-இன்னம்பூரான்

 

sukavanam

 

மேற்படி நிறுவனத்தின் நீண்ட ஆய்வின் பயனாக வெளியிடப்பட்ட மற்ற அறிவுரைகள்:

  1. சுகவனம் 2-இல் கூறப்பட்டது.
  2. Keep Active: உங்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் என்றென்றும் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது நலம் பயக்கும். எறும்பு சுறுசுறுப்பாக இயங்குவதை நாம் காண்கிறோம். ஆண்சிங்கமோ படு சோம்பேறி. புலியை விட வேங்கையின் வேகம் அதிகம். மற்ற ஆய்வுகளும் சோம்பிக்கிடக்காமல், பல அலுவல்களில் இயங்கும் மானிடரை வியாதிகள் அணுகுவது குறைவு என்று பல்லாண்டுகளாக அறிவித்து வந்துள்ளனர்.
  3. Eat Well: உணவே மருந்து. அதைத் தக்கதொரு முறையில் தயாரித்து நன்றாக உட்கொள்வது நல்லது. அறுசுவை உண்டி அளிக்கும் சுவை போற்றத்தக்கது என்றாலும் சிறிய அளவில், இனிப்பையும், உப்பையும், எண்ணெயையும் குறைத்து, காய்கறிகளையும், பழவகைகளையும் உட்கொள்வது நலம். ஆய்வு செய்தவர்களில் பேலியோ டயட்டார்கள் இருந்திருக்கலாம். மாமிசம் உண்போரும் உணவை நல்ல வகையில் உண்ணலாம் -முட்டை,மீன், கோழிக்கறி என்று. அதை குறை சொல்வதற்கு இல்லை.
  4. Drink Sensibly: மேல்நாடுகளில் பெரும்பாலோர் மது அருந்துபவர்கள். அவர்களின் கலாசாரத்தில் அது ஒரு அங்கம் வகிக்கிறது. அதனால் தான் இந்த அறிவுரை. நம் நாட்டில் குடிமயக்கம் அடிக்கடித் தென்படுகிறது. போன வருடம், ஒரு பயணத்தில் ஒரு டாஸ்மாக் கடை ‘வாழ்க வளமுடன்’ என்ற விலாசம் படைத்த வாடகைக் கட்டிடத்தில். அதன் வாசலில் அலங்கோலமாகக் கிடந்தனர், குடிமகன்கள். ‘வாழ்வே மாயம்’ என்று நினைத்துக்கொண்டேன்.
  5. Keep in touch: மனிதனின் இயல்பு சுற்றத்துடன் வாழ்வது. அது குடும்பம், கூட்டுக்குடும்பம், சுற்றம், நண்பர்கள், ஊர், மாநிலம், நாடு, உலகம் என்று பல பரிமாணங்கள் கொண்டது. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சுயமரபுகள் முட்டுக்கட்டை போட்டாலும், கூடி வாழ்வது நலம் பயக்கும்.
  6. Ask for Help: தட்டுங்கள். கதவு திறக்கப்படும். மற்றவர்களுக்கு உதவுவது ஒரு கலை. திறந்த மனம் வேண்டும். உதவும் மனப்பான்மை வேண்டும். அது உகந்த முறையில் இயங்கப் பயிற்சி பெறவேண்டும். இந்த விஷயத்தில் இங்கிலாந்தில் 80 வருடங்களாக, நாடெங்கும் சராசரி மனிதர்களால், குறிப்பாக, குடும்பத்தலைவிகளால், தன்னார்வத்துடன் இயங்கும் மக்கள் ஆலோசனை மன்றத்துக்கு இணை உலகில் எங்கும் கிடையாது. எனது மனநிறைவுடன் இயங்கும் அமைதி வாழ்க்கை அதற்கு நிரூபணம்.
  7. Take a Break: அவ்வப்பொழுது ஓய்வும், மனமகிழ்ச்சி நிகழ்வுகளும் மிக்க உதவும் என்பது யாவரும் அறிந்ததே.
  8. Do something you are good at: எது செய்தாலும், தனக்கு உகந்ததைச் செய்வது எளிது; நிறைவு தரும். மற்றவர்களுக்கும் உதவும், நான் இந்தத் தொடரில் இறங்கியது போல.
  9. Accept who you are: ஒருவர்போல் ஒருவர் இருப்பது இல்லை. காந்திஜி ‘கத்தியின்றி, ரத்தமின்றி…‘விடுதலைப் புரட்சி நடத்தினார். தமிழ்த்தாத்தா தமிழ் மணத்துடன் வாழ்நாளைக் கடத்தினார். பாமரனும் நல்லாட்சி புரியமுடியும் என்பதைக் காமராஜர் நடத்திக்காட்டினார். அவரவர்கள் இத்தகைய பட்டியலைத் தயார் செய்து கொண்டு, தன்னிலை விளக்கம் அளித்துக்கொள்ளலாம்.
  10. Care for others: சொல்லித் தெரிவதில்லை, மனித நேயம். தொடரின் இறுதி கட்டத்தில் இது விவரமாகப் பேசப்படும்.

-#-

சித்திரத்துக்கு நன்றி:

http://images.fineartamerica.com/images-medium-large/ebullience-regina-valluzzi.jpg

Mental Health Foundation Copyright © 2016.

***

இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *