்மிக வழிகாட்டுதல் உலகில் எங்கும் பரவும் என உணர்த்துவது.

    6. முழுநிலவு:
    ஆறாவதாக அரசியின் கனவில் தோன்றியது முழு நிலவு. ஒரு மங்களகரமான நன்னிமித்தம் அறிகுறியாகக் காட்சியளித்த அந்த வெண்ணிலாவின் ஒளிமிகச் சிறப்புமிக்கதாக இருந்தது. அதன் ஒளி அல்லிகளை முழுமையாக மலரச் செய்தது. மெருகூட்டப்பட்ட கண்ணாடியைப் போல அந்நிலவு ஒளிர்ந்தது. அதன் ஒளி வெண்ணிற அன்னப்பறவை போன்று திகழ்ந்தது. அதன் ஒளிவெள்ளம் கடலலைகளை ஈர்த்து வான் நோக்கி எழும்பச் செய்தது. வானின் ஒளிவீசும் அழகிய சின்னமாக காட்சியளித்தது. இக்கனவு, அரசிக்குப் பிறக்கப்போகும் மகன் நல்ல உடல்நலம் கொண்டவராக விளங்குவதுடன், அனைவராலும் விரும்பப்படுபவராகவும், மக்களின் துயர் நீக்கி அவர்களுக்கு மனஅமைதி வழங்குவார் என்பதை உணர்த்துவது.

    7. சூரியன்:
    மிகப்பெரிய வட்டவடிவில் தகதகக்கும் சூரியனைத் தனது ஏழாவது கனவில் கண்டார் அரசியார். அது இருளைக் கிழித்து காட்டுத் தீயின் செந்நிறம் போல ஒளிர்ந்தது. அதன் கதிர்கள் பட்டவுடன் செந்தாமரைகள் மலர்ந்தன. வானில் காணும் கோள்களின் தலைவனாகத் தோன்றினான் அந்தக் கதிரவன். வானில் விளக்காகச் சுடர்விட்டு ஒளிதந்து இருளில் நடக்கும் கயமைகளுக்கு முடிவு கட்டியது அந்தச் சூரியனின் சுடர்மிகு ஒளி. இந்தக் கனவு, பிறக்கப்போகும் அரசியின் மகனின் அறிவும் அருளும் மக்களின் அறியாமை என்னும் இருளை அழித்து, வாழ்வில் ஒளியேற்றும் என உணர்த்துவது.

    8. பெரிய கொடி:
    அரசியின் எட்டாவது கனவில் தங்கக் கம்பத்தின் மீது பட்டொளிவீசிப் பறக்கும் பெரிய கொடி ஒன்று தோன்றியது. அதன் உச்சியில் மயிலிறகுகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. கண்ணைக் கவரும் தோற்றத்தில் மென்மையாகக் காற்றில் அசைந்த அந்தக் கொடியில் சிங்கத்தின் படம் வரையப்பட்டிருந்தது. அந்தக் கனவு, உலகை நல்வழியில் நடத்தும் தலைவர் ஒருவர் பிறக்கப்போகிறார் என்று உணர்த்துவது.

    9. வெள்ளிக்கலசம்:
    படிகம் போன்று தெளிந்த நீர் நிரம்பிய வெள்ளிக் கலசமொன்று அரசியின் ஒன்பதாவது கனவில் தோன்றியது. குற்றங்களற்ற புனிதத் தன்மை கொண்ட நீர் நிரம்பிய அந்த அழகியக் கலசம் தாமரைமலர் சரத்தினாலும், மாலைகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. நற்குணங்களின் இருப்பிடமான புனிதர் அரசியின் மகனாகத் தோன்றுவார் என்பது இக்கனவு உணர்த்தும் பொருளாகும்.

    10. தாமரைத் தடாகம்:
    பத்தாவது கனவில் அரசியார் ஒரு தாமரைத் தடாகத்தைக் கண்டார். அதில் ஆயிரக்கணக்கில் மிதந்துகொண்டிருந்த தாமரை மலர்கள், சூரியக்கதிரொளி பட்டவுடன் மலர்ந்து நறுமணம் வீசின. ஒளிர்ந்த அந்தத் தடாகத்தில் கூட்டம் கூட்டமாக மீன்கள் நீந்தின, அல்லி இலைகள் மிதந்து கொண்டிருந்தன. இக்கனவு உணர்த்துவது, வாழ்க்கைச் சிக்கலில் உழலும் மக்களை, அவர்களது பிறவித் துயரத்தில் இருந்து விடுவிக்கும் ஆன்மிக அறிஞர் ஒருவர் அரசியின் மகனாகப் பிறப்பார் என்பதையே.

    11. பாற்கடல்:
    பொங்கிப் பாய்ந்து எங்கும் அலைபரப்பும் பாற்கடல் அரசியின் பதினோராவது கனவில் தோன்றியது. அக்கடலில் காற்று வீசிக் கொந்தளிக்கும் உயர்ந்த அலைகளும், பெரிய கடல்வாழ் உயிரினங்கள் எழுப்பும் ஆரவாரமான ஓசைகளும் நிறைந்திருந்தது. மிகப்பெரிய ஆறுகள் அக்கடலில் பாய்ந்து பெரும் சுழல்களை ஏற்படுத்தின. அக்கனவு குறிப்பது அரசிக்குப் பிறக்கப்போகும் மகன் அலைக்கழிக்கும் பிறவிப் பெருங்கடலைக் கடந்து, பிறப்புத்துயர் ஒழித்து முக்தி அடைவார் என்பதை.

    12. வானுலகின் பறக்கும் தேர்:
    அரசி கண்ட பன்னிரண்டாவது கனவில் தேவலோகத்தின் தேர் ஒன்றைக் கண்டார். நவமணிகள் பதிக்கப்பட்ட, பொன்னாலான சிறந்த 8,000 தூண்களைக்கொண்டிருந்த அந்தத்தேரின் கூரை பொற்தகடுகளால் வேயப்பட்டு, அழகிய நல்முத்துமாலைத் தோரணங்கள் கொண்டு அலங்கரிக்கப் பட்டிருந்தது. அதில் வரிசை வரிசையாகக் காளைகள், குதிரைகள், மனிதர்கள், முதலைகள், பறவைகள், குழந்தைகள், மான்கள், யானைகள், வனவிலங்குகள், தாமரை மலர்கள் ஆகியவற்றின் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. தேரில் இனிமையான தேவகானம் ஒலித்துக் கொண்டிருந்தது. மனதை மயக்கும் அகிற்புகையினால் நறுமணமூட்டப்பட்டிருந்தது. ஒளிரும் வெள்ளியின் ஒளி போன்ற வெண்ணிற ஒளி அத்தேரில் ஏற்றப்பட்டிருந்தது. அக்கனவு உணர்த்தும் பொருள், தேவலோகத்தினரும், கடவுளரும் மதிக்கும் வகையில் சிறந்த ஆன்மிகவாதியாகப் பிறக்கும் மகன் அனைவருக்கும் நல்வழிகாட்டுவார், அவரை வானுலகத்தில் உள்ளோரும் மதிப்பர் என்பதாகும்.

    13. மணிக்கற்களின் குவியல்:
    மேருமலை போன்ற பெரிய குன்றாக பற்பலவிதமான விலைமதிப்பற்ற நவமணிக்கற்கள் குவிந்திருப்பதையும், பூமியில் குவிந்து கிடந்த அவற்றின் ஒளி வான்வெளியைப் பிரகாசமாக்குவதையும் தனது பதின்மூன்றாவது கனவில் அரசி கண்டார். இக்கனவு, அவரது மகன் எல்லையற்ற நல்லொழுக்கத்தையும், அறிவையும் பெற்றவராக விளங்கப்போவதைக் குறிக்கிறது.

    14. புகையற்ற நெருப்பு:
    அரசி தனது பதினான்காவது கனவில் தீயில் சுத்தமான நெய்யும், தேனும் குடம் குடமாக வார்க்கப்படுவதையும், அத்தீயானது புகையின்றி கொழுந்துவிட்டு எரிந்து எங்கும் ஒளிவெள்ளம் பாய்வதையும் கண்டார். இக்கனவின் குறி, அரசிக்குப் பிறக்கும் மகனின் ஞானம் உலக ஞானிகள் அனைவரது ஞானத்தையும் விஞ்சும் தன்மையில் அமைந்து சிறந்த அறிஞராக விளங்குவார் என்பதாகும்.

    இவற்றுடன், 15. இணைந்த இருமீன்களும் (அறிகுறி: அழகிய திருவுருவம் கொண்டவர்) , 16. பொன்னாலான அரியணையும் (அறிகுறி: மிக உயர்ந்த ஆன்மீக நிலையை அடைபவர்), என மேலும் இரு கனவுகள் வந்ததாகவும் கூறப்படுவதுண்டு. அரசியார் கருவுற்றிருக்கையில் அற்புதமான 14 சுப கனவுகளைக் கண்டதாகவும் (சுவேதாம்பர வழிமுறை சமணம்), 16 சுப கனவுகளைக் கண்டதாகவும் ( திகம்பர வழிமுறை சமணம்) தொன்மங்கள் கூறுகின்றன. சுருக்கமாக; இக்கனவுகள் கூறுவது, சிறந்த ஆன்மஞானம் கொண்ட ஒருவர் பிறந்து, அனைவராலும் போற்றப்படும் வகையில் நல்லொழுக்கம் நிரம்பியவராக, அனைத்து உயிர்களிடமும் அன்புசெலுத்தி, மக்களின் பிறவித்துயர் நீங்கும் வகையில் நல்வழி நடத்தும் அறிவுரைகளைக் கூறி, அவர்கள் முக்தி அடையும் வழியைக்காட்டும் ஆன்மிகத் தலைவராக விளங்குவார் என்பதாகும்.

