Month: February 2016

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    6d2301fb-2b9e-4165-8851-33f8c82dc576

    ”Because Of KRISHNAபக்தி பாகவதன் கேசவ்ஸ்
    Picasso கிருஷ்ணன் பலேஜோர்,: -டிகாக்‌ஷனாய்,
    ‘’நான்’’அதிலே சேர்ந்தால் நவநீதப் பால்சுரக்கும்
    காண்அதிலே Coffee-With க்ருஷ்’’….கிரேசி மோகன்….

    (OR)
    நாமதிலே சேர்ந்தால், நவநீதப் பால்சுரக்கும்,
    ஆமதுதான் ஆவின் அரி(றி)’’….கிரேசி மோகன்….

    Share
  • படக்கவிதைப் போட்டி … (53)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    24859223112_cf7b061765_z

    பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (5.03.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செ.இரா. செல்வக்குமார்

    இந்த வார வல்லமையாளர் கம்சாயினி குணரத்தினம்

    29-02-2016

    Kamsa

    வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்பெறுபவர் அகவை 27 நிரம்பிய செல்வி கம்சாயினி குணரத்தினம் (Khamshajiny Gunaratnam) என்னும் தமிழ்ப்பெண்.  இவர் ஐரோப்பாவிலுள்ள நோர்வே நாட்டின் தலைநகரான ஓசுலோ (Oslo) நகரின் துணை நகரமுதல்வர் (Deputy Mayor) பதவியை  அடைத்திருக்கின்றார்.  உலகிலேயே மனிதவளத்தில் முதலிடத்தில் இருக்கும் நோர்வே நாட்டின் தலைநகரமும் அந்நாட்டின் மிக அதிக மக்கள் தொகையும் கொண்ட இந்நகரத்தின் துணை நகரமுதல்வர்  என்பது மிகவும் பெருமைவாய்ந்த பொறுப்பு மிகுந்த பதவி.

    நோர்வே நாட்டின் உழைப்பாளர் கட்சியின் (Labour Party) உறுப்பினரான இவர் முதன்முதலாக  2007 ஆம் ஆண்டில் தன் 19 -ஆவது வயதில் ஓசுலோ மாநகரதின் குழுவில் ஓர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அதன் பின்னர் பல பொறுப்புகளுக்குப் பின் ஓசுலோவின் நகரத் துணைமுதல்வர் பதவியை எட்டினார்.

    ஓசுலோவுக்கு வடமேற்கே உள்ள தைரி ஏரியில் உள்ள அதோயா (Utøya) தீவில்  ஆண்டுதோறும் உழைப்பாளர் கட்சியின் இளைஞர்களுக்கான  முகாம் ஒன்று நடைபெறும்.  2011 ஆம் ஆண்டு நடந்த இந்த முகாமில்  கம்சாயினி குணரத்தினம் அவர்களும் கலந்துகொண்டார். அவ்வாண்டு ஏறத்தாழ 600 இளைஞர்கள் அதில் கலந்துகொண்டனர்.  இந்த முகாமில்  சற்றும் எதிர்பாராமல் ஆந்தேசு பிரெவீக்கு (Anders Breivik ) என்பார் புகுந்து  துப்பாக்கியால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டு மாபெரும் படுகொலை செய்தார். 69 பேர் உயிரிழந்தனர், 110 பேர் படுகாயம் அடைந்தனர்.  பலர் பாறைகளுக்கு இடுக்கில் மறைந்துகொண்டும், ஏரியில் குதித்தும் உயிர்பிழைக்க முயன்றனர். ஏரியில் குதித்து நீந்தித்தப்பிக்க முயன்றவர்களைக் குறிவைத்துச் சுட்டுக் கொண்டிருந்தபொழுதும், கம்சாயினி குணரத்தினம் துணிவாக விடாமுயற்சியுடன் நீந்தி 500 மீட்டர் தொலைவைக் கடந்து கரையேறி தப்பித்தார். அப்பொழுது அவருக்கு வயது 23. வீரத்துடனும் நல்வாய்ப்பாகவும் இவர் உயிர்தப்பியது வியப்பூட்டுவது.

    கம்சி (Kamzy ) என்னும் பெயரால் தன்னை அழைத்துக்கொள்ளும் இவர் மார்ச்சு மாதம் 27 ஆம் நாள் 1988 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தார். தனக்கு அகவை 3 இருக்கும்பொழுதே நோர்வே நாட்டுக்குத் தன் பெற்றோருடன் குடிபெயர்ந்தார். முதலில் நோர்வே நாட்டில் வடக்கே மீன்பிடித்துறையில் இவரின் பெற்றோர்கள் பணியில் இருந்தார்கள். சில ஆண்டுகள் கழித்து இவருடைய தம்பியோடு இவருடைய பெற்றோர்,  தம் குழந்தைகள் தமிழ் படிக்க வசதியாக இருக்குமென நினைத்து ஓசுலோ நகரத்திற்குக் குடிபெயர்ந்தனர்.  ஓசுலோவின் தமிழ் இளைஞர் நிறுவன  (Tamil Youth Organisation) விழாவொன்றுக்கு வந்திருந்த ஓசுலோ நகர முதல்வர் இரேமந்து யோகான்சன் (Raymond Johansen) அவர்களைச் சந்திக்க  ஒரு வாய்ப்பு கிட்டியது.  அப்பொழுது யோகான்சன் அவர்கள் இவரை பெரிதும் ஊக்கப்படுத்தினார்.  அதன் பின்னர் கம்சி ஓசுலோ பல்கலைக்கழகத்தில் குமுக அமைப்பியல் துறையில் படித்துப் பட்டம் பெற்றார்.  அரசியலில் பங்குபற்றி நற்பணிகள் செய்து, நற்பெயர் ஈட்டி ஐரோப்பாவின் தலைகநகரமொன்றின் நகரத் துணைமுதல்வர் பதவியை இப்பொழுது எட்டியுள்ளார்.

    kam

    கம்சாயினி குணரத்தினம் அவர்களுக்கு வல்லமை குழுவின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். தன் பதவியில் சிறப்பு எய்தவும்  மேலும் பல உயர்ச்சிகள் எட்டவும்  வாழ்த்துகின்றோம்.

    [1] https://www.facebook.com/khamshajiny/?fref=ts
    {2] https://en.wikipedia.org/wiki/Khamshajiny_Gunaratnam ; https://ta.wikipedia.org/s/4t3j
    {3] http://www.theguardian.com/women-in-leadership/2015/dec/22/my-ambition-is-to-be-a-voice-for-those-who-dont-or-cant-speak-their-mind

    [இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com , vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில்  தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம்.  மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _______________________________________________________

    Share
  •  நான் அறிந்த சிலம்பு – 198

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை 

    முன்னிலைப் பரவல் 

    மந்தர மலையை மத்தாக நிறுத்தி,
    வாசுகிப் பாம்பினைக் கடையும் கயிறாக்கி,
    கடலின் நிறம்கொண்ட கண்ணனே!
    நீ முன்பொருநாள்
    பாற்கடலைக் கடைந்தாய்!                                           krishna eating butter
    இவ்வாறு கடைந்த உன் வலிமையான கைகள்தான்
    யசோதைத் தாயின் கடை கயிற்றில் கட்டுண்ட
    அந்தக் கைகளோ?
    இது என்ன மாயம்?
    நான்முகனை ஈன்ற மலர் போன்ற
    உந்தியை உடையவனே!
    எமக்கு மிகவும் வியப்பாகிறதே!

    அரும்பொருள் முதற்பொருள் இவனே என்று
    தேவர்கள் வணங்கிப் போற்றும் வண்ணம்
    நீ மிக்க பசி ஏதுமில்லாமலேயே
    உலகம் முழுவதையும் உண்டாய்!
    வளமான துளசி மாலை அணிந்தவனே!
    இவ்வாறு உலகை உண்ட இந்த வாய்தான்
    அன்று ஆய்ச்சியர் உறியில் சேமித்த
    வெண்ணெயை உண்ட திருவாயோ?
    இது என்ன மாயமோ?
    எமக்கு மிகவும் வியப்பாகிறதே!

    அனைவரும் போற்றி வணங்கும் திருமாலே!
    தாமரை போன்ற உன் பாதத்தின் இரு அடிகளால்
    மூவுலகையும் அளந்தாயே!
    இருள் நீங்கும் வண்ணம் நடந்தாயே!
    இவ்வாறு நடந்த அடிகள்தான்
    பின்னர்ப் பாண்டவர்க்குத் தூதாக
    நடந்துசென்ற அடிகளோ?
    நரசிம்ம அவதாரமாய்ப் பகைவனை அழித்தவனே!
    இது என்ன மாயமோ?
    எமக்கு மிகவும் வியப்பாகிறதே!

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

     

     

    Share
  • உன்னையறிந்தால் …… (44)

    நிர்மலா ராகவன்

    வருங்கால மனைவி

    உனையறிந்தால்1
    கேள்வி: நான் இருபது வயது மாணவன். என் நண்பர்கள் பதினேழு வயதிலேயே girl friends தேடிக்கொண்டார்கள். ஆனால் அப்போது ஏற்பட்ட காதல் எதுவும் நிலைக்கவில்லை. அதிகப் பிரச்னையற்ற இல்லற வாழ்வு அமைய எத்தகைய பெண்ணை மணக்க வேண்டும்?

    பதில்: பலே! உனக்கு வயதுக்கு மீறிய அறிவும், நிதானமும் இருக்கிறதே!

    பெற்றோரின் குறுக்கீடு அதிகம் இல்லாவிட்டால், தனக்குப் பொருத்தமான பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ஓர் இளைஞனுடையதாகிறது. முதலிலேயே சிறிது பழகுவதால், ஒருவருக்கு மற்றவரது குணாதிசயங்கள் புரிய வாய்ப்புண்டு. ஆனால், காதலிக்கும் காலத்தில் மிக ஜாக்கிரதையாக, தமக்கு இல்லாத நல்ல குணங்களைக்கூடக் காட்டி மயக்கும் ஒருவர் (ஆணோ, பெண்ணோ), கல்யாணத்துக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக தனது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பிக்கிறார். அப்போதுதான் ஏமாற்றம், கோபம் எல்லாம் எழுகின்றன.

    பேருந்து நிறுத்தத்தில் பார்த்தவுடன் காதல் கொள்வது, அப்படிப் பார்த்த பெண்ணைத் துரத்தி அடிப்பதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது. புதினங்களில் படித்திருப்பீர்கள். ஒரு பெண் வாசகசாலையிலிருந்து கட்டுப்புத்தகங்களை எடுத்து வருகிறாள். அப்போது தற்செயலாக அவள்மேல் மோதி, மன்னிப்பு கேட்கிறான் — வேறு யார்? — கதாநாயகன்தான்! குனிந்து, அவளுடைய புத்தகங்களைத் திரட்டியும் கொடுக்கிறான். இது போதாதா, இருவருக்குமிடையே காதல் மலர! (எதிரில் வந்து மோதுபவர்கள்மேல் எல்லாம் காதல் வருமா? யோசிக்க வேண்டிய விஷயம்). இதெல்லாம் எப்படி நிலைக்கும்?

    எனக்குத் தோன்றும் சில பொது விதிகளை அலசலாமா? சில இளைஞர்களுக்கு நான் அறிவுரை(?) கூற, அவர்களால் திருமண வாழ்க்கையைத் தாக்குப்பிடிக்க முடிகிறது.

    1. புகழ்ச்சி

    ஏதாவது ஆதாயம் இருந்தால்தான் புகழ்வது என்றாகிவிட்டதே இன்றைய உலகம்!

    ஆணோ, பெண்ணோ, அதிகம் புகழ்கிறவரை நம்பி, தன் வாழ்க்கையை ஒப்படைத்துவிடக் கூடாது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் காலை வாரிவிடக்கூடும்.

    `நீ எவ்வளவு அழகா, கம்பீரமா இருக்கே! வயதுக்கு மீறிய அறிவு உனக்கு!’ என்று பேசி, அனுபவம் இல்லாதவர்களை மயக்குவது எளிது. இப்படிப் பேசுகிறவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    2. வயது

    அதிக வயது வித்தியாசம் நல்லதல்ல. ஏனெனில், கணவர் மனைவியை ஒரு குழந்தைபோல் பாவித்து, அருமையாக நடத்துவார். இதைப் பெண்கள் விரும்ப மாட்டார்கள். (சமவயதினராக இருந்தாலும், பெண்கள் சீக்கிரம் வயதானவர்கள்போல் தோற்றம் அளிப்பார்களே!)

