முதுமைப் பூங்காற்று
மெல்லிய ஒளியுடன் மெதுவாய்த் தோன்றும்,
மாலை வானின் மதியம் போல,
மேன்மை பொருந்திய எந்தை தாயிடம்,
முதுமை மெல்ல அரும்பி யதோ?
மழலை என்னும் வேடம் அணிந்து,
மானுட வாழ்வை மண்ணில் அடைந்து,
மார்போ டணைக்கும் பெற்றோ ரன்பால்,
மான் போல் துள்ளி மகிழ்ந்தீரே!
மிளிரும் இளமை வேடம் பூண்டு,
மணவாழ் வென்னும் வேதம் கண்டு,
மாயம் நிறைந்த உலகை வென்று,
மயக்கம் இன்றி வாழுகின் றீர்!
பெற்றோ ரென்னும் புதிய வேடத்தைப்,
பொறுப்புடன் ஏற்று மக்களைக் காத்து,
தங்களைப் பெற்றவர் பெருமிதம் கொள்ள,
பண்புடன் வாழ்க்கை நடத்து கின்றீர்!
தொழில் என்னும் தோணியில் ஏறி,
வாழ்வென்னும் கடலைக் கடந்தீரே அன்றிப்,
பொருள் சேர்க்கும் ஆசை வலையில்,
ஒருநாளும் வீழாமல் இருக்கின் றீர்!
தங்கள் பெற்றோர், தங்கள் கடமை,
தரணியில் முடித்துச் சென்ற பொழுது,
தேய்பிறைத் திங்கள் போல் துவண்டாலும்,
தெளிவுடன் நின்ற உங்களை அறிவேன்!
நிழலில் உலர்த்திய மாவிலை போல,
உங்கள் மேனியின் சுருக்கம் கண்டு,
தணலில் விழுந்த புழுவைப் போல,
எந்தன் இதயம் துடிக்கின் றேன்!
மெல்லிய ஒளியுடன் மெதுவாய்த் தோன்றும்,
மாலை வானின் மதியம் போல,
மேன்மை பொருந்திய எந்தை தாயிடம்,
முதுமை மெல்ல அரும்பி யதே!
சச்சிதானந்தம்

Leave a Reply