Month: August 2016

  • குறளின் கதிர்களாய்…(135)

    செண்பக ஜெகதீசன்

    இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து            
    மாண்ட வுஞற்றி லவர்.   (திருக்குறள்-607: மடியின்மை)

     புதுக் கவிதையில்…

    சோம்பலில் சுகம் கண்டு,
    செய்யும் கடமையில்
    முயற்சியற்றவர்கள்,
    பிறர்
    இடித்துரைக்கும்
    இழிசொல் கேட்கும் நிலையடைவர்…! 

    குறும்பாவில்…

    செயலில் முயற்சியிலாது
    சோம்பியிருப்போர், பிறர்
    இடித்துரைக்கும் இழிசொல் கேட்பர்…! 

    மரபுக் கவிதையில்…

    செய்யும் செயலில் முயற்சியின்றிச்
    -சோம்பல் தன்னில் சுகங்காணும்
    பொய்யாம் வாழ்வை வாழ்வோர்கள்,
    -புவியில் வாழும் காலமட்டும்
    மெய்யாய் மற்றோர் இடித்துரைத்தே
    -மிகவும் கொடிதாய் இழிசொல்லைப்
    பெய்யும் மழைபோல் பேசுகின்ற
    -பாழாம் நிலையை அடைவாரே…! 

    லிமரைக்கூ…

    சோம்பலில்லா முயற்சிவேண்டும் செயலில்,
    இடித்துரைப்பார் பலரும், சோம்பியிருப்போர்
    இன்னலுறுவர் இழிசொல்லாம் புயலில்…! 

    கிராமிய பாணியில்…

    சோம்பல்படாத சோம்பல்படாத
    செய்யும்செயலுல சோம்பல்படாத,
    செய்யணும்செய்யணும் செயலச்செய்யணும்
    முயற்சியோடச் செயலச்செய்யணும்…
    சோம்பலால செயலச்செய்யாதவன்
    எல்லாருக்கும் எளச்சவனாவான்,
    ஏளனப்பேச்சிக்கு ஆளாவான்
    ஏல்லாருக்கும் கீழாவான்… 

    அதால,
    சோம்பல்படாத சோம்பல்படாத
    செய்யும்செயலுல சோம்பல்படாத…! 

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 77-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. ராமலக்ஷ்மியின் கைவண்ணத்தில் உருவான இந்தப் புகைப்படத்தை இவ்வாரத்தின் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்திருப்பவர் வல்லமை ப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விரு பெண்மணிகளுக்கும் வல்லமை மின்னிதழின் நன்றி.

    mom and child

     

    வைத்தகண் வாங்காமல் அன்னையை நோக்கும் இந்தப் பிஞ்சுக் குழந்தையின் வசியப் பார்வை நெஞ்சைக் கொள்ளையிடுகின்றது.

    இயற்கையின் படைப்புக்களில் ’master piece’ என்று சொல்லத்தக்க உச்சப் படைப்பு, குதலைமொழி பேசிக் குவலயத்தை மயக்கும் குழந்தையே அல்லவா?

    இவ்வழகிய  புகைப்படத்திற்குத் தம் எண்ணதூரிகை கொண்டு நம் கவிஞர்குழாம் தீட்டியிருக்கும் கவிதை ஓவியங்களை இரசித்துவருவோம் இனி!

    ***

    ’காலம் மாறலாம்…கொண்ட கோலம் மாறலாம்; தாயன்பு என்றும் மாறாது தரணியிலே’ என்பதைத் தன் கவிதையில் அழகாக உணர்த்துகின்றார் முனைவர். பா. பத்மபிரியா.

    காத்திருக்கும் அன்னை மடி
    ஒளி விழியால்
    ஓராயிரம் கதை பேசும்
    கனியமுதே!
    நெஞ்சில் உலா வரும்
    பௌர்ணமியே!
    அந்திமேவும் ஆதவனின் செந்நிறமே!
    தந்தி மீட்டிடும் யாழிசையே!
    தத்தித் தாவும் தாரகையே!
    தாய்மடி தேடும் ஓவியமே!
    […]
    கார்பிரேட் கம்பெனிகளும்
    கரன்ஸி நோட்டுகளும்
    செல்லப்பிள்ளை வளர்ப்பில்
    செய்து வைத்த சூனியத்தால்
    தாலாட்டு பாட நேரமில்ல – நீ
    தாய்மடி தூங்க யோகமில்ல
    அலுவலக வேலைக்காக
    விடிகாலை சென்றவளுக்கு
    வடிகாலாய் உன் சிரிப்பு
    வேலைப் பளுவிலே
    மனதை பலூனாய் மாற்றும்
    வித்தையடி உன்நினைவு
    கொசுவஞ் சேல கட்டினாலும்
    ஜீன்ஸில் உடை மாறினாலும்
    தாய்மை மாறாது
    தாயன்பும் மாறாது
    காலம் மாறினாலும்
    கோலம் மாறினாலும்
    காத்திருக்கும் அன்னை மடி
    கண்மணியே உனக்காக
    ஆராரோ பாட்டுடனே…

    ***

    ’பிள்ளையின் முத்துச்சிரிப்புக்கும், மனங்கரைக்கும் அழுகைக்கும் காரணமறிந்தவள் அன்னை ஒருத்திதான்! அதனால் அவளே மானுடர்க்குக் கண்கண்ட முதல்தெய்வம்’ என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அன்னை அறிவாள் பிள்ளைமொழி
    அழுகை சிரிப்பு அனைத்திலுமே,
    சின்ன வயதில் செய்யும்பல
    சேட்டை யெல்லாம் அறிவதுடன்
    பின்னை வாழ்வின் தேவையெல்லாம்
    பெற்ற தாய்க்குத் தெரிந்திடுமே,
    அன்னை யென்பவள் அதனால்தான்
    அறியும் முதலாம் தெய்வமாமே…!

    ***

    மடியில் தவழும் நிலவைப் பிரிந்து மடிக்கணினியோடு போராடவேண்டிய பணிச்சுமையைக் குறித்து வேதனையோடு விளம்பும் அன்னையைக் கவிதையில் காட்சிப்படுத்துகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    பார்த்தாயா உன் அன்னையின்
    பரிதாபத்தை
    பகலெல்லாம் கணினிதான்
    அலுவலக வேலையால்
    என் மடியில்
    இரவுதான் நீ நிலவைப்போல்
    என் மடியில்தவழமுடிகிறது
    வேலையையும் விட முடியவில்லை
    வேதனையும் தீர்வதில்லை
    பொருளாதார சிக்கலினால்
    சோதனையை சகிக்கிறேன்
    உன் புன்னகை ஒன்று போதும்
    என் இன்னல்கள் மறைந்தே போகும்
    […]
    உன்னையும் என்னையும்
    பிரிப்பது வேலை வேலையை
    பிரியமுடியாதது ஒன்றேஎன் கவலை
    மழலைக்கு ஈடான சொர்க்கம் இல்லை
    மகனே நீ வந்தாய் சொர்க்கத்தை காட்ட

    ***

    தாயின் பெருமையைத் தரணிக்குப் புகலும் அற்புதக் குழந்தையைத் தன் கவிதையில் காட்டுகின்றார் திரு. ரா. பார்த்தசாரதி.

    பிறந்த மேனியுடன் வெளியுலகிற்கு  வந்தேன்
    உனக்கு நான் மட்டற்ற மகிழ்ச்சி தந்தேன்!

    எனக்காக  கண்விழித்து தூக்கத்தை மறந்தாய்
    உன் குருதியை என்னக்கு பாலகப் பொழிந்தாய்!
    தோளையே  தூளியாக்கி  என்னை சுமந்து சென்றாய்
    கேட்டால், பிறக்கும்போது ஏற்பட்ட சுமையும், வலியை விடவா என்கிறாய்!உனக்கோ ஆயிரம்  பிரச்சனை  இருக்கும்
    என்னை கட்டியணைப்பதில்தான் ஆனந்தம் இருக்கும்!உனது மடியும், இருகால்களுமே எனக்குத்  தொட்டில்
    உனது மூச்சே எனக்கு அடைக்கலம்! 
    தவறு செய்தாலும் என்னை அன்புடன் நேசிக்கும் 
    தாயே,   நீயே  என் கண்கண்ட தெய்வம்!

    ***

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை அடுத்து அறிமுகப்படுத்துகிறேன்!

    ”…மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
    பயக்குறை இல்லைத் தாம் வாழு நாளே”
    என்கிறது புறநானூறு. மன்பதையிலுள்ள செல்வங்களெல்லாம் ’குறுகுறு நடந்து சிறுகை நீட்டும்’ குழந்தைக்கு ஈடாமோ?

    ”முந்தித் தவமிருந்து முந்நூறு நாள்சுமந்து பெற்ற பிள்ளையிது என்றும் சாதி மத பேதமின்றி  அனைவர்க்கும் குழலாய் யாழாய் அதனினும் இனிதாய் ஒலிப்பது குழந்தையின் கனிமொழியே” என்றும் பிள்ளைத்தமிழ் பாடும் கவிதை ஒன்று!

    தாயாகி விட்டேன்
    நீ என்னுள் பிரவேசித்த அன்றே
    பிரசவம் வரை காத்திருக்க வில்லை
    […]

    தாய்மையை உணர
    இறைவனும் இந்நாட்டில் தாயுமானான்
    வாரி அணைத்து உச்சி முகர
    எட்டினேன் இமயத்தின் உச்சிதனை
    நான் மட்டும் உணரவில்லை இதனை
    பாரதியும் பாவலர்களும் பாடியுள்ளனர் 

    குழந்தை மட்டுமல்ல நீயெனக்கு
    குல குருவும்தான்
    கற்றுத்தருகிறாய்
    கல்லூரியில் கற்காத பல கல்வியைப்
    பிரிந்தும் பிரியாமல் உன் உதடுகள்
    உதிர்க்கும் மோகனப் புன்னகை
    இறைவன் உனக்களித்த வரம்! 

    மொழி தேவையில்லை
    உன்னுடன் பேச
    சாதி சமயம் நிறம் மொழி எல்லை கடந்தது
    உன் மொழி எல்லோருக்கும் புரியும் மொழி
    உலகம் உய்ய ஒற்றுமையை வளர்க்க
    உன்னால்தான் முடியும்

    கருணையை கற்க
    தாய்மையை கொடுத்தானோ இறைவன்?
    […]

    நான் உனக்கு மட்டும் தாயல்ல
    காணும் எல்லா உயிருக்கும் தாய்தான்
    மாரில் பால் மட்டும் வழியவில்லை
    கருணையும்தான் இன்று வழிகிறது
    காணும் எல்லா உயிரும் என் குழந்தைகளே

    பெண்மையில் புதைந்த தாய்மை
    பெற்ற பரிசு கருணையே என்றதனை
    புரிய வைத்தாய் நீயெனக்கு…

    தாய்மையின் தூய்மையை வாய்மையோடு பேசும் இக்கவிதையை இயற்றியிருக்கும் திருமதி. ராதாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 221

    -மலர்சபா

    மதுரைக் காண்டம்அழற்படு காதை

    மன்னவன் மாண்டதை அறியாமல் மற்றோர் அசைவற்றிருத்தல்

    கண்ணகியின் ஏவலின்படி
    தீக்கடவுளின் எரிமுகம் திறந்தது;
    காவல் தெய்வங்கள் தம் பணி விடுத்துக்palace in fire
    கோட்டை வாயிலை விட்டு நீங்கினர்.
    அரசர்க்கெல்லாம் அரசன்
    பகைவரைப் போரில் வெல்லும் பாண்டிய மன்னன்
    தன் தவற்றால் வளைந்த செங்கோலைத்
    தன் உயிர் கொடுத்து நிமிர்த்தினான்.

    பெரிய நிலமகளுக்குத்
    தன் செங்கோல் நலம் காட்ட,
    கற்பில் சிறந்த தன் மனைவியோடு மன்னன்
    அரியணையிலேயே இறந்தான்.

    அரசனும் அரசியும் மாண்டதை அறியாமல்
    ஆசான், தலைமைச் சோதிடன்,
    அறக்களத்தின் தலைவன், ஓலை எழுதுபவர்,
    அரண்மனைப் பணியாளர்,
    வளையல் அணிந்த பணி மகளிர் அனைவரும்
    அதிர்ச்சியுற்றுப் பேச்சு வராமல்
    ஓவியமாய் வரையப்பட்ட
    அரசியல் மாந்தரைப் போல்
    செய்வதறியாது நின்றனர்.

    மன்னவன் கோவிலில் தீயைக் கண்டு காவலர் முதலியோர் நீங்குதல்

    அங்குசம் ஏந்தும் யானைப்பாகரும்
    விரைந்து தேரை ஓட்டிச் செல்லும் தேர்ப்பாகரும்
    வீரவாள் ஏந்தும் மறவரும்
    அரசரின் அரண்மனையில் தீயைக் கண்டு,
    தீக்கான உண்மைக் காரணத்தை அறியாமல்
    வேறு காரணம் என நினைத்து,
    அதனை அறிவிக்க வாயிலில் கூட்டமாய் நின்றனர்.

     

     

    Share
  • நிதானம் என்பது நிழலாய்!

    மணி முத்து

    அதிகாலை 6மணி, ஒருவழியாக அடித்துப்பிடித்து சன்னலோர இருக்கையில் அமர்ந்து விட்டேன். அதிகாலை வேளையை ரசித்தப்படி பயணித்துக் கொண்டிருந்தேன் சுற்றுச்சூழலையும் மறந்து நானும் ஒரு பயணியாக. என்னுடனே இயற்கையும் பயணித்துக் கொண்டிருந்தது என்னைவிட வேகமாக பின்னோக்கி.

    அப்போதுதான், அந்த சத்தம் என்னை மட்டுமல்ல பேருந்திலிருந்த எல்லோரையும் நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. திடீரென அந்த தனியார் பேருந்து வேகமாக ஒரு திருப்பத்தில் திரும்ப, ஓரமாக வந்த இரு சக்கர மோட்டார் வாகனத்தைக் கவனிக்காமல் அடித்துத் தூக்கியது.

    ஒருவரை இரத்தக்காயத்துடன் பார்த்தபோதுதான், என்னுள் இருந்த தைரியசாலி காணாமல் போனதை முதன் முதலில் உணர்ந்தேன்.

    அதைவிட அதிர்ச்சி என்னவென்றால், ஓட்டுநர் சட்டையை மாற்றிக்கொண்டு அவசரமாக இறங்கி ஒடியது. ஒருவேளை அவரும், என்னைப்போலத்தானோ என்னவோ அல்லது மாட்டிக் கொள்வோம் என்ற பயமா, எதுவான போதிலும் அது எனக்கு சரியாகப் படவில்லை.

    பேருந்திலிருந்த ஒருசில பயணிகள் அந்த இளைஞனுக்கு உதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, மனிதநேயம் இன்னும் நம் உலகில் வாழ்கிற உண்மை புரிந்தது. மற்ற பயணிகள் எல்லாம் அடுத்த பேருந்துக்காக காத்திருக்கத் தொடங்கினர்.

    அது நெடுஞ்சாலை என்பதால், வந்த எல்லாப் பேருந்துகளுமே அடைத்தபடி வர, மூன்று மணிநேர தாமதத்திற்குப் பிறகு இறுதி ஆளாக ஒரு பேருந்தில் ஏறி கல்லூரிக்குச் சென்றேன்.

    அன்றைய வகுப்பு ஆய்வரங்கில் சொதப்பியதும், முக்கியமான வகுப்பை தாமதமாகச் சென்று தவறவிட்டதும், என எதுவுமே என்னில் பதியவில்லை. காலை நிகழ்வு, அந்த ஓட்டுநர் அப்படி பொறுப்பில்லாமல் சென்றது, அடிபட்டவருக்கு என்ன ஆனதோ என்று எல்லா நினைவுகளும் என்னைத் தூங்கவிடமால் செய்தது.

    அடுத்தநாள் விடியும் வரை காத்திருந்து அனைத்து நாளிதழ்களையும் புரட்டினேன் கடவுளை வேண்டியபடி, எங்கேனும் அந்த செய்தி இருக்கிறதாவென்று, ஆனால் அப்படி எதுவும் கண்ணில் படவில்லை. அதுவே ஒரு பொய்யான திருப்தி எனக்கு, அந்த இளைஞனுக்கு எதுவும் ஆகவில்லை என.

    லேசாக மன ஆறுதல் அடைய, நாளிதழை மூடியபோது, அக்கா மகன் “Slow and Steady win the Race” என்பதன் பொருள் கேட்டான், அவனுடைய கன்னத்தில் முத்தமிட்டு, தூக்கி மடியில் வைத்துக்கொண்டு, முயல், ஆமை கதையைச் சொல்லத் தொடங்கினேன். அவனுக்கு மட்டுமல்ல, எனக்கும் தான். ஏனென்றால், என் அகராதியில் கூட நிதானம் என்ற இடம் அதுவரை வெறுமையாய்தான் இருந்தது.

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். அகிலக் கதிர்கள் & அடிப்படைத் துகள்கள்

    Standard Model

    (கட்டுரை: 13)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++++++

    https://youtu.be/BQR7Zl_saVo

    https://youtu.be/c-iCw8EnhSY

    +++++++++++++++++++++++++++

    எங்கெங்கு காணினும் இயங்கும்
    அங்கோர் அகிலம்  !
    அகிலக் கதிர்கள்
    அகிலாண்ட நாயகியின் கருங்கூந்தல்
    உதிர்க்கும் பூக்கள் !
    அவற்றில் சிதறும் பரமாணுத் துகள்கள்
    அகிலக் கருந்துளையின்
    மகரந்த விதைகள் !
    அணுவுக் குள்ளேயும்
    நுணுக்கமாய் ஓர் அகிலம் சுழலும் !
    அணுக்கருவின்
    பரமாணுவுக் குள்ளேயும்
    பம்பரமாய்ச் சுற்றும்
    குவாண்ட அகிலங்கள் உள்ளனவா ?
    உட்கருத் துகள்களைச்
    சுற்றிவரும்
    குட்டி மின்மினி ஒன்று !
    சுட்டிப் பராமணுக்களும்
    முட்டையிடும் !
    அவற்றில் பொரித்த
    குஞ்சுகள் தான் குளுவான்கள்,
    குவார்க்குகள் !
    போஸான்கள் ! லிப்டான்கள் !
    ஃபெர்மியான்கள் !

    +++++++

    primary-cosmic-ray-showers.jpg

    நாமறிந்தவை அளவுக்கு உட்பட்டவை !  நாமறியாதவை அளவுக்கு மிஞ்சியவை !  அறிவுத் திறமையுடன் கரையற்ற கடலின் நடுவே ஒரு விளக்க முடியாத தீவில் நிற்கிறோம் !  ஒவ்வொரு பிறப்பிலும் நமது தொழில் மேலும் சிறிதளவு நிலப் பரப்பைக் கைப்பற்றுவதே !

    தாமஸ் ஹக்ஸ்லி விஞ்ஞான மேதை [Thomas Henry Huxley (1825-1895)]

    ஓர் ஆப்பிள் பையைத் (Apple Pie) தயாரிப்பதற்கு முன் முதலில் நீ ஓர் பிரபஞ்சத்தைப் படைக்க வேண்டும்.