    3. பொருளாதாரம்

    பெரியவர்கள் நிச்சயித்த திருமணம் என்றால் குடும்ப அந்தஸ்து ஏறக்குறைய சமமாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். (தமிழ்ப் படங்களில்தான் வேலைக்காரன்மேல் காதல் கொள்வதெல்லாம் நடக்கும். அபூர்வமாக, குடும்ப நிலை சரியாக இல்லாத பெண்களும் இப்படி நடந்துகொள்வதுண்டு).

    பணக்கார வீட்டுப் பெண்ணுக்கு முதலில் காதலன் செய்வதெல்லாம் உகந்ததாகப்பட்டாலும், நாளடைவில், இரு குடும்பங்களுக்குமிடையே இருக்கும் வித்தியாசம் பெரிதாகப்படும். ஏமாற்றம் விளைவது இப்படித்தான்.

    வசதி குறைந்த குடும்பத்திலிருந்து வந்த பெண்ணோ மலைத்துப்போவாள். ஆடம்பரமான வாழ்க்கை நடத்தும் புக்ககத்தினரின் ஏளனத்துக்கு ஆளாகக்கூடும். இல்லையேல், காணாததைக் கண்டதுபோல், செலவழிப்பாள். சம்பாதித்துப்போடும் கணவன்பாடுதான் கஷ்டம். தட்டிக் கேட்டால், குடும்ப அமைதி கெடும் என்று பெருமூச்சுடன் விட்டுக்கொடுத்துப் போகும் கணவன்மார்களை நான் அறிவேன்.

    4. கல்வித் தகுதி

    ஆணுக்கும், வருங்கால மனைவிக்கும் கல்வியிலும் ஏறக்குறைய சமநிலை இருக்க வேண்டும். அப்போதுதான் ஒன்றாக அமர்ந்து, எல்லா விவகாரங்களையும் அலசமுடியும். ஒருவரது நண்பர்களுடைய உரையாடலில் மற்றவர் கலந்துகொள்ள முடியும். எத்தனை நாட்கள்தான் காதல் வாசகங்களையே நம்பியிருக்க முடியும்!

    5. உத்தியோகம்

    கணவனுடைய உத்தியோகத்தைப்பற்றி மனைவிக்கு ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். ஒரே உத்தியோகத்தில் இருப்பவர்களானால், பேசுவதற்கு, கலந்தாலோசிப்பதற்கு, நிறைய சமாசாரங்கள் இருக்கும். ஆனால், போட்டி எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    கதை: கணவன், மனைவி இருவருமே பிரபலமான பின்னணிப் பாடகர்கள். `உங்களுக்குள் போட்டி, பொறாமை வருகிறதா?’ என்று நான் அந்த இளைஞரைக் கேட்டேன்.

    `இப்போது இருவருக்குமே நிறைய வாய்ப்புகள் வருவதால், போட்டி இல்லை!’ என்று பதிலளித்தார்.

    அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டால், மனைவியின் முன்னேற்றம் எரிச்சலைத் தரும் என்றாரோ?

    6. தோழமையை வளர்ப்பது

    கணவன், மனைவி இருவருமே தத்தம் அன்றாட வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டால், தோழமையும், நெருக்கமும் வளரும். ஆனால், அதை `பலகீனம்’ என்று தவறாக எண்ணி, அதிகாரம் செலுத்த முயலும் துணையிடம் கண்டிப்பாக இருக்க வேண்டுவது அவசியம்.

    7. வெளியழகு எதற்கு?

    அழகை மட்டும் கண்டு மோகித்து மணந்துவிட்டு, `இவளுக்குப் பிறருடன் பழகவே தெரியவில்லை. முட்டாள்!’ என்று, காலங்கடந்து பழிப்பானேன்! அதோடு, அழகு என்ன, நிலைக்கக்கூடியதா?

    கதை: ஒரு விருந்தில் புதிதாகத் திருமணமான அந்த தம்பதியரைச் சந்தித்தேன். `எங்களுடையது காதல் திருமணம்!’ என்று பெருமையாகக் கூறிய அத்தமிழர் மிக அழகாக இருந்தார். அவருடைய மனைவி ஒரு சீனப்பெண். ஒரே பார்வையில், `குண்டு!’ என்றுதான் தோன்றும். களையான முகம் என்றுகூட வர்ணிக்கத் தோன்றாது. வயதுக்கு மீறிய முதிர்ச்சி முகத்தில்.

    சாதாரணமாக, காதல் திருமணம் என்றால் அழகுதான் முதலிடம் வகிக்கும் என்று நினைத்தவர்களுக்கு இந்தத் தொடர்பு அதிசயமாக இருந்தது. எல்லாரும் கலந்து பேசியபோது அந்தப் பெண்ணும் அவ்வப்போது கலந்துகொண்டாள்.
    எங்கள் முடிவு: இவள் மிக நல்ல அம்மாவாக இருப்பாள்!

    எப்படி அந்த முடிவுக்கு வந்தோம் என்றெல்லாம் அலசத் தோன்றவில்லை. அந்த இளைஞருடைய தாய் அன்பானவளாக, பரிவானவளாக, பிறருடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுப்பவளாக இருக்கவேண்டும். தன் தாயைப் போலிருந்த ஒருத்தியை விரும்பி மணந்திருக்கிறார். அவருடைய வாழ்க்கை நிச்சயம் இன்பகரமாகத்தான் இருக்கும் என்று தோன்றியது.

    8. ஒன்றுமில்லாததற்கெல்லாம் உணர்ச்சிவசப்படுபவர்

    சிறு சிறு விஷயங்களுக்காக அதிக உணர்ச்சிவசப்பட்டு, மகிழ்ச்சி, கோபம், ஆத்திரம் போன்ற குணங்களை வெளிப்படுத்துபவர் ஆணோ, பெண்ணோ, அவரை மணந்தால், வாழ்க்கை SEE-SAW போலிருக்கும். அமைதி, நிதானம் இதெல்லாம் இவர்களுக்குப் பிடிபடாதவை. என்றுமே சிறுபிள்ளைத்தனம் மாறாது இருப்பவர்கள்.

    பதின்ம வயதுப் பையன்கள் தங்களுக்குப் பிடித்த ஆசிரியைகள்மேல் பித்தாக இருப்பார்கள். தன் காதலியாகவே ஆசிரியையை மதித்து, வீட்டில் அவளைப்பற்றி ஓயாமல் பேசுவார்கள். ஒரே நாளில் பல முறை வணக்கம் தெரிவிப்பார்கள்! `எனக்கு ஒரு மனைவி வந்தால், அவள் இந்த ஆசிரியைமாதிரியே இருக்கவேண்டும்!’ என்று கனவு காண்பார்களாம். ஒருவர் என்னிடம் பகிந்துகொண்டது இத்தகவல்.

    ஆனால், ஓர் ஆசிரியையின் அறிவு முதிர்ச்சி, மனப்பக்குவம் எத்தனை இளம்பெண்களுக்கு இருக்கும்?

    9. நடிகைமாதிரி

    வேறு சிலர், எப்போதும் புடவை உடுத்து, ஒற்றைப் பின்னலும், தலைநிறையப் பூவுமாக திரைப்படங்களில் தாம் கண்ட நடிகைபோல் வருங்கால மனைவி இருக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். என்னைக் கேட்டால், இதுவும் ஒருவிதக் கட்டுப்படுத்துதல்தான்.

    அவர்கள் விருப்பப்படி ஒரு பெண் மனைவியாக வாய்த்து, அவள் தலைமயிரைக் குட்டையாக வெட்டிக்கொண்டால், அன்பு குன்றிவிடுமா? சண்டை ஆரம்பிக்குமோ?

    10. எதிர்பார்ப்பு

    பெற்றோருக்கு ஒரே பிள்ளையானால், `என் பெற்றோர் என்னுடன்தான் இருப்பார்கள்!’ என்று முதலிலேயே கண்டிப்பாகச் சொல்லிவிடுவது நலம்.

    `இன்னும் பத்து வருடங்கள் கழித்தும், இவளுடன் (இவருடன்) சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன்!’ என்று தோன்றினால், துணிந்து மணம் புரியலாம். இருப்பினும், காலப்போக்கில் குணம் மாறலாம். யாரும் என்றும் ஒரேமாதிரி இருப்பதில்லை.
    இப்படியெல்லாம் பொறுக்க ஆரம்பித்தால், அறுபது வயதுவரை பிரம்மச்சாரியாகவே காலம் கடத்த வேண்டியதுதான் என்பவர்களுக்கு:

    மணக்குமுன் விழிப்பாக இரு. மணந்தபின், அரைக்கண்ணை மூடிக்கொள்! (BENJAMIN FRANKLIN)

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(110)

    -செண்பக ஜெகதீசன்

    கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் 
    திங்களைப் பாம்புகொண் டற்று.   (திருக்குறள்-1146: அலரறிவுறுத்தல்)

    புதுக் கவிதையில்…

    காதலரைக்
    கண்டதுநான் ஒரு நாளே,
    அதனாலெழுந்த ஊர்ப்பேச்சு,
    நிலவைப் பாம்பு விழுங்கியதுபோல்

    நிறைந்துவிட்டதே ஊரெங்கும்…! 

    குறும்பாவில்… 

    நிலவைப் பாம்புவிழுங்கிய சேதிபோல்
    ஊரெல்லாம் பரவிவிட்டது ஊர்ப்பேச்சாய்,
    ஒருநாள் காதலரைப் பார்த்தது…! 

    மரபுக் கவிதையில்…

    கண்ணில் நிறைந்த காதலரைக்
         கண்டு பேசிய தொருமுறைதான்,
    வண்ணம் பலவாய் வந்திங்கே

         வதந்தியாய்ப் பரவிடும் ஊர்ப்பேச்சு,
    விண்ணில் நிலவைப் பிடித்தாங்கே

         விழுங்கிடும் பாம்பின் கதைபோலே
    எண்ணம் போல விரைவாக
         எங்கும் பரவுதல் போலன்றோ…! 

    லிமரைக்கூ…

    காதலரை ஒருநாள் பார்த்தது,
    கதையிதாய் அலரது ஆனதே

    நிலவைப் பாம்புவாய் சேர்த்தது…! 

    கிராமிய பாணியில்… 

    பேசுபேசு பாத்துப்பேசு
    போயிடும்அதுதான் ஊர்ப்பேச்சா… 

    பாத்தேன்பாத்தேன் ஒருநாளுதான்
    பிரியமுள்ள காதலர

    பாத்தேன்பாத்தேன் ஒருநாளுதான்,
    தெரிஞ்சிபோச்சி ஊரெல்லாமே

    பரவிப்போச்சி ஊர்ப்பேச்சாவே… 

    கெரகணநாளுல நெலவத்தான்
    பாம்புபுடிச்சி உழுங்குறது

    பலருந்தெரிஞ்ச கதயாச்சே,
    அதப்போலானதே எங்கதயும்… 

    அதால,
    பேசுபேசு பாத்துப்பேசு

    போயிடும்அதுதான் ஊர்ப்பேச்சா…! 

     

     

    Share
  • கற்றல் – ஒரு ஆற்றல் (18)

    க. பாலசுப்பிரமணியன்

    மழலைப் பருவத்தில் பாடல்களின் நோக்கம்

    education11

    பெரும்பாலும் ஆரம்ப காலங்களில் குழந்தைகளுக்குப்  பாடல்கள் ஆடல்கள் மூலமாக கற்பிக்கப்படுகின்றது. ஆடல்களும் பாடல்களும் குழந்தைகளின் மன நிலைக்கு உகந்ததாகவும் அவர்கள் உள, உடல் வளர்ச்சிக்கு உரம் ஊட்டுவதாகவும் உள்ளதாக குழந்தை மன இயல் வல்லுனர்கள் கருதுகின்றனர். பொதுவாக, சொல்லிக் கொடுக்கும் பாடல்கள் அவர்களுக்கு நல்ல கருத்துகளை போதிப்பதாகவும் நல்வழிப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும். அதன் மூலம், இயற்கை, வாழ்வியல், உறவுகளின் மேன்மை, ஆரோக்கியம் மற்றும் நாட்டு நடப்புகளை அறிதல்  முக்கிய நோக்கம். சமூகம், சமயப் பெரியோர்களின் வாழ்க்கை மற்றும் சரித்திரக் கருத்துகள் விளக்கப்படுகின்றன.

    ஆகவே பாடல்களைத் தேர்வு செய்யும் பொழுது கீழ்கண்ட கருத்துகளை முன்வைத்தல் மிக அவசியம்.

