Tag: நிர்மலா ராகவன்

  • பழகத் தெரிய வேணும் – 94

    பழகத் தெரிய வேணும் – 94

    நிர்மலா ராகவன்

    வாழ்க்கையும் பள்ளிதான்

    ஒரு சிறுமி தாயிடம் வம்பு வளர்த்தாள்: “எனக்குப் பிடிக்காததை எல்லாம் உடம்புக்கு நல்லதுங்கிறே!”

    இருபது வயதானபின்பும், சாப்பிடுவதும், விளையாடுவதும்தான் சிலருக்குப் பிடித்த விஷயங்கள்.

    அவர்களுடன் இணைந்து விளையாடியவர்களுக்குத் தனியாகக் குடும்பம் அமைந்துவிட்டால், பிறருக்காக நேரம் ஒதுக்குவார்களா என்பதை யோசிப்பதில்லை. தனித்துப்போவார்கள்.

    சிறு வயதில் நட்பு

    குழந்தைகளுக்கு நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு தெரியாது. யாராவது அவர்களைப் பாராட்டினால், அவர்களைப் பிடித்துப்போய்விடும்.

    பதினெட்டு வயதுவரை, குழந்தைகளைப் பாதுகாக்கக் கூறவேண்டிய அறிவுரை:

    1. யாராவது புகழ்ந்தால், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே! `நன்றி’ என்று சொல்லிவிட்டு, போய்க்கொண்டே இரு. தலைக்கனம் வந்தால், வாழ்க்கை சறுக்கிவிடும்.
    2. உன்னைவிட ஓரிரு வயது மூத்தவர்களுடன் மட்டுமே பழகுவது நல்லது. ஏனெனில், உன்னைவிட வயதில் பெரியவர்கள், “நீ எவ்வளவு புத்திசாலி! அழகு!” என்று புகழ்ந்தால், அது அனேகமாக சுயநலத்திற்காக இருக்கும். உன்னைத் தவறான முறையில் நடக்கத் தூண்ட அவர்களுக்குத் தெரிந்த வழி அது.

    பாடம் படிக்கப் பிடிக்காது!

    அநேகமாக, பாலர் பள்ளியிலிருந்து எல்லா மாணவர்களும் சொல்லிவருவதுதான் இது. உரக்கச் சொல்லாவிட்டாலும், கல்லூரி மாணவர்களுக்குக்கூட கல்வி பயில்வதே கசப்பாக இருக்கும். கல்வி பயின்றால்தான் அறிவு வளரும், பிறர் மதிக்க வாழலாம் என்பதைப் பலரும் உணர்வதில்லை.

    `படிக்காத மேதை’ என்று சிலரைக் குறிப்பிடுகிறோம். அவர்களுடைய அறிவை வாழ்க்கையில் அடைந்த அனுபவங்களிலிருந்து பெற்றிருப்பார்கள்.

    வேறு சிலர், காலம் கடந்து, தாம் செய்த தவறுகளால் ஓயாது வருந்துவார்கள். அதனால் அவர்களுடைய சுயமதிப்பு குன்றியிருக்கக்கூடும். அதை மறைக்க, பிறருக்கு ஆலோசனை அளிப்பார்கள்.

    கதை

    “நான்தான் குடித்துக் குடித்து, சீரழிந்துபோய்விட்டேன். நீங்களாவது அந்த விஷத்தைத் தொடாதீர்கள்!” என்று தன் மூன்று மகன்களிடம் முடிந்தபோதெல்லாம் கூறுவார் அந்த தந்தை. கூடியவரை, அவர்களைக் கட்டுப்படுத்தினார்.

    தந்தையைப் பார்த்துதான் ஆண்குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள் என்பது அவருக்குப் புரியவில்லை. அவருடைய அறிவுரை எந்தப் பலனையும் அளிக்கவில்லை.

    அத்துடன், கட்டுப்பாடு பொறுக்கமுடியாது போகும்போது, அதை மீறி நடக்கத்தானே தோன்றும்?

    ஒரு மகனுக்குமட்டும் தான் செய்வது சரியா, தவறா என்ற குழப்பம் எழுந்துகொண்டே இருந்தது.

    நண்பர்களுடன் பேசிச் சிரித்தபடி ஓய்வு நேரத்தையெல்லாம் கழிப்பது உயர்ந்ததா, அல்லது தன் குடும்பத்தினருடன் சுமுகமாக இருப்பது பயனுள்ளதா என்று யோசித்தான். தான் மூப்படைந்ததும், எந்த நண்பனும் உறுதுணையாக இருக்கமாட்டான் என்று தந்தையின் வாழ்க்கை அளித்த பாடம் புரிந்தது.

    போதையில், அப்பா அம்மாவை அடிப்பதுபோல் தானும் அருமை மனைவியிடம் நடந்துகொண்டுவிடுவோமோ என்ற பயம்வேறு.

    மனைவியைக் கொடுமைப்படுத்திவிட்டு, `ஏனோ இப்படிச் செய்கிறேன்! ஐ லவ் யூ!’ என்று சொல்வதில் உண்மை இருக்கமுடியுமா? (இந்த பசப்பல் பேச்சை நம்பும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்).

    எல்லாரையும், எப்போதும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது என்று தெளிவடைந்தான். பிறருடைய ஆமோதிப்புக்காக நடிக்கவேண்டுமா என்று சிந்தித்தபோது, தன்னைக் கட்டுப்படுத்தும் நண்பர்களை விட்டொழித்தால்தான் நிம்மதி கிடைக்கும் என்று தோன்றியது.

    யோசனை பலத்தது. எந்தப் பயனும் கிடையாது என்று உறுதியாகத் தெரிந்தபின், ஒரு செயலை விட்டுவிடுவதுதானே புத்திசாலித்தனம்! இல்லாவிட்டால், அதையே பலமுறை செய்வோம். நேரம்தான் வீணாகும்.

    பெருமுயற்சி எடுத்து அப்பழக்கத்தை விட்டொழித்தான்.

    அதற்குப் பிறகும், உடனே நிம்மதி கிட்டவில்லை.

    `நீங்கள் செய்வது சரியில்லை!’ என்று இவன் புத்திகூறுவதுபோல் எண்ணி நண்பர்கள் ஆத்திரப்பட்டார்கள். அவர்களின் கேலி, கோபம் இவற்றைச் சமாளிக்க நேர்ந்தது.

    பொது இடங்களில் அவனைப் பார்க்கும்போது, “நீ குடியை நிறுத்திவிட்டதால், இன்று வழக்கத்தைவிட பாதிதான் வாங்கியிருக்கிறார்கள்!” என்று, கண்டபடி கேலி செய்ய ஆரம்பித்தார்கள்.

    குடும்பத்தினரின் அன்பால் அவர்களது போக்கை அலட்சியப்படுத்தப்படுத்த முடிந்தது.

    நாளடைவில், அவர்களிடம் ஆத்திரப்பட்டுப் பயனில்லை, அவர்களை நாடியதில் தன் தவறும் இருக்கிறது என்று ஒத்துக்கொண்டான். ஆனால், அப்போது கற்ற பாடத்தை மறக்கவில்லை.

    வாழ்க்கையில் மாறுதல்கள் நிகழத்தான் செய்யும், மனிதர்களும் ஒரேமாதிரி இருப்பதில்லை என்று உணர்ந்து அமைதியாக இருப்பவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது.

    குற்ற உணர்வு, வஞ்சகம் செய்தவர்களின்மேல் கோபம் போன்ற எதிர்மறைக் குணங்கள் நீடித்தால் யாருக்கு நஷ்டம்? `அப்படிப்பட்டவர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டோமே!’ என்று திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதுதான்!

    நமக்குப் பிடிக்காதவர்கள் மட்டுமில்லை, நம்மைவிடத் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களையும் மட்டமாக நினைக்காதிருக்க, `நல்லவேளை, நானும் அவர்களைப்போல இல்லையே!’ என்று எண்ண ஆரம்பித்தால், வித்தியாசமாக இருப்பவர்களையும் ஏற்கமுடியும்.

    நம்மால் இயன்றதை, நமக்குப் பிடித்ததைச் செய்துவந்தால், அமைதி நம்மைவிட்டு விலகாது. நம்மைப்போன்ற பிறர் தாமே நம்மிடம் வருவார்கள். அதைவிட்டு, பிறருடன், துரத்தி அடிக்காத குறையாக, தொடர்புகொள்ளத் துடிப்பது ஏன்?

    யாருக்கு உதவலாம்?

    பிறருக்கு நன்மை செய்தால் புண்ணியம் என்று நம்மை நம்பவைத்திருக்கிறார்கள்.

    இதிலும் ஒரு சிக்கல். ஒருவருடைய தாராள மனப்பான்மையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நிறைய போலி மனிதர்கள் முளைப்பார்கள்.

    கதை

    மலேசிய தினசரிகளில் வெளியான அந்தப் புகைப்படத்தைப் பார்த்தாலே எவர் மனமும் உருகிவிடும்.

    ஆரோக்கியம் மிகக் குன்றிய நிலையில் ஒரு நாய். அதை அணைத்தபடி ஒருவர். அவரைப்பற்றி அவரே அளித்த தகவல்:

    நான் ஒரு மிருக வைத்தியன். யாராலும் கவனிக்கப்படாது, தெருக்களில் நடமாடும் நாய்களை எனக்குச் சொந்தமான ஓரிடத்தில் வைத்துப் பராமரிக்க ஆரம்பித்தேன். இப்போது அதைப்போல் மூன்று இடங்கள். என் மனைவியும் எனக்கு ஆதரவாக உதவிபுரிகிறார். இந்த நாய்களுக்கான உணவு, மருந்து, கருத்தடைச் சிகிச்சை என்று நிறைய செலவழிக்க வேண்டியிருக்கிறது. யாராவது பண உதவி செய்தால் நன்றி உள்ளவனாக இருப்பேன்.

    `இவ்வளவு நல்லவர்கள்கூட உலகில் இருப்பார்களா!’ என்று பிரமிக்கவைக்கும் அவருடைய தன்னலமற்ற சேவை.

    பல பத்திரிகைகளில் இம்மாதிரியான தகவலை அளித்து, லட்சக்கணக்கில் கொள்ளையடித்தபின் பிடிபட்டார். அவர் வைத்தியருமில்லை, அவருக்கு மனைவியும் கிடையாது என்பது கூடுதல் தகவல்.

    நாய்கள்?

    அவருடைய கற்பனையில்.

    சிலர் நம்மிடமிருந்து உதவியை எதிர்பார்ப்பார்கள். `எனக்காக அதைச் செய்துவிட்டீர்களா?’ என்று விடாக்கண்டனாக நம்மைத் துளைப்பார்கள். ஆனால், பிரதி உபகாரம் என்பதே இவர்கள் அகராதியில் கிடையாது. இப்படிப்பட்டவர்களுக்கு எதற்காக உதவி புரிவது?

    உங்களுக்கு BP இருக்கா?

    இப்போதெல்லாம், ரத்த அழுத்தம் என்பது நாற்பது வயதாகிவிட்டாலே ஒருவர் எதிர்பார்க்கும் ஒன்றாகிவிட்டது.

    குடும்பத்தில், உத்தியோகம் பார்க்கும் இடத்தில், கடைகண்ணிகளில் – இப்படிப் பல இடங்களிலும் தாம் நினைத்தபடியே எல்லாம் நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால், ஆகிற காரியமா? அப்படி நடக்காவிட்டால், ஆத்திரம் எழுகிறது. ஒருவர் ஆத்திரப்படுவதால், பிறர் மாறிவிடப்போகிறார்களா, என்ன! அவர் உடல்நிலைதான் கெடும்.

    என் தோழி அவளது கணவரைப்பற்றி ஆயாசத்துடன் கூறியது: “அரசியல்வாதிகள் மற்றும் கடைக்காரர்கள் செய்யும் ஊழல்களைத் தினசரியில் படித்துவிட்டுக் குமுறுவார். ரத்தக்கொதிப்பு ஏறிவிடும். இப்போது, பக்கவாதம் வந்து, படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரைக் கவனிப்பதற்குள் என் பிராணன் போகிறது!”

    சுய பரிதாபத்துடன் பிறரிடம் நம்மைப்பற்றிக் கூறிக்கொள்வது வீண்முயற்சி.

    “சிலருக்குத்தான் வாழ்க்கை இப்படி அமைகிறது!” என்று ஏக்கப் பெருமூச்சுடன், தம் குறைகளைப் பிறரிடம் கூறி ஆறுதல்பெற முயற்சிப்பவரின் புலம்பலைப் பலர் மரியாதை நிமித்தம் கேட்டுவைப்பார்கள். ஒரு சிலர் உள்ளூர மகிழ்வார்கள் – தமக்கு இப்படியெல்லாம் நேரவில்லையே என்று!

    வாழ்க்கை என்பது நாம் அமைத்துக்கொள்வதுதான்.

    பிறருடைய கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடப்பதுதான் நல்ல குணம் என்றிருந்தால், தன் தேவைகள் என்ன, எது மகிழ்ச்சியைத் தரும் என்பதே ஒருவருக்குப் புரியாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது.

    Share
  • நிகழ்கால ரிஷ்யசிருங்கர் (சிறுகதை)

    நிகழ்கால ரிஷ்யசிருங்கர் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    வயது ஏறிக்கொண்டே போனால், பலருக்கும் கவலை வந்துவிடும். நரைக்குச் சாயம் பூசலாம். ஆனால், தொங்கும் கன்னம், உடலின் பாதி எடையைத் தாங்கியிருக்கும் பருத்த வயிறு இவற்றை எப்படி மறைப்பது?

    கிட்டு பிறரிடமிருந்து சற்று வித்தியாசமானவர். இருபது வயதிலிருந்தே, தனக்கு எப்போது முதுமை வரும் என்று காத்திருந்த பேர்வழி அவர்.

    அவரைச் சொல்லிக் குற்றம் இல்லை. அவர் வளர்ந்த விதம் அப்படி.

    ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, மாடி வீட்டிலிருந்த பூமாவுடன் பாண்டி விளையாடினார். அவள் அவரைவிட இரண்டு வயது சிறியவள். அதனால், ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கை.

    அதுதான் முதலும் கடைசியுமாக அவர் பெண்களுடன் விளையாடியது.

    “இனிமே, பொட்டைமாதிரி, பொண்களோட விளையாடுவியா?” என்று அப்பா கிச்சாமி பிரம்பால் விளாசியது ஜன்மத்தில் மறக்குமா!

    கல்லூரியில் படிக்க அனுப்பினால், கண்ட பையன்களுடன் சேர்ந்து மகன் இன்னும் கெட்டுவிடுவான் என்று, தான் லட்சக்கணக்கான ரூபாயைச் சேமித்து வைத்திருந்த வங்கியில் வேலை கிடைக்கச் செய்தார். சிபாரிசு இருந்ததால், கிட்டுவின் கல்வித் தகுதியை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    “வேலைக்குப் போற எடத்திலே பெண்கள் வராளாடா, கொழந்தே?” என்று கவலைப்பட்டாள் பாட்டி.

    அங்கு பெண்கள் அதிகமாக வரவில்லை. அப்படியே வந்தாலும், கணவன்மார்களை உரசியபடிதான். தனியாக வந்தவர்களோ, தம் செல்வச்செழிப்பைக் காட்டிக்கொள்ளவென உடலை வளர்த்திருந்தார்கள்.

    இந்த விவரத்தையெல்லாம் சற்று குறையுடன் தெரிவித்தார் கிட்டு.

    “அதுவும் நல்லதுக்குதான்!” என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள் பாட்டி. “நீ ரிஷ்யசிருங்கர்மாதிரி!”

    எப்போதோ, பாட்டியுடன் கோயிலுக்குப் போனபோது, ராமாயணக் கதாகாலட்சேபத்தில் கேட்ட கதை கிட்டுவின் நினைவில் எழுந்தது.

    பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன், ஒரு முனிவர் தேவலோக மங்கையான ஊர்வசியால் கவரப்பட்டதால் பிறந்த மகன் ரிஷ்யசிருங்கர்.

    மகனும் தன்னைப்போல் சீரழிந்து போகக்கூடாது என்ற `நல்ல’ எண்ணத்துடன், பெண்வாடையே இல்லாது அவனை வளர்த்தார்.

    பிரம்மச்சரியம் ரிஷ்யசிருங்கருக்கு அபாரசக்தியைக் கொடுத்தது. மழையே காணாது, வரண்டிருந்த நாட்டுக்குள் அவன் நுழைந்தவுடனேயே மாரி பொழிந்தது.

    அக்கதையை நினைவுகூர்ந்த கிட்டுவின் பிரம்மச்சரியமும் அதனால் எழுந்த பெருமையும் நீடிக்கவில்லை.

    “கிச்சாமி! பத்தொம்போது வயசிலேயும் ஒனக்கு கல்யாணமாகலியேன்னு நான் வேண்டாத தெய்வமில்லே. அந்த கோயிலில் இருக்கே, பிள்ளையார் விக்கிரகம்! அது நான் வாங்கிக் குடுத்ததுதான் – ஒனக்கு சீக்கிரமே கல்யாணம் நிச்சயமாகணும்னு வேண்டிண்டு!” என்று ஆரம்பித்த கிச்சாமியின் தாய், மகன் பொறுப்பில்லாது இருந்ததை மறைமுகமாகக் கண்டித்தாள். பேரனுக்கு மீசை முளைத்து பத்து வருஷம் ஆகிவிட்டதே, அவனுக்குப் பொருத்தமான எல்லா நல்ல பெண்களுக்கும் சீக்கிரமே கல்யாணம் ஆகிவிடுமே என்று அவள் பயந்தது யாருக்குப் புரியும்!

    அத்துடன், மகனுக்கும், பேரனுக்கும் எத்தனை காலம்தான் அவளால் வடித்துக்கொட்ட முடியும்! மருமகள் புண்ணியவதி! இந்தக் கவலையெல்லாம் இல்லாமல், போய் சேர்ந்துவிட்டாள்!

    கிச்சாமிக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. முதலிலேயே தனக்கு அந்த யோசனை வராமல் போயிற்றே என்று நொந்துகொண்டார்.

    தினமும் சாயங்கால டிபனுக்கு அரிசி உப்புமா செய்யத்தான் வயதான அம்மாவுக்கு சக்தி இருந்தது. கண் சரியாகத் தெரியாமல், உப்பை அள்ளிப் போட்டுவிடுவாள். அவள் மனம் நோகக்கூடாதே என்று அவர் சாப்பிட்டுவைப்பார்.

    “ரொம்ப படிச்ச பொண்ணு வேண்டாம்டா. சமையல்னா என்னன்னே தெரியாம வளர்த்திருப்பா. அடக்கமா, வீட்டு வேலை செய்யற பொண்ணா பாரு,” என்று அறிவுரை கூறினாள் தாய்.

    முதலில் பார்த்த பெண் பள்ளி இறுதிப் பரீட்சையை மூன்று முறை எழுதியும், பாசாகவில்லை என்ற விவரமே அவளுக்குச் சாதகமாக அமைந்தது.

    எலுமிச்சை நிறம், கையில் அடங்காத கூந்தல், விதம் விதமாகக் கோலம் போடுவாள், முக்கியமாக, வீட்டில் அவள் சமையல்தான் என்ற பிற அம்சங்கள் பாட்டிக்கு மிகவும் பிடித்துப்போக, கிட்டு பூரணியை மணந்தார்.

    அவளுடன் என்ன பேசுவது என்று அவருக்குத் தெரியவில்லை.

    ஒரு முறை, அவளே வலியக் கேட்டாள்: “நான் நன்னா சமைக்கிறேனா?”

    “ம்!” என்று ஒரே வார்த்தையில் பதில் வந்தது.

    “ஒங்களுக்கு என் சமையல் பிடிச்சிருக்கோ?”

    உத்தியோகத்தில் படிப்படியாக உயர்ந்திருந்த கிட்டுவுக்கு எரிச்சலாக இருந்தது.

    அசமஞ்சம்!

    பேச விஷயங்களா இல்லை!

    சேஷனுக்கு எழுபது வயதாகியபோது, சுதந்திரமாக உணர்ந்தார். அப்பா இல்லை, பாட்டி இல்லை. அவரை மணந்த புண்ணியவதியும் சுமங்கலியாகவே போய்விட்டாள்.

    பெண்களுடன் பழக இனி ஒரு தடையுமில்லை!

    `விடுதலை! விடுதலை!’ என்று உரக்கப் பாடவேண்டும்போல் இருந்தது.

    இளம்பெண்களை அவருக்குப் பிடிப்பதில்லை. `மாமா’, `அங்கிள்,’ என்றெல்லாம் அழைத்து, வயதை ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள், கழுதைகள்!

    நிறைய யோசனைகளுக்குப்பின், முகநூலில் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். பெரும்பாலும், வயது முதிர்ந்தவர்கள்தாம் அதில் பங்குபெறுவார்களாமே!

    `மணமானவன்’ என்றெழுதினால் கௌரவமாக இருக்கும். மனைவி இருக்கிறாளா, இல்லையா என்று யார் ஆராயப்போகிறார்கள்!

    வங்கியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவன்.

    வயது.. அங்கேதான் சற்று தடுக்கியது. 60 என்று எழுதிவிட்டு, ஏதோ யோசித்தவராக, கூட இரண்டைச் சேர்த்தார்.

    அடுத்த பிரச்னை: எப்படி சிநேகிதிகளைத் தேடுவது?

    அடுத்த சில நாட்களில், எல்லா படைப்புகளையும் படித்தார். நாள் முழுவதும் அதற்காகவே – இனிமையாக — செலவழிந்தது.

    ஒரு பெண்மணியின் எழுத்து அவரைக் கவர்ந்தது. பயம் சிறிதுமின்றி, பல விஷயங்களைத் தொட்டு, தன் கருத்துகளை வெளியிட்டாள். முக்கியமாக, சமையல் குறிப்புகளைப் பகிரவில்லை.

    தான் தேடிய புத்திசாலிப்பெண் இவள்தான் தனக்குத் தோழியாக இருக்கத் தகுதி உள்ளவள் என்று குதூகலித்தார் கிட்டு.

    அவள் எழுதிய ஒரு கட்டுரைக்கு, `லைக்’ போட்டார். பாராட்டாக, ஒருசில வரிகள்.

    பதிலுக்கு, அவளும் `நன்றி’ என்று ஒரே வார்த்தையில் தெரிவிக்க, கிட்டுவுக்குத் தலைகால் புரியவில்லை. அவளுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறது! தனிமரமாக இருப்பவளாக இருக்கும். அதனால்தான் அவ்வளவு சுதந்திர உணர்வு!

    அடுத்தடுத்து, பல முறை இவர் பாராட்ட, அவளும் சளைக்காது, அதே வார்த்தையில் பதிலளித்தாள்.

    அடுத்து அவளை நெருங்க நாம் என்ன செய்யலாம் என்று யோசித்த கிட்டு, தன் பாராட்டில், `டார்லிங்’ என்று அவளைக் குறிப்பிடலாமா என்று யோசித்தார்.

    முதலில் ரஞ்சனி என்ற அவள் பெயரைச் சுருக்கினாலே போதும், போகப் போகப் பார்த்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்து, `டியர் ரஞ்சி!’ என்று ஆரம்பித்து, அவளுடைய துணிச்சலும், அறிவும் தன்னை எவ்வளவுதூரம் கவர்ந்திருக்கிறது என்று கவிதைபோல் எழுதினார்.

    அடுத்தமுறை அவளிடமிருந்து வந்த பதில் எப்போதையும்விட சற்று நீண்டிருந்தது.

    `எல்லாப் பெண்களும் மோசம்!’ என்ற முடிவுக்கு கிட்டு வரக் காரணமாக இருந்த அந்த வரி: “முதலில், மரியாதை கற்றுக்கொள்ளுங்கள்!”

    Share
  • பழகத் தெரிய வேணும் – 93

    பழகத் தெரிய வேணும் – 93

    நிர்மலா ராகவன்

    மகிழ்ச்சி என்பது மாயையா?

    ஒரு நடிகர், “நீங்கள் எத்தனை சிறப்பாக நாட்டியம் ஆடுகிறீர்கள்! நானும்தான் ஆடுகிறேன். ஆனால், உங்களைப்போல் ஆடமாட்டோமா என்றிருக்கிறது!” என்றாராம் ஏக்கத்துடன். அந்த நடன ஆசிரியர் என்னிடம் சொல்லிச் சிரித்தார்.

    நடிகர் மிகப் பிரபலமானவர். பல துறைகளில் முத்திரை பதித்தவர். தன் நிறைகளை எண்ணி மகிழாது, குறைகளையே பெரிதுபண்ணினால் மகிழ்ச்சி எவ்வாறு கிட்டும்?

    ஒப்பீடும் பொறாமையும்

    `இது என்ன வாழ்க்கை! மகிழ்ச்சியே கிடையாது!’ என்று பலரும் புலம்புகிறார்களே! அவ்வாறு அலுத்துக்கொண்டாற்போல் நிலைமையை மாற்றிவிடமுடியுமா?

    பெரும்பாலாரான பெற்றோர்கள் தம் குழந்தைகளை ஒருவருடன் ஒருவரை ஒப்பிடுவார்கள். இதுவே குழந்தைகளுக்குத் தாழ்வுமனப்பான்மை ஏற்படக் காரணமாகிறது.

    அதனால், தம்மைப் பிறருடன் ஒப்பிட்டுக்கொள்வதும் பழக்கமாகிவிடுகிறது: `அவள் என்னைவிட அழகி, பணக்காரி, புத்திசாலி!’ என்ற வயிற்றெரிச்சல் ஏன்? இதனால் சிறந்துவிடவா போகிறார்கள்?

    கதை

    “முப்பது வயதில் இந்த இசைக் கலைஞர்கள் எவ்வளவு சாதித்திருக்கிறார்கள்! என் வாழ்க்கை வீண்!” என்று ஒருவர் அங்கலாய்த்துக்கொண்டார்.

    அவர்களுடைய சாதனை மட்டும்தான் பிறர் கண்ணுக்குத் தெரியும். அதற்காக அவர்கள் சிறு வயதிலிருந்தே எத்தனை உழைத்திருப்பார்கள் என்று எண்ணிப்பார்ப்பதில்லை.

    மற்ற சிறுவர்களைப்போல் விளையாடி இருக்கமாட்டார்கள். எனக்குத் தெரிந்து, சிலரது ஓய்வு நேரத்திலும்கூட இசைப்பயிற்சிதான். அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டுக்கூட இருக்கலாம்.

    பள்ளி நாட்களில் அனுதினமும், தபேலா கலைஞரான ஜாகிர் ஹூசேனை இரவு இரண்டு மணிக்கு எழுப்பி சாதகம் செய்யச்சொல்வாராம் அவருடைய தந்தை. அதற்குமுன், காலை ஆறு மணியிலிருந்து!

    எத்தனைபேர் இப்படி உழைப்பார்கள், சிறு வயதிலிருந்தே?

    எங்கே மகிழ்ச்சி?

    மகிழ்ச்சி என்பது எங்கேயோ வெளியில் கிடைப்பதில்லை. நமக்குள்ளேயேதான் இருக்கிறது. நம் செய்கைகளால் விளைவது அது. பேராசை அதை அழித்துவிடும்.

    கதை

    அரசியலில் ஈடுபட்டிருந்த ஒருவருக்குப் பெரிய பதவிகள் கிடைக்கவேண்டுமென்ற ஆசை. அப்போதுதான் பிறர் முன்னிலையில் தன் மதிப்பு கூடும் என்ற எண்ணம் அவருக்கு.

    `பிறர் என்ன நினைப்பார்கள்!’ என்று யோசித்தே வாழ்வைக் கடத்தினால், மகிழ்ச்சி எப்படிக் கிடைக்கும்?

    குடும்பத்தைக் கவனிக்க அவருக்கு நேரமில்லை. வீட்டில் கண்டிப்பு இல்லாததால், அதன் அங்கத்தினர் ஒவ்வொருவரும் மனம் போனபடி நடக்கத் துவங்கியிருந்தனர்.

    அவர் மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததைக் கண்டும் காணாததுபோல் இருக்கவேண்டிய நிலை. மகனோ போதைப்பித்தன். மகளுக்கு நிறைய காதலர்கள்.

    உயர்பதவி கிடைத்ததோ என்னவோ, மகிழ்ச்சி அவரைவிட்டுப் போய்விட்டது.

    “உங்களைப்போல் என்னால் இருக்க முடியவில்லையே! எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்கள்!” என்று பொருமுவார், தன்னைவிடச் சற்றே தாழ்ந்த நிலையில் இருப்பவர்களைக் கண்டு. இருப்பதை வைத்துக்கொண்டு திருப்தி அடைய அவருக்குத் தெரியாததுதான் வருத்தம் எழக் காரணம்.

    இருப்பினும், `நிறைய ஆசைகள் கூடாது!’ என்று புத்தர் வழிகாட்டியபடி இளம்வயதில் இருக்க வேண்டியதில்லை. தன்னால் என்னென்ன முடியும் என்று அறிந்துகொள்ளும் பருவம் அது.

    அப்போது ஆசைகளை அடக்கிக்கொண்டிருந்துவிட்டு, காலம் கடந்தபின், “நான் என்னென்னவோ செய்ய வேண்டுமென்று திட்டம் போட்டிருந்தேன்!” என்ற ஏக்கப் பெருமூச்சு எதற்கு?

    எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒத்திருந்தால்தான் மகிழ்ச்சி கிட்டும்.

    கடந்ததை எண்ணி வருந்தினாலோ, அல்லது எதிர்காலத்தில் என்ன வருமோ என்று அஞ்சினாலோ நேரம்தான் விரயமாகும். இரண்டுமே நம் கையில் இல்லை.

    89 வயதான ஒருவர் முனைவர் பட்டம் பெற்றார் என்ற செய்தியைப் படித்திருப்பீர்கள். அந்தப் படிப்பால் பெரிய உத்தியோகம், அதற்கேற்ற ஊதியம் என்று அவர் கணக்குப் போட்டிருக்கமாட்டார். என்றோ செய்ய நினைத்து, முடியாமல் போனதற்காக ஏங்குவதைவிட அதைச் செய்து முடிக்கலாம் என்ற விவேகம் அவருக்கு இருந்தது.

    தன்னைவிடப் பிறர் உயர்ந்திருக்கிறார்களே என்ற ஆற்றாமைக்கோ, சுயவெறுப்புக்கோ அவர் இடம் கொடுக்கவில்லை.

    பகிர்ந்துகொள்!

    வேண்டாத நினைவுகளிலிருந்து நம்மை விடுவித்துகொள்ளும் முயற்சிதான் நாம் நமக்கே அளித்துக்கொள்ளும் கருணை. அப்போதுதான் நம் நிலையிலிருக்கும் பிறருக்கும் உதவி செய்யும் ஆற்றலைப் பெறுகிறோம்.

    ஒரே நிலையில் இருப்பவர்கள் ஒன்றுசேர்ந்து தத்தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, அனைவருமே தம் பலம் பெருகிவிட்டதுபோல் உணர்வர்.

    நடந்ததை மறைக்காது, `நானும் அவதிப்பட்டிருக்கிறேன்!’ என்று ஒத்துக்கொள்ளும்போது, `இதுவும் ஒருநாள் கடந்துபோகும்!’ என்று அவர்கள் உணர்ந்து, ஆறுதல் அடைவார்கள். வாழ்க்கை பொறுக்கமுடியாததாக இருக்காது.

    நடப்பதெல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தானாம். நம்மால் ஏற்க முடியாதது ஏன் நடந்தது என்று நெடுநாட்கள் கழித்துப் புரியும். நாம் துயருற்று, பின் அதிலிருந்து மீண்டால், நம்மைப்போன்ற பிறருக்கு உதவி செய்ய முடியும். அதிலேயே நிறைவு காணலாம்.

    நம் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஒருவரிடம் பகிர்ந்துகொள்வதும் மனதை ஆற்றிக்கொள்ளும் ஒரு வழி. அவருக்கும் அதேபோன்ற துன்பமோ, துயரோ வந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நம் நிலையில் பொருத்திக்கொள்ளும் ஆற்றல் அவருக்கு இருந்தாலே போதும்.

    கதை

    எல்லா வயதினருக்கும் துன்பங்கள் உண்டு.

    பள்ளிக்கூடத்தில் சேர்ந்தவுடனேயே இது தெளிவாகிறது. வீட்டில் அன்பும் பாதுகாப்பும் அளித்த பெற்றோருடன் இருந்துவிட்டு, புதிய சூழ்நிலைக்குப் போகும்போது சில பேருக்குப் பொறுக்கமுடியாததாக ஆகிவிடும்.

    “நீ குண்டு! ரொம்ப பயந்தவள்!”

    “உன் தலைமயிர் ஏன் நீளமாக இருக்கிறது, தெரியுமா? நிறைய பேன்! அதனால்தான்!”

    பொறாமை கொண்ட சிறுமிகள் தம்மைப்போன்று இல்லாத வகுப்புத்தோழிகளைப் பார்த்துப் பலவாறாகப் பழிப்பார்கள்.

    “கோபம் வந்தால், இவள் மூக்கு எப்படித் துடிக்கிறது, பாரேன்!”

    தாய் ஆதரவுடன் நடந்துகொண்டால், தாம் படும்பாட்டை அவளுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.

    பத்து வயதிலிருந்து என்னை ஓயாமல் கேலி செய்தாள் ஒரு பெண். நான் சண்டைபிடிக்க மாட்டேன்.

    பள்ளிக்கூடத்திலிருந்து நான் திரும்பியதுமே, முதல் வேலையாக அம்மாவிடம் போய், என்னை ஓயாது கேலிசெய்தவளைப் பற்றிக் கூறுவேன்.

    “சூரியனைப் பாத்து நாய் குலைக்கிறதுன்னு விட்டுடு!” என் தாய் தினமுமே எனக்கு ஆதரவாகக் கூறியது.

    அப்பெண்ணைப் பதினேழு வயதில் பார்த்தபோது, அவள் ஏன் என்னை அப்படி நடத்தினாள் என்று புரிந்தது. அன்போ, செல்வமோ இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவள் அவள்.

    இதைப்போன்ற பல சம்பவங்களிலிருந்து நான் கற்ற பாடம்: நம்மைக் கஷ்டப்படுத்த நினைப்பவர்கள் பொறாமைபிடித்தவர்கள். அவர்கள் சொல்லையும் செய்கையையும் அலட்சியப்படுத்தவேண்டும். ஏனெனில், அவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்.

    குடித்தால் பிரச்னைகள் தீருமா?

    பிரச்னைகளைச் சமாளிக்க ஒரு வழிதான் என்று திரைப்படங்களில் காட்டுகிறார்கள்.

    “ஏதோ ஒரு பிரச்னை இருப்பதால் ஒருவன் குடிக்க ஆரம்பிக்கிறான்.  குடிப்பதால் மேலும் பல பிரச்னைகள் வருகின்றன,” என்ற வாக்கியம் என் பாட புத்தகத்தில் இருந்தது இன்னும் மறக்கவில்லை.

    பிரச்னைகளைத் தாற்காலிகமாக மறப்பதால் அவை குடிப்பவரைவிட்டு விலகப்போவதில்லை. உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஆகிய இரண்டும் பாதிப்படையுமுன் அவை ஏன் நிகழ்ந்தன என்று யோசிப்பது மேல். குடிபோதையில், `ஏனோ, எனக்கு மகிழ்ச்சி கிடைக்க மாட்டேன் என்கிறது!’ என்று புலம்புவானேன்!

    நாம் பட்ட கஷ்டங்கள் நடந்தபோது, நம்மை வெகுவாகப் பாதித்து இருக்கலாம். அவற்றை மறப்பது கடினம்தான்.

    ஆனால், ஓயாது அவற்றையே நினைத்துக்கொண்டிருந்தால், அவை நம்மைக் கட்டுப்படுத்த விடுகிறோம். இது புரிந்து, நம்மை விடுவித்துக்கொள்ளவேண்டும்.

    நல்ல வழிகளா இல்லை!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 92

    பழகத் தெரிய வேணும் – 92

    நிர்மலா ராகவன்

    புகழ் என்னும் போதை

    இணையம் புழக்கத்திற்கு வருமுன், ஒரு சினிமா பத்திரிகையில் பிரபல நடிகைகளின் பேட்டி எடுக்கப்பட்டது.

    கேள்வி: உங்களுக்குப் பிடித்தது எவை?

    சொல்லிவைத்தாற்போல், எல்லாரும் ஒரே பதிலைத்தான் கூறினார்கள்.

    அது என்ன தெரியுமா?

    “பணம், புகழ்!”

    இரண்டுமே நிலைப்பது மிகக் கடினம். அப்படியே கிடைத்தாலும், ஒருவர் வாழ்வில் வெற்றிபெற்றுவிட்டதாக ஆகிவிடாது. மிகச் சிலர்தான் பிறரது பாராட்டைத் தக்கவைத்துக்கொள்ளும் திறமையைப் பெற்றிருக்கிறார்கள்.

    புகழ் வரும்போதே, வேண்டாத விமரிசனங்கள் – ஒருவரது படைப்பைப் பற்றியோ, குணாதிசயங்களைப் பற்றியோ, சொந்த வாழ்க்கையைப் பற்றியோ – எழுவதைத் தவிர்க்க முடியாது.

    கதை

    ஒரு தமிழ் எழுத்தாளரின் புதிய பாணியிலான நடை, கரு இரண்டும் வாசகர்களை ஈர்க்க, குறுகிய காலத்திலேயே மிகுந்த புகழை அடைந்தார்.

    சிலர் புகழ, பலர் அவரைக் கேட்டார்கள் முகத்திற்கு நேராகவே: “ஏன் ஆபாசமாகவே எழுதுகிறீர்கள்?”

    தடுமாற்றத்தைச் சமாளிக்க தலையைத் தடவியபடி, “எதை ஆபாசம் என்கிறீர்கள்?” என்று கேட்டாராம் அந்த எழுத்தாளர்.

    `உன் கையை உடைத்துவிடுவேன்!’ என்ற மிரட்டல்கூட அவருக்கு வந்திருக்கிறது.

    புகழ் பெற்றவர்களின் ஒவ்வொரு சொல்லும், செயலும் விமரிசனத்துக்கு ஆளாகிவிடுகிறது.

    அவற்றில் எல்லாமே உண்மை என்பதில்லை. இருந்தாலும், அவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க நேரிடுகிறது.

    இது புரிந்து, பிறர் சொல்வதை அலட்சியம் செய்தால்தான் ஒருவர் தான் தேர்ந்தெடுத்த துறையில் தொடரமுடியும்.

    நடிகர்களைக் காப்பியடிப்பது

    பிரபலமடைந்த நடிக, நடிகையரைப்போல் தமக்கும் திறமையோ, அதிர்ஷ்டமோ இருக்கிறதா என்று எவரும் யோசித்துப்பார்ப்பதில்லை. கண்ணை மூடிக்கொண்டு, அவர்கள் செய்வதைப் பின்பற்றுகிறார்கள்.

    வேஷ்டி தயாரிப்பாளர்கள் முன்னணி கதாநாயகர் ஒருவரிடம், `படம் முழுவதிலும் வேட்டி அணிந்தபடி காட்சி கொடுங்கள். எங்களுக்கு அமோகமான விற்பனை ஆகும்,’ என்று வேண்ட, அவரும் இணைந்தார்.  படம் வெளியானதும், ரசிகர்கள் அவர் `விரும்பிய’ ஆடையைத் தாமும் அணிந்து மகிழ்ந்தார்களாம்.

    தாம் என்ன செய்தாலும், அதைப் பின்பற்ற பலர் காத்திருக்கிறார்கள் என்ற நடப்பு புகழைப் பெற்றவர்களுக்கு முதலில் பெருமையாக இருக்கும். பக்கவிளைவாக, இன்னும் சிறக்கவேண்டும் என்று அவர்களுடைய பிரயாசை அதிகரித்துக்கொண்டேபோகும். அந்த முயற்சி மன இறுக்கத்தில்தான் கொண்டுவிடும்.

    திறமை என்பது கடவுள் அளிப்பது. புகழ் – மனிதன் கொடுப்பது. கர்வமோ தனக்குத்தானே அளித்துக்கொள்வது என்பதால் கவனமாக இருக்கவேண்டும் என்கிறார் ஓர் அனுபவசாலி.

    ராமாவதாரமா?!

    ராமாயணக் கதாநாயகன் ஸ்ரீராமசந்திரமூர்த்தியாக ஒரு படத்தில் நடித்து, பெரும்புகழ் பெற்றவர் அந்த ஆந்திர நடிகர். மக்கள் அவரைக் கடவுளாகவே பாவித்தனர்.

    தினமும், குறிப்பிட்ட வேளையில், அயோத்தி ராமரைப்போன்ற ஆடையணிகள் பூண்டு, தன் வீட்டு மாடி பால்கனியிலிருந்து `தரிசனம்’ கொடுப்பாராம். அதைப் பார்க்க, பல ஊர்களிலிருந்து வந்த மக்கள் கூடுவார்களாம்!

    ஒருவர் தன்னைக் கடவுளாகவே பாவித்துக்கொண்டால், மற்ற அனைவரும் தனக்குக் கீழே இருப்பவர்கள்தாம் என்ற கர்வம் வந்துவிடாதா! நாளடைவில், தான் யார் என்பதே புரியாது போய்விடும்.  இதுவும் ஒருவித மனநோய்தான்.

    பிறருக்கு என்ன பிடிக்கும், அதனால் தன் புகழ் கூடுமே என்று யோசித்தபடி இருந்தால், தனக்கென்று சிறிது நேரத்தையாவது ஒதுக்க முடியுமா? பின், நிம்மதி எப்படிக் கிட்டும்?

    புகழையே துரத்திப் போகும்போது, உணர்ச்சிபூர்வமான தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ள ஏது நேரம்!

    உண்மையான நண்பர்களும், உறவினர்களும் இல்லாத வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டும் இருக்குமா?

    புகழுடன் பணமும் சேர்ந்தாலும், ஏன் மகிழ்ச்சி கிட்டாததாக இருக்கிறது என்று புகழ் போதை கொண்டவர்களுக்குப் புரிவதில்லை. திறமை வாய்ந்தவர்கள் குறுகிய காலத்திலேயே காணாமல் போய்விடுவது இதனால்தான்.

    வினா: புகழை ஏன் போதை என்கிறார்கள்?

    விடை: எவ்வளவு கிடைத்தாலும், நிறைவு கிட்டாது.

    சமயம் பார்த்து, இவர்களைத் தீய வழிகளில் ஈடுபடுத்த முன்வருவார்கள் பல `நண்பர்கள்’. அந்நிலையில், பணத்துடன் புகழும் கரைந்துபோகும். மிஞ்சுவது கசப்பும், ஆரோக்கியக்குறைவும்தான்.

    பணம், புகழ், திறமைக்காக அளிக்கப்படும் பட்டங்கள் ஆகிய எதையுமே பெரிதாகக் கருதாது, எடுத்த காரியத்தில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு, திருப்தி அடைகிறவர் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

    “வெற்றி நிலைக்க பணிவு முக்கியம். பணம், புகழ் ஆகியவை தலைக்குமேல் ஏறக்கூடாது”. இப்படிக் கூறியிருப்பவர் A.R. ரஹ்மான்.

    `இன்னும் என்னதான் வாங்கமுடியும்!’ என்ற அலுப்பை ஏற்படுத்திவிடுகிறதாம் அளவுகடந்த செல்வம்.

    சிலர் இது புரிந்து, பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி காண்கிறார்கள். மிகச் சிலர்தான்!

    புகழின் உச்சியைத் தொட்ட குழந்தைகள்

    ஒரு குழந்தை வயதுக்குமீறி பேசினால், அது சுட்டித்தனம் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள்.

    தமிழ் திரைப்படங்களிலோ, அல்லது முகநூலிலோ, குழந்தைகளைக் கண்டபடி பேசவைக்கிறார்கள். அப்பாவையும் தாத்தாவையும், `டேய்!’ என்றழைக்கும் குழந்தை புத்திசாலியாம்!

    இயக்குனர் அல்லது பெற்றோர் கூறுவதுபோல் செய்து காட்டுகிறார்கள் குழந்தைகளும், தாம் என்ன செய்கிறோம் என்று புரியாமலேயே. பிறர் புகழ, எப்போதும் அப்படியே நடக்கத் தலைப்படுகிறார்கள்.

    பல மணி நேரம் நடிக்க வேண்டியிருப்பதால், பிற குழந்தைகளுடன் இணைந்து விளையாட முடியாது. வயதுக்குரிய கல்வியையும் பெறுகிறார்களா என்பதும் சந்தேகம்தான்.

    தம் வயதுக்குரிய அப்பாவித்தனத்தை இழந்து, வளர்ச்சிக்கு எது ஏற்றது என்று புரியாது வளர்வதால், மனஇறுக்கத்தைத் தவிர்க்க முடிவதில்லை. அதைப் போக்க, மது, போதைப்பொருட்களை நாடுவது பெரும்பாலரது பழக்கமாகிவிடுகிறது.

    மைக்கல் ஜாக்சன்

    இசைத்துறையில் உலகிலேயே அதிகமான விருதுகள் பெற்றவர், ஓராண்டில் மிக அதிகமான வருமானம் பெற்றவர் என்றெல்லாம் பெரும்புகழ்பெற்ற மைக்கல் ஜாக்சனுக்கு போதை மருந்து இல்லாவிட்டால் உறங்கமுடியாது என்ற நிலை ஏற்பட, ஒரு மருத்துவரை கூடவே வைத்துக்கொண்டார்.

    அளவுக்கு அதிகமாகிப்போன அப்பழக்கமே அவருக்கு யமனாக அமைந்தது.

    எந்தத் துறையானாலும், புகழ் போதை பிற போதை வழிகளில் கொண்டுவிடுகிறது.

    பிரபல HARRY POTTER ஆங்கில திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த டானியல் (Daniel Radcliffe) கூறுகிறார்: “நான் நடிக்கப் போகும்போது, ஒவ்வொரு முறையும் கண்மண் தெரியாது குடித்துவிட்டுத்தான் போவேன். எப்போதும், இனிமையாக நடந்துகொள்ளவேண்டுமே! சிறந்த நடிகன் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது”.

    குழந்தை நட்சத்திரங்களாகப் புகழ் பெற்றவர்கள் இருபது வயது ஆனபோது புகழின் பாதிப்பை உணர்கிறார்கள். தம் வயதையொத்த பிறரது எதிர்பார்ப்பையும் தாளமுடியாது போய்விடுகிறது.

    மது அருந்திவிட்டுக் காரோட்டியது, திருடுவது போன்ற சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட்டு, சிறைத்தண்டனை அனுபவித்த இளம் நடிகர்களும் உண்டு. இவர்களால் மது, போதைப்பழக்கம் இரண்டையும் விடமுடியாது போக, வாழ்க்கையின் அடிமட்டத்திற்கே போய்விட்டார்கள்.

    கதை

    டெமி லோவாடோ (Demi Lovato) சிறுவயதிலேயே புகழ்பெற்ற பாடகியாகவும், நடிகையாகவும் விளங்கினாள்.

    `ரசிகர்களுக்கு இதுதான் பிடிக்கும்’ என்று அறிவுரை வழங்கப்பட்டதில், அவளுக்குப் பிடித்ததுபோல் பாட முடியவில்லை. மன இறுக்கம் வந்தது.

    தந்தையைப்போல் தானும் குடித்தால் நிம்மதி அடையலாம் என்று ஆரம்பித்த பழக்கம் மிக மோசமாகி, பல வருடங்கள் மறுவாழ்வு மையம் ஒன்றில் கழிக்க நேர்ந்தது.

    பத்து வயதிற்குள் கிட்டவேண்டும் என்று தாம் அடைய ஆசைப்பட்ட புகழ் தம் பிள்ளைகளுக்காகவாவது கிடைக்கவேண்டும் என்று பல பெற்றோர் விரும்புகின்றனர். மகனும் ஒரு தனிப்பிறவி, அவனுக்கென்று விருப்பு வெறுப்புகள் இருக்கலாம் என்று யோசிப்பதில்லை.

    கதை

    Home Alone என்ற தொடர் திரைப்படங்களின் கதாநாயகன் மெக்காலே (Macaulay Culkin) என்ற சிறுவன்.

    அவனுக்குக் கிடைத்த புகழும் அத்துடன் வந்த பணமும் நிலைக்க, தந்தை அவனைப் பலவிதமாகக் கொடுமை செய்தாராம்.

    தாளமுடியாது, அவன் பெற்றோரின்மேல் வழக்குப் போட்டு, அவர்களிடமிருந்து `ரத்து’ வாங்கினான். அவனுடைய கோடிக்கணக்கான சொத்தை அவர்களால் தீண்டவும் முடியாதுபோயிற்று.

    தான் அழிவுப்பாதையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் என்று அவனுக்கே புரிந்து, தப்பித்தவறிக்கூட மது அருந்துவதில்லை என்று உறுதி பூண்டிருக்கிறான்.

    தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு புகழ்வாய்ந்தவர்களின் வாழ்க்கை பிரமிப்பை உண்டுபண்ணும். `எவ்வளவு பெரிய வீடு! வண்ணவண்ணமாக எத்தனை ஆடைகள்! எத்தனை கோடி ரசிகர்கள்! நினைத்ததை எல்லாம் வாங்க முடியும்!’ என்று, தமக்கும் அப்படி ஓர் அதிர்ஷ்டம் இல்லையே என்று ஏங்கலாம்.

    அவர்களுக்குப் புரிவதில்லை, மிகக் கவனமாக இல்லாவிட்டால், புகழ் சறுக்கி, மகிழ்ச்சியை அறவே பறித்துவிடும் என்பது.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 91

    பழகத் தெரிய வேணும் – 91

    நிர்மலா ராகவன்

    முதுமையில் இளமை

    நூறு வயதைக் கடந்த ஒருவர் வேடிக்கையாகக் கூறியது: “நம்மை ஒத்தவர் என்ன நினைப்பார் என்ற கவலை இனி இல்லை. ஏனெனில், அவர்களில் யாரும் இப்போது உயிருடன் இல்லை!”

    பிறர் என்ன நினைப்பார்கள்!

    நாம் அப்படி நினைத்துக் குழம்பாவிட்டாலும், பதின்ம வயதிலிருந்து, `பிறர் என்ன நினைப்பார்கள்!’ என்று கண்டித்துக்கொண்டே இருப்பார்கள் பெற்றவர்கள். அதனால், வயது ஏற ஏற, பிறருக்குப் பயந்தே வாழ்வது பழக்கமாகியிருக்கும்.

    வீண் கட்டுப்பாட்டைப் பொறுக்க முடியாது, சுதந்திரமாக நடக்கத் தலைப்பட்டவர்களுக்கு வசவும், கெட்ட பெயரும் கிடைக்கும்.

    அறுபது வயதில், யாரும் நம்மைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கவில்லை என்பது புலனாக, `இவர்களுக்காகவா பயந்து பயந்து, நம் வாழ்க்கையை வீணடித்தோம்!’ என்ற அயர்ச்சி உண்டாகும்.

    “இளமையை நல்லபடியாகக் கழித்திருந்தால், முதுமை ஓய்வாக இருக்கும்!” (ஸ்பானிஷ் நாட்டுப் பழமொழி)

    முதுமையில் வாட்டமா?

    நாம் வளர்க்கும் குழந்தைகளும் ஒரு நாள் பெரியவர்கள் ஆவார்கள்; அப்போது, அவர்களுடைய அன்பும் அண்மையும் நமக்குத் தேவைப்படும் என்பது புரியாது, அத்தியாவசியத் தேவைகளைக் கொடுப்பதுடன் தம் கடமை தீர்ந்தது என்று நினைத்து நடப்பவர்கள் முதுமையில் வாடத்தான் நேரும்.

    கதை

    நாற்பது வயதுக்கு மேல் மூன்றாவது குழந்தை ஆயிஷாவைப் பெற்றெடுத்தாள் ஹப்ஸா.

    உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும் சமயத்தில், `இது என்ன தொந்தரவு!’ என்ற எரிச்சல் ஏற்பட, குழந்தையை வளர்க்க ஒரு பெண்ணை அமர்த்தினாள். குழந்தை எப்படி வளர்கிறாள் என்று கவனிக்கும் ஆர்வம் கிஞ்சித்தும் அவளிடம் இருக்கவில்லை.

    ஒரு சமயம், “உன்னை எதற்குத்தான் பெற்றேனோ!’ என்று ஹப்ஸா எரிந்து விழ, அவள் மனம் உடைந்துபோயிற்று.

    ஆயிஷாவுக்குப் பத்து வயதானபோது, தாய் எது கூறினாலும், “நீ என்னை வளர்க்கவில்லையே” என்று எதிர்த்துப் பேசினாளாம். (அண்மையில், தன் கதையை வருத்தத்துடன் அப்பெண்ணே என்னிடம் பகிர்ந்துகொண்டது).

    அன்பு கிடைக்காது ஏங்குபவர்கள் தீய நட்பை நாடுவார்கள். ஆனால், ஆயிஷா நல்ல பெண். மகா புத்திசாலி வேறு. கல்லூரிப் படிப்புடன், தன் கவனத்தைப் பல ஆக்ககரமான வழிகளில் செலுத்தினாள்.

    தீபாவளிக்கு எங்கள் இல்லத்திற்கு வந்துவிட்டு, “நான் இவ்வளவு மகிழ்ச்சியுடன் இருந்ததே இல்லை. இன்றிரவு உங்கள் வீட்டில் தங்கலாமா?” என்று கெஞ்சலாகக் கேட்டாள்.

    அவள் உணவருந்தும்போது, மெள்ள பேச்சுக் கொடுத்தேன்.

    “நீங்கள் செய்வதுபோல், எங்கள் வீட்டில் ஒன்றாக அமர்ந்து, பேசிச் சிரித்தபடி சாப்பிடமாட்டோம். பண்டிகைச் சமயங்களில் அப்படிச் சாப்பிட்டாலும், பேசுவது கிடையாது,” என்றாள்.

    குடும்பத்தில் யாராவது தனியாகச் சாப்பிட்டாலும், கூடவே ஒருவர் இருக்கவேண்டும் என்பது நான் என் பாட்டியிடம் கற்ற பாடம். சாப்பிடுபவர் அதிகம் பேசக் கூடாது. ஆனால் உடன் இருப்பவர் சுவாரசியமாக ஏதாவது கதை சொல்வார். அனேகமாக, அது அவர் வாழ்க்கையில் சந்தித்த நபர்களைப் பற்றி இருக்கும்.

    “காரில் போகும்போதும் நான் இப்படித்தான் எதையாவது அலசிக்கொண்டிருப்பேன். பொதுவாக, அதிகம் பேசாதவர்கள்கூட அப்போது பேசுவார்கள்,” என்று நான் கூற, “நாங்கள் காரிலும் பேசிக்கொள்வது கிடையாது. அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள்,” என்று, விரக்தியுடன் பதில் வந்தது.

    இன்றும், `அம்மாவை எப்படியெல்லாம் ஆத்திரப்படுத்தலாம்?’ என்று யோசிப்பவள்போல் நடந்துகொள்கிறாள்.

    அவளைச் சொல்லிக் குற்றமில்லை. சிறு வயதில் அன்பாக வளர்க்கப்பட்டு இருந்தால்தானே தனக்குக் கிடைத்ததைத் திருப்பி அளிக்க முடியும்?

    வீடு திரும்புகையில், “உங்கள் கதைகளுக்கு மிக்க நன்றி,” என்று பலமுறை கூறி விடைபெற்றாள் ஆயிஷா.

    வயதானவர்களா? போர்!

    தமிழ்நாட்டில், `பெரிசு’, `கிழவி’ என்று பேரன் பேத்திகளே அழைப்பதைக் கேட்டிருக்கிறேன். அவர்களுக்கும் ஒரு நாள் முதுமை அண்டாதா?

    அதுதான் அவர்கள் பழக்கம் என்றாலும், மரியாதை இல்லாதது போலிருக்கிறதே!

    முதுமை ஒரு நோயல்ல. எத்துணை அனுபவங்களை, இடர்ப்பாடுகளைக் கடந்து வந்திருந்தாலும், முதியோர்களில் பலரும் மகிழ்ச்சியுடன் வாழ்வை நடத்துகிறார்களே!

    வயதானவர்கள் அனைவருமே மகிழ்ச்சியாக இருப்பார்கள், வாழ்க்கையிலிருந்து பாடம் கற்றிருப்பார்கள் என்று கூற முடியாது. அதற்கு இளமையில் சற்று கவனமாக நடந்திருக்க வேண்டும்.

    `எனக்கு வயதானவர்களுடன் பேசவே பிடிக்காது. போரடிப்பார்கள்!’ என்று கூறும் நடுத்தர வயதினர் முதுமை அடைந்ததும், நிராதரவாக உணர்வார்கள் — `நாம் நினைத்தது போல்தானே பிறரும் நம்மை மதிப்பிடுவார்கள்!’ என்ற தயக்கத்துடன்.

    அறிவுரையை ஏற்கலாமா?

    “நான் புகை பிடிப்பதில்லை. என் தந்தைக்கு அந்தப் பழக்கத்தால் உடல்நிலை சீர்கெட்டுவிட்டதென்று, `நீயும் இந்தப் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாதே! அதை விடவே முடியாது,’ என்று அவரே சிறுவயதிலிருந்து எனக்கு அறிவுரை கூறினார்,” என்று நண்பர் ஒருவர் கூறினார்.

    வயதில் மூத்தவர்கள் சொல்வதெல்லாம் சரி என்பதல்ல.

    ஒரு வேறுபாடு: `நான் செய்த தவற்றை நீயும் செய்யாதே!’ என்ற நல்லெண்ணத்துடன் கூறுகிறார்கள் என்று புரிந்துகொண்டால், அவர்கள் சொற்படி நடக்கமுடியும். அதுவே அவர்களுக்கு அளிக்கக்கூடிய மரியாதை.

    அறிவு வளர வேண்டுமானால், வயதும் கூடிக்கொண்டே போகவேண்டும் என்பதல்ல. பிறரது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தாலே போதும். அவர்கள் செய்த தவற்றை நாமும் செய்யாதிருப்போம்.

    எப்போதும் பாதுகாப்பா!

    சில குழந்தைகள் பாதுகாப்பை நாடி, எப்போதும் தாயை ஒட்டியபடிதான் இருப்பார்கள்.

    `மகளுக்குத்தான் என்மீது எத்தனை அன்பு!’ என்றெண்ணும் தாய்க்கு இப்போக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், குழந்தையின் வளர்ச்சிக்கு இது நல்லதல்ல. தனியாக இயங்க வேண்டிய தருணங்களில் அச்சம்தான் எழும்.

    கதை

    பத்து வயதான மகளிடம் வீட்டு வேலை செய்யச் சொன்னாள் தாய்.

    “என் வயதில் நீ செய்தாயா?” என்ற சந்தேகம் பிறந்தது மகளுக்கு.

    “இல்லை,” என்று உண்மையை ஒத்துக்கொண்டாள் பெரியவள்.

    “பின்னே, என்னை மட்டும் செய்யச் சொல்கிறாயே?” சிறு குழந்தைகளுக்கே உரிய எதிர்ப்பு.

    “நான் வளர்ந்தபோது, எங்கள் வீட்டு வேலைகளைச் செய்ய ஆட்கள் இருந்தார்கள். அது வேறு காலம், வேறு நாடு. நீ வளர்ந்தபின், எல்லா வேலைகளையும் நீயேதான் செய்ய வேண்டியிருக்கும். அதற்காகத்தான் இப்போதே பழக்குகிறேன். என்னை மாதிரி நீயும் திண்டாடமாட்டாய், பார்!”

    சில குழந்தைகளுக்கு இத்தகைய விளக்கம் புரியும். வேறு சிலர், அம்மாமேல் ஆத்திரப்படுவார்கள். தாய் உறுதியாக இருந்தால், அவளுடைய கண்டிப்பின் காரணம் பிற்காலத்தில் புரியும்.

    அறுபது, எழுபது வயதுக்குமேல் செய்யும் ஒவ்வொரு காரியமும் மலை ஏறுவதுபோல் பிரயத்தனப்பட்டுதான் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், மலைமேலிருந்து பார்ப்பதுபோல், வாழ்க்கையின் அழகான தன்மையை உணரமுடியும் என்கிறார் திரு. அனுபவசாலி.

    வயதானால் குறைந்துகொண்டே வரும் புற அழகு. ஏன், மறைந்துவிடவும் கூடும். ஆனால், மனம் அழகாக இருந்தால், எந்த வயதிலும் அழகாகத் தெரிவார்கள்.

    காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எல்லா உயிர்களின் உடலும் அப்படித்தான். ஆனால், நம் எண்ணங்களை காலத்துக்கு ஏற்ப மாற்றி நடந்துகொண்டால், நன்மதிப்பும் மரியாதையும் நிலைக்கும்.

    கதை

    பெரிய பணக்காரனாக வேண்டும் என்று இளமையில் கனவு கண்டு, அதற்காகக் கடுமையாக உழைத்தான் ரகுபதி. தன்னைச் சார்ந்தவர்களுக்குத் தேவைக்கும் அதிகமாகவே பணம் கொடுத்தான். பணத்துடன் அதிகாரமும் வந்தடைந்தது.

    அவற்றிற்கான விலை: நேரமின்மையால் குடும்பத்தைக் கவனியாதது.

    தங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு நபர் இருப்பதையே அவன் குடும்பத்தார் உணரவில்லை.

    வயதானதும், ரகுவின் உடல்நிலை சீர்கெட்டது. எதிர்பார்த்த அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் கிட்டவில்லை. ஏமாற்றமும் உலகத்தாரின் `நன்றிகெட்ட’ போக்கால் ஆத்திரமும்தான் மிஞ்சின.

    அன்பு, கனிவான பேச்சு ஆகியவற்றைக் காசு பணத்தால் ஈடுகட்டிவிட முடியுமா? இது புரியாததால்தான் இறுதிக்கட்டத்தில் பலரது வாழ்க்கையும் சோகத்தில் ஆழ்ந்துவிடுகிறது.

    முதுமையில் முடிந்துவிடுமா வாழ்க்கை?

    குழந்தைகள் வளர்ந்து, கூட்டைவிட்டுப் பறந்ததும், “அவ்வளவுதான்! என் வாழ்க்கை முடிந்துவிட்டது!” என்று விரக்தியுடன் பெருமூச்சு விடுவது எதற்கு?

    உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், அத்துடன் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. புதிதாகக் கற்க எவ்வளவோ இருக்கின்றன.

    துணுக்கு

    “நீ உன் வயதுக்கேற்றபடி நடந்துகொள்ளேன்!” என்று சிடுசிடுத்தாள் மகள்.

    அலட்சியமாக, தாய் அளித்த பதில்: “எல்லாரும் அப்படி நடந்துகொள்வதால்தான் உலகம் இப்படி சீர்கெட்டுக் கிடக்கிறது!”

    கதை

    அழகழகாக உடுக்கவேண்டும், புதிய நாடுகளைச் சுற்றிப் பார்க்கவேண்டும், பலவிதமான மனிதர்களைச் சந்திக்க வேண்டும் என்று ஏதேதோ ஆசைகள் மேரிக்கு.

    ஆனால், வன்முறையை பிரயோகித்த கணவன், அவளுக்கு வாய்த்திருந்தான். தாற்காலிகமான வேலை செய்து குழந்தைகளைக் காப்பாற்ற நேர்ந்தது.

    அவளுடைய முதுமையில், கணவன் இறந்தான். ஆனால், அவள் நிர்க்கதியாக விடப்படவில்லை.

    பல ஆண்டுகள், தங்களுக்காக தாய் அனுபவித்த அவதி புரிந்து, மகன் வெளிநாட்டில் வேலை செய்து, நிறைய காசு அனுப்பினான். ஒவ்வொன்றாக அவளும் தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டாள்.

    மகிழ்ச்சியுடன், “கடவுளால் நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்!” என்கிறாள். கடந்தகாலம் கடந்தே போய்விட்டது.

    வயது ஏறிக்கொண்டே போனாலும், சிறு குழந்தைகளைப்போல், எல்லாவற்றையும் அறியும் ஆர்வமும் மகிழ்ந்து சிரிக்கும் குணமும் இருக்கும்வரை யாரையும் முதுமை அண்டுவதில்லை.

    இளமையிலிருந்த அவர்களுடைய அழகு, முகத்திலிருந்து இருதயத்திற்குப் போய்விடுகிறதோ?

    Share
  • பழகத் தெரிய வேணும் – 90

    பழகத் தெரிய வேணும் – 90

    நிர்மலா ராகவன்

    படைத்தலும் ரகசியமும்

    `நான் பல புத்தகங்களைக் கரைத்துக் குடித்திருக்கிறேன். அதனால் மகா புத்திசாலி!’

    இப்படி எண்ணிப் பெருமைப்படுகிறவர்கள் முக்கியமான ஒன்றைப் புரிந்துகொள்வதில்லை. நிறைய புத்தகங்களைப் படிப்பதால் மட்டும் அறிவு வளர்ந்துவிடாது. கற்பனைத்திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    ஓயாமல் தன்னைப்பற்றியோ, பிறரைப்பற்றியோ யோசிப்பதால் நேரம்தான் விரயமாகும்.

    ஒருவர் தனக்குப் பிடித்த ஆக்ககரமான பொழுதுபோக்குகளில் ஈடுபட்டால், அவரால் பிறருக்கும் உபயோகமானதாக எதையாவது செய்ய இயலும்.

    அவசியம் இருந்தால்தான் புதியதாக ஒன்றைக் கண்டுபிடிக்கும் நிலை வரும் என்பதல்ல.

    `இப்படிச் செய்தால் என்ன? ஏன், இம்மாதிரியும் இருக்கலாமே!’ என்று, நடைமுறையில் பின்பற்றப்படுவதை வேறுவகையில் மாற்றுகிறார்கள் படைப்பாளிகள். அது கண்களால் பார்க்கும் தொலைவில் இல்லாவிட்டாலும், கற்பனையால் அவர்கள் எதிரில் இருப்பதைப்போல் காண்கிறார்கள்.

    கற்பனையில் கண்டதைக் கனவாகக்கொண்டு, அதிலேயே நிறைவு கண்டுவிடாது, அவற்றை நனவாக்கவும் முயற்சித்து வெற்றி பெறுகிறார்கள்.

    எந்தக் கண்டுபிடிப்பையும், `இது பாதுகாப்பானதுதான்!’ என்று முதலில் உறுதி கூறவும்முடியாது. இருப்பினும், அதன் உபயோகம் நேரத்தையும், சக்தியையும் மிச்சமாக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன், துணிச்சலுடன் செய்கிறார்கள்.

    ஒருவர் புதியதாக எதையாவது செய்ய முயன்றால், `புரட்சி’ என்பார்கள். அதனால் விளையும் நன்மைகள் அதை முயல்கிறவருக்குத்தான் புலப்படும்.

    புதியதாக எந்தக் காரியத்தைத்தான் உடனுக்குடன் செய்ய முடியும்! பொறுமையும் விடாமுயற்சியும் அதிக அளவில் இருக்கவேண்டும். அதற்காக நிறைய உழைக்கவேண்டும். பல பிழைகளும் சறுக்கல்களும் எதிர்ப்படும்.

    இவற்றால் உற்சாகத்தை இழக்காது, எடுத்த காரியத்தை முடிக்கும் உறுதியுடன் ஈடுபட்டால்தான் முயற்சி திருவினையாகிறது.

    தற்காலத்தில், எல்லோராலும் பரவலாக உபயோகப்படுத்தப்படும் ப்ரெஷர் குக்கர் டெனிஸ் பாபின் என்ற பிரெஞ்சு நாட்டுக்காரரால், 350 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.

    `நீராவியாலும், அழுத்தத்தாலும் பருப்பு, அரிசிபோன்ற எல்லாவற்றையும் வெகு விரைவாக வேகவைக்க முடியுமோ?’ என்ற யோசனை அவருக்கு முதலில் எழுந்திருக்கவேண்டும்.

    ஆரம்பத்தில், `இது நம்மால் முடியுமா?’ என்ற சந்தேகம் இருந்திருந்தால், அதை அவரே வென்றிருக்கக்கூடும். எதையும் சாதிக்க தன்னம்பிக்கை அவசியமாயிற்றே!

    (இந்தியாவில் அறிமுகமானபோது, அதை உபயோகிக்க பலரும் பயந்தார்கள். அழுத்தம் அதிகமாக இருந்தபோதே, விவரம் புரியாது, மூடியைத் திறக்கமுயன்ற சிலர் முகத்தில் ஆவி அடித்தது காரணமாக இருக்கலாம்).

    ஆரம்ப சூரத்தனம்

    எந்தத் துறையாகிலும், நாம் செய்ய ஆரம்பித்த ஒரு காரியத்தை ரகசியமாக வைக்கவேண்டுவது அவசியம். சுறுசுறுப்பாக ஆரம்பித்துவிட்டு, முடிப்பதற்குள் அதைப் பற்றிப் பிறருடன் பெருமையாக பேச நினைப்பது அபாயம்.

    யாரோ ஒருவர், அதைக் கவனமாகக் கேட்டுவிட்டு, `நீ சொல்வது நடக்காது!’ என்று சந்தேகம் ஏற்படச் செய்வார் முதலில்.

    அவரது போலி சந்தேகத்தைச் சவால் என்றெடுத்துக்கொண்டு, விரிவாக விளக்குவோம்.

    இதைத்தானே அவரும் எதிர்பார்த்தார்!

    நம்மை முந்திக்கொண்டு, தானே முயன்று கண்டுபிடித்ததைப்போல், தக்க இடத்தில் விரிவாகக் கூறி, லாபம் சம்பாதிப்பார்.

    இக்காலத்தில் இம்மாதிரியான நம்பிக்கைத் துரோகிகள் மலிந்துவிட்டார்கள்.

    கதை

    ஒரு இசைக்கலைஞர் தான் இயற்றிய பாடல்களை தன் குருவிடம் காட்டினார், அவர் மகிழ்ந்து பாராட்டுவார் என்று எதிர்பார்த்து.

    அப்பாடல்களை நோட்டமிட்ட குரு ஒன்றும் சொல்லாதது அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. அதன் காரணம் பிறகுதான் புரிந்தது.

    தான் இயற்றியவை அவை என்று குரு அவற்றைப் பிரகடனப்படுத்தினார்!

    `உங்களை எவ்வளவு நம்பினேன்! நீங்கள் என்னை இப்படி ஏமாற்றலாமா?’ என்று சீடரால் குருவைத் தட்டிக்கேட்க முடியவில்லை. குருபக்தியும், அவர்மேல் கொண்டிருந்த மரியாதையும் தடுத்தன.

    ஆனால், ஆயுள் முழுவதும் குருவின் நேர்மையற்ற செயல் அவரை உறுத்திக்கொண்டே இருந்தது. வருத்தம் மறையவே இல்லை.

    ஏன் காப்பி அடிக்கிறார்கள்?

    பிறரைக் காப்பி அடிப்பது எளிதாக இருக்க, `நமக்கு இருக்கிற கொஞ்சம் மூளையைக் கசக்கி, எதையாவது கண்டுபிடிப்பது முடிகிற காரியமா!’ என்ற கொள்கை உடையவர்கள் இப்படிப்பட்டவர்கள்.

    இவர்களுடைய சாமர்த்தியம் வேறுவிதமாக வெளிப்படும்.

    ஒரு ராகத்தில் அமைந்த பல பாடல்களைக் கேட்டால், இசை நன்கு பயின்றவர்களுக்குக் கற்பனை ஓடும். அவற்றை எப்படியெல்லாம் மாற்றலாம் என்ற யோசனை எழும்.

    `அவ்வளவு கஷ்டப்படுவானேன்!’ என்றுதான் காப்பி அடிக்கிறார்கள்!

    கதை

    கர்னாடக இசையில் தேர்ந்த ஒருவர் வேறு ஒருவரது பாடலுக்குத் தானே மெட்டமைத்து, ஒரு கச்சேரியில் பாடியிருந்தார். பக்கவாத்தியம் வாசித்தவர்களிடம் அடக்கமாக, தன் பங்களிப்பைத் தெரிவித்துக்கொண்டார்.

    அவர் மறைந்ததும், திரைப்பட இசை அமைப்பாளர் ஒருவர் அந்த மெட்டைத் தன்னுடையதாக ஆக்கிக்கொண்டார். அதனுடன் வேறு வாத்தியங்களையும் இணைத்தது மட்டும்தான் அவருடைய கைங்கரியம்.

    அவருக்குப் பெரும்புகழ் கிடைத்தது. `Genius’ என்றுகூட ஒரு ரசிகர் பாராட்டியிருந்தார்!

    குழுவில் படைப்பு

    இருவரோ, மூவரோ இணைந்து ஒரு படைப்பைப் படைத்தால் எளிதாக இருப்பதுடன், சுவையாகவும் இருக்கும். இதில் ஒருவர் நடைமுறையில் இருப்பதைப் புரிந்து வைத்திருப்பார். இன்னொருவர், `இப்படிச் செய்தால் என்ன?’ என்று புதிய கற்பனையைக் கொண்டுவருவார். மற்ற இரண்டையும் இணைப்பார் மூன்றாமவர்.

    அறிவிலும், திறமையிலும் ஒத்திருப்பதுடன், அவர்களுக்குள் போட்டி, பொறாமை இருக்கக்கூடாதென்பதும் அவசியம். விவாதம் வரலாம். ஆனால், சண்டையில் முடியக்கூடாது.

    `நான்தான் செய்தேன்!’ என்று கூறி, தானே முழு பாராட்டையும் பெற எண்ணுகிறவர் சுயநலவாதி. அடுத்த முறை, யார் அவருடன் இணைவார்கள்!

    கதை

    “நான்குபேர் இணைந்து, ஒரு கதையை எழுதுகிறோம். நான் இரண்டாவது, நீங்கள் மூன்றாவதாக எழுதுங்கள்,” என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் பணிக்க, நான் ஒப்புக்கொண்டேன்.

    எழுதி அனுப்பிவிட்டு, அதைப்பற்றி மறந்தேபோனேன்.

    வெளியானதும், `இரண்டாவது பகுதி சுமாராக இருக்கிறது. கடைசி ஒரு பக்கம்தான் சுவாரசியமாக இருக்கிறது,’ என்று தோன்றியது.

    அடுத்த மாதம் நான் எழுதியது வெளியாக, அதிர்ச்சி உண்டாயிற்று.

    அப்போதுதான் புரிந்தது, என் பகுதியின் முதல் பாகத்தை அவர் தனதாக ஆக்கிக்கொண்டார் என்பது.

    `இப்படிச் செய்துவிட்டீர்களே!’ என்று நான் கேட்கவில்லை. நான் அவரைவிடத் திறமைசாலி என்று சமாதானம் செய்துகொண்டேன்.

    அடுத்த பல மாதங்கள் அப்பத்திரிகைக்கு எதுவும் எழுதவில்லை. அப்போது அவருக்குப் புரிந்திருக்கும் என் மனவருத்தம்.

    மனச்சாட்சியே இல்லாது, இன்னொருவரின் ஆக்கபூர்வமான வேலையைத் `திருடினால்’ உண்மையான நிறைவு கிடைக்குமா?

    ஆசை இருக்கு கதையெழுத, ஆனால்…

    ஒரு படைப்பை ஆரம்பிப்பதற்குமுன், அதற்கான அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். மொழி வளமும் அவசியம்.

    `எனக்குக் கதையெழுத, பாடல்கள் புனைய ஆசை. ஆனால், படிக்கப் பிடிக்காது!’ என்றால் எப்படி?

    முன்னூறு வருடங்களுக்குமுன் இருந்த தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர் போன்ற வாக்கேயக்காரர்களைப் பார்ப்போமா?

    சிறுவயதிலேயே அவர்கள் பல மொழிகளில் தேர்ச்சி பெற குருமார்களிடம் அனுப்பினார்களாம் அவர்களது பெற்றோர். அதைத் தவிர, மதத்தைப்பற்றியும் கற்றார்கள்.

    பக்தி மிகுந்து, தென்னாட்டில் கோயில் கோயிலாகப் போக, அங்கிருந்த தெய்வங்களின்மேல் பாடல்களைப் புனையும் திறன் வந்தது. தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில், கர்னாடக இசைப்பாணியில் இயற்றினார்கள்.

    அவர்களுடைய கற்பனைத்திறன் இன்றளவும் பாராட்டப்படுவது எப்படியென்றால், ஆர்வத்துடன், படைப்புக்கு வேண்டிய ஆதாரமான அறிவு, மொழித்திறன் இரண்டையும் பெற்றிருந்ததுதான்.

    எந்தத் துறையானாலும், கற்பனைவளம் மிக்கவர்களே முன்னுக்கு வருகிறார்கள்.

    தமிழ்த் திரைப்படங்கள் ஆரம்பித்த காலத்தில், செந்தமிழில் உரையாடினார்கள்.

    ஐம்பதுகளில், `நாம் அன்றாடம் அப்படிப் பேசுவது கிடையாதே! எல்லாருக்கும் இந்தத் தமிழ் புரியுமா?’ என்ற சந்தேகம் எழ, சற்றே மாற்றினார்கள். இருந்தாலும், உணர்ச்சிமயமான இறுதிக்கட்டத்தில் செந்தமிழ் துள்ளி விளையாடும்.

    காலப்போக்கில், அதுவும் மாற, வெவ்வேறு உச்சரிப்புகளுடன்கொண்ட தமிழ் பயன்படுத்தப்பட்டது.

    தெய்வங்கள் எப்படிக் காட்சி அளிப்பார்கள்?

    பரம பக்தர்களுக்குத்தான் இக்கேள்விக்குப் பதில் புலனாகும்.

    நம்மைப்போன்ற பாமரர்களுக்காக, தெய்வீகமான படங்களின் இயக்குனரின் கற்பனையால், உடை, ஆபரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டன. தெய்வங்கள் செந்தமிழில் உரையாட, நகைச்சுவைப் பாத்திரங்கள் தற்காலத்தமிழில் கொச்சையாகப் பேசுவார்கள்!

    ரசிகர்களும் இயக்குனர்கள் மற்றும் கதாசிரியர்களின் கற்பனையை ஏற்றுக்கொண்டனர். அவ்வப்போது, விமரிசகர்கள் குறிப்பிட்ட குறைகளையும் நிவர்த்தி செய்தனர்.

    கதை

    நான் மேற்பயிற்சிக்காகப் போயிருந்தேன். நான்குவிதமான தலைப்புகள் முதலிலேயே கொடுக்கப்பட்டிருந்தன. விரிவுரையாளர்கள் அவற்றை ஒட்டிப் பாடம் நிகழ்த்தினார்கள்.

    அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பயிற்சி முடியும் தறுவாயில், நீண்ட கட்டுரை ஒன்று எழுதவேண்டும் – மலாய் மொழியில்.

    எங்கள் குழுவில் சீன ஆசிரியைகள் சிலர் இருந்தார்கள். அவர்கள் கற்றது, கற்பித்தது எல்லாமே சீன மொழியில்தான். ஓரளவு ஆங்கிலம் மட்டும் பேசுவார்கள்.

    மலாய் அறவே தெரியாது என்ற நிலையில், அவர்களுக்கெல்லாம் கட்டுரை எழுதித் தந்து சம்பாதித்தார் ஒருவர்! அவர்களது நிலை புரிந்து, எந்தப் புகாரும் எழுப்பப்படவில்லை.

    கற்பனை இருந்திருக்கலாம். ஆனாலும், இவர்களால் படைக்க முடியவில்லை. ஏனெனில், மொழி தெரியாமல் போயிற்று.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 89

    பழகத் தெரிய வேணும் – 89

    நிர்மலா ராகவன்

    என்ன இடர் வரினும்

    சில தாவரங்கள் வெப்பமாக இருந்தாலும், மழை அடித்துக்கொட்டினாலும் பிழைத்துக்கொள்ளும். வேறு சில வெயிலில் வாடி, பெருமழையில் அழுகிப் போய்விடும்.

    மனிதர்களும் அப்படித்தான். பலர் சிறிதளவு துன்பத்தைக்கூட தாங்கமுடியாது ஒடுங்கிவிடுவார்கள். புதிதாக ஒரு வழியைத் தேடும் உற்சாகத்தை இழந்துவிடுவதுதான் காரணம்.

    ஒரு சிலர் எவ்வளவுதான் இடர்கள் வந்தாலும், அவற்றைச் `சவால்’ என ஏற்று, `இந்த நிலையும் ஒருநாள் மாறும்!’ என்ற நம்பிக்கையுடன் நடப்பார்கள். அதுவே வாழ்வின் வெற்றிதான். (பலர் புகழ ஏதாவது செய்வதுதான் வெற்றி என்பதல்ல).

    வீட்டைவிட்டு எங்கும் செல்லக்கூடாது என்ற அண்மைக்காலத் தடையுத்தரவில், பலரும் தம் வேலையை இழந்தனர். கடைகளை மூடவேண்டிய நிலைமை பல வியாபாரிகளுக்கு.

    விமானப்பயணம் கூடாது என்ற நிலையில், விமானப் பணியாளர்களாக இருந்தவர்களுக்கு வருமானம் இல்லாதுபோயிற்று.

    ஆங்கிலத்தில் போதிய தேர்ச்சி இல்லாததால், கல்வித்தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை இன்னும் சிலருக்கு.

    இவர்கள் அனைவரும், `அவ்வளவுதான்! என் வாழ்க்கை முடிந்துவிட்டது!’ என்று நம்பிக்கை இழந்தால் என்ன ஆகும்?

    நிலைமை மாறும் என்று பொறுமையைக் கடைப்பிடிக்கமுடியுமா?

    என்ன கஷ்டம் வந்தாலும், சாப்பாடு மட்டும் எல்லாருக்கும் அவசியமான தேவை என்று, உணவுப்பொருட்களைத் தயார் செய்கிறார்கள் பலர். அவற்றை வீடுகளுக்குக் கொண்டுசெல்லும் பணி சிலருக்கு. ஆண்களோ, பெண்களோ, இவர்களில் எவரும் அந்தஸ்து பார்ப்பதில்லை.

    ஒருவர் ஆயிரம் மரவள்ளிக்கிழங்கு செடிகளை நட்டு, கிழங்கை வறுவலாக விற்று, ஒரே நாளில் பல ஆயிரம் ரிங்கிட் சம்பாதிப்பதாகச் செய்தி வந்தது.

    இருபத்தி இரண்டு வயதான சீன இளைஞன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே பெற்றோருடைய சிறு கடையில் உதவி செய்திருக்கிறான். படிப்பு முடிந்ததும், தன் அறிவைக்கொண்டு, கணினிவழி வியாபாரத்தைப் பெருக்கியிருக்கிறான். `இதற்கு கல்லூரிப் படிப்பும், அதற்கான செலவும் வீண்!’ என்று பலர் கேலி செய்தாலும், அதைப் பொருட்படுத்தவில்லை.

    ஒரே தொழிலில் நிலைத்திருந்து கஷ்டப்படுவதைவிட, அதை விட்டுவிட்டு, புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவது அச்சத்தை விளைவித்தாலும், அதுதான் புத்திசாலித்தனம்.

    அவ்வாறு செய்தால், `முன்பே செய்திருக்கவேண்டும்!’ என்ற வருத்தம் காலங்கடந்து உண்டாகாது. கிடைப்பது தோல்வியாக இருந்தாலும், செய்யாது போய்விட்டோமே என்ற வருத்தமாவது எழாதிருக்கும்.

    கதை

    நேபாளத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, விமானத்தில் கோலாலம்பூர் திரும்பிக்கொண்டிருந்தேன்.

    விமானம் தரையிறங்கும்போது, ஒரு பக்கத்திலிருந்து பல குரல்களில், மகிழ்ச்சி கலந்த சிரிப்பு உரக்கக் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். நாலரை மணிநேரப் பயணமாக இருந்தாலும், வழியில் சாப்பிட எதுவும் வாங்காது, அங்கு உட்கார்ந்திருந்தார்கள் பல நேபாளிகள்.

    முதன்முறையாக வெளிநாடு வந்திருக்கும் தொழிலாளிகள் என்று புரிந்தது.

    வெளிநாட்டுக்கு வேலை நிமித்தம் போகிறவர்கள் பலவிதத் துன்பங்களை அனுபவிக்க நேரிடும். தாமே சமைத்துச் சாப்பிட்டால்தான் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை, குறுகிய இடத்தில் நிறைய பேருடன் படுக்கை, உற்றவர்களைவிட்டுப் பிரிந்திருத்தல், மாறுபட்ட கலாசாரத்தால் ஏற்படும் குழப்பங்கள் – இப்படியெல்லாம் நடக்கக்கூடும் என்று நினைத்தும் பாராது, வளமான எதிர்காலக் கனவுகளுடன் மகிழ்ந்திருந்தார்கள்.

    எதிர்ப்படும் சங்கடங்களைப் பொறுமையாகச் சகித்துக்கொண்டு, வேலையைப் பொறுப்பாகச் செய்பவர்கள் முதலாளிகளின் ஆதரவைப் பெற்று, உயர வழியுண்டு.

    வெளிநாட்டிலிருந்து இங்கு வந்த ஒரு தையல்காரர் தான் எதிர்பார்த்தபடி வாழ்க்கை எளிதாக இல்லை என்றோ, அல்லது மதுபானங்கள் எளிதாக, எங்கும் கிடைப்பதைக் கண்டோ, அப்பழக்கத்திற்கு அடிமையானார். அவரது உத்தியோகம் நிலைக்கவில்லை.

    அவர் செய்த தவறு: ஆரம்பித்த காரியத்தை (புதிய நாட்டில் கிடைத்த வேலையை) சரியாக முடிக்காது, அதில் முழுக்கவனமும் செலுத்தாது, முதலாளி பலமுறை கண்டித்தபோதும் விழித்துக்கொள்ளாமல் இருந்தது.

    புதிதாக ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டுமானால், பழைய பழக்கங்களை, தொடர்புகளை, விட்டுவிடத் தயாராக இருக்கவேண்டும்.

    கதை

    இன்பக் கனவுகளுடன் மலேசியா வந்தடைந்த அயல்நாட்டுத் தொழிலாளி ஒருவருக்கு சம்பளம் அளிக்கப்படவில்லை, கேட்டால் அடி, உதை. சாப்பாட்டுக்கே வழியில்லாது போனபோதும், அவருக்கு எங்கு போய், என்ன செய்வதென்று புரியவில்லை. கடப்பிதழோ, முதலாளி கைவசம்.

    அவரைப் பற்றிய செய்தி தினசரியில் முதல்நாள் வெளியாகியது. பஞ்சத்தில் அடிபட்டவர்போல் காணப்பட்டார். மறுநாள், அவருடைய மரணச்செய்தி!

    இம்மாதிரியான, கொடுமைக்கார, முதலாளிகள் தண்டிக்கப்பட்டாலும், பிழைப்பை நம்பி வந்த உயிர் போனது போனதுதான்.

    பலர் எப்படியோ தப்பித்துவிடலாம். இருப்பினும், `நான் என்னென்ன கஷ்டங்களையெல்லாம் அனுபவித்தேன், தெரியுமா?” என்று கடந்தகால நினைவுகளிலேயே ஆழ்ந்துவிடுவதால் பயனில்லை. அவற்றை மாற்றவா முடியும்!

    `நான் இத்தனைத் துன்பங்களை கடந்துவந்திருக்கிறேனா!’ என்ற வியப்புடன், பல வருடங்களுக்குப்பின், பேரக்குழந்தைகளுக்குச் சொல்ல நல்ல கதைகளாக வேண்டுமானால் அவை அமையும்!

    வாழ்க்கை இன்னும் முடியவில்லை என்ற நிலையில், `வேறு என்ன செய்யலாம்?’ என்று சிந்தித்துக்கொண்டே இருப்பவருக்கு உற்சாகம் குன்றுவதே கிடையாது.

    `எல்லாம் நன்மைக்கே!’ என்று எப்போதும் சொல்லிவந்த ஒருவனுக்கு விபத்தினால் ஒரு கால் முடமாகிவிட்டது.

    `இதில் என்ன நன்மை?’ என்று சிலர் கேலி செய்ய, `ஒரு செருப்பு வாங்கினால் போதுமே,’ என்றானாம்!

    எந்த நிலையிலும் அவன் தன் உற்சாகத்தை இழக்கவில்லை என்பது பாராட்டப்பட வேண்டியது.

    கதை

    பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், நியு யூ (NIU YU) என்ற பெண் தனது பதினோராவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பும் ஆவலில் இருந்தாள்.

    சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அன்று நடந்த பூகம்பத்தில் 70,000 பேர் உயிரிழந்தனர். அச்சிறுமியின் பள்ளிக்கூடக் கட்டடம் இடிந்து விழ, மூன்று தினங்கள் அதனடியில் மாட்டிக்கொண்டாள். உயிர் பிழைத்தாள். ஆனால், வலது காலை எடுக்கும்படி ஆயிற்று.

    இப்போது, முழங்காலுக்குமேல் செயற்கைக்கால் வெளியே தெரிய நடக்கும் அப்பெண் ஒரு மாடல்!

    “என்னைப்போன்றவர்கள் முழுமை அற்றவர்களாக இருக்கலாம். ஆனால், நாங்களும் அழகானவர்கள்தாம்!” என்னும் அவளது தன்னம்பிக்கை பலருக்கும் தைரியம் அளித்துவருகிறது.

    கசப்பான நிகழ்வுகள் முடியும்போது, புதிய திருப்பங்கள் ஏற்பட வழியுண்டு.

    அதற்காக, துன்பம் எதிர்ப்படும்போதுதான் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்பதல்ல.

    முடிவில் ஆரம்பம்

    நான் பள்ளியில் படித்தபோது, அநேகமாக எல்லா ஆசிரியைகளும் கணவனை இழந்தவர்கள், அல்லது முதிர்கன்னிகள். பதின்ம வயதில், அவர்களுடைய நிலை புரியவில்லை.

    கதை

    இளம்வயதிலேயே கணவனைப் பறிகொடுத்தவள் அவள்.

    துக்கத்தைவிட, `இனி யார் நம்மைக் காப்பாற்றுவார்கள்!’ என்ற மலைப்புதான் பெரிதாக எழுந்தது.

    அவளுடைய தந்தை அவளுடன் வந்து தங்கி, அவள் பாதியில் விட்ட படிப்பைத் தொடரச் செய்தார்.

    புதிய இடத்தில், புதிய மனிதர்களுடன் எப்படித்தான் காலம் கழிக்கப்போகிறோமோ!’ என்று முதலில் பயம் ஏற்பட்டது. `வேறு வழியில்லை!’ என்ற நிலையில், படிப்பைத் தொடர்ந்தாள்.

    பிறகு, ஆசிரியப்பணியில் அமர்ந்தபோது, வாழ்க்கை அவ்வளவு பயங்கரமானதாகத் தோன்றவில்லை. `பிறர் கையை எதிர்பார்த்து, காலத்தைக் கழிக்கத் தேவையில்லை!’ என்று புரிய, தன்னம்பிக்கை வளர்ந்தது.

    பாதுகாப்பான நிலையைப் பெரிதாகக் கருதி, அளவுக்கு மீறிய பொறுமையுடன் இருந்தால், வளர்ச்சி ஏது!

    இளமையும் ஆரோக்கியமும் இருக்கும்போதே சிலர் ஒன்றன்பின் ஒன்றாக, பல பொழுதுபோக்குகளில் முழுக்கவனத்தையும் செலுத்திக் கற்பது தம் திறமைக்கே சவால் விட்டுக்கொள்ள எண்ணித்தான்.

    அவ்வாறு கற்பது எதுவும் வீண்போவதில்லை. வேறு எங்காவது உபயோகப்படும்.

    சில சமயம், நாம் விரும்பினாலும், எதிர்பார்க்காவிட்டாலும், மாற்றங்கள் நம்மைத் தேடி வரும். புதிய இடத்திற்கு வேலை மாற்றம் கிடைத்தால், அங்கு புதிய மொழி ஒன்றைக் கற்கவேண்டிய அவசியம் தவிர்க்கமுடியாதது.

    `புதியதாக எதிலாவது இறங்குவதா!’ என்ற அச்சம் அப்போது தடுக்கக்கூடும்.

    அடுத்தடுத்த நாட்கள் ஒரே சீராக இருந்தால், சலிப்பு ஏற்படுமே! வாழ்வில் வளர்ச்சியோ, முன்னேற்றமோ இருக்குமா?

    Share
  • பழகத் தெரிய வேணும் – 88

    பழகத் தெரிய வேணும் – 88

    நிர்மலா ராகவன்

    முன்னேற வயதில்லை

    “என் மகள் ஆரம்பப் பள்ளியில் மிக நன்றாகப் படித்து, ஒவ்வொரு வருஷமும் பரிசு வாங்குவாள். அதன்பின், என்ன ஆயிற்றென்று தெரியவில்லை. படிப்பில் அக்கறை போய்விட்டது,” என்று பிரலாபித்தாள் ஓர் ஆசிரியை. அவள் பள்ளி இறுதிப் பரீட்சைக்குப் பிறகு இரு வருடங்கள் பயின்றிருந்தவள்.

    பெற்றோர் தமக்குத் தெரிந்ததைக் கற்றுக் கொடுத்து, சிறு குழந்தைகள் அதைச் சுமாராகச் செய்தாலும் பாராட்டுவார்கள். குழந்தையும் மகிழ்ந்துவிடும்.

    எதில் ஈடுபட்டாலும், புகழ் கிடைக்கும்போது அதையே இன்னும் நன்றாகச் செய்யவேண்டும் என்ற ஆர்வம் பிறக்கும். நாளடைவில், பாராட்டை எதிர்பார்த்து, எந்தக் காரியத்திலும் முழுமை (PERFECTION) தேடுவார்கள்.

    பெருமை அடைந்தால் கர்வம் தலைக்கேறும். பாராட்டு கிடைக்காவிட்டால் தன்னம்பிக்கை குறைந்துவிடும்.

    பாராட்டு கிடைத்தால் ஒரேயடியாக மகிழ்ந்து, பெருமைப்படாது, அவமதிப்பு வந்தாலும் அதை ஒதுக்கித் தள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால்தான் முன்னேற முடியும்.

    தமிழில் பிரபலமான பெண் எழுத்தாளர்கள் இருவர் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டு, அழுதுகொண்டே இருந்தார்கள் என்று படித்திருக்கிறேன்.

    எனக்குத் தோன்றிய காரணம்: ஆண்கள் எப்படி ஆபாசமாக எழுதினாலும் அதை ஏற்கும் நம் சமுதாயம் பெண்களின் எழுத்து, ஒரு வரையறைக்குள்தான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஆண்கள் சிலர், பெண்களுக்கு இழைக்கும் அநீதிகளைப் பற்றித் துணிச்சலுடன், விரிவாக எழுதும் பெண் எழுத்தாளர்கள் பழிக்கப்படுவார்கள்.

    `ஆண்களும் தவறு செய்வார்கள்!’ என்று வெளிப்படையாக எழுத இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?’ என்ற ஆத்திரம் ஆண்கள் பலருக்கு எழும். `இவள் எழுதுவதெல்லாம் ஆபாசம்!’ என்று ஏதோ சொல்லி, தம் மனக் குமுறலை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.

    பெண்களுக்கு உணர்ச்சிகளே இருக்கக்கூடாது, அப்படி இருந்தாலும், அவற்றை வெளியில் காட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைக்கும் அறிவிலிகளின் கருத்தை அலட்சியம் செய்தால்தான் பெண்கள் முன்னேற முடியும்.

    அறிவு, திறமை எல்லாம் இருந்தும் பல பெண்கள் வெளியில் அறியப்படாது இருப்பதன் காரணம் – கண்டனத்திற்கு அதிக மதிப்பு கொடுப்பதுதான்.

    நாம் ஈடுபடுவது எந்தத் துறையாக இருந்தாலும், அதில் எத்தனை காலம் தொடர்ந்திருந்தாலும், மேலும் முன்னேற இடம் இருக்கும்.

    இன்று முன்னணியில் இருக்கும் நடிகர்களையோ, இசை வல்லுனர்களையோ எடுத்துக்கொள்ளுங்கள். ஆரம்பக் காலத்தில் அவ்வளவு சிறப்பாகத் தம் தொழிலைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கே அது புரிந்திருக்கும். அதனால் மனம் தளராது, முன்னேறும் வழிகளை ஆராய்ந்து, அவற்றை என்றென்றும் கடைப்பிடிக்கிறார்கள்.

    அவ்வப்போது தோல்விகளும் வரும். ஆனால், அவற்றால் மனம் உடைந்துவிடாது, தன்னம்பிக்கையுடன் மீண்டு எழும் வகைகளை ஆராய்ந்து, கடைப்பிடிக்கிறார்கள்.

    சிறிது வெற்றி கிடைத்தவுடன், தலைக்கனத்துடன் இருப்பவர்கள் எத்துறையிலும் நிலைத்திருக்க முடியாது.

    ஒரே சமயத்தில் தாம் கற்ற பல துறைகளிலும் ஈடுபட்டு, எல்லாவற்றிலும் வெற்றி பெற முடியுமா?

    முடியும். ஆனால், வெகு விரைவிலேயே தோல்வியைச் சந்திக்க நேரிடும் — நம் மூளை வெகுவாகக் குழம்பிப் போவதால்.

    இதைத் தவிர்க்க, ஒரு துறையில் மட்டுமே சில காலம் ஆழ்ந்துவிட்டு, பிறகு முழுக் கவனத்துடன் இன்னொன்றிற்குத் தாவலாம்.

    நான் ஒரு புதினமோ, நீண்ட கதையோ எழுத ஆரம்பித்தால், வேறு எந்தவிதமான எழுத்திலும் மனம் செல்ல விடுவதில்லை. அப்போதுதான் கதாபாத்திரங்களுடன் உறவாட முடியும். பாத்திரப் படைப்பும் நம்பகமாக இருக்கும்.

    ஒரு போட்டிக்காக நூறு பக்கங்கள் கொண்ட புதினத்தை எழுதவேண்டும் என்றால், முதலில் ஒரு நாளைக்குச் சுமார் எத்தனை பக்கங்கள் எழுதலாம் என்று யோசித்து வைக்கவேண்டும்.

    ஒரே வாரத்தில் முடிந்ததா? சில நாட்கள் அப்படியே வைத்துவிட்டு, அதன்பின், கதையைப் படித்துப் பார்த்தால், நிறைய ஓட்டைகள் புலப்படும். முடிவு தேதி வரும்வரை, திருத்தியபடி இருந்தால், கதையில் மெருகேறும்.

    வியாபாரத்தில் முன்னேற்றம்

    ஒரு மளிகைக் கடை வைத்திருந்தார் சாங். அதிக லாபம் பார்ப்பது தவறு என்ற கொள்கை அவருக்கு இருந்ததால் எல்லாப் பொருட்களும் மலிவாக இருந்தன. நிறைய வாடிக்கையாளர்கள் சேர்ந்தார்கள். அதிலேயே திருப்தி அடைந்தார் சாங்.

    அவருடைய மகன் தந்தையின் கொள்கையை ஆதரிக்கவில்லை. அவன் வியாபார நுணுக்கங்களைக் கல்லூரியில் படித்துத் தேர்ந்தான். அவனுக்கு வழிவிட்டு, பெருந்தன்மையுடன் தந்தை ஒதுங்கிக்கொண்டார். `நான் இத்தனை காலமும் இப்படித்தானே செய்து வந்திருக்கிறேன்!’ என்று மகனுடன் விவாதிக்கவில்லை.

    வியாபாரத்தைப் பெருக்க, பல வழிகளைக் கையாண்டான் ஜூனியர் சாங்.

    `எங்கள் கடைக்கு இன்னும் இரு மைல்தான் இருக்கின்றன!’ என்ற அறிவிப்பு தெருக்களில் வைக்கப்பட்டிருந்தன. விமான நிலையத்திலும்கூட ஒரு கடை — வெளிநாட்டிலிருந்து வருகிறவர்கள் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களை வாங்கிப் போக வசதியாக.

    வியாபாரம் பெருகியது. ஆனாலும், பெரும் லாபம் வைத்து விற்கும் பேராசை கொள்ளாததால் நிலைத்திருக்க முடிந்தது.

    குடும்பத்தில் முன்னேற்றம்

    `கணவர் சொல்வதையோ, செய்வதையோ மறுத்துப் பேசினாலோ, குற்றம் கண்டுபிடித்தாலோதானே சண்டை வரும்!’ என்று நடக்கும் பெண்களின் குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலைக்கலாம். ஆனால், மகிழ்ச்சி?

    கோலாலம்பூரில், சில ஆண்டுகளுக்குமுன், வங்கியிலிருக்கும் ATM-இல் பணம் எடுக்குமுன், `உங்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்துங்கள்!’ என்ற அறிவுரை காணப்பட்டது.

    குழந்தைகளின் அத்தியாவசியத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதுடன் தம் கடமை தீர்ந்துவிட்டது என்றெண்ணி, பெரும்பாலான பெற்றோர் நடப்பதை மறைமுகமாகக் குத்திக் காட்டும் முயற்சி இது.

    அண்மையில், தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க அதிகம் வெளியே செல்லமுடியாத நிலையில், வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதே! இதனாலும், சில நன்மைகள் விளையாமல் இல்லை.

    `என் குழந்தைகளுடன் பொழுதைக் கழிப்பது எவ்வளவு மகிழ்ச்சிகரமான விஷயம் என்று இப்போதுதான் புரிந்துகொண்டேன்!’ என்று பலரும் கூறியிருப்பதாகச் செய்திகள் வந்தன.

    தம் விருப்பு வெறுப்பைப் புரிந்து பெற்றோர் அன்பாக நடந்தால்தானே குழந்தைகள் நன்கு முன்னேறுவார்கள்?

    உடல்நிலையில் முன்னேற்றம்

    `வயதாகிவிட்டது! இனி என்ன!’

    “பள்ளி நாட்களில், உடல் சம்பந்தமான கல்வி எதுவாக இருந்தாலும், அதிலிருந்து எப்படித் தப்புவது என்றே சமயம் பார்த்துக்கொண்டிருப்பேன்!”

    `நிமிர்ந்து நடப்பது விமானப் பணிப்பெண்களுக்குத்தான் அவசியம்!’

    இப்படியெல்லாம் விதண்டாவாதம் புரிகிறவர்கள் உடலை மட்டும் அலட்சியம் செய்வதில்லை. உடற்கட்டுடன் ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் இழந்துவிடுகிறார்கள். அதனால், சிரிப்பும் பறிபோய்விடுகிறது.

    இருபது வயதிலிருந்ததுபோல் என்றும் இளமையாகத் தோற்றம் அளிக்க முடியாவிட்டாலும், அறுபது வயதில் எழுபது வயதுக்காரர்போல் முதுமையை அடைய வேண்டுமா?

    தொண்ணூறு வயதை எட்டிக்கொண்டிருக்கும் மிஸஸ் லீ தன்னைவிடச் சற்றே இளைய பெண்மணிகளுடன் அவர்கள் வீட்டருகே இருக்கும் பூங்காவில் ஒவ்வொரு காலையும் ஒருவித உடற்பயிற்சி செய்வதைப் பார்க்கிறேன்.

    இவர்கள், `வயதாகிவிட்டதே! முன்போல் எதுவும் செய்ய முடியவில்லையே!’ என்று அலுத்துக்கொள்வதில்லை. ஏனெனில், தங்களால் முடிந்தவரை உழைக்கிறார்கள்.

    `ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி இருக்கிறதே!’ என்ற அலுப்பு கிடையாது. அத்துடன், பிறருடன் பேசிப் பழகுவதால், குருட்டு யோசனையில் மனம் போகாது.

    கடந்த இருபத்தைந்து வருடங்களாக, அரைமணி நேரம் தொடரும் நிகழ்ச்சி இது.

    `பயிற்சிக்கு அரைமணி போதுமா? இரண்டு மணி நேரம் பண்ணினால், இன்னும் பலன் கிடைக்குமே!’

    வயதை மறந்து, இப்படி நினைத்துச் செய்தால், உடல்வலியால் பல நாட்கள் ஓய்வெடுக்க வேண்டியிருக்கும்.

    பரீட்சைக்கு முதலிரவு முழுவதும் தூங்காது படித்துவிட்டு, மறுநாள் பரீட்சை எழுதும்போது எதுவுமே நினைவுக்கு வராமல், அல்லது தலைவலியுடன் தவிப்பதுபோல்தான்!

    `பரீட்சைக்கு முதல்நாள் இரவு முழுவதும் நான் கண்விழித்துப் படித்தேன். ஆனாலும், ஏனோ பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியவில்லை!’ என்று சில மாணவிகள் குழம்புவார்கள்.

    இதைத் தடுக்கத்தான் சில பள்ளிகளில் TEST என்று, அடிக்கடி பரிசோதனை செய்வார்கள். அவ்வப்போது, சிறுகச் சிறுகப் படித்தால், மன இறுக்கம் இருக்காது.

    நான் படித்த பள்ளியில், வாராந்தரப் பரிசோதனை, மாதாந்தரப் பரிசோதனை, கால், அரை, முழுப் பரீட்சை என்று வருடம் முழுவதுமே வைத்திருந்ததில், இறுதிப் பரீட்சைக்கு ஒரு மாதம் முன்பே, `எல்லாம் எளிதுதான். எத்தனை முறை படித்திருக்கிறோம்!’ என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிடும்.

    மாறாக, குறுகிய காலத்தில் மிகுந்த பிரயாசையுடன் ஒரு காரியத்தில் ஈடுபடுவது களைப்பையும் சலிப்பையும்தான் உண்டாக்கும். அப்புறம் முன்னேறுவது எங்கே!

    Share
  • பழகத்தெரிய வேணும் – 87

    பழகத்தெரிய வேணும் – 87

    நிர்மலா ராகவன்

    அச்சம்தான் வெற்றிக்கு முதற்படி

    பொறுக்கமுடியாத சந்தர்ப்பங்களில் மனிதர்கள் இரு விதமாக நடப்பதுண்டு – எதிர்த்துப் போராடுவது, இல்லையேல் அங்கிருந்து தப்பி ஓடிவிடுவது (FIGHT OR FLIGHT).

    அச்சம் அளவுக்கு மிஞ்சினால், இவற்றில் ஒன்றைக்கூடச் செய்ய இயலாது, பயந்து நிற்க நேரிடும்.

    `பிறர் என்ன சொல்வார்களோ!’ என்ற பயம் சிறுவயதிலிருந்தே நம்முள் விதைக்கப்பட்டுவிடுகிறது.

    அதற்குப் பதில், `பிறர் பாராட்டும்படியாக, துணிந்து ஏதாவது செய்!’ என்று தூண்டியிருக்கலாம்.

    எது தவறு?

    `தவறு செய்துவிடுவோமோ?’ என்று பயந்தே காலங்கழிப்பதுதான் தவறு.

    வாழ்க்கை எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. மாறிக்கொண்டே இருக்கும். இது புரியாது, அல்லது அஞ்சி, ஒத்துக்கொள்ள விரும்பாது, பழைமையிலேயே ஊறிக்கிடந்தால் அப்படி இருப்பவருக்கு மட்டுமல்லாது, அவரது குடும்பத்துக்கும் துன்பம்தான்.

    துணிந்து செய்

    எல்லா அனுபவங்களும் நல்லவிதமாக முடியும் என்பதல்ல. ஆனாலும், ஏதாவது நன்மை விளையக்கூடும்.

    நாம் எதற்கு அஞ்சுகிறோமோ, அதைச் செய்துபார்ப்பதுதான் அச்சத்தை வெல்லும் வழி.

    கதை

    நான் நீச்சல் பழக ஆரம்பித்து இரு மாதங்களுக்குப்பின், எதிர்த்திசையில் கண்களை மூடிக்கொண்டு நீச்சலடித்தவரால் அடிவாங்கி, தண்ணீருக்கு அடியில் போனேன். சில நிமிடங்கள் மேலே வரத்தெரியாது திணறினேன். (நெடுநேரமென்றுதான் அப்போது அடைந்த கலவரத்தில் தோன்றியது).

    ஒரு கரம் என்னை மேலே இழுத்து, கரை சேர்த்தது. (நீச்சல் காவலர் அதற்கென்றே நியமிக்கப்பட்டிருந்தார்).

    கவனித்துக்கொண்டிருந்த ஒரு சீனர், “உடனே நீங்கள் பயத்தை வெல்லவேண்டும்,” என்று அழுத்தமாகக் கூறினார்.

    ஒரு பெண்மணி, “என்னையும் இப்படித்தான் ஒருமுறை காப்பாற்றினார்கள்,” என்று அசட்டுச்சிரிப்புடன் ஒத்துக்கொண்டாள்.

    எதையாவது கற்கவேண்டுமென்றால், துணிச்சல் மிக அவசியம். `புதிய அனுபவம் எப்படி இருக்கும்?’ என்ற ஆர்வத்தை வளர்த்துக்கொள்பவர்களை அச்சம் தொடராது.

    “நீங்கள் மூச்சைப் பெரிதாக இழுத்துக்கொண்டு தண்ணீரின் அடியில் போய், பிறகு எம்பி, நீந்துவதுபோல் கைகளையும் கால்களையும் ஆட்டியபடி மேலே வாருங்கள். மேலே வந்ததும் மூச்சை விடலாம்,” என்று சொல்லிக்கொடுத்தார்.

    நான் தயங்கியபோது, “உங்களால் முடியாவிட்டால், நான் தூக்கிவிடுகிறேன்,” என்று பலமளிக்க, துணிந்து அவர் சொற்படி செய்தேன். அவர் உதவி தேவைப்படவில்லை.

    நான் கரையேறியதும், அவர் பெரிதாகச் சிரித்தார். “நீங்கள் முழுகவே மாட்டீர்கள். எவ்வளவு நேரம் மூச்சைப் பிடித்துக்கொண்டிருந்தீர்கள்!”

    `முடியாது’ என்று நினைத்ததைச் செய்துவிட்ட பெருமை அப்போது எழவில்லை. களைப்புதான் மிகுந்தது.

    வீடு திரும்பியதும், நடந்ததை என் பெண்களிடம் கூற, தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்: “நாங்கள் (ஏழு வயதில்) நீச்சல் கற்கும்போது, மாஸ்டர் எங்களை இருபது அடி உயரத்திலிருந்து தண்ணீரில் பிடித்துத் தள்ளிவிடுவார். தத்தளித்தபடி மேலே வந்துவிடுவோம். அதன்பின் பயம் இருந்தால், பால் கலக்காத சூடான காப்பி குடிக்கவேண்டும்”.

    (மூன்று மாதங்களே ஆன குழந்தையை ஆழமான தண்ணீர் தொட்டிக்குள் விட்டால், மேலே வந்துவிடும். தாயின் கருப்பையில் நீந்திய நினைவு அதற்கு மறக்கவில்லை).

    பாதுகாப்பு

    பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டதும், அம்மாவின் புடவையை இறுகப் பற்றிக்கொண்டு, சில குழந்தைகள் அழுது ஆர்ப்பாட்டம் செய்வதுண்டு. பழகிவிட்டால், `டீச்சர் திட்டினாலும், வீட்டுப்பாடம் கொடுத்தாலும் போகிறது, பள்ளிக்கூடத்தில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்களே!’ என்று பிடித்துப்போய்விடும்.

    அதேபோல், திருமணமாகி, முதன்முறையாகப் புக்ககம் செல்லும் பெண்களும் அழுவார்கள். `இதுதான் தாம்பத்தியம்,’ என்று புரியும்போது, பயம் விலகிவிடும்.

    பழகிப்போன சூழ்நிலையை மாற்றினால், வேறொரு இடத்தில் எப்படி இருக்குமோ என்ற அச்சம்தான் எல்லாவற்றிற்கும் காரணம்.

    இதே காரணத்தால்தான் பொறுக்கமுடியாத தாம்பத்தியம் அமைந்தாலும், அதைவிட்டு விலகத் துணியமாட்டார்கள் சில பெண்கள்.

    மரண பயம்

    வயது முதிர்ந்த நிலையில், படுக்கையிலேயே காலம் கழிக்கவேண்டிய நிலை ஒரு பெண்மணிக்கு. இறக்கப்போகிறோம் என்று சந்தேகமறத் தெரியும். ஆனாலும், இவ்வுலகைவிட்டு நீங்கியபின் என்ன ஆகுமோ என்ற பயம்.

    “உயிர் பிரியும் தறுவாயில் உங்களுக்குப் பிடித்தவர்கள் எல்லாரையும் மீண்டும் பார்க்கமுடியும்,” என்று ஆறுதல் கூறினேன்.

    பலமுறை விளக்கம் கேட்டார்.

    இறக்கும் தறுவாயில், என்றோ மாண்டுபோன பெற்றோர், சகோதர சகோதரியர் ஆகியோர் அவர் கண்ணுக்குத் தெரிவார்கள், அவரை வரவேற்பார்கள் என்று நான் எப்போதோ படித்ததை எடுத்துச்சொன்னேன்.

    இறுகியிருந்த முகத்தில் மலர்ச்சி. ஒரு வாரத்திற்குப்பின், தூக்கத்திலேயே மரணத்தைத் தழுவிக்கொண்டார்.

    அச்சம் தன்னம்பிக்கையின் வித்து

    மேடையில் உரையாற்றவோ, பாடவோ, நடிக்கவோ வருகிறவர்கள் எத்தனைமுறை அப்படிச் செய்திருந்தாலும், ஆரம்பிக்குமுன் சிறிது படபடப்பாக உணர்வார்கள். அந்த அச்சத்தை எதிர்கொள்ளும்போது தன்னம்பிக்கையும் கூடிக்கொண்டேபோகும்.

    எதையாவது கற்கும்போது ஆர்வத்துடன் ஆரம்பித்தாலும், போகப் போக, `இதற்கொரு எல்லையே கிடையாதா!’ என்ற மலைப்பும், பயமும் எழும். அரைகுறையாக நிறுத்திக்கொள்ளத் தோன்றிவிடும்.

    இசை, நாட்டியம், அல்லது வேறு எந்தத் துறையிலுமே கரைகாண்பது என்பது நடக்காத காரியம். இது புரிந்து, சிறுகச் சிறுக முயற்சிக்க, பயமும் போய்விடும். பயம்தான் கனவுகளின் எதிரி என்பார்கள்.

    அச்சுறுத்துகிறவர்கள்

    நம்மைக் கண்டு பயப்படுகிறவர்கள் தம் உணர்ச்சியை நம் பக்கம் தள்ளிவிட முனைகிறார்கள். அது புரிந்து, நாம் பயப்படாவிட்டால், அவர்களுடைய அச்சம் அதிகரித்துவிடும். சுவரில் வீசிய பந்துபோல்தான்.

    பெண்களிடம் முறைதவறி நடக்க முயலும் ஆண்களுக்கு இந்த விளக்கம் பொருந்தும்.

    அழகு, செல்வம், அறிவு — இப்படி ஏதோ ஒரு விதத்தில் தன்னைவிட உயர்ந்த நிலையில் ஒரு பெண் இருக்கிறாள் என்று கருதினால், துரத்தாத குறையாக, அவளை நெருங்க பெருமுயற்சிகள் எடுப்பார்கள். அவள் வயது ஒரு பொருட்டில்லை. அப்போது அவள் அடையும் அச்சம் அவர்களுக்கு வெற்றி.

    அந்தப் பெண் எதிர்த்துப் பயனில்லை. பொதுவாகவே, பெண்கள் சொல்வதும் செய்வதும் எதிர் எதிராக இருக்கும் என்று தப்புக்கணக்கு போட்டுவிடுவார்கள்.

    முதலில் பெண்ணுக்குச் சிறிது பயம் ஏற்பட்டாலும், துணிச்சலுடன் அதை எதிர்கொண்டால், அவமானம் அந்த ஆண்களுக்கு.

    பயத்துடன் கோபமும் உடன்வரும்.

    வேகமாக வரும் காரின் குறுக்கே ஒருவர் நடந்தால், காரோட்டிக்குக் கோபம் எழும்.

    ஏன் கோபம்? விபத்து நடந்துவிடுமே என்ற பயம்தான் கோபமாக மாறுகிறது.

    எதற்காவது பயந்து, அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தால், கோபம் அதிகரித்துக்கொண்டே போகிறது. அப்போது ஏற்படும் மன இறுக்கம் உடல்நிலையைப் பாதித்துவிடுமே!

    என்ன பயம் வேண்டியிருக்கிறது!

    நம்மை நாமே உணர ஒரு வழி இது.

    தன்னால் ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை ஒருவருக்கு இருந்தால், `பிறர் என்ன சொல்வார்களோ!’ என்ற தயக்கமோ, `தோல்வியடைந்தால் அவமானம்!’ என்ற எண்ணமோ எழாது.

    துணுக்கு

    எனக்கு என்னென்னவோ சாதிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், பயம் குறுக்கே வந்நது எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது.

    என்ன பயம்?

    தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயம்தான்!

    போட்டிகளிலோ, விளையாட்டுகளிலோ பங்கெடுத்துக்கொள்பவர்களில் எத்தனைபேர் முதலிடத்தைப் பிடிக்கிறார்கள்?

    அப்படி இல்லாதவர்கள் தோல்வி அடைந்தவர்கள் அல்லர். பங்கெடுத்துக்கொள்ளவாவது துணிந்தார்களே!

    தமிழ்ப்படங்களிலிருந்து பாடம்

    அண்மையில் வெளியான கர்ணன், அசுரன் போன்ற திரைப்படங்களில், சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களைப்பற்றிக் காட்டுகிறார்கள்.

    வயது முதிர்ந்தவர்கள் தமக்கு நியாயம் கிடைக்காது என்ற அச்சத்திலேயே தழைந்துபோய்விடுகிறார்கள்.

    இளவயதினரோ, காலம் காலமாகத் தம்மை இந்த நிலையிலேயே இருக்கச் செய்யும் மேட்டுக்குடியினரைத் துணிச்சலுடன் எதிர்க்கிறார்கள். துன்பம் அனுபவித்தாலும், மனம் தளர்வதில்லை.

    இறுதியில், கல்வியால்தான் ஒரு சமூகம் உயரமுடியும் என்று உணர்கிறார்கள். அதற்கும் எதிர்ப்பு. ஆனால், பலரும் இணைந்து எதிர்த்தால், வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்ற பாடம் புகட்டப்படுகிறது.

    பயம் இயற்கையான உணர்வுதான். ஆனால், அதை எதிர்கொள்ளும்போதுதான் வாழ ஆரம்பிக்கிறோம்.

    Share
  • குழந்தைகள் அடம்பிடித்தால் | நிர்மலா ராகவன்

    குழந்தைகள் அடம்பிடித்தால் | நிர்மலா ராகவன்

    குழந்தைகள் அடம்பிடித்தால் என்ன செய்வது? அவர்களை அவர்கள் போக்கில் விட்டால் என்ன ஆகும்? மிக முக்கியமான ஆலோசனையை வழங்குகிறார் நிர்மலா ராகவன், இந்த உரையாடலைப் பார்த்துப் பயன்பெறுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கூட்டுக் குடும்பத்தில் அமைதி நிலவ | நிர்மலா ராகவன்

    கூட்டுக் குடும்பத்தில் அமைதி நிலவ | நிர்மலா ராகவன்

    இன்று இரண்டு பேர் சேர்ந்து வாழ்வதே கூட்டுக் குடும்பம்தான் என ஒரு நகைச்சுவைத் துணுக்கு உண்டு, இந்தக் கூட்டுக் குடும்பத்தில் அமைதி நிலவ என்ன செய்ய வேண்டும்? மிக முக்கியமான ஆலோசனையை வழங்கியுள்ளார் நிர்மலா ராகவன், இந்த உரையாடலைப் பார்த்துப் பயன்பெறுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    உங்கள் குடும்பத்தில் அல்லது உங்கள் நண்பர்கள் குடும்பத்தில் ஏதும் சிக்கல் இருந்தால், நீங்கள் அதுகுறித்து நிர்மலா ராகவனிடம் இலவச ஆலோசனை பெறலாம். உங்கள் கேள்விகளை இந்தப் பதிவிற்கு மறுமொழியாக இடலாம். அல்லது, annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகட்டும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சுவரில் வீசிய பந்து (சிறுகதை)

    சுவரில் வீசிய பந்து (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    கதிரவன். அது பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயரில்லை. ஆனால், எழுத்துத்துறையில் கம்பீரமாக இருக்கவேண்டாமா என்று யோசித்து, அவர் தானே தன்னை நாமகரணம் செய்துகொண்டார்.

    முதலில் வருந்திய பெற்றோரும், அவர் ஒரு தினசரியின் ஞாயிறு பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றபின், `எல்லாம் அந்தப் பெயரோட ராசி! சும்மாவா? சூரியனில்ல!’ என்று பெருமைபேச ஆரம்பித்தார்கள்.

    அண்ணனுக்கு அந்தப் பெயரால்தான் வாழ்க்கையில் முன்னேற முடிந்தது என்று நம்பிய கதிரவனுடைய தம்பி பகலவனாக மாறினார்.

    “எதுக்கு அவசரமா வரச்சொன்னே?” என்று கேட்ட அண்ணனிடம் அழமாட்டாக்குறையாகச் சொல்ல ஆரம்பித்தார் பகலவன். “நான் பத்திரிகை ஆரம்பிச்சப்போ நீங்கதானே சொன்னீங்க, `நம்ப மக்களுக்கு நிறைய சினிமா செய்தி குடுடா. படம் பாத்துக்கிட்டிருந்தா, அவங்களுக்குச் சோறு தண்ணிகூட வேணாம்’னு?”

    “அதுக்கென்ன இப்போ? பத்திரிகை நல்லாத்தானே ஓடுது?”

    “இப்போ, ஆறு மாசமா, ரொம்ப நஷ்டம். எல்லாம் அந்தத் தாமரை பத்திரிகையால வந்த வினை!” பொருமினார் தம்பி.

    “காலேஜில படிச்சுக்குடுத்தவன் எவனோ ஆரம்பிச்சிருக்கானாம்!” அவர் குரலில் ஏளனம். “வேலையத்த வேலை! அவன் போடற குப்பையையெல்லாம் யார் படிப்பாங்க!”

    அண்ணன்-தம்பி இருவரும் மலேசிய ரப்பர் தோட்டப்புறங்களில் வளர்ந்தவர்கள். தமிழில் ஆரம்பக்கல்வி கற்றதோடு சரி. மெத்தப் படித்தவர்களைக் கண்டால் உள்ளுர பயம், வெளியில் அலட்சியம்.

    “நானும் அப்படித்தான் நினைச்சு சும்மா இருந்துட்டேன். இப்போ, அவன் போடற கதைங்க, விஷயங்களெல்லாம் சுவாரசியமா இருக்கு, நாலு விஷயம் தெரிஞ்சுக்கலாம்னு எல்லாரும் அதைத்தான் வாங்கிப் படிக்கறாங்க. நம்ப பத்திரிகை கடைங்கள்லே அப்படியே தொங்கிட்டுக் கிடக்கு!”

    கதிரவன் யோசனையில் ஆழ்ந்தார். சிறிது பொறுத்து, “அந்த ரோசாவோ, என்ன எழவோ, விக்காம செய்துட்டா?”

    “தாமரை!” என்று மெல்லிய குரலில் திருத்திய பகலவன், “வாங்கறவங்க கையைப் பிடிச்சு தடுக்கவா முடியும்?” என்றார் நிராசையுடன்.

    “எதை எப்படிச் செய்யணும்கிறதை எங்கிட்ட விடு!”

    அடுத்த வாரமே கதிரவனுடைய தினசரியில்  வெளியாகியிருந்தது அச்செய்தி: “நமது சகோதரரான ஞாயிறு பத்திரிகை ஆசிரியர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அன்னாரது குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதை ஒட்டி, இன்று மாலை நாம் ஏற்பாடு செய்திருக்கும் இரங்கல் கூட்டத்திற்கு இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் திரண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்”.

    ஞானி (உண்மைப்பெயரில்லை) அதிர்ந்தேபோனான். பதினாறு வயதில், நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் ஆசையுடன் தலைநகருக்கு வந்திருந்தவன் அவன்.

    திசை தெரியாது விழித்துக்கொண்டிருந்தவனை, “தமிழில எழுதப் படிக்கத் தெரியும்தானே? எங்கிட்ட வேலைக்கு சேர்ந்துக்க,” என்றவாறு அடைக்கலம் கொடுத்தார் கதிரவன். அவரைத் தன் தெய்வமாகவே அவன் மதித்து நடந்துகொண்டதில் வியப்பேதுமில்லை.

    இப்போதோ, சுயதலத்திற்காக வன்முறையைப் பயன்படுத்தியிருந்த அவருடைய போக்கு அவனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    “என்னங்க ஐயா, இப்படிச் செய்துட்டீங்களே!” என்று குழம்பியவனிடம், “நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா, எதுவும் தப்பில்ல,” சினிமா வசனத்தை எடுத்துக்கூறினார் கதிரவன். “அந்த நாலு பேத்தில நாம்பளும் ஒத்தங்க!”

    குருவின் இந்த உபதேசத்தால், ஒரு வழியாக உலகம் புரிவதுபோல் இருந்தது ஞானிக்கு.

    அதன்பின் `தாமரை’ முடங்கிப்போக, வாசகர்கள் மீண்டும் திரைப்படச் செய்திகளுக்கும், அரைகுறை ஆடை அணிந்த நடிகைகளின் படங்களுக்கும் தாவினர்.

    “நீங்க மந்திரியா இருக்கவேண்டியவங்கண்ணா!” என்று நன்றிப்பெருக்குடன் பகலவன் கூறியபோது, ஞானியும் அதை ஆமோதித்துத் தலையாட்டினான்.

    தம்பியின் மகிழ்ச்சி நிலைக்கவில்லை.

    “வியாபாரம் படுத்துப்போச்சுண்ணே. எல்லாப் பயலுவளும் ஹேண்ட்போன் வெச்சிருக்கானுங்க!” தான் வெளியிட்ட செய்திகள் கையிலேயே கிடைத்துவிட்டதால் யாரும் தன் பத்திரிகையை வாங்கப் பிரியப்படவில்லை என்ற கோபம் பகலவனது குரலில் வெளிப்பட்டது.

    “பேசாம, அதை மூடிட்டு, எங்கிட்ட சேர்ந்துக்க,” என்று ஆறுதல் கூறினார் கதிரவன். “அந்தப் பய ஞானிக்கு ஒழுங்கா தமிழ் எழுதத் தெரியல. நான் திரும்ப எல்லாத்தையும் திருத்தி எழுத வேண்டியிருக்கு! ஆனா, நாய்மாதிரி என் பின்னாலேயே வரான், பாவம்!”

    அதைக் கேட்டுவிட்ட ஞானியின் மனம் கொதித்தது.

    நாயா?! இருபது வருடங்கள்! எத்தனை முறை வயிற்றைக் காயப்போட்டு, மாடாக உழைத்தோம்!

    “தம்பி, டேய்! இப்பல்லாம் என் ஒடம்பு முந்திமாதிரி இல்ல. வயிறு என்னமோ பலூன்கணக்கா உப்பிக்கிட்டே போகுது,” என்று முனகினார் கதிரவன்.

    “டாக்டர் என்ன சொல்றாரு?”

    “குடியைக் குறைச்சுங்கங்கிறாரு. நான் என்னிக்குடா அந்தக் கருமத்தைத் தொட்டிருக்கேன்?”

    நடந்தால் வயிறு குறையுமோ என்ற நப்பாசையுடன் ஒருநாள் சாயங்காலம் உலவப்போனார் கதிரவன்.

    திரும்பும் வழியில் ஓரடிகூட எடுத்துவைக்க முடியாமல் போக, டாக்ஸி ஒன்றை நிறுத்தி, அதில் ஏறிக்கொண்டார்.

    அந்த வாகன ஓட்டியான மலாய்க்காரர் தன் பயணியின் முகத்தில் தெரிந்த வேதனையையும் அவருடைய பருத்த வயிற்றையும் பார்த்து ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.

    “இஞ்சே (INCHE — மலாயில் ஐயா)! ஒங்களுக்கு எதிரி யாராவது இருக்காங்களா?”

    “நான் பெரிய சம்பளக்காரனில்ல. எனக்கு எதிரிங்க யாரு இருக்கப்போறாங்க?” என்று அசிரத்தையாகச் சொன்னாலும், சொல்லத்தெரியாத பயம் எழுந்தது.

    “ஒங்களுக்கு யாரோ செய்வினை செஞ்சிருக்காங்க — போமோகிட்ட போய்!” அழுத்தந்திருத்தமாக வந்தது குரல்.

    போமோ (BOMOH)!

    அவரைப்பற்றித் தான் அறிந்ததையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டார் கதிரவன்.

    கிராமப்புற மருத்துவர் என்று அறியப்பட்ட மலாய் மாந்திரீகர். மருத்துவர் என்ற பெயருக்கு ஏற்றபடி, வருகிறவர்களின் நோய்களைக் குணப்படுத்துவார்.

    அத்துடன் நில்லாது, அவர்களுக்கு வேண்டாதவர்களுக்கு நோய்களையோ, ஏன், மரணத்தையோகூட உண்டாக்கும் வலிமை படைத்தவர்.

    ஒருவரது தலைமுடியை வைத்துக்கொண்டே அவருக்குத் தீமை விளைவிக்க முடியும் என்பதால்தானே, அழகுநிலையத்திற்குப் போகும் மலாய்ப்பெண்கள் வெட்டப்பட்ட தங்கள் தலைமுடியில் ஓரிழைகூட விடாது சேகரித்துக்கொண்டு வந்து, பூமிக்கு அடியில் புதைத்துவிடுகிறார்கள்!

    ஒருமுறை, போமோ ஒருவரைப் பேட்டி கண்டபோது, “ஒருத்தர் மூளை கலங்கச்செய்ய அவர் வீட்டு வெளியில இருக்கிற கதவிலே நூத்துக்கணக்கான பாம்புங்க நெளியறமாதிரி பிரமை உண்டாக்க எங்களுக்குப் படிச்சுக்குடுத்திருக்காங்க!” என்று கதிரவனிடம் ரகசியக் குரலில் கூறினார். ”செவத்திலே எறியற பந்து திரும்பி நம்பமேலேயே வந்து விழறமாதிரி, கெட்டது பண்ணினாலும் அப்படித்தான், இல்லீங்களா? அதனால, நான் அந்த பக்கமே போறதில்லே”.

    பக்கத்திலிருந்தவரின் உணர்ச்சிகளைக் கவனிக்காது, தன் அறிவைப் பறைசாற்றிக்கொள்வதுபோல், காரோட்டி தன்பாட்டில் பேசிக்கொண்டேபோனார்: “நமக்குப் பிடிக்காத ஒருத்தர் சாக, அவர் வயிறு பெருத்துக்கிட்டே போகச் செய்வாங்க. அதுக்குப் பேரு..”.

    “எப்படி மாத்தறது?” ஈனஸ்வரத்தில் கேட்டார் கதிரவன்.

    “கஷ்டம். சூனியம் போட்டவரால மட்டும்தான் அது முடியும். யாருன்னு எங்கே போய் தேடறது!”

    தான் மரணத்தின் வாயிலில் இருக்கிறோம் என்று சந்தேகமறப் புரிந்தவுடன், எதிலும் பற்று இல்லாது போயிற்று கதிரவனுக்கு.

    அவர் படுத்த படுக்கையாக இருந்தபோது, தான் விடாது, சுவரில் பந்து எறிவதுபோலவும், அது திரும்பி வந்து தன்னையே தாக்குவதுபோலும் தோன்றிக்கொண்டே இருக்க, “தம்பி, தாமரை” என்று பிதற்ற ஆரம்பித்தார்.

    கூடை நிறைய பழங்களுடன் அவரைப் பார்க்க வந்த ஞானியின் உடலில் புதிய மெருகு ஏறியிருப்பது அவ்வளவு கலங்கிய நிலையிலும் அவர் கண்களுக்குத் தப்பவில்லை.

    “நீங்க இருந்த எடத்திலே என்னைப் போட்டிருக்காங்க. எல்லாம் ஒங்க ஆசிதான்! சீக்கிரமே ஒடம்பு நல்லாகி, வந்துடுங்க ஐயா!” என்ற அவனுடைய போலிப்பணிவும் கரிசனமும் நன்றாகவே புரிந்தது.

    விரைவிலேயே, `எனது ஆசான்’ என்ற தலைப்பின்கீழ் அவரது மரணச்செய்தியை ஒரு பக்கத்தில் வெளியிட்டிருந்தான் ஞானி. கூடவே, ஒரு கண்ணீர்க்கவிதை வேறு!

    அவரது அகால மரணத்திற்கு, `மாரடைப்பு, குடிப்பழக்கம், மன இறுக்கம்’ என்று ஏதேதோ காரணங்கள் கற்பிக்கப்பட்டன.

    ஆனால், கதிரவனுக்கு மட்டும் தெரிந்திருந்தது துரோகம் செய்தது யாரென்று. `நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா, எதுவும் தப்பில்ல. அந்த நாலு பேத்தில நாம்பளும் ஒத்தங்க!’ என்று அவனுக்குப் போதித்ததே அவர்தானே!

    அதனால்தான், இறக்கும் தறுவாயில் அவர் இதழில் ஒரு சிறு புன்னகை நெளிந்திருந்ததோ?

    Share
  • மாமியார் Vs மருமகள் | நிர்மலா ராகவன்

    மாமியார் Vs மருமகள் | நிர்மலா ராகவன்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே நிகழும் சண்டைகள் குறித்து நிறையப் படித்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம். எப்படிச் சண்டை ஆரம்பிக்கிறது? இதில் கணவன் என்ன செய்ய வேண்டும்? சண்டையைத் தீர்ப்பது எப்படி? தவிர்ப்பது எப்படி? ஆலோசனை வழங்குகிறார் எழுத்தாளர் நிர்மலா ராகவன்.

    உங்கள் குடும்பத்தில் அல்லது உங்கள் நண்பர்கள் குடும்பத்தில் ஏதும் சிக்கல் இருந்தால், நீங்கள் அதுகுறித்து நிர்மலா ராகவனிடம் இலவச ஆலோசனை பெறலாம். உங்கள் கேள்விகளை இந்தப் பதிவிற்கு மறுமொழியாக இடலாம். அல்லது, annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 86

    பழகத் தெரிய வேணும் – 86

    நிர்மலா ராகவன்

    சாமான்களை எடைபோடலாம், மனிதரை அல்ல

    “அவன் மகா கஞ்சன்!”

    “சிடுமூஞ்சி!”

    இவ்வாறு, பார்ப்பவர்களையெல்லாம் தாறுமாறாக எடைபோடுவது மனிதனுடன் பிறந்த குணமென்றே நினைக்கத் தோன்றுகிறது.

    பிறர் ஏன் அப்படி இருக்கிறார்கள் என்று சற்றே யோசித்தால், மனம்போனபடி பழிக்கத் தோன்றாது.

    ஏன் கஞ்சத்தனம்?

    இப்படி யோசிக்கலாமே! கருமித்தனமாக இருப்பவருக்குக் குழந்தைகள் இல்லை. இறுதிக்காலத்தில் யாரை நாடுவது என்ற பயத்தில், இயன்றவரை சேமித்துவைக்கிறார்.

    நீண்ட காலம் நெருங்கிப் பழகியபின்னரும் ஒருவரை முழுமையாகப் புரிந்துகொள்வது இயலாத காரியம்.

    அப்படியிருக்க, சில நிமிடங்களே பழகிவிட்டு, ஒருவரைக் குறைகூறுவது என்ன நியாயம்?

    பலவிதமான சூழ்நிலைகளில் அவர் எப்படி நடந்துகொள்கிறார் என்று கவனித்தால்தான் ஒருவரது குணத்தைப் புரிந்துகொள்ளலாம்.

    கதை

    எங்களுக்குத் தெரிந்த ஒரு கடைக்காரரின் முகம் எப்போதும் கடுகடுவென்று இருக்கும். இசை சம்பந்தமான சாமான்கள் அவர் கடையில்தான் கிடைத்ததால், போகவேண்டிய நிலைமை.

    பல வருடங்கள் பழகியபின்னர், `இவர் முகத்தில் சிரிப்பே கிடையாது. வியாபாரம் நன்றாகத்தானே நடக்கிறது!’ என்று எங்களுக்குள் சொல்லிக்கொள்வோம்.

    ஒரு நாள் தினசரியைப் பார்த்தபோது, அவரது மரணச்செய்தியை அறிய நேரிட்டது. `நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்,’ என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

    எங்களுக்கு மிகுந்த குற்ற உணர்வு ஏற்பட்டது.

    தான் இறக்கப்போகிறோம் என்று புரிந்துதான் சிரிப்பை இழந்தாரா? அல்லது, தீராத உடல்நோவினாலா?

    தெரிந்தவரோ, தெரியாதவரோ, எவரைப் பார்த்தாலும், அவரவர் பின்னணியைப் பொறுத்து ஏதாவது அபிப்ராயம் எழும். இது இயற்கை. ஆனால், அதை உரக்க வெளியிடாது, கவனிப்பதுடன் நிறுத்திக் கொண்டிருக்கலாமே என்று தோன்றியது.

    `நாம் அவரைவிட மேலானவர்!’ என்ற அற்பதிருப்தி எழ அப்படிச் செய்கிறோமோ?

    நாம் மட்டும் குற்றமற்றவரா?

    எதற்காகப் பிறரிடம் குற்றம் கண்டுபிடிப்பது?

    சிலரைப் பார்த்தவுடன் உடனே நல்ல அபிப்ராயம் எழுகிறது.

    “அவர் ரொம்ப நல்லமாதிரி. எல்லாரிடமும் அருமையாகப் பழகுவார்!”

    எப்போதும் சிரித்த முகத்துடன், கலகலப்பாகப் பழகுவதால் ஒருவர் நல்லவராகிவிடுவாரா? நாம் அவரை நல்லவிதமாக நினைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அத்தகைய பிம்பத்தை உண்டாக்குகிறாரோ, என்னவோ!

    விமானப் பணிப்பெண்கள் எப்போதும் தம் முகத்தில் புன்னகையைத் தவழ விட்டுக்கொண்டு இருப்பார்கள். அதற்கான காரணத்தை ஒரு ஆண் பணியாளர் என்னிடம் கூறியது: “சிலர் விமானத்தில் பயணிப்பதற்குப் பல வருடங்களாகச் சேமிப்பார்கள். தம்மை உயர்வாக எண்ணிக்கொண்டு, எங்களிடம் அதிகாரமாக நடப்பார்கள். அது புரிந்து, நாங்களும் சிரிப்பு மாறாது நடந்துகொள்வோம்!”

    கதை

    விருந்தினராக உறவினர் ஒருவர் வீட்டுக்குப் போய், ஒரே ஒரு நாள் தங்கியிருந்தாள் சியாமளா.

    அந்த இல்லத்தரசி, பார்கவி, கணவரையும் அவருடைய தாயையும் மதிப்பதேயில்லை என்று மற்ற உறவினர்களிடம் கதை கதையாகச் சொன்னாள்.

    ஓயாமல் பிறரைப் பற்றித் தாறுமாறாகப் பேசுகிறவர், தன்னைப் பற்றியும் யாராவது அப்படிப் பேசுவார்களா என்று யோசிப்பதில்லை.

    நான் அவளுடைய கணிப்பை ஏற்கவில்லை. திருமணத்திற்குப்பின் ஒரேயடியாக அடங்கிப்போய், மகிழ்ச்சியை இழந்தவள் சியாமளா.

    பிறரது போக்கில் நாம் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால், அவர்களிடம் எப்படி அன்பு செலுத்தமுடியும்?

    நாம் பிறரைப் பழித்துப் பேசாவிட்டால், நம்மைப் பற்றிப் பிறர் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்ற கவலை எழாது.

    பார்கவியின் மாமியார் அவளைப் படாதபாடு படுத்தியது உறவினர் அனைவரும் அறிந்ததுதான். அவள் செய்தது எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிப்பது, தன் அதிகாரத்தை நிலைநிறுத்த பலபேருக்கு முன்னிலையில் மட்டம் தட்டுவது என்று நடந்துகொண்டாள்.

    `எப்போது, எந்த அவமானத்தைத் தாங்க நேரிடுமோ!’ என்றெழுந்த பயத்தைத் தாளமுடியாது போக, பார்கவியின் உடல்நிலை சீர்கெட்டது.

    கணவனும் ஆதரவாக இருக்கவில்லை. “நீதான் அடங்கிப்போயேன். என் அம்மாவைப் பிடிக்கவில்லை என்றால், என்னையும் பிடிக்கவில்லை என்றுதான் அர்த்தம்!” என்று அவளை அடக்கினான்.

    கவுன்செலிங் முறைப்படி, துணிச்சலாக நடப்பது எப்படி என்று கற்றாள் பார்கவி.

    `கெஞ்சினால் மிஞ்சுவார், மிஞ்சினால் கெஞ்சுவார்,’ என்பதுபோல், அவளுடைய கை ஓங்க, மாமியார் அடங்கிப்போனாள்.

    பார்ப்பவர்களுக்கு அத்தகைய போக்கு தவறாகப்படலாம். ஆனால், பயத்திலேயே அமிழ்ந்துவிடாது இருக்க அவளுக்கு வேறு வழி தெரியவிலை.

    நம்மைவிடத் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை ஏளனம் செய்யத் தோன்றுவதுபோல், வெற்றி பெற்றவர்களைப் பார்த்துப் பிரமிக்கத் தோன்றுகிறது. அவர்கள் எத்தனை உழைத்திருப்பார்கள், என்னென்ன தடைகளைக் கடந்து வந்திருப்பார்கள்!

    ஆனால், அவர்களையும் விட்டுவைப்பதில்லை இன்றைய இணையதளம். புகழ்பெற்றவர்கள் என்னென்ன தவறு செய்கிறார்கள் என்று தேடிக் கண்டுபிடித்து, உலகெங்கும் பரப்புகிறது.

    அவர்களும் மனிதர்கள்தாமே?

    குற்றங்கள் புரிந்ததால் திறமையற்றவர்கள் என்றாகிவிடுமா?

    ஐயையோ! எவ்வளவு சின்னப்பெண்!

    கதை

    நானும் என் மகளும் பாங்காக்கைச் சுற்றிப்பார்க்கச் சென்றிருந்தோம். ஒரு சாப்பாட்டுக்கடையில் ஒரு இளம்பெண்ணின் கிளுகிளுப்பான சிரிப்பு ஒலித்துக்கொண்டே இருக்க, ஆர்வத்தை அடக்கமுடியாது, நான் திரும்பிப் பார்த்தேன்.

    அப்பெண்ணுக்குப் பதினைந்து வயதுக்குமேல் இராது. அவளுடன் மிக நெருக்கமாக முப்பது வயது மதிக்கத் தகுந்த இரு ஆண்கள். அவளுடைய தொழில் இன்னதென்று புரிய, எனக்கு உண்டான அதிர்ச்சி என் கண்களில் வெளிப்பட்டிருக்க வேண்டும். அதன் எதிரொலியாக, அவள் முகத்தில் ஆழ்ந்த வருத்தம் படர்ந்தது.

    சில கணங்களே நடந்த அந்த நாடகத்தை என் மகளுடன் பகிர்ந்துகொண்டபோது, “இது அவளுடைய தொழில். அப்படி ஒன்றும் எளிதானதுமல்ல. இதில் ஈடுபட்ட ஒவ்வொரு பெண்ணும் இருமுறையாவது பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவாள்,” என்று சிறிது ஆத்திரத்துடன் விளக்கினாள்.

    அருகிலுள்ள கிராமங்களில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள குடும்பத்தினர், தெரிந்தே தம் மகளை பாலியல் தொழிலுக்காக தலைநகருக்கு அனுப்புகிறார்களாம்.

    அப்பெண்ணின் இடத்தில் என்னைப் பொருத்திப் பார்க்காததால் ஏற்பட்ட தவறு புரிந்தது. கணவன், குழந்தை, தனக்கென ஆதரவாக ஒரு குடும்பம் என்ற ஆசைகள் அப்பெண்ணிற்கு மட்டும் இருந்திருக்காதா! எல்லாம் வெறும் கனவாகிப்போக, குடும்பத்திற்கென உழைக்கிறாள், பாவம்!

    “அப்பெண் செலவாளி!”

    கணவனது சம்பாத்தியத்தில் தான் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கலாமே என்ற சுதந்திர உணர்வுடன் செயல்படும் பெண்கள் பிறரது கண்டனத்திற்கு ஆளாவார்கள்.

    இப்படி யோசிக்கலாமே! தாய்வீட்டில் வளர்கையில் பொருளாதார வசதி குறைவாக இருந்திருக்கலாம்.

    இரு கதைகள்

    `என்ன, இப்படிக் குழந்தை வளர்க்கிறாளே!’ என்று அநேகமாக எல்லா உறவினர் பெண்களையும் கேலி பேசுவாள் சௌந்தரி — அவர்கள் பின்னால்தான்!

    சௌந்தரி ஒரு முதிர்கன்னி என்பது குறிப்பிடத்தக்கது. தனக்குக் கிடைக்காத புத்திரபாக்கியம் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறதே என்ற மனப்பொருமல் இவ்வாறு வெளியாகியிருக்கிறது. குழந்தைகளை வளர்த்துப்பார்த்தால்தானே தெரியும் அதிலுள்ள சிரமங்கள்!

    தான் மட்டும் கற்பின் சிகரம், தன் பெண்கள் ஆண்களைப் பார்த்தாலே பயந்து ஓடுவார்கள் என்று ஓயாமல் பெருமை பேசுவாள் கற்பகம். அவளைப் பொறுத்தவரை, ஆண்களுடன் சிரித்துப் பேசும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்.

    பிறரிடம் குற்றம் கண்டுபிடித்து, அதை விரிவாகக் கூறினால், தாம் சொல்வதைப் பிறர் ஆர்வத்துடன் கவனிப்பார்கள் என்று நடப்பவர்கள் இவ்விருவரும்.

    இப்போக்கால் மன இறுக்கம் கூடி, உடல்நிலையைப் பாதித்துவிடுகிறது.

    இந்த இரு பெண்மணிகளும் தம் இறுதிக்காலத்தில் நகரவும், பேசவும் முடியாது ஏதேதோ நோய்கள். யாரும் அவர்களுக்காகப் பரிதாபப்படவுமில்லை.

    கதை

    அதிகம் படித்து, பெரிய உத்தியோகம் வகிக்கும் பெருமை மைத்துனர்களுக்கு. அவர்கள் வீட்டு மாப்பிள்ளை படித்தவராக இருந்தாலும், கிராமப்புறத்தவர். அதிலும், பெரும்பணக்காரர்.

    மைத்துனர்களுக்கு அவரைக் கண்டால் ஏளனம். அவருடைய கடவுள் பக்தி, நியமங்கள் ஆகியவை கேலிப்பொருட்களாக ஆயின. ஆனால், அவரைத் தூற்றியவர்களைப்போல் இல்லாது, இறுதிவரை ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்.

    பெற்றோரின் பேச்சும் நடத்தையும் அவர்கள் பிள்ளைகளையும் பாதித்தது.

    பக்தியும் ஒழுக்கமும் நிறைந்தவருடைய குழந்தைகள் வாழ்வில் சிறக்க, மைத்துனர்களின் குழந்தைகள் என்னென்னவோ துயரங்களை அனுபவித்தார்கள்.

    நாம் பிறரைப்பற்றி ஏதாவது சொல்லியே ஆகவேண்டுமென்றால், அது அவர்களுக்கு உபயோகமாக இருக்கவேண்டாமா?

    Share
  • பழகத் தெரிய வேணும் – 85

    பழகத் தெரிய வேணும் – 85

    நிர்மலா ராகவன்

    எவரும் தாழ்ந்தவரில்லை

    தன்னைவிட ஒரு படி மேலாக இருக்கும் பிறரைக் கண்டால், சிறுமை உணர்ச்சிக்கு ஆளாகாதவர்கள் வெகு சிலரே. அதைத் தணித்துக்கொள்ள, தன்னைவிடச் சிறந்த ஒருவருடன் எப்படியோ இணைந்தால், `நம் மதிப்பும் கூடாதா!’ என்று அவர்கள் எண்ணம் போகும்.

    கதை

    கல்வி, பொருளாதாரம், அழகு ஆகிய எல்லாவிதங்களிலும் தன்னைவிட உயர்ந்த ஒருத்தியைத் தேடி மணந்தான் சம்பத் — பிறர் பொறாமை அடையவேண்டும் என்ற நப்பாசையுடன்.

    அவன் விரும்பியதுபோலவே, அவர்களுக்குப் பொறாமை ஏற்பட்டது. ஆனால், அதை மறைக்க, `ஏமாற்றிக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டான்!’ என்று அவனைக் கேலி செய்வார்கள் என்பதைத்தான் சம்பத் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

    அந்த ஏமாற்றம் மனைவிமேல் கோபமாக மாறியது. அவளையும், அவள் குடும்பத்தினரையும் மட்டம்தட்டிப் பேச ஆரம்பித்தான்.

    தம்பதியர் இருவருக்குமே நிம்மதி பறிபோயிற்று.

    குடும்பத்தில் உயர்வு தாழ்வு

    ஒரு குடும்பத்தில் எல்லாக் குழந்தைகளும் ஒரே தன்மை உடையவர்களாக இருப்பார்களா?

    இது புரியாது, பல பெற்றோர் பழிப்பார்கள்: `உன் தங்கையை, தம்பியைப் பார்! எவ்வளவு சுறுசுறுப்பாக, எல்லாவற்றிலும் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள்! நீயும் இருக்கிறாயே!’

    மூத்த குழந்தையின் பொறுமையை `அசமஞ்சம்!’ என்று, எடுத்துக்கொள்வார்கள். எதையும் பிழையின்றி பொறுப்பாகச் செய்யும் குணம், `இவன் எல்லாவற்றிலும் அதிநிதானம்!’ என்ற கேலிக்குரியதாக ஆகிவிடுகிறது.

    சிறு வயதில், பெற்றோரும் பிறரும் தன்னைப்பற்றி என்ன அபிப்ராயம் கொண்டு நடத்துகிறார்களோ, அதை அப்படியே குழந்தைகள் நம்பிவிடுவார்களே!

    அதனால், `நான் என் பிறரைப்போல் புத்திசாலி இல்லை!’ என்று சிந்தனைபோக, தாழ்மை உணர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது.

    உடல் ரீதியாகவோ, அறிவாலோ, தம்மைத் தாழ்ந்தவர்களாக உணர்கிறவர்கள் பிறருடன் பழகத் தயங்கி, ஒதுங்குவதும் உண்டு.

    கதை

    என் மாணவன் ஒருவன் வெள்ளைக்காரச் சாயலாக இருப்பான். அவனோ மலாய் குடும்பத்தைச் சேர்ந்தவன்.

    ஆங்கிலேயர்களின் வசம் அன்றைய மலாய் நாடு இருந்தபோது, அவன் வம்சத்தில் யாரோ ஒரு பெண் வெள்ளைக்காரருடன் தகாத உறவு பூண்டிருக்கவேண்டும். (அவர்கள் உள்நாட்டவர்களை மணந்ததில்லை).

    பல தலைமுறைகளுக்குப்பின், இவனிடம் அந்த ஜீன்ஸ் தன் வேலையைக் காட்டிவிட்டதுதான் பரிதாபம். அவன் வயதொத்த மாணவர்கள் அவனை ஏற்கவில்லை. ஏதோ கேலிப்பொருளைப்போல் அவனை நடத்தினார்கள். அவர்களை எதிர்க்கும் தைரியமின்றி, பிறரிடமிருந்து ஒதுங்கியே இருந்தான். மூளையும் மந்தமாகிவிட்டதுபோல் இருந்தது.

    என் வயதொத்த சுபீராவின் கதையும் கிட்டத்தட்ட அவனுடையதுபோல்தான்.

    ஒரு வித்தியாசம்: அவளுடைய தந்தை ஜப்பான்காரர். (ஆங்கிலேயர்களுக்குப்பின், ஜப்பானியர் சில காலம் மலாயாவை ஆண்டார்கள்).

    சுபீராவின் தந்தை பெயர் Putih (மலாயில், வெள்ளை) என்று அடையாளக்கார்டில் குறிப்பிட்டிருந்ததால், யாரும் எதையும் சந்தேகிக்கவில்லை. அவளே சொல்லித்தான் எனக்கு மட்டும் தெரியும்.

    நான் சற்று வியப்புடன், ஒரு சரித்திர ஆசிரியையைக் கேட்டேன்: “ஜப்பானியர் மலாய்ப்பெண்களை மணந்தார்களா?”

    “இல்லை. அப்பெண்களை வைத்திருந்தார்கள்!”

    எனக்கு ஏதோ புரிந்ததுபோலிருந்தது.

    எங்கள் பள்ளிக்கு வந்த புதிதில், அவள் எல்லாருக்கும் ஏதாவது தின்பண்டங்கள் வாங்கி வருவாள்.

    (ஏதோ உள்ளர்த்தத்துடன்தான் இதைச் செய்கிறாள் என்று எனக்குத் தோன்ற, நான் வாங்க மறுத்துவிடுவேன்).

    விரைவிலேயே, எல்லாரும் அவளை ஒரேயடியாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள். அவளுடைய அதிகாரம் வலுத்தது. அவள் சொல்வதை யாரேனும் ஏற்காவிட்டால், சண்டை பிடித்து, அவர்களிடம் பேசவேமாட்டாள்.

    வட்டார ரீதியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு நாங்கள் இருவரும் எங்கள் பள்ளியின் சார்பில் அனுப்பப்பட்டிருந்தோம். அங்கு அவள் ஒரு வார்த்தைகூடப் பேசாது இருந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

    தான் ஏதாவது சொல்லப்போய், பிறர் மாற்றுக்கருத்து கூறினால், சண்டை போடத் தோன்றுமே என்று தன்னையே அடக்கிக்கொண்டிருப்பாள். ஒரு வேளை, தாழ்மை உணர்ச்சியாலோ, என்னவோ!

    சமூகத்தால் அவர்களை ஏற்க முடிகிறதோ, இல்லையோ, முறையாகப் பிறக்காத குழந்தைகளால் தங்களைத் தாமே  ஏற்க முடிவதில்லை.

    கதை

    `பல குழந்தைகளைப் பெற்ற ஒருவரின் ஆசைநாயகியாகச் சில காலம் இருந்தவள் பெற்ற பிள்ளை நான்!’ என்ற உணர்வு கிட்டுவைத் தகித்தது.

    அவன் பிறக்குமுன்பே தந்தை இறந்துவிட்டபின், அவருடைய மனைவி அன்புடன் அவனையும் அவன் தாயையும் ஏற்றாள். ஆனால், `இவர்தான் என் தந்தை!’ என்று அவன் பெருமையுடன் எங்கும் சொல்லிக்கொள்ள முடியவில்லை.

    தன்னையும் அவர்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினராக ஏற்றவர்களைப் பழிக்கு ஆளாகச் செய்யவேண்டும் என்ற வன்மமாக மாறியது கிட்டுவின் ஆத்திரம்.

    இவனைத் `தம்பி’ என்று அருமையாக ஏற்றவனுடைய மனைவியை மயக்கி, தன்னுடன் இணைந்து வாழும்படி செய்தான். அப்படியும், அவனைப் பெருந்தன்மையுடன் நடத்தினார்கள். ஆனால், சமூகத்தில் அவனுடைய மதிப்பு அறவே போயிற்று.

    உயர்வும் தாழ்வும்

    நாம் எல்லாருமே ஏதோ ஒரு விதத்தில் பிறரைவிடச் சற்றுத் தாழ்ந்த நிலையில்தான் இருப்போம்.

    தன் அறிவுகூர்மையை எண்ணிப் பெருமைப்படுகிறவன்  ஒரு சிறு பிழை புரிந்துவிட்டாலும், ஏதோ செய்யக்கூடாததைச் செய்துவிட்டாற்போல் குறுகிவிடுவான்.

    ஒரு போட்டியில் வெற்றி பெற்றவர்கள், `நான் எல்லாரையும்விட மேலானவன், திறமைசாலி!’ என்ற மிதப்புடன், தலையை நிமிர்த்தி நடப்பதைக் கண்டிருப்பீர்கள்.

    `இப்படிப்பட்டவர்களுக்குத் தோல்வி என்பதே கிடையாதா!’ என்று பிறர் அதிசயிக்க வேண்டுமாம்!

    ஒரு சிறு தோல்வி வந்தாலும், இவர்கள் துடித்துப்போய்விடுவார்கள். வெற்றி, தோல்வி நிரந்தரமல்ல என்பதை உணராதவர்கள் இவர்கள்.

    பிறருடன் எப்போதும் ஒப்பிட்டுக்கொள்ளும் குணம் நிலைத்துவிடுவதால், தன்னைவிட அழகானவர், திறமையானவர், பணக்காரர் என்று தோன்றினால், அவர்களைக் கண்டு வயிற்றெரிச்சல் எழுகிறது பெரும்பாலோருக்கு.

    தன்னைவிடத் தாழ்ந்த நிலையில் இருப்பவரைப் பார்த்தோ, கருணை எழுவதில்லை. அவர்களைக் கேலி செய்யத் தோன்றுகிறது. அப்போதுதானே, தான் மேலானவன் என்று காட்டிக்கொள்ளலாம்! அவர்களிடம் தன் திறமைகளை, தான் சாதித்ததைப் பெருமையாகக் கூறிக்கொள்வார்கள்.

    கதை

    பள்ளி இறுதிப் பரீட்சையில் தான் தமிழ்ப்பாடத்தில் எவ்வளவு சிறப்பான தேர்ச்சி பெற்றோம் என்று, ஆங்கிலத்தில், நீண்ட உரை நடத்தினாள் ஒரு மாது – அவளைப் பார்த்து நானும் பிரமிக்க வேண்டும் என்று எண்ணியவள்போல்.

    ஒருவழியாக ஓய்ந்ததும், “உங்களுக்குத் தமிழில் எழுதத் தெரியுமா?” என்று சவால் விடுவதுபோல் என்னிடம் கேட்டாள்.

    வலுவில் வரவழைத்துக்கொண்ட அலட்சியத்துடன், “நான் ஒரு தமிழ் எழுத்தாளர்,” என்று பதிலளித்தேன். அவள் அடைந்த அதிர்ச்சியைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.

    தாம் பின்பற்றும் மதம்தான் உயர்வானது என்று பலர் கருதி, அதைப் பற்றியே பேசி, மறைமுகமாகப் பிறரை மட்டம் தட்டுவார்கள். தம்மைப் பற்றிய சந்தேகம் அவர்களுக்கே எழுந்ததாலோ?

    பணவசதி குறைந்தவர்கள் பணக்காரர்களைப் பார்த்துப் பொருமுவார்கள் என்றால், பணக்காரர்களாக இருப்பவர்கள் குடும்ப வாழ்விலோ, ஆரோக்கியத்திலோ நிறைவு இன்றி, தம்மைப்போல் இல்லாத பிறரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள்.

    முன்காலத்தில், சில அரசர்கள் தங்கத்தால் ஆன சிம்மாசனம் செய்துகொண்டார்கள். (மைசூரில் இன்றும் காணலாம்).

    கழிப்பறையில் உபயோகப்படுத்தும் சாதனத்தைத் தங்கத்தால் செய்துகொண்டார்கள் வேறு சிலர். அதில் ரத்தினக்கற்கள் பதித்துக்கொண்டவர்களும் உண்டு!

    வருவாயை எப்படிப் பிறருக்கு உபயோகமான வகைகளில் செலவிடலாம் என்ற அக்கறை இல்லாததாலா?

    இல்லை, தம் குடிமக்களைவிடத் தாம் உயர்வானவர்கள் என்று காட்டிக்கொள்ளவோ?

    சில வம்சங்களின் அழிவுக்கு இத்தகையவர்கள்தாம் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

    `நான் மேலானவன் (அல்லது தாழ்ந்தவன்)’ என்ற எண்ணப்போக்கு இல்லாது, இருக்கிறபடியே தம்மை ஏற்பவர்களிடம்தான் நிம்மதி நிலைத்திருக்கும்.

    Share