நான் அறிந்த சிலம்பு – 221
-மலர்சபா
மதுரைக் காண்டம் – அழற்படு காதை
மன்னவன் மாண்டதை அறியாமல் மற்றோர் அசைவற்றிருத்தல்
கண்ணகியின் ஏவலின்படி
தீக்கடவுளின் எரிமுகம் திறந்தது;
காவல் தெய்வங்கள் தம் பணி விடுத்துக்
கோட்டை வாயிலை விட்டு நீங்கினர்.
அரசர்க்கெல்லாம் அரசன்
பகைவரைப் போரில் வெல்லும் பாண்டிய மன்னன்
தன் தவற்றால் வளைந்த செங்கோலைத்
தன் உயிர் கொடுத்து நிமிர்த்தினான்.
பெரிய நிலமகளுக்குத்
தன் செங்கோல் நலம் காட்ட,
கற்பில் சிறந்த தன் மனைவியோடு மன்னன்
அரியணையிலேயே இறந்தான்.
அரசனும் அரசியும் மாண்டதை அறியாமல்
ஆசான், தலைமைச் சோதிடன்,
அறக்களத்தின் தலைவன், ஓலை எழுதுபவர்,
அரண்மனைப் பணியாளர்,
வளையல் அணிந்த பணி மகளிர் அனைவரும்
அதிர்ச்சியுற்றுப் பேச்சு வராமல்
ஓவியமாய் வரையப்பட்ட
அரசியல் மாந்தரைப் போல்
செய்வதறியாது நின்றனர்.
மன்னவன் கோவிலில் தீயைக் கண்டு காவலர் முதலியோர் நீங்குதல்
அங்குசம் ஏந்தும் யானைப்பாகரும்
விரைந்து தேரை ஓட்டிச் செல்லும் தேர்ப்பாகரும்
வீரவாள் ஏந்தும் மறவரும்
அரசரின் அரண்மனையில் தீயைக் கண்டு,
தீக்கான உண்மைக் காரணத்தை அறியாமல்
வேறு காரணம் என நினைத்து,
அதனை அறிவிக்க வாயிலில் கூட்டமாய் நின்றனர்.