Tag: D.சச்சிதானந்தம்

  • அறுமுகநூறு (8)

     

    -சச்சிதானந்தம்

     

    செந்தூர்க் கடலின் காற்றே போற்றி,

    செந்தேன் உமிழும் இதழே போற்றி,

    செறிவுற் றுயர்ந்த அறிவே போற்றி,

    செந்தில் நாதச் சுவையே போற்றி!                                                                                   36

     

    வீரங் கத்து வெண்மதியோன் போற்றி,

    வீழும் நெஞ்சத்தைக் காத்திடுவான் போற்றி,

    வீறு கொண்டெழுந்த சம்ஹாரன் போற்றி,

    வீடு பேரளிக்கும் வேலவா போற்றி!                                                                                 37

     

    மோனைத் தொடையில் மலர்ந்தாய் போற்றி,

    மோகங் கொடுத்த மயிலோன் போற்றி,

    மோதும் அலையென எழுந்தாய் போற்றி,

    மோட்சம் கொடுக்கும் முருகா போற்றி!                                                                           38

     

    நடன மிடும் ஈசனின் மகனின்,

    வதன முகம் பேசிடும் விழிகள்,

    நுதலில் நீறு பூசிடும் முறைகள்,

    முதலில் கண்டு முழுமை அடைவோம்!                                                                           39

     

    கிடுகிடு வென உயர்ந்த மலையை,

    விடுவிடு வென விரைந்து நடந்து,

    நெடுநெடு வென நீண்ட உனது,

    முடிஅடி யினைக் கண்டு மகிழ்வோம்!                                                                             40

     

    Share
  • அறுமுகநூறு (7)

     

    -சச்சிதானந்தம்

     

    மழலைக்கு அமுதூட்டும் அன்னை போல,

    மனதினில் பொறுமையை மிக்க உற்று,

    மட்டற்ற கருணையால் முழுமை யுற்று,

    முருகென்னும் அருளினைப் பருகத் தந்தாய்!                                                                 31

     

    பழனியில் பழமெனப் பூத்தவன் போற்றி,

    பரமனுக் கருளிய பாலகன் போற்றி,

    பனியெனக் குளிர்ந்தவன் பாதம் போற்றி,

    படையறு வீடுகள் கொண்டவன் போற்றி!                                                                        32

     

    பழமுதிர்ச் சோலையின் தலைவா போற்றி,

    பலவண்ண எழிலுடை இறைவா போற்றி,

    பதமலர் சிவந்த பண்டிதா போற்றி,

    பதிகம் பாடிப் பணிவோம் போற்றி!                                                                                  33

     

    திருப்பரங் குன்றத் தீஞ்சுடர் போற்றி,

    திலகம் தரித்த நுதலே போற்றி,

    தில்லை நாதனின் பிள்ளாய் போற்றி,

    திசைகள் தோறும் நிறைந்தாய் போற்றி!                                                                         34

     

    திருத்தணி கைகொண்ட கந்தா போற்றி,

    தினைப்புன வள்ளியைக் கொண்டாய் போற்றி,

    திருத்தமிழ் வளர்க்கப் பிறந்தாய் போற்றி,

    திளைத்திடுவோம் உன் அழகைப் போற்றி!                                                                     35

     

    Share
  • முதுமைப் பூங்காற்று

     

    முதுமைப் பூங்காற்று

     

    மெல்லிய ஒளியுடன் மெதுவாய்த் தோன்றும்,

    மாலை வானின் மதியம் போல,

    மேன்மை பொருந்திய எந்தை தாயிடம்,

    முதுமை மெல்ல அரும்பி யதோ?

     

    மழலை என்னும் வேடம் அணிந்து,

    மானுட வாழ்வை மண்ணில் அடைந்து,

    மார்போ டணைக்கும் பெற்றோ ரன்பால்,

    மான் போல் துள்ளி மகிழ்ந்தீரே!

     

    மிளிரும் இளமை வேடம் பூண்டு,

    மணவாழ் வென்னும் வேதம் கண்டு,

    மாயம் நிறைந்த உலகை வென்று,

    மயக்கம் இன்றி வாழுகின் றீர்!

