Month: October 2018

  • படக்கவிதைப் போட்டி 181-இன் முடிவுகள்

    மேகலா இராமமூர்த்தி

    காளையும் காளையரும் எதிர்நிற்கும் வீரக்காட்சியைப் படமெடுத்து வந்திருப்பவர் திரு.யெஸ்மெக். இப்படக்காட்சியை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்துள்ளவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    முல்லைநில முதுகுடியில் வளர்க்கப்படும் கொல்லேற்றினை அடக்கும் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதலைப் பல்வேறு தடைகளையும் தகர்த்தெறிந்து இன்றுவரை அழியாமல் காத்துவருகின்ற தமிழ்க்குடியினரைப் போற்றுவோம்! அவ்விளையாட்டுக்கான விதிமுறைகளைத் தவறாது பின்பற்றி காளைக்கும் காளையர்க்கும் நேரும் ஊறுபாட்டைத் தவிர்ப்போம்!

    இனி கவிஞர்களின் முறை!

    ஏறுபோல் பீடுநடையிட்டு இப்படக்காட்சிக்குப் பாட்டெழுத வாரீர் பெருந்தகையீர்!

    *****

    விடையை அடக்கவிடாமல் இவ்விடலையரைத் தடுப்பது எது? மனமா… உடலா? என்று கேள்வி எழுப்புகின்றார் திரு. சீனிவாசன் கிரிதரன். 

    விடை அடக்க – காளை தம்
    படை முடக்கத் தோன்றும் பயம்
    இடை மறிக்க இரு இரும்புத் தேர்
    உடை களைந்து களமாட
    தடை எங்கே?
    மனதிலா, உடல் பலத்திலா.

    *****

    காளையும் காளையரும் இணைந்து வளர்த்தெடுத்த தொல்தமிழ் மரபின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் நம் பண்பாட்டின் உச்சம் என்று உவக்கின்றார் முனைவா் ம. இராமச்சந்திரன். இன்றோ நம் பண்பாட்டின் எச்சமும் அதுவே! 

    தொல்குடிச் சமூகத்தின்
    உச்சாணிக் கொம்பன்

    தான் வளா்த்த பண்பாட்டில்
    எழுந்து நிற்கும் இயற்கை
    ஒத்த உள்ளன்போடு
    எண்ணினான் வாழ

    காதலை வெளிப்படுத்த
    கையாண்ட காட்சிகள் பல

    வேர் தேடி ஓடியவன்
    காதலைக் கண்டான் வீரத்தில்
    காட்சிகள் மாறினாலும்
    சண்டைகள் மாறவில்லை

    விலங்கோடு போராடி
    விலங்கோடு உறவாடி
    விலங்கில் வீரத்தை உணா்ந்து
    வீரப் பண்பாடாக வளா்த்தெடுத்த காளை
    பண்பாட்டின் வீரனான காளை

    மனிதனுக்கு மட்டுமல்ல
    ரோசம்
    மாட்டிற்கும்தான்
    தன்னைத் தொட்டவன்
    குடல் சாிக்க வேகத்தொடு

    விவேகமாகத் துள்ளியெழும்
    காளைக்கு வாழ்க்கை!

    பண்பாட்டின் உச்சம்
    உலகுக்கு!

    *****

    ”அஞ்சு கத்தை சோளத்தட்டையைக் கஞ்சமின்றி முழுங்கிப்புட்டுத் தெம்பாக வந்து நிற்கும் காளையிவன், உங்களைப் பஞ்சராக்குமுன் ஓடிடுங்க பிஞ்சுகளே!” என்று  ’பஞ்ச்’ வசன கவிதையால் காளையரை எச்சரிக்கின்றார் ஏ.ஆர். முருகன்மயிலம்பாடி.

    சோரம் போகாத வீரம்
    அக்கட்ட போ அக்கட்ட போ…….
    அம்புட்டுப்பயலும்அக்கட்டபோ!
    திமிலை ஆட்டித் திமிரா வாரான்
    தில்லிருந்தாப் புடிச்சுக்காட்டு!!
    அஞ்சு கத்தை சோளத்தட்டை
    கஞ்சமின்றி முழுங்கிப்புட்டு
    மஞ்சுவிரட்டு நோம்பி போல
    பாஞ்சுவந்து நின்னிருக்கான்..
    பஞ்சராக்கும் முன்னால
    பிஞ்சுகளே ஓடிடுங்க!!!
    அம்புபோல கொம்பு சீவி
    தெம்போட வந்திருக்கான்..
    தள்ளிநில்லு இல்லையுனா
    தண்ணிகாட்டிப்போயிடுவான்!
    தமிழனோட அடையாளம்

    தாங்கி வருகிறான்….
    தம் புடிச்சு நின்னு காட்டு
    தலை வணங்குவான்…
    சிவபெருமான் வாகனம்
    கவனமிருக்கட்டும்….
    எவ்வளவோ தடைகளையும்
    எதித்து ஜெயிச்சவன்!.
    கல்வி செல்வம் இருந்தாலும்
    துள்ளவேணும் வீரம்..
    ஜல்லிக்கட்டு அருமையாக

    சொல்லித்தரும் பாடம்!

    *****

    ”மாட்டை அடக்கி மாந்தர் விளையாடிய வீர விளையாட்டு இது! இதை விளையாடுங்க…உடல் பலமாகுங்க!” என்று இளைஞர்கட்கு நம்பிக்கை ஊட்டுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கவனமாய் விளையாடுவீர்…

    பாயும் காளையை அடக்கிடவே
    பதுங்கி நிற்கும் காளையரே,
    மேயும் மாட்டைப் பழக்கியேதான்
    மாந்தர் அடக்கி விளையாடியது
    தூய தமிழர் வீரமானது
    தரணி யெல்லாம் போற்றிடவே,
    ஓய வேண்டாம் விளையாடுவீர்
    உங்கள் நலனுக் கிடர்வராதே…!

    *****

    ”சாதுவாயிருக்கும் காளை சீற்றம் அடைந்தால் மதயானையாய் மாறும்; அனைத்தையும் தவிடுபொடியாக்கும்” என்கிறார் திரு. ஆ. செந்தில்குமார். 

    காளையும்.. காளையரும்..
    ஆற்றல் மிகுந்திருக்கும்.. ஆனாலும் பரமசாது..
    சீற்றம் அடைந்துவிட்டால்.. தோற்றத்தில் மதயானை..
    பக்குவம் அடைந்துவிட்டால்.. ஆக்கப்பணிகட்குப் பேருதவி..
    அக்கணமே தவிடுபொடி.. அமைதியை இழந்துவிட்டால்..

    *****

    எந்தப் பயமுமின்றி எதிர்த்துவரும் காளைதனை எந்திரத்தின் பின்னொளிந்து என்ன செய்யப் போகின்றீர்? சல்லிக்கட்டுத் தடைநீங்கத் தடியடி ஏன் பட்டுலைந்தீர்? பாயடா காளை முன்னே பாய்ந்ததன் கொம்பு பற்றிச் சாயடா! என்று மஞ்சு கண்டு அஞ்சும் காளையர்க்கு நெஞ்சுரம் அளிக்கின்றார் திரு. சித்திரவேலு கருணானந்தராஜா. 

    மஞ்சினைக் கண்டு அஞ்சிடும் காளைகாள்…….
    பாய்ந்து வரும் காளைகண்டு பயந்து நிற்கும் காளைகளே
    ஓய்ந்து விட்டதா உங்கள் உள்ளத்தின் தற்றுணிபு?

    கல்லிப் பருவதத்தைக் கண்டதுபோல் சுண்டெலியை
    ஜல்லிக்கட்டின்று தமிழரடைந்த சொத்து.
    கொல்லுகிற பொஸ்பரசுக் குண்டெறிந்து எம்மினத்தை
    வல்லார் அழிக்கையிலே வாய்மூடி நின்றவர்கள்
    சொல்லாமல் வந்தார் துணிவாய்த் தம் பங்களித்தார்.
    நல்ல சகுனமிது நம்மினத்துக் கென்றிருந்தோம்.

    எந்தப் பயமுமின்றி எதிர்த்து வரும் காளைதனை
    எந்திரத்தின் பின்னொளிந்து என்ன செய்யப் போகின்றீர்?
    உற்ற நண்பன் பின்னே ஒளிப்பதுதான் வீரமென்றால்,

    விழலுக் கிறைத்தது போல் வீரத்தை வீண்டித்து
    பழம் படுபனையின் கிழங்கு பிளப்பதற்கு
    ஆப்பு மொங்கான் கோடரியை ஆயுதமாயக் கொண்டதுபோல்

    ஜல்லிக் கட்டுக்குத் தடைநீக்கம் பெற்றிடற்காய்
    சட்டமொன்றைக் கேட்டு தடியடியேன் பட்டுலைந்தீர்?

    மஞ்சுவைக் கண்டு அஞ்சிடும் இளைஞனே நீ
    சேயெனப் பசுவைப் போற்று சிரம்பணிந்ததனையேற்று
    வாயுறையாகப் பொங்கல் வழங்கி நற் பட்டுச் சாத்து
    தூய நல்லன் பினோடும் துணிவொடும் வீரத்தோடும்
    பாயடா காளை முன்னே பாய்ந்ததன் கொம்பு பற்றிச்
    சாயடா அதனையுந்தன் சமர்த்தினை உலகு காண.
    வாயிலா நண்பன் மஞ்சு வதையுறாததனைப் பற்றி
    தாயென அன்பு செய்நீ தரணியுன் பண்பைக் காணும்.

    ஆய வெம் கலைகளுள்ளே அதுவுமொன்றிது வேறில்லை.
    நேயமும் தயையுமெங்கள் நிலத்தினில் புதிதோ இல்லை.

    *****

    ”கோபமே கொம்புகளாய்க் கொண்டு எமைத் தாக்க வரும் காளையே! யாம் கொள்ளையரோ காமுகரோ அல்லர்; உன்னோடு யாம் நிகழ்த்தும் வீரவிளையாட்டைக் காக்க மெரினாவில் கூடிய நல்ல(வ)ர்! எமைக்கண்டு சீறாதே…செல்!” என்று உண்மை விளம்புகின்றார் திரு. கொ.வை. அரங்கநாதன். 

    கோபமே கொம்புகளாய்,
    குருதிச் சிவப்பே கண்களாய்,
    குதித்தோடித் தாக்க வரும் காளையே
    நீ எங்களைத்
    தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்!

    விடிந்தும் விடியாப் பொழுதில்
    வாசலில் நீர் தெளித்துக் கோலமிடும்
    பெண்கள் தாலிப் பறித்தோடும்
    கொள்ளையர்கள் அல்ல நாங்கள்!

    பேருந்துக் கூட்ட நெரிசலிலும்
    விழாக் கடைவீதி என்றெங்கும்
    பெண்களைச் சீண்டுகின்ற
    காமப் பித்தர்கள் என்றா
    நீ எங்களைக் கருதிவிட்டாய்?

    நெருக்கடி மிகுந்த சாலைகளில்
    நடப்பவர்கள் நடுங்கியோட
    வாகனப் போட்டி நடத்தும்
    விபரமறியா விடலைகள் என்றே
    நீ நினைத்து விட்டாய் போலும்!

    உனக்கும் எங்களுக்குமான
    வீர விளையாட்டை மீட்டெடுக்க
    மெரினாவில் கூடிய பெருங் கூட்டத்தின்
    சிறு அங்கங்கள் நாங்கள்!

    ஆராய்ச்சி மணி அடித்த
    ஆரூர்ப் பசுவின் வாரிசு போலும் நீ
    அதனால்தான் அநீதி கண்டு
    சினமுற்றுச் சீறுகிறாய்!
    தவறேதும் நாங்கள் செய்யவில்லை
    தயவு செய்து திரும்பி விடு!

    *****

    கருத்தோட்டமும் கற்பனைச் செறிவுங்கொண்ட அற்புதக் கவிதைகளைப் படைத்தளித்திருக்கின்றீர்கள் கவிவலவர்களே! உங்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பதைக் காண்போம்!

    நாட்டுக் காளையின் பெருமை..!
    காளையரைக் கண்டால் ஜல்லிக் கட்டுக்
    ……….காளையும் தன்காலை யுதைத்துத் திமிரும்.!
    பாளைமடல் போன்றதன் கொம்பால் மணற்
    ……….பாங்கான இடத்தில் முட்டி முறுக்கேற்றும்.!
    தோளான அதன்திமில் கர்வ மிகுதியாலது
    ……….தொய்ந்துயர சற்றேபக்க வாட்டில் சாயும்.!

    வேளை வரும்போது வீரத்தை நிரூபிக்க
    ……….வாடிவாசல் திறக்கும் வரைக் காத்திருக்கும்.!

    முட்டிச் சாய்ப்பதற்கென்றே வாழப் பழகிடும்
    ……….மூர்க்கத்தனமாய் வாய்பிளந்து குரலெழுப்பும்.!
    கட்டான இளைஞர்களைக் கண்டு விட்டால்
    ……….கட்டுக் கடங்காமல் கூட்டத்துள் சீறிப்பாயும்.!
    கிட்ட யாரையும் நெருங்கவிடாமல் துரத்தும்
    ……….கிட்டாத பெருமையெலாமதற்கு வந்து சேரும்.!
    போட்டியென வந்துவிட்டால் போதும் அது

    ……….மாட்டு வண்டியாயினும் மகிழ்ந்தே இழுக்கும்.!

    வாசுதேவனுனை மேய்த்த அருஞ் செயலால்
    ……….வண்டி யிழுக்கும் உனக்குப் பெருமையுண்டு.!
    ஈசனும் விரும்பியுனை வாகன மாக்கியதால்
    ……….பூசைக்குமுன் உனக்குத்தான் முதல் மரியாதை.!
    பாசமுடனுனை அரவணைத்துப் பழகி விட்டால்
    ……….பகுத்தறி வென்பதுனக்குத் தானாக வந்துவிடும்.!
    நேசிக்கும் உழவனுக்கே உயர் நண்பனானதோடு
    ……….நெஞ்சுரத்துக்கு நீயேயோர் சிறந்த உதாரணம்.!

    ”நாட்டுக் காளையே! கட்டான இளைஞர்களைக் கண்டால் நீ கட்டுக்கடங்காமல் சீறுவாய்; பாசத்தோடு அணைத்துப் பழகிவிட்டால் பகுத்தறிவுடையதாய் மாறுவாய்; நீ ஈசனுக்கு வாகனம்; உழவனென்னும் நேசனுக்கு நண்பன்” என்று காளையின் பெருமையினைக் கவினுறத் தன் பாட்டிலே காட்டியிருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181005 Yogakshemam Vahamyaham graphite charcoal A4 lr

    சாவிந்த மேனியை சந்திக்கும் வேளையில்
    காபந்து செய்யுமோ கற்றகல்வி -கோவிந்த
    நாமத்தில் மூட நினைவே நிலை:யோகச்
    ஷேமத்தில் சேர்க்கும்மச் சொல்…கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180917 Radhakrishna lr

    யிங்யாங் காக இணைப்பாம் இருவரும்,
    சங்கரன் சக்தியுமை ஜாடையில் -இங்கரன்
    கண்ணபிரான் சக்தியுமைப் பெண்ராதை: க்ரேசியின்
    எண்ணமிது வண்ணம்கே சவ்…..கிரேசி மோகன்…..!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181007 Bhaja Govindam lr A4 72 dpi

    ஸஹஸ்ராஹா ரத்தினில் ஸவ்யஸாஸி(அர்ஜுன்) பாம்பாய்
    அஹஸ்மாத்தாய் ஆடிய(காளிய நர்தனம்) ஆட்டர்(கோவிந்தர்)- புஹும்கண்ணன்
    நாமத்தைப் பார்த்தனே நாள்தோறும் சொல்லிடுவாய்
    ஷேமத்தை சேர்க்குமச் சொல்….!(1)….!

    நாகமாம் குண்டலினி நாட்டம் அவருக்கு(கோவிந்தர்)
    நாமத்தைக் கூறிடுவாய் நல்மனமே -ஜாமம்,
    பகலென்று பாரபட்ஷம் பாராது நாவே
    புகலந்த கோவிந்தன் பேர்….(2)….கிரேசி மோகன்….!

    முன்பு எப்பவோ எழுதியது….கேசவ் கிருஷ்ணா பயனுறச் செய்கின்றார்….இசையமைத்துப், பாடிய ‘’குருகல்யானின்’’பஜகோவிந்தம் இணைத்துள்ளேன்….!

    KRISHNA FOR TODAY….!
    —————————————————-
    சொல்கோவிந்தம் சொல்கோவிந்தம்
    சொல்கோவிந்தம் புல்மனமே
    வல்லான் காலன் வருகின்ற நேரம்
    தொல்காப்பியமா துணையாகும்….(3)….!

    வெல்வாய் மூடா செல்வம்சேர்க்கும்
    வேட்கை அதற்கு மாறாக
    ஈசன் விதித்த இயல்பாம் தொழில்சேர்
    காசுபணம் கொள் சீராக….(4)….!

    காமினி கொண்ட கவர்ச்சிகள் மாயை
    மாமிசம் ரத்தம் இளக்காரம்
    நாமினி வாழ்வோம் நல்லோர் சேர்க்கையில்
    தூமணி மாட விளக்காக….(5)…!

    தாமரை இலைமேல் தத்தளிக்கும் நீராய்
    நாமுறை வாழ்க்கை நித்யமல்ல பாராய்
    பாமரப் பற்றும் பிறவிப் பிணியும்
    சாமரம் வீசும் சண்ட மாருதம்….(6)….!

    கூட்டினுள் மூச்சு குடியுள்ள வரையில்
    வீட்டினர் கேட்டு விசாரிப்பர்
    மாட்டிய மேனி மண்விழத் தாலி
    பூட்டிய மனையாள் பயமுறுவள்….(7)….!

