-சச்சிதானந்தம்
செந்தூர்க் கடலின் காற்றே போற்றி,
செந்தேன் உமிழும் இதழே போற்றி,
செறிவுற் றுயர்ந்த அறிவே போற்றி,
செந்தில் நாதச் சுவையே போற்றி! 36
வீரங் கத்து வெண்மதியோன் போற்றி,
வீழும் நெஞ்சத்தைக் காத்திடுவான் போற்றி,
வீறு கொண்டெழுந்த சம்ஹாரன் போற்றி,
வீடு பேரளிக்கும் வேலவா போற்றி! 37
மோனைத் தொடையில் மலர்ந்தாய் போற்றி,
மோகங் கொடுத்த மயிலோன் போற்றி,
மோதும் அலையென எழுந்தாய் போற்றி,
மோட்சம் கொடுக்கும் முருகா போற்றி! 38
நடன மிடும் ஈசனின் மகனின்,
வதன முகம் பேசிடும் விழிகள்,
நுதலில் நீறு பூசிடும் முறைகள்,
முதலில் கண்டு முழுமை அடைவோம்! 39
கிடுகிடு வென உயர்ந்த மலையை,
விடுவிடு வென விரைந்து நடந்து,
நெடுநெடு வென நீண்ட உனது,
முடிஅடி யினைக் கண்டு மகிழ்வோம்! 40