    ஓர் எலெக்டிரானின் உள்ளே பயணம் செய்ய முடிந்தால், ஒளிந்திருக்கும் அதற்குரிய ஓர் அகிலத்தைப் பார்க்க முடியும் !  மேலும் அதற்குள்ளே காலாக்ஸிகளுக்கு ஒப்பான ஒளிமந்தைகளும் சிறிய அண்டங்களும், எண்ணற்ற நுண் துகள்களும் அடுத்த அகிலங்களாக இருக்கலாம் !  பரமாணுக்களுக்குள்ளே அவ்விதம் முடிவில்லாமல் அடுத்தடுத்துப் பிரபஞ்சத்தில் பிரபஞ்சங்களாய் விண்வெளியில் உள்ளன போல் இருக்கலாம் !

    ஒன்று இருப்பதற்குச்  சான்றுகள் இல்லாமை என்பது அது இல்லாமைக்குச் சான்றில்லை !

    கார்ல் ஸேகன் (Carl Sagan) வானியல்துறை மேதை

    மனதைத் துள்ள வைக்கும் உச்சநிலைச் சக்தி வானியல் பௌதிகம் (High Energy Astrophysics) நுட்பத் துகளை பிரமாண்டத்துடன் பிணைக்கிறது.  இத்துறையில் எழுந்த முன்னேற்றக் கோட்பாடுகள் பிரபஞ்சத் துவக்கத்தின் நிகழ்ச்சிகளையும், அப்போது தோன்றிய பேரளவுச் சக்தி வாய்ந்த இயக்கங்களையும் உளவு செய்ய விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.  அத்துடன் அடுத்த சில ஆண்டுகளுக்கு மேலும் புதுக் கண்டுபிடிப்புகள் தோன்றுவதற்கு உறுதி அளிக்கின்றன.

    கெல்லி ஜாகர், (Kellie Jaeger, Astronomy Magazine) 

    Particles Forces

    அனுதினம் மனிதரைத் தாக்கும் விண்வெளி அகிலக் கதிர்கள் !

    மனிதரைத் தாக்கும் இயற்கையான பின்புலக் கதிரியக்கம் இருவகைப் பட்டவை.  ஒன்றாவது: விண்வெளிப் பொழிவான அகிலக் கதிர்கள் !  இரண்டாவது: நீர், நிலம், பாறை, தானிய உணவுப் பண்டங்கள் மூலம் மானிடர் கொள்ளும் பூதளத் தொடர்புகள் !  அனுதினமும் ஒவ்வொரு வினாடியும் ஆயிரக் கணக்கான அகிலக் கதிர்கள் தணிந்த கதிரியக்கத்தில் மனிதர் உடம்பைத் தாக்கி ஊடுருவிச் செல்கின்றன !  மனிதர் வாங்கிக் கொள்ளும் தணிவான பின்புலக் கதிரிக்கக் கதிரடி சுமார் 7%-10% (Background Radiation Dose).  அகிலக் கதிர்களில் பிரதானமாக நேர்முகக் கதிர் ஏறிய புரோட்டான் முதல், இரும்பு அணுக்கரு போன்றவை உள்ளது ஒரு காரணம்.  அடுத்து இரண்டாம் விளைவுக் கதிரியக்க அலை/துகளான எக்ஸ்-ரே, காமாக் கதிர், எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான், ஆல்ஃபாத் துகள், மியூவான், பையான் போன்றவை இருப்பது.

    Standard Model -1

    அகிலக் கதிர்கள் என்பவை உயர்ச்சக்தி ஏறிய துகள்களை (High Energy Particles) ஏந்திக் கொண்டு விண்வெளியிலிருந்து பூமியில் வீழுகின்ற கதிர்கள்.  அந்தத் துகள்கள் ஏறக்குறைய ஒளிவேகத்துடன் பூமியை எல்லாத் திசைகளிலிருந்தும் தாக்குகின்றன !  அகிலக் கதிர்களில் பிரதானத் துகள்களாகப் புரோட்டான்கள், எலெக்டிரான்கள், அடுத்து இரண்டாம் விளைவாகச் சதுர மீட்டரில் வினாடிக்குச் சராசரி 100 எண்ணிக்கைத் திரட்சியில் பெரும்பான்மையாக மியூவான்கள் (Muons) பொழிகின்றன.  பூமியில் விழும் அகிலக் கதிர்களின் அடர்த்தி சிறிதாயினும், விண்வெளியில் அவற்றின் பொழிவு அடர்த்தி மிகையானதால் விண்வெளி வீரருக்குப் பெருங்கேடு விளைவிக்கும்.  அதே சமயத்தில் பூமியில் பொழியும் சிறிதளவுக் கதிரடி அகிலக் கதிர்களால் என்ன பாதகம் விளையும் என்பது யாருக்கும் தெரியாது.  அந்தத் துறையில் இதுவரை ஆராய்ச்சிகள் புரிந்து மனிதருக்கு ஏதேனும் அகிலக் கதிர்கள் தீங்குகள் விளைவிக்கின்றனவா என்பது அறியப் படவில்லை !

    விண்வெளியில் துணைக்கோள்களில் இயங்கி வரும் மின்னியல் கருவிகளைப் பாதிக்கின்றன அகிலக் கதிர்கள்.  அவற்றின் மின்னேறிய துகள்கள் துணைக்கோளில் உள்ள கணினியின் நடப்புக்கி இன்னல் தருகின்றன.

    பரிதி விண்மீன் உதிர்க்கும் அகிலக் கதிர்கள்

    இங்குமங்கும் அகிலக் கதிர்களைப் பொழியும் ஓர் உற்பத்திச் சாதனமாக சூரியனும் இருந்து வருகிறது.  அவற்றின் கதிரியக்க அணுக்கருவும், எலெக்டிரானும் சூரிய தீ வீச்சுத் தோரணங்களின் (Solar Corona) அதிர்ச்சி அலைகளாலும், காந்த சக்தியாலும் விரைவாக்கம் (Acceleration) பெறுகின்றன.  அகிலக் கதிர்களின் சூரியத் துகள்கள் கூடிய பட்சம் 10 முதல் 100 MeV (Million Electron Volt Energy) சக்தி பெற்றவையாக உள்ளன. சில சமயம் உச்சநிலை ஏறி 1-10 GeV (Gega Electron Volt Energy) சக்தி கொண்டவையாக எழுகின்றன !

    விண்வெளியில் வீழும் அகிலக் கதிர்கள் விண்மீன் மந்தைகளின் காந்த மண்டலம் வளைத்து விட்டவையே !  சூரிய மண்டலத்தில் நுழையும் அகிலக் கதிர்கள் அதே போல் தீப்பிழம்பும்   எலெக்டிரானும் நிரம்பிய சூரியப் புயலால் (Solar Wind with Plasma & Electrons) வளைத்து (240 மைல்/வினாடி) 400 கி.மீ/வினாடி வேகத்தில் அனுப்பப் பட்டவை.  ஆனால் அந்தக் கதிர்கள் பரிதி மண்டலத்தின் உள் அரங்கில் புகுந்திட வலுவில்லாதவை !  விண்வெளியில் சூரிய மண்டலத்தின் விளிம்பைத் தாண்டும் விண்கப்பல்கள் காலாக்ஸிகளின் அகிலக் கதிர்களின் தாக்குதலில் பாதிக்கப் படுகின்றன !

    மூன்றாம் விதத்தில் பொழியும் முரண்பாட்டு அகிலக் கதிர்கள்

    மின்னூட்டச் சிரமமான மூலகங்களைக் (ஹீலியம், நைடிரஜன், ஆக்ஸிஜென், நியான், ஆர்செனிக்) கொண்ட விண்வெளிக் கதிர்களை விஞ்ஞானிகள் “முரண்பாட்டு அகிலக் கதிர்கள்” (Anomalous Cosmic Rays) என்று அழைக்கிறார்கள்.  வேறுபாடான மூலகங்களைப் பெற்றிருப்பதால் அவை முரண்பாட்டுக் கதிர்கள் ஆயின.  அத்தகைய அகிலக் கதிர்கள் நடுநிலை மின்னோட்டத்தில் உள்ள விண்வெளி விண்மீன்களின் துகள்களிலிருந்து (Electrically Neutral Interstellar Particles) வெளியாகுபவை.  காலாக்ஸிகளிலிருந்து வெளியேறும் அகிலக் கதிர்கள், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நேரும் சூப்பர்நோவா வெடிப்பிலிருந்து சக்தியைப் பெறுகின்றன !

    அகிலக் கதிர்களில் உள்ளங்கிட மூலகங்கள் என்ன ?  ஏறக்குறைய மூலகங்களின் அணி அட்டவணையில் (Periodic Table of Elements) இருக்கும் அத்தனை மூலகங்களும் அகிலக் கதிர்களில் உள்ளன.  பெரும்பான்மை யாக (88%) ஹைடிரஜன் அணுக்கரு (புரோட்டான்கள்), 10% ஹீலியம், 1% பளு மூலகங்கள் & 1% எலெக்டிரான்கள்..  அகிலக் கதிர்களில் உள்ள பொதுவான பளு மூலகங்கள் எவை ?  கார்பன் எனப்படும் கரி, ஆக்ஸிஜென், மக்னீஷியம், சிலிகான், இரும்பு முதலியன.  அவை விண்வெளி விண்மீன் மந்தைகளின் வாயுக்களோடு மோதும் போது,  அரிதான மூலகங்களான லிதியம், பெரிலியம், போரான் ஆகியவை உண்டாகுகின்றன.

    பூத விரைவாக்கி யந்திரங்களில் அடிப்படைத் துகள்கள் படைப்பு

    சுவிட்ஜர்லாந்தின் தென்மேற்கு மூலையில் ஜெனிவாவுக்கு அருகில் அமைந்துள்ள “செர்ன்” (CERN Particle Accelerator) அடித்தளக் குகைக் குழல்களில் சூரியனை மிஞ்சிய உஷ்ணத்தை உண்டாக்கி, விஞ்ஞானிகள் அணுவின் அடிப்படைத் துகள்களை உண்டாக்கி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.  செர்ன் ஐரோப்பிய விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் நடத்தும் அடிப்படைத் துகள் விரைவாக்கி ஆய்வுக் கூடம்.  நான்கு மைல் நீளமாகச் சுருண்ட குழலில் அமைக்கப்பட்ட, உலகிலே மிகப் பெரிய ஒரு பூத விரைவாக்கி.  அந்த வீரிய காந்தக் குழல்களில் 7000 டிரில்லியன் [(1 Trillion = 10^12) 1 followed by 12 Zeros] டிகிரி செல்ஸியஸ் உஷ்ணம் உண்டாக்கப் படுகிறது !  செர்ன் விரைவாக்கியை ஒரு பூத நுண்ணோக்கிக் கருவியாகப் பயன்படுத்தி விஞ்ஞானிகள், பிண்டத்தின் அணுவுக்குள்ளே அடங்கியுள்ள பரமாணுக்களின் அகிலத்தைக் கடந்த 50 ஆண்டுகளாக உளவு செய்து புதிய மூலத் துகள்களைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

    unnamed (3)

    செர்ன் புரோட்டான் விரைவாக்கி

    1960 ஆண்டு முதல் விரைவாக்கி யந்திரங்களில் அணுவின் 12 மூலாதாரத் துகள்களைப் பற்றி விஞ்ஞானிகள் இதுவரை அறிந்துள்ளார்கள்.  அணுவின் உள்ளமைப்பு எளிதானது என்னும் பழைய பௌதிகக் கருத்துக்கு அவை எதிர்த்து நின்றன !  1961 இல் முர்ரே ஜெல்மன் (Murray Gellmann) 8 அடுக்கு வழியின் மூலம் அடிப்படைத் துகள்களின் கணிதச் சீரமைப்பை (Eightfold Way to Relate Particles by Mathematical Symmetry) எடுத்துக் கூறினார்.  அடுத்து தனியாக ஜியார்ஜ் ஸ்விக் என்பவர் (George Zweig) இன்னும் அடிப்படையான “குவார்க்ஸ்” போன்ற துகள்களைக் காட்டி, துகள்கள் சீரமைப்பை விளக்கினார்.  முதலில் மூன்று குவார்க்குகள்தான் உள்ளன என்று கூறினர்.  பிறகு 1974 இல் பர்டன் ரிக்டர் (Burton Richter) என்பவர் இரண்டு மைல் நீள “ஸ்டான்ஃபோர்டு நேர்போக்கு விரைவாக்கியில்” (Stanford Liner Accelerator) நான்காவது குவார்க் கண்டுபிடிக்கப் பட்டது.  அதே சமயத்தில் ஸாமுவேல் திங் (Samuel Ting) என்பவரும் அதைக் கண்டுபிடித்தார்.

    1977 இல் ஃபெர்மி ஆய்வகத்தின் (Fermilab) லியான் லேடர்மான் (Leon Lederman) மிகக் கனமான ஐந்தாவது குவார்க்கைக் கண்டுபிடித்தார்.  அடுத்து 1984 இல் ஐரோப்பாவில் செர்ன் ஆய்வகத்தில் ஆறாவது குவார்க் காணப் பட்டது.  ஆறு குவார்க்குகள் மேல், கீழ், நளினம், நூதனம், உச்சம், நீச்சம் (Up, Down, Charm, Strange, Top & Bottom) என்று பெயரிடப் பட்டன.  அந்த ஆறு வகை குவர்க்குகள் மேலும் மூன்று நிறப் பிரிவில் “சிவப்பு, பச்சை, நீலம்” என்று கூறப்பட்டன.  முதல் நிலை மாதிரி அட்டவணையில் (Standard Model) மூலாதாரத் துகள்கள் ஆறு குவார்க்குகள், ஆறு லெப்டான்கள், ஐந்து போஸான்கள், [ஹிக்ஸ் என்னும் ஆறாவது யூகிப்பு போஸான் பிறகு இணைந்தது).  பிறகு மூன்று இயக்க விசைகள் (Physical Forces).  குவார்க்குகள் கனமான அடிப்படைத் துகள்கள். லெப்டான் என்பவை பளு குன்றிய அடிப்படைத் துகள்கள்.  போஸான்கள் மூன்று வித விசைகளைக் (Strong & Weaker Nuclear Forces, Electromagnetic Forces) கொண்டு செல்பவை (Bosons are Force Carriers). (ஈர்ப்பு விசை இன்னும் சேர்க்கப் படவில்லை).  குளுவான் என்பது குவார்க்குகளைப் பிணைத்திருக்கும் பிசின்.  குவார்க்குகளும், லெப்டான்களும் ஃபெர்மியான்கள் (Fermions) என்று அழைக்கப் படுகின்றன.

    Particles -1

    (தொடரும்)

    https://youtu.be/BQR7Zl_saVo

    https://youtu.be/c-iCw8EnhSY

    +++++++++++++++++

     

     

     

     

    Image Credits : Scientific American (May 2003), National Geographic Magazine (May 1985)

    தகவல்:

    1.  Astronomy’s Explore the Universe 8th Edition (2002) December 31, 2001

    2.  National Geographic Magazine (1982) Frontiers of Science The Family of the Sun By: Bradford Smith Ph. D. Professor of Planetary Sciences, The University of Arizona.

    3.  National Geographic Magazine (1975) Amazing Universe, The Family of Stars By: Herbert Friedman.

    4.  Internet Article “Stellar Evolution”

    5. Majestic Universe By: Serge Brunier (1999)

    6. Neutron Stars & Pulsars -From the Internet Sources (December 2006)

    7. Parallel Universe – BBC Information (February 14, 2002)

    8. Scientific American “Parallel Universes” By Max Tegmark, Professor of Physics & Astronomy, University of Pennsylvania (May 2003)

    9. Parallel Worlds (The Science of Alternate Universes & Our Future in the Cosmos) By : Michio Kaku  (2005)

    10. 50 Greatest Mysteries of the Universe – Astronomy Magazine (August 21, 2007)

    11  Astronomy Magazine – What Particle Physics Says about the Universe By: Scott Wakely (September 2006)

    12  Scientic American – ” The Mystery o Nucleon (Protons & Neutrons) Spin ”  By : Klaus Rith & Andreas Schafer (July 1999)

    13  Scientific American ” The Dawn of Physics Beyond the Standard Model ” By : Gordon Kane Professor of Physics, University of Michigan  (February 20, 2006)

    14. Cosmic Rays By : R.A. Mewaldt, California Institute of Technology (1996)

    15. National Geographic Magazine “Worlds Within The Atom” By :  John Boslough (May 1985)

    16. Cosmos Book By : Carl Sagan (1980)

    17.  Astronomy Facts on File Dictionay (1986)

    18. A Short History of Nearly Everything By : Bill Bryson (2003)

    19 Cosmic Radiation By : Wikipedia.

    20.  http://onlinelibrary.wiley.com/doi/10.1002/andp.201500146/full  [June 25, 2015]

    21. https://en.wikipedia.org/wiki/Cosmic_ray  [August 15, 2016]

    22.  http://www.pas.rochester.edu/~pavone/particle-www/particle_physics.html

    23. https://en.wikipedia.org/wiki/Particle_physics  [May 27, 2016]

    24.  https://en.wikipedia.org/wiki/Elementary_particle [July 25, 2016]
    *******************************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) August 28, 2016] [R-1]

    Attachments area
    Share
  • ’’குமாரசம்பவம்’’….!

    கிரேசி மோகன்
    ———————————————–

    பெண்ணையும் ஆணையும் பாரித்து பாலிக்க
    உன்னையே ஈறுடலாய் உற்பவித்து -முன்னைநீ
    தந்தை ஒருகூறாய் ,தாயார் மறுகூறாய்
    விந்தை புரிந்தாய் வகுத்து….(66)

    ஞாலம் படைத்தனை,கோலம் கொடுத்தனை
    காலம் பகலிரவாய்க் கொண்டனை -மூளுமவ்
    ஊழி உமக்குறக்கம் உற்பத்தி உன்விழிப்பு
    வாழி விரிஞ்சன் விறல்….(67)

    காரணனே பாருக்கு, காரணம் பாராத
    பூரணனே, பாரைப் படைத்தழிப்போய் -ஓரணுவும்
    தொல்லை கொடுக்காத தோற்றம் முடிவற்றோய்
    இல்லை உமக்கிங்கே ஈடு….(68)

    தானாகத் தன்னிலே தோன்றித் தனக்குள்ளே
    காணா(து) ஒடுங்கிடும் கற்பம்நீர் -வானாக
    தீயாக, மண்ணாக, தண்ணீர் வளியாக
    ஓயா(து) உழைத்திடும் ஓய்வு….(69)

    திரவப் பொருளாய், திடமாய், உருவாய்
    அருவம் நிகர்த்த அணுவாய் -கருவத்து
    பாரமாய் லேஸாய், புலனுணர்வாய், பூதமாய்
    ஏராள மானஏ கா….(OR)
    ஏராளம் உந்தன் எடுப்பு….(70)

    ஓங்கார மூன்றுசுர உச்சரிப்பால் தோன்றிடும்
    ரீங்கார வேத ரகசியத்தால் -ஆங்காங்கு
    செய்திடும் யாகமும் சொர்காதி பேறுகளும்
    பெய்திடும் தேவரீர் பாங்கு….(71)….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     
    ”என் காலைக் கடன் கேசவ்வால்
    வெண்பாவில் தொழும் (திரு)’’மாலைக் கடன்’’….!

    kesav

    தென்னிந்தியாவில் கண்ணன்….
    வட இந்தியாவில் கன்னையன்….
    எனக்கு கனன்யன்….!

    ”அனன்ய அனவரதன் ஆவிற்காய், ஆயர்
    மனன்யன் மனிதா பிமான -குணன்யன்
    தினம்என் கணினியில் தோன்றிடும், கேசவ்
    கனன்யன்(கன்னையன்)என் காலைக் கடன்’’….!கிரேசி மோகன்….!

    Share
  • பெருமாள் திருப் புகழ்….!