    பிள்ளையில் ஆட்டம் பருவத்தில் நாட்டம்
    கொள்ளை அழகு கன்னியர் கூட்டம்
    வெள்ளையில் சொள்ளையில் வாட்டமாய் மூட்டம்
    உள்ளிறை தொட்டதில்
    எவர்கிங்கு தேட்டம்….(8)….!

    சோதரா சிந்திப்பாய் சீதனமாய் வந்த
    மாதரசி மகன் யாரென்று
    பூதலம் விசித்ரம் யாதுந்தன் சரித்ரம்
    ஆதலால் ஆய்ந்து அதைத்தீர் நீயின்று….(9)….!

    கற்றோர் சேர்க்கை பற்றினைப் போக்கும்
    பற்றது போக பரம வைராக்யம்
    உற்றிடும் அறிவால் மற்றவை பூஜ்யம்
    பெற்றிடுவாய் நீ மோட்ச சாம்ராஜ்யம்….(10)….!

    தேய்ந்தபின் தேகம் காமுறலாமோ
    காய்ந்திடும் குட்டைக்கு காகம் வருமோ
    பாய்ந்திடும் சுற்றம் பணமுள்ள வரையில்
    ஆய்ந்திடத் தத்துவம் சேர்க்கும்அக் கரையில்….(11)….!

    ஆள்படை செல்வம் இளமையின் கர்வம்
    தூள்படும் இமைக்கும் காலத்தில் சர்வம்
    நாள்பட அனைத்தும் மாயைஎன்(று) உணர்ந்து
    தாள்கிட தெய்வத தத்துவம் நினைந்து….(12)….!

    திடமாய் பொருள்சேர் உடலுள்ள வரையில்
    கடல்போல் கூட்டம் அலைமோதும்
    முடமாய் மூப்பில் ஜடமானவர்க்கோ
    அடடா கூறிட ஆளேது….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181003 Victory where there is Krishna and Arjuna-wcol A4 Gita 18:78

    இல்லாமல் நாமிருவர் என்றும் இருந்ததில்லை
    இல்லா திருப்பதே இங்குண்மை ! -வல்லானென்
    வேத மிதையுணர்ந்தால் வேதனைகள் இல்லைகாண்
    பாதமதைப் போரில் பதி”….!

    ”பார்முழுதும் நின்று பரந்த பரம்பொருள்
    ஓர்நாளும் மாறா(து) ஒழியாது ! -யார்வாளும்
    இத்தை அழித்தல் இயலா தெனவென்று
    சத்தை அறிவாய் சகா”…கிரேசி மோகன்….!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (282)

    இந்த வார வல்லமையாளராக ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவனை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. சங்க காலத்தில் பேச்சுமொழியில் இருந்து எழுத்து மொழியாக மாறுவதற்குப் பிராமி எழுத்து அடைந்த மாறுதல்களையும், அதற்கான படிநிலை வளர்ச்சிகளையும் கண்டு பெருநூலாகப் படைத்தவர். சிந்து சமவெளி ஆய்வு தொல்திராவிட மொழி பேசுபவர்களால் ஆளுமை செய்யப்பட்ட நாகரீகம் என்பதனைப் பற்றி பல ஆழமான கட்டுரைகளை அரை நூற்றாண்டு காலமாக வெளியிடும் திரு. ஐராவதம் மகாதேவம் அக்டோபர் 2-ம் தேதி அன்று 88 வயது பூர்த்தி ஆகி, 89-ஆம் ஆண்டில் புகுகிறார். அன்னார் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வல்லமை வாழ்த்தையும், வணக்கத்தையும் தெரிவிக்கிறது

    .

    அக்டோபர் 2, 1930-இல் மண்ணச்சநல்லூரில் பிறந்தார். இவர் திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோஸப் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். 1954-இலிருந்து 1981-வரை இந்திய ஆட்சிப் பணியிலும், 1987 – 1991 வரை தினமணி இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார். இவரது முதல் புத்தகம் 1977-ல் வெளியானது. ‘தி இண்டஸ் ஸ்கிரிப்ட்: டெக்ஸ்ட்ஸ், கன்கார்டன்ஸ் அண்ட் டேபிள்ஸ்’ என்ற நூல் சிந்து சமவெளி எழுத்தாய்வுகளுக்கு முக்கியமான தூண்டுகோல் ஆயிற்று. பின்னர், தமிழ் பிராமி கல்வெட்டுகளை முழுமையாக ஆராயும் நூலை 2003-ல் எழுதினார். கல்வெட்டியலைப் போன்றே ‘தினமணி’ இதழின் ஆசிரியராக (1987-1991) பணியாற்றிய காலகட்டத்தில் இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு உதவியுள்ளார்.

    இந்திய பழைய வரலாற்றை அறிந்துகொள்ள, சென்ற இரண்டு நூற்றாண்டுகளில் மூன்று மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன:
    (1) இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் – சர் வில்லியம் ஜோன்ஸ் – 1786.
    (2) தமிழ் அதன் திராவிட மொழிக் குடும்பம் – பிரான்சிஸ் வைட் எல்லிஸ் – 1816.
    (3) சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிப்பு – சர் மார்ட்டைமர் வீலர் – 1924.

    திராவிட மொழிக்குடும்பம் என்ற மொழியியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்தவர் F. W. எல்லிஸ். சென்னையில் கலெக்டராக இருந்தவர். அவர் எழுதிய திருக்குறள் மொழிபெயர்ப்பைச் சொல்லின் செல்வர் ரா, பி. சேதுப்பிள்ளை மறுபதிப்புச் செய்தார். எல்லிஸ் 300 நூல்களில் இருந்து (இப்போது அழிந்துபோன வளையாபதிக் காப்பியம் உட்பட!) மேற்கோள் காட்டியுள்ளார். அவர் 200 ஆண்டுகள் முன்னர் திருவள்ளுவர் சமணர் என்று ஆய்ந்து, சென்னை அரசாங்கத்தால் சமணர்கள் திருவள்ளுவரை வழிபட்ட உருவத்தைத் தங்க நாணயமாக வெளியிட்டார். அதனைக் கண்டறிந்து ஐராவதம் மகாதேவன் உலகறியச் செய்தார். திருவள்ளுவரின் திருமேனி தங்கிய தங்கக் காசு:
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=524
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=539

    தமிழ் பிராமி எழுத்து வட இந்தியாவில் இருந்து கர்நாடகம் வழியாக சமணர்களால் தமிழகம் வந்த வரலாற்றையும், தமிழுக்கு ஏற்ப மாறும் படிநிலைகளையும் நன்கு ஆராய்ந்து சங்க காலக் கல்வெட்டுகளை யாரும் படித்து அறியும் துறையைச் செய்தவர் ஐராவதம். சம காலக் காசுகளில் உள்ள பிராமிக்கும், தமிழில் புள்ளி ஏற்படும் கல்வெட்டுக் காலத்தைக் கணித்து, பல நூற்றாண்டுகள் [பார்க்க: கமில் சுவெலெபில் கூறும் தொல்காப்பியக் காலக்கோடு [1] ] வளர்ந்த தொல்காப்பியத்தின் முக்கியக் காலகட்டம் என்பது கி.பி. 2-ஆம் நூற்றாண்டு என அறிவியல் ரீதியாகத் தெளிவித்தவர் ஐராவதம் ஆவார். புள்ளிக் கோட்பாடு தமிழ் பிராமியில் ஏற்பட்டதால் தான் தொல்காப்பியர் அதுபற்றிப் பேசுகிறார். புள்ளிக் கோட்பாட்டால் தான் ஏனைய இலிபிகள் போலன்றி, தமிழில் கூட்டெழுத்துகள் இல்லாமல் எளிதான எழுத்தாகத் தமிழ் விளங்குகிறது, அதனால்தான், முதலில், தமிழுக்கு மற்ற இந்திய மொழிகளுக்கு முன்னரே தட்டச்சு, கணினியில் எழுதுரு ஏற்பட்டன. தினமணி பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது, முக்கிய மாற்றங்களைக் கொணர்ந்தார். உ, ஊகார உயிர்மெய் எழுத்துகளும், மலையாளத்தார் செய்வது போல, பெரியார் பரிந்துரை ஏற்கப்பட்டு, பிரித்து எழுதப்படலாம் என்ற கொள்கையுடையவர் ஐராவதம்.

    https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/Tamils-were-never-lsquoAryanisedrsquo/article16885688.ece

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Notes:

    [1]  K. Zvelebil wrote on the question of the date of Tolkappiyam in pp. 138-147, Smile of Murugan, 1973.

    (a) “The earliest, original version of the Tolkappiyam belongs to the ‘pre-Cankam’ period; the oldest layer of the grammar is somewhat earlier in time than the majority of extant classical Tamil poems.”
    (b) Approximately the 5th century AD is fixed by him “as the earliest possible date of Porulatikaram, and as the date of the final redaction of the Tolkappiyam.”
    (c) “Thus, the nuclear portions of Tolkappiyam were probably born sometime in the 2nd or 1st century BC., but hardly before 150 BC… The final redaction probably take place before the 5th century AD., so that the ultimate shape of the suutras as we have them before us is probably not earlier than the middle of the first millennium of our era.”

     

    It is sad news that Sri. Iravatham Mahadevan is no more. On the day he passed away, I wrote this note in googlegroups.

    தொல்லியல் மேதையாக விளங்கிய ஐராவதம் மகாதேவன் இன்று காலமாகிவிட்டார். அவரது இடத்தை நிரப்ப எதிர்காலத்தில் தமிழர்கள் தோன்றவேண்டும். சங்க கால தமிழ் கல்லெழுத்துக்கு “தமிழ் பிராமி” எனப் பெயரிட்டு அழைத்தவர் அவரே. விஞ்ஞானப் பூர்வமான முறையில் தொல்காப்பியர் காலத்தைப் புறச்சான்றுகள் மூலம் நிறுவினார். அதற்கு அவர் தமிழ் பிராமியில் புள்ளி உருவாகும் கல்வெட்டுகள், நாணயங்களைப் பயன்படுத்திய முறை வெகு நேர்த்தியானது.

    நான்கைந்து முறை ஐராவதத்தைச் சந்தித்து இருக்கிறேன். எப்பொழுதும் எங்கள் தாத்தா அவரது நண்பர் என்பார். ‘காலை எழுந்தவுடன் காப்பி’ … என்று பாரதியார் பாட்டை மாற்றி காப்பி குடிக்கக் கேட்பார். இரா. நாகசாமி, ஐராவதம் இருவரும் 1930-ல் பிறந்தவர்கள். ‘கடலோடி’ நரசையா ஐராவதத்தின் பிறந்தநாளை நினைவூட்டினார். அதனால் ஐராவதம் மகாதேவன் வாழ்ந்த காலத்தில் வல்லமை இ-இதழிகையில் வல்லமையாளராக அவரது கடைசி பிறந்தநாளின் போது அறிவிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. http://www.vallamai.com/?p=88261

    தமிழ் பிராமி எழுத்துக்கு உயிர்கொடுத்த ஐராவதம் மகாதேவன் மறைவு
    https://www.bbc.com/tamil/india-46344293

    Iravatham Mahadevan, leading scholar on the Indus Valley and Tamil Brahmi scripts, passes away
    https://www.thehindu.com/news/national/tamil-nadu/iravatham-mahadevan-leading-scholar-on-the-indus-valley-and-tamil-brahmi-scripts-passes-away/article25595085.ece

    ஐராவதத்துடன் போனிலும், மின்னஞ்சலின் வாயிலாகவும் 22 ஆண்டுக் காலம் தொடர்பில் இருந்தேன். இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்திலும், திராவிட மொழிகளிலும் நதிகளின் பெயர்கள் பெண்ணாக அமைவதைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளோம். அப்போது, சி-டமில் குழுவிலே, ஏற்றை என்பது ஆண் பனை, பெண்ணை என்பது பெண்பனை. பயன் கருதி, மாடு (cf. மடி) என்னும் பெண் பசுவுக்கான சொல், வேளாண்மை தொழிலர்களால் காளை(அ) எருதுக்கும் சில சமயங்களில் வருவதுபோல் என்ற கருத்தை மிகப் பாராட்டினார். பின்னர் எழுந்ததே விரிவான விளக்கங்களுடன் எழுதிய பதிவு:
    ஏற்றை (ஆண்பனை), பெண்ணை (பெண்பனை) – பனை மரங்களில் பால் பாகுபாடு. ழான் செவ்வியார் மறுமொழி காண்க.
    http://nganesan.blogspot.com/2011/06/pennai-female-palmyrah-tree.html

    கரிய பெண்ணை என்னும் நதிப்பெயர் கிருஷ்ணா (கிருஷ்ணவேணீ) என சம்ஸ்கிருதமயப்படுத்தப் பெற்ற பெயர். பழைய தமிழ்ப் பெயரைக் கம்பன் பாடியுள்ளான். ஹெச். லூடர்ஸ், மிகப் பழைய பிராகிருத சிலாலிகிதங்களின் நூலை வெளியிட்டார். அதில் “நோடகிரீசுவரசுவாமி” என கிருஷ்ணா (பெண்ணை ) நதி தோன்றுமிடத்தில் உள்ள சிவன் பெயர் நாளகிரி/நாடகிரி தானா என வினவியபோது, “இருக்கலாம். நோ நா இரண்டுக்கும் வித்தியாசம் மிகக் குறைவு பிராமியில். எஸ்டாம்ப்பேஜ் பார்க்கணும்” என்றார்.

    பொள்ளாச்சியில் ஸப்-கலெக்டர் பணி தான் அவரது முதல் வேலை. 1967-ல் தேர்தல் ஒரு சவாலாக அமைந்தது என்று கூறியுள்ளார். சிந்து கன்கார்டன்ஸ் நூல் எழுத, வா. செ. குழந்தைசாமியையும், ஐராவதத்தையும் அழைத்து கணினி கிண்டி பொறியியல் கல்லூரி உதவிக்கு பரிந்துரை செய்வதும், குகைகளில் பிராமி எழுத்துக்களைப் படிக்க சாரங்களை ஏபிடி கம்பெனியார் கட்டித் தந்து உதவியதும் மறக்க முடியாது என்பார்.

    பாங்காக்கில் 2016-ல் “மழுவாள் நெடியோன்” என்னும் Anthropomorpic Axe வடநாட்டில் வருணனுக்கு உண்டான வடிவம் தென்னகம் இரும்புக் காலத்தில் வருவதும், மிகப்பெரிய சிற்பமாக வடிவெடுப்பதும் பற்றி எழுதிய கட்டுரையைக் கூர்ந்து படித்து, “very deep obsevation” என்று குறிப்பிட்டு எழுதினார். ஐராவதத்தின் மின்னஞ்சல்களை முழுதும் படித்து ஒரு கட்டுரை எழுதவேண்டும்.

    2 மாதம் முன்பு தான் நண்பர் ஆர். பாலகிருஷ்ணன் சொற்பொழிவுக் காணொளியில் ஐராவதத்தைக் கண்டேன். உடல் மிக ஃப்ராஜைல் ஆக உள்ளது என எழுதியிருந்தேன். அதைக் குறிப்பிட்டு திரு. நரசையா அவர்களுக்கு கைப்படக் கடிதம் எழுதியிருந்தார். அதை இணைத்துள்ளேன். அவரது வாழ்நாள் பணியைக் குறிப்பிடும் இக் கடிதம் தட்டச்சாக்கணும்.

    தமிழின் தொன்மையை சிந்து சமவெளி ஆய்வுகளாலும், வடக்கே இருந்து வந்த ப்ராமி எழுத்து தமிழுக்காக மாறிய வரலாற்றையும் ஆராய்ந்த பெருமகன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களுடன். ~NG


    Share
  • கல்வி

    -கவிஞர் பூராம்

    பிஞ்சு விரல்கள்
    வலி தாங்காமல் மனம்

    கண்களில் குளம்
    வலிந்தோடும் கன்னத்தி்ன் நீா்
    சுட்டது என்னை

    கூன்விழுந்த முதுகு
    கவிழ்ந்த தலை
    நம்பிக்கையில்லாக் கண்கள்

    பேச மறுக்கும் வாய்
    ஓலமிடும் மௌனம்
    அவமானத்தில்  நான்

    உண்ண பசியில்லை உண்கிறேன்
    சிந்திக்க மனமில்லை படிக்கிறேன்

    எழுத்துக்களோடு ஓயாத போராட்டம்
    சொற்களோடு முடிவில்லா தொல்லை

    அன்பாய் சில பேச
    பாசமாய் பகிர்ந்துண்ண
    ஏது நேரம்
    படிக்கிறார்கள் பிஞ்சுகள்

    அம்மாவின் ஆசைக்காக
    அப்பாவின் அன்புக்காக

    Share
  • நானோர் இழப்பாளி

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
    ++++++++++++++++

    நானோர் இழப்பாளி !  நானோர் இழப்பாளி !
    வெளிப்புறம் தெரிவது போல் நானில்லை !
    நேசித்த பெண்டிரில் நான்  வென்றது,
    நேசித்த வனிதரில் நான் இழந்தது,
    எல்லோரிலும் ஒருத்தியை மட்டும்
    இழந்தி ருக்கக் கூடாது நான் !
    கோடியில் ஒருத்தி அவள் !
    எனக்குத் தெரிந்திருக்க வேண்டும்,
    இறுதியில் அவளே  வென்றாள்.
    தோற்றது நான் !
    நானோர் இழப்பாளி !
    ஒட்டி இருந்தவளை இழந்தேன் !
    நானோர் இழப்பாளி !
    வெளிப்புறம் தெரிவது போல் நானில்லை !