    1. பாடல்கள் குழந்தைகளின் வயதுக்கு உகந்ததாக இருக்கின்றதா?
    2. பாடலின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்பில்லாத கருத்துகள் சொல்லப்படுகின்றதா?
    3. பாடலின் கருத்துகள் எந்த அளவில் அவர்களின் மன நிலையைப் பாதிக்கும் ?
    4. இந்தப் பாடலின் மூலம் குழந்தைகளிடம் பயம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி, கோபம், வெறுப்பு, தவறான உணர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா?
    5. குழந்தைகளின் தன்னம்பிக்கையையும்,  சார்புணர்வையும் எந்த அளவு பாதிக்கும்?

    இந்த கருத்துகள் பள்ளிக்கூடங்களில் மட்டுமின்றி வீட்டிலும் பெற்றோர்கள் மனதில் கொள்ளுதல் அவசியம்.

    சில நேரங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவோ அல்லது தங்களின் மகிழ்ச்சிக்காகவோ சில திரைப்பட பாடல்களை சொல்லிக் கொடுக்கின்றனர். அது தவறு அல்ல. ஆனால் அவற்றில் உள்ள வார்த்தைகளும் கருத்துகளும் மேற்கண்ட வினாக்களுக்கு பதில் தரும் வகையிலும் குழந்தைகளின் மனநிலையை பாதிக்காத வகையிலும் இருத்தல் மிக அவசியம்.

    இளம்வயதில் பாடல்களால் என்ன விதமான நன்மைகள் குழந்தைகளுக்குக் கிடைக்கின்றன?

              1. அவர்கள் உள நலம் வலுப்படுகின்றது.

    1. அவர்கள் குரல் வளம் செழிக்கின்றது.
    2. இடது மற்றும் வலது மூளையின் செயல்கள் ஒருங்கிணைகின்றன.
    3. அறிதல், புரிதல் செயல்கள் இலகுவான முறையில் நடக்கின்றன.
    4. பாடப்படும் நேரத்தில் தன்னம்பிக்கை வலுப்படுகின்றது.
    5. மற்றவர்களோடு இணைந்து பாடும் பொழுது கூட்டு முயற்சியும் இணைந்து செயல்படும் திறனும் வலுக்கின்றன.

            7 .  மூளையுடன் உடல் பாகங்கள் இணைந்து செயல்படுகின்றன.

           8.  உடல் மொழியின் நோக்கங்கள் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.

          9. இடம், பொருள், நேரம் இவற்றின் உள்நோக்கங்கள் அறிந்து கொள்ள முடிகின்றது.

        10.தயக்கம் இன்றி கருத்துகள் வெளிப்படுத்தவும்,  பரிமாறிக் கொள்ளவும் முடிகின்றன.

    பாடல்களை வெறும் பொழுது போக்காகக் கருதாமல் அதன் மூலம் மொழி, அறிவியல், சமூகவியல், வாழ்வு நெறிமுறைகள், கணிதம் போன்ற பல கருத்துகளை எளிதாக சொல்லிக் கொடுக்க முடிகிறது. இப்படி மறைமுகமாகவோ அல்லது உணர்வுப்பூர்வமாகவோ கற்றுக்கொள்ளப்பட்ட கருத்துகள் குழந்தைகளின் நினைவில் ஆழமாகப் பதிந்து கொள்கின்றன.

    முன் காலங்களில் பள்ளிகளில் மாணவர்கள் வாய்ப்பாடுகளை நித்தம் பாடல் போலப் பாடி வந்தனர். ஆகவே அவை அவர்களின் நினைவில் மிக ஆழமாகப் பதிந்து எண்களின் பரிமாற்றம் மிக எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. .

    பல நேரங்களில் பெற்றோர்கள் இவையெல்லாம் குழந்தைகளுக்கு எதற்கு? கணினி மூலமாக அவர்கள் இவற்றை எளிதாக செயல்படுத்தி விடலாம் என்று கருதுகின்றனர். இது சற்று தவறான கருத்து. மேலை நாடுகளில் இந்தியர்களின் நினைவுகளின் வண்ணங்களையும் பரிமாணத்தையும் கண்டு வியக்கின்றனர். எந்த ஒரு செயலும் மூளையின் வளர்ச்சிக்கும் பேணுதலுக்கும் குந்தகமாக இருக்கும் பட்சத்தில் அவைகளின் உபயோகத்திற்கு வரைமுறை படைத்தல் மனித வளர்ச்சிக்கு மிக தேவையான ஒரு விசயம்.

    தொடருவோம்

    Share
  • அடியார் பெருமை

    — முனைவர் மு.பழனியப்பன்.

     

    karaikal ammaiyar2

     

     

    அடியார் பெருமை அளவிடற்கரியது. சிவனடியார்களின் கழுத்தினில் உருத்திராட்சமும், உடலில் திருநீறும், உள்ளத்தில் சிவமந்திரமும் நீங்காது நிறைந்திருக்கும். இதன் காரணமாக உடலாலும், உள்ளத்தாலும் புண்ணியர்களாகச் சிவனடியார்கள் விளங்குகின்றனர். கூடும் அன்பினில் கும்பிடுதலே சிவனடியார்களின் இயல்பு. அவர்கள் செய்வதனைத்தும் சிவத்தொண்டுகள். அவர்கள் நடப்பதெல்லாம் சிவபூமி. அவர்கள் ஊர்தோறும் சென்றுச் சிவனை வணங்கும் கடப்பாடு உடையவர்கள். அவர்கள் தங்க சிற்சில ஊர்களில் மடங்கள் இருக்கலாம். பல ஊர்களில் இவ்வசதி இருப்பதில்லை. இச்சூழலில் ஊர்வலம் வரும் சிவனடியார்களைப் பாதுகாக்க ஊர் மக்களே முன்வரவேண்டி இருக்கிறது. அவ்வாறு சிவனடியாரைக் காப்பவரெல்லாம் சிவனடியார்கள். வருபவர்கள் சிவனடியார்கள். பாதுகாப்பவர்கள் சிவனடியார்கள். இவ்வாறே ஊரில் உள்ள எல்லாரும் நாட்டில் உள்ள எல்லாரும் உலகத்தில் உள்ள எல்லாரும் சிவனடியார்களாகின்றனர்.

    சிவபெருமான் ஆலயங்கள் இல்லாத ஊரே ஊர் இல்லை என்ற நிலையில் ஒவ்வொரு ஊரிலும் சிவனை வணங்குவோர் இருப்பர். அவர்கள் அவ்வூர்ச் சிவனடியார்கள். அவர்கள் ஊர்வலமாக வரும் சிவனடியார்களைப் போற்றிப் பாதுகாத்து உணவளித்துச் செய்யும் தொண்டு சிவத்தொண்டாகின்றது. மயிலாப்பூரில் பூம்பாவையை எழுப்பச் சம்பந்தர் முன்வரும்போது இத்தொண்டின் பெருமையை முன் வைத்துப் பாடுகிறார் சேக்கிழார்.

    மண்ணி னில்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும்
    அண்ண லார்அடி யார்தமை அமுதுசெய் வித்தல்
    கண்ணி னால்அவர் நல்விழாப் பொலிவுகண்(டு) ஆர்தல்
    உண்மை யாம்எனில் உலகர்முன் வருகஎன உரைப்பார்
    (பெரியபுராணம் 1087)

    என்பது சேக்கிழாரின் திருவாக்கு.

    பூம்பாவையை எழுப்ப முன்வந்த சம்பந்தர் எவ்விடத்திலும் செய்யாத ஒன்றை மயிலாப்பூரில் செய்கின்றார். மற்ற உயிர்ப்பிக்கும் இடங்களிலெல்லாம் நடக்காத ஒன்று இத்திருவிளையாட்டில் நடைபெறுகிறது. சம்பந்தர் சில சத்திய மொழிகளை உரைத்து அவை உண்மையானால் பூம்பாவை எழட்டும் என்று சிவபெருமானிடம் வேண்டுகோளை வைக்கின்றார்.

    “சிவத்தொண்டு என்பது சிவனடியார்க்கு உணவளிப்பது, சிவ விழாக்கள் கொண்டாடுவது என்ற இரண்டும் முன்னிற்பது உண்மையானால் இறந்த பூம்பாவை உயிருடன் எழவேண்டும்”, என்று சம்பந்தர் பாடுவதாக அமைக்கிறார் சேக்கிழார். அதன்படியே சிவ கருணை மேலெழுந்து ஒடுங்கிய இடத்தில் இருந்துப் பூம்பாவை சிவனருளால் பிறந்து, வளர்ந்து வருகிறாள். இதன் காரணமாகச் சிவனடியார்க்கு உணவளித்தல் என்ற தொண்டின் மேன்மையை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

    சிவனடியார்களை இல்லத்திற்கு அழைத்து உணவு தரும் நிலைக்கென்று மரபும் முறைமையும் உண்டு. பெரியபுராணத்தில் இதற்கான முறைமை விரவிக்கிடக்கின்றது. அடியார்களை
    1. எழுந்தருளுவித்தல்,
    2. பீடம் இட்டு அமரச்செய்தல்,
    3.நறுநீர் கொண்டு திருவடிகளை விளக்குதல்,
    4. விளக்கிய நீரை வீடெங்கும் தெளித்தல்,
    5. எஞ்சிய நீரை உள்ளும் பருகுதல்,
    6. பின் அவர்களுக்குப் பூசனை செய்தல்,
    7. இதன்பிறகு அவர்களுக்குத் திருவமுது படைத்தல் அவற்றோடு நிதி, ஆடை, உணவுப் பாத்திரம் ஆகியன தருதல்,
    ஆகிய நடைமுறைகளை உடையதாகச் சிவனடியார்களை வரவேற்று உணவளிக்கும்முறை அமைகின்றது.

    இதனை முறையே…
    1. ஆவாகனம்,
    2. தாபனம்,
    3.பாத்தியம்,
    4. அருக்கியம்,
    5. ஆசமனம்,
    6. அருச்சனை,
    7. நிவேதனம் ஆகியனவாக வடமொழியிலும் குறிக்கலாம். இம்முறைமைகளைக் குறைவறச் செய்து சிவத்தொண்டு ஆற்றியவர்கள் நாயன்மார்கள். அவர்கள் வழியில் நாமும் சிவனடியார்களைத் தொழுதல் செய்யவேண்டும்.

    1. எழுந்தருளுதல் (ஆவாகனம்):
    சிவனடியார்கள் ஊருக்குள் நுழையும்போதே கோவிலைக் கண்டு இன்புற்று அங்குள்ள இறைவனைக் காண ஏங்கி வருவர். முதல் வேலையாக எம்பிரானைக் கண்டபின்னே அந்த ஊரில் உணவு, தங்கல் போன்றனவற்றைப் பற்றிச் சிந்திப்பர். இந்நேரத்தில் அவ்வூர் அன்பர்கள் சிவனடியார்களைக் கண்டு அவர்களைத் தன் இல்லத்திற்கு அழைத்துச் செல்ல முன்வரவேண்டும்.

    ஆரம் என்பு புனைந்த ஐயர்தம் அன்பர் என்பதோர் தன்மையால்
    நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்திமுன்
    கூர வந்து எதிர் கொண்டு கைகள் குவித்து நின்று செவிப்புலத்து
    ஈர மென்மதுரப் பதம்பரிவு எய்த முன்னுரை செய்தபின் (442)

    என்ற பாடல் இளையான்குடி மாற நாயனார் புராணத்தில் இடம்பெறுகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள “நேர வந்தவர் யாவர் ஆயினும்” என்பது சிறப்பு மிக்கத் தொடராகும். சிவனாரின் அடியார் என்ற நிலையில் அடியவர் யார் வந்தாலும் சாதி, இனம், மொழி எப்பாகுபாடும் பாராமல் அவர்களின் முன் சென்று கைகள் குவித்து, அவர்களின் செவிகளில் மதுர மொழிகளால் இனியன கூறி இல்லத்திற்கு அழைக்கவேண்டும் என்பது முறைமையாகின்றது. அடியார்களிடம் பேசும் நன்மொழிகளைக் கூடச் சேக்கிழார் தன் காப்பியத்தில் தந்துவிடுகிறார்.
    “நன்று உமது நல்வரவு, நங்கள் தவம்” (பாடல். 180) என்று சொல்லலாம்.
    “எந்தைபிரான் புரிதவத்தோர்; இவ்விடத்தே எழுந்தருள உய்ந்தொழிந்தேன் அடியேன்” (896) என்றும் கூறலாம்.
    “முந்தை எம் பெரும் தவத்தினால் என்கோ? முனிவர் இங்கு எழுந்தருளியது” (408) என்று குறிப்பிடலாம்.
    “முடிவில் தவம் செய்தேன் கொல்! முன்பொழியும் கருணை புரி வடிவு உடையீர். என்மனையில் வந்து அருளிற்று என்?” (1797) என்றும் பாராட்டலாம்.
    இவ்வாறு பலபட பாராட்டிச் சிவனடியாரை இல்லம் அழைத்துவருவது என்பது முதல் நிலை.

    2. பீடம் இட்டு அமரவைத்தல் (தாபனம்):
    வரவேற்று இல்லம் அழைத்து வந்த அடியார் இப்போது வீட்டு வாசலில் நிற்கிறார். யார் வந்தாலும் வீட்டுக்குள் அழைத்து அவர்களுக்கு இருக்கை தந்து உபசரிப்பது தமிழர் மரபு. வந்திருப்பவர் அடியார். வரவேற்பவர் அடியார். வந்தவரை வணங்கி வீட்டிற்குள் அழைத்து உரிய இருக்கையில் அமரவைப்பது என்பது அடுத்தபடிநிலையாகும்.

    அடியவர் அமரும் பீடம் வீட்டாரின் வசதிக்கு ஏற்றது என்றாலும், வீட்டிலே இருக்கும் உயர்ந்த ஆசனம் அதுவாக இருக்கவேண்டும். சந்தமலர் மாலைகள், முத்துமாலைகள் ஆகியன சூட்டப்பெற்ற ஆசனமாக அது இருப்பது நலமாகும். பொன் ஆசனம் என்றாலும் அதுவும் தகும். நம்வீட்டில் இருக்கும் ஆசனம் அடியவர் உட்காருவதன் காரணமாக பொன் ஆசனமாக மிளிர்கின்றது. “மண்டு காதலின் ஆதனத்து இடை வைத்தார்” இளையான்குடி மாற நாயனார்.

    3. நறுநீர் கொண்டு திருவடி விளக்குதல் (பாத்தியம்):
    வீடும் வேண்டா விறலினரான அடியவர், ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் அப்பெரியார் தற்போது ஆசனத்தில் அடிமைப் பாங்குடன் ஒதுங்கி அமர்கிறார். இச்சிறியவனுக்கு இச்செய்கை பொருந்துமா என்ற வெட்கம் அவரிடத்தில் எழ அவர் ஒதுங்கி அமர்கிறார். அவ்வாறு அமர்ந்திருக்கும் அவரின் திருப்பாதங்களை நறுநீர் கொண்டு விளக்குதல் அடுத்தமுறைமை ஆகும்.
    கொண்டு வந்து மனைபுகுந்து குலாவு பாதம் விளக்கினார் இளையான்குடிமாற நாயனார்.
    கமழ்நீர்க்கரகம் எடுத்து மனைவியார் ஏந்த, தூயநீரால் சோதியார் தம் கழல் வளிக்கினார் சிறுத்தொண்டர் (3735).
    பாதங்கள் விளக்க நீர் முன் அளித்தார் காரைக்கால் அம்மையார். (1739)
    இப்பாடலில் சிறுகுறிப்பு காணத்தக்கது. அடியவர் வந்துவிட்டார். கணவர் வீட்டில் இல்லை. இந்நிலையில் பெண்கள் அடியவரை வரவேற்பது சரியா. சிறுத்தொண்டர் புராணத்தில் அடியார் இல்லை என்பதால் வெளிநடப்பு செய்கிறார் அடியவர். இங்கு உள் நுழைகிறார் அடியவர். வரும் அடியவரைப் பொறுத்தது உள் வருவதும், வராததும். சிறுத்தொண்டர் புராணத்தில் அடியவரை வரவேற்கச் சிறுத்தொண்டரின் மனைவி தயாராக இருந்தும் அடியவரே நான் பெண்கள் தனித்திருக்கும் இடத்தல் வரமாட்டேன் என மறுத்துரைக்கிறார்.
    காரைக்கால் அம்மையார் புராணத்தில் கடையில் கணவன் இருக்க, வீட்டில் அடியவர் நுழைய, மறுக்காது வரவேற்கிறார் அம்மையார். அவருக்குக் கால்களை விளக்கத் தான் முனையாது நீர் முன் அளிப்பதாகச் சேக்கிழார் பாடுகிறார்.

    இதே நிலை ஏயர்கோன் கலிக்காமர் புராணத்திலும் வருகிறது. ஏயர்கோன் இருந்தும் இல்லாமல் இருக்கிறார். சுந்தரர் அந்நேரம் வருகிறார். அப்போது ஏயர்கோன் கலிக்காமர் மனைவி
    “தூயமணிப் பொன்தவிசில் எழுந்தருளி இருக்கத் தூநீரால் சேயமலர்ச் சேவடி விளக்கி” (3193)
    என்று தானே விளக்குகிறார். இங்கு கணவன் வீட்டில் இருக்கிறார். அவர் நினைவின்றி மயங்குகிறார். அவர் நினைவில் இருக்கையில் சிவனடியாரை வரவேற்பதில் ஏதும் குற்றம் வந்துவிடக் கூடாது என்ற நிலையில் ஏயர்கோன் கலிக்காமர் மனைவி கணவன் உடன் இருந்து செய்யும் பாதம் விளக்கலை அம்முறைப்படிச் செய்கிறார். இவ்வாறு வந்த அடியார் தன் கால்களை முன்னும் பின்னும் இழுத்து இப்பெருமை எனக்கானது அல்ல, சிவனுக்கானது என்று ஏற்கிறார்.

    4. விளக்கிய நீரை தம் மீதும், வீடெங்கும் தெளித்தல் (அருக்கியம்):
    அடியார் ஏற்றுக்கொண்ட பாதம் விளக்கலைச் செய்து முடித்த நிம்மதி இப்போது வரவேற்ற அடியாருக்கு வந்துவிட்டது. இருந்தாலும் இது போதாது என்று அவர் மனம் எண்ணுகிறது. அடியார் அடிகளை விளக்கிய நீரை வீடெங்கும் தெளித்து தன் வீட்டைப் புதுப்பிக்கிறார் அடியவர். இதுவே அடுத்த முறைமையாகும்.
    “முனைவரை உள் எழுந்தருளு வித்து அவர்தாள் முன்விளக்கும், புனைமலர் நீர் தங்கள்மேல் தெளித்து”( 1807) என்று அப்பூதி அடிகள் அடியார்க்குப் பெருமை சேர்க்கிறார்.
    ஏயர்கோன் கலிக்காமர் மனைவி “தூநீரால் சேயமலர் சேவடி விளக்கித் தெளித்துக்கொண்டார். செழும்புனலால் மேயசுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களித்தார்” (3193) அவர் தெளித்த நீர் ஏயர்கோன் உயிரையும் நீட்டித்திருக்க வேண்டும்.
    சிறுத்தொண்டர் “ஆய புனிதப்புனல் தங்கள் தலைமேல் ஆரத்தெளித்து இன்பம் மேய இல்லம் எம்மருங்கும் வீசி”(3735) பெருமை கொண்டார்.
    அடியவர் அடிகள் நீரை அவரறிந்தும் அறியாமலும் வீடெல்லாம் தெளித்துப் பெருமை கொண்டனர் அடியார் இல்லத்தார்.

    5. எஞ்சிய நீரை உள்ளும் பருகுதல் (ஆசமனம்):
    இல்லமெல்லாம் தெளித்து இல்லத்தைப் புதுமை செய்தபின் இன்னும் கொஞ்சம் அப்புனிதநீர் இருப்பதனால் தன் உள்ளுக்குப் பருகுகின்றனர் இல்லத்தார். அப்பூதியார் உள்ளும் பூரித்த நிலை (1807) பாடலால் தெரியவருகிறது.

    6. பூசனை (அருச்சனை):
    அடியவர் ஆசனத்தில் இனிது அமர்ந்துள்ளார். அவருக்குப் பாதபூசை செய்யப்பெற்றது. அதன்பின் அவருக்கு அர்ச்சனைகள் செய்யவேண்டுவது முறையாகும். அருச்சனை செய்தபின் (443), ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து (1808), உளம்களிப்ப ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார் (3193), ஏயும் தூப தீபங்கள் முதல் பூசனை செய்து இறைஞ்சுவார் (3735) என்று அடியவரை ஆண்டவனாகவே எண்ணிப் பூசை செய்த நாயன்மார்தம் செய்கையைப் பெரியபுராணத்தில் காட்டுவார் சேக்கிழார். மலர்கள், சந்தனம், தீபம், தூபம் கொண்டு அடியவருக்குப் பூசனை நிகழ்த்தப்படுகிறது. அடியவரின் உடலுக்கும், உள்ளத்திற்கும், நினைவிற்கும், செயலிற்கும் நடத்தும் இப்பூசனை சிவபூசனையைவிடச் சிறந்தது. ஏனெனில் இப்பூசனை மெய்க்கு மெய்யாக நடத்தப்படும் பூசனையாகும். இறைவனுக்கும் மனத்தாலே, செய்கையாலே பூசனை செய்யலாம். அதனை இறைவன் ஏற்றானா என்பது சந்தேகம்தான். ஆனால் மெய்க்கு மெய்யாக இங்கு அடியவர் பூசனை நிகழ்த்தப்படுகிறது.

    7. திருவமுது படைத்தல் (நிவேதனம்):
    பூசனை முடிந்தபின் திருவமுது படைப்பது என்பது நியதி. இத்திருவமுது காலம் கடத்தாமல் நன்பகல் தாண்டாமல் படைக்கப்படவேண்டும். காய்கறி உணவு ஏதும் ஆயத்தமாகவில்லை என்றாலும் திருவமுது (சோறு) மட்டும் தயிருடன் தரப்படலாம். அப்படித் தந்தவர் காரைக்கால் அம்மையார்.
    “நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றைக் கொண்டு வல்விரைந்து வந்தணைந்து படைத்து மனமகிழ்ச்சியினால் அல்லல் தீர்ப்பவர் அடியார்தமை அமுது செய்வித்தார்” (1741) என்று திருவமுது படைத்தார் காரைக்கால் அம்மையார்.
    பசி போக்கும் இனிய தொண்டு சிவத்தொண்டு ஆகும். பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் நிலையில் பசி கடக்கா வண்ணம் உணவிடுவது முக்கியம். உணவின் தரம், வகை ஆகியவற்றில் விடுதல் இருந்தாலும் உணவிடுவது காலத்திற்கு நடக்கவேண்டும் என்பது முறைமையாகும்.
    “உண்டி நாலுவித்தில் ஆறுசுவைத்திறனில் ஒப்பிலா அண்டர் நாயகன் தொண்டர் இச்சையில் அமுது செய அளித்துள்ளார்” (443) இளையான்குடி மாற நாயனார்.
    திருநாவுக்கரசு சுவாமிகள் அப்பூதி அடிகளின் வீட்டில் அமுது உண்கிறார். திருவமுதை இல்லமாதர் எடுத்து நல்க கொத்து அவிற் கொன்றை வேணிக் கூத்தனார் அடியாரோடும் அருந்தமிழ் ஆளியார் அங்கு அவர் அமுது செய்கின்றனார். அப்பூதியடிகள் வீட்டில் ஒரே ஒரு அடியவர் அதாவது திருநாவுக்கரசர் மட்டுமே உணவு உண்ண வந்திருக்க அடியாருடன் உண்டதாகச் சேக்கிழார் குறிக்கிறார். அடியார் உண்ணும் உணவு அதனை உண்ணும் அத்தனை பேரும் அடியாராக மாறும் திறம் இதுவேயாகும்.

    வந்திருக்கும் அடியவர் முன் அவர் மனம் கோணாதபடி உணவுகளைப் பரிமாறுகின்றனர் சிறுத்தொண்டரின் இல்லத்தார். “புனிதர் தம்மைப் போனகமும் கறியும் படைக்கும்படி பொற்பின் வனிதையரும், கணவரும் முன் வணங்கிக் கேட்ப மற்று அவர்தாம் இனிய அன்னமுடன் கறிகள் எல்லாம் ஒக்கப்படைக்க” (3736) என்கிறார். இப்பாடலடியின்படி கற்பில் சிறந்த பெருமாட்டியும், பெருமை குன்றாமல் வாழ்ந்து வரும் சிறுத்தொண்டரும் விருந்துக்கான உணவுப்பொருட்களைப் பரிமாறிய நிகழ்வை அறிந்து கொள்ளமுடிகின்றது.

    சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரருக்கு உணவு படைக்கிறார். இருவரும் தோழர் என்றாலும் அங்கும் அடியார்தமை வணங்கும் முறைமை பின்பற்றப்படுகிறது.

    “பெருமான் வேண்ட எதிர் மறுக்க
    மாட்டார் அன்பின் பெருந்தகையார்
    திருமா நெடுந்தோள் உதியர்பிரான்
    செய்த எல்லாம் கண்டிருந்தார்
    அருமானங்கொள் பூசனைகள்
    அடைவே எல்லாம் அளித்ததன்பின்
    ஒருமாமதி வெண்குடை வேந்தர்
    உடனே அமுது செய்து உவந்தார்” (3904)

    என்று அடியாரை உபசரித்தலைப் பூசனை என்ற ஒரு சொல்லால் இங்குக் குறிக்கிறார் சேக்கிழார். இச்சொல்லுக்குள் முன் சொன்ன படிநிலைகள் அனைத்தும் அடங்கிவிடுகின்றன. வரவேற்றல் முதல் பூசனை வரை அனைத்தும் நிகழ அடுத்து உணவு உண்ணும் நிலை வந்தது என்பதை இப்பாடல் தெரிவிக்கின்றது.

    இவ்வாறு அடியார்களை அழைத்துச் சிவ உணவைத் தந்து மகிழச் சேக்கிழார் ஒரு செயல்திட்டம் வரைந்து அளித்துள்ளார். இதன்பின் அடைக்காய், வெற்றிலை, பசுங்கர்ப்பூரம் போன்றன நல்கி இப்படையலைச் செழுமைப்படுத்தவேண்டும். உண்ட அடியவர் மனம் மகிழ்ந்து தன் உணவைச் சிவ உணவாகச் சிவனுக்கு ஆக்குகிறார். அடியவர் வழியாக உண்ணும் முறைமையே ஆண்டவனின் உண்ணும் முற்றாகின்றது.

    “அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
    பொன்னம் பாலிக்கும் மேலும் பூமிசை
    என்னம் பாலிக்கும் மாறுகண் டின்புற
    இன்னம் பாலிக்குமோ இப்பிறவி” (அப்பர் தேவாரம்)

    என்ற பாடலின்வழி அன்னம் பாலித்த அடியார்கள் தில்லைச் சிற்றம்பலத்தின் தொடர்பு பெற்றவர்கள் ஆகின்றார்கள். இதன்பின் அடியவருக்கு ஆடை, அணி, மணி, மலர்கள், திரு ஆபரண வர்க்கங்கள் எனப்பல தந்து இந்தச் சிவபூசையை நிறைவேற்றவேண்டும் என்பது சேக்கிழார் காட்டும் அடியார் வணக்க நடைமுறையாகும்.

    இந்நடைமுறையில் நின்று நாளும் நம் இல்ல விருந்தைச் சிவ விருந்தாக மாற்றுவோம். சிவத்திற்கு எல்லாம் அளிக்கும் நன்முறையே சிவநடைமுறை.

     

     

    முனைவர் மு.பழனியப்பன்
    தமிழ்த்துறைத் தலைவர்,
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    திருவாடானை

     

    Share
  • இன்னம்பூரான் பக்கம்: 2: கனம் கோர்ட்டார் அவர்களே![26]

    இன்னம்பூரான்
    27 02 2016

    d46e33f5-ece4-49dc-9494-25695e8e1d0d

    உரிமை போராட்டங்களில் உரிமையும் தாக்கப்படுவது ஒரு இயல்பான காட்சி. ஒரு உள்ளங்கை நெல்லிக்கனி உதாரணம்.
    ‘தன்னுடைய கோலை சுழுற்றுவதற்கு உமக்கு முழு உரிமை உண்டு, அது என் மூக்கை உடைக்கும் வரையில்.’

    எனினும் கோலை சுழற்றுபவர்களுக்கும், சிதைந்த நாசிகளுக்கும் பஞ்சமில்லை!

    மஹாலக்ஷ்மி பாவானி என்ற வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தின் மகளிர் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில், அந்த நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அதில் கூறப்பட்ட தகவல், சர்வ வல்லமை படைத்த ஆண்டவனையும் உலுக்கி எடுத்து விடும். குஞ்சும் குளவானுமான வருடந்தோறும் இல்லத்தில் ‘கரு’ பணி செய்து வரும் பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும், அந்தந்த பஸ்களில் பள்ளி சென்று வரும் சிறுமிகளுக்கு நீலத்திரைப்படங்களை காண்பித்து, அவர்களை பாலின தொந்தரவு செய்கிறார்கள் என்றும் அத்தகைய வக்கிரங்களை சட்டரீதியாக தடுக்கவேண்டும் என்றார்.

    Child pornography உலகெங்கும், அதுவும் இணையத்தில், பரவியிருந்தாலும், அநேக தேசங்களில் உடனடி தடையும் தண்டனையும் உண்டு. போர்ட்ஸ்மத் என்ற இங்கிலாந்து நகரில், ஒரு ஓய்வு பெற்ற மேஜர் ஜெனெரல் நீதிபதி. மேற்படி குற்றங்களுக்கு கடுந்தண்டனை விதிப்பார். ஒரு நாள் அவர் வீட்டில் சோதனை. ஆயிரக்கணக்கான நீலப்படங்கள். கையோடு கையாக கைது செய்து விட்டார்கள். அமெரிக்காவில், cybercrime police உடனேயே, கத்தியும் கபடாவுமாக வீட்டில் புகுந்து கைது செய்யக்கூடும். ஶ்ரீலங்காவில் வசித்து வந்த ஒரு பிரபல ஆங்கிலேய எழுத்தாளரை இங்கிலாந்து ராஜகுமாரன் (கிழம்!) வந்து பாராட்டுவதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஏன் தெரியுமா? அந்த பெரிசு Child pornographyயில் மூழ்கி ஞானஸ்நானம் செய்வதால். ஆனால் அவரை கைது செய்யவில்லை, பல வருடங்களாக. இந்தியாவில் இந்த வக்ரமான மனோவியாதி மிகவும் பரவலாக இருந்தாலும், தமிழனின் நாகரீகத்தில் ஒளிந்து கொண்டிருந்தாலும், சர்வம் மர்மமயம். இது ஒழிக.

    எதற்கெடுத்தாலும் நாமும் கோர்ட்டாரை அணுகுகிறோம்; அவர்களும் மனமுவந்து தீர்வு அளிக்கிறார்கள். இந்த வக்ராதிபதிகளை தண்டிக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்திய கோர்ட்டார் மிகவும் மன உளைச்சல்களுக்கு ஆளாகி, இதை அசிங்கம், சமுதாயத்தின் நன்னெறிக்கும் அபாயம் என்று கூறினர். நீதிபதி மிஸ்ரா அவர்கள்,

    ‘…பேச்சுரிமையும், விட்டு விடுதலையும் கட்டுப்பாடற்றவை அல்ல. அரையணா சர்ச்சைகளும், கோர்ட்டின் எல்லை சர்ச்சைகளும் குறுக்குசால் ஓட்டக்கூடாது..’

    என்று அச்சுறுத்தினார். மத்திய அரசு பொருத்தமான சட்டங்கள் இயற்றவேண்டும் என்ற நீதிபதிகள், அந்த அரசிடமிருந்து ஒரு விளக்கம் கேட்டு ஆணையிட்டனர். கவின்கலைக்கும், வக்கிரபுத்திக்கும் வித்தியாசம் உண்டு என்ற அவர்கள், அவற்றை பகுத்து அறிவது கடினம் என்றனர்.

    படிப்பினை:

    டாக்டர் தேவி ரஜப் அவர்கள் நாசகார பன்முகங்களை ஒழிப்பதில் கவனம் செலுத்தாமல், வீண் சிந்தனைகளிலும், காழ்ப்புணர்ச்சியிலும் காலம் கடத்துவதால் இளைய சமுதாயம் மாபெரும் தவறு செய்கிறது; கடமையிலிருந்து நழுவி விடுகிறது; சமுதாய சீர்குலைப்பு தழைவிட்டு வளர்கிறது என்பதை எடுத்துரைத்து விட்டார். அதை நாம் ஊன்றி கவனித்து, நமது சம்பிரதாய சண்டைகளிலிருந்து (பாட்டியின் மொட்டை, பார்ப்பன துவேஷம் போன்ற சில்லறை மாஜி தாவாக்கள்: அதெல்லாம் செத்த பாம்பு, மேடம். Child pornography ஒரு கட்டுவிரியன்: அடுத்து வருவது கருநாகம். ) விடுதலை பெற்று ஆக்கப்பூர்வமான சமுதாய நிவாரணங்களுக்காக உழைக்க வேண்டும். சமுதாயத்தின் விரோதி சமுதாயம் தான் என்பது கசப்பான உண்மை. சமுதாயத்தின் பின்னடைவை தடுத்தாட்கொண்டு முன்னேற்றங்களை கொணரவதும் சமுதாயம் தான் என்பது இனிப்பான உண்மை.

    இனி உங்கள் பாடு.

    -#-
    சித்திரத்துக்கு நன்றி: https://forrestduba475.files.wordpress.com/2011/02/child-pornography.jpg

    உசாத்துணை:

    Printable version | Feb 27, 2016 7:01:19 AM | http://www.thehindu.com/todays-paper/tp-national/prevent-access-to-child-pornography-centre-told/article8287151.ece
    © The Hindu

    இன்னம்பூரான்

    Share
  • படக்கவிதைப் போட்டி 52-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணனின் புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமிகு. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள்.

     book store

     

     

     

     

     

     

     

     

     

     

    குவியல் குவியலாய்க் கொலுவிருக்கும் புத்தகங்கள்! வெறும் புத்தகங்களா அவை? இல்லை…அகத்தைத் தூய்மையாக்கி, அறிவை விரிவாக்கி, உலகை வெல்லச்செய்யும் ஆயுதங்கள்!

    நூல்களின் சிறப்பை விளக்கவந்த பாவேந்தர்,

    நூலைப்படி – சங்கத்தமிழ்
    நூலைப்படி – முறைப்படி
    நூலைப்படி!

    காலையிற்படி கடும்பகல்படி
    மாலை, இரவு பொருள்படும்படி
    நூலைப்படி!

    கற்பவை கற்கும்படி
    வள்ளுவர் சொன்னபடி
    கற்கத்தான் வேண்டுமப்படி
    கல்லாதவர் வாழ்வதெப்படி?  

    என்று மு(எ)ப்போதும் நூல்களைக் கற்கவேண்டியதன் அவசியத்தைச் செப்பிச் செல்கின்றார். 

    சரி…புத்தகக் குவியல்கண்ட நம் கவிஞர் பெருமக்கள் எத்தகு கவிதைகளைப் புனைந்திருக்கின்றனர் என அறியப் புகுவோம்!

     ***

    ’பொலிவாக முன்னர்த் தோற்றங்காட்டிய புத்தகங்கள் பின்னர் மதிப்பிழந்து மலிவாய்ப் போவதுபோன்றதே மானுட வாழ்வின் இயல்பும்!’ என்று புத்தகங்களை மனிதரின் நிலையோடு ஒப்பிடுகின்றார் திரு. மதிபாலன். 

    புத்தகங்கள் , ஏடுகளில் புன்னகைக்கும் ரத்தினங்கள்!
    பொத்திவைத்த அறிவென்னும் பொக்கிஷத்தின் சுரங்கங்கள்!

    உள்ளூரின் இதழ்முதலாய் உலகஇலக் கியம்வரைக்கும்
    எல்லாமும் இங்குண்டு,எடுப்பதெல்லாம் குறைந்தவிலை!

    கடைகடையாய் அலைந்தபின்னும் காணாத புத்தகமும்
    நடைபாதைக் கடையிதிலே நாம்காணக் கிடைப்பதுண்டு!

    புதிதாக வந்தபோது பொலிவாக இருந்ததுதான்
    எதனாலோ இங்குவந்து இயல்புகெட்டுக் கிடக்கிறது!

    பயனுள்ள வரைக்கும்தான் பலர்நம்மைப் புகழ்ந்திடுவார்
    பயன்குறைந்து போய்விட்டால் பாதையோரப் புத்தகம்தான்!…

    *** 

    ’நூலகத்தில் துலங்கி வாலறிவை வளர்த்த புத்தகங்கள் வழிமாறிப் போனாலும் மரணிப்பதில்லை; அவற்றைத் தேடித்தேடிப் படித்த மனிதனும் அவ்வாறே!’ என்று சாகாவரம் பெற்ற புத்தகங்களின் புகழ்பாடுகின்றார் திரு. கவிஜி.