     

    பெற்றோ ரென்னும் புதிய வேடத்தைப்,

    பொறுப்புடன் ஏற்று மக்களைக் காத்து,

    தங்களைப் பெற்றவர் பெருமிதம் கொள்ள,

    பண்புடன் வாழ்க்கை நடத்து கின்றீர்!

     

    தொழில் என்னும் தோணியில் ஏறி,

    வாழ்வென்னும் கடலைக் கடந்தீரே அன்றிப்,

    பொருள் சேர்க்கும் ஆசை வலையில்,

    ஒருநாளும் வீழாமல் இருக்கின் றீர்!

     

    தங்கள் பெற்றோர், தங்கள் கடமை,

    தரணியில் முடித்துச் சென்ற பொழுது,

    தேய்பிறைத் திங்கள் போல் துவண்டாலும்,

    தெளிவுடன் நின்ற உங்களை அறிவேன்!

     

    நிழலில் உலர்த்திய மாவிலை போல,

    உங்கள் மேனியின் சுருக்கம் கண்டு,

    தணலில் விழுந்த புழுவைப் போல,

    எந்தன் இதயம் துடிக்கின் றேன்!

     

    மெல்லிய ஒளியுடன் மெதுவாய்த் தோன்றும்,

    மாலை வானின் மதியம் போல,

    மேன்மை பொருந்திய எந்தை தாயிடம்,

    முதுமை மெல்ல அரும்பி யதே!

     

    சச்சிதானந்தம்

    Share
  • அறுமுகநூறு (6)

     

    சச்சிதானந்தம்

     

    தக்கன் கொடுத்த தளிரை ஏற்ற,

    முக்கண் எடுத்த ஈசன் கூற்றை,

    தர்க்கம் செய்து எதிர்த்த காற்றே,

    பழனியில் வீசும் சரவணக் காற்று!                                                                                   26

     

    பாத மெனும் செம்பூவைப் பற்றிப்,

    பாட லெனும் வெண்பூவைச் சூடிப்,

    பால மெனப் பாலகனைக் கொண்டு,

    பாரிருள் வாழ்வைப் பண்புடன் கடப்போம்!                                                                     27

     

    பாடுபொருள் கிடைத்துவிட்ட பரவசத்தில் நாம்,

    பாடும்பொருள் பரமனவன் கண்ட பொருள்,

    வாடுமிருள் மனம் நீக்கி, வந்து

    கூடுமருள் குமரனருள் என்ற பொருள்!                                                                            28

     

    பாலதண் டாயுத பாணியின் பெருமையைப்,

    பாடிய படியே படிகளில் ஏறிப்,

    பாதச் சுவடுகள் பதிய நடந்தால்,

    பாவச் சுவடுகள் விலக்கிடு வானே!                                                                                  29

     

    உண வுண்ண மறுத்துச் சிரித்து,

    உடை யணிய மறுத்துக் குதிக்கும்,

    உல கின்னும் அறியா மழலையாய்,

    உன தருளை ஏற்க மறுத்தோம்!                                                                                        30

     

    படத்துக்கு நன்றி: http://www.vallamai.com/wp-content/uploads/2012/11/vayalur-murugan4.jpg

     

    Share
  • அறுமுகநூறு (5)

     

    -சச்சிதானந்தம்

     

    அச்சமுற்ற நெஞ்சம் அரகரா என்றிடட்டும்,

    அப்பனுற்ற பணிவைப் பணிவோடு கொண்டிடட்டும்,

    அப்பழுக்கு அற்று அன்புமனம் அமைந்திடட்டும்,

    அக்கினிக்கு ளுற்ற அறுமுகனைக் கொஞ்சிடட்டும்!                                                             21

     

    அச்சம் கொடுத்தான், அன்பைக் கொடுத்தான்,

    அத்தன் படைத்த அறிவைக் கொடுத்தான்,

    அல்லல் கொடுத்து, உள்ளத் தெளிவை,

    அள்ளிக் கொடுத்து அகிலம் காத்தான்!                                                                         22

     

     

