அறுமுகநூறு (7)
-சச்சிதானந்தம்
மழலைக்கு அமுதூட்டும் அன்னை போல,
மனதினில் பொறுமையை மிக்க உற்று,
மட்டற்ற கருணையால் முழுமை யுற்று,
முருகென்னும் அருளினைப் பருகத் தந்தாய்! 31
பழனியில் பழமெனப் பூத்தவன் போற்றி,
பரமனுக் கருளிய பாலகன் போற்றி,
பனியெனக் குளிர்ந்தவன் பாதம் போற்றி,
படையறு வீடுகள் கொண்டவன் போற்றி! 32
பழமுதிர்ச் சோலையின் தலைவா போற்றி,
பலவண்ண எழிலுடை இறைவா போற்றி,
பதமலர் சிவந்த பண்டிதா போற்றி,
பதிகம் பாடிப் பணிவோம் போற்றி! 33
திருப்பரங் குன்றத் தீஞ்சுடர் போற்றி,
திலகம் தரித்த நுதலே போற்றி,
தில்லை நாதனின் பிள்ளாய் போற்றி,
திசைகள் தோறும் நிறைந்தாய் போற்றி! 34
திருத்தணி கைகொண்ட கந்தா போற்றி,
தினைப்புன வள்ளியைக் கொண்டாய் போற்றி,
திருத்தமிழ் வளர்க்கப் பிறந்தாய் போற்றி,
திளைத்திடுவோம் உன் அழகைப் போற்றி! 35