    நீர் அடித்துப் போன 
    புத்தக நினைவுகளின்
    கூட்டுக்குள்
    திறந்து விடப் பட்டுக்
    கொண்டேயிருக்கிறது,
    சிறுவயது முதல் சேர்த்து
    வைத்த அவரின் நூலகம்… 

    அது
    வழி மாறிய பதிவுகளை
    கரையெங்கும்
    விட்டுப் போகிறது

    […]

    ஒரு புத்தகம், அதில்
    சில பக்கம்
    அல்லது ஒரு பக்கம் ஒரே
    ஒரு பக்கம்
    எவர் கையிலாவது அகப்படலாம்….

    மண்ணுக்குள் வேராக விதி செய்யலாம்
    வினை செய்யலாம்

    காலம் முழுக்க
    அடையாளமின்றி
    படித்தவர்,
    கடல் தாண்டியும் ஏதாவதொரு
    தீவுக்குள் விதையலாம்… 

    புத்தகங்கள் மரணிப்பதில்லை,
    படித்த அவரைப் போலவே

    *** 

    ’அட்டைக்குள் பதுங்கியிருக்கும் அறிவு நீரூற்று புத்தகம்; அதனிடம் தலைகுனிந்தவன் வாழ்வில் தலைநிமிர்வான்’ என்று அழகாக அனுபவமொழி பகர்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அறிவு நீரூற்று
    அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது

    அட்டைகளுக்குள்..

    எடுத்துக் குடிப்பவரை
    ஏமாற்றியதில்லை என்றும்,
    ஏற்றித்தான் விடுகிறது
    குன்றாய் உயர..

    இதனிடம் தலைகுனிந்தால்,
    தலைநிமிரலாம் வாழ்வில்..

    ஆனால் இன்று அது
    அடுக்கிவைக்கப்பட்டிருக்கிறது
    நூலகத்தில்,
    எடுத்துப்பார்க்க ஆளின்றி..

    கொலுவிருக்கிறது புத்தகக்கடையில்
    கூடுதல் விலை மதிப்பில்..

    அந்த அறிவு இங்கே
    பேரம் பேசப்படுகிறது
    பழைய புத்தகக் கடையில்…!

    *** 

    சொற்பமாய்க் கிடைத்த நேரத்திலும் அற்புதப் புத்தகங்களைக் கற்றுத் தன் சொற்சுவை நிறைந்த உரைகளால் பாராளுமன்றத்தில் பாராட்டைப் பெற்ற நேரு பெருமானைத் தன் கவிதையில் நினைவுகூர்ந்திருக்கின்றார் திரு. க. கமலகண்ணன்.

    நேரு பாராளுமன்றத்தில்
    புதிய புதிய கருத்துக்களையும்
    உதாரண உவமைகளையும் சொல்லுவாராம்
    கேட்கின்ற அத்துணைப் பேருக்கும்
    ஆச்சரியம் நேருக்கு மட்டும் எப்படி
    நேரம் கிடைகிறது ஒருவர் துணிந்து
    கேட்டே விட்டாராம் எப்படி என்று
    திருடினேன் என்றாராம் நேரு
    அரங்கமே அதிர்ந்து போனது
    புரியவில்லை என்றாரம் அவர்
    என் உதவியாளர் உறங்குவதற்கு
    நான்கு மணி நேரம் தருவார்
    அதில் ஒரு மணி நேரம் திருடி
    புதிய புத்தகங்களை படிப்பேன்
    என்று சொல்லி மீண்டும் அரங்கத்தை
    அதிர வைத்தாராம் நேரு
    புத்தகம் வெறும் காகிதமல்ல
    பொக்கிஷம்…

     ***

    புத்தகக்கடைகண்டு முத்தான கவிதைகளை வடித்திருக்கும் கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்!

    சிறந்த கவிதையைப் படைத்திருக்கும் கவிஞர் யார் எனக் கண்டுவரும் தருணமிது!

     ”தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு” என்பது வான்புகழ் வள்ளுவரின் வாய்மொழி. அறிவை ஆழமாகவும் அகலமாகவும் வளர்த்துக்கொள்ள நாம் அகலாது அணுகவேண்டியவை நூல்கள்! வெறும் அச்சேறிய காகிதங்களாய்ப் பார்க்கப்பட்டுப் ’பயனில’ என்று வீசப்படும் புத்தகங்கள் எத்தனையோ அறிஞர்களையும் சிந்தனையாளர்களையும் அவனிக்கு அளித்தவை என்பதனை அவற்றின் மதிப்புணர்ந்த யாரே மறுப்பர்? அத்தகைய புத்தகங்களைப் பதுமநிதி எனப் புதுமையாய்ப் போற்றும் கவிதை என் சித்தத்தைக் கொள்ளையிட்டது! 

    வேண்டாமென்று வீசுவோர் பலர் அதை
    வேண்டுமென்று தேடுவோர் பலர்; அதைத்
    தோண்டி எடுக்கட்டுமென்ற தாராள மனதில்
    தோராயமாய் விற்கிறார் இங்கு இவர்!
    பாதையோரப் புத்தக அகமானாலும் தரம்
    போதையெனும் அறிவு பெற வரம்.
    கீதையும் பெரும் காதைகளும் மலிவாகி
    பாதையாகும் அறிவுச் சுடர் ஏற்ற.

    அழகோ அலங்கோலமோ அறிவிற்கேது தரம்!
    பழையதோ புதியதோ அறிவு மொழியுரம்.
    பழகிய அறிவுச் சாரற் குளிப்பாம்
    புத்தக வனத்துக் கருத்துணர்வுப் பொக்கிசம்.
    வாசிப்பு அருகிடும் காலத்தில் புதையலாய்
    நேசித்து அறிவூற்றில் நீந்திப் பயனடைவார்.
    புத்தகப் பக்கத்தில் ஒளிரும் முத்துக்கள்
    சத்தை உணராதவன் செத்தவன் ஆகிறான்.

    பாம்புப் புற்று போன்ற அடுக்கில்
    தோம்பு, தோட்டக்கலை, தொல்காப்பியம் ஈறாக
    கூம்பகம், கூட்டுறவு, கூத்துப் பாட்டென
    வேம்போ இனிப்போ அத்தனையும் தேடலாம்.
    பதுக்கிடு! என்றும் பழசென்று வீசாதே!
    பதுமநிதி போன்றது பன்முக நூல்கள்.
    மதுரவாக்கு  பழைய நூல்களும் வளர்க்கும்
    பொதுவான நல்லறிவு தேடிப் படி!

    ”தேடிப் படி நல்ல நூல்களை!” என நமைநாடிச் சொல்லும் கவிதையைத் தீட்டியிருக்கும் திருமிகு. வேதா. இலங்காதிலகம் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வு பெறுகின்றார்.

    *** 

    ’வண்ணச்சிந்தனைகளை வாழ்வில் விதைத்த புத்தகங்கள் இன்று கருப்பு வெள்ளையாய் நிறமாறிப் போனாலும், டிஜிட்டல் யுகத்திலே அவை எண்ணிம வடிவில் உருமாறிப் போனாலும், காகித உருவில் நம் நெஞ்சிற்கு இதமளித்த புத்தகங்களுடனான நம் உறவு காலத்தை வென்றது’ என்று கவினுறப் பேசுகின்ற கவிதையொன்று!

    வண்ண வண்ண சிந்தனைகளை
    வார்த்தெடுத்தப் புத்தகங்கள்
    எண்ணக் குவியல்களால்
    புரட்சிகளை உருவாக்கியப் புத்தகங்கள்
    இன்று
    கருப்பும் வெள்ளையுமாய் மாறிப் போனது
    காலத்தின் கோலம்!

    அன்று
    வாய் மொழிச் சொற்களில்
    வலம் வந்த சிந்தனைகள்
    கல்லுக்குள் இடம் மாறி
    ஓலைக்குள் உருமாறி
    தொழில் புரட்சி ஈன்றெடுத்த
    அச்சு இயந்திரத்தால்
    காகிதத்திற்குள் புகுந்து
    புத்தகமாய்ப் பரிணமித்தது!

    புவியின் நிலை மாற்ற
    புத்தகங்கள் ஆற்றிய பணி
    போற்றற்குரியது!

    இன்று
    காகிதத்திலிருந்து
    டிஜிட்டலுக்குத் தாவும்
    அறிவியல் தருணம்!

    வடிவ மாற்றமென்பது
    இயற்கையின் இயல்பே

    போர்டு ஐகானில் பயணிப்பவர்கள்
    மாட்டு வண்டிகள்
    மரணித்துவிட்டதே என்று
    கவலை கொள்வதில்லை!
    என்றாலும்
    புத்தகங்களுக்கும்
    நமக்குமான உறவை
    எந்த டிஜிட்டலினாலும்
    டெலிட் செய்ய முடியாது! 

    மனிதனைப் பல்துறை வித்தகனாக்கும் புத்தகங்களின் பரிணாமவளர்ச்சியைப் பாங்காய்ச் சொல்லியிருக்கும் திரு. கொ.வை. அரங்கநாதனின் கவிதையைப் பாராட்டுக்குரியது என அறியத்தருகின்றேன்.

     

     

    Share
  • வல்லமையாளர் விருது பொறுப்பேற்கும் செ.இரா. செல்வக்குமார்

    பவள சங்கரி

    அன்பினிய நண்பர்களுக்கு,

    வணக்கம். கடந்த 200 வாரங்களாக வல்லமையாளர் தேர்வை மிகச் சிறந்த முறையில் நடத்தியுள்ள நம் வல்லமை ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு.திவாகர், வல்லமை ஆசிரியர் குழு உறுப்பினர் முனைவர் தேமொழி அவர்களையும் மனமார வாழ்த்தி, அடுத்து உயர்திரு செ.இரா. செல்வக்குமார் அவர்களை இப்பொறுப்பை ஏற்று நடத்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். மேலும் இப்பணியில் உதவிய திரு. இன்னம்பூரான்,  பேராசிரியர் நாகராசன் அவர்களையும் பாராட்டி மகிழ்கிறோம். இதுவரை 200 வல்லமையாளர்களை நாம் பாராட்டி மகிழ்ந்திருக்கிறோம். மேலும் பல வல்லமையாளர்களை திருமிகு செ.இரா. செல்வக்குமார் அவர்கள் தெரிவு செய்ய உள்ளார்கள் என்பதையும்  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

    crசெ.இரா. செல்வக்குமார் கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்திலே மின்னிய, கணினியியப் பொறியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். அவருடைய ஆய்வும் கற்பித்தலும் குறைக்கடத்தி நுண்கருவிகள் (Semiconductor micro-nano eleactronic devices) துறையைச் சார்ந்தது. அவர் கிண்டி பொறியியற்கல்லூரியில் இளநிலை பொறியியற்பட்டமும் இந்தியத்தொழினுட்பக்கழகம் (ஐ.ஐ.டி), மும்பையில் முதுநிலைப்பட்டமும், சென்னை இந்தியத்தொழினுட்பக்கழகத்தில் (ஐ.ஐ.டி)  முனைவர்ப்பட்டமும் பெற்றவர். பின்னர்  வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் முதலில் முதுமுனைவராகவும் பின்னர் பேராசிரியராகவும் ஆனார். 1992 இல் கலிபோர்னியாவிலுள்ள இசுட்டான்போர்டு (Stanford) பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும், (Visiting faculty),  பின்னர் 2003 இல் பிரின்சிட்டன் (Princeton) பல்கலைக்கழகத்தில் வருகைதரு சிறப்பாளராகவும் (Visiting Fellow) பணியாற்றியிருக்கின்றார். வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் 9 ஆண்டுகள் (1996-2005) வாட்டுமேட்டு (WATMAT) என்னும்  பொருளறிவியல், பொறியியல் நடுவத்தின்  இயக்குநராக இருந்தார். ஐ.இ.இ.இ (IEEE)  என்னும் அனைத்துலகப் பொறியியல் நிறுவனம் நடத்தும்  ‘’IEEE Bipolar/BiCMOS Circuits and Technology Meeting.’’ என்னும் கருத்தரங்கத்தின் தலைவராக 1994 இல் இருந்தார்.  ஐ.இ.இ.இ ஆய்விதழ் ஒன்றுக்குச் சிறப்பாசிரியராகவும்  இருந்தார். வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் மேலவை (Senate) உறுப்பினராகவும், பல்கலைக்கழக ஆளுநர் குழுவின் (Board of governors) உறுப்பினராகவும் 3 ஆண்டுகள் (2006-2009) பணியாற்றியிருக்கின்றார். 1992 முதல்  American Men and Women of Science என்னும் தொகைநூலில் குறிக்கப்பெற்றுள்ளார்.

