Tag: D.சச்சிதானந்தம்

  • மக்களாட்சியின் மேன்மையை நிலைநிறுத்தும் புதிய தேர்தல் வழிமுறை

    மக்களாட்சியின் மேன்மையை நிலைநிறுத்தும் புதிய தேர்தல் வழிமுறை:

                                             மக்களாட்சியின் உச்சகட்ட கேலிக் கூத்தினை நம் அன்னைத் தமிழகம் எதிர்கொண்டு வரும் இவ்வேளையில், இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறக்காதா? என்று இயலாமையில் பெருமூச்சு விடும் சாமானிய மனிதனின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் கடமை, ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உள்ளது.

                                           சட்டமன்ற உறுப்பினர்களை கூண்டோடு கடத்திச் செல்வதும், மிரட்டுவதும், விலை பேசுவதும் உச்சகட்ட கேலிக்கூத்து என்றால், இந்த கேலிக்கூத்தின் ஊற்றுக்கண் என்பது, மக்களின் அறியாமையும், இந்த அறியாமையைப் பயன்படுத்தி, வாக்குகளை விலைபேசும் தற்போதைய தேர்தல் நடைமுறையுமே ஆகும். ஊற்றுக்கண்ணில் நஞ்சைப் பாய்ச்ச அனுமதித்துவிட்டு, உச்சாணிக் கொம்பில் நச்சுக்காய் காய்க்கிறதே என்று வருந்துவதில் எந்தப் பயனும் இல்லை.

                                        ஒரு குறிப்பிட்ட தேர்தல் தேதியை அறிவித்து, அந்த நாளில் காலை 7.00 முதல் மாலை 6.00மணி வரை வரிசையில் நின்று ஓட்டுப் போட்டுவிட்டுச் செல்லுங்கள் என்று சொன்னால், அரசியல்வாதிகளில் மேல் மக்கள் நம்பிக்கை இழந்து காணப்படும் இன்றைய காலகட்டத்தில், 100% வாக்குப் பதிவு என்பது எட்டாக் கனியாகவே இருக்கும்.

    மாற்று வழியில் புதிய தேர்தல் நடைமுறை:

                                          ATM ல் பணம் எடுப்பது போல, நியாய விலைக் கடைக்குச் சென்று அரிசி, சர்க்கரை வாங்குவது போல ஓட்டுப் போடுவதும் மிக இயல்பான எளிமையானதாக மாற்றப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட நாளில் வரிசையில் நின்றுதான் ஓட்டுப் போட வேண்டும் என்ற நிலையை மாற்றி, தான் நினைத்த நேரத்தில் தனக்கு வசதியான இடத்தில் ஓட்டுப் போடும் உரிமையை வாக்காளனுக்கு உருவாக்கிக் கொடுத்தால், சர்வ நிச்சயமாக 100% வாக்குகள் பதிவாகும்.

    BIOMETRIC MACHINES:

                                        இதனை சாத்தியமாக்குவதற்கு நம் முன்னர் இருக்கும் எளிய வழிமுறை, BIOMETRIC எனப்படும் கைரேகை பதிவின் மூலம் வாக்களிக்கும் நடைமுறையைக் கொண்டு வருவதாகும். தொடுதிரை(Touch sreen)(ATM machine போல) வசதியுடன் இவை இருக்க வேண்டும் இந்த கைரேகைப் பதிவு இயந்திரத்தை ஒரு MAIN SERVER உடன் இணைக்க வேண்டும். இந்த server தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்திலோ அல்லது குடியரசுத் தலைவரின் மாளிகையிலோ வைத்து உயர்ந்தபட்ச பாதுகாப்புடன் பராமரிக்கப் படலாம். கைரேகை இயந்திரத்தில் பதியப்படும் தகவல்கள் சர்வரில் உடனுக்குடன் சேமிக்கப்படும்.

                                 இந்த கைரேகை பதிவு செய்யும் இயந்திரங்களை அனைத்து ATM நிலையங்களிலும் நிறுவ வேண்டும். மேலும் பேருந்து நிலையங்கள் இரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், அஞ்சல் அலுவலகங்கள், அரசுப் பொது மருத்துவமனைகள், வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவககங்கள், விதை வங்கிகள் மற்றும் முக்கியக் கடை வீதிகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் நிறுவ வேண்டும்.

                                  சுயமாக இந்த இயந்திரத்தை பயன்படுத்த இயலாத நிலையில் இருக்கும் மக்களுக்கு, ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியுடன் வாக்களிக்க வைக்கலாம்.

    செயல்படுத்தும் விதம்:

                               நடப்பு ஆட்சி, மூன்று ஆண்டு ஒன்பது மாதங்களை நிறைவு செய்ததும், அடுத்த தேர்தலை அறிவித்து, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மக்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கும் திரும்பப் பெறுவதற்கும், வேட்பாளர்களை அறிவிப்பதற்கும் மூன்று மாத கால அவகாசம் வழங்கலாம்.

                               அதன் பிறகு பனிரெண்டு மாதங்களுக்கு மக்களுக்கு ஓட்டுப்போட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தான் விருப்பப்படும் நேரத்தில் நாட்டின் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் வாக்களிக்க முடியும்.

    49 ‘O‘:

                            ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை “யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை” என்னும் 49’O’ வாக்குகளை மட்டும் கண்காணித்து, ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டிற்கும் மேல் அதிகமாக இருந்தால், அந்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து, புதிய வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுத்து வாய்ப்பளிக்கலாம். இவ்வாறு ஒரு வருடத்தில் குறைந்தது மூன்று முறை புதிய புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும்.

    சமூக விரோத செயல்கள் தடுக்கப்படும்:

                             இந்த ஒரு ஆண்டில் யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்பதால், அரசியல் கட்சிகளின் தற்போதைய தேர்தல் பிரசார முறைகள் தோல்வியைத் தழுவும். அவர்களில் உண்மையான செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்கும் வாய்ப்பு மக்களுக்கு இன்னும் அதிகமாகக் கிடைக்கும். தேர்தலுக்கு முந்தைய நாள் மக்களுக்குப் பண விநியோகம் செய்யும் சட்ட விரோத, சமூக விரோத செயல்கள் முற்றிலும் தடுக்கப்படும். கள்ள ஓட்டுப் போடுவதும் இறந்தவர்களின் ஓட்டுக்களைப் பதிவதும் அடியோடு தடுக்கப்படும்.

    வேட்பாளரைப் பற்றிய தகவல்கள்:

                               வேட்பாளரின் BIO-DATA, தகவல்கள் தொடுதிரை வசதி கொண்ட கைரேகை பதிவு இயந்திரங்களில் அனைத்து இந்திய மொழிகளிலும் பதிவு செய்யப்பட வேண்டும். அவர்களில் தேர்தல் வாக்குறுதிகளும் பதிவு செய்யப்பட வேண்டும். வாக்களிக்கும் முன் இவற்றை நிதானமாகப் படித்துப் பார்த்து, ஆராய்ந்து வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகும்.

                               அனைத்து இந்திய மொழிகளிலும் வேட்பாளர் பற்றிய தகவல்கள் இருப்பதால்,, அண்டை மாநிலங்களின் அரசியல் நிலவரங்களையும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும் அங்கு இருக்கும் நல்ல திட்டங்களை தங்கள் மாநிலத்திற்கும் கொண்டுவர வேண்டும் என்று மக்கள் குரல் எழுப்ப முடியும்.