    கிரேசி மோகன்

    ————————————————-
    lhvzi10806
    தந்த தத்த தானதா னனா
    தந்த தத்த தானதா னனா
    தந்த தத்த தானதா னனா-தனதான
    பொது
    ———
    “எங்கு துச்சம் தூய்மையா குதோ
    எங்கு மிச்சம் பூர்ணமா குதோ
    எங்கு பிக்‌ஷை சேரஆ குதோ -பிரசாதம்;
    எங்கு சுத்தம் சோறுபோ டுதோ
    எங்கு பித்தம் ஆலவா யனார்
    நெஞ்சின் நச்சு பாகமா குதோ -அதனாலே
    எங்கு சித்தம் ஏகமா குதோ
    எங்கு சத்தம் கீதையா குதோ
    எங்கு பக்தி யோகமா குதோ -அதைநாட
    பொங்கு வெற்பு சோணைமீ திலே
    தங்கி சுத்த நானில்மூழ் கியே
    நின்ற நிட்டை ஞானநா யனார் -ரமணேசர்
    முங்கு புத்த வாவிவா சனாய்
    இங்கி ருக்க காளைவா கனார்
    பங்கு சக்தி சோதரா விடா -தருள்வாயே
    சங்கு சக்ர வாளும்கோ லுமாய்
    அம்பு விற்கை ஆளும்மா லனே
    பொன்பு விக்கு மாதுசே ரவே -புளிலேறி
    இங்கெ னக்கு யாவுமா கநீ,
    என்ப தைப்பு ஓயவே கமாய்
    மண்ப றித்த ஏனரூ பனே-வருவாயே
    வெஞ்சி றைக்குள் வாசுதே வனாய்
    வந்து தித்து வாழஆ யனாய்
    மண்கு தித்த நீலமே கமே -பெருமாளே”….கிரேசி மோகன்….!

    Share
  • வீணில்லை அன்பு

    நிர்மலா ராகவன்

    “இன்னிக்கு சத்யா திரும்ப ஆபீசுக்கு வந்திருந்தாரும்மா!”

    “அவர் பிழைச்சதே பெரிசு! இப்ப ஒடம்பு நல்லா ஆயிடுச்சா?”

    `உருவத்தில் பழைய சத்யாதான். ஆனால், அந்த இனிமையான குணத்தில்தான் ஏதோ மாசு படிந்துவிட்டதுபோல் இருக்கிறது,’ என்று தாயிடம் சொல்ல கலாவின் மனம் இடங்கொடுக்கவில்லை.

    கடந்த சில மாதங்களாக, மருத்துவமனைக்குப் போய் சத்யாவைப் பார்க்கும்போது, தலையில் பட்ட பலத்த அடியில் அவனது குணாதிசயமே மாறிவிட்டிருந்தது தெரிந்தது. காரணமில்லாமல் சிரித்தான். சம்பந்தம் இல்லாது ஏதேதோ பேசினான்.

    பரிதாபமாகத் தோற்றம் அளித்த அந்நிலையில் அவனுக்கு ஆதரவாக இருக்கத் தீர்மானித்தாள். சிறு குழந்தை மாதிரி, சாப்பிடுவதற்கு அவன் முரண்டு பிடித்ததோ, மாத்திரை கொடுக்க வந்தவளை பிடித்துத் தள்ளியதோ பெரிதாகப் படவில்லை அவளுக்கு.

    `எப்படி இருந்தவர்!’ அழுகைதான் வந்தது.

    “ஹலோ, கலா! குட் மார்னிங்! எப்படி இருக்கே இன்னிக்கு?” மேலதிகாரி என்ற படாடோபம் இல்லாது, சத்யா வலிய வந்து, மரியாதை தவறாது சிறுகச் சிறுகப் பேசியதால்தானே அவள் மனதளவில் அவனுடன் நெருங்கிப் போனாள்!

    முதலில் எட்டடி தூரத்தில் நின்று உரையாடியவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி, இரண்டடி தொலைவில் நின்று, தாழ்ந்த குரலில் மனம்விட்டுப் பேசும் அளவுக்கு முன்னேற ஓராண்டு பிடித்தது.

    அலுவலகப் பிரச்னைகள், சண்டை பூசல்கள், பிறகு டி,வி, பிடித்த இசையமைப்பாளர், பத்திரிகை என்று பொதுப்படையாக ஆரம்பித்த பேச்சு, மெள்ள மெள்ள அவரவர் குடும்பப் பின்னணி என்று முன்னேறியது.

    கலாவின் வாழ்வோடு பார்த்தபோது, தான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று பிரமிப்புதான் ஏற்பட்டது சத்யாவுக்கு.

    `எங்கப்பா குடிப்பாரு!’ என்று ஒரு நாள் ஆரம்பித்தவளை அலட்சியமாக இடைமறித்தான் சத்யா. `இங்க எவன்தான் குடிக்கலே? உலகத்திலேயே பெரும்பாலான ஆண்கள் குடிக்கிறது மலேசியாவிலேதான்னு பேப்பரிலே போட்டிருந்தாங்களே!’

    அப்பாதான் எப்படி அடிப்பார் அம்மாவையும், அவளையும்! அவர் வீட்டுக்குள்ளே நுழையும்போதே இருவரும் மேசை அடியில் ஒளிந்துகொண்டதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு!

    எலிகள் செத்துக் கிடந்த ஏதோ மட்டமான சரக்கைக் குடித்ததன் விளைவாக பார்வையிழந்து, இப்போது கையாலாகாதவராக இருந்தாலும், அப்பா உண்டாக்கிய பாதிப்பு என்னவோ நீங்கவே இல்லை.

    இதையெல்லாம் சத்யாவிடம் சொல்லலாம் என்று தோன்றியது. சொன்னால், தன்னை மட்டமாக நினைக்க மாட்டார் என்ற நம்பிக்கை இருந்தது.

    தயங்கத் தயங்கி அவள் பேசியபோது, அக்கண்களையே உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு, அவளுடைய நான்கு வாக்கியங்களுக்கு ஒரே வாக்கியம் குரல் அதிராமல் அவன் பேசியபோது, அதுவே அவளுடைய நொந்த மனத்துக்கு அருமருந்தாக அமைந்தது.

    அவனுடன் பேசும் அந்த ஐந்து, பத்து நிமிடங்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் கலா.

    `தன்னை எப்படியாவது வளைத்துப் போடுவதற்காகத்தான் இப்படி, தன் நலனில் அக்கறை உள்ளவர்போல் நடிக்கிறாரோ!’ இரவின் தனிமையில் அவனைப்பற்றி எண்ணமிட்டுக் கொண்டும், தனக்குத்தானே சிரித்துக் கொண்டும் இருக்கும்போது, இப்படி ஒரு சந்தேகம் தலைகாட்டும்.

    `நாளையிலிருந்து வளவளவென்று பேசாது, ஒரு அளவோட பழகணும்!’ என்று முடிவெடுத்துக் கொள்வாள்.

    ஆனால், மறுநாள் அவனுடைய கண்களை, அதில் காணப்பட்ட கபடின்மையை, அன்பை உணர்கையில், தன்மேலேயே எரிச்சல் வரும் — இப்படி ஒரு பண்பாளரைத் தவறான நோக்குடன் எடைபோட்டதற்கு. அவளையும் அறியாமல், அவர்களது உறவு பலப்படும்.

    இரண்டு ஆண்டுகள் இவ்விதம் பழகிவிட்டு, `நம் இருவருக்கும்தான் ஒத்துப்போகிறதே! வாழ்நாளெல்லாம் இணைந்தால் என்ன?’ என்ற ஒரு கேள்வியைப் போட்டான் சத்யா. எதிர்பார்த்ததுதான் என்றாலும் அதிர்ச்சியாக இருந்தது கலாவிற்கு.

    தன் தாயின் அலங்கோலமான வாழ்க்கையைக் கண்டு மனம் வெறுத்துப்போய், தானாவது சுதந்திரமாக இருக்கவேண்டும் என்றுதானே இரவு பகலாக உழைத்துப் படித்து, வேலையிலும் அமர்ந்தாள்!

    அவளால் உடனே பதில் கூற முடியவில்லை. சத்யாவும் வற்புறுத்தவில்லை.

    இரண்டு மாதங்களுக்குப்பின் மீண்டும் அவன் அதே கேள்வியைச் சற்றுக் கெஞ்சலாகக் கேட்டபோதும் அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. `கல்யாணம், குடும்பம்னாலே பயமா இருக்கு, சத்யா!’ என்று உண்மையை ஒத்துக்கொண்டாள்.

    `நான் குடிக்கறதில்ல. ஆல்கொஹால் அலர்ஜி. கட்டினவளை அடிக்கவும் மாட்டேன்!’ என்று அவன் சிரித்தான்.

    ஆனால் அவள் கண்களில் நம்பிக்கை காணப்படவில்லை. “நீங்க என்ன சொன்னாலும், பயமாத்தான் இருக்கு!” என்றாள்.

    சற்று யோசித்து, `இப்படிச் செஞ்சா என்ன? ஒரு ஆறு மாசம் நாம்ப ரெண்டு பேரும் பேசிக்காம இருக்கலாம். அப்புறம் பார்ப்போம்!’ என்ற அவனுடைய திட்டத்தை கலா ஏற்றுக்கொண்டாள்.

    சில நாட்களிலேயே அவன் குரல் எங்கே கேட்டாலும் மனம் துடிக்க, அவள் பக்கமே திரும்பாது அவன் அவளைக் கடந்து போகையில், இருவருமே தமது படபடப்பை மறைத்துக்கொள்ள முயற்சி செய்தபோது, முதலில் வேடிக்கையாக இருந்தாலும், நாளடைவில் ஏக்கமாக மாறியது.

    இரண்டு மாதம்தான் தாக்குப்பிடிக்க முடிந்தது அவளால்.