    நான் சிரித்து வந்தாலும்
    நகைச்சுவை நாயகன் இல்லை !
    முகமூடிக்குக் கீழே
    அழுது கொண்டிருக்கிறேன் !
    வானிருந்து மழை பொழிவது போல்
    வீழும் என் கண்ணீர்த் துளிகள் !
    நான் அழுவது எனக்கா ?
    இல்லை அவளுக்கா ?
    தவறென்ன செய்தேன்
    தகாத இந்த தலை விதிக்கு ?  
    தாமத மானதென நோகிறேன் !

    கர்வம் வரும் முன்னே !
    கவிழ்ச்சி வரும் பின்னே !
    கதை சொல்வேன் உமக்கெல்லாம்,
    கவனம் வைப்பீர்  
    இழப்பு எதிரே வரும் முன் !
    இழப்பாளி  நான் !  
    ஒட்டி இருந்தவளை இழந்தேன் !
    இழப்பாளி நான் !
    வெளிப்புறம் தெரிவது போல் நானில்லை !

    Share
  • படக்கவிதைப் போட்டி – 182

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    வெங்கட்ராமன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (13.10.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா? – ADHD (Attention deficit hyperactivity disorder)

    பவள சங்கரி

    கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா? – ADHD (Attention deficit hyperactivity disorder)

    21ஆம் நூற்றாண்டின் நவீன உலகின் இயந்திரத்தனமான வாழ்க்கை உலகளவில், தனி மனித வசதி வாய்ப்புகளையும், பொருளாதார முன்னேற்றத்தையும் வாரி வழங்கியிருப்பதை யாரும் மறுக்கவியலாது. உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்ட நிலையில் கலாச்சாரப் பரிமாற்றங்களும் வெகு இயல்பாகிவிட்டதைக் காண முடிகின்றது. இதனால் நன்மைகள் எந்த அளவிற்கு உள்ளதோ அதே அளவிற்கு சில பிரச்சனைகளையும் எதிர்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. குறிப்பாக குழந்தைகளின் மீது திணிக்கப்படும் சுமைகள் சற்று அதிகம் என்றே தோன்றுகிறது. விடுமுறைகளைக்கூட முழுமையாக அனுபவிக்க முடியாத வகையில் அவர்களின் ஓட்டம் அந்த குழந்தைத் தன்மையையே பறித்து விடுவதையும் காணமுடிகின்றது. தன் குழந்தைதான் எல்லாவற்றிலும் முதன்மையாக இருக்கவேண்டும் என்ற பேராவல் பல பெற்றோர்களுக்கு ஒரு போட்டி மனப்பான்மையை உருவாக்கிவிடுகின்றது. இதன் விளைவாக தாயின் வயிற்றில் கரு உருவாக ஆரம்பித்த உடனே குழந்தையின் மூளை வளர்ச்சிக்காகவும் சேர்த்து மருந்துகளை எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும் பழக்கம் இன்று பரவலாகிக் கொண்டிருக்கிறது. இயற்கைக்கு மாறான இது போன்ற செயல்பாடுகளால் தற்போது வருகிற நோய்களும் நவீன மருத்துவத்திற்கு சவாலாகவே இருக்கின்றன.
    குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ADHD (Attention deficit hyperactivity disorder) என்ற கவனப் பற்றாக்குறை அறிகுறிகள் குறித்த ஆயிரக்கணக்கான அதி நவீன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் இன்று வரை இது குறித்து பொது மக்களுக்கு ஒரு தெளிவான விழிப்புணர்வு இல்லை என்பதே வருத்தத்திற்குரிய செய்தி. இத்தகைய நீண்ட ஆராய்ச்சி வரலாறு இருந்த போதினும், ADHD குறித்து பல முரண்பாடுகள் மற்றும் தவறான வழிகாட்டுதல்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது. ADHD ஒரு பொதுவான குழந்தை பருவ உளவியல் மன நோய் அறிகுறியாகவும், வலுவான மரபணு, நரம்பியல்-உயிரியல், மற்றும் நரம்பியல் அடிப்படையிலான குறைபாடாகவும் உள்ளது . இது கவனக்குறைவு மற்றும் உயர் செயல்திறன் ஆகியவற்றின் அறிகுறிகளால் வகைப்படுத்தப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) hyperkinetic நோய் (HD) என்ற பெயரில், இந்த நோய்க்கான ஒத்த செயல்பாடு அளவுகோல்களை பட்டியலிடுகின்றது.

    ADHD என்ற குறைபாடு பற்றி எப்படி கண்டறியப்பட்டது என்றும் இது குறித்து பலதரப்பட்ட கருத்துகள் உலவுவதன் காரணம் குறித்தும் அறியும் முன்பு இதன் வரலாற்று பின்புலம் குறித்து சற்றேனும் அறிதல் அவசியம். வெகு சமீப காலமான 1987 களில் தான் இந்த குறைபாடு அதிகமாகக் கவனம் கொள்ளப்பட்டுள்ளது. முதலில் 3% அமெரிக்கக் குழந்தைகள் இந்த கவனச் சிதறல், அதீத செயல்பாட்டுக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். 2000த்தில் இந்த எண்ணிக்கை 7% ஆக எகிறியது. இதுவே 2014 களில் 11% ஆக எச்சரிக்கை மணி ஒலித்தது. இந்த குறைபாடுகளின் அறிகுறிகளுடன் போராடுவதற்காக, பாதிக்கப்பட்ட 3/2 குழந்தைகளுக்கு மிக சக்தி வாய்ந்த மருந்துகளான Ritalin மற்றும் Adderall போன்ற மருந்துகள் மிகக் குறைந்த பருவமான மூன்று வயதிற்குள்ளாகவே கொடுக்கப்பட்டுள்ளன. இதே காலகட்டங்களில் பிரான்சு, பின்லாந்து, இங்கிலாந்து, சப்பான் போன்ற நாடுகளில் 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தது ஆச்சரியமேற்படுத்தியது. மற்ற மேலை நாடுகளைக் காட்டிலும் அமெரிக்கக் குழந்தைகளை மட்டும் அதிகமாகப் பீடித்திருக்கும் காரணங்களையும் மற்றும் மூளையில் இயற்கையாகவே பிறவியிலேயே ஏற்படும் பிரச்சனையா என்று கண்டுபிடிப்பதற்கும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. குழந்தைகளின் இந்த குறைபாடு மரபு வழியில் வருவதா அல்லது குழந்தைகளிடம் இயற்கையாகத் தோன்றும் பழக்க வழக்கங்களா அல்லது அதிக மன அழுத்தம் ஏற்படுத்தும் எதிர்வினையா போன்ற வினாக்கள் பெரும் சவாலாக இருந்துள்ளன. இதைவிட முக்கியமான சவாலாக இருந்தது, அதிக சக்தி வாய்ந்த மருந்துகளிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி, குறைபாடுகளையும் சரி செய்வதற்கு மாற்று உபாயங்கள் ஏதும் உள்ளனவா என்பதைக் கண்டறிவதுதான். இந்த வினாக்களுக்கான விடையாக, மெரிலைன் வெட்ஜ் என்ற ஆய்வாளர், ‘இன்றைய உளவியல்’ என்ற சஞ்சிகையில் வெளியிட்ட, “பிரான்சு நாட்டு குழந்தைகள் மட்டும் ஏன் ADHD யால் பாதிக்கப்படவில்லை” என்ற தனது ஆய்வுக் கட்டுரையில், சிகிச்சை முறைமைகள், வளர்ப்பு முறை, உணவுப்பழக்கம், கல்வி முறை போன்ற ஆக்கபூர்வமானவற்றை விவாதித்துள்ளார். இந்த ஆய்வுகள் பிரான்சு நாட்டிற்கு மட்டுமன்றி இந்தியா போன்ற நாடுகளிலும் இது போன்று பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக மிக அரிதாக இருந்த காலகட்டம் அது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போதய காலகட்டங்களில் இது போன்ற குறைபாடுகள் இந்தியக் குழந்தைகளுக்கும் மிக அதிகமாகப் பரவி வருவது அதிர்ச்சியேற்படுத்துவதாகவே உள்ளது. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைப்பாடு மட்டுமே இன்றும் உள்ளதையும் மறுக்க இயலவில்லை.

    ADHD குறைபாடு என்பதன் அறிகுறிகள் என்ன?

    கவனமின்மை

    1. பெரும்பாலும் கூர்ந்து கவனம் செலுத்தத் தவறுதல் அல்லது பள்ளிப் பாடங்களில் கவனமின்மையால் தவறு செய்வது அல்லது அன்றாட கடமைகள், மற்ற செயல்பாடுகளில் கவனம் செலுத்தாமல் இருப்பது.
    2. பெரும்பாலும் பணிகள் செய்யும் நேரங்களில் கவனத்தைத் தக்க வைத்துக்கொள்வதிலோ அல்லது விளையாட்டு செயல்பாடுகளிலோ சிரமம் மேற்கொள்வது.
    3. பெரும்பாலான நேரங்களில் நேரடியாகப் பேசும்போது கவனம் செலுத்தாதது போன்ற தோற்றம்.
    4. பெரும்பாலும் பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தாமலும், வீட்டுப் பாடங்களை முடிக்காமலோ அல்லது பணி செய்யும் இடத்தில் கவனமில்லாமல் கடமை தவறுவது (எதிர்ப்பு நடவடிக்கையாக இல்லையென்றாலும், அறிவுறுத்தல்களையோ, ஆணைகளையோ சரிவரப் புரிந்து கொள்ள இயலாமையால்)
    5. பெரும்பாலும் பணிகள் அல்லது செயல்பாடுகளை நிறுவுதலில் சிரமம் ஏற்படுவது.
    6. பெரும்பாலும் மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்பாடுகளைத் தவிர்ப்பது, விருப்பமில்லாமல் இருப்பது அல்லது பள்ளிப்பாடங்கள், வீட்டுப் பாடங்களில் கவனம் செலுத்தாமல் செய்ய மறுப்பது.
    7. பெரும்பாலும் விளையாட்டு சாமான்கள் அல்லது பென்சில், பேனா, புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் போன்றவற்றை தொலைத்து விடுவது.
    8. சுற்று வட்டாரத் தடைகளால் எளிதில் கவனச் சிதறல் உண்டாவது.
    9. அன்றாட பழக்கங்களையும் மறந்து விடுவது.

     

    Hyperactivity – ஹைபர்ஆக்டிவிட்டி – அதீத செயல் திறன்

    1. பெரும்பாலும் படபடப்பாக கை, கால்களைச் சொடுக்குவது அல்லது இருக்கையில் நெளிந்து கொண்டிருப்பது.
    2. வகுப்பறையில் இருக்கையை விட்டு எழுந்து செல்வது.
    3. பெரும்பாலும் தேவையில்லாமல் வேகமாக ஓடுவது அல்லது மேலே ஏறுவது.
    4. பெரும்பாலும் அமைதியாக விளையாடத் தயக்கம்.
    5. பெரும்பாலும் யாரோ விரட்டுவது போன்ற ஒரு அவசரகதியிலேயே செயல்படுவது.
    6. பெரும்பாலும் அளவிற்கு அதிகமாகப் பேசுவது.

     

    Impulsivity – உணர்ச்சிவசப்படுதல்

    7. பெரும்பாலும் வினாக்கள் முடிக்கும் முன்னரே ஏதோ ஒரு விடையை உளறுவது.
    8. பெரும்பாலும் தனது முறை வரும்வரை பொறுமை காக்க இயலாமை.
    9. பெரும்பாலும் அடுத்தவருக்கு தடை ஏற்படுத்துவது அல்லது தேவையில்லாமல் உள்நுழைவது.
    ஏழு வயதிற்குள் மேற்கண்ட அறிகுறிகளில் பெரும்பாலானவை தொடர்ந்து 6 மாதமாக இருந்தால் மட்டுமே இது ADHD குறைப்பாடு எனலாம்.

    போட்டிகள் வெகு விரைவாக வளர்ந்துவரும் இந்த காலகட்டத்தில் குழந்தைகள் தங்கள் உயர் கல்விக்காக இளமைப் பருவத்திலிருந்தே அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. இது போன்ற தருணங்களில் இந்த விதமான மருந்து மாத்திரைகள் பயன்பட்டால் அதனைத் தொடர்வதில் பெரும்பாலான பெற்றோர்களுக்கு தயக்கம் இருப்பதில்லை. நல்ல கல்லூரியில் தங்கள் பிள்ளைகள் படிக்க வழி செய்யும் வகையில் இதனைத் தங்கள் கடமையாகக் கருதும் பெற்றோரே அதிகம் உள்ளனர் என்கிறார் இவர். விளையாட்டு மைதானமாக இருக்க வேண்டிய பள்ளிப் பருவம் இந்தக் குழந்தைகளுக்கு பெரிய பந்தய மைதானமாகக் காட்சியளித்துவிடுகின்றது. தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணித் திட்டமிடும் பெற்றோரை தவறு சொல்ல முடியாது என்றாலும், மருந்துகளால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்த தகுந்த விழிப்புணர்வு இல்லாமல் செயல்படுவதும் நல்லதல்ல… குழந்தைகளின் எதிர்கால மகிழ்ச்சியும், வெற்றியும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவர்களின் உடல் நலமும் என்பதையும் கருத்தில் கொள்வது அவசியம். 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால் என்றே இதைப் பார்க்க முடிகின்றது. முழுவதும் மருந்துகளையே நம்பி இருப்பதைக்காட்டிலும் உளவியல் சிகிச்சை முறையை அதிகமாகத் தொடருவதே சாலச்சிறந்தது என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அதிகமான மருந்துகளை உட்கொண்ட குழந்தைகள் மிகவும் மந்த நிலையை வெகு விரைவில் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். இதனால் அவர்களின் கல்வி பிற்காலங்களில் கேள்விக் குறியாகவும் வாய்ப்புள்ளதை பெற்றோர் உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.

    மன அழுத்தம், மனச்சோர்வு, அதிக எதிர்பார்ப்பினால் ஏற்படும் மன உளைச்சல், தற்கொலை எண்ணம் போன்ற குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு ஏற்படும் உணர்வுரீதியான பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் மருந்துகளைவிட குடும்ப உளவியல் சிகிச்சை முறையே (family therapy techniques) பாதுகாப்பானது என்பதே இந்த ஆய்வுகளின் முடிவான கருத்தாக உள்ளது. இதற்கான பல குழந்தைகளின் எடுத்துக்காட்டுகளும் இந்த ஆய்வுக் கட்டுரையில் சுட்டப்பட்டுள்ளன. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, ADHD பாதிப்பினால் அல்லலுற்ற ஒரு கலிபோர்னிய குழந்தையின் தாய் அக்குழந்தையை பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டு வீட்டில் கல்வி கற்க ஏற்பாடு செய்தபோது இந்தப் பிரச்சனை பெருமளவில் கட்டுப்பட்டது என்கிறார். செருமனியைச் சேர்ந்த ஒரு தாய், தம் குழந்தை ADHD பாதிப்பினால் மருத்துவமனைக்குச் சென்றபோது மருந்துகள் கொடுத்தபோது, “நாங்கள் அந்த மருந்திற்குப் பதிலாக அவளுக்கு ஒரு பியானோ வாங்கிக் கொடுத்தோம் – ஆச்சரியமான வகையில் நல்ல முடிவுகளைக் காண முடிந்தது” என்றார்.

    ஆக, மருந்துகளைவிட குழந்தைகளின் உணவு முறையில் சிறு மாற்றங்கள், அவர்களுடைய சக்தியை வெளிக்கொணர ஒரு உபாயமும், படைப்பாற்றலில் கவனம் செலுத்துவதும் இந்த குறைபாட்டிற்கான சிறந்த மாற்று மருத்துவம் என்பது தெளிவாக விளங்குகிறது. இந்த ஆய்வின் முடிவின்படி ADHD என்ற குறைபாடு குழந்தைகளின் இயற்கைக்கு மாறான ஒரு நிலைப்பாடோ அல்லது மருந்தினால் குணப்படுத்தக்கூடிய ஒரு நோயோ அல்ல என்பதுதான். பல நேரங்களில் குழந்தைகள் மீது அபரிமிதமான அன்பும், பாசமும், நம்பிக்கையும் கொண்ட பெற்றோர் இயல்பான குணநலனுடன் இருக்கும் குழந்தைகளுக்கும் தேவையில்லாமல் மருத்துவ உதவியை நாடுவதும், அவர்கள் ADHD குறைபாடு என்ற ஐயத்தால் சக்தி வாய்ந்த மருந்துகளைக் கொடுப்பதும் நிகழ்ந்துவிடுவதுண்டு. பெரும்பாலும் ADHD குறைபாடு என்று பட்டயம் கட்டி மருந்துக்கு பரிந்துரை செய்வது அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளில் குழந்தைகளின் இயல்பான நடவடிக்கைகள்தான் என்பதே நிதர்சனம். கடுமையான சூழல்களால் பாதிக்கப்பட்டு எதிர்வினையாற்றும் சில குழந்தைகளை பொறுப்பாக, பொறுமையாகக் கையாளத் தெரிந்த பெற்றோரே சிறப்பான பெற்றோரின் வளர்ப்பு முறையாகக் கருத முடியும்.

    இந்த ADHD குறைபாடு பரவுவதற்கான காரணம் அமெரிக்கக் கலாச்சாரம் என்பது குறைத்து மதிப்பிடக்கூடிய விசயம் அல்ல என்றாலும் உலகின் பெரும் பகுதிகளின் நவீன கலாச்சாரத்தில் வீழ்ந்து கிடக்கும் பெரும்பாலான நவீனவாதிகளின் செயல்பாடுகளாகவும் அமைந்துவிடுவது என்றும் இந்த ஆய்வாளர் தெரிவிக்கிறார்.
    இயல்பாகவோ அல்லது இயல்புக்கு மாறான குழந்தைகளின் நடத்தையோ என எதுவாக இருப்பினும் அது நாம் வாழும் சமூகத்தின் பழக்க வழக்கங்களின் அடிப்படையிலேயே அமைகிறது என்பதே சத்தியம். இதை உணராத பெற்றோரே பெருங்குழப்பத்திற்கு ஆளாகி, குழந்தை வளர்ப்பை பெரும் சுமையாகக் கருதி நிம்மதி இழக்கின்றனர். ஆம், ADHD என்ற குறைபாடு பற்றி பேசும்போது நாம் முதலில் கூர்ந்து கவனம் கொள்ள வேண்டியது மருந்தில் மட்டுமல்லாமல், நாம் வாழும் சமூகம் மற்றும் அதன் கலாச்சாரம் போன்றவைகள் குறித்தும் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதே முக்கியம். மருந்துகளையும் தவிர்த்து சூழ்நிலை மாற்றங்கள், படைப்பாற்றலை பெருக்குவது, உளவியல் சிகிச்சை முறை போன்ற பலவகை பரந்த வெளிகள் குறித்த கருத்துகளையும் அறிந்துகொள்ளும் உரிமைகள் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு நிச்சயம் உண்டு. இதில் குழந்தைகளின் உணவு முறையில் மாற்றம், குழந்தைகளுக்குத் தோதான பாடசாலைச் சூழல், ஊடகங்களினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு, பெற்றோரின் பயிற்சி மற்றும் குடும்ப சிகிச்சை போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்த வேண்டியதும் அடங்கும்.

    இந்த பிரச்சனை வெகு விரைவாக வளர ஆரம்பித்தன. 1990 களில் 3 மில்லியன் அமெரிக்கக் குழந்தைகளுக்கு மட்டும் பரிந்துரைக்கப்பட்ட சக்தி வாய்ந்த மருந்துகள் 2010 காலகட்டங்களில் 10 மில்லியன் குழந்தைகளாக உயர்ந்துவிட்டன. அவர்களை பள்ளியில் படிக்க வைப்பதே பெரும் போராட்டமாக இருந்ததால் உளவியல் சிகிச்சை முறையை தேர்ந்தெடுக்க வேண்டியதாகி இருக்கிறது. மேற்கண்ட அந்த மருந்துகள் மருத்துவ உலகிற்கு புதிதும் அல்ல. 1930 களில் மூக்கடைப்பு, அதிக பருமன் மற்றும் மனச்சோர்வு போன்றவற்றிற்காக பயன்படுத்தப்பட்டவைதான் என்கிறார். அமெரிக்கக் குழந்தை வளர்ப்பு கலாச்சாரத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கிய காரணியாக இந்த மருந்துகள் செயல்பட்டிருக்கின்றன.

    பின் அதனைத் தொடர்ந்து பல்வேறு பெயர்களில், கருத்துகளில் இந்த குறைபாடு பற்றிய விளக்கங்கள் பல விதமாகப் பரவி வரலாயிற்று. 1968 இல் DSM II என்ற உளவியல் கையேடு வெளியிட்டபோது அமெரிக்க உளவியல் கூட்டமைப்பு, குழந்தைகளிடம் காணப்பட்ட அதீத இயக்க எதிர்வினை குறித்த கண்டறிதல் மூலமாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளின், கவனமின்மை, அமைதியின்மை, கவனச்சிதறல், அதீத செயல்பாடு போன்ற குறைபாடுகள் பற்றி குறிப்பிட்டிருந்தன. ஆனாலும் இதில் குழந்தைகளுக்கு பருவ வயது வரும்போது இந்த முதிர்ச்சியின்மை மறைந்துவிடக் கூடும் என்றனர்.

    பின் அடுத்த கட்டத்தில் இந்த குறைபாடுகளை, மூளையில் ஏற்படும் மெல்லிய ஒழுங்கின்மை அல்லது கரிம மூளை நோய்க்குறி என்றும் குறிப்பிட்டனர். மூளையழற்சி அல்லது மூளையில் ஏற்படும் வீக்கம் காரணமாகலாம் எனப்பட்டது. இதுபோன்று பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கே இந்த அறிகுறிகள் இருந்திருக்கும் என்று எண்ணினார்கள்.

    பாதிக்கப்பட்ட குழந்தை பின் விளைவுகள் இன்றி மீண்டு வர திட்டமிடுவது எப்படி?

    ADHD குறைபாடு என்று கண்டறியப்பட்ட ஒரு குழந்தை வேறு ஏதும் பின் விளைவுகள் இல்லாத சிகிச்சை முறையாக எப்படி திட்டமிடலாம் என்று அக்குழந்தையின் தாயும், மருத்துவ ஆய்வாளரும் இணைந்து செயல்படும் முறையைக் காணலாம் ..

    பொதுவாக ஒரு குழந்தையின் நடத்தையில் வித்தியாசம் தென்பட்டால், அதாவது சம வயது உள்ள மற்ற குழந்தைகளுடன் வித்தியாசப்பட்டால் அந்த பெற்றோர் அந்தக் குழந்தை ஏதோ மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், குழந்தையை வேதனைப்படுத்தும் அந்த ஏதோ ஒன்றை கண்டறிய வேண்டும் என்ற எண்ணத்தில் மருத்துவரை அணுகுகிறார்கள். கோபம், மரியாதையின்மை, கவனமின்மை, அதீத செயல்பாடு போன்ற குணநலன்கள் ஒரு குழந்தையின் வாழ்வில் ஏதோ தவறு நேர்ந்திருப்பதைக் குறிக்கிறது. குழந்தைகளின் மன வளர்ச்சி முழுமையடையாத சூழலில், வறுமை, வன்கொடுமை போன்ற பல்வேறு காரணங்களால் குடும்பத்தில் ஏற்படும் மாறுபட்ட சூழல் குழந்தையின் மனநிலையை பாதிப்படையச் செய்து அது அதன் நடத்தையில் வெளிப்படுவது இயற்கை. அதாவது குழந்தைகள் கடுமையானச் சூழலில் தங்களுடைய எதிர்ப்புகளை முழுமையாக வெளிப்படுத்தும் சக்தி இல்லாதபோது இது போன்ற மாறுபட்ட நடத்தைகள் இயல்பாகிவிடுவதுமுண்டு. இதனாலேயே மருத்துவர்கள் சிகிச்சை முறையை குழந்தையின் ஆணி வேரான குடும்பத்திலிருந்து ஆரம்பிக்கிறார்கள். பள்ளியில் ஆசிரியர்கள் குழந்தைகள் மத்தியில் வித்தியாசமான நடவடிக்கை உள்ள இது போன்ற குழந்தைகளை எளிதாகக் கண்டறிய முடிவதால் பெரும்பாலும் பள்ளி ஆசிரியர்கள் மூலமாகவே பெற்றோருக்கு இது தெரிய வருகிறது. பெற்றோர் இது போன்ற சூழலை அமைதியாகக் கையாள்வதன் மூலம் குழந்தைகளின் பிரச்சனைகளை எளிதாக அணுகுவதோடு அதற்கான சரியான தீர்வையும் காண முடிகின்றது. சில காலங்கள் முன்பு குழந்தைகளின் இது போன்ற நடத்தைகளை அவர்களின் இயல்பாக எடுத்துக்கொண்ட சூழல் இன்றைய நவீன காலகட்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதும் உண்மை. அபரிமிதமான எதிர்பார்ப்புகளோடு வளர்க்கப்படும் குழந்தைகளின் இயல்பு நிலை பெரும்பாலான பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ள இயலாமல் போவதும் அந்த குழந்தைகளின் மன உளைச்சலுக்கு முக்கிய காரணமாகிவிடுகின்றது.


    பொதுவாக அமெரிக்கக் குழந்தை வளர்ப்பு கலாச்சாரத்தில் மருந்துவம் பெரும் பங்கு வகிப்பதைக் காணமுடிகின்றது. கடுமையான போட்டிகள் நிறைந்த இந்த உலகில் குழந்தைகள் அதிக உழைப்பைப் போடாமல் பகல் கனவு கண்டுகொண்டு எதையும் சாதிக்க இயலாது என்று உறுதியாக எண்ணுகிறார்கள். இந்த கலாச்சாரம் பெரும்பாலும் உலகின் அனைத்து நாடுகளிலும் இன்று தீயென பரவிக் கொண்டிருப்பதும் வேதனையான விசயம். மாணவர்கள் மத்தியிலேயே கல்வி என்ற அடிப்படையில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கும், சுமாராக படிக்கும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் இடைவெளிகள் உருவாகி வருவதையும் காணமுடிகின்றது. ஒரு குழந்தை தன் மூன்று அல்லது நான்கு வயதில் பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கும்போதே ஒவ்வொரு நாளும் அதன் வாழ்வில் மெல்ல மெல்ல மாற்றங்களுக்கு அடிகோலிவிடுகின்றது என்பதே நிதர்சனம். மேல் படிப்பிற்காக குழந்தைகள் ஆரம்பக் கட்டத்திலிருந்தே கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்த வகையில் பெரும்பாலான பெற்றோர் அந்த போட்டிகளை எதிர்கொள்ளத் தோதாக மருத்துவ உதவியையும் நாடுவது தங்கள் கடமை என்ற எண்ணத்தையும் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். 21ஆம் நூற்றாண்டின் நவீனத்துவம் இந்த வகையில் குழந்தைகள் வளர்ப்பில் பல எதிர்மறையான கலாச்சாரங்களையும் ஊக்குவித்துக்கொண்டு வருவதை உணர முடிகின்றது. இதில் முக்கியமாகக் காண வேண்டியது இதைப்பற்றிய முழுமையான தெளிவு இல்லாத பெற்றோர் கூட பல தவறான முன் உதாரணங்கள் மூலமாக தவறான முடிவை எடுக்கவும் துணிகிறார்கள் என்பதுதான். இதனால் மேலும் பாதிப்புக்கு உள்ளாவது தங்கள் குழந்தைகள்தான் என்ற எண்ணமே இல்லாமல் செயல்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆம் விளையாட்டு மைதானமாக குதூகலிக்க வேண்டிய குழந்தைப்பருவம் பந்தய மைதானமாக விரட்டப்படுவது துரதிருட்டவசமானது. போட்டிகள் நிறைந்த இந்த உலகில் வேலை வாய்ப்பு பெறுவதில் எத்துணை சிரமத்தை தம் குழந்தை மேற்கொள்ளப் போகிறதோ என்ற கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் ஏற்படுவது இன்றைய காலகட்டத்தில் இயல்பாகிக் கொண்டுவருவதும் முக்கிய காரணமாகிவிடுகின்றது. கல்வி மட்டுமே எதிர்கால வாழ்க்கையின் ஆதாரமாக இருக்க முடியும் என்ற தீவிர எண்ணம் பெரும்பாலான பெற்றோரின் மனதில் ஆணித்தரமாகப் பதிந்து கொண்டிருக்கிற காலகட்டம் இது. இந்த மனநிலையில் வரும் பெற்றோர்களுக்கு மருத்துவர்களும் தங்கள் பங்கிற்கு பல புதிய புதிய மருந்துகளை அறிமுகப்படுத்தவும் தயங்குவதில்லை. ஆனால் பல நேரங்களில் அதன் பின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டிருக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    டேவிட் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெற்றோரின் ஒரே செல்ல மகன். தங்கள் குழந்தைக்கு ADHD குறைபாடு உள்ளது என்று அறிய வந்தபோது ஏனைய மற்ற பெற்றோரைப் போலவே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது உண்மைதான். என்றாலும் சில நாட்களில் அதிலிருந்து மீண்டு வந்தவர்கள் இந்த குறைபாடு பற்றி ஆதியோடு அந்தமாக தகவல் திரட்ட ஆரம்பித்தவர்கள் இதற்கான தீர்வைக் கண்டறிய முற்பட்டார்கள். பல்வேறு மருத்துவர்களை அணுகி இது பற்றி பல தகவல்களை சேகரித்துக்கொண்டார்கள். இந்த குறைபாட்டிற்காக கொடுக்கப்படும் மருந்தின் வீரியம் மிக அதிகம் என்பதால் குழந்தை பல பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதையும் அறிந்து கொள்கிறார்கள். பிற்காலத்தில் குழந்தை மேலும் மந்த நிலையை அடையக்கூடிய வாய்ப்பும் அதிகரிக்கலாம் என்பதையும் உணருகிறார்கள். இந்த நிலையில் இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியரான மருத்துவர் மெரிலைன் வெட்ஜிடம் வருகிறார்கள். இந்த குறைபாட்டிற்காக பெரும்பாலும் கொடுக்கப்படும் மருந்தின் பெயரைச் சொல்லி அதைக் கொடுப்பதால் தங்கள் குழந்தைக்கு தீர்வு கிடைக்குமா என்று கேட்கிறார்கள்.

    அந்த மருத்துவரின் பதிலும் பெரும்பாலும் ஆம் என்பதுதான். பெரும்பாலான குழந்தைகளை இது போன்ற மருந்துகள் அமைதியாக்கி, அவர்களின் கவனத்தை மீட்டுக்கொடுக்கின்றது. பல குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க ஆரம்பிக்கும் முதல் நாளிலிருந்தே பலன் தெரிய ஆரம்பிக்கின்றது. ஆனாலும் இந்தப் பெற்றோர் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் இந்தக் குழந்தையை வழிநடத்த தாமும் உறுதுணையாக இருக்கமுடியும் என்று விருப்பம் தெரிவித்தபோது அவர்களும் யோசிக்க ஆரம்பித்தனர். இதற்காகக் கொடுக்கப்படும் மருந்துகளின் தன்மைகள் மற்றும் அதனால் எதிர்பார்க்கப்படும் பின் விளைவுகள் குறித்து தெளிவான விளக்கமளித்துள்ளார். உளவியல் மருத்துவர்களைப் பொறுத்தவரை இந்த மருந்துகளை பயன்படுத்துவது அவரவர் சொந்த விருப்பத்தின் பேரில், அதாவது தேவையென்றால் பயன்படுத்தலாம் என்பதுதான். இந்த மருந்துகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு முறையில் செயல்படுவதும் கண்கூடு. சிலருக்கு உடனே பலன் தெரியும் இதே மருந்து பலருக்கு நாள்பட எடுத்துக்கொண்டும் பலனளிப்பதில் மந்தமாக செயல்படலாம். அவரவர் உடல்வாகின் அடிப்படையிலேயே மருந்துகள் செயல்படுவதும் இயற்கை. பல நேரங்களில் முன் காலத்தில் குறும்புக்கார குழந்தை என்று வகைப்படுத்தப்பட்டு அதை இயல்பாக எடுத்துக்கொண்டு பெற்றோரும், ஆசிரியருமே அக்குழந்தையை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தது போக இன்று நவீனக் கலாச்சாரம் என்ற போர்வையில் அதே குறும்புக்கார குழந்தைகள் கூட குறைபாடுள்ள குழந்தைகளாக மருத்துவ ஆலோசனைக்கு உட்படுத்தப்படுவது வேதனையான செய்தியாகத்தான் பார்க்க முடிகின்றது.


    குழந்தைகள் உளவியல் மருத்துவம் சார்ந்து 25 வருட அனுபவம் கொண்ட மருத்துவரும், ஆய்வாளருமான மெரிலின் ஒரு சாதாரணமான குழந்தைத்தனம் என்ற இயல்பியலை நம் சமுதாயம் முற்றிலும் மாறுபட்ட வேறு எல்லைக்கு கொண்டு சென்றுவிட்டனர் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பது இன்றைய பெற்றோர் சமூகம் கூர்ந்து கவனம் கொள்ளத்தக்கது என்பதில் ஐயமில்லை.

    ஒரு திரைப்பட தயாரிப்பாளரான டேவிட்டின் தந்தை படைப்பாற்றல் உள்ள ஒரு குழந்தை இது போன்ற சூழல்களை எளிதில் கடந்துவிட வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர்ந்திருந்தார். இளம் வயதில் தனக்கும் இது போன்ற சில பிரச்சனைகள் இருந்தாலும் அது தன் பெற்றோரால் பெரிதுபடுத்தப்படாமல் இயல்பாக கையாளப்பட்டதால் தான் இன்று ஒரு சாதாரண மனிதனாக வலம் வரமுடிகிறது என்பதையும் எண்ணிப்பார்த்ததோடு, தாமஸ் ஆல்வா எடிசன், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் போன்ற விஞ்ஞானிகளும் ஆரம்பத்தில் இதே குறைபாடுகளுடன் பள்ளி ஆசிரியரால் வீட்டிற்கு அனுப்பப்பட்டவர்கள்தான் என்பதையும் அறிந்துகொண்டார்கள். மெக்கார்ட்னே போன்ற இசைக்கலைஞர் பகல் கனவு கண்டவாறு பள்ளிப்படிப்பில் கோட்டை விட்டவர், ஒரு கட்டத்தில் தீவிரமாக கிட்டார் இசையைக் கற்க ஆரம்பித்தார். வீட்டுப்பாடங்களைக்கூட கிட்டார் வாசித்துக்கொண்டே ஒழுங்காகச் செய்து முடிக்கும் வழமையும் கொண்டுவிட்டார் என்பது போன்ற பல தகவல்களை வாசித்து அறிந்தவர் தம் மகனுக்கும் மருந்து இல்லாமலே இயல்பு நிலைக்குக் கொண்டுவர வழிவகை செய்ய முடியும் என்பதையும் நம்பியதோடு அதற்கான சிறந்த திட்டமும் தீட்ட ஆரம்பித்தபோதுதான் இந்த மருத்துவர் குறித்த தகவல் அறிந்து அவரோடு சேர்ந்து தாமும் திட்டமிட, பெற்றோரின் ஒத்துழைப்புடன் டேவிட்க்கு மருந்து இல்லாமலே மருத்துவம் பார்க்க முடிவு செய்தார்.