    crs

    இவர் கடந்த 25 ஆண்டுகளாக இணையத்தில் தமிழில் எழுதிவருகின்றார். Alt.culture.tamil,  soc.culture.tamil, tamil.net போன்ற மடலாடற்குழுமங்களின் நிறைய எழுதியிருக்கின்றார். அதன் பின் இப்பொழுது முகநூலிலும், அவர் நடத்தும் தமிழ்மன்றம் என்னும் கூகுள் மடலாடற்குழுமத்திலும் தொடர்ந்து எழுதிவருகின்றார். இவர் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ 820 கட்டுரைகளைத்தொடங்கி எழுதியும் 20,000 உக்கும் கூடுதலான தொகுப்புகள் செய்தும் ஆக்கம் அளித்திருக்கின்றார். பள்ளிநாள்களிலிருந்தே தமிழ்ப்பற்றுடன் தமிழ்வளர்ச்சி சார்ந்தவற்றில் பங்காற்றி வருகின்றார். முகநூலில் அதிகமான தமிழ் மொழிபெயர்ப்புகள் செய்தவர் இவரே.   மாதத்துக்கு 80 மில்லியன் பேருக்கும் மேலானோர் வருகைதரும் கோரா (Quora) என்னும் தளத்தின் முன்னணி எழுத்தாளர்களில்  (Top Writers) ஒருவராக 2016 இல் அறிவிக்கப்பெற்றுள்ளார்.  அங்கு  அவர் எழுதியவையும் பெரும்பாலும் தமிழ்சார்ந்தவையே.

    cr2

    மேலும் ஓவியம் வரைதல், களிமண் சிலைவடித்தல், பாப்புனைதல், பாறையேற்றம், மொழியியல் ஆர்வம் போன்ற பல்கலைகளிலும் வித்தகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அவரைப்பற்றிய குறிப்புகள் அடங்கிய வலைப்பக்கங்கள்:

    https://ece.uwaterloo.ca/~selvakum/biop.html

    https://uwaterloo.ca/electrical-computer-engineering/people-profiles/chettypalayam-selva-selvakumar

     விக்கிப்பீடியா பயனர் பக்கம்:  https://ta.wikipedia.org/s/1lo
    முகநூல் பக்கம் :  https://www.facebook.com/c.r.selvakumar

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com , vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில்  தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம்.  மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _______________________________________________________

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    613c3c92-5534-4085-b5a2-bcd30a1b456e

    ‘’பாம்புத் தலைமேலே நடமிடும் பாதத்தினைப் பணிவோம்
    மாம்பழ வாயினிலே குழலிசை வன்மை புகழ்ந்திடுவோம்’’ என்ற
    மகாகவி பாரதியாரின் வரிகளால் வந்த வெண்பா….

    ’’பாம்பின் தலைமேல் படமொடுங்க ஆடிடும்
    மாம்பழ வாயா, மதுராவின், -ஆம்பிளை,
    சிங்கமே, வெல்லமே, சீராயர் செல்லமே
    வங்கக் கடல்கடைந்தோய் வா’’….கிரேசி மோகன்….

    ’’பாம்பாட்டி, நச்சரவ பேய்ச்சி யிருமுலைக்
    காம்பாட்டி, அன்னையால் கட்டுண்டு, -தாம்பாட்டி,
    *கூனாட்டி மங்கைக்கு, தூணாட்டி பிள்ளைக்கு,
    காணாட்டி கேசவ்கை காண்’’….கிரேசி மோகன்….

    *-மதுராபுரி சென்றதும் கண்ணன் செய்த முதல் காரியம் ஒரு மங்கையின் கூனை நிமிர்த்தியது….

    Share
  • பிரான்சிலே உலகத்தின் பிரமிக்கத் தக்க வானுயர்ப் பட்டாம்பூச்சிப் பாலம்

     Long bride -10

     

    [World’s Highest Butterfly Bridge in France] 

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    https://youtu.be/F6wLEiv491g

    பிரான்சில் ‘மில்லா நீள்வீதிப் பாலம் கட்டமைப்புப் பொறியியல் துறைநுணுக்கச் சாதனையாக உன்னத இடத்தைப் பெறுகிறது. நமது ஆராய்ச்சி, பொறித்துறை நுணுக்கங்களின் மகத்தான வல்லமையை அது எடுத்துக் காட்டுகிறது.  அங்கே கட்டப்பட்டு, பிரென்ச் மக்கள் மெய்யாகப் பெருமைப்படும் அந்த மகத்தான சாதனை பிரான்சின் தீரச்செயலைப் பறைசாற்றுகிறது. நவீன வெற்றிமயமான பிரான்ஸ் தேசம், எதிர்காலத்துக்காகத் தன்னை இணைத்துக் கொள்ளும் ஓர் பங்கெடுப்புத் திட்டம், இது ‘.

    பிரென்ச் அதிபதி: ஜாக்ஸ் செராக் (President: Jacques Chirac)

    Long bride -9

    ‘மனிதனின் படைப்பு வினைகள் இயற்கை வனப்புக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். வீதிப் பாலத்தை வானவெளியில் தூக்கி நிற்கும் தூண்கள் பூமியில் ஏறக்குறைய இயற்கையாக வளர்ந்தவை போல எழுந்து, சூழ்வெளி வனாந்திர எழிலில் தோற்றம் அளிக்க வேண்டும். பொலிவுடன் காட்சி தரும் பள்ளத்தாக்குடன், பாலம் ஒட்டுத் தையல் போட்டதுபோல் தெரியக் கூடாது. பசுமையான வனச்சரிவுகள் பரந்த வெளியில் பட்டாம்பூச்சி மென்மையாக எழுவது போல் பாலம் காணப்பட வேண்டும் ‘.

    ‘நமது நாகரீக யுகத்தில் பின்னணித் துணைத்துறை [Infrastructure] அமைப்பு ஒரு நாட்டுக்கு வேண்டிய அடிப்படை. பொதுவெளித் தளங்கள், நதிகள் மீது கட்டும் பாலங்கள், வீதிகள் ஆகியவைதான் மக்களை ஒருங்கிணைத்துச் சேர்க்கின்றன. மேலும் நமது வாழ்க்கைத் தரத்தை அவை செம்மைப் படுத்துகின்றன. ஆனால் ஒருவர் அளந்தறிய முடியாத மிக்க ஆன்மீக உணர்வும், நமது தேவைகளில் ஒன்றாய் அவற்றுடன் இருக்கின்றது. ‘

    ajay

    ‘பாலம் மீது ஒருவர் வாகனத்தில் கடந்து செல்லும் போது, அவரது உள்ளத்தையும் பாலம் உயரச் செய்ய வேண்டும். கம்பீரமான பாலத்தைப் பார்க்கும் அவரது நெஞ்சில் ஓர் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும். மில்லா நகர் வழியே வாகனப் பயணங்களைத் தவிர்த்து அதைப் பாழாக்காமல், வான்வீதிப் பாலம் மாந்தருக்குக் கடந்து செல்ல வேறு பாதை அளிப்பதுடன், அதைத் தாண்டி மனப் பூரிப்பையும் மிகையாய்த் தருகிறது.’

    பிரிட்டிஷ் கட்டமைப்புக் கலைநிபுணர்: நார்மன் ஃபாஸ்டெர் (British Architect: Norman Foster)

    Long bride -5

    பொறிநுணுக்கமும் கலைத்துவமும் கலந்த வான்வீதிப் பாலம்

    உலகப் பெருவிந்தைப் படைப்புகளில் முன்னணியில் நிற்கும் பாரிஸ் ஐஃபெல் கோபுரம் [Eiffel Tower], அமெரிக்காவின் சுதந்திரச் சிலை [Statue of Liberty] ஆகியவற்றை ஆக்கிய பிரான்ஸ் தேசம், மற்றுமொரு மகத்தான பொறியியற் சாதனையாக மிக்க உயரத்தில் ஒரு நீண்ட வான்வீதிப் பாலத்தைத் தனது 21 ஆவது நூற்றாண்டுப் படைப்பாக அமைத்து, உலகிலே ஓர் பரபரப்பை உண்டாக்கி யுள்ளது! தீக்குச்சி களில் நூலைக் கட்டித் தொங்கவிட்ட தொட்டில் போல் எளிதாகத் தோன்றுகிறது, பிரான்சின் பிரம்மாண்டமான இரும்புவடம் தூக்கிய புது யுகப் பாலம் [Cable-Stayed Modern Bridge]! கண்கொள்ளாக் காட்சி யாய்க் கவரும், பிரான்ஸ்-ஸ்பெயின் எல்லைப் பகுதியில் டார்ன் நதிப் பள்ளத்தாக்கில் (Tarn River Valley), உயர்ந்த மலைச் சரிவுகளில் தெரிந்தும், தெரியாமால், சூழ்வெளிப் பொலிவைச் சிறிதும் குன்றச் செய்யாது அற்புதமாக ஆக்கப் பட்டிருக்கிறது, பிரான்சின் ஜெர்மன் சில்வர் வடத் தொங்கு பாலம்!

    ஏழு கம்பங்கள் தாங்கி நிற்கும் 1.6 மைல் [2460 மீடர்] நீளமான வான்வீதிப் பாலம், பிரான்சின் தெற்குப் பகுதியில் மாஸ்ஸிஃப் மைய மலைப் பிரதேசப் பள்ளத்தாக்கில் (Massif Central Mountains) 886 அடி [270 மீடர்] உயரத்தில் படுத்திருக்கும் வானவில் போல காட்சி அளிக்கிறது! இந்த வான்வீதியில் மோட்டர் பயணம் செய்வதால் 60 மைல் (100 கி.மீ) பயண தூரம் குறைவதோடு, 4 மணிப் பயண நேரமும் சேமிப்பாகிறது! ஏழு தீக்குச்சிக் கம்பங்களில், எல்லாவற்றுக்கும் பெரிய கம்பம் 1125 அடி [343 மீடர்] உயரத்தில் ஐஃபெல் கோபுரத்தை விட 62 அடி மிகையாகப் பூமியில் ஊன்றப் பட்டுள்ளது, ஒரு மகத்தானப் பொறியியல் சாதனையே!

    மெலிந்த, எளிதான, மென்மையான மில்லா வான்வீதிப் பாலத்தைப் படைத்தவர், பிரிட்டிஷ் கட்டமைப்புக் கலை நிபுணர் நார்மன் ஃபாஸ்டர். ரைஸ்ஸ்டாக் [Reichstag] என்னும் ஜெர்மன் பாராளுமன்றத்தைப் பெர்லினில் டிசைன் செய்த கட்டிட நிபுணர், நார்மன் ஃபாஸ்டர். பிரான்சின் தலைநகர் பாரிஸ் நகரை, ஸ்பெயின் நாட்டு எல்லையுடன் இணைக்கும் பாதையில் (A75) இப்புது வீதி, ரோன் நதி தீரத்தில் [Rhone River Valley] கோடை கால மோட்டர் வாகனங்களின் பயண நெருக்கடியைக் குறைப்பதற்காகக் கட்டப்பட்டது. ‘மலைச் சரிவுப் பள்ளத்தாக்கில் கண்ணுக்குப் பட்டும், படாமல் மெலிந்த சிற்பக் கோடுகள் போல் தோற்றம் அளிக்கிறது, பிரான்சின் புதுப்பாலம். இயற்கையோடு மனிதன் கொண்டுள்ள நடை மொழியைப் பேசுகிறது இந்தப் பாலம். மிகச் சிறிய இடத்தை அடைத்துக் கொண்டு, மலைச் சரிவு தீரத்தில் இயற்கையுடன் பொருந்தி நடமிடும், இந்தப் பாலத்தின் கட்டமைப்புப் பொலிவு எங்களைக் கவர்கிறது! ‘ என்று ஃபாஸ்டர் கூறினார்.

