க. பாலசுப்பிரமணியன்

Aarumugavelan-2

11

வடிவம் கண்டதும் வாட்டங்கள் நீங்கிடும்

வழிகள் அறியாப் பயணங்கள் முடிந்திடும்

வலிகள் நீங்கியே வல்லமை வந்திடும்

வள்ளியின் காதல் கனியே !

12.

கனியே ! கரும்பே ! கலைகளின் கருவே  !

குவலயம் அறியா கலைஞனின் உருவே !

குருவாய் நின்று அருளிய அறிவே !

காத்திட வருவாய் இனிதே !

13.

இனிதே  இனிதே சேவடி ஆட்சி

இனிதே இனிதே வேலின் மாட்சி

இனிதே இனிதே கந்தனின் காட்சி

இனிதே கண்டவர் விழியே !

14

விழியும் கூர்மை வேலும் கூர்மை

மதியும்  கூர்மை கூற்றுவன் கூரிடும்;

கதியென வந்தோர் விதியினை மாற்றி

நிதியென வளர்ந்திடும்  குமரா!

15.

குமரா!  முருகா!  மாலனின் மருகா !

குன்றுகள் தோறும் நின்றிடும் அழகா!

கூவிடும் சேவல் கொடியினை  ஏந்தி

குறைகளைத் தீர்க்கும் கோனே !

16.

கோனாய் பிறப்பினும் குடிலினில் வாழ்ந்தும்

கோலங்கள் கலைந்திடக் குன்றிடும் வாழ்வில்

கூட்டினில் நின்ற கூற்றுவன் அழைப்பை

கூரிட வருவதும் வேலே !

17

வேலுடை வேந்தா! விழி தந்த மைந்தா!

விரும்பியே அழைத்தேன் விரைவில் வருவாய் !

வேதத்தின் பொருளே, வீரத்தின் வடிவே

வினைகள் தீர்க்கும் வித்தே!

18.

வித்தும் நீயே , வரும்விளைவும் நீயே!

விடியல் கதிரின் வெப்பச் சுடரே !

விண்ணும் மண்ணும் வாழ்த்திடும் தேவே

விழிகள் தேடிடும் தேடலே !

 

19.

தேடிய உள்ளத்தில் தேனாய் இனிப்பாய்

தேங்கிய வாழ்வைத் தேராய் இழுப்பாய்

தேவர்கள் போற்றிடும் தெய்வத் திருவே

திருவருள் தீராக்  கருணைக்கடலே !

20

கடலின் அலைகளாய் ஆசைகள் பொங்கிட

காலத்தின் கைகளில் கதறிடும் மனத்தைக்

காக்கும் தெய்வமே ! கலியுக மருந்தே !

காத்திடு கந்தா ! போற்றினேன் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.