    முதலில் அதிக அளவிலான உடற்பயிற்சியுடன் கூடியத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. உள்ளூர் விளையாட்டுக் குழுவில் சேர்த்து பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்கள். இது போன்று ஆக்கபூர்வமான செயல்பாடுகளால் குழந்தை மெல்ல மெல்ல தேறிக்கொண்டு வந்ததைக் கண்ட பெற்றோர் முழுமையாக இதே முறையை கையாளத் தொடங்கி, வெற்றியும் கண்டதாகக் கூறுகிறார் மருத்துவர்.

    ADHD (Attention deficit hyperactivity disorder) என்ற மனநலக் குறைபாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளை மட்டுமல்லாமல் அவர்தம் பெற்றோர்களின் வாழ்க்கையையும் சேர்த்தே புரட்டிப்போடும் இது இன்று பெரும்பாலும் அனைத்து நாடுகளின் மருத்துவத்திற்கும் பெரும் சவாலாகவே இருந்து வருகின்றது. மருத்துவமும், தொழில்நுட்பமும் பெருமளவில் முன்னேற்றமடைந்துள்ளபோதும், இந்த குறைபாடு உலக அளவில் எதிர்காலத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுக்கப்போகும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதே உண்மை. இத்தகைய குறைபாடுகளுக்கு அனைத்து நாட்டு வல்லுநர்களும் இணைந்து, நம்முடைய அனைத்து பழம்பெரும் வைத்திய முறைகளையும் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை உணரவேண்டிய காலகட்டம் இது.. 🙁

    பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார் அமெரிக்க ஆய்வாளர் டாக்டர் மெரிலைன் வெட்ஜ். அமெரிக்கக் குழந்தைகள் மிக அதிகமாக பாதிக்கப்படுவது குறித்து அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார். 13.2 % ஆண் குழந்தைகளும், 5.6 % பெண் குழந்தைகளும் அமெரிக்காவில் இந்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் ….

    கவனமின்மை குறைபாடு (ADHD) ஒரு குழந்தையின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பாதிக்கக்கூடியதாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட குழந்தைக்கு மட்டுமா வேதனை … உண்மையில், அது பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும், குடும்பத்திற்கும் அன்றாட வாழ்வியல் செயல்பாட்டிற்கும் இடையூறு ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் ADHD இன் பாதிப்புகள் பால பருவத்திலிருந்து ஆரம்பித்து இளமைப் பருவத்திற்கும் தொடருகின்றன, கூடுதலாக, பாதிக்கப்பட்டவருக்கும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களுக்கும் அதிகரித்த செலவினங்களுடன் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

    தனிப்பட்ட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தக் குறைபாட்டில் கல்வியியல் சிக்கல்கள், சமூக திறன்கள் சிக்கல்கள், பலவீனமான பெற்றோர் -குழந்தை உறவுகள் போன்றவை அடங்கும். சமீபத்திய ஆய்வுகள் மூலம் 30 – 60%, பாதிக்கப்பட்டவர்கள் முதுகெலும்புக்குள் சீர்குலைவுக்கான குறிப்பிடத்தக்க அறிகுறிகள் உள்ளவர்களாக இருப்பதைச் சுட்டுகின்றன. இந்த குழந்தைகள் நீண்ட கால எதிர்மறை விளைவுகளுக்கு ஆட்படும் நிலையில் உள்ளனர். அதாவது கல்வி கற்க இயலாமையால் வேலைவாய்ப்பு பாதிப்பு ஏற்படுவது வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்குகிறது. ADHD இன் சிறந்த சிகிச்சை முறை என்றால் அது பள்ளி நேரங்களில் ஏற்படும் அறிகுறிகளை மட்டும் கவனம் கொள்ளாமல், குழந்தைகளோ அல்லது இளைஞர்களோ யாராக இருந்தாலும் அவர்களது குடும்பங்களின் தினசரி வாழ்க்கையை இயல்பாக வாழ முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளைக் கண்டு அதற்கான தீர்வை ஏற்படுத்துவதேயாகும். ஆம், இந்த நோய்க்கான முழுமையான தீர்வுக்கான ஆய்வு என்றால் அது மொத்த குடும்பத்தின் செயல்பாடு மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டியது அவசியம்.

    ADHD உடைய குழந்தைகளுக்கு வயது ஏறிக்கொண்டிருக்கும்போது அவர்களின் குறைபாடுகளும், அவர்களது குடும்பங்களில் ஏற்படும் மாற்றங்கள், செயல்திறன் செயல்பாட்டில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், அவர்களின் வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் தனிப்பட்ட வாழ்வியல் முறைகளைப்பொருத்து இடர்பாடுகள் விளைகின்றன. குடும்பம், பள்ளி வளங்கள், வயது, அறிவாற்றல், குழந்தை அல்லது இளம் நபரின் நுண்ணறிவின் அடிப்படையில் வேறுபடும். இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய உணர்திறன் கொண்ட சுற்றுச்சூழல் மற்றும் நோய் தாக்கத்தின் அறிகுறிகளை அறிந்து கொள்ளும் திறனும் அவசியம். உகந்த மருத்துவ உதவியும், நடத்தை மேலாண்மையும் ADHD யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆறுதல் அளித்து சமுதாயத்தின் மீதான எதிர்மறையான விளைவுகளைக் குறைப்பதோடு அவர்களது முழு திறனையும் அடைவதற்கும் வழிவகை செய்கிறது.
    செறிவற்ற தன்மை, அதீத செயல்பாடு, மன இறுக்கம் போன்றவைகள் வழக்கமாக இக்குழந்தைகளின் பொதுவான பண்புகள் ஆகும். வளர வளர நாடகத்தன்மையுடனான செயற்பாடுகளும், அமைதியற்ற தன்மையும் வளர்ந்துவிடுகிறது.

    இதுமட்டுமல்லாமல் இந்தக் குறைபாடுகளின் தொடர்புடைய மற்ற பெரும் பிரச்சனைகளும் அதிகம். இதில் பெற்றோர், உறவினர், சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறிப்பிடத்தக்கன. பெற்றோருக்கு ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்குவது முக்கியம். ஒரு சாதாரண பெற்றோரின் கோரிக்கைகள் மற்றும் நடத்தை தொடர்பான ஆலோசனையுடன் பதிலளிக்காதபோது ஆரம்ப கட்டத்தில் அந்த பெற்றோர் மன அழுத்தத்திற்கு ஆளாகநேரலாம். பெற்றோர் குழந்தைகளுடன் மற்றும் அவர்களது கவனிப்பாளர்களோடு குழந்தை தொடர்புடைய செயல்பாடுகளில் கவனம் கொள்வதோ அல்லது உதவி புரிவதோ மேற்கொண்டால் அவை பெற்றோரின் மன அழுத்தத்தை குறைப்பதில் பயனுள்ளவையாக உள்ளதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

    ஆரம்பப் பள்ளி ஆண்டுகள்

    இயல்பான வகுப்புத் தோழர்கள் பள்ளியில் வெற்றிகரமாக கற்றுக் கொள்ளும் திறன் மற்றும் முதிர்ச்சியை வளர்த்துக் கொள்ளத் துவங்குவதால் ADHD குறைபாடுகளுடன் உள்ள குழந்தை வித்தியாசமாக காட்சியளிக்கிறது. பெரும்பாலும் குழந்தைக்கு கல்வியில் பின்தங்கும் நிலை, அனுபவங்களை நிராகரிப்பது, குறைந்த சுயமதிப்பீடு, குறிப்பிட்ட கற்றல் சிரமங்கள் போன்ற பிரச்சினைகள், குழந்தையின் மன நிலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஒரு கல்வி உளவியலாளரின் மதிப்பீடு, அந்தக் குழந்தைக்கான கற்றல் திறன் மற்றும் சிரமங்களை வெளிப்படுத்த உதவும் என்பதால் அவர்கள் வகுப்பறையில் தேவையான ஆதரவையும் ஆலோசனையையும் வழங்கச் செய்யலாம். பாதிக்கப்பட்ட குழந்தைகளை மற்ற குழந்தைகள் ஒதுக்கி வைப்பதையும் தகுந்த அறிவுரைகள், ஆலோசனைகளுடன் மாற்ற முயற்சி எடுக்கவேண்டும்.

    பல குழந்தைகள் மிகவும் குறைவாகத் தூங்கும் வழக்கங்களைக் கொண்டுள்ளனர். இதனால் தூக்கம் மோசமாகப் பாதிக்கப்படும்போது இவர்களின் பகல் நேர நடத்தைகளும் கூட மோசமாகிவிடுகின்றன. இதன் விளைவாக, பெற்றோர்கள்களுக்கு சிறிதளவேனும் ஓய்வற்ற சூழல் உருவாகிவிடுகிறது; குழந்தையின் மீது முழுநேர கவனம் செலுத்தவேண்டியதாகிறது. இதனால் பல நேரங்களில் குடும்ப உறவுகள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு சில சந்தர்ப்பங்களில் கூடுதல் சமூக மற்றும் நிதி சிக்கல்களையும் கொண்டு வருவதில் ஆச்சரியம் இல்லை. இதையெல்லாம் தாங்கினாலும் குழந்தைகளின் சோகமான உணர்வையோ அல்லது கோபமான நடத்தையையோ தாங்கிக்கொள்ள முடியாமல் வேதனைப்படுகிறார்கள்.

    ADHD பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மதிப்பிடுவது எளிதன்று. இது போன்ற குழந்தைகளின் நடத்தை மதிப்பீடுகள் வழக்கமாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் அல்லது சுகாதார வல்லுநர்களால் செய்யப்படுகின்றன. பொதுவாக ஒரு ஆரோக்கியமான குழந்தை எப்படிப்பட்ட மன நிலையில் இருக்கும் என்பதை ஊகிக்க முடிவது போன்று ADHD குறைபாடு உடைய குழந்தைகளின் மன நிலையை ஊகிப்பது இயலாத காரியமாகலாம். காரணம் அவர்களின் சுய மதிப்பீடு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதில்லை. இது போன்ற நடவடிக்கைகளால் குடும்பத்தின் அமைதிக்கு ஏற்பட்ட சீர்குலைவு காரணமாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடன்பிறந்தவர்களுக்கும் அந்த கவலையும் சோகமும் தொற்றிக்கொள்கின்றன.

    ADHD சகோதரர்களிடமிருந்து கடுமையான உடல்நலம் வன்முறை, வாய்மொழி ஆக்கிரமிப்பு மற்றும் கையாளுதல் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் ஆக்கிரமிப்பு செயல்களால் பாதிக்கப்பட்டதாகக் கருதும் உடன்படிக்கைகள் தெரிவிக்கின்றன. அதோடு, ADHD உடன் தொடர்புடைய சமூக மற்றும் உணர்ச்சியற்ற தன்மை காரணமாக அவர்களின் ADHD சகோதரர்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று உடன்பிறப்புகள் தெரிவித்தன. மேலும், ADHD அறிகுறிகளின் விளைவாக மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சீர்குலைவு காரணமாக, பல உடன்பிறந்தவர்கள் கவலை, கவலை மற்றும் சோகமாக உணர்கின்றனர்.

    எவ்வாறாயினும், சமூகம் மற்றும் குடும்ப செயல்பாட்டில் வெளிப்படையான முன்னேற்றம், குழந்தை மற்றும் அவர்தம் குடும்பத்தின் தொடர்ச்சியான வாழ்க்கைத் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான மேலும் பல ஆராய்ச்சிகள் தற்போதய அவசரத் தேவையாகிறது. இதற்கான முழுமையான ஆய்வுகளை அனைத்துத் தளங்களிலும் மேற்கொண்டு இந்த குறைபாடுகளினால் ஏற்படும் பிரச்சனைக்களுக்குத் தீர்வு காண்பது சவாலான காரியமாகவே உள்ளது என்பதில் ஐயமில்லை. அரசு மற்றும் பொது நல சேவை அமைப்புகளும் இணைந்து இப்பணியை மேற்கொண்டு விரைவில் செயல்படுவது அவசியமாகிறது.

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் 128

    நிர்மலா ராகவன்

     

    இந்த ஆண்களை..!

    `இந்தப் பெண்களை புரிந்துகொள்ளவே முடியாது!’ திருமணமான பல ஆண்களின் கூற்று இது.

    இந்தக் குழப்பத்தைச் சமாளிக்க ஏதாவது முயற்சி எடுத்துவிட்ட பிறகு, `இது வேண்டாத வேலை!’ என்று வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவிடுவார்கள்.

    ஆண்களோ, பெண்களோ, இப்போதெல்லாம் முப்பது வயதிலும் திருமணம் செய்துகொள்ளத் தயங்குகிறார்கள். சிறிதுகாலம் பழகியபின்னரும், `சரியான துணைதானா?’ என்ற குழப்பம் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை. தமது சுதந்திரம் பறிபோய்விடும் என்ற அச்சமும், `புதிய குழப்பங்களுக்கு ஆளாக வேண்டுமா!’ என்ற தயக்கமும் ஒரு காரணம்.

    திருமணம் ஆனபின்பு, ஆண்களில் சிலர் தம்மைப்போலவே குழம்பிப்போயிருக்கும் நண்பர்களை நாடுவார்கள். வேறு சிலர் விளையாட்டுகளில் ஈடுபட்டு, உடலுக்கு அளிக்கும் கடும்வேலையால் தம்மை மறக்க முயற்சி செய்வார்கள்.

    இன்னும் சிலர், `நம் மனைவிதான் அப்படியோ?’ என்ற சந்தேகம் எழ, அதை நிவர்த்தி செய்துகொள்ளும் சாக்கில் பிற பெண்களுடன் உறவு பூண்டு, இறுதியில், `எல்லாப் பெண்களும் ஒரே லட்சணம்தான்!’ என்ற கசப்பான முடிவுக்கு வருகிறார்கள்.

    கதை

    `மனைவி என்றால், அவள் என் எண்ணங்களுக்கு ஒத்துப்போக வேண்டும். நான் சொல்கிறபடியெல்லாம் நடக்கவேண்டும்!’ என்ற சராசரி ஆணின் எதிர்பார்ப்புடன் விமலாவை மணந்தான் மனோகரன்.

    அவளோ சுதந்திரமாக வளர்க்கப்பட்டிருந்தவள். முதலில் கணவன் சொற்படியெல்லாம் கேட்டவளுக்குச் சில மாதங்களிலேயே மனநிம்மதி பறிபோக, கணவனின் ஆதிக்கத்தை எதிர்ப்பதுதான் வழி என்று தோன்றிப்போயிற்று. அடிக்கடி சண்டை வந்தது.

    இத்தனை நாட்களும் அடங்கி இருந்தவளுக்கு இப்போது என்ன வந்தது என்று குழம்பினான் மனோகரன்.

    நாள் முழுவதும் அன்று காலையில் நடந்த சம்பவமே விமலாவின் மனதில் திரைப்படமாக ஓட, அவளுடைய ஆத்திரம் அதிகரித்துக்கொண்டே போய்விடும்.

    வேலை முடிந்து மனோகரன் வீடு திரும்பும்போது முகத்தைத் திருப்பிக்கொண்டு அப்பால் போய்விடுவாள். அலுத்துக் களைத்து வீடு வரும் ஒருவனுக்கு இப்போது எப்படி இருக்கும்?

    அவனும் எரிந்து விழுவான். அவளும் பதிலுக்குக் கத்துவாள்.

    பெண்களும் கணினியும் ஒன்று!

    கணினி எப்படி தன்னிடத்தில் உள்ள ஒரு செய்தியை மறவாது அப்படியே வைத்திருக்கிறதோ, அதேபோல்தான் பெண்களும். ஆனால் ஒரு வித்தியாசம். நல்லனவற்றை எளிதில் மறந்துவிடுவார்கள், அல்லது அலட்சியப்படுத்திவிடுவார்கள். எதிர்மறையான சம்பவங்கள், அவைகளுக்குக் காரணமாக இருந்த உணர்ச்சிகள் – மன இறுக்கம், வருத்தம், கோபம் போன்றவை — அவர்கள் மனதில் நிலைத்திருக்கும்.

    ஆண்களோ, இதற்கு நேர் எதிர். நிம்மதியைக் குலைக்கும் நினைவுகளை உடனுக்குடன் மறந்துவிடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை, காலையில் நடந்த வாக்குவாதம் அத்துடன் முடிந்துபோய்விட்டது.

    இப்போது மனைவி முகத்தைத் திருப்பிக்கொண்டு போனது மனோகரனுக்கு எரிச்சலைத்தான் தராமல் என்ன செய்யும்?

    “என்ன கோபம்?” புரியாமல் கேட்டான்.

    “அப்படிச் சொன்னீர்களே..!” என்று விமலா விளக்கியபோது, “அதை இன்னுமா நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறாய்? அலுவலகத்தில் ஏதோ பிரச்னை,” என்றான், அலட்சியமாக.

    தற்காலத்தில் வெளிவேலைகளில் பெண்களும் ஈடுபடுவதால், ஆண், பெண் இருவருக்குமே மன இறுக்கம் வர நிறைய காரணங்கள் இருக்கின்றன. இத்தருணங்களில் ஆண் விலகி இருக்கிறான். இதனால் அவனுக்கு மனைவியைப் பிடிக்கவில்லை என்று அர்த்தமாகாது. அவளைப்போல் அவனுக்குத் தன் உணர்ச்சிகள் புரிவதில்லை.

    ஆண்களுக்குப் பெண்களின் உடல்மொழி, குரலின் தளர்ச்சி இதெல்லாம் புரிவதில்லை. பெண்களும் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். பிரச்னை எழாமல் என்ன ஆகும்?

    வெளிப்படையாகச் சொன்னால்தானே தெரியும்?

    அவள் (மனக்குறையுடன்): கல்யாணமான புதிதில் நீங்கள் என் விரல்களையெல்லாம் காதலுடன் கடிப்பீர்கள். இப்போது உங்களுக்கு என்மேல் உள்ள ஆசை போய்விட்டது.

    அவர்: அவ்வளவுதானே! செய்தால் போயிற்று. என் பல் செட்டை எடுத்துக்கொண்டு வா!!

    `இந்த ஆண்களைப் புரிந்துகொள்ளவே முடியாது!’

    பள்ளிக்கூடத்திலும், கல்லூரியிலும் ஆண்களுடன் சேர்ந்து படித்த பெண்களால்கூட ஆண்களைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

    ஒரு பெண் தன் தந்தைக்கு மிக நெருங்கியவளாக இருந்தால்தான் பிற ஆண்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பருவ வயதிலும் அவர்களுடைய உறவின் இறுக்கம் தளர்ந்துவிடாமல் இருக்கவேண்டும்.

    இரு பாலருக்குமே ஏன் இவ்வளவு குழப்பம் என்றால், ஆண்களின் மனப்போக்கும், பெண்களுடையதும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

    கணவர் அனுதினமும் `ஐ லவ் யூ!’ சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கும் பெண்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏனெனில், ஆண்கள் பெண்களைப்போல் அவ்வளவு எளிதாக உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார்கள். மாறாக, செயலில் காட்டுவர். வீட்டையோ, தோட்டத்தையோ சுத்தப்படுத்துவார்கள். சமையலறையில் உடைந்த சாமான்களை பழுதுபார்ப்பார்கள். இது புரிந்து, கணவனும் மனைவியும் ஒரே காரியத்தில் – அது விளையாட்டோ அல்லது உடலுறவோ –ஈடுபட்டால் உறவு பலப்படும்.

    சொந்தக்கதை

    முப்பது வருடங்களுக்குமுன், தெரியாத்தனமாக நான் நிறைய ஆர்கிட் செடிகள் வாங்கினேன். நோஜாச்செடி ஐந்து வெள்ளியென்றால், ஆர்கிட் செடியின் விலை அதைப்போன்று மூன்று மடங்கு. பூத்தால் வாரக்கணக்கில் அப்படியே இருக்குமே! ஆனால், அவைகளைப் பூக்கவைக்க பட்ட பாடு!

    ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு பெரிய பேசினில் தண்ணீர் நிரப்பி, அதில் எருவைப்போட்டுக் கலக்கி, ஒவ்வொரு செடியாக பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும்.

    என்னுடன் ஒத்துழைத்த கணவருக்கு உற்சாகமாக இருந்தது. Felt romantic. ஒரே வேலையில் இணைந்து செய்கிறோமே!

    எனக்கோ செடிகளைப் பராமரிப்பதே தலையாய வேலையாகிப் போயிற்று. விடுமுறை நாளில் எங்கும் உல்லாசமாகச் செல்ல முடியவில்லை.

    ஒரு வருடம் நன்றாகப் பூத்தபின், `இந்தக் கஷ்டத்திற்கு கணவருடன் சண்டை போடுவதே மேல்!’ என்று தோன்றிப்போக, செடிகளைப் பிறருக்குக் கொடுத்துவிட்டேன்.

    பிரத்தியேகமான பொழுதுபோக்கு

    ஒரே காரியத்தைச் செய்தாலும், நெடுநேரம் ஒன்றாக இணைந்திருந்தால் அலுப்புத் தட்டாதா! கணவன் மனைவி இருவருக்குமே தனித்தனி பொழுதுபோக்கும், தனியாகக் கழிக்க அவகாசமும் அவசியம். (தேனிலவு இதில் சேர்த்தியில்லை). வெவ்வேறு பொழுதுபோக்காக இருந்தாலும், அவைகளைப்பற்றி கலந்து உரையாடினாலே நண்பர்களைப்போல நெருக்கம் ஏற்படும்.

    கவனக்குறைவல்ல

    `என் கணவர் நான் பேசும்போது கவனிப்பதே கிடையாது. அவருக்கு என்னைவிட தினசரியைப் படிப்பதும், தொலைகாட்சியும்தான் முக்கியம்!’ என்று அலுத்துக்கொள்ளும் பெண்களுக்கு ஒன்று புரிவதில்லை. மனைவி பேசும்போது, `உம்,’ `சரி’ என்று முனகியபடி, வேறு எதிலோ கவனம் செலுத்துவதுபோல் காணப்பட்டாலும், அவர்களுக்குக் காது கேட்கும். கவனமும் உண்டு.

    புகழுங்கள்

    ஆண்கள் தம் மனைவியைப்பற்றிப் பிற ஆண்களிடம் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள்.

    `இதையெல்லாம் மனைவியின் எதிரே கூறினால், அவள் கை ஓங்கிவிடுமோ?’ என்ற பயம் எழ, அவளிடம் வீறாப்பு காட்டுவார்கள்.

    இரு தரப்பினருக்கும் பாராட்டு வேண்டியிருக்கிறது. வெளியில் அலைந்துவிட்டு வரும் மனைவி, `நல்லவேளை, பாலைக் காய்ச்சி வைத்துவிட்டீர்கள்!’ என்று கணவனிடம் நன்றி தெரிவிக்கிறாள்.

    பதிலுக்கு, `இன்று பயற்றங்காய் பொரியல் முறுமுறுவென்று, நன்றாக இருந்தது!’ என்று மனைவியைப் பாராட்டுகிறான்.

    அவள் உற்சாகமாக, `எண்ணை அதிகமாகாது இருக்க, கடைசியில் ஓட்ஸைப்போட்டு, சற்று வதக்கினேன்,’ என்பாள். அடுத்தமுறை, இன்னும் கவனமாகச் சமைப்பாள்.

    இப்படி ஒருவர் செய்யும் நற்காரியத்தை உடனுக்குடன் புகழலாமே! சண்டை போடுவதைவிட இம்முறை எளிதானது. நல்ல பலனையும் அளிக்கும்.

    தொடருவோம்

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 20

    -மேகலா இராமமூர்த்தி 

    அகத்திலே அன்பின்றி வேற்று ஆடவரின் பொருளைக் கைப்பற்றுவதை நோக்கமாய்க் கொண்டுப் புறத்தே போலி அன்பைக் காட்டுபவர்கள் வரைவின் மகளிராகிய பொதுமகளிர். அத்தகு நாணும் நற்பண்புமில்லா மகளிரின் தொடர்பைத் தவறென்று முதன்முதலில் கண்டித்தவர் வாழ்வியல் அறிஞரான வள்ளுவப் பேராசான். வள்ளுவத்தை அடியொற்றி நாலடியும் நடைபயின்று, பொதுமகளிரின் இயல்பையும் இழிகுணத்தையும் பொருத்தமான உவமைகள் வாயிலாய் விளக்கி அவர்தம் தொடர்பை விலக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றது.

    எழிலும் பரந்த இடமும் கொண்ட விண்ணுலகின்கண் வாழும் தேவர்களால் தொழப்படும் செந்தாமரைக்கண்ணனாகிய திருமாலை ஒப்பவனாயிருந்தாலும், கொடுப்பதற்குரிய கைப்பொருள் இல்லாதவனாயின், (அவன் பொருளிலேயே நாட்டமுடைய) தளிர் மேனியுடைய பொதுமகளிர் தம் கைகளால் வணங்கி அவனுக்கு விடைகொடுத்துவிடுவர். 

    அங்கண் விசும்பின் அமரர் தொழப்படுஞ்
    செங்கண்மா லாயினும் ஆகமன் – தங்கைக்
    கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளி ரன்னார்
    விடுப்பர்தங் கையாற் றொழுது. 
    (நாலடி – 373)
     

    ”நீ செங்கண்மாலே ஆயினும் ஆகுக, எங்கள் அன்பைப்பெறுதற்குரிய ஒண்பொருள் உன்னிடமின்மையின் இங்குமக்கு வேலையில்லை, சென்று வருக!” என்று கும்பிடுபோட்டு அனுப்பிவிடும் பொதுமகளிரின் நீர்மையை நேர்மையாய்ப் பேசியிருக்கின்றது மேற்கண்ட நாலடி.

    இன்சுவை மிகுந்த தெளிந்த நீருடைப் பொய்கையில் பாம்புக்குத் தன்னுடலின் ஒரு புறமாகிய தலையைக் காட்டி, மற்றொரு புறத்தே அமைந்துள்ள வாலை  மீனுக்குக் காட்டி அந்தந்த இனத்திற்கு ஏற்றவகையில் ஒழுகி, உயிர்பிழைத்து வாழும் விலாங்கு மீன் போன்ற கள்ளச்செய்கைகளுடைய விலைமகளிரின் தோள்சேரும் காமுகர், விலங்கைப் போன்ற பகுத்தறிவற்ற அறியாமையுடையோர் ஆவர்.

    பாம்பிற் கொருதலை காட்டி ஒருதலை
    தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் – ஆங்கு
    மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்
    விலங்கன்ன வெள்ளறிவி னார். 
    (நாலடி –  375)

    விலாங்கு மீனின் தலைப்புறம் பாம்பு போலவும், வால்புறம் மீன் போலவும் இருக்குமாகையால், மீனென்று கருதி பாம்பு இரைபிடிக்க வரும்போது அதற்குத் தலைப்புறங்காட்டி அதன் இனம்போல உலவி உயிர்தப்பியும், தனக்கு உணவாகிய சிறுமீன்கள் பாம்பென்று கருதி அஞ்சி விலகுமாயின் அவற்றிற்கு வால்புறங்காட்டி இரையுண்டு உயிர்பிழைத்தும் அம்மீன் வஞ்சித்து வாழ்தலின், பொருளற்றாரையும் பொருளுற்றாரையும் பகையாதும் நேசித்தும் அவரவர்க்கேற்பக் கள்ளத்தனமாய் ஒழுகிப் பொருள் பறித்து வஞ்சித்து உயிர்வாழும் விலைமகளிர்க்கு அதனை உவமையாய்க் காட்டியிருக்கின்றது நாலடியார். 

     ”தமது பேரழகே தூண்டிலாகவும், அச்சமும் நாணமும் ஊராண் ஒழுக்கமும் ஒப்பனையும் அத்தூண்டிலில் கட்டும் இரையாகவும், உலகத்தில் இளைஞர் திரட்டிய அருங்கலன்களும் பொன்னும் மீனாகவும், அம்மீன்களைப் பிடிக்கும் தமது தொழிலிடத்தே தப்பாத மகளிர்”  என்று பொதுமகளிரின் இயல்பை விவரிக்கின்றது பெருங்கதை எனும் அருந்தமிழ்நூல்.

    காரிகை கடுநுனைத் தூண்டிலாக
    உட்கும் நாணும் ஊராண் ஒழுக்கும்
    கட்கின் கோலமுங் கட்டிரையாக
    இருங்கண் ஞாலத் திளையோர் ஈட்டிய
    அருங்கல வெறுக்கை யவைமீனாக
    வாங்குபு கொள்ளும் வழக்கியல் வழாஅப்
    பூங்குழை மகளிர்…
    (பெருங்கதை – இலாவாண காண்டம்)

    எனவே கள்ளமனமும் பொருள்நோக்கமும் கொண்ட வரைவின் மகளிரைவிட்டு விலகியிருப்பதே போற்றத்தக்க நல்லாண்மை எனலாம்.

    இனி, கற்புடைய மகளிரின் இயல்புகளை நாலடியார் வழிநின்று ஆராய்வோம்.

    குடநீரட் டுண்ணும் இடுக்கட் பொழுதுங்
    கடனீ ரறவுண்ணுங் கேளிர் வரினும்
    கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி
    மாதர் மனைமாட்சி யாள். 
    (நாலடி – 382)

    குடத்திலுள்ள நீரையே காய்ச்சிப் பருகிப் பசியாறும் வறுமை வந்துற்ற இன்னாக் காலத்தும், கடல்நீர் முழுமையும் உண்டு பசியாறுதற்குரிய அத்தனை உறவினரும் ஒருங்கு விருந்தாக வந்தாலும், தன் கடமையாகிய விரும்தோம்பும் இயல்பை விடாது மேற்கொள்ளுகின்ற மென்மையான சொற்களையுடைய பெண்ணே, இல்லற வாழ்க்கைக்குரிய மாட்சிமையுடையவள் ஆவாள் என்பது நாலடி நவிலும் நற்கருத்து.

    அக் காலத்தில் விருந்தோம்பும் பண்பே இல்லறத்தினரின் தலையாயக் கடனாய்க் கருதப்பட்டது. அதனால்தான் வள்ளுவமும்,

    ”இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற் பொருட்டு.” (81) என்று விருந்தோம்பலை வலியுறுத்துகின்றது.

    ”வறுமை வந்துற்ற காலை விருந்தினரைக் கண்டால் ஒளிந்துவாழ நேரும்; உடம்பின் ஐம்புலன்களும் குறைவின்றி இருந்தாலும் வறுமையானது அறிவைக் கெடுக்கும் இயல்புடைத்து” என்று தன் இன்மையையும், அதுதரும் அவல வாழ்வையும் சோழன் உருவப்பல்தேர் இளஞ்சேட்சென்னியிடம் வேதனையோடு விளம்புகின்றார் பெருங்குன்றூர் கிழார் எனும் புலவர்பெருந்தகை. 

    …உள்ளிய
    விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்
    பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்
    அறிவுகெட நின்ற நல்கூர் மையே. (புறம் – 266)

    குலமகள் ஒருத்தியின் நல்லியல்பாம் நாணத்தை அருங்குணங்கள் பிறவற்றோடு ஒப்பிட்டு விதந்தோதுகின்றது நாலடியார்ப் பாடலொன்று!

    உள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
    வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள் – தெள்ளிய
    ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
    நாணுடையாள் பெற்ற நலம். (நாலடி –  386)

    உள்ளத்தில் இயற்கை நுண்ணுணர்வுடையானொருவன் கற்ற கல்வியை ஒத்ததாயும், கொடைக்குணம் உடையானொருவனிடத்து மாட்சிமைப்படுகின்ற ஒளிபொருந்திய செல்வத்தை ஒத்ததாயும், வாட்பயிற்சியில் தெளிவடைந்த வீரமிக்க ஆடவனொருவன் கையில் விளங்கும் கூரிய வாட்படையை ஒத்ததாயும் இருக்கின்றது, நாண் முதலிய பெண்ணீர்மைகள் பெற்ற கற்புடைப் பெண்ணொருத்தியின் அழகு முதலிய குணநலங்கள்.

    ”அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
    நிச்சமும் பெண்பாற் குரிய என்ப”
    எனும் தொல்காப்பியக் கோட்பாட்டை அடியொற்றி எழுந்த சிந்தனைகள் இவை எனலாம்.

    நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்” எனும் (பாரதியின்) பிற்காலச் சிந்தனையை இதனோடு பொருத்திப் பார்த்துக் குழப்பிக்கொள்வது தேவையற்றது. அந்தந்த காலகட்டத்தில் வாழும் மக்களின் வாழ்வியலையும் அவர்தம் சிந்தனையோட்டத்தையும் கண்ணாடிபோன்று பிரதிபலிப்பவையே இலக்கியங்கள் எனும் புரிதல் நமக்குத் தேவை.

    கற்புடைய மகளிரின் இயல்புகளைப் பரக்கப் பேசுகின்ற நாலடியார் பரத்தையரோடு திரிதரும் ஒழுக்கமற்ற ஆடவரின் இயல்புகண்டு வருந்தும் இல்லக்கிழத்தியரின் மனவுணர்வுகளையும் நமக்குப் படம்பிடித்துக் காட்டத் தவறவில்லை.

    கருஞ்கொள்ளுஞ் செங்கொள்ளுந் தூணிப் பதக்கென்று
    ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரன் – ஒருங்கொவ்வா
    நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
    என்னையுந் தோய வரும்.
    (நாலடி –  387)

    ”மருதநிலத்து ஊரில் இருந்துகொண்டே அவ்வூரானொருவன் தரங்குறைந்த கருங்கொள்ளையும், உயர்ந்த செங்கொள்ளையும் ஒரே விலைக்கு, தூணிப்பதக்கு என்று ஒரே அளவாக, ஒன்றாய் வாங்கினானாம்; அதுபோலப் பெண்மையியல்பில் என்னோடு ஒருங்கு ஒவ்வாத நன்னுதல் பரத்தையரை மருவிய மலைபோலும் பெரிய மார்பினையுடைய என் கணவன் நீராடி உடல்தூய்மையும் செய்யாது என்னையும் தழுவ வருகின்றான்” என்று அவன் இழிகுணத்தை எண்ணி வருந்தி ஊடுகின்றாள் இல்லக்கிழத்தி.

    தூணி என்பது நான்கு மரக்காலும், பதக்கு என்பது இரண்டு மரக்காலுமாகத் தூணிப் பதக்கென்பது ஆறு மரக்காலளவைக் குறிப்பதாகும்.

    பரத்தையரிடம் சென்ற தன்னிடம் ஊடியிருந்த தலைவியைச் சமாதானம் செய்யப் பாணன் ஒருவனை அனுப்புகின்றான் தலைவன். அவனிடம் தலைவி கூறும் மொழிகள் இவை:

    அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று
    பெரும்பொய் உரையாதி பாண – கரும்பின்
    கடைக்கண் அனையம்நாம் ஊரற் கதனால்
    இடைக்கண் அனையார்க் குரை.  
    (நாலடி – 390)

    அரும்புகள் போதாகி மலரும் மாலையை அணிந்த எம் தலைவன் எமக்குத் தலையளி செய்ய வருகின்றான் என்று பெரியதொரு பொய்ம்மொழியை எம்மிடம் மொழியாதே பாண! ஊரனாகிய எம் தலைவனுக்கு யாம் கரும்பின் நுனிக் கணுக்கள் போலச் சுவையில்லாமல் இருக்கின்றோம். ஆதலால், அதன் நடுக் கணுக்களை ஒப்ப அவனுக்குச் சுவைமிக்கவரான பரத்தையரிடம் இதனைச் சொல் என்று சினந்து கூறுகின்றாள்.

    அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். அஃதொப்ப ஆராக்காமம் இல்வாழ்வுக்குத் தீராத்துன்பத்தை தந்துவிடக் கூடியது என்பதை மருதத்திணையில் காட்டப்படும் தலைவர்களின் பரத்தமை ஒழுக்கமும் அதனால் வெளிப்படும் தலைவியரின் மனவேதனையும் தெற்றெனப் புலப்படுத்துகின்றது.

     [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்       பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே – 37

    க. பாலசுப்பிரமணி

     

    தோல்விகளுக்கு பொதுவான காரணங்கள் என்ன?

    வெற்றியும் தோல்வியும் ஒரு நிகழ்வின் இரண்டு எதிர்மறையான பரிமாணங்கள். வெற்றிவாகை சூடி மதம் பிடித்த உள்ளங்களோடு உலவுவதும் தோல்வியைக் கண்டு துவண்டு ஒதுங்குவதும் நலமான முதிர்ச்சியும் வளர்ச்சியும் அடைந்த உள்ளங்களின் வெளிப்பாடுகள் அல்ல. நிகழ்வுகள் பயணங்கள் ஆவதில்லை. பல நேரங்களில் தோல்விகள் எழுப்பும் வினாக்களிலே வெற்றிக்கான வித்துக்கள் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அவைகளை நாம் ஏன் கண்டுகொள்வதில்லை என்று நம்மைப் பார்த்து ஏளனம் செய்து கொண்டிருக்கும். எனவே தோல்விகளின் இடைப்பாடுகளில் நடுவே அமர்ந்து அலசி ஆராய்ந்து நம் தவறுகளைத் திருத்திக் கொள்வதே உண்மையான கற்றலாகும். இந்த அலசலைச்  செய்யவோ அல்லது அவைகளின் உண்மைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது புரிந்துகொள்ளவோ  நாம் தயங்கக்கூடாது அல்லது வெட்கப்படக்கூடாது. வெற்றி தோல்விகளின் காலப் பரிமாணங்கள் மிகவும் குறைவானவை. அவற்றைக் கடந்து வாழ்வின் இலக்கையும் வளத்தையும் மேன்மையையும் உணர்ந்து முன்னே செல்லக் கற்றுக்கொள்ளவேண்டும்.

    தோல்விக்குத் துணை போகும்பொழுது நம்பிக்கையின் ஆணிவேர்கள் அசைக்கப் படுகின்றன. அதற்கு இடம் கொடுக்கும் பொழுது அது நம்மைப் பார்த்து சிரிப்பது மட்டுமின்றி நம்மை நாமே தரக்குறைவாக எடைபோடக் காரணமாகின்றது.” நம்முடைய வீழ்ச்சிக்கு வேறு யாரும் பொறுப்பேற்க முடியாது. அதன் முழுப்பொறுப்பும் நமதே.” என்றும் “நம்முடைய சம்மதமின்றி யாரும் நம்மை வீழ்த்த முடியாது ” என்றும் மனநல வல்லுநர்கள் உறுதியாகக்  கூறுகின்றனர்.

    iதோல்வியை நாம் ஏன் ஏற்றுக்கொள்கின்றோம்? நமது தோல்விகளுக்கான பொதுவான காரணங்கள்தான் என்ன? சிலவற்றைக் காண்போமே !

    1. நமது இலக்குகளில் தெளிவு இல்லாமல் இருக்கலாம்.
    2. இலக்கை நோக்கிச் செல்லும் பாதைகள் தவறாக இருக்கலாம்.
    3. நமக்கே அந்த இலக்குகள் மீது போதுமான நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.
    4. நம்து முயற்சிகள் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம்
    5. நமது முயற்சியின் வேகமும் தாக்கமும் வலுவானதாக இல்லாமல் இருக்கலாம்.
    6. நமது திறன்கள் வெற்றியை அளிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம்.

    7, நாம் பல நேரங்களில் நமது பார்வைகளை மற்றவரிடம் செலுத்தி அவர்களோடு ஒப்பிட்டு நமது திறன்களுக்கும்  முயற்சிகளுக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கலாம்.

    1. நமது கற்றல், திறன்கள், ஆக்க சக்திகள் ஆகியவற்றை விலக்கி நாம் மற்றவர்களுடைய திறன்கள் ஆக்க சக்திகள் ஆகியவற்றை நமது பாதைகளில் இறக்குமதி செய்து முன்னேற்றத்திற்கு நாமே தடைக்கல்களை உருவாக்கிக் கொண்டிருக்கலாம்.
    2. நமது செயல் கருவிகள் துருப்பிடித்தாக இருக்கலாம்.

    10.முயற்சிப் பாதைகளில் நாம் புதிய கற்றல்களைத் தவிர்த்து பின்னடைந்து கொண்டிருக்கலாம்.

    மேடைகளில் ஏறி பலமுறை முயன்றும் சரியாகப் பேச முடியாமல் திணறிய வின்ஸ்டன் சர்ச்சில் உலகின் ஒரு மிகச் சிறந்த பேச்சாளராக மாறியது சரித்திரம் கண்ட உண்மை. தன்னுடைய படைப்புக்கள் பல முறை திரும்பி வந்ததால் மனம் நொந்து போன ஜார்ஜ் பெர்னார்ட் ஷா உலகின் மிகப் பெரிய படைப்பாளியாக உருவானது உலகம் அறிந்ததே! தான் கண்டுபிடித்த கார்கள் விற்க முடியாமல் கடனில் அவதிப்பட்ட போர்ட் உலகின் ஒரு சிறந்த தொழிலதிபராக முன்னேறியது யாவரும் அறிந்ததே!

    படிக்கும் காலத்தில் நேரத்தை வீணடித்து நம்முடைய திறன்களை சீரழித்து மற்றவர்களுடைய மகிழ்ச்சியை நமது மகிழ்ச்சியாக நினைத்து தோல்விகளை முடிவுகளாகக் கருது எத்தனை இளைஞர்கள் மனநோய்களுக்கு இரையாகி இருக்கின்றார்கள்! இது வேதனையான விசயம். அது மட்டுமல்ல நாம் மற்றவர்கள் போல் வாழ முடியவில்லையே என நினைத்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயற்சிக்கின்றார்கள்” அவர்கள் தோல்விகளின் காரணங்ளைப் புரிந்து கொள்ளவேண்டும்.

    சில நேரங்களில் நாம் எத்தனை முயற்சிகள்  செய்தாலும் பலன் கிடைப்பதில்லை..  காற்று எதிர்நோக்கி வீசுகின்றது. நம்மால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை. “எதிர்நோக்காகக் காற்று வீசும் பொழுது திறமையான மாலுமிகள் தங்கள் பாய்மரங்களின் திசைகளை மாற்றி சரி செய்து கொள்ளுகின்றார்கள்” என்பது ஒரு வழக்கு மொழி. இதன் உட்கருத்தைப் புரிந்து செயல்படுபவர்கள் பாதிப்புக்களுக்கு ஆளாவதில்லை.

      பல நேரங்களில் நம்முடைய தோல்விகளுக்கு முன்னேற்றத் தடைகளுக்கும் காரணமாக இருப்பது நம்முடைய “இயலாமை மனப்போக்கு’  என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். காலப்போக்கில் இந்த மனப்போக்கு ஒரு உள்ளடங்கிய கற்றலாக மாறி எந்தப் புதிய முயற்சியிலும் திறனாக்கத்திலும் தடைக்கல்லாக அமைகின்றது. இதன் காரணமாக நாம் அடிக்கடி ” இது எனக்கு வராது. இதை என்னால் கற்றுக்கொள்ள முடியாது. இதற்கும் எனக்கும் ரொம்ப தூரம். இந்தக் கற்றலின பாக்கியத்தை இறைவன் எனக்கு அளிக்கவில்லை. ஒரு வயதுக்கு மேல் நாம் இந்தப் புதிய கற்றலலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். இந்த வயதில் மூளை வேலை செய்யாது ” என்ற பலப்பல காரணங்களைக் கண்டுபிடுத்து  நம்மைச் சிறைப் படுத்திக்கொள்கின்றோம். இவை அத்தனையும் இயலாமை மனப்பான்மையின் அறிகுறிகள்.

     தற்போதைய அறிவியல் ஆராய்ச்சிகள் நமது மூளையின் திறன்களையும் ஆக்க சக்தியையும்  வெளிச்சம் போட்டுக்காட்டி நமது தொடர் கற்றலின் ஆற்றல்களை விளக்குகின்றன.

    தோல்விகளைக் கண்டு துவழாமலும் வெற்றிகளின் போதையில் மயங்காமலும் சீராக வாழ்ந்துபார்க்க முயற்சிக்கலாமே !

    தொடரும்..

    Share
  • குறளின் கதிர்களாய்…(228)

     

    நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்தின்

    பகையு முளவோ பிற.                                                

           -திருக்குறள் -304(வெகுளாமை)

    புதுக் கவிதையில்…

     

    தவத்தின் பலனாய்

    ஒருவன் பெற்ற

    முக மலர்ச்சியையும்

    அக மகிழ்ச்சியையும்

    அழித்துவிடும்

    அவன்கொண்ட சினம்..

    அச் சினத்தை மிஞ்சிய

    பகையேதும்

    அவனுக்கில்லை…!

    குறும்பாவில்…

     

    கொள்ளும் கோபம் அழித்துவிடும்                

    மனிதனின் முக அக மகிழ்ச்சிகளை,  

    அதைமிஞ்சிய பகையும் வேறில்லை…!

    மரபுக் கவிதையில்…

    தவத்தால் வந்திடும் அகமகிழ்வும்

         தொடர்ந்து சேரும் முகமகிழ்வும்,

    அவற்றால் வந்திடும் முழுமகிழ்வு

         அனைத்துமே யழிந்திடும் கோபத்தாலே,

    அவப்பெயர் தந்தே யழித்துவிடும்

         ஆற்றல் மிக்க சினமதுபோல்

    அவனை யழிக்கும் பகையதுதான்

         அவனி மீதில் வேறிலையே…!

    லிமரைக்கூ..

     

    அறவோர் கொண்டிடும் கோபம்,      

    மகிழ்ச்சியை யழிப்பதுடன் அவரையழிக்கும்                    

    ஆற்றல்மிகு பகையாகும் சாபம்…!

    கிராமிய பாணியில்…

     

    கோவப்படாத கோவப்படாத

    கொடுமதரும் கோவப்படாத..

    தவமிருந்து சேத்துவச்ச

    மொகப்பொலிவயும் மனநெறவையும்

    தானே அழிச்சிப்புடும்

    தடயில்லாம வருங்கோவம்..

    அவன அழிச்சிட

    அதமிஞ்சின கொடிய

    பகயேது மில்ல..

    அதால

    கோவப்படாத கோவப்படாத

    கொடுமதரும் கோவப்படாத…!

    செண்பக ஜெகதீசன்…

     

    Share
  • நாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு நாற்பது ஆண்டு பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும்

    Posted on October 6, 2018

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

    ++++++++++++++++++

    1. https://youtu.be/rl1gtC6kuPg
    2. https://youtu.be/L4hf8HyP0LI
    3. https://youtu.be/prYDgWDXmlQ
    4. https://youtu.be/AbZ-6CcKw5M
    5. https://youtu.be/seXbrauRTY4
    6. https://youtu.be/rl1gtC6kuPg

    https://voyager.jpl.nasa.gov/

    https://www.nasa.gov/mission_pages/voyager/index.html

    See the source image

    ++++++++++++

    நாற்பதாண்டுகள் பயணம் செய்து
    நாசாவின் விண்வெளிக்
    கப்பல்கள் இரண்டு
    சூரிய மண்ட லத்தின் காந்த
    விளிம்புக் குமிழைக்
    கடக்கும் !
    அண்டைப் பரிதி மண்டலத்தை
    நெருங்கும்  !
    நேர்கோட் டமைப்பில் வந்த
    சூரியனின்
    வெளிப்புறக் கோள்களை
    விண்கப்பல் இரண்டும்,
    உளவுகள் செய்யும் !
    நெப்டியூனின் நிலவை,
    கருந் தேமலை,
    பெரும் புயலைக் காணும் !
    நாலாண்டுத் திட்டப் பயணம்
    நீள்கிறது
    நாற்பது ஆண்டுகட்கும் மேலாய் !
    அண்டைப் பரிதி மண்டலத்தின்
    அன்னிய கோள்களுக்கு
    சின்னமாய் எடுத்துச் செல்லும் நமது
    ஞாலக் கதை சொல்லும்
    காலச் சிமிழை !

    +++++++++++++++++

    See the source image

    நாற்பது ஆண்டுகள் கடந்து தொடர்ந்து பயணம் செய்யும் நாசாவின் அகிலத் தாரகை விண்ணுளவிகள் [Interstellar Probes]  

    [2018 அக்டோபர் 5 ]

    நாசாவின் விண்வெளி உளவி வாயேஜர் -2  நாற்பத்தி ஒன்று ஆண்டுகளாய் நெடுந்தூரம் ப்யணம் செய்து, நமது சூரிய மண்டலக் காந்த விளிம்பில் ஊர்ந்து, சூரிய ஏற்பாடுக்கு அப்பால் எழும்  தீவிர அகிலக்கதிர்கள் [Intersellar Cosmic Rays] தாக்குவதை அறிவித்துள்ளது. 1977 இல் ஏவப்பட்ட வாயேஜர் -2 விண்ணுளவி பூமியிலிருந்து சுமார் 11 பில்லியன் மைல் [17.7 பில்லியன் கி.மீ.] தூரத்தில் [2018 செப்டம்பர் 5 ] போய்க் கொண்டுள்ளது.  2007 ஆண்டு முதல் வாயேஜர் -2 சூரிய மண்டலக் காந்தக் குமிழியின் விளிம்பு வெளிப்புறக் கோள அடுக்கில் [Heliosphere] பயணம் செய்கிறது. அதற்குப் பிறகு எல்லையில் உள்ள சூரிய விளிம்பு நிறுத்த வரம்பை [Heliopause]  விண்ணுளவி வந்தடையும்.  அந்த வரம்பைக் கடந்ததும் வாயேஜர் -2 விண்ணுளவி, முதல் வாயேஜர் -1 போல் அகிலத் தாரகை அரங்கில் [Interstellar Space] நுழைந்த இரண்டாவது விண்கப்பல் சாதனையாக இருக்கும். 2012 இல் முதல் வாயேஜர் -1   சூரிய மண்டலக் காந்த விளிம்பை கடந்து அகிலத் தாரகை அரங்கில் நுழைந்து விட்டது.

    See the source image

    சென்ற 2017 ஆகஸ்டு முதல், வாயேஜர் -2 விண்ணுளவி  உயர்சக்தி அகிலக் கதிர்கள் [High Energy Cosmic Rays] தாக்குதல் 5% மிகையாகி உள்ளது. வெகு வேகமாய்ச் செல்லும்  அகிலக் கதிர்கள் சூரிய மண்டலத்துக்கு அப்பாலிருந்து வருபவை.  இதேபோல் 2012 இல் வாயேஜர் -1 விண்ணுளவியும்  5% மிகையான  தீவிர அகிலக் கதிர்கள் தாக்குதல் பெற்றுள்ளது.

    +++++++++++++++++++

    “இப்போது வாயேஜர் -1 எல்லை மாற்ற அரங்கத்தில் பயணம் [Transition Zone] செய்கிறது [2012].  விண்கப்பல் சூரிய விளிம்பு நிறுத்த வரம்பைக் [Heliopause] கடந்து அகில விண்மீன் ஈடுபாட்டு ஊடகத்தில் [Interstellar Medium] புகுந்து இங்குமங்கும் ஊசலாடி இருக்கலாம். ”

    ராபர்ட் டெக்கர் [John Hopkins University in Maryland]

    சூரிய மண்டலத்தின் காந்த விளிம்பு பற்றிய மகத்தான முக்கிய தகவலை  வாயேஜர் விண்ணுளவிகள் அறிவித்து வருகின்றன.

    ரோஸின் லாலிமென்ட் [பாரிஸ் வானியல் நோக்ககம்]

    “வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 35 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது !  ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.”

    எட்வேர்டு ஸ்டோன் (வாயேஜர் திட்ட விஞ்ஞானி) (C.I.T. Pasadena)

    “பரிதி மண்டலத்தின் வெளிப்புறத்தில் என்ன இருக்கிறது என்று காண நமது கண்களை விழிக்கச் செய்தது வாயேஜர் விண்கப்பல் !  அதைத் தொடர்ந்துதான் கலிலியோ, காஸ்ஸினி விண்கப்பல் பயணத் திட்டங்கள் உருவாக அழுத்தமான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தன.”

    ஜான் கஸானி, (வாயேஜர் விண்கப்பல் திட்ட ஆளுநர்) (1975-1977)



    “வாயேஜர் திட்டத்தின் வியப்பான விளைவுகளில் குறிப்பிடத் தக்கது அது பயணம் செய்த காலமே !  175 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிதி மண்டலத்தில் நிகழும் புறக்கோள்களின் நேரமைப்பு (Planetary Alignment of Jupiter, Saturn, Uranus & Neptune) விண்கப்பலை ஏவி அனுப்பும் ஆண்டு களில் ஏற்பட்டது.  தொலைத் தொடர்பு, மின்னியல், மின்னாற்றல், விண்கப்பல் நகர்ச்சிக் கட்டுப்பாடுக்கு ஏற்ற கருவிகளின் பொறி நுணுக்கங்கள் அப்போது விருத்தியாகி இருந்தன.