    Relative Size

    பிரான்சின் மில்லா வான்வீதி, ஜப்பான் கடல்மீது கட்டியுள்ள நீண்ட தொங்கு பாலம் ஆகாஷி கைகோவை விட [Akashi Kaiko, Japan] சற்று நீளமானது. மேலும் மில்லாவின் கூம்பிய தூண்கள் ஆகாஷி ைகைகோ கோபுரங்களை விட மிக்க உயரத்தைக் கொண்டவை. ஆனால் அமெரிக்காவின் ஆர்கன்ஸாஸ் நதிமேல் [Arkansas River] 1067 அடி (320 மீடர்) உயரத்தில் இருக்கும் கொலராடோ ராயல் கார்ஜி பாலத்தை விடச் [Colorado Royal Gorge Bridge] உயரத்தில் சிறியது, மில்லா வான்வீதி. ஆனால் இரும்பு உத்தரச் சட்டத்தின் மேல் மரப்பலகைகளால் கட்டப்பட்ட ராயல் கார்ஜி பாலம் மனிதர் மட்டும் செல்லும் நடைபாலமே [Pedestrian Bridge] தவிர, பிரான்ஸ் மில்லா பாலம் போன்று மோட்டர் வாகனங்கள் பயணம் செய்யத் தகுதியும், வலுவும் அற்றது! ஆகவே மோட்டர் வாகனங்கள் போக்குவரத்துக்கு ஏற்ப பேருயர்ச்சியில் கட்டப்பட்ட உலகப் பெரும் பாலம், பிரான்சின் மில்லா வான்வீதி என்பதை அழுத்தமாகச் சொல்லலாம். ஈரோப்பின் [2004] நாணய மதிப்பில் E.394 மில்லியன் ஈரோ [523 மில்லியன் US டாலர்] செலவில் கட்டி முடிக்கப்பட்ட வான்வீதிப் பாலத்தை 2004 டிசம்பர் 14 ஆம் தேதி பிரென்ச் அதிபதி ஜாக்ஸ் செராக் கோலாகல மோடு திறந்து வைத்தார்.

    Bridge details

    வான்வீதிப் பாலத்தின் கட்டுமான விளக்கங்கள்

    மில்லா நீள்பாலம் 120 ஆண்டுகள் நீடிக்கும் தகுதி உடையது என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் போக்குவரத்து வாகனங்கள், தினம் சராசரி 10,000 என்றும், வேனிற் காலச் சுற்றுலாச் சமயங்களில் உச்சம் 25,000 ஆக ஏறும் என்று அனுமானிக்கப் படுகிறது. வாகனங்கள் பாலத்தில் பயணம் செய்யக் ‘கடப்புக் கட்டணம் ‘ (Toll Fee) ஈரோ நாணயம் E 4.9 [6.5 டாலர்] செலுத்த வேண்டும். பளு வாகனங்கள், லாரி ஓட்டுநர் அதைப்போல் 4 மடங்கு தர வேண்டும். கூம்பிய நீள் தூண்கள், பாலத் தட்டுகள், அவற்றுக் குரிய சட்டங்கள் யாவும் சுமார் 36,000 டன் எடை கொண்டவை. கூடியவரை அவ்வுறுப்புகள் அனைத்தும், பாலம் அமைப்பாகும் தளங்களிலே ஒவ்வொன்றாய் இணைக்கப் பட்டன. பூமிக்குமேல் 1.6 மைல் நீளமுள்ள பாதைத் தட்டைப் பல நூறு அடி உயரத்தில் 7 தூண்கள் தூக்கிக் கொண்டு, மணிக்கு 150 மைல் (250 கி.மீ.) வேகத்தில் காற்றின் ஆற்றல் தாக்கினாலும், ஊஞ்சல் போன்று சிறிது ஆட்டம் ஆடிச் சாய்ந்து விடாதபடித் தாங்கிக் கொள்ளும் தகுதி பெற்றது, மில்லா வான்வீதி!

    The Road building

    வான்வீதிப் பாலத்தின் நீளம்: 8200 அடி (2460 மீடர்). அகலம்: 106 அடி (32 மீடர்). பாலத்தின் தடிப்பு: 14 அடி (4.2 மீடர்). இரட்டைப் பாதைகளை இருதிசைகளிலும் அமைக்கப்பட்டுப் பாலம், ஒரே சமயத்தில் இரண்டு வாகனங்கள் இணையாகச் செல்லும் வசதி படைத்தது. ஏழு கூம்பிய தூண்களின் [Piers] இடையில் அமைப்பான ஆறு இடையகற்சித் தட்டுகள் [Span Plates] ஒவ்வொன்றும் 1140 அடி (342 மீடர்). முதல்-இறுதித் தூண்களின் புறத்தே உள்ள தட்டின் நீளம்: 680 அடி (204 மீடர்). ஏழு தூண்கள் 253 அடி முதல் 807 அடி வரை உயரங்கள் (77 மீ-246 மீ) கொண்டு அடித்தளம் 81 அடி (24.5 மீ) அகலமும், பாலத் தட்டு அரங்கில் 36 அடி (11 மீ) அகண்டும், உச்சியில் ஒடுங்கியும் உள்ளன. தூண் ஒன்றின் மேல் 319 அடி (97 மீடர்) கோபுரம் [Pylon] நிற்கிறது. ஒவ்வொரு தூணும் 16 இணைப்புச் சட்டங்களால் சேர்க்கப்பட்டு, 2230 மெட்ரிக் டன் எடை கொண்டது. தூண்கள் ஒவ்வொன்றின் இருபுறத்திலும் 154 முறுக்கப்பட்ட இரும்பு வடங்கள் [Twisted Steel Cables] பூட்டப்பட்டு, மனிதக் கரங்கள் போல் பாலத்தின் இடைத்தட்டு எடையைத் தூக்கி, தட்டின் மட்டநிலை [Horizontal Level] உயரத்தைச் சீராகச் சமநிலையில் நிறுத்துகின்றன. முறுக்கிய இரும்பு நாண்களின் மொத்த எடை: 5000 டன்.

    2001 அக்டோபர் 17 ஆம் தேதி கட்டத் துவங்கி, 39 மாதங்களில் (3 வருடம் 3 மாதம்) 520 பணியாளிகள் வேலை செய்து கட்டி, பாலம் முடிக்கப் பட்டது ஒரு வியக்கத் தக்க சாதனையே. அதை அமைத்த முக்கிய பொறியியல் கம்பேனி: எஃப்பியாஜ் [Effiage]. அப்பாலத்தில் பயன்பட்டிருக்கும் இரும்புச் சாதனங்களின் எடையில் (36,000 டன்) ஐந்து ஐஃபெல் கோபுரங்களைக் கட்டி விடலாம்! வீதிக்குப் பயன்பட்டுள்ள காங்கிரீடின் கொள்ளளவு: 85,000 கியூபிக் மீடர். பாலவீதி அமைத்துள்ள பிரான்சின் மோட்டர் வாகன வீதி: A75 (Autoroute). 1140 அடி நீளம், 14 அடி தடிப்புள்ள காங்கிரீட் தட்டுகள், 60 டன் எடையுள்ள 13 அடிX57 அடி [4 மீடர்X17 மீடர்] துண்டுகளால் தனித்தனியாகச் சேர்க்கப்பட்டுப் பிறகு ஒவ்வொரு தட்டும், பூமியின் துணைக்கோள் மூலம் கண்காணிக்கப் பட்டு ஆயில் அழுத்த துடுப்புகளால் [Satellite-guided Hydraulic Rams], ஒவ்வொரு கனமான தட்டும், தூண்களின் மேல் மெதுவாக [நிமிடத்துக்கு 6 அங்குல] நகர்ச்சி வீதம் சீராகத் தள்ளப்பட்டு நேராக்கப் பட்டது.

    வான்வீதிப் பாலத் திட்டம் உருவாகிய வரலாறு

    1989 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்ட நான்கு பாதை அமைப்பு முறைகளில் ஒன்றாக வான்வீதிப் பால மாடல் தேர்ந்தெடுக்கப் பட்டது. உயர மாடல் ஒன்றும், மட்டநிலை மாடல் ஒன்றும் அவற்றில் முக்கியமானவை. மட்டநிலை வீதி மாடலில் டார்ன் நதி மீது 667 அடிப் [200 மீடர்] பாலமும், அதை நீட்சி செய்து, 7670 அடி [2300 மீடர்] மலைக்குகைப் பாதையும் தேவைப்பட்டன. குகையைத் தோண்டுவதால் டார்ன் நதியின் நீரோட்டம் குறுக்கீடு ஆவதாலும், அருகில் உள்ள நகரின் அடியே பாதை செல்வதாலும் நிதிச் செலவு அதிகமாகித் தூரமும் மிகையானது. ஆகவே மட்டநிலை மாடல் வீதி அமைப்பு கைவிடப்பட்டு, உயரத்தில் செல்லும் வான்வீதி மாடல் தகுதி பெற்றது.

    Long bride -4

    1989 பூகம்பத்தில் பழுதடைந்த அமெரிக்காவின் ஸான் பிரான்சிஸ்கோ வளைகுடா தொங்கு பாலம் [Bay Bridge] 2004 இல் செப்பனிட அல்லது வேறிடத்தில் புதிதாய்க் கட்டத் தீர்மானமாகி, இப்போது மதிப்பீடைத் தாண்டிப் பல பில்லியன் டாலருக்கும் மேலோடி விட்டது. காலிஃபோர்னியா ஆளுநர் ஆர்நால்டு சுவார்ஸ்நெக்கர் [Arnold Schwarzeneggar], வளைகுடாப் பாலத்தில் டிசைன் மாறுதல் அமைக்கச் செய்து, நிதிச் செலவு குறையுமா வென்று ஆராய நிபுணர்களை ஏற்பாடு செய்தார். ஆனால் புதுப்பாலம் அமைப்புத் திட்டம் தீர்மானமாகத் தாமதமாகிக் கொண்டு வருவதால், தற்போது வளைகுடா பால அமைப்பு நிதி மதிப்பீடு [5200 பில்லியன்], பிரான்சின் வான்வீதிப் பாலச் செலவைப் போல் பத்து மடங்காகி விட்டது! பிரென்ச் பொறியியல் நிபுணர்கள் 21 ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் மூன்றே ஆண்டில் 1.6 நீளமுள்ள மகத்தான ஒரு புதுவித வான்வீதியைச் சிக்கனமாக 520 மில்லியன் டாலரில் கட்டி முடித்தது, மெச்சத் தகுந்த ஒரு மாபெரும் சாதனையே!

    Long bride

    ******************************

    Photo credits: [Thanks for the following Web Sites]

    a) http://www.structurae.de/photos/index.cfm ?ID=31858

    http://www.structurae.net/structures/data/index.cfm ?id=s0000351

    b) http://en.wikipedia.org/wiki/Image:Millau_Viaduct_from_the_End_.jpg

    By Photographer: Daniel Lavabre

    c) http://www.structurae.net/photos/index.cfm ?JS=26588

    And also the Following Websites

    +++++++++++++++++++++

    தகவல்:

    1. World ‘s Tallest Bdige Opens in France [www.iafrica.com/pls/cms/iac.page] Dec 14, 2004

    2. From Wikipedia the Free Encyclopedia

    3. France Opens World Class Bridge By Dan Walters [Dec 15, 2004]

    4. World ‘s Tallest Road Bridge Opens By the Guardian [www.guardian.co.uk/] Dec 14, 2004]

    5. France Opens World ‘s Highest Bridge http://www.gulg-news.com

    6. Europe ‘s Highest Bridge Links Art & Engineering [http://seattletimes.nwsource/cgi-bin]

    7. France Inaugurates World ‘s Highest Bridge [www.reuters.co.uk/] Dec 14, 2004

    8. http://www.bing.com/videos/search?q=millau+viaduct+bridge+france&&FORM=VDVVXX

    9.  http://www.highestbridges.com/wiki/index.php?title=Millau_Viaduct

    10.  https://en.wikipedia.org/wiki/Millau_Viaduct  [February 22, 2016]

    *****************************

    jayabarathans@gmail.com (S. Jayabarathan)  [February 27, 2016]  [R-1]

    Attachments area
    Share
  • ’’சுஜாதா’’ எழுத்தச்சன்….

     

    “எழுத்தச்சன் சுஜாதா” அவர்களின் நினைவு நாள்….

    d54d4d7f-dd10-48ef-9784-960195c4e79e

    எழுத்தாளர் சுஜாதா மறைவால் வருந்தி
    ————————————————-
    கதையா ? கவிதையா ? கட்டுரையா ? கேட்போர்க்(கு)
    எதையும் வழங்கும் எழுத்துப் -புதையலே
    ஸ்ரீரங்க தேவதையே ஏரங்க ராஜனே
    பாரிங்கு நீரின்றி பாழ்….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    4aa942d3-5519-4181-b4b6-5d3ca66bee4e

    இருக்மணி பாமா இருவராய் எண்ணி,
    விருப்புடன் வாஞ்சையாய் வைத்து, -கருப்பன்
    நெருக்கினான் கோக்களை நவநீதம் பொங்க:
    கருக்கலில்கே சவ்தூரி கை ….கிரேசி மோகன்….
    அணைப்பின் ஆனந்தத்தில் ஆக்கள் பாலுக்கு பதில் நவனீதமாய் பொழிந்தன….
    கருக்கல் -விடியற்காலை-பிம்மாலை மணி 3.00 கேசவ் வரையும் நேரம் நமக்காக….

    Share