குறவன் பாட்டு-28 (நிறைவுப் பகுதி)

6

குறவன் நகர வாழ்க்கையைக் கண்டு தனக்குள் வினவுதல்

 

அண்டை அயலாரைக் காண்பதற்கும் தயக்கம்,

அன்பைப் பரிமாறிப் பேசிடவும் நடுக்கம்,

அல்லல் கொண்டாலும் தனக்குள்ளே மறைக்கும்,

அனாதை வாழ்க்கைக்குப் பெயர்தானோ நகரம்!                        228

 

புரிந்து கொள்ளாத மணவாழ்க்கை மணக்கும்,

புரிந்த பின்னாலோ வடுவாகி நிலைக்கும்,

பிறந்த பிள்ளைகளோ பலநேரம் வதைக்கும்,

பிறப்பின் பொருளுணராப் பரிதாபம் எவர்க்கும்!                                                                                229

 

முறையற்ற மோகத்தில் மனதார வீழுகிறான்,

முடிவற்ற துன்பத்தை முதலாளாய்த் கோருகிறான்,

மறையுற்ற பொருளெல்லாம் இருளென்று பாடுகிறான்,

கறையுற்ற காமுகனாய்க் கண்மூடி வாழுகிறான்!                                                                              230

 

வலியில் வாடும் உயிர்க ளிடம்,

வணிகம் பேசிப் பொருள் சேர்த்தான்,

வறுமையில் வாடும் ஏழையை வாட்டிச்,

சிறுமையில் வாழப் பழகி நின்றான்!                                                                                                          231

 

கலியுகத்தில் உள்ள கொடுமைகளில், பெரும்

கல்விச் சுமையும் ஒரு வகையோ,

நலிவுற்ற மக்களை நஞ்சென வருத்திப்

பலிகொள்ளும் பள்ளிக் கல்வி இதோ!                                                                                                        232

 

கணிவுள்ள கண்களைக் காண்ப தெல்லாம்,

கலியுகத்தில் மிகக் கடின மன்றோ?

பணிவுள்ள மனிதனைக் காண்ப தற்கும்

பெருந்தவம் செய்திட வேண்டு மன்றோ!                                                                                                233

 

தருக்கள், குருவிகள், அறுகம் புற்கள்,

எதற்கும் தெருவில் இடம் இல்லை,

அதற்கென வருந்திக் கண்ணீர் சிந்த

எவர்க்கும் இங்கே மனம் இல்லை!                                                                                                               234

 

தனதுணர்வை மதிக்காத துரோகிகள் தாள்பற்றிக்,

கனவுலகில் மிதப்பதே கடமை என்றான்,

இனவுணர்வு இல்லாமல், தமிழமுதம் கொள்ளாமல்,

பணவுணர்வு கொண்டுமன நிறைவு கண்டான்!                                                                                    235

 

பாடுபொருள் இல்லாத கவிதை யாக,

பாகனவன் இல்லாத யானை யாக,

பார்வையாது இல்லாத விழிக ளாக,

பயனற்று வாழ்வதிலே இன்பம் கண்டான்!                                                                                             236

 

கானகம் காணாக் கொடுமைகளை, நரகக்

கலியுகம் காணுது அனுதினமும், பரவிக்

காட்டிலும் அதுகால் பதிக்காமல், விரைந்து

காத்திடலே என் முதற் கடமை!                                                                                                                     237

 

இல்லம் திரும்புதல்

 

விற்பனை முடித்து விரும்பிய வண்ணம்,

பற்பல பொருட்களை வாங்கிக் கொண்டு,

நற்துணைக் குறத்தியும் குறவனும் இணைந்து,

சுற்றம் நிறைந்த இல்லம் திரும்பினர்!                                                                                                      238

 

சிறுவனைப் போலக் குறவனும் குறத்தியும்,

சிறுகவலையும் இன்றிப் பறவைகள்  போல,

சிறகினை விரித்து வாழ்க்கை வானில்,

நறுமணம் வீசிப் பறந்த னரே!                                                                                                                          239

 

(நிறைவு பெற்றது)

 

இயற்கையோடு இரண்டறக் கலந்து, இரசித்து வாழ்ந்து, இறுதியில் இயற்கையுடன் இரண்டறக் கலப்பதே மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களின் வாழ்க்கை நோக்கம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொண்டு எளிமையாக வாழ்வோம்.

வாழ்க இயற்கை!  வளர்க இயற்கை!!

அன்புடன்,

சச்சிதானந்தம்.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “குறவன் பாட்டு-28 (நிறைவுப் பகுதி)

  1. தொடர்ந்து  படித்து  வந்தேன்  கவிஞர்  சச்சிதானந்தம்.  வித்தியாசமான க(வி)தைக்கருவின்  மூலம்  இயற்கையைப் பற்றி  அதிகம்  படிக்க முடிந்தது,  அறிந்து கொள்ள முடிந்தது.  மரங்கள்,  விலங்குகள்,  பறவைகள்,  மலர்கள்  எனவும்,   தேன் சேகரிப்பது வேட்டையாடுவது, புனுகு சேகரிப்பது என  எத்தனை எத்தனைப்  புதுப் புது தகவல்கள்!!!!! வியக்க வைக்கும்  வர்ணனைகள்!!!!
     
    குறிப்பாக குறவனும் குறத்தியும் கானகத்தில் தனித்தனியே உணவு சேகரிப்பது, பிறகு சந்திப்பது, குறத்தி நகர் சென்று விற்றுப் பொருளீட்டுவது, நகர் வாழ்க்கையை ஏக்கமுற நினைப்பது, மீண்டும் கானகம் வந்து இயற்கையுடன் இணைந்து வாழ்வது என ஒரு கதையே கவிதைகளாக மலர்ந்து மகிழ வைத்தது.