    தொகுதிகளுக்கு சிறப்பு தகுதிகள்: (SPECIAL STATUS)

                               அதிக விழுக்காடுகள் வாக்குப் பதிவான தொகுதிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தத் தொகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். 95% மேல் அதிகமான வாக்குகள் பதிவான தொகுத்களுக்கு சிறப்பு தகுதி (SPECIAL STATUS) வழங்கப்பட வேண்டும். அரசின் புதிய தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழில் பூங்காக்கள் ஆகியவை இந்தத் தொகுதிகளில் தொடங்கப்படும் என்று அறிவிக்க வேண்டும். இதனால் வாக்கு எண்ணிக்கை விழுக்காடு கணிசமாக உயரும்.

                               தொகுதிவாரியாகப் பதிவான வாக்குகளின் விழுக்காட்டை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியிட்டு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வையும், ஆரோக்யமான போட்டி மனப்பான்மையையும் உருவாக்கி வாக்கு எண்ணிக்கையை மேலும் மேலும் உயர்த்தலாம்.

    அரசை கலைப்பதற்கும் மக்களுக்கு உரிமை:

                               தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகள் பெருவாரியான மக்களுக்கு விரோதமாக இருக்கும் சமயத்தில், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து , ஆட்சியை திரும்பப் பெறும் வழிமுறைகள் இந்த கைரேகை பதிவு இயந்திரங்கள் மூலம் எளிமையாக்கப்படும்.

                               மாநிலத்தின் முதல்வர் மரணம் போன்ற அசாதாரண சூழல்களிலும், மறுதேர்தல் வேண்டுமா? வேண்டாமா? என்பதை இந்த முறை மூலம் மக்களே தீர்மானிக்க முடியும். தற்போது நடப்பது போன்ற ஒரு கேலிக்கூத்து எதிர்காலத்தில் நடக்காமல் நிச்சயம் தடுக்க முடியும்.

    Share
  • ஊடகங்களின் நாடகம்

    உள்நோக்கம் கொண்டுசில ஊடகங்கள் செயலாற்றி,

    முள்நீக்கும் பணிமறந்து மூடருக்குத் துதிபாடி,

    பல்லாக்குத் தூக்குவதில் பரமசுகம் கண்டு,

    கள்ளாட்டம் ஆடுகின்ற கயவர்களைத் தலைவரென்று,

    சொல்லாற்றல் கொண்டுபேசித் தமிழர்களின் மனம்மாற்றி,

    எல்லோர்க்கும் தெரியும்படி எளியனை ஏமாற்றும்!

    நண்பர்களே…..

    கடைக்கோடித் தமிழனுக்கும் உண்மைகளைக் கொண்டுசெல்ல,

    கற்றறிந்த தமிழர்களே, உடனெழுந்து வாருங்கள்!

    இடைத்தரகர் போலின்றி இதயமொன்றி இப்பணியை,

    இன்முகமாய்ச் செய்திடலாம் இளைஞர்களே வாருங்கள்!

    உடைத்தெறிந்து ஊடகங்கள் செய்யுமிந்த மாயைகளை,

    உயிர்சிலிர்த்துப் பாமரர்க்குப் புரியும்படி உரையுங்கள்!

    இமைக்காமல் உறங்காமல் இருபொழுதும் எப்பொழுதும்,

    நமைக்காக்கும் நல்லரசை அமைக்கும்வழி என்னவென்று,

    சளைக்காமல் சிந்தித்துச் சகலருக்கும் சொல்லுங்கள்!

    உழைக்காமல் உயிர்வளர்த்து திமிரெடுத்த திருடர்களை,

    மழைக்காலக் காளானெனக் களைந்திடலாம் வாருங்கள்!

    கற்றறிந்த தமிழர்களே கரம் கோர்த்து நில்லுங்கள்,

    கறைபடிந்த தமிழகத்தின் அரசியலை மாற்றுங்கள்!

    கைகூப்பிக் கேட்கின்றேன் கூண்டை விட்டு வாருங்கள்!

    Share
  • நெளிவு சுழிவு…..

    சச்சிதானந்தம்

     

    நெளிவு சுழிவு தெரிந்து கொண்டேன், வாழ்க்கையின்

    நெளிவு சுழிவு தெரிந்து கொண்டேன்,

    தெளிவை மனதில் உணர்ந்து விட்டேன், புதுப்

    பொலிவை கண்களில் அடைந்து விட்டேன்,

    கொலுவில் வைத்த பொம்மையைப் போல்,

    குறட்டை விட்டுத் தூங்கியதால்,

    கனவில் கூட தோல்வியையே,

    காட்சியாகக் கண்டு வந்தேன்,

    கடவுள் வந்து இடை இடையே ,

    என்னைத் தட்டி எழுப்பி விட்டான்,

    எழுந்து அவனை அனுப்பிவிட்டு

    மீண்டும் படுத்துத் தூங்கி விட்டேன்!

    மருந்தைப் போல் வாழ்க்கையையே,

    விருப்பமின்றி வாழ்ந்து வந்தேன்,

    மறந்தும் கூட உழைப்பதற்கு,

    முயற்சி செய்ய மறந்து விட்டேன்!

    இருந்த இடத்தில் எல்லாம் வந்து

    சேரும் என்று இருந்து விட்டேன்!

    அப்படி இருந்ததாலே, இருந்ததையும்

    இழந்துவிட்டுத் தவித்து நின்றேன்!

    இழந்த போது இதயத்திற்குள்

    இறைவனைக் கண்டேன்!

    கண்டவுடன் வாழ்க்கையின்,

    நெளிவு சுழிவு தெரிந்து கொண்டேன்!

    தெளிவை மனதில் உணர்ந்து கொண்டேன்! புதுப்

    பொலிவைக் கண்களில் அடைந்து விட்டேன்!

    Share
  • பரம்பொருள் பாமாலை-6

    தண்டுவட மாகிநீ எனைநிற்க வைத்தாய்,

    உண்டஉண வாகவே உதிரத்தில் சேர்ந்தாய்,

    வண்டுதொட வாடிடும் அணிச்சத்தைப் போலவே,

    கண்டுமுனைக் காணாமல் நான்வாடி னேனே!                                                              33

     

    பத்துவடி வெடுத்து நின்ற மாலுக்கும்,

    பத்துசிர மெடுத்த இலங்கைக் கோனுக்கும்,

    சித்துவடி வாகிமுழு முக்தியடைந் தோருக்கும்,

    பித்துவடி வானமுது பரமனே துணை!                                                               34

     

    கரிமுகனும் கந்தனும் இருபுறமும் இருக்க,

    திரிபுறம் எரித்தவன் உடலோடு இணைந்து,

    பரிமளம் மணக்கும் பார்வதியும் இருக்க,

    விரிமனம் கொண்டிந்த காட்சியைக் காண்போம்!                                                           35

     

    வினோதத் தாண்டவனே, வெண்ணிலவைப் பூண்டவனே,

    விவாதப் பொருளாக என்மனதில் நீண்டவனே,

    விகாரமனம் நீக்கும் வேலவனின் ஆண்டவனே,

    விதானமாகி நின்று காக்கும் கூத்தனே!                                                                            36

     

    இரவும் பகலும் நீங்கா துலகில்,

    அரவம் பூண்டு ஆடும் நாதனின்,

    பரவும் கருணைப் பேரொளி தன்னில்,

    குரவர் போல அனைவரும் நனைவோம்!                                                                      37

     

    பச்சை யப்பனாய், பசுப தீசனாய்,

    அம்மை யப்பனாய், தில்லை நாதனாய்,

    புற்றிடங் கொண்ட புனித ஈசனாய்,

    பக்தனைக் காக்க அத்தன் வருகிறான்!                                       38

     

    கோபியரோ டாடியவன், பாண்டவர்கள் நாடியவன்,

    ஆநிரைகள் அசைந்தாட அழகுகுழல் ஊதியவன்,

    தீபமெனும் சீதையினைத் துயரமுடன் தேடியவன்,

    பாடியதும் நாடியதும் பெருமைமிகு ஈசனையே!                                                            39

     

    அரசமர இலைகள் அசைந்தாடும் இன்னிசையில்,

    அருவிநீர் சலசலத்து அசைந்தோடும் தண்ணிசையில்,

    அடர்கறுங் குயிலிசைக்கும் அழகான பண்ணிசையில்,

    அமர்ந்திசைத் திடுவான் அம்மை யப்பன்!                                                                          40

    Share
  • அன்புள்ள (மணிமொழி) அம்மாவுக்கு!

    அன்புள்ள அம்மாவிற்கு,

           தங்கள் வயிற்றில் உதிக்கும் பெரும்பேறு பெற்ற அன்பு மகன் சண்முகம் எழுதும் கடிதம். இந்தக் கடிதத்தை நானோ இல்லை என்னுடன் பிறந்த மற்ற எழுவரில் ஒருவரோ, தங்களுக்குப் படித்துக்காட்டத் தாங்கள் இவுலகில் இல்லை என்ற எண்ணம், இலந்தை முள்ளில் சிக்கிக் கொண்ட வெளவாலைப் போல என் மனத்தைக் கிழித்தாலும், அரூபமாக நின்று எங்களைக் காக்கத் தொடங்கி இருக்கும் தாங்கள் நிச்சயம் இம்மடலுக்குச் செவிமடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

          பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், பெரும் செல்வம் சேர்க்கவில்லை எனினும், வாழ்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு, பொருளாதாரச்சுமை வாழ்க்கையை நெருக்கடிக்கு ஆளாக்காத வகையில் இன்று உன் மக்களாகிய நாங்கள் வாழுகிறோம் என்றால், அதற்காக வாழ்க்கை முழுவதும், நீங்களும் அப்பாவும் எதிர்கொண்ட இன்னல்களும், வறுமையை எதிர்த்துப் போரிட்டு, வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் எங்களைக் கரையேற்ற வேண்டும் என்ற எண்ண வெள்ளத்தில் நீங்கள் இருவரும் நீந்தியதே காரணம் என்பதை நாங்கள் அனைவரும் மனப்பூர்வமாக உணர்கிறோம்!

          பெரும் தமிழ்ப்புலமையும், கணித அறிவும் பெற்றிருந்த அப்பாவால், எட்டுப் பிள்ளைகளையும் காப்பாற்றுவதற்குத் தேவையான பொருளீட்ட முடியாமல் போக, எப்பாடுபட்டாவது பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற உந்துதலால், அவர் பொருள் தேடி பல ஊர்களுக்குச் சென்றுவிட்ட சமயங்களில் தனி ஆளாக நின்று சிறுவர், சிறுமிகளாகவும், மழலைகளாகவும் இருந்த எங்களைக் காத்த தங்களின் துணிவை எண்ணினால் இன்றும் மெய்சிலிர்க்கிறது.

          பொருள் தேடிப் பிரிந்து சென்ற அப்பா, மாதக் கணக்கில் திரும்பி வராத நிலையில், வயிற்றிற்கான உணவைக் கூடப் பெறமுடியாமல், வயல்வெளி ஓரங்களில் வளர்ந்திருந்த கீரைகளைப் பறித்து, உப்பை மட்டும் இட்டு வேகவைத்து எங்கள் பசியாற்றிய ஒரு இரவு வேளையில், நாற்பது வயதைக் கடந்திருந்த  உங்களிடம் தவறாக நடந்து கொள்ளும் கீழ்த்தரமான எண்ணம் கொண்ட சில ஆணாதிக்க வல்லூறுகள், நம் வீட்டுக் கதவின் மீது கற்களை எரிந்து நம்மை அச்சுறுத்த முயல, ஓரிரு நிமிடம் அச்சத்தில் உறைந்த நீங்கள், எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் தீயாக எரிந்து கொண்டிருந்ததாலோ என்னவோ, வீட்டில் இருந்த அரிவாளைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு,

    “டேய், எவன்டா அது பொட்டப் பசங்களா, தைரியமான ஆம்பளையா இருந்த உள்ள வந்து பாருங்கடா”

    என்று பேருருவம் எடுத்து நின்று, பெருங்குரலெடுத்துக் கத்திய, ஒரு சில நொடிகளில், கதவின் மீது மோதிய கற்களின் ஓசை நின்று போக, எங்களைக் கட்டியணைத்துக் கொண்டு கண்ணீர் விட்ட உன் வயிற்றில் உதிக்க நாங்கள் பெருந்தவம் செய்திருக்க வேண்டும் அம்மா!

    வாழையடி வாழையாய் வறுமையைக் கண்டும்,

    வாய்மைமதி தூய்மையுடன் வாழ்வியல் கொண்டு,

    வானுயரச் சிந்தனையை வழுவாமல்  கொண்டு,

    வாழ்க்கையைக் கற்பித்த தேவதை நீயே!

           அப்பா பெருள் தேடிப் பிரிந்து சென்றிருந்த மற்றொரு தருணத்தில், வறுமையின் கோர முகத்தைப் பார்த்துப் பார்த்து சலிப்படைந்திருந்த நீ, புலியிடம் சிக்கிக் கொண்ட கலைமான், முதலில் உயிரைப் பிடித்துக் கொண்டு தப்பித்து ஓட முயன்று, பின்னர் தப்பிச் செல்ல வாய்ப்பில்லை என்று உணர்ந்தவுடன், மரணத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை அடைவதுபோல, வறுமைப் புலியிடமிருந்து வாழ்க்கைக் கலைமானைக் காத்துக் கொள்ள இயலாமல், மரணத்தை தழுவிடும் மனநிலையை அடைந்து, உணவில் நஞ்சினைக் கலந்து, எங்கள் அனைவருக்கும் கொடுத்து, நீயும் உட்கொண்டு, வாழ்க்கையை முடித்துக் கொள்ள இருந்த தருணத்தில், எங்கிருந்தோ திடீரென்று இறைவன் போலத் தோன்றி, நம் அனைவரையும் தடுத்துக் காப்பாற்றி, தன் குடும்பம் வறுமையில் இருந்த நிலையிலும் நமது பசியை ஆற்றிய, உன் சகோதரியும் என் சிற்றன்னையுமான “சின்னக்காள்” அம்மாளை, இன்றும் ஒவ்வொரு வேளை உணவு உண்ணும் முன்னும் நான் வணங்கத் தவறுவது இல்லை. அந்த நிகழ்வுகளை இன்று நினைத்தாலும் என் கண்களில் பெருக்கெடுக்கும் கண்ணீரின் வெப்பத்தில் என் கன்னங்கள் இரண்டும் வெந்துவிடுவது போல உணர்கிறேன்.

                வறுமையின் உச்சக் கட்டத்தில் நம் வாழ்க்கை இருந்த காலகட்டத்தில், நம்மை அரவணைத்து வாழ வைத்த தெய்வங்களான பொன்னம்மா அத்தை, தங்களது மற்றொரு சகோதரியும் என் சிற்றன்னையுமான காமாட்சியம்மாள், இன்னும் பலரையும் என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு இணையான இடத்தில் வைத்துப் போற்றி வருகிறேன் அம்மா!.

     இளமையினில் வறுமையறு புதல்வரொடு மடிவதென,

    ஈன்றோர் விதித்த கெடுவில்,

    நளசுவையி லுணவுவகை கனிவொடுறு பசியகல,

    பாங்காய் அளித்த தெய்வம்,

    பண்புநிறை சின்னக்காள் பாரிலொரு தெய்வமன்றோ!

    அன்புபெரு கிடுமன்னை காமாட்சி, பொன்னத்தை,

    வளமான வாழ்வுக்கு வழிகோல வித்திட்ட,

    மகிழ்வான தெய்வங்களே!

    ஏழ்மையிலு மேழைக்கு இன்முகத் தோடுதவி,

    செய்தவர்கள் தெய்வமன்றோ!

    வாழ்வில்நெறி பிறழாது எனைவகுத் துய்விக்க,

    வள்ளலென வந்த பேரும்,

    காலத்தி லிவரன்றி ஞாலத்தி லொருதெய்வம்,

    என்னுள்ளம் கண்ட திலையே!

    ஆலயம் சென்றாலு மங்குந் தினம்தொழும்,

    தெய்வங்கள் இவர்களன்றோ!

          இதுபோல வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தாலும், எங்களைக் காப்பாற்றி வெற்றிப் படிகளில் ஏற்றிவிட வேண்டும் என்ற உங்களின் நெஞ்சுரத்திற்கு முன்னால் புலியைக் கண்டு அஞ்சி ஓடும் யானையைப் போல, வறுமை உங்கள் உழைப்பிற்கும், தாய்மை உணர்வுக்கும் பணிந்து மெல்ல மெல்லப் பின்வாங்கத்தொடங்க, நம்பிக்கையுடன் எங்களைக் கல்வி கற்கத் தூண்டி, கிடைத்த சின்னச்சின்ன வாய்ப்புகளையும் முறையாகப் பயன்படுத்தி, எட்டுப் பிள்ளைகளையும் ஒருவர் பின் ஒருவராகக் கரையேற்றிய உங்களின் அசாத்தியத் திறமையை இன்றும் நாங்கள் வியந்து போற்றி, உங்களின்  பெயரன் மற்றும் பெயர்த்திகளுக்குத் தொடர்ந்து, அவர்களது மழலைப் பருவத்தில் இருந்து எடுத்துச் சொல்லி வந்தோம்.

    இன்று அவர்களும் கல்வியை முடித்து, தங்களுக்கென ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து, அதில் வேரூன்றி வெற்றிபெற்று உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கலியாணம் முடிந்து, தத்தம் குடும்ப வாழ்க்கையில், மகிழ்வாக ஈடுபட்டு வருவதைக் கண்டு, உங்கள் மக்களாகிய நாங்கள் எட்டுப் பேரும் ஆனந்தம் அடைந்து நிற்கிறோம்.

          இந்நிலையில் உங்கள் பெயரன் மற்றும் பெயர்த்திகள், நம் குடும்பம் இந்த அளவிற்கு சிறப்பாக மேம்பட்டு வருவதற்கு ஆணிவேராக நின்ற தங்களின் பாட்டியையும், தாத்தாவையும் மகிழ்ச்சி நிறைந்த அன்புடனும், நன்றியுடனும் நினைவு கூர்ந்து போற்றுவதற்காக ஒருவிழா எடுக்க  முடிவு செய்தனர்.

          மூன்று நாட்கள், உங்களின் மக்கள் மற்றும் பெயரன் பெயர்த்திக்ள என மொத்தம் 83 பேர் ஒன்றுகூடி உங்கள் இருவரின் பெருமையையும், தியாகத்தையும் மட்டுமே பேசிப் பேசி மகிழ்ந்தோம்.

    தாத்தா, பாட்டியின் நினைவாக “ஒன்றுகூடி மகிழும் விழா” என்று இதற்குப் பெயரிட்டு, உங்களைப் பெருமைப் படுத்தினர்.

          திருச்செங்கோடு அருகிலுள்ள மோர்ப்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்த நீங்களும், பெருந்துறை அருகிலுள்ள தச்சம்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்த அப்பாவும்,  சிறுவர், சிறுமியராக இருந்த பொழுது உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான நிகழ்வுகளையும், (உங்கள் வாயிலாக நாங்கள் அறிந்து கொண்டது) நாங்கள் எட்டுப் பேரும் சிறுவர் சிறுமிகளாக இருந்த பொழுது நம் வாழ்க்கையில் நடந்த சுவையான, கசப்பான நிகழ்வுகளையும், உங்கள் பெயரன் பெயர்த்திகளுடன் பகிர்ந்து கொண்டோம்.

          அந்த நிகழ்வுகளைக் கேட்டு சில நேரங்களில் கண்ணீரோடும், சில நேரங்களில்  மனம் நிறைந்த சிரிப்புடனும் அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியது மறக்க முடியாததாக அமைந்துவிட்டது.

          மூன்று நாட்கள் நடந்த விழாவின் முத்தாய்ப்பாக, சிலர் நம் வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளையும் ஓவியங்களாக வரைந்து எங்களுக்கு அளித்தனர்.

          “விழுதுகளின் விழா” என்னும் தலைப்பில் ஒரு கவிதையை எங்களுக்குப் பரிசாக வழங்கி எங்களை ஆனந்தக் கடலில் ஆழ்த்தினர். அந்தக் கவிதையையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

    விழுதுகளின் விழா

    போற்றும் புகழ்மோர்ப் பாளையம் பிறந்து,

    பாவளத் தச்சம் பாளையம் புகுந்து,

    போர்க்குணம் நிறைந்த சின்னம் மாள்நற்,

    பாத்திறம் நிறைந்த மாரிமுத்துவுடன்,

    பூக்கும் இல்லற வாழ்வில் இணைந்தார்!

    வாமன வடிவில் இருந்த வறுமை,

    வான்வரை வளர்ந்து வெறுமை காட்ட,

    வறுமையை வீழ்த்தும் வேகம் கொண்டு,

    வெற்றிப் படிகளில் மக்களை ஏற்றினர்!

    நுட்பமதி சின்னம்மாள் நோன் பிருந்து,

    வித்தகஞ்செய் முத்துமாரி தோள் இணைந்து,

    வெப்பமுமிழ் வாழ்வுதனை வெற்றி கொண்டு,

    இப்புவியில் வாழ்வாங்கு வாழுகின்றார்!

     

    அட்ட மா சித்தி களைப்,

    பெற் றெடுத்த ஆலமரம்,

    சுட்ட மா வறுமை யிலும்,

    சிற்பமென வாழ்ந்து நின்று,

    தொட்டு வானை எட்டிவிடும்,

    வித்தை களைக் கற்பித்து,

    விழுதுகளை வளர்த் தெடுக்க,

    விழுதுகளின் விழுதுகளும்,

    பழுதின்றிப் படர்ந்து நின்று,

    பணிவுடனே வணங்கு கின்றோம்!

    அன்புடன்,

    விழுதுகளின் விழுதுகள்.

    குறிப்பு:

          மாரிமுத்து-சின்னம்மாள் தம்பதியரின் மக்களுக்காக, அம்மக்களின் பிள்ளைகள் இணைந்து நடத்திய “ஒன்றுகூடி மகிழும் விழாவில்” வழங்கப்பட்ட கவிதை.

    தாத்தா பெயர்                                                           :               மாரிமுத்து.

    தாத்தாவின் ஊர்                                                      :               தச்சம்பாளையம்

    பாட்டி பெயர்                                                             :               சின்னம்மாள்

    பாட்டியின் ஊர்                                                        :               மோர்ப்பாளையம்

    மக்கட் செல்வங்களின் எண்ணிக்கை             :               எட்டு (8)

    பெயரன், பெயர்த்திகளின் எண்ணிக்கை         :              இருபத்து இரண்டு (22)

    கொள்ளு/எள்ளுப் பெயரன் பெயர்த்திகள்      :              இருபத்து ஏழு(27)

          இந்தக் கடிதத்தை எழுதியதன் மூலம் உங்களுடனும் அப்பாவுடனும் நேரடியாகப் பேசிய மனநிறைவை அடைகிறேன் அம்மா!

    இப்படிக்கு,

    உங்கள் அன்பு மகன்,

    சண்முகம்.

    Share
  • பரம்பொருள் பாமாலை-5

    நெல்வி ளையும் தென்னாட்டில் பூத்தவனை,

    வில்வ இலை வடிநீரால் பூசித்து,

    செல்வ நிலை கல்விபுகழ் பெற்று,

    வல்ல மையும் நல்வாழ்வும் பெறுவோம்!                                                                      25

     

    நாட்டிய வேதத்தில் தோன்றிய நாயகனே,

    நீட்டிய பாதத்தால் தேவியை வென்றவனே,

    ஆட்டிய அரவத்தின் நஞ்சினை உண்டவனே,

    வாட்டிடும் துன்பத்தைப் போக்கிடும் ஆண்டவனே!                                                        26

     

    நீருக்குள் ஊடுருவும் சூரிய ஒளியாய்,

    உயிருக்குள் ஊடுருவும் வீரிய ஒளியே,

    பாருக்குள் நீயுலவிக் காப்பதை உணர்ந்தால்,

    யாருக்கும் துன்பங்கள் தோன்றுதல் அரிது!                                                                     27

     

    செவ்வேளின் வடிவத்தில் சிகரத்தில் நின்றாய்,

    வெவ்வேறு வடிவத்தில் அகிலத்தில் வந்தாய்,

    ஒவ்வாத மனதிலும் ஒளியாக மலர்ந்தாய்,

    இவ்வேழை உள்ளத்தில் இசையாக நிறைந்தாய்!                                                          28

     

    குற்றாலக் குறவஞ்சி வழியாக வந்தாய்,

    கற்றாடக் கவின்மிகு தமிழாக வந்தாய்,

    பொற்பாதம் தனைத்தூக்கிப் புயலாக வந்தாய்,

    உற்றாடும் அடியவருள் தென்றலாய் நின்றாய்!                                                              29

     

    இல்லாமல் இருக்கும் நாதனின் பேரருள்,

    இல்லாமல் இல்லை ஈரேழு உலகம்,

    புல்லாகப் பிறக்கும் பிறவி என்றாலும்,

    தில்லையின் நாதனே நீர்தந்து காப்பான்!                                                             30

     

     

    நிலைத்து நிற்கும் நாதனை வணங்கி,

    மலைத்து நிற்கும் மனதின் மாயையைத்,

    தொலைத்து நிற்கும் தூயவர் அடிகளை,

    நினைத்து வாழ்ந்தால் வீடுபேறடைய லாம்!                                                                   31

     

    மானைக் கையில் ஏந்திய நாதனே,

    கூனை நிமிர்த்திய பாண்டியன் தேவனே,

    தூணைப் பிளந்த சிம்மந் தன்னிலும்,

    வானைப் போல விரிந்த ராசனே!                                           32

    Share
  • பரம்பொருள் பாமாலை-4

    வானமா மலையில் பூக்கும் சிறுவானி,

    தூயகா விரியில் இணையும் பூவானி,

    பாயுமாப் பொதிகைப் பொருநை தண்வானி,

    போலவே குளிரும் ஈசன் திருமேனி!                                    17

     

    சுற்றும் விண்ணோடு சுழலும் சிவனின்,

    முக்கண் என்பதன் மெய்ப்பொரு ளறிந்தால்,

    முத்தண் ணாறுகள் முறையாய்க் கூடும்,

    பித்த வாதகபம் பரம்பொரு ளாகும்!                                   18

     

    புங்கன் மர நிழலைப் போல,

    அங்கம் அது குளிர்ந்தவன் நீயே,

    பொங்கும் சுடர் நுதற்கண்ணோடு, குளிர்

    திங்கள் தனைச் சுமப்பவன் நீயே!                                     19

     

    இரு வேறு துருவங் களையும்,

    அரு கருகே அமைபவன் நீயே,

    திரு வோடு சுமப்பவர் களையும்,

    பரி வோடு அணைப்பவன் நீயே!                                                                           20

     

    பெண் சுமந்த பாகத்தான், பிட்டுக்கு,

    மண் சுமந்த தேகத்தான், இன்னும்

    என் சுமக்கச் சொன்னாலும் சுமந்திடுவான்,

    தன் பண் சுமந்த பக்தனுக்காய்!                                                                          21

     

    அட்ட மா சித்திகளைப் பெற்றவரும்,

    சுட்ட மா வறுமையினை உற்றவரும்,

    நட்ட மாடு முன்னைக் கண்டறிந்தால்,

    கட்டி மா மனமதனை ஆண்டிடலாம்!                                                                   22

     

    மதுவேந்தும் மலர்களை ஏந்திடும் மார்பினனை,

    மழுவேந்தும் கைகளுடை தீஞ்சுடர் மேனியனை,

    விழுதேந்தும் மண்ணாக மனதினில் ஏந்தி,

    பழுதேதும் இல்லாமல் பணிவுடன் வாழ்வோம்                                     23

     

    வெற்றுடம்பை வாட்டும் குளிர் காற்றாய்,

    வெட்டிரும்பை வார்க்கும் அனல் காற்றாய்,

    வெப்பமுமிழ் கண்ணின் அருள் காற்று,

    வட்டமிட்டு வாழ்வை வளமாக் கும்!                                                                24

    Share
  • பரம்பொருள் பாமாலை-3

    இருளா சனமிட் டுயிரில் அமர்ந்த,

    பொருளா சையினைக் களையா தவரால்,

    திருவா சகமா யுருவா னவனின்,

    அருளா சியினைப் பெறுதல் அரிது!                                                                                9

     

    பிச்சையும் பிடி சாம்பலும் கொண்டு,

    பித்தனாய் நாடு வீதியில் நின்று,

    கச்சையாய்ப் புலித் தோலைக் கொண்டு,

    நர்த்தனம் புரி நாதனைக் கண்டேன்!                                                                                 10

     

    பனியா சனமே லமர்ந்தா னவனை,

    மணிநா வசைவோ டிசையா னவனை,

    கனியா மனதோ டிருப்போ ரினையும்,

    இனிதா யணைத்துக் கனிந்திடச் செய்வான்!                                                                   11

     

    நடரா சனுடன் நடமா டிடவே,

    சுடரா னவனுள் சுடரா கிடவே,

    இடரா யுயிரைப் படரும் துன்பம்,

    தொடரா திருக்கத் தொடர்வோம் அவனை!                                                                     12

     

    காடெடுத்துக் குடியிருக்கும் கயிலை நாதன்,

    தீயெடுத்த நெற்றிக்கண் ஒளி பாய்ச்சி,

    கூடெடுத்த பிண்டத்தின் பிணி நீக்கி,

    ஓடெடுத்துக் கண்டத்தில் மாலையாகச் சூடினானே!                                                  13

     

    குறிஞ்சிக் காடென விரிந்த சடையில்,

    குளிர்நீர் கங்கை பாய்ந்து பரவ,

    குமரனை வழங்கிய நெற்றிக் கண்ணின்,

    கனலது தணிந்து கருணை பொழியும்!                                                                           14

     

    நாணல் வளைவதில் புதுமை இல்லை,

    மூங்கில் வளைவதில் புதுமை இல்லை,

    நாளும் நாதனைத் துதித் துயரும்,

    மானிட மனமே புதுமை என்போம்!                                                                                  15

     

    வானவில் வளைவதில் புதுமை இல்லை,

    அதனேழு நிறங்களில் புதுமை இல்லை,

    வளிவெற் றிடமென நிறைந்தி ருக்கும்,

    விமலன் நிறமே புதுமை என்போம்!                                                                                 16

     

     

    Share
  • பரம்பொருள் பாமாலை-2

     

    நுதற்கண் கொண்டவனே, நூதன மானவனே,

    புறக்கண் காட்சிகளில், பூரணமாய் நிறைந்தவனே,

    அகக்கண் கொண்டெந்தன் ஐம்புலனை அடக்கி,

    முதற்கண் அடிபணிந்து வணங்குகிறோம் உன்னை!                                                      1

     

    வட்டூர் வைரவனை வணங்கிப் பணிந்து,

    மொட்டாய் இருக்கும் மனமடலை விரித்து,

    கொட்டும் கருணை மழையில் நனைந்து,

    கட்டுண் டவனது அன்பில் கரைவோம்!                                                                                  2

     

    ஆற்றில் தவழ்ந்த ஆதவப் பிள்ளையாய்,

    ஆற்றல் நிறைந்த நாதனும் தவழ்ந்து,

    போற்றும் புகழ்மோர்ப் பாளையம் வந்து,

    சீற்றம் தணிந்து சீருடன் அமர்ந்தான்!                                                                                     3

     

    மாசிச் சிவன் இராத்திரி தோறும்,

    பூசித் தவன் காலடி பணிந்தால்,

    காசிக் கரை கங்கை சென்று,

    பூசித் திடும் பலனைப் பெறலாம்!                                                                                                4

     

    ஆதிநாத ரந்தமற்ற சோதி தன்னை,

    ஓதிமாத மாசிதன்னில் நோன்பி ருந்து,

    சாதிபேத மேதுமற் றமுத ளித்து,

    நீதிகீத மோதிவாழு முயர் குலத்தர்!                                                                                          5

     

    அட்ட மித்தி னங்கள் தோறும்,

    வட்ட மிட்டுன் னடிப ணிவோம்!

    நட்ட மிட் டருள் புரிந்து,

    சுட்ட நீறுபூசி யாடும் நாதனே!                                                                                                      6

     

    இடுகா டொடுவாழ்ந் திடுநா யகனே,

    நெடுநா ளடியா ரொடுவாழ் பவனே,

    தொடுவா னடியோ டுறுசெவ் வழகில்,

    நடுநா யாகமாய் நடமா டிடடா!                                                                                                   7

     

    முற்றும் துறந்த மூல நாதனை,

    குற்றம் தடுக்கும் ஆல காலனை,

    வற்றா கங்கை சூடு மாடனை,

    நற்றா மரைபோல் மலர்ந்து வணங்குவோம்!                                                                    8

     

    Share
  • பரம்பொருள் பாமாலை-1

     

    முன்னுரை :

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள வட்டூர் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட மோர்ப்பாளையம் என்னும் சிற்றூரில் எழுந்தருளி இருக்கும் வைரவநாதமூர்த்தியின்(பைரவர்)திருக்கோயிலில் அமர்ந்து சிவபெருமானைப் பற்றிப் பாடுவதாக மனதில் நினைத்து “பரம்பொருள் பாமாலை” என்னும் இச்சிறு தொகுப்பை எழுதுயுள்ளேன்.

          சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு மோர்ப்பாளையம், சேலம் மாவட்டம்  சங்ககிரி வட்டத்தில் உள்ள மோரூர் மகுடஞ்சாவடி அருகில் உள்ள கூடலூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த மூன்று அடியார்கள் ஆற்றில் நீராடச் சென்ற போது மரப்பேழை ஓன்று மிதந்து வரக் கண்டனர். அந்தப் பேழையைத் திறந்து பார்த்த பொழுது உள்ளே மரத்தினால் ஆன ஒரு அழகான பைரவர் சிலையைக் கண்டனர். இறைவனே தங்களைத் தேடி வந்ததைக் கண்டு மூவரும் பேருவகை அடைந்து இறைவனை வணங்கினர்.

          பின்னர் இறைவனின் திருவுருவச் சிலையை மோர்ப்பாளையம் கொண்டு வந்து கோயில் எழுப்பி வழிபடத் தொடங்கினர். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் சிவன் இராத்திரி தினத்தன்று மூன்று ஊர் மக்களும் ஓன்று கூடி இறைவனுக்கு விழா எடுத்துக்  கொண்டாடி வணங்கி வருகின்றனர். தைத் திங்கள் அமாவாசை தொடங்கி, மாசித் திங்கள் அமாவாசை வரை ஒரு மாதம் விரதம் இருந்து அதன் இறுதியில் மகாசிவன் இராத்திரி விழாவைக் கொண்டாடுகின்றனர். இந்த விழாவின் ஒரு பகுதியாக தமிழரின் தொன்மையான கலைகளில் ஒன்றான கூத்துக் கலையை வளர்க்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து தெருக்கூத்து நடத்தப்பட்டு வருகிறது. ஆதிநாதர் என்னும் வம்சத்தைச் சேர்ந்த இம்மக்களால் இறைவனுக்கு, மாதந்தோறும் தொடர்ந்து அட்டமித் தினத்தன்று பூசனைகள் செய்யப்பட்டு அடியார்களுக்கு திருஅமுது வழங்கப்பட்டு  வருகின்றது. கடந்த கி.பி.2001ம் ஆண்டு இறைவனின் அருளினாலும் சமயப் பெரியோர்களின் தொடர் முயற்சியினாலும் இக்கோயில் புனரமைக்கப்பட்டு திருக்குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.

     

    பரம்பொருள் பாமாலை

    காப்பு:

     

    சுழல் குழல் கரத் தனின்,

    திகழ் பெருங் கருணை யால்,

    குழல் திகழ் நிலவுடை யோன்,

    எழில் புகழ் புனைந்திடு வோம்!

     

    Share
  • குறவன் பாட்டு-28 (நிறைவுப் பகுதி)

    குறவன் நகர வாழ்க்கையைக் கண்டு தனக்குள் வினவுதல்

     

    அண்டை அயலாரைக் காண்பதற்கும் தயக்கம்,

    அன்பைப் பரிமாறிப் பேசிடவும் நடுக்கம்,

    அல்லல் கொண்டாலும் தனக்குள்ளே மறைக்கும்,

    அனாதை வாழ்க்கைக்குப் பெயர்தானோ நகரம்!                        228

     

    புரிந்து கொள்ளாத மணவாழ்க்கை மணக்கும்,

    புரிந்த பின்னாலோ வடுவாகி நிலைக்கும்,

    பிறந்த பிள்ளைகளோ பலநேரம் வதைக்கும்,

    பிறப்பின் பொருளுணராப் பரிதாபம் எவர்க்கும்!                                                                                229

     

    முறையற்ற மோகத்தில் மனதார வீழுகிறான்,

    முடிவற்ற துன்பத்தை முதலாளாய்த் கோருகிறான்,

    மறையுற்ற பொருளெல்லாம் இருளென்று பாடுகிறான்,

    கறையுற்ற காமுகனாய்க் கண்மூடி வாழுகிறான்!                                                                              230

     

    வலியில் வாடும் உயிர்க ளிடம்,

    வணிகம் பேசிப் பொருள் சேர்த்தான்,

    வறுமையில் வாடும் ஏழையை வாட்டிச்,

    சிறுமையில் வாழப் பழகி நின்றான்!                                                                                                          231

     

    கலியுகத்தில் உள்ள கொடுமைகளில், பெரும்

    கல்விச் சுமையும் ஒரு வகையோ,

    நலிவுற்ற மக்களை நஞ்சென வருத்திப்

    பலிகொள்ளும் பள்ளிக் கல்வி இதோ!                                                                                                        232

     

    கணிவுள்ள கண்களைக் காண்ப தெல்லாம்,

    கலியுகத்தில் மிகக் கடின மன்றோ?

    பணிவுள்ள மனிதனைக் காண்ப தற்கும்

    பெருந்தவம் செய்திட வேண்டு மன்றோ!                                                                                                233

     

    தருக்கள், குருவிகள், அறுகம் புற்கள்,

    எதற்கும் தெருவில் இடம் இல்லை,

    அதற்கென வருந்திக் கண்ணீர் சிந்த

    எவர்க்கும் இங்கே மனம் இல்லை!                                                                                                               234

     

    தனதுணர்வை மதிக்காத துரோகிகள் தாள்பற்றிக்,

    கனவுலகில் மிதப்பதே கடமை என்றான்,

    இனவுணர்வு இல்லாமல், தமிழமுதம் கொள்ளாமல்,

    பணவுணர்வு கொண்டுமன நிறைவு கண்டான்!                                                                                    235

     

    பாடுபொருள் இல்லாத கவிதை யாக,

    பாகனவன் இல்லாத யானை யாக,

    பார்வையாது இல்லாத விழிக ளாக,

    பயனற்று வாழ்வதிலே இன்பம் கண்டான்!                                                                                             236

     

    கானகம் காணாக் கொடுமைகளை, நரகக்

    கலியுகம் காணுது அனுதினமும், பரவிக்

    காட்டிலும் அதுகால் பதிக்காமல், விரைந்து

    காத்திடலே என் முதற் கடமை!                                                                                                                     237

     

    இல்லம் திரும்புதல்

     

    விற்பனை முடித்து விரும்பிய வண்ணம்,

    பற்பல பொருட்களை வாங்கிக் கொண்டு,

    நற்துணைக் குறத்தியும் குறவனும் இணைந்து,

    சுற்றம் நிறைந்த இல்லம் திரும்பினர்!                                                                                                      238

     

    சிறுவனைப் போலக் குறவனும் குறத்தியும்,

    சிறுகவலையும் இன்றிப் பறவைகள்  போல,

    சிறகினை விரித்து வாழ்க்கை வானில்,

    நறுமணம் வீசிப் பறந்த னரே!                                                                                                                          239

     

    (நிறைவு பெற்றது)

     

    இயற்கையோடு இரண்டறக் கலந்து, இரசித்து வாழ்ந்து, இறுதியில் இயற்கையுடன் இரண்டறக் கலப்பதே மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களின் வாழ்க்கை நோக்கம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொண்டு எளிமையாக வாழ்வோம்.

    வாழ்க இயற்கை!  வளர்க இயற்கை!!

    அன்புடன்,

    சச்சிதானந்தம்.

    Share
  • குறவன் பாட்டு-27

    குறத்தி நகர வாழ்வைக் கண்டு ஏங்கித் தனக்குள் பேசுதல் (சென்ற வாரத் தொடர்ச்சி)

    நீராவிக் குளியல்கள் நடத்திடலாம், கொஞ்சம்

    சீராகக் கேசத்தை அமைத்திடலாம், தொடர்ந்து

    ஈராறு மாதங்கள் அங்கு சென்றால்,

    பூலோக ரம்பை என ஆகிடலாம்!                                                                                                                   220

     

    வெள்ளரிப் பிஞ்சை வெட்டி எடுத்து

    வெண்ணையில் கொஞ்சம் தொட்டு எடுத்து,

    கண்களின் மேலே இட்டு எடுத்தால்,

    காந்தப் பார்வை பெற்று ஒளிரலாம்!                                                                                                           221

     

    அழகுக்குப் பொருத்தமாக, அங்கத்தை இறுக்கமாகத்,

    தழுவி நிற்கும் உடை உண்டு!

    கழுத்துக்கு வெகுதொலைவில், தோளிரண்டில் நிற்காமல்,

    நழுவி நிற்கும் உடையும் உண்டு!                                                                                                                222

     

    நாவோரம் சுவையூறும் பலநூறு பலகாரம்,

    நகரத்து அடுமனையில் நாள்தோறும் உருவாகும்,

    பாலூறும் தேனூறும் பல்வேறு இனிப்புகளும்,

    பகலிரவு பேதமின்றி எப்போதும் கிடைக்குமிடம்!                                                                              223

     

    சர்வதேச உணவுகளும் சுலபத்தில் கிடைத்துவிடும்!

    சர்வசதா காலமும், சந்தோசம் இருக்குமிடம்,

    சிள்வண்டாய் எப்போதும் ரீங்காரம் ஒலித்திருக்கும்

    செல்வங்கள் நிலைத்திருக்கும் சிங்காரப் பெருநகரம்!                                                                     224

     

    கர்மயோக ஞானங்கள் கற்றுத்தரத் தனித்தஇடம்,

    வர்மக்கலை தர்மங்கள் கற்பிக்க வேறுஇடம்,

    “கர்ணமகா ராஜாக்கள் கனிவோடு” உலவுமிடம்,

    மர்மமான தேசம்போல் மந்திரங்கள் சொல்லுமிடம்!                                                                       225

     

    கோபுரம் உயர்ந்திருக்கும், கோயில்கள் நிறைந்திருக்கும்,

    மாபெரும் அன்னதானம் மும்முறை தினம்நடக்கும்,

    மாளிகைச் செல்வங்கள் கோயிலை அலங்கரிக்கும்,

    மானிடர் உள்ளங்கள் மகிழ்ச்சியில் மலர்ந்திருக்கும்!                                                                      226

     

    பேரிடர் வந்தாலும் அரசாங்கம் துணையிருக்கும்,

    ஆரிருள் கொள்ளாமல் அனைவரையும் காத்துநிற்கும்,

    ஓரிடம் தப்பாமல் எல்லோர்க்கும் அன்பளிப்பை

    வாரித்தந்து இலவசமாய் வாழ்வ ளிக்கும்!                                                                                            227

    Share
  • குறவன் பாட்டு-26

    குறத்தி நகர வாழ்வைக் கண்டு ஏங்கித் தனக்குள் பேசுதல்

     

    மாட மாளிகை மயக்கும் கேளிக்கை,

    காடு கண்டதில்லை, குறவர் கொண்டதில்லை,

    நாடி ஒடுங்கவே நடக்கும் சுமையில்லை,

    கோடி மக்களுக்கும் கவலை துளியில்லை !                                                                                      212

     

    அதிகாலை வரைஉறங்க கானகத்தில் வாய்ப்பில்லை,

    அயர்ந்தாலும் பறவைகள் கண்மூட விடுவதில்லை,

    அகம்குளிரக் கண்ணுறங்கி, ஆசைதீர்ந்து எழுந்துவரும்,

    அழகுமெத்தையில் புரண்டுறங்கும் வாழ்க்கை நகரிலே!                                                             213

     

    எழுந்து சென்று உடல் நடுங்க,

    பொழிந்து கொட்டும் அருவிக் குளிரில்,

    கலைந்தும் கலையா ஆடையுடன்,

    நனைந்து உறையத் தேவை யில்லை!                                                                                                      214

     

    இதமான வெந்நீரில் தனியாக ஒருஅறையில்,

    எவரும் பார்ப்பா ரென்னும் பயமின்றி,

    உற்சாக மனம் கொண்டு, மணம்

    உற்றுச் சிறந்த பொருளிட்டு நீராடலாம்!                                                                                                  215

     

    குளிக்கும் முன்னர் காலைக் கடனை,

    கழிக்கவும் கலங்கும் நிலை இல்லை,

    அதற்கும் தனியோர் அறை உண்டு,

    அங்கும் நறுமணக் காற்றுண்டு!                                                                                                                       216

     

    கனி பறிக்கக் காய் பறிக்கக்,

    கண் கவரும் மலர் பறிக்கக்,

    கால் கடுக்க நடக்க வேண்டாம்,

    கான் கடந்து சலிக்க வேண்டாம்!                                                                                                                   217

     

    கடல் போன்ற பரப் பளவில்,

    கடை விரித்துக் காத்து நிற்கும்,

    “கருணைக் கடலோர்” பலர் உண்டு,

    களைப்பின்றி அனைத்தும் அங்கே வாங்கிடலாம்!                                                                            218

     

    அழகுக்கு அழகு சேர்க்கப் பல,

    அழகான நிலையங்கள் ஆங்காங்கே இங்குண்டு,

    அதிரூப சுந்தரியாய் அனைவரையும் மாற்றிவிட,

    அவருக்கு அறிவாற்றல் திறன் உண்டு!                                                                                                     219

    Share
  • குறவன் பாட்டு-25

    குறத்தி நகரப்பெண் உரையாடல் (சென்ற வாரத் தொடர்ச்சி)

    குறத்தி:

    நெல்லிக் கனியை முழுதாய் நானும்,

    அள்ளிக் கைகளில் அன்புடன் தருகிறேன்!

     

    மாங்கனி களையும் உங்கள் மனம்படி,

    பாங்குடன் பிரித்து எடுத்துத் தருகிறேன்!

     

    எட்டுக் கட்டுக் கீரை எதற்கு?

    வீணாய் வாடிப் போகுமம்மா!                                                                                                     203

     

    நகரப்பெண்:

    எட்டுக் கட்டுக் கீரைகளை,

    எத்தனை நாட்கள் ஆனாலும்,

    கெட்டுப் போக விட்டிடாமல்,

    காக்கும் கருவுயில் வைத்திடுவேன்!                                                                                                            204

     

    குறத்தி:

    காக்கும் கடவுளை நானறிவேன்,

    காக்கும் கருவியை அறியேனே!

    அப்படி என்ன கருவியது?                                                                                                                                   205

     

    நகரப்பெண்:

    வந்ததும் கொடுத்த மோரினை நான்,

    அதிலே வைத்துத் தந்ததால் தான்,

    உந்தன் தாகம் தீர்ந்தது பெண்ணே!                                                                                                               206

     

    குறத்தி:

    காக்கும் கருவி என் தாகம்,

    தீர்த்ததை எண்ணி வியக்கின்றேன்,

    காக்கும் கருவி இல்லையம்மா, தாகம்

    தீர்த்தது உங்கள் கருணை அம்மா!                                                                                                               207

     

    நகரப்பெண்:

    சரிசரி நீயும் பேச்சு வாக்கில்,

    மலர்களைப் பற்றி மறந்த தேனோ?

    மலர் என்ன மலரைக் கொண்டுவந்தாய்?

    இப்போதாவது சொல் பெண்ணே!                                                                                                                  208

     

    குறத்தி:

    மறந்ததை, மறந்து மன்னித் திடுங்கள்,

    மலர்களில் சிறந்த மலர்களை எடுத்து,

    பாதியை மட்டும் சரமாய்த் தொடுத்து,

    மீதியை உதிரியாய்க் கொண்டு வந்தேன்!

     

    பவள மல்லிப் பூக்களை,

    உதிரியாகக் கொண்டு வந்தேன்!

     

    படர்ந்து நின்ற கொடியில் பூத்த,

    பச்சைக் கம்பு மல்லிகையை,

    சரஞ் சரமாய்த் தொடுத்து நானும்,

    சிரம மின்றி எடுத்து வந்தேன்!

     

    மகேசன் மார்பில் சூடிட,

    மலர்ந்து நின்ற அரளியை,

    வணங்கி நின்று கொய்துவந்தேன்!

     

    என் கணவன் எனக்காக,

    எடுத்து வந்த மலர்களிலே,

    எழில் மிகுந்த கமலத்தில்,

    இரண்டெடுத்துச் சூடிமீதி மலர்களை,

    எல்லோர்க்குமாய் எடுத்து வந்தேன்!                                                                                                            209

     

    நகரப்பெண்:

    நான் சூடிட மல்லிகையும், என்

    மணவாளன் மார்பில் சூடத் தாமரையும்,

    மகேசனின் மார்பில் சூடிட அரளியையும்,

    மங்கலமாய்த் தந்து செல் குறத்தி!                                                                                                               210

     

    குறத்தி:

    மல்லிகை சூடிய குழலும்,

    சந்தனம் சூடிய நுதலும்,

    புன்னகை சூடிய இதழும்,

    உங்களின் எழிலைப் பன்மடங் காக்கும்,

    அன்புடன் சென்று வருகிறேன் அம்மா!                                                                                                     211

    Share
  • குறவன் பாட்டு-24

    குறத்தி நகரப்பெண் உரையாடல்

     

    நகரப்பெண்:

    கோடைக்கு இதமாய்க் குளிரூட்டப்பட்டு, இஞ்சிச்

    சுவையேற்றப்பட்ட மோர்கொண்டு வரட்டுமா குறத்தி?

    குறத்தி:

    ஏழைக்கு இறங்கும் இறைவனைப் போல,

    என்தாகம் தீர்க்கும் அன்பானதாயே, வணக்கம்!                                                                                   199

    நகரப்பெண்:

    என்னில்லம் தேடி வருவோரின் தாகம்,

    தீர்ப்பதென் கடமை, மனமார மோர்பருகு பெண்ணே!

    குறத்தி:

    இன்முகம் கொண்டு, இஞ்சிமணம் கொண்டு,

    வஞ்சமனம் இன்றி மோர் தந்ததால்,

    என் தாகம், கவலை தீர்ந்ததம்மா!                                                                                                 200

    நகரப்பெண்:

    காய் என்ன காயோ? சுவைக்கக்

    கனி என்ன கனியோ? சூட

    மலர் என்ன மலரோ கொண்டுவந்தாய்?

    குறத்தி:

    சமைக்கச் சுவையான கோவைக்காய் கொண்டுவந்தேன்,

    வனக்கத் தோதாகச் செங்கீரை சுமந்துவந்தேன்,

    வற்றலுக்கு ஏற்ற சுண்டைக்காய் கொண்டு வந்தேன்,

    விற்றிடல் எளிதென்று விரும்பிக் கொண்டு வந்தேன்!

     

    மணக்கும் மாம்பழங்கள் மறக்காமல் எடுத்துவந்தேன்!

    இனிக்கும் நெல்லிக்கனிகள் உங்களுக்குப் பிடிக்குமென,

    இடையில் வைத்துக் கட்டி வந்தேன்!

     

    மாம்பழம் போல் நிறம்கொண்டு, சமயத்தில்

    அதனை விஞ்சும் சுவை கொண்டு,

    மிளகைப் போல விதை கொண்டு ,

    மலிவான விலை கொண்ட பப்பாளி கொண்டு வந்தேன்!                                                           201

     

    நகரப்பெண்:

    இடையில் இருக்கும் நெல்லிக் கனியை,

    முதலில் முழுதாய் எடுத்துத் தந்திடு!

     

    சிறு நெல்லிக் கனி அளவு,

    பெரு உருவம் பெற்றிருக்கும் சுண்டைக்காயை,

    இரு கைகள் இணைத்தள்ளி இட்டுவிடு!

     

    கோவைக் காயின் வாசம் எனது,

    கணவருக் கென்றும் பிடிக்காது, எனைக்

    கோபிப்பாரே அதை நான் சமைத்தால்,

    அதனால் எனக்கது வேண்டாம் குறத்தி!

     

    வனக்கத் தோதாய் இருக்கும் கீரையில்,

    எனக்கு எட்டுக் கட்டுகள் கொடுத்திடு!

     

    உடனே அறுத்துச் சுவைக்கும் நிலையில்,

    உள்ள மாம்பழங்கள் மூன்று கொடுத்திடு!

    நாளை மறுநாள் பழுக்கும் நிலையில்,

    இருக்கும் மாம்பழம் இரண்டு கொடுத்திடு!

     

    தப்பாமல் உண்ண வேண்டும் என்றாலும்,

    பப்பாளிப் பழம் கொண்ட பெரும்சுவையை,

    எப்போதும் விரும்பாத பிள்ளைகளால்,

    இப்போது ஒன்று மட்டும் போதும்பெண்ணே!                                                                                       202

    Share