       The_Dreams_of_Queen_Trishala1Mahavir-Bhagawan-15119

    தான் என்றும் கண்டிராத வியப்பைத் தரும் கனவுகளைக் கண்டதாக அரசி திரிசலா தேவி தனது கணவர் மன்னர் சித்தார்த்தரிடம் கூறினார். அரசி கண்ட கனவின் பலனை உரைக்கக்கூடிய குறி சொல்லும் அறிஞர்களைத் தனது அரசவைக்கு வரவழைத்து விளக்கம் கேட்டார் அரசர். சிறந்த ஞானத்தைக் கொண்டவராக, ஆன்மிக வழிகாட்டும் அறிஞராக ஒரு இளவரசன் பிறக்கப் போகிறார் என்று அவர்கள் யாவரும் ஒருமனதுடன் கூறினர். இந்த நன்னிமித்தம் காட்டிய கனவினைக் கண்டு ஒன்பது மாதங்கள், இரண்டு வாரங்களுக்குப் பிறகு அரசி சைத்திர மாதம் வளர்பிறை பதின்மூன்றாம் நாளில் ஒரு ஆண்மகனை ஈன்றெடுத்தார். தனது மகனைக் கண்டு பெரிதும் மகிழ்ந்த பெற்றோர், தங்களது அரசகுல வழித் தோன்றலான அந்த மகனுக்கு, ‘என்றும் வளரும் செல்வத்தைக் கொண்டவர்’ என்ற பொருளில் “வர்த்தமானர்” என்ற பெயர் சூட்டினர்.

    இந்த வர்த்தமானரே சமணத் தொன்மங்கள் குறிக்கும் சமண சமயத்தின் 24 ஆவது தீர்த்தங்கரரும், உலகிற்கு நல்வழிகாட்டுவதற்காகப் பிறந்த சமண சமயத்தின் குருவான மகாவீரர் ஆவார். இஷ்வாகு பரம்பரைச் சேர்ந்த வர்த்தமானர், வைசாலிக்கு அருகே குன்டலகிராமா என்ற இடத்தில் (இந்நாளின் பீகார் மாநிலத்தில்) பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டில் பிறந்தார். இவர் வாழ்ந்தது பொ.ஆ.மு 599 – 527 காலம். தனது 30 வது வயதில் அரச வாழ்வைத் துறந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டு மக்களுக்கு ஆன்மிக வழிகாட்டினார். மகாவீரர் பிறந்த நன்னாளை இந்தியர் மகாவீரர் ஜெயந்தியாக இன்றும் கொண்டாடுகிறார்கள்.

    Dreams_of_Trishala

    ________________________________________________________________________

    Sources:

    Picture:
    Jainism: Illuminated Manuscripts and Jain art
    Victoria and Albert Museum
    South Kensington, United Kingdom
    http://www.vam.ac.uk/content/articles/j/jainism_illuminated_manuscripts-and-jain-paintings/

    Information:
    [1]
    The Dreams of Mother Trishala
    Jain Associations in North America
    Colorado State University
    http://www.cs.colostate.edu/~malaiya/j/dreams16/Dreams16.html

    [2]
    Trishala’s dreams
    History of Jainism, by Ramesh Chandra Dutt (1848-1909)
    http://www.herenow4u.net/index.php?id=85475

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே [ 25]

    இன்னம்பூரான்
    17 06 2016

    aii

    இல்லறம் வாழ்வியலில் மிகவும் முக்கியமானதாக அமைந்திருப்பதாலும், அது பெரும்பாலோருக்கு உகந்ததாக அமைந்து இருப்பதாலும், ஆண்-பெண் உறவு போற்றப்பட்டதாக அமைகிறது. இங்கு திருமணவைபவம் முன் நிறுத்தப்படவில்லை. நற்றிணை போன்ற சங்கப்பாடல்களில் அந்தரங்க உறவு மேன்மைப்படுத்தப்பட்டிருக்கிறது. சமுதாயத்தில் ஒருவனும் ஒருத்தியும் வாழும் வாழ்வில் காதல் – ஆணழகன் – பெண்ணரசி – உறவு என்பன அகம் எனப்படும். அகப்பொருளின் பாடு பொருள் ஆண் பெண் என்னும் இருபாலாரது காமம் ஆகும். காமம் என்பது உலக உயிர்களுக்கெல்லாம் உரியது. தேவருலகங்களில் செங்கோல் ஆட்சி செலுத்துகிறது. உடைமையது இன்பம் தருவது. இது குறித்துத் தொல்காப்பியனார் இவ்வாறு சொல்கின்றார்.

    எல்லாஉயிர்க்கும் இன்பம் என்பது
    தானர்ந்து வருஉம் மேவற்றாகும்.
    -தொல்காப்பியம் பொருளதிகாரம் – நூற்பா 27

    தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் அகம் புறம் குறித்து வரையறுத்துக் கூறுகின்றார். அகம் பற்றிக் கூறும் போது ‘ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம். . .’ என்றுதான் அவர் ஆரம்பிக்கின்றார். நாம் தான் அதன் காதில் ‘சிற்றின்பம்’ என்ற பூ சூட்டி விட்டு, தட் தடாவென்று தடை விதித்து விட்டு, ரகசியமாக, தடையை மீறுகிறோம். தொன்மை காலங்களிலிருந்து தற்காலம் வரை, தேவ வாக்குக்கள், அரசாணைகள், பிரகடனங்கள், சட்டங்கள் ஆகியவை ஆணும் பெண்ணும் பிரிந்தால் ஏற்படக்கூடிய குழந்தைகளின் தவிப்பு போன்ற சிக்கல்களை அலசி, ஆராய்ந்து, சில வழிமுறைகளை அமல் படுத்துகின்றனர்.

    சில உண்மையான நிகழ்வுகள்:

    மீனுவுக்கும் சீனுவுக்கும் 1978ல் திருமணம். பத்து வருடங்களில் மூன்று குழந்தைகள். அந்த காலகட்டத்தில், தான் இஸ்லாமியர் ஆகிவிட்டதாக சான்றுகள் காட்டி, மற்றொரு பெண்ணை மணந்து கொண்டான், சீனு.

    அதே வருடத்தில் [1988] சீதாவை மணந்த கிஷோர், அவளை துன்புறுத்தினான். மூன்றே வருடங்களில், மற்றொரு பெண்ணுடன் உடன்போக்கு சென்று, பின்னர் இஸ்லாமியராக மதம் மாறி மணந்து கொண்டான்.

    1992: கமலா என்போம், அவருடைய பெயரை, இங்கு. அவர் தாயகம் சென்று திரும்பினால், அவரது எட்டு வருட தாம்பத்தியம் நட்டாற்றில். அவரது கணவன் சந்திரன் விவாகரத்து வேண்டும் என்றான். திக்கிட்டுப்போன கமலாவின் மனம் உடைந்து விட்டது. அழுதுகொண்டே , மறுத்து விட்டாள். ஒரு வருடம் பொறுத்த பின், சந்திரன் தான் இஸ்லாம் மதத்தைத் தழுவி விட்டதாக கூறி, சாக்ஷியம் காட்டி, வேறு ஒரு பெண்ணை, புதிய மதம் அனுமதிக்கிறது என்று, மணம் செய்து கொண்டான்.

    நீங்கள் நீதிபதியாக இருந்தால் என்ன தீர்வு சொல்வீர்கள்? மூன்றும் நடந்து விட்ட சம்பவங்கள். தீர்வும் வழங்கப்பட்டது. அது பின்னர்.

    இரண்டு துணை வினாக்கள்: [1] சட்டவிரோதமாக பல இருதாரத்தினர் சகஜமாக உலவுகிறார்கள். சட்டம் அவர்களை என்ன செய்யும்?

    [2] குஜராத்தில் மைத்ரீகரார் என்ற காந்தர்வ விவாகம், காண்ட்றாக்ட் என்ற முறையில், ‘தொட்டால் உண்டு; விட்டால் போச்சு.’ என்ற நடைமுறையில் இருந்தது. சட்டம் அவர்களை என்ன செய்யும்?
    -#-

    சித்திரத்துக்கு நன்றி:
    http://allwallpapersnew.com/wp-content/gallery/cute-love-wallpaper-cute-wallpapers-mobile/Animated-Cute-Love-Wallpaper-e1332485702246.jpg

    இன்னம்பூரான்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ந்ருஸிம்ஹ மந்த்ரராஜம்
    ——————————–

    dc47cbdd-4586-444c-8d90-a9fa68285b8f
    “உக்ரம், வீரம் ,மஹாவிஷ்ணும் ,ஜ்வலந்தம் ,ஸர்வதோமுகம் |
    ந்ருஸிம்ஹம்,பீஷணம் ,பத்ரம் ,ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம் ||

    “வீரியன், வீரன் , வியாபகன் , சைதன்ய
    சூரியன் சூக்கும காரியன் -சீறிடும்
    சிங்கன் ,எதிரிக்கு சொப்பனம் ,காலகாலன்
    மங்களம் சேர்த்திடும் மால்”….

    “நானார் வினவ நரசிம்மம் ஆணவத்
    தூணார்வம் தட்டித் தகர்த்திடும், -மீனாமை
    ஏனசீய வாமன மூணுராம கண்ணனாய்
    ஆன ஜெயவிஜயம் அஃது”….

    “தனயன் அழைக்க
    துரும்பும் அசையவில்லை
    தகப்பன் உதைக்க
    தூண் பிளந்தது
    இரண்ய கசிவு”….

    ’’எந்தையே எவ்வுயிர்க்கும் முந்தையே ஏகாந்த
    சிந்தையே சிக்காத விந்தையே -கந்தையே
    ஆனாலு(ம்) என்நெஞ்சைக் கட்டிக் கசக்கிடு
    தூணாளும் சிங்கா தயவு’’….

    ’’தூணுண்டு வீட்டில் துரும்புமுண்டு, வாஞ்சையாய்
    நானுண்டு வாராய் நரசிம்மா -பூநின்ற
    சாந்த இலக்குமியை ஏந்திக் களிக்கின்ற
    காந்த வடிவில் கனிந்து….

    ’’முரணெனப் பட்டாலும் மூலமே நின்னை
    வரவழைக்கக் கண்டேன் வழியை -இரணியன்போல்
    இல்லை இறையென்று சொல்லி இரையாக
    மல்லுக்(கு) அழைப்பேன் முனைந்து’’….

    வெண்பாவில் ‘’பாகவதம்’’ எழுதிக் கொண்டிருக்கிறேன்….அதிலிருந்து….
    ————————————————————————–

    காட்டடா அந்தக் கருநீலப் பூதத்தை
    போட்டடைப்பேன் இத்தூணில் பூச்சியாய் -வேட்டையை
    ஆடத் துவங்கிய அப்பனுக்குக் காட்டினான்
    கூடத்து தூணுக்கே கை….

    பக்தப் பிரகலாதன் பேச்சை ருஜுப்படுத்த
    சக்திக்கு மீறிய சங்கடமாய் -திக்கெட்டை
    தேகமாய்க் கொண்டவன் ஏகினான் தூண்வேக
    வேகமாய் வைகுண்டம் விட்டு….

    கள்ளத் தனம்செய்தென் பிள்ளை பிடித்தவனே
    உள்ளத் துணிவிருந்தால் ஊர்ந்துவா -முள்ளிட்ட
    பாதுகையால் தூணுதைக்க பாதிநர பாதிசிங்கம்
    காதுசிகை கோதி குதிப்பு….

    சாயங்கா லம்வரை சண்டை புரிந்தந்த
    சீயங்கா லைமடித்து, சோர்ந்தெழுந்து -பாயும்
    இரணியனை தூக்கி இடைவாசல் வைத்து
    கரநுனியால் கீறிக் கிழிப்பு….கிரேசி மோகன்….

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 55

    டாஹாவ் நாஸி சித்ரவதை முகாம் அருங்காட்சியகம்(2), பாயார்ன், ஜெர்மனி.

    முனைவர்.சுபாஷிணி

    இனவெறி, மதவெறி, மொழிவெறி ஆகியன மனிதரை மனிதப்பண்புகளை இழக்கச் செய்வன. தன் இனம், சமயம், மொழி ஆகியவற்றின் மீது மனிதருக்கு ஆர்வமும், ஈடுபாடும், பற்றும் இருக்கலாம். ஆனால் அது வெறியாக மாறும் தன்மையைப் பெறும் போது தன்னைப் போன்ற சக மனிதரையே, தன் கொள்கையை நிலைநாட்டுவதற்காக வதைத்து துன்புறுத்தி கொல்லும் கொடும்மனமும் மனிதருக்கு வாய்த்துவிடும் அபாயம் இருக்கின்றது. நாம் அறிந்த உலக வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் இனம், மதம், மொழி ஆகியவற்றிற்காக இதுகாறும் இந்த உலகம் சந்தித்திருக்கும் மனித குல கொடூரங்கள் என்பது மிக அதிகம். பசுமை நிறைந்த புல்வெளிகள் ரத்தக்காடாக இருந்த வரலாற்று நிகழ்வுகள் கற்பனைகள் அல்ல. அவை உண்மை சம்பவங்கள். இந்த இன, மத, மொழி வெறியோடு தமிழர்களை இருக்கப்பற்றிக்கொண்டிருக்கும் மேலும் ஒரு வெறித்தனமான பொருள் ஒன்று உண்டு என்றால் அது தான் சாதி என்பது. சாதிக்காக தன் சக இன மனிதரையே மனதாலும் உடலாலும் வதைத்து துன்புறுத்தும் மனிதர்கள் நம்மிடையே ஏராளமானோர் உலவத்தான் செய்கின்றனர். இந்த வெறித்தனங்களெல்லாம் எவ்வகையிலும் யாருக்கும் நன்மையைத்தராதவை. கொடுமைகளும் கொடூரங்களும் வன்முறைகளும் அழிக்கும் தன்மையுடயவை அன்றி எந்த நற்பலனும் மனித குலத்திற்கு தராதவை.

    அன்று, ஐரோப்பா முழுமையையும் ஆரிய ஜெர்மானிய இனம் ஆளவேண்டும் என்னும் பேராசை அடோல்ஃப் ஹிட்லரின் மனதை ஆக்கிரமித்திருந்தது. அவரது கொள்கையைச் சித்தாந்தமாக்கி அதனைப் பரப்பினர் அவரது தளபதிகள். ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை வாசிக்கும் பொழுது அவரை விட அவரது சகாக்களும் அவர் கட்சியின் அரசியல் பொறுப்பாளர்களும், ஆரியரல்லாதோர், அதிலும் குறிப்பாக யூதர்களுக்கு மிக அதிகமாக கொடுமைகள் செய்தவர்கள் என்ற தகவலை அறிய முடியும்.

    ஜெர்மனியில் நாஸி கொடுமையைப் பற்றி பேசும் பலர் அதே வேளையில் இன்னும் சற்று வட மேற்கே பால்டிக் நாடுகளான, லித்துவானியா போன்ற நாடுகளில் அதே காலகட்டத்தில் இவர்கள் யூதர்களுக்கு இழைத்த கொடுமைகளைப் பற்றி பேசுவதில்லை.

    இதுமட்டுமா..? நாஸி கொடுமையில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை விட மிகப் பெரிது என அறியப்படுவது துருக்கி ஆர்மேனியர்களை ஒன்றாம் உலகப்போர் காலகட்டத்தில் கொன்று குவித்த சம்பவம். ஜெர்மனியின் நாஸி கொடுமை பேசப்படும் அளவிற்கு இந்தக் கொடும் நிகழ்வு உலக அளவில் பேசப்படுவதில்லையே என்ற வியப்பு எனக்கு மட்டுமல்ல, பொதுவாக ஐரோப்பிய வரலாற்றில் ஆர்வம் உள்ளோருக்கு மனதில் எழும் கேள்வியே.

    வன்முறைகள் என்று தொடர்ந்தால் இப்படி யோசித்துக் கொண்டே செல்லலாம். சரி..டாஹாவ் மனித சித்ரவதை முகாம் பற்றி மேலும் தொடர்வோம்.

    as
    சித்ரவதை செய்யப்படும் பங்கர் பகுதியின் வெளித்தோற்றம்

    இந்த முகாம் இயங்கிய 12 ஆண்டுகாலத்தில் அரசியல் கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருந்த பங்கர் இருக்கும் பகுதி SS என்ற குறியீட்டுப் பெயரால் அழைக்கப்பட்டது. இங்கு அடைத்து வைக்கக்கொண்டு வரப்படும் கைதிகள் இங்கிருக்கும் பங்கரின் மற்றொரு பகுதியில் பல அடுக்கு படுக்கைகள் வைத்த நீண்ட அறையில் தங்கி வருவர். ஆனால் பங்கர் பகுதியில் தான் தனித்தனியாக இவர்களைக் கொண்டு வந்து அடித்து துன்புறுத்தி தகவல்களைப் பெறும் கொடூரங்கள் நிகழும்.

    as1

    பங்கர் உள்ளே

    ஒவ்வொரு நாள் காலையும் வரிசையாக எல்லா கைதிகளும் வெளிப்புற பகுதிக்கு வந்து விடவேண்டும். இவர்கள் அங்கே வெயிலோ மழையோ, பனியோ எதுவாகினும் 1 மணி நேரம் காலையில் நிற்க வேண்டும். அப்போது கைதிகள் எண்ணிக்கை எடுக்கப்படும். யாரேனும் தப்பி ஓடியிருந்தால் ஏனையோர் மேலும் பல மணி நேரங்கள் தண்டனையாக அங்கேயே நிற்க வேண்டும். மின்சாரம் பொருத்தப்பட்ட கம்பிகளையும் மீறி ஒரு சிலர் தப்பித்துச் சென்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. இப்படி பல மணி நேரங்கள் இங்கே நிற்கும் வேளையில் சிலர் அங்கே யே மயங்கி விழுந்து இறந்தும் போயிருக்கின்றனர்.

    as2

    பங்கர் அறையின் முன்

    தற்சமயம் பங்கர் முழுதுமே அருங்காட்சியமாக்கப்பட்டிருப்பதால் இங்கு இறந்தோர் பட்டியல் அவர்களது விபரங்கள் ஆகியன இங்கே புகைப்படங்களோடு வழங்கப்பட்டுள்ளன. அப்படி இறந்தோரில் ஜோர்ஸ் எல்சர் என்பவரும் ஒருவர். இவர் 1939ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி அடோல்ஃப் ஹிட்லரை வெடிகுண்டு வைத்து கொல்ல முயற்சித்தார். அது தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாக இவர் சிறைபிடித்து வந்து இந்த டாஹாவ் சித்ரவதை முகாமில் அடைக்கப்பட்டார். ஏப்ரல் 9ம் தேதி 1945ம் வருடம் இவர் சித்ரவதை செய்யப்பட்டு இதே முகாமில் கொலை செய்யப்பட்டார். இவரைப்போல இறந்தோர் ஏராளம்.

    as3

    விசாரனைக்கு அழைத்து வரப்படும் இக்கைதிகள் பலவகை சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இப்படி சித்ரவதை செய்யப்பட்டு ஆனால் பின்னர் உயிருடன் இங்கிருந்து வெளியேறியவர் பூசன்கைகர். இவரை சிறை அதிகாரிகள் 1934ம் ஆண்டில் பெப்ரவரி முதல் அக்டோபர் வரை ஒரு இருட்டு அறையில் காலில் இரும்பு சங்கிலி கட்டி அடைத்து வைத்து சித்ரவதைச் செய்தனர். இவர் அதனை படமாக வரைந்து கொடுக்க அந்தப் படம் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    as4

    இதே போன்ற மற்றொரு புகைப்படம். கொலைசெய்யப்பட்ட யூத சிறைக்கைதி லூயுஸ் ஸ்லோஷ் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதை விளக்கும் வகையில் இங்குள்ளது. இவர் இறந்த போது கொலைசெய்யப்பட்டாலும் அறிக்கையில் இவர் தற்கொலை செய்து கொண்டார் என்றே எழுதப்பட்டதாகவும் இங்குள்ள குறிப்பு சொல்கின்றது.

    as5

    இப்படி ஏராளமான நிகழ்வுகள் வன்கொடுமைகள் இங்கே நிகழ்ந்துள்ளன.

    அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் இங்கு வந்து மீட்கும் பணியில் ஈடுபட்ட போது அடைபட்ட சில சாமான்கள் வைக்கும் அறைகளில் கொத்து கொத்தாக இறந்த மனிதர்களின் சடலங்களைப் பார்த்து அதிர்ச்சியுற்றனர். நாஸி அரசியல் சித்தாந்தத்திற்கு எதிர் குரல் எழுப்புவோரையெல்லாம் பிடித்து வந்து துன்புறுத்துவதோடு அவர்களைக் கொலை செய்து குவித்து வைத்த்திருந்தனர் இந்த முகாமின் அதிகாரிகள் சிலர்.

    as6

    அவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம். அடுத்த பதிவில் தொடர்ந்து வாருங்கள்!

    தொடரும்…
    சுபா

    Share
  • ”படமும் பாடலும்” – கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    1dc91eaa-e8e4-4606-acab-37bab07ad3b1

     

    “காத்திருத்தல்” தான்காதல்
    முதல் எழுத்து “கா”
    முடிவெழுத்து “தல்”
    சேர்த்துப் படித்தால் ‘’காதல்’’

    தலையெழுத்து ”கா”….
    காலெழுத்து ”தல்”….
    கால் வலிக்கக் காத்திருத்தல்
    காதல் தலையெழுத்து ….கண்ணன்….

     

     

    ”படமும் பாடலும்”
    ————————————-

    காலை வரப்போகும் கேசவ்தன் கண்ணனுக்காய்,
    ஆலைக் கரும்பாய் அரேபியப் -பாலையில்
    காத்திருக்காள் ராதைப்பெண்: , காத்திருத்தல் தான்காதல்
    சூத்திரத்தை சொன்னான் சிரித்து ….கிரேசி மோகன்….
     

     

     

    Share
  • திட்டமிட்ட படைப்பு

     

    சி. ஜெயபாரதன், கனடா
    aj

    பிரபஞ்சக் காலவெளி அரங்கம்
    படைப்பாளியின்
    ஒரு பெரும் நூலகம் !
    கடவுள் படிப்படி யா​ய்​த் திட்டமிட்டு
    முடங்கும் கருந்துளையே !
    தானாய் எதுவும் தவழாது !
    வீணாய் இப்பேரண்டம்
    தோன்ற வில்லை !

    மூல வித்து
    ஒன்றி லிருந்து ஒன்று
    உருவாகிச் சீராகி வந்துள்ளது !
    இல்லாத ஒன்றி லிருந்து,
    எதுவும்
    எழாது, எழாது, எழாது !
    இயக்கும் சக்தி ஒன்று,
    இல்லாமல்,
    கட்டுப் படுத்தாமல்,
    திட்டமிடப் படாமல்
    எதுவும்
    கட்டப்பட வில்லை !

    பிரபஞ்சப் படைப் பனைத்தும்
    காரண-விளைவு
    நியதியில்
    சீரொழுங்கு இயக்கத்தில்
    நேரான மீளும் நிகழ்ச்சியில்
    வேரா​ய்த் தொடர்பவை
    விழுது, கிளை விட்டு !
    தாறு மாறாகத்
    தாரணி உருவாக வில்லை !

    தேனெடுக்கும் தேனீக்கள்,
    அணி வகுக்கும் எறும்புகள்,
    கூடு கட்டும் தூக்கணாம் குருவி,
    ஈக்கள், ஈசல்கள்,
    காக்கை, கழுகு, பேசுங் கிளி
    நீந்தும் மீனினம்,
    ஊர்ந்திடும் இலைப்புழு,
    புழு மாறிப்
    பறக்கும் பட்டாம் பூச்சி,
    மரங்கள், காய் கனிகள்,
    மனிதம், விலங்கினம் யாவும்,
    உயிரியல்
    கணித விஞ்ஞான​த்தில்
    திட்டமிடப் பட்டுத் தோன்றியவை.
    காலவெளி நூலகத்தில்
    கடவுள் படைத்திட்ட
    மனிதப் பிறவியே
    உன்னத
    ஓர் மணி யந்திரம் !

    ++++++++++++++++++a

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    7cf97cbf-61ac-449a-aa79-a0cb25aac405

    வராத வரதனவன் வந்தான் வரங்கள்
    கராதலம் ஏந்தி, கடையின் -தராதரம்
    சோதித்(து) அளித்தான், சகோதரி காமாக்‌ஷி
    ஆதிக்கக் காஞ்சியில் அன்று ….கிரேசி மோகன்….

    Share
  • கிராமங்களின் சேரி

    — க. சிவா.

     

    Capture

    இந்தத் தலைப்பினைப் பார்த்தவுடன் அனைவர் மனத்திலும் எழும் ஒரே ஐயம், “கிராமங்களில் சேரியா?” என்பதாகத் தான் இருக்கும். ஆம், நம் இந்திய நாட்டில் நகரங்களில் மட்டும் சேரிகள் கிடையாது, கிராமங்களிலும் உண்டு. சேரிகள் என்றாலே நம் மனதில் நம் மனதில் தோன்றுவது சேறு, சகதிகள் நிறைந்த இடத்தில் மக்கள் வாழ்வதையே நகரங்களில் சேரிகள் என்று அழைப்போம். பெரும்பாலும் இந்தச் சேரிகளில் வாழும் மக்கள் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் போன்றவற்றில் பின் தங்கியவர்களாகவும் புறம் தள்ளப்பட்டவர்களாகவும் வாழ்கின்றனர். இந்த ஆய்வுக்கட்டுரையில் நான் கிராமங்களின் சேரிகள் என்று குறிப்பிடுவது கிராமங்களில் காணப்படும் காலனி (colony = குடியிருப்புப்பகுதி) வீடுகளைத் தான்.

    அடுத்து, நான் ஏன் காலனி வீடுகளைக் கிராமங்களின் சேரிகள் என்று குறிப்பிடுகிறேன் என்ற வினா எழும்? நம் கிராமங்களில் பெரும்பாலும் காலனி வீடுகள் கிராமத்தின் மையப் பகுதிகளில் அமைவது கிடையாது, காலனி என்றாலே ஒரு கிராமத்தின் கடைக் கோடியிலேயே காணப்படுகின்றன. அல்லது ஒரு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமமாக இருப்பின் காலனிகள் மட்டும் தனி ஊராகவோ அல்லது தனித் தெருவாகவே கருதப்படும். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமத்திற்கு சென்றால் அங்குக் குடிசைகள் நிறைந்த பகுதிகள் தான் கிராமங்களில் சேரிப் பகுதிகளாகத் திகழ்ந்தது. ஆனால், இப்பொழுது அந்தச் சேரிகள் நவீனமயமடைந்து உள்ளன. நவீனமடைதல் என்பது ஒன்றும் இல்லை, அது அரசால் கட்டித்தரப்பட்டுள்ள இந்திரா நினைவு குடியிருப்பு மற்றும் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டித்தரப்பட்டுள்ள வீடுகள் தான் ஆகும். வீடுகள் நவீனமடைந்தாலும் வீதிகள் இன்னும் நவீனமடையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

    வீடுகள் நவீனமாவதால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரலாம். தெருக்களின் தரம் உயர்த்தப்பட்டாலே மக்களின் சுகாதாரத்தினை பேணிக் காத்திடல் முடியும். பொதுவாக நாம் ஒரு கிராமத்திற்கு சென்றால் அங்கு உள்ள காலனி வீதிகளையும் அந்த வீதிகளில் எந்த மக்கள் குடியிருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்தாலே தெரிந்து விடும். மக்களுக்கு வீடுகளை மட்டும் நன்றாகக் கட்டித்தந்த இந்த அரசு ஏன் அனைவரும் பயன்படுத்தும் வீதிகளைக் கண்டுகொள்வதில்லை. சமீபத்தில் நான் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன், அப்பொழுது அங்கு நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அந்த மழை பெய்து முடித்தவுடன் கிராமத்திற்கு சென்று பார்த்தால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. அந்தக் கிராமத்தின் மறு பகுதிக்கு சென்று பார்த்தால் அங்குத் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன. அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளைப் பார்த்தால் அனைத்தும் சிமெண்ட் கான்கிரீட் கட்டிடங்களான தொகுப்பு வீடுகள் என்று அழைக்கப்படும் இந்திரா நினைவுக் குடியிருப்பு திட்ட வீடுகளும் பசுமைத்திட்ட வீடுகளும் அவரவர் சொந்த வீடுகளும் அடங்கும். இப்படி நன்றாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மத்தியில் தண்ணீர் தேங்கி சேறும் சகதிகளும் நிறைந்து காணப்பட்டன. இந்தப் பகுதி மட்டும் ஏன் இவ்வாறு இருக்கின்றன என்று பார்த்தால் அது தான் கிராமங்களின் சேரியான காலனிப் பகுதி.

    இதுவே பெரும்பாலான கிராமங்களில் உள்ள காலனிப் பகுதிகளின் நிலையாக உள்ளது. நகரத்தில் உள்ள சேரிகளைக் கூட குடிசை மாற்று வாரியத்தில் இருந்து மாற்றும் பொழுது அவர்களுக்கு நல்ல தரமான தார் சாலையே, சிமெண்ட் சாலையே அமைத்துத் தரப்படுகிறது. ஆனால் கிராமங்களில் உள்ள அனைத்துக் குடிசைகளும் மாற்றப்பட்ட பின்னரும் கூட பெரும்பாலான கிராமங்களில் எவ்வித சாலைகளும் அமைக்கப்படாமல் மழைக் காலங்களில் மக்கள் சேற்றில் தான் நடந்து சென்றாக வேண்டும். சிறுவர்களும் கூட சகதிகளில் தான் விளையாடுகின்றனர். மழைக்காலங்கள் வந்தால் போதும் சேரி மக்களுக்குத் தொற்று நோய்களும் வந்துவிடும். இதுதான் இந்தச் சேரிகளின் காலங்காலமாக உள்ள நிலையோ? இந்த நிலை எப்பொழுது மாறுமோ? சேரிகள் என்றாலே ஊரின் மையப் பகுதியை விட்டு ஒதுக்கியும் அதில் வாழ்பவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருப்பதுவும் தான் இந்தச் சேரிகளின் நிலையாக உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் கடந்து விட்ட சூழ்நிலையிலும் கூட இந்தியாவில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் சேரிகளாகவே இருக்கின்ற அவலம் இன்றளவும் தொடர்கின்றன. கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லும் பாரதத்தில் கிராமங்கள் சேரிகள் ஆக்கப்படுவதால் முதுகெலும்புகள் மெல்ல மெல்லத் தேய்மானம் அடைவதற்குள் இந்த அரசும் நாட்டு மக்களும் இதனைக் கவனித்து காப்பாற்றியாக வேண்டும்.

    __________________________________________

    க. சிவா,
    ஆராய்ச்சியாளர்,
    அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகவியல் துறை,
    காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்,
    காந்திகிராமம். திண்டுக்கல்- 624302.
    Email: yaswanthshiva@gmail.com

    __________________________________________
    படம் உதவி:

    வெள்ளத்தில் மிதக்கும் காஞ்சிபுரம் – வறட்சியில் வாடும் தருமபுரி

    Share
  • பெற்றோர் ஆசிரியர் கழக கலந்தாய்வுக் கூட்டம்

    தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்தோரை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். இறைவணக்கமாக அபிராமி அந்தாதி மாணவிகளால் பாடப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாமலை செட்டியார் நிகழ்ச்சிக்குத் தலைமை தங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை சார்ந்த தாமோதரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அறிவியல் வித்தைகள் தொடர்பாக பெற்றோரிடம் பேசினார். கூட்டதில் தேசிய திறன் வழி தேர்வில் 4 மாணவர்கள் வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவ, மாணவியர் விடுமறை எடுக்காமல் பள்ளிக்கு தொடர்ந்து வரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்குப் பெற்றோர் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

    நிகழ்ச்சியில் திருக்குறளை இசையோடு நடனமாடும் நிகழ்ச்சி மாணவிகளால் நடத்தப்பட்டது.
    1 ம் வகுப்பு மாணவ, மாணவியர் பஞ்சபூதம்,கண்டங்கள்,மகாத்மா காந்தி தொடர்பான பாடல்களை தங்கள் மழலை மொழியில் அழகாக பாடிக் காண்பித்தார்கள்,
    1 ம் வகுப்பு திவ்ய ஸ்ரீ தன் சுத்தம் பற்றி ஆங்கிலத்தில் எடுத்துக் கூறினார்,
    2 ம் வகுப்பு மாணவி தேவதர்சினி பாரதியார் பாடல் பாடினார்,
    2 ம் வகுப்பு மாணவர் வெங்கடராமன் ஒற்றுமை உணர்வு தொடர்பாகவும்,
    3 ம் வகுப்பு கீர்த்தியா திருமுருகாற்றுப்படை பாடலையும்,
    3 ம் வகுப்பு ஜனஸ்ரீ ஜவஹர்லால் நேரு தொடர்பாக ஆங்கில உரையும்,
    6 ம் வகுப்பு ரஞ்சித் தன்னம்பிக்கை கவிதையும்,
    4 ம் வகுப்பு அஜய்பிரகாஷ் நேரம் தவறாமை தொடர்பாக உரையும்,
    7 ம் வகுப்பு ராஜேஸ்வரி தேவராம் பாடலையும்,
    8 ம் வகுப்பு தனம் வள்ளுவர் பற்றியும்,ஆகாஷ் குமார் மாணவரும்,சமுகத்தொண்டும் என்கிற தலைப்பில் உறையும் நிகழ்த்தினார்கள்.
    முன்னாள் மாணவர் நடராஜனின் தந்தை ராமச்சந்திரன் பள்ளியில் தன் மகன் இது வரை பெற்ற அனைத்து சான்றிதழ்களையும் விரிவாக எடுத்துக் கூறினார்.

    பெற்றோர்கள் உமா மகேஸ்வரி, மீனாள் , காந்தி, லெட்சுமி ஆகியோர் பள்ளியை பற்றிப் பேசினார்கள். ஆசிரியை வாசுகி, முத்து மீனாள் ஆசிரியர் ஸ்ரீதர், கருப்பையா ஆகியோர் மாணவர்கள் தொடர்பாகவும், பெற்றோர்கள் செய்ய வேண்டியது தொடர்பாகவும் விளக்கிக் கூறினார்கள்.ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.

    Capture

    Capture1

    Capture2

    பட விளக்கம் : IMJ -5748,5731 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட நிகழ்ச்சியில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாமலை,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை சார்ந்த தாமோதரன்

    பட விளக்கம் : IMJ – 5743 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட நிகழ்ச்சியில் திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    Thanks & Regards,

    L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
    Head Master,
    Chairman Manicka Vasagam Middle School,
    Devakottai.630 302.
    Sivagangai Dist.
    TamilNadu.
    09786113160.
    E-Mail : jeyamchok@gmail.com
    http://www.kalviyeselvam.blogspot.in/

    Share
  • தனித்தமிழ் இயக்கம் குறித்து அறிஞர்கள் உரைகள்

    வணக்கம்
    தனித்தமிழ் இயக்கம் குறித்து அறிஞர்கள் தங்கப்பா, இரா. இளங்குமரனார் ஆற்றிய உரைகளைக் காணொளியாக இணைத்துள்ளேன்.

    அன்புகூர்ந்து காணவும்.
    தங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டுகின்றேன்.

    ம.இலெனின் தங்கப்பா
    https://www.youtube.com/watch?v=YqgRtO7MSL4&feature=youtu.be

     

    இரா. இளங்குமரனார்
    https://www.youtube.com/watch?v=6nYDsaUJswg&feature=youtu.be

     

     

     

    பணிவுடன்
    மு.இளங்கோவன்
    புதுச்சேரி,இந்தியா

    முனைவர் மு.இளங்கோவன்
    Dr.Mu.Elangovan
    Assistant Professor of Tamil
    K. M. Centre for Postgraduate Studies,
    Government of Puducherry,
    Puducherry-605 008, India

    E.Mail : muelangovan@gmail.com
    blog: http://muelangovan.blogspot.com
    cell: +91 9442029053

    Share
  • உலகிலே பிரமிக்கத் தக்க ஜப்பானின் மிகப்பெரும் ஊஞ்சல் பாலம்

    சி. ஜெயபாரதன்.

     

    (1998)

    [Japan ‘s Akashi Kaikyo Suspension Bridge]

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

     

    பூர்த்தி அடைந்தது பூதப் பெரும்பணி!

    பொன்முலாம் பூசும் மேற்கில் செம்பரிதி!

    குன்றென உயர்ந்தது கோபுரப் பொன்பாலம்!

    ஊஞ்சற் தட்டில் ஒய்யார மாக

    பவனி வரும் அணி அணியாக

    தரணியின் வாகனப் படைகள்!

    பிரதம எஞ்சினியர்: ஜோஸஃப் ஸ்டிராவ்ஸ் (1937)

    [Joseph Strauss, Chief Engineer, Golden Gate Bridge, San Francisco]

     

    Bridge -1

    ஜப்பானில் பூர்த்தி அடைந்தது பூதப் பெரும்பணி!

    1937 மே 27 ஆம் தேதி தங்கத்தில் வார்த்த இறுதித் தட்டாணியை [Golden Rivet] பொன்வாயில் பாலத்தில் புகுத்திய போது ‘பூர்த்தி அடைந்தது பூதப் பெரும்பணி ‘ [The Mighty Task is Done] என்று புகழ் பெறும் கவிதையை எழுதிப் பெரு மூச்சு விட்டார், தலைமை எஞ்சினியர் ஜோஸஃப் ஸ்டிராவ்ஸ்! உலகெங்கும் சுமார் 400 பாலங்கள் கட்டி அனுபவம் பெற்ற ஸ்டிராவ்ஸ் தனது முதல் சவாலாக பொன்வாயில் தொங்கு பாலத்தை அமைக்கும் இமாலயப் பணியை மேற்கொண்டார்! அலை வெள்ளமும், புயல் அடிப்புகளும், பூகம்ப ஆட்டங்களும் இன்னல் தரும் பசிபிக் வளைகுடாவில், பாலம் கட்ட முடியாது என்று பல்லாண்டுகள் பல எதிர்ப்பாளிகள் விட்ட சொல்லடிகளை மீறி, ஓர் அசுரத் தோற்றமுடைய கவின்மிகு பாலத்தைக் கட்டி முடித்தார், ஜோஸஃப் ஸ்டிராவ்ஸ்!

    Bridge -11

    ஸ்டிராவ்ஸ் ஓர் உன்னத கட்டிடத் தளவாட எஞ்சினியர் [Structural Engineer] மட்டும் அல்லர். அவர் ஒரு கவிஞர், தீர்க்க தரிசி. கனவுகளுக்கு வடிவமும் இயங்கு சக்தியும் அளிக்கும் ஓர் ஆக்கவியல் துறைஞர். தொங்கு பாலத்தைப் பல நாட்களாய்க் கனவு கண்ட ஸ்டிராவ்ஸ், நாலரை ஆண்டுகளில் சிறப்பாகக் கட்டி முடித்து, உலகப் பெருஞ் சாதனைகளில் ஒன்றாக ஸான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாவில் பொன்வாயில் பாலத்தை அமைத்துக் காட்டினார். அமெரிக்காவின் கட்டிடப் பொறியியற் துறைக் குழுவினர் பொன்வாயில் பாலம் நவீன உலகின் ஏழு விந்தைகளில் ஒன்று என்று பறைசாற்றுகிறார்கள். அமெரிக்கா 1937 இல் வெற்றிகரமாக பசிபிக் வளைகுடாவில் முதல் நீண்ட ஊஞ்சல் பாலத்தைக் கட்டியது, உலகில் பலரது வல்லமைகளைத் தூண்டி விட்டு அதைவிடப் பெரிய தொங்கு பாலங்களைத் தோற்றுவிக்க வழி வகுத்தது!

    Bridge

    ஜப்பானின் ஒப்பற்ற உலகப் பெரும் தொங்கு பாலம்!

    அமெரிக்காவின் உன்னதப் பொன்வாயில் பாலத்தை விட, பிரமிக்கத் தக்க முறையில் பால அகற்சி [Span] அதிக முடைய உலகத்திலே மிகப் பெரிய பாலத்தை ஆகாஷி நீர்ச்சந்தியில் [Akashi Strait], ஜப்பான் கட்டி முடித்து 1998 ஏப்ரல் 5 ஆம் தேதி, வாகனப் பயணங்களுக்குத் திறந்து விட்டது! அப்பாலம் ஜப்பானின் அவாஜி தீவைக் [Awaji Island] கோபி நகருடன் [Kobe City] இணைக்கிறது. ஆகாஷி கைகியோ என்று அழைக்கப்படும் அப்பெரும் பால இணைப்பு, ஜப்பான் உள்நாட்டு வணிகத்துறை விருத்திக்கும், அன்னிய தொழிற்துறைக் கம்பெனிகள் நிதிநடவுக்கும் [Foreign Investments] வழி வகுத்துத் தொடர்புகள் ஏற்பட விதை யிட்டது.

    37000 Cable Strings

    Bridge -12

    1995 ஜனவரி 17 இல் 7.2 ரிக்டர் அளவில் ஆட்டிய ஹான்ஷின் பெரிய பூகம்பத்தில் [Great Hanshin Earthquake] கட்டிக் கொண்டிருந்த ஆகாஷி பாலத்தின் கோபுர அடித்தளக் கடற்தூண்களையும் [Caisson Foundations], ஆழமான ஆப்பு மேடைகளையும் [Anchorages] நிலநடுக்கம் அசைத்துப் பெரும் அச்சத்தை உண்டாக்கி விட்டது! நிலநடுக்கம் ஓய்ந்தபின் பாதக விளைவுகளைக் கருவிகள் மூலம் அளந்து பார்த்ததில், பூகம்பம் இரு கோபுர அகற்சி [Span] தூரத்தைச் சுமார் ஒரு மீடர் அதிகரித்து விட்டது! கோபுரத்தின் கடற்தூணுக்கும் அவாஜித் தீவுப் பக்க [Awaji Island] ஆப்பு மேடைக்கும் இடைப்பட்ட தூரத்தை 30 செ.மீ. மிகைப்படுத்தி விட்டது! ஆயினும் அச் சேதாரங்கள் யாவும் குறைந்த நிலை விளைவுகளே!

    Structure -3

    நிலநடுக்க உலுக்கு மையம் [Epicenter] 150 கி.மீ. தூரத்தில் தோன்றி உச்சமாக 8.5 ரிக்டர் அளவுக்குத் தாக்கினாலும், ஆகாஷிப் பாலம் தாங்கிக் கொள்ள அமைக்கப் பட்டது, ஜப்பானிய எஞ்சினியர்களின் கூரிய டிசைன் யூகங்களை, உலகப் பாராட்டுக்கு உரியனவாய் ஆக்கின. ஆகாஷிப் பாலத்தைக் கட்டி முடிக்க பத்தாண்டுகளும், 4.3 பில்லியன் டாலர் செலவும் ஆயின. பிரம்மாண்டமான அப்பாலத்தை கட்டிய நபர்களின் கூட்டு எண்ணிக்கை இரண்டு மில்லியன் என்று அறியப்படுகிறது! அத்தனை பேர்களில் பலர் பத்தாண்டுகள் கடற் பாலத்தில் நேரிடையாகப் பயங்கர வேலை செய்தாலும் ஒரு நபர் கூட உயிரிழக்க வில்லை என்னும் பாதுகாப்பு பணியாற்றல் ஒழுக்கம் அடுத்த பெரும் உலகப் பாராட்டுக்கு உரியது.

    Bridge -10

    பிரளய இன்னல்கள் நிகழும் ஜப்பானில் பிரமிக்கத் தக்கப் பாலம்!

    ஆகாஷி நீர்ச்சந்தியின் போக்குவரத்துச் சந்தடி மிக்கத் துறைமுகத்துக்கு நீந்திவரும் கப்பல்களின் எண்ணிக்கை, நாளொன்றுக்கு சராசரி 1400 என்று அறியப்படுகிறது! கோபி நகருக்கு மேற்கே 6 மைல் தூரத்தில் ஆகாஷி நீர்ச்சந்தி உள்ளது. நீர்ச்சந்தியின் அகலம் 2.5 மைல். அங்கே பாலம் ஏற்படுத்த வேண்டுமானால், கப்பல் நகர்ச்சிகளுக்கு எந்தவித இடையூறும் நேராதவாறு அமைக்க வேண்டும். பூகோள அமைப்பில் மிகக் கொடூரக் காலநிலை அபாயங்களைச் சூழ்ந்தது, ஜப்பான்! ஆகாஷி நீர்ச்சந்தியை அடிக்கடிக் கலக்கி அடிக்கும் அசுர சூறாவளிப் புயல்கள்! ஆண்டுக்குத் தவறாது சராசரி 57 அங்குல அளவில் கொட் டிப் பெய்யும் பேய் மழைகள்! சுனாமிகள் [Tsunamis] என்னும் ஹரிக்கேன்கள், நிலநடுக்கங்கள், எரிமலைகள் என்று அடுத்தடுத்துத் தாக்கும் இயற்கையின் திருவிளையாடல்களால் ஏற்படும் இடர்கள், இன்னல்கள், உயிரிழப்புகள், நிதி விரையங்கள் ஜப்பானில் கொஞ்சமல்ல!

    Bridge Anchor

    Caisson Fondation

    அவ்விதப் பிரச்சனைகள் எல்லாவற்றையும் தாங்கிப் பிழைத்துக் கொள்ளும் ஓர் உறுதியான ஊஞ்சல் பாலத்தை [Suspension Bridge] உருவாக்க எஞ்சினியர்கள் எவ்விதச் சிக்கலான டிசைன்களைக் கையாண்டனர் என்பது நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள். பாலத்தின் முழுநீளப் பாதைத் தட்டின் கீழ்ப்புறமும் கோணமுட்டு இரும்புச் சட்டங்கள் [Triangular Braces] கூடிய ஒரு கட்டமைப்பைப் [Truss] பிணைத்திருந்தனர். அந்தச் இரும்புச் சட்டங்கள் புயல் காற்றடிக்கும் சமயத்தில், பாலத்தட்டுத் திருகிச் சுருண்டு விடாதபடிப் பாதுகாப்பவை! மேலும் கோண விட்டக் கூட்டிணைப்புகள் பாலத்துக்கு உறுதி அளிப்பதோடு, காற்றடிக்கும் போது பாலத்தைக் குப்புறத் தள்ளும் பளுவைக் குறைத்து, எளிதாய்ப் புகுந்து வெளியேற வழி வகுக்கின்றன!

    Bridge Location & Details

    Bridge Caterary

    அடுத்து பாலத்தைத் தாங்கும் கோபுரத்தில் ஒவ்வொன்றும் 10 டன் எடையுள்ள 20 ‘இணங்கும் பளு முடக்கிகள் ‘ [Tuned Mass Dampers (TMD)] மாட்டப் பட்டன. கோபுரத்தின் மீது மோதும் காற்றுப் பளுவால் ‘நெளிவுகள் ‘ [Deflections], திருகு அதிர்வுகள் [Torsional Vibration] ஏற்படாதபடி பளு முடக்கிகள் பாதுகாக்கின்றன. காற்றடித்துக் கம்பம் ஒருபுறம் சாயும் போது, ஊஞ்சல் போன்ற [Swinging Pendulum] பளு முடக்கிகள் சுயமாக எதிர்ப்புறம் உருண்டு, செங்குத்து நிலை மீட்கப் படுகிறது. இவ்வித டிசைன் ஏற்பாட்டில் சூறாவளிப் புயல் மணிக்கு 180 மைல் வேகத்தில் அடித்தாலும், கோபுரங்கள் நிமிர்ந்த நிலைக்கு எப்போதும் கொண்டு வரப்படுகின்றன. உச்ச ரிக்டர் அளவு 8.5 பூகம்ப நிலநடுக்கம் ஆட்டம் ஏற்பட்டாலும், கோபுரங்கள் சாய்ந்து விடாமல் நிமிர்ந்த நிலையிலே நிற்க, பளு முடக்கிகள் துணை புரிகின்றன!

    ஆகாஷி கைகியோ தொங்கு பாலத்தின் பொது அமைப்பு

    ஆகாஷி கைகியோ பாலம், ‘முத்துப் பாலம் ‘ [Pearl Bridge] என்றும் அழைக்கப் படுகிறது. கைகியோ என்றால் நீர்ச்சந்தி [Strait] என்று அர்த்தம். ஆகாஷி நீர்ச்சந்தியில் 12828 அடி [3913 மீடர் (2.4 மைல்)] நீளம் கொண்ட ஆகாஷி பாலம் கோபி நகரை அவாஜி-ஷிமா தீவுடன் இணைக்கிறது. நீர்ச்சந்தியின் அகலம்: 2.4 மைல் [4 கி.மீ]. கடலில் நாட்டப்பட்ட இரண்டு கடற்தூண் மேடைகளின் கோபுரத்தின் மீது மாலை போல் தொங்கும் இரும்பு வடத்தில் [Cable] கட்டப்பட்ட செங்குத்து முறுக்கு நாண்கள் [Twisted Wire Ropes] காங்கிரீட் பாலத்தைத் தாங்கிக் கொண்டுள்ளன. இரண்டு முட்டுத் தூண்கள், மூன்று அகற்சி ஊஞ்சல் தட்டுகள் கொண்டு, பாலத் தட்டுகள் மூன்றும் முழு நீள இரும்புச் சட்ட உத்திரங்களால் உறுதியாக்கப் பட்டவை [3 Span, 2 Hinged Suspension Bridge with Steel Truss Stiffening Girder]. கடற்தூண் மேடைகளின் இடைவெளித் தூரம்: 6527 அடி [1990 மீடர் (1.2 மைல்)]. கோபுரத்தின் உயரம்: 928 அடி (283 மீடர்).

    Construction Details

    மூன்று பாலத் தட்டுகளில், மையத் தட்டின் அகற்சியே மிகையானது [1991 மீடர்]. மையத் தட்டின் இரு புறமுள்ள பக்கத் தட்டுகள் ஒவ்வொன்றின் நீளம்: 960 மீடர். கப்பல்கள் புகும் மையப் பாதையின் அகலம்: 1911 மீடர். டிசைனுக்கு உட்பட்டக் கடற்புயல் வேகம்: 100 mph. உச்ச சூறாவளிப் புயலின் வேகம் 180 mph வரை அடித்தாலும் பாலத்தின் தட்டுகளும், கோபுரங்களும் பளுவைத் தாங்கிக் கொள்ள டிசைன் செய்யப் பட்டுள்ளன. பூகம்ப நிலநடுக்கத்தால் 8.5 ரிக்டர் அளவு ஆட்டத்தையும் தாங்கிக் கொள்ளும் உறுதி படைத்தது, ஆகாஷிப் பாலம்.