    அந்தச் சமயத்தில் அவள் தந்தை இறக்க, அவள் குடும்பத்தில் ஒருவனாகவே தன்னைப் பாவித்துக்கொண்டு, எல்லா விஷயங்களிலும் அவளுக்குப் பக்கபலமாக இருந்தான் சத்யா. அதன்பின், தங்கள் போட்டியின் முடிவைப்பற்றி எந்த ஒரு சந்தேகமும் இருக்கவில்லை இருவருக்கும்.

    கல்யாணத்துக்கு இன்னும் மூன்றே மாதங்கள்தாம் இருக்கையில், ஒரு புதிய குழப்பம்!

    ஏன்தான் அப்படி ஒரு விபத்து நிகழ்ந்ததோ!

    இரவு பத்து மணிக்கு, ஒரு டோல் அருகே சத்யா பல கார்களுக்குப் பின்னால் காத்திருந்தபோது, இரண்டு பேர் அவனை வெளியில் இழுத்துப் போட்டு, அவனுடைய கைக்கடிகாரம், பர்ஸ், காரின் முன்னிருக்கையில் இருந்த மடிக்கணினி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டதோடு நில்லாது, தலையில் பலமாகத் தாக்க, மூர்ச்சையடைந்தவன் கோமாவில் கிடந்தான் மாதக்கணக்கில்.

    ஒரு வழியாக, சத்யா மீண்டும் ஆபீசுக்கு வந்தபோது, அவனுடைய இடத்தில் சின் என்பவர் அமர்த்தப்பட்டு, அவனுக்குப் பெயரளவில் ஏதோ எளிதான வேலை கொடுக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ந்தான்.

    எல்லாரும் தன்னைக் கேலியாகப் பார்ப்பதுபோல் தோன்றியது அவனுக்கு.

    `உனக்கு மூளை கெட்டுவிட்டது!’ என்று சொல்லாமல் சொல்கிறார்களா?
    இதுவரைக்கும் குடும்பம், படிப்பு, காதல், எதிலும் ஒருவித குழப்பமும் இல்லாத வாழ்க்கை அமைந்ததெல்லாம் இப்படி ஒரு பேரிடியைத் தாங்க வேண்டும் என்பதற்காகத்தானா? மண்டைக்குள் எரிச்சல் உண்டாக, தலையே பிளந்துவிடுவதைப்போல ஒரு வலி.

    அந்தச் சமயத்தில்தானா சின்னுடைய அறையிலிருந்து கலா வெளியே வரவேண்டும்!

    தன் வேலையைப் பறித்ததும் இல்லாது, எதிர்கால வாழ்க்கையையே சூறையாடுவது என்றே எல்லாரும் தீர்மானித்துவிட்டார்களா?

    இந்த உலகத்தின் மேலேயே பொதுவாக ஆத்திரம் வந்தது.

    “ஏ கலா! `இவன் எப்படி தொலைவான்’னு காத்துக்கிட்டு இருந்திட்டு, என் தலை மறைஞ்சதும், இன்னொருத்தனை வளைச்சுப் போட்டுட்டியா?”

    அத்தாக்குதலைச் சற்றும் எதிர்பார்த்திராத கலா விக்கித்துப்போய் நின்றாள். அவள் கையிலிருந்த ஆவணங்கள் சிதறின. அவைகளைத் திரட்டக்கூட தோன்றாமல், அசையாமல் நின்றாள்.

    “மொதல்லேயே ஒனக்கு சிவப்பா, உயரமா இருக்கிற ஒருத்தனைக் கட்டிக்கணும்னு மனசுக்குள்ளே இருந்திருக்கு. அதனாலதானே என்னை அவ்வளவு தூரம் கெஞ்ச வெச்சே?”

    அவனுடைய கத்தல் அருகேயிருந்த மலாய், சீனர்களுக்குப் புரியாவிடினும், `காதலர்களுக்குள் ஏதோ தகறாறு!’ என்று அனைவரும் ஓடிவர, அவமானத்தால் சிறுத்த முகத்துடன், “இவருக்கு இன்னும் உடம்பு தேறவில்லை,” என்று ஆங்கிலத்தில், குரலே எழும்பாது மன்னிப்புக் கேட்டவள், அங்கிருந்து விரைந்தாள்.

    பகல் சாப்பாட்டு நேரத்துக்குச் சற்று முன்பாகவே எழுந்து, கலாவின் மேசைக்கருகில் தயங்கி நின்றான் சத்யா.

    அவனை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தவள், மீண்டும் தலையைக் குனிந்து கொண்டாள். வேலை ஓடவில்லை.

    “சாப்பிடப் போகலாமா?” அவனது தாழ்ந்த, ஆழமான குரல் அவள் மனதைத் தொட்டது. அந்தக் கண்களில் தெரிந்த வேதனை அவளை என்னவோ செய்தது. தன்னையுமறியாமல் எழுந்தாள்.

    வழக்கம்போல் எதிரெதிரே அமர்ந்து சாப்பிடுகையில், இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவனுடைய பார்வை அவ்வப்போது தன்மேல் நிலைத்ததை கலா உணர்ந்தாலும், அவளால் நிமிர முடியவில்லை. எந்த நிமிடமும் அழுதுவிடுவோமோ என்று பயமாக இருந்தது.

    “கலா! என்னை விட்டுட்டுப் போயிட மாட்டியே?” கெஞ்சலாக ஒலித்த அவன் குரல் அவள் கண்களில் நீரை வரவழைத்தது.

    எவ்வளவு நெருக்கமாக இருந்தவர்கள்! உடல் நெருங்கினால்தானா உறவு? `பிணைப்பு’ என்பது மனதைப் பொறுத்துத்தானே இருக்கிறது!

    எதுவும் சொல்லாமல் எழுந்துகொண்டாள். அவள் மனதில் ஓயாது எழும்பிய கேள்விகளுக்கு முதலில் விடை காண வேண்டும்.

    `கல்யாணமே வேண்டாம்!’ என்றிருந்தவள் அப்படியே இருந்து தொலைத்திருக்கக் கூடாதா?

    இப்போது, தாயின் வாழ்க்கையைப்போல தன்னுடையதும் ஆகிவிடுமோ?
    மூளை கலக்கம் அடைய எத்தனை வழிகள் இல்லை!

    குடித்தால்தான் கத்துவார்களா, அடிப்பார்களா, என்ன!

    இப்படியெல்லாம் அடுக்கடுக்காக யோசனைகள் வந்தபோதே, தன் சுயநலம் கலாவை வெட்க வைத்தது.

    முன்பெல்லாம் சத்யா எத்தனை வகைகளில் தனக்கு ஆதரவாக இருந்தார்! எதை எதிர்பார்த்து அப்படி நடந்துகொண்டார்?

    தான் அப்படி ஒன்றும் பிரமாதமான அழகி என்று அவள் நம்பத் தயாரில்லை. தானும்தான் அவரிடம் எதைப் பார்த்து மயங்கி, உறுதி குலைந்து, மணக்கச் சம்மதித்தோம்?

    அவனுடைய அதிக உயரமில்லாத உருவமும், கறுப்பில் சேர்த்தியான நிறமும் அவளை எங்கே பாதித்தது! உள்ளத்தையே ஊடுருவது போன்ற அந்தக் கண்களின் கூர்மையும், அவள் சிறிது மன அயர்ச்சி கொண்டிருந்தாலும் அதைக் குறிப்பாலேயே உணர்ந்து, உடனே அவள் பக்கம் விரையும் அவனது ஆண்மைத்தனமும்தானே, இயற்கையாகவே இன்னொருவரைச் சார்ந்து நிற்கவைக்கும் அவளுடைய பெண்மையை விழிக்கச் செய்தது?

    இது என்ன உணர்வு?

    எந்தப் பெயராக இருந்தால் என்ன!

    ஆனால், தங்கள் இருவரின் நிலையும் இப்போது தலைகீழாக மாறி இருப்பது என்னவோ விளங்கியது.

    சத்யாவுக்கு இப்போது பக்கபலம் அவசியம். தலையில் அடிபட்டால், இரண்டு வருடங்களுக்கும் மேலாக, சில சமயம், பத்தாண்டுகள்கூட பொறுக்க முடியாமல் வலிக்குமாமே! பாவம்! அதை எப்படித் தாங்கப் போகிறார்?

    ஜூர வேகத்தால் அழுது அமர்க்களம் செய்யும் குழந்தையை அதன் தாய் மடியில் கிடத்திக்கொண்டு, இரவெல்லாம் — தன் உறக்கம் கெடுவதை நினைத்தும் பாராது — அதற்கு ஆறுதலாக ஏதாவது பேசிக்கொண்டே இருப்பதில்லையா?

    குழந்தையாக இருந்தால் என்ன, கணவராக இருந்தால் என்ன! அன்பு செலுத்துவது என்று வந்துவிட்டால் அதில் யார், எவர் என்ற பேதம் ஏது!

    சத்யாவால் பழையபடி வேலைப் பளுவுக்கோ, அன்றாட வாழ்க்கையின் அவசரத்துக்கோ ஈடு கொடுக்க முடியாதுபோக, அதனால் பிறந்த ஆத்திரமே சிறுமை உணர்ச்சியாக மாறியிருக்கிறது என்று கலா புரிந்துகொண்டாள்.

    மூளையில் ஒரு பகுதியிலுள்ள அணுக்கள் அழிந்துவிட்டால், அவை திரும்ப தோன்ற முடியாது; ஆனால், வேறொரு பாகம் பழைய வேலைகளைச் செய்யப் பழகிவிடும் என்று அவள் படித்திருந்தாள்.

    இந்த வேளையில் சத்யாவுக்கு முக்கியமாக வேண்டியது அவருடைய உள்ளக் குமுறலைப் புரிந்துகொண்டு, உணர்ச்சிக் கொந்தளிப்பைப் பொருட்படுத்தாது, தனது பலத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு துணை.

    பிறருடைய நலனுக்காக நாம் செலவிடும் அன்போ, பணமோ, எதுவுமே வீணில்லை என்றுதான் கலாவுக்குத் தோன்றியது.

