Tag: இன்னம்பூரான்

  • உன்மத்தம்: 2

    இன்னம்பூரான்

    பித்தரெல்லாம் பைத்தியம் அல்ல; பைத்தியம் எல்லாம் சைத்தியம் அல்ல; சைத்தியம் எல்லாம் ‘க்ராக்’‘அல்லது ‘செமிக்ராக்’ அல்ல. பித்தமில்லா எத்தன் பத்தரைமாத்துத் தங்கம் போல அரிதிலும் அரிது. சிலருக்கு ஸ்க்ரூ ரொம்ப லூசு; பலருக்குக் கொஞ்சம் கொஞ்சம் லூசு. ஒத்தருக்குவாது ஸ்க்ரூ டைட் இல்லை. டைட் பண்ணினால், உடைந்து விடும். இது தான் நிலாவெளிச்சம் போல நிதர்சனம்.

    எப்போது நமது சித்தம் நமது ஆளுமைக்குள் இல்லையோ,அதை ‘சித்தஸ்வாதீனம்’ இழந்த நிலை என்று கூறுவது வழக்கம் என்றாலும், சித்தம் நம் ஆளுமைக்குள் இருக்குமா அல்லது நாம் தான் என்றென்றும் சித்தத்தின் ஆளுமைக்குள், ஓட்டின்னுள் உறையும் ஆமையைப் போல, அடங்கி, ஒடுங்கி வாழ்நாளை கழிக்கிறோமோ என்ற சிக்கலை மனோதத்துவ சாத்திரம் இன்று வரை அவிழ்க்கவில்லை. இந்த நுட்பத்தை சிறிதேனும் புரிந்து கொண்டாலே, அவுத்துப்போட்டுட்டு அலையற அசத்துக்களுக்கும், அவதூதர்களின் ஆன்மீகத்துக்கும் உள்ள மடுவுக்கும், மலைக்கும் உள்ளது போன்ற வித்தியாசம் புலப்படும்.

    உன்மத்தம் பைத்தியமோ, சைத்தியமோ இல்லை. ஆன்மீக நினைவலைகளில் மங்காது வாழும் சேஷாத்திரி ஸ்வாமிகள், ஜட்ஜ் ஸ்வாமிகள், ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், விசிறி சாமியார் போன்றோரின் வரத்துப்போக்குக்களை காணக்கொடுத்துவைத்தவர்களில் சிலர் அவர்களது சதா சர்வதா மோன நிலையை கண்டு வியந்தனர். சிலர் அவர்களின் உன்மத்த நிலையை பரிகசித்தனர்.  அவரவர் மனதின் வரையறைகளை யாரால் தாண்ட முடியும்? உயிரனங்களின் மனோதத்துவம் பற்றி மனிதன் அறிந்து கொண்டது சொற்பம். இரண்டே வரியில் அதை உரைத்து விட்டார், எங்கள் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்:

    உடல் வெளுக்க வழி உண்டு எங்கள் முத்து மாரியம்மா,
    மனம் வெளுக்க வழி இல்லையே எங்கள் முத்து மாரி…

    `அபிநவ சுகபிரும்மம்` பிரும்மஸ்ரீ குழுமணி நாராயண சாஸ்திரிகள் எழுதிய `ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் சரித்திரம்` பற்றி உசாத்துணையில் படிக்கும் கொடுப்பினை கிடைத்தது. விருப்பம் உள்ளவர்கள்அதை முழுதும் படிப்பது நலமே.   அதிலிருந்து நன்றி நவின்று பகிர்ந்து கொள்ளும் சத்குரு அவர்களின் அதி ஆச்சரியமான உன்மத்த ஆசாரத்தைப் பற்றிய சில தகவல்கள் நான் சொல்வதை உறுதிப்படுத்துகிறது.

    வம்சாவளி தெய்வ அம்சம் பொருந்தியது. ஆதி சங்கரர் புனித நர்மதை நதியின் புண்யஸ்தலத்திலிருந்து காஞ்சிக்கு வரவழைத்த தேவி உபாசகர்களின் வம்சம் என்கிறார் `அபிநவ சுகபிரும்மம்`. ஜனவரி 22, 1890 அன்று ஜனித்த சேஷாத்திரி , குழவியாக இருக்கும்போதே தொட்டதெல்லாம் பொன்  என்று கியாதி. அந்த வம்சாவளியில் ஜோதிட சாஸ்திரம் கை வந்த கலை. இவருக்கு திருமணம் பேச ஆரம்பித்தவுடனேயே ‘சந்நியாச யோகம்’ என்று சொல்லி, அது நின்று போனதால் வருந்திய விதவைத்தாய் வாடினாள்; மறைந்தும் போனாள். சேஷாத்ரியோ சதா சர்வகாலமும் பூஜை, புனஸ்காரம், கோயில், குளம். கட்டிய துணி அழுக்கு; கலைந்தத் தலைமுடி; தாடி; பளிச் குங்குமம்; தேஜோமயமான முகாரவிந்தம். ஜபதபம், அதுவும் மயானத்தில். பாலாஜி சுவாமிகள் என்பவரிடம் தீக்ஷை. இன்று கூட அவருடைய தீக்ஷாநாமம் யாருக்கும் தெரியாது. அவரைப்போய் லெளஹீகத்தில் அடைத்துப்போட்டார்கள், தந்தையின் சிரார்த்தம் செய்ய. காலி அறை. மாயமாய் மறைந்து விட்டாராம். (பகவான் ஶ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்ஸரை பற்றியும் இப்படி ஒரு செய்தி உண்டு.) ஊரெல்லாம் இந்த அற்புதம் பற்றியே பேச்சு. வீட்டுக்கே செல்லாமல், ஜீவன் முக்தராக ஞானப்பித்தராக, தன்னை உணர்ந்து பிரும்மானந்தக்கடலில் நீந்தி திளைத்தவராய் சுற்றி அலைந்து கொண்டிருந்தார். கால்நடையாகவே பல புண்யக்ஷேத்திரங்களை தரிசித்து விட்டு, திருவண்ணாமலையே கதி என்று அங்கு வந்தடைந்தார்.

    “…அங்கேயே பல இடங்களில் பித்தனைப்போல சுற்றிக்கொண்டிருந்தார். அழுக்கு வேட்டி.சவரம் செய்யப்படாத முகம். கிடைத்ததை சாப்பிடுவார். சாப்பிடாமலும் இருப்பார். யாராவது புதிய வேட்டி கட்டி விட்டால், அடுத்த ஒரு மணியில் அது கந்தயாகி விட்டிருக்கும். குளக்கரை, குப்பைமேடு, எதோ ஒரு வீட்டின் திண்ணை, இப்படி எங்கு வேண்டுமானாலும் படுப்பார். பெரும்பாலும் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கம்பத்து இளையனார் கோயிலில் தான் அமர்ந்து இருப்பார் இதுதவிர, அன்ன சத்திரம், சடைச்சி ஆச்சியம்மாள் வீடு, சாதுமடம், சின்ன குருக்கள் வீடு, ஓயாமடம் போன்ற இடங்களிலும் அடிக்கடி தென்படுவார் 1889 ம் ஆண்டு தனது 19 ம் வயதில் அண்ணாமலைக்கு வந்த சுவாமிகள் நாற்ப்பது ஆண்டு காலம் அந்த புனித மண்ணில் `பைத்தியம்` போல உலவிவிட்டு தன பூத உடலை நீத்தார். அவர் அண்ணாமலையில் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல தீராத வியாதிகளும் மகானின் பார்வை பட்டதுமே பறந்தோடின. வாய் பேச முடியாதவர்கள் பேசினர். எமன் வாயில் சிக்கியவர்களைக்கூட மகான் மீட்டு இருக்கிறார்…’.

    பகவான் ரமணருக்கும் (அவருக்கு ‘உந்திப்பற’ உன்மத்தம்) இவருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது, தொட்டும் தொடாமலும்.

    (தொடரும்)

    உசாத்துணை:

    http://sirugamaniganesan.blogspot.co.uk/2011/10/sadguru-sri-seshadri-swamigal.html

    சித்திரத்துக்கு நன்றி: http://avatharsrisesha.files.wordpress.com/2009/12/ms.jpg

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே! – 16

     

    இன்னம்பூரான்

    கனம் கோர்ட்டார் அவர்களே ~14

    http://www.ecotippingpoints.org/our-stories/indepth/india-rajasthan-rainwater-harvest-restoration-groundwater-johad/Village-elder.jp

     

    எறும்பூர கல்லும் தேயும் என்பார்கள். மதம் பிடித்த யானை ஏறி, ஏறி மிதித்தாலோ, முதலையின் பல்லிடுக்கில் அகப்பட்டுக்கொண்டாலோ, என்ன ஆவது? இந்த பாரத தேசவாசிகள் அத்தகைய பேராபத்தில் சிக்கிக்கொண்ட வேளையிலும், வாதப்பிரதிவாதங்களில், பட்டிமன்றங்களிலே, அரட்டைக்கச்சேரியிலே, குடலாடி (மடலாடலில் ஒரு வகை!) மகிழும்போது, மலையை தடவிப்பார்க்கிறார்கள், ஊர்ந்த எறும்பு நகர்ந்த பின்!

    என்.ஹெச்.சசிதல் என்ற அரசு ஊழியர் மீது அதீதமாக ரூ.33.44 லக்ஷம் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்து 27 வருடங்கள் ஆயின. அக்காலத்தில், இது ஒரு கணிசமான தொகை. அவரோ, அலுத்துப்போய், வழக்கை வாபஸ் வாங்கக் கோரியுள்ளார். தற்காலிக பதவி நீக்கம், கீர்த்தி நாசம், வாழ்வியல் பாதிப்பு எல்லாம் தன்னை மிகவும் பாதித்து விட்டதாக, அவருடைய பிராது. அதை நிராகரித்த உச்ச நீதிமன்ற வாசகங்கள் (obiter dicta):

    “லஞ்சலாவண்யம் மக்களுக்கு ஒரு மந்திரமாகிவிடுமோ என்ற கவலை…தற்காலம் நம் தேசத்தின் குடலுருவி, நீக்கமற நிறைந்துள்ளது லஞ்சம். தம்பிடியோ, தங்கக்கட்டியோ, குற்றம் குற்றமே…இப்பெல்லாம் கோடிக்கணக்கில்… பதவி துஷ்பிரயோகம் செய்து சலுகைகள் காட்டுவது சமூக விரோதம்; மக்களை இழிவு படுத்துவது; சட்டத்தைத் துச்சமென கடாசுவது ஆகும்…அரசு நிறுவனங்கள் மீது நம்பிக்கை இல்லையெனில் ஆட்சி நன்றாக அமையாது…பதவி துஷ்பிரயோகம் பெருவாரி வியாதியாக எங்கும் பரவி விட்டது. லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற எண்ணம் வலுத்து வருகிறது…லஞ்சப்பேய், ~குட்டிச்சாத்தான், கொள்ளிவாய் பிசாசு எதாக இருந்தாலும்…அந்த கூளி குழப்பம் விளைவித்து, சமுதாய முன்னேற்றத்தில் குண்டு வீசி, ரவுடிகளின் கொம்பு சீவி, மனசாட்சியை கொன்று, சமுதாய மையங்களை குலைத்து, தேசத்தின் செல்வத்தை சூறையாடி, நல்லிணக்கத்தைத் தொலைத்து, அரசாளுமையின் புற்று நோயாக அமைந்து, சர்வநாசினி என்க…கன்னாபின்னாவென்று, முறைகேடாக, சொத்து சேர்ப்பதின் முதல் பலிகடா, மக்களின் நம்பிக்கை இழப்பு…பொது வாழ்வில் யோக்கியதை இல்லையென்றால், அடி வாங்குவது, மக்கள்…இது தான் தீர்ப்பின் பின்னணி.

    தீர்ப்பு: என்.ஹெச்.சசிதலின் மனு நிராகரிக்கப்படது. தாமதம் மோசம் தான். அந்த சால்ஜாப்பைச் சொல்லி, லஞ்ச வழக்குகளை வாபஸ் செய்தால், அது ‘தடியெடுத்தவன் தண்டல்காரன்’ என்ற போக்கில் கயவாளிகள் கொள்ளையடிக்க வழி வகுக்கும்.

    இதை எங்க கிராமத்துப் பெரிசு ஆறுமுகம் சேர்வையிடம் சொன்னேன். ‘இப்போ மட்டும் என்ன வாழுது?’ என்று கேட்டார். மயக்கம் வருமளவுக்கு, ஹூடாவின் ஹூடா, அப்பாவின் தாதுபுஷ்டி சப்பைக்கட்டு, நீர்மூழ்கியானாலும், பறக்கும் தட்டு ஆனாலும் ‘அடிடா கமிஷன்’ மந்திரம், மலை முழுங்கி தந்திரம், மணல் அள்ளும் யந்திரம் என்று அனுமார் வால் போல ஒரு நீண்ட பட்டியலை வாசித்தார். அந்த அளவுக்கு ல.லா. அபகீர்த்தி துர்வாசனை அடிக்கிறது.

    அவருக்கு மூச்சு வாங்கியதை சாக்காக வைத்துக்கொண்டு, விடை, மத்திய அரசு அசோக் சவான் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் இருக்கிறதே என்றேன். அவர் தான் மூச்சுமுட்ட எல்லா ஊடக செய்திகளை படிச்சுட்டாரே.  நான் சொன்னால், கேட்கமாட்டீர்கள். அவரே சொன்னார். கேளும், ஐயாமாரே! அம்மாமாரே!

    பெரிசு ஆறுமுகம் சேர்வை: 

    ராஜூ! என்னமோ காலேசிலே போய் படிச்சுட்டோம், ஜனநாயகம், தேசாபிமானம், தியாகம், அரசியல் சாஸனம், தேர்தல், பிரதிநிதி, அது, இது என்று உளறிக்கொட்டி, கிளறி மூடிரீங்க. என்ன தான் இருந்தாலும், வெள்ளைக்காரன் இப்படி வயத்திலே மண்ணடிக்கல்லை. அசோக் சவான் என்ற பிரதிநிதி சாமான்ய ஆசாமி இல்லை. முதல் மந்திரியாக்கும். அவர் மேலே ஆதர்ஷ் ஊழலிலும் பிராது கொடுத்தாங்க. தேர்தலில், பணத்தை வாரி இழைத்ததாகவும், ஊடகங்களில் காசு கொடுத்து, தற்புகழ்ச்சியை செய்தியாக போட்டு, வாக்கு என்று கொக்கின் தலை மேல் வெண்ணெய் வைத்ததாகவும், தேர்தல் கமிஷனுக்கு உண்மைக்குப் புறம்பான பிரமாணம் தாக்கல் செய்ததாக பேசறாங்க. இப்போ போய் தேர்தல் கமிஷனுக்கு அது பற்றி விசாரிச்சு, அவர் பதவிக்கு லாயாக்கா, இல்லையா என்று சொல்ல உரிமை இல்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் அடிச்சுப்பேசறது. கணக்குக்கொடுக்காவிட்டால் தான் அவர்கள் தலையிடலாமாம். பொய்யும், புனைசுரட்டும் பேசினாக்க, தேர்தலில் நிற்க தகுதி இல்லை என்று சொல்லலாமா? அந்த தகுதி தேர்தல் கமிஷனுக்கு இல்லை என்று ராசாங்கம் சொல்லுது, அப்பா, கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல். இத்தனைக்கும், இந்த ‘அப்புராணை’ பிரமாணம் ஒரு உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிர்மறை. (பல வருஷங்க முன்னாலெ அப்பு.) உனக்குத்தான் தெரியுமே, ராசாங்கத்தின் “ஆடிட்டர் ஜெனெரல் ஒழிக” அப்டிங்கிற கண்ணியம்! என்று சொல்லி விட்டு, புகையிலை துண்டு ஒண்ணை வாயில் அடக்கிக்கிட்டு, கொள்ளை சிரிப்புச் சிரித்தார், யாகாவா முனிவர் மாதிரி.

    ஓசை அடங்கின பின், ‘தணிக்கைத்துறை சமாச்சாரம் நிறைய இருக்கு, மாமு’ என்றதற்கு ஒரு நமுட்டுச்சிரிப்பு தான் பதில். முத்தாய்ப்பா, சொன்னேன், ‘மாமு! சேதி தெரியுமா? இதே அசோக் சவான் மீது அவரிடம் ‘தோத்துப்போனவர்’ ஒருவர் போட்ட வழக்கில், “ ‘ கொடுக்கப்பட்ட தகவல்களை வைத்துக்கொண்டு, அவரை பதவியிலிருந்து நீக்கணும்’ என்ற மனுவை ஜனவரியிலேயே உச்ச நீதி மன்றம் நிராகரித்து விட்டது.” என்றேன். நான் பேசியது குட்டிச்சுவருடன். அவர் எழுந்து போய்விட்டார், மாட்டுக்குத் தண்ணி காட்ட.

    (தொடரும்)

     

    சித்திரத்துக்கு நன்றி: http://www.ecotippingpoints.org/our-stories/indepth/india-rajasthan-rainwater-harvest-restoration-groundwater-johad/Village-elder.jpg

    Share
  • உன்மத்தம் :: 1

    இன்னம்பூரான்

    ‘பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா…’

    ‘பித்தா’ என்ற இந்த தெய்வம் தந்த ‘முதல்நற்றமிழ்’ சொல் என்னை எழுபது வருடங்களுக்குப் பின்னோக்கி இழுத்துச்செல்கிறது. தஞ்சை மேலவீதி கொங்கணேசுவரர் வித்யாசாலையில் காலை பிரார்த்தனை இவ்வாறு தொடங்கும்; உரக்கக் கோரஸாக, பல சுவரபேதங்களில் பாடுவோம்; பொருள் அறிந்ததில்லை. பாலு சாரிடம் பெருமானை ‘பித்தன்’ என்று விளிப்பது முறையோ என்று கேட்டேன். சொன்னது அப்போது ஏதோ கொஞ்சம் புரிந்தது; மறந்து விட்டேன். ஐந்து வருடங்களுக்கு முன்னால் அங்கு சென்றபோது, தலைமை ஆசாரியர் ‘பழைய மாணவரா’ என்று கனிவுடன் வினவி, பிரார்த்தனைக்கு அழைத்துச்சென்றார். அதே கோரஸ். நானும் கலந்து கொண்டேன். ஏதோ ஒரு ஈரப்பசை கண்களில். அது நிற்க.

    பெருமான் தனக்கு இட்டுக்கொண்ட விருது, இது. ஆலாலசுந்தரத்துக்கு மந்திரமாக உபதேசிக்கப்பட்டது. சுந்தரர் ஆட்கொள்ளப்பட்டது, திருவெண்ணைநல்லூர் பெருமானால். ‘தாட்பூட் தஞ்சாவூர்’ என்றெல்லாம் அதட்டிவிட்டு, சுந்தரரின் திருமணத்தை நிறுத்தி விட்ட மறையோன், திருவெண்ணைநல்லூர் கோயிலுக்குள் சென்று மறைந்துவிட்டார். பின்னர் தன் கோலம் காட்டி, தரிசனம். சொற்றமிழால் பாடுக என்று ஆணை. திகைத்து நின்ற மாஜி மாப்பிள்ளையிடம் பெருமான் ‘மணப்பந்தலில் என்னை பித்தனோ மறையோன்..’ என்றல்லவா நிந்தித்தாய். ‘பித்தா’ என்றே தொடங்கு என்றார். பதிகம், கோரஸ், மீள் கோரஸ், இன்றைய ‘உன்மத்தம்’ தொடர்… அகரவரிசை அன்பர்கள் முதல் திருமுறையிலேயே திருஞானசம்பந்தர் எருக்கத்தம் புலியூரில்,

    ‘விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ

    பெண்ஆண்அலி ஆகும் பித்தா பிறை சூடி…’

    என்று தோத்திரம் செய்ததை முன் வைப்பர்; எப்படியும் எல்லாரையையும் பைத்தியமாக அடிக்கும் பித்தத்தின் தலைக்காவேரி இறையருள் தான் என்பதையும் பார்ப்போம்.

    முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
    பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள்
    அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை
    தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே. (6.25.7)

    காதல் கொள்வதே பித்துப்பிடித்தாற்போலத்தான். பேரும், உருவும், ஊரும் அவளை மயக்கி, பெற்றோரை மறக்கச்செய்து, மரபு, வாழ்நெறி, அன்றாட நடவடிக்கை, தன்னிச்சை எல்லாம், தலைவனை நினைத்த மாத்திரம் காணாமல் போய்விடுகின்றன. ‘தேவாரம்’ என்ற இணையதளத்தில் கூறியப்படி,

    ‘… இத்திருப்பாடல் திருவாரூர்ப் பெருமானது திருப்பெயரைக் கேட்டவுடனே வசமழிந்த தலையன்புடையளாய தலைவி ஒருத்தியின் தன்மையை அவள் தோழி விளங்க உரைத்து , செவிலிக்கு அறத்தொடு நின்றதாக வைத்துச் சத்திநிபாதத்து உத்தமர்களது நிலையை விளக்கியருளியது… இனி , சத்திநிபாதத்தவரது நிலையை உரைக்குமிடத்து , நாமங் கேட்டல் முதலிய நான்கினையும் முறையே கேட்டல் , சிந்தித்தல் , தெளிதல் , நிட்டைகூடல் என்னும் நான்குமாகவும், பின்னர் உள்ளவற்றை அணைந்தோர் தன்மையாகவும் கொள்க… சமயம் , விசேடம் , நிருவாணம் ` என்னும் தீக்கைவழி , ` சரியை , கிரியை , யோகம் , ஞானம் ` என்னும் நான்கு பாதங்களில் நிற்கும் நிலைகளையுணர்த்தியவாறாக உரைப்பாரும் உளர்…’

    பிச்சி ஆனாளே, தலைமகள். அது காதலா? மோகமா? அல்லது பக்தியின் உன்மத்தமா? என்று நீங்களே தன்னுள்ளத்தைக் கேட்டு அறிந்து கொள்ளவும். பித்தனின்’ உன்மத்தத்தின் உத்தமத்தை, அதன் உன்னதத்தை அறிந்தவர்கள் அரிது. உன்மத்தங்கள் தான் எத்தனை வகை? எத்தனை வண்ணம்? அது மனோபாவமா அல்லது மோனமா அல்லது வெறும் மோகமா? வெறும் மோகமென்று ஒன்று உண்டா என்ன? மஹாகவி பாரதியார்’…கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி! உன்னைத் தழுவிடலோ, கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி!…’ என்று மன நிறைவுடன் பாடியதில் என்ன குற்றம் கண்டீர், ஐயா? அல்லது கோதா பிராட்டியார் ஶ்ரீரங்கநாதனை மோஹித்ததில் உன்மத்தம் தலைக்கேறவில்லையா? தலபுராணம் என்று அதை ஒதுக்கவா பார்க்கிறீர்கள்? நம் ஶ்ரீரங்கபெளராணிகையை கேட்டால், அவர் செப்புவார்,

     ‘…ஆண்டாளைப் பார்த்துக் கண் சிமிட்டிக் கேட்கிறான் அரங்கன். “என்ன சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! சீர் வரிசை வந்ததா?”

    “சுவாமி, தங்கள் கருணையே கருணை!”

    ஆண்டாள் அரங்கனோடு ஐக்கியம் அடைகிறாள்.

    இப்படியும் ஒரு பிச்சியா!

    தற்கால இலக்கியத்தில் தேடுவீர்களானால், இதை படியும்: ‘உமக்கு சிவகாமியின் சபதம் தெரியுமோ? ‘உன்மத்தத்தை’ ‘சித்தபிரமை’ என்கிறார், கல்கி. தன்னுடைய ‘சித்த பிரமை’ தெளிந்த பின், அதை ‘பக்தியின் முதிர்ச்சி’ என்கிறார், ஆயனர் வாயிலாக. கேளும்.

    *

    ‘… ஏகாம்பரநாதரையே என் பதியாக ஏற்றுக் கொண்டேன்!” என்றாள் சிவகாமி. தம் அருமை மகளுக்குச் சித்தப்பிரமை முற்றி விட்டதோ என்று ஆயனர் ஐயமடைந்தார். இன்னும் சிறிது பேசி அவள் தெளிந்த அறிவுடன் இருக்கிறாள் என்பதைக் கண்டார். இது சித்தபிரமை அல்ல பக்தியின் முதிர்ச்சிதான் என்று நிச்சயமடைந்தார்… கோயில் குருக்கள் சுவாமிக்கு அர்ச்சனையும் தீபாராதனையும் செய்து தட்டிலே பிரசாதம் கொண்டு வந்து கொடுத்தார். அந்தத் தட்டில் பழம், புஷ்பம், விபூதி, குங்குமம் ஆகிய பிரஸாதங்களுடனே, ஆயனரின் முன்னேற்பாட்டின்படி, திருமணத்துக்குரிய திருமாங்கல்யமும் இருந்தது. சிவகாமி அந்தத் திருமாங்கல்யத்தையும் புஷ்ப ஹாரத்தையும் பக்தியுடனே பெற்றுத் தன் கழுத்திலே அணிந்து கொண்டாள். பின்னர், நடராஜனாகிய இறைவனுடைய சந்நிதியிலே நின்று சிவகாமி நடனமாடத் தொடங்கினாள். சிறிது நேரம் ஆனந்த பரவசமாக ஆடினாள். பிற்பாடு, “முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்” என்னும் திருநாவுக்கரசரின் திருப்பதிகத்தைப் பாடிக் கொண்டு அதற்கேற்ப அபிநயம் பிடித்தாள்.. சப்தம் சிறிதும் ஏற்படாதவண்ணம் இறைவனுடைய சன்னிதானத்திலிருந்து மாமல்லர் நழுவிச் சென்றார். அவர் ஏகாம்பரர் ஆலயத்தின் பிரதான கோபுர வாசலைத் தாண்டிச் சென்று கொண்டிருந்த போது, “தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே” என்னும் நாவுக்கரசர் பாடலின் கடைசி வரி சிவகாமியின் உணர்ச்சி நிறைந்த இனிய குரலில் கேட்டுக் கொண்டிருந்தது.கல்கியின் சிவகாமியின் சபதம் முற்றிற்று’.

    *

    மனம் மாறினால், அறிவு குலைந்தால், உணர்வு மங்கினால், நினைவாற்றலை இழந்தால், விரும்பத்தகாத வேட்கை ஏற்பட்டால், ஒழுக்கம் கெட்டால், நடவடிக்கை அடாவடியானால், செயல் தடுமாறினால், அந்த நபரின் மனோபாவத்தைக் குறை கூறுகிறோம். அவருடைய மனம் மோனத்தை நாடினால் சித்தபிரமை என்கிறோம். அறிவு, சராசரி தேடலைத் தவிர்த்து, விவேகத்தை நாடினால், பித்தன் என்கிறோம். வலது பக்கம் போவதை இடது பக்கம் தேடுகிறோம். இடது பக்கம் போவதை வானத்தில் தேடுகிறோம். அதைத் தான் மறை ஞானமாக, வள்ளலார்,

    ‘வானத்தின் மீது மயிலாடக்கண்டேன்

    மயில் குயிலாச்சுதடி-அக்கச்சி

    மயில் குயிலாச்சுதடி’

    என்றார். ‘சுத்த சன்மார்க்கமே அகத்தில் இருந்துதானே தொடங்கப்பெறவேண்டியுள்ளது.‘ என்ற சுகபிரும்ம வாக்கு இது எனலாம். இதிகாச சுகபிரும்மத்தின் மூலமாக உன்மத்தத்தின் ஆதிமூலம் அறிய ஒரு வாய்ப்பு கிட்டியது.

    அவன் தான் பிறை சூடிய பித்தன். தோடுடைய செவியன். ஆடிய பாதம். திருவாரூரில் அஜபா நடனம்; திருக்குவளையில் பிரம்மத் தாண்டவம்; நாகையில் பாராவாரதரங்க நடனம்; திருமறைக்காட்டில் ஹம்ச நடனம்; திருவாய்மூரில் கமல நடனம்; திருக்காறாயில் குக்குட நடனம். திருவாலங்காட்டில் காளிக்காக ஆடிய காளி தாண்டவம்;

    திருநள்ளாற்றில் உன்மத்த நடனம்.

    உன்மத்தம் தலைக்கேற, ஏற, தொடர் நீளும் போல் இருக்கிறது. உன்மத்தத்தின் பளிங்கு நீர் தெளிவை எழுதும் முன் அப்பைய தீக்ஷிதரின் ‘உன்மத்த பஞ்சாசத்’ பற்றி எழுதுவது சிலாக்கியம். அதற்கு முன் திருமூலரின் இலச்சினை மற்றும் பதித்து, கட்டுரை நீண்டுவிட்டதற்கு சால்ஜாப்புக்கூறி, இப்போதைக்கு விடை பெறுகிறேன்.

     ஆதிபரன்ஆட அங்கைக் கனலாட

    ஓதுஞ் சடையாட உன்மத்த முற்றாடப்
    பாதி மதியாடப் பாரண்ட மீதாட

    நாதமோ டாடினான் நாதாந்த நட்டமே.  2751 –(திருமந்திரம், ஒன்பதாந் தந்திரம் – பொற்றில்லைக் கூத்து.)

    (தொடரும்)

    உசாத்துணை:

    http://www.thevaaram.org/index.php

    http://sekizhar.blogspot.co.uk/2012/10/blog-post_8305.html

    http://sivamgss.blogspot.co.uk/2012/11/blog-post_15.html

    Share
  • உபயகுசோலபரி!…..3

    இன்னம்பூரான்

    அன்பார்ந்த நண்பர்களே.

    இனிமேல் எல்லாம் கடுதாசி தான். நலம் நலம் அறிய அவா. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி எழுதுகிறார்கள். நான் கடிதம் போடுகிறேன். அதில் என்ன வசதியென்றால், நாமே திசை மாறலாம்; திசை திருப்பலாம், மற்றவர்கள் கடுக்காய் கொடுக்கும் முன். இன்று மிகவும் அசதி. அதை போக்க வந்து சேர்ந்த வரன்கள் பல.

    ஆதவன் மறையும் வேளையில் இந்தியாவிலிருந்து பரிச்சியம் இல்லாத நண்பர் ஒருவரிடமிருந்து, என் மகன் மூலமாக வந்த பரிசுகள் என்னை திக்குமுக்காட வைத்தன. தத்க்ஷணமே அவர் இன்னம்பூர் ஶ்ரீநிவாசப்பெருமாளுக்கு (குலதெய்வம்) என் பெயரில் அர்ச்சனை செய்து அனுப்பிய பிரசாதம்; திருமலை தேவஸ்தான காலெண்டர், டயரி, லட்டு, காஞ்சி மஹாப்பெரியவாளின் அனுக்ரஹவர்ஷா 2013 & வேதகோஷம் ஆடியோ பதிவுகள். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இந்த சாயரக்ஷை, ஒரு உஷத்கால ஆலயமணி. அவை என் முன் வந்து குவிந்து, என்னை வியப்பிலும், இறை வணக்கத்திலும் ஆழ்த்துவதற்கு முன்னால், இந்த கடிதம் எழுதுவதற்குப் பிரமேயமாக சில காரியங்கள் நடந்தன. எனவே, வேறொரு திசையில் இது ஒரு அறிமுகம் என்க.

    ஒரு வருடமாக திறக்காத ஒரு கருவூலத்தை, யதேச்சையாக பார்வையிட்டேன். அது சொன்ன கதை. வருடங்கள் கடந்தோடின. 60 வருடமே ஒரு சுற்று. 70 வருடங்கள் ஆயின. முனைவர் பாண்டியராஜா கணக்குப்போட சொல்லிக்கொடுத்தாலும், பத்து விரலை வைத்துக்கொண்டு 85 வருடங்களை எப்படி எண்ணுவது, ஐயா? 85 வருடங்களுக்கு முன்னால் திருச்சி பிரமுகர் ஒருவரின் பரிந்துரையின் படி, ஏகலைவனாகிய என்னுடைய குருநாதர் திரு.வி.க. அவர்களின் நவசக்தியில் ‘தேனீ ‘ என்ற பெயரால் ஒருவர் உதவி ஆசிரியராக பணி புரிந்தார். மஹாகவி பாரதியாரின் அருமை தம்பி பரலி.சு.நெல்லையப்பர் அங்கு அவருடைய சகபாடி. அவர் ‘தேனீ’’யை ஒரு இதழாசிரியரிடம் அழைத்து செல்கிறார். அடுத்து வருவது தேனீயின் ‘ஏட்டிக்குப்போட்டி’ என்ற படைப்பு. ஹாஸ்யம் துள்ளாமல், துள்ளி விளையாடுகிறது. அதிசயித்த இதழாசிரியர் அதை தன் அன்னையிடம் வாசித்துக் காண்பிக்கிறார். அவரும் சுவைக்க, ‘ஏட்டிக்குப்போட்டி’ அச்சேறுகிறது. தமிழுக்கு ஒரு புதிய இலக்கிய நீச்சல்/தவழல்/தளர்நடை/காந்தியை போல் விறுவிறுப்பு நடை/ துள்ளல்/ ஓட்டம் எல்லாம் புதிய வரவுகளாக திகழ்கின்றன. எல்லாம் சொற்பகாலத்தில் மட்டும். (15 வருடங்கள்) ‘தேனீ’ யாக வந்து செந்தமிழை நமக்கு தேனாக, தேன்பாகாக, பாகு வெல்லமாக, வெல்ல அச்சுகளாக, அக்காரவடிசலாக அளித்த கல்(யாண) கி(ருஷ்ணமூர்த்தி மறைந்து விடுகிறார், 70 வருடங்கள் முன்னால். பிற்காலம் தான் அவர் எழுதி பிரசுரமாகாத கையெழுத்து பிரதி ஒன்று கிடைத்தது. அது 1976ல் கல்கியில் தொடராக வந்திருந்தாலும், ப்ராஜெக்ட் மதுரை வாயிலாக இன்று தான் சற்று நேரம் முன்னால் மின்னாக்கப்பதிவாகக் கிடைக்கப்பெற்றேன். அதிலிருந்து, நம்ம கமலாவின் கடிதத்தை உங்கள் பார்வைக்கு வைத்து மகிழ்கிறேன். இந்த வரவுக்கு அடிகோலியவர் நம் மின் தழிழர் நு.த.லோ. என்பது கூடுதல் மகிழ்ச்சி.

    அப்பப்போ லெட்டர் போட்றது. என்ன சொல்றேள்? எஸ். எஸ். வாசன் எழுதிய உபயகுசலோபரி படித்தீர்களோ? வருத்தமாக இருக்கிறது.

    வரேன்.

    இன்னம்பூரான்

    16 02 2013

    ***********

    கமலாவின் கடிதம்

    “மகாஶ்ரீஶ்ரீ கல்யாணம் அவர்களுக்கு, அடியாள் கமலா எழுதிக் கொண்டது…”

    திருவாளர் கல்யாணம் அவர்களுக்கு அபாக்கியவதி கமலா அநேக கோடி நமஸ்காரங்கள்…..”

    “வணக்கம்’… இந்தக் கடிதம் தங்களுக்கு வியப்பளிக்கலாம்…”

    இப்படிப் பலவிதமாகக் கடிதம் எழுத ஆரம்பித்துக் கிழித்துப் போட்டுக் கொண்டே இருந்தாள் கமலா. நாற்பது பக்க நோட்டுப் புத்தகத்தில் பாதித் தாள்களுக்கு மேல் அடுப்பெரிக்கக் குவிந்துவிட்டன. பாக்கிப் பத்துத் தாள்களைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு விட்டு, ‘இதுதான் கடைசி முயற்சி’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு எழுத ஆரம்பித்தாள்.

    “என் இன்னுயிர்க் காதலர்’ கல்யாணம் அவர்களுக்கு,

    ஆம், இந்தக் கடிதத்திலாவது ஒரே ஒருமுறை இப்படித் தங்களை அழைக்க அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன். தயவு செய்து இந்தக் கடிதத்தைப் படித்து முடித்த தும் உடனடியாகக் கிழித்துப் போட்டுவிடுவதுடன் என்னைப் பற்றிய நினைவுகள் தப்பித் தவறித் தங்கள் மனத்தில் ஏதும் இருந்தால் அவற்றையும் அழுத்துவிடுமாறு கோருகிறேன்.

    இக்கடிதம் தபால் மூலம் தங்களுக்கு வந்துசேரும்போது நான் இந்த ஊரைவிட்டோ அல்லது உலகை விட்டோ (எது என்று இன்னும் முடிவு செய்யவில்லை) கிளம்பிப் போய் நீண்ட நேரமாகி விட்டிருக்கும்.

    சிறு வயதிலிருந்தே பெரிய படிப்பெல்லாம் படித்து உலகம் வியக்க விளங்கப் போவதாகக் கனவு கண்டவள் நான். கடைசியில் அடுப்பு ஊதுவது தவிர வேறு எதற்கும் லாயக்கற்றவள் என்பதாக என் தாய் தகப்பனார் தீர்மானித்து விட்டனர். தங்களை முதன் முதலாகப் பார்த்த கணத்திலிருந்து பட்டம் பதவியெல்லாம் ஒரு மண்ணும் வேண்டாம் தங்கள் மனைவி என்ற பட்டமும் தங்கள் இதய சிம்மாசனப் பதவியும் கிடைத்தாலே நான் பெரிய பாக்கியசாலி என்று கருதினேன். அதற்கும் நான் கொடுத்து வைக்கவில்லை.

    இரண்டு ஆசைகளுமே நிறைவேறாவிட்டாலும் பாதகமில்லை. ஏதோ வீட்டோடு இருந்து பெற்றோருக்குச் சமைத்துப் போட்டுக் கொண்டிருந்தாலே, எனக்குப் போதும். ஆனால் அதுவும் முடியாது போலிருக்கிறது. அப்பாவும் அம்மாவும் என் பெற்றோர்களே இல்லை என்பதும் நான் வளர்ப்பு மகள்தான் என்பதும் சமீபத்தில் எனக்குத் தெரியவந்தது. அத்துடன் இவர்கள் சுயநலம் கருதி என்னைப் பெரும் பணக்காரரான ஒரு கிழக் கோட்டானுக்கு விற்றுவிடத் தீர்மானித்துவிட்டார்கள். குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் என்ற கதையாகி விட்டது என் வாழ்க்கை.

    இந்த அநீதிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் எனக்கு இல்லை. பவானி அக்காவாக இருந்தால் பணிந்து கொடுக்கவே மாட்டாள். ஆனால் நான் பவானி இல்லையே? இந்தத் துன்பங்களைச் சகித்துக்கொள்ளும் சக்தியும் எனக்கு இல்லை. எனவே நான் யாருமறியாமல் ஓடிவிடப் போகிறேன். தற்கொலை செய்து கொண்டு சாவேனோ, பிச்சை எடுத்துப் பிழைப் பேனோ அல்லது எங்கோ கண் காணாத ஊரில் யார் வீட்டிலாவது பத்துப் பாத்திரம் தேய்த்துப் போட்டு வயிறு வளர்ப்பேனோ தெரியாது. இறைவன் விட்ட வழி.

    உங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்ப மனம் இடம் தரவில்லை. அதனால்தான் எழுதினேன். தவறானால் மன்னித்து விடுங்கள். என் நினைவால் தாங்கள் அல்லல் ..” **** கமலா கையெழுத்துப் போடப் போன சமயம் வாசலில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. பரபரப்புடன் எழுந்து சென்று ஜன்னல் வழியே பார்த்தாள். “யார் அது?”

    “நான் தான் ரங்கநாதன்” என்று பதில் கிடைத்தது.

    “அப்பா,   அம்மா இல்லையே?”

    “பரவாயில்லை. நான் உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்.”

    கமலாவுக்குக் ‘குப்’ பென்று வியர்த்துவிட்டது. ‘இப்போது என்ன செய்வது? கதவைத் திறப்பதா, கூடாதா?’

    இரண்டொரு கணங்களே யோசித்த கமலா மனத்தைத் தேற்றிக் கொண்டாள். ‘இந்தப் பட்டப் பகலில் என்னை என்ன செய்து விடும் அந்தக் கிழம்?’ என்று தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொண்டு வாசல் கத வைத் திறந்தாள். ‘ஏண்டி மாப்பிள்ளையை வாசலில் நிற்க வைச்சே பேசி அனுப்பிவிட்டாயா? அவர் தன்னை அவமதித்து விட்டதா எண்ணிக் கொண்டிருந்தால் என்ன பண்ணுவது?’ என்று அம்மா கேட்டுத் தன்னைக் கோபித்துக் கொள்வாளே என்ற பயமும் கமலாவை இயக்கியது.

    கதவைத் திறந்ததுமே சில்லென்ற வாடைக் காற்று ரங்கநாதனுக்கு முன்பாக வீட்டினுள் நுழைந்தது. மேஜை மேலிருந்து காகிதங்கள் பறந்தன. “அடடா! ஏதோ கடிதம் எழுதிக் கொண்டிருந்தாய் போலிருக்கிறது. எல்லாம் பறந்து விட்டதே” என்ற ரங்கநாதன், ஒரு மூலையில் போய் விழுந்த, எழுதிய தாளைப் பொறுக்கி எடுக்க நடந்தார்.

    “பாதகமில்லை, இருக்கட்டும். நான் எடுத்துக்கொள்கிறேன்” என்று பதறினாள் கமலா. வாய் குளறிப் பேசியதே தவிர உடல் செயலற்றுப் போயிற்று. ரங்கநாதன் செல்கிற அறையின் அந்த மூலைக்கு அவசரமாகத் தானும் விரைந்து அவர் மீது பட்டும் படாததுமாக நெருங்கி நின்று தாளைப் பொறுக்க அவளுக்குக் கூச்சமாகவும் பயமாகவும் இருந்தது. தான் அந்தக் கடித்தத்தில் எழுதியுள்ள ஏதோ ஒன்றை அவரிடமிருந்து மறைக்க முயல்வதாக அவர் கருதிவிடக் கூடாதே என்ற கவலை வேறு.

    அவள் நின்ற இடத்தை விட்டு நகராமலே பதறிக் கொண்டிருக்க அவர் போய் அந்தத் தாளைக் குனிந்து எடுத்து விட்டார். கமலாவுக்கு உள்ளமெல்லாம் வெல வெலத்துப்போக உடலும் நடுங்க ஆரம்பித்தது.

    “யாருக்குக் கடிதம்?” என்று கேட்ட படியே நிமிர்ந்து அவளைப் பார்த்தார் ரங்கநாதன்.

    ***************

    சித்திரத்துக்கு நன்றி: http://s-pasupathy.blogspot.co.uk/2012/06/blog-post_28.html

    உசாத்துணை:

    Project Madurai 443 அரும்பு அம்புகள்

    http://s-pasupathy.blogspot.co.uk/2012/06/blog-post_28.html

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே! – 15

    இன்னம்பூரான்

    புதிய தொடர் ~ 1

    சில வருடங்களுக்கு முன்னால் ஒரு விபத்தினால் ஆஸ்பத்திரியில் இறந்த ஒரே மகனின் உடலுறுப்புகளை அவனுடைய பெற்றோர்கள் தங்கள் துயரத்தை அடக்கிக்கொண்டு, தானம் செய்தார்கள். 20 நிமிடங்களுக்குள் மற்றொரு ஆஸ்பத்திரிக்கு அவனுடைய இதயத்தை எடுத்துச் சென்றால் தான், மற்றொருவர் உயிர் பிழைக்கலாம். சென்னை வீதிகள், போக்குவரத்துச்சிக்கல்கள்படி இந்த இதயப்பயணம் இரண்டு மணி நேரம் பிடிக்கும். முன்னும் பின்னும் அலறும் சங்குகளும், ஒளி வீசும் சிவப்பு விளக்கு வண்டிகள் கட்டியம் கூற, சென்னை போலீஸ் டிரைவர்களில் திறன் மிக்கவர் ஒருவர் 19 நிமிடங்களில் நின்று போன இதயத்தை ஓடோடிச் சேர்ப்பித்தார். அது ஒரு சாதனை மட்டுமல்ல. சிவப்பு விளக்கும், சங்கொலியும் இட்ட பணியை செவ்வனே செய்தன. அவருக்கு சலாம். சிவப்பு விளக்குக்கும் சங்கொலிக்கும் சலாம். சலாம்.

    சிவப்பு விளக்கும், சங்கொலியும் கன்னாபின்னாவென்று அதிகார துஷ்பிரயோகமாக, மானிடப்பதர்களுக்குக் கூட கட்டியம் கூறுவது அன்றாடக்காட்சி, பாரத தேசம் என்னும் பெயரை தாங்கி வரும் இந்தியாவிலே.  அது மட்டுமல்ல. பெண்களுக்கு உரிய பாதுகாப்புத் தர இயலாத போலீஸ் படை, உருப்படாத மனித ஜன்மங்களுக்குக் கூட, பல வகை துப்பாக்கிகள் ஏந்தி பந்தோபஸ்து அளிக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் இந்த  ‘குட்டிச்சுவர்’ கைங்கர்யத்தில் விரயமாகிறது.

    ஒரு மனுதாரர் இதை குறை கூறி, நிவாரணம் நாடி உச்சநீதி மன்றத்தை அணுகினார். அவர் தமிழ்நாட்டில் இருந்து ஒரு உதாரணத்தை முன் வைத்தார். கட்டபொம்மன் முதற்கொண்டு பலர் பட்ட இன்னல்களுக்குக்காரணம், கும்பினிக்காரனிடன் அந்தக்காலத்து ஆற்க்காட்டு நவாப் பட்ட அபரிமிதமான கடனே. செலவாளியும், கடனாளியும் ஆன அந்தக்காலத்து ஆற்க்காட்டு நவாப், நிலம், புலன், மானம், மரியாதை எல்லாவற்றையும் பரங்கிக்காரனிடன் அடகு வைத்தார். மக்களுக்கு அவர் மீது ஏகப்பட்ட வருத்தம். அதனால் அவருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்று கும்பினிக்காரன் அவருக்குக் கொடுத்த ரக்ஷணை, இன்று மக்களுடன், பண்புடனும், நேசமுடனும் பழங்கி வந்து, அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற இன்றைய ஆற்காட்டு நவாப் அவர்களுக்கு எதற்கு? சிவப்பு விளக்கும், சங்கொலியும் எதற்கு? அது மட்டுமல்ல. கிரிமினல் பின்னணி உடைய மண்டை வீங்கிகளுக்கும் கூட இந்த மரியாதை சாங்கோபாங்கமாக அளிக்கப்படுவதை நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி அவர்களும், ஹெ.எல். கோகலே அவர்களும் கண்டித்திருக்கிறார்கள். மனுதாரர் ஹரீஷ் ஸால்வே அவர்கள் பிரபல வழக்கறிஞர். ‘இந்த ‘சிவப்பு விளக்கு/ சங்கொலி’ கலாச்சாரம் ஒரு தொத்து வியாதியாகி விட்டது என்று அங்கலாய்த்தார். இது பொதுஜனவைரியாகி விட்டது என்றார். வர, வர, நமது ராஸ்தாக்கள் பெரும்புள்ளிகளின் பயணத்துக்கு ஆபத்து ஆகிவிட்டன என்ற சால்ஜாப்புக்கு, நீதிபதி. ஜி.எஸ். சிங்வி அவர்கள் சாட்டையடியாக ஒரு கருத்துத் தெரிவித்தார். அதை மட்டும் சொல்லி, இன்றைய கட்டுரையை முடித்து விடுகிறேன். கனம் கோர்ட்டார், லேசுபாசு அரசு மந்தகதி, ஊழலுலகம், தணிக்கை தடாலடி எல்லாம் பற்றி சொல்ல விஷயம் நிறைய இருக்கிறது. வாசகர்களுக்கு ஆர்வமிருந்தால், இது தொடரும். இல்லையெனில் இது முற்றுப்புள்ளி.

    “ மக்களுக்கு இந்த ராஸ்தாக்கள் பாதுகாப்பாற்றவை என்றால், அமைச்சருக்கும் அப்படியே தான் இருக்கவேண்டும். அவர் உசத்தி ஒன்றுமில்லை.” ~ நீதிபதி. ஜி.எஸ். சிங்வி.

    இன்னம்பூரான்

    15 02 2013

    Share
  • வாத்ஸல்யம்

    இன்ன்ம்பூரான்

    “நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை
    நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார் சோலைக்
    காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக்
    கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே.’

    (பெரிய திருமொழி 2-5-2)

    சென்னைக்கு அருகே ஒரு பெருமாள் கோயில். பெருமாளோ பக்தவத்ஸலன். தாயாரோ ‘என்னைப்பெற்ற தாயார்’. அகஸ்மாத்தாக, என் தங்கையும், அவளுடைய குடும்பமும், நானும் ஒரு நாள் சாயரக்ஷையில் திருநின்றவூர் போயிருந்தோம். அற்புதமாக தரிசனம் கிட்டியது. எல்லாருக்கும் தான். என் மனம் இந்த தெய்வீக திருநாமங்களையும், அவற்றில் குடி கொண்டிருக்கும் கனிவுக்கும், அன்புக்கும், பிரேமைக்கும் ஊற்றுக்கண்ணாகிய வாத்ஸல்யத்தில் லயித்தது. பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தாலும், சாவகாசமாக தரிசித்து, அர்ச்சானாதி பிரசாதங்களை பெற்று அனுபவிக்க முடிந்தது. அமைதியும், மன நிறைவும், சந்துஷ்டி என்பார்களே அந்த பூரணத்துவமும் எம்மை ஆட்கொண்டபடியால், லெளகீக சமாச்சாரங்கள் ( வண்டி ஓட்டுனர் தேநீர் அருந்தினாரா?/ காலணிகள் பத்திரமா? வீட்டுச்சாவி யாரிடம்?/ஓய்வூதியம் வங்கிக்கணக்கில் வந்திருக்குமா?/ அலமாரியை பூட்டினோமா? இத்யாதி) மனதை விட்டு விலகியிருந்தன. தரிசனம் முடிந்தபின் சற்று நேரம் அங்கே அமர்ந்து விட்டு வருவது ஒரு சம்பிரதாயம். நாங்களும் அவ்வாறே செய்தோம். என்ன தோன்றியதோ, தெரியவில்லை. என் தங்கை ஒரு கேள்வி கேட்டாள். பதில். அடுத்த கேள்வி.  பேசிக்கொண்டே, அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றால், ஒரு இனிய அனுபவம். பெருமானின் பெயர்: ஹிருதயாலீஸ்வரர்; அம்பாளோ மரகதாம்பிகை. கொஞ்சம் அசந்து தான் போய்விட்டோம். இப்படி ஒரு பொருத்தமா என்று. அந்த ஊரில் குடி புகுந்து விடலாமா என்று கூட ஒரு எண்ணம் உலா வந்தது. அங்கு சிறிது நேரம் அமர்ந்த பின், எங்கள் உரையாடல் தொடர்ந்தது.  இப்படி, நேரம் போனது தெரியாமல் ஒரு அரை மணி நேரம் கழிந்து விட்டது.  சில நிமிடங்களில் ஒரு கூட்டமே சேர்ந்து விட்டது, தாமதமாகத்தான் எங்களுக்குத் தெரிந்தது, முடிவில். அதுவும் எப்படி? முன்பின் தெரியாத மூத்த நபரொருவர், ‘நல்ல வேளை. நானும் கலந்து கொண்டேன். நீங்கள் யாரும் ஆக்ஷேபிக்கவில்லை. எல்லாம் ஆத்மார்த்தமாக நடந்து விட்டது. எல்லாம் அவனுடைய வாத்ஸல்யம்’ என்று சொல்லி மனமுருகி விடை பெற்றுக்கொண்டார். அப்போது தான் புரிந்து கொண்டோம், ஒரு கோஷ்டி பிரவசனம் நடந்து முடிந்திருக்கிறது என்று. கிட்டத்தட்ட பத்து/பதினைந்து பேர், அடக்கி வாசிக்கும் குரலில், சம்பாஷித்ததில் யார் யார் என்ன என்ன சொன்னார்கள் என்பது முக்கியம் அல்ல. கேள்வி தான் முக்கியம்; சாராம்சம் தான் முக்கியம். என் தங்கை கேட்ட கேள்வி, “ ஏன் இங்கு இன்று எதிர்பாராமல் கிடைத்த மனசமாதானத்தை நம்மால் மற்ற இடங்களில் இருக்கும்போது பெற முடியவில்லை?

    சாராம்சம்: முனைந்தால் அது நமக்குக் கிட்டும். முனிவர்களும், சாதுக்களும் பெறவில்லையா? முனைவது என்பதே ஒரு அப்பியாசம். அப்போது அப்பியாசத்தில் லயிக்கும் மனம் லெளகீகத்தில் தான் உழல்கிறது. வாசற்படி தாண்டி பக்தி மார்க்கத்தில் பயணிப்பதில்லை. அதனால் என்ன? ஆன்மீகமும் பயிற்சியினால் தானே படிப்படியாக கோபுரம் ஏறுகிறது. அதை செய்து பார்ப்போம். அம்மா! பக்திக்கு முன் ஆன்மீகம் எம்மாத்திரம்? ‘என்னைப்பெற்ற தாயாரின்’ கருணாசாகரத்திலோ, பக்தவத்ஸலனின் அன்புப்பிடியிலோ, ஹிருதயாலீஸ்வரரின் மனோபாவ கவர்ச்சியிலோ, மரகதாம்பிகையின் கனிவு பிரவாகத்திலேயோ, ஆன்மீகமா ஆட்சி புரிகிறது? லெளகீகத்திலிருந்து தற்காலிக விடுதலை பெற ஆன்மீகம் உதவலாம்.  தற்காலம் பெரிதும் பேசப்படும் ஆன்மீகம் வேறு. ஞானமார்க்கம் வேறு. நாமோ ஆன்மீகத்தையே லெளகீகத்தின் படி நிலையாக வைத்து குப்பை கொட்டுகிறோம். பக்தி மார்க்கமே உகந்தது. அதற்குதவத்தான் பெருமாளின் வாத்ஸல்யம். தாயாரோ பெற்றெடுத்த அன்னையானாள். அன்றொரு நாள் பிரம்மபுரத்தில் ‘பிள்ளையாருக்கு’ அடிசல் கொடுத்த அம்மை, இங்கே தாயார்.  நீங்கள் கொஞ்சம் தயங்கினால் கூட, உமது மனோபாவத்தைக் கொள்ளை கொள்ள மரகதாம்பிகா சமேத ஹிருதயாலீஸ்வரர் வந்து விடுவார். தெய்வ சன்னிதானம் நம் மனதில் தான். பக்குவம் வந்தால், என் அம்மா சொன்னமாதிரி, அவரே நம்மை தேடி வருவார். பக்தவத்ஸல பெருமாள் கடல்மல்லைத் தலசயனம் சென்று தானே, திருமங்கையாழ்வாரிடம் பாசுரம் பெற்று, மங்களாசாஸனம் செய்து கொண்டார்.  இப்படியாக ஒரு நல்ல நாள் கழிந்தது. நல்லெண்ணம் தொடர்ந்து ஆட்கொண்டவண்ணம் உளது.

    இப்படியாக சம்பாஷணை நடந்து கொண்டபோது, என் மருமான் கேட்டான், ஒரு உதாரணம் சொல்லு என்று. 1964ல் அக்காலத்து ஆடிட்டர் ஜெனெரல் ஏ.கே.ராய் அவர்களுடன் திருமலைக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டியது. வீ. வீ.ஐ.பி. ஏற்பாடு. தேவஸ்தானத்துத் தலைவர் எங்களை அழைத்துச் சென்றார். அந்த ‘ஜருகண்டி’ சன்னிதானத்தில், கருவறை தலைவாயிலில் இரண்டு மணி நேரம். ஸஹஸ்ரநாம அர்ச்சனை. எங்கள் இருவருக்கும், அவருடைய காரியதரிசி தேசிகனுக்கும் இந்த அரிய வாய்ப்பு. திருமலை வெங்கடேசனின் பக்தியில் மூழ்கிக்கிடந்தோம்.  அங்கு நுழையும் முன், திரு. ராய், ‘ராஜூ! என் கூட வா.’. (ராஜூ வண்டி ஓட்டுனர்.) தெய்வ சன்னிதானத்திலும் லெளகீகம் நடை போடுவது, அவருக்குத் தெரியாத சமாசாரமா? ராஜுவுக்கும் அந்த அரிய வாய்ப்பு. சென்னை வந்த பின் ராஜூ என்னிடம் சொன்னார், ‘நான் இரண்டு தெய்வங்களை தரிசித்தேன்.’

    சித்திரத்துக்கு நன்றி:

    Share
  • போற்றி! போற்றி! தேவகுமாரா! போற்றி! போற்றி!

    இன்னம்பூரான்

     போற்றி! போற்றி! தேவகுமாரா! போற்றி! போற்றி!

    அவரொரு அதிசயப்பிறவி. அவனியில் அவரைப்போல் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. என் அகக்கண்ணுக்கு மட்டும் புலப்பட்ட தேவதூதர்கள் புஷ்பக விமானத்தில் வந்திறங்கி சைத்ய உபசாரங்கள் பல செய்து, அனாயாசமாகவல்லவோ அவரை சுவர்க்கலோகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஜனவரி 9, 2013; அன்றைய தினம் வழக்கம் போல்த்தான் பொல பொலவென பொழுது விடிந்தது. அவரும் சகஊழியர்கள் எல்லாரையும் கனிவுடன், கட்டித்தழுவி குசலம் விசாரித்தார். அது பல வருடங்களாக  அவருடைய அன்றாட வாடிக்கை. பிறகு தன்னுலகம் சுற்றி வந்தார். அவருடைய நண்பர்கள் பல இனங்களை சார்ந்தவர்கள். உக்ரம், வக்ரம், மக்கார் எல்லா குணாதிசயங்களும் உண்டு, அவர்களிடம். அவர் சம்பந்தப்பட்டவை, யாவரும் நேசிக்கப்பட்டவர்கள். அவர்களும் அவரவது பலவீனங்களை உதறி விட்டு, அவருடைய அரவணைப்பை அனுபவிப்பார்கள். பிரஹாரம் சுற்றிய பிறகு, வந்தபின், வழக்கம்போல் சொற்பமான காலை உணவு. ஒரு குட்டித்தூக்கம். அதுவே நீளாதூக்கம் ஆகி விட்டது, சார்! துக்கம் தாங்காமல் என் மனம் தேம்பித் தேம்பி அழுகிறது. ஏன்? உலகமே அழுகிறது.

    மனித ஜன்மங்களே! மனித நேயம் என்று புத்தகங்கள் எழுதி, சொற்மாரி பெய்து, அதைப் பொய்த்து, நடமாடுகிறீர்களே! இந்த தேவகுமாரரின் பெயர் ஆர்னி. அவர் ஒரு கம்பீரமான பூனை. லிண்டன் மிருகக்காட்சி சாலையில் அவர் தான் செவிலித்தாய். சிங்கக்குட்டிகளும், புலிக்குட்டிகளும், குரங்குக்குட்டிகளும் அவரால் தான் பேணி வளர்க்கப்பட்டன. அவற்றின் கூடைக்குள் நுழைந்து, கட்டித்தழுவும் போது, அவை அன்னையின் அரவணைப்பின் சுகம் உணர்ந்தன.

    எனக்கு நேரடியாகத் தெரிந்த உண்மை நிகழ்வு ஒன்று. ஒடிஷாவின் ஸிமிலிபால் பிராந்தியத்தில், ‘கைரி’ என்ற புலிக்குட்டி ஒரு வீட்டு செல்லப்பெண்ணாக வளர்ந்தாள். செவிலித்தாய் ப்ளாக்கி என்ற நாய். கைரியின் உருவத்தில் ஒரு சின்ன பின்னம் அளவு சைஸ். ஆனால், கைரிக்கு ப்ளாக்கியிடம் தான் பயம். ஒரு நாள் ப்ளாக்கிக்குக் குட்டிகள் பிறந்தன. கைரிக்கு அவற்றுடன் விளையாட ஆசை.  வாசற்படியில் வந்து கெஞ்சுகிறாள். அனுமதி டினைய்ட்! தன்னுடைய கூர்நகங்களை உள்ளிழுத்துக்காட்டி கெஞ்சுகிறாள். அனுமதீட். அப்பப்பா! என்ன விளையாட்டு! போங்கள்! அதுவல்லவோ தெய்வீகம்!

    சார்! இனி மேல்  எந்த மனிதன் உக்ரமாகவும், வக்ரமாகவும், மக்காராகவும் நடந்தால், மிருகத்துடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள், சார்! ப்ளீஸ்.

    இன்னம்பூரான்

    29 01 2013

    பி.கு: சோம்பல் இருந்தால் கூட, அதை முறித்து விட்டு, உசாத்துணையிலிருக்கும் ஆர்னியின் சித்திரத்தைக் க்ளிக்கி, ஒரு கும்பிடு போடுங்களேன்.

    உசாத்துணை:

    http://www.bbc.co.uk/news/uk-england-cambridgeshire-21244346

    Share
  • பிரேமை

    இன்னம்பூரான்

    அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லையென்றால், பிரேமைக்குத் தளை இல்லை என்று ஆகிவிடுமா என்ன? இல்லை கனிவு கட்டற்ற அரவணைப்பு ஆகிவிடுமோ?  விஷ்ணுவுக்கு சகஸ்ரநாமம் என்றால் பிரேமைக்கு லக்ஷார்ச்சனையே செய்து விடலாம். பிரேமை மனம் என்னும் சுரங்கத்தில் ஜனித்து, அலைந்து, திரிந்து, திக்குத்திசை தெரியாமல் தொலைந்து, மீண்டு/ மீட்கப்பட்டு, நிரந்தரமாக மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கும் ஒரு சஞ்சீவி; சிரஞ்சீவி. அவள் ஒரு தொடர்கதை; அமரகாவியம்.

    பெற்றெடுத்த அன்னை தான் பிரேமையின் ஊற்று, நீரோட்டம், பிரவாகம். ரத்த பாசமென்பது உள்ளம் உருகி, உடலும் சிந்தி, உருவும், உயிரும் அருளும் பாக்கியம் என்றால், அது அன்னையின் கொடையே. அவள் மறைந்த பின் ஆண்டாண்டு

    தோறும் நினவு நாளை அனுசரிக்கும் போது, மனம் தத்தளிக்கிறது.  உள்ளம் பதறுதடா! அவளை நினைக்காத க்ஷணமொன்று உண்டோ? உடன் பிறந்தோரை சஹோதரன், சஹோதரி என்கிறது சம்ஸ்கிருதம். ‘ஒரே வயிற்றில் பிறந்தோர்’ என்று பொருள். அதனால் மட்டுமா சகோதர வாஞ்சை?

    பொருள் என்றால் என்ன பொருள்! சொல்லின் புரிதலை நாடி, தேடுவதும் பொருள் தான்.

    திரைகடலோடியும் தேடும் திரவியமும் பொருள் தான்.  திவாகரமும், நிகண்டும், அகராதியும் சொல்லும் பொருள் எல்லாவற்றிற்கும் மேலான பொருள் ஒன்று உண்டு.

    பிரேமையினால் தளை கழண்டுபோக, சுகிர்த்து மகிழ்ந்த தலைவன் பரிசம் போட ‘பொருள்’ தேடி செல்ல விழைகிறான்.  ‘ஒரு பொருளை தேடும் நீ விலை மதியா பொருளையல்லவா தொலைத்து விடுவாய்.’ என்று நைச்சியமாக  அவனை பயமுறுத்தி, அவனை தடுத்தாட்கொண்டு விடுகிறாள், தலைவியின் பாங்கி. அவளுக்கு அல்லவோ தெரியும், தலைவியின் பிரேமையின் அருமை. கூட்டுக்களவாணியாயிற்றே!

    “கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருளாகுமோ—” என்று ஒரு போடு போட்ட பாங்கி, ஒரு குண்டையும் வீசி அவனை கலங்கடித்தாள்.

    “… விடமீன் போல் தொழுதேந்தும் வயங்கிய கற்பினாள்

    தடமென் தோள் பிரியாமை பொருளாயன் அல்லதை…” என்று.

    இன்றைய சினிமா தமிழில்:

    “மிஸ்டர்! நீ எந்த ஊருக்குப் போவையோ? எந்த மீன் கிட்ட சிக்குவையோ? எம்.எஸ். நடிச்சாங்களே அந்த சகுந்தலை சினிமாவின் ஹீரோ (வில்லன்?) துஷ்யந்தன் மாதிரி ஹீரோயினை மறந்திடுவாயோ? யார் கண்டா? அவள் விரகதாபத்தில் துடித்து மடிந்து போனால், யாரடா பொறுப்பு? அவ தாங்கமாட்டாடா கண்ணு. உங்கப்புராணை!  போகாதே! போகாதே! என் ஃப்ரெண்டின் ஃப்யூச்சர் கணவா!”

    “கடன் இறந்து…அல்லதை…’ என்ற பிரேமபாணம் கலித்தொகையில் செலவு அழுங்குவித்தல் என்ற பகுதியில் இவ்வாறு வருகிறது:

    மலைஇறந்து செயல்சூழ்ந்த பொருள்பொருள் ஆகுமோ?…
    கடன்இறந்து செயல்சூழ்ந்த பொருள்பொருள் ஆகுமோ? வடமீன்போல் தொழுதுஏத்த வயங்கிய கற்பினாள்
    தடமென்தோள் பிரியாமை பொருள்
    (கலித்தொகை 2 : அடிகள் 12, 20, 21, 22)

    செலவு என்றால் பயணம். அதை நடக்க விடாமல் செய்வதே அழுங்குவித்தல்.  பாங்கி உணர்த்தும் விலை மதியா, திரும்ப கிடைக்காத ’பொருள்’ தலவியின் இளமை. அது மட்டுமல்ல. அவளின் விரகதாபம் அவளை கொன்றுவிடுமோ என்று சொல்லி ‘மிரட்டுகிறாள்’. அவனும் செலவை தவிர்த்து விடுகிறான். ஒரு பிரமேயம் போதாதா, பிரேமைக்கு! பிரேமை இனிக்கும்; தகிக்கும்; இழுக்கும். இதெல்லாம் எங்களுக்குத் தெரியாத சமாச்சாரமா? என்று கேட்பீர்கள் என்று எனக்கு தெரியும்.

    அதனால் தான் வாஞ்சைக்குத் திரும்புகிறேன். ‘ஒரே வயிற்றில் பிறந்தோர்’ என்பது மட்டுமல்ல.  ஒரு கூட்டில் வாழ்ந்த பார்ப்புகள் அல்லவா. அதனால் ஒரு பிரேமை. பல வருடங்களுக்கு முன் பிருதிவி ராஜ் நடித்த ‘படோசி’ (அண்டை வீட்டுக்காரன்) என்ற சினிமா பார்த்தது ஞாபகம் வருகிறது. கலோனிய அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியால் பரஸ்பர பிரேமையை இழந்த ஹிந்து-முஸ்லீம் ‘படோசி’. எனவே பிரேமைக்கு பரந்த இயல்பும் உண்டு. அது தான் மனித நேயம்.  தற்கால அரசியல் வசனமல்ல.

    இனி இறை மீது காதல், கனிவு, அன்பு, பிரேமை. ‘குசலம்’ படித்தவர்களில் பலர் ஒரு நுட்பம் பற்றி பேசவில்லை. திருஞானசம்பந்தர், தன்னை தேடி வந்த தகப்பனிடன் வினவியது: ‘…பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.’ குளக்கரையில் அழுது கொண்டு நின்ற திராவிட சிசுவுக்கு தங்கப்பாலாடையில் அடிசல் போட்டிய அம்பாள் நல்லாள்.  அது பொருத்தமே. கிருபாகரனோ அந்த தோணியப்பர். அவருடைய ‘குசலம்’ விஜாரிக்க வேண்டாமோ?  திருஞானசம்பந்த்ரின் மோன நிலையில் சுவாமியும் பிரேமைக்குரிய உறவினன் தான்.  அதான் ‘நலம். நலம் அறிய அவா.’

    அடுத்த கட்டம் மனதுக்குக் கஷ்டம், நம் போன்ற சராசரிகளுக்கு. தோணியப்பர் திவ்ய தம்பதிக்கு குழவியாக இருந்த போதே தெய்வீகசம்பந்தமாகிவிட்ட திருஞானசம்பந்தருக்கு 16 வயதில் இகலோக சம்பந்தம் பேசினார்கள். திருநல்லூர் நம்பியாண்டாரின் பெண்ணை இவருக்கு திருமணம் முடிக்க வந்த சுற்றத்தையும், மணமகளையும் கோயிலுக்கு அழைத்து சென்றார். அங்கு நடந்ததோ பெருமணம். எல்லாரும் கூண்டோடு கைலாசம்.

    காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
    ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
    வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
    நாதன் நாமம் நமச்சி வாயவே. [520]

    “இறைவனிடத்துக் காதல் கொண்டு, மனம் கசிந்து, கண்ணீர் நிறைத்து” அந்நிலையில் ஓதுகின்றவர்களை வீடு பேறுவறச்செலுத்துவது (யாதெனில்) நான்கு வேதங்களைக்காட்டிலும் மெய்பொருளாக உள்ளதும், இறைவனுடைய பெயராக உள்ளதுமாகிய ‘நமசிவாய’ என்று சொல்லப்படும் திருஐந்து எழுத்து.”

    ~ அ.ச.ஞானசம்பந்தன்

    இப்போது சொல்லுங்கள், பிரேமையின் பிரமையை பற்றி.

    பிரேமையுடன்,

    இன்னம்பூரான்

    25 01 2013

    உசாத்துணை: அ.ச.ஞானசம்பந்தன் (2005) இன்னமுதம்: பக்கம் 26.

    சித்திரத்துக்கு நன்றி: http://lh5.ggpht.com/_tQ-YR5eXQJc/SgB7pCcEwkI/AAAAAAAAH2g/6RmMCvDn0Rc/scan0010.jpg

    Share
  • குசலம்

    இன்னம்பூரான்

    க்ஷேமம். க்ஷேமத்திற்கு எழுதவேணும். உபயகுசலோபரி… இது வைணவ பரிபாஷை. நேரில் பார்க்க நேர்ந்தால், ஒரு படி மேல் சென்று. ‘ தேவரீர் பாங்கா?’ என்று கனிவுடன் குசலம் விசாரிப்பதும், ‘அடியேன்! அங்கே? என்று மென்மையாக விடையுடன்,வினவுவதும் செவியில் இன்பமாகத்தான் விழுகிறது. தன் இல்லம் குடிசை. அவரில்லம் திருமாளிகை. பரிபாஷைகளை பற்றிய ஆய்வு சுவையாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன். பெருமாள் கோயிலில் ‘தாயார்’. சிவன் கோயிலில் ‘அம்பாள்’. வீபூதியை திருநீறு என்று சொல்வதில்லையா? எல்லா மொழிகளிலும் இந்த பண்பாடு இருக்கிறது. கலாச்சாரம் என்ற சொல்லுக்கு பொருத்தமான தமிழ்ச்சொல் தேடியபோது, ரசிகமணி அவர்களின் இந்த சொல்லாக்கம் கிடைத்தது என் பாக்கியம்.   இப்படி பலவிதமாக அடுக்கிக்கொண்டே போகலாம், தருமமிகு சென்னையின் சேரிவாழ் பாமரமக்களின் பழகுதமிழும் சரி, ‘டீ பார்ட்டி’ போன்ற ஆங்கிலம் கலந்த கடந்த நூற்றாண்டுக்கும் முந்திய நாட்டுப்பாடலும் சரி, மொழியின் அழகு பழகுமொழியில். இதெல்லாம் ஒரு புறமிருக்கட்டும்.

    இந்த ‘நலம். நலம் அறிய அவா.’ என்ற சொற்றொடர் நமது மடலாடலில் சம்பிரதாயம் மட்டுமா அல்லது மனமறிந்த உணர்வு கூடிய வினாவா என்பது ஐயத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. சவுக்கடி கடிதங்கள் கூட இத்தகைய சம்பிரதாய பண்பாடுகளை பின்பற்றுவதும் காணக்கிடைப்பது தான். இது எப்படி இருக்கிறது?:

    ‘என் அன்பார்ந்த எதிர்கட்சி தலைவரே! நீங்கள் என்னை கடுங்கோபத்தில் தாக்கி நாளை நாடாளும் மன்றத்தில் பேசப்போவதாக, ஊடகங்களில் சொல்லியிருக்கிறீர்கள். முன்பே தெரிந்திருந்தால், அதைக் கேட்டு பயன்பெற நான் வந்திருப்பேன். ஆனால் பாருங்கள். நான் நாளை முயல்வேட்டைக்கு வருவதாக என் தொகுதியிடம் வாக்களித்து விட்டேன். மன்னிக்கவும். மறக்காமல் உங்கள் பொருள் செறிந்த உரையின் நகலை இந்த விலாசத்துக்கு அனுப்புங்கள். எனக்கு உபயோகம் ஆகும்.” இப்படிக்கு ஜான் டுகான். [பி.கு. உம்மை நார் நாராக கிழித்துப்போடாவிட்டால் என் பெயரை டுகான் ஜான் என்று மாற்றிக்கொள்வேன்!]

    இங்கிலாந்தில் இப்படி ஒரு பண்பாடு! நம்மூரில் அம்மாமி சுஷ்மா ஸ்வராஜுக்கும் அன்னை சோனியா மாமிக்கும் ஒரு மடலோடல் நடந்தால் எப்படியிருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன். இந்த மடலாடல் குழுக்களுடன் பழகிப், பழகி, நானே திசை மாறுகிறேன், பாருங்கள்! எல்லாம் இந்த ‘வல்லமை’யால் வந்த வினை! சுக்கானே! திரும்பு.

    இந்த காலம் யாத்திரை என்றால் டூரிஸ்ட். அந்த காலத்தில் யாத்ரீகர்கள் கால் நடையாகவே, உழவாரப்பணி செய்து கொண்டே, திருத்தலங்களுக்குச் சென்று, இறைவனை தரிசித்து, தொழுது, பிரபந்தங்களும், பதிகங்களும் பாடி, பக்தியைப் பரப்பி வந்தார்கள். அப்படித்தான் எங்கள் இன்னம்பூர் எழுத்தறிவிநாதர் பெருமானின் கஜப்புருஷ்ட விமான ஆலயம் பாடஸ்தலமாயிற்று.

    “சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்

    முனிவனாய் முடி பத்துடை யான்றனைக்

    கனிய வூன்றிய காரணம் என்கொலோ

    இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே.”

    ஆழ்வாராதிகள் சேவித்த ஆலயங்கள் மங்களாசாஸனம் பெற்றன. ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்’ என்றபடி எங்கெங்கும் எங்கள் முன்னோர்களும், ராஜ பரம்பரைகளும் (இது பற்றி ஒரு ஆய்வுப் பட்டறை நடக்கப்போகிறது.) பாமரர்களும் கோயில்கள் எழுப்பி வழிபாடு நடத்தியதால், யாத்ரீகர்கள் போய் வந்த வண்ணம் இருந்தனர்.

    அவர்களில் ஒருவர் மதுரைக்கு வந்திருந்தார். அனல் வாதம், புனல் வாதம் எல்லாம் செய்து எதிர்க்கட்சியை சிதறடித்தார். அரசனோ அந்தக்கட்சி. ராணி இவர் பக்கம். ராஜாவும் சாய்ந்து விட்டார். இதற்குள் நாட்கள்/ மாதங்கள் பல கடந்து விட்டன போலும். இவர் ஊர்ப்பக்கம் திரும்பாததால், அப்பாவுக்கு ஒரே கவலை. அடித்துப்பிடித்துக்கொண்டு, மூப்பையும். களைப்பையும் பொருட்படுத்தாமல், ‘பெத்த மனம் பித்தாக’ அவரே மதுரையில் ஆஜராகி விட்டார். பிள்ளையாரையும் கண்டு களித்து, உச்சி முகர்ந்து ஆசு வாசப்படுத்திக்கொண்டபின், பிள்ளையாண்டான் அன்னையைப் பற்றி கேட்கவில்லை. அண்டையை பற்றி கேட்கவில்லை. ஊரார் சுபிக்ஷத்தைப் பற்றி கேட்கவில்லை!

    தத்துவமல்லவோ பேசினார், தந்தையுமான மைந்தன்! பிள்ளையார் (திருஞானசம்பந்தர்) சிவபாத இருதயரிடம் கேட்டது:

    மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
    எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலைக்
    கண்ணில் நல்லஃது   உறும் கமுமல வள நகர்ப்
    பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

    “இவ்வுலகின்கண் நல்ல முறையில் தினமும் வாழலாம்; சிந்தித்துப்பார்த்தால் அடுத்த உலகில் பெறவேண்டிய நல்ல கதிக்கும் யாதொரு விதமான குறையும் ஏற்படாது; கண்ணுக்கினிய நல்ல வளத்தோடு கூடிய கழுமலம் என்னும் சீர்காழிப்பதியின்கண் பெண்ணின் நல்லவளாகிய இறைவியுடன் பெருந்தகையாகிய சிவபிரான் நலமாக இருக்கிறான் அல்லவா1”

    ~ அ.ச.ஞானசம்பந்தன்

    அதான்! ‘தெய்வம் தந்த வீடு’ என்று பாடினார், கண்ணதாசன்.

    இன்னம்பூரான்

    20 01 2013

    உசாத்துணை: அ.ச. ஞானசம்பந்தன் (2005): இன்னமுதம். பக்கம் 25

    Share
  • என்றோ ஒரு நாள்!

    இன்னம்பூரான்

    புத்தாண்டு தினம்: 01 01 2013

    புத்தம் புதிய நேரம்: 01 01 1906

    நண்பர்களே!

    மடலாடும் குழுக்களில் இருக்கும் நாம், மற்றபடி ஆடாவிடினும், மடலாடி பழகுவுமே என்ற எண்ணம் உதயமாயிற்று. இனி, முடிந்தவரை கடுதாசிகள் எழுதுவதாக, உத்தேசம். அது நம் நெருக்கத்தை மேன்மைபடுத்தும் என்று தோன்றுகிறது. நேரமின்மையால், என்னுடைய இணையதளத்திலும். வலைப்பூவிலும் பதிவுகளை ஏற்றுவதில் சில வருட தாமதம் ஆகிவிட்டது. விட்ட குறை, தொட்ட குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது. இனிமேல், என்னுடைய இணையதளத்திலும், வலைப்பூவிலும் பதிவுகளை ஏற்றி, அதற்கான தொடர்பு கொடுத்தால், அதை மனமுவந்து படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதழியல், மடலாடல் குழுக்கள் விதிகளுக்கு உட்பட்டு என் இயக்கம் அமையும்.

    முதற்கண்ணாக, உங்கள் யாவருக்கும் என் 2013 புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் அபிலாஷைகள் பூர்த்தியாக வேண்டும் என இறைவனிடன் என் பிரார்த்தனைகள்.

    அன்புடன்

    இன்னம்பூரான்

    01 01 2013

    *

    திருமலையில் அலை மோதும் கூட்டம். நிரம்பி வழியும் உண்டியல். இந்து மத அபிமானிகள், சமய சந்தர்ப்பமாக அகப்பட்டுக்கொண்ட கிருத்துவ பண்டிகையை, விமரிசையாக கொண்டாடுவார்கள். ‘அதைக்கொடு’, இதைக்கொடு’ ஒம்மாச்சியிடம் பட்டியல் சமர்ப்பிப்பார்கள். சந்தடி சாக்கில், நானும் உங்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மாமாங்கம் 12 வருடங்களுக்கு ஒரு முறை. இங்கோ 26 வருடங்களுக்கு பிறகு தான் நாலு இலக்கங்களும் வெவ்வேறாக அமைந்துள்ளன. (1987 ~2013). அத்துடன் விட்டு விடுவது விவேகம். இதில் ஆரூடம் தேடுவதற்கு ஒன்றுமில்லை.

    க்ரகேரியன் காலண்டர் படி மூன்றாவது சகாப்தத்தின், 21வது நூற்றாண்டின், 2010 என்ற பத்தாண்டு வரிசையில் நான்காவது ஆண்டு பிரவேசிக்கும் இந்த தினம், கலியுகத்தின் 5114-5 ஆண்டாகக் கருதப்படுகிறது. அசிரியன் காலண்டர் அதை விட அரதப்பழசாம்: 6763. சும்மா பத்தாயிரம் ஆண்டுகளை கூட்டிக்கொண்டால், ஆச்சு ஹொலெசின் காலண்டர்: 12013. அது தொல்லியல் துறை போன்றவைக்கு பயன் படுமாம். யுனிக்ஸ் நேர பட்டியல் கொடுத்து, கணக்கு எலிகளாகிய உம்மையும், எம்மையும் பயமுறுத்தும் உத்தேசம் இல்லை.

    இந்தியாவில் தொன்மை காலத்திலிருந்தே ‘காலம்/ன் மீது கவனம் அதிகம். கி.பி.நான்காவது நூற்றாண்டு காலகட்டத்திலியே ‘சூர்ய சித்தாந்தம்’ என்ற நக்ஷத்திர மண்டலம் பற்றிய நூல், உலகம் உருண்டை என்கிறது. உஜ்ஜயின் என்று இன்று கூறப்படும் அவந்தி என்ற நகருக்கும் ரோஹிதகா நகருக்கும் இடையே ஓடும் ரேகையை மையப்படுத்தி, கால நிர்ணயம் செய்கிறது.  நாகரீகத்துக்கும், பண்பாட்டுக்கும், கலைகள், கல்வி, அறிவியல் ஆகியவற்றுக்கு மூலாதாரமாக விளங்கிய மேதைகளை அணைத்து, ஆதரித்து, போஷித்தது பழங்கால மன்னராட்சிகள் என்பதற்கு சந்திரகுப்த மெளரியர், அசோகச் சக்கரவர்த்தி, தென்னாட்டு சேர,சோழ, பாண்டியர், ஷெர்ஷா ஸூரி போன்றோரின் சாதனைகள் சாட்சி. வர, வர மாமியார் கழுதை போல் ஆனாளாம் என்றபடி, 17ம் நூற்றாண்டிலியே இருண்ட காலம் தொடங்கியது. அறிவியலுக்கும் அரசாங்கத்தும் காத தூரம் என்று அந்தப்புர வாசிகளாகிவிட்ட இந்திய சமஸ்தானதிபதிகள் சூர்ய சித்தாந்ததைக் கண்டுகொள்ளவில்லை. காலம் மாறாவிடினும், அங்கங்கே (தற்கால அமைப்புப்படி, ஜில்லாவுக்கு, ஜில்லா!) நேரங்கள் மாறிய வண்ணம் பாடாய் படுத்தின. மக்களை பற்றி யாருக்குக் கவலை?

    1802 லிருந்து மதராஸ் நேர நிர்ணயம் என்று ஒரு நடைமுறை இருந்தாலும், 1905 வரை, அதாவது ஒரு நூற்றாண்டுக்கு மேல், மத்திய அரசு கால நிர்ணயம் பற்றி கவலைப்படவில்லை. அலஹாபாத் அருகில் ஓடும் 82.5 கிழக்கு: என்ற ரேகையை மையப்படுத்தி, ஜனவரி 1 ,1906 அன்று இந்தியாவின் ஒரே ஒரு கால நிர்ணயத்தை பிரகடனப்படுத்தியது. அந்த பிரகடனத்தின் நினைவாக, இன்றைய தலைப்பு அமைந்தது.

    ஆனால், 1947 வரை பம்பாயும், 1948 வரை இந்த விஷயத்தில் கல்கத்தாவும் தனி ராச்சியம். அது மட்டுமல்ல. இரண்டாவது யுத்த காலகட்டத்தில், செப்டம்பர் 1, 1942லிருந்து அக்டோபர் 14, 1945 வரை, இந்தியாவின் நேரம் ஒரு மணி நேரம் முந்தி வைக்கப்பட்டது. இந்த நல்ல வழக்கம் ஏன் கை விடப்பட்டது என்று புரியவில்லை. இன்றளவும் மேற்கத்திய நாடுகள், மின்சாரத்தை மிச்சம் பிடிக்க, இந்த முறையை கையாளுகின்றன.

    இந்தியா ஒரு காண்டம் போன்ற பெரிய நாடு. அருணாசலபிரதேசத்தில் ஆதவன் எழும்போது, அஹமாதாபாத்தில் இருட்டு. ஆகவே, அதற்கேற்ப மணி அடிப்பது தான் விவேகம். கிட்டத்தட்ட 28 தீர்க்கரேகைகளை உட்கொண்ட நம் பிரதேசத்தில், இந்த இரண்டு மாநிலங்களுக்கும் இரண்டு மணி நேர வித்தியாசம் இருப்பது என்னவோ, விஞ்ஞானம் அறிந்த உண்மை. அதை விஞ்ஞானிகள் அழுத்தமாகக் கூறினாலும், அரசு அசைந்து கொடுக்கவில்லை. பூகோள உண்மைகளை பகர்ந்து விட்டு, இந்த 28 தீர்க்கரேகைகளை உட்கொண்ட நம் பிரதேசம் பெரிதல்ல என்றும், சீதோஷ்ண நிலை ஒரு பொருட்டு அல்ல என்று அடித்துப் பேசி ‘ஒரே இந்தியா! ஒரே கால நிர்ணயம்’ என்ற அறிவியல் கலைந்த கூற்றை 2004ல்  உறுதி செய்து விட்டார், நாம் விஞ்ஞான அமைச்சர் கபில் சிபல் அவர்கள்.  ரயில்வே கால அட்டவணைகளைப்பார்த்தால் திகைத்துப் போகும் வரை, அவை பல குழப்பமான வகைகளில் காலம் தள்ளி வந்தது தெரிய வருகிறது. சொல்லப்போனால், அது பெரிய கதையாக நீண்டு விடும்.

    அன்புடன்,

    இன்னம்பூரான்

    01 01 2013

    *

    உசாத்துணை:

     http://www.hindustantimes.com/editorial-views-on/Edits/Two-timing-India/Article1-246310.aspx

    http://www.hindu.com/thehindu/mp/2002/01/07/stories/2002010700130300.htm

    http://dst.gov.in/admin_finance/un-sq1007.htm

    *

    Copyright: Innamburan: The moral rights of the author has been asserted. No reproduction in any form/fashion without his prior permission.

    Share
  • சுவரொட்டிகள்

    இன்னம்பூரான்

    1905ல் பிரசுரம் ஆன நூல் ஒன்று படிக்க நேர்ந்தது. சுவரொட்டியின் பாமரகீர்த்தியை அருமையாகச் செப்பியது. அதில் இருந்த படம் ஒன்று என்னை கவர்ந்தது. மயிலேறி வெளிச்சம் பாய்ச்சுகிறானொருவன். அது ஆதவனின் சூட்டை பிடித்து எரிக்கும் பூதக்கண்ணாடியல்ல போலும்! அவனது பிரகாசத்தைப் பிரிதிபலிக்கும் பாதரசம் தடவிய கண்ணாடி. சுவரொட்டிகள் அந்த மாதிரி தான். அவை கையொப்பத்தைப் போல தனித்துவம் வாய்த்தவை. ஒன்றை போல் மற்றொன்று இல்லை, விளம்பர சுவரொட்டிகளாக இருந்தாலும். எஸ்.கே. கூக்கா என்ற படைப்பாளர் சிகரம் ஒருவர் இருந்தார். ஏர் இந்தியா/அமுல் நிறுவனங்களுக்காக, அவர் எழுதிய ‘ஒரு வரியும் ஒரு படமும்’ ஆன சுவரொட்டிகள் அபாரம். தினந்தோறும் மும்பையில் மலபார் ஹில்ஸ் பிரதேசத்தில் நடை பயிலுபவர்கள் நின்று பார்த்து, நாள் முழுதும் அதே சிந்தனையில் ஆழ்ந்திருப்பார்கள்.

    புதுக்கோட்டையில் எமது இல்லத்தில் ஒரு அருமையான ராமர் பட்டாபிஷேக சுவரொட்டி, வரையப்பட்டிருந்தது. காலாகாலத்தில் அதைக் காப்பாற்ற முயன்றதெல்லாம் விழலுக்கு இறைத்த நீராயிற்று. அந்த மாதிரி கோயில் சிற்பங்கள், ஓவியங்கள், ஏட்டுச்சுவடிகள் எல்லாம் சுவரொட்டிகள் தாம். சந்தேகம் வேண்டாம். திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் கோயில் நுழைவாயிலில் சுவாமி விவேகானந்தர் சிஷ்யகோடி அழகியசிங்கருக்கு எழுதிய கடிதம் ஒரு கல்வெட்டாக இருக்கிறது. அதைப் படிக்காமல் உள்ளே போனால், பெருமாள் உம்மை கவனிக்க மாட்டார்.

    இரண்டாம் யுத்தகாலகட்டத்தில் காகித பஞ்சம். பிரசுரங்கள் பாதிக்கப்பட்டன. கோட்டா, கீட்டா எல்லாம் சுதந்திர வாஞ்சையை கட்டிப்போட நினைத்தன. எமது படைப்பாற்றலை அரசு புரிந்து கொண்டு தடியெடுக்கும் முன் சுவரொட்டிகள் ஒட்டினோம். ஆகஸ்டு 6. 1944 அன்று விபரீதத்துக்கு பயந்து அண்ணல் காந்தி விடுதலை செய்யப்பட்டதைப் பற்றி சுவரொட்டி இயக்கம் நடத்தினோம் என்பது மங்கலாக நினைவில் இருக்கிறது. சில வேடிக்கைகள். பிரிட்டீஷ் சாம்ராஜ்ய அபிமானிகள் ரகசியமாக செலவை ஏற்றுக்கொண்டனர். எங்கள் ஆஸ்தான பாடகரான ஒச்சத்தேவன் அருமையாக சித்திரமும் வரைவான். பிரமலை கள்ளர் ஹாஸ்டல் தான் எங்கள் பாசறை. அக்காலம், உசிலம்பட்டி சின்ன ஊர். ஊரெங்கும் எங்கள் சுவரொட்டிகள் பளீரென ஜால் அடிக்கும். ஒரு வாசகம் மறக்கவில்லை.

    “ தண்டலெடுத்து எம்மை அடக்க நினைக்காதே, பரங்கி துரையே!

    கண்டபடி விரட்டாதே, கலைக்டர் ஐயா!

    ராஜாவை மீட்டு விட்டாய், அரண்மனையிலிருந்து.

    கூஜா தூக்க உனக்கு ஆளில்லை, பரங்கி துரையே.”

    தப்பு இருக்கலாம். ஆனால், திருத்திக்கொடுத்தது இன்ஸ்பெக்டர் ராமய்யர். அது ஒரு காலம்.

    சுவரொட்டிகள் மேலும், மேலும் ஒட்டப்படும், வாசகர்கள் வேண்டாம் என்றால் ஒழிய.

    இன்னம்பூரான்

    20 12 2012

    படித்த நூல்:

    KATE SANBORN (1905) OLD TIME WALL PAPERS:AN ACCOUNT OF THE PICTORIAL PAPERS ON OUR FOREFATHERS’ WALL WITH A STUDY OF THE HISTORICAL DEVELOPMENT OF WALL PAPER MAKING AND DECORATION: NEW YORK: THE LITERARY COLLECTOR PRESS

    சித்திரத்துக்கு நன்றி: http://www.gutenberg.org/files/41664/41664-h/images/i_011.png

    Share
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்: 5

    பசியும், சுவையும், வளர்ச்சியும்.

    இன்னம்பூரான் & தேமொழி

    விலங்கினங்களின் உணவுப் பழக்கத்தை வைத்து தாவரஉண்ணி, விலங்குண்ணி, அனைத்துண்ணி என்று அவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கிறோம்.  நம் மனித இனம் அனைத்தையும் உண்ணும் வகைதான்.  எதையும் விட்டு வைப்பதில்லை. அசையாத் தாவரங்கள் முதற்கொண்டு நீந்துவன, ஊர்வன, பறப்பன, ஓடுவன என அகப்படும் விலங்கினங்கள் அனைத்தையும் கபளீகரம் செய்கிறது, மனித இனம்!

    மனித இனம் கண்டுபிடித்த மிக அரிய கண்டுபிடிப்புக்களில், மிகவும் உதவும் கண்டுபிடிப்பாக  விளங்குவது சமையல் கலை. சமைப்பதால் உணவு செரிக்கப்பட்டு வெகு விரைவில் உடலுக்கு சக்தி கிடைக்கிறது.  எனினும் சில காய், கனி, மூலிகைகளை சமைத்தால், அவற்றின் பயன் குறைந்து போவதும் உண்மை.