    வடிவேலன் முகம்காணப் படியேறி வருவோம்,

    நெடியேறும் சந்தனக் காவடிகள் சுமப்போம்,

    கடிவாளம் இல்லாத மனதினைக் காக்க,

    அடியேனுன் னடியினில் அடிமையாய் ஆவோம்!                                                           23

     

    கந்தவேள் கண்களைக் காணு மென்னம்,

    வந்ததால் பூத்திடும் எண்ண மென்னும்,

    சிந்தையைக் குன்றெனக் கண்டு கந்தன்,

    வந்தமர்ந் தருளுவான் உள்ள மெங்கும்!                                                                         24

     

    கந்தனைப் பாடிடும் சந்த மெல்லாம்,

    வந்தெனைக் கூடிடும் சொந்த மென்று,

    பந்தமும் பாசமும் மேவி நின்று,

    விந்தைகள் செய்வது மாய மன்று!                                                                                  25

     

    படத்துக்கு நன்றி: http://www.kaumaram.com/pics/murugan_contents.jpg

     

    Share
  • அறுமுகநூறு (4)

     

    -சச்சிதானந்தம்

     

    சிதிலம் அடைந்த சிந்தனை கடந்து,

    உதிரம் அடைந்த நஞ்சினைக் களைந்து,

    எதிலும் நிலையா மனதை மறந்து,

    கதியென் றறுமுகன் மதிமுகம் தொழுவோம்!                                                                 16

     

    தா ளிரெண்டும்  தீ யாக,

    தோ ளிரெண்டும் பூ வாக,

    மே  னிஎங்கும்  நீ ரோட,

    வா என்றாய் தா விவந்தேன்!                                                                                           17

     

    பிடியோடு உறவாடும் உன்னண் ணனை,

    பிடிசாம்பல் கொண்டாடும் உன்னப் பனை,

    விடிவெள்ளி போலொளிரும் உன்னம் மையை,

    படியேறி வருகையில் பாடுகின் றேன்!                                                                             18

     

    கதிரேறி உச்சிக்கு வந்த பின்னும்,

    படியேறு மிச்சைக்கு ஏது விண்ணம்?

    நிலவேறு மிரவென்னு மினிய வெண்ணம்,

    மனமேறிக் குளிர்வதால் படி ஏறுவோம்!                                                                         19

     

    அரகரா! அரகரா! அதரங்கள் சொல்லும்,

    சரவணா! சரவணா! சிகரங்கள் சொல்லும்,

    முருகனே! முருகனே! என்றுமனம் சொல்லும்,

    பரமனின் குமரனைப் பாடிடச் செய்யும்!                                                                          20

     

    படத்துக்கு நன்றி: http://muruganarul.blogspot.com/2009/11/blog-post.html

     

    Share
  • அறுமுகநூறு (3)

    சச்சிதானந்தம்

    அறுமுகநூறு

     

    தமிழெனும் மந்திரம் தருவாய் போற்றி,

    உமியெனும் செருக்கை அறுப்பாய் போற்றி,

    சிமிழெனக் குவிந்த குறுநகை போற்றி,

    அமிழ்ந்திடும் மனமுன் அடியைப் போற்றி!                                                                     11

     

    அரும்பாத தாமரைப் புன்னகை போற்றி,

    அரும்பாதம் பற்றியே போற்றுவோம் போற்றி,

    தரும்பாதம் பற்றினால் வரம்தருவான் போற்றி,

    விரும்பாத பேருக்கும் அருளுவான் போற்றி!                                                                 12

     

    ஐந்தமு துணவின் சுவையே போற்றி,

    நைந்தம னங்களுக் கருள்வாய் போற்றி!

