ஆறுமுகன் அருட்பா (இரண்டாம் பகுதி )
க. பாலசுப்பிரமணியன்
11
வடிவம் கண்டதும் வாட்டங்கள் நீங்கிடும்
வழிகள் அறியாப் பயணங்கள் முடிந்திடும்
வலிகள் நீங்கியே வல்லமை வந்திடும்
வள்ளியின் காதல் கனியே !
12.
கனியே ! கரும்பே ! கலைகளின் கருவே !
குவலயம் அறியா கலைஞனின் உருவே !
குருவாய் நின்று அருளிய அறிவே !
காத்திட வருவாய் இனிதே !
13.
இனிதே இனிதே சேவடி ஆட்சி
இனிதே இனிதே வேலின் மாட்சி
இனிதே இனிதே கந்தனின் காட்சி
இனிதே கண்டவர் விழியே !
14
விழியும் கூர்மை வேலும் கூர்மை
மதியும் கூர்மை கூற்றுவன் கூரிடும்;
கதியென வந்தோர் விதியினை மாற்றி
நிதியென வளர்ந்திடும் குமரா!
15.
குமரா! முருகா! மாலனின் மருகா !
குன்றுகள் தோறும் நின்றிடும் அழகா!
கூவிடும் சேவல் கொடியினை ஏந்தி
குறைகளைத் தீர்க்கும் கோனே !
16.
கோனாய் பிறப்பினும் குடிலினில் வாழ்ந்தும்
கோலங்கள் கலைந்திடக் குன்றிடும் வாழ்வில்
கூட்டினில் நின்ற கூற்றுவன் அழைப்பை
கூரிட வருவதும் வேலே !
17
வேலுடை வேந்தா! விழி தந்த மைந்தா!
விரும்பியே அழைத்தேன் விரைவில் வருவாய் !
வேதத்தின் பொருளே, வீரத்தின் வடிவே
வினைகள் தீர்க்கும் வித்தே!
18.
வித்தும் நீயே , வரும்விளைவும் நீயே!
விடியல் கதிரின் வெப்பச் சுடரே !
விண்ணும் மண்ணும் வாழ்த்திடும் தேவே
விழிகள் தேடிடும் தேடலே !
19.
தேடிய உள்ளத்தில் தேனாய் இனிப்பாய்
தேங்கிய வாழ்வைத் தேராய் இழுப்பாய்
தேவர்கள் போற்றிடும் தெய்வத் திருவே
திருவருள் தீராக் கருணைக்கடலே !
20
கடலின் அலைகளாய் ஆசைகள் பொங்கிட
காலத்தின் கைகளில் கதறிடும் மனத்தைக்
காக்கும் தெய்வமே ! கலியுக மருந்தே !
காத்திடு கந்தா ! போற்றினேன் !