    சமைத்துண்ணும் உணவுப் பழக்கத்தால், பரிணாம வளர்ச்சியின் காரணமாக, காலப் போக்கில் மழுங்கிய கோரைப் பற்களையும், செயல் திறனற்ற சுருங்கிய குடல்வாலும் நமக்கு நிலைத்துவிட்டது.  காலப்போக்கில் மனித குடலின் அளவும் குறைந்து வருகிறது என்கிறார்கள்.

    சொல்லப்போனால் நாம் இரண்டும் கெட்டான். நமக்கு பசுமாட்டின் அசை போட்டு அரைக்கும் பற்களும் கிடையாது. புலியின் கோரைப்பற்களும் கிடையாது.   அத்துடன், தாவரஉண்ணி போல தாவரங்களில் உள்ள செல்லுலோஸ் மூலக் கூறுகளை செரிக்க உதவும் பாக்டீரியாக்களைக் கொண்ட,  ‘செயல்படும் திறனுள்ள’ குடல்வால் (Vermiform appendix) உறுப்பும் மனித இனத்திற்கு இல்லை.

    நாம் உணவை உண்டு, செரித்து அதன் சக்தியை பெற்றுக்கொள்வதில் உடலின் பல உறுப்புகள் பங்கு பெறுகின்றன.  நம் உடல் உணவின் மூலம் சக்தி பெறுவதில் உணவு மண்டல உறுப்புகளுடன் மூளையின் பங்கும்  இன்றியமையாததாக அமைகிறது. உணவு உட்கொள்வதைக் கண்காணிப்பதில், கட்டுப்படுத்துவதில் நம் மூளை அல்லது மனம் பங்கேற்கிறது. மனம் திருப்தி அடைவது போல சாப்பிடுவது மனித இயல்பு.

    உணவு நமக்கு சக்தி கொடுக்கிறது என்று  உணர்ந்து நாம் சரியான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதில்லை.நம் உணர்வுகளுக்கு திருப்தி தரும் உணவுகளையே நாம் நாடுகிறோம். அவற்றை நமக்கு திருப்தி ஏற்படும் வரை சாப்பிடுகிறோம்.  இந்த திருப்தி அடையும் உணர்வினைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நம் மூளை, மற்றும் மூளையை உணவு மண்டலத்துடன் இணைக்கும் நரம்புகளின் செயல்.

    சக்தி இழந்து உணவு தேவைப்படும் பொழுது,  இரைப்பையில் கெரிலின் (Ghrelin) என்ற சுரப்பிநீர் சுரக்கிறது. இதனால்  ‘உணவு தேவை’ என்ற சமிக்கை மூளைக்கு அனுப்பப்பட்டு ‘போய் சாப்பிடு’ என்ற பதில் கட்டளையையும் மூளை நமக்கு அனுப்புகிறது. அது போலவே திருப்தியாக வயிறு நிறைந்தால் மூளைக்கு ‘வயிறு நிறைந்தது’  பற்றி சமிக்கை அனுப்பப்படுகிறது.  மூளை ‘சாப்பிட்டது போதும் நிறுத்து’ என்று பதில் சமிக்கை அனுப்புகிறது. படிப்படியாக பல படிகளில் கட்டளைகள் அனுப்பப்பட்டு நிறைவேற்றப் படுகின்றன.

    சக்தி இழப்பின் எச்சரிக்கை, சுவையான உணவின் நினைவு, பரிசாக கொடுக்கப்படும் உணவு, அதனால் ஏற்படும் திருப்தி, உணவு தேவை நிறைவேற்றப்பட்டது என்பது போன்று தொடர்ந்து தேவையானக் கட்டளைகளை மூளை நிலைமைக்குத் தக்கவாறு ஒன்றன் பின் ஒன்றாக அனுப்புகிறது.  ஒரு கட்டளை நிறைவேற்றப்பட்ட சமிக்கை சென்றதும், அதன் தன்மைக்கேற்ப அடுத்த கட்டளை மூளையினால் பிறப்பிக்கப்படும்.

    மூளை தரும் இந்தக் கட்டளைகளை நாம் புறக்கணிப்பது நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.  அதனால் அதிகம் உண்டு நோயை வரவழைத்துக் கொள்ளுதல், அல்லது பட்டினி கிடந்தது உயிரைவிடுதல் போன்றவை நிகழ்கிறது.  இவ்வாறு நாம் மூளையின் கட்டளைகளைப் புறக்கணித்து உணவில் கட்டுப்பாட்டை இழக்கும் பொழுது அந்தப் பழக்கம் மனநோயாக வகைப்படுத்தப் படும் ‘உண்ணும் கோளாறுகள்’ (eating disorders) என்ற நிலையை அடைகிறது.

    உண்ணும் கோளாறுகள் மூன்று முக்கிய வகையாக; (1) அனோரெக்ஸ்யா, (2) புலுமியா, (3) பின்ஜ் ஈட்டிங் (Anorexia nervosa, Bulimia nervosa, and binge-eating disorders) என்று பெரும்பாலும் அறியப்படுகிறது. இக்கோளாறுகள் ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும்.  எந்த வயதினரும் பாதிக்கப் பட வாய்ப்பு இருந்தாலும், பதின்ம வயதினர், அதிலும் பெண்கள் மிகவும் பாதிக்கப் படுகிறார்கள்.  மெல்லிய தோற்றம் கொண்டிருப்பதே ‘உடல் அழகு’ என்ற கருத்து சமுதாயத்தினால் பெண்கள் மேல் நிர்பந்திக்கப்படும்போழுது அவர்கள்  உணவு உண்ணுதலில் கட்டுப்பாட்டினை இழந்து மிகவும் பாதிக்கபடுகிறார்கள்.

    அனோரெக்ஸ்யாவால் பாதிக்கப் பட்டவர்கள் உணவை தவிர்த்து பஞ்சத்தில் அடிபட்டவர்கள் போல் எலும்பும் தோலுமாக மாறுவார்கள்.  இரத்த சோகை, உயிர்ச்சத்துகள் (vitamins) குறைவு போன்றவை தாக்கி, உருவம் மாற்றமடைந்து, எளிதில் நோய்களால் பாதிக்கபடுவார்கள்.

    புலுமியாவால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகம் உண்பது, பிறகு வாந்தி எடுப்பது, மலமிலக்கி உபயோகப்படுத்துவது போன்றவற்றினால் உணவை உடலில் சேராமல் செய்யும் முறைகளைக் கையாள்வது, உணவைக் கட்டுப்படுத்துதல் (Dieting) போன்ற வழிகளைக் கையாண்டு சீரற்ற உடல் எடையை கொண்டிருப்பதை வழக்கமாக்கிக் கொள்வார்கள்.

    பின்ஜ் ஈட்டிங் உணவுப் பழக்கமுள்ளவர்கள், கட்டுப்பாடின்றி சாப்பிட்டுக்கொண்டே இருப்பதால் உடல் பருமனால் (obesity) பாதிக்க்கப்படுவார்கள். இதனால் குற்றவுணர்வு, மனச்சோர்வு (Depression) போன்ற மேலும் மனநோய்களுக்கு ஆளாவதுடன், இரத்த அழுத்தம், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் கொழுப்பு அதிகரித்தல், அதனால் மாரடைப்பு, இதய நோய், நீரிழிவு நோய் (Diabetes)  போன்றவைகளினால் அதிகம் பாதிக்கப் படுவார்கள். விருச்சிக முனிவர் இட்ட சாபத்தால் யானைப்பசி என்னும் நோய்க்கு ஆளான காயசண்டிகையை இது நினைவு படுத்தினாலும், யானைக்கு அன்றாட உணவு, கண்ணுங்கருத்துமாக அளவிடப்பட்டுக் கொடுக்கப்படுகிறது என்று நாம் அறிவோம்.

    இந்த உண்ணும் கோளாறுகளில் வகைப்படுத்தப் படாதவைகள் (eating disorders not otherwise specified – EDNOS) என மற்றொரு பிரிவின் கீழ் மேலும் பல தவறான உணவுப் பழக்கங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.  இவையாவும் மனநோயாகக்  கருதப்பட்டே சிகிச்சை தரப்படுகிறது.

    பசி இயல்பு. சுவை விருப்பம். வளர்ச்சி இயற்கையின் கொடை. தற்காலம், மேற்கத்திய நாடுகளில், பாட்டியின் கைவைத்தியத்துக்கும், இயற்கையின் அன்பளிப்புக்கும், மூலிகை வைத்தியத்துக்கும், ஆயுர் வேதத்துக்கும் மதிப்பு கூடி வருகிறது. உசாத்துணையில் இன்னம்பூரான் கூட்டியிருக்கும் நூலின் சாராம்சம்:

    ஷேக்ஸ்பியர் மாக்பெத் நாடகத்தில் கூறியது போல, பசி வந்தால் நல்ல ஜீரணம். ஜீரணித்தால் ஆரோக்கியம். ஹிப்போக்ரட்டீஸ் சொன்னது போல வியாதிகளின் மூலஸ்தானம், குடல். அந்த அவஸ்தையை நாம் நாடுவதை பற்றி விலாவாரியாக விமரிசிக்கும்  திருமதி. ஜில் தாமஸ் சொல்வதைக் கேட்போம்,

    1. வேண்டிய அளவு நார்ச்சத்து இல்லையேல், மலம் சிக்கும்;

    2. நீரில்லையேல் ஜீரண அவயவங்கள் தவிக்கும்;

    3. ஒவ்வாத வகையில் பதார்த்தங்களை முழுங்கிவிடுவதைப் போல பாவம் ஒன்றுமில்லை;

    4. அவசரப்பட்டு, அடிச்சு பிடிச்சு சாப்பிட்டால், வயிறு அழும்;

    5. உண்ணும் போது நிதானம் உதவும். மன அழுத்தம் நீங்காத போது உண்டால், வயிறு வலிக்கும்;

    6. காலையில் எழுந்தவுடன் மலஜலம் கழிப்பது சாலத்தகும்; பொறுத்தார் வயிறாள்வார்!

    7. செத்துப்போன உணவை விலக்கவும். கட்டித்தந்த மாமிசத்துகள்களை விட ஒரு கேரட்டை கடிப்பது, உத்தமம்;

    8. லாஹிரி வஸ்துக்கள் வயிற்றின் பகை. அவற்றைக்கொண்டு வயிற்றை அடிக்காதே:

    9. மருந்தானாலும் விருந்தோடு உண் என்பது சரி. விருந்தானாலும் கபளீகரம் தவிற்க. மருந்து அத்தருணம் உதவாது.

    இவற்றின் அடிப்படையில் யான் கூறவருவது: பசிக்கு உணவு; சுவைக்கு பக்குவம்; வளர்ச்சிக்கு தராதரம்.

    இருவர் இணைந்து வழங்கினால் பயன் அதிகரிக்கறது. அடுத்த இழையில் குடலுக்குள் புகுந்து பார்க்கலாமா? என்ன சொல்றேள்?

    இன்னம்பூரான்

    தேமொழி

    கவனம்:
    நாங்கள் டாக்டர்கள் அல்ல. நட்புரிமையுடன், பொறுப்புணர்ச்சியுடன்,ஆதாரங்களை தமிழில் விளக்கி, அவற்றை சுட்டிக்காண்பித்து அறிமுகம் தரும் சுகாதாரம் பற்றிய தொடர் இது, டாக்டரிடம் ஆலோசனை பெற இவை உதவலாம்.  இவற்றை படித்து உரிய நேரத்தில் டாக்டரிடம் போவதைத் தவிர்க்கக்கூடாது.  அவரவர் மருத்துவம், சிகிச்சை, நிவாரணம் ஆகியவற்றை நாடும் செயல்களுக்கு அவரவர்கள் தான் பொறுப்பு ஏற்கவேண்டும்.

    — இன்னம்பூரான் & தேமொழி

    உசாத்துணை:

    http://www.nimh.nih.gov/health/publications/eating-disorders/complete-index.shtml

    http://www.nationaleatingdisorders.org/information-resources/index.php

    http://www.tamilvu.org/courses/diploma/a071/a0713/html/a0713166.htm

    Jill Thomas (2007) Healthy Gut Guide: London: Penguin

    சித்திரத்துக்கு நன்றி:

    http://1.bp.blogspot.com/-reYJG0vTlfw/UBkOncA5ZfI/AAAAAAAABRo/5YCdGFlRSXU/s1600/maya14.jpg

    Share
  • தமிழார்வம் திரிகடுகம்: அபாயம் தவிர்

    இன்னம்பூரான்

    8. அபாயம் தவிர்


    வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும், ஒப்ப
    விழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும், உழந்து
    விருந்தினனாய் வேற்றூர் புகலும்,-இம் மூன்றும்
    அருந் துயரம் காட்டும் நெறி.              
            [5]

    8.1. Look before you leap. பெருக்கெடுத்தோடும் நதிகளில் அபாயம் இருக்கலாம். -நீர்ச்சுழல்/ பொதி மணல்/ அதி வேகம்/ முதலை போன்றவை. கவனமில்லாமல், புழக்கத்தில் இல்லாத  ஆற்றின் துறைகளில் இறங்குவது அபாயத்தை ஆசிரியர் நல்லாதனார் எடுத்துரைத்திருக்கிறார். நான் இந்த ‘தமிழார்வம்’ துறையில் இறங்கியது கூட எனக்கு வழங்காத்துறையில் இறங்கிவிட்டேனோ என்ற ஐயம் தலை தூக்க, சற்றே கரையோரம் ஒதுங்கி நின்றேன். ஆன்ரே கைட் (Andre Gide) என்ற ஃபிரென்ச் தத்துவ ஞானி ‘கரையிலே நின்று கொண்டிருந்தால், புது சமுத்திரங்களை காண்பது எவ்வாறு?(“Man cannot discover new oceans unless he has the courage to lose sight of the shore.”) என்று கேட்கிறார். அதுவும் நியாயமாகத்தான் படுகிறது. தவிர, இதையெல்லாம் பத்தாம் பசலி என்று தமிழகத்தில் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இறங்கியாச்சு. நல்லாதனாரின் எச்சரிக்கையை கவனத்தில் வைத்துக்கொண்டு பயணம் தொடர்கிறது.

    8.2. ‘ஒப்ப விழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும்…’
    : ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் நெறியை இல்லறம் என்று பல இடங்களில் போற்றும் நல்லாதனார், வாழ்வியலின் மென்மை ஒன்றை உணர்த்துகிறார்.  விருத்தியுரையில் ‘ஒப்ப விழைவு இலாப் பெண்டிர்’ வேசையர் என்று கூறப்பட்டிருக்கிறது. அன்பும், காதலும் இல்லாத போது இணைந்து வாழ்வது எளிதல்ல என்று பொருள் கொள்ளலாம். காஞ்சனையின் கனவு என்று ஒரு திரைப்படத்தை பல வருடங்களுக்கு முன்னால் பார்த்த ஞாபகம். அதில் விலைமாது என்று சித்திரிக்கப்பட்டவர் உண்மையில் கதாநாயகனை நேசிக்கிறாள்; தியாகம் செய்கிறாள்; அவரின் குடும்பத்தால் மதிக்கப்படுகிறாள் என்று ஞாபகம். தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ என்ற புதினத்தில் ‘ஆசைக்கிழத்தி’ உறவும் அதன் பின்விளைவும் நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது.

    பரத்தையிடம் சென்று வந்தால் ஊடல் தான் தலை தூக்கும் என்றொரு பக்கமும், பரத்தையிடம் சென்று வந்த சின்னங்களை பட்டியலிட்டுத் தலைவனை கேலி செய்து, அவனுக்கு காதற்பரத்தையாக இருந்த மாதை, தலைவி ‘நீடூழி வாழ்க’ என்று வாழ்த்துவதாக ஒரு பக்கமும் வருணிக்கிறது, நற்றிணை 20: (பின்னத்தூர்.அ.நாராயணசாமி ஐயர் அவர்கள் எழுதிய உரையும் விளக்கமும்).

    20 மருதம் – ஓரம்போகியார்


    ஐய குறுமகட் கண்டிகும் வைகி 
மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர்த் 
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல் 
துளங்குஇயல் அசைவர கலிங்கம் துயல்வர 
செறிதொடி தௌ ர்ப்ப வீசி மறுகில் 
பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி 
சென்றனள் வாழிய மடந்தை நுண் பல் 
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள் 
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை 
பழம் பிணி வைகிய தோள் இணைக் 
குழைந்த கோதை கொடி முயங்கலளே

    ஒரு இலக்கிஅய சுவைக்கு இவற்றையெல்லாம் சொன்னேன். நல்லாதனார் கூறும் வகையில் இல்லறம் போற்றுவது சாலத்தகும்.

    8.3. ‘…உழந்து விருந்தினனாய் வேற்றூர் புகலும்…’: வேற்றூர் என்றாலே பொதுவாக, அது ஒரு பிரச்னை தான். முதலில் வழி தெரியாது. மொழி தெரியாது. மாந்தர்களின் மரபு வேறு படலாம். எனினும் சாமி சிதம்பரனார் கூறிய படி எல்லா அறிவுரைகளையும் காலத்துக்கேற்ப கடை பிடித்தால் நலம். ‘When in Rome, do as the Romans do.’ இருந்தாலும், பல பிரச்னைகள் தொக்கி நிற்கலாம். ‘மதியாதார் தலைவாசல் மிதியவேண்டாம்’ என்றார், மயிலேறும் பெருமானை போற்றும் உலகநாதர். அது என்னமோ சரி தான்.
    (தொடரும்)
    இன்னம்பூரான்
    06 12 2012
    உசாத்துணை:

    திரிகடுகம்: மூலமும், உரையும்: http://noolaham.net/project/35/3423/3423.pdf
    தமிழ் இணையக் கல்விக்கழகம்
    திரிகடுகம்:மூலமும்,விருத்தியுரையும்: http://www.tamilvu.org/library/libindex.htm

    நற்றிணை: http://www.tamilvu.org/library
    சித்திரத்துக்கு நன்றி:http://img249.imageshack.us/img249/7429/im0021334mg.jpg
    Share
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்: 4

     

    இன்னம்பூரான்

    1 + 1 = 3!

    இந்த தலைப்பில் நான் ஒரு வருடத்துக்கு முன்னால் துவக்கிய அறிமுகக்கட்டுரையை ஆயிரத்துக்கு மேலான வாசகர்கள் படித்திருப்பதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. அடுத்து வந்த நீரிழிவு நோயை பற்றிய கட்டுரைக்கு அந்த வரவேற்பு தென்படவில்லை. சமீபத்தில் வலி நிவாரணத்தைப் பற்றி திருமதி. தேமொழி எழுதிய கட்டுரை பல நல்ல செய்திகளை அளித்தது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் உள்ள மருத்துவ விழிப்புணர்ச்சி, சமூகத்தில் பகிர்வுகள், ஆதாரமுள்ள இணைய தளங்கள் ஆகியவை நமக்கு உதவும் என்ற அடிப்படையில், இருவரும் இணைந்து எழுதத் தொடங்கியுள்ளோம். சில இதழியல் கோட்பாட்டுக்கு உட்பட்டு, அது ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.3: சஞ்சீவினி’என்ற தலைப்பில் இங்கே http://www.vallamai.com/paragraphs/29306/

     டிசம்பர் 3, 2012 அன்று மறு பகிர்வு என்ற பகுதியில் பிரசுரம் ஆகியிருக்கிறது.படித்து பயன் பெறுக. எமக்கும் சொல்லுக. ஆர்வம் கூடும்.

    ஒத்த சமுதாய நோக்கு உடைய இருவர் இணைந்து பணி செய்தால் 1+1=3.

    உலகெங்கும் சாதிமத பேதமில்லாமல் கொண்டாடப்படும் புத்தாண்டு விழா நெருங்குகிறது. வாசகர்களுக்கு எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    (தொடரும்)
    இன்னம்பூரான்
    03 12 2012

    படத்துக்கு நன்றி: http://coe.jmu.edu/LearningToolbox/images/oswald5.gif

    Share
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.3

     

    சஞ்சீவினி

     

    இன்னம்பூரான் & தேமொழி

    ஒரு வருடம் முன்னால் இன்னம்பூரான் ‘வல்லமை’யில் எழுதிய இந்தத் தொடரின் முதல் பகுதியை 1640 வாசகர்கள் படித்திருக்கிறார்கள், இன்னும் சிலர் படித்து வருகிறார்கள் என்பதும், அடுத்த பகுதியும் வாசிக்கப்படுகிறது என்ற குறிப்பும், தேமொழியின் ‘வலி நிவாரணி வேலை செய்யும் விதம்’ என்ற கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களும், இந்த தொடருக்கு சஞ்சீவினி மூலிகையாக வருகை புரிந்து, அதை உயிர்ப்பததற்கு நன்றி.  வாசகர்களுக்கு நன்றி நவிலவேண்டும்; தலைப்பை ‘சஞ்சீவினி’ என்று மாற்றியமைத்து, அதை செய்தோம். 

    முன்பகுதிகளின் ரத்னசுருக்கம்:

    நோயாளிகளின் அணுகுமுறையை முன்னிறுத்தி அமையும் என்று இந்த தொடரை அறிமுகம் செய்தார், ‘வல்லமை’ ஆசிரியர். முதல் கட்டுரை சர்வ கலா வல்லமை பொருந்திய நீரழிவு நோயை பற்றிய அறிமுகம். ” நீங்கள் தான் உங்களுக்கு முதல் டாக்டர் ” என்ற படிப்பினையின் மகாத்மியத்தை உணர்த்தியது. மிதமான சத்து உணவு, உடற்பயிற்சி, நேரம் தவறாத மருந்து என்ற நீரழியா வேதம் ஓதியது. அடுத்த பகுதி ‘ஒரு அரசு மருத்துவமனையுடன் உரிமையுடன் உறவு வைத்துக்கொள்வது’ பற்றி குறிப்பால் உணர்த்தியது. இங்கிலாந்தின் இலவச மருத்துவ சேவையின் பின்னணியையும், ஆதாரமுள்ள அறிவுரைகள் இலவசமாக கிடைப்பதையும் கூறியது. அங்குள்ள டாக்டரிடம் இது பற்றி பிரஸ்தாபித்த போது, அவர் இந்த முயற்சியை வரவேற்றார். ‘நாங்கள் டாக்டரல்ல.’, ‘டாக்டரிடம் ஆலோசனை பெற இவை உதவலாம். இவற்றை படித்து உரிய நேரத்தில் டாக்டரிடம் போவதைத் தவிர்க்கக்கூடாது’ என்பதை விளக்கி விடுங்கள் என்றார். [Disclaimer ஐ படிக்கவும்.] PCO (patient complaining of) + HPC (history of the present complaint) + PMH (previous medical history).” என்ற மும்மந்திரங்களின் மர்மமும் அறிந்தோம். வலி என்ற சொல் அந்தாதியாக அமைந்து விட, தேமொழி வலி நிவாரணிகள் வேலை செய்யும் விதத்தை விளக்கினார். இன்னம்பூரானின் ‘அபாய சங்கு’ இருவரும் இணைந்து ‘சஞ்சீவினி’ மருத்துவத் தொடரை பரிபாலனம் செய்யவேண்டும் என்று அன்புகட்டளை விடுத்தது. இணைந்து வருகிறோம். கருத்து, வினா, ஆலோசனை, பின்னூட்டங்கள், தனி மடல்கள் எல்லாம் நல்வரவு ஆகுக. நீரழிவு நோய், மன அழுத்தம் ஆகிவற்றை பற்றி பிறகு எழுதுகிறோம். 

    இந்த பகுதியில் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் வாழ்வியலை எவ்வாறு சிறப்புற செய்யும் என்பதை பற்றிய ஒரு நூலின் சுருக்கம். மேலதிக விவரங்கள், உங்கள் வினாக்களை பொருத்து அமையும். சில அமெரிக்க மருத்துவ ஆலோசனைகளும் இடம் பெறுவது நலன் தரும். தெளிவு முக்கியம். அதனால், இனி அவரவர் பெயரில்:

    இன்னம்பூரான்:

    சோம்பலை முறியடிப்பது எளிது. சில அன்றாட வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அடிக்கடி நடை, படி ஏறுவது, கடைக்கு நடந்து போவது, அதிக நேரம் அமர்ந்து இருப்பதைக் குறைத்து விடுவது, நண்பர்களுடன் பழகுவது என்று ஆரம்பியுங்கள். அதை வழக்கமாக செய்யுங்கள்.

    ஏன் இப்படி? சோம்பல் (physical inactivity) உடல் வலிமையை தளர்த்தி விடும். விரைவில் உயிரை மாய்த்து விடும். இதய நோய்க்கு (coronary heart disease: chd) இந்த சோம்பல் தான் வித்திடுகிறது. இது வளர்ந்த நாடுகளிலும், பின் தங்கிய நாடுகளிலும் கண்டெடுத்த உண்மை. சுறுசுறுப்பு ஆசாமிகளை விட சோம்பேறிகளுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

    அன்றாடம் சுறுசுறுப்பாக இயங்கினால், இதய நோய்/இரத்த அழுத்த நோய்/ டைப் 2 நீரழிவு நோய்/பெருங்குடல் புற்றுநோய்/பருமன்/ ஞாபக மறதி ஆகியவற்றின் தாக்கம் குறையும்.

    அன்றாடம் சுறுசுறுப்பாக இயங்கினால், மேற்படி வியாதிகளை தடுக்கக்கூட முடியலாம்; மேலும் எலும்பு வியாதிகள் எளிதில் அணுகா. 

    அன்றாடம் சுறுசுறுப்பாக இயங்கினால், மூட்டு அசைவும், திறனும் அதிகரிக்கும்.

    அன்றாடம் சுறுசுறுப்பாக இயங்கினால், சக்தி கூடும்; மன அழுத்தம் குறையும்; இளைப்பாறுதல் இனிமையாக அமையும்; உறக்கம் நன்றாக வரும்; களைப்பு தீரும்; ஏகாக்ரஹசக்தியுடன் இயங்கலாம். வாழ்க்கையின் சுவை கூடும். வேறு என்ன வேண்டும், பராபரமே! 

    மேலும் சொல்ல நிறைய இருக்கிறது. அவை வினா-விடை பகுதியில் இருப்பதால், கேட்க, கேட்க பதில் வரும். அதற்கு முன், கட்டுரை முடிவில் கொடுக்கப்பட்ட உசாத்துணைகளை படியுங்கள். மற்றவர்களிடம் அது பற்றி பேசுங்கள். சுறுசுறுப்புக்கு சுறுசுறுப்பு ஆச்சு. நாலு பேருக்கு நல்ல விஷயம் சொன்னதாகவும் ஆச்சு. கேள்விக்கணை தொடுக்கவும் வசதியாச்சு.

    நன்றி.

    *

    தேமொழி:

    உடல் நலம் பேணிக் காப்பதற்கு  நம் தமிழர்களுக்கு காலம் காலமாகத்  தகுந்த அறிவுரைகள் கிடைத்துள்ளன.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவர் வழங்கிய திருக்குறளிற்கு மேல் நாம் ஆதாரம் தேடத் தேவையில்லை.  “மருந்து” என்று ஒரு அதிகாரமே அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது வள்ளுவரால்.

     

    “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

    வாய்நாடி வாய்ப்பச் செயல்.”

    இக்குறளைப் படிக்காத தமிழ் மாணவர்கள் இருக்க வாயிப்பில்லை.  

     

    “நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்”, என்று இக் குறளுக்குப் பொருள் உரைக்கிறார் மு. வரதராசனார். 

     

    “நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.”

    “மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.”

    “மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.”

     

    இவ்வாறாக  ஒரு நான்கு குறள்களில் மருத்துவம் பற்றி பொதுவில் குறிப்பிட்ட வள்ளுவம், மருந்து அதிகாரத்தின் மற்ற ஆறு குறள்களில் முக்கியத்துவம் அளித்திருப்பதோ நம் உணவுப் பழக்கத்திற்கு.

     

    “முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.”

    “முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.”

    “முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.”

    “மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.”

    “குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.”

    “பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்பட்டு விடும்.”

    (~மற்ற பொருளுரைகளும் மு. வரதராசனார் வழங்கியவையே)

     

    இதிலிருந்து   மருத்துவமும் பத்தியமும் இணைந்து செயல் படுபவை என்பது உணர்த்தப்படுகிறது.  அத்துடன், வரும்முன் காப்பதின் அவசியத்தை உணர்த்தும் முகமாக, உட்கொள்ளும் உணவில் கடைபிடிக்க வேண்டிய இன்றியமையாமையை உணர்த்த அதிக குறள்கள் அதற்காக  ஒதுக்கப்பட்டுள்ளது. இச்செயலினால் உணவுக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவமும் நன்கு உணர்த்தப் படுகிறது.   

     

    நம் நலனினில் அதிக அக்கறை கொள்ள வேண்டியவர்கள் நாம்தான்.  சிறந்த சுகாதார வழிகளைக் கடைப்பிடித்தும், ஆரோக்கியமான உணவுகளை உண்டும் நம் நலம் பேணிக்காப்போம்.  உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அதனை மருத்துவரிடம் விளக்குவதற்கு உதவும் வகையில் மேலும் பல தகவல்களைத் தேடி அறிந்து கொள்வது நம் கடமை என்பதை நினைவில் கொள்வோம். அதற்கு வகை செய்யும் வகையில் இணையத்திலும் பல தளங்கள் சுகாதாரத் துறை வல்லுனர்ககளின் அறிவுரைகளை தொகுத்து வழங்குகின்றன. அவற்றில் குறிப்பிடத் தக்கவைகள் பின்வரும் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது.

    நன்றி.

     

    (தொடரும்)

    இன்னம்பூரான் & தேமொழி

    கவனம்: 

    நாங்கள் டாக்டர்கள் அல்ல. நட்புரிமையுடன், பொறுப்புணர்ச்சியுடன்,ஆதாரங்களை தமிழில் விளக்கி, அவற்றை சுட்டிக்காண்பித்து அறிமுகம் தரும் சுகாதாரம் பற்றிய தொடர் இது, டாக்டரிடம் ஆலோசனை பெற இவை உதவலாம்.  இவற்றை படித்து உரிய நேரத்தில் டாக்டரிடம் போவதைத் தவிர்க்கக்கூடாது.  அவரவர் மருத்துவம், சிகிச்சை, நிவாரணம் ஆகியவற்றை நாடும் செயல்களுக்கு அவரவர்கள் தான் பொறுப்பு ஏற்கவேண்டும்.

    இன்னம்பூரான் & தேமொழி

    உசாத்துணை: 

    உசாத்துணை: 

    www.bhf.org.uk

    www.bhf.org.uk/heartmatters

    www.wfh.naturalengland.org.uk

    www.sustrans.org.uk

    www.webmd.com

    www.medicinenet.com

    www.mayoclinic.com

    www.emedicinehealth.com

    www.nlm.nih.gov/medlineplus

     

     

    சித்திரத்துக்கு நன்றி: http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2009/01.06.09/suchamam.jpg

     

     

     Tags: சஞ்சீவினி, இன்னம்பூரான், தேமொழி, வாழ்வு, செல்வம், டாக்டர்

    Share