    நான் சமீபத்தில் கதையை  கவிதைத் தொடராகப்  படித்த  நினைல்லை. உங்களது இக்கவிதைகள் சாயலில்  நினைவில் நிற்பது  பாரதிதாசனின்  குடும்பவிளக்கு.
     
    தொடர்ந்து உங்களது அடுத்த கவிதைத் தொடரை  எதிர்பார்க்கிறேன்.
     
    பாராட்டுகளும்  வாழ்த்துகளும்.
     
    அன்புடன்
    ….. தேமொழி

  2. ’குறிஞ்சி நில மக்கள்’ என்று சங்க காலத்தில் மிகவும் பெருமையோடு வாழ்ந்தவர்கள் குறவர் குடியினர். மலைவாழ் மக்களாயிருந்தபடியால் இயற்கையோடு இயைந்த வாழ்வு என்பது இவர்களுக்கு இயல்பாகவே அமைந்துவிட்ட ஒன்று.

    அன்று குறிஞ்சியையும், இக்குறவர் குடியினரையும் பாடாத புலவரில்லை. இன்றோ கவிஞர்களில் ஏறக்குறைய அனைவருமே இம்மக்களை முற்றாக மறந்துவிட்ட நிலையில், இவர்களின் இனிய கானக வாழ்வை, அப்பழுக்கற்ற குழந்தை உள்ளத்தை அழகிய கவிதைச் சரங்களால்அமர காவியமாக்கிவிட்டீர்கள் சச்சிதானந்தம். பாராட்டுக்கள்!!

    கபிலர் பாடிய ’குறிஞ்சிப்பாட்டு’ காலத்தை வென்று, கற்பார் உள்ளங்களைக் கொள்ளைகொள்வதுபோல் உங்கள் ‘குறவன் பாட்டும்’ என்றும் நிலைத்து நிற்க வாழ்த்துகிறேன்.

    உங்களது அடுத்த படைப்பை நானும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன் விரைவில்.

    அன்புடன்,
    மேகலா

  3. அன்பைப் பகிரவியலா அவல நகரவாழ்வைவிட
    இயற்கையோடிணைந்த வாழ்வே சிறந்தது..

    நல்ல கவிதைத் தொடர்..
    வாழ்த்துக்கள்…!

  4. @@திரு.செண்பக ஜெகதீசன்,

    குறவன் பாட்டு தொகுப்பை ஒவ்வொரு வாரமும் தவறாமல் படித்து உடனுக்குடன் தொடர்ந்து பின்னூட்டம் இட்டு தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வந்தமைக்காக எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே!

    @@ திருமதி.மேகலா இராமமூர்த்தி,

    கவிதைத் தொகுப்பு “நிலைத்து நிற்க வேண்டும்” என்ற தங்களது வாழ்த்துக்கள் என்னை நெகிழச் செய்து விட்டது. தங்களுக்கு என் உளம் கனிந்த நன்றிகள்.

    @@திருமதி.தேமொழி,

    தொடக்கம் முதலே கவிதைகளைத் தொடர்ந்து படித்து Interactive ஆன பின்னூட்டங்களை வழங்கி உற்சாகமூட்டிய தங்களுக்கும் என் அன்பான நன்றிகள். குறத்தியை வர்ணித்து எழுதிய கவிதைகள், தாங்கள் வரைந்த கல்லூரிக்கால ஓவியம் ஒன்றை தங்களுக்கு நினைவூட்ட, அவ்வோவியத்தைத் தாங்கள் வல்லமையில் வெளியிட்டுப் பகிர்ந்து கொண்டதை எண்ணி மகிழ்கிறேன். நன்றி!

    மேலும் கவிதைகளைப் படித்து உள்ளன்போடு பின்னூட்டமிட்ட நண்பர் திரு.தனுசு அவர்களுக்கும், சகோதரி திருமதி.பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மனம் திறந்த பாராட்டுக்களை வழங்கிய நண்பர் திரு.ஆளாசியம் அவர்களுக்கும், திரு.கோதண்டராமன் ஐயா அவர்களுக்கும், திரு.புவனேஸ்வர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    படைப்புகளுக்கான பின்னூட்டம் என்பதைக் கடந்து, பின்னூட்டப் பரிமாறல்கள் மூலம் புதிய நண்பர்களைப் பெறச் செய்துள்ளமைக்காக “வல்லமைக்கு” என் பணிவான நன்றிகளைக் தெரிவித்துக் கொள்கிறேன்.

  5. மிக விரும்பிப் படித்த தொடர் இது!!.. இயற்கையழகை எனக்குத் தெரிந்து இத்தனை விளக்கமாகப் படித்தது மிகக் குறைவு!.. கானக வாழ்க்கையோடு குறவர் பெருமக்களது உளவியலையும் தெளிவாக எடுத்துரைத்த கவிதை வரிகள் ஒவ்வொன்றும் ஒளி வீசும் வைரமெனத் திகழ்ந்தன.. இதனைத் தாங்கள் புத்தகமாகக் கொண்டு வர வேண்டுமென்று தோன்றுகிறது..இது ஒரு பொக்கிஷம்!.. பலரைச் சென்றடைய வேண்டும்.. தாங்கள் இது போல் மேலும் பல படைப்புகள் தர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.. அடுத்த படைப்பை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!..

  6. @@திருமதி.பார்வதி ராமச்சந்திரன்,

    தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.