    வைந்தவ ரெல்லாம் வருவார் போற்றி,

    பைந்தமிழ் மைந்தன் பெருமை போற்றி!                                                                         13

     

    இசைக்கு மயங்கும் இறைவா போற்றி,

    இமைக்க மறந்தேன் உன்னைப் போற்றி,

    இணைந்து கொண்டேன் தலைவன் போற்றி,

    இருண்ட இதயம் களைவோன் போற்றி!                                                                          14

     

    வாரம் கடந்து, வருடம் கடந்து,

    வாழ்வைக் கடந்து, வேட்கை கடந்து,

    காமம் கடந்து, கவலை கடந்து,

    கந்தன் அருளின் கருணை அடைவோம்!                                                             15

     

    (தொடரும்)

    படத்திற்கு நன்றி :

    http://www.gildedserpent.com/art36/SashiResponse.htm

     

    Share
  • அறுமுகநூறு (2)

    -D.சச்சிதானந்தம்-

     

    முதல் பகுதி இங்கே

     

    அடிமனக் கடலின் அமுதே போற்றி,

    அறுமுக நிலவின் ஒளியே போற்றி,

    அதிமது ரத்தின் சுவையே போற்றி,

    அருள்மனம் பொங்கி அருள்வாய் போற்றி!                                                                     6

     

    கவிமனம் கொண்ட கந்தா போற்றி,

    குவிமனம் என்றாய் குகனே போற்றி,

    செவியினில் மந்திரம் சொன்னாய் போற்றி,

    புவியினைக் காக்கும் புதல்வா போற்றி!                                                                          7

     

    அகமிகுங் குகனின் நினைவே போற்றி,

    மிகமிகு மவனின் கருணை போற்றி,

    முகமிகு முறுவல் தருவோன் போற்றி,

    சுகமிகு மவனை நினைந்தே போற்றி!                                                                              8

     

    இளமுறு வல்தரு வள்ளல் போற்றி,

    வளமுறு மில்தரு மன்னன் போற்றி,

    உளமுறு மல்லல் கொல்வோன் போற்றி,

    குளமுறுங் கமலக் குழவியே போற்றி!                                                                             9

     

    தண்டம் கொண்ட தருவே போற்றி,

    அண்டம் காக்கும் உருவே போற்றி,

    கண்டம் கறுத்தவன் மைந்தா போற்றி,

    கொண்டோம் மனதில் உன்னைப் போற்றி!                                                                      10

     

    படத்துக்கு நன்றி: http://www.hindudevotionalblog.com/2012/12/hindu-god-subramanya-pictures.html

     

    Share
  • அறுமுகநூறு (1)

     

    -D.சச்சிதானந்தம்-

     

    காப்பு

     

    கணபதி என்னும் குணபதி போற்றி,

    சினமதி நீக்கும் அவனடி போற்றி,

    தனபதி சிறுமதி களைந்தவன் போற்றி,

    மனமதில் பூத்த பாசெய் கின்றேன்!

     

    நூல்

     

    வெண்முக நிலவின் தண்முகம் தன்னைத்

    தன்முக மாகக் கொண்டசண் முகனை

    இன்முகம் கொண்டு என்மனம் தன்னில்,

    கொண்டொரு பன்முகப் பாசெய் கின்றேன்!                                                                   1

     

    சிவன்மலை ஆண்டவன் சீரடி போற்றி,

    சினங்கொண்டு தணிந்தவன் திருவடி போற்றி,

    சிகரங்கள் தோறும் சேர்ந்தவன் போற்றி,

    சிவந்தசெவ் வடியினைச் சிரங்கொண்டு தொழுவோம்!                                                   2

     

    படியேறி வந்துனது மடி ஏறுவேன்,

    மடியேறி உன்மனதில் குடி ஏறுவேன்,

    கொடியேறும் சேவலுடன் படி ஏறியே.

    அடிமீது அடிவைத்து வருவே னடா!                                                                                 3

     

    படிக்கொரு பாடல் கொடுப்பாய் போற்றி,

    படித்திடும் ஆவல் விதைப்பாய் போற்றி,

    பனிக்குட வாழ்வை அறுப்பாய் போற்றி,

    படைத்தவ னுன்னை அடைவேன் போற்றி!                                                                    4

     

    அடிக்கொரு பாடல் அருள்வாய் போற்றி,

    அனைத்துல குயிரின் கருவே போற்றி,

    அமைத்தொரு பாவைத் தருவாய் போற்றி,

    அடிக் கரும்பாக இனிப்பாய் போற்றி!                                                                                5

     

    (தொடரும்)

     

    படத்துக்கு நன்றி: http://murugan.org/screensavers.htm

    Share