    ஹாரிஸ் சூர்மையர் (Harris Schurmeier, Voyager Project Manager) (1970 -1976)

    “வாயேஜர் விண்கப்பல் பயணம் எத்தகைய மகத்துவம் பெற்ற திட்டம் !  நமது பரிதி மண்டலத்தின் விரிவான அறிவைப் பெற வழிவகுத்த வாயேஜரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் நான் பெருமிதம் அடைகிறேன்.  ஆழ்ந்த விண்வெளித் தொடர்புக்கும் வாயேஜர் விண்கப்பலுக்கும் உள்ள நீடித்த இணைப்பை வியந்து அந்தக் குழுவினரில் ஒருவராய் இருப்பதில் பூரிப்படைகிறேன்.”

    டாக்டர் பீடர் பூன் (தொலைத் தொடர்பு & திட்ட ஏற்பாடு ஆளுநர்) (2004-2010)

    நாசாவின் வாயேஜர் 1 & 2 விண்கப்பல்களில் நமது வரலாற்றை, கலாச்சாரத்தைப் படங்களாய், பாடல்களாய்க் கூறும் காலச் சின்னத்தைப் (Time Capsule) பதித்து அனுப்பியுள்ளார்கள்.  அது 12 அங்குல வட்டத்தில், தங்க முலாம் பூசப்பட்ட ஒரு தாமிரத் தட்டு.  அண்டை விண்மீன் மண்டலத்தினர் (Aliens) விண்கப்பலைக் கைப்பற்றினால் அவருக்கு ஒரு நினைவுப் பரிசாய் அளிக்க வைக்கப்பட்டுள்ளது.

    நாசா வெளியிட்ட அறிக்கை

    புதிய வரலாற்று மைல் கல் நாட்டும் வாயேஜர் விண்கப்பல்கள்

    35 ஆண்டுகளாய் சுமார் 10 பில்லியன் மைல் பயணம் செய்து, தற்போது சூரிய மண்டலம் தாண்டிப் பிரபஞ்சக் காலவெளியில் தடம் வைத்துள்ள வாயேஜர் விண்கப்பல்கள் 1 & 2 புதியதோர் சாதனை மைல் கல்லை வரலாற்றில் நாட்டியுள்ளது.   இது நாசா விஞ்ஞானிகளின் மாபெரும் விண்வெளித் தேடல் சாதனைகளில் ஒன்றாக மதிக்கப் படுகிறது.   10 பில்லியன் மைல்கள் தாண்டிய பிறகும் அவற்றின் மின் கலன்கள் சிதையாமல் இன்னும் பணி புரிந்து வருகின்றன.   சூரிய மண்டலத்தின் புறக் கோள்களான பூதக்கோள் வியாழன், வளையங்கள் அணிந்த சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றின் தகவல் அறிவித்து இப்போது சூரிய எல்லை தாண்டி அடுத்த விண்மீன் மண்டலத்தில் அடியெடுத்து வைக்கிறது.  இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் மணிக்கு 38,000 மைல் வேகத்தில் பயணம் செய்கின்றன.   அவற்றில் தங்க முலாம் பூசிய 12 அங்குல தாமிரப் பதிவுத் தட்டும், அதைப் பேச வைக்கும் பெட்டியும் வைக்கப் பட்டுள்ளன.

    2004 ஆண்டிலேயே வாயேஜர் -1 வரம்பு அதிர்ச்சி [ Termination Shock ]  தளத்தைக் கடந்து சூரியப் புயலின் துகள்களும், அதனைக் கடந்த விண்வெளி துகள்களும் மோதும் பகுதியில் பயணம் செய்துள்ளது.   இதுவே கொந்தளிப்புள்ள அரங்க மென்று [Turbulent Zone, called Heliosheath] கருதப் படுகிறது.  இதுவே சரிந்து முடிவில் சூரிய மண்டல நிறுத்த அரங்கம்  [Heliopause] என்பதில் இறுதி ஆகிறது.   அப்பகுதியி லிருந்து அகிலவெளி விண்மீன் அரங்கம் [Interstellar Space] தொடங்குகிறது.

    இரண்டு வாயேஜர்களின் கருவிகள் இயக்கி வருபவை ஆயுள் நீண்டஅணுக்கரு மின் கலன்கள் [Long Life Nuclear Batteries].  அவை 2025 ஆண்டு வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  வாயேஜர் -1 விண் கப்பலிலிருந்து பூமிக்குத் தகவல் வர சுமார் 16:30 மணிநேரம் ஆகிறது.

    நாசா கண்காணித்து வரும் வாயேஜர் விண்வெளிப் பயணம்

    2010 மே மாதம் 17 ஆம் தேதி நாசா ஜெட் உந்துகணை ஏவகத்தின் (NASA’s Jet Propulsion Lab) பொறியியல் நிபுணர்கள் 8.6 பில்லியன் மைல் தூரத்தில் பரிதி மண்டலத்தின் விளிம்பைத் தாண்டிப் பயணம் செய்யும் வாயேஜர் 2 இன் உட்புறக் கணினியை முடுக்கி அதன் பணியை மாற்றம் செய்தார்.  அதனால் விண்கப்பலின் நலம் மற்றும் நிலைமைத் தகவல் மட்டுமே பூமிக்கு அனுப்பப்படும்.  மே முதல் தேதி வந்த தகவலில் விண்கப்பல் நலமோடு பயணத்தைத் தொடர்வதாக அறியப் பட்டது.

    ஏப்ரல் 22 இல் வாயேஜர் -2 இலக்கத் தகவலில் (Data Packets) மாறுதலைக் கண்டார்.  திட்ட நிபுணர் விஞ்ஞானத் தகவல் அனுப்புதலைச் செம்மைப் படுத்த உளவு செய்தார்.  ஏப்ரல் 30 இல் பூமியிலிருந்து வாயேஜருக்கு அனுப்பும் தொடர்பு சீராக்கப் பட்டது.  பூமியிலிருந்து வாயேஜருக்குத் தகவல் போக 13 மணி நேரமும், மறுபடிப் பதில் பூமியில் உள்ள நாசாவின் ஆழ்வெளித் தொலைத் தொடர்பு வலைக்கு (NASA’s Deep Space Network on Earth) வந்து சேர 13 மணி நேரமும் ஆயின.

    வாயேஜர் 2 விண்கப்பல் முதலாக 1977 ஆகஸ்டு 20 ஆம் தேதி பூதக்கோள் வியாழன், வளையக்கோள் சனி ஆகிய இரண்டையும் துருவி உளவாய்வு செய்ய நான்கு ஆண்டுகள் பயணம் செய்ய ஏவப் பட்டது.  அதன் இரட்டை விண்கப்பல் வாயேஜர் 1 இரண்டு வாரங்கள் கடந்து அனுப்பப் பட்டது.

    இப்போது அவை இரண்டும் பரிதியின் புறக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் உளவிப் பரிதியின் விளிம்புக் குமிழியைத் (Heliosphere) தாண்டி அப்பால் அகில விண்மீன் மந்தை வெளி வாசலில் (Interstellar Space) தடம் வைத்து விட்டன !

    “வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 33 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது !  ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.” என்று வாயேஜர் திட்ட விஞ்ஞானி எட்வேர்டு ஸ்டோன் கூறுகிறார்.

     

     

    வாயேஜர் விண்கப்பல் ஏவப்பட்ட பொன்னான காலம் சிறப்பானது,  175 ஆண்டுகளுக்கு ஒருமுறைப் புறக்கோள்கள் நான்கும் நேர் கோட்டமைப்பில் வருகின்றன.  அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாயேஜர் விண்கப்பல்கள் நேர் போக்கில் நான்கு பெரும் புறக்கோள்களையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் ஆராய வசதியானது.

    புறக்கோள்களை ஆராய்ந்த வாயேஜர் விண்கப்பல்கள்

    1986 இல் வாயேஜர் 2 யுரேனஸ் கோளையும், 1989 இல் நெப்டியூன் கோளையும் கடந்து சென்றது.  அப்போது சிறப்பாக விண்கப்பல் நெப்டியுனில் இருக்கும் மிகப் பெரிய கரு வடுவையும் (Great Dark Spot) மணிக்குப் ஆயிரம் மைல் வேகத்தில் அடிக்கும் சூறாவளியையும் எடுத்துக் கட்டியது. செந்நிற நைட்ரஜன் பனிக்கட்டியி லிருந்து பீறிட்டெழும் ஊற்றுகளையும் (Geysers from Pinkish Nitrogen Ice) அவை நெப்டியூன் துணைகோள் டிரைடான் துருவங்களில் (Polar Cap on Triton) பனியாய்ப் படிவதையும் படம் பிடித்து அனுப்பியது.  வாயேஜர் 1 பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “லோ” வில் (Jupiter’s Satellite Lo) தீவிரமாய் எழும்பும் எரிமலை களைப் படமெடுத்தது !

    மேலும் சனிக்கோளின் அழகு வளையங்களில் உள்ள நெளிவு, சுழிவுகளையும், மேடு பள்ளங்களையும் காட்டியது !  2010 மே மாதத்தில் வாயேஜர் 2 பூமியிலிருந்து 8.6 பில்லியன் மைல் (13.8 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் வாயேஜர் 1 பூமியிலிருந்து 10.5 பில்லியன் மைல் (16.9 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் பயணம் செய்கின்றன !

    வாயேஜர் திட்டங்கள் அண்டைக் கோள் ஈர்ப்புச் சுற்று வீச்சு உந்து முறையால் (Flyby Gravity Swing Assist) விரைவாக்கப் பட்டு சிக்கனச் செலவில் (Two Third Cost Reduction) செய்து காட்ட உருவாயின.  வாயேஜரின் மகத்தான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த முதல் 12 ஆண்டுகளில் நாசாவுக்கு நிதிச் செலவு 865 மில்லியன் டாலர்.  அந்த உன்னத வெற்றியால் அவற்றின் ஆயுள் இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கப்பட்டு மேற்கொண்டு 30 மில்லியன் டாலரே நிதிச் செலவு கூடியது !

    பரிதி மண்டலத்தின் எல்லைக் குமிழியைக் கடக்கும் விண்கப்பல்கள் !

    வாயேஜரின் அகில விண்மீன் விண்வெளித் திட்டப் பயணம் (Intersteller Mission) துவங்கிய போது பரிதியிலிருந்து வாயேஜர் 1 சுமார் 40 AU தூரத்திலும் (AU -Astronomical Unit) (AU = Distance Between Earth & Sun), வாயேஜர் 2 சுமார் 31 AU தூரத்திலும் இருந்தன.  பரிதியை விட்டு நீங்கும் வாயேஜர் 1 இன் வேகம் : ஆண்டுக்கு 3.5 AU தூரம்.  வாயேஜர் 2 இன் வேகம் : ஆண்டுக்கு 3.1 AU தூரம்.  இரண்டு விண்கப்பல்களும் இன்னும் பரிதி மண்டலத்தின் எல்லை அதிர்ச்சி அரங்கில்தான் (Termination Shock Phase) நகர்ந்து செல்கின்றன !  அந்த வேலி அரங்கில் பரிதியின் காந்த மண்டலச் சூழ்வெளிக் கட்டுப்பாடுக்குள் இயங்கி வருகின்றன.  அதி சீக்கிரம் வாயேஜர் -1 எல்லை அதிர்ச்சியில் ஈடுபட்டு பரிதிக் கவசத்தை (Heliosheath) உளவி ஆராயத் துவங்கும்.  எல்லை அதிர்ச்சி அரங்கிற்கும், பரிதித் தடுப்பு அரணுக்கும் இடையே இருப்பதுதான் (Between Termination Shock Phase and Heliopause) பரிதிக் கவசம்.  வாயேஜர் பரிதிக் குமிழியை (Heliosphere) நீங்கும் போதுதான் அகில விண்மீன் வெளி வாசலைத் தொடத் துவங்கும் !

    வாயேஜர் விண்வெளித் தேடலின் உன்னதம் என்ன வென்றால் 33 ஆண்டுகள் கடந்த பின்னும் அதன் மின்சக்தி ஆற்றல் சிக்கனமாகச் செலவாகி, நகர்ச்சிக் கட்டுப்பாடு செய்யும் உந்து சாதனம் (Use of Available Electric Power & Attitude Control Propellant) செம்மையாக இயங்கி வருகிறது !  ஏவும் போது வாயேஜர் விண் கப்பலுக்கு மின்சக்தி அளித்தது : கதிரியக்க ஏகமூல வெப்ப-மின்சக்தி ஜனனி (Radioisotope Thermo-electric Generators – RTG).  முதலில் அது பரிமாறிய ஆற்றல் : 470 வாட்ஸ்.  1997 ஆரம்பத்தில் புளுடோனியத்தின் கதிர்வீச்சுத் தேய்வால் ஆற்றல் 335 வாட்ஸ் ஆகக் குறைந்தது.  2001 இல் ஆற்றல் 315 வாட்ஸ்,  மின்சக்தி ஆற்றல் இழப்பைக் குறைக்கச் சில சாதனங்கள் நிறுத்தப் பட்டன.  இந்த ஆற்றல் இழப்பு நிலையில் நகர்ந்தால் வாயேஜர் 2020 ஆண்டுக்கு மேல் இயங்கிச் செல்ல முடியாது முடங்கிப் போகும் !

    கார்ல் சேகன் தயாரித்து வாயேஜரில் அனுப்பிய தங்க வில்லை

    இன்னும் சில மாதங்களில் நாசா வாயேஜர் 1 & 2 ஏவிய முப்பதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும்.  2010 மே 15 ஆம் தேதிப்படி இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் புறக் கோள்களில் ஒன்றாக ஒரு காலத்தில் கருதப்பட்ட புளுடோவின் சுற்று வீதியைக் கடந்து அண்டையில் உள்ள புதிய பரிதி மண்டலத்தின் வாசலுக்கு வந்து விட்டன. மேலும் வாயேஜர் விண்கப்பல்கள் நமது உலக மாந்தரின் வரலாற்றைப் பதித்த காலச் சின்னம் (Time Capsule) ஒன்றைத் தூக்கிச் செல்கின்றன.  உலக வரலாற்றுப் பதிவுக்காக அற்புதப் படங்கள், மனிதர் பெயர்கள், இசைப் பாடல்கள் ஆகியவற்றை கார்ல் சேகன் ஆறு மாதங்களாகத் தகவலைச் சேகரித்தார்.  படங்களில் ஐக்கிய நாடுகளின் தலைமையகம் பற்றியும், இந்தியாவில் கிரீன் ஹௌஸ் வாயுக்கள் சேமிப்பு பற்றியும். ஜார்ஜ் புஷ்ஷின் படமும் இடம் பெற்றுள்ளன.  நமது வரலாற்றைக் கூறும் ‘காலச் சின்னம்’ அண்டைக் கோளப் பிறவிகட்கு நமது இளவச நன்கொடை யாக இருக்கும்.

    ———————–

    *************************

    படங்கள்:  BBC News, National Geographic News, NASA

    தகவல்:

    a)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206171&format=html(Jupiter)

    b)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html(Saturn)

    c)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206231&format=html (Uranus & Neptune)

    1.  National Geographic News – Voyager 1 at Solar System Edge By : Stefan Lovgren (June 2, 205)

    2.  National Geographic News – Voyager Probes Send Surprises from Solar System Edge By : Richard A. Lovett (September 26, 2006)

    3.  NASA’s Golden Gift to the Aliens : 30 Years Later Voyager 1 & 2 By : Kevin Friedl (May 15, 2010)

    4.  NASA’s Voyager 2 Spaceship “Hijacked By Aliens’ By : Stephanie Dearing (May 15, 2010)

    5.  From Wikipedia – Voyager 2 (May 16, 2010)

    6.  Voyager 2 Journey By NASA (Updated on May 17, 2009)

    7.  Space Travel :   Mankind’s Messenger [Voyager 1 & 2]  at the Solar System  Frontier  [September 5, 2012]

    8.  http://en.wikipedia.org/wiki/Voyager_1   [September 8, 2012]

    9.  http://www.history.com/news/6-fascinating-facts-about-space-probe-voyager-1  [September 5, 2012]

    10.  http://voyager.jpl.nasa.gov/mission/interstellar.html  [Interstellar Mission]

    11. https://www.theguardian.com/science/2015/mar/15/voyager-1-and-2-space-journey-nasa  [March 15, 2015]

    12.https://www.nasa.gov/mission_pages/voyager/index.html [September 2017]

    13.  https://www.nasa.gov/press-release/nasa-s-voyager-spacecraft-still-reaching-for-the-stars-after-40-years  [July 31, 2017]

    14. https://www.space.com/37775-nasa-voyager-mission-40-years-launch.html  [August 12, 2017]

    15. https://www.jpl.nasa.gov/news/news.php?feature=7252&utm_source=iContact&utm_medium=email&utm_campaign=nasajpl&utm_content=daily20181005-1  [October 5, 2018]

    ********************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) October 6, 2018 [R-1]

    Posted in அண்டவெளிப் பயணங்கள்பிரபஞ்சம்பொறியியல்விஞ்ஞானம் Leave a reply

    Attachments area
    Preview YouTube video See Two Spacecraft Journey to Outer Reaches of Solar System | National Geographic

    Preview YouTube video Voyager Reaches Interstellar Space

    Preview YouTube video Voyager in Interstellar Space! On This Week @NASA

    Preview YouTube video Where Are the Voyagers Now? Remembering the Amazing Voyager Missions

    Preview YouTube video Voyager Journey to the Stars

    Share