படக்கவிதைப் போட்டி 65-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி

இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் திருமிகு. சாந்தி வீஜே. இதனைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விரு ’சாந்தி’யருக்கும் வல்லமை இதழின் நனிநன்றி!

crow with a paper

காகமும் அதன் அலகில் வீற்றிருக்கும் வண்ணக் காகிதமும் நம் கண்ணைக் கவர்கின்றன.

இப்படம் நம் கவிஞர்களுக்கு எத்தகைய உணர்வலைகளை எழுப்பியிருக்கின்றன எனக் காண்போம்!

***

உரக்கக் கரைந்து, உறவினர் வருகையை அறிவிக்கும் காக்கையே! சிறுவர் கைப்பண்டத்தை நீ பறித்துவந்தது முறையோ? என வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

உறவாய் எண்ணிய காக்கையாரே
உமது குணமது மாறியதே,
சிறுவர் கையில் பண்டமதைச்
சேர்த்தே பிடுங்கி வந்தீரே,
உறவினர் வரவை உரைப்பதினால்
உயர்வாய் எண்ணி யிருந்தோமே,
பிறப்பில் எமது முன்னோராய்ப்
போற்றிய பெருமையும் பொய்யாச்சே…!

***

இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை அறிந்துகொள்ளும் நேரமிது!

”காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள” என்பது வள்ளுவம்.

கூடிவாழ்வதிலே, தேடியதைக் கரவாது தம் உறவுகளோடு பங்கிட்டு உண்பதிலே மாந்தர்களுக்கே வழிகாட்டியாய்த் திகழ்பவை காக்கைகள்.

பகுத்துண்பது உயர்குணந்தான் என்றாலும் மற்றவரின் பொருளைத் திருடிவந்தா அதனைச் செய்வது? என்று காக்கையைக் கண்டிக்கிறது ஒரு கவிதை! 

காகமே உன்
தாகம் தீர்க்க
தண்ணீரும்
பசிக்கு அன்னமும் இட்டேன்
நீ சனீஸ்வரரின் வாகனமாம்
முன்னோர்களின் சின்னமாம்
நீ கரைந்தால்
விருந்தினர் வருவதாகவும்
நீ வலமாகப் போனால்
காரிய சித்தியாகவும்
உன்னைப்புகழ்ந்து
பாடியிருக்காராம்
காக்கைப்பாடினியார்
இதெல்லாம் எனக்கு
செவிவழி வந்த செய்திதான்
ஒற்றுமைக்கும்
பகிர்ந்துணவுக்கும்
கூடி வாழ்தலுக்கும்
உவமையாகச் சொன்ன
உண்மைத்தகவலுக்காகவும்
உயிர்களுக்கு உதவணும்னுதான்
தண்ணீரும்
அன்னமும் இட்டேன்
அதனால்தான் உன் பகிர்ந்துணர்வைக் காட்ட
கடையிலிருந்தோ சிறுவர்
கையிலிருந்தோ
இதை பறித்து வந்திருக்கிறாயோ?
வேண்டாம் காகமே!
பறித்து வருவதும்
கவர்ந்து வருவதும் கூட
ஒரு வகையில் திருட்டுத்தானே?
எனக்கு இது வேண்டாம்!
அம்மா திட்டுவாள்
உன் அன்புக்கு நன்றி!

காக்கை குறித்த பல செவிவழிச் செய்திகளைத் தன் கவிதை வாயிலாய் நமக்கு அறியத்தந்திருக்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

 

 

Share

Comments

One response to “படக்கவிதைப் போட்டி 65-இன் முடிவுகள்”

  1. என் கவிதையை இந்த வாரத்தின் சிறந்த கவிதையாக தேர்ந்தெடுத்த திருமதி மேகலா ராமமூர்த்திக்கும் வல்லமை குழுவிற்கும் நன்றிகள்–சரஸ்வதிராசேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *