அறுமுகநூறு (8)
-சச்சிதானந்தம்
செந்தூர்க் கடலின் காற்றே போற்றி,
செந்தேன் உமிழும் இதழே போற்றி,
செறிவுற் றுயர்ந்த அறிவே போற்றி,
செந்தில் நாதச் சுவையே போற்றி! 36
வீரங் கத்து வெண்மதியோன் போற்றி,
வீழும் நெஞ்சத்தைக் காத்திடுவான் போற்றி,
வீறு கொண்டெழுந்த சம்ஹாரன் போற்றி,
வீடு பேரளிக்கும் வேலவா போற்றி! 37
மோனைத் தொடையில் மலர்ந்தாய் போற்றி,
மோகங் கொடுத்த மயிலோன் போற்றி,
மோதும் அலையென எழுந்தாய் போற்றி,
மோட்சம் கொடுக்கும் முருகா போற்றி! 38
நடன மிடும் ஈசனின் மகனின்,
வதன முகம் பேசிடும் விழிகள்,
நுதலில் நீறு பூசிடும் முறைகள்,
முதலில் கண்டு முழுமை அடைவோம்! 39
கிடுகிடு வென உயர்ந்த மலையை,
விடுவிடு வென விரைந்து நடந்து,
நெடுநெடு வென நீண்ட உனது,
முடிஅடி யினைக் கண்டு மகிழ்வோம்! 40
செந்தூர்பதி கொண்டருளும் ஜெயந்திநாதன், செந்திலாண்டவப் பெருமானின் சிறப்புகள் கூறும் இசைத் தமிழ், படிப்பவரை பக்திக் கடலுள் ஆழ்த்துகிறது எனின் மிகையில்லை. நெடு நெடுவென நீண்டது திருமுருகனின் விஸ்வரூபம் மட்டுமல்ல, தங்கள் பக்தியும்,தங்கள் பாலுள்ள முருகனின் அருட்கடாக்ஷமுமே. தங்களுக்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும். மிக்க நன்றி.
அறுமுகநூறு தித்திக்கும் தீங்கனிச் சாறு. பருகப் பருகத் தெவிட்டாத வேலவனின் புகழ்கூறும் பாவமுதைச் சுவையோடும், சந்த நயத்தோடும் அளித்துவரும் கவிஞர் சச்சிதானந்தம் அவர்களுக்குக் குகனின் அருள் குறைவறக் கிடைக்கட்டும்.
தங்களின் சிறப்பான கவிப்பணி தொடரட்டும். பாராட்டுக்கள்!!
…மேகலா
கவிஞரே உங்கள் முதுமைப் பூங்காற்றூ கவிதை பெற்றோரின் முதுமையை உணர்ந்தும் ஏற்காத மனமும் உங்கள் கவிதையை படித்த உடன் கலங்கியது. உங்களின் அறுமுகநூறு மனதிற்கு அமைதியையும் நிம்மதியையும் மீண்டும் மீண்டும் படிக்கவும் தூண்டுகிண்றது
“அறுமுகநூறு” தொகுப்பைத் தொடர்ந்து படித்துத் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட திருமதி.பார்வதி ராமச்சந்திரன், திருமதி.மேகலா இராமமூர்த்தி, மற்றும் திருமதி. மஞ்சுளா ஆகியோருக்கு என் மனங்கனிந்த நன்றிகள்.