செண்பக ஜெகதீசன்

இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து            
மாண்ட வுஞற்றி லவர்.   (திருக்குறள்-607: மடியின்மை)

 புதுக் கவிதையில்…

சோம்பலில் சுகம் கண்டு,
செய்யும் கடமையில்
முயற்சியற்றவர்கள்,
பிறர்
இடித்துரைக்கும்
இழிசொல் கேட்கும் நிலையடைவர்…! 

குறும்பாவில்…

செயலில் முயற்சியிலாது
சோம்பியிருப்போர், பிறர்
இடித்துரைக்கும் இழிசொல் கேட்பர்…! 

மரபுக் கவிதையில்…

செய்யும் செயலில் முயற்சியின்றிச்
-சோம்பல் தன்னில் சுகங்காணும்
பொய்யாம் வாழ்வை வாழ்வோர்கள்,
-புவியில் வாழும் காலமட்டும்
மெய்யாய் மற்றோர் இடித்துரைத்தே
-மிகவும் கொடிதாய் இழிசொல்லைப்
பெய்யும் மழைபோல் பேசுகின்ற
-பாழாம் நிலையை அடைவாரே…! 

லிமரைக்கூ…

சோம்பலில்லா முயற்சிவேண்டும் செயலில்,
இடித்துரைப்பார் பலரும், சோம்பியிருப்போர்
இன்னலுறுவர் இழிசொல்லாம் புயலில்…! 

கிராமிய பாணியில்…

சோம்பல்படாத சோம்பல்படாத
செய்யும்செயலுல சோம்பல்படாத,
செய்யணும்செய்யணும் செயலச்செய்யணும்
முயற்சியோடச் செயலச்செய்யணும்…
சோம்பலால செயலச்செய்யாதவன்
எல்லாருக்கும் எளச்சவனாவான்,
ஏளனப்பேச்சிக்கு ஆளாவான்
ஏல்லாருக்கும் கீழாவான்… 

அதால,
சோம்பல்படாத சோம்பல்படாத
செய்யும்செயலுல சோம்பல்படாத…! 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.