    கோபுரங்கள், இரும்பு வடங்கள், நாண்கள், சரக் கம்பிகள்

    பாலத்தையும், இரு வடங்களையும் தாங்கும் கோபுரத்தின் எடை ஏற்கும் தகுதி: 23,000 டன். எடை தாங்கும் உச்சத் தகுதி: 50,000 டன்! தூரி வடங்கள் தூக்கிப் பிடிக்கும் பாலத்தின் 100,000 டன் பாரத்தைக் கோபுரம், சவாரி முதுகு [Saddles] மூலமாகத் தனது அடித்தளத் தூணுக்கு இறக்குகிறது! கோபுரத்தின் உயரம் கடல் மட்டத்துக்கு மேல் 990 அடி [297 மீடர்]. உலகத்திலே எல்லாவற்றையும் விட உயரமானவை, இந்தக் கோபுரங்கள்! அவற்றின் அகலம் 118-155 அடி [35.4-46.5 மீடர்]. கோபுரத்தின் உடம்பு, ஒவ்வொன்றும் 33 அடி உயரமுள்ள 30 அடுக்குச் சட்டங்களால் [30 Tier Frames] பிணைக்கப் பட்டுள்ளது. கடற் காற்றும், புயல் காற்றும் கோபுரத்தைச் சாய்க்கும் போது, அதை எதிர்ப்புறம் இழுக்கும் ‘இணங்கும் பளு முடக்கிகள் ‘ [Tuned Mass Dampers (TMD)] கோபுரத்தில் 20 பகுதிகளில் சேர்க்கப் பட்டுள்ளன. பளு முடக்கியில் நகரும் ‘ஊஞ்சல் உருளை ‘ [Pendulum] இருபுறமும் ஆடி, கோபுரச் சாய்வை ஈடு செய்கிறது. கடல் மட்டத்தில் இருதூண்களின் இடையே உள்ள அகற்சி 1.24 மைல் இருப்பதாலும், பூமியின் மேனி கோளமாக வளைவதாலும், கோபுர உச்சிகளுக்கு இடையே உள்ள தூரம், கடல் மட்டநிலை தூரத்தை விட 9.3 செ.மீ. மிகையாக இருக்கிறது!

    Support Cable -1

    கோபுரத்தைத் தாங்கும் கடற்தூண் மேடை 30,000 டன் எடை கொண்டு, 60 கடற்தூண் நங்கூரச் சுருள் தண்டுகளால் [Anchor Bolts] பிணக்கப் பட்டுள்ளது. பாலத்தின் கீழ்ச்சட்டம் கடல் மட்டத்திலிருந்து 215 அடி [65 மீடர்] உயரத்தில் அமைந்துள்ளது. பாலத்தின் அடியில் புகுந்து செல்லும் கப்பலின் உயரத்தை, இந்த வரை அளவு கட்டுப் படுத்துகிறது. மலைப் பாம்புபோல் தொங்கும் வடத்தின் விட்டம்: 4 அடி [1.22 மீடர்]! முறுக்கிய கம்பிகளைக் கொண்ட 290 நாண்களை [Strands] உள்ளடக்கியது, ஒரு வடம் [Cable]. ஒவ்வொரு நாணிலும் 127 சரக் கம்பிகள் [Wires] சடைபோல் பின்னப் பட்டுள்ளன. முறுக்குச் சர நாணின் விட்டம்: 2.7 அங்குலம் [6.8 செ.மீ.]. சரக் கம்பியின் விட்டம்: 5.23 மில்லி மீடர். வடக் கம்பிகளின் மொத்த முழு நீளம்: 180,000 மைல் [300,000 கி.மீ]! இந்த நீளத்தைப் பூமியின் மத்திம சுற்றளவில் சுற்றினால் 7.5 முறைச் சுற்றலாம்!

    Compariison

    Checking Instruments

    செங்குத்தாகத் தொங்கும் நாணின் விட்டம்: 4.25 அங்குலம் [8.5 செ.மீ.]. ஒவ்வொரு நாணிலும் 85 சரக் கம்பிகள் சடைபோல் பின்னப் பட்டுள்ளன. சரக் கம்பியின் விட்டம்: 7 மில்லி மீடர். மூன்று பாலத் தட்டுகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் செங்குத்து நாண்களின் மொத்த எண்ணிக்கை: 1068. வடக் கம்பிகளில் துருப் பிடிக்காமல் இருக்க, ஒப்பு நீர்மைத் திணிப்பு [Relative Humidity] 60% உச்ச அளவைத் தாண்டாமல் [பொதுவாக 40% வரட்சியில்] கட்டுப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப் படுகிறது!

    கோபுரங்களின் அடித்தளக் கடற்தூண், ஆப்பு மேடைகள்

    கடலின் ஆழத்தில் காங்கிரீட் தூண்களை [Caisson Foundation] நட்டு அவற்றைச் சுற்றி இணைத்த காங்கிரீட் மேடையின் பரிமாணம்: விட்டம் 262 அடி [80 மீ], உயரம்: 230 அடி [70 மீ] [கடலுக்குக் கீழே 60 மீடர், கடலுக்கு மேலே 10 மீடர்]. கோபுரங்கள் இரும்பு உத்திரங்களால் இணைக்கப் பட்டவை! இரும்புக் கோபுரத்தைத் தாங்கும் காங்கிரீட் மேடை [Concrete Pier] 115 அடி அகலம் [35.5 மீ], 45 அடி ஆழம் [14 மீ]. அடித்தள கடற்தூண் மேடை 100,000 டன் எடையைத் தாங்க வல்லது!

    Bridge Model

    மேல்நிற்கும் 120,000 டன் எடையைத் [கோபுரம் +மேடை] தாங்க, கடல் அடித் தளத்தைத் தோண்டிப் பண்பட்ட பாறைத் திட்டுகள் மீது குழியிடப் பட்டு, காங்கிரீட் கடற் தூண்கள் பல ஊன்றப் பட்டுள்ளன. அவற்றை எல்லாம் இணைக்கும் வட்டக் கிணற்றில் சிறப்பான காங்கிரீட் [Underwater Non-disintegration Concrete] ஊற்றி உலர வைக்கப்படும். அந்த சிறப்புக் காங்கிரீட் கடல் நீரிலும் உலர்ந்து இறுகும் தன்மை பெற்றது!

    ஆகாஷி பாலத்தின் வடக்கிலும், தெற்கிலும் முனைமுகப்பில் பூமியை ஆழமாகத் தோண்டி, 24 மீடர் கீழாகப் பாறைகள் காணப்பட்டுக் குழி தோண்டி 350,000 டன் காங்கிரீட் கொட்டப்பட்டு, ஆப்பு மேடைகள் இரண்டு அமைக்கப் பட்டுள்ளன. விட்டம் 280 அடி [85 மீ.], உயரம் 215 அடி [65 மீ.] அளவு கொண்ட ஆப்பு மேடைகளே பாலத் தட்டுகளைத் தாங்கும், தூரி வடங்களை இழுத்துப் பிடித்துக் கொள்கின்றன. வடங்களில் அதனால் ஏற்படும் இறுக்கம் [Tension] கோபுரங்களின் செங்குத்து நிலையை எப்போதும் நிரந்தரப் படுத்துகின்றன. ஆப்பு காங்கிரீட் இரும்பு மேடை ஒன்றின் எடை மட்டும் 1200,000 டன்!

    Tuned Mass Dampers [மீட்டிய பளு தணிப்பிகள்]

    1995 இல் ஏற்பட்ட ஹான்ஷின் பூகம்பச் சோதனை விளைவுகள்

    ஆகாஷி கைகியோ பாலம் கட்டி வரும் போது, கோபி நகரில் 1995 ஜனவரி 17 ஆம் தேதி எதிர்பாராதவாறு, இயற்கை தனது பயங்கர பூகம்பச் சோதனையைச் செய்து, நில ஆட்டத்தில் தேர்ச்சி பெற்ற பாலத்தின் முக்கியக் கடற்தூண் மேடைகளுக்கும், ஆப்பு மேடைகளுக்கும் [Caisson Foundations & Side Anchorages] சான்றிதழ் அளித்தது! ஹான்ஷின் பூகம்பம் 7.2 ரிக்டர் அளவில் பூமியை ஆட்டியது! கோபி நகர்ப் புறத்தே 6000 மக்கள் மாண்டனர்! ஆகாஷி பாலத்துக்கு 30 மைல் ஆரத்தில் கட்டிடங்கள், மற்ற பாலங்கள் தகர்ந்தன! நிலநடுக்கத்தின் ‘உலுக்கு மையம் ‘ [Epicenter] கோபி நகருக்கு அப்பால் ஆகாஷி பாலத்தின் தென்திசை முனைக்கு அருகே தோன்றியது! பூகம்பம் ஏற்பட்ட சமயத்தில் பாலத்தில் கட்டி முடிந்தவை: கோபுரங்களைத் தாங்கும் இரு கடற்தூண் மேடைகள், வடத்தின் முனைகளை இழுத்துக் கட்டும் இரு ஆப்பு மேடைகள், கோபுரங்கள், கோபுரச் சவாரி முதுகில் [Saddle] தூரிபோல் தொங்கும் நீண்ட வடங்கள்! வடங்களின் மீது பாலத்தட்டு [Bridge Deck] கட்டத் துவங்கிய போதுதான் நிலநடுக்கம் ஆரம்பித்தது!

    நல்ல வேளையாக ஆகாஷிப் பால மேடைகளுக்குச் சிறிய சிதைவுகளே ஏற்பட்டன! முக்கிய காரணம்: முழு நீள வடம் கோபுரம் மீது இருபுறமும் தொங்க விடப்பட்டு, இறுக்கம் [Tension] சீர்ப்படுத்தப் பட்டு முனைகள் இழுத்துக் கட்டப் பட்டிருந்தன. அதனால் கோபுரங் களுக்கு நல்ல பாதுகாப்புத் துணை முட்டுகள் கிடைத்தன. ரிக்டர் அளவு 8.5, சூறாவளிப் புயல் மணிக்கு 180 மைல் வேகம் உச்சமாகத் தாங்கும் ஒரு உன்னத டிசைனில் உருவான ஆகாஷி பாலத்தின் பாகங்களை, ஹான்ஷின் பூகம்பம் பெருமளவு சிதைக்க முடிய வில்லை!

    நிலநடுக்கம் ஓய்ந்த பின்பு, எஞ்சினியர்கள் சோதனை செய்ததில் கண்ட பழுதுகள் பின்வருமாறு:

    1. நிலநடுக்க ஆட்டத்தின் முடிவில் நிலநகர்ச்சி ஏற்பட்டதால், பாலத்தின் தென்திசைக் கோபுர கடற்தூண் மேடை 80 செ.மீ. தென்புறம் நகர்ந்தது! அதாவது பாலத்தின் முக்கிய அகற்சி [Main Span (1991 மீ)] 80 செ.மீ. மிகையானது!

    2. கோபுரத்தின் சிகரம் 10 செ.மீ. தெற்கே சாய்ந்து விட்டது!

    3. பக்கவாட்டுப் பாலத்தட்டு [Bridge Deck] தென்திசையில் 30 செ.மீ. மிகையானது!

    4. ஊஞ்சல் பாலத்தின் மொத்த நீளம் 110 செ.மீ. [>1 மீடர்] அதிகமானது!