    “ஏம்மா? என்னோட வெளிர் மஞ்சள் புடவையை கஞ்சி போட அனுப்பியிருந்தேனே! வந்திடுச்சா?” என்று உரக்கக் கேட்டவள், `சத்யாவுக்கு அதில என்னைப் பாத்தா, எப்பவுமே சந்தோஷமா இருக்கும்!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    unnamed
    அஷ்டாவக்ர கீதை, ரிபு கீதை போல் இது ‘’வானர கீதை’’….!

     

    வைகுண்டமும் விட்டதம்தான், அதில் உள்ள ‘’விஷ்ணுவே’’ உறிவெண்ணை….!

    ”ஒட்டகத்தைக் கட்டிக்க, உச்சிதனில் குந்திக்க
    விட்டமதன்(உத்திரத்தில் தொங்கும் உறி) வெண்ணையுன் வாயினிக்க -எட்டிடும்:
    கண்ணனுக்கு வானரம் கீதை உரைத்தது
    விண்ணிருக்கும் வைகுண்ட வாழ்வு’’….!
    (OR)
    ”ஒட்டகத்தைக் கட்டிக்க, உச்சிதனில் குந்திக்க
    விட்டமதன்(உத்திரத்தில் தொங்கும் உறி) வெண்ணையுன் வாயினிக்க -எட்டிடும்:
    கிட்டவந்து கைவல்ய கீதையைக் கூறியது
    கிட்டனுக்கு மேலே குரங்கு’’….கிரேசி மோகன்….!

    பாரதத் தேரில் தேரோட்டி கண்ணனுக்கு(கிட்டன்)
    மேலே கொடியில் குரங்கு(அனுமார்)…..!
    கைவல்ய கீதை-கைவெண்ணை கீதை….!

    Share
  • கிருஷ்ணகாளி

     

    கிரேசி மோகன்
    ———————-

    kali
    “யாதுமாகி நின்றவள் எங்கும் நிறைந்தவள்
    யாதவனாய் இங்கே எழுந்தருளி -ஊதுகுழல்
    கண்ணனாய் காட்சி கொடுக்கின்றாள்(ன்), கல்கத்தா
    மண்ணின் மயானத்தின் மீது”….கிரேசி மோகன்….
    Kannamma!

    Kali and Krishna are one and the same. Both names mean “Black”…

    Picture below is from Krishnakali Mandir in Kolkata… Where Krishna and Kali are seen as a single form! The temple
    stands on a cremation ground associated with the great Kalighat Temple in Kolkata…G.KAMESHVAR….

    The great Shakta saint, Ramaprasad sings:

    Mother with disheveled hair has world-charming beauty ;
    so I love Her black complexion …
    Black complexion is the life of Vrindavana ,
    Who makes the Gopis indifferent to the world!
    [Krishna] wearing a garland of wild flowers with a flute in
    hand becomes Kali with a sword …
    Prasada says, “When the knowledge of non-difference dawns,
    black forms blend with one another”
    *

    Arunachala!

    Lovely!

    Indeed kali and krishna are same. Shyama and shyam.

    Sarva deva namaskarah kesavam prati gachati

    Arunachala!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    கிஷ்கிந்தா மந்திகள் முன்பு ராமர் பாலத்திற்காய்(சேது பாலம்)
    மண்,கல் சுமந்தபோது, ஒரு அணிலும் மண்
    சுமந்தது….ராமர் அதன் முதுகில் பரிவாகப் பின்கோடிட்டார்….
    அன்னை மிரட்டலுக்கு பயந்தது போல் நடித்து,
    ‘’ராமனாய் வந்த கண்ணன் தன்னை அணிலின் அவதாரம்
    என்று சொல்லி அன்னையை ஏமாற்றுகிறான்….அதை நம்பாமல்
    யசோதை வாய்திறக்கச் சொல்ல அன்னைக்கு வாய்க்குள்
    அகிலத்தைக் காட்டியது கண்ணன் லீலை….!சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து….!

    ”மந்திகோள் மாதாமுன் மூட்ட மணல்தெருச்
    சந்தியில் உண்டவன் சாகஸம்: -சந்திர
    வம்சத்தோன்(கண்ணன்) சூரிய வம்சத்து(ராமர்) சேதுவிற்காய்(சேது பாலம்)
    அம்ஸயித்த கண்ணன் அணில்’’….கிரேசி மோகன்….!

    அம்ஸயித்தல் -ஆண்டவனுக்கு உணவு அர்பணித்தல்….
    இவ்விடம் ஆண்டவனுக்கு(ராமருக்கு) ஆண்டவனே(கண்ணனே)
    அம்ஸயித்தல் பெரிய கடவுள் போல ‘’பெரிய பிரசாதம்’’….!யோசிக்க வைத்த
    ‘’கேசவ்வுக்கு” நன்றி….!

    Share
  • கண்ணன்

    ’’அய்யங்காரர்களுக்கு இன்று ஸ்ரீஜயந்தி….வைஷ்ணவ ஜனதோவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்’’….!

    “ஏறுமயில் ஏறிவிளை யாடும்முகம் ஒன்று” மெட்டில் எழுதியது….

    crazy

    கண்ணன் திருப் புகழ்
    ————————–

    “கோலுயர கன்றுகளை காத்தமுகம் ஒன்று
    கோபியர்கள் கூட்டமதில் கொஞ்சுமுகம் ஒன்று
    நீலயமு னாநதியில் நீந்துமுகம் ஒன்று
    நச்சரவம் மீதுநட மாடும்முகம் ஒன்று
    பால்நிலவு ராதைமுகம் பார்க்கும்முகம் ஒன்று
    பாரமுலை பூதகியின் ப்ராணமுகம் ஒன்று
    காலனென மாமனுயிர் கொண்டமுகம் ஒன்று
    ஆலிலையில் பாலனென ஆழ்ந்தபெரு மாளே”….

    ’’ஏக பில்வம் சிவார்ப்பணம்’’
    பில்வாஷ்டகம் படித்த பாதிப்பில் எழுதியது….
    ‘’ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….!
    ————————————————-
    ‘’சங்குசக்ரம் சாரங்கம் தெண்டம்வாள் நந்தகி
    அங்கையேந்தும் அவதார விஷ்ணு
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(1)

    ‘’மூணுமோர் மறைகள் மீட்க மீனமாய்க் கடலுள் சென்ற
    வானவைகுந்தனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(2)

    ‘’கடல்கடைந்த போதன்று வடவரையை வழுவிடாது
    உடல்சுமந்த ஆமையே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(3)

    ’’கொம்பிலே குவலயத்தை கால்சிலம்பில் கோள்குலுங்க
    நெம்பிய வராகரே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(4)

    ‘’தானாடும் துட்டனைத் தரைமட்டம் ஆக்கிட
    தூணாடும் துரைசிங்கனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(5)

    ‘’வந்தபின் வரம்வாங்கி அந்தவான் உலகளந்த
    அந்தணன் வாமனனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(6)

    ’’ராமபரசு ராமஅரசு ராமபல ராமனாய்
    நாமமொன்று நடிப்புவேறு
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(7)

    ‘’பூபாரம் போக்கவன்று பாரதப் போர்முடித்த
    கோபாலக் கண்ணனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(8)….கிரேசி மோகன்….!

    ———————————————————————-

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . .( 207 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலின் மூலம் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன். ஒருவாரம்! ஆமாம் அந்த ஒரேயொரு வாரம் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் நிகழ்வுகளின் நீளம்தான் என்ன என்பதை நினைத்துப் பார்க்கையில் காலதேவனின் கணக்கிற்கும்,மனிதனின் கணக்கிற்கும் உள்ள வித்தியாசம் புரிகிறது!

    போனவாரம் அதே செவ்வாயன்று தூங்கப் போகும்போது இந்தவாரம் அதே செவ்வாய் இரவு தமது தேசத்தை நிலஅதிர்வு ஒரு உலுக்கு உலுக்கப் போகிறது என்பதை இத்தாலிய மத்தியப் பிரதேச மக்கள் அறிந்திருந்தார்களா என்ன? அதே போலப் போனவாரம் புதன்கிழமை வாழ்வைச் சகஜமாகக் கழித்த ஐந்து மிகவும் இளவயது ஆசிய இளைஞர்கள் இந்தப் புதன்கிழமை “கம்ப சாண்ட்ஸ் ” எனும் கடற்கரையில் தாம் நீந்திக் களித்திருக்கையில் உயிரிழக்கப் போகிறோம் என்று எண்ணியிருந்தார்களா என்ன?

    எத்தனையோ அழகாக எமது வாழ்வின் கனவுகளைச் சாதனைகளாக்கத் திட்டம் தீட்டி வைத்துள்ளோம். அதன் நிறைவேற்றங்களினால் நாமடையப் போகும் ஆனந்தம் எனப் பலவற்றைச் சிந்தித்து அதன் நினைவுகளில் மூழ்கியிருந்திருப்போம். ஒரேயொரு வினாடி நிகழ்வுகள் அவையனைத்தையும் தரைமட்டமாக்கி விடும் எனும் உண்மையை மட்டும் ஏனோ மறந்து போய்விடுகிறோம். உண்மையில், மறந்துதான் போகிறோமா ? இல்லை மறக்கிறோம் எனும் மாயையில் எம்மை மூழ்கடிக்கிறோமா?

    எனது நண்பர் ஒருவர் ஈழத்திலிருந்து இலண்டனுக்கு எழுபதுகளின் முடிவில் வந்தார். அவர் வரும்போது ஒன்றும் எனக்கு நண்பரல்ல. எனது நல்ல நண்பன் ஒருவனின் உறவினராக எனக்கு அறிமுகமானார். என்னைவிட வயதில் சில வருடங்கள் மூத்தவர்; காலநேரத்தின் விளைவாக இலண்டனில் ஒரு பணி தேடுவதற்காக என் உதவியை நாடினார். அவர் பணி தேடுவதற்காக இலண்டனில் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். என்னுடைய ஓர் இனிய நண்பரானார்.

