ஊடகங்களின் நாடகம்

உள்நோக்கம் கொண்டுசில ஊடகங்கள் செயலாற்றி,

முள்நீக்கும் பணிமறந்து மூடருக்குத் துதிபாடி,

பல்லாக்குத் தூக்குவதில் பரமசுகம் கண்டு,

கள்ளாட்டம் ஆடுகின்ற கயவர்களைத் தலைவரென்று,

சொல்லாற்றல் கொண்டுபேசித் தமிழர்களின் மனம்மாற்றி,

எல்லோர்க்கும் தெரியும்படி எளியனை ஏமாற்றும்!

நண்பர்களே…..

கடைக்கோடித் தமிழனுக்கும் உண்மைகளைக் கொண்டுசெல்ல,

கற்றறிந்த தமிழர்களே, உடனெழுந்து வாருங்கள்!

இடைத்தரகர் போலின்றி இதயமொன்றி இப்பணியை,

இன்முகமாய்ச் செய்திடலாம் இளைஞர்களே வாருங்கள்!

உடைத்தெறிந்து ஊடகங்கள் செய்யுமிந்த மாயைகளை,

உயிர்சிலிர்த்துப் பாமரர்க்குப் புரியும்படி உரையுங்கள்!

இமைக்காமல் உறங்காமல் இருபொழுதும் எப்பொழுதும்,

நமைக்காக்கும் நல்லரசை அமைக்கும்வழி என்னவென்று,

சளைக்காமல் சிந்தித்துச் சகலருக்கும் சொல்லுங்கள்!

உழைக்காமல் உயிர்வளர்த்து திமிரெடுத்த திருடர்களை,

மழைக்காலக் காளானெனக் களைந்திடலாம் வாருங்கள்!

கற்றறிந்த தமிழர்களே கரம் கோர்த்து நில்லுங்கள்,

கறைபடிந்த தமிழகத்தின் அரசியலை மாற்றுங்கள்!

கைகூப்பிக் கேட்கின்றேன் கூண்டை விட்டு வாருங்கள்!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *