இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . .( 207 )

0

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலின் மூலம் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன். ஒருவாரம்! ஆமாம் அந்த ஒரேயொரு வாரம் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் நிகழ்வுகளின் நீளம்தான் என்ன என்பதை நினைத்துப் பார்க்கையில் காலதேவனின் கணக்கிற்கும்,மனிதனின் கணக்கிற்கும் உள்ள வித்தியாசம் புரிகிறது!

போனவாரம் அதே செவ்வாயன்று தூங்கப் போகும்போது இந்தவாரம் அதே செவ்வாய் இரவு தமது தேசத்தை நிலஅதிர்வு ஒரு உலுக்கு உலுக்கப் போகிறது என்பதை இத்தாலிய மத்தியப் பிரதேச மக்கள் அறிந்திருந்தார்களா என்ன? அதே போலப் போனவாரம் புதன்கிழமை வாழ்வைச் சகஜமாகக் கழித்த ஐந்து மிகவும் இளவயது ஆசிய இளைஞர்கள் இந்தப் புதன்கிழமை “கம்ப சாண்ட்ஸ் ” எனும் கடற்கரையில் தாம் நீந்திக் களித்திருக்கையில் உயிரிழக்கப் போகிறோம் என்று எண்ணியிருந்தார்களா என்ன?

எத்தனையோ அழகாக எமது வாழ்வின் கனவுகளைச் சாதனைகளாக்கத் திட்டம் தீட்டி வைத்துள்ளோம். அதன் நிறைவேற்றங்களினால் நாமடையப் போகும் ஆனந்தம் எனப் பலவற்றைச் சிந்தித்து அதன் நினைவுகளில் மூழ்கியிருந்திருப்போம். ஒரேயொரு வினாடி நிகழ்வுகள் அவையனைத்தையும் தரைமட்டமாக்கி விடும் எனும் உண்மையை மட்டும் ஏனோ மறந்து போய்விடுகிறோம். உண்மையில், மறந்துதான் போகிறோமா ? இல்லை மறக்கிறோம் எனும் மாயையில் எம்மை மூழ்கடிக்கிறோமா?

எனது நண்பர் ஒருவர் ஈழத்திலிருந்து இலண்டனுக்கு எழுபதுகளின் முடிவில் வந்தார். அவர் வரும்போது ஒன்றும் எனக்கு நண்பரல்ல. எனது நல்ல நண்பன் ஒருவனின் உறவினராக எனக்கு அறிமுகமானார். என்னைவிட வயதில் சில வருடங்கள் மூத்தவர்; காலநேரத்தின் விளைவாக இலண்டனில் ஒரு பணி தேடுவதற்காக என் உதவியை நாடினார். அவர் பணி தேடுவதற்காக இலண்டனில் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். என்னுடைய ஓர் இனிய நண்பரானார்.

மிகவும் கடினமான உழைப்பாளி. அதிகாலை முதல் இரவுவரைக் கடினமாக உழைக்கும் வல்லமை கொண்டவர். மனைவியையும் குழந்தைகளையும் ஈழத்தில் விட்டு விட்டுத் தான் பணிபுரிந்த வேலையையும் விட்டுத் தனது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காக மிகவும் சிக்கலான தீர்மானம் எடுத்து இலண்டன் வந்திருந்தார்.

தூரதிருஷ்டவசமாக அவருக்கு இலண்டனில் வதிவிட உரிமை கிடைக்கவில்லை. பல சிக்கல்களுக்கிடையில் ஒருவாறு தனது மனைவி பிள்ளைகளையும் இலண்டன் தருவித்தார். அதற்காக அவர் எடுத்த சிக்கலான முயற்சிகளைப் பற்றி நான் நன்கு அறிவேன். மிகவும் சிரமப்பட்டு மூன்றுமுறைகள் தோல்வியுற்றும் தனது விடாமுயற்சியால் குடும்பத்துடன் கனடாவில் குடியேறினார்.அங்கும் அவர் கடினமாக உழைக்கத் தவறவில்லை. தனக்காக ஒரு சிறு சுயதொழில் ஆரம்பித்துக் கடின உழைப்பால் முன்னேறித் தனக்குக் கீழ் கனேடிய மக்களை வைத்துத் தொழில் நடத்தும் ஓர் உயர்ந்த நிலையை அடைந்தார். இன்று தனது மைந்தனையும், மகளையும் மிகவும் ஓர் உயர்ந்த நிலைக்கு உயர்த்தி மனைவியோடு தனது ஓய்வு காலத்தை மகிழ்வுடன் கழித்து வருகிறார்.