    மிகவும் கடினமான உழைப்பாளி. அதிகாலை முதல் இரவுவரைக் கடினமாக உழைக்கும் வல்லமை கொண்டவர். மனைவியையும் குழந்தைகளையும் ஈழத்தில் விட்டு விட்டுத் தான் பணிபுரிந்த வேலையையும் விட்டுத் தனது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காக மிகவும் சிக்கலான தீர்மானம் எடுத்து இலண்டன் வந்திருந்தார்.

    தூரதிருஷ்டவசமாக அவருக்கு இலண்டனில் வதிவிட உரிமை கிடைக்கவில்லை. பல சிக்கல்களுக்கிடையில் ஒருவாறு தனது மனைவி பிள்ளைகளையும் இலண்டன் தருவித்தார். அதற்காக அவர் எடுத்த சிக்கலான முயற்சிகளைப் பற்றி நான் நன்கு அறிவேன். மிகவும் சிரமப்பட்டு மூன்றுமுறைகள் தோல்வியுற்றும் தனது விடாமுயற்சியால் குடும்பத்துடன் கனடாவில் குடியேறினார்.அங்கும் அவர் கடினமாக உழைக்கத் தவறவில்லை. தனக்காக ஒரு சிறு சுயதொழில் ஆரம்பித்துக் கடின உழைப்பால் முன்னேறித் தனக்குக் கீழ் கனேடிய மக்களை வைத்துத் தொழில் நடத்தும் ஓர் உயர்ந்த நிலையை அடைந்தார். இன்று தனது மைந்தனையும், மகளையும் மிகவும் ஓர் உயர்ந்த நிலைக்கு உயர்த்தி மனைவியோடு தனது ஓய்வு காலத்தை மகிழ்வுடன் கழித்து வருகிறார்.

    எனது மற்றொரு நன்பன் ஏறத்தாழ நான் இலண்டனுக்கு வந்த சமயம் இலண்டனுக்கு மேற்படிப்புக்காக வந்தவன். என்னைப் போலவே இந்த நாட்டையே தனது வாழ்வாதாரத்திற்கான நாடாக்கி வாழ்ந்து வந்தான். அவனும் மிகவும் கடினமாக உழைத்து 64 வயதை அடைந்ததும் அடுத்த வருடம் தனக்குக் கிடைக்கப் போகும் ஓய்வூதியத்துடன் தனது வாழ்நாளைத் தனக்குப் பிடித்த வகையில் கழிக்க விரும்பியவன். ஆனால் அந்தோ பரிதாபம்… ஓய்வு பெறுவதற்குச் சில மாதங்களே இருந்த நிலையில் மாபெரும் மாரடைப்புக்கு இலக்காகித் தனது கனவினை இழந்து விட்டான்.

    இவ்விருவர்களையும் நான் இங்கே குறிப்பிட்டதன் காரணம் காலதேவனின் மாற்றம் இவர்கள் இருவரினது வாழ்விலும் ஏற்படுத்திய மாற்றங்கள் அவர்கள் எதிர்பார்த்திருக்காததே!ஆயினும் இவர்கள் இருவருக்கும் இடையிலான ஒற்றுமை இவர்கள் இருவருமே காலம் தமது திசையை மாற்றி விடக்கூடும் எனும் அச்சத்தினால் ஏதோ வாளாது இருந்தவர்கள் அல்ல. வாழ்வின் இடர்களை, அவை அவர்களின் மீது வீசிய சவால்களை எதிர்த்துப் போரிட்டவர்களே!

    இன்றிருப்போர் நாளை இருப்பது சந்தேகமே! ஆனால் அதற்காக நாம் எமது வாழ்வின் இலட்சியங்களை அலட்சியம் செய்து விடலாமா? முயற்சியைக் கைவிடலாமா? ஒருபோதும் இல்லை. அவ்விலட்சியங்கள் எம்மால் எட்டப்படக்கூடிய யதார்த்தமான இலட்சியங்களாக இருக்குமேயானால். மட்டுமே!

    இன்றைய காலகட்டத்தில் உலகின் எந்தப்பாகத்திலும் எத்தகைய வழியிலும் பதவியையும், பணத்தையும் சம்பாதித்து விடலாம் என்பதே பலரிடம் காணக்கூடிய தன்மையாக உள்ளது.அதற்கு அவர்களைச் சுற்றியுள்ள சமுதாயமும், அச்சமுதாயத்தில் எத்தகையவர்கள் அவர்களுக்கு வெற்றி பெற்ற முன்னுதாரணங்களாக இருக்கிறார்கள் என்பதையும் பொறுத்தே உள்ளது. இது சாதாரண வியாபாரியிலிருந்து , மிகப்பெரிய அரசியல்வாதிகள்வரை காணப்படும் தன்மையாக உள்ளது. இதற்குத் தனிமனிதர்களாகிய நாம் எவ்விதத்திலும் பொறுப்பானவர்கள் இல்லை என்று சொல்வது மாபெரும் தவறாகும்.

    ஒவ்வொரு தனிமனிதனுடைய அபிலாஷைகளுமே ஒரு சமுதாயத்தின் நடைமுறையின் முதுகெலும்பாகிறது. சமுதாயத்தின் போக்கே அச்சமுதாயத்தினைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகளை உருவாக்குகிறது. சமுதாயத்தின் தேவைகளின் தன்மையே அச்சமுதாயத்தின் வியாபாரிகளுக்கு அடிப்படை மூலதனமாகிறது. எம்மால் உருவாக்கப்பட்ட அரசியல்வாதிகள், எமது தேவைகளின் அடிப்படையில் எம்மிடமிருந்து பணம் சம்பாதிக்கும் வியாபாரிகள் இவர்களின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வெறும் பார்வையாளர்களாக நாம் நடக்கும் வரை, இத்தகைய நிலைமைகள் மாறப் போவதில்லை. நாம் ஒவ்வொருவரும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் சமுதாயப் பொறுப்புகளை உணர்ந்து கொள்வோமானால் ஒரு புத்தம் புதியதோர் உலகம் உருவாகும் சாத்தியம் உண்டு.

    எதற்காக இந்தத் திடீர் அலசல் என்று கேட்கிறீர்களா ? நாம் நினைப்பதும், இங்கு நடப்பதும் வேறு என்பதும் இவ்வுலக நிர்ணயம் என்பது நிலையற்றது என்பதும் எவ்வளவு உண்மையோ நாம் வாழும் காலம் வரை உழைப்பில் கடினமும், உள்ளத்தில் நேர்மையும், அடுத்தவரை நோக்கிய எமது பார்வையில் மனிதாபிமானமும் கலந்திருக்குமேயானால் எம் ஒவ்வொருவருடைய வாழ்வும் இந்நிலையற்ற உலகில் நிலைபெற்று நிலைத்திருக்கும் என்பதினை உங்களோடு சேர்த்து எனக்கும் சத்தமாய்ச் சொல்லிக் கொள்வதற்கே!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    ***

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

     

    Share
  •   ஆறுமுகன் அருட்பா (இரண்டாம் பகுதி )

    க. பாலசுப்பிரமணியன்

    Aarumugavelan-2

    11

    வடிவம் கண்டதும் வாட்டங்கள் நீங்கிடும்

    வழிகள் அறியாப் பயணங்கள் முடிந்திடும்

    வலிகள் நீங்கியே வல்லமை வந்திடும்

    வள்ளியின் காதல் கனியே !

    12.

    கனியே ! கரும்பே ! கலைகளின் கருவே  !

    குவலயம் அறியா கலைஞனின் உருவே !

    குருவாய் நின்று அருளிய அறிவே !

    காத்திட வருவாய் இனிதே !

    13.

    இனிதே  இனிதே சேவடி ஆட்சி

    இனிதே இனிதே வேலின் மாட்சி

    இனிதே இனிதே கந்தனின் காட்சி

    இனிதே கண்டவர் விழியே !

    14

    விழியும் கூர்மை வேலும் கூர்மை

    மதியும்  கூர்மை கூற்றுவன் கூரிடும்;

    கதியென வந்தோர் விதியினை மாற்றி

    நிதியென வளர்ந்திடும்  குமரா!

    15.

    குமரா!  முருகா!  மாலனின் மருகா !

    குன்றுகள் தோறும் நின்றிடும் அழகா!

    கூவிடும் சேவல் கொடியினை  ஏந்தி

    குறைகளைத் தீர்க்கும் கோனே !

    16.

    கோனாய் பிறப்பினும் குடிலினில் வாழ்ந்தும்

    கோலங்கள் கலைந்திடக் குன்றிடும் வாழ்வில்

    கூட்டினில் நின்ற கூற்றுவன் அழைப்பை

    கூரிட வருவதும் வேலே !

    17

    வேலுடை வேந்தா! விழி தந்த மைந்தா!

    விரும்பியே அழைத்தேன் விரைவில் வருவாய் !

    வேதத்தின் பொருளே, வீரத்தின் வடிவே

    வினைகள் தீர்க்கும் வித்தே!

    18.

    வித்தும் நீயே , வரும்விளைவும் நீயே!

    விடியல் கதிரின் வெப்பச் சுடரே !

    விண்ணும் மண்ணும் வாழ்த்திடும் தேவே

    விழிகள் தேடிடும் தேடலே !

     

    19.

    தேடிய உள்ளத்தில் தேனாய் இனிப்பாய்

    தேங்கிய வாழ்வைத் தேராய் இழுப்பாய்

    தேவர்கள் போற்றிடும் தெய்வத் திருவே

    திருவருள் தீராக்  கருணைக்கடலே !

    20

    கடலின் அலைகளாய் ஆசைகள் பொங்கிட

    காலத்தின் கைகளில் கதறிடும் மனத்தைக்

    காக்கும் தெய்வமே ! கலியுக மருந்தே !

    காத்திடு கந்தா ! போற்றினேன் !

    Share