    5. மேற்கூறிய பழுதுகளால் தூரி வடத்தின் தொங்கல் [Main Cable Sag] 130 மீடர் மிகையாக்க வேண்டிய தாயிற்று!

    ஜப்பான் எஞ்சியர்கள் செய்த ஆகாஷி பாலத்தின் அபாரப் பாதுகாப்பு டிசைன் திறமையை, ஹான்ஷின் பூகம்பம் நிரூபித்துக் காட்டியது! நிலநடுக்க விளைவுகளால் பாலத்தில் மாற்றுத் திட்டங்கள், பராமரிப்பு வேலைகள் செய்ய நேரிட்டாலும், கால தாமதம் எதுவுமின்றி பாலம் உறுதி யளித்த நாளில் [1998 வசந்த காலம்] பூர்த்தி யானது!

    இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் உருவாகும் சைனாவின் மிக நீண்ட பாலம்

    சைனாவின் ஜியாங்சு மாநிலத்தில் உள்ள யாங்ஸி ஆற்றைக் கடக்க இரட்டைப் பாலத் தொடர்பை [Bridge Complex] அமைக்க 2000 அக்டோபரில் ஆரம்பப் பணிகள் துவங்கின. அப்பாலத் தொடர்பில் முக்கியமாக 1490 மீடர் நீளமுள்ள ஊஞ்சல் பாலமும் [Suspension Bridge], 406 மீடர் நீளமுள்ள நாண் இழுப்புப் பாலமும் [Cable-Stayed Bridge] கட்டத் திட்டமிடப் பட்டுள்ளன. ‘ரூனியாங் பாலம் ‘ [Runyang Bridge] எனப் பெயர் பெற்ற அப்பாலப் பாதையின் மொத்த நீளம்: சுமார் 14 மைல் [23 கி.மீடர்.]. பால நீளத்தில் முதன்மை இடத்தைப் பெற்றாலும், ஊஞ்சல் அகற்சி [Suspension Span] 4967 அடி [1490 மீடர்] உடைய ரூனியாங் பாலம் உலகத்தில் ஜப்பான் [Akashi Kaikyo (1991 மீடர்)], டென்மார்க் [Great Belt East (1624 மீடர்)] ஆகியவற்றுக்கு அடுத்த மூன்றாவது இடத்தைப் பெறுகிறது. ஜப்பான் ‘ஆகாஷி கைக்கோ பாலம் ‘ 1998 ஏப்ரல் 5 ஆம் தேதி ஆரம்ப விழாவைக் கொண்டாடியது. டென்மார்க் ‘கீழ்த்திசைப் பெருவளையப் பாலம் ‘ 1998 ஜூன் 14 ஆம் நாள் துவக்க விழாவை நிகழ்த்தியது.

    சைனாவில் ஜப்பானின் ஆகாஷி கைகியோ நீளத்தையும் கீழாக்கும் உலகப் பெரும் பாலங்கள் ஜியாவோஸுவான் [Jiaozhouwan (1652-1800 மீடர்)], கியாங்ஸோ [Qiongzhou (2000-2500 மீடர்)] ஆகியவை திட்டமிடப் பட்டுள்ளன! இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் உலகத் தொழில் வளர்ச்சி நாடுகளுடன் போட்டியிட்டுச் சைனா நாளுக்கு நாள் முன்னேறி வருவது, இப்புதிய திட்டங்கள் மூலம் நமக்கு வெள்ளிடை மலைபோல் பளிச்செனத் தெரிகிறது!

    தகவல்:

    1. Akashi Kaikyo Bridge -A 10 Year Project.

    2. World ‘s Longest Suspension Bridge Opens in Japan By: James D. Cooper [Aug 1998]

    3. Structure of Akashi Kaikyo Bridge [www.structurae.de/en/structures/data/str0001.php]

    4. Akashi Kaikyo Bridge Opens [www.dec.ctu.edu.vn/ebooks/jetro/98_06.html]

    5. History of Akashi Kaikyo Bridge Dates & Events

    6. Akashi Kaikyo Bridge -Outline, Basic Design & Construction.

    7. Two Millennia – Two Long-Span Suspension Bridges By: Eur Ing Juhani Virola [Dec 2002]

    8. http://www.pbs.org/wgbh/buildingbig/wonder/structure/akashi_kaikyo.html

    9. http://www.jb-honshi.co.jp/english/bridgeworld/bridge.html

    10. http://www.bing.com/videos/search?q=akashi+kaikyo+bridge&qpvt=Akashi+Kaikyo+Bridge&FORM=VDRE

    11. https://en.wikipedia.org/wiki/Hangzhou_Bay_Bridge [July 23, 2015]

    12. https://en.wikipedia.org/wiki/Akashi_Kaiky%C5%8D_Bridge [January 27, 2016]

    +++++++++++++++

    Share
  • குதிரையை எனக்குப் பிடிக்கும்

     மதுமிதா

    10518674_307423642786795_5858810718641257109_o

    குதிரை வண்டியில் பள்ளிக்குப் போவதற்கு முன்பே
    இசைக்கேற்ற ரசனை சார்ந்த நளின அசைவுகளுடனான
    உன் நாட்டியத்தை சர்க்கஸில் பார்த்திருந்தேன் சிறுமியாய்

    குழந்தையை முதுகில் தாங்கிய ஜான்ஸிராணியின் படத்தைக்
    கண்டதிலிருந்து நானே உன் மீது பவனி வருவதாய் உணர்வு

    இலக்கியங்களில் உன் மீதமர்ந்து வருபவர்களை வாசிக்கையில்
    திரையில் குதிரையில் பாடிக்கொண்டே பவனி வரும்
    கதாபாத்திரங்களை காண்கையில் உன் மீதான நேசம் மிகுந்தெழ
    உன்னில் எப்போதும் பயணித்தேன்

    உன் பக்கப்பார்வை மறைக்கப்பட்டு
    கட்டுப்படுத்துபவனுக்குக் கீழ்ப்படிந்தே நடக்கிறாய்
    ஆற்றல் நிறை பெண்ணுக்கோ குடும்பம் கடந்து,
    சமூகப்பார்வை மறைக்கப்படுகிறது

    குதிரைப் பந்தயத்தில் காற்றாய் பறக்கும் உன் வேகத்தைத் துறந்து
    சதுரங்கத்தில் குறைவான கட்டங்களிலான உன் நகர்வு
    சமயலறைக்கும் படுக்கையறைக்குமான
    என் நகர்வினை நினைவுபடுத்த
    நானும் நீயும் ஒன்றெனும் பிணைப்பு
    இன்னும் என் நினைவுகளில் வலுவினை சேர்க்கச் சேர்க்க

    குதிரையே உன்னை இன்னும் இவ்வளவு பிடிக்கும்.

    The poet reflects her affinity towards horses, from her early childhood. The similarities between a horse and a woman is compared here poetically.

    31.08.2015

    The Horse is to my liking
    Published by: shanmugam on 4th Oct 2015 
    Even before going to school by cart
    Drawn by the horse, I know you as a child,
    As you did dance to the tune in the circus.

    Ever since I saw Queen Jansi with her child
    On her back in the picture, I felt riding you.

    Reading characters in literature
    As riding, and seeing on the screen heroes
    Riding about on horses with singing,
    I rode you in mind with passion built up.

    Your sight of side views blocked by side screens,
    You behave obeying to your controller.
    To the versatile women being house bound,
    Societal outlook beyond home is denied.

    Your moves designed to a few squares in Chess,
    Far from your windy speed in the horse race,
    Reminds me of my moves between the kitchen
    And the bedroom, which strengthens my feelings
    That you and I are in a bind by all,
    And dear horse I love you still more so much.

    By (in Tamil):
    Mrs. Madhumitha
    In Anthology, Poetic Prism, 2015

    Translated to English by Rm Shanmugam

     

    குதிரையை எனக்குப் பிடிக்கும் – (2)
    குதிரையை எனக்குப் பிடிக்கும்.

    குதிரைவண்டியில்
    பள்ளிக்கூடத்திற்குப் போவதற்கு முன்பே
    சிறுமியாய் உன் நாட்டியத்தை
    முதன் முதலில் சர்க்கஸில் பார்த்திருந்தேன்
    குழந்தையை முதுகில் தாங்கி
    போருக்குச் சென்ற ஜான்ஸிராணியின் படத்தை
    பாடப் புத்தகத்தில் கண்டதும்
    நானே உன் மீது பவனி வருவதாய் உணர்வு

    குதிரையில் பாடிக்கொண்டே பவனி வரும்
    கதாபாத்திரங்களை திரைப்படத்தில் கண்ட போதெல்லாம்
    உன் மீது அன்பு நேசம் அதிகரிக்க
    போர்க்களத்தில் விழும் அவலம் காண நேர்கையில்
    பதைபதைப்பு உலுக்கும்

    சம்யுக்தையை உன் மேல் தூக்கிச் சென்று
    பிருத்விராஜன் கடிமணம் புரிந்ததையும்
    குதிரையை அடக்கிய தேசிங்குராஜனின் கதையையும்
    கல்கியின் கதாபாத்திரங்கள் உன்னில் பவனி வந்ததையும் அறிந்த போதும்
    ‘ஞானிகளுணர்வினொன்றாய்’ என்று
    உன்னைப் பற்றிய கம்பனின் உவமையாலும்
    உன் மேல் ஏறி வந்த மதுராவிஜய கங்காதேவியை
    காவல் கோட்டத்தில் தரிசித்த பிறகும்

    உன்னில் எப்போதும் பயணித்தேன்,
    எப்போது உன்னை நேசித்தேன் என்பதறியாமலே.

    உன் பக்கப்பார்வை மறைக்கப்பட்டு
    கட்டுப்படுத்துபவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறாய்
    ஆற்றல் நிறை பெண்ணுக்கோ குடும்பம் கடந்து,
    சமூகப்பார்வை மறைக்கப்படுகிறது.
    காற்றாய் பறக்கும் வேகம் துறந்து
    சதுரங்கத்தில் உன் நகர்வு குறைவான கட்டங்களில்,
    சமயலறைக்கும் படுக்கையறைக்குமான
    என் நகர்வினை நினைவுபடுத்த
    நானும் நீயும் ஒன்றெனும் நினைவு,
    இன்னும் நம் பிணைப்புக்கு வலு சேர்க்கச் சேர்க்க

     

     

    Share