எனது மற்றொரு நன்பன் ஏறத்தாழ நான் இலண்டனுக்கு வந்த சமயம் இலண்டனுக்கு மேற்படிப்புக்காக வந்தவன். என்னைப் போலவே இந்த நாட்டையே தனது வாழ்வாதாரத்திற்கான நாடாக்கி வாழ்ந்து வந்தான். அவனும் மிகவும் கடினமாக உழைத்து 64 வயதை அடைந்ததும் அடுத்த வருடம் தனக்குக் கிடைக்கப் போகும் ஓய்வூதியத்துடன் தனது வாழ்நாளைத் தனக்குப் பிடித்த வகையில் கழிக்க விரும்பியவன். ஆனால் அந்தோ பரிதாபம்… ஓய்வு பெறுவதற்குச் சில மாதங்களே இருந்த நிலையில் மாபெரும் மாரடைப்புக்கு இலக்காகித் தனது கனவினை இழந்து விட்டான்.

இவ்விருவர்களையும் நான் இங்கே குறிப்பிட்டதன் காரணம் காலதேவனின் மாற்றம் இவர்கள் இருவரினது வாழ்விலும் ஏற்படுத்திய மாற்றங்கள் அவர்கள் எதிர்பார்த்திருக்காததே!ஆயினும் இவர்கள் இருவருக்கும் இடையிலான ஒற்றுமை இவர்கள் இருவருமே காலம் தமது திசையை மாற்றி விடக்கூடும் எனும் அச்சத்தினால் ஏதோ வாளாது இருந்தவர்கள் அல்ல. வாழ்வின் இடர்களை, அவை அவர்களின் மீது வீசிய சவால்களை எதிர்த்துப் போரிட்டவர்களே!

இன்றிருப்போர் நாளை இருப்பது சந்தேகமே! ஆனால் அதற்காக நாம் எமது வாழ்வின் இலட்சியங்களை அலட்சியம் செய்து விடலாமா? முயற்சியைக் கைவிடலாமா? ஒருபோதும் இல்லை. அவ்விலட்சியங்கள் எம்மால் எட்டப்படக்கூடிய யதார்த்தமான இலட்சியங்களாக இருக்குமேயானால். மட்டுமே!

இன்றைய காலகட்டத்தில் உலகின் எந்தப்பாகத்திலும் எத்தகைய வழியிலும் பதவியையும், பணத்தையும் சம்பாதித்து விடலாம் என்பதே பலரிடம் காணக்கூடிய தன்மையாக உள்ளது.அதற்கு அவர்களைச் சுற்றியுள்ள சமுதாயமும், அச்சமுதாயத்தில் எத்தகையவர்கள் அவர்களுக்கு வெற்றி பெற்ற முன்னுதாரணங்களாக இருக்கிறார்கள் என்பதையும் பொறுத்தே உள்ளது. இது சாதாரண வியாபாரியிலிருந்து , மிகப்பெரிய அரசியல்வாதிகள்வரை காணப்படும் தன்மையாக உள்ளது. இதற்குத் தனிமனிதர்களாகிய நாம் எவ்விதத்திலும் பொறுப்பானவர்கள் இல்லை என்று சொல்வது மாபெரும் தவறாகும்.

ஒவ்வொரு தனிமனிதனுடைய அபிலாஷைகளுமே ஒரு சமுதாயத்தின் நடைமுறையின் முதுகெலும்பாகிறது. சமுதாயத்தின் போக்கே அச்சமுதாயத்தினைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகளை உருவாக்குகிறது. சமுதாயத்தின் தேவைகளின் தன்மையே அச்சமுதாயத்தின் வியாபாரிகளுக்கு அடிப்படை மூலதனமாகிறது. எம்மால் உருவாக்கப்பட்ட அரசியல்வாதிகள், எமது தேவைகளின் அடிப்படையில் எம்மிடமிருந்து பணம் சம்பாதிக்கும் வியாபாரிகள் இவர்களின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வெறும் பார்வையாளர்களாக நாம் நடக்கும் வரை, இத்தகைய நிலைமைகள் மாறப் போவதில்லை. நாம் ஒவ்வொருவரும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் சமுதாயப் பொறுப்புகளை உணர்ந்து கொள்வோமானால் ஒரு புத்தம் புதியதோர் உலகம் உருவாகும் சாத்தியம் உண்டு.

எதற்காக இந்தத் திடீர் அலசல் என்று கேட்கிறீர்களா ? நாம் நினைப்பதும், இங்கு நடப்பதும் வேறு என்பதும் இவ்வுலக நிர்ணயம் என்பது நிலையற்றது என்பதும் எவ்வளவு உண்மையோ நாம் வாழும் காலம் வரை உழைப்பில் கடினமும், உள்ளத்தில் நேர்மையும், அடுத்தவரை நோக்கிய எமது பார்வையில் மனிதாபிமானமும் கலந்திருக்குமேயானால் எம் ஒவ்வொருவருடைய வாழ்வும் இந்நிலையற்ற உலகில் நிலைபெற்று நிலைத்திருக்கும் என்பதினை உங்களோடு சேர்த்து எனக்கும் சத்தமாய்ச் சொல்லிக் கொள்வதற்கே